Wednesday, May 27, 2015

நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!


தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 

சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.



****
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்
2. நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
3.தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Monday, May 18, 2015

தமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒரு மீளாய்வு


ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த அதே கால கட்டத்தில், தமிழ் நாடு விடுதலைப் போராட்டமும் நடந்தது என்ற தகவல், இன்றைக்கும் பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.


  1. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு ஈழத் தமிழரின் பிரச்சினையை, தனது வெளிவிவகார கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அது தனது நாட்டிற்குள் எந்த இடத்திலும் இனப் பிரச்சினை கிடையாது என்று உலகை ஏமாற்றிக் கொண்டிருந்தது. 
  2. ஈழத்தில் தமிழ் பூர்ஷுவா வர்க்கம், சிங்கள பூர்ஷுவா வர்க்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இனப் பிரச்சினையில் வட மாகாண குட்டி முதலாளிய இளைஞர்களும் பாதிக்கப் பட்ட பின்னர் தான், அது முப்பதாண்டு கால ஈழப் போராக பரிணமித்தது.


தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன் முதலாக தமிழ் தேசியத்தை நிறுவன மயப் படுத்தியது. அதன் தாக்கம் ஈழத்தில் பல இடங்களிலும் எதிரொலித்தது. இலங்கையில் வாழும் தமிழர்களும், தமிழக சினிமாப் படங்களின் இரசிகர்களாக, தமிழக சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் ஈழத்திற்கும் கடத்தப் பட்டன. ஈழத் தமிழர்கள், திமுக தலைவர் கருணாநிதியை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முதன்முதலாக தமிழீழக் கோரிக்கை வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தை சுவீகரித்து இருந்தது.

தமிழகத்து பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்த திமுக, தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டதும், அதற்கு பதிலாக உடனடியாக ஒரு மாற்று இயக்கம் தோன்றவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த தமிழரசன் குழுவினர் தமிழ்நாடு விடுதலையை தமிழ் பாட்டாளி வர்க்கக் கோரிக்கை ஆக்கினார்கள். எழுபதுகளுக்குப் பின்னர் ஈழத்தில் எழுந்த குட்டி முதலாளிய வர்க்கத்தின் எழுச்சியின் தீவிரத்திற்கு, த.வி.கூ. வினால் முகம் கொடுக்க முடியவில்லை. அதனால், விரைவிலேயே அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப் பட்டது. ஆனால், ஈழத்தில் எழுந்த மாற்று அரசியல் அமைப்புகள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவித்தன.

எழுபதுகளில் சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டம், வட இலங்கையை சேர்ந்த குட்டி முதலாளிய வர்க்க இளைஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தமிழகத்திலும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அது போன்ற எழுச்சியை உண்டாக்கி இருந்தாலும், அதன் பலன்களை ஏற்கனவே திமுக அறுவடை செய்து விட்டிருந்தது. ஈழத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சி, மிதவாத தமிழ் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. பாராளுமன்ற பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில், த.வி.கூ. தீவிரவாத இளைஞர்களை தனது அடியாட்படையாக வைத்திருக்க விரும்பியது. ஆயினும், தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் பரவிய இடதுசாரிக் கருத்துக்கள் தான், மிதவாத அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டியது எனலாம்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும், எழுபதுகளின் தொடக்கத்தில் தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியும், ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் விதைத்தது. அதே மாதிரி, ஈழப் போராட்ட இயக்கங்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிரொலிகளை உண்டாக்கிய நேரம், தமிழ் நாடு விடுதலைப் படை தோன்றியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பௌதிகவியல் விதிகளுக்கு அமைய அனைத்தும் நடந்துள்ளன. அந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அரசுகள் புரிந்து கொள்கின்றன. அதனால் தான், முப்பதாண்டு கால போருக்குப் பின்னர், மிகக் கொடூரமாக புலிகளை அழித்து, தெற்காசிய பிராந்திய விடுதலை இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறுவதும், அதன் அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாடு விடுதலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட கருத்தாக அதனை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் தலைமை அது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருந்தது. 

இடதுசாரி இயக்கங்கள் கூட, இந்திரா காந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்துமளவிற்கு, இந்தியாவின் கைப் பொம்மைகளாக இயங்கினார்கள். ஆயுதங்கள், நிதிகளை வழங்கி, ஈழ விடுதலை அமைப்புகளை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இறுதியில், இந்தியா விரும்பிய நேரம் அந்த இயக்கங்களை அழிப்பதற்கு வழி வகுத்தது.

ஈழத்தின் விடுதலைப் போராட்டம், தமிழ் பேசும் பூர்ஷுவா வர்க்க கோரிக்கையாக தொடங்கினாலும், அது குட்டி முதலாளிய இளைஞர்களினால் வழிநடாத்தப் பட்டு, பாட்டாளி வர்க்க மக்களின் கைகளில் வந்து சேர்ந்தது. பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவின்றி, முப்பதாண்டுகள் வெற்றிகரமாக போராட முடிந்திருக்காது என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்தப் "பெரும்பான்மை மக்கள்" யார்? ஈழத்தின் தமிழ் உழைக்கும் மக்கள் அல்லவா? 

உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த போராளிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தான் உருவானார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு பலியான, வறுமையினால் பாதிக்கப் பட்டவர்கள், அதாவது இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராடினார்கள். அந்த மக்களை நிறுவன மயப் படுத்துவதும், ஓர் இனத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வைப்பதும், ஈழத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும், அதற்கு அயலில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும்.

Friday, May 15, 2015

USSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு! - மக்கள் நீதிமன்றத் தீர்ப்பு


2010 - 2011 ம் ஆண்டு, ரஷ்யத் தொலைக்காட்சியில், கோடிக் கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. சோவியத் யூனியன் காலத்தில் "குற்றங்களை" புரிந்த கம்யூனிசத் தலைவர்கள் தண்டிக்கப் படவில்லை என்ற ஆதங்கத்தில், தற்கால முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தினர் அந்த நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்தி இருந்தனர்.

பெரும்பான்மையான ரஷ்ய மக்கள், "கம்யூனிசத்தை எதிர்க்கிறார்கள்... ஸ்டாலினிச கொடுங்கோன்மையை வெறுக்கிறார்கள்..." என்ற எண்ணத்தில் அந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டிருக்கலாம். சோவியத் கால கம்யூனிஸ்ட் தலைவர்களின் "குற்றங்களை ஆதாரங்களுடன் நிரூபிப்பதற்கு" வழக்கறிஞர்கள் குழு ஒன்று தயாராக இருந்தது. பழைய KGB ஆவணங்களை எல்லாம் அதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். 

"சூட் விரேமேனி" (Sud Vremeni : நீதிபதியின் நேரம்) என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தான் நீதிபதிகளாக தீர்ப்புக் கூற வேண்டியவர்களாக இருந்தனர். அதாவது, ஜூரிகள் மாதிரி பார்வையாளர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் போட்டு, ஒரு குறிப்பிட்ட தலைவரை குற்றவாளி என்று தீர்ப்புக் கூற முடியும்.

நீதிபதிகளுக்கு(மக்களுக்கு) தேவைப்படும் அனைத்து ஆதாரங்களையும், பழைய சோவியத் ஆவணங்களில் இருந்து எடுத்துக் காட்டினார்கள். வழக்கறிஞர்கள் தமது திறமையை எல்லாம் திரட்டி, ஸ்டாலின் போன்றவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னர், மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா?

"கூலாக் எனும் பணக்கார விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலினின் போர், பேரழிவுகளை உண்டாக்கியது", என்பன போன்ற ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னரும், பெரும்பான்மையான (78%) மக்கள் ஸ்டாலின் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்:
ஸ்டாலினின் கூட்டுத்துவ பண்ணை (Collective Farming) அமைப்பு, விவசாயிகள் மேல் பலவந்தமாக திணிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அது தான் சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது மோசமானதாக இருந்தாலும், சமுதாயத்திற்கு அத்தியாவசியமானது. அதனால், நியாயமானது. 
அதற்கு மாறாக, வெறும் 22% பார்வையாளர்கள் மட்டுமே அவையெல்லாம் குற்றங்கள் என்று தீர்ப்பளித்தனர்.

2 ம் உலகப்போர் காலத்தில், ஸ்டாலின் - ஹிட்லர் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் பற்றி, எதிர்மறையான தகவல்கள் தான் மேற்கத்திய நாடுகளினால் பரப்பப் பட்டு வந்தன. அதாவது, "ஸ்டாலினும், ஹிட்லரும் கூட்டாளிகள் என்பதை ஓர் ஒப்பந்தம் மூலம் நிரூபித்து விட்டார்கள்" என்று, மேற்குலகில் விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் பட்டது. அதையே, இன்றைய ரஷ்ய முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் எதிரொலிக்கின்றது. ஆகவே, அதுவும் மக்கள் தீர்ப்புக்கு விடப் பட்டது. 

அது ஒரு போர் தவிர்ப்பு ஒப்பந்தம் என்ற உண்மை தெரியாத அளவிற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். அந்த ஒப்பந்தம், அந்தக் காலகட்டத்தில் அவசியமாக இருந்தது என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள். வெறும் 9% மட்டும், அது 2 ம் உலகப்போருக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.

மேற்கத்திய சரித்திர நூல்களும், ஊடகங்களும், "ஸ்டாலினிசத்தை அம்பலப் படுத்திய" குருஷேவ்வின் ஆட்சிக் காலத்தை, ஆஹா...ஓஹோ... என்று புகழ்கின்றன. அதே நேரம், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த, பிரெஷ்னேவ் காலகட்டத்தை குறை கூறுகின்றனர். அதாவது, "சீர்திருத்தவாதி" குருஷேவுக்கு மாறாக, பிரெஷ்னேவ் ஒரு கடும்போக்காளர், "ஸ்டாலினிச சர்வாதிகாரி" என்று விமர்சிக்கின்றனர். 

