Monday, November 29, 2010

அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்

கோபன்ஹெகன் நகரில் ஒரு தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த அகதிகளை, போலிஸ் குண்டர்கள் பலாத்காரமாக வெளியேற்றியுள்ளனர். டென்மார்க்கில் கடந்த வருடம் (13-8-2009) நடந்த இந்த சம்பவம், வழமை போலவே "சுதந்திர" ஊடகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தது. "உன்னத நாகரீகத்தைக் கொண்ட மேற்குலக நாடுகளில் போலிஸ் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்," என்று இப்போதும் நம்பும் படித்த பாமரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்த வீடியோவை கலையகத்தில் பதிவிட விரும்புகிறேன். அமைதியான வழியில் போராடிய அகதிகளையும், டேனிஷ் ஆதரவாளர்களையும், போலிஸ் எவ்வாறு மிருகத்தனமாக அடித்து வதைக்கின்றது என்பதை இந்த வீடியோவில் காணலாம். அகதிகளை அடித்தால் கேட்பதற்கு ஆளில்லை. மனித உரிமை குறித்து பாடம் எடுப்பவர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஊடகங்களுக்கு இதெல்லாம் ஒரு செய்தியல்ல.

9/11 தாக்குதல் இஸ்ரேலில் திட்டமிடப்பட்டதா?

//சகோ.கலையரசன் ஆரம்பத்திலிருந்தே உங்களிடம் இஸ்ரேல் தொடர்பாக நடுநிலை இல்லை. சான்றாக சர்வதேச பயங்கராதி பின்லேடன் கூறினான். நான் தான் அமெரிக்காவின் World Trade Center ஐ தகர்தேன் என்று.ஆனால் நீங்கள் எழுதுகிறீரகள் இல்லை இது இஸ்ரேலின் செயல் என்று. இதிலிருந்து உங்கள் நடுநிலையை உணரலாம்.//
(Colvin என்ற நண்பரின் பின்னூட்டம்.)

"9 /11 தாக்குதலை ஆப்கானிஸ்தானில் ஒளிந்திருந்த பின்லாடன் திட்டமிட்டார் என்பதற்கான ஆதாரங்களை இதுவரை யாரும் சமர்ப்பிக்கவில்லை. பின்லாடன் அவ்வாறு கூறுவதாக தெரிவித்த வீடியோ, ஓடியோ யாவும் மொழி திரிப்புகள் என்பது பின்னர் நிரூபணமானது. (நமக்கு அரபி மொழி தெரியாதென்பதால் நன்றாக ஏமாற்றலாம்.) ஆயினும், 9/11 தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது என்று, இதுவரை நான் எங்கேயும் குறிப்பிடவில்லை. தற்போது கர்த்தரின் கிருபையினால், "9/11 தாக்குதலை இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தியிருக்குமா?" என்பதை ஆராயும் வீடியோ கிடைத்துள்ளது. "Friends of Israel" என்ற தலைப்பின் கீழ், அவுஸ்திரேலியாவை சேர்ந்த Anthony Lawson அந்த ஆய்வை செய்துள்ளார். நான் எழுதாத ஒன்றை எழுதியதாக கூறினார் Colvin. ஆயினும், "9/11 லில் இஸ்ரேலின் பங்கு பற்றிய தகவலை" சகோதரர் Colvin மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் போலும். அவருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.




Aussie Trades Unionist Exposes 9/11 Cover-up

Friday, November 26, 2010

நீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா

கடந்த மாதம் டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டதாக ஒருவரை கைது செய்தார்கள். "முகமது கேலிச்சித்திரம்" வெளியிட்ட பத்திரிகை காரியாலயத்திற்கு குண்டு வைக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப் பட்டது. சர்வதேச ஊடகங்கங்களில் ஒரு நாள் மட்டுமே அந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர், பெல்ஜியம் அன்த்வேர்பன் நகரில் பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலிஸ் கூட்டு நடவடிக்கையில் ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), ஆகென் (ஜெர்மனி) ஆகிய நகரங்களிலும் மேலதிகமாக சிலர் கைதானார்கள். ஜெர்மனி தனது நாட்டிற்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக அறிவித்த சில தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அந்த "அச்சுறுத்தலுக்கும்", இந்த கைதுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தில் குண்டு வைக்க திட்டமிட்டார்கள் என்று எம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஊடகங்கள் அதனை மிகைப் படுத்தி செய்தி வாசிக்கவில்லை. கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்.

"அல்கைதா அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மட்டுமே அல்கைதா இயங்கி வருகின்றது." இதுவரை காலமும் ஊடகங்கள் எமக்கு போதித்து வந்த பாடங்கள் இவை. எங்காவது மேலைத்தேய நாட்டை சேர்ந்தவர்களை பலி கொண்ட குண்டு வெடிப்பு நடந்தால், அது அல்கைதா வேளை என்று நாமும் பேசப் பழகினோம். உண்மையில் அல்கைதா என்ற இயக்கம் உலகில் இல்லை. பல நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தாயகம் அமைக்கும் நோக்கம் கொண்ட பல அமைப்புகளுக்கு ஊடகங்கள் சூட்டிய பொதுப் பெயர் அது. ஆனால் இந்த "தேசங்கடந்த தீவிரவாத அமைப்புகள்" (இஸ்லாமிய வழியில் உலகமயமாக்கல்?) தமது தாயகப் பிரதேசம் என்று உரிமை கோரும் வரை படம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். சீனாவின் மேற்குப் பகுதியும், ரஷ்யாவின் தெற்குப் பகுதியும் அந்த இஸ்லாமியத் தாயகத்தில் அடங்குகின்றன.

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட செச்னியாவில் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. அப்போதெல்லாம் அதனை "செச்னிய விடுதலைப் போர்" என்று மேற்குலக நாடுகள் கூறி வந்தன. செச்னிய கிளர்ச்சி ரஷ்ய இராணுவத்தால் நசுக்கப்பட்டு விட்டது. தற்போது செச்னியா ரஷ்யாவுக்குள் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசம். அதனை ஆளுவது முன்னாள் கிளர்ச்சி இயக்க தலைவர்களில் ஒருவரான கடிரோவ். மாஸ்கோவின் சொற்கேட்டு நடக்கும் நல்ல பிள்ளையான கடிரோவ், தனது அதிகாரத்திற்கு போட்டியான கிளர்ச்சிக் குழுக்களை அடக்கி வருகிறார். அவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஆட்களை அனுப்பி கொலை செய்கிறார். வியனாவிலும் (ஆஸ்திரியா), துபாயிலும் கடிரோவின் எதிராளிகள் கொலை செய்யப்பட்டனர். இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், இன்னமும் செச்னியாவில் சில ஆயுதபாணி இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளிலும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

செச்னிய யுத்தம் நடைபெற்ற காலங்களில், லட்சக் கணக்கான ரஷ்ய (செச்னிய) அகதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரினார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாக அங்கீகரிக்கப் பட்டு, வளமாக வாழ்கின்றனர். தலைமறைவான செச்னிய இயக்கம், மேற்கு ஐரோப்பாவில் வாழும் செச்னிய அகதிகள் மத்தியில் நிதி சேகரித்து வருகின்றது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இன்னமும் ஆயுதங்களை கைவிடாத அமைப்பினர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுகின்றவர்கள். அதனால் அவர்களுக்கு பிற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களும் நிதி திரட்டி அனுப்புகின்றனர். நிதி கொடுப்பது மட்டுமல்ல, போராளிகளையும் சேர்த்து அனுப்புகின்றனர். செச்னிய மலைப் பகுதிகளில் அரபுக்களைப் போல தோன்றும் போராளிகள் காணப்படுவது ஒன்றும் இரகசியமல்ல. (செச்னியர்கள் தோற்றத்தில் ரஷ்யர்கள் போன்றிருப்பார்கள்.)

தற்போது பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரோக்கோ நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள். பெல்ஜியம் அல்லது நெதர்லாந்து பிரஜைகள். செச்னியாவுக்கு நிதி சேகரித்து அனுப்பியமை, அங்கு ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்த்தமை, போன்ற குற்றச் சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். கைதான நபர்களில் ஒருவர் ரஷ்ய-செச்னிய இனத்தவர். முன்னர் குறிப்பிட்ட, கொபென்ஹெகனில் குண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான நபரும் ஒரு செச்னிய இனத்தவர். செச்னியாவில் Dokka Umarov என்பவரின் தலைமையில் இயங்கும் இயக்கத்துடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். செச்னியாவையும், அதனை அண்டிய முஸ்லிம்கள் வாழும் மாநிலங்களையும் சேர்த்து Imarat Kavkaz (Emirate Caucasus) அமைப்பதே அந்த இயக்கத்தின் இலட்சியம்.

Thursday, November 25, 2010

சினிமா: இஸ்ரேலிய வில்லன்களை பழிவாங்கும் துருக்கி ஹீரோ

காஸா நோக்கி சென்ற நிவாரணக் கப்பலில் இஸ்ரேலிய படையினர் நிகழ்த்திய படுகொலை சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மே 31, காஸா முற்றுகைக்குள் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, "மாவி மார்மரா" என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இஸ்ரேலிய கடற்படையினர், சர்வதேச கடற்பரப்பினுள் கப்பலை வழிமறித்தனர். இஸ்ரேலியரின் திடீர் தாக்குதல் காரணமாக, 20 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் சிறைப் பிடிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களும், கப்பல் பயணிகளும் துருக்கிய பிரஜைகள் ஆவர். அதனால் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான இராஜதந்திர உறவு முறிந்தது. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக தாக்குதல் நடந்த போதிலும், துருக்கியினால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை.

"Kurtlar Vadisi - Filistin" (ஓநாய்களின் பள்ளத்தாக்கு - பாலஸ்தீனம்) என்ற துருக்கி சினிமா, இஸ்ரேலுக்கு எதிரான போரை, வெள்ளித்திரையில் முன்னெடுக்கின்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை(மாவி மர்மரா கப்பல் படுகொலை) அடிப்படையாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரைக்கதை, அதற்கும் அப்பால் நகர்கின்றது. சினிமா ஹீரோ (துருக்கி ஜேம்ஸ் பான்ட்) படுகொலைக்கு காரணமான இஸ்ரேலிய படையினரை தேடித் தேடி அழிக்கிறார். இது ஒரு கற்பனைக் கதையாக இருந்த போதிலும், கொடுமைக்கார வில்லன்களாக இஸ்ரேலிய படையினர் சித்தரிக்கப் பட்டுள்ளனர். அரேபியர்களை வில்லன்களாக சித்தரித்து தான் ஹாலிவூட் சினிமாக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், சினிமாவில் இஸ்ரேலியர்கள் வில்லன்களாக காட்டப்படுவதை இஸ்ரேலால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஜனவரியில் உலகெங்கும் திரையிடப்படவிருக்கும் "குர்த்ளர் வாடிசி" சினிமாவை தடை செய்யுமாறு, இராஜதந்திர அழுத்தம் கொடுக்கப் பட்டது. 


"மாவி மார்மரா" படுகொலை தொடர்பான முன்னைய பதிவுகள்:
அமைதிப் படைக்கு அஞ்சும் இஸ்ரேல்
ஐ.நா.அறிக்கை: "அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது"

Tuesday, November 23, 2010

தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "கலாஷா" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர். கலாஷா மக்கள் இஸ்லாமியருமல்ல, கிறிஸ்தவர்களுமல்ல. அவர்களுக்கென்று தனியான மதம் உள்ளது. அநேகமாக கிரேக்கர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு முன்னர் பின்பற்றிய மதமாக இருக்கலாம். கலாஷா மத தெய்வங்களின் பெயர்களும், பண்டைய கிரேக்க தெய்வங்களின் பெயர்களும் ஒத்துப் போகின்றன.
மாசிடோனியாவை பூர்வீகமாக கொண்ட கிரேக்க சாம்ராஜ்யவாதி அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்தான். அலெக்சாண்டரின் படைவீரர்கள் சிலர் இன்றைய ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். அலெக்சாண்டர் தனது போர்வீரர்கள் உள்ளூர் பெண்களை திருமணம் முடிக்க ஊக்குவித்தான். அலெக்சாண்டர் கூட, பண்டைய ஆப்கான் இராசதானி ஒன்றின் இளவரசியை மனம் முடித்திருந்தான். இன்றைய கலாஷா மக்கள் கிரேக்கர்களாக இல்லாவிட்டாலும், கிரேக்க போர்வீரர்களுக்கும் உள்ளூர் ஆப்கான் பெண்களுக்கும் இடையிலான மண உறவின் விளைவாக தோன்றிய கலப்பினமாக இருக்கலாம். கலாஷா மக்களின் வாய்வழிப் புராணக் கதைகள், அலெக்சாண்டரின் வீர வரலாற்றைக் கூறுகின்றன. அவர்கள் தமது சந்ததி யாரிடம் இருந்து தோன்றியது என்று, மூதாதையரின் பெயர்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கின்றனர்.
பிற்காலத்தில் ஆப்கான், பாகிஸ்தான் பிரதேசங்கள் இஸ்லாமிய மயப்பட்டன. கலாஷா மக்களின் ஒரு பகுதியினர் முஸ்லீம்களாகி தமது மரபை மறந்து விட்டனர். எஞ்சியிருக்கும் கலாஷா மக்களையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுகின்றது. அவர்களது பாரம்பரிய உடைகளையும், கலாச்சாரங்களையும் விட்டு விட்டு "நாகரீகமடையுமாறு" வற்புறுத்தப் படுகின்றனர். கலாஷா மக்கள் நவீன கல்வியைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலும் அவர்களின் சமுதாயம் தனிமைப் படுத்தப் பட்டு காணப் படுகின்றது. கலாஷா மக்களின் தனித்துவான கலாச்சாரத்தை ஆயிரம் வருடங்களாக பாதுகாப்பதற்கு, தனிமைப் படுத்தல் ஓரளவுக்கு உதவியுள்ளது. இப்போது தான் கலாஷா பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று எழுதப் படிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த சமூகத்தின் அறிவுஜீவி இளைஞன் ஒருவன் கலாஷ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியை விவரிக்கும் ஆவணப் படம் இது. (நன்றி: அல்ஜசீரா)






Monday, November 15, 2010

நேட்டோ: "ரஷ்யாவே! மீண்டும் ஆப்கானிஸ்தான் வருக!!"

ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நேட்டோ தலைமையகம் ரஷ்யப் படைகளின் உதவியைக் கோரியுள்ளது. நேட்டோ செயலதிபர் Anders Fogh Rasmussen, "ரஷ்ய-நேட்டோ உறவில் புதிய தொடக்கம்." என்று கூறியுள்ளார். போதைவஸ்து கடத்தலை தடுக்கவும், ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கு பயிற்சியளிக்கவும் ரஷ்யாவின் உதவி தேவைப்படும் எனத் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் அடுத்த மாதம் லிஸ்பனில் கூடவிருக்கும் நேட்டோ உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் "புதிய தொடக்கம்" காரணமாக, நேட்டோ சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, "முன்னாள் சோவியத் குடியரசுகளில் நிலை நிறுத்தப் பட்டுள்ள படைகளில் அதிக பட்சம் 3000 வீரர்களே இடம்பெறுவர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக பட்சம் 24 போர் விமானங்களை, வருடத்திற்கு 42 நாட்கள் மட்டுமே நிறுத்தி வைக்க வேண்டும் என ரஷ்யா கேட்டிருந்தது. பால்கன், பால்ட்டிக், மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கத்திய படைகளை அனுப்பும் விடயத்தில், ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப் படுகின்றது. மெட்வெடேவ் எதிர்பார்க்கும் அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. இருப்பினும் அரை வாசி நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், அது ரஷ்யாவுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும்.

ஆப்கானிஸ்தான் பிரச்சினையை தீர்ப்பதற்கு நேட்டோ தவறுமானால், அது மத்திய ஆசிய நாடுகளின் ஸ்திரத் தன்மையை பாதிக்கும். அதனால் தான் ரஷ்யா நேட்டோவுக்கு உதவ முன்வந்ததாக ரஷ்ய அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யா, மத்திய ஆசியாவுக்கான நேட்டோ விநியோகப் பாதையை தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது. ரஷ்யாவை தோழனாக கொண்டு செயற்படுவதன் மூலம், ஆப்கான் பிரச்சினையை சுமுகமாக தீர்க்கலாம் என்று நேட்டோ எண்ணுகின்றது. ரஷ்யாவுடன் நட்புறவை விரும்பும் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு பக்கம். ரஷ்யாவை எதிரியாக கருதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மறு பக்கம். இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கும், ரஷ்யாவுடனான "புதிய தொடக்கம்" வழிவகுக்கலாம்.

"ஆப்கானிஸ்தானில் ரஷ்யப் படைகள், நேட்டோ படையினருடன் சேர்ந்து போரிட மாட்டார்கள். பீரங்கிக்கு தீனியாக ரஷ்ய வீரர்களை அனுப்ப வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கலாம். ஆப்கான் சகதிக்குள் இரண்டாவது தடவையும் மாட்டிக் கொள்ள ரஷ்யா தயாராக இல்லை." இவ்வாறு தெரிவித்தார், ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதுவர் Dmitry Rogozin . ஆயினும், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகளின் ஆயுத தளபாடங்களை ரஷ்ய வான் பரப்பினூடாக கொண்டு செல்லும் உடன்படிக்கை ஒன்றுக்கு ரஷ்யா இசைந்துள்ளது.


Sunday, November 14, 2010

கிறிஸ்தவர்களின் புனிதத்தை கெடுத்த இஸ்ரேலிய படையினர்

அநேகமாக எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்த கதை இது. புனித பவுல் இயேசுவின் சீடர்களில் ஒருவர். அவர் டமாஸ்கஸ் செல்லும் வழியில் ஆண்டவனின் அருள்வாக்கு கிடைத்தது. அதன் பிறகு பவுலின் (அதற்கு முன்னர் சவுல்) வாழ்க்கை அடியோடு மாறிப் போனது. கிறஸ்தவ மத ஸ்தாபகர்களில் ஒருவராக புனித பவுல், இன்றும் நினைவுகூரப் படுகின்றார்.

அப்போஸ்தலர் பவுல் கர்த்தரின் அருளைப் பெற்ற இடமாக கருதப்படும் வழி இன்றும் உள்ளது. இஸ்ரேலையும், சிரியாவையும் பிரிக்கும் கோலான் மலைப் பள்ளத்தாக்கில் அந்த இடம் அமைந்துள்ளது. இன்று குனைத்திரா என்று அரபு மொழியில் அழைக்கப்படும் நகரம், ஒரு காலத்தில் பிரதான வர்த்தக மையமாக திகழ்ந்தது. அந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள். அதனால் உலக கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தேவாலயம் ஒன்றும் அங்குள்ளது. பண்டைய தேவாலயம் என்பதால் அது கிரேக்க ஒர்தொடோக்ஸ் முறையில் கட்டப்பட்டுள்ளது. இன்று குனைத்திரா நகரமும், சுற்றாடலும் இடிபாடுகளுடன், பாழடைந்து போய்க் காணப்படுகின்றது. அங்கே வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாக, டமாஸ்கஸ்ஸில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு புனிதமான குனைத்திரா நகரம் இஸ்ரேலியரின் விமானக் குண்டு வீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. புனித பவுலின் ஆலயத்திற்கு என்ன நடந்தது?

"இஸ்ரேலை யாராலும் தோற்கடிக்க முடியாது. எந்தப் போரிலும் வெற்றி இஸ்ரேல் பக்கம்." போன்ற கருத்துகள் உலகம் முழுவதும் பிரச்சாரப் படுத்தப் படுகின்றன. மேற்குலகில் இருந்து முடுக்கி விடப்படும் அரசியல் பிரச்சாரத்தை, சில புரட்டஸ்தாந்து சபைகளும் தமது நம்பிக்கையாளர் மத்தியில் பரப்புகின்றன. அன்றும் இன்றும், இஸ்ரேலின் வெற்றிகளுக்கு காரணம் நவீன ஆயுத தளபாடங்கள். அமெரிக்கா உலகின் உயர்தர தொழில்நுட்ப அறிவை, இஸ்ரேலுக்கு முதலில் வழங்கி விடும். அயலில் உள்ள அரபு நாடுகள் சம பலத்துடன் நிற்க விடாமல், சர்வதேச சமூகத்தின் பேரில் தடைகள் ஏற்படுத்தப்படும். அண்மையில் ரஷ்யா, சிரியாவுக்கு நவீன ஏவுகணைகளை விற்க முன் வந்த போது, அமெரிக்கா தடுத்து விட்டது.

1967 ம் ஆண்டு ஆறு நாள் நடந்த போரை, இஸ்ரேலின் மாபெரும் வெற்றியாக வரலாறு காட்டுகின்றது. ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனர்களின் மேற்குக்கரை, எகிப்தின் சினாய் பாலைவனம், சிரியாவின் கோலான் குன்றுகள் என்பன இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டன. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை, சிங்களவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியது போல, யூதர்கள் அந்த வெற்றியை கொண்டாடினார்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலக கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அந்த ஆறு நாள் போரில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலங்கள் பல இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அவை வெறும் தேவாலயங்கள் மட்டுமல்ல, அவற்றை சுற்றி வாழ்ந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானார்கள். பெருமளவு கிறிஸ்தவர்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். இயேசு பிறந்த புனித மண்ணில் வாழ்ந்தவர்கள் யாரும் உங்கள் கண்ணுக்கு கிறிஸ்தவராக தெரியவில்லையா? பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் அதனை அந்நிய ஆக்கிரமிப்பாகத் தான் பார்க்கிறார்கள். பாலஸ்தீன தேசியவாதம் கூட கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்ரேல், கோலான் குன்றுகளை 1967 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றது. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இன்றும் டமாஸ்கஸ் அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கிராமங்களில் யூதர்கள் வந்து குடியேறி வாழ்கின்றனர். "ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதம்" என்று ஐ.நா. ஆணை பிறப்பித்தது. ஆனால் இஸ்ரேல் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, யூத குடியேற்றங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றது. "கோலான் குன்றில் குடியேற வருகிறீர்களா? நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் காத்திருக்கின்றன." போன்ற விளம்பரங்கள் அமெரிக்க நாளிதழ்களில் வருகின்றன.

1973 ம் ஆண்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோலான் குன்றுகளை மீட்கும் போரை சிரியா தொடங்கியது. "யொம் கிப்புர் யுத்தம்" என்று அழைக்கப்படும், அந்தப் போரின் ஆரம்பத்தில் சிரியப் படைகள் வெற்றிகளை குவித்தன. கோலான் குன்றுகளை மீட்டெடுத்தன. இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கி ஓடின. நவீன இஸ்ரேலின் வரலாற்றில் முதல் தடவையாக, "வெல்ல முடியாத நாடு" என்ற இமேஜ் நொறுங்கியது. ஆயினும் சிறிது நாட்களில் தன்னை சுதாகரித்துக் கொண்ட இஸ்ரேல் திருப்பித் தாக்கியது. எப்படி? தடை செய்யப்பட்ட நேபாம் குண்டுகளை வீசி, சிரியப் படைகளை பின்வாங்க வைத்தது.(பார்க்க:
MIDDLE EAST: The War of the Day of Judgment )சர்வதேச சமூகம் சகுனி வேலையில் இறங்கியது. சமாதானப் பேச்சுவார்த்தை நாடகமாடி, கோலான் குன்றை மூன்று பிரிவுகளாக துண்டு போட்டது. மேற்கில் பெரும்பகுதியை இஸ்ரேல் தக்க வைத்தது. கிழக்கில் சிறிய பகுதி சிரியாவுக்கு கொடுக்கப்பட்டது. இடையில் சூனியப் பிரதேசம் ஒன்றை ஐ.நா. சமாதானப் படை காவல் காத்தது.

புனித குனைத்ரா நகரம் இன்று சூனியப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் அது சிரியாவினால் நிர்வகிக்கப் படுகின்றது. 2001 ல், காலஞ் சென்ற போப்பாண்டவர் ஜோன் போல் அங்கு விஜயம் செய்து, பிரார்த்தனை செய்தார். பாப்பரசரின் விஜயத்தால், குனைத்ரா சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. (பார்க்க:
John Paul Prays for Peace In Former War Zone in Syria )
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இஸ்ரேலிய படைகளின் காட்டுமிராண்டித் தனத்தை கண்ணால் கண்டனர். குனைத்ரா நகரம் முழுவதும் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு சாட்சியமாக காணப்படுகின்றது. இஸ்ரேலிய படையினர் புனித பவுலின் தேவாலயத்தையும் விட்டு வைக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மனது புண்படும் வண்ணம் தேவாலயத்தின் தூய்மையை மாசு படுத்தியுள்ளனர். (பார்க்க : மேலேயுள்ள புகைப் படம்) தேவாலயத்தின் ரகசிய கருவூலங்களை, கிரனைட் வீசி உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊடகவியலாளரிடம் நடந்ததை விபரித்த தலைமை மதகுரு, "மனிதர்கள் இந்த அளவு கேவலமாக நடந்து கொள்வார்களா?" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.

When Pope John Paul visited this frontline town in the Israeli-occupied Golan Heights Monday, his Syrian hosts did not have to say anything....
Indeed, the panorama of destruction tells the whole story. Bulldozed houses, naked buildings, demolished hospitals, shell-holed churches and devastated mosques are blunt reminders of the bitter conflict between Israel and Syria.
Time stopped at Quneitra when the Israelis withdrew in 1974 under a U.S.-negotiated armistice. Israeli troops destroyed everything in their wake, leaving not one building intact...
Residents of the Golan Heights who have became refugees in other cities, including Damascus, say they see a good omen in the Pope's pilgrimage to Syria.
(Reuters, May 7, 2001)


இயேசு வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை வெளியேற்றிய இஸ்ரேலை, ஒரு கிறிஸ்தவன் ஆதரிக்க முடியுமா? அது கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா? இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் மத, இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் காலனியாதிக்க எஜமான்களின் விசுவாசிகள்.

Friday, November 12, 2010

மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து


கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முந்திய "மாண்டிய மதம்" இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றது. மாண்டிய மத போதகர்களில் ஒருவரான யோவான் (Yahya ibn Zakariyya அல்லது John the Baptist) இடமே, இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. 

மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றைய ஈராக்கை (முன்னை நாள் பாபிலோனியா) தாயகமாக கொண்டவர்கள். இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியாக கருதப்படும் அரமிய மொழியை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். இன்றும் மாண்டிய மத வழிபாடுகள் யாவும் அந்த மொழியில் இடம்பெறுகின்றன.

