Thursday, December 09, 2021

தேசியவாதம், பேரினவாதம், இனவாதம்: நியாயப்படுத்தல்களின் அரசியல்

//சிங்கள "பேரினவாதத்தையும்", தமிழ் "இனவாதத்தையும்" சமப் படுத்தலாமா?// இப்படியான ஒரு கேள்வியின் மூலம் நியாயப்படுத்தலை செய்ய முனைபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் கேட்கவுமில்லை, தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. பொதுவாக இப்படியான கேள்விக்கு பின்னால் உள்ள அபத்தங்களை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பேரினவாதம், இனவாதம் இரண்டுமே அடிப்படையில் தேசியவாதக் கருத்தியலில் இருந்து பிறந்தவை தான். ஆனால், நடைமுறையில் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள். இரண்டையும் சமப்படுத்த நினைப்பது, ஆப்பிளும், தக்காளியும் ஒன்றென நிறுவ முயல்வது போன்று அபத்தமானது. பேரினவாதம், இனவாதம் இரண்டும் குறிப்பிட்ட சிலர் நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகள். அதை சிறிது, பெரிது என்று அளந்து பார்க்க முடியாது.

- பேரினவாதம் என்பது பெரிய இனவாதம் அல்ல. அது பெரும்பான்மை இனத்தின் இனவாதமும் அல்ல.

- பேரினவாத சிந்தனை சிங்களவர்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் காணப்படலாம். ஏன் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர், அரேபியர், ரஷ்யர், சீனர் என்று உலகம் முழுவதும் பல்லின மக்களிடம் பேரினவாத சிந்தனை உள்ளது.

- அதி தீவிர தேசப் பற்று, சுத்த இராணுவவாதம், எல்லா விடயங்களிலும் தேசம், தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்பன பேரினவாதத்தின் அறிகுறிகள். அது தனது தேசிய எல்லைக்குள் அடங்கும் சிறுபான்மை இனங்களை கீழ்ப்படிய வைக்கும். இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும். ஆனால், அழித்தொழிக்கும் அளவிற்கு போகாது.

- இன்றைக்கும் உலகில் பெரும்பாலான தேசங்களில் பேரினவாத அரசுகள் ஆட்சி செய்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ள ஸ்கண்டிநேவிய நாடுகளும் மிக மோசமான இன ஒடுக்குமுறை வரலாற்றைக் கொண்டுள்ளன. அண்மையில் டென்மார்க்கில் கொண்டுவரப்பட்ட "கெட்டோ" சட்டம் நாசிகளின் காலத்தை நினைவுபடுத்துகிறது. அதாவது, பெரும் நகரங்களில் வாழும் வெளிநாட்டு குடியேறிகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் முடக்கப் பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் தடுக்கப்படுகின்றது. முன்பு நாஸி ஜெர்மனியில் இவ்வாறு தான் யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனியான பிரதேசங்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

பேரினவாதம் என்றால் என்ன?

- பேரினவாதம் என்பது பலர் தவறாக நினைப்பது போன்று பெரிய இனவாதம் அல்ல. அது தேசியவாதத்தின் அதி உச்சகட்ட வடிவம். எந்தவொரு தேசியவாதியும் எல்லை மீறும் பட்சத்தில் பேரினவாதியாக இனங்காணப்படலாம்.

- பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸில் பேரினவாத கருத்தியல் தோற்றம் பெற்றது. அதே காலகட்டத்தில் இங்கிலாந்திலும் அந்தக் கருத்தியல் பரவி இருந்தது. அப்போது அது ஒரு தேசியப் பெருமிதமாக கருதப்பட்டது. பலர் தம்மைப் பேரினவாதி என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள்.

- முதலாம் உலகப்போருக்கு முன்பு, மேற்கு ஐரோப்பாவில் தேசியவாதம் என்பது கூட பேரினவாதமாக இருந்தது. சொந்த இனத்தின் மீதான இனப்பற்று, அல்லது சொந்த தேசத்தின் மீதான கண்மூடித்தனமான நாட்டுப்பற்று என்பன பேரினவாதத்திற்கு இட்டுச் சென்றன.

- ஆங்கிலேயர்கள் தமது பேரினவாதத்தை ஜிங்கோயிசம் எனச் சொல்லிக் கொண்டனர். அதன் வேர்ச் சொல் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் பாடலில் இருந்து உருவானது. ஜிங்கோயிச கொள்கை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிலும் பரவி இருந்தது. அகண்ட அமெரிக்கா உருவான காலத்தில் ஜிங்கோயிசம் பிரபலமாக இருந்தது.

- பிரெஞ்சுக்காரர்கள் தமது பேரினவாதக் கொள்கையை ஷோவினிசம் என்று அழைத்தனர். நெப்போலியனின் இராணுவத்தில் சேர்ந்து போரிட்ட ஷோவின் என்ற போர்வீரனின் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், அந்த வீரனின் அதி தீவிர நாட்டுப்பற்று, மற்றும் தலைவன் மீதான விசுவாசம் ஆகும். அப்போது நடந்த போரில் நெப்போலியன் தோற்கடிக்கப் பட்டு, புதிதாக பதவியேற்ற பிரெஞ்சு அரசாலேயே சிறைப்பிடிக்கப் பட்டிருந்தார். பிரான்ஸில் நெப்போலியன் புகழ் மங்கிக் கொண்டிருந்த நேரம், ஷோவின் தனது தலைவனின் பெருமைகளை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தனது தலைவர் நெப்போலியன் மட்டுமே உண்மையான தேசப் பற்றாளர் என்றும், தேசத்தை பாதுகாத்தவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முன்னாள் போர்வீரனை பின்பற்றி, பிரெஞ்சு தேசியவாதம் பேசிய பலரும் தம்மை "ஷோவினிஸ்ட்" என்று சொல்லிக் கொண்டனர்.

- சுருக்கமாக, தேசியவாதத்தின் அதி தீவிர வளர்ச்சிக் கட்டம் தான் பேரினவாதம். அதீத தேசப் பற்று, சொந்த இனத்தின் நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது, கண்மூடித்தனமான தலைமை வழிபாடு, இவை யாவும் பேரினவாதத்தின் குணவியல்புகள் தான். பேரினவாதிகள் எப்போதும் பெரும்பான்மை இனத்தை சார்ந்திருக்க தேவையில்லை. அத்துடன் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பேரினவாத சிந்தனைப் போக்கு கொண்ட அனைவரும் பேரினவாதிகள் தான்.

- இனவாதம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விடயம். அது தனது இனம் மட்டுமே உலகிற் சிறந்தது, முன்தோன்றிய மூத்தகுடி தாமே என பெருமை பாராட்டுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இனத்தூய்மை பேணப் பட்டு வருவதாக நம்புவது. இனவாதிகளுக்கு எப்போதும் ஏதோவொரு எதிரி இனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களாக உருவாக்கிக் கொள்வார்கள். எதிரி இனம் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதுடன், வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள்.

- இனவாதிகள், தமது தேச எல்லைகளுக்குள் ஒரே மொழி பேசும் தமது இனம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மாறுபட்டவர்கள் வாழும் உரிமையை மறுப்பார்கள். இப்படியானவர்களும் அரசியல் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறு குழுவினரிடமிருந்து தலைதூக்கும் மதவெறியை கண்டிப்பது போன்று, இனவெறியும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட கேள்வி, ஒருவேளை இவ்வாறு கேட்கப் பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்: //ஒடுக்கும் பெரும்பான்மை இனத்தின் இனவாதத்தையும், ஒடுக்கப்படும் இனத்தின் இனவாதத்தையும் ஒன்றாக சமப்படுத்த முடியுமா?// ஆனால், இதிலும் பிழை இருக்கிறது.

இது முன்கூட்டியே பதிலை மனதில் நினைத்துக் கொண்டு கேட்கப்படும் கேள்வி. இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது:

1. நீங்கள் ஒடுக்கப்படும் இனத்தின் பக்கம் நிற்பவர் என்றால், அது கொண்டிருக்கும் இனவாதக் கூறுகளையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.

2. ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் கொண்டிருக்கும் இனவாதம் அளவிற் சிறியது. அதை பெரும்பான்மை இனம் கொண்டிருக்கும் பெரிய இனவாதத்துடன் ஒப்பிட முடியாது. ஆகவே சமப்படுத்த முடியாது.

இது சரியா?

உலகில் எப்போதும் பெரும்பான்மை இனம் மட்டுமே ஒடுக்குவோராக இருப்பதில்லை. இலங்கை, இந்தியா காலனிய நாடுகளாக இருந்த காலத்தில் மிகச் சிறுபான்மையினமான வெள்ளையின ஐரோப்பியர்கள் ஒடுக்கும் இனமாக இருந்தார்கள். அந்த ஆட்சியாளர்களும் பேரினவாதிகளாக மட்டுமல்லாது, இனவாதிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

தொண்ணூறுகள் வரையில் தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளில் சிறுபான்மையின ஐரோப்பியர்கள் ஆட்சியாளர்களாக மட்டுமல்லலாமல், பூரண குடியுரிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த மொழி/இனச் சிறுபான்மையினர் தான் மிக மோசமான இனவாதம் கொண்ட அபார்ட்ஹைட் கட்டமைப்பை வைத்திருந்தார்கள்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில் சிறுபான்மை சன்னி முஸ்லிம் சமூகம், பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆண்டு வந்தது. சிரியாவில் சிறுபான்மை அலாவி முஸ்லிம் சமூகம், இன்னொரு சிறுபான்மையான கிறிஸ்தவ சமூகத்துடன் கூட்டுச் சேர்ந்து பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தினரை அடக்கி ஆண்டு வருகின்றனர். பெரும்பான்மையோ, சிறுபான்மையோ ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஆகவே ஒரு குறிப்பிட்ட இனம் சிறுபான்மை இனமாக இருப்பதால், அதில் இனவாதிகள் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணமே தவறு. ஒப்பீட்டளவில் "வீரியம் குறைந்த இனவாதம்" என்பதும் தவறான கருதுகோள் தான்.

இந்த விடயத்தில் சமப்படுத்துவது என்ற சொல்லே பொருத்தமற்றது. அர்த்தமற்றது. இங்கே எதையும் எதனோடும் சமப்படுத்தவில்லை. உள்ளதை உள்ளபடியே பேசுகிறோம். அவ்வளவு தான். திருடனை திருடன் என்றோ, அயோக்கியனை அயோக்கியன் என்றோ அழைப்பதில் என்ன தவறிருக்கிறது? ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்கள் திருடர்களோ, அயோக்கியர்களோ இல்லை என்று அர்த்தமா?

"ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையை/இனவாதத்தை ஒடுக்கும் இனத்துடன் சமப்படுத்தக் கூடாது" என்றும் கோட்பாடு, இனவெறி, மதவெறி சக்திகளால் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் படுகின்றது என்ற உண்மையையும் உணர வேண்டும். அதற்கு அனைவருக்கும் தெரிந்த இரண்டு உதாரணங்களை காட்டலாம்:

1. இஸ்ரேலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு உரிமை கொரிய ஹமாஸ் இதே நியாயத்தை முன்வைத்து வந்தது. பிற்காலத்தில் அது பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பின்னடைவை உண்டாக்குகிறது என்பதை புரிந்து கொண்டு கைவிட்டு விட்டனர்.

2. ஐரோப்பாவில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களை நியாயப் படுத்தியவர்களும் அதே வாதத்தை தான் வைத்தார்கள். அதாவது ஒடுக்கும் பெரும்பான்மை இனமான கிறிஸ்தவ- ஐரோப்பியர்களின் பேரினவாத வன்முறைக்கு எதிராக, ஒடுக்கப்படும் முஸ்லிம்- அரபி சிறுபான்மை இனம் பிரயோகிக்கும் வன்முறையை சமப்படுத்தக் கூடாது என்றனர். இதே வாதத்தின் அடிப்படையில் ஐரோப்பியரை வெறுக்கும் இஸ்லாமியர் தரப்பு இனவாதத்தையும் நியாயப் படுத்தினார்கள். "ஒடுக்கும் ஐரோப்பியரின் பேரினவாதத்துடன், ஒடுக்கப்படும் முஸ்லிம்களின் இனவாதத்தை சமப்படுத்தலாமா?" என்று கேட்டனர்.

நிச்சயமாக, அப்படியான நியாயப்படுத்தல்களை செய்தவர்கள் ஐரோப்பிய முஸ்லிம்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினரான மத அடிப்படைவாதிகள் தான். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அந்தக் காரணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை யார் செய்தாலும் அது தவறு தான். ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் மதவாதம், இனவாதம் இல்லாத சாதாரண மக்கள்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் வந்தேறுகுடிகளையும், இலங்கையில் வாழும் பூர்வகுடிகளையும் ஒப்பிடலாமா என்று இப்போது ஒரு கூட்டம் கிளம்பி வரும். உலகில் இன்றிருப்பவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன தேசங்கள் தான். அனேகமாக எல்லா நாடுகளிலும் வந்தேறுகுடிகளும், பூர்வகுடிகளும் கலந்து தான் வாழ்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் குடியுரிமை மரபின வழிப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்படும் பொழுது தான் தேசியவாதம் பேரினவாதமாக அல்லது இனவாதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது.

****

Wednesday, December 08, 2021

திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்

திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.


முதலில் திருகோணமலை இனப்பரம்பல் தொடர்பாக சில சுருக்கமான குறிப்புகள்:

- திருமுருகன் காந்தி குறிப்பிடும் தமிழீழம் அல்லது தமிழர் பிரதேசம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை குறிக்கும். குறிப்பாக திருகோணமலை பட்டினமும், அதை அண்டிய பகுதிகளும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தனித் தன்மை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக திருகோணமலைத் தமிழர்கள், யாழ்ப்பாண, மட்டக்களப்பு தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாகவும் மாறுபட்டவர்கள். உதாரணத்திற்கு, அங்கே சாதிப் பாகுபாடுகள் பார்ப்பது மிக மிகக் குறைவு. அதற்கு பல நூறாண்டுகளாக திருகோணமலையில் வசித்து வந்த ஐரோப்பிய குடியேறிகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம்.

- கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கும் திருகோணமலை "தமிழர் பிரதேசம்" என்று சொன்னாலும், அந்த மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பகுதிகளில் முஸ்லிம்கள் (அல்லது இலங்கைச் சோனகர்கள்) எண்ணிக்கை மிக அதிகம். அந்தப் பகுதிகள் நேரடியாக துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளன.

- தொண்ணூறுகளில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற, இன முரண்பாடுகளில் விரிசலை உண்டாக்கிய புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள் காரணமாக, கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கத் தலைப்பட்டனர். ஒரு தனியான தேசிய இனமாக பிரிந்து நின்றனர்.

- அது போதாதென்று, ஆகஸ்ட் 2006ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் மூதூரை கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். ஆகவே, 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு மூதூரிலுமாக, இரண்டு தடவைகள் முஸ்லிகள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். இன்னொருவிதமாக சொன்னால், புலிகளின் பார்வையில் தமிழீழம் என்பது "தூய" தமிழர்களின் பிரதேசம். அங்கிருந்து சிங்களவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள். இதுபோன்ற புலிகளின் இனவாத நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு தமிழீழப் போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமுருகன் காந்தி இதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், திருகோணமலையை சேர்த்து ஈழம் அமைத்து விடுவோம் என்று கனவு காண்கிறார்.

- திருகோணமலை மாவட்டத்தை, வடக்கில் உள்ள முல்லைத்தீவுடன் இணைக்கும் பதவியா பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதைத் தவிர துறைமுகத்தை அண்டிய கந்தளாய், சேருவில பகுதிகளிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குடியேறியவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சிங்களவர்களை ஈழம் கிடைத்த பின்னர் இனச்சுத்திகரிப்பு செய்ய முடியாது.

இனி திருமுருகன் காந்தி கூறிய வரலாற்றுத் திரிபுகளுக்கு வருவோம்: 

- இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியா, பர்மா வரை வந்து விட்ட ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக திருகோணமலையில் இருந்து தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு சென்றதாக திருமுருகன் காந்தி கூறுகின்றார்.

- உண்மையில் அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. திருகோணமலை துறைமுகமும், அங்கிருந்த படைத்தளமும் ஜப்பானிய வான்படை விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதல்களில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. பல விமானங்கள், கப்பல்கள் அழிக்கப் பட்டன.

- இந்தியாவை இந்திரா காந்தி ஆண்ட காலத்தில், திருகோணமலைக்கு அமெரிக்க இராணுவம் வந்திறங்கவிருந்ததாகவும் அதனால் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப் படதாகவும் திருமுருகன் காந்தி கூறுகின்றார். இது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல்.

- அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் வருவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இருக்கவில்லை. ஆனால், புத்தளத்தில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவைக்கான ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. புத்தளம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து அமெரிக்கா உளவறிய முயற்சிக்கலாம் என்று இந்திய அரசு விசனம் தெரிவித்திருந்தது.

- ஆனால், இந்தியா ஈழப் போராட்டத்திற்கு உதவியதன் காரணம் அதுவல்ல. பனிப்போர் காலத்தில் ஒரு நாடு எந்த முகாமில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எதிரி முகாமின் பதிலிப் போராக உள்நாட்டு குழப்பங்கள் தூண்டி விடப்பட்டன. 1977 ம் ஆண்டிலிருந்து இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னர் இலங்கையும் சோவியத் முகாமில் இருந்த படியால், இந்திரா காலத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இது ஒரு மிகப்பெரிய பண்பியல் மாற்றம். ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு, சோவியத் யூனியன் விழுந்த பின்னர் எல்லா நாடுகளும் ஒரே அமெரிக்க குடையின் கீழ் வந்து விட்டன.

- மேலதிகமாக திருமுருகன் காந்தி சொல்லாத ஒரு தகவலையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். (நிச்சயமாக அவர் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்.) திருகோணமலையில் 1956 ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அந்த வருடம் தான் தன்னை ஒரு இடதுசாரி சமூக ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்ட பண்டாரநாயக்க பிரதமரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, மிகப்பெரிய பிரிட்டிஷ் கம்பனிகளை அரசுடமையாக்கியது. அத்துடன் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமையும் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் "முடிக்குரிய" பிரிட்டிஷ் படைகள் வெளியேற, அந்த இடத்தில் "முடிக்குரிய" சிலோன் படைகள் நிலைகொண்டன.

- இலங்கையின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான அரசியல், இராணுவ, பொருளாதார மாற்றங்களின் பின்னர், 1958 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதைத் தூண்டி விட்டவர்கள், அன்று எதிர்க்கட்சியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி. அன்றிலிருந்து வளர்ந்து வந்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் ஒரு துயர முடிவை சந்தித்தது. ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியா மீண்டும் திருகோணமலையில் படைத்தளம் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் அதற்கு சம்மதித்துள்ளது. 

திருகோணமலை கோளாறு பதிகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


Wednesday, December 01, 2021

ஈழத்தமிழரை கேவலப்படுத்தும் மே 17 இயக்க அயோக்கியர்கள்

மே 17 இயக்கத்தினர், தங்களை எப்போதும் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பிரித்துப் பார்ப்பார்கள். தங்களை "நாலும் தெரிந்த அறிவுஜீவிகள்"(?) மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆனால் புலிகளுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் மட்டும் எந்தளவு பொறுக்கித்தனத்திற்கும் கீழிறங்கி செல்வார்கள். அவர்கள் பக்க தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால் "ராஜபக்சே கைக்கூலி" என்று நாம் தமிழர் பாணியில் இவர்களும் திட்டுவார்கள். கடைசியில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபித்து விடுவார்கள்.


ஆதாரம் ஒன்று: 

பேஸ்புக்கில் ஒரு தடவை அன்பே செல்வா என்பவர் டெலோ அழிப்பை நியாயப் படுத்தும் காணொளிப் பதிவை பகிர்ந்திருந்தார். அதில் நிறைய தவறான, கற்பனையான தகவல்கள் சொல்லப் பட்டிருந்தன. நான் இதை சுட்டிக் காட்டியும் அன்பே செல்வா நம்ப மறுத்தார். நான் நேரில் கண்ட சாட்சி சொல்கிறேன் என்று கூறியும் ஒத்துக் கொள்ள மறுத்தார். அன்பே செல்வா திரும்பத் திரும்ப தான் சொல்வதையே நானும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி மாதிரி சித்திரவதை செய்து பொய்யை உண்மை என சொல்ல வைக்கும் அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருந்தார். 

யாழ்ப்பாணத்தில் டெலோ அழித்தொழிக்க பட்ட பின்னர் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர், இன்று வரையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கும் என்பதை கண்டு கேட்டிராத ஒருவர், அங்குள்ளவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுப்பது எத்தனை பெரிய அபத்தம்? அதுவும் நேரடியாக கண்ணால் கண்ட சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? இது தானா இவர்கள் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதை?

இன்று வரையில் மகிந்த ராஜபக்சே கூட அன்பே செல்வா அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் கூட இந்தளவு மோசமாக தமது கருத்தை எம் மீது திணிக்கவில்லை. அண்மையில் மாவீரர் தினத்தன்று காரைநகரில் முன்பு மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் தமது பக்க நியாயங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், அவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர், நீங்கள் இப்படித் தான் பேச வேண்டும் என்று அன்பே செல்வா மாதிரி பாடம் எடுக்கவில்லை.



