Showing posts with label 83 ஜூலைக் கலவரம். Show all posts
Showing posts with label 83 ஜூலைக் கலவரம். Show all posts

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

Thursday, July 25, 2013

வரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு மீள்பார்வை


1983 ஜூலை மாதம் நடந்த, தமிழருக்கு எதிரான இனக் கலவரம், இலங்கை வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கு முந்திய கலவரங்களை காட்டிலும், தலைநகரத்தில் வாழ்ந்த தமிழர்களுக்கு பல மடங்கு அழிவுகளை உண்டாக்கி இருந்தது. அதிகளவான உயிரிழப்புகளும், சொத்தழிவும் 83 கலவரத்தின் போது ஏற்பட்டன. தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் ஒன்று கூட தப்பவில்லை. சிறிய பெட்டிக் கடை முதல், பெரும் வணிக வளாகம் வரையில், தமிழ் உரிமையாளர்களை கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக எரிக்கப் பட்டன.

தமிழ் பணக்காரர்கள் வீட்டில் வேலை செய்த, சிங்கள பணியாளர்கள் அவர்களை காட்டிக் கொடுத்தார்கள். தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த சிங்கள தொழிலாளர்கள், தொழிற்சாலைகளை எரிக்க துணை போனார்கள். இதனால் பல தமிழ் முதலாளிகள் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை இழந்து, ஏதிலிகளாக நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டனர். தலைநகர வர்த்தகத்தில் தமிழர்கள் கொண்டிருந்த நூறாண்டு கால பங்களிப்பு, ஒரு சில நாட்களில் இல்லாதொழிக்கப் பட்டது.

இலங்கையின், மேற்கத்திய பாணி தேர்தல் ஜனநாயகம், தமிழின அழிப்புக்கு உறுதுணையாக அமைந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்கள் கைகளில், தொகுதியை சேர்ந்தவர்களின், வாக்காளர் பட்டியல் காணப்பட்டது. அந்தப் பட்டியலின் படி, தமிழர்களின் வீடுகளை கண்டுபிடிப்பதும், அங்கு வாழ்ந்தவர்களை கொலை செய்வதும் இலகுவாக அமைந்திருந்தது. 

தொழில் வாய்ப்பற்ற, சிங்கள இனவெறியூட்டப் பட்ட, உதிரிப் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த காடையர்களே தமிழர்களை தாக்கினார்கள். ஆளும்கட்சியை சேர்ந்த தொகுதி உறுப்பினர்கள், அவர்களை பின் நின்று இயக்கிக் கொண்டிருந்தனர். சிங்கள மத்திய தர வர்க்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சிலர் தமது வீடுகளில் அடைக்கலம் கோரி வந்த, நீண்ட கால தமிழ் நண்பர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். "படித்தவன் இனவாதியாக இருக்க மாட்டான்" என்ற நம்பிக்கை, அன்று பல தமிழர் மனங்களில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில், 13 சிங்களப் படையினர் புலிகளின் திடீர்த் தாக்குதலில் கொல்லப் பட்ட சம்பவம், கலவரத்தை தூண்ட காரணமாக அமைந்திருந்தது. உண்மையில், ஆளும் ஐதேக தலைவர்கள், ஏற்கனவே தமிழின அழிப்புக்கு திட்டம் தீட்டி இருந்தனர். அவர்களுக்கு தேவைப் பட்டது ஒரு தீப்பொறி மட்டுமே. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "தமிழர்கள் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்..." என்று ஊடகங்களில் அறிவித்திருந்தார். 

அன்றைய தாக்குதலில் சுட்டவர்கள் புலிகள், பலியானவர்கள் அரச படையினர். ஆனால், தென்னிலங்கையில் அது "சிங்களவர்கள் மீதான தமிழர்களின் தாக்குதலாக" பிரச்சாரம் செய்யப் பட்டது. எல்லாவற்றையும் சிங்கள-தமிழ் இனவாத கண்ணாடி ஊடாக பார்க்கும் அரசியல், அடுத்து வந்த முப்பதாண்டு கால ஈழப்போர் கால கட்டத்திலும் தொடர்ந்திருந்தது. கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிக் கிரியைகள் நடந்த, பொரளை கனத்த மயானத்தில், நூற்றுக் கணக்கான சிங்கள இனவாதிகள் ஒன்று திரண்டிருந்தனர். பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற வெறி எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்தது. 

கனத்த மயானத்திற்கு அருகில் பெருமளவு தமிழர்கள் வாழ்ந்த, நாரஹென்பிட்டிய தொடர்மாடி குடியிருப்புகளே முதலில் தாக்கப் பட்டன. அங்கு பெரும்பாலான குடியிருப்புகள், அரசாங்க ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப் பட்டிருந்தன. முப்படைகளில் பணியாற்றிய ஊழியர்களும் அங்கே குடியிருந்தனர். அதனால், "பாதுகாப்பான பிரதேசமாக" கருதப்பட்ட தொடர்மாடிக் கட்டிடங்கள் தாக்கப் பட்டமை பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அரசாங்க ஊழியர்கள் என்பதால், நாங்களும் அங்கிருந்த வீடொன்றில் தான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நல்ல வேளையாக, கலவரம் தொடங்குவதற்கு முன்னர் விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்று விட்டதால், ஒரு பேரழிவில் இருந்து மயிரிழையில் தப்பினோம். 

