Sunday, December 17, 2023

மியான்மரில் உயிர்த்தெழுந்த மக்கள் விடுதலைப் படை

 


மியான்மரில் உயிர்த்தெழுந்த கம்யூனிச விடுதலை இயக்கம். மியான்மரில் 2021 ம் நடந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து, அங்கு பல இயக்கங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னாள் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) உருவாக்கிய மக்கள் விடுதலைப் படையும்(PLA) ஒன்று. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

நிச்சயமாக இது எண்பதுகளில் இயங்கிய பழைய PLA அல்ல. எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய மூத்த கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில், இளைய தலைமுறையினரால் உருவாக்கப் பட்ட புதிய மக்கள் விடுதலைப் படை இது. அவர்களுடன் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 2 வருடங்களுக்கு முன்னர், 32 இளைஞர்களால் உருவாக்கப் பட்ட மக்கள் விடுதலைப் படையில் இன்று 1000 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் உள்ளனர். புதிய PLA, பெரும்பான்மையின பர்மியர்களைத் தவிர, பிற மொழிச் சிறுபான்மையினங்களை சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

உண்மையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த தலைவர்களே புதிய கம்யூனிச இராணுவத்தை வழிநடத்துகின்றனர். மியான்மரில் கம்யூனிச மீள் உயிர்ப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். (எண்பதுகளில் நடந்த போராட்டத்தின் போது கட்சியின் தலைவர்களாக பெரும்பாலும் பர்மியர்களே இருந்தனர்.) விதிவிலக்காக காரென் சிறுபான்மையினத்தவரின் பிரதேசத்தில் மட்டும் முரண்பாடு நிலவுகிறது. ஏனெனில் அங்கு வலதுசாரிய காரென் தேசியவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது.

கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், பிற விடுதலை அமைப்புகளுடனான நட்புறவு. குறிப்பாக இராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் தற்போது நிழல் அரசொன்றை நடத்துகின்றனர். அவர்கள் மூலம் PLA க்கு நிதி உதவி கிடைக்கிறது. இதை விட மறைமுகமான சீன உதவியும் இருக்க வாய்ப்புண்டு. அதை உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், வடக்கில் நீண்ட காலமாக கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்கும் சிறுபான்மையின தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சீன உதவி கிடைப்பது இரகசியம் அல்ல.

புதிய மக்கள் விடுதலைப் படை ஏற்கனவே பல இடங்களை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு உடனடியாக தமது கம்யூனிச கொள்கைகளை பரப்புரை செய்யவில்லை. "கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவார்கள்" என்று மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஏற்கனவே மியான்மர் இராணுவ அரசு மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்துள்ளமையும் ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன்னர் மியான்மர் இராணுவம் ஒரு மிகப் பலமான கம்யூனிச விடுதலைப் படையை எதிர்த்து போரிட்டமை குறிப்பிடத் தக்கது.

Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

Saturday, December 02, 2023

தயவுசெய்து ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசாதீர்கள்!

 

தோழர் வே. பாலகுமாரின் எழுத்துக்களை தொகுத்து நூலாக வெளியிட்டமை நல்ல விடயம். ஆனால், சுமார் 15 வருடங்களாக ஈழப் புரட்சி அமைப்பு (EROS) என்ற மார்க்சிய லெனினிஸ இயக்கத்தின் தலைவராக இருந்த ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "சிறப்பு உறுப்பினர்" என தரம் தாழ்த்தி அவமானப் படுத்தி இருக்கத் தேவையில்லை. இது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரத்தை சிறுமைப்படுத்தியதாகவே கருத இடமுண்டு. அநேகமாக விற்பனையை நோக்கமாக கொண்டு அவ்வாறு தலைப்பிட்டிருக்கலாம்.

வே. பாலகுமார் கடைசி வரையில் ஒரு புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்களும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது மட்டுமல்ல இறுதி வரை புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை சந்தித்து பேசிய பாலகுமார் குழுவினர், பொது மக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக போர் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு 300 திரைப்பட கேசட் கொடுத்து தனது முடிவு என்னவென தெரிவித்தார். "தற்கொலைப் பாதையை நோக்கி செல்கிறார்கள்" என்று நம்பிக்கைக்குரிய சிலரிடம் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாலகுமார் குடும்பத்தினர் நந்திக் கடலில் புலிகளிடம் பிடிபட்டு திருப்பி அனுப்ப பட்டனர். கடைசியில் போர் முடிந்து புலிகளின் தலைவர்களும் சரணடைந்த நேரத்தில் தான் பாலகுமாரும், மகனும் இராணுவத்தில் அகப்பட்டனர். அதனால் இராணுவம் பாலகுமாரையும் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதி இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எந்த தகவலும் தெரியாத படியால் இராணுவம் கொன்றிருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது.

பிற்குறிப்பு: 
ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசும் அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவும்.

Thursday, November 02, 2023

பாசிஸ்டுகளால் பாழாகும் யாழ் பல்கலைக்கழகம்! பிற்போக்கு பழமைவாதிகளின் கழகம்!!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருள்லிங்கத்தின் கருத்தரங்கம், மாணவர் போர்வையில் இருந்த பாஸிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் நடக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு தமிழ் அரசியல் ஆர்வலரின் கருத்து சுதந்திரத்தை தடுத்த பாஸிஸ்டுகளின் செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.

அதற்கு சொல்லப்படும் ஒரேயொரு காரணம் இவர் முன்பு புலிகளை எதிர்த்து பேசியுள்ளார் என்பது தான். அதாவது புலிகளை பாஸிஸ்டுகள் என்று சொல்லி விட்டாராம். இன்று புலி விசுவாசிகளாக காட்டிக் கொள்பவர்கள் தமது செயல்கள் மூலம் தாமே பாஸிஸ்டுகள் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

இது யாழ்ப்பாண "அறிவுஜீவி"(?)களின் பழமைவாத பிற்போக்குத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றுள்ள யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு கருத்தரங்கில் படு பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதை எல்லாம் கைதட்டி இரசித்த மாணவர்கள் முற்போக்கான கருத்துக்களுக்கு செவி கொடுக்க மறுத்து தடைசெய்துள்ளமை மாணவர் சமுதாயத்திற்கே இழுக்கு. இவர்கள் தான் நாளைக்கு நிர்வாகிகளாக, அதிகாரிகளாக பதவிகளில் அமரப் போகிறவர்கள். பழமைவாத பிற்போக்குவாதிகள் அதிகாரத்தில் இருந்தால் தமிழினம் எப்படி முன்னேறும்? நிச்சயமாக அது நாகரிகத்தில் பின்தங்கிய இனமாகத் தான் இருக்கும்.

வெளிப்படையாக இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்துவோருக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறியுள்ள யாழ் பல்கலைக்கழகம், இனவாதிகளுக்கு எதிராக போராடி மக்களை ஒன்றுபடுத்தும் முற்போக்காளர்களை பேச விடாமல் தடுத்தமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு பாசிச அடக்குமுறை தான்.

இத்தாலியில் முசோலினி தலைமையிலான பாஸிஸ்டுகளும், ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஸிகளும் செய்த அதே வேலையை தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் போர்வையில் உள்ள பாஸிஸ்டுகளும் செய்துள்ளனர். குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஸிஸ்டுகளுக்கு, தமிழினத்திற்கு தலைமை தாங்க எந்த தகுதியும் கிடையாது.

Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)

Saturday, September 23, 2023

ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன்!

Image
Gautama Buddha or Jesus Christ? இந்து மத சமூகத்தில் பிறந்த பரிதாபங்கள். 🤭🤭🤭 இவர்கள் யாரும் இயேசு, புத்தர் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை. 🤔🤔🤔

 

 
ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன். அஹிம்சையின் பெயரில் இனவெறி வன்முறை தூண்டி விடப் படுகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்து விடாதிருப்போம். இலங்கையில் இனங்களை பிரித்து ஆள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசும், அதன் தமிழ்த்தேசிய ஒட்டுக்குழுவும் தீயாக வேலைசெய்கின்றன.

இரு பக்கமும் இன உணர்வைத் தூண்டி விட்டு, சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை வளர்த்து விட்டு கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றன. அஹிம்சையின் பேரில் புத்தரும், திலீபனும் வன்முறையை தூண்டி விடும் கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன.