ஆதாரம் இரண்டு: 

கிளப் ஹவுசில் மே 17 காரர்கள் நடத்திய கூட்டத்தில் கார்த்தினி ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது என்ற பெயரில் அவர்களை கேவலப் படுத்திக் கொண்டிருந்தார். அதாவது தற்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படையினர் அங்குள்ள தமிழர்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை இழுத்து வன்புணர்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பொய்யான தகவலை சொன்னார். இவர் என்ன சொல்ல வருகிறார்? "ஈழத்தில் வாழும் எந்தவொரு தமிழ்ப் பெண்ணுக்கும் கற்பு கிடையாது... எல்லோரும் சிங்கள இராணுவத்தினரால் பலாத்காரமாக உறவு கொள்ளப் பட்டவர்கள்..." என்று கொச்சையாக பேசுவது தானா தமிழ்த் தேசியம்? இத்தனைக்கும் கார்த்தினியும் ஒரு பெண். அதையும் விட தன்னை ஒரு பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்பவர்.

இதற்குப் பிறகு நடந்த கிளப் ஹவுஸ் கூட்டங்களில் கார்த்தினியிடம் அது குறித்து விளக்கம் கேட்க முயன்ற போதெல்லாம் அவர் அகப்படவில்லை. வேண்டுமென்றே கேள்வி கேட்க வந்தவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்தார். நேற்று கிசாமி கூட்டிய "நீங்கள் பேசும் அரசியலுக்காக பெண்களை கொச்சைப் படுத்தாதீர்கள்" என்ற தலைப்பிலான கூட்டத்தில் கார்த்தினியும் மொடறேட்டராக இருந்தார். நீண்ட நேரம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தவர், அவரிடம் ஒரு கேள்வி என்று தொடங்கியதும் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

மே 17 நண்பர்களே, நீங்கள் புலிகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிப்பது உங்களது தனிப்பட்ட பிரச்சினை. அதற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கேவலப் படுத்துவீர்களா? இதுவரையில் மகிந்த ராஜபக்சவோ, சிங்கள இராணுவமோ ஈழத்தமிழர் மீது செய்திராத கருத்து வன்முறைகளை, நீங்கள் "தமிழர்கள்" என்ற பெயரில் செய்வது எந்த வகையில் நியாயம்? இதற்குப் பிறகும் உங்களை நீங்களே தமிழ்த் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொண்டால், உங்களைப் போன்ற அயோக்கியர்கள் உலகில் இருக்க முடியாது.

பிற்குறிப்பு: 
இதற்கு அவர்களிடமிருந்து எந்தவொரு தர்க்கரீதியான பதிலும் வராது. வழமை போல "சிறிலங்கா அரச கைக்கூலி" என்பன போன்ற வசைச் சொற்களை வீசி விட்டு செல்வார்கள். வாதத்தில் தோற்றவன் அவதூறை ஒரு ஆயுதமாக கையில் எடுப்பான்.

Monday, November 29, 2021

வலதுசாரி (தமிழ்த்) தேசியவாத அறிவுஜீவிகளின் வர்க்கத் துவேஷம்

கிளப் ஹவுசில், ஐரோப்பிய நேரம் கிளப்பில், "JVP பேசும் அரசியல்" என்ற தலைப்பில் கூட்டம் போட்டார்கள். ஐரோப்பிய நேரம் கிளப்பை நடத்துவோர், அதில் பேசுவோர் எல்லாம் வலதுசாரி (தமிழ்த்) தேசியவாதிகள் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். வழமை போல ஜேவிபி பேசும் அரசியல் இனவாத அரசியல் என்று நிறுவுவது தான் அவர்களது நோக்கமாகவும் இருந்தது.

எனக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்த பொழுது எனது கருத்துக்களை சுருக்கமாக முன்வைத்து விட்டு வந்து விட்டேன். அங்கிருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக எனது கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கி விட்டன. குறிப்பாக இலங்கையில் ஜேவிபி அழித்தொழிப்பு நடவடிக்கையில் 1971, 1989 ஆகிய ஆண்டுகளில் இனப்படுகொலை நடந்தது என்று சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. இதில் ஒரு சில இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோரும் அடக்கம்.

1971, 1989 இனப்படுகொலைக்கு நான் முன்வைத்திருந்த வாதங்கள்: 
- அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்பு படை ஏராளமான அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவித்தது.

- ஈவிரக்கமின்றி மக்களை கொல்லும் அளவிற்கு வர்க்கத் துவேஷம் இருந்திருக்கிறது.

- சிறிலங்கா அரசு சிங்களப் பேரினவாத கொள்கையை பின்பற்றும் முதலாளிகள், பணக்காரர்களின் அரசு. அதனது மேட்டுக்குடி வர்க்க நிலைப்பாடு காரணமாக, அடித்தட்டு ஏழை மக்களும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் கொன்று குவிக்கப் பட்டனர். 

- பிரிட்டிஷ் கூலிப்படையான கீனிமீனி 1971 ம் ஆண்டிலிருந்து படுகொலைகளில் ஈடுபட்டமை ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

- அப்போதும் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, ஆகிய "முப்பது உலக நாடுகள்" சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக நின்றன.

- உலகம் முழுவதும் இடதுசாரிகளை ஒடுக்குவதற்காக நடக்கும் இனப்படுகொலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. சிலி, இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலைகள் சிறந்த உதாரணம்.

- மேற்கத்திய நாடுகள், தமக்கும் எதிராக திரும்பும் என்பதால் புறக்கணித்து வருகின்றன. அதற்காகவே இனப்படுகொலை பற்றிய வரைவிலக்கணத்தில் இடதுசாரி கொள்கையாளர்களுக்கு எதிரான, வர்க்க ரீதியான காரணியை வேண்டுமென்றே குறிப்பிடாமல் தவிர்த்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நேரம் குழுவில் மொடறேட்டராக இருந்தவர்கள் என்னைப் பேச விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். நடராஜா முரளிதரன் நடுவில் நின்று கொண்டு நாட்டாண்மை செய்து கொண்டிருந்தார். என்னை தூக்கி கீழே போடுவதும், mute பண்ணுவதாகவும் இருந்தார்.

என்னைப் பேச விடாமல் தடுத்து அவரே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தான் பேசி முடிந்ததும், தனது கருத்துடன் ஒத்துப் போகக் கூடிய சஜீவன், திரு யோ ஆகியோரை கூப்பிட்டு விட்டார். அவர்களும் தம் பங்கிற்கு "தமிழர்களுக்கு நடந்தது மட்டுமே இனப்படுகொலை, மற்றது அரசியல் படுகொலை" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்களது பேச்சுக்களில் இருந்து நான் அறிந்து கொண்ட உண்மை என்னவெனில், மேற்படி நபர்கள் தம்மை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் இனவாதிகளாக தான் இருக்கிறார்கள். அதிலும் திரு யோ "தமிழர்களுக்கு நடந்தால் மட்டுமே இனப்படுகொலை, சிங்களவர்களுக்கு நடந்தால் அரசியல் படுகொலை" என்று சொன்னது அபத்தத்தின் உச்சம். அப்பட்டமான இனவாதம்.

நடராஜா முரளிதரன் "சிலியில் இடதுசாரிகளை தான் கொன்றார்கள்" என்று அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துவது மாதிரி பேசினார். இதை நான் சுட்டிக் காட்டியதும், தான் படுகொலைகளை கண்டிப்பதாகவும், ஆனால் அது இனப்படுகொலை ஆகாது என்றும் வாதாடினார். எனது கேள்வி என்னவெனில், அப்பாவி மக்களையும் "இடதுசாரிகள்"(?) என்பதால் கொன்றார்கள் என்று கூறுவது, கொலைக்கு லைசன்ஸ் கொடுப்பது ஆகாதா?

இருந்து பாருங்கள். எதிர்காலத்தில் இலங்கையில் இடதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு இனப்படுகொலை நடந்தால், இந்த "அறிவுஜீவிகள்" கண்ணை மூடிக் கொண்டு அரசை ஆதரிப்பார்கள். அந்த இனப்படுகொலையில் சிங்களவர்கள் மட்டுமல்லாது, தமிழர்கள் கொல்லப் பட்டாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால் "இடதுசாரிகளை கொல்லலாம்!", "அது இனப்படுகொலை ஆகாது!!"

இப்படிப்பட்ட தீவிர வலதுசாரி பாசிஸ்டுகளை முற்போக்கு தமிழ்த்தேசியத்தின் கீழ் கொண்டு வரலாம் என நம்புவது வெகுளித்தனமானது. "தீவிர வலதுசாரிகளை திருத்தி விடலாம்" என பகற்கனவு காணும், தமிழ் பேசும் இடதுசாரிகளும் இந்த உண்மையை. உணர வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது, வலதுசாரி தமிழ்த்தேசிய அறிவுஜீவிகள் மனதிலும் வர்க்கத் துவேஷம் ஊறி உள்ளது. நாளைக்கு இந்த சிறிலங்கா அரச படைகள், வர்க்கரீதியாக ஒடுக்கபட்ட ஏழை எளிய மக்களை மட்டும் குறிவைத்து கொன்று குவித்தால் பாராமுகமாக இருப்பார்கள். அந்த இனப்படுகொலையை நியாயப் படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

Wednesday, November 24, 2021

அவுஸ்திரேலிய துன்பத் தமிழ் வானொலியில் சாதிய வன்மம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, ஈழத்து சாதிய வன்கொடுமைகள் பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் நடத்தும் வானொலியிலும் சாதிய வன்மம் எதிரொலித்தது.

யார் அந்த சாதிவெறியர்?

இன்பத்தமிழ் என்ற வானொலியை நடத்தும் நெறியாளர், ஒரு நேரலை நிகழ்வில் "கீழ் சாதி!" என்று சாதிய வன்மத்துடன் பாய்ந்துள்ளார். சில தினங்களின் பின்னர் இது தொடர்பான கண்டனங்கள் சமூகவலத்தளம் ஊடாக பரவியதால் அந்த நேரலைப் பதிவு பேஸ்புக்கில் அழிக்கப் பட்டு விட்டது. இருப்பினும் வானொலியின் நெறியாளர் சாதிவெறி வன்மத்துடன் பேசிய ஒளிப்பதிவு எனது கைகளுக்கு கிடைத்துள்ளது. 

இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? 

இது தொடர்பாக உறுதிப்படுத்தப் பட்ட தகவல்களை இங்கே தருகிறேன். 