அரமிய கிளை மொழியான, "மாண்டா" என்ற மொழியில் இருந்தே மாண்டியர்கள் என்ற பெயர் வந்தது. "அறிவு" என்று அர்த்தம் கொண்ட மாண்டா மொழி, அரமிய மொழியை ஒத்தது. இன்று நடைமுறையில் உள்ள, மத்திய கிழக்கு பிராந்திய மொழிகளான ஹீபுரு, அரபு, ஆகியனவும் ஒரே மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இதனால் மாண்டியர்கள் யூத, அல்லது கிறிஸ்தவ மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று தவறாக கணிப்பிடப் படுகின்றனர். குறிப்பாக பண்டைய காலத்தில் நிலவிய "ஞோடிக்" (Gnostics) என்ற கிறிஸ்தவ பிரிவுடன் சேர்த்துப் பார்க்கப் படுகின்றனர். ஆயினும் மாண்டியிசம் ஒரு தனி மதம். கிரேக்கர்கள் பயன்படுத்திய ஞோடிக் என்ற சொல்லும், தமிழ் சொல்லான ஞானம், ஆங்கில சொல்லான know எல்லாம் ஒரே அடிப்படையை கொண்டவை.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான தீர்க்கதரிசிகள் பலரை மாண்டிய மதத்தவர்களும் கொண்டுள்ளனர். குறிப்பாக நோவாவின் நேரடி வழித்தோன்றல்களாக தம்மை கருதிக் கொள்கின்றனர். மாண்டிய மதகுருக்கள் தலைப்பாகை கட்டி, தாடி வளர்த்திருப்பார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய நாகரீகத்தைக் கொண்ட பாபிலோனிய நாட்டில் இருந்த மதம் ஒன்றின் எச்சசொச்சம் அது என்று கருதப் படுகின்றது. 


பாபிலோனியர் காலத்தில் மதகுருக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிய வேண்டுமானால், இன்றைய மாண்டிய மதகுருவைப் பார்த்தால் போதும். அவர்களின் மதச் சடங்குகளும் பாபிலோனிய காலத்தில் இருந்து, அப்படியே மாறாமல் தொடர்கின்றன. திருக்குரானிலும் மாண்டிய மதம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இஸ்லாமியரின் புனித நூல் அவர்களை "சபியர்கள்" என்று குறிப்பிடுகின்றது. அதனால் இன்று அதற்கு "சபிய மதம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.

இயேசுவுக்கு ஞானஸ்நானம் அளித்த ஜோன், மாண்டியர்களின் பிரதான ஆன்மீக ஆசான்களில் ஒருவர். இருப்பினும் அவர் அந்த மத நிறுவனர் அல்ல. மாண்டியர்களின் மத வழிபாட்டில் ஞானஸ்நானம் பெறுவது முக்கியமான சடங்கு. மாண்டிய மத குருக்கள், ஓடும் ஆற்று நீரில் நிற்க வைத்து ஞானஸ்நானம் கொடுப்பார்கள். இயேசுவும் ஜோர்டான் நதியில் ஞானஸ்நானம் பெற்றதாக விவிலிய நூல் கூறுகின்றது. அநேகமாக, மாண்டிய மதத்தவர்களை பின்பற்றியே ஞானஸ்நானம் எடுக்கும் சடங்கை கிறிஸ்தவர்களும் தமது மதத்தில் சேர்த்துக் கொண்டனர். 


இருப்பினும் மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுக்கும் நோக்கம் வேறு. அது ஒரு மனிதன் முக்தி பேறடைவதைப் போன்றது. அதாவது மாண்டிய சித்தாந்தப்படி பொருளாயுத உலகை துறந்து, மெய்யுலகை காண்பது. இந்த அடிப்படை தத்துவம் மாண்டிய மதத்தை, கிறிஸ்தவ மதத்தில் இருந்து வேறுபடுத்துகின்றது. கிறிஸ்தவ மதமானது ஒரு மீட்பர் வரும் வரை காத்திருக்கச் சொல்கின்றது. இயேசு கிறிஸ்து ஒரு இரட்சகர் ஆவார். ஆனால் மாண்டிய மத மகான்களின் கடமை, மக்களுக்கு அறிவைப் புகட்டுவது.

Ginza Rba மாண்டிய மதத்தவர்களின் புனித நூல் ஆகும். இரண்டு பகுதிகளைக் கொண்ட நூலில், மாண்டியரின் வரலாறு, செய்யுள்கள், நன்மையின் தோற்றம், தீமையின் தோற்றம், போன்ற விடயங்கள் உள்ளன. அந்த நூல் இன்று வரை மாண்டா-அரமிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஒரேயொரு மேற்கத்திய மொழிபெயர்ப்பு ஜெர்மன் மொழியில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. மாண்டிய மதம் உலகை இரண்டு பிரிவாக பிரிக்கின்றது. நன்மை - தீமை, பொருள் - ஆன்மா, ஒளி - இருள், போன்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளுக்கு இடையே சமரசம் ஏற்பட முடியாது என்று போதிக்கின்றது. 


அதே மாதிரியான அறிவியல் கோட்பாடுகள், "ஞோடிக் கிறிஸ்தவ" பிரிவினரிடையே காணப்பட்டது. ஆனால் மத அதிகாரத்திற்கான போரில் இன்றைய கிறிஸ்தவ மதம் வென்றதால், அந்தக் கோட்பாடு மறைந்து விட்டது. கிறிஸ்தவ மதம், மாண்டிய (அல்லது ஞோடிக்) கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றது. அது ஏழை - பணக்காரன், ஆண்டான் - அடிமை, போன்ற வர்க்க எதிரிகளும் சமரசமாக வாழ வேண்டும் எனப் போதிக்கின்றது. மேற்குலகில் பிற்காலத்தில் தோன்றிய மார்க்ஸியம் மட்டுமே அந்த வர்க்க சமரசத்தை எதிர்த்தது. 

மாண்டிய மத உறுப்பினர்கள் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்றும், வன்முறையில் இறங்கக் கூடாது என்றும், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பிற மதத்தவர்களின் வன்முறைக்கு இலகுவாக ஆளாகி அழிந்து வருகின்றனர். இன்றைய துருக்கி, கிரேக்க பகுதிகளில் வாழ்ந்த ஞோடிக் பிரிவினரை கிறிஸ்தவர்கள் அழித்து விட்டார்கள். அண்மைக் காலம் வரையில், ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் மட்டுமே மாண்டிய மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக முன்னாள் பாபிலோனிய நாடான, இன்றைய ஈராக்கில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஈராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சிக் காலம் வரையில் ஓரளவு நிம்மதியாக வாழ முடிந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர், நிலைமை மோசமடைந்தது. 

இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், மாண்டிய மத உறுப்பினர்களை இலக்கு வைத்துக் கொன்றார்கள். இந்தப் படுகொலைகளுக்கு சாமானிய இஸ்லாமிய மக்களின் ஆதரவும் இருந்தது. அதற்கு காரணம், காலங்காலமாக இஸ்லாமியர்கள் மாண்டிய மதத்தினரை, மத நம்பிக்கையற்றவர்கள் எனக் கருதி வந்தனர். சாதாரண இஸ்லாமிய அயல் வீட்டுக்காரன் கூட, மாண்டிய மதத்தவர் மீது வெறுப்புக் காட்டுவது வழமை. உயிரச்சம் காரணமாக, மாண்டிய மதத்தவர்கள் பெருமளவில் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இன்று அவர்கள் மேற்குலக நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். இன்று உலகில் அழிந்து வரும் புராதன மதங்களில் மாண்டிய மதமும் ஒன்று.

மேலதிக தகவல்களுக்கு:
Mandaeism
Ginza Rba


பின்னிணைப்பு: 

ஈரானில் வாழும் மாண்டிய மதத்தவர் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தில் பார்க்கக் கிடைத்த தகவல்கள்:

மாண்டிய மதத்தை பின்பற்றுவோர் இன்றைக்கும் உள்ளனர் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. ஈரானில், ஈராக் எல்லையோரம் உள்ள அரபு மொழி பேசும் பகுதியில், இன்றைக்கும் சில நூறு மாண்டியர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென்று தனியான புனித நூல் உள்ளது. அவர்கள் அரபு போன்றதொரு மொழியை பேசுகின்றார்கள். மாண்டி - அரைமைக் என்று அதனை அழைக்கலாம். படித்தவர்கள் மட்டும் அரபு அல்லது பார்சி பேசுகின்றார்கள். ஆனால், மாண்டியர்கள் பேசும் மொழியை அரேபியர்கள் புரிந்து கொள்வது கடினம்.

ஈரானிய அரசு, மாண்டிய மதத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவர்கள் தமது மதச் சடங்குகளை பின்பற்றுவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை பின்பற்றலாம். ஆனாலும், அரசு அங்கீகாரம் கிடைக்காத படியால், ஈரானில் அவர்களது எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பலர் அமெரிக்கா, ஐரோப்பா என்று புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.

ஈரானில் அரசுத் துறையில் வேலை செய்வதற்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் தொழிற்துறையிலும் பாரபட்சம் காட்டப் படுகின்றது. மாண்டேயர்கள் எல்லா தொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியாது. அவர்களை நகைக்கடைகள் வைத்திருப்பதற்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேசத்தில் தங்க நகைகள் விற்கும் கடைகள் எல்லாம் மாண்டியர்களுக்கு சொந்தமானவை. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணைப்பு:

Thursday, November 11, 2010

யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்


உலக வரலாற்றில் பல சிறிய மதங்கள், அரசியல் அதிகார பலம் இல்லாத காரணத்தால் அழிக்கப்பட்டு விட்டன. இன்றைக்கும் பெரும்பான்மை மதங்களின் அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்து வாழும் மதம் ஒன்றைக் குறித்த தகவல் இது. மத்திய கிழக்கில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றிய காலத்தில், "யேசிடி" (Êzidî) மதமும் தோன்றியது.

இன்றைய ஈரான், ஈராக் பகுதிகளில், சரதூசரின் மதத்தை பின்பற்றியவர்கள் பெரும்பான்மையோராக வாழ்ந்தனர். அவர்களின் முழுமுதற் கடவுள் அஹூரா மாஸ்டா. சரதூசர் இறைவனின் தூதர். இந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில, யேசிடி மதத்தில் காணப்படுகின்றது.

யேசிடி மதம், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய தத்துவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதனால் யேசிடி மக்களை யூதர்கள் என்றும், கிறிஸ்தவ பிரிவு என்றும், இஸ்லாமியப் பிரிவு என்றும் பலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். யேசிடிகள் ஐந்து நேரம் தொழுகை செய்வது, இஸ்லாமியரின் வழிபாட்டு முறையை ஒத்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் மெக்காவை நோக்கி வழிபடும் அதே நேரம், யேசிடிகள் சூரியனை நோக்கி வழிபடுகின்றனர். யேசிடி மதத்தினர், மயிலை கடவுளாகவும், தேவதையாகவும் (Melek Taus) வழி படுகின்றனர்.

யேசிடி மதத்தவர்கள் "மயிலின் மக்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். யேசிடி மதத்தை ஸ்தாபித்த Sheikh Adi Ibn Musafir  மயில் தேவதையின் அவதாரம் என நம்புகின்றனர். மயில் தேவதை பற்றிய கதை, இஸ்லாமியராலும், யேசிடிகளாலும் நம்பப் பட்டு வருகின்றது. ஆனால் இரு மத நம்பிக்கையாளர்களும் அதனை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கின்றனர்.

இறைவன் முதல் மனிதனான ஆதாமை படைத்த பின்னர், அனைத்து தேவதைகளும் அந்த மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்று உத்தரவிட்டாராம். எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம். மண்டியிட மறுத்த மயிலை, இறைவன் சாத்தானாக மாறும் படி படைத்ததாக இஸ்லாமியர் கூறுகின்றனர். ஆனால், அதே காரணத்திற்காக மயில் இறைவனின் பிரதிநிதியாக ஆசீர்வதிக்கப் பட்டதாக யேசிடிகள் நம்புகின்றனர்.

யேசிடி என்றால், "கடவுளின் மக்கள்" என்று அர்த்தம். யேசிடி மதத்தில் புதிதாக யாரும் சேர முடியாது. அந்த மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவரே, மத உறுப்பினர் ஆக முடியும். இதனால் அவர்கள், யூதர்கள் போல தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். யேசிடி மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் குர்திய இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களது புனித நூல்களான Zend Avesta, Meshef Roj இரண்டும் குர்து மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய குர்தியர்கள் அரபு மொழியில் இறைவனைத் தொழுகின்றனர். ஆனால், யேசிடி குர்த்தியர்களின் தொழுகை, குர்து மொழியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யேசிடி மதத்தவர்கள், இஸ்லாத்திற்கு முந்திய குர்திய பாரம்பரிய மதத்தை பின்பற்றி வந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பான்மை இஸ்லாமியர்கள், யேசிடிகளை "சாத்தானை வழிபடுபவர்கள்" என்று இகழ்ந்து வந்தார்கள். காலங்காலமாக அரேபியரும், இஸ்லாமிய குர்தியரும் யேசிடி மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வந்துள்ளனர். இனக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம், யேசிடி மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஓட்டோமான் துருக்கியரின் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான யேசிடி குர்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் ஆர்மேனியா போன்ற முன்னாள் சோவியத் பிரதேசங்களுக்கு சென்று புகலிடம் கோரினார்கள்.

இருபதாம் நூற்றாண்டில், சோவியத் யூனியனில் மட்டுமே யேசிடிகளின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டது. கம்யூனிச அரசாங்கம் பெரும்பான்மை கிறிஸ்தவ மதத்தினரின் மேலாதிக்கத்தை அடக்கி வைத்திருந்ததுடன், சிறுபான்மை மதங்களையும் பாதுகாத்து வந்தது. ஆயினும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. கிறிஸ்தவ மதவாத சக்திகளின் ஆதிக்கம் காரணமாக, யேசிடிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான யேசிடி மக்கள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரினார்கள்.

துருக்கியில் ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மறைந்த பின்னரும், யேசிடி மதத்தினர் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. துருக்கிய பாஸிச அரசு, சிறுபான்மை இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தது. ஜெர்மனி துருக்கிய தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான யேசிடிகள் ஜெர்மனி வந்து தங்கி விட்டனர். பிற்காலத்தில், அகதிகளாக வந்தவர்களும் அந்த சமூகத்துடன் சேர்ந்து கொண்டனர்.

இன்று உலகம் முழுவதும் அரை மில்லியன் யேசிடிகள் வாழ்வதாக கணக்கிடப் பட்டுள்ளது. ஆயினும் பல இடங்களில், அடக்குமுறை காரணமாக தமது மத அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்வதற்கு சாத்தியமுண்டு. அவர்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னுமுயரலாம். பெரும்பான்மை யேசிடிகள், ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகில் வாழ்கின்றனர். ஜெர்மனியில் 60000, அர்மேனியாவில் 40000, ரஷ்யாவில் 30000 யேசிடிகள் வாழ்கின்றனர். மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயரும் யேசிடி இளம்சமுதாயத்தினர் மத நம்பிக்கையை இழந்து வருவதால், அந்த மதத்தவரின் எண்ணிக்கை இன்னும் குறையலாம்.

வட ஈராக்கில், மொசூல் நகருக்கருகில் யேசிடி தலைமை மதகுரு "ஷேக் ஆடி" யின் சமாதி உள்ளது. வருடம் ஒரு தடவை அந்த நினைவகத்திற்கு ஆறு நாள் புனிதப் பயணம் செல்வது யேசிடிகளின் மதக் கடமை. பெல்ஜியத்தில் அகதியாக வாழும் குர்திய இளம்பெண் Bêrîvan Binevsa, யேசிடி மதத்தவர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார். இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவில், யேசிடி மத அனுஷ்டானங்களை கண்டு அறியலாம். ஆவணப்படம் துருக்கி மொழி பேசுகின்றது. பிரெஞ்சு உப தலைப்புகளைக் கொண்டுள்ளது.


மேலதிக தகவல்களுக்கு:
Being Yezidi
Yazidi



Wednesday, November 10, 2010

2009: சர்வதேச ஆயுத விற்பனை அதிகரித்துள்ளது

நெதர்லாந்தின் ஆயுத ஏற்றுமதி கடந்த வருடம் 12 வீதத்தால் (1 .41 பில்லியன் யூரோ) அதிகரித்துள்ளது. சர்வதேச ஆயுத விற்பனைக்கு எதிராக போராடும் அமைப்பு, வெளியிட்ட 2009 ம் ஆண்டுக்கான அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமைகள் மீறும் நாடுகளில் ஒன்றான மொரோக்கோ, அதிகளவு ஆயுதக் கொள்வனவை (555மில்லியன் யூரோ) செய்துள்ளது. அது மூன்று விமானத் தாங்கி யுத்தக் கப்பல்களை வாங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஜோர்டான், யேமன், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும் நெதர்லாந்து ஆயுத விநியோகம் செய்து இலாபம் சம்பாதித்துள்ளது. உலகில் ஆயுத விற்பனை செய்யும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில், நெதர்லாந்து ஆறாவது இடத்தை பெற்று வந்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும் எதிரி நாடுகளாக தொடரும் வரையில், ஆயுத விற்பனையாளர்கள் காட்டில் மழை தான். இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அதே நாடுகள், பாகிஸ்தானுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வது ஒன்றும் இரகசியமல்ல. பாகிஸ்தான் தனது கடற்படைக்கென, நெதர்லாந்திடம் இருந்து, 9 மில்லியன் யூரோ பெறுமதியான ICT system வாங்கியுள்ளது. அது மேலும் சில ரோந்து விமானங்களையும் வாங்கவுள்ளது.

இந்தியா தனது கடற்படையில் பொருத்துவதற்கு நெதர்லாந்து ராடார் கருவிகளை வாங்கியுள்ளது. அது கடந்த வருடங்களில், இரவில் பார்க்கக் கூடிய கருவிகளையும், துல்லியமாக ஷெல் தாக்குதல் நடத்தக் கூடிய லேசர் கருவிகளையும் வாங்கியுள்ளது. இந்திய இராணுவத்தின் நக்சலைட்கள் எதிர்ப்பு போரில் அத்தகைய கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தியாவின் இராணுவ பலம் வளர்ச்சி அடைந்து வந்த போதிலும், அது வறுமை ஒழிப்பிலும், சமூக-பொருளாதார பின்னடைவுகளிலும் கவனம் செலுத்தவில்லை. அபிவிருத்தியை அளவிடும் UNDP ஆய்வின் பிரகாரம் இந்தியா 134 வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 400௦௦ மில்லியன் (மொத்த சனத்தொகையில் 37 வீதம்) மக்கள் வறுமையில் வாழ்வதாக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 400 ஆயிரம் குழந்தைகள் பிறந்த 24 மணி நேரத்திற்குள் மரிக்கின்றனர். பொது மக்களுக்கான சுகாதார, மருத்துவ வசதிகளுக்கு மிக மிகக் குறைந்த தொகையை ஒதுக்கி வருகின்றது. தனி நபர் மருத்துவ செலவினத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் 175 நாடுகளில், இந்தியா 171 வது இடத்தைப் பிடித்துள்ளது.
முழுமையான அறிக்கையை வாசிப்பதற்கு:
நெதர்லாந்தின் ஆயுத ஏற்றுமதி குறித்த ஆய்வறிக்கை 2009
press release
Major Dutch arms exports to conflict zones, authoritarian regimes

Amsterdam, 20 February 2009 – The Netherlands remains one the world’s leading arms exporting countries and continues to sell to conflict areas and undemocratic regimes. In 2007, major export licenses were granted for destinations such as Saudi Arabia, Egypt, India, Oman and Pakistan. As a transport hub, the Netherlands is also playing an important role in the transit of arms to countries such as Equatorial Guinea, Jordan, Indonesia and Israel, according to the “Analysis of Dutch arms export licenses 2007” of the the Dutch Campaign against Arms Trade that is published in an English translation today.

Compared to many other countries, the Dutch government has a highly transparent way of reporting on Dutch military exports, although important improvements can still be made. The “Analysis of Dutch arms Export licenses 2007” surveys the most significant transfers based on rough data of export- and transit licences for so-called strategic goods as published by the Ministry of Economic Affairs on behalf of the Dutch parliament.

Apart from a very large order from the navy of Oman, the Dutch defence industry has also received a remarkable order from Pakistan for night vision equipment worth 20 million Euro. In the light of the war in Afghanistan in which Dutch troops participate, the Dutch government considers highly volatile Pakistan an acceptable arms export destination. At the same time, an equally large amount of military equipment has been sold to archrival India.

A large section of the ‘Analysis’ is dedicated to the importance of transit of arms through the Netherlands. When sent from EU or NATO countries there is hardly any control, although many allied countries maintain very different arms export standards in comparison with the Netherlands.

A remarkable sector of arms transit, namely logistical support for the wars in Iraq and Afghanistan are responsible for the rise in transit notifications. Apparently, the American military is increasingly using private carriers, including Dutch companies.

Tuesday, November 09, 2010

"மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது

மொரோக்கோவில் தனி நாடு கேட்டுப் போராடும், "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம், மீண்டும் ஒரு முறை மொரோக்கோ இராணுவத்தினால் நசுக்கப் பட்டுள்ளது. மொரோக்கோவின் தென் மாநிலமான மேற்கு சஹாரா ஸ்பானிய காலனியாக இருந்தது. 1975 ல், ஸ்பெயின் தனது காலனியை விட்டு வெளியேறிய உடனேயே, அந்தப் பிரதேசம் மொரோக்கோவினால் ஆக்கிரமிக்கப்பட்டது. "காஷ்மீர் பிரச்சினை" போல, மேற்கு சஹாரா மக்களிடம் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. அவை தீர்மானித்தது. இருப்பினும் மொரோக்கோ அரசின் அமெரிக்க சார்பு நிலைப்பாடு காரணமாக, அந்த கருத்துக் கணிப்பு இன்று வரை நடத்தப் படவில்லை. மேற்கு சஹாரா மீதான மொரோக்கோ ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

மேற்கு சஹாரா பிரதேச மக்கள் அரபு மொழி பேசிய போதிலும், இனரீதியாக பெரும்பான்மை மொரோக்கோ மக்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். POLISARIO என்ற அமைப்பு, மொரோக்கோ ஆக்கிரமிப்புக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தது. அயல் நாடான அல்ஜீரியா POLISARIO அமைப்பிற்கு ஆதரவு வழங்கியது. இருந்த போதிலும், மொரோக்கோ இராணுவத்தின் கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகள் காரணமாக, மேற்கு சஹாரா மக்கள் எல்லை கடந்து அல்ஜீரியாவினுள் தஞ்சம் கோரினார்கள். மொரோக்கோ, அல்ஜீரிய எல்லையில் சிறிய பிரதேசம் POLISARIO கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கட்டுப்பாடு எல்லையோரமாக மொரோக்கோ நீளமான பாதுகாப்பு மதில் கட்டியுள்ளதால், மேலதிக அகதிகள் வெளியேற்றம் தடுக்கப்பட்டது.

கடந்த மாதம், மேற்கு சகாராவில் வேறெந்த நாட்டிலும் காணப்படாத மக்கள் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மொரோக்கோ இராணுவத்தின் அடக்குமுறையை பொறுக்க முடியாத மக்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து, மாநிலத் தலைநகரமான லாயூன் (Laayoune) விட்டு வெளியேறினார்கள். பாலைவனத்தில் கூடாரங்களை அமைத்து தங்கினார்கள். மக்கள் எழுச்சியை சிறிது காலம் பொறுத்துக் கொண்ட மொரோக்கோ இராணுவம், இறுதியில் தனது கோர முகத்தைக் காட்டியது. பாலைவன கூடார முகாம்கள் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலில் சிக்கி மூன்று பேர் கொல்லப்பட்டனர். கீழேயுள்ள வீடியோ, களத்தில் இருந்து பிரத்தியேகமாக அனுப்பப்பட்டது. முகாம்கள் மீது ஹெலிகாப்டர் தாக்குதல் நடப்பதையும், மக்கள் சிதறி ஓடுவதையும் வீடியோவில் பார்க்கலாம்.
சம்பவம் குறித்து BBC இணையத்தளம் வழங்கிய செய்திக் குறிப்புக்கான சுட்டியை சொடுக்குவதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.Three dead as Morocco breaks up Western Sahara camp


Monday, November 08, 2010

சோவியத் சின்னங்களுக்கு தடை, அக்டோபர் புரட்சி ஊர்வலத்தில் கைகலப்பு

(மொஸ்கோ, 7 நவம்பர் 2010 )
மொஸ்கோவில் அக்டோபர் புரட்சியை நினைவு கூர்ந்து ஊர்வலம் சென்றவர்களை போலிஸ் கைது செய்தது. ஜோர்ஜியாவில் சோவியத் சின்னங்களையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் தடை செய்யும் சட்டம் அமுலுக்கு வருகின்றது.

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், அக்டோபர் புரட்சியின் தினத்தை நினைவு கூர்ந்து இடதுசாரி கம்யூனிச கட்சிகள் ஊர்வலம் சென்றனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி(CPRF) ஒழுங்கு செய்த ஊர்வலத்தில், தீவிர இடதுசாரிகளான போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தகவலின் படி 50000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் ஊடகங்கள் 3000 என கணக்கிடுகின்றன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, ஆளும் கட்சியை அனுசரித்து நடந்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியானது, ரஷ்ய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள். அவர்கள் ஊர்வலத்தில் கொண்டு வந்த பதாகைகளும், எழுப்பிய கோஷங்களும் கைகலப்புக்கு காரணம் என போலிஸ் தெரிவிக்கின்றது. "போலிஸ் ஆட்சி ஒழிக!" என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை அப்புறப் படுத்துமாறு போலிஸ் அறிவுறுத்தியது. ஆனால் போலிஸ் உத்தரவுக்கு அடிபணிய மறுத்த போல்ஷெவிக் கட்சியினர், "போலிஸ் ஆட்சி ஒழிக!" என்று கோஷம் எழுப்பிய வண்ணம் ஊர்வலத்தை தொடர்ந்தார்கள். இதனால் ஆர்ப்பாட்டக்காரருக்கும் போலீசாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால், போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 5 பேரும், இடதுசாரி முன்னனி தலைவரான Sergey Udaltsov கைது செய்யப்பட்டனர். மொஸ்கோ நகரின் Tverskaya வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
Russian oppositionists ruin their own actions

இதற்கிடையே, முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில், சோவியத் சின்னங்களை தடை செய்யும் சட்ட மசோதா அமுலுக்கு வருகின்றது. ஜோர்ஜிய நாடாளுமன்றம் முதலாவது வாக்கெடுப்பில் அந்த சட்டத்தை அங்கீகரித்துள்ளது. அதன் பிரகாரம், முன்னாள் சோவியத் யூனியனில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் யாவும் தடை செய்யப்படும். சோவியத் மரபு என்ற போர்வையின் கீழ் ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்படும் அபாயம் தோன்றியுள்ளது. கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் பாஸிச சட்டத்திற்கு, "சுதந்திர வரைபு" என்று முரண்நகையாக பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் Giya Tortladze : "ஜோர்ஜியா பயங்கரவாதத்தையும், கம்யூனிச மரபையும் ஜோர்ஜியா எதிர்த்து போராடும்..." எனத் தெரிவித்தார். இது குறித்த வீடியோ கீழே:


Sunday, November 07, 2010

ஈராக்கில் பிரிட்டிஷ் படையினரின் சித்திரவதை வீடியோ

ஈராக், பாஸ்ரா நகருக்கு அருகில் இரகசிய விசாரணை முகாமில், பிரிட்டிஷ் படையினர் கைதிகளை சித்திரவதை செய்து வந்துள்ளனர். கைதிகளுக்கு மின்சார அதிர்ச்சி கொடுப்பது, மணித்தியாலக் கணக்காக முட்டுக்காலில் நிற்க வைப்பது, ஒரு மீட்டர் அகலமான அறை ஒன்றினுள் சிறை வைப்பது. இவை போன்ற சித்திரவதைகள் மட்டுமல்ல, பெண் சிறைக்காவலர்கள் முன்னிலையில் ஆண் கைதிகள் பாலியல் இம்சைக்குள்ளாவதும் நடந்துள்ளது. சித்திரவதையை தடுக்கும் ஜெனீவா நிபந்தனைகளை பிரிட்டிஷ் படைகள் மீறியுள்ளன. பிரிட்டிஷ் அதிகாரிகள், சித்திரவதை செய்யும் யுக்திகளை கற்றுக் கொடுக்கும் வீடியோவும் சிக்கியுள்ளது.

Interrogation techniques at 'Britain's Abu Ghraib' revealed

Warning: video contains material that viewers may find disturbing

Saturday, November 06, 2010

நாடற்ற ரோமானிகள் தனி நாடு கோரலாமா?

"ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள்" கட்டுரையில், "யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகம் உருவாக்கப் பட்டது போல, ரோமா இன மக்களுக்கு ஏன் கிடைக்கவில்லை?" என்று குறிப்பிட்டிருந்தேன். பதிவர் டோண்டு அதற்கு எதிர்வினையாக ஒரு நீண்ட பதிவிட்டிருக்கிறார். (பார்க்க:யூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன் கிடைக்கவில்லை?) அதில் இந்தியாவின் தலித் சாதிகளின் நிலைமையை ரோமா மக்களுடனும், நாடார் சாதியை யூதர்களுடனும் ஒப்பிட்டிருக்கிறார். டோண்டு எடுத்திருக்கும் தீர்மானம் இது: "ரோமா மக்களின் பின்தங்கிய நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் நாடோடிகளாக வாழும் சுதந்திரப் பிரியர்கள். எந்த தொழிலிலும் ஈடுபடாதவர்கள். வணிகத் துறையில் முன்னேறாதவர்கள். அதிகாரத்தை எதிர்த்து போராடாதவர்கள். அவர்களிடையே இலக்கு நோக்கிய (தேசிய) அரசியல் அமைப்பு கிடையாது." இவை எல்லாம் ஆதாரமற்ற முன் அனுமானங்கள்.

ஹிட்லர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான Heinrich Himmler,ரோமா மக்கள் குறித்து எத்தகைய கருத்துகளைக் கொண்டிருந்தாரோ, அதையே இன்று பலரும் பிரதிபலிக்கின்றார்கள்.
"எமது ஆராய்ச்சியின் முடிவுகளின் படி, சிகொயனர் (ரோமா) மக்கள் கற்கால இனத்தை சேர்ந்தவர்கள். பின்தங்கிய மன வளர்ச்சி காரணமாக சமூகத்துடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாதவர்கள்." (Bekämpfung der Zigeunerplage) ஹிட்லர் காலத்தில், குறைந்தது அரை மில்லியன் ரோமா மக்கள் விஷ வாயு செலுத்தி படுகொலை செய்யப்பட்டார்கள். டோண்டு கேட்கிறார்: "போலந்தில் நாசிஸ தடுப்பு முகாமில் கொல்வதற்காக அடைத்து வைக்கப்பட்ட யூதர்கள் எதிர்த்துப் போராடி மடிந்தது போல, ரோமா மக்கள் ஏன் போராடவில்லை?" இது ஒரு அப்பாவித்தனமான கேள்வி. தடுப்பு முகாம் கொண்டு செல்லப்பட்டவர்களை, தாம் கொலை செய்யப் போகிறோம் என்று, நாஸி அதிகாரிகள் அவர்களிடம் கூறவில்லை. முகாமில் தனியான ஒரு இடத்தில் குளியலுக்கு என்று கூட்டிச் சென்று இரகசியமாக விஷ வாயு செலுத்தி கொன்றார்கள். தமக்கு முன்னே சென்றவர்கள் இறந்து விட்டனர் என்ற விஷயம் அடுத்து வந்த குழுவினருக்கு தெரியாது. கிளர்ச்சி இடம்பெற்ற முகாமில் இருந்தவர்களுக்கு, இந்த தகவல் தெரிந்த பின்னர் தான் எதிர்த்துப் போராடினார்கள். ரோமா மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பது ஒரு கற்பனை. நாசிஸ ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து விடுதலைக்காக போராடிய கம்யூனிச கெரில்லாக் குழுக்களில், ரோமா போராளிகளும் சேர்ந்திருந்தனர்.

ரோமா அல்லது ஜிப்சி மக்கள் எப்போது ஐரோப்பா வந்தார்கள் என்பது இன்று வரை கண்டறியப் படவில்லை. இந்த மக்கள் ஒரே மொழியை பேசுவதில்லை. ரொமானி மொழி பேசுவோர் பெரும்பான்மை மட்டுமே. வேறு பல பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் சமஸ்கிருதம், அல்லது ஹிந்துஸ்தானி மொழிகளின் மூலத்தை கொண்டுள்ளது மட்டுமே ஒரு ஒற்றுமை. பல ஐரோப்பிய நாடுகளில் நாடோடிகளாக அலைந்த காரணத்தால், பல்வேறு ஐரோப்பிய மொழிகளை சேர்ந்த சொற்களும் கலந்துள்ளன. ஜிப்சி மக்களின் பூர்வீகம் குறித்து எழுதப்பட்ட ஒரே ஒரு நம்பகமான சரித்திரக் குறிப்பு, இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களுடையது. சிந்து வெளி வரை படையெடுத்து சென்ற அரேபியர்கள், அங்கு வாழ்ந்த Zott (அனேகமாக ஜாட் சாதியினர்) எனும் இனத்தவர்களை பஸ்ராவுக்கு (ஈராக்) கொண்டு வந்து குடியேற்றினார்கள். இஸ்லாமிய அரேபியரின் பணிப்பின் பேரில், சிரியாவை காலனிப்படுத்த அம்மக்கள் அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கிருந்து கிரேக்க கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தினுள் நுழைந்திருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.

ரோமா மக்கள் நாடோடி வாழ்க்கைக்கு பழக்கப் பட்டவர்கள் என்பது உண்மை தான். அவர்கள் ஊருக்குள் சென்று குதிரைக்கு லாடமடிப்பது போன்ற உலோகம் சார்ந்த வேலைகளை செய்து வந்தனர். சிலர் கரடியை வைத்து வித்தை காட்டிப் பிழைத்தனர். சிலர் ஜோசியம் சொல்லிப் பிழைத்தனர். இசைக் கருவிகளுடன், நடனமாடும் பெண்களுடன் மக்கள் திரளை மகிழ்விப்பார்கள். இது அவர்களது சுதந்திரமாகத் தொழில் செய்யும் விருப்பைத் தான் எடுத்துக் காட்டுகின்றது. அதை தவறென்று கூற முடியாது. "நாகரீகமடைந்த மனிதர்களான நாங்கள்", ஒரு முதலாளிக்கோ, நிறுவனத்திற்கோ அடிமை சாசனத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, கூலிக்கு மாரடிக்கிறோம். ரோமா நாடோடிகள் திருடுகிறார்கள் என்பது, ஆரம்பத்தில் ஒரு அந்நியர் குறித்த அவநம்பிக்கையாக தான் தோற்றம் பெற்றது. மெல்ல மெல்ல ஐரோப்பிய நாடுகள் எங்கும் ரோமா மக்களை ஒதுக்கும் சட்டங்கள் இயற்றப் பட்டன. சில ரோமா இனத் திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கியதை அதற்கு காரணமாக காட்டினார்கள்.

ஒரு காலத்தில் ஸ்கொட்லாந்து நாட்டில் ஜிப்சிகளுக்கு அரசு மட்டத்தில் ஆதரவு இருந்தது. ஒரு ஜிப்சிப் பெண், ஸ்கொட்லாந்து மன்னனின் தீராத நோயை சுகப் படுத்தியதற்காக, அவர்கள் அரச விருந்தாளிகளாக நடத்தப்பட்டனர். சுவீடன் அரச குடும்பத்துடன் கொண்டிருந்த திருமண பந்தத்தின் காரணமாக, அவர்கள் சுவீடனுக்கு ராஜமரியாதையுடன் போய்ச் சேர்ந்தனர். இன்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் காணப்படும் ரோமா இனத்தவர்கள், பிரிட்டனில் இருந்து சென்றவர்கள் எனக் கருதப் படுகின்றது.(The Gypsies, Blackwell Publishers,Oxford) ஆனால் இந்த ராஜ மரியாதை எல்லாம் சிறிது காலமே நீடித்தது. அதற்குப் பின்னர், ரோமா இனத்தவர்களை ஒடுக்க ஆரம்பித்தார்கள். அனேகமாக இலகுவில் கண்டறியக் கூடிய மேனி நிறத்தைக் கொண்டதாலேயே, ஐரோப்பியர்கள் ரோமா மக்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்கள்.

ரோமா இனத்தவர்கள், அன்றிலிருந்து இன்று வரை நாடோடிகளாக அலையும் மக்கள் என்பது உண்மையல்ல. 18 ம் நூற்றாண்டிலேயே, பெரும்பான்மையானோர் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விட்டார்கள். ஹங்கேரியன் சாம்ராஜ்யத்தில், 1880 ம் ஆண்டு எடுத்த சனத்தொகை கணக்கெடுப்பை இங்கே தருகிறேன்.
-நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்பவர்கள் 274940
-நிரந்தர வதிவிடம் இருப்பினும் நாடோடிகளாக வாழ்பவர்கள் 20406
-தொடர்ந்தும் நாடோடிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 8938
(கவனிக்கவும்: அன்றைய ஹங்கேரிய சாம்ராஜ்யமானது, ஆஸ்திரியா, யூகோஸ்லேவியா, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது.)

வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் விட, ஸ்பெயின் ரோமா இனத்தவர்களுக்கு பெருமளவு கடமைப் பட்டுள்ளது. இன்று ஸ்பெயினின் தேசிய நடனமாக அறியப்பட்ட Flamenco நடனம், ரோமா இனத்தவர்களுக்குரியது. தென் ஸ்பெயினில் அண்டலூசியா மாகாணத்தில், பெருமளவு ரோமா இன மக்கள் வாழ்கின்றனர். 19 ம் நூற்றாண்டிலேயே, அண்டலூசியாவை நிரந்தர வதிவிடமாக்கியது மட்டுமல்லாது, தனித்துவமான இசையை, நடனத்தை வளர்த்து வந்தார்கள். அவர்களின் நடனம் இன்று ஸ்பெயின் முழுவதும் பயிலப் பட்டு வருகின்றது. சர்வதேச மேடைகளில் அரங்கேற்றப் படுகின்றது. இன்றும், தலைசிறந்த பிளமெங்கோ நடனக் கலைஞர்கள் யாவரும் ரோமா இனத்தவர்கள். அவர்களில் பலர் பணக்காரர்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை.

இன்று ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரோமா இனத்தவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் பெரும்பாலானோர் சமூகத்துடன் ஒன்று கலந்து விட்டனர். பூர்வீகத்தை மறந்தவர்களாக, பெரும்பான்மை சமூகத்தின் பெயர்களை சூட்டிக் கொண்டு வாழ்கின்றனர். கிழக்கு ஐரோப்பாவிலும், சோஷலிச அரசுகள் இருந்த காலங்களில் பெரும்பான்மை சமூகத்துடன் ஒன்று கலக்க ஊக்குவிக்கப்பட்டது. ஆனால் சோஷலிசம் ஒரு தலைமுறையை தாண்டவில்லை. அதற்குள் முதலாளித்துவம் வந்து, சமூகத்தை இரண்டாகப் பிரித்து விட்டது. எப்போதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பலமுள்ளது மட்டுமே நிலைத்து வாழும். அதனால் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை ரோமா இனததவர்களை ஒடுக்கும் அவலம் தோன்றியது.

இன்று எத்தனையோ வணிகர்கள், முதலாளிகள் ரோமா மக்களிடம் இருந்து தோன்றியுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருப்பதை இங்கே குறிப்பிடாமல் விட முடியாது. ஆனால் சில ரோமா முதலாளிகள், தமது சக இனத்தவர்களை சுரண்டும் அவலமும் நடக்கின்றது. ரோமா கந்து வட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி அல்லலுறும் மக்கள் அதிகம். உலகில் எல்லா சமூகங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன, ரோமா இனம் அதற்கு விதிவிலக்கு அல்லவே?
இறுதியாக இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். ரோமா இனத்தவர்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்றுள்ளது. "ரோமா இன மக்களுக்கென தனி நாடு வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைக்கும் இயக்கமும், அவர்கள் மத்தியில் இயங்கி வருகின்றது. தமது ரோமா தேசத்திற்கென்று தேசியக் கொடியையும் உருவாக்கி விட்டார்கள். ரோமா தேசியவாதிகளின் மொழியும், எமக்கு ஏற்கனவே பரிச்சயமானது தான். "உலகம் முழுவதும் ரோமா இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லை."
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைப்புகளை சொடுக்கவும்:
ROMANI NATIONALISM, FLAG AND ANTHEM
History of the Romani people

Friday, November 05, 2010

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!


இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். "மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்." என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

நரகாசுரன் யார்? எந்த வகை மக்களை கொடுமைப் படுத்தினான்? அவன் மரணத்தை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்?

புராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். புராணக் கதைகள், இந்து மதத்திற்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. உலகம் பூராவும் மக்கட் சமுதாயங்கள் மத்தியில் இது போன்ற கதைகள் வழக்கில் இருந்து வந்துள்ளன. புராதன சமுதாயத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள், தமது வீர புருஷர்களை கடவுளுக்கு ஒப்பிட்டும் நினைவுகூருவது வழக்கம். எழுத்து துறை வளர்ச்சியடையாத காலங்களில், இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.

தீபாவளி, நரகாசுரன் குறித்து, ஒன்றல்ல, பல கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றில் அண்ணளவாக வரலாற்றுடன் ஒத்துப் போகும் கதை ஒன்றை எடுத்து நோக்குவோம். நரகாசுரன் என்பவன் இன்றுள்ள அசாம் மாநிலத்தில், ஒரு நிலையான ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசன். பிராக்ஜோதிஷா அல்லது காமரூபா என்றழைக்கப் படும் ராஜ்யங்கள் (கி.மு. 4 - 12 ) அசாம் பண்டைய காலங்களில் சுதந்திர நாடாக இருந்தமைக்கு சான்று பகர்கின்றன. அசாம் ராஜ்யத்தை ஆண்ட அரச பரம்பரைகள் யாவும் நரகாசுரன் வழி வந்தவையாக கூறிக் கொண்டன. இந்த நரகாசுரன் குறித்து சரித்திர ஆதாரங்கள் இல்லாத போதிலும், அசாம் புராணக் கதைகளில் இருந்தே நரகாசுரன் குறித்த தகவல்களை பெற முடிகின்றது. அசாமை ஆண்ட, "டனவா" மன்னர்களை போரில் வென்ற நரகாசுரன், "நரகா பரம்பரையை" ஸ்தாபித்தான். இன்றைய அசாம் தலைநகரமான கௌஹாத்தி நரகாரசுரனின் ராஜ்யத்திலும் தலைநகரமாக இருந்துள்ளது.

பெண் தெய்வமான சக்தியை வணங்கும் சாக்தவ மதமும், தாந்திரிய மதமும், நரகாசுரன் காலத்தில் இருந்துள்ளன. இன்றைக்கும் அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை கௌஹாத்தி நகரில் தரிசிக்கலாம். "அசுரன்" என்பது அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பெருமைக்குரிய கௌரவப் பெயராக கருதப் பட்டிருக்கலாம். அதனால் மன்னர்கள் தமது பெயருக்குப் பின்னால் அசுரன் எனச் சேர்த்துக் கொண்டார்கள். புராதன ஈரானில், அசுரர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்களாக கருதப் பட்டனர். அவர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் எந்தக் கதையும் அந்த நாட்டில் இல்லை. மேலும் இஸ்லாமுக்கு முந்திய சாராதூசரின் மதமானது, "அசுரா மாஸ்டா" என்பவரை முழுமுதற் கடவுளாக கொண்டிருந்தது.

இந்து மதத்தவர்கள் கூறும் நரகாசுரன் கதையில் இருந்தே, அன்று என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியும். நரகாசுரன், அசாமில் இன்னொரு ராஜ்யத்தை நிர்வகித்த பானாசுரனுடன் கூட்டுச் சேர்ந்து, பிற தேசங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். நரகாசுரனின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. நரகாசுரன், ஆரிய மன்னன் இந்திரனின் தேசத்தையும் கைப்பற்றி, சூறையாடினான். இந்திரன் தேசத்து பொக்கிஷங்களை கொள்ளையடித்ததுடன், 16000 பெண்களையும் சிறைப்பிடித்து சென்றான். இந்து மதம் அதனை தேவ லோகம், அல்லது சுவர்க்கம் என்று வர்ணிக்கின்றது. பூமியில் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற நரகாசுரன், தேவ லோகத்திற்கும் அதிபதியாகினான் என்கிறது.

மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த ஆரிய இனங்கள் வட இந்தியாவில் இருந்த தேசங்களை வெற்றி கொண்டன. அவர்களின் தலைவனான இந்திரன் காலத்திலேயே, போரில் வெற்றிகளை குவித்து, அதிக நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது. இந்திரனின் தேசத்தில் வாழ்ந்த ஆரிய இனத்தவர்கள் தேவர்கள் என்றும், வெல்லப்படாமல் எஞ்சியிருந்த இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அசுரர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். இந்திரன் இந்தியப் படையெடுப்புகளின் போது, அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை இனப்படுகொலை செய்துள்ளான். அவர்களது செல்வங்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இவற்றை ரிக் வேதம் குறிப்பிடுகின்றது. அநேகமாக நரகாசுரன் இந்திரன் தேசத்தை கைப்பற்றிய செயலானது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.

"பூர்வீக இந்தியக் குடிகளான அசுரர்கள், ஆரியர்களின் வல்லரசான இந்திர லோகத்தின் மீது படையெடுப்பதா? யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் என்று பேரெடுத்த தேவர்கள், அசுரர்களின் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக வாழ்வதா? அது ஆரிய மேலான்மைக்கே அவமானமல்லவா?"
தேவர்கள் நரகாசுரனின் கொடுமை குறித்து விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் நரகாசுரனை போரில் கொன்றதாகவும் புராணக் கதை கூறுகின்றது. தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றி கொண்டாட வேண்டும் என நரகாசுரன் கேட்டுக் கொண்டதாகவும், அது தான் தீபாவளி என்றும் அந்தக் கதை முடிகின்றது. நரகாசுரன் மரணமடைந்த தினத்தை, மக்கள் வருடந்தோறும் தீப ஒளியேற்றி நினைவு கூர்ந்திருக்கலாம். ஆனால் பல நூறு வருடங்களுக்குப் பின்னர், அந்த துக்க தினக் கொண்டாட்டத்தின் அர்த்தத்தை மாற்றியிருக்கலாம். நரகாசுரனின் இறப்புக்குப் பின்னர், அவன் ஆண்ட நிலங்கள் யாவும் தேவர்கள் வசம் வந்திருக்கும். நரகாசுரனின் சொந்த இன மக்களையும் அவர்களே ஆண்டிருப்பார்கள். எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வரலாற்றை மாற்றி எழுதுவது இலகு.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு கதைகள் உண்டு. இராமர் வனவாசத்தின் பின்னர் திரும்பி வந்ததைக் கொண்டாடுவதாகவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது. மேலும் ஜெயின் மதத்தவர்களும், சீக்கியர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடும் முறை இந்து மதத்திற்கு முந்தியது. திபெத்தியர்களும், சீனர்களும் வெளிச்சக் கூடுகளை அமைத்து கொண்டாடுவார்கள். இலங்கையில் பௌத்த மதத்தினரும் அவ்வாறே வெசாக் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆகவே ஆரியரின் வருகைக்கு முன்பே, இந்தியாவில் தீபாவளி கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். அத்தோடு "நரகாசுரன் அழிப்புக்கு" முன்னரும் அது இந்தியாவின் முக்கிய பண்டிகையாக இருந்திருக்கும்.

ஆரியர்கள் இந்திய உப கண்டத்தை ஆக்கிரமித்த வெற்றித் திருநாளை, தீபாவளியாக மாற்றி கொண்டாடி வந்திருப்பார்கள். நரகாசுரனின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அவர்களின் ஆளுமையின் கீழ் வந்திருக்கும். ஆகவே நரகாசுரன் மரணத்தை கொண்டாட வேண்டுமென்பது அவர்களது நோக்கில் சரியானது தான். ஆனால் அடிமைப் பட்ட மக்கள், தமது தாயகம் ஆக்கிரமிக்கப் பட்ட தினத்தை கொண்டாட முடியுமா? தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா? அமெரிக்க கண்டத்தில் செவ்விந்திய பழங்குடியினரை இனவழிப்பு செய்த "கொலம்பஸ் தினம்" விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. எப்போதும் வென்றவர்கள் தான் வரலாற்றை எழுதி வந்துள்ளனர். அதனால் தான் தீபாவளியும், கொலம்பஸ் தினமும் சாதாரண பண்டிகைகளாக தெரிகின்றன. போரில் வென்றவர்கள் தம்மை நல்லவர்களாகவும், தோற்றவர்களை கெட்டவர்களாகவும் வரலாற்றை திருத்தி எழுதுவார்கள். அடுத்து வரும் சந்ததிகளுக்கு தாம் அடிமைகளின் வாரிசுகள் என்ற எண்ணமே மறந்து போகும்.

************************

மேலதிக விபரங்களுக்கு:
Diwali
Narakasura
Kamarupa

தமிழர்களை, யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?


இலங்கையின் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையை, உலகில் வேறெந்த நாட்டின் பிரச்சினையுடனும் ஒப்பிடுவதற்கு பலர் விரும்புவதில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை உலகில் வேறெங்கும் காண முடியாத தனித்துவமான பிரச்சினை என்றே, குறிப்பாக தமிழ் தேசிய குழுமத்தை சேர்ந்தவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு கூறுகின்றவர்கள் கூட, தமிழரை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிராகரிப்பதில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு ஒரு காலத்தில் கருத்தளவில் மட்டுமே இருந்து வந்துள்ளது. இன்று அது நிறுவனமயப்படுத்தப் பட்டு வருகின்றது.

இஸ்ரேலிய அரசு புரியும் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, பாலஸ்தீனர்களின் இனச்சுத்திகரிப்பையும், இனப்படுகொலையையும் கூட நியாயம் என்று வாதாடும் அளவிற்கு கண்மூடித்தனமான விசுவாசிகள் பெருகி வருகின்றனர். இஸ்ரேலுக்கு சார்பான தமிழ் சியோனிச கொள்கையை வளர்த்தெடுக்கும் நோக்கோடு சில தொடர் கட்டுரைகள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. புலம் பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் அதற்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. "தமிழர்களும், யூதர்களும் ஒரே தலைவிதியை பங்குபோடும் இனங்கள்," என்ற தத்துவார்த்த அடிப்படையில் இருந்தே அந்த சிந்தனைகள் யாவும் முகிழ்க்கின்றன. தமிழர் மத்தியில் சியோனிசத்திற்கு ஆதரவுத் தளம் உருவாக்க பாடுபடும் புத்திஜீவிகள், தவறான உதாரணங்கள் மூலம், அல்லது வரலாற்றை திரிப்பதன் மூலம் அத்தகைய முடிவை எட்டுகின்றனர்.

இலங்கை, இந்திய அரசியல் தலைமைகள், நீண்ட காலமாக இஸ்ரேலை நிராகரிக்கும் கொள்கையை பின்பற்றி வந்தன. இந்தியாவில் இந்து அடிப்படைவாத பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டன. பி.ஜே.பி. அரசு அணு குண்டு வெடிப்பு பரிசோதனை நிகழ்த்தியதன் பின்னணியில் இஸ்ரேலின் ஒத்துழைப்பு இருந்தமை ஒன்றும் இரகசியமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமானது மேற்கு-தெற்கு ஆசிய நாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேலிடம் ஒப்படைத்திருந்தது. அவற்றை கண்காணிப்பது மட்டுமல்ல, தேவை ஏற்படின் தலையீடு செய்து ஏகாதிபத்திய நலன்களை நிறைவேற்றுவதும் அவர்களது நோக்கமாக இருந்தது.

இந்த குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் அமைந்திருந்தவை பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள். அங்கெல்லாம் இஸ்ரேல் செல்வாக்கு செலுத்துவது இலகுவானதல்ல. பனிப்போர் காலகட்டத்தில் இந்தியா சோவியத் சார்பு நாடாக இருந்ததால், அங்கேயும் ஊடுருவ முடியாமல் இருந்தது. ஆனால் 1977 ம் ஆண்டு இலங்கையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் யு.ஏன்.பி. ஆட்சிக்கு வந்தமை, இஸ்ரேலுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேற்குலக சார்பு நவ தாராளவாத கொள்கையை பின்பற்றிய ஜே.ஆர். அரசு, முதன்முறையாக இஸ்ரேலிய நலன் பேணும் அமைப்பை உருவாக்கியது. அதிலிருந்து இலங்கை அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நெருக்கமடைய ஆரம்பித்தன. அப்போது தான் ஆரம்பாகியிருந்த ஈழப்போரை அடக்குவதற்கு இஸ்ரேலின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடிந்தது.