இதனால் நன்மையடையப் போவது சிங்கள- தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமே. இந்த குள்ள நரிகளின் சதித் திட்டத்தை அறியாத அப்பாவி சிங்கள- தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்.

தெற்கில் ராஜபக்சேக்களும், வடக்கில் கஜேந்திரகுமார்களும் நிரந்தர கோடீஸ்வரர்களாக நிலைத்திருப்பதற்காக இந்த இனவெறியூட்டும் அரசியல் நாடகம் அரங்கேற்றப் படுகிறது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.

அன்றாடம் உணவின்றி பட்டினி கிடந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், அதைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி, வயிறார உண்டு களிக்கும் மேட்டுக்குடி கும்பல், திலீபனின் படத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு மக்கள்விரோத அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் திலீபன் வழிபாட்டில் சங்கமிக்கின்றன. யாரை நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்? நாடகமே உலகம். 

"சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை யிரன்காரடீ 
கிளியே செம்மை மறந்தாரடீ. 
நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வரரடி 
கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி 
நாட்டத்திற் கொள்ளரடீ 
கிளியே நாளில் மறப்பாரடீ." 
- பாரதியார்

Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

Sunday, September 17, 2023

"பெரியாரை ஈழத்தில் யாருக்கும் தெரியாது!"

 

- ஈழத்து சங்கிகளின் உளறல்.

மார்பை மறைக்க முடியாத காலத்தில் மேல் சட்டை அணிந்த தமிழ்ப் பெண்களின் சட்டையை கத்தியால் கிழித்தெறிந்த, வெள்ளாள சாதிவெறி ஓநாய்களின் வாரிசுகள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

கோயில் கட்டிய தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத வெள்ளாள சாதிவெறி பேய்களின் வாரிசுகள் கேட்கின்றன "பெரியார் யார்"?

இதெல்லாம் எப்போதோ நடந்த கதை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஈழப் போர் தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட கிராமப்புறக் கோயில் கிணறுகளில் சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தண்ணீர் அள்ளத் தடை இருந்தது. அவர்களது கிராமங்களுக்கு போடப்பட்ட தொலைபேசி/மின்சாரக் கம்பிகள் அறுத்தெறியப் பட்டன.

அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று பொய்யுரைக்கும் அயோக்கியர்கள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

ஆண்ட பரம்பரை சாதியின் நலன்களுக்காக தமிழீழம் கேட்ட வெள்ளாள பேரினவாதிகள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

டச்சுக் காலனிய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளாளர்கள், பூர்வகுடி ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த வரலாற்றை மறைத்து விட்டுக் கேட்கிறார்கள், "பெரியார் யார்"?

சொந்த இனத்தவரான தமிழர்களையே அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அடிமைகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்காக, டச்சுக் காலனிய ஆட்சியாளருக்கு கால் கழுவி விட்டு, தேசவழமை சட்டம் என்ற ஒடுக்குமுறைச் சட்டம் எழுத வைத்த வெக்கங்கெட்ட வெள்ளாள ஒட்டுக்குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

நாகரீக காலத்திற்கு ஒத்துவராத, அடிமைகளை சீதனமாக கொடுப்பதை அங்கீகரித்த, ஒடுக்குமுறை தேசவழமை சட்டத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வெள்ளாள துரோகக் குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

Saturday, September 16, 2023

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த ஈழப்போர்!

 

ஈழப் போர் நடந்த காலத்தில் நிறையப் பேர் தமது கண் முன்னே நடந்த கொடுமைகளைக் கண்டு நாத்திகர்களாக மாறி இருந்தனர். "கடவுள் இல்லை!" என்று பாமர மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசியல் அறிவு, கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் கடவுள் இல்லை என்ற உண்மையை கண்கூடாகக் கண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் தீவிர மத நம்பிக்கையாளர்களாக இருந்த பலர், யுத்த காலத்தில் கோயிலில் சாமி இல்லை என்று கூறி போகாமல் விட்டனர். கோயிலில் குண்டு போட்டால் யார் தான் அப்படி சிந்திக்க மாட்டார்கள்? இது சமூக யதார்த்தம்.

ஆனால், நமது தமிழ் சமூகத்தில் கற்பனை உலகில் வாழும் சில ஜீவன்கள் உள்ளன. சமூக வலைத் தளங்களில் தம்மை தீவிர தமிழ் இனப் பற்றாளர்களாக காட்டிக் கொள்வார்கள். தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழம், சுயநிர்ணயம் என்றெல்லாம் மேதாவி மாதிரி பேசித் திரிவார்கள். வடக்கு கிழக்கில் நடக்கும் தமிழ்த் தேசிய ஆர்ப்பாட்டங்களில் முன்னுக்கு நிற்பார்கள். மேற்கண்ட போலித் தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் நல்லூர் முருகனின் தேர் வலம் கண்டு பக்திப் பரவசத்துடன் கை கூப்பி வணங்குகிறார்கள். இது மது மயக்கம் அல்ல மத மயக்கம்.

ஒரு பக்கம் "இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்! சர்வதேசமே தலையிடு!!" என்று இறந்த மக்களின் உடல்களை காட்டி அரசியல் செய்வார்கள். அவர்களே மறு பக்கம் திரும்பி "இனப்படுகொலையை தடுக்க சக்தியற்றிருந்த "இனத் துரோகி", நல்லூர் "ஒட்டுக்குழு" கந்தனுக்கு அரோகரா!" என்பார்கள். விசித்திரமான உலகம்.

ஏன்டா தற்குறிகளே! அது தான் கடவுள் இல்லை வெறும் கல் என்பதை 30 வருட ஈழப் போர் நிரூபித்து விட்டதே? பிறகேன்டா அதை கும்பிடுகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே போருக்குள் இன்னல் பட்டு வாழ்ந்தீர்களா அல்லது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் சொகுசாக வாழ்ந்தீர்களா?

எந்த வகையிலும் போரினால் பாதிக்கப் படாத சொகுசுப் பேர்வழிகள் தான் பொழுதுபோக்காக தமிழ்த்தேசியம் பேசுகின்றனர். அதனால் தான் எந்த வித கூச்சமும் இல்லாமல், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர் கந்தனுக்கு காவடி தூக்க முடிகிறது. அயோக்கியக் கும்பல்.

கடவுளை மற ! 
மனிதனை நினை ! 
கடவுள் இல்லை ! 
கடவுள் இல்லை !! 
கடவுள் இல்லவே இல்லை !!! 
கடவுளை கற்பித்தவன் முட்டாள்! 
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! 
கடவுளை மற! 
மனிதனை நினை! 
- தந்தை பெரியார்

Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

Saturday, September 09, 2023

"கொலை நிலம்": தியாகு- ஷோபாசக்தி உரையாடல்

 

"கொலை நிலம்" என்ற தலைப்பில் தியாகு- ஷோபாசக்தி நடத்திய உரையாடல் தொகுப்பு நூலை இப்போது தான் வாசித்தேன். அதில் தியாகு ஈழம் பற்றிய தனது அறிவுக் குறைபாட்டை மறைப்பதற்காக சோவியத் யூனியன், பாலஸ்தீனம் என்று தாவுவதை அவதானிக்க முடிந்தது. அதில் கூட அவர் சில பிழையான தகவல்களை கூறுகின்றார்.

1. புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய சம்பவத்தை நியாயப் படுத்த சோவியத் யூனியனுக்கு செல்கின்றார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நாஸி ஜெர்மன் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த நேரம், அங்கு வாழ்ந்த யூதர்களை "அவர்களது பாதுகாப்பு கருதி" (நாஸிகள் பிடித்தால் கொன்று விடுவார்கள் என்பதால்) வெளியேற்றியதாக கூறுகின்றார். இது முழுக்க முழுக்க பிழையான தகவல்.

நாஸிகள் ஆக்கிரமித்த சோவியத் பகுதிகளில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தனர். உண்மை தான். ஆனால் அதற்காக சோவியத் அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த யூதர்கள் வெளியேற்றப் படவில்லை. மாறாக அவர்கள் செம்படையிலும், கெரில்லா குழுக்களிலும் பெருமளவில் சேர்ந்து போராடினார்கள். ஆனால் சோவியத் யூனியன் எல்லைக்குள் வாழ்ந்த ஜெர்மன் இன மக்களைத் தான் இடம்பெயர்வித்து கஸகஸ்தானில் மீள்குடியேற்றம் செய்தனர். அவர்கள் நாஸி ஆக்கிரமிப்பு படையினருடன் ஒத்துழைக்கலாம் என்ற அச்சம் காரணம். ஒரு வேளை புலிகள் வவுனியா எல்லையில் வாழ்ந்த சிங்கள மக்களை இடம்பெயர்வித்து யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்திருந்தால் தியாகு சொன்ன உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?

2. இரண்டாம் உலகப் போரில் செம்படையில் சேர்ந்த போர்வீரர்கள் (சோஷலிச) கொள்கையை பாதுகாக்க போராடினார்கள் என்கிறார் தியாகு. அந்த நிலைமை போல்ஷேவிக் புரட்சிக்கு பின்னரான உள்நாட்டுப் போரில் இருந்தது. அப்போது போரிட்டவர்களுக்கு கொள்கை முக்கியமாகப் பட்டது. ஆனால் 2ம் உலகப் போர் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் நடந்தது. சோவியத் அரசின் சோஷலிச கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், எதிர்த்தவர்கள், ஏன் அரசியலில் எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் கூட செம்படையில் சேர்ந்து போரிட்டனர். காரணம், நாட்டுப் பற்று. பல போர்வீரர்கள் நாஸி ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளை கண்டு, கேட்டறிந்த ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்து நாஸிகளை எதிர்த்து போரிட சென்றனர். இன்றைக்கும் ரஷ்யாவில் அது "மாபெரும் தேசபக்திப் போர்" என்று தான் அழைக்கப் படுகிறது.

3. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) "ஆயுதங்களை மௌனித்த" பின்னர் இன்டிபதா எழுச்சி நடந்தது உண்மை தான். அதன் பிறகு தியாகு சொல்வது தான் பிழையான தகவல். அதாவது இன்டிபதா மூலம் போராட்டக் களத்திற்கு வந்த இளைஞர்கள் PLO வில் சேர்ந்தனர் என்கிறார். இது தவறு. அந்த இளைஞர்கள் "ஆயுதங்களை மௌனித்த" PLO வை துரோகிகளாக கருதினார்கள். அதனால் ஆயுதங்களை கைவிடாத ஹமாஸ், ஜிகாத் போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களில் சேர்ந்து கொண்டனர். இது இன்னொரு உண்மையையும் தெரிவிக்கிறது. தேசியவாத இயக்கம் ஒரு கட்டத்தில் சரணடைய வேண்டிய நிலை வருகின்றது. அந்த வெற்றிடத்தை மத அடிப்படைவாத இயக்கங்கள் தான் நிரப்புகின்றன. அது இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

Thursday, September 07, 2023

Victim card- ஒரு தேசியவாதக் கோளாறு

 😇

யாராவது தமிழ்த் தேசியவாதிகள் மீது விமர்சனம் வைத்தால், அவர்கள் உடனே victim card தூக்கி பிடிக்க தொடங்கி விடுவார்கள். அதை அவர்கள் பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, மற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தவும், ஏன் அத்துமீறவும் கூட பயன்படுத்துவார்கள். அதாவது victim என்ற கொடியை பிடித்துக் கொண்டு எதுவும் செய்யலாம். அத்துமீறல்களை நியாயப் படுத்தலாம். தம்மின மக்களை தமது தலைமையின் கீழே அடக்கி ஒடுக்கி வைக்கலாம். ஏனென்றால், குற்றமே ஆனாலும் அதை victim செய்தால் தவறில்லை அல்லவா?

அவர்களால் பாதிக்கப்பட்ட யாராவது உரிமைக்குரல் எழுப்பினால், "victim blame பண்ணாதே!" என்று மிரட்டி வைக்கலாம். இது தான் victim card play பண்ணுவது எனப்படும். இதைப் பல தமிழ்த் தேசியவாதிகள் சிறப்பாக செய்கின்றனர். கவனிக்க: சிங்களத் தேசியவாதிகள், யூத தேசியவாதிகள், ஆங்கிலத் தேசியவாதிகள், எவராக இருந்தாலும் கொள்கை ஒன்று தான். Victim card play பண்ணுவது, ஒரு தேசியவாதக் கோளாறு.

Victim card play பண்ணுவது வழமையாக எல்லா தேசியவாதிகளுக்கும் உரிய குணாம்சம். சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். குறிப்பாக அண்மையில் கூட போர்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச அழுத்தம் வந்த நேரம், victim card தூக்கி பிடித்தார்கள். இதையே தான் இஸ்ரேலியர்கள், செர்பியர்கள் கூட செய்தார்கள். தமக்கு மேலே உள்ள சக்தி அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் victim card play பண்ணுவார்கள்.

இப்போது மீண்டும் தமிழ்த்தேசியவாதிகள் பக்கம் வருவோம். Victim card play பண்ணுவது பொதுவாக தேசியவாதிகளின் சிறப்பம்சம் என்பதை பார்த்தோம். இதற்கு தமிழ்த்தேசியவாதிகளும் விதிவிலக்கல்லவே? ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள் தமக்கு கீழே உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, முஸ்லிம்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் தமிழர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். தமக்கு கீழே உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, அவர்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். புலிகள் செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் சிங்களவர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

தமிழ்த்தேசியவாதிளும், சிங்கள தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒற்றுமை அது மட்டுமல்ல. தத்தமது சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்குவார்கள். அப்போது அந்த மக்கள் சார்பில் யாராவது உரிமைகளுக்காக போராடினால் victim blame பண்ண தயங்க மாட்டார்கள்.

ஏனென்றால் இப்போது இவர்கள் தான் ஒடுக்கும் வர்க்கமாக உள்ளனர். அதை மறைப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். இது தான் தேசியவாதம். தமிழ்த்தேசியம் அல்லது சிங்களத் தேசியம், எதுவாக இருந்தாலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

Monday, September 04, 2023

முல்லா வேலனின் "சாதியமும் தேசியமும்" பிரார்த்தனைக் கூட்டம்

 

கிளப் ஹவுசில் முல்லா வேலன் (தோழர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தாது. அவர் ஒன்றில் Dogmatist அல்லது Fundamentalist.) தலைமையில் சாதியமும் தேசியமும் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேசினார்கள். வழமை போல இனவாத- பாஸிஸத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பேச அழைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் சிலர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் நியாயமாகப் பேசினார்கள். அதை முதலில் பாராட்ட வேண்டும்.

அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வந்ததாவது, அருண் சித்தார்த் தான் இவர்களை இந்தளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அதாவது, இவர்கள் பல வருட காலமாக அருண் சித்தார்த் மீது "கஞ்சா வியாபாரி, அரச கைக்கூலி" போன்ற பல்வேறு வகையான அவதூறுகள் செய்து, குற்றச்சாட்டுகள் சுமத்தி புறக்கணித்து வந்துள்ளனர். அருண் சித்தார்த்தை ஓரம் கட்டலாம் என நினைத்து மாறாக அவனை வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதை அங்கு உரையாற்றிய பலர் எதிரொலித்தனர்.

இது தொடர்பாக பாரதி எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. "அருண் சித்தார்த் ஒரு முக்கியமில்லாத, சாதாரண நபர் என்றால் எதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை அவனைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்றார். அதையே செண்பகம் பறவை (முன்பு இசைவேந்தன் என்ற பெயரில் இருந்தவர்) என்பவரும் கூறினார். "அருண் சித்தார்த்தின் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அங்கு இருக்கும் சாதிப் பிரச்சினையை அரசியல்வாதிகள் பேசத் தவறியதை, அவர் பேசுகிறார். நாளைக்கு இன்னொரு அருண் சித்தார்த் வரலாம்." என்றார்.

