Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)

Saturday, September 23, 2023

ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன்!

Image
Gautama Buddha or Jesus Christ? இந்து மத சமூகத்தில் பிறந்த பரிதாபங்கள். 🤭🤭🤭 இவர்கள் யாரும் இயேசு, புத்தர் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை. 🤔🤔🤔

 

 
ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன். அஹிம்சையின் பெயரில் இனவெறி வன்முறை தூண்டி விடப் படுகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்து விடாதிருப்போம். இலங்கையில் இனங்களை பிரித்து ஆள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசும், அதன் தமிழ்த்தேசிய ஒட்டுக்குழுவும் தீயாக வேலைசெய்கின்றன.

இரு பக்கமும் இன உணர்வைத் தூண்டி விட்டு, சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை வளர்த்து விட்டு கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றன. அஹிம்சையின் பேரில் புத்தரும், திலீபனும் வன்முறையை தூண்டி விடும் கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன.

இதனால் நன்மையடையப் போவது சிங்கள- தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமே. இந்த குள்ள நரிகளின் சதித் திட்டத்தை அறியாத அப்பாவி சிங்கள- தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்.

தெற்கில் ராஜபக்சேக்களும், வடக்கில் கஜேந்திரகுமார்களும் நிரந்தர கோடீஸ்வரர்களாக நிலைத்திருப்பதற்காக இந்த இனவெறியூட்டும் அரசியல் நாடகம் அரங்கேற்றப் படுகிறது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.

அன்றாடம் உணவின்றி பட்டினி கிடந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், அதைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி, வயிறார உண்டு களிக்கும் மேட்டுக்குடி கும்பல், திலீபனின் படத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு மக்கள்விரோத அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் திலீபன் வழிபாட்டில் சங்கமிக்கின்றன. யாரை நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்? நாடகமே உலகம். 

"சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை யிரன்காரடீ 
கிளியே செம்மை மறந்தாரடீ. 
நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வரரடி 
கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி 
நாட்டத்திற் கொள்ளரடீ 
கிளியே நாளில் மறப்பாரடீ." 
- பாரதியார்

Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

Sunday, September 17, 2023

"பெரியாரை ஈழத்தில் யாருக்கும் தெரியாது!"

 

- ஈழத்து சங்கிகளின் உளறல்.

மார்பை மறைக்க முடியாத காலத்தில் மேல் சட்டை அணிந்த தமிழ்ப் பெண்களின் சட்டையை கத்தியால் கிழித்தெறிந்த, வெள்ளாள சாதிவெறி ஓநாய்களின் வாரிசுகள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

கோயில் கட்டிய தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத வெள்ளாள சாதிவெறி பேய்களின் வாரிசுகள் கேட்கின்றன "பெரியார் யார்"?

இதெல்லாம் எப்போதோ நடந்த கதை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஈழப் போர் தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட கிராமப்புறக் கோயில் கிணறுகளில் சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தண்ணீர் அள்ளத் தடை இருந்தது. அவர்களது கிராமங்களுக்கு போடப்பட்ட தொலைபேசி/மின்சாரக் கம்பிகள் அறுத்தெறியப் பட்டன.

அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று பொய்யுரைக்கும் அயோக்கியர்கள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

ஆண்ட பரம்பரை சாதியின் நலன்களுக்காக தமிழீழம் கேட்ட வெள்ளாள பேரினவாதிகள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

டச்சுக் காலனிய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளாளர்கள், பூர்வகுடி ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த வரலாற்றை மறைத்து விட்டுக் கேட்கிறார்கள், "பெரியார் யார்"?

சொந்த இனத்தவரான தமிழர்களையே அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அடிமைகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்காக, டச்சுக் காலனிய ஆட்சியாளருக்கு கால் கழுவி விட்டு, தேசவழமை சட்டம் என்ற ஒடுக்குமுறைச் சட்டம் எழுத வைத்த வெக்கங்கெட்ட வெள்ளாள ஒட்டுக்குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

நாகரீக காலத்திற்கு ஒத்துவராத, அடிமைகளை சீதனமாக கொடுப்பதை அங்கீகரித்த, ஒடுக்குமுறை தேசவழமை சட்டத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வெள்ளாள துரோகக் குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

Saturday, September 16, 2023

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த ஈழப்போர்!

 

ஈழப் போர் நடந்த காலத்தில் நிறையப் பேர் தமது கண் முன்னே நடந்த கொடுமைகளைக் கண்டு நாத்திகர்களாக மாறி இருந்தனர். "கடவுள் இல்லை!" என்று பாமர மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசியல் அறிவு, கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் கடவுள் இல்லை என்ற உண்மையை கண்கூடாகக் கண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் தீவிர மத நம்பிக்கையாளர்களாக இருந்த பலர், யுத்த காலத்தில் கோயிலில் சாமி இல்லை என்று கூறி போகாமல் விட்டனர். கோயிலில் குண்டு போட்டால் யார் தான் அப்படி சிந்திக்க மாட்டார்கள்? இது சமூக யதார்த்தம்.

ஆனால், நமது தமிழ் சமூகத்தில் கற்பனை உலகில் வாழும் சில ஜீவன்கள் உள்ளன. சமூக வலைத் தளங்களில் தம்மை தீவிர தமிழ் இனப் பற்றாளர்களாக காட்டிக் கொள்வார்கள். தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழம், சுயநிர்ணயம் என்றெல்லாம் மேதாவி மாதிரி பேசித் திரிவார்கள். வடக்கு கிழக்கில் நடக்கும் தமிழ்த் தேசிய ஆர்ப்பாட்டங்களில் முன்னுக்கு நிற்பார்கள். மேற்கண்ட போலித் தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் நல்லூர் முருகனின் தேர் வலம் கண்டு பக்திப் பரவசத்துடன் கை கூப்பி வணங்குகிறார்கள். இது மது மயக்கம் அல்ல மத மயக்கம்.

ஒரு பக்கம் "இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்! சர்வதேசமே தலையிடு!!" என்று இறந்த மக்களின் உடல்களை காட்டி அரசியல் செய்வார்கள். அவர்களே மறு பக்கம் திரும்பி "இனப்படுகொலையை தடுக்க சக்தியற்றிருந்த "இனத் துரோகி", நல்லூர் "ஒட்டுக்குழு" கந்தனுக்கு அரோகரா!" என்பார்கள். விசித்திரமான உலகம்.

ஏன்டா தற்குறிகளே! அது தான் கடவுள் இல்லை வெறும் கல் என்பதை 30 வருட ஈழப் போர் நிரூபித்து விட்டதே? பிறகேன்டா அதை கும்பிடுகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே போருக்குள் இன்னல் பட்டு வாழ்ந்தீர்களா அல்லது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் சொகுசாக வாழ்ந்தீர்களா?

எந்த வகையிலும் போரினால் பாதிக்கப் படாத சொகுசுப் பேர்வழிகள் தான் பொழுதுபோக்காக தமிழ்த்தேசியம் பேசுகின்றனர். அதனால் தான் எந்த வித கூச்சமும் இல்லாமல், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர் கந்தனுக்கு காவடி தூக்க முடிகிறது. அயோக்கியக் கும்பல்.

கடவுளை மற ! 
மனிதனை நினை ! 
கடவுள் இல்லை ! 
கடவுள் இல்லை !! 
கடவுள் இல்லவே இல்லை !!! 
கடவுளை கற்பித்தவன் முட்டாள்! 
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! 
கடவுளை மற! 
மனிதனை நினை! 
- தந்தை பெரியார்

Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

Saturday, September 09, 2023

"கொலை நிலம்": தியாகு- ஷோபாசக்தி உரையாடல்

 

"கொலை நிலம்" என்ற தலைப்பில் தியாகு- ஷோபாசக்தி நடத்திய உரையாடல் தொகுப்பு நூலை இப்போது தான் வாசித்தேன். அதில் தியாகு ஈழம் பற்றிய தனது அறிவுக் குறைபாட்டை மறைப்பதற்காக சோவியத் யூனியன், பாலஸ்தீனம் என்று தாவுவதை அவதானிக்க முடிந்தது. அதில் கூட அவர் சில பிழையான தகவல்களை கூறுகின்றார்.

1. புலிகள் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய சம்பவத்தை நியாயப் படுத்த சோவியத் யூனியனுக்கு செல்கின்றார். இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்தில் நாஸி ஜெர்மன் இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த நேரம், அங்கு வாழ்ந்த யூதர்களை "அவர்களது பாதுகாப்பு கருதி" (நாஸிகள் பிடித்தால் கொன்று விடுவார்கள் என்பதால்) வெளியேற்றியதாக கூறுகின்றார். இது முழுக்க முழுக்க பிழையான தகவல்.

நாஸிகள் ஆக்கிரமித்த சோவியத் பகுதிகளில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தனர். உண்மை தான். ஆனால் அதற்காக சோவியத் அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்த யூதர்கள் வெளியேற்றப் படவில்லை. மாறாக அவர்கள் செம்படையிலும், கெரில்லா குழுக்களிலும் பெருமளவில் சேர்ந்து போராடினார்கள். ஆனால் சோவியத் யூனியன் எல்லைக்குள் வாழ்ந்த ஜெர்மன் இன மக்களைத் தான் இடம்பெயர்வித்து கஸகஸ்தானில் மீள்குடியேற்றம் செய்தனர். அவர்கள் நாஸி ஆக்கிரமிப்பு படையினருடன் ஒத்துழைக்கலாம் என்ற அச்சம் காரணம். ஒரு வேளை புலிகள் வவுனியா எல்லையில் வாழ்ந்த சிங்கள மக்களை இடம்பெயர்வித்து யாழ் குடாநாட்டில் மீள்குடியேற்றம் செய்திருந்தால் தியாகு சொன்ன உதாரணம் சரியாக இருந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே?

2. இரண்டாம் உலகப் போரில் செம்படையில் சேர்ந்த போர்வீரர்கள் (சோஷலிச) கொள்கையை பாதுகாக்க போராடினார்கள் என்கிறார் தியாகு. அந்த நிலைமை போல்ஷேவிக் புரட்சிக்கு பின்னரான உள்நாட்டுப் போரில் இருந்தது. அப்போது போரிட்டவர்களுக்கு கொள்கை முக்கியமாகப் பட்டது. ஆனால் 2ம் உலகப் போர் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் நடந்தது. சோவியத் அரசின் சோஷலிச கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள், எதிர்த்தவர்கள், ஏன் அரசியலில் எந்த ஆர்வமும் இல்லாதவர்கள் கூட செம்படையில் சேர்ந்து போரிட்டனர். காரணம், நாட்டுப் பற்று. பல போர்வீரர்கள் நாஸி ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளை கண்டு, கேட்டறிந்த ஆவேசத்துடன் கிளர்ந்தெழுந்து நாஸிகளை எதிர்த்து போரிட சென்றனர். இன்றைக்கும் ரஷ்யாவில் அது "மாபெரும் தேசபக்திப் போர்" என்று தான் அழைக்கப் படுகிறது.

3. பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) "ஆயுதங்களை மௌனித்த" பின்னர் இன்டிபதா எழுச்சி நடந்தது உண்மை தான். அதன் பிறகு தியாகு சொல்வது தான் பிழையான தகவல். அதாவது இன்டிபதா மூலம் போராட்டக் களத்திற்கு வந்த இளைஞர்கள் PLO வில் சேர்ந்தனர் என்கிறார். இது தவறு. அந்த இளைஞர்கள் "ஆயுதங்களை மௌனித்த" PLO வை துரோகிகளாக கருதினார்கள். அதனால் ஆயுதங்களை கைவிடாத ஹமாஸ், ஜிகாத் போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களில் சேர்ந்து கொண்டனர். இது இன்னொரு உண்மையையும் தெரிவிக்கிறது. தேசியவாத இயக்கம் ஒரு கட்டத்தில் சரணடைய வேண்டிய நிலை வருகின்றது. அந்த வெற்றிடத்தை மத அடிப்படைவாத இயக்கங்கள் தான் நிரப்புகின்றன. அது இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

Thursday, September 07, 2023

Victim card- ஒரு தேசியவாதக் கோளாறு

 😇

யாராவது தமிழ்த் தேசியவாதிகள் மீது விமர்சனம் வைத்தால், அவர்கள் உடனே victim card தூக்கி பிடிக்க தொடங்கி விடுவார்கள். அதை அவர்கள் பாதுகாப்பு கவசமாக மட்டுமல்லாது, மற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தவும், ஏன் அத்துமீறவும் கூட பயன்படுத்துவார்கள். அதாவது victim என்ற கொடியை பிடித்துக் கொண்டு எதுவும் செய்யலாம். அத்துமீறல்களை நியாயப் படுத்தலாம். தம்மின மக்களை தமது தலைமையின் கீழே அடக்கி ஒடுக்கி வைக்கலாம். ஏனென்றால், குற்றமே ஆனாலும் அதை victim செய்தால் தவறில்லை அல்லவா?

