Sunday, July 30, 2023

வட இலங்கையில் தொடரும் வர்க்கப் படுகொலைகள்!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்த ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். பொலிஸ் இதை தற்கொலை என்று பதிவு செய்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியை வேலைக்கு வைத்திருந்தவர்கள், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு வைக்க அனுமதிக்கவில்லை. மாதம் 25000 ரூபாய் சம்பளம் பேசி விட்டு 5000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வேலை வழங்குநர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பிருந்தும், சிறுமியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியுள்ளனர். ஏனென்றால் சக்தி வாய்ந்த பணக்காரர்களை ஏழைகளால் எதிர்த்து நிற்க முடியாது. அதிகார வர்க்கம் எப்போதும் பணக்காரர்கள் பக்கமே நிற்கும்.

இதை தற்கொலை என்று பார்த்தாலும், அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களில் ஒரு பணிப்பெண் தற்கொலை செய்கிறாள் என்றால், அந்தளவுக்கு கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கொலை தான். அப்படி இருந்தும் பொலிஸ் அந்த பணக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

இலங்கையில் பல இடங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும் அதை தற்கொலை என்று சொல்லி மறைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு அமைச்சர் வீட்டில் வேலை செய்த சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலும், இறந்தது மலையக தமிழ்ச் சிறுமி என்பதாலும், அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனைய மரணங்கள் ஊடக கவனத்தை பெறுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நடந்த (தற்)கொலை சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதனை மேற்கொண்டு விசாரிக்காமல் வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. அந்த சம்பவத்தில் பலியானது ஓர் ஏழைச் சிறுமி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள். எப்போதும் பொலிஸும், நீதித் துறையும் பணக்காரர் பக்கமே நிற்கும்.

அது போகட்டும். சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக பேசக் கூடிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதேன்? பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிக்காக நீதி கோரிப் போராடாதது ஏன்? குற்றவாளியும் ஒரு தமிழர் என்பதாலா? பணக்கார வீடென்றால் "தமிழ் வீரம்" புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

சிங்கள இராணுவத்துடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சல் மிக்க தமிழ்தேசிய ஊடகவியலாளர் யாரும் இப்படியான விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? குறைந்த பட்சம் அங்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து மக்களுக்கு அறியத் தர வேண்டாமா?

ஏனென்றால் இவர்கள் எல்லோரும் பணக்கார வர்க்க அடிவருடிகள். இலங்கையில் இருப்பதும் வர்க்கப் பிரச்சினை தான். அதாவது பணக்கார வர்க்கமும், அதன் அடிவருடிகளும் ஏழைகள் மீதான ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக இனம், தேசியம் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தப்பித்தவறி ஒருபோதும் ஒரே தேசியத்தின் உள்ளே நடக்கும் வர்க்கப் படுகொலைகள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் பதில் வராது. பணக்கார அடிவருடித்தனத்தை வெளியே சொல்ல முடியுமா?

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Sunday, July 02, 2023

பிரான்ஸ் எரிகிறது! இனவெறிப் பொலிஸ் அத்துமீறலின் எதிர்விளைவுகள்!!

 

பிரான்சில் மக்கள் எழுச்சி! 

பாரிஸ் புறநகர் பகுதியான Nanterre நகரத்தில் Nahel என்ற 17 வயது அல்ஜீரிய இளைஞன் பொலிஸ் வீதி சோதனையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல வாகனங்கள், பேருந்து வண்டிகள், ஒரு டிராம் தீக்கிரையாக்கப் பட்டன.  பஸ் பாதையில்  காரோட்டிய குற்றத்திற்காக வீதிசோதனை இடும் போலீசார் மறித்துள்ளனர்.

போலிஸ் ஓரிடத்தில் நிறுத்தி வைத்து பிஸ்டல் காட்டி மிரட்டியதாகவும், துப்பாக்கியால் தலையில்தாக்கியதாகவும் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். அந்த தாக்குதல் காரணமாக பிரேக்கில் இருந்து காலை எடுத்த படியால் வண்டி தானாக ஓடிச் சென்று மின்கம்பத்துடன் மோதியுள்ளது. அந்த அல்ஜீரிய இளைஞன் அந்த இடத்திலேயே பலியானான்.

அடுத்த நாள் பாரிஸ் நகரில் Nahel இன் தாயார் தலைமையில் சுமார் 6000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. "பொலிஸ் கொலைகாரர்கள்!" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த பேரணிக்கு பொலிஸ் "பாதுகாப்பு" கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது. பிரான்சின் பல நகரங்களில் பொலிசை நோக்கி கற்கள் வீசப்பட்டன. பொலிசாருடன் மோதல்கள் இடம்பெற்றன. 

பல நகரங்களில் கலவரம் நடந்தது. ஒரு வங்கி உட்பட பல அரச கட்டிடங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகள் கொள்ளையடிக்கப் பட்டன. பாரிஸ் நகரில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் Louis Vuitton எனும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை பொது மக்களால் உடைத்து சூறையாடப் பட்டது. Aldi, Action போன்ற பல சூப்பர் மார்க்கெட்டுகள் தீக்கிரையாக்கப் பட்டன. பாரிஸ் வடக்கில் உள்ள ஓபர்வில்லியே ( Aubervilliers) புற நகரில் ஒரு பஸ் டிப்போ எரிக்கப் பட்டது. 

பிரான்ஸ், மார்செய் நகரில் ஒரு பெரிய நூலகம் எரிக்கப் பட்டதாக ஒரு பொய்யான செய்தி பரவியது. ஐரோப்பிய தீவிர வலதுசாரி நாஸிகள், இந்திய ஆர்எஸ்எஸ் காவி சங்கிகள் பரப்பிய இந்த பொய்ச் செய்தியை, ஒரு சில ஈழத்து வலதுசாரி சங்கிகளும் பகிர்ந்திருந்தனர். இந்திய சங்கிகள் இதை நாளந்தா நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். ஈழத்து சங்கிகள் இதை யாழ் நூலக எரிப்புடன் ஒப்பிட்டு பிரச்சாரம் செய்தனர். 

இது உண்மையில் வெள்ளையின நிறவெறியினரின் சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரப்பப்பட்ட ஒரு fake news. ஐரோப்பாவில் எந்தவொரு உத்தியோகபூர்வ ஊடகமும் இதை தெரிவிக்கவில்லை. நவ- நாஸி இனவெறியர்கள் மார்செய் நூலகம் எரிப்பு என்ற பொய் செய்தியின் மூலம் வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவது புலம்பெயர்ந்த தமிழர்களும் தான். இதை உணர்ந்து நடக்க வேண்டும். தீவிர வலதுசாரிகள் சொல்வதை எல்லாம் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. 

சர்வதேச சமூகம், ஐ.நா. சபை எல்லாம் பிரெஞ்சு காவல்துறையின் கொடுமைகளை, அரச மட்டத்தில் நிலவும் இனவெறியை வன்மையாக கண்டித்துள்ளன. ஆனால் இங்கே சில புலியின் நெளிஞ்ச செம்புகள் இனவெறி அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஒட்டுக்குழு வேலை செய்து கொண்டிருக்கின்றன.