ஆனால், பிரெஷ்னேவ் பற்றி, ரஷ்ய மக்கள் என்ன தீர்ப்புக் கூறினார்கள் தெரியுமா? பிரெஷ்னேவ் காலகட்டம், மக்களுக்கு பல வசதி வாய்ப்புகளை உருவாக்கிய பொற்காலம் என்று, 91% பார்வையாளர்கள் தீர்ப்பளித்தனர்.

இறுதியாக சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றிய வாக்கெடுப்பு வந்தது. "சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர், ரஷ்ய மக்கள் சுத்ரந்திரக் காற்றை சுவாசித்தார்கள். கம்யூனிச சர்வாதிகாரத்தை நிராகரித்து, மேற்கத்திய ஜனநாயகத்தை தழுவிக் கொண்டார்கள்...." இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. 

சோவியத் கால "கம்யூனிச சர்வாதிகாரத்தின் கீழ் அவலங்களை அனுபவித்த" ரஷ்ய மக்கள் என்ன சொல்கிறார்கள்? சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது ஒரு மாபெரும் இழப்பு. அது எமது நாட்டிற்கு ஏற்பட்ட பேரவலம் என்று 91% மக்கள் தீர்ப்புக் கூறினார்கள்!


வீடியோ: ரஷ்ய மக்கள் நீதிமன்றமான Sud vremeni தொலைக்காட்சி நிகழ்ச்சி. 
இந்த வீடியோவின் தலைப்பு ரஷ்ய மொழியில்: 
Сталинская система и 1941 год (1941 ம் வருடத்திய ஸ்டாலினிச அமைப்பு): 

Thursday, May 14, 2015

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புரட்சி


ரஷ்யாவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஸ்டாலின் சிலை. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், சிலை உடைப்புக் காட்சிகளை காட்டி, கம்யூனிசம் புதைகுழிக்குள் சென்று விட்டது என்று பலர் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால், அங்கே புதிது புதிதாக முளைக்கும் சிலைகள் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ரஷ்யாவின், வடக்கு ஒசேத்தியா மாநிலத்தில், லிபெத்ஸ்க் (Lipetsk) நகரில் இந்த ஸ்டாலின் சிலை புதிதாக நிர்மாணிக்கப் பட்டது. (http://gorod48.ru/news/314858/) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் லிபெத்ஸ்க் கிளையினர், சிலையை நிர்மாணிப்பதற்கு நகர சபை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி இருந்தனர். எனினும், கடைசி நேரத்தில் மறுப்புத் தெரிவித்த நகர சபை, சிலையை தெருவில் வைக்காமல், கட்சி அலுவக வளாகத்தினுள் வைக்குமாறு அறிவித்தனர். எனினும், அந்த அறிவித்தல் பிந்தி வந்த படியால், ஏற்கனவே தீர்மானித்த இடத்தில் சிலை வைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.

சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.

"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்களுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.

ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.

Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.

முப்பதுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது, அதனோடு சேர்ந்திருந்த ஐரோப்பிய பொருளாதாரமும் சரிந்தது. அதே கால கட்டத்தில், ஸ்டாலின் ஆட்சி செய்த சோவியத் யூனியனின் சோஷலிச பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்தது. அன்று ரஷ்ய ரூபிளின் பெறுமதி, அமெரிக்க டாலரை விட உயர்ந்திருந்தது.

அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கையில், சோவியத் யூனியனின் பொருளாதாரம் கிறங்க வைக்கும் அளவிற்கு துரித கதியில் வளர்ந்தது. நாடு முழுவதும் புதிய புதிய தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், கால்வாய்கள், ரயில் பாதைகள் நிர்மாணிக்கப் பட்டன. ஒன்றுமில்லாத கட்டாந்தரையில் இருந்து புதிய பிரமாண்டமான நகரங்கள் தோன்றின. மேற்கத்திய அறிவுஜீவிகள் கூட, சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சியை நேரில் பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தனர். மொஸ்கோ நகரில் மக்களின் பொதுப் போக்குவரத்துக்கான மெட்ரோ ரயில் நிலையங்கள், மாளிகைகள் போன்று கட்டப் பட்டன.

சோவியத் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டம், பெருமளவு தொழில்நுட்ப நிபுணர்கள், முகாமையாளர்களை எதிர்நோக்கி இருந்தது. அரச திட்டமிடல் அமைச்சான Gosplan, 1930 ம் ஆண்டு மட்டும் 435000 பொறியியலாளர்கள் தேவைப் படுவதாக அறிவித்திருந்தது.

சோவியத் பொருளாதார வளர்ச்சியை, ஸ்டாலின் தனது சமூகப் புரட்சிக்கான களமாக பயன்படுத்த விரும்பினார். புதிய தொழில்நுட்ப நிபுணர்கள் பாட்டாளி வர்க்கப் பின்னணியை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதன் படி, தொழிலாளர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்கப் பட்டனர். ஆரம்பப் பாடசாலைக் கல்வியை கூட முடித்திராத சாதாரண தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து, பொறியியளாராக அல்லது முகாமையாளராக வர முடிந்தது.

சோவியத் யூனியன் முழுவதும், கோடிக் கணக்கான தொழிலாளர்கள், தாம் வேலை செய்த தொழிலகங்களை விட்டு விட்டு படிக்கச் சென்றார்கள். அவர்கள் ஸ்டாலினின் முற்போக்கான அபிரிவிருத்தித் திட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களே ஸ்டாலினிச அரசின் ஆதரவுத் தளமாக இருந்தனர். ஏனென்றால், அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் என்றுமில்லாத முன்னேற்றம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அன்று உருவாகிய பாட்டாளிவர்க்க புத்திஜீவிகள் "Vydvizjentsy" என்று அழைக்கப் பட்டனர்.

(தகவலுக்கு நன்றி: "Revolutionary Russia", 1891 - 1991, by Orlando Figes)

Tuesday, May 12, 2015

நெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறுத்தப் போராட்டங்களும்


நெதர்லாந்தில், டில்பூர்க் (Tilburg) எனும் நகரத்தில், அடிப்படை வருமானம் தொடர்பான சமூகப் பரிசோதனை ஒன்று நடைபெறவுள்ளது. ரோபோ மயப்படுத்தல் காரணமாக, வருங்காலத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால், ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும். அதற்கு ஏற்றவாறு சமுதாய அமைப்பையும் மாற்ற வேண்டி இருக்கும்.

இன்று வரையில், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வேலையற்று இருப்பவர்களுக்கு அரச உதவித்தொகை வழங்கப் படுகின்றது. ஒரு மனிதன் வாழ்வதற்கு தேவையான மாதாந்த உதவித் தொகை அது. அந்த உதவித்தொகை பெறுவோர் வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்ல, மேலதிக பணம் சேமிப்பில் வைத்திருக்க முடியாது. எந்தநேரமும் அரச கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும். இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

டில்பூர்க் நகரசபை, தற்காலிகமாக உதவித்தொகை பெறும் நூறு பேரை தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்யவுள்ளது. அதன் படி, அவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப் பட மாட்டாது. அவர்கள் மீதான அரச கண்காணிப்பும் நிறுத்தப் படும். மேலும், பகுதிநேர வேலை பார்த்து சிறிது பணம் கூட சம்பாதித்தாலும், அதை வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். (தற்போதைய நடைமுறையில், சம்பளப் பணத்தின் அளவுக்கு உதவித்தொகை குறைக்கப் படும்.)

இந்தப் பரிசோதனை முயற்சியின் நோக்கம் என்ன? இதனால் வேலையற்றவர்களின் மனநலம், உடல்நலம் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறார்கள். (தற்போதைய நிலைமையில், நிறையப் பேர் மன உளைச்சலால், அதனோடு சேர்ந்த உடல் உபாதைகளினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.)

அழுத்தங்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால், ஒருவர் சுதந்திரமாக தனது நன்மை குறித்து சிந்திக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால், அவராகவே ஏதாவது ஒரு வேலையை தேடிக் கொள்வதற்கோ, அல்லது நேரத்தை பயனுள்ள முறையில் கழிப்பதற்கோ முன்வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அடிப்படை வருமானம் தொடர்பான பரிசோதனை முயற்சி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ள, மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நடைமுறைப் படுத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.

ஐந்தாண்டு கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், தற்போது வளர்ந்து வருவதாக சொல்லப் படுகின்றது. அதே நேரம், அடிக்கடி வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன. அண்மையில், ஜெர்மன் ரயில்வே ஊழியர்களும், நெதர்லாந்து காவல்துறையினரும் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்!

பொருளாதாரம் வளரும் நேரத்தில் எதற்காக வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தான் அதற்குக் காரணம். நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நேரம், முதலாளிகள் பல சாக்குப் போக்கு சொல்லி சம்பளத்தை அதிகரிக்க மாட்டார்கள். ஆனால், பொருளாதார வளர்ச்சிக் காலத்தில் அது எதுவும் செல்லுபடியாகாது. இலாபத்தில் தமக்கும் பங்கு வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் இலாப விகிதம், வருடத்திற்கு எந்தளவு அதிகரிக்கின்றது என்ற துல்லியமான விபரத்தை, பெரிய இடதுசாரி தொழிற்சங்கங்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றன. அதைக் காட்டி, தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று பேரம் பேசுகின்றன. முதலாளிகள் இணங்க மறுக்கும் பட்சத்தில், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

அவ்வாறு தான், நெதர்லாந்து காவல்துறையும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் குதித்தது. அதைத் தடுப்பதற்காக அரசு நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. "அத்தியாவசிய சேவையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது" என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. ஆனாலும், அந்த தீர்ப்பையும் மீறித் தான், காவல்துறையினர் வேலைநிறுத்தம் செய்தனர். நீதிமன்றம் தடை போட்டு விட்டது என்பதற்காக உரிமையை விட்டுக் கொடுக்க முடியுமா?

ஜெர்மனியில் வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. ஒவ்வொரு தொழிற்துறையும் ஒன்றை அடுத்து மற்றொன்று வேலைநிறுத்தத்தில் குதித்து வருகின்றன. பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டாலும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், போராடாமல் வாழ்க்கை இல்லை என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது. உலகில் எந்த முதலாளியும் தானாக சம்பளத்தை உயர்த்தித் தர மாட்டான். அதற்கு நிறுவனமயப் பட்ட தொழிற்சங்க நடவடிக்கை அவசியம்.