ஆயினும் அவரும் தற்போது அங்கே சாதி ஒடுக்குமுறை இல்லை என்றே வாதிட்டார். (இதே மாதிரி ஒரு சராசரி சிங்களவரைக் கேட்டால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லை என்பார்.) அவர் "ஒடுக்கப்படுத்தப் பட்டவர்கள்" என்று புதிய கலைச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். அதாவது அது இறந்த காலம். இப்போது இல்லை என நாம் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், அவர் அறியாமலே முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினார். ஒரு தடவை ஒடுக்குமுறை இல்லை என்றவர் மறு தடவை ஒடுக்குமுறையை விபரித்து பேசினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாராளுமன்ற பிரதிநிதி ஆக்காதது ஒரு குறைபாடு என்றார். அது தானே ஒடுக்குமுறை? சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தானே ஈழப்போர் தொடங்கியது? சிங்களப் பேரினவாதிகளின் அதே ஒடுக்குமுறை கொள்கையைத் தானே, தமிழ்ப் பேரினவாதிகளும் பின்பற்றுகிறார்கள்? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இசைவேந்தன் (செண்பகம் பறவை) அவர் அறியாமலே இன்றைய சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதானமான சாதிய ஒடுக்குமுறையை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகள் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது மகனுக்கு கொடுக்கும் வழக்கம் காரணமாக முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது என்றார். உண்மை தான். அரசு வேலைவாய்ப்புகளில் சிங்களவர்களை போட்டு விட்டு தமிழர்களைப் புறக்கணித்த படியால் தானே ஈழப் போராட்டம் தொடங்கியது? அதே பிரச்சினை, அதே ஒடுக்குமுறை, வடக்கில் சாதியின் பெயரால் நடைமுறையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசம்.

முந்திய காலங்களில் ஒடுக்குபவன் தன்னை சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வான். இன்றைய காலத்தில் இன அடையாளத்தை போர்வையாக மூடிக் கொள்கிறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும், இன்றும் ஒடுக்குபவனும், ஒடுக்குமுறையும் ஒன்று. தெற்கில் சிங்கள இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது கொவிகம சாதிய மேலாதிக்கவாதிகள். அதே மாதிரி வடக்கில் தமிழ் இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது வெள்ளாள சாதிய மேலாதிக்கவாதிகள். மேலதிக விளக்கம் தேவையில்லை.

தெற்கில் சிங்கள மேலாதிக்கம் என்றால் வடக்கில் வெள்ளாள மேலாதிக்கம் உள்ளது. இரண்டும் ஒடுக்குமுறை சக்திகள் தானே? நிச்சயமாக இந்த இடத்தில் சாதிப் பிரச்சினையின் மூலக்கருவுக்கு கிட்ட வந்து விட்டோம். ஆனால் கேட்பவர்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட முன்னர் முல்லா வேலன் விழித்துக் கொண்டார். இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் தடுத்தார். "இது வேறொரு தளத்திற்கு போகிறது.... அது இலங்கை அரசின் திணைக்களத்திற்குள் உள்ள பிரச்சினை... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..." என்று பேசி மழுப்பினார். இப்படித் தான் உண்மையான பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய விடாமல் திசைதிருப்பப் படுகின்றன. 
 

Saturday, September 02, 2023

தர்மன் சண்முகரட்னம்- ஒரு "சிங்கப்பூர் கதிர்காமர்"!

 Image

தர்மன் சண்முகரட்னம் என்ற "யாழ்ப்பாணத் தமிழன்"(?) சிங்கப்பூர் ஜனாதிபதியாக வந்து விட்டார் என்று மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஒருவேளை இலங்கையில் யுத்தம் நடந்திரா விட்டால், புலிகள் இருந்திரா விட்டால், கதிர்காமர் வெளிவிவகார அமைச்சரான நேரம் இதே மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஒருவேளை கதிர்காமரை புலிகள் சுட்டுக் கொல்லாமல் விட்டிருந்தால் அவர் ஜனாதிபதியாக கூட வந்திருப்பார்.

கதிர்காமருக்கும், தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். இருவருக்கும் இடையிலான நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

1. கதிர்காமர், இலங்கையில் ஆளும் கட்சியான SLFP தலைமைக்கு மிக விசுவாசமான முக்கிய உறுப்பினர். பண்டாரநாயக்க குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக SLFP கட்சியில் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". ஆனால் உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத கொழும்பு தமிழன்.

2. தர்மன் சண்முகரட்னம், சிங்கப்பூரில் ஆளும் கட்சியான PAP தலைமைக்கு விசுவாசமான முக்கிய உறுப்பினர். லீ குவான்யூ குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக கட்சியின் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத சிங்கப்பூர் தமிழன்.

Srilanka Freedom Party (SLFP), People's Action Party (PAP) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை. ஆரம்பத்தில் தங்களை மத்திய- இடது கொள்கை சார்ந்ததாக காட்டிக் கொண்டாலும், பிற்காலத்தில் மத்திய- வலது கொள்கையை பின்பற்றின. மக்கள் நலன் சார்ந்த Populist அரசியல் பேசிக் கொண்டே இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியதில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

அவ்வாறான அரசியல் பின்னணியில் வந்தவர்கள் தான் இலங்கைக் கதிர்காமரும், சிங்கப்பூர் தர்மனும். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு, நமது மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகளுக்கு அறிவும் கிடையாது, பக்குவமும் கிடையாது.

லக்ஷ்மன் கதிர்காமர் மானிப்பாயில் பிறந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவர் வீட்டில் ஆங்கிலம் பேசி தமிழை மறந்திருக்கலாம். யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்கரசியல் செய்திராத விட்டால் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா போன்ற "தமிழ்த்தேசிய" தலைவர்களும் கதிர்காமர் மாதிரி ஆங்கிலம் மட்டுமே பேசிக் கொண்டு தமிழை மறந்து விட்டிருப்பார்கள். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் பிறந்து வளர்ந்த மேட்டுக்குடித் "தமிழ்" குடும்பங்களில் இது சாதாரணமான விடயம்.

அதே மாதிரி சிங்கப்பூரில் பிறந்த "தர்மன் சண்முகரட்னம் ஒரு தமிழரா?" என்றும் கேட்கலாம். அவரும் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறவர் தான். கதிர்காமர் திருமணம் முடித்தது ஒரு பிரெஞ்சு- பாகிஸ்தான் கலப்பின பெண்ணை. அதே மாதிரி தர்மன் திருமணம் முடித்தது ஒரு சீன- ஜப்பானிய கலப்பின பெண்ணை. இவர்கள் வீட்டில் தமிழில் பேசி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மேலும் தமிழ் அடையாளத்தை துறந்தவர்கள் என்பதால் தான் நாட்டின் அதியுயர் பதவிக்கு வர முடிந்தது. கதிர்காமர் தன்னை ஒரு சிறிலங்கன் என்று அடையாளப் படுத்தியவர். அதே மாதிரி தர்மன் தன்னை ஒரு சிங்கப்பூரியன் என்று அடையாளப் படுத்தியவர்.

அது போகட்டும். உங்களுக்கு ஓர் உண்மை சொல்லவா? இலங்கை மாதிரி சிங்கப்பூரில் "தமிழ்த்தேசியம்" என்று அடையாள அரசியல் செய்யக் கிளம்பினால் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்! "சிங்கப்பூர் தமிழரசுக் கட்சி", "சிங்கப்பூர் விடுதலைப் புலிகள்" இப்படி எல்லாம் தொடங்கலாம் என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள். அப்படியான எண்ணம் கொண்ட அத்தனை பேரையும் ஒரே நாளில் கைது செய்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். சிங்கப்பூர் வெளிப் பார்வைக்கு தான் அழகாக இருக்கும். உள்ளே மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு.

