Sunday, June 04, 2023

பெல்ஜியத்தை உலுக்கிய கொலை வழக்கு - வர்க்க நீதி

2018 ம் ஆண்டு பெல்ஜியத்தில் மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கொலை, அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தற்போது பெல்ஜிய சமூகத்தை வர்க்க ரீதியில் பிளவு படுத்தும் விவகாரமாக உள்ளது. (பார்க்க: Escalatie in België na heksenjacht op daders fatale ontgroening: ‘Mensen spelen voor eigen rechter’

பொதுவாக பல மேட்டுக்குடியினரின் கல்லூரிகளில், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த திறைமைசாலி மாணவர்களுக்கும் இடம்கொடுப்பார்கள். அவ்வாறு தான் Sanda Dia என்ற ஆப்பிரிக்க பூர்வீகத்தை கொண்ட மாணவனுக்கும் இடம் கிடைத்தது. கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு பகிடி வதை அல்லது ரேங்கிங் நடப்பதுண்டு. அவ்வாறு சொல்லித் தான் குறிப்பிட்ட சில மாணவர்கள் Sanda Dia வை துன்புறுத்தியுள்ளனர். காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று குளிர் தண்ணீரில் மணித்தியால கணக்காக நிற்க வைத்து, ஒரு மீனை விழுங்கி, மீன் எண்ணெய் குடிக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கங்கள் செயலிழந்து சுய நினைவற்று கிடந்தவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. 

வருடக் கணக்காக இழுபட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கொலைக் குற்றம் தெளிவாக இருந்த போதிலும் குற்றவாளிகளுக்கு மென்மையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதாவது 400 யூரோ தண்டப்பணம், 300 மணிநேரம் கட்டாய வேலை. கொலைக் குற்றத்திற்கு இது தான் தண்டனை! அத்துடன் அவர்கள் பெயரில் குற்றப் பத்திரிகை பதிவுசெய்யப் பட மாட்டாது. ஆகவே எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கப் போகும் பதவிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது. 

ஏனென்றால் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் மேட்டுக்குடி குடும்பங்களை சேர்ந்தவர்கள். நாளைக்கு இவர்கள் தான் அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக வலம்வரப் போகிறார்கள். இது தான் வர்க்க நீதி. வழக்கு முடிந்த பின்னரும் குற்றவாளிகளின் பெயர், விபரம் மறைக்கப்பட்டு வருகின்றது. இந்த அநீதி கண்டு கொதித்தெழுந்த ஒரு யூடியூப் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டார். உடனே அந்த வீடியோ அகற்றப் பட்டது. சில காலம் எதுவும் வெளியிட தடைவிதிக்க பட்டது. 

ஆனால் பெல்ஜிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு குற்றவாளியின் பெற்றோர் நடத்தும் ஆடம்பர ரெஸ்டாரண்டில் போலியான முன்பதிவுகள் செய்து, எதிர்மறையான கருத்திட்டு நட்டமேற்படுத்தினார்கள். இன்னொரு குற்றவாளிக் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் சுவரில் கொலைகாரர்கள் என்ற வாசகம் எழுதப் பட்டது.

No comments: