Sunday, January 30, 2022

நாம் நரிகள் (NTK) கட்சியின் மண்டியிட்ட மானம்!



அன்பான "நாம் நரிகள்" (NTK) கட்சி உறுப்பினர்களுக்கு,

இதுவரையில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த 400 நாம் தமிழர் கட்சி செயற்பாட்டாளர்களை, அந்நாட்டு அரசு நாடுகடத்தியுள்ளது. அங்கு அந்த கட்சி கூட்டம் நடத்தவும் தடைவிதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட புலிகளின் தலைவர் படம் வைத்திருந்தமை காரணமாக சொல்லப் படுகிறது. அதை விட நாம் தமிழர் கட்சியினரின் வழமையான இனவாதப் பிரச்சாரங்கள், "வந்தேறி" கதையாடல்களும் காரணமாக இருக்கலாம்.

சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்று என்றால், அதன் அர்த்தம் தமிழ் மொழியில் நடக்கும் அரசியல் கூட்டங்களையும் புலனாய்வுத்துறை கண்காணித்த படி இருக்கும். இது தெரியாமல் சிங்கப்பூரில் "தமிழன்டா!" "சீனன் வந்தேறிடா!!" என்றெல்லாம் மடத்தனமான கெத்து காட்டினால் மூக்குடை பட வேண்டி இருக்கும். அது தான் அங்கே நடந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாட்டிலிலுள்ள நாம் தமிழர் கட்சி சார்பாக எந்தவொரு கண்டன அறிக்கையும் வரவில்லை. ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய் மூடி மௌனியாகி விட்டார். அந்தளவு பயம்! ஏற்கனவே கனடாவில், சிங்களவர்களுக்கு எதிராக இனவாதம் பேசி நாடுகடத்தப் பட்ட கசப்பான அனுபவம் அவரது வாயை மூட வைத்திருக்கும்.

இவ்வளவு நடந்தும், இதுவரையில் நாம் தமிழர் கட்சியினர் யாரும், சிங்கப்பூர் அரசுக்கு எதிராக சென்னையில் உள்ள துணைத் தூதரகம் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. ஆக மொத்தம் இப்படி நடந்து விட்டதே என்று சொல்லி ஒரு நாயும் குலைக்கவில்லை.

இந்தளவு தான் இவர்களது வீரம். இவர்கள் தமது வீரத்தை பலவீனமான அப்பாவி மக்களிடம் தான் காட்டுவார்கள். அந்தளவு கோழைகள். ஒரு தடவை சிங்கள பிக்குகளை அடித்து விரட்டிய மாதிரி, சிங்கப்பூர் சுற்றுலா பயணிகளிடம் உங்கள் கைவரிசையை காட்டுங்கள் பார்ப்போம்?

இந்த இலட்சணத்தில் இலங்கை மீது படையெடுத்து ஈழம் வாங்கித் தந்து விடுவார்களாம். இதற்குப் பிறகும் "மானத் தமிழர்... வீரத் தமிழர்..." என்று வெட்டிப் பெருமை பேச உங்களுக்கு வெட்கமாகவில்லை? இனிமேல் உங்கள் கட்சியின் பெயரை "நாம் நரிகள்" என்று மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்! அது தான் பொருத்தமான பெயராக இருக்கும். 

மண்டியிட்ட மானம்!

Thursday, January 27, 2022

ரஷ்யாவில் மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வருவதை தடுத்தது எப்படி?

ARTE டிவியில் ரஷ்யாவின் அதிபராக போரிஸ் எல்ட்சின் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் காலம் பற்றிய ஆவணப்படம் காண்பித்தார்கள். (Crime in the Kremlin I ARTE.tv Documentary) அதில் அவர்கள் சொல்ல வரும் சேதி முக்கியமானது. எல்ட்சின் ஜனாதிபதியாக வந்திரா விட்டால், கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்திருப்பார்கள்! அதை தடுப்பதற்காக முதலாளித்துவ சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வேலை செய்துள்ளன.

சோவியத் யூனியன் வீழ்ந்து சில வருடங்களின் பின்னர் 1996 ம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபாதித் தேர்தல் நடைபெறவிருந்தது. ஏற்கனவே ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் அதிக ஆசனங்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசு அதிகாரத்தை கையில் எடுக்க முனைந்த பொழுது, எல்சினின் உத்தரவின் பேரில் பாராளுமன்றக் கட்டிடம் பீரங்கிக் குண்டுகளால் தகர்க்கப் பட்டது. 1993 ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு, 1996 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆனால் இம்முறை போரிஸ் எல்சின் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியானவராக இருக்கவில்லை. முதுமை, கடும் சுகயீனம் காரணமாக தளர்வடைந்து இருந்தார். அப்படியான ஒருவர் நிலையான ஆட்சி நடத்துவார் என்று யாருமே நம்பவில்லை.