வடக்கு கிழக்கில் ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் மக்களுடன் மக்களாக கலந்திருந்ததால், அவர்களை அடையாளம் கண்டு தாக்குவது அரச படைகளுக்கு இயலாத காரியமாக இருந்தது. அதனால் "கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சை நடத்துமாறும், பத்து பொது மக்கள் இறந்தால் அதில் ஒரு போராளி இருப்பான்," என்றும் இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் கூறியிருந்தனர். இன்னொரு விதமாக கூறினால், போர்க்காலத்தில் தமிழ் இனப்படுகொலை அத்தியாவசியமானது என்று இஸ்ரேல் எடுத்துக் கூறியிருந்தது. அரச மட்டத்தில் இருந்து கசிந்த தகவல்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள், அன்று போராளிக் குழுக்களால் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன. 1984 காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் அடுத்தடுத்து பல விமானக் குண்டுவீச்சுகள் இடம்பெறுவதும், அவற்றில் பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்தது.

மூன்றாவது ஈழப்போர் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பலம் பெருமளவு அதிகரித்திருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்திய போர் விமானங்களை மட்டுமே வைத்திருந்த சிறி லங்கா விமானப் படையினால் சமாளிக்க முடியவில்லை. இப்படியே போனால், போராளிகளின் கை ஓங்குவதும், அரச படைகள் தோல்வியடைவதும் நிச்சயம் என்ற சூழல் காணப்பட்டது. விமான எதிர்ப்பு பீரங்கிகளால் எட்ட முடியாத, அதே நேரம் உயரத்தில் இருந்த படியே இலக்கை தாக்கக் கூடிய நவீன விமானங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான F - 16 ரக விமானங்கள் உயர் தாக்குதிறன் கொண்டவை. ஆனால் விலை மிக அதிகம். அதற்கு ஒரு மாற்று கிடைத்தது. இஸ்ரேலில் தயாரிக்கப்படும் கிபீர் விமானங்கள் F-16 செய்யும் அதே வேலையை செய்யும், ஆனால் விலை குறைவு. இதில் இன்னொரு அனுகூலம் இருந்தது. மேற்குலகம் நவீன ஆயுதங்களை விற்பதானால், மனித உரிமை மீறாத நாட்டிற்கே விற்போம் என்று நிபந்தனை எல்லாம் போடுவார்கள். காசு கொடுத்தால் இஸ்ரேலியர்கள் விமானம் தருவார்கள்.
"Since the J79 turbojet engine as well as much of the technology inside the Kfir are produced in Israel under U.S. license, all export sales of the Kfir are subject to prior approval from the U.S. State Department, a fact that has limited the sale of the Kfir to foreign nations. As of 2006, the IAI Kfir has been exported to Colombia, Ecuador, and Sri Lanka." (http://en.wikipedia.org/wiki/IAI_Kfir )

உண்மையில் இஸ்ரேல் வழங்கிய கிபீர் விமானங்களும், ட்வோரா கடற்படைக் கலங்களும் இல்லா விட்டால், இலங்கை அரசு ஈழப் போரில் வென்றிருக்காது. அதே நேரம், இஸ்ரேலிய தயாரிப்புகள் ஈழத்தில் பெருமளவு உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கும் ஈழத்தில் போரில் உடல் ஊனமுற்ற, உறவினர்களை இழந்த மக்கள், கிபீர்களையும், ட்வோராக்களையும் சபித்துக் கொண்டிருக்கிறார்கள். போரின் கொடுமையை உணராத புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமே, சியோனிசவாதிகளின் இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரம் எடுபடுகின்றது. இதை அவர்களது புலம்பெயர் அரசியலுக்கான தத்துவார்த்த அடிப்படையாகவே கருத வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்கள் அடிக்கடி "யூத diaspora " வையும், "தமிழ் diaspora" வையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அது சரியானதா?

புலம்பெயர்ந்த யூதர்கள் குறித்து இவர்கள் கொடுக்கும் தகவல்களை நம்பினால், நாம் பின்வரும் முடிவுகளுக்கு வருவோம்.

- சுமார் 1900 வருடங்களுக்கு முன்னர் யூதர்கள் அன்றைய இஸ்ரேலிய ராஜ்யத்தை இழந்து புலம்பெயர்ந்தார்கள்.

- 20 ம் நூற்றாண்டில் நவீன இஸ்ரேல் உருவாகும் வரை, பாலஸ்தீனத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய யூதர்கள் வாழ்ந்தார்கள்.

- ரோமர்கள், இஸ்லாமிய அரேபியர்கள் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யூதர்களின் ஆலயங்களை அழித்தார்கள். அவர்களை அகதிகளாக அலைய வைத்தார்கள்.

- புலம்பெயர்ந்த யூதர்கள் (கிறிஸ்தவ) ஐரோப்பாவில் மட்டுமே அடைக்கலம் புகுந்தனர்.

- ஐரோப்பாவில் யூதர்கள் வறுமையான நிலையில் காணப்பட்டனர். யூதர்கள் மீதான கலவரங்களுக்கு காரணம் இனக்குரோதம்.

- 1900 ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்த காலத்தில் இருந்து இஸ்ரேலிய தேசியம் யூதர்களின் லட்சியமாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட தகவல்களில் எத்தனை வீதம் உண்மை கலந்திருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நமக்கு யூதர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ரோம சாம்ராஜ்ய காலகட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கிரேக்க மொழி வரலாற்று ஆசிரியர்களால் எழுதப் பட்டவை. அதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை பற்றி அறிய, விவிலிய நூலையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தற்போது அகழ்வாராய்ச்சி மூலம் அந்த தகவல்கள் சரி பார்க்கப் படுகின்றன.) யூதர்களின் மத நூலான தோரா (கிறிஸ்தவர்களுக்கு : பழைய ஏற்பாடு) அவர்களைப் பற்றிய பூர்வீக வரலாற்றுக் கதைகளையும் கூறுகின்றது. இன்றைய ஈராக்கில் உள்ள "ஊர்" என்ற நகரில் இருந்து ஆபிரஹாமின் தலைமையில் யூத பழங்குடியினர் கானான் வருகின்றனர். பொதுவான மூதாதையரைக் கொண்ட பன்னிரு இனங்கள் ஆதி கால யூதர்களாக இனங்காணப் படுகின்றன. அவர்கள் நாடோடிக் குழுக்களாகவே ஆண்டவரால் நிச்சயிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு வந்து சேர்கின்றனர். கானான் தேசத்தில் கானானிய மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், யூத குடிகளும் அருகாமையில் வாழ்ந்துள்ளன. ஒரு கட்டத்தில் பன்னிரு யூத குடிகளும் எகிப்தில் அடிமைகளாகின்றனர். மோசெஸ் அவர்களை விடுவித்து மீண்டும் கானான் என்ற நிச்சயிக்கப்பட்ட பூமிக்கு கூட்டி வருகிறார். மொசெசின் தம்பியின் தலைமையில் ஆயுதமேந்திய யூதர்கள், கானான் மக்களை இனப்படுகொலை செய்கின்றனர். கானானியர்களை இனச் சுத்திகரிப்பு செய்த பின்னரே, அவ்விடத்தில் யூதர்களின் ராஜ்ஜியம் உருவாகின்றது. இந்த தகவல்கள் யாவும் விவிலிய நூலில் எழுதப்பட்டுள்ளன.
தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடுவது எத்தனை அபத்தமானது என்பதை இப்போது பார்க்கலாம். விவிலிய நூலில் உள்ள ஆதி கால யூதர்களின் வரலாறும், தமிழர்களின் வரலாறும் எந்த இடத்தில் ஒத்துப் போகின்றது? தமிழகத்திலும், ஈழத்திலும் வாழும் தமிழர்கள் எங்கோ வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய இனம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. (தமிழ் தேசியவாதிகள் கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.) சங்க கால தமிழ் இலக்கியங்களிலும் அது போன்ற தகவல் எதுவும் இல்லை. மகாவம்சம் (சிங்களவர்களின் "தோரா"?) வேண்டுமானால் இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு கைகொடுக்கலாம். அதில் வரும் கதைகள் பல யூதர்களின் வரலாற்றுக் கதைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கன. யூதர்கள் ஜாஹ்வே என்ற ஓரிறைக் கோட்பாட்டில் உறுதியாக இருந்ததைப் போல, சிங்கள பௌத்தர்கள் புத்தர் என்ற ஓரிறைக் கோட்பாட்டை நம்புகின்றனர். தமிழர்களில் பெரும்பான்மையானோர் பல தெய்வ வழிபாட்டைக் கொண்ட இந்துக்கள். தமிழர்களில் இந்துக்களுக்கு அடுத்ததாக கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் காணப்படுகின்றனர். இவர்களும் சிலை வணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

கடவுளரின் படங்களை, உருவச் சிலைகளை வைத்து வழிபடுவதை, யூத மதம் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றது. இந்த விடயத்தில் மட்டும் யூதர்கள் மத்தியில் சமரசத்திற்கு இடமில்லை. யூதர்களின் வரலாறு முழுவதும் மதம் முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. யூத மதம் மட்டுமே யூதர்கள் அனைவரையும் அன்றில் இருந்து இன்று வரை ஒரே சமூகமாக பிணைக்கின்றது. தமிழர்களிடம் அவ்வாறு தனித்துவமான மதம் ஒன்றுள்ளதா? தமிழ் என்ற மொழி மட்டுமே தமிழர்களை ஒன்றிணைக்கும் புள்ளி. பண்டைய காலத்தில் இருந்தே யூதர்கள் ஹீபுரு மட்டுமல்லாது, பல்வேறு மொழிகளை பேசுவோராக இருந்துள்ளனர். ஆபிரஹாம் குடும்பத்தினர் பாபிலோனிய மொழி பேசினார்கள். இயேசு கிறிஸ்துவின் குடும்பத்தினர் அரேமிய மொழி பேசும் யூதர்கள். பிற்காலத்தில் கிரேக்க மொழி பேசும் யூதர்களே பெருவாரியாக கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். ஆகவே யூதர்கள் என்பது, ஒரு மதத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல் என்பதை விளக்க வேறு உதாரணம் தேவையில்லை.

யூத மதத்தின் அச்சாணியாக ஓரிறைக் கோட்பாடு உள்ளது. தோரா முழுவதும் யூதர்கள் எவ்வாறு அதில் உறுதியாக இருந்துள்ளனர் என எழுதப் பட்டுள்ளது. எகிப்தில் இருந்து மோசெஸ் அழைத்து வந்த யூதர்கள், புனிதப் பசு உருவிலான தெய்வங்களை (இன்றும் இந்துக்களின் வழிபாட்டுக்குரியது) வணங்கினார்கள். ஆண்டவரிடம் பத்துக் கட்டளைகளை பெற்றுக் கொண்டு வந்த மோசெஸ், அந்த சீரழிவுக் காட்சிகளைக் கண்டு சீற்றமுற்றார். பிற தெய்வங்களை வழிபட்ட யூதர்களை சபித்தார். இறைவன் ஒருவனே என்று நம்ப வேண்டுமென்பது பத்துக் கட்டளைகளில் ஒன்று. ("என்னைத் தவிர வேறொரு கடவுளை வணங்காதிருப்பீராக") பின்னர் யூதர்கள் தமது தவறை உணர்ந்து ஓரிறைக் கோட்பாட்டின் கீழ் ஒன்று சேருகின்றனர். அதன் பிறகே, (கவனிக்கவும்) சவுல், டேவிட், சொலமன் ஆகிய மன்னர்களின் ராஜ்ஜியம் உருவாகியது. யூத மன்னர்களை, பல தெய்வங்களை வழிபடும் சைவத்தை அரச மதமாக கொண்ட தமிழ் மன்னர்களுடன் எப்படி ஒப்பிட முடியும்?

வெறும் மதம் மட்டும் யூதர்களை ஒன்று சேர்க்கவில்லை. கடுமையான மதக் கட்டுப்பாடுகளும் யூதர்களை தனி இனம் என்ற என்ணத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்தது. பன்றியிறைச்சி யூதர்களுக்கு விலக்கப்பட்ட உணவு. யூதர்கள் பன்றியிறைச்சி சாப்பிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், உயிரை விட தயாரானவர்கள். கி.மு. 175 ம் ஆண்டு ரோமர்களின் ஆட்சிகுட்பட்ட ஜெருசலேமில் யூதர்களுக்கு எதிரான அடக்குமுறை கடுமையாக இருந்தது. அப்போது பலவந்தமாக பன்றியிறைச்சி சாப்பிடுமாறு சித்திரவதை செய்யப்பட்டதால் உயிர் விட்ட ஏழு சகோதரர்கள் கதை பிரபலமானது. முஸ்லிம்கள் ஹலால் என்று சொல்லும் உணவை, யூதர்கள் ஹோஷர் என்கின்றனர். முஸ்லிம்களைப் போலவே யூதர்களும் சுன்னத்து செய்து கொள்வது அவர்களது மதக்கடமை.

தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடும் அறிவுஜீவிகள், இது போன்ற ஒற்றுமைகள் ஏதாவது உண்டா என்றும் நிரூபிக்க வேண்டும். தமிழைத் தாய்மொழியாக கொண்ட முஸ்லிம்களை வேண்டுமானால் இந்த விடயத்தில் யூதர்களுடன் ஒப்பிடலாம். ஆனால் ஈழத் தமிழ் தேசியமானது, இஸ்லாம் தவிர்ந்த இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்தவர்களையே தமிழர்களாக கருதுவதை இங்கே குறிப்பிட வேண்டும். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோரின் பேச்சிலும், எழுத்திலும் இஸ்லாமியர் மீதான வெறுப்பு மறைந்திருக்கும். அந்த நிலைப்பாடு ஏகாதிபத்திய நலன் சார்ந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வணிகம் செய்யும் உரிமையை மட்டுமே வழங்கியிருந்தார்கள். அதற்கு காரணம் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் காணப்பட்ட சாதியம். அனைத்து சாதியினருக்கும் விதிக்கப்பட்ட வேலை இருந்தது. அந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. அதே போன்றே ஐரோப்பாவிலும் நடந்தது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தை கொண்ட கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை. நிலம் வாங்கி விவசாயம் செய்யவும் உரிமை இல்லை. அத்தகைய சூழ்நிலையில் அன்று பெரிதாக வளர்ச்சியடையாத வணிகம் மட்டுமே சாத்தியமானது. சில யூதர்கள் வாணிபம் செய்து பெருஞ் செல்வம் சேர்த்தனர். அதனால் பொறாமை கொண்ட பெரும்பான்மை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள், இனக்கலவரங்கள் மூலம் யூதர்களின் செல்வத்தை அபகரித்தார்கள்.
ஹிட்லருக்கு முன்னரே யூத இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்தவர்கள் வேறு யாருமல்ல. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவரின் சிலுவைப்படை வீரர்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "சிலுவைப்போருக்கு தேவையான நிதியை அறவிடுவதற்காக, இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த யூதர்களை கொல்வதில் தவறில்லை!" அத்தகைய நியாயப்படுத்தல்கள் தான் ஹிட்லரின் யூத இனவழிப்பின் தத்துவார்த்த அடிப்படை.

(தொடரும்)
***************************************************************

Thursday, November 04, 2010

ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள்

ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும், தீண்டத்தகாதவர்களாக கருதி ஒடுக்கப்பட்ட, "ரோமா" நாடோடி இன மக்களைப் பற்றி வெளியுலகம் அதிகம் அக்கறைப் படுவதில்லை. காலங்காலமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக கூடாரங்களை அமைத்து வசித்த ரோமா இனத்தவர்கள், பெரும்பான்மை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால் நிரந்தர வறுமைக்குள் வாழும் படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஹிட்லரின் நாசிச ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மட்டும் அழிக்கப் படவில்லை. இலட்சக் கணக்கான ரோமா மக்கள் ஹிட்லரின் இனவழிப்புக்கு பலியானார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவில், யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகத்தை உருவாக்க முன்வந்த வல்லரசுகள், ரோமா மக்களின் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.

ரோமா இன மக்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து நாடோடிக் கூட்டமாக ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள். அந்த மக்களின் தாயகம், வட இந்தியாவில், அல்லது இன்றைய பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டும். அனேகமாக இஸ்லாமிய படையெடுப்புகளால் காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கலாம். இது வரை உறுதியான வரலாற்றுத் தகவல்கள் இல்லா விட்டாலும், சரித்திர ஆசிரியர்கள் அவ்வாறு கருதுகின்றனர். ரோமா மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றியவர்கள். அவர்களின் ஸ்வாஸ்திகாவை (இந்துக்களின் புனிதச் சின்னம்), பிற்காலத்தில் ஹிட்லர் நாஸி கட்சியின் சின்னமாக்கியதாக ஒரு கதையுண்டு. ஆயிரக் கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் வாழ்வதால், இன்றைய ரோமா இனத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் நிறவெறி கொண்ட வெள்ளையின கிறிஸ்தவர்கள், அவர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே பெரும்பான்மையான ரோமா இனத்தவர்கள் வாழ்கின்றனர். ரொமானியாவில் அவர்களின் எண்ணிக்கை அதிகம். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட ரோமா மக்களுக்கு, கம்யூனிச ஆட்சிக் காலத்தில் தான் விடிவு காலம் பிறந்தது. கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அவர்களை சக மனிதர்களாக மதித்தனர். குடிசைகளில் வாழ்ந்த ரோமா மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தார்கள். அனைவருக்கும் கல்வி வசதி, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். (கீழேயுள்ள வீடியோவில் வரும், ஒரு வேலையிழந்த ரோமா தொழிலாளியின் சாட்சியத்தை பார்க்கவும்)

முதலாளித்துவத்தின் மீள்வருகையினால், அனைத்து வசதிகளும் மாயமாக மறைந்து போயின. அடுக்கு மாடிக் குடியிருப்புகள், குப்பை மேடுகளைக் கொண்ட சேரிகளாகின. அவர்களின் தொழில்கள் பறிக்கப்பட்டு வெள்ளயினத்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று 95 % ரோமா மக்கள் வேலையற்றவர்களாக வறுமையில் வாடுகின்றனர். ஒரு ரோமா இனத்தவர் காலியான பணியிடத்திற்கு விண்ணப்பித்தால், எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு எடுப்பதில்லை. அதே இடத்திற்கு விண்ணப்பிக்கும் வெள்ளயினத்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். வறுமை, தொழில் வாய்ப்பின்மை காரணமாக பலர் திருடுகின்றனர். ஆனால் அனைத்து ரோமா மக்களையும் திருடர்களாக கருதுமளவிற்கு, வெள்ளையரிடையே இனத்துவேஷம் காணப்படுகின்றது.

அரச அதிகாரிகள்: "ரோமா மக்கள் சோம்பேறிகள், அல்லது சிவில் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள்." என்று குற்றஞ்சாட்டுகின்றனர். செக், ஸ்லோவாக்கிய குடியரசுகளில் ரோமா மக்கள் நெருக்கமாக வாழும் நகரப் பகுதியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இனப்பாகுபாடு காட்டும் மதிலை அகற்றுமாறு கோரியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெர்லின் மதில் பற்றி இதுவரை எண்ணற்ற ஆவணப்படங்கள், செய்திகள் வந்து விட்டன. ஆனால் "ஜனநாயகம் மீட்கப்பட்ட" செக், ஸ்லோவாக்கிய நாடுகளில் புதிதாக கட்டப்பட்ட நிறவெறி மதில்கள் குறித்து, எந்தவொரு ஊடகமும் பேசுவதில்லை.

"முதலாளித்துவத்தின் பொற்காலம்" ஆரம்பமாகிய கடந்த 20 வருடங்களில், பெருமளவு ரோமா மக்கள் மேற்கு ஐரோப்பாவிலும், கனடாவிலும் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தின் பின்னர் தளர்த்தப்பட்ட விசா கெடுபிடிகளை பயன்படுத்தி, வேலை தேடி மேற்கு ஐரோப்பா செல்கின்றனர். ஆனால் "மனித உரிமைகளை மதிக்கும்" மேற்கு ஐரோப்பிய நாடுகள் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கவில்லை. இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரொமானியாவில் இருந்து வந்த ரோமா மக்களை திருப்பி அனுப்பினார்கள்.(
France sends Roma Gypsies back to Romania) ரொமானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த நாடென்பதால், ரோமா மக்களும் ஐரோப்பிய பிரஜைகள் ஆவர். ஆகவே ரோமா மக்களின் வெளியேற்றம் சட்டவிரோதம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தாலியும், பிரான்சும் அந்த சட்டத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, தொடர்ந்து ரோமா மக்களை நாடு கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
Europe's Roma community still facing massive discrimination


பெல்ஜியத்தின் ஊடகவியலாளர் சிலர், ஸ்லோவாக்கியா சென்று ரோமா மக்களின் அவல வாழ்வை ஆவணப்படமாக எடுத்துள்ளனர். அந்த ஆவணப்படம் ஐந்து பகுதிகளாக பெல்ஜிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அதிலே வந்த வீடியோ ஒன்றை இங்கே இணைத்துள்ளேன். ரோமாக்களின் அவலத்தை புரிந்து கொள்ள மொழி தடையாக இருக்காது. இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் இடம், எங்கோ ஒரு வறிய மூன்றாம் உலகை சேர்ந்ததல்ல. உலகப் பொருளாதாரத்தில் வெற்றி நடை போதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி.

Monday, November 01, 2010

ஆங்கிலேய பாசிஸ்ட்கள் ஆம்ஸ்டர்டாமில் ஆர்ப்பாட்டம்

"இஸ்ரேலுக்கு ஆதரவு, இஸ்லாமியருக்கு எதிர்ப்பு" என்ற போர்வையின் கீழ் உலகம் முழுவதும் பாஸிச சக்திகள் தம்மை பலப்படுத்தி வருகின்றன. இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை மூலதனமாக இட்டு, அரசியல் கட்சி நடத்தும் நெதர்லாந்தை சேர்ந்த ஹெர்ட் வில்டர்ஸ் தான் அவர்களின் உதாரண புருஷர். வில்டர்சின் அரசியல் கட்சி, இன்று நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய பெரிய கட்சியாக கூட்டரசாங்கத்தில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் பாஸிச கட்சியான English Defence League (EDL), இங்கிலாந்துக்கு ஒரு ஹெர்ட் வில்டர்ஸ் தேவை என பிரச்சாரம் செய்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை 30 அக்டோபர், EDL உறுப்பினர்கள், ஆம்ஸ்டர்டம் வந்து "வில்டர்ஸ் ஆதரவு ஆர்ப்பாட்டம்" செய்தனர். அவர்கள் தமது பாஸிச புரட்சியை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக போலும், Dutch Defence League என்ற முன் பின் கேள்விப்பட்டிராத அமைப்புடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஸிச எதிர்ப்பாளர்களுடன் கலகம் மூளலாம் என்ற அச்சத்தில், தலைநகரின் மத்தியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் Antifa என்ற அமைப்பு, எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியது. வெளிநாட்டு குடியேறிகள், கால்பந்து ரசிகர்கள் ஆகியோரும் Antifa வுடன் இணைந்து, பாஸிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். "ஐரோப்பா இஸ்லாமிய மயமாகின்றது" என்று பாசிஸ்ட்கள் மேடை போட்டு முழங்கிக் கொண்டிருக்கையில், இடையூறு செய்தவர்களை போலிஸ் அப்புறப் படுத்தியது.

நெதர்லாந்து தொலைக்காட்சி பாஸிச எதிர்ப்பாளர்களை "முரட்டு கால்பந்து ரசிகர்கள்" என்று குறிப்பிட்டது. இதே தொலைக்காட்சிகள் தான் வில்டர்சின் இஸ்லாமிய எதிர்ப்பு பேச்சுகளுக்கு மேடை போட்டுக் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற உதவின. வில்டர்ஸ், EDL போன்ற நவ-பாஸிச சக்திகள் வெறுமனே இஸ்லாமியரை மட்டும் விரோதிகளாக பார்க்கவில்லை. அகதிகள், வெளிநாட்டுக் குடியேறிகள் ஆகியோரையும் கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் வெளியேற்ற விரும்புகின்றனர். பாஸிச கொள்கைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர்: "யூத-கிறிஸ்தவ கலாச்சாரம்". ஐரோப்பிய பாசிஸ்ட்களை பொறுத்த வரை, வெள்ளையினத்தவர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் ஒன்றில் இஸ்லாமியர்கள் அல்லது கருப்பர்கள். "நாங்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறோம், கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். அதனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்." என்று அப்பாவித்தனமாக நம்பும் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். பாசிஸ்ட்கள் மிகத் தந்திரமாகத் தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவின் பெரிய சிறுபான்மை இனமான இஸ்லாமியரை ஒடுக்குவது தான் கடினமான காரியம். மற்றவர்களை இலகுவாக மூட்டை கட்டி, அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பி விடலாம்.

ஆம்ஸ்டர்டாமில் EDL பாசிஸ்ட்களுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை காட்டும் வீடியோ இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.




Press release antifa!-amsterdam antifa

Press Release: EDL demonstration embarrasment, anti-fascists very satisfied with counter-protests.

Antifa! Amsterdam is positive about the course of the demonstrations and actions today in Amsterdam.
In many ways today it became crystal clear that no'one over here wants the kind of fascist street-activism as the right-wing English Defence League hopes to export to mainland Europe.

The demonstration of the EDL / DDL was an outright failure, not more than 50 protesters eventually took the trouble to show their support for Wilders. This while the organization, even after the forced relocation to a midle of nowhere spot in the western docklands, still said this week to expect up to1,000 supporters.
In the end, the meager turnout (in particular on the part of the Dutch Defence League, only a few of the protesters were Dutch) and the fierce resistance that they were confronted with should be an omen about the future prospects of their crossing of the channel.

This while simultaneously a broad range of hundreds of people and dozens of groups showed throughout the city their disapproval and anger about the coming of the racist scum to the capital.
Antifa! Amsterdam expresses support and appreciation to each and everyone who has gone out on the streets today against racism and xenophobia.
From the hundreds of protesters who protested at 1941 general strike monument, the dozens of activists that spread over the city to prevent that the EDL would still showup in the center, to the many people who decided to ignore the emergency orders from the mayor and went in direct action in the docklands.
The great variety of people who have come today in opposition is a clear signal, from young immigrants to experienced activists, from soccer fans to social organizations.
In particular, the presence of Jewish individuals and the reform movement in Iran, for whom the EDL pretends to speak, and the high turnout of football fans that the EDL consider as their natural support, show that people are not deceived by the EDL.

In summary Antifa! Amsterdam considers the day as overwhelmingly successful, and calls on everyone to keep fighting, in resistance against discrimination, hatred, fear and extreme right violence.