இதற்கு முந்திய தமிழ் ஆயுதபாணி இயக்கங்களில் தாக்குதல்களில், பொதுவாக ஒன்றிரண்டு பொலிஸ்காரர்கள் தான் கொல்லப் படுவது வழக்கம். பெருமளவு எண்ணிக்கையில் படையினர் கொல்லப்பட்டமை அதுவே முதல் தடவை. தாக்குதல் நடந்த திருநெல்வேலியில் ஊரடங்கு உத்தரவு போட்ட படையினர், பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். வீடுகளுக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை சுட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் காரணம் தெரியாமலே இறந்து போனார்.

யாழ் குடாநாட்டில், ஒரு சில நாட்களுக்குள் நிலைமை தலைகீழாக மாறியது. பாதுகாப்பற்ற இடத்தில் இருப்பதாக கருதப் பட்ட பொலிஸ் நிலையங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டன. சுன்னாகம் பொலிஸ் நிலையம் வெறுமையாக இருப்பதை அறிந்த, அயலில் வாழ்ந்த தமிழர்கள் சிலர் உள்ளே சென்று பார்த்தனர். திடீரென, நேரக் கணிப்பு வெடிகுண்டு வெடித்ததால் சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். யாழ் குடாநாட்டில் இருந்த சிறிய பொலிஸ் நிலையங்களே விலக்கிக் கொள்ளப் பட்டன. பெரிய பொலிஸ் நிலையங்கள் பலப் படுத்தப் பட்டன. வேட்டைத் துப்பாக்கிகள் மட்டுமே வைத்திருந்த பொலிஸ்காரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப் பட்டன. பொலிஸ், இராணுவ வாகனங்கள் முக்கியமான தெருக்களில் மட்டுமே ரோந்து சுற்றின. 

இதனால், கிராமங்களில் படையினரின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பல்வேறு தமிழ்ப் போராளிக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். ஆர்வமுள்ளவர்களுடன் பேசி, பொதுக் கூட்டங்கள் நடத்தி, இளைஞர்களை சேர்த்தார்கள். ஈழப் போராட்டத்திற்காக வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களை சேர்த்து, இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள். 

83 கலவரத்திற்குப் பிறகு, இலங்கை அரச வானொலியை கேட்பதை, யாழ்ப்பாண தமிழர்கள் ஏறக்குறைய நிறுத்தி விட்டார்கள். பொய், புரட்டு, இருட்டடிப்பு காரணமாக அதன் நம்பகத் தன்மை குறைந்து கொண்டே போனது. அதற்குப் பதிலாக, தமிழ் மக்கள் தகவலுக்காக வெளிநாட்டு வானொலிகளை நம்பி இருந்தார்கள். இந்திய தூரதர்ஷன், பிரிட்டனின் பிபிசி, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க நிறுவனத்தின் வெரித்தாஸ் போன்ற வானொலிகளின் தமிழ்ப் பிரிவினர், மறைக்கப் பட்ட செய்திகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தமிழ் வீட்டிலும் அவை கேட்கப் பட்டன. அன்றாட அரசியல் உரையாடல்களும், அந்த வானொலிகள் கொடுத்த தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்கும். 

83 ஜூலைக் கலவர சம்பவங்களை ஜூனியர் விகடன் சிறப்பிதழாக வெளிக் கொணர்ந்தது. அந்த இதழ் இலங்கைக்குள் வருவது தடை செய்யப் பட்டிருந்தது. போராளி இயக்கங்களை சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பிரதி எடுத்து விநியோகித்தார்கள். அதைத் தொடர்ந்து, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழக அரசியல் சஞ்சிகைகளையும், படகு மூலம் கடத்திக் கொண்டு வந்து விநியோகித்தார்கள். நிறையப் பேர் அவற்றை விரும்பி வாங்கி வாசித்தார்கள். 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 கலவரத்திற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரங்களுக்காக யாழ்ப்பாணம் சென்று வந்தார். அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் கிளைகள் இருந்தன. தமிழ் அமைப்பாளர்கள் அவற்றை நிர்வகித்து வந்தனர். 83 கலவரத்திற்கு பின்னர், யாழ் மாவட்ட ஐதேக அமைப்பாளர்களுக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப் பட்டது. ஈழ போராளிக் குழுக்கள் அனுப்பிய எச்சரிக்கைக் கடிதம் காரணமாக பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். மெல்ல மெல்ல பிற அரசியல் கட்சிகளும் இயங்குவதற்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. பழம்பெரும் தமிழ் தேசியக் கட்சியான, தமிழர் விடுதலைக் கூட்டணியும் பகிரங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தேர்தல் அரசியல் மிதவாதமாகவும், ஆயுதபாணி அரசியல் தீவிரவாதமாகவும் மாறியது. ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திய குழுக்களை, அரச ஊடகங்கள் "பயங்கரவாதிகள்" என்று அறிவித்தன. தமிழ் மக்கள் மட்டுமல்ல, அன்றைய காலத்தில் சிங்கள மக்கள் கூட, தமது அன்றாட அரசியல் உரையாடல்களில் "பயங்கரவாதிகள்" என்ற சொல்லை பாவிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர, TELO, PLOTE, EPRLF, EROS, TELA என்று ஒரு டசின் விடுதலை இயக்கங்கள் இருந்தன. ஆனால், சிங்கள மக்கள் அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் "கொட்டியா" (புலிகள்) என்று அழைத்தனர். எந்த இயக்கம் தாக்குதல் நடத்தினாலும், அதனை புலிகளே செய்ததாக நினைத்துக் கொண்டனர். 

இதே மாதிரியான நிலைமை, தமிழ் நாட்டிலும் இருந்தது. அவர்களும் எல்லா இயக்கங்களையும் "விடுதலைப் புலிகள்" என்ற பொதுப் பெயர் கொண்டு அழைத்தனர். திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், புலிகள் அமைப்பினால் நடத்தப் பட்டது. ஆனால், அதன் விளைவாக ஏற்பட்ட ஜூலைக் கலவரம், ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான தமிழ் மக்களின் உணர்வலைகள் காரணமாக, விடுதலை இயக்கங்களுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்தது. இதன் விளைவாக, எல்லா இயக்கங்களும் பல்லாயிரம் போராளிகளையும், ஆதரவாளர்களையும் திரட்டிக் கொண்டார்கள். 

தேசத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருந்த, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தன, 83 ஜூலைக் கலவரத்திற்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழினப் படுகொலையில் இருந்து தனது அரசையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள எண்ணினார். வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான எதிரிகளாக இருந்த, தமிழ் ஆயுதபாணி இயக்கங்களை அடக்குவதற்காக, பெருந்தொகையான சிங்களப் படையினரை அனுப்பி வைத்தார். அந்த மாகாணங்களில், படையினரின் கண்மூடித்தனமான கொலைகள், வரைமுறையற்ற கைதுகள் தொடர்ந்தன. அதே நேரம், தென்னிலங்கையிலும் சில எதிரிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. 

ஜூலைக் கலவரத்திற்கு காரணமானவர்கள் என்று சில பெயர்கள் அரச ஊடகங்களில் அறிவிக்கப் பட்டன. அதனை பெரும்பாலான சிங்கள-தமிழ் மக்கள் நம்பவில்லை. தமிழினப் படுகொலையுடன் எந்த வித சம்பந்தமுமற்ற சில கட்சிகளின் பெயர்கள் வாசிக்கப் பட்டன. மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தடை செய்யப் பட்டன. அந்தக் கட்சிகளே கலவரத்தை நடத்தியதாக, ஜே.ஆர். அறிவித்தார். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விழுத்தினார். 

ஒரு பக்கம், சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் மீது மிலேச்சத் தனமான போர் முடுக்கி விடப் பட்டது. மறு பக்கம், அரச எதிரிகளான இடதுசாரிகள் அரசியல் அரங்கில் இருந்து ஓரங்கட்டப் பட்டனர். இதன் மூலம், சிங்களப் பேரினவாத அரசு, ஒரு கையால் ஈழப்போரை நடத்திக் கொண்டே, மறு கையால் தாராளவாத பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்தியது. தமிழ் தேசியவாதிகள், சிங்கள இடதுசாரிகள் மீது ஜே.ஆர். தொடங்கிய போரின் விளைவை, முப்பது வருடங்களுக்குப் பின்னர், தமிழ் - சிங்கள மக்கள் அறுவடை செய்கின்றனர். 

எந்த வித எதிர்ப்புமின்றி, இலங்கை மறு காலனியாதிக்கத்தை நோக்கி தள்ளப் பட்டது. தனியார்மயம் தாராளமாக நுழைவதற்கு தடையேதும் இருக்கவில்லை. ஈழப் போரானது, அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களையும் ஒடுக்கி, அதி தீவிர போராட்ட சக்தியான புலிகளையும் அழித்து விட்டு ஓய்ந்தது. ஒரு இலட்சத்திற்கும் மேலான உயிர்களை பலி கொடுத்த தமிழ் சமூகம், இன்றைக்கும் ஒரு பெரும் இனப்படுகொலை ஏற்படுத்திய காயங்கள் மாறாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜே.ஆரின். சூழ்ச்சிக்கு பலியானதை அறியாத தமிழ் வலதுசாரி தேசியவாதிகள், மேற்குலகில் இருந்து வரவிருக்கும் மீட்பருக்காக காத்திருக்கிறார்கள்.