இதற்கிடையே ஒரே நாளில் சோஷலிச பொருளாதாரத்தை இல்லாதொழித்து முதலாளித்துவத்தை கொண்டு வந்த படியால் நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எங்கு பார்த்தாலும் பொருளாதாரப் பிரச்சினை. வேலையில்லாதவர்களின் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே சென்றது. வேலை செய்தவர்களின் வருமானம் குறைந்து கொண்டே சென்றது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் கொடுக்கப் படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, ஒரு பக்கம் செச்னிய யுத்தம் வேறு நடந்து கொண்டிருந்தது. ஒரு வெல்ல முடியாத, பெருஞ்செலவு பிடித்த, யுத்தத்திற்குள் சிக்கிக் கொண்ட ரஷ்ய இராணுவம் முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே பலவீனமான நிலையில் இருந்த பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்தகைய சூழலில் பெரும்பான்மையான ரஷ்ய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை (CPRF) ஆதரித்ததில் வியப்பில்லை. ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுகானோவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. பெரும்பான்மை மக்கள் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை விரும்பினார்கள்.

நடைபெறவிருந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் வென்று விட்டால், ரஷ்ய தேசம் மீண்டும் சோவியத் காலத்திற்கு சென்று விடும் என்று முதலாளித்துவவாதிகள் அஞ்சினார்கள். அவ்வாறு நடந்தால் உள்நாட்டுப் போர் மூளலாம் என்ற அச்சம் எழுந்தது. (அதாவது, கம்யூனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால், அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முதலாளித்துவவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்த தயாராக இருந்தனர்.) ஆகவே, முதலாளித்துவத்தை ஆதரித்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள், எப்பாடு பட்டேனும், என்ன விலை கொடுத்தேனும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் தடுக்க விரும்பினார்கள்.

அதுவரை காலமும் ஒருவரோடொருவர் போட்டியும், பொறாமையும் கொண்டிருந்த வங்கியாளர்கள் ஒன்று சேர்ந்தனர். அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்கவும் கடன் கொடுக்க சம்மதித்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அரசு கடன்பத்திரங்கள் பெறுமதி குறைத்து கொடுக்க வேண்டும். தனியார்மயமாக்கலை விரைவுபடுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு எல்சின் அரசு சம்மதித்தது.

அத்துடன் அமெரிக்காவும் தலையிட்டு எல்சினின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பங்கெடுத்தது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவர்வதற்காக பிரபல பாடகர்கள், இசைக் கலைஞர்களை வருவித்து எல்சினுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தினார்கள். எல்சின் தோல்வியடைந்தால், அனைத்து மக்களினதும் தோல்வியாகும் என்று பிரச்சாரம் செய்தனர். கம்யூனிஸ்ட் கடந்த காலத்திற்கு திரும்பினால், மக்கள் சிறைகளில் வாட வேண்டியிருக்கும் என்றும் பரப்புரை செய்யப் பட்டது.

அப்படி இருந்தும், முதலாளித்துவ எல்சினுக்கும், கம்யூனிச சுகானோவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. தேர்தலில் வென்ற எல்சின் செய்த முதல் வேலை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுத்தது மட்டும் தான். அதற்குப் பிறகு நிரந்தர மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சென்று ஒரேயடியாக படுத்து விட்டார். 

1999 ம் ஆண்டு, அரசு அதிகாரம் எல்சினிடம் இருந்து, புட்டினிடம் கைமாறப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. எல்சினுக்கு பிறகு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்ட புட்டின், ரஷ்யாவை உலகில் பெரிய முதலாளித்துவ வல்லரசுகளில் ஒன்றாக இன்றைக்கும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

Wednesday, January 26, 2022

உறைபனியில் Snow- பெருமான் வழிபட்ட கனடாத் தமிழர்!

மதம் மக்களை மடையர்கள் ஆக்குகிறது என்பதற்கு இந்த படம் சிறந்த சான்று. 

