Saturday, July 28, 2018

யாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி

(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் கொண்டு தேர் இழுத்தனர். இந்தச் செய்தி இழி புகழ் பெற்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பேசப் பட்டது. ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கும் நிழற்படம் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிர்ந்து கொள்ளப் பட்டது. வழமையாக சாதிப்பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தமிழ் முதலாளிய பத்திரிகைகள், தவிர்க்கவியலாது அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்த படம் அப்பட்டமான சாதிவெறியை வெளிக்காட்டியதால், வழமையான "நடுநிலையாளர்களும்" கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்து சாதிவெறியர்கள் எதுவும் பேசாமால் அடக்கி வாசித்தனர். சில தினங்களின் பின்னர், ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற சாதிவெறி பிடித்த மன நோயாளி, தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் "விஞ்ஞான விளக்கம்" கொடுத்தார். அதில் ஒன்று, மணலுக்குள் தேர்ச் சக்கரம் புதையும் என்பதால், ஜேசிபி வாகனம் கொண்டு இழுத்தார்கள் என்பது.

கச்சாய் சிவத்தின் வீடியோ வெளியாகி சில நாட்களுக்குப் பின்னர், கோயில் அறங்காவலர் சபையும் அதே காரணத்தைக் கூறி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். பல நாட்களாக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பம்மிக் கொண்டிருந்த சாதிவெறியர்கள், கச்சாய் சிவத்தின் வீடியோவையும், கோயில் அறங்காவலர் அறிக்கையையும் காட்டி எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கக் காரணம் சாதிப் பாகுபாடு அல்ல, மணல் பாதை என்று நிறுவ முயன்றனர். 


நான் ஜூலை மாத விடுமுறையின் போது இலங்கை சென்றிருந்த காலத்தில், சர்ச்சைக்குரிய சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை நேரில் சென்று பார்த்து வர எண்ணினேன். நான் அங்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள், வீடியோவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆதாரங்களுடன், அயலில் வாழும் மக்களின் நேரடி சாட்சியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு சாதிப் பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. 

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது வரணி எனும் கிராமம். பருத்தித்துறை நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சில கிலோமீட்டர் தூரம் சென்றால் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் வரும்.

வரணி வடக்கில் உள்ள ஆலய சுற்றாடலில் சனத்தொகை அடர்த்தி குறைவு. இருப்பினும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரணி தெற்கில் சனத்தொகை அதிகம். அங்குள்ள சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் பிரபலமானது. ஆனால், சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதால் பலருக்கு அது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.

"யாழ் மாவட்டத்தில் சனத்தொகை குறைந்து விட்டதாகவும், அதனால் சாமி காவுவதற்கும், தேர் இழுப்பதற்கும் ஆட் பற்றாக்குறை நிலவுகிறது" என்பது வழமையாக சாதிவெறியர்கள் முன்வைக்கும் வாதம். அது உண்மை அல்ல. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கை பிற மாவட்டங்களை விட யாழ் குடாநாட்டில் தான் அதிகம்.

முப்பாதாண்டு கால போர் அழிவுகள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தல்கள் ஆகியன யாழ் மாவட்ட சனத்தொகையில் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரவில்லை. ஆனால், சாதிய கட்டமைப்பில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் தாழ்த்தப் பட்ட சாதியினரின் சனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை கண்கூடாகக் காணலாம். பொதுவாக வசதி படைத்தவர்கள் ஆதிக்க சாதியில் தான் அதிகமாக இருப்பார்கள். சரியான புள்ளிவிபரம் எடுக்கப் பட்டால், புலம்பெயர்ந்தோர் தொகையில் 80% ஆதிக்க சாதியினர் என்ற உண்மை தெரிய வரும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்வதற்காக கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்ட உறவினர்களையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, "ஊரில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தேர் இழுக்க ஆளில்லை" என்று சாதியவாதிகள் குறிப்பிட்டு சொல்வது தமது சொந்த சாதி ஆட்களைப் பற்றி மட்டும் தான். அங்கு வாழும் தாழ்த்தப் பட்ட சாதியினர் அவர்கள் கண்களுக்கு மனிதர்களாகவே தெரிவதில்லை. இது தான் பிரச்சினையின் அடிநாதம். அதாவது, கோயிலுக்கு அருகாமையில் தாழ்த்தப் பட்ட சாதியினர் பெருமளவில் இருக்கலாம். ஆனால், அவர்களைக் கொண்டு தேர் இழுப்பதற்கு சாதித் திமிர் விடாது.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம், வெள்ளாளர் எனும் உயர்த்தப் பட்ட சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால், கோயிலுக்கு அருகில் பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் வாழ்கின்றனர். முன்பெல்லாம் அங்கு நடக்கும் கோயில் திருவிழாக்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை. 

யாழ்ப்பாணத்தில் சாதிக்கொரு கோயில் இருப்பது ஒன்றும் புதினம் அல்ல. கிராமங்களில் இது வழமை. வீட்டுக்கு அருகில் கோயில் இருந்தாலும், அங்கு சென்று கும்பிடாமல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வருவார்கள்.

சர்ச்சைக்குரிய தேர்த் திருவிழாவின் போது நடந்தது என்ன? இது குறித்து கோயிலுக்கு அருகில் குடியிருந்த மக்களை விசாரித்தேன். அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடந்த சம்பவங்களை வரிசைப் படுத்துகிறேன்.

சிமிழ் அம்மன் ஆலய அறங்காவலர்கள், புதிதாக கட்டிய தேரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். அந்தக் கோயிலுக்கு ஏற்றவாறு, தேரும் சிறியது தான். அதை இழுப்பதற்கு நூற்றுக் கணக்கான மனித வலு தேவையில்லை.

வெள்ளோட்டம் முடிந்து, தேர்த் திருவிழாவுக்கான நாளும் அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது ஊரில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை ஒன்று சேர்த்து தேர் இழுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் காலங்காலமாக தொடரும் சாதிப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவதே அவர்களது நோக்கம். எப்படியோ கோயில் அறங்காவலர் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்து விட்டது.

தேர்த் திருவிழா அன்று, யாருமே எதிர்பாராதவாறு JCB எனும் மண் கிண்டும் இயந்திரத்தை கொண்டு வந்திருந்தனர். இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்ததன் மூலம், யாருமே தேர் வடத்தை பிடிக்க விடாமல் தடுக்கப் பட்டது. உயர் சாதிப் பக்தர்களைப் பொறுத்தவரையில் இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்காது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தாம் தேர் இழுக்கா விட்டாலும் பரவாயில்லை. தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொட்டு விடக் கூடாது என்று நினைப்பதற்கு எந்தளவு சாதிவெறி இருந்திருக்க வேண்டும்? 

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்தமைக்கு, சாதிவெறியர்கள் ஒரு சப்பைக் கட்டு கட்டினார்கள். அதாவது, கோயிலை சுற்றி தேரோடும் வீதி மணலாக இருந்ததாகவும், அதில் தேர் இழுத்தால் சில்லு மணலில் புதைந்து விடும் என்றும் சொன்னார்கள். நான் நேரில் சென்று பார்த்த பொழுது, அது உண்மையல்ல என்று தெரிய வந்தது. அந்த இடம் முழுவதும் சிறு கற்கள் கொண்ட கடினமான தரையாக இருந்தது. கோயிலின் வடக்குப் பக்கத்தில் மட்டும் சிறிதளவு மணல் இருந்தது. ஆனால், அதுவும் தேர் புதையும் அளவிற்கு மணல் அல்ல. கடும் மழை பெய்தால் மட்டுமே, அந்தப் பகுதி சேறும் சகதியுமாக வாய்ப்புண்டு.