நெதர்லாந்தில் கருத்து சுதந்திரம் படும் பாடு

கடந்த வருடம் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் Fuck the King என்று கோஷம் எழுப்பிய ஆர்வலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து, 6-5-2015 அன்று சில இனந்தெரியாத நபர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள அரச மாளிகை சுவரில், Fuck the King என்று எழுதி இருந்தனர். நகரசபை நிர்வாகம், உடனே அந்த சுலோகத்தை அழித்து விட்டது. 

மேற்குலகில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது. நம்புங்கப்பா!

Thursday, May 07, 2015

என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...


கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை வாசித்தவர்கள் மிகக் குறைவு. ஆனால் உலகில் அது ஏற்படுத்திய மாற்றங்கள் நிறைய உண்டு. இன்றைக்கும், "புத்தகம் புத்தகமாக வாசிக்க எமக்கு நேரமில்லை" என்றும், "எங்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை, சாதாரண மக்களுக்கு எதுவுமே புரியப் போவதில்லை" என்றும், மூலதனம் நூல் பற்றி அறிவுஜீவித் தனமாக நையாண்டி செய்வோர் பலருண்டு.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பாவில், மூலதனத்தின் மூலப்பிரதி ஜெர்மன் மொழியில் வெளியான காலத்திலும், அதிகார வர்க்கத்தினர் அப்படித் தான் கருதி வந்தனர். 1872 ம் ஆண்டு, அதன் முதலாவது மொழிபெயர்ப்பு ரஷ்ய மொழியில் வெளியானது.

மூலதனம் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், சார் மன்னனின் தணிக்கை சபையினர் பார்வைக்கு சென்றது. அவர்கள் அந்த நூலை தடை செய்யாமல் விற்க அனுமதித்தார்கள். அதற்குக் காரணம், "அன்றைய ரஷ்யாவில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதிலும் சிறிய எண்ணிக்கையிலான படித்தோர் மட்டுமே மூலதனம் நூலை வாசிக்கப் போகிறார்கள். அப்படியே வாசித்தாலும், அது ஒரு சிலருக்கு மட்டுமே புரியப் போகின்றது."

அப்படி வாசித்துப் புரிந்து கொண்ட "ஒரு சிலர்" மிகப் பெரிய புரட்சியை நடத்துவார்கள் என்று, அன்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது ஒரு பழமொழி.

"தொழிலாளர்கள், கடின உழைப்பின் மூலம், தமது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு, தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிலேயே வாய்ப்புகள் உள்ளன. அதனால், புரட்சி அவசியமானது அல்ல!" இவ்வாறு கூறும் பலரை நமது சுற்றாடலில் கண்டிருப்போம். புரட்சிக்கு முந்திய ரஷ்யாவிலும் அப்படியானோர் இருந்தனர். சில மார்க்சியவாதிகளும், குறிப்பாக சமூக- ஜனநாயகவாதிகள், அத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். அன்று அவர்கள் "பொருளாதாரவாதிகள்" (Economists) என்று அழைக்கப் பட்டனர்.

அன்று லெனின் கூட ரஷ்ய சமூக- ஜனநாயகக் கட்சியில் தான் இருந்தார். அதுவே அன்று சார் மன்னராட்சிக்கு எதிரான, பிரதானமான மார்க்சியக் கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் பலர், பிற ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்.1903 ம் ஆண்டு, லண்டனில் நடந்த இரண்டாவது கட்சி மகாநாட்டில், ஒரு முக்கியமான பிளவு ஏற்பட்டது.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற அரசமைப்பை விரும்பிய பிரிவினர், மிகத் தெளிவான சமூக- ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் மென்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். ஏற்கனவே, பொருளாதாரவாதிகளும் மேற்கத்திய ஜனநாயகப் பாதை சிறந்தது என்று நம்பினார்கள். மேற்கத்திய ஜனநாயக அமைப்பே சிறந்தது. அதற்குள், தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம், தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களது கொள்கை.

லெனின் தலைமையில் பிரிந்தவர்கள் போல்ஷெவிக் என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் தொழிலாளர் வர்க்கம் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி அவசியம் என்று நம்பினார்கள். இது தொடர்பாக நடந்த விவாதங்களை, லெனின் "என்ன செய்ய வேண்டும்?" என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"என்ன செய்ய வேண்டும்?" இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்ற நூலாகும். "தற்போதுள்ள முதலாளித்துவ அமைப்பிற்குள், தேர்தல் ஜனநாயகம் மூலம் சில சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியாதா?" "மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் சிறந்தது அல்லவா?" இது போன்ற சந்தேகங்களை எழுப்புவோருக்கான பதில்கள் அந்த நூலில் உள்ளன. மின் நூலை இணையத்தில் தரவிறக்கிக் கொள்வதற்கு: http://www.padippakam.com/document/M_Books/m000016.pdf

ரஷ்யாவில் 1917 அக்டோபரில் நடந்த போல்ஷெவிக் கட்சியினரின் புரட்சி, ஒரு சதிப்புரட்சி அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு என்றே மேற்கத்திய பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அதே ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்தது தான், உண்மையான புரட்சி என்றும் கூறுகின்றன. பாடசாலைகளில் சரித்திர பாடம் படிக்கும் மாணவர்கள், பரீட்சையில் கேட்கப் படும் கேள்விகளுக்கு அப்படித் தான் விடை எழுத வேண்டும். மேற்குலக நாடுகள், அக்டோபர் புரட்சியை நிராகரித்து விட்டு, பெப்ரவரி புரட்சியை வரவேற்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

ஜனநாயகம் மாதிரி, புரட்சி என்ற சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சி மட்டுமே பலரால் புரட்சி என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அவ்வாறாயின், அண்மைக் காலத்தில் துனீசியாவிலும், எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகளும் புரட்சிகள் தான். ஆனால், அதற்குப் பின்னர், அந்த நாடுகளில் ஆட்சியாளர் மாறியதைத் தவிர, பெரியளவு சமூக மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஷ்யாவில் 1917 பெப்ரவரியில் நடந்த புரட்சியில், சார் மன்னனின் எதேச்சாதிகாரம் வீழ்த்தப் பட்டது. (எகிப்து, துனீசியா சர்வாதிகாரிகளின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) அப்போதே சோவியத் அமைப்புகள் தோன்றி விட்டன. தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து, கணிசமான அளவு வெற்றிகளையும் பெற்றிருந்தார்கள். 

அது மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் கணிசமான அளவு மார்க்சியர்கள் அமர்ந்திருந்தார்கள். ஆயினும், அந்த மார்க்சியர்கள் மேற்கு ஐரோப்பிய சமூக- ஜனநாயகக் கட்சியினர் ஆவர். மென்ஷேவிக்குகள், சோஷலிச புரட்சியாளர்கள் போன்ற கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவுஜீவிகளாக இருந்தனர். அதனால், அவர்கள் இன்றுள்ள பல முற்போக்கு பூர்ஷுவாக்கள் போன்றே காணப் பட்டனர்.

சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றம், சார் மன்னனை பெயரளவில் பாதுகாத்து வைத்திருந்தது. சோஷலிசம் தோன்றுவதற்கு முன்னர், முதலாளித்துவ வளர்ச்சி அவசியம் என்று கருதியதால், ஏற்கனவே இருந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. அது மட்டுமல்ல, தொழிலாளர்களின் சோவியத் என்ற அமைப்பு தனியாக இயங்கிய போதிலும், அதற்கு எந்த அதிகாரங்களையும் கொடுக்கவில்லை.

அத்தகைய நிலைமையில் தான், அக்டோபர் மாதம் போல்ஷெவிக் கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அன்றைய தலைநகரான பெட்ரோகிராட்டில் (சென் பீட்டர்ஸ்பேர்க் என்பது ஜெர்மன் மொழிப் பெயர் என்தால், ரஷ்ய தேசியவாதிகளினால் அந்தப் பெயர் மாற்றப் பட்டிருந்தது.), அந்த ஆட்சிமாற்றம் நடைபெற்ற நேரம், பெரும்பான்மை மக்களுக்கு நடந்தது எதுவும் தெரியாது என்று சொல்லப் படுகின்றது. சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள குளிர்கால அரண்மனை மீதான தாக்குதலில், பெரியளவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த அரண்மனையில் இருந்தது, கெரன்ஸ்கி தலைமையிலான சமூக- ஜனநாயக அரசாங்கம் தான்.

உண்மையில், அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் புரட்சி ஆரம்பமானது. செம்படையின் முன்னோடி அமைப்பான செம் பாதுகாவலர் படையில் தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். பாராளுமன்றத்தினுள் நுளைந்த செம் பாதுகாவலர்கள், அறிவுஜீவி பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியே விரட்டினார்கள். அதன் மூலம், அன்று வரையில் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்திடம் இருந்த அரசு அதிகாரம், தொழிலாளர்களின் அமைப்பான சோவியத்திற்கு மாற்றப் பட்டது.

அக்டோபர் புரட்சியின் பின்னர் என்ன நடந்தது? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த மேட்டுக்குடியினர் ஒன்றுமில்லாதவர் ஆக்கப் பட்டனர். கொள்ளைக்காரரக்ளிடம் கொள்ளையடிப்பது தவறில்லை என்று உணர்ந்த மக்கள், பணக்காரர்களின் வீடுகளை சூறையாடினார்கள். காலங்காலமாக செல்வத்தில் வாழ்ந்து வந்த பிரபுக்கள், நிலவுடைமையாளர்கள், தங்களது மாளிகை போன்ற வீடுகளில் ஏழை, எளிய மக்களை குடியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக வாழ்ந்த மேட்டுக்குடியினர், தம்மிடம் இருந்த சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உழைக்காமல் சொகுசாக வாழ்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர் கடினமான வேலைகளை செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில இடங்களில், அவர்களைப் பிடித்து மலசல கூடம் கழுவ வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. செல்வந்தர்கள் தம்மிடம் இருந்த வைரங்களை விற்று குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு கஷ்டம் ஏற்பட்டது. பல பணக்காரர்கள், சொத்துக்களை எல்லாம் விற்று விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்கள்.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு தான், கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய ஸ்தாபனம் அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்றது. வழமையான அரசியல் கட்சிகளுக்கு மாறாக, அடித்தட்டு மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி உறுப்புரிமை வழங்கப் பட்டது. அது வரை காலமும் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த, ஆலைத் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், போன்றவர்களுக்கு உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. மேட்டுக்குடியினரால் "தோட்டக் காட்டான்கள்" என்று இழிவு படுத்தப் பட்டவர்கள், பாராளுமன்ற ஆசனங்களில் சென்றமர்ந்து கொண்டார்கள்.

இது போன்றதொரு வர்க்கப் போராட்டத்தை தான் லெனின் கனவு கண்டார். அதைச் செயற்படுத்துவதற்கு பல கோட்பாடுகளை எழுதினார். அதனால் தான், அது இன்றைக்கும் மார்க்சிய- லெனினிச சித்தாந்தம் என்று அழைக்கப் படுகின்றது. லெனின் தலைமையிலான போல்ஷெவிக் கட்சியினர், வர்க்கப் போராட்டம் தற்போது தேவையில்லை என்று நினைத்திருந்தால், இன்றைக்கும் ரஷ்ய பாராளுமன்றத்தில் ஒரு கட்சியாக அமர்ந்திருப்பார்கள். ரஷ்யாவும் இத்தாலி, ஸ்பெயின் மாதிரி, ஒரு பின்தங்கிய முதலாளித்துவ நாடாக இருந்திருக்கும்.

Wednesday, May 06, 2015

யாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி 


யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தப் படத்தை "இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு "அறிவு(?)ஜீவி" பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார்:

//இளம் கம்யூனிஸ்ட்டுகள்! ஹ... ஹா... நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு கம்யூனிசம் விளங்கி அதில பற்று வந்து வீதியில் இறங்கிவிட்டார்கள்! வாவ்// 

அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஐயம் இட்டு உண், மண் பறித்து உண்ணேல், கொள்ளை விரும்பேல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதெல்லாம் நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு, பாடசாலைகளில் படிப்பிக்கிற கம்யூனிச தத்துவங்கள் என்பது, அந்த "அறிவு(?)ஜீவிக்கு" புரியாமல் போனது ஏனோ?


"யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிலான இந்தப் படத்தை பார்த்து விட்டு "சிறுவர் துஷ்பிரயோகம்" என்று அலறித் துடிக்கும் போலி மனிதாபிமானவாதிகளுக்கு:

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இலவசமாக வகுப்பெடுக்கும் ஆசிரியப் பெருந்தகைகள், அதனை முதலில் கோயில்கள், தேவாலயங்களில் இருந்து தொடங்குவது நல்லது. குறைந்த பட்சம் தங்களது குடும்பத்தையாவது சீர்திருத்திக் காட்ட வேண்டும்.

இதிலே எத்தனை சிறுவர்கள், தேநீர்க்கடைகள், உணவகங்களில் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பார்கள்? நெல் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில், நிலவுடமையாளர்களினால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருப்பார்கள்? அப்போதெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அந்தசிறுவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டும் பொங்கி எழுந்து எதிர்ப்பது ஏனோ? சிறுவர்களின் ஜனநாயக உரிமைகளை, அவர்களது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது, சர்வாதிகாரம் என்பது அவர்களுக்கு தெரியாதோ?

முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் நாய்கள், குரைப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.

******

ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரை பயமுறுத்தும் கம்யூனிச ஆவி!

ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பலரை, அண்மைக் காலமாக ஓர் ஆவி மிரட்டி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. "கம்யூனிச ஆவி" என்று அழைக்கப்படும் ஓர் அமானுஷ்ய சக்தி, குறிப்பாக படித்த, வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றதாம். 

கம்யூனிச ஆவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிவப்பு நிறத்தை எங்கே கண்டாலும் அலறுகின்றனராம். அதனால், அவர்கள் சிவப்பு வர்ண ஆடைகள், சிவப்பு நிறப் உணவுப் பதார்த்தங்கள், ஆகியனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சிவப்பு விழுந்ததும், அலறியடித்துக் கொண்டு வண்டி ஓட்டி விபத்துக்குள்ளான நபர்கள் பலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதற்கென அமெரிக்காவில் இருந்து விசேடமாக அழைத்து வரப் பட்ட, உலகிலேயே அதிக பீஸ் வாங்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பார்வையிட்டுள்ளார். 25 வருடங்களுக்கு முன்னர், இதே கம்யூனிச ஆவி ஐரோப்பிய மக்களை பிடித்தாட்டியதாகவும், அதனை நேட்டோ படையினர் பிடித்து சீசாவில் அடைத்து, அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். 

25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ள கம்யூனிச ஆவி, முன்தோன்றிய மூத்தகுடி தமிழினத்திற்குள் புகுந்தது எப்படி என்பதை பலரும் ஆராய்ந்து வருகின்றனர். பல அரசியல் கருத்து முரண்பாடு கொண்டவர்களும், கம்யூனிச ஆவியை விரட்டுவதற்காக வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளனர். நேற்று வரையிலும், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, தீவிர புலி ஆதரவாளர்களும், தீவிர ராஜபக்சே ஆதரவாளர்களும், தமது தசாப்த கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கம்யூனிச ஒழிப்புப் போரில், சிறிலங்கா பேரினவாத அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, வலதுசாரி- தமிழ் தேசியவாதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க தலைமைப் பூசாரி ஜோன் கேரியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள், தாம் இந்த விடயத்தில் இணக்க அரசியல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சிங்களவன், தமிழன் என்று இனப் பகை கொண்டு போரிட்டாலும், மேட்டுக்குடி வர்க்கம் என்ற அடிப்படையில் தாம் ஒரே இனம் என்று, சிங்கள- தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் கூறினார்கள்.

******

டைனோசர் பார்த்த குருடர்கள் 

மெத்தப் படித்த நண்பர் ஒருவர், "கம்யூனிசம் ஒரு டைனோசர் காலத்து சமாச்சாரம்" என்ற பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு நான் "யானை பார்த்த குருடர்கள்" கதை சொல்லி விட்டு, ஒருவேளை அவர் பார்த்த கம்யூனிச யானை டைனோசராக தெரிந்திருக்கும் என்று பதில் கூறினேன்.

அவரது கேள்விகள் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறி விட்டு, இப்போது நான், நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் முதலாளித்துவம் பற்றிய சில கேள்விகளை, உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு இன்னமும் ஆளைக் காணோம். 

 ஒரு வேளை, ஜூராசிக் பார்க்கில் டைனோசர் சம்பந்தமான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் போலும்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

Tuesday, May 05, 2015

கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை

தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில், முன்னொருபோதும் இல்லாதவாறு, கம்யூனிசம் குறித்த தேடல் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலானோர் அதனை தமக்கு நன்மை தரும் விடயமாக பார்த்தாலும், ஒரு சிறு பிரிவினர் தமக்கு ஆபத்தானது என்ற கோணத்தில் பார்க்கின்றனர். வசதியாக வாழும் படித்த மத்தியதர வர்க்க இளைஞர்களே அவ்வாறு எதிர்மறையாக பார்க்கின்றனர் என்பதும் தெளிவானது.

முகநூலில் கோபிகிருஷ்ணா என்ற நண்பருக்கும், எனக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கே தொகுத்து தருகிறேன். எதிர்காலத்தில் கம்யூனிசம் குறித்த தேடலுடன் வரும் இளைஞர்களுக்கும் அது உதவும்.

 ---------------------------------------------------------------------------------------------

 கோபி கிருஷ்ணாவின் நிலைத் தகவலில் இருந்து ஒரு பகுதி:

//ஊடகவியலும், கம்யூனிசமும் பலவகையில் ஒன்று. இரண்டுமே புனிதமானவை, உயர்ந்தவை, மக்களுக்கானவை என்றெல்லாம் சொல்லப்படுது. ஆனால், நாங்கள் காண்பது எல்லாம் அதற்கு முழு எதிர்மாறாத் தான் இருக்கின்றன. அவை என்னவாறு புனிதம், சிறப்பானவை எண்டு கேட்டால் "1930-இல...." என்ற கதைகள் தான் சொல்லப்படுமே தவிர, அவற்றின் நிகழ்காலத்தப் பற்றிக் கதைப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு உலக வறுமையும், சீனாவில இருக்கிற அப்பிள் தொழிற்சாலை சிறுவர் ஊழியர்களும் உதாரணம் என்றால், ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.//

பதில்: கம்யூனிசம் இல்லாவிட்டால், சர்வசன வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை எல்லாம் இன்றைக்கும் கனவாக மட்டுமே இருந்திருக்கும். உங்களுக்கு படிப்பு, மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்ததும், பொது மக்களுக்கான பொதுப் போக்குவரத்து துறையை ஏற்படுத்துவதும் யார்?

கேள்வி: எனக்கான வசதிகள் வரிகள் மூலம் பெறப்பட்ட பணம் மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் சொன்ன 8 மணிநேர வேலை, சர்வசன வாக்குரிமையில் கம்யூனிசத்தின் நேரடிப் பங்கை நான் அறிந்ததில்லை. உங்கள் வழியிலேயே வருவோம். கம்யூனிசம் தான் வழங்கியதாக வைத்துக் கொள்வோம். மனித நாகரிகமடைதலில் சமயங்கள் ஒரு குறிப்பிட்ட பங்கை ஆற்றியிருப்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக சமயங்கள் இப்போதும் போற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?

பதில்: அந்த "அறிவியலாளர்களில்" நீங்களும் ஒருவர் என்று நான் நம்புகிறேன்.ஆகவே மனித நாகரிகமடைதலில் கம்யூனிசத்தின் பங்கையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சரி, அவை போற்றப் பட வேண்டுமா? அவற்றின் வரலாற்றுப் பங்களிப்புக்கு மதிப்புக் கொடுப்பதில் தவறில்லையே? கார்ல் மார்க்ஸ் ஒரு நாஸ்திகர். அவர் கிறிஸ்தவ மதம் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் வகித்தது என்று போற்றி இருக்கிறார். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் கூட வரலாற்றில் முக்கியமான, அதிலும் முற்போக்கான பங்காற்றி உள்ளது என்று போற்றி இருக்கிறார்.

அதே நேரம், கார்ல் மார்க்ஸ் கிறிஸ்தவ மதம், முதலாளித்துவம் குறித்து தனது கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார். உங்களிடம் இருந்தும் அப்படி ஒரு மனப்பக்குவத்தை நாங்கள் எதிர்பார்க்கலாமா? எதையும் விமர்சிப்பதில் தவறில்லை. நீங்கள் தாராளமாக கம்யூனிசத்தை விமர்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? போற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், தூற்றாமால் இருக்கலாம் அல்லவா? நீங்களும் ஒரு அறிவியலாளர் என்று நான் நம்புகிறேன். எதையும் அறியாமல், ஆராயாமல் பேசுவது அறிவியலாளருக்கு அழகல்ல.

முதலில் கம்யூனிசம் பற்றிய ஒரு சிறிய குறிப்பு. அதை நீங்கள், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ காலத்தில் இருந்து தொடங்குவது தவறு. 17 ம் நூற்றாண்டில் இருந்தே பூலோக சொர்க்கம் ஒன்றை உருவாக்குவது சம்பந்தமான எண்ணக்கருக்கள் தோன்றி விட்டன. சமூக விஞ்ஞான அடிப்படையில் அதை கம்யூனிச சமுதாயம் என்று வரையறுத்தார்கள். 

கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருந்து வருகின்றது. 19 நூற்றாண்டில் நடந்த அரசமைப்புமாற்றங்களின் போது மக்கள் நலன்சார்ந்த அரசமைக்க விரும்பியோர் தம்மை சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். இன்றைக்கு சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், அனார்க்கிஸ்ட் பல பிரிவுகளாக இருந்தாலும், தொடக்கப் புள்ளி ஒன்று தான். இனி உங்களது கேள்விக்கு வருவோம்.

யார் வரி அறவிடுகிறார்கள்? அரசு. மக்களிடம் வரி எடுப்பதும், அரசு என்ற கட்டமைப்பும் இரண்டாயிரம் வருட கால பழமையான விடயங்கள். அப்போதெல்லாம் உலகில் எந்த அரசும், மக்களிடம் அறவிட்ட வரியைக் கொண்டு இலவச கல்வி, மருத்துவம் என்று வசதி செய்து கொடுக்கவில்லையே? ஏன்? குறைந்த பட்சம், தொழிற்புரட்சி காரணமாக முதலாளித்துவம் வளர்ந்த, 19 நூற்றாண்டில் ஓர் உதாரணத்தை காட்ட முடியுமா? ஏன்? 

இதற்கான பதில், எந்த முதலாளியும் மக்கள்நலன் கருதி செயற்படுவதில்லை. அரசு முதலாளிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதையே தனது கடமையாக கருதி வந்தது. அப்போதும் அரசு வரி அறவிட்டு வந்தது. யாரிடம்? சாதாரண உழைக்கும் மக்களிடம். அதே நேரம், மேட்டுக் குடியினருக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது. எப்போது மாற்றம் வந்தது? சோஷலிச, கம்யூனிசக் கட்சிகள்உருவான பின்னர் தான்.

அந்தக் கட்சிகள் தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து போராடினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம், எட்டு மணி நேர வேலை, சிறார் தொழிலாளர்களுக்கு விடுதலை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் போன்ற பல கோரிக்கைகளை வைத்துப் போராடினார்கள். மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தான், அரசு அந்தக் கோரிக்கைகளை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது. 

2ம் உலகப்போருக்குப் பின்னர், சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக வளர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உருவானது. அதாவது, அயலில் இருக்கும் சோஷலிச நாடுகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் மேற்கத்திய நாடுகளில், நலன்புரி அரசு என்ற பெயரில் புதிய வகை சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள்.

கேள்வி: 1. இலவசக் கல்வி தொடர்பான வரலாறு. http://en.m.wikipedia.org/wiki/Free_education#History அதனை அறிமுகப்படுத்திய பெய்ன் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் அறிகுறியைக் காணோம். அத்தோடு, ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி என்பது மிகப்புதிது. ஆகவே, ஆச்சரியமில்லை.

2. இலவச மருத்துவம் தொடர்பாக இலகுவாகத் தேட முடியவில்லை. பிறகு கருத்திடுகிறேன்.

3. நீங்கள் சொல்பவற்றிற்கு நம்பகமான ஆதாரங்களை வழங்க முடியுமா?

4. மக்கள் உரிமைக்காகப் போராடும்போது அதற்காகச் செவிமடுப்பது தான் ஜனநாயக அரசு. அது கம்யூனிசத் தலைவர்களிடம் இருந்ததாகக் காணோம்.

பதில்: 18ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்டுகள் இருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் உருவானார்கள். பெய்ன் போன்ற இலவசக் கல்வியை விரும்பிய சிந்தனையாளர்கள் வாழ்ந்திருந்தாலும், அன்று அது ஒருஅரசியல் இயக்கமாக பரிணமிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் தான் அது ஏற்பட்டது. இதற்கு ஆதாரம் எதுவும் தேடத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டு வரையில், மேற்கத்திய நாடுகளில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கல்வி கற்கும் வசதி, பணக்காரக்ளுக்கு மட்டுமே சாத்தியமான சலுகையாக இருந்தது. சோஷலிச நாடுகளில், கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன என்ற உண்மையை உங்களால்மறுக்க முடியாது.

//In the United States, socialism was prominent in the thinking of rationalistic New England and Northern reformers. For example, the first “free” public schools were established by Unitarian socialists who wanted to use them as a vehicle for undermining Christianity, changing America’s cultural values, and promoting the acceptance of socialism. This was a brilliant strategy for the left. No institution in America that has been more effective in promoting the acceptance of socialist ideals than the public school system. Ironically, Americans have bought so completely into public education that they do not even associate it with socialism.// http://patriotupdate.com/articles/beginnings-of-american-socialism-in-public-education/

கேள்வி: நான் அதில் என்ன சொன்னேனோ, அதைத் தான் திரும்பவும் செய்கிறீர்கள். "எவ்வாறு புனிதம், சிறப்பானவை என்று கேட்டால் 1930-இல..." ஜனநாயகம் மீது எனக்கு விமர்சனமுண்டு. அதை நான் இதற்கு முன்னர் பதிந்திருக்கிறேன். "மக்களில் அனேகர் முட்டாள்கள். முட்டாள்களால் தெரிவுசெய்யப்பட்டால் முட்டாள்கள் அதிகம் தெரிவுசெய்யப்படுவர்" என்றேன்.

பதில்: 1930 க்கு முன்னரும் உலகம் இருந்தது. அதைநீங்கள் கவனிக்க வேண்டும், ஆராய வேண்டும் என்று தான் சொல்கிறேன். எதையும் புனிதம் என்று வாதாட வரவில்லை. எதைப் பற்றியும் அறியாமல் பேசுவது தவறு என்று தான் சொன்னேன். உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல், ஒருவர் உங்களைப் பற்றி எதிர்மறையாக மட்டுமே பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்காக நீங்கள் புனிதமானவர் என்று அர்த்தம் அல்ல.

கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாமல் கருத்துக் கூறுவதைப் போன்று தான், ஜனநாயகம் பற்றிய உங்களது கருத்துக்களும் உள்ளன. உலகில் பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பதிலாக சர்வசன வாக்குரிமை வேண்டுமென்று கோரியவர்கள் இடதுசாரிகள் மட்டும் தான். மார்க்சிய சமூக ஜனநாயகக்கட்சிகள், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக சர்வசன வாக்குரிமையை பெற்றுக் கொண்டார்கள்.

மேலும், தேர்தலில் விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பதற்குப் பெயர் பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவருக்கு வாக்குப்போட்டு விட்டு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். சோஷலிசநாடுகளில் அதற்குப் பதிலாக மக்கள் பங்குபற்றும் நேரடியான ஜனநாயகம் உள்ளது. மக்கள் ஜனநாயகத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் பரவாயில்லை. குற்றம், குறை சொல்லாமல் இருப்பதற்கு முயற்சிக்கலாமே? சிறந்த கல்விமான், அறிவாளர் என்பதால் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

//ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.// இதிலே சில கேள்விகள்எழுப்பப் படவேண்டும். "ஸ்டாலின் கால கொலைகள்" : யார் கொல்லப் பட்டார்கள்? சாதாரண பொது மக்களா? இல்லை. 

சாமானியனான உங்களது பார்வையில் யார் கெட்டவர்கள்? ஊழல்வாதிகள், சுரண்டல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், பேராசை பிடித்த முதலாளிகள், நிலஅபகரிப்பு செய்த நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள்... இப்படியானவர்கள் தான் கொல்லப்பட்டனர். மக்கள் அல்ல. அதே போல, காஸ்ட்ரோ ஜனநாயகம் மறுத்ததும், குறிப்பிட்ட சில பிரிவினருக்குத் தான். மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சார தரகர்கள், இவர்களை எல்லாம் கூப்பிட்டு விருந்து வைக்க சொல்கிறீர்களா? முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் பார்ப்போம்.

கேள்வி: சோசலிச நாடுகளில் உள்ளது? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்.

1. உலகிலுள்ள உதாரணம் காட்டக்கூடிய சோசலிச நாடு எது? 2. சோசலிச நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் ஏன் ஜனநாயகத்திற்குப் புறம்பானவையாகக் காணப்படுகின்றன? (உதாரணம் - கியூபா, வடகொரியா, சீனா.)

எல்லா சோஷலிச நாடுகளிலும், மக்கள் ஜனநாயக அடிப்படையில் தான் ஆட்சி அமைந்துள்ளன. உலகில் முதல் முதலாக தோன்றிய சோஷலிச நாடு சோவியத் ஒன்றியம்என்பது உங்களுக்கு தெரியும். சோவியத் என்றால் என்னவென்று தெரியுமா? மக்கள் மன்றம். அது லெனின் தலைமையிலான போல்ஷெவிக்- கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. ஒரு போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கூட அங்கம் வகிக்காத சோவியத் கூட இருந்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்கள் கூட, சோவியத் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இன்றும் "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று, பாராளுமன்றத்திற்கு, நகரசபைக்கு பிரதிநிதிகளை அனுப்பும் முறை அல்ல. மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு அது. ஒவ்வொரு திட்டமும் மக்கள் பேரவையான சோவியத்தில் கூடி விவாதிக்கப்படும். பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும். 

சோவியத் மட்டுமல்ல, கட்சி அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மற்றும் பல வெகுஜன அமைப்புகள் எல்லாம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். உங்களால் முடிந்தால், அதனை உங்களது ஊரில் அல்லது கல்லூரியில் நடைமுறைக்கு கொண்டு வந்து காட்டுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். முற்சாய்வுகள், முன்முடிவுகளுடன் உரையாட வராதீர்கள். அதற்குப் பெயர் விதண்டாவாதம். அவை ஜனநாயகத்திற்குப் புறம்பானதாக "காணப்"படவில்லை, காட்டப்படுகின்றன. அப்படி மேற்குலகில் பரப்புரை செய்யப்படுகின்றன. உண்மை எது, பொய் எது என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை நம்புவீர்கள் என்றால், நீங்கள் தமிழர்கள் அனைவரும் இரத்தக்காட்டேரிகள் என்று தான் சொல்வீர்கள். சோஷலிசம், கம்யூனிசம் போன்றவற்றை அடியோடு வெறுக்கும் முதலாளித்துவ நாடுகளின் பிரச்சாரங்களை நம்பினால், சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் கிடையாது என்று தான் நினைப்பீர்கள்.

கேள்வி: முதலாவது பதில் - உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன. எனது ஞாபகம் சரியெனில், ஒருகட்டத்தில் தொழிற்துறை வளரவேண்டுமென குறிப்பிட்ட காலத்திற்கு கியூபா (அல்லது இன்னொமோர் சோசலிச நாடு) முதலாளித்துவத்தை ஊக்குவித்தது. இந்த நாடு ஒரு சோசலிச நாடு எனச் சொல்லுமளவிற்குள்ள நாட்டைச் சொல்லுங்கள்.

இரண்டாவது -வடகொரியாவில் தந்தைக்குப் பிறகு பதவிக்கு வந்தவர் தான் தற்போதையவர். அண்மைக் காலத்தில் பல இராணுவத் தளபதிகள் ஜனாதிபதியால் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில தலைமுடி அலங்காரங்களிலேயே முடி வெட்ட முடியும். இது ஜனநாயகம்?

சீனாவில் பேஸ்புக் உட்பட பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எதிரணிகள் ஒடுக்கப்படுகின்றன. உச்சக்கட்ட கண்காணிப்பு இருக்கிறது. இது உண்மை.

//உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன.// அப்படி நான் சொல்லவில்லை. சோஷலிச நாடுகளில் ஜனநாயக அமைப்பு இருந்தது என்று தான் விபரித்தேன். ஜனநாயகத்தை, முதலாளித்துவத்துடன் சேர்த்துப் பார்ப்பது உங்களது அறியாமை. ஜனநாயகம் என்பது மக்களாட்சி. பெரும்பான்மையினரின் தெரிவு. ஜனநாயகம் தோன்றியதாக புகழப்படும் கிரேக்கத்தில், கட்சிகள் இருக்கவில்லை, இப்போதுள்ள மாதிரி தேர்தல்கள் நடக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பது பெரும் மூலதனத்தை மட்டும் தான். அதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். பெரும் மூலதனம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது. அவை பொருளாதார சர்வாதிகாரத்தை நடைமுறைப் படுத்துகின்றன. அதைத் தான் எதிர்க்க வேண்டும். சிறு தொழில் முனைவோர், சிறிய நிறுவனம் வைத்திருப்போர் எல்லாம் முதலாளிகள் அல்லர். சிலர் அப்படி தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். சோஷலிச நாடுகளில் சிறு தொழில்முனைவோருக்கு சுதந்திரம் கொடுப்பதால் எந்த நஷ்டமும் வரப் போவதில்லை. உங்களுக்கு தனியாக ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாக செய்யலாம். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் நீங்கள் வியாபாரம் செய்யலாம். ஒரு சோஷலிச நாட்டில் அதற்கு சுதந்திரம் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகள் தங்களை சோஷலிச நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ஒவ்வொரு நாடும் தனக்குத் தெரிந்தவரையில் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தன. அது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தான் சோஷலிசத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள நலன்புரி அரசு என்பது முதலாளித்துவ அமைப்பின் உள்ளே கொண்டு வரப் பட்ட சோஷலிசம் தான்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிய வேண்டும். நீங்கள் எதற்காக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கும் பிரச்சாரங்களை நம்புகிறீர்கள்? நீங்கள் சிறிலங்கா அரசு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், உங்கள் பார்வையில் தமிழர்கள்எல்லோரும் இரத்தக்காட்டேரிகள் மாதிரி தெரிவார்கள். ஆகவே, உங்களது கண்ணாடியை கழற்றி வைத்து வாருங்கள். ஒரு அறிவாளர்மாதிரி நடந்துகொள்ளுங்கள். இரண்டு பக்கமும் விசாரித்து, அலசி, ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

வட கொரிய அதிபரின் தலைமுடி அலங்காரம் பற்றிய கட்டுக்கதை மேற்கத்திய ஊடகங்களினால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இது கிளுகிளுப்பூட்டும் கிசுகிசு பாணியிலான தகவல் மட்டுமே. வட கொரிய இராணுவத் தளபதிகள் ஊழல், அல்லது உளவுபார்த்தது போன்ற ஏதாவது குற்றச்சாட்டில் தான் தண்டிக்கப் பட்டார்கள். அதனை மேற்கத்திய ஊடகங்களே வெளிப்படுத்தி இருந்தன. இராணுவத் தளபதிகள் கூட தவறு செய்தால் தண்டிக்கப்படுவதற்காக, நீங்கள் அந்த நாட்டை பாராட்ட வேண்டும் அல்லவா? சீனாவில் இணையத்தளங்கள்முடக்கியதற்காக மூக்கால் அழுகிறீர்கள். அமெரிக்காவில், பிரான்சில் எத்தனை இணையத்தளங்களை முடக்கினார்கள்? NSA உலக நாடுகளை, பொதுமக்களை உளவு பார்த்ததை ஸ்னோவ்டன் அம்பலப் படுத்தியதை அறியவில்லையா?

இதைப் பார்த்த உடனே நான் வட கொரியா, சீனாவை "நியாயப் படுத்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஒரு புனிதர் அல்ல. ஒரு பக்கச் சார்பானவர் தான். அதைக் காட்டுவதற்கே சிறு விளக்கம் கொடுத்தேன். இப்போதும் கூட மேற்குலக நாடுகள் பற்றி எதுவும் சொல்லாமல் மூடி மறைப்பதில் இருந்தே உங்களது சார்புத்தன்மை தெளிவாகி விடுகின்றது.

கேள்வி: கம்யூனிசத்தையும், உங்களுக்குப் பிடித்தமானவர்களின் படுகொலைகளையும் நியாயப்படுத்த நீங்கள் எடுக்கும் சிரமமே கம்யூனிசத்தைப் பரப்புபவர்களிடம் காணப்படும் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதில்: முதலில் முன்முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. விக்கிபீடியா தகவல்களும் ஒரு பக்கச்சார்பானவை தான். நீங்கள் கூட உங்களது பார்வைக்கோணத்தில் அதை எழுதலாம். இங்கே படுகொலைகளை நியாயப் படுத்துவதல்ல என் நோக்கம். எதையும் அறிவுபூர்வமாக ஆராய வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் ஒரு அறிவியலாளர், படித்தவர் என்ற நம்பிக்கையில் உரையாடுகின்றேன். புரட்சி நடக்கும் காலத்தில் கொலைகள் நடக்கும். அது உலக நியதி. மதங்கள் படுகொலை செய்யவில்லையா? ஜனநாயகம் படுகொலை செய்யவில்லையா? அமெரிக்கப் புரட்சியில் நடக்காத படுகொலைகளா? பிரெஞ்சுப்புரட்சியில் நடக்காத படுகொலைகளா? அதை எல்லாம் உதாசீனப் படுத்தி விட்டு "கம்யூனிசப் படுகொலைகளை" மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஏன்? இங்கே பிரச்சினை உங்களிடமும் உள்ளது.

கேள்வி: எல்லாவற்றையும் விமர்சித்த பின்பு தான் கம்யூனிசத்தை விமர்சிக்க முடியுமா?

பதில்: உங்களுக்கு கம்யூனிசம் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். அது தோன்றுவதற்கு முன்பிருந்த முதலாளித்துவம், லிபரலிசம், தேசியவாதம், போன்ற பிற கொள்கைகளை கூட அறிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்ன நியாயம்? உண்மையில், ஐரோப்பாவில், மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் தோல்வியின் விளைவாகத் தான் சோஷலிசம், கம்யூனிசம் எல்லாம் தோன்றின. 19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் லிபரலிசம் என்ற புதிய கொள்கையை பரப்புவது தான் நெப்போலியன் போர்களின் நோக்கமாக இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் விளைவு. இல்லாவிட்டால் இன்றைக்கு நீங்கள் யாரோ ஒரு மன்னனுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒருநிலப்பிரபுவின் பண்ணையில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள்.

ஆமாம், ஐரோப்பா முழுவதும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டுவது தான் லிபரலிசம் கொண்டுவந்த புரட்சியின் நோக்கம். அப்போது லிபரலிசம் படுகொலை செய்த மக்கள் எத்தனை மில்லியன்? இதே தான் அமெரிக்காவின் உள்நாட்டு போரிலும் நடந்தது. அதுநிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானமுதலாளித்துவத்தின் போர். முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் காரணமாக அமைந்த கொள்கை எது? தேசியவாதம். அதற்கு முண்டு கொடுத்த முதலாளித்துவம். அந்த இரண்டு போர்களிலும் எத்தனை மில்லியன் மக்கள் கொல்லப் பட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

கேள்வி: சரி. வேறு ஏதாவது நம்பத் தகுந்த ஆதாரம் காட்டுங்கள்? புரட்சி அல்லது போரில் கொலைகள் நடக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பல மில்லியன் பேரைக் கொன்றதை வெறுமனே "சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" என்றளவில் எடுத்துக் கொள்ள முடியாது. மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் கொல்வதற்குத் தான் புரட்சி என்றால் அப்படியானொரு புரட்சி தேவையில்லை.

பதில்: உங்களுக்கு ஏற்கனவே பல தடவைகள் கூறி விட்டேன், தயவுசெய்து முற்சாய்வுகளுடன் உரையாடாதீர்கள். //பல மில்லியன் பேரைக் கொன்றதை// என்று நீங்களாகவே விசாரிக்காமல் தீர்ப்பு சொல்லி விடுகிறீர்கள். இந்த தவறு உங்களை அறியாமல் நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். "முதலாம் உலகப்போரில் பத்து மில்லியன் மக்கள் இறந்தார்கள்" என்று சொல்வதற்கும், "பத்து மில்லியன் மக்களை கொன்றார்கள்" என்று சொல்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதல்லவா? பின்னையகூற்று யாரோ ஒருவரை குற்றம்சாட்டுகின்றது. யார் கொன்றார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. //"சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" // என்று பாமரத்தனமாக பேச முடியாது. நீங்கள் ஒரு பாமரன் என்று நானும் நம்பவில்லை.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல. அதுவும் ஒரு யுத்தம் தான். எவ்வாறு தேசங்களுக்கு இடையில் நடந்த யுத்தங்களை பார்க்கிறீர்களோ, அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நடந்த இனப்போரில் எத்தனை மில்லியன் கொல்லப் பட்டனர்? அதற்காக ஈழப்போரே வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

நாடுகளுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் போர்கள் நடப்பதைப் போன்று, வர்க்கங்களுக்கு இடையிலும் போர்கள் நடப்பதுண்டு. அதை உலகம் தடுக்க முடியாது. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகாஸ் தலைமையிலான அடிமைகளின் எழுச்சி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்போது நடந்த போரில் எத்தனை மில்லியன் பேர் கொல்லப் பட்டார்கள்? அதற்காக அடிமைகளின் புரட்சி நடந்திருக்க கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? ரஷ்யா, சீனாவில் நடந்த புரட்சிகள் யாவும் வர்க்கப் போர்கள். அதாவது அடிமைகளின் எழுச்சி. அதை நீங்களோ, நானோ தடுக்க முடியாது. அது இயற்கை.

Monday, May 04, 2015

நோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்


வட ஐரோப்பிய நாடான நோர்வேயில், அரசியல் கட்சிகள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியும். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அப்படி அனுமதிப்பதில்லை. அங்குள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான Tjen folket (மக்கள் சேவையாளர்கள்) அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதனால், இன்று அந்தக் கட்சியின் எழுபது சதவீத உறுப்பினர்கள் முப்பது வயதிற்கும் குறைவான இளையோர் என்பது குறிப்பிடத் தக்கது.

நோர்வேயில் ஒரு பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி (Norges Kommunistiske Parti) இருக்கிறது. அது இப்போதும் இயங்கி வருகின்றது.  ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தமையினால், அந்த நாட்டில் புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது.

எழுபதுகளில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாணவர் எழுச்சிக்குப் பின்னர், மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. நோர்வேயில் அது Arbeidernes Kommunistparti (AKP) என்ற பெயரில் கட்சியாக இயங்கியது. ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுடன் வளர்ந்து வந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின்னர் பின்னடவை எதிர்நோக்கியது.

முன்னாள் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து உருவான Rødt (சிவப்பு), தற்போது ஒரு தீவிர இடதுசாரிக் கட்சியாக மட்டும் இருக்கிறது. கோட்பாடுகளை கைவிட்டு விட்டு, இடதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகின்றது. அதனால், அவர்களுடன் முரண்பட்ட கொள்கைப் பற்றுக் கொண்ட பிரிவினர், Tjen folket கட்சியை ஸ்தாபித்தார்கள். Tjen folket தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. இனவெறிக்கு எதிரான வெகுஜன அமைப்பு போன்றவற்றின் ஊடாக, மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது.

ஒரு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக தன்னை அடையாள படுத்தும் Tjen folket, இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் சித்தாந்தம் போதித்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அரசியல் வகுப்புகளில் ஆயிரக் கணக்கான இளையோர் பங்குபற்றுகின்றனர். கார்ல் மார்க்சின் மூலதனம் முதல், மாவோவின் மேற்கோள்கள் வரை அனைத்து மார்க்சிய நூலகளையும் கற்று விவாதித்து வருகின்றனர். தாம் கற்றறிந்த விடயங்களை புதிதாக சேரும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் கட்டுக்கோப்பான, கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்சியாக இருந்து வருகின்றது.

2011 - 2012 காலப் பகுதியில், நான் நோர்வேயில் உள்ள Tromsø எனும் நகரில் வசித்து வந்தேன். அங்கு வேலை செய்த காலத்தில், Tjen folket கட்சியுடன் தொடர்பேற்பட்டது. அரசியல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Tromsø வில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த நேரம் எடுத்த படம் மேலே உள்ளது.

அந்தப் பாடசாலையில் உள்ள உணவுச்சாலைக்கு அருகில், Tjen folket கட்சியின் துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள், மற்றும் மார்க்சிய- லெனினிச தத்துவார்த்த நூல்கள் காட்சிக்கு வைத்திருந்தோம். பெருமளவு மாணவர்கள் வந்து பார்த்து, அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அரச பாடத் திட்டத்தில், கம்யூனிசம் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப் பட்ட போதிலும், மாணவர்களுக்கு அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்துள்ளது. அதனால், பல வகையான கேள்விகளை கேட்டு, தமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

இங்கேயுள்ள படத்தில் எனக்கு அருகில் நிற்கும் இரண்டு இளைஞர்களுக்கும், வயது 17 க்கு மேலே இருக்காது. இருவரும் மிக இளம் வயதிலேயே புரட்சிகர அரசியலுக்கு வந்தவர்கள். மிகத் தீவிரமான கம்யூனிச ஆர்வலர்கள். பிரச்சாரம் மட்டுமல்லாது, சுவரொட்டிகள் ஓட்டுவது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற வெளி வேலைகளிலும் ஈடுபடுவதுண்டு.

அநேகமாக, நோர்வே அரசு எம் மீது எந்த அடக்குமுறையும் பிரயோகிப்பதில்லை. ஆனால், தீவிர வலதுசாரி இளைஞர்கள் தெருவில் சண்டைக்கு வருவார்கள். பல சமயங்களில், நாஸிகளுடன் கைகலப்புக்கு செல்லாமல் தவிர்ப்பதே பெரிய பாடாக இருக்கும். கட்சியில் புதிதாக சேரும், 14, 15 வயதும் ஆகாத இளைஞர்கள் கூட, பாசிஸ்டுகளுக்கு எதிரான  போராட்ட உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். 

இந்தப் படத்தில், எனக்கு இடதுபுறத்தில் நிற்கும் இளந் தோழர், நோர்வேயின் உச்சியில் உள்ள பின்மார்க் என்ற மாகாணத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். 2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், நோர்வே முழுவதும் ஜெர்மன் நாஸி படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டது. அவர்களை எதிர்த்து போரிட்ட சோவியத் படைகள், அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் வருவதற்கு முன்னரே, பின்மார்க் பகுதியை விடுதலை செய்திருந்தன. அதனால், பொதுவாகவே பின்மார்க் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர். இதனை அந்த இளந் தோழருடனான உரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது. 



இது தொடர்பாக Tjen folket கட்சியின் இணையத் தளத்தில் வந்த தகவலின் இணைப்பு: 


Sunday, May 03, 2015

மார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் எதேச்சாதிகாரம் அல்லவா? (கேள்வி - பதில்)


முகநூலில், யதார்த்தன் என்ற இளம் நண்பருக்கும் எனக்கும் இடையில் நடந்த அரசியல் தத்துவார்த்த உரையாடல். மார்க்சியம் பற்றி புதிதாக அறிந்து கொள்ளும் இளையோர் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில் கூறுவதாக அமைந்துள்ள உரையாடல், மேலும் பலருக்கு பயன் தரும் என்பதால், அதை இங்கே பதிவிடுகின்றேன்.
-----------------------------------------------------------------



கேள்வி: ஒரு வகையில் மாக்சியமும் குறிப்பிட்ட வர்கமொன்றின் எதேச்சாதிகாரம் தான். அதிகாரம் யாரிலிருந்து பிறக்கிறதோ, அவர்களிடம் அதை கையாள கொடுப்பது பற்றி எத்தனை மாக்சிஸ்டுக்கள் சிந்தித்து இருக்கிறார்கள் ?

பதில்: அதற்கு முதலில் நீங்கள் உலக வரலாற்றை எடுத்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சியின் போது நடந்தது என்ன? மன்னராட்சி அல்லது பிரபுக்கள் வர்க்கத்திற்கு எதிரான, மத்தியதர வர்க்கத்தின் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா) "எதேச்சாதிகாரம்". அதற்குப் பிறகு நடந்த நெப்போலியன் போர்களையும் அதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அன்று ஐரோப்பாவில், பூர்ஷுவாக்களின் தாராளவாத(லிபரல்) கொள்கையின் பெயரால், மில்லியன் கணக்கானோர் படுகொலை செய்யப் பட்டனர்.

பிரான்சில் தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. பாதிரிகள் பூண்டோடு அழிக்கப் பட்டார்கள். கன்னியாஸ்திரிகள் "ஏசுவின் விபச்சாரிகள்" என்று தூற்றப் பட்டார்கள். புரட்சியாளர்கள் அவர்களை வன்புணர்ச்சி செய்து கொன்றார்கள். அது மட்டுமல்ல, புரட்சியை முன்னெடுத்த அரசிலே ஒருவரை ஒருவர் கொன்று குவித்தார்கள். தங்களது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாற்றுக் கருத்தாளர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தார்கள். "குறித்த வர்க்கமொன்றின் எதேச்சாதிகாரம்" இப்படித் தான் இருந்தது.