மதங்கள் தோன்றிய பிரதேசங்களில் உள்ள காலநிலைக்கு ஏற்றவாறு தான் வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டன. அதை அப்படியே எல்லா இடங்களிலும் பிரயோகிப்பது மடத்தனம். எந்த மதக் கடவுளும் அப்படி செய்ய சொல்லி மனிதனை வற்புறுத்தவில்லை. 

 இலங்கை, தென்னிந்திய பிராந்தியம் பூமத்திய ரேகைக் கோட்டுக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்கே வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும். அதனால் அங்கு வாழும் ஆண்கள், அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு சாமி கும்பிடுவதில் எந்த அதிசயமும் இல்லை. ஐரோப்பியர் வரும் வரையில், பொதுவாக ஆண்கள் மட்டுமல்ல, பல இடங்களில் பெண்கள் கூட இடுப்புக்கு மேலே எந்த உடையும் அணிவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அந்தளவு வெயில் கொளுத்தும். 

ஆனால், வட துருவத்தை அண்டிய நாடான கனடாவின் காலநிலை அப்படியா இருக்கிறது? குளிர்காலத்தில் வெப்பம் -20°C அளவுக்கு கூட இறங்கலாம். அந்த காலநிலையில் அரை நிர்வாணமாக வேட்டி மட்டும் உடுத்திக் கொண்டு சாமி கும்பிட்டால் குளிரில் விறைத்து இறக்க நேரிடலாம். கடும் குளிரில் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றா விட்டால் பல நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பாதிக்கப் படலாம். 

ஆகவே, யாரும் அசட்டுத் துணிச்சலில் இது போன்ற கேலிக்கூத்துகளில் ஈடுபடாதீர்கள். மத நம்பிக்கை தவறல்ல. ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும். பக்தி முற்றி பைத்தியமாகி விடக் கூடாது.

 பிற்குறிப்பு: கனடாவில் இந்த படம் எடுத்த நேரம் வெப்பநிலை -1°C ஆக இருக்கலாம்.

 


Monday, January 24, 2022

கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த சாதிவெறி பூனைக்குட்டிகள்

கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்: 

"ஏம்பா, சபேசன், கலை மார்க்ஸ் மாதிரியான ஆளுங்க ஈழத்தில சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறாங்க... அங்க தான் சாதி என்ற ஒன்று இல்லையே? அப்புறம் எப்படி ஒழிப்பாங்க?" 

"அது வந்து.... அவங்களாகவே அங்க மொதல்ல புதுசா சாதிகளை உருவாக்கி வளர்த்து விடுவாங்களாம்.... அதுக்கு அப்புறம் அதையெல்லாம் அவங்களே வந்து ஒழிப்பாங்களாம்!" 

"இதெல்லாம் ஒரு ஏஜெண்டா கீழே நடக்குதில்லே?" 

"ஆமாம்மா... தமிழர்க ஒற்றுமையாக இருந்தா சீனாவை விடப் பெரிய ஒலக வல்லரசா மாறிடுவாங்க... அதை தடுக்கனும்னு நெனைக்கிறாங்க!"

 
கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த ஈழத்து சாதிவெறி பூனைக்குட்டிகள்

1. இந்தியாவில் பார்ப்பனர்கள் மாதிரி, ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ரிசர்வேஷன் (தரப் படுத்தல்) கொண்டு வந்தார்களாம். அவரைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் என்றால் யாழ் வெள்ளாளர்கள் என்று அர்த்தம். 

2. ஈழத்தில் சாதிக்கொரு கோயில், திருவிழாவில் சாதிப் பாகுபாடு இருக்கிறது தான். அதனால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். ஈழத்தில் நிறைய கலப்பு மணம் நடப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதாக கம்பி கட்டும் கதை பேசுகிறார்கள். 

3. இவர்கள் பெரும்பாலும் (95%) புலிகளை முகத்திரையாக மூடிக் கொண்டு சாதிவெறிக் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதனால் சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான விமர்சனத்தை, மிக இலகுவாக புலிகளுக்கு எதிரான கருத்தாக மடைமாற்ற முடிகிறது. இவர்கள் தமது சாதிவெறியை மறைப்பதற்காக மட்டுமே புலிகளை ஆதரிக்கிறார்கள். சில அறிவுஜீவிகள் கூட இதைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஈழத்து சங்கிகளின் கிளப் ஹவுஸ் கூட்டம் ஒன்றில், "ஈழத்தில் சாதிப் பிரச்சினை இருக்கிறது" என்று சொன்ன குற்றத்திற்காக, புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழ் பெரியாரிஸ்டான சபேசனை எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். "சாதி இருப்பதை ஒத்துக் கொள்கிறார்களாம்.... ஆனால் அதைப் பற்றி பேசாது விட்டால் அது தானாக மறைந்து விடும்" என்பது அவர்களது சங்கித்தனமான நிலைப்பாடு. 