 
தீர்த்தக் கேணி
அங்கு நடந்த சர்ச்சை தேர்த் திருவிழாவுடன் மட்டும் முடிந்து விடவில்லை. அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா. அங்கிருந்தது ஒரு சிறிய தீர்த்தக் கேணி. அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி போடப் பட்டது. இதன் மூலம், தீர்த்தக் கேணியில் சாமி நீராடிய பிறகு பக்தர்கள் இறங்கிக் குளிப்பது தடுக்கப் பட்டது. அவர்களது கவலை எல்லாம், தாழ்த்தப் பட்ட சாதியினர் தீர்த்தக் கேணியில் இறங்கினால் தீட்டுப் பட்டு விடும் என்பது தான். நம்புங்கள், இந்தச் சம்பவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நடந்துள்ளது. 

இதற்கிடையில், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்து விட்ட இந்த விவகாரம், அரசாங்க அதிபர் மட்டத்திற்கு சென்றுள்ளது. அரச அதிகாரிகள் கோயிலுக்கு வந்து விசாரித்த நேரம், "தேர் இழுக்க பாதை சரியில்லை" என்ற காரணம் சொல்லப் பட்டது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், அடுத்த வருட திருவிழாவுக்கு இடையில் தார் போட்ட பாதை செப்பனிட்டு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதற்குப் பிறகு எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் தேரோட்டம் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நூதனமான சாதிப் பாகுபாடு பின்பற்றப் படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் "இனந்தெரியாத" பக்தர்கள் திருவிழாவுக்கு வந்து தேர் இழுப்பதை அனுமதிக்கிறார்கள். ஆனால், உள்ளூரை சேர்ந்த பக்தர்களை தடுக்கிறார்கள். அதற்குக் காரணம் சாதி அன்றி வேறென்ன? உள்ளூரில் இருப்பவர்கள் யார் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரியும். ஆனால், வெளியூர்க்காரர்களை கண்டுபிடிக்க முடியாது. இது தான் காரணம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அச்சுவேலியில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்களப் படையினரும் சேர்ந்து தேர் இழுத்த தகவல் வந்தது. இது அந்தக் கோயிலில் கடந்த இரு வருடங்களாக நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா, சிறிலங்கா படையினருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவர்களை வரவழைத்ததாக சொல்லப் படுகின்றது.

இது மேலெழுந்தவாரியாக "நல்லிணக்கம்" என்ற போர்வையின் கீழான நவீன சாதிப் பாகுபாடு. "தேர் இழுப்பதற்கு சிங்களப் படையினரை கூட அனுமதிப்போம். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொடுவதற்கு அனுமதியோம்." என்பதற்குப் பின்னால் உள்ள சாதிவெறி தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதையெல்லாம் கண்ட பின்னரும், "இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்" என்று சில நடுநிலை நக்கிகள் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.


Monday, July 09, 2018

விஜயகலாவின் "குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்" ஒருபோதும் இருக்கவில்லை!

குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். அதை எதிரொலித்த முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "புலிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்" என்று பேசியது இலங்கை முழுவதும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. வடக்கிலும், தெற்கிலும் இதை இரண்டு வகையாக மொழி திரித்து புரிந்து கொண்டனர்.

தெற்கில் உள்ள அரச ஆதரவு சிங்களவர்கள் இதை ஒரு தேசத் துரோக பேச்சாக கருதினார்கள். இதை ஒரு சராசரி அரசியல்வாதியின் மக்களை ஏமாற்றும் பேச்சாக கருதாமல், விஜயகலா "உண்மையிலேயே புலிகளை மீளக் கொண்டு வர விரும்பினார்" என்பது போல நினைத்து அவர் மீது வசை பாடினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று சிங்கள ஊடகங்களும் இனவாதத் தீயில் எண்ணை ஊற்றின. மறுபக்கத்தில், வடக்கில் உள்ள புலி ஆதரவுத் தமிழர்களும் இதை சீரியஸாக எடுத்து விட்டார்கள். "புலிகளின் பெயர் சொன்னால் சிங்களவர்கள் கதறுகிறார்கள்" என்று தமக்குள் சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டனர்.