அவர்களால் பாதிக்கப்பட்ட யாராவது உரிமைக்குரல் எழுப்பினால், "victim blame பண்ணாதே!" என்று மிரட்டி வைக்கலாம். இது தான் victim card play பண்ணுவது எனப்படும். இதைப் பல தமிழ்த் தேசியவாதிகள் சிறப்பாக செய்கின்றனர். கவனிக்க: சிங்களத் தேசியவாதிகள், யூத தேசியவாதிகள், ஆங்கிலத் தேசியவாதிகள், எவராக இருந்தாலும் கொள்கை ஒன்று தான். Victim card play பண்ணுவது, ஒரு தேசியவாதக் கோளாறு.

Victim card play பண்ணுவது வழமையாக எல்லா தேசியவாதிகளுக்கும் உரிய குணாம்சம். சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். குறிப்பாக அண்மையில் கூட போர்குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச அழுத்தம் வந்த நேரம், victim card தூக்கி பிடித்தார்கள். இதையே தான் இஸ்ரேலியர்கள், செர்பியர்கள் கூட செய்தார்கள். தமக்கு மேலே உள்ள சக்தி அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் victim card play பண்ணுவார்கள்.

இப்போது மீண்டும் தமிழ்த்தேசியவாதிகள் பக்கம் வருவோம். Victim card play பண்ணுவது பொதுவாக தேசியவாதிகளின் சிறப்பம்சம் என்பதை பார்த்தோம். இதற்கு தமிழ்த்தேசியவாதிகளும் விதிவிலக்கல்லவே? ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள் தமக்கு கீழே உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, முஸ்லிம்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படை செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் தமிழர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

சிங்களத் தேசியவாதிகளும் அதே தான். தமக்கு கீழே உள்ள தமிழ்ச் சிறுபான்மையினரை ஒடுக்கும் பொழுது, அவர்களை victim ஆக கருத மாட்டார்கள். (இரட்டை வேடம்) மாறாக மறுபடியும் தாமே victim என்பார்கள். புலிகள் செய்த படுகொலைகளை ஆதாரமாக காட்டுவார்கள். மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக் காட்டி, "பார்த்தீர்களா? இப்போதும் சிங்களவர்கள் தானே victim?" என்று கேட்பார்கள்.

தமிழ்த்தேசியவாதிளும், சிங்கள தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒற்றுமை அது மட்டுமல்ல. தத்தமது சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை சாதிரீதியாகவும், வர்க்கரீதியாகவும் ஒடுக்குவார்கள். அப்போது அந்த மக்கள் சார்பில் யாராவது உரிமைகளுக்காக போராடினால் victim blame பண்ண தயங்க மாட்டார்கள்.

ஏனென்றால் இப்போது இவர்கள் தான் ஒடுக்கும் வர்க்கமாக உள்ளனர். அதை மறைப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். இது தான் தேசியவாதம். தமிழ்த்தேசியம் அல்லது சிங்களத் தேசியம், எதுவாக இருந்தாலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

Monday, September 04, 2023

முல்லா வேலனின் "சாதியமும் தேசியமும்" பிரார்த்தனைக் கூட்டம்

 

கிளப் ஹவுசில் முல்லா வேலன் (தோழர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தாது. அவர் ஒன்றில் Dogmatist அல்லது Fundamentalist.) தலைமையில் சாதியமும் தேசியமும் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேசினார்கள். வழமை போல இனவாத- பாஸிஸத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பேச அழைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் சிலர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் நியாயமாகப் பேசினார்கள். அதை முதலில் பாராட்ட வேண்டும்.

அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வந்ததாவது, அருண் சித்தார்த் தான் இவர்களை இந்தளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அதாவது, இவர்கள் பல வருட காலமாக அருண் சித்தார்த் மீது "கஞ்சா வியாபாரி, அரச கைக்கூலி" போன்ற பல்வேறு வகையான அவதூறுகள் செய்து, குற்றச்சாட்டுகள் சுமத்தி புறக்கணித்து வந்துள்ளனர். அருண் சித்தார்த்தை ஓரம் கட்டலாம் என நினைத்து மாறாக அவனை வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதை அங்கு உரையாற்றிய பலர் எதிரொலித்தனர்.