Sunday, August 27, 2023

சாதியால் பிரிந்த முன்னாள் போராளிக் குடும்பம்

 

இது ஓர் உண்மைக்கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு புலிப் போராளிகள் குடும்பத்தின் கதை. கணவன், மனைவி இருவரும் முன்பு போராளிகளாக இருந்த காலத்தில் இயக்கத்திற்குள்ளே சாதி கடந்த கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவன் உயர்த்தப்பட்ட சாதியையும், மனைவி தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. மனைவி தன்னிடமிருந்த நகைகளை விற்று அல்லது அடைவு வைத்து கணவனை சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

கணவன் விடுமுறைக்கு வந்த காலத்தில், அவரது பெற்றோர் சாதியை காரணமாக காட்டி பிரித்து விட்டனர். அவருக்கு உடனடியாக தமது சாதிக்குள் ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைத்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி விட்டனர். இந்த விடயங்கள் யாவும் மனைவிக்கு தெரியாமல் மறைக்கப் பட்டன. தற்போது அவர் கணவரது உதவியுமின்றி தனியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப் படுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இது தான் புலிகள் சாதியை ஒழித்த (ஒளித்த) இலட்சணம். சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வராமல், புலிப் போராளிகளுக்கு மட்டும் கலப்பு மணம் செய்து வைப்பதால் சாதி ஒழியப் போவதில்லை. உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் தொடங்கவேயில்லை.

Saturday, August 26, 2023

இராணுவ முகாமை அகற்றாதே! யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  Aug 15, 2023

யாழ் குடாநாட்டில், பிரபாகரன் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள, பருத்தித்துறையை சேர்ந்த கற்கோவளம் எனும் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். (15-8-2023) அந்த பகுதியில் திருட்டுகள், போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நேரத்தில் தமக்கு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், இராணுவம் இருந்தால் பாதுகாப்பு என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். உண்மையில் லஞ்சம், ஊழலில் ஊறிய, கையாலாகாத காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் பிரதிபலிப்பு.

இது இப்படி இருக்கையில், இவ்வளவு காலமும் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்றே அரசியல் செய்து வந்த elite தமிழ்த்தேசியவாதிகளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. "ஆட்டு மந்தைகள்... போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்... விலை மாதர்கள் (ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுமிகளும் இருந்தனர்.)" என்றெல்லாம் ஏசத் தொடங்கி விட்டனர். அடித்தட்டு தமிழ் மக்கள் மீது, மேட்டுக்குடி தமிழ்த்தேசிய போலிகள் கொண்டிருக்கும் வன்மம் நன்றாக வெளிப்பட்டது.

அது சரி, சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அச்சுவேலி பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்த நேரம் இவர்கள் எங்கே போனார்கள்? அந்த நேரம் அழகான ஆதிக்க சாதிப் பெண்கள் சட்டை போடாத சிங்கள இராணுவ வீரர்களுடன் உரசிக் கொண்டு தேரிழுத்தார்கள். பருத்தித்துறை ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த பெண்களை நாக்கூசாமல் "விலை மாதர்" தூற்றிய வாய்கள், அந்நேரம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அச்சச்சோ... மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டோம்! அந்தளவு வர்க்க பாசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னாலையில் மாட்டு வண்டில் சவாரியில் நடந்த கைகலப்பு காரணமாக, ஆதிக்க சாதியினர் அழைப்பின் பேரில் வந்த சிங்கள இராணுவம் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. நம்ம தமிழ் உணர்வாளர்களை இப்போது கேட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நடிப்பார்கள்.

அது போகட்டும். 1987 முதல் 1990 வரை, தொடர்ச்சியாக 3 வருடங்கள் விடுதலைப் புலிகளும், சிங்களப் படையினரும் இணைபிரியாத நண்பர்களாக நட்பு பாராட்டியதை எப்படி பார்க்கிறீங்க? ஆங்... அது மேட்டுக்குடி நலன் சார்ந்த "சாணக்கியம்" இல்லே? அந்த நேரம் நம்ம elite- தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் செவ்வாய்க் கிரக சுற்றுலா சென்றிருந்தனர். பாவம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

இது தான் மேட்டுக்குடி கனவான்களின் எலைட்- தமிழ்த்தேசியம். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றைய நேரங்களில் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்று தமக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள். 
Déjà vu.

முதலாம் உலகப் போர் காலம் முதல் தேசியவாதிகள் செய்து வரும் பிரச்சாரம். தேசியவாதம் என்ற சொல்லுக்கு முன்னுக்கு தமிழ் என்ற அடைமொழியை போட்டு விட்டால் கொள்கை மாறி விடுமா? 
c'est la même chose
 

Thursday, August 24, 2023

கிளப் ஹவுசில் நடந்த சாதி ஒளிப்பு 🤡 நாடகம் ⁉️

 

கிளப் ஹவுசில் இனவாத- பாஸிஸ்டுகள் ஒன்று சேர்ந்து "சாதி ஒழிப்பு மகாநாடு" நடத்தினார்கள். அங்கே இரண்டு கோமாளி "மார்க்சியர்களும்"(?) சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினார்கள். அவர்கள் தமது வழக்கமான இனவாதத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் புரியா விட்டாலும் இனவாத தற்குறிகள் "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்து "மார்க்சிய"(?) கோமாளிகளை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அடடே... என்ன இது இனவாதிகள், அதிலும் சிலர் தீவிர சாதிவெறியர்கள், திடீரென சமூக அக்கறையுடன் பேசுகிறார்களே!" என்று எட்டிப் பார்த்தால் ஒரே வழ வழா, கொள கொளா பாணியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாநாட்டில் கலந்து கொண்ட "அறிவுஜீவிகள்" சாதி ஒழிப்புக்கு (திருத்தம்: ஒளிப்புக்கு) முன்மொழிந்த தீர்வுகள்: 
- எல்லோருக்கும் கல்வி அறிவூட்டி சாதியை ஒழித்து விடுவார்களாம். ஏற்கனவே இலங்கையில் 95% எழுத்தறிவு இருப்பதை இவர்களுக்கு யாராவது சொல்லி விடுங்கள்.

- பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்து சாதி தவறு என்று உணர வைத்து விடுவார்களாம். பாலர் வகுப்பில் இருந்தே ஆத்திசூடி சொல்லிக் கொடுக்கிறார்கள். :""சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் கற்பிக்கிறார்கள். அட போங்கப்பா... நன்னெறி போதிக்கும் ஆசிரியரே தனிப்பட்ட வாழ்வில் சாதி பார்ப்பார். இங்கே ஊருக்கு தான் உபதேசம்.

இனவாத- பாஸிஸ்டுகள் திடீரென சமூக அக்கறை கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு தடவை சாதியே இல்லை என்பார்கள். இன்னொரு தடவை அதே வாயால் சாதிப் பிரச்சினை பற்றி உரையாடுவோம் என்பார்கள். அதற்கு காரணம் உள்ளது. சமுதாயத்தில் உள்ள மிக முக்கியமான பகை முரண்பாடுகளான சாதிய/வர்க்க பிரச்சினைகள் மேலெழும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு, மறுபடியும் கிடப்பில் போடுவதற்கான நாடகம்.

உலகில் உள்ள எல்லா பாஸிஸ்டுகளும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி". அந்த கட்சிக்கும் சோஷலிசத்திற்கும், தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் சுருக்கமாக நாஸி (தேசியம்) என்ற சொல்லை மட்டும் பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்.

"அந்த கூட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்கள் தானே? அப்போது (சாதி ஒழிப்புக்கான) தீர்வையும் சொல்லி இருக்கலாமே?" என்று கடிந்து கொண்டார் ஒரு நண்பர். வாஸ்தவம் தான். ஆனால் முதலில் என்னை பேச விட்டால் தானே? ஏற்கனவே அழைத்து விட்டு அடித்து துவைக்க காத்திருந்த இனவாத- பாஸிஸ்டுகள் நடத்திய கூட்டத்தில் நான் எந்த கருத்தை வைத்திருந்தாலும் பாய்ந்து பிடுங்கி இருப்பார்கள். உண்மையில் அது தான் நடந்தது.

"சிங்களவர்களிடம் சாதி இல்லை என்று டிவிட்டரில் எழுதினீர்களாமே?" என்று புலனாய்வுத்துறை அதிகாரி போன்றிருந்த ஒருவர் விசாரணையை ஆரம்பித்தார். உடல் ரீதியாக சித்திரவதை செய்யாத குறை. (ஆனால் உளவியல் சித்திரவதைக்கு குறைவில்லை) "சிங்களவர்கள் மத்தியில் சாதி இல்லை என்று எப்போது சொன்னேன்?" நான் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

அட தற்குறிகளே! சிங்களவர் மட்டுமல்ல, பாகிஸ்தானியர் மத்தியிலும் கூட சாதிகள் உள்ளன. "என்னால் ஜப்பானில் உள்ள சாதியம் பற்றியும் கூற முடியும். ஆனால் அதைப் பற்றி இவர்களுக்கென்ன கவலை?" - இதை அங்கே நேரடியாக கேட்டிருந்தேன்.

சிங்களவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு, திருகோணமலையில் வாழும் தமிழர்களும் தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். என்னை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் போலிருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களை மட்டும் விட்டு விட்டு, சிங்களவர்களை மட்டும் தூக்கிப் பிடித்தார். (அட... அப்போது தானே இனத்துரோகி பட்டம் சூட்டலாம்? புலனாய்வுத்துறை மூளை என்றால் சும்மாவா?)

ஆகவே, அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டாராம். குற்றப் பத்திரிகை வாசித்தார். "கனம் கோட்டார் அவர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் அவரை தமிழினத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன். அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும். அவருக்கு எந்த தமிழனும் சோறு, தண்ணி கொடுக்க கூடாது." என்று வழக்காடினார்.

என்ன கொடுமை இது? சாதி ஒளிப்பு, ஸாரி மழுப்பு, ச்சே ஒழிப்பு மகாநாட்டில் பேச வந்த என்னையே தீண்டத்தகாதவன் ஆக்கி விட்டார்களே? ஒருவேளை காலச்சக்கரத்தில் ஏறி 17ம் நூற்றாண்டுக்கு வந்து விட்டேனோ? எதற்கும் ஒரு தடவை மொபைல் நாட்காட்டியை தட்டிப் பார்த்தேன். ஆண்டு 2023 எனக் காட்டியது. அப்பாடா... இப்போது நடப்பது 21ம் நூற்றாண்டு தான்.

கிளப் ஹவுஸில் கைகோர்ட் நீதிபதி மாதிரி இருந்த ஒருவர் தீர்ப்பளிக்க முன்னர் ஒரு கேள்வி கேட்டார்: "நீவிர் யாழ்ப்பாணத்தில் மட்டும் சாதிய- தீண்டாமை இருப்பதாக சொல்கிறீர். யாழ்ப்பாணத்தார் மீது அப்படி என்ன வன்மம்?" என்று ஒரே போடாகப் போட்டார்.

ஐயயோ, இனி நீதிபதி ஷரியா சட்டத்தின் படி அல்லாவின் நாமத்தால் கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கப் போகிறார். அல்லாவே, ஆட்டுக்குட்டியே என்னை காப்பாற்ற வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

யோவ், மூளையை தலைப்பாகை சுருட்டி வைத்திருக்கும் அநீதிபதி! - அப்படி சொல்ல வந்ததை வாய்க்குள் வைத்துக் கொண்டு, "அடக்குமுறையை எதிர்த்தால் அது வன்மமா... சமூக ஒடுக்குமுறை பற்றி பேசினால் வன்மம் என்பீர்களா? இது என்ன நியாயம்?" என்று கேட்டு விட்டேன்.

நான் அப்படி கேட்பேன் என்று நீதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கு. ஒரு நொடி வாயடைத்து போனவர் சுதாகரித்துக் கொண்டே "அது வந்து... போயி... சிங்களவர்களிடமுள்ள தீண்டாமையை பற்றி பேச மட்டும் அனுமதிக்கப் படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசக் கூடாதென ஆயத்துல்லா பாணியில் ஃபத்வா உத்தரவு போட்டார்.

என்னடா இது? தப்பித் தவறி ஒருவேளை ஆப்கான் தாலிபான்களின் கிளப் ஹவுஸுக்கு வந்து விட்டேனோ? நான் யோசிக்க கொண்டிருக்கும் பொழுதே ரூமை விட்டு ரிமூவ் பண்ணி விட்டார்கள். அப்பாடா, மறுபடியும் நிஜ உலகிற்கு வந்து விட்டேன்.

Sunday, August 06, 2023

ஈழப்போரில் "உரிமை கோரப் படாத" குண்டுவெடிப்புகள்!

ஈழப்போர் தொடங்கிய காலங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகரில் வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தியது புலிகள் அல்ல. அது ஈழப் புரட்சி அமைப்பு(EROS) எனும் இன்னொரு இயக்கம். 1984 ம் ஆண்டு ஒபரோய் ஹொட்டேல் தொடங்கி பல குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள். அவை யாவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். கொழும்பு மத்திய தபால் நிலைய குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட அளவு பொது மக்களும் பலியாகி இருந்த போதிலும், EROS தான் செய்த எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பேற்று உரிமை கோரி வந்தது. 


அப்போது புலிகள் இது போன்ற தாக்குதல்களை முற்றாக நிராகரித்து வந்தனர். "நீங்கள் இலங்கை முழுவதையும் தறிழீழமாக கேட்கிறீர்களா?" என்று கிண்டல் அடித்தார்கள். அந்த காலகட்டத்தில் இயக்கங்களுக்கு ஏதாவதொரு திரைப்படத்தின் பெயர் பட்டப்பெயராக வைக்கப் பட்டது. அவ்வாறு EROS இயக்கத்தை "தூரத்து இடிமுழக்கம்" என்று அழைத்தனர். அதாவது தமிழ் மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அதே நேரம் எந்த பாதிப்பும் இல்லாத இடத்தில் யுத்தம் செய்கிறார்களாம். அதை அன்று புலிகளும் வழிமொழிந்தனர்.
 

பல வருடங்களுக்கு பின்னர், குறிப்பாக 1991 இலிருந்து புலிகளும் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடத்த தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடவை 1987 ம் ஆண்டு கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் குண்டு வெடித்தது. பொது மக்கள் 100 பேரளவில் பலியாகினர். அன்று யாரும் அந்த குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை. இருப்பினும் அதை புலிகளே செய்ததாக நம்பப் படுகிறது. EROS தான் செய்யவில்லை என்று உடனடியாக மறுத்திருந்தது. 1987 ம் ஆண்டு வடக்கில் பிற இயக்கங்களை தடைசெய்து விட்டு புலிகள் மட்டுமே போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். EROS மீது தடை இல்லாத போதிலும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை வெகுவாக குறைத்து விட்டிருந்தனர்.

Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். 



நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ:

Sunday, July 30, 2023

வட இலங்கையில் தொடரும் வர்க்கப் படுகொலைகள்!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்த ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். பொலிஸ் இதை தற்கொலை என்று பதிவு செய்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியை வேலைக்கு வைத்திருந்தவர்கள், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு வைக்க அனுமதிக்கவில்லை. மாதம் 25000 ரூபாய் சம்பளம் பேசி விட்டு 5000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வேலை வழங்குநர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பிருந்தும், சிறுமியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியுள்ளனர். ஏனென்றால் சக்தி வாய்ந்த பணக்காரர்களை ஏழைகளால் எதிர்த்து நிற்க முடியாது. அதிகார வர்க்கம் எப்போதும் பணக்காரர்கள் பக்கமே நிற்கும்.

இதை தற்கொலை என்று பார்த்தாலும், அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களில் ஒரு பணிப்பெண் தற்கொலை செய்கிறாள் என்றால், அந்தளவுக்கு கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கொலை தான். அப்படி இருந்தும் பொலிஸ் அந்த பணக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

இலங்கையில் பல இடங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும் அதை தற்கொலை என்று சொல்லி மறைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு அமைச்சர் வீட்டில் வேலை செய்த சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலும், இறந்தது மலையக தமிழ்ச் சிறுமி என்பதாலும், அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனைய மரணங்கள் ஊடக கவனத்தை பெறுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நடந்த (தற்)கொலை சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதனை மேற்கொண்டு விசாரிக்காமல் வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. அந்த சம்பவத்தில் பலியானது ஓர் ஏழைச் சிறுமி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள். எப்போதும் பொலிஸும், நீதித் துறையும் பணக்காரர் பக்கமே நிற்கும்.

அது போகட்டும். சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக பேசக் கூடிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதேன்? பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிக்காக நீதி கோரிப் போராடாதது ஏன்? குற்றவாளியும் ஒரு தமிழர் என்பதாலா? பணக்கார வீடென்றால் "தமிழ் வீரம்" புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

சிங்கள இராணுவத்துடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சல் மிக்க தமிழ்தேசிய ஊடகவியலாளர் யாரும் இப்படியான விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? குறைந்த பட்சம் அங்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து மக்களுக்கு அறியத் தர வேண்டாமா?