சோவியத் என்ற ரஷ்ய சொல்இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. சோவியத் என்பது மக்கள் சபை. அதாவது, மக்கள் அனைவரும் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம். ஒவ்வொரு திட்டமும் விவாதிக்கப் பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் முடிவெடுக்கப் படும். கிராமிய மட்டத்தில் இருந்து, தேசியமட்டம் வரையில் சோவியத் கட்டமைப்பு ஒரே மாதிரித் தான் இருக்கும். அது ஏற்கனவே பிரான்சில் உருவான கம்யூன் அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. உலகில் அதைவிட சிறந்தவொரு ஜனநாயக அமைப்பை யாராலும் காட்ட முடியாது.

கேள்வி: சோவியத் என்ற சொல் இருக்கிறது ஆனால், சோவியத் யூனியன் எங்கே இருக்கிறது? பனியில் உருகி உடைந்த பெருங்கனவு எங்கே ?

பதில்: பாரிஸ் கம்யூன் என்ற சொல் இருக்கிறது. கம்யூனிச பாரிஸ் இப்போது எங்கே இருக்கிறது? ஆயிரம் வருட உலக வரலாற்றில், புதிய தேசங்கள் தோன்றுவதும், மறைவதும் வழமை. தேசங்கள் நிலைப்பதில்லை. ஆனால், ஒரு பூலோக சொர்க்கத்திற்கான மக்களின் கனவு மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.

கேள்வி: ஒரு சட்டகபடுத்தப்பட்ட கோட்பாட்டின் உறுதியின்மை. அது தேசத்தை உடைத்தது வரலாற்றபூர்வம் அல்லவா?

பதில்: தனக்கு எதிரான கோட்பாடு அரசாளுவதற்கு, வல்லமை பொருந்திய மூலதனம் அனுமதிக்கப் போவதில்லை. கையூட்டு, சூழ்ச்சி, எதிர்ப் பிரச்சாரம், குழி பறிப்பு, நாசவேலைகள், அனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். அதை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம்.

கேள்வி: அதிகாரத்தை தோற்கடிக்கும் கூறு அவ்வெற்றியின் பின் தானும் அதிகாரமாகி விடுகின்றது. பாட்டாளிகளின் அதிகாரம் நிரந்தரமாகி விட்டால், வர்கமற்ற இயற்கை நிலை சுவர்க்கம் பற்றிய கனவு கனவு மட்டும் தானே?

பதில்: இதற்கு ஒரே வரியில் பதில் கூற முடியாது. விரிவான விளக்கம் அவசியம். வரலாற்றின் கடந்த காலங்களில், பல தடவைகள் இது போன்ற புரட்சிகள் நடந்துள்ளன. மார்க்ஸ்ஸுக்கு பிறகு தான் பாட்டாளி வர்க்கம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவசமுதாயத்தில் உழைப்பை விற்றுப் பிழைக்கும் பிரிவினர் என்ற வரைவிலக்கணம்கொடுத்து, கார்ல்மார்க்ஸ் அவர்களுக்கு அப்படி ஒரு பெயர் சூட்டினார். அனார்க்கிஸ்ட் சோஷலிஸ்டுகள் பாட்டாளிவர்க்கம் என்பதற்கு பதிலாக உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கின்றனர். இரண்டும் ஒன்று தான். 

நாங்கள் இப்போது முதலாளித்துவத்திற்கு முந்திய சமுதாயத்தை எடுத்துப் பார்ப்போம். அப்போதும் பாட்டாளிகள் இருந்தனரா? அன்று அவர்களுக்குவேறு பெயர் இருந்தது. அடிமைகள் என்றால் தெரியும். இந்திய சமுதாயத்தில் இருந்த தாழ்த்தப் பட்ட சாதியினரும் அந்த வகைக்குள் அடங்குவார்கள். ஆகையினால், உலக வரலாற்றில், எந்த நாட்டிலாவது அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றினார்களா என்று பார்க்கவேண்டும்.

அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய சம்பவங்கள்பலநடந்துள்ளன. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகஸ் எழுச்சி பண்டைய வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த எழுச்சி தோற்கடிக்கப்பட்டமையினால் அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் என்ன செய்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 

விவிலியநூலில் கூறப்படும் பாபிலோனிய யூத அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தமக்கென ஒரு மன்னராட்சியை ஸ்தாபித்தார்கள். வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்கதொரு மாற்றத்தை  கிறிஸ்தவ மதம் உண்டாக்கியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதமும், ஆரம்பத்தில் அடிமைகளின் எழுச்சியாக இருந்துள்ளது. பிற்காலத்தில், ரோம அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தாமும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள். அதனால் ஒரு புரட்சிகர மாற்றம் நடந்தது. ஐரோப்பாவில் பாரம்பரிய அடிமைகள் முறை ஒழிக்கப்பட்டு, நிலப்பிரபுதத்துவ பண்ணையடிமை முறை வந்தது. 

வரலாற்றில் பதியப்பட்டுள்ள அண்மைய உதாரணம், ஹைத்தி அடிமைகளின் எழுச்சி. கருப்பின அடிமைகள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், புரட்சியை முன்னெடுத்த தலைவர்கள், தாமும் வெள்ளையின எஜமானர்கள் போன்று தான் நடந்து கொண்டனர். சுதந்திரமடைந்த அடிமைகள் முன்பு தாம் செய்த அதே வேலைகளைத் தான் தொடர்ந்தும் செய்ய வேண்டி இருந்தது.

மேற்குறிப்பிட்ட வரலாற்று சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினைகளை பெற வேண்டும். பாட்டாளிவர்க்கம் புரட்சி செய்து அதிகாரத்தை கைப்பற்றினால், அவர்களும் முதலாளிகள் போன்று நடந்து கொள்ள மாட்டார்களா? அது சாத்தியமானது தான். ஆகவே, பாட்டாளி வர்க்கத்தினரின் புரட்சியானது ஒரு சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். 

ஒருகட்சி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்தக் கட்சியின் கொள்கைகள் இயங்கியல் தத்துவ அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்காகத் தான் எத்தனையோ கோட்பாடுகள், அதைப்பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. கோட்பாடு இல்லாத புரட்சி நடந்தால், அது பழைய குருடி கதவைத் திறடி கதையாகத் தான் இருக்கும். அண்மைய உதாரணம்: துனீசியா, எகிப்து.


-----------------------------------------------------------------------------------------------------------------------

முகநூலில் நட்சத்திரன் செவ்விந்தியன் எனும் நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் இது: 

கேள்வி: நீங்கள் மார்க்சிய கோட்பாடுகளுக்கு அப்பால் செல்ல மாட்டீர்கள். அது ஒரு 19 ம் நூற்றாண்டுக் கோட்பாடு, நீங்கள் இன்னமும் 19 ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறீர்கள். 

பதில்: முதலாளித்துவம் ஒரு 18 ம் நூற்றாண்டு கோட்பாடு என்றால், மார்க்சியம் அதை விட நவீனமானது. முதலாளித்துவத்தின் குழந்தையாகத் தான் மார்க்சியம் பிறந்தது. 

கேள்வி: இன்றைய மேற்கத்திய உலகில் இயங்குவது 18 ம் நூற்றாண்டு முதலாளித்துவம் அல்ல. அது மாறி விட்டது.ஸ்கண்டிநேவிய நாடுகளில் கல்வி இலவசம். அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளன. ஆனால்,நீங்கள் பழைய சிவப்புக் கோட்பாட்டை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

பதில்: அனைவருக்குமான கல்வியும், மருத்துவமும் மார்க்சியத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். பல மேற்கத்திய நாடுகளில், கல்வி, மருத்துவம் இலவசம் அல்ல. காப்புறுதி, அரசு மானியங்கள் மூலம் அனைத்துப் பிரஜைகளுக்கும் கிடைக்கும் வகையில் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மார்க்சியர்கள் தான் அதனை ஒரு அரசியல் கொள்கை ஆக்கினார்கள். 

மார்க்சியர்களான சமூக- ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மை வாக்குகளால் வென்று அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு தான் அரசு மாறியது. அரசு தான் மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கின்றது. முதலாளிகள் அல்ல. அவர்கள் அதற்கு உடன்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லாவிட்டால் ஒரு புரட்சியை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். ரஷ்யா,ஜெர்மனி, ஹங்கேரி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே புரட்சிகள் நடந்திருந்தன. பிற ஐரோப்பிய நாடுகளும் அவற்றைத் தொடர்ந்திருக்கும். 

--------------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, May 02, 2015

2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்


இது தான் இன்றைய அமெரிக்கா! இன்று அமெரிக்க நகரங்களில் நடப்பது (இனக்) கலவரம் அல்ல, மக்கள் எழுச்சி!

******

நெதர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கமான FNV ஆம்ஸ்டர்டாம் நகரில் நடத்திய மேதினம்:

******

யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலமும், அதில் கலந்து கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டுகளும். புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி, இந்த ஊர்வலத்தை ஒழுங்கு படுத்தி இருந்தது. சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை போன்ற பல மக்களின் பிரச்சனைகளை காட்டும், அலங்கார ஊர்திகள் எடுத்துச் செல்லப் பட்டன. 
(படத்திற்கு நன்றி: Kiri Shanth)



இந்த வருடம், ஜேவிபி கொழும்பில் நடத்திய மாபெரும் மேதின ஊர்வலத்தில், யாழ் மாவட்ட கிளையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சம்.
(படத்திற்கு நன்றி :Ramalingam Chandrasegar)


******

துருக்கி, இஸ்தான்புல் நகரில், பொலிஸ் தடையையும் மீறி மேதின ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பொலிஸ் தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மனிதச்சங்கிலி அமைத்துக் கொண்டு நின்றனர். சிவில் உடையில் நின்ற பொலிசார், பலரைக் கைது கொண்டு சென்றனர். இது வரையில் இருநூறு பேரளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.