வடக்குத் தமிழ் அரசியல்வாதிகள் வாக்கு வேட்டையை கருத்தில் கொண்டு புலிகளின் புகழ் பாடுவது இதுவே முதல் தடவை அல்ல. மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மேடையில் புலிகளை புகழ்ந்து பேசி சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே, "வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் ஈழம் உருவாகி விடும்" என்று பேசி வந்தார்.

இந்த அரசியல்வாதிகள் சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், புலிகளின் மீளுருவாக்கத்தை சீரியஸாக எடுக்கும் அளவிற்கு முட்டாள்கள் அல்ல. யானை இருந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிகேற்ப புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது இலாபகரமானது. இனரீதியான பிரிவினை கூர்மை அடைந்துள்ள நாட்டில், இது போன்ற பேச்சுக்களை வைத்தே தேர்தல்களில் ஓட்டுக்களை அள்ள முடியும்.

யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது குறித்து மாற்றுக் கருத்து எதுவுமில்லை. அதற்காக, அங்கு முன்பு எப்போதுமே குற்றங்கள் நடக்கவில்லை என்பது போலப் பேசுவதில் உண்மை இல்லை. ஈழப்போருக்கு முன்னரும் அங்கே நிறைய குற்றங்கள் நடந்துள்ளன. திருட்டுக்கள், கொள்ளைகள், பாலியல் பலாத்காரங்கள் மட்டுமல்லாது, பட்டப்பகலில் கொடூரமான கொலைகளும் நடந்துள்ளன.

எண்பதுகளில் யாழ்ப்பாணம் எப்படி இருந்தது?

1. சாதி ஆணவப் படுகொலைகள் நிறைய நடந்தன. சாதிவெறி காரணமாக பட்டப் பகலில் சந்தையில் வெட்டிக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. குறிப்பிட்ட காலங்களில், குறிப்பிட்ட ஊர்களில், மக்கள் வெளியே நடமாட அஞ்சினார்கள். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அன்றிருந்த போலீஸ்காரர்களும் சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், சிறிலங்கா காவல்துறையில் அன்றிருந்த தமிழ்ப் போலீஸ்காரர்களும் பெரும்பாலும் உயர்சாதியினர் தான்.

2. உறவினர்களுக்கு இடையில் ஏற்படும் தகராறுகள் காரணமாகவும் நிறையப் படுகொலைகள் நடந்துள்ளன. குடிமரபுப் படுகொலைகள் (feud) யாழ்ப்பாண சமுதாயத்தில் சர்வ சாதாரணம். தமது குடும்ப உறுப்பினர் கொல்லப் பட்டால், அதற்கு பழிக்குப் பழியாக எதிராளிக் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்வது நீதியாகக் கருதப் பட்டது. இதில் பலியாகும் நபர் ஒரு அப்பாவியாகக் கூட இருக்கலாம். ஒரு தடவை, யாழ் நகரில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸை வழிமறித்து பத்துக்கும் குறையாத பயணிகள் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப் பட்டனர். அதற்குக் காரணமும் குடும்பப் பகை தான்.

மேற்குறித்த குற்றச் செயல்கள் பற்றிய விபரங்கள், ஈழநாடு போன்ற பிராந்தியப் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக இடம்பெற்றன. இன்று பலர் அவற்றை எல்லாம் மறந்து விட்டது போன்று நடிக்கிறார்கள். இது ஒன்றில் வேண்டுமென்றே மறக்கும் வியாதி (Selective amnesia), அல்லது அரசியல் பிரச்சார காரணங்களுக்காக மறைக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று பலர் சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம். உண்மையில் அன்று சிறிய  குற்றங்கள் மட்டுமே நடக்கவில்லை. பெரிய குற்றங்கள் தாராளமாக நடந்து கொண்டிருந்தன!  வர்த்தகர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கும், கந்துவட்டிக் காரர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து நகைகள், காணிகளை பறிப்பதற்கும் எந்தத் தடையும் இருக்கவில்லை.  அதே மாதிரி சாதி ஆணவக் குற்றவாளிகளும் தண்டிக்கப் படவில்லை. இதற்குப் பெயர் வர்க்க நீதி.

பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்கு காரணமாக தண்டிக்கப் படவில்லை. இங்கே அரசியல் செல்வாக்கு எனப்படுவது, சிறிலங்கா அரசு, புலிகளின் அரசு இரண்டுக்கும், அல்லது இரண்டில் ஒன்றுடன் நெருக்கமாக இருந்தவர்களை குறிக்கும். பெரும்பாலும் வர்த்தகர்கள், பணக்காரர்கள் செய்யும் குற்றங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அந்த நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. "penny wise, pound foolish" என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அதாவது, சிறிய குற்றங்களை கண்டு அலறுவோர், பெரிய குற்றங்களை கண்டுகொள்வதில்லை.

அதிகம் பேசுவானேன். தற்போது புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று பேசி இருக்கும் விஜயகலாவின் மறைந்த கணவர் மகேஸ்வரன் கூட, புலிகளின் காலத்தில் தீயவழியில் பிரபலமான ஒரு கிரிமினல் குற்றவாளி தான்! அன்றிருந்த பொருளாதாரத் தடையை பயன்படுத்தி, மண்ணெண்ணெய் கடத்தி வந்து பத்து மடங்கு இலாபத்திற்கு விற்று, பகல் கொள்ளை அடித்த கொள்ளைக்காரன். அதனால் "மண்ணெண்ணெய் மகேஸ்வரன்" என்று ஒரு பட்டப் பெயர் கூட கிடைத்திருந்தது. ஓட்டாட்டண்டியாக இருந்து கோடீஸ்வரனாக மாறிய மகேஸ்வரனின் வாழ்க்கைக் கதை பற்றி யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரியும்.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட பலர் கொள்ளை இலாபம் சம்பாதித்து பணக்காரர் ஆனார்கள். அதை விட, தமிழ் மக்களின் அவல நிலையை பயன்படுத்தி அநியாய வட்டி வாங்கிய கந்துவட்டிக் காரர்களும் இருந்தனர். இந்தக் குற்றவாளிகளில் ஒருவர் கூட புலிகளால் தண்டிக்கப் படவில்லை. இப்போதும் இதை வாசிக்கும் சிலர், அத்தகைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்களே தவிர, இதையெல்லாம் குற்றமாக பார்க்க மாட்டார்கள்.

வீடுடைத்து நகைகளை திருடினால் அது கிரிமினல் குற்றம் தான். ஆனால், கந்துவட்டிக்காரர் அதே நகைகளை வட்டிக் காசு என்ற பெயரில் திருடினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறோம். கடன் பிரச்சினையால் குடும்பமாக தூக்கு மாட்டி செத்தவர்கள் உண்டு. அதைக் கேள்விப் பட்டாலும், வட்டிக்கு கடன் கொடுப்பது கிரிமினல் குற்றம் என்று சொல்லத் தெரியவில்லை. 

தெருவில் எம்மிடம் உள்ள பணத்தை வழிப்பறி செய்வது கிரிமினல் குற்றம் தான். அப்படியானால், பொருட்களை பதுக்கி வைத்து பல மடங்கு இலாபம் வைத்து விற்கும் வர்த்தகர்கள் எம்மிடம் பணம் பறிப்பது வழிப்பறி இல்லையா? நியாயமற்ற முறையில் பணம் அபகரிப்பதும் திருட்டு தான். வியாபாரம் என்ற பெயரில் வழிப்பறி செய்யும் வணிகர்களும் கிரிமினல் குற்றவாளிகள் தான்.

அப்படியானால், இங்கே ஒரு கேள்வி எழலாம். விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன என்று சொல்லப் படுவது உண்மை இல்லையா? அது ஓரளவு மட்டுமே உண்மை. இங்கே நாங்கள் கேட்க வேண்டிய கேள்வி, எத்தகைய குற்றங்கள் குறைந்திருந்தன? எப்படிப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டனர்?

திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் நடக்கவில்லை. அதற்குக் காரணம், தெருக்களில் எந்நேரமும் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். அதனால் இளம் பெண்களும் இரவில் எந்தப் பயமும் இல்லாமல் தனியாக நடமாட முடிந்தது. குற்றவாளிகள் பிடிபட்டால் கடுமையான தண்டனை வழங்கினார்கள். குறிப்பிட்ட காலம், தமிழீழ குற்றவியல் சட்டம், நீதிமன்ற விசாரணை என்று நெகிழ்வுத்தன்மை காட்டினாலும் தண்டனைகளின் கடுமை குறையவில்லை.

வழிப்பறி செய்வோர், வீடுடைத்து திருடுவோர் போன்ற குற்றவாளிகள் பெரும்பாலும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பார்கள். கசிப்பு என்ற கள்ளச்சாராயம் காய்ச்சுவோரும் அப்படித் தான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக குடிசை கட்டி வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதில் ஈடுபட்டனர். அவர்களது குற்றங்களுக்கு தண்டனையாக சுட்டுக் கொன்று தெருவில் போட்டாலும் கேட்பதற்கு யாரும் இருக்கவில்லை. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். உலகம் முழுவதும் அது தான் யதார்த்தம். ஈழமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

புலிகள் தலைமறைவாக இயங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சமூகவிரோதிகள் என்ற பெயரில் பலரைச் சுட்டுக் கொன்றனர். மின்கம்பத்தில் கட்டப்பட்ட சடலத்தில் என்னென்ன குற்றங்களுக்காக தண்டனை வழங்கப் பட்டது என்று எழுதப் பட்டிருக்கும். இந்த நடவடிக்கை காரணமாக, பின்னர் புலிகளின் நேரடி ஆட்சி நடந்த காலத்தில் யாரும் உயிர் அச்சம் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. இதைத் தான் விஜயகலா மகேஸ்வரன் தனது உரையில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அதாவது, புலிகள் செய்த மாதிரி கடுமையான தண்டனை வழங்கினால் குற்றச் செயல்கள் குறையும் என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்.

இன்னொருவிதமாக சொன்னால், சவூதி அரேபியாவில் உள்ள மாதிரி சாதாரண திருட்டுக்கும் கை வெட்டுவது போன்ற கடுமையான தண்டனைகள் கொண்டு வரப் பட்டால் மட்டுமே நாடு உருப்படும் என்பதே விஜயகலாவின் வாதம். இதையே அஸ்கிரிய பௌத்த சங்க மடாதிபதியும் "கோத்தபாய ராஜபக்சே ஹிட்லர் மாதிரி ஆட்சி நடத்த வர வேண்டும்" என்றார். இரண்டு பேரும் ஒரே கருத்தை தான் வெவ்வேறு விதமாகக் கூறி உள்ளனர்.

தமிழ்த் தேசியவாதிகள் விரும்புவது போல புலிகளின் ஆட்சி நடந்தாலும், சிங்களத் தேசியவாதிகள் விரும்புவது போல ஹிட்லரின் ஆட்சி நடந்தாலும், எல்லாக் குற்றங்களையும் முற்றாக ஒழிக்கப் போவதில்லை. பெரிய குற்றங்களை கண்டுகொள்ளாமல் சிறிய குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதனால் சமூகம் திருந்தப் போவதில்லை. 

குற்றங்கள் நடப்பதற்கான சமூக- பொருளாதாரக் காரணிகள் நீடிக்கும் வரையில் குற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். சிறிது காலம் ஆயுதங்களுக்கு பயந்து அடங்கி இருக்கலாம். அந்த அச்சம் போன பின்னர் குற்றங்கள் மீண்டும் தலைதூக்கும். அது தான் இப்போது யாழ்ப்பாணத்தில் நடக்கிறது. ஒரு நச்சு மரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்காமல் கிளைகளை மட்டும் வெட்டுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஆனால், இதைத் தான் பலர் தீர்வு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.