ஏனென்றால் இவர்கள் எல்லோரும் பணக்கார வர்க்க அடிவருடிகள். இலங்கையில் இருப்பதும் வர்க்கப் பிரச்சினை தான். அதாவது பணக்கார வர்க்கமும், அதன் அடிவருடிகளும் ஏழைகள் மீதான ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக இனம், தேசியம் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தப்பித்தவறி ஒருபோதும் ஒரே தேசியத்தின் உள்ளே நடக்கும் வர்க்கப் படுகொலைகள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் பதில் வராது. பணக்கார அடிவருடித்தனத்தை வெளியே சொல்ல முடியுமா?

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Sunday, July 02, 2023

பிரான்ஸ் எரிகிறது! இனவெறிப் பொலிஸ் அத்துமீறலின் எதிர்விளைவுகள்!!

 

பிரான்சில் மக்கள் எழுச்சி! 

பாரிஸ் புறநகர் பகுதியான Nanterre நகரத்தில் Nahel என்ற 17 வயது அல்ஜீரிய இளைஞன் பொலிஸ் வீதி சோதனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல வாகனங்கள், பேருந்து வண்டிகள், ஒரு டிராம் தீக்கிரையாக்கப் பட்டன.  பஸ் பாதையில்  காரோட்டிய குற்றத்திற்காக வீதிசோதனை இடும் போலீசார் மறித்துள்ளனர்.

போலிஸ் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து பிஸ்டல் காட்டி மிரட்டியதாகவும், துப்பாக்கியால் தலையில்தாக்கியதாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். அந்த தாக்குதல் காரணமாக பிரேக்கில் இருந்து காலை எடுத்த படியால் வண்டி தானாக ஓடிச் சென்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது. அந்த அல்ஜீரிய இளைஞன் அந்த இடத்திலேயே பலியானான்.

அடுத்த நாள் பாரிஸ் நகரில் Nahel இன் தாயார் தலைமையில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. "பொலிஸ் கொலைகாரர்கள்!" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த பேரணிக்கு பொலிஸ் "பாதுகாப்பு" கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது. பிரான்சின் பல நகரங்களில் பொலிசை நோக்கி கற்கள் வீசப்பட்டன. பொலிசாருடன் மோதல்கள் இடம்பெற்றன. 

பல நகரங்களில் கலவரம் நடந்தது. ஒரு வங்கி உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகள் கொள்ளையடிக்கப் பட்டன. பாரிஸ் நகரில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் Louis Vuitton எனும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை பொது மக்களால் உடைத்து சூறையாடப் பட்டது. Aldi, Action போன்ற பல சூப்பர் மார்க்கெட்டுகள் தீக்கிரையாக்கப் பட்டன. பாரிஸ் வடக்கில் உள்ள ஓபர்வில்லியே ( Aubervilliers) புற நகரில் ஒரு பஸ் டிப்போ எரிக்கப் பட்டது. 

பிரான்ஸ், மார்செய் நகரில் ஒரு பெரிய நூலகம் எரிக்கப் பட்டதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஐரோப்பிய தீவிர வலதுசாரி நாஸிகள், இந்திய ஆர்எஸ்எஸ் காவி சங்கிகள் பரப்பிய இந்த பொய்ச் செய்தியை, ஒரு சில ஈழத்து வலதுசாரி சங்கிகளும் பகிர்ந்திருந்தனர். இந்திய சங்கிகள் இதை நாளந்தா நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். ஈழத்து சங்கிகள் இதை யாழ் நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். 

இது உண்மையில் வெள்ளையின நிறவெறியினரின் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரப்பப்பட்ட ஒரு fake news. ஐரோப்பாவில் எந்தவொரு உத்தியோகபூர்வ ஊடகமும் இதை தெரிவிக்கவில்லை. நவ- நாஸி இனவெறியர்கள் மார்செய் நூலகம் எரிப்பு என்ற பொய் செய்தியின் மூலம் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவது புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். இதை உணர்ந்து நடக்க வேண்டும். தீவிர வலதுசாரிகள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. 

சர்வதேச சமூகம், ஐ.நா. சபை எல்லாம் பிரெஞ்சு காவல்துறையின் கொடுமைகளை, அரச மட்டத்தில் நிலவும் இனவெறியை வன்மையாக கண்டித்துள்ளன. ஆனால் இங்கே சில புலியின் நெளிஞ்ச செம்புகள் இனவெறி அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுக்குழு வேலை செய்து கொண்டிருக்கின்றன.

Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Friday, June 09, 2023

கஜேந்திரகுமார் கைது தொடர்பாக...

7 June 2023, அன்று கொழும்பில் TNPF தலைவர் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கும் அப்பால், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் அவரது கருத்து சுதந்திரம் பறிக்க படுவது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக கஜேந்திரகுமாருடன் துணை நிற்போம். 

 அதே நேரம் கஜேந்திரகுமாரின் கட்சியினரும் தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலில் தாங்கள் மட்டுமே புனிதர்கள் என்ற மிதப்பில், இன உயர்வுச் சிக்கல் மனப்பான்மை காரணமாகவும் மற்றவர்களிடமிருந்து தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டவர்கள். 

இவர்களே ஒரு நாளும் சொந்த இன மக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கவில்லை. அதையே அரசு இவர்களுக்கு செய்யும் பொழுது மட்டுமே புரிகிறது. சொந்த இனத்தில் மாற்றுக் கருத்து வைப்பவர்களை எல்லாம் "துரோகிகள், ஒட்டுக்குழுக்கள்" என்று முத்திரை குத்தி, தாமும் சிங்கள பேரினவாத அரசுக்கு சளைக்காத தமிழ்ப் பேரினவாத கருத்தியல் அடக்குமுறையாளர்கள் என்பதை நிரூபித்தவர்கள். அரசும் அதே "துரோகி" முத்திரையை தான் இவர்களுக்கும் குத்துகின்றது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். 

ஒரு வருடத்திற்கு முன்னர் தெற்கில் நடந்த "அரகலய" என்ற மக்கள் எழுச்சியில் தமிழ் மக்கள் பங்குகொள்ள கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அது "சிங்களவர் போராட்டம்" என்று இனவாத அடிப்படையில் நிராகரித்தார்கள். போராட்டத்தை தொடர்ந்து தெற்கில் பல மாணவர் அமைப்பினரும், தொழிற்சங்கவாதிகளும் கைது செய்யப்பட்ட நேரம் இவர்கள் அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தார்கள். (வழமை போல "அது சிங்களவர் பிரச்சினை" என்ற புறக்கணிப்பு). 

பொலிசார் கைது செய்ய வந்த நேரம் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு சிங்களத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் அரச அடக்குமுறை குறித்து சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தினார். நல்ல விடயம். இப்போதாவது இன ஐக்கியத்தின் மூலம் தான் அரச ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட முடியும் என்ற ஞானம் பிறந்திருக்கிறது. 

இனிமேலும் "இரு தேசம், புலிப் பாசம்" என்று கற்பனாவாத கதைகளை பேசிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும். ஒடுக்கப்படும் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் வர்க்க மக்களுடன் தமிழர்களையும் ஒன்றுசேர்த்து, IMF ஆணைப் படி நடக்கும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்திற்கு எதிராக போராட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.

Tuesday, June 06, 2023

டிஸ்கோ நடனத்தை தடைசெய்த புலிகள் & தாலிபான்!

யாழ் குடாநாட்டில், எண்பதுகளின் தொடக்கத்தில், இளைஞர்கள் மத்தியில் டிஸ்கோ நடனக் கலாச்சாரம் பரவி இருந்தது. சிறிய கிராமங்களில் கூட இரவில் மின் விளக்கொளியில் நடனப் போட்டிகள் நடக்கும். 