அப்போது ஒருவர், ஒரு அவுஸ்திரேலிய வாசி, "சபேசன் என்ன சாதி என்று சொல்ல வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டார். சாதியின் பெயரை சொல்லா விட்டாலும், "உயர்ந்த பிரிவா, தாழ்ந்த பிரிவா" என்று குறிப்பிட வேண்டுமாம். "உயர்த்தப்பட்ட சாதி என்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்... தாழ்த்தப்பட்ட சாதி என்றால் பேசலாம்..." என்று விளக்கமும் சொன்னார். 

நல்ல வேளை, அங்கிருந்த பிற சங்கிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் கேட்பது தவறு என்று கேட்டவரை அடக்கி விட்டார்கள். நல்லது. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரான்ஸ்வாசி "வெள்ளாள பெண்களை வசியப் படுத்தும் நோக்கில் பெரியாரிசம் பேசுகிறார்கள்..." என்று வெளிப்படையாக சாதித் திமிருடன் பேசினார். அப்போது இவர்கள் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் சாதி பிரச்சினை பற்றி பேசினாலே அது "இலுமினாட்டிகளின் சதி" என்று பதறும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவர், "சதியை" முறியடிக்க ஒரு நல்ல ஐடியா சொன்னார். சிங்களவர்கள் மத்தியில் உள்ள அக முரண்பாடுகளை, சாதிப் பிரிவினைகளை வெளிப்படுத்தி கூர்மைப் படுத்த வேண்டுமாம். அதை பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமாம். இனிமேல் யாராவது தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிப்பிரச்சினை பற்றி பேச வந்தால் "சிங்களவர்களை பாருங்கள்" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமாம். சங்கிகள் என்றோர் பிரிவுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

"நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னுரிமை, மிகுதி பிற இனத்தவருக்கு என்று இட ஒதுக்கீடு கொடுக்க படும்." இவ்வாறு ஒருவர் கிளப் ஹவுஸ் கூட்டத்தில் தெரிவித்தார். அந்தக் கூட்டம் நடத்தியதும் நாதக தம்பிகள் தான்.

கவனிக்க: 1971 ம் ஆண்டு இலங்கையில் தரப்படுத்தல் கொண்டு வந்தார்கள். அதுவும் இன அடிப்படையில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை, மிகுதி தமிழர், முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப் பட்டது. நாம் தமிழர் கட்சியும் அதையே சொல்கிறது. இவர்களை பேரினவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு?  

****

Sunday, January 23, 2022

கிளப் ஹவுசில் புலி வேடமிட்டு களமாடுவோரின் வர்க்கப் பின்னணி

கிளப் ஹவுஸ் கூட்டங்களில் அவதானித்தவை: 

- மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஈழத்தமிழர்கள் தான் புலிகளுக்கு ஆதரவாக களமாடுவதாக காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அது இன உணர்வு அல்ல. அவர்களது வர்க்க உணர்வு சார்ந்த அரசியல்.

- இவர்கள் ஒன்றில் பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் இலங்கையிலேயே அதிக சம்பளம் வாங்கும் white-collar work எனப்படும் மத்தியதர வர்க்க தொழில்களை செய்து கொண்டிருப்பார்கள்.

- இவர்களுக்கு இடையிலான பொதுவான அம்சம், இவர்கள் எல்லோரும் சமூகத்தில் வசதியாக வாழ்பவர்கள். மேட்டுக்குடி மனப்பான்மை கொண்டவர்கள். தாம் ஒன்றில் ஆதிக்க சாதி அல்லது ஆதிக்க வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருப்பார்கள்.

- இவர்களது நோக்கம் புலிகளை ஆதரிப்பது அல்ல. புலிகளை மீளுருவாக்கம் செய்வதோ, மீண்டும் ஒரு போருக்கு செல்வதோ தமது நோக்கம் அல்ல என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். இந்தக் குழுவில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்ட நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறார்கள். அதுவே இவர்களது வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விடுகிறது.

- உண்மையில் ஏதோ ஒரு வகையில் புலிகளினால் பாதிக்கப்பட்ட பிரிவினர் தான், இன்று தீவிர புலி ஆதரவாளர் வேஷம் போடுகிறார்கள். ஈழப்போர் நடந்த காலத்தில், புலிகளின் நிர்வாகம் "போராடக் கூடிய வயதில் இருந்த" யாரையும் தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை விட்டு வெளியே செல்ல விடவில்லை. அவர்களது உத்தரவை மீறிச் சென்றவர்கள் துரோகிகளாக, எதிரியுடன் ஒத்துழைப்பவர்களாக கருதப்பட்டனர்.

- யாழ் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்றவர்களும், படித்து பட்டம் பெற்று உயர்தொழில் பார்த்தவர்களும் தான் இன்று "புலி ஆதரவு அரசியல்" பேசுகிறார்கள்.

- இவர்கள் அனேகமாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட, தொண்ணூறுகளுக்கு பிறகு பிறந்தவர்கள் அல்லது வளர்ந்தவர்கள். புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வாழப் பிடிக்காமல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். வன்னியில் போர் நடந்தால் பரவாயில்லை, யாழ்ப்பாணம் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற சுயநலம் காரணமாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்தவர்கள்.

- திருகோணமலை, மட்டக்களப்பை சேர்ந்த "புலி ஆதரவாளர்களும்" அப்படித்தான். இவர்கள் எல்லோரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் என்பது ஒரு பொதுவான அம்சம். திருகோணமலையும், மட்டக்களப்பு எழுவான்கரை பிரதேசமும் (கிழக்கு கரையோரப் பகுதி) எந்தக் காலத்திலும் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை. பெரும்பாலான படித்த மத்தியதர வர்க்கத்தினர் இந்தப் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அவர்களுக்கு மட்டும் தான் அதற்கான வசதி வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

- இன்று தீவிர புலி ஆதரவு வேஷம் போடும் நடிகர்கள், தனிப்பட்ட வாழ்வில் தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். அன்று ஊரில் வாழ்ந்த காலத்தில், புலிகள் விட்டுக்கொடுக்காமல் போரிடுவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று விசனப் பட்டவர்கள். (ஆனால் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தது ஒரு முரண்நகை.) உயர்கல்வி கற்று, பட்டம் பெற்று, உடுப்புக் குலையாத உத்தியோகம் பார்ப்பதை கௌரவமாக கருதும் மத்தியதரவர்க்க பரம்பரையில் வந்தவர்களுக்கு இது மிகப்பெரிய வருத்தம் தான்.

- மேற்படி சமூக- வர்க்கப் பின்னணி கொண்டவர்கள், கடந்த காலத்தில் தாம் ஈழ விடுதலைக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காக தான் இன்று புலிகளுக்கு விசுவாசமானவர்கள் போன்று காட்டிக் கொள்கிறார்கள். இது அவர்களது வர்க்க நலன் சார்ந்த சுயநல அரசியல். இது ஒரு மிகச் சிறிய குழு மட்டுமே. அவர்கள் யாரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர் அல்ல.

Saturday, January 22, 2022

தமிழீழத்தின் "சிங்க(கொடி)ப்" பெண்!

 தமிழ்த்தேசிய வியாதிகளின் கவனத்திற்கு!



இது தான் நீங்கள் காட்டும் கற்பனை ஈழத்திற்கும், நிஜ ஈழத்திற்கும் இடையிலான வித்தியாசம். பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்த "ஈழத்" தமிழ்ப்பெண், தனது தாயகமான இலங்கையை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் சிங்கக் கொடியை பிடித்திருக்கிறார். (செய்தி கீழே) 

இது தான் அங்குள்ள கள யதார்த்தம். இதைக் காணப் பொறுக்காத தமிழ்த்தேசியவாதிகள் யாராவது "ஏன் இந்தப் பெண் தமிழீழ தேசியக்கொடியை (புலிக்கொடியா?) பிடிக்கவில்லை?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு வராதீர்கள். 

இன்று வரையில் தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழ தாயகம், என்று பேசும் அத்தனை ஈழத்தமிழர்களும் தமது சிறிலங்கா பிரஜாவுரிமையை விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் அவர்கள் விரும்பி இருந்தால் சிறிலங்கா பிரஜாவுரிமையை தாமாக நீக்கிக் கொள்ளலாம். சட்டத்தில் தாராளமாக அதற்கு இடமிருக்கிறது. ஆனால், அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். 

உண்மை நிலவரம் என்ன? புலிகள் இயக்க தலைவர் கூட அதைச் செய்யவில்லை! தலைவரின் மூன்று பிள்ளைகளுக்கும் சிறிலங்கா பிரஜாவுரிமை கிடைத்திருந்தது!! "சிங்கள பேரினவாத அரச இலச்சினை"(வாளேந்திய சிங்கம்) பொறித்த அடையாள அட்டையும் வைத்திருந்தார்கள்!!!  

குறிப்பிட்ட பிரிவினர் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று குடியேறி அந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்ற பின்னர் தான் சிறிலங்கா பிரஜாவுரிமையை மறுக்கிறார்கள். அது வரைக்கும் அவர்களும் இலங்கைப் பிரஜைகள் தான். சிங்கக்கொடி தான் அவர்களது தேசியக்கொடி. யாராலும் மறுக்க முடியாது.

இது தான் கள யதார்த்தம். இதை மறைத்துக் கொண்டு, "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்று கற்பனை உலகில் மிதப்பவர்கள் பலருண்டு. தமிழ்த்தேசியவாதிகளே! ஆகாயத்தில் மிதந்தது போதும். பூமிக்கு திரும்பி வாருங்கள். 


செய்தி:

//தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்.//

Tuesday, January 18, 2022

வட கொரியாவில் பிரபலமான இந்திய திரைப்படங்கள்!

 வட கொரியா நேரடி ரிப்போர்ட்



உங்களுக்குத் தெரியுமா? வட கொரியால் உள்ள திரையரங்குகளில் இந்திய சினிமாப் படங்களும் காண்பிக்கிறார்கள். வட கொரியர்கள் இந்திய சினிமாப் பாடல்களையும் விரும்பிக் கேட்கிறார்கள். வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணியாக சென்று வந்த இந்திய யூடியூபர் ஒருவர் வழங்கிய தகவல்கள் இவை. வட கொரிய மக்கள் இந்திய திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பார்களாம். அதனால், இந்த வட இந்திய யூடியூபர் சென்றிருந்த நேரம் சாதாரண வட கொரிய மக்கள்அவரை "சல்மான் கான்" என்று அழைத்து பேச விரும்பினார்கள். அதை அவரது யூடியூப் சேனலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான இணைப்பு: 
https://www.youtube.com/c/TravellingMantra


மேற்கொண்டு அவர் தெரிவித்த தகவல்களை இங்கே தருகிறேன்.


வட கொரியாவில் 3 அரச தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே பார்க்கலாம் என்று ஒரு கட்டுக்கதை உலாவுகின்றது. அது உண்மை அல்ல! நீங்களே அங்கு சுற்றுலா பயணியாக சென்று நேரில் கண்டறியலாம். கீழே உள்ள படத்தில் வட கொரியாவில் பார்க்க கூடிய பத்துக்கும் மேற்பட்ட சேனல்களில் சிலவற்றை காணலாம். அவற்றில் பல வெளிநாட்டு சேனல்கள்! உதாரணத்திற்கு Russia Today, Al Jazeera, CCTV, TV Monde (பிரெஞ்ச்) இன்னும் பல.




வட கொரியாவில் ஒருவர் குற்றம் செய்தால், அவர் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் கூட 3 தலைமுறைக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படும் கட்டுக்கதையில் எந்த உண்மையும் இல்லை. அது மட்டுமல்ல, ஒருவர் செய்த குற்றத்திற்காக அவரது வாழ்நாள் முழுவதும் தண்டிக்கப் படுவதுமில்லை. ஒருவர் முதலாவது தடவையாக செய்த குற்றம் என்றால் அரைவாசி தண்டனைக் காலத்திலேயே திருந்துவதற்காக வீட்டுக்கு அனுப்பப் படலாம். அவர் மீண்டும் குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும். இது வழமையாக பிற உலக நாடுகளிலும் உள்ள நடைமுறை தான்.



Saturday, January 15, 2022

மாட்டுப் பொங்கல்- தமிழரின் ஆப்பிரிக்க பண்பாடு!



தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!
ஆதாரம்: தைப் பொங்கல்!



வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன. 

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன. 

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. 

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது.  ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர். 

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் "அவ்வல்" ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு. 

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான  நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.