அவுஸ்திரேலியாவில் இன்பத் தமிழ் என்ற வானொலி சேவை கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதை நடத்தியவரின் சமூகச் சீர்கேடான பழக்கவழக்கங்கள் காரணமாக இடையில் நிறுத்தப் பட்டிருந்தாலும், மறுபடியும் இணையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

இந்த வானொலியின் உரிமையாளரான பாலசிங்கம் பிரபாகரன் தன்னை ஒரு தீவிர தமிழ்தேசிய செயற்பாட்டளராக காட்டிக் கொள்பவர். முன்பு புலிகள் இருந்த காலத்தில் அவர்களை அண்டி பிழைப்பு நடத்தியவர். தற்போதும் மாவீரர் நிகழ்வுகளை முன்நின்று நடத்தி தன்னை ஒரு புலி அனுதாபியாக காட்டிக் கொள்பவர். 

பாலசிங்கம் பிரபாகரன் தனது தீவிர புலி ஆதரவை காட்டுவதற்காக, ஈழத்து அரசியல் களத்தில் மிதவாத  TNA யை நிராகரித்து விட்டு, தீவிரவாத TNPF கட்சியை ஆதரித்து வருகிறார். அதனால் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சர்ச்சைக்குரிய வானொலி நிகழ்ச்சிக்கு கஜேந்திரகுமாரை அழைத்து பேசியுள்ளார். இந்த உரையாடல் Zoom செயலி மூலம் பதிவுசெய்யப்பட்ட படியே, இணைய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

யார் இந்த கஜேந்திரகுமார்?

கஜேந்திரகுமார் முன்பு TNA க்குள் இருந்த காலத்தில், புலிகளால் ஆசீர்வதிக்கப் பட்டவர் என நம்பப் பட்டார். இவரது பாட்டன் ஜி.ஜி. பொன்னம்பலம் தான் ஈழத்தில் முதலாவது வெள்ளாள ஆதிக்க சாதியினருக்காக தமிழ்க் காங்கிரஸ் என்ற சாதிக் கட்சியை உருவாக்கியவர். தற்போது அவரது பேரன் கஜேந்திரகுமார் அந்தக் கட்சியை நடத்தி வருகிறார். இதனது சின்னத்தின் பெயரில் சைக்கிள் கட்சி என்றும் அழைக்கப் படுகின்றது. 

இன்பத்தமிழ் வானொலியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திரகுமார், வழமை போல பூகோள அரசியல் பாடம் நடத்தி, தனது மேற்குலக அடிவருடித்தனத்தை நியாயப் படுத்திக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு நேயர், இது தொடர்பாக தனது எதிர்க் கருத்துகளை முன்வைத்திருந்தார். மேற்கத்திய நாடுகளிடம் கையேந்தும் பூகோள அரசியல் வாய்ச் சவடால்களால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை என்றும் எமது அயல்நாடான இந்தியாவை பகைக்காமல், அதன் உதவியுடன் தீர்வுக்காக முயற்சிப்பதே சிறந்தது என்று தனது கருத்தை முன்வைத்திருந்தார். 

நிச்சயமாக இந்தக் கருத்து நெறியாளர் பாலசிங்கம் பிரபாகரனுக்கு உவப்பானதாக இருந்திருக்காது. அவர் கஜேந்திரகுமார் கட்சிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். 

கஜேந்திரகுமாரை கேள்வி கேட்டவர் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வசித்து வருகிறார். நெறியாளருக்கு நன்கு தெரிந்தவர். அதனால் தனது அரசியல் எதிரியை தாக்குவது என்ற பெயரில் மிக மோசமான தனிமனித தாக்குதல் நடத்தினார். 

எதிர்க் கேள்வி கேட்டவரை ஆளுமை அழிப்பு அதாவது Character assasination செய்வது ஒரு பாசிசப் பண்பாடு. கருத்து சுதந்திரத்தை மதிக்காத சர்வாதிகார மனநிலை. ஜெர்மனியில் நாசிச கொடுங்கோலர்கள் தம்மை விமர்சித்தவர்கள் மீது எத்தகைய வன்மைத்தை கொட்டினார்கள் என்பதை வரலாறு கற்பிக்கின்றது. நாசிகளின் அதே மாதிரியான வன்மத்தை அன்று நெறியாளர் வெளிப்படையாகக் காட்டினார். 

"இவர் கையாலாகாத ஒருவர்... சுமந்திரனின் செம்பு..."

"கீழ்த்தரமான சிந்தனை உள்ளவர்..."

"விடுதலைப் போராட்டத்தில் இவரது அண்ணன் கொல்லப் பட்டார் என்பதற்காக இவருக்கு தமிழ்த்தேசியம் பேசுவோரை கண்ணில் காட்ட முடியாது..."

"இவர்கள் தமிழ்த்தேசியப் பரப்பில் இருந்து நீக்கப் பட வேண்டியவர்கள்..."

இப்படி தனிமனித தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பொழுது இடைமறித்த நேயர் "என்ன உங்கள் குரல் கொன்னை தட்டுகிறது?" என்று கேட்டிருக்கிறார். ஒருவேளை "குடித்து விட்டு உளறுகிறாயா?" என்ற அர்த்தத்தில் கேட்டிருந்தாலும் அதில் தவறேதுமில்லை. சம்பந்தப்பட்ட நெறியாளரின் ஒழுக்க சீர்கேடுகள் ஊரறிந்த இரகசியம். 

ஆனால், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியற்ற நெறியாளர் மிகக் கேவலமான சாதிய வன்மத்தை கக்கினார். 

"இவன் இதற்குப் பிறகு பல பதிவுகளை போடுவான்..."

"கீழ்த்தரமான பதிவுகளை போடுகிற கீழ்சாதி இவன்!"

"சாதிக்கேற்ற குணம் தான் அவருக்கு இருக்கிறது!"

இப்படிக் கூறுவது இவர் வாழும் அவுஸ்திரேலியாவில் Racial Discrimination Act 1975 என்ற சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய மிக மோசமான இனப்பாகுபாடு காட்டும் குற்றம் ஆகும். 

இன்பத்தமிழ் வானொலியில் இவ்வாறு நெறியாளர் பிரபாகரன் பகிரங்கமாக சாதிய வன்மத்தை கக்கிய நேரம், ஒரு தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவரான கஜேந்திரகுமார் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார். ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக காட்டிக் கொள்ளும் கஜேந்திரகுமார், தனக்கு முன்னால் நடந்த சாதிய வன்கொடுமையை கண்டும் காணாமல் கடந்து சென்றமை கண்டனத்திற்கு உரியது. இவருக்கு தமிழர்களின் இன உரிமை பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? இப்படியானவர் தான் ஜெனீவா சென்று தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கித் தரப் போகிறாராம். 

பிந்திக் கிடைத்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக கஜேந்திரகுமாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து "ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் தான் அந்த நேரம் முகத்தை சுழித்தேன் என்று பதில் கூறி இருக்கிறார். இது தான் ஒரு பொறுப்புள்ள தலைவரின் பதில்? சரி, அப்போது தான் எதிர்வினை ஆற்றவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதற்கு அடுத்த நாளாவது கண்டனம் தெரிவித்திருக்கலாம் அல்லவா? இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், இன்னமும் கஜேந்திரகுமாரிடம் இருந்தோ, அவரது கட்சியில் இருந்தோ எந்தவொரு கண்டன அறிக்கையும் வெளிவரவில்லை. இதன் மூலம் கஜேந்திரகுமார் தானும் சாதிவெறியர்களின் பக்கம் நிற்கிறேன் என்பதை மறைமுகமாக நிரூபிக்கிறார். TNPF என்பது ஒரு சாதிக் கட்சி தானென்பது மறுபடியும் நிரூபிக்கப் பட்டுள்ளது.  


இந்தப் பதிவு YOU TUBE வீடியோவாகவும் பதிவேற்றப் பட்டுள்ளது:

Sunday, November 21, 2021

துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்!

 


துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியை(TKP) சேர்ந்த Fatih Mehmet Maçoğlu கிழக்கு துருக்கியில் உள்ள துன்செலி (Tunceli) உள்ளூராட்சி சபை மேயராக இருக்கிறார். இவரது ஆட்சியில் பல சோஷலிச பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

சுமார் 33000 பேரை சனத்தொகையாக கொண்ட துன்செலியில் சிறுபான்மையின குர்திஷ், அலாவி, ஆர்மீனிய மக்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அங்கே வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கடந்த தேர்தலில் Mehmet Maçoğlu மேயராக தெரிவானார். அவர் தனது முதலாவது கடமையாக வேலையில்லா பிரச்சினையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் படி கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. தற்போது அந்த பண்ணைகளில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய தேன் துருக்கி முழுவதும் ஏற்றுமதியாகிறது.

இதைத் தவிர நகர எல்லைக்குள் இலவச பொதுப் போக்குவரத்து சேவை, இலவச தண்ணீர் விநியோகம் செய்து கொடுக்க பட்டுள்ளது. அத்துடன் ஏழைகளுக்கான சலுகைகள் வழங்க படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இடதுசாரி துருக்கியரும் சமூக நலத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளனர்.

துருக்கியின் ஒரேயொரு கம்யூனிச மேயரின் சாதனைகளை கேள்விப்பட்ட பலர், கடந்த காலத்தில் தாம் கொண்டிருந்த கம்யூனிசம் தொடர்பான தப்பெண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Wednesday, November 03, 2021

ஈழ தேச மாயையும் முஸ்லிம் தேசிய இனப் பிரச்சினையும்

திருப்பூர் குணா எழுதிய‌ "இஸ்லாமிய‌ தேசிய‌ மாயைக‌ளும் ஈழச் சிக்க‌லும்" நூலில் ப‌ல‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல்க‌ள் உள்ள‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் மொழி அடிப்ப‌டைவாத‌ அல்ல‌து த‌மிழ்ப்பேரின‌வாத‌ ம‌ன‌நிலையுட‌ன் எழுத‌ப் ப‌ட்டுள்ள‌து. இந்த‌ த‌க‌வ‌ல் முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌து: 

//இந்த நேரத்தில் இசுலாமியர்கள் தமது கல்வி மொழியாக சிங்களத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ் மொழி இசுலாமியர்களின் தாய்மொழி அல்ல என்றும் இசுலாமியத் தலைமை பிரச்சாரம் செய்தது. இசுலாமிய மாணவர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் தமிழ் அதிபர்களை நியமிக்கக் கூடாதென்றும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.// 

உண்மையில் சிங்க‌ள‌ப் ப‌குதிக‌ளில் வாழும் முஸ்லிம் மாண‌வ‌ர்க‌ளை பெரும்பான்மையாகக் கொண்ட‌ பாட‌சாலைக‌ளில், இன்றைக்கும் த‌மிழ் தான் போத‌னா மொழியாக‌ உள்ள‌து. (ஒரு இந்து/கிறிஸ்த‌வத் த‌மிழர் கூட‌ இல்லாத‌) சிங்க‌ள‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழும் இஸ்லாமிய‌ர்க‌ள் இன்றைக்கும் த‌மிழை தாய்மொழியாக‌ கொண்டுள்ள‌ன‌ர். அன்றாட‌ வாழ்வில் ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர். த‌ம‌து பிள்ளைக‌ளை த‌மிழ் மொழியில் ப‌டிக்க‌ வைக்கிறார்க‌ள். 

நூலில் உள்ள‌ இந்த‌ த‌க‌வ‌ல் முழுவதும் க‌ற்பனை. ஒரு புனைய‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுக்க‌தை. இப்ப‌டி ஒரு ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌க்க‌வேயில்லை: 

//1986-இல் யாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு ஒன்று 782 உறுப்பினர்களுடன் பலமான நிலையில் இருந்துள்ளது. யாழ்ப்பாண இசுலாமியர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் அதுதான் கையாண்டு வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் இசுலாமிய இளைஞர்கள் எந்த தமிழீழ ஆயுதக்குழுக்களிலும் பங்குபெறக் கூடாதென்று வாய்மொழி உத்தரவும் பிறப்பித்திருந்தது. அந்த நேரத்தில் அங்கு 30-க்கும் மேற்பட்ட தமிழீழ ஆயுதக்குழுக்கள் செயற்பாட்டில் இருந்திருக்கின்றன. இவற்றில் பல இசுலாமிய இளைஞர்கள் சேர்ந்து செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். இது யாழ்ப்பாண இசுலாமியர் விசயத்தில் தமிழீழ ஆயுதக்குழுக்கள் தேவையின்றி மூக்கை நுழைப்பதாக கருதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அனைத்து தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. ஜின்னாஹ் வீதியிலுள்ள எஸ்.ஏ.சீ.நிலாம் அவர்கள் வீட்டு வளாகத்தில் நடந்த கூட்டத்தில் 36 தமிழீழ ஆயுதக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இசுலாமிய சமூகப் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டத்துக்கு ஹிஜாஸ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். “முஸ்லிம் சமுதாயத்தை தமிழ் ஆயுதக்குழுக்களால் கையாள முடியாது. அதனால் முஸ்லிம்கள் குறித்த எந்தப் பிரச்சினையானாலும்; அதை இஸ்லாமிய இளைஞர் அமைப்பிடம் கையளிக்க வேண்டும். அதை அவர்களே தீர்த்து வைப்பார்கள். அத்துடன் முஸ்லிம் இயக்கங்கள் மீது எந்தத் தமிழ் ஆயுதக்குழுவும் அத்துமீறக்கூடாது. தன்னிச்சையாக செயல்படவும் கூடாது” என்று தமிழீழ ஆயுதக்குழுக்களுக்கு அறிவுத்தப்பட்டது. இதனை தமிழீழ ஆயுதக்குழுக்கள் ஏற்றுக்கொண்டு ஒப்பமிடவும் செய்தன.// 

1986ம் ஆண்டு அங்கே 36 த‌மிழீழ‌ இய‌க்க‌ங்க‌ள் இருக்க‌வில்லை. இது முழுக்க‌ முழுக்க‌ த‌வ‌றான‌ த‌க‌வ‌ல். 1984ம் ஆண்டு தொட‌க்க‌த்திலேயே மொத்த‌ம் 5 இய‌க்க‌ங்க‌ள் தான் இருந்த‌ன‌. 1986 ம் ஆண்டு ஏனைய‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து விட்டு புலிக‌ள் ஏக‌போக‌ உரிமை கோரினார்க‌ள். எஞ்சிய‌ ஈரோஸ் ம‌ட்டும் புலிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்து கொண்ட‌து. அத்த‌கைய‌ நிலையில் ஒரு "ப‌ல‌மான‌" இஸ்லாமிய‌ இளைஞ‌ர் அமைப்பு இருந்திருக்க‌ சாத்திய‌மே இல்லை. இது முழுக்க‌ முழுக்க‌ ஒரு க‌ட்டுக்க‌தை. 

 ***** 

திருப்பூர் குணா எழுதிய "இஸ்லாமிய தேச மாயைகளும் ஈழச் சிக்கலும்" என்ற நூல் மீதான விமர்சனம். இலங்கையில் உள்ள முஸ்லிம் தேசிய இனப்பிரச்சினை பற்றிய கிளப் ஹவுஸ் கூட்டம். பகுதி - 1 

 https://youtu.be/c0HFyqGVFKw

 

Sunday, October 03, 2021

யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!

 

செப்டம்பர் 19, இரவு, யாழ். வட்டுக்கோட்டையில் 20 - 30 பேர்களைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதுவரை காவல்துறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை தவிர மற்றவர்களை கைது செய்ய படவில்லை. இத்தனைக்கும் அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது நடந்து 12 நாட்கள் ஆகியும், இன்று வரையில் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 4 தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன.

இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராத காரணம் என்ன? அரசின் செய்தித் தணிக்கையா? பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை இருக்கிறதா? ஏன் இதைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை? எந்தவொரு தமிழ்தேசிய கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

காரணம்: அந்த வன்முறைக் கும்பல் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். அங்கு நடந்தது ஒரு சாதிவெறித் தாக்குதல்.




**********

இந்த சம்பவம் குறித்து விதை குழுமம் தொகுத்து வழங்கிய அறிக்கை:
 
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை
https://vithaikulumam.com/2021/09/30/30092021/?fbclid=IwAR1KfIljdzXfQ7uY0QDBKJYKLMbnqnYbhx_E5i_dtlJeGxAfSelwfuUlSU8

வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார்.

முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்காலம் போக துவக்காலை சுடுவாங்கள், அப்பவும் சுள்ளித்தடியோடதான் நிக்கப்போறம்’. வெட்டப்பட்ட கையும் விரல்களும் மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். கிழிக்கப்பட்ட கையும் விரலுமாக அதன் வலியோடு அதே நேரம் உணர்ச்சிவசப்படாத உரத்த குரலோடு அவருடைய வார்த்தைகளிருந்தன. “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற பெடியள், பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள். நாங்கள் சண்டைக்குப் போகேலாதுதானே, அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் அப்பிடியில்லை, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது.

அவங்களுக்கு நளவரைக் கொல்லோனும். இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை செம்பாட்டன் தோட்டமெண்டால் அப்பிடி, மூளாயெண்டால் அப்பிடி, தொல்புரமெண்டால் அப்படி, சுழிபுரம் எண்டால் அப்பிடி, எல்லா இடமும் அப்பிடித்தான். தொடந்து இது நடந்துகொண்டிருக்கு, இண்டைக்கு நேற்றில்லை பல வருசமா இது நடந்துகொண்டுதானிருக்கு. எனக்குத் தனிய எண்டால் என்ர பிரச்சினைய நான் பாப்பன், இஞ்ச வா எனக்கடியப்பா எண்டு சொல்லுவன், ஆனால் எனக்கு மட்டுமில்லைத்தானே இஞ்ச நடக்கிறது. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி, இது எங்கடை வேலி, வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப்பிரிச்சிருப்பான். பாருங்கோ, அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ?

நாங்கள் இஞ்ச கிடங்குக்க இருக்கிற எலி மாதிரி. அவங்கள் எங்களைச்சுத்தி இருக்கிறாங்கள், வெக்கத்தை விட்டுச்சொல்லுறன் போற வாற எண்டாலே பயம். எங்கடையள் வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வரும் வேலையாலை. அப்ப அதிலை மறிச்சு அடிப்பாங்கள், நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள், வேலிலை குளை முறிச்சனியோ, மாங்காய் ஆஞ்சனியோ எண்டு அடிப்பாங்கள், பிள்ளையள் மூஞ்சை முகரை எல்லாம் வீங்கிப்போய் வருங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள், களை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான். கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் அடிபிடிதான். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள், குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள், இவங்கள் தேடிவந்து ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன?

என்ர மருமோன் அண்டைக்கு ஒருநாள் சும்மா வந்தவன், அண்டைக்கு அவனை கத்தியாலை குத்தக் கலைச்சுக்கொண்டு வந்தாங்கள், மனிசி ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்காட்டி குத்தியிருப்பாங்கள். தங்கடை வெறிக்கு டேஸ்ட் நாங்கள்தான், ஒரு சவாரிக்குப்போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. அம்பது வயசு எனக்கு, கோட்சும் தெரியா பொலிசும் தெரியாது, ஆனால் உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை, உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு தைரியம் உவங்களுக்கு”

இளைஞர் ஒருவர் அன்றைக்கு சம்பவத்தை விளக்கத்தொடங்கினார்.

அண்டைக்கு நானும் இவனும் வேலைக்குப்போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள், பேபிகடை முடக்கிலை திரும்பும்போது அவங்கள் நிண்டு பாத்தவங்கள், நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம், எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்கள் ஏன் முறிக்கிறம், நீங்கள் கண்டனீங்களோ நாங்கள் முறிச்சதை எண்டு கேட்டம். குளை முறிக்கிறது நீங்கள் எண்டு நினைச்சுத் தள்ளின்னாங்கள் எண்டிச்சினம். அதுக்கேன் தள்ளுவான் கேட்டிருக்கலாம்தானே, நாங்களேன் குளை முறிக்கிறம் நாங்கள் என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி, நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு.”

மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார்.

‘’பிள்ளையள விடுங்கோ, உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள்தானே எண்டு நாயிலும் கேவலமாக் கெஞ்சின்னான். ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப்பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, அவங்கள்ள ஒருத்தன் கெல்மெட்ட களட்டி அடிக்க வந்திட்டான். நான் குறுக்க விழுந்து மறிச்சு சமாளிச்சு பிள்ளையளைக் கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள, மோட்டச் சைக்கிளாலை கொண்டுவந்து சைக்கிள்ளை ஏத்திப்போட்டான். மகன் என்னை பிடிச்சு அங்காலை எறியாட்டி நான் துலஞ்சிருப்பன்.

என்னத்துக்காக இடிச்சனியள் எண்டு நாங்கள் கேக்கப் போக, ரெண்டு பேர் ஆட்டோவிலை வந்து ‘என்னதுக்கடா நளவா, பீனாண்டியள் இஞ்சாலை வாறியள்’ எண்டு கேட்டுக்கொண்டு பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.” என்றார் இளைஞர். அப்போதுதான் இன்பநாதன் அந்த இருளில் பளபளப்பாகத் தூக்கிக் காட்டிய வாளைப் பார்த்த சம்பவத்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.

“எனக்கு விளங்கீட்டு இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு, நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். டேய் பு…. யில் நளமே இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன், அண்ணை இஞ்ச வாவண்ணை கதைப்பம் எண்டு நான் கேட்டு முடிக்க முதல் கையுக்கு வெட்டிப் போட்டான், விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் பிறகு அடி நடக்குது, சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள்.

திருவிழா, சவாரி போன்ற நிகழ்வுகளிலும், வீதிகளில் போகும் போதும் இளைஞர்களுக்கு அடிப்பது துன்புறுத்துவது முதலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கிராம மக்கள், தீடீரென இன்பநாதன் வாளால் வெட்டப்பட்டு, ‘நளவருடைய’ தகர வேலிகளும், கதவுகளும் நொறுக்கப்படுமென்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டுக்குள் அவர்கள் பதுங்க, இருபது நிமிடங்களுக்கு மேல், ஆமியும் இயக்கமும் சண்டையில் ஒரு இடத்தைக் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருப்பது போல் அவ்விடத்தை வைத்துக்கொண்டு ஆதிக்க வெள்ளாளர்கள் ஆடிய சதிரை இன்பநாதன் அவர்கள் விபரிக்க விபரிக்க குரல் நடுங்கியது.

“அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே. அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப்பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம்.

கல்லுமழை. அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரிக் கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். அவங்கள் சண்டேலை நல்லா ஊறினவங்கள் எல்லாரும் கெல்மெட் போட்டுத்தான் வருவாங்கள். அண்டைக்கு ஓடேல்ல எண்டா பெடியளை வெட்டி இருப்பாங்கள். அந்தக் கதவு, வேலிகளை என்ன செய்திருக்கிறாங்கள் பாருங்கோ. எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும். நாங்கள் ஒரு வழக்கெடுக்கேலா, எங்களுக்கு ஒரு பிரச்சினையெண்டு ஒரு இடத்த போகேலா, ஜனநாயகம், ஜனநாயகம் எண்டுறாங்களே, ஜனநாயகம் எண்டால் என்ன?”

இன்பநாதனின் நினைவு என்பது அவருக்கு விபரம் தெரிந்த இருபத்தைந்து வருடங்களில் இருந்து பின்னிக்கொண்டு மேலெழுந்து வெட்டப்பட்ட அவருடைய கைவரை ஏறுகின்றது. ஒவ்வொரு முறையும் தாக்கப்பட்ட அவருடைய முன்னோர்களை அவர் நேரடியாக நினைவுகூரவில்லை. அவருக்கு அவர்களை ஞாபகம் இருக்குமோ தெரியாது, ஆனால் அடிகளும், கொடுமைகளும் ஞாபகத்தில் இறுகிப்போயிருந்தது. முன்னோரைக்காட்டிலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே பெரிய ஞாபகமாகவிருந்தது.

இரண்டு தாய்மார்கள்

சம்பவம் நடந்து பத்து நாட்களாகிவிட்டது. ஒரு கெட்டித்து இறுகிய கோவமும், இழந்து விட்ட நிம்மதியின் நடுக்கமும் அவர்களுக்குள் பரவியிருந்தது. பொருமி வெடித்த கோபமும், கெலித்த உடலுமாக அவர்கள் பேசினார்கள். அவை அங்கிருந்த ஆண்களைக் காட்டிலும் செறிந்து, உறுதி பெற்றிருந்தன. ’இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால் இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு. இதெல்லாம் இவ்வளவு காலமும் இப்பிடியே நடந்துகொண்டு இருக்கு, இண்டைக்கு நேற்றே இது நடக்குது? நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது?

சும்மா நிண்ட எங்கட அம்பைய்யா பாவம், அண்டைக்கு நடந்த சம்பவத்திலை அடிச்சுப்போட்டாங்கள், நெத்திலை குத்தி இருக்கு, ஏலாத மனிசன், இப்ப புத்தி மாறி நிக்குது. வயசு போன ஆள் என்ன கேட்டது. அண்டைக்கு பொம்பிளையள ஓடியிருக்காட்டி துண்டு விழுந்திருக்கும், நிண்டிருந்தால் கட்டாயம் வெட்டி இருப்பாங்கள். நாங்கள் ரெண்டுபேரும் போய்க் கதைச்சனாங்கள் அவையளோடை, சின்னப் பெடியங்கள் வந்த இடத்தை ஏதோ தெரியாமச் செய்திருப்பாங்கள். நீங்கள் மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பியவை இந்தப்பிரச்சினை வேண்டாம், பேசாம விடுங்கோ அவையளும் போகட்டும் நீங்களும் போங்கோ எண்டு கெஞ்சிப் பாத்தனாங்கள். எங்களை உங்களுக்குத் தெரியும்தானே, எண்டு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சிப்போட்டு வந்தனாங்கள். வந்தால் பிறகுதான் உது நடந்தது.

எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம் இருக்கிது. எனக்கு உதுகள் பிடியாது. என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல, மரியாதையாத்தான் கதைக்கிறது, ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள். நீங்கள் ஆர்? தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்?

கேற்றை உடைக்கிறாங்கள், வெளியிலை கத்துறாங்கள் நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம், லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். ‘நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு’ எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்? நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள், அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ?

என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது, ஏன் சும்மா பிரச்சினையெண்டு இரவிலை அம்மா வீட்டிலை போய்தான் எல்லாரும் படுக்கிற. இப்ப கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது. அண்டைக்கு எங்கட ஆக்களிட்ட ஒருத்தரிட்டையும் ஆயுதமில்லை, வெறுங்கையோட நிண்டவை. இவங்கள் இப்பிடிச்செய்வாங்கள் எண்டு ஆர் எதிர்பார்த்த? தம்பி நாங்கள் என்னெண்டாலும் செய்யிறம் இதுக்கொரு தீர்க்கமான முடிவு எடுத்துத்தாங்கோ, வாறனியள் வந்து சும்மா கதைச்சுப்போட்டுப் போற மாதிரி இருக்கக்கூடாது. திரும்பவும் இதுக்க இதுமாதிரி ஒரு பிரச்சினை வருமெண்டால் அதுக்குப்பிறகு இஞ்ச ஒருத்தரும் வரக்கூடாது, சொல்லிப்போட்டன். பொம்பிளையள் விடவும் மாட்டம் வர.

இரண்டு இளைஞர்கள்

அடிகளையும், சாதிவசைகளையும், சமாளித்துச் சமாளித்துச் சோர்ந்துபோன அவர்களுடைய அன்றாடம் முகங்களை விடியவிடாமல் செய்திருந்தது. “பொலிஸ் கோட், கேஸ் வழக்கு ஒண்டும் நிக்காது. இப்ப கூடக் கோட்டுக்குப் போயிருக்குத்தான், ஆனால் என்ன நடக்குமோ எப்பிடி முடியுமோ எண்டு எங்களுக்கு நம்பிக்கையில்லை. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலா. அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும், ஆனால் அவங்களுக்கு அப்பிடியில்லை. வெளிநாட்டுக்காசு கிடக்கு. அவைக்கு ஜெயிலுக்கு போறதும் வெளியிலை வாறதும் ஒரு பிரச்சினையில்லை. அவங்கள் நிறையப் பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். பைக்கிலை போகேக்க கலைச்சுக்கொண்டு வருவாங்கள், திருவிழா, சவாரி எண்டால் சண்டை, அடி. எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் ஒரு இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல்.

பள்ளிக்கூடங்களிலை எங்கடை பிள்ளையள் படிக்கிறேல்ல எண்டு கொம்பிளைண்ட். ஏனெண்டு போய்ப் பாத்தால், எங்கடை பிள்ளையள் ஒழுங்கா வாறேல்ல எண்டினம். நாங்கள் ஏன் பிள்ளையள் போறேல்ல எண்டு பாத்தால், பிள்ளையள் ஐஞ்சு நிமிசம் பிந்திப்போனாலும் வீட்ட போய் தாய் தேப்பனைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுவாங்கள், பிள்ளையள் வீட்ட வந்தால் தாய் தேப்பன் கூலி வேலை, வயல் வேலை எண்டு போய்டும், பிள்ளையள் அவை இல்லாம எப்பிடிப்போறதெண்டு பள்ளிக்கூடம் போகாம நிண்டிடும். இதுதான் நடக்கும். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு.”

இவ் உரையாடலின் போது அந்த இரவின் சூட்டை உணர முடிந்தது. யாரை யார் காப்பாற்றுவது என்று திணறியபடி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு சாதி வெறித் தாக்குதல் எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. இது சும்மா குழுச் சண்டை என்பதாகச் சித்தரித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாள சாதியைச் சேர்ந்த சிலர் குடிப்பதற்கும் கொண்டாட்டங்களுக்குமாக அரசடியில் ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடித்திருக்கும் போது கிடைக்கும் நளவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் வேறு வெளியாட்களையும் அடிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு. எந்தக் காரணங்களும் இன்றித் தாக்குவார்கள். வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரே இத்தகைய செயல்களினாலும் வன்முறைகளாலும் அந்தக் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அத்தகைய மோசமான குழுவினரை அவ்விடத்தை விட்டு அகற்றும் வல்லமையோ அல்லது அம்மக்கள் மீதான அக்கறையோ பெரிதாக யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பாலன ஊடகங்கள் பயங்கரமான ஒரு சாதி வெறித் தாக்குதலை, குடி வெறித் தாக்குதலாகச் சுருக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் கவனத்தை சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில் அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களிற்கும் அக்கறையிருப்பதில்லை. அது அவர்களின் நலன்களைப் பாதிக்கும். ஆகவே சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அம்மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். காலந்தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு அடித்தவர்களிடம் சென்று, தவறு செய்யாத மகன்களைக் காப்பாற்ற அப்பாக்களும் அம்மாக்களும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். நாம் அவர்களையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையையும் அகற்ற முன்வரவேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களிற்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகள் தொழிற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் அதற்கெதிராக உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைவதே அம்மக்களுக்கான சமூகநீதிக்கான முதற்படியாகும். நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை, சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல்மயப்படுதலின் முதற்படி. நம் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளை இனங்கண்டு, அந்த ஒடுக்குமுறைக் களைவது பற்றிய அறிதலும் செயலாற்றலுமே அரசியல்மயப்படுதல். சாதியால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் சாதி எப்படி அவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிவு பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும் அவர்களுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அக்கல்வியை அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகக் கையாளவேண்டும்.

ஆதிக்க சாதியில் பிறந்தவர்களும் தங்களது சொந்த சாதி நலன்களிலே மட்டும் மூழ்கிக் கிடக்காமல் சாதி ஒடுக்குமுறையையும், தாம் எப்படி ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கற்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைக்கு தமது முன்னோர்களும் தாமும் எப்படிக் காரணங்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து அவற்றை மாற்ற முன்வர வேண்டும். இங்கு ஒவ்வொரு சாதியிலும் தனக்கு மேல் கீழென்று சாதிகள் இருக்கிறது என்று மூட நம்பிக்கை கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நம் குழந்தைகளை அறிவூட்டிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடத்தில் நாம் இந்தச் சாதி வெறித் தாக்குதலை நம் கண் முன்னே காண்கிறோம். நமது சமூகம் சாதிய இழிவுகளிலிருந்து மீண்டெழ அறிவார்ந்து சிந்திக்கவும் ஒடுக்கப்படும் மக்களைக் காக்கவும் அவர்களுக்கான சமூக நீதியும் சுயமரியாதையும் மீட்கப்படவும் நம்மாலான ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும்.

தோழமையுடன்

விதை குழுமம்

Saturday, August 21, 2021

1953 மக்கள் எழுச்சி - இலங்கையில் வர்க்கப் போராட்டம்


இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ஏகாதிபத்திய- முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மார்க்சியவாதிகளையும், கம்யூனிஸ்டுகளையும் தனது பிரதானமான எதிரிகளாகக் கருதியது. இலங்கையில் அன்று நடந்து கொண்டிருந்தது ஒரு வர்க்கப் போராட்டமே அன்றி, இனப் போராட்டம் அல்ல. சிங்கள- தமிழ் பூர்ஷுவா வர்க்க புத்திஜீவிகள், இன்றைக்கும் இந்த உண்மையை மறைத்து, வரலாற்றை திரித்து எழுதி வருகின்றனர். 

பிரிட்டிஷ் காலனியாகவிருந்த இலங்கை 1948 ல் சுதந்திரமடைந்த பின்னரும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருந்தது. அத்துடன் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தது. இலங்கை அரசின் அமெரிக்க சார்புத்தன்மை காரணமாக, அது ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெற முடியவில்லை. சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

1953 ம் ஆண்டு வரையில் இலங்கை அரசு தீவிர கம்யூனிச எதிர்ப்புக் கொள்கையை பின்பற்றி வந்தது. அந்த வருடத்தில் இருந்து தனது கடும்போக்கு நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கம்யூனிச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. அதற்குப் பிறகே ஐ.நா.வில் அனுமதிக்கப் பட்டது. 

1950 - 1953 வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னெடுத்த கொரிய யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பருக்கு அதிக கேள்வி உருவானது. ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக ஈட்டிய வருமானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்ததுடன், அரச கஜானாவிலும் பெருந்தொகைப் பணம் சேர்ந்திருந்தது. ஆனால், யுத்தம் முடிந்தவுடன் சந்தை வாய்ப்புகளும் குறைந்து விட்டன. இதனால் வரவை விட செலவு அதிகரித்தது. கஜானா காலியாகிக் கொண்டிருந்தது. பல நிறுவனங்கள் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தன. 

இந்த தருணத்தில் தான் ஒரு கம்யூனிச நாடான சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது. சீனாவின் அரிசிக்கு பதிலாக இலங்கையின் ரப்பரை பண்டமாற்று செய்து கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. இதனால் இலங்கை தேசம் திவாலாவதில் இருந்து காப்பாற்றப் பட்டது எனலாம். இருப்பினும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசுக்கு முன் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, பணக்கார வர்க்கத்திடம் அதிக வரி அறவிடுவது. இரண்டாவது ஏழை வர்க்கத்திற்கு கொடுத்து வந்த அரச மானியங்களை குறைப்பது. முதலாளிய ஆதரவு UNP அரசு இரண்டாவதை தேர்ந்தெடுத்தது. அதன் மூலம் இலங்கையை ஆள்வது ஒரு முதலாளித்துவ அரசு தானென்பதை நிரூபித்தது. 

அரசு மக்களுக்கு வழங்கி வந்த அனைத்து சலுகைகளும் ஒன்றில் குறைக்கப் பட்டன, அல்லது நிறுத்தப் பட்டன. அரிசிக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்தி விட்டது. இதனால் இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருளான அரிசியின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது. சீனியின் விலையும் கூடியது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவு நிறுத்தப் பட்டது. கல்வி, மருத்துவ துறைகளுக்கான அரசு செலவினங்கள் குறைக்கப் பட்டன. தபால், தந்தி, பஸ்/ரயில் போக்குவரத்து கட்டணங்கள் கூட்டப் பட்டன. 

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அரச செலவினைக் குறைப்புகளால் பெருமளவில் பாதிக்கப் பட்டவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள் ஆவர். இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது, "ஏழைகள் தமக்கான உணவை தாமே தேடிக் கொள்ள வேண்டும்" என்று அன்றைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஆணவத்துடன் அறிவித்தார். 

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடிக்கு சம்பந்தமில்லாத, ஏழை உழைப்பாளிகளை தண்டித்த இலங்கை அரசு, அதற்குக் காரணமான பெரும் மூலதன தொழிலதிபர்களுக்கு பரிவு காட்டியது. பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப் பட்டன. வணிகத்தில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு மீட்பு நிதி வழங்கப் பட்டது. 

அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசம், 23 ஜூலை 1953 அன்று ஒரு கொதிநிலைக்கு வந்திருந்தது. கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று திரண்டார்கள். நவீன கால இலங்கை வரலாற்றில், பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடியமை அதுவே முதல் தடவை ஆகும். 

அந்தக் கூட்டத்தை வழிநடத்திய ட்ராட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியும், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தன. 12 ஆகஸ்ட், நாடளாவிய பொது வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தமிழ் முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சி சம்பிரதாயபூர்வமான ஆதரவு தெரிவித்திருந்தாலும், போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் தான் முன்னெடுத்திருந்தன. 

12 ஆகஸ்ட் 1953, இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் நடந்திராத மக்கள் எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, அரசு ஊழியர்களும் வேலைக்கு செல்லவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எல்லோரும் இன, மத பேதமின்றி ஒரே வர்க்கமாக ஒன்றிணைந்து போராடினார்கள். குறிப்பாக தொழிலாளர் வர்க்கம் பெருந்தொகையாக வாழும் கொழும்பு முதல் காலி வரையிலான மேற்குக் கரையோரப் பிரதேசம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது. 

இடதுசாரிக் கட்சிகளால் வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கொழும்பு நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். வீதிகளில் ஒன்று கூடிய பெருந்தொகையான மக்கள், போலீஸ்காரர்களை எதிர்த்து போரிட்டனர். எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த போலிஸ் படை, மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. 

பல இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப் பட்டன. அதனால் கொழும்புக்கும் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப் பட்டன. ரயில் சேவைகள் நிறுத்தப் பட்டன. ரயில் வண்டிகள் தொழிலாளர்கள் வசமாகின. சில இடங்களில் சிறிய பாலங்கள் டைனமைட் வைத்து தகர்க்கப் பட்டன. அரச அலுவலகங்கள் எரிக்கப் பட்டன. 

மக்கள் எழுச்சியின் தீவிரத்தன்மை கண்டு ஆளும்கட்சியான UNP பயந்து ஒளிந்து கொண்டது. இடதுசாரி தொழிலாளர் எழுச்சி அரசைக் கவிழ்த்து விடும், விரைவில் இலங்கை ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று அஞ்சினார்கள். மூவின மக்களினதும் ஆதரவை முற்றாக இழந்து விட்ட இலங்கை அரசாங்கம், கொழும்புத் துறைமுகத்தில் நக்கூரமிட்டிருந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலுக்குள் தஞ்சம் அடைந்தது. 

HMS Newfoundland என்ற பெயருடைய அந்தக் கப்பலில், பிரிட்டிஷ் கடற்படை வீரர்களின் பாதுகாப்புடன் மந்திரி சபை கூட்டப்பட்டது. நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப் பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லுமாறு அரச படையினருக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் இருபது பேரளவில் கொல்லப் பட்டனர். 

ஹர்த்தால் ஒரு நாள் மட்டுமே நடந்திருந்தாலும், இடதுசாரிகளுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை வருடக்கணக்காக தொடர்ந்தது. இடதுசாரி கட்சிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. மார்க்சியவாதிகள் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட்டன. 

கம்யூனிச நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட சஞ்சிகைகள், நூல்கள், சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப் பட்டன. அவை நூலகங்கள், மியூசியங்களுக்கு அனுப்பப் பட்டிருந்தாலும், அரசியலே இல்லாத அறிவியல் துறை சார்ந்த நூல்களாக இருந்தாலும் தடுக்கப் பட்டன. 

பாதுகாப்புத் துறை பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாராளுமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் நேரடியாக பிரதமரிடம் பொறுப்புக் கூறினால் போதும். இனி வருங்காலத்தில், ஹர்த்தால் கலவரங்களை அடக்குவதற்காக ஒரு ரிசேர்வ் படையணி உருவாக்கப் பட்டு, ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. 

1948 - 1956 வரையில், இலங்கையில் ஒரு குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள ஆட்சியாளர்களாக இருந்தாலும், பெரும்பான்மை சிங்கள உழைக்கும் வர்க்க மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சாதியப் படிநிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள கொவிகம சாதியை சேர்ந்தவர்கள். 

இலங்கையில் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவை தொடர்ந்து, அவரது மகன் டட்லி சேனநாயக்க பிரதமர் ஆனார். 1953 வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக அவர் பதவி விலகினார். அந்த இடத்திற்கு, டட்லியின் மைத்துனர் ஜோன் கொத்தலாவல பிரதமராக வந்தார். முன்பொரு தடவை, கொத்தலாவல தானே முதலாவது பிரதமராக வர விரும்பி இருந்தார். 

ஒரு பணக்கார நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த ஜோன் கொத்தலாவல ஒரு தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். அவர் பதவியேற்ற பின்னர், வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நேரம் "தனது பிரதானமான எதிரி கம்யூனிசம்" என்றே அறிவித்திருந்தார். "இந்த நாட்டில் இருந்து கம்யூனிசத்தை முற்றாக அழித்தொழிப்பதே தனது தலையாய கடமை!" என்றும் கூறினார். 

இந்த வானொலி உரைக்கு பின்னர், பிரதமர் கொத்தலாவல ஒரு தடவை, "சிவப்பு சட்டைகளுக்கு எதிராக பச்சை சட்டை அணிந்த இளைஞர் பட்டாளத்தை உருவாக்கப் போவதாகவும்" அறிவித்திருந்தார். ஊடகத்துறையில் கொத்தலாவல விசுவாசிகள் நியமிக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையில் முதல்தடவையாக, அவரது ஆட்சிக் காலத்தில் தான் மக்களின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. 

இலங்கையின் மூன்றாவது பிரதமர் ஜோன் கொத்தலாவல ஒரு கம்யூனிச எதிர்ப்பாளராக மட்டுமல்லாது ஏகாதிபத்திய விசுவாசியாகவும் இருந்தார். முழுக்க முழுக்க ஐரோப்பிய மயப்பட்டிருந்தார். சிங்கள உழைக்கும் வர்க்க மக்களின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு மதிப்புக் கொடுக்க மறுத்தார். இதனால் சிங்கள பௌத்தர்களினதும், மத அடிப்படைவாத பிக்குகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்தது. 

முதலாளிய சார்புக் கட்சியான UNP, இடதுசாரிக் கட்சிகளை  மட்டுமே கணக்குத் தீர்க்கப் பட வேண்டிய எதிரிகளாக கருதி வந்தது. ஆனால், அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமான எதிர்ப்புச் சக்தி அதற்குள்ளே உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளவில்லை. UNP தன்னை ஒரு லிபரல் கட்சியாக காட்டிக் கொண்டாலும், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை கொவிகம உயர்சாதியினரின் மேட்டுக்குடிக் கட்சியாக பார்த்தார்கள். 

1951 ல் பண்டாரநாயக்க UNP இல் இருந்து பிரிந்து சென்று சுதந்திரக் கட்சியை உருவாக்கி இருந்தார். அந்தக் காலத்தில் அது தன்னை ஒரு சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சியாக காட்டிக் கொண்டது. அதனால், அடுத்து வந்த தேர்தல்களில் கொவிகம அல்லாத பிற சாதியினரும், குட்டி முதலாளிய, உழைக்கும் வர்க்க சிங்களவர்களும் பெருமளவில் வாக்களித்தனர். இலங்கையின் போர்க்குணாம்சம் மிக்க தொழிலாளர் வர்க்கத்தை, வெகுஜனவாத (Populist) அரசியலுக்குள் இழுத்து, வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ததில் பண்டாரநாயக்கவுக்கும் பங்குள்ளது. 

பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்கவின் வெற்றியை தொடர்ந்து ட்ராட்ஸ்கிச சமசமாஜக் கட்சியும் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தது. பிற்காலத்தில் குருஷேவிச கம்யூனிச கட்சியும் கூட்டுச் சேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இலங்கையின் உள்ளூர் தரகு முதலாளிகள், சிங்களத் தேசியத்திற்குள் வர்க்கப் போராட்டத்தை சிறுமைப்படுத்தி சிதைத்து விட்டார்கள். இடதுசாரிக் கட்சிகள் இந்த துரோகத்தனத்திற்கு விலைபோனதும், பிற்காலத்தில் அவர்களது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

Saturday, July 24, 2021

இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு

 - ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.

- இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள்... இவ்வாறு பலவகையான தொழிற் பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.

- 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாத போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

- இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 -1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.

- எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

- இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல்: 
  • 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது. 
  • 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
  • 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 
  • 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன. 
  • 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது. 
  • 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன. 
  • 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

- 1977 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.

- ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ- லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.

- 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.

- அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.

- நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.

- 1980 ம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

- அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

- ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப் பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

- 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடைசெய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப் பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.

- வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்று விட்டது.

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002 ம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

- தென்னிலங்கையில் 1987 -1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

- ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்க போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.

- மறு புறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

- தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்க பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.

Thursday, July 22, 2021

1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை

//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டி, இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக விட்டுக்கொடுக்காத புனிதப் போராட்டத்தை நடத்தி, தங்களிடையே வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து, அதன் மூலம் இன்று சிதைந்துள்ள தேசிய ஐக்கியத்தை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும்.// - தோழர் சண்முகதாசன்


1977 இனக்கலவரத்தில், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பங்கிருந்தது. இனவாதப் பேச்சுகள் மூலம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் கடைகள் தாக்க வைத்திருக்கிறார்கள். "திருப்பி அடித்தல்" என்பது சாதாரண அப்பாவி மக்களை அடிப்பதென்று பொருள் அல்ல. எதிரி யார், நண்பன் யார் என்ற புரிதல் இல்லாத படியால் தான் தமிழ்த்தேசிய போராட்டம் பின்னடைவுக்கு உள்ளானது.


தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தொழிலாளி பத்திரிகையில் இருந்து ஒரு பகுதி:
//ஒரு நாட்டில் இனக்கலவரங்களை மூட்டுவோர் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள இனவெறி சக்திகளாகும். இவ் இனவெறி சக்திகளுக்கு அரசியல் ரீதியில் இனவெறி ஊட்டி வளர்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள் ஆவர். இத்தகையவர்களால் உருவாக்கப்படும் இனக்கலவரம் எந்தவொரு நாட்டிலும் கற்பனை செய்யப்படாத கொடூரத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். 

ஒரு இனக்கலவரத்தை தடுப்பதற்குரிய ஒரே வழி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதும் வழங்குவதுமேயாகும். ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கி இன அடக்குமுறையை செய்வதிலும் முதலாளித்துவ சமூக அமைப்பு எப்போதும் முன் நின்று வருவதைக் காண முடியும். 

எனவே இனங்களின் மத்தியில் உள்ள பிணக்குகளையும், ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தை அடக்கும் நிலையை இல்லாமல் செய்வதற்குரிய ஒரே மார்க்கம் இனங்களின் மத்தியில் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தத்தம் இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளை நிராகரித்து உழைக்கும் வர்க்கம் என்ற ரீதியில் ஐக்கியப் பட்டு தமது வர்க்க எதிராளிகளுக்கு எதிராக போரிடுவதே ஆகும்.//



Wednesday, July 21, 2021

ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்

 2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.


நான் முன்பு பல தடவைகள் இதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய போதெல்லாம், பலர் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம், ஐரோப்பாவில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் தாமாகவே அப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள். அதாவது, இரண்டு அமெரிக்க கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய ஆழ்கடலில் தரித்து நிற்பதாகவும், மேலிடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில், இறுதியுத்தம் நடந்த புது மாத்தளன் பகுதியை காட்டுவார்கள். அங்கு இரண்டு பேர் வானொலிப் பெட்டிக்கு அருகில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் சொல்வார்: "இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்!" (அமெரிக்கா இந்தியா என்று மாற்றப் பட்டுள்ளது.) ஆகவே, அமெரிக்க (அல்லது இந்திய) கப்பல் வரும் என்று நம்பித் தான் புதுமாத்தலன் கடற்கரை வரை சென்றிருக்கிறார்கள்? அதாவது, புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்? அதைத் தானே இந்தப் படத்தில் சொல்ல வருகிறீர்கள்?

படத்தில் அந்த வசனத்தை பேசுகிறவர் சோமிதரன் என்ற ஈழத்தமிழர். அதுவும் சாதாரணமான ஈழத்தமிழர் அல்ல. ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்திலும் ஓர் ஊடகவியலாளராக செயற்பட்டவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் செய்தி சேகரித்தவர். மேலும், ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்களை எடுத்தவர். அதைவிட இன்று வரை புலிகளை விமர்சிக்க மறுத்து வருபவர். புலிகள் விட்ட தவறுகளை நேரில் கண்ட போதிலும் அவற்றைப் பற்றி பேச மறுப்பவர். சுருக்கமாக: தன்னை ஒரு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்வதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதவர்.

அப்பேற்பட்ட பெருமைக்குரிய ஒருவரை, அதிலும் ஒரு புலி ஆதரவாளரை, ஜகமே தந்திரம் என்ற புலி எதிர்ப்புப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதிலே ஹைலைட் என்னவென்றால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் காரணம் என்று, அவர்களது தவறை சுட்டிக் காட்டும் வகையில் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்!

புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் மிகவும் சிறிது. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறுபக்கம் நந்திக் கடல். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறுகிய நிலப்பரப்பை அரசு பாதுகாப்பு வலையமாக அறிவித்து இருந்தது. அங்கு சென்ற மக்களை கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தமை அரசின் போர்க்குற்றம். அந்த நேரம் தான் அங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்ற செய்தி பல உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எதிரொலித்தது.

அப்போது இது குறித்து சர்வதேச கண்டனங்கள் எழுந்திருந்த போதிலும், அதையெல்லாம் அரசு அலட்சியப் படுத்தியது. அரசு தானாகவே ஒரு பிரதேசத்தை பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து விட்டு, அந்த இடத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால், பாதுகாப்பு வலையத்தில் புலிகள் மக்களோடு பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்துவதாக அரசு தனது போர்க்குற்றத்தை நியாயப் படுத்தியது.

உண்மையில் புதுமாத்தலன் பகுதியில் தான் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த படியால், இராணுவம் முன்னேறுவதை தடுப்பதற்காக மிக உயரமான மண் அணை அமைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றுவதற்காக கடுமையான சண்டை நடந்தது.

ஜகமே தந்திரம் படத்தில் புதுமாத்தளன் என்று ஓரிடத்தையும், அங்கு இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களையும் காட்டுவார்கள். அங்கு நடந்த விமானக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட அழிவுகளையும், மக்களில் சிலர் கொல்லப் படுவதையும் காட்சியாக அமைத்திருக்கிறார்கள். கமெரா என்னவோ பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சுற்றிப் படமெடுத்தாலும், தூரத்தில் புலிச் சீருடையில் சிலர் நிற்பதாக காட்டுவார்கள். இது எத்தனை பெரிய தவறு என்பது படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா?

அன்று யுத்தம் நடந்த காலத்தில் புது மாத்தளன் பாதுகாப்பு வலையத்திற்குள் அடங்கியது. அரசிடம் பாதுகாப்புத் தேடி வந்த மக்களை, அரச படையினர் குண்டு போட்டு கொன்றமை ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம். நாங்கள் இன்றைக்கும் அந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜகமே தந்திரம் படத்தை எடுத்தவர்கள், அரசு சொன்ன காரணத்தை நியாயப்படுத்துவது போன்று காட்சி அமைத்திருக்கிறார்கள்!

பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்குள் புலிகள் பதுங்கி இருந்தார்கள் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. அதைத் தானே இந்தப் படமும் காட்டுகிறது? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எதுவென்றாலும் நேரடியாக பேச வேண்டும். மொத்தத்தில் ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசு சார்பாக எடுக்கப் பட்ட ஒரு தமிழ்ப் படம்.

Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.