பெரும்பாலும் தென்னிந்திய திரையிசைப் பாடலுக்கு தான் அபிநயம் பிடிப்பார்கள். தனியாகவும் குழுவாகவும் ஆடுவார்கள். போட்டியில் வெல்லும் இளைஞருக்கு அல்லது குழுவுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பேபி ஷாலினி என்ற ஒரு 8-9 வயது சிறுமி மிகப் பிரபலமான நடனத் தாரகையாக இருந்தார். அவரது நடனத்தை பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அதை விட தனிப்பட்ட முறையில் சில இடங்களில் திருமண, பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் டிஸ்கோ நடன நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு இந்த டிஸ்கோ நடனம் ஈழத்தமிழ் மக்களது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

அப்போது யாழ் குடாநாடு முழுவதும் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லா இயக்கங்களும் சமமான அதிகாரத்துடன் இருக்கையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. யாரும் மக்களின் கலாச்சார நிகழ்வுகளில் தலையிடவில்லை. ஒரு கட்டத்தில், 1986 ம் ஆண்டு, புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அதற்குப் பிறகு தான் கலாச்சாரக் காவலர் வேலையில் இறங்கினார்கள். "இந்திய சினிமாக்களால் ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரம் சீரழிவதாகவும்", குறிப்பாக டிஸ்கோ நடன நிகழ்வுகள் "சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என அறிவித்து விட்டு டிஸ்கோ நடன நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதித்தனர். அதற்குப் பிறகு, யுத்தம் முடியும் வரையில் அங்கே எந்தவொரு நடன நிகழ்வும் நடக்கவில்லை. பிரபல நடனத் தாரகை பேபி ஷாலினியும் அகதியாக வெளியேறி படகு மூலம் இந்தியாவுக்கு சென்று விட்டார். 

இது நடந்து ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தனர். அவர்களும் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் டிஸ்கோ நடன நிகழ்வுகளை தடைசெய்தனர். அதற்கும் அவர்கள் "இந்திய சினிமாக்களால் ஆப்கான் கலாச்சாரம் சீரழிவதாக" ஒரு காரணம் சொல்லித் தான் தடையுத்தரவு போட்டார்கள். தாலிபான் மதத்தின் பெயரால் செய்ததை, புலிகள் இனத்தின் பெயரால் செய்தனர். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, பொதுவாக மக்கள் யாரும் நடனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இனத்தினதும், மதத்தினதும் பெயரால் நடக்கும் அரசியல் தான் மக்களின் கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

Sunday, June 04, 2023

பெல்ஜியத்தை உலுக்கிய கொலை வழக்கு - வர்க்க நீதி

2018 ம் ஆண்டு பெல்ஜியத்தில் மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கொலை, அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தற்போது பெல்ஜிய சமூகத்தை வர்க்க ரீதியில் பிளவு படுத்தும் விவகாரமாக உள்ளது. (பார்க்க: Escalatie in België na heksenjacht op daders fatale ontgroening: ‘Mensen spelen voor eigen rechter’

பொதுவாக பல மேட்டுக்குடியினரின் கல்லூரிகளில், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த திறைமைசாலி மாணவர்களுக்கும் இடம்கொடுப்பார்கள். அவ்வாறு தான் Sanda Dia என்ற ஆப்பிரிக்க பூர்வீகத்தை கொண்ட மாணவனுக்கும் இடம் கிடைத்தது. கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு பகிடி வதை அல்லது ரேங்கிங் நடப்பதுண்டு. அவ்வாறு சொல்லித் தான் குறிப்பிட்ட சில மாணவர்கள் Sanda Dia வை துன்புறுத்தியுள்ளனர். காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று குளிர் தண்ணீரில் மணித்தியால கணக்காக நிற்க வைத்து, ஒரு மீனை விழுங்கி, மீன் எண்ணெய் குடிக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கங்கள் செயலிழந்து சுய நினைவற்று கிடந்தவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. 

வருடக் கணக்காக இழுபட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கொலைக் குற்றம் தெளிவாக இருந்த போதிலும் குற்றவாளிகளுக்கு மென்மையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதாவது 400 யூரோ தண்டப்பணம், 300 மணிநேரம் கட்டாய வேலை. கொலைக் குற்றத்திற்கு இது தான் தண்டனை! அத்துடன் அவர்கள் பெயரில் குற்றப் பத்திரிகை பதிவுசெய்யப் பட மாட்டாது. ஆகவே எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கப் போகும் பதவிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது. 

ஏனென்றால் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் மேட்டுக்குடி குடும்பங்களை சேர்ந்தவர்கள். நாளைக்கு இவர்கள் தான் அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக வலம்வரப் போகிறார்கள். இது தான் வர்க்க நீதி. வழக்கு முடிந்த பின்னரும் குற்றவாளிகளின் பெயர், விபரம் மறைக்கப்பட்டு வருகின்றது. இந்த அநீதி கண்டு கொதித்தெழுந்த ஒரு யூடியூப் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டார். உடனே அந்த வீடியோ அகற்றப் பட்டது. சில காலம் எதுவும் வெளியிட தடைவிதிக்க பட்டது. 

ஆனால் பெல்ஜிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு குற்றவாளியின் பெற்றோர் நடத்தும் ஆடம்பர ரெஸ்டாரண்டில் போலியான முன்பதிவுகள் செய்து, எதிர்மறையான கருத்திட்டு நட்டமேற்படுத்தினார்கள். இன்னொரு குற்றவாளிக் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் சுவரில் கொலைகாரர்கள் என்ற வாசகம் எழுதப் பட்டது.

Wednesday, May 31, 2023

யாழ் நூலக எரிப்பும் வலதுசாரிகளின் நெருக்கமும்

யாழ் நூலகத்தை எரித்தது, காமினி திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வலதுசாரி UNP கும்பல். மிக கவனமாக திட்டமிட்டு, தமிழர்களின் பொக்கிஷங்களை, தமிழில் இருந்த அரிய ஆவணங்களை, பழைய ஓலைச்சுவடிகளை அழிப்பதை நோக்கமாக கொண்டு நூலகத்தை எரித்துள்ளனர். முதல் நாள் ஆயுதபாணி இளைஞர்களின் துப்பாக்கி சூட்டில் இரண்டு பொலிஸ்காரர்கள் பலியானதை சாட்டாக வைத்து இந்த நாசகார செயலை பொலிஸ் உதவியுடன் நிறைவேற்றி இருந்தனர். 


இலங்கையில் இதுவரை காலமும் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் இதே வலதுசாரி UNP இனால் தான் தூண்டி விடப்பட்டன. 1958 ம் ஆண்டு மத்திய இடது சார்ந்த SLFP ஆட்சியில் இருந்தாலும் கலவரத்தை நடத்தியது UNP தான். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர். சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உண்டாக்கியது மட்டுமல்லாது, பணக்கார வர்க்கத்தை பாதித்த சீர்திருத்த சட்டங்களை சீர்குலைத்தனர். 


இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் நூலக எரிப்பு, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான UNP கட்சியை, பிற்காலத்தில் புலிகளும் ஆதரித்தார்கள்! குறிப்பாக சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் புலிகளின் UNP ஆதரவு அலை உச்சக்கட்டத்தில் இருந்தது. (புலிகள் செய்தால் துரோகம் ஆகாது!) ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காலத்தில் UNP புலிகளுடன் இரகசிய தொடர்பை பேணியது. அதனால் தான் ஒரு கட்டத்தில் தான் கைப்பற்றிய இடங்களில் இருந்து இராணுவம் திடீரென பின்வாங்கியது. (UNP ஆதரவு இராணுவ அதிகாரிகளின் திடீர் முடிவு.) உண்மையில் அதன் விளைவாக நோர்வே மத்தியஸ்தம் வகித்த பேச்சுவார்த்தையும் வந்தது. மிகுதி வரலாறு. 


போர் முடிந்த பின்னர், புலிகளின் ஆதரவை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, UNP உடன் நெருக்கமான தொடர்புகளை பேணியது. அந்த நட்புறவு இப்போதும் தொடர்கிறது. ஏனென்றால் இவர்களுக்கு இடையில் பொதுவான கொள்கை உடன்பாடு உள்ளது. அது மேற்கத்திய நலன் சார்ந்த நவ தாராளவாத பொருளாதாரத்தை பாதுகாக்கும் கொள்கை. காரணம் இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். மொழி மாறுவதால் அரசியல் கொள்கை மாறிவிடாது.