இது தொடர்பாக பாரதி எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. "அருண் சித்தார்த் ஒரு முக்கியமில்லாத, சாதாரண நபர் என்றால் எதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை அவனைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்றார். அதையே செண்பகம் பறவை (முன்பு இசைவேந்தன் என்ற பெயரில் இருந்தவர்) என்பவரும் கூறினார். "அருண் சித்தார்த்தின் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அங்கு இருக்கும் சாதிப் பிரச்சினையை அரசியல்வாதிகள் பேசத் தவறியதை, அவர் பேசுகிறார். நாளைக்கு இன்னொரு அருண் சித்தார்த் வரலாம்." என்றார்.

ஆயினும் அவரும் தற்போது அங்கே சாதி ஒடுக்குமுறை இல்லை என்றே வாதிட்டார். (இதே மாதிரி ஒரு சராசரி சிங்களவரைக் கேட்டால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லை என்பார்.) அவர் "ஒடுக்கப்படுத்தப் பட்டவர்கள்" என்று புதிய கலைச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். அதாவது அது இறந்த காலம். இப்போது இல்லை என நாம் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், அவர் அறியாமலே முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினார். ஒரு தடவை ஒடுக்குமுறை இல்லை என்றவர் மறு தடவை ஒடுக்குமுறையை விபரித்து பேசினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாராளுமன்ற பிரதிநிதி ஆக்காதது ஒரு குறைபாடு என்றார். அது தானே ஒடுக்குமுறை? சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தானே ஈழப்போர் தொடங்கியது? சிங்களப் பேரினவாதிகளின் அதே ஒடுக்குமுறை கொள்கையைத் தானே, தமிழ்ப் பேரினவாதிகளும் பின்பற்றுகிறார்கள்? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இசைவேந்தன் (செண்பகம் பறவை) அவர் அறியாமலே இன்றைய சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதானமான சாதிய ஒடுக்குமுறையை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகள் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது மகனுக்கு கொடுக்கும் வழக்கம் காரணமாக முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது என்றார். உண்மை தான். அரசு வேலைவாய்ப்புகளில் சிங்களவர்களை போட்டு விட்டு தமிழர்களைப் புறக்கணித்த படியால் தானே ஈழப் போராட்டம் தொடங்கியது? அதே பிரச்சினை, அதே ஒடுக்குமுறை, வடக்கில் சாதியின் பெயரால் நடைமுறையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசம்.

முந்திய காலங்களில் ஒடுக்குபவன் தன்னை சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வான். இன்றைய காலத்தில் இன அடையாளத்தை போர்வையாக மூடிக் கொள்கிறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும், இன்றும் ஒடுக்குபவனும், ஒடுக்குமுறையும் ஒன்று. தெற்கில் சிங்கள இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது கொவிகம சாதிய மேலாதிக்கவாதிகள். அதே மாதிரி வடக்கில் தமிழ் இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது வெள்ளாள சாதிய மேலாதிக்கவாதிகள். மேலதிக விளக்கம் தேவையில்லை.

தெற்கில் சிங்கள மேலாதிக்கம் என்றால் வடக்கில் வெள்ளாள மேலாதிக்கம் உள்ளது. இரண்டும் ஒடுக்குமுறை சக்திகள் தானே? நிச்சயமாக இந்த இடத்தில் சாதிப் பிரச்சினையின் மூலக்கருவுக்கு கிட்ட வந்து விட்டோம். ஆனால் கேட்பவர்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட முன்னர் முல்லா வேலன் விழித்துக் கொண்டார். இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் தடுத்தார். "இது வேறொரு தளத்திற்கு போகிறது.... அது இலங்கை அரசின் திணைக்களத்திற்குள் உள்ள பிரச்சினை... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..." என்று பேசி மழுப்பினார். இப்படித் தான் உண்மையான பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய விடாமல் திசைதிருப்பப் படுகின்றன. 
 

Saturday, September 02, 2023

தர்மன் சண்முகரட்னம்- ஒரு "சிங்கப்பூர் கதிர்காமர்"!

 Image

தர்மன் சண்முகரட்னம் என்ற "யாழ்ப்பாணத் தமிழன்"(?) சிங்கப்பூர் ஜனாதிபதியாக வந்து விட்டார் என்று மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஒருவேளை இலங்கையில் யுத்தம் நடந்திரா விட்டால், புலிகள் இருந்திரா விட்டால், கதிர்காமர் வெளிவிவகார அமைச்சரான நேரம் இதே மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஒருவேளை கதிர்காமரை புலிகள் சுட்டுக் கொல்லாமல் விட்டிருந்தால் அவர் ஜனாதிபதியாக கூட வந்திருப்பார்.

கதிர்காமருக்கும், தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். இருவருக்கும் இடையிலான நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

1. கதிர்காமர், இலங்கையில் ஆளும் கட்சியான SLFP தலைமைக்கு மிக விசுவாசமான முக்கிய உறுப்பினர். பண்டாரநாயக்க குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக SLFP கட்சியில் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". ஆனால் உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத கொழும்பு தமிழன்.

2. தர்மன் சண்முகரட்னம், சிங்கப்பூரில் ஆளும் கட்சியான PAP தலைமைக்கு விசுவாசமான முக்கிய உறுப்பினர். லீ குவான்யூ குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக கட்சியின் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத சிங்கப்பூர் தமிழன்.

Srilanka Freedom Party (SLFP), People's Action Party (PAP) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை. ஆரம்பத்தில் தங்களை மத்திய- இடது கொள்கை சார்ந்ததாக காட்டிக் கொண்டாலும், பிற்காலத்தில் மத்திய- வலது கொள்கையை பின்பற்றின. மக்கள் நலன் சார்ந்த Populist அரசியல் பேசிக் கொண்டே இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியதில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

அவ்வாறான அரசியல் பின்னணியில் வந்தவர்கள் தான் இலங்கைக் கதிர்காமரும், சிங்கப்பூர் தர்மனும். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு, நமது மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகளுக்கு அறிவும் கிடையாது, பக்குவமும் கிடையாது.

லக்ஷ்மன் கதிர்காமர் மானிப்பாயில் பிறந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவர் வீட்டில் ஆங்கிலம் பேசி தமிழை மறந்திருக்கலாம். யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்கரசியல் செய்திராத விட்டால் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா போன்ற "தமிழ்த்தேசிய" தலைவர்களும் கதிர்காமர் மாதிரி ஆங்கிலம் மட்டுமே பேசிக் கொண்டு தமிழை மறந்து விட்டிருப்பார்கள். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் பிறந்து வளர்ந்த மேட்டுக்குடித் "தமிழ்" குடும்பங்களில் இது சாதாரணமான விடயம்.

அதே மாதிரி சிங்கப்பூரில் பிறந்த "தர்மன் சண்முகரட்னம் ஒரு தமிழரா?" என்றும் கேட்கலாம். அவரும் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறவர் தான். கதிர்காமர் திருமணம் முடித்தது ஒரு பிரெஞ்சு- பாகிஸ்தான் கலப்பின பெண்ணை. அதே மாதிரி தர்மன் திருமணம் முடித்தது ஒரு சீன- ஜப்பானிய கலப்பின பெண்ணை. இவர்கள் வீட்டில் தமிழில் பேசி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மேலும் தமிழ் அடையாளத்தை துறந்தவர்கள் என்பதால் தான் நாட்டின் அதியுயர் பதவிக்கு வர முடிந்தது. கதிர்காமர் தன்னை ஒரு சிறிலங்கன் என்று அடையாளப் படுத்தியவர். அதே மாதிரி தர்மன் தன்னை ஒரு சிங்கப்பூரியன் என்று அடையாளப் படுத்தியவர்.

அது போகட்டும். உங்களுக்கு ஓர் உண்மை சொல்லவா? இலங்கை மாதிரி சிங்கப்பூரில் "தமிழ்த்தேசியம்" என்று அடையாள அரசியல் செய்யக் கிளம்பினால் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்! "சிங்கப்பூர் தமிழரசுக் கட்சி", "சிங்கப்பூர் விடுதலைப் புலிகள்" இப்படி எல்லாம் தொடங்கலாம் என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள். அப்படியான எண்ணம் கொண்ட அத்தனை பேரையும் ஒரே நாளில் கைது செய்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். சிங்கப்பூர் வெளிப் பார்வைக்கு தான் அழகாக இருக்கும். உள்ளே மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு.