Wednesday, August 29, 2012

ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்


கம்யூனிச அமைப்பு என்றால், "எல்லோரும் சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்." என்று நையாண்டி செய்யும் மேதாவிகளைக் கண்டிருப்பீர்கள்.  இன்று வரையிலான உலக வரலாற்றில், கம்யூனிச நாடுகள் என்றுமே தோன்றியதில்லை. ஆனால், கம்யூனிச சமுதாயங்கள் தோன்றியுள்ளன. அவை இன்றைக்கும் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலக பொருளாதார கட்டமைப்பில் நடக்கும் மாற்றம் எதுவும், அவற்றைப் பாதிப்பதில்லை.

அந்த சமூகங்களை சேர்ந்த யாருமே கடனாளியாகி தெருவுக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. அதற்காக, கம்யூனிச அமைப்பில் எல்லோரும் ஏரில் மாடு பூட்டி, வயலில் உழுது கொண்டிருப்பார்கள், என்று கற்பனை செய்யக் கூடாது. உழவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள்... ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில் நீங்கள் சந்திக்கும் அத்தனை வகையான நபர்களும் அங்கே இருப்பார்கள்.

இன்றைக்கும் இருக்கும் கம்யூனிச நகரங்கள் எல்லாம், செல்வம் கொழிக்கும் "பணக்கார சமுதாயங்களாக" உள்ளன. வேறு இடங்களை சேர்ந்த, வேலையற்ற மக்கள் அங்கே வேலை தேடி வருவார்கள். ஆனால், கம்யூனிச சமுதாயத்தினுள் வாழும் எவரும் வேலை தேடி வெளி நகரங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ செல்வதில்லை. அப்படிப் போக வேண்டிய அவசியமும் கிடையாது. நான் ஏதோ பைத்தியம் பிடித்து பிதற்றுவதாக நினைக்கும் நண்பர்களை, ஸ்பெயினுக்கு வருமாறு அழைக்கிறேன். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப் பட்ட மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், ஒரு வெற்றிகரமான கம்யூனிச சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அந்த நகரத்தில், மொத்தம் 2700 பேர் மட்டுமே வாழ்கின்றனர். வயல்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் அனைத்தும், பொதுவுடமைப் பொருளாதார அடிப்படையில் இயங்குகின்றன.  அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊதியத்தில் பெருமளவு ஏற்றத்தாழ்வு கிடையாது. வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி கூட மாதம் 1200 யூரோ சம்பாதிக்கின்றார். 

மாதாமாதம் 20 யூரோ தவணை முறையில் செலுத்தி, ஒவ்வொரு குடும்பமும் தனக்கான சொந்த வீடு கட்டிக் கொள்ளலாம். குழந்தைகள் பராமரிப்பகத்தின் மாதக் கட்டணம் 16 யூரோ. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான படிப்புச் செலவு மாதம் 17 யூரோ மட்டுமே. அந்தக் காசுக்கு கேன்டீனில் மதிய உணவு, புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் எல்லாம் கிடைக்கின்றன. கோடை காலம் முழுவதும் நீச்சல் குளம் பாவிப்பதற்கான கட்டணம் வெறும் 4 யூரோ மட்டுமே! 

நம்பினால் நம்புங்கள். அந்த நகரத்தில் பொலிஸ் நிலையம் கிடையாது! நீதிமன்றம் கிடையாது! குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை! அதனால், காவல்துறை, நீதிமன்றங்களை பராமரிப்பதற்கான அரசு நிதி மிச்சப் படுத்தப் படுகின்றது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ஒரு சோஷலிச சமுதாயமே அனைத்து மக்களினதும் தேவையை பூர்த்தி செய்யும். ஸ்பெயின் நாட்டில், முப்பது வருடங்களாக ஒரு கம்யூனிச நகரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் தான், உலகின் கவனம் அதன் மீது திரும்பியது. 

தெற்கு ஸ்பெயினில், செவியா (Sevilla) நகரத்தில் இருந்து 60 கி.மி. தூரத்தில் உள்ளது, மரினலேடா (Marinaleda) என்ற சிறு கிராமம். அந்தக் கிராமத்தை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலம், ஒரு நிலவுடமையாளருக்கு சொந்தமானது. முப்பது வருடங்களுக்கு முன்னர், நிலமற்ற விவசாயிகள் ஒன்று திரண்டு அந்த நிலங்களை ஆக்கிரமித்தார்கள். ஆரம்பத்தில் அது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. அவர்களது எழுச்சி அதிகார வர்க்கத்தினரால் அடக்கப் பட்டது. ஒவ்வொரு தடவையும் நடந்த நில ஆக்கிரமிப்பு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே நீடித்தது. ஹுவான் சஞ்செஸ் கொர்டியோ (Juan Manuel Sanches Gordillo) போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு நிலைமை மாறியது. 

போராடிக் களைத்திருந்த மக்கள், புதிய உத்வேகத்துடன் கிளம்பினார்கள். செவியா நகரின் விமான நிலையம், ரயில் நிலையங்களை முற்றுகையிட்டு போக்குவரத்தை முடக்கினார்கள். அரச காரியாலயங்களை ஆக்கிரமித்தார்கள். மரினலேடா நிலங்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரையில், போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை. வாழ்க்கையில் எதுவும் போராடாமல் கிடைக்காது என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டனர்.  1991 ம் ஆண்டு,  இறுதியில் அரசு, நிலப்பிரபுவின் நிலங்களுக்கான உரிமைப் பத்திரத்தை, போராடிய  மக்களிடம் கையளித்தது. அன்றிலிருந்து, மரினலேடா நகரம் "உத்தோபியா" (Utopia) என்று பெயர் மாற்றப் பட்டது. அது கவிஞர்கள் கனவு கண்ட, "பாலும் தேனும் ஆறாக ஓடும் பூலோக சொர்க்கமாக" கருதப் பட்டது.

ஒரு பொதுவுடைமை சமுதாயத்தின் மூலமே, மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதை, மரினலேடா வாசிகள் நிரூபித்துக் காட்டினார்கள். கூட்டுறவுப் பண்ணைகள் அமைத்தார்கள். வயல்கள், தோட்டங்கள், பண்ணைகள் எங்கும் அனைவரும் சரி சமமாக சேர்ந்து உழைத்தார்கள். முதலாளிகள் யாரும் இல்லாததால், விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த இலாபமும் மக்களிடமே திரும்பி வந்தது. அவர்கள் அதனை தொழிற்சாலைகளில் முதலிட்டார்கள். பொதுவுடைமை சமுதாயம் என்றால், ஒரு வசதியற்ற கிராமத்தில் எல்லோரும்  விவசாயிகளாக வயல் உழுது கொண்டிருப்பார்கள் என்று நினைக்கலாம். இன்றோடு அந்த என்ணத்தை  மாற்றிக் கொள்ளுங்கள். 

சனத்தொகை அடர்த்தி குறைவென்பதால், அதனை நீங்கள் கிராமம் என்று கூறலாம். ஆனால், நகர வாசிகள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் ஒரு சராசரி பொதுவுடைமை கிராமத்தில் கிடைக்கும். மேலும் பொதுவுடமைப் பொருளாதாரம் விவசாய உற்பத்தியில் மட்டும் தங்கியிருக்கவில்லை.  உயர் தொழில்நுட்ப இயந்திரங்களால் இயக்கப்படும் தொழிற்சாலைகள் கூட அங்கே உண்டு. பாடசாலைகள், விளையாட்டுத் திடல்கள், நீச்சல் குளங்கள், மற்றும் பொழுது போக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கே கிடைக்கும். சுருக்கமாக அது ஒரு கிராமம், ஆனால் சிறு நகரம் போன்று காட்சியளிக்கும். இன்றைக்கும் ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியிலும், சீனாவில் சில இடங்களிலும் இவ்வாறான தன்னிறைவு பெற்ற சமுதாயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. 

மரினலேடா விவசாயிகள் திட்டமிடலுடன் பயிர் செய்கின்றனர். உதாரணத்திற்கு கத்தரிக்காய், தக்காளி, மிளகாய், கடுகு போன்ற பயிர்களை வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் பயிரிடுவார்கள். அவற்றை அறுவடை செய்யும் மாதம் மாறுபடும். ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பயிரின் விளைச்சலை அறுவடை செய்யலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் அறுவடை வேலைக்கு ஒன்று கூடுவார்கள். மரினலேடா வயல்களில் உற்பத்தியாகும் மரக்கறிகள், ஒலிவ் பழங்கள், கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுடன், ஸ்பெயின் நாட்டின் பிற இடங்களுக்கு ஏற்றுமதியாகின்றது. ஹை-டெக் தொழிற்சாலைகள், அவற்றை பதப்படுத்தி டின்னில், அல்லது போத்தலில் அடைத்து வைக்கின்றன. அவ்வாறு டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், ஒலிவ் எண்ணை போன்ற முடிவுப் பொருட்கள் ஸ்பெயின் முழுவதும் விநியோகிக்கப் படும்.

வருடாவருடம் உற்பத்தி அதிகரிப்பதால், அயல் கிராம மக்களையும் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஸ்பெயின் அரசாங்கத்தால் கைவிடப்பட்ட, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு அங்கே அடைக்கலமும், தொழில் வாய்ப்பும் கிடைக்கிறது. மரினலேடா வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய வரும் பருவ கால வேலையாட்களுக்கும் சமமான சம்பளம் கிடைக்கின்றது. ஒரு கூலித் தொழிலாளி கூட, மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 1200 - 1300 யூரோக்கள் சம்பாதிக்கின்றார். இன்றைய பொருளாதார நெருக்கடிக் காலத்தில், ஸ்பெயின் பிற பகுதிகளில், பட்டதாரிகள் கூட 300 யூரோ சம்பளத்திற்கு வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். ஸ்பெயின் முழுவதும் வேலையற்றோர் எண்ணிக்கை 25 %. அதே நேரத்தில், மரினலேடா நகரில் வேலையில்லாமல் யாரும் இல்லை. 

ஸ்பெயினில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வீட்டு மனை சந்தை வீழ்ச்சியடைந்ததால், சொந்தமாக வீடு வாங்குவது கனவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், மரினலேடா நகரில் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அதற்காக எந்த வங்கியிடமும் வீட்டை அடமானம் வைத்து கடனாளியாகவில்லை. ஒருவர் சொந்த வீடு கட்ட விரும்பினால், அவருக்கு நகர சபை எல்லா வித உதவிகளையும் செய்து கொடுக்கின்றது. வீடு கட்டுவதற்கான மொத்த செலவை நீங்கள் தவணை முறையில் கட்டலாம். ஒவ்வொரு மாதமும் 20 யூரோ கட்டினால், சீமெந்து, மண், கல், மரம் எல்லாவற்றையும் நகர சபை கொண்டு வந்து தரும். வீட்டை நீங்களாகவே கட்டிக் கொள்ள வேண்டும். எப்படிக் கட்டுவதென்ற ஆலோசனையும் இலவசமாக கிடைக்கும். 

அப்படியும் யாருக்காவது, வீட்டை தாமாகவே கட்டிக் கொள்ளும் வசதி இல்லையென்றால், மற்றவர்களை பிடித்து கட்டுவிக்கலாம். அதற்காக, நீங்கள் மாதா மாதம் 530 யூரோக்கள் செலுத்த வேண்டும். உங்களது வீட்டை நகர சபையே கட்டிக் கொடுக்கும். சொந்த வீடு கட்டிக் கொள்வதற்கு ஆகும் மொத்த செலவு, ஸ்பெயினின் பிற பகுதிகளை விட குறைவு. வெறும் முப்பதாயிரம் யூரோவுடன் வீடு உங்களுக்கு சொந்தமாகும். மாதா மாதம் கட்டும் தொகை மிக மிகக் குறைவு என்பதால், மொத்த தொகையை கட்டி முடிக்க எழுபது வருடங்கள் ஆகலாம். உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகள் அந்த தொகையை கட்டி முடித்து சொந்தமாக்கிக் கொள்வார்கள். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது. எந்த இடைத் தரகருடனும் பேரம் பேச முடியாது. இதனால், அமெரிக்காவில் நடந்தது மாதிரியான, வீட்டு மனை சூதாட்டம், நிதி நெருக்கடி போன்ற குளறுபடிகளுக்கு அங்கே இடமில்லை. 

மரினலேடா நகரில், பிள்ளை வளர்ப்பது பெரும் செலவு பிடிக்கும் விடயமல்ல. வேலை செய்யும் பெற்றோர், குழந்தைகள் காப்பகத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, மாதம் 16 யூரோக்கள் மட்டுமே. பாடசாலை செல்லும் பிள்ளை என்றால், மாதம் 17 யூரோக்கள் செலவாகும். ஆனால், பாடசாலை உணவு விடுதியில் மதிய உணவு கிடைக்கிறது. பாட நூல்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன. ஜிம்னாஸ்டிக், விளையாட்டு, மற்றும் நீச்சல்குளம் பாவிப்பதற்கு ஒரு சிறிய தொகை மட்டுமே கட்டணமாக அறவிடுகிறார்கள்.

ஆரம்ப பாடசாலை மட்டுமே அங்கே இருப்பதால், உயர் கல்வி கற்பதற்கு பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும். அப்பொழுதும், மாணவர்களுக்கு தேவையான படிப்புச் செலவுகளை நகர சபை பொறுப்பெடுக்கும். அதே போன்று, மருத்துவர், கிளினிக், எல்லாம் அங்கே இலவசமாக கிடைத்தாலும், வெளியிடங்களில் உள்ள வைத்திய சாலைகளுக்கு அனுப்பப் படும் நோயாளிகளுக்கான செலவையும் நகரசபை ஏற்றுக் கொள்கின்றது. முன்பெல்லாம் மரினலேடாவில் இயங்கும் பொதுவுடைமை சமுதாயம் பற்றி, ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து வந்தன. இப்பொழுது பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை காரணமாக, ஊடகவியலாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. நியூ யார்க் டைம்ஸ் கூட, ஒரு செய்திக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. 

சோஷலிசம் சமூகத்தை முன்னோக்கித் தள்ளும் உந்துசக்தியாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும், சேகுவேரா படங்களும், புரட்சிகர கோஷங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன. பாடசாலைக் கல்வியில், சோஷலிசம், மனிதாபிமானம், சமாதானம் போன்ற பண்புகளை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். மரினலேடா நகரில் வாழும் மக்கள் அனைவரும், சோஷலிசத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால், யாரும் தமது தலைக்குள் திணிக்கப் படுவதாக உணரவில்லை.  மக்கள் எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ளும், நகர சபைக் கூட்டங்களே அதற்கு சாட்சியம்.

மரினலேடா நகரின் ஒவ்வொரு முடிவும், வெகுஜன வாக்கெடுப்பினால் தீர்மானிக்கப் படுகின்றது. புதிதாக தெரு போட வேண்டுமா? பாடசாலை கட்ட வேண்டுமா? அல்லது பற்றாக்குறையான ஒரு பொருளை வெளியில் இருந்து வாங்க வேண்டுமா? சிறு விடயமாக இருந்தாலும், அதனை மக்களே முடிவு செய்கின்றனர். நகர சபை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்தல் ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

கடந்த முப்பதாண்டுகளாக, ஹுவான் மனுவேல் சஞ்செஸ் மேயராக பதவி வகிக்கின்றார். அவர் ஐக்கிய இடது முன்னணி கட்சியை சேர்ந்தவர். அண்மையில், அந்தக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அந்த நகரில் ஒரு எதிர்க்கட்சியும் இருக்கின்றது. ஸ்பெயினில் மிகப் பெரிய (வலதுசாரி) சமூக-ஜனநாயக கட்சியான சோஷலிசக் கட்சி, சில ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது. ஆனால், அவர்களின் உறுப்பினர்கள் நகர சபையில் மிகக் குறைவு. இருந்தாலும், சஞ்செஸ் நடத்தும் அரசியலை எப்போதும் விமர்சித்துக் கொண்டிருப்பார்கள்.

மரினலேடா நகர மக்கள், வெளியுலகம் தெரியாமல் மூடுண்ட சமுதாயமாக வாழ்வதாக யாரும் நினைத்து விடாதீர்கள். அந்த சமூகத்தில் நடக்கும் புதினங்களையும், உலக நடப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காக ஒரு தொலைக்காட்சி சேவை இயங்கிக் கொண்டிருக்கிறது.  "மரினலேடா டி.வி." (Marinaleda TV, http://www.youtube.com/user/MarinaledaTV), பாலஸ்தீன பிரச்சினை, பொருளாதார நெருக்கடி, மற்றும் உலகெங்கும் நடக்கும் மக்கள் எழுச்சிகள் பற்றிய செய்திகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு செய்திகளுக்காக, அது ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்க தொலைக்காட்சிகளான கூபா விசியோன், டெலேசூர் போன்ற ஊடகங்களை நம்பியுள்ளது.  Cuba Vision, கியூபாவின் தேசிய தொலைக்காட்சி சேவை. Telesur, வெனிசுவேலாவில் இருந்து ஒளிபரப்பாகின்றது. அதனை "ஸ்பானிய மொழி பேசும், சோஷலிச CNN " என்றும் அழைக்கலாம். 

1700 யூரோக்கள் மாத வருமானம் பெறும் மேயர் சஞ்செஸ், தனது குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு ஒதுங்கி வாழும் அரசியல்வாதியல்ல. இன்றைக்கும் சமூக விடுதலைப் போராட்டங்களில் முன்னுக்கு நிற்கின்றார். அண்மையில், ஸ்பெயினின் இரண்டு வெவ்வேறு நகரங்களில், ஏழைப் பட்டாளத்தை அழைத்துச் சென்று, பல்பொருள் அங்காடிகளை (சூப்பர் மார்க்கட்) சூறையாடினார். அங்கிருந்த பொருட்களை அயலில் வாழும் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பெயர் ஸ்பெயின் முழுவதும் பிரபலமானது. ஊடகங்கள் அவரை "ராபின் ஹூட்" என்று அழைத்தன. சஞ்செஸ் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாகையினால் அவரை பொலிஸ் கைது செய்ய முடியவில்லை. 
  


மேலதிக தகவல்களுக்கு:
1. A Job and No Mortgage for All in a Spanish Town, http://www.nytimes.com/2009/05/26/world/europe/26spain.html?_r=3&pagewanted=all SIGN OF
2.THE TIMES: SPANISH ‘ROBIN HOOD’ ACTIVISTS LOOT SUPERMARKETS, http://www.theblaze.com/stories/sign-of-the-times-spanish-robin-hood-activists-loot-supermarkets/# 
3. Marinaleda: 30 años de lucha (Spanish),  http://www.youtube.com/watch?v=qKTjMocijZQ
4. Marinaleda: La otra España, http://www.redglobe.org/europa/espana/20/2952-marinaleda-la-otra-espana

Spanish "Robin Hood" Mayor Loots Supermark
et 

Monday, August 27, 2012

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவை நோக்கி...

(குறிப்பு: இந்தக் கட்டுரை நெதர்லாந்தில் இருந்து வெளியாகும் அரசியல் - சமூக வார இதழான Vrij Nederland இல், டச்சு மொழியில் பிரசுரமானது.  தமிழ் பேசும் மக்களுக்காக,  அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.)

ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பா
 (Een democratisch communistisch Europa)

- இல்யா லெயோனார்ட் பைபர் (Ilja Leonard Pfeijffer)

1989 ம் ஆண்டு, மதில் வீழ்ந்த பொழுது, அது முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியாக கொண்டாடப் பட்டது. சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கிய பொழுது, கம்யூனிச அமைப்பு செயற்பட முடியாது என்பதற்கான ஆதாரமாக புரிந்து கொள்ளப் பட்டது. கம்யூனிசத்தின் எதிர்மறை விம்பமான பாஸிசம், நாற்பத்திநான்கு வருடங்களுக்கு முன்னர், பெர்லின் இடிபாடுகளுக்குள் புதைக்கப் பட்டதோடு ஒப்பிட்டு, மிகப்பெரிய அரசியல் சித்தாந்தங்களின் முடிவு காலம் வந்து விட்டது என்று சொன்னார்கள். வெற்றிவாகை சூடிக் கொண்ட, சுதந்திரமான மேற்குலகம் என்று அழைக்கப்படும் நாடுகளின் அரசியல் பொருளாதாரமானது, எந்த வகையான சித்தாந்தந்திற்கும் உட்படாதது என்று கருதப் பட்டது. அது பன்முகத் தன்மை வாய்ந்த பாராளுமன்ற ஜனநாயகத்திலும், பொருளாதார தாராளவாதத்திலும் தங்கியிருந்தது.

மேற்கத்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், சுதந்திர சந்தையின் சட்டங்கள், இயற்கை வகுத்த சட்டங்களுக்கு ஒப்பானது. அவற்றை எதிர்ப்பதோ, அல்லது ஒதுக்குவதோ, பிரயோசனமற்றதும், முட்டாள்தனமானதுமாகும். கம்யூனிசமும், பாசிசமும் திவாலான நிலையில்; இறுதியில், சந்தையின் செயல்முறையே நம்பத் தகுந்ததாக கருதினார்கள். அதுவே முன்னேற்றத்தையும், சுபீட்சத்தையும், நீதியையும் அளிப்பதற்கான உத்தரவாதமாக கருதப் பட்டது. அப்படித் தான் நினைத்துக் கொண்டார்கள். சிலர் இதனை, சரித்திரத்தின் முடிவு என்ற அர்த்தத்தில் பேசினார்கள். உலகம் முழுவதும், தடையற்ற சுதந்திர வர்த்தகத்தின் ஆயிரம் வருட ராஜ்ஜியம் ஆரம்பமாகியது. 

ஆயிரம் வருட கால சாம்ராஜ்யத்தில், நாம் வெறும் இருபது வருடங்களை மட்டுமே அனுபவிக்க முடிந்தது. 2008 ம் ஆண்டிலிருந்து, அடுத்தடுத்து நெருக்கடிகள் எம் தலை மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு புதிய நெருக்கடியும், முன்னையதை விட மோசமானதாக இருக்கின்றது. எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் முடிவு தெரியவில்லை. ஒன்று மட்டுமே உறுதியானது: "மிகவும் மோசமான நெருக்கடி இனிமேல் தான் வரப் போகின்றது." எமது அரசியல்வாதிகளும், பொருளாதார கொள்கை வகுப்பாளர்களும் நல்லதே நடக்கும் என்ற நினைப்பில் சந்தை மீது நம்பிக்கை வைத்துப் பேசுகின்றனர். நுகர்வோரின் நம்பிக்கையை பாதிக்கக் கூடாது என்பதற்காக அப்படி நடந்து கொண்டாலும், இந்த அமைப்பு உள்ளுக்குள் விழுந்து நொறுங்கி கொண்டிருக்கிறது என்பதே பட்டவர்த்தனமான உண்மை. 

கடந்த மாதங்களாக, இந்த துறை பற்றி பேசிக் கொண்டிருந்த தகமையாளர்கள் அனைவரும் மிகவும் நொடிந்து போயுள்ளனர். கிரேக்க நாடு நெருக்கடியில் இருந்து மீளும் சாத்தியம் எதுவும் இல்லை. கடன் நெருக்கடி ஸ்பெயினுக்கு தாவி விட்டது. அடுத்ததாக பிரான்சும் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றன. அதற்குப் பிறகு, யூரோ நாணயத்தின் கதை முடிந்து விடும். அது தெளிவானது. அது இலட்சக் கணக்கான மக்களின் பொருள் இழப்பு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப் படுவதில் கொண்டு சென்று முடிக்கும். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமல்ல, யூரோ நாணயம் பயன்படுத்தும் நாடுகள் அனைத்தும் இதனால் பாதிக்கப்படும். 

நெதர்லாந்தில்  நாம், "மூன்று A தராதரம்" என்ற பாதுகாப்பான அணைக்கட்டுக்குப் பின்னால் நின்று கொண்டு, எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். தேவைப்பட்டால், எமது பழைய, நம்பிக்கைக்குரிய கில்டர் நாணய காலத்திற்கு திரும்பிச் செல்லலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது நாணயம் பற்றிய பிரச்சினை அல்ல. எமது ஓய்வூதிய நிதியம் போன்றவையே பிரச்சினை ஆகும். யூரோவில் கணக்கிட்டாலும், அல்லது கில்டரில் கணக்கிட்டாலும், பெரும்பாலான (ஓய்வூதிய) நிதியங்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றப் போவதில்லை. எனது கருத்தை மறுதலிக்கும் நிபுணர் யாரையும் நான் காணவில்லை. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன.  அதன் அர்த்தம், எமது வயோதிப காலத்திற்காக நாம் சேமித்த பணம், வட்டியோடு திருப்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் காப்புறுதி நிதியத்தில் வைப்பிலிட்ட பணம், இனிமேல் எமக்கு கிடைக்கப் போவதில்லை. 
"மன்னிக்கவும். ஓய்வூதியம் கிடையாது." 
"ஆனால், அது எமது சொந்தப் பணம். அதைத் தானே நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்?" 
துரதிர்ஷ்ட வசமாக, பணம் அங்கே இல்லை. எமது  பணம், எந்த வித பெறுமதியுமற்ற சிக்கலான பங்குகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டது.  

"அப்போ? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? வறுமையில் வாட வேண்டுமா?" துரதிர்ஷ்டவசமாக, எமக்கு வேறெந்த வழியும் இல்லை. ஒரு வேளை, வீட்டை  விற்று விடலாம். ஆனால், வீட்டு மனை சந்தை ஏற்கனவே வீழ்ந்து விட்டது.  யாரும் அதை இப்போது ஒரு சந்தையாகவே கருதுவதில்லை, ஏனென்றால் வீட்டின் விலை குறைந்து கொண்டு செல்கிறது. மறு பக்கத்தில், அடைமான செலவு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அத்தோடு, ஒரு பக்கத்தில் அலுவலக கட்டிடங்கள் வெறுமையாகக் கிடக்கின்றன. அவற்றை வீடுகளாக மாற்றலாம் என்று சிலர் ஆலோசனை கூறுகின்றனர். நாங்கள் வசதியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டு, "எதுக்கும் பிரயோசனமற்ற கிரேக்கர்களை" மீட்டு விட்டோம்.  ஆனால், நாங்கள் விற்கவும் முடியாத, செலவையும் ஈடுகட்ட முடியாத வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஓய்வூதியமும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.  எமது மருத்துவ காப்புறுதித் தொகையும் கட்ட முடியாத அளவு உயர்ந்து விட்டது. சுருங்கி வரும் பொருளாதாரத்தில், எல்லோரிடமும் செலவளிப்பதற்கான பணம் குறைந்து வருகின்றது. அதனால் வேலை வாய்ப்பும் குறைந்து வருகின்றது. அரசாங்கத்தினால் அறவிடப் படக் கூடிய வரியின் அளவு குறைந்து வருவதால், சமூகநல திட்டங்களையும் தொடர்ந்து பேண முடியாது. இந்தப் பிரச்சினை எல்லாம், கிரேக்கர்களாலோ அல்லது யூரோவினாலோ ஏற்படவில்லை. இவையெல்லாம் சந்தையின் கடுமையான சட்டங்கள். சந்தையின் இரும்புக் கரங்களில் இருந்து எம்மை நாமே விடுதலை செய்து கொள்ளா விட்டால், அதனை தடுத்து நிறுத்த முடியாது.

"எது நடந்ததோ, அது நன்றாக நடந்தது" என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு சுயதேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் தீர்க்கதரிசனம். சரிந்து வரும் பங்குகள், பொருள் இழப்பு, நிறுவனங்கள் திவால் ஆதல், இவற்றில் எல்லாம் ஊகவணிகம் செய்யலாம். அதிலே நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்கலாம். ஒரு பொருள் நஷ்டத்தில் ஓடப் போகின்றது என்று எல்லோரும் நினைத்தால், அதிலே ஊகவணிகம் செய்யலாம்.

ஏதாவது ஒரு பொருளில் நஷ்டம் வராது என்று நம்பினால், அது ஊக வணிகர்களின் பொருளாக இருக்கும். அந்தப் பொருளை நஷ்டமடையச் செய்வதற்கு, அவர்களுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஏராளமான பணத்தை அதிலே முதலிட்டிருக்கிறார்கள். இப்படி எத்தனை ஊக வணிகர்கள் சிந்திக்கிறார்களோ, அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்று நிச்சயப் படுத்தப் பட்டால், இன்னும் அதிகமான ஊக வணிகர்கள் அதைப் பற்றி சிந்திப்பார்கள். இது குறள் வடிவில் அமைந்த முதலாளித்துவம்.  

நாங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு முன்னேறுவதற்கு, தற்போதைய நெருக்கடி ஒன்றும் தற்காலிகமான வசதிக் குறைபாடல்ல. அது அடுத்த நெருக்கடிக்கான ஊற்றுக்கண். அந்த நெருக்கடி இன்னொரு நெருக்கடியை உருவாக்கும். 2008 ம் ஆண்டில் இருந்து தொடரும், ஒன்றோடொன்று தொடர்பு பட்ட நெருக்கடிகள் யாவும், முதலாளித்துவத்தின் உடன்பிறப்புகள். தவணை முறையில் திருத்திக் கொள்வதற்கு, இவை எல்லாம் சந்தையின் சுயமான ஊசலாட்டங்களல்ல. மாறாக, சந்தைப் பொருளாதார அமைப்பின் அடிப்படைப் பிரச்சினை. இப்பொழுது நடப்பது மாதிரி, எப்போதும் நடக்கப் போவதில்லை என்பதில் எல்லோரும் ஓரளவு ஒரு மனதாக கருதுகின்றனர். நாம் வாரியிறைக்கும் கோடிக்கணக்கான மீட்பு நிதிகள், பிரச்சினையை ஒரு சில மாதங்கள் தள்ளிப் போடலாம். செயற்படக் கூடிய தீர்வுகள் எதுவும் இல்லை. நாம் இந்தப் பிரச்சினையை வேறு விதமாக அணுக வேண்டும். 

ஏற்கனவே எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இன்றைய பொருளாதார நெருக்கடி பற்றி, மயிர் சிலிர்க்க வைக்கும் துல்லியத்துடன் எதிர்வு கூறப் பட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னர். தொழிற்புரட்சிக் காலகட்டத்திற்கு பின்னரான இங்கிலாந்தின் நிலைமைகளை வைத்து, கார்ல் மார்க்ஸ் "அரசிய பொருளாதாரம் மீதான விமர்சனங்களை" எழுதியிருந்தார். முதலாளித்துவ அமைப்பின் குறைபாடுகள் பற்றிய அவரின் ஆய்வுகள், முன்னெப்போதையும் விட இன்று தான் பொருந்திப் போகின்றன.  

மார்க்ஸ் கூறியதன் படி,  சங்கிலித் தொடரான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கும். அவை வர வர தீவிரமடையும், ஒன்றை மற்றொன்று தொடர்ந்து வரும். மிகச் சரியாக, அதனை நாங்கள் இன்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மார்க்ஸ் கூறினார்: "இலாபம் ஒருவரின் தனிச் சொத்தாக இருக்கும் அதே நேரத்தில், நஷ்டத்தை பொது மக்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர்."  மிகச் சரியாக, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை வருட காலமாக வங்கியாளர்களுக்கு கிடைத்த இலாபத்தை அவர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால், திவாலானான வங்கிகளை மீட்பதற்கான பொறுப்பு அனைத்து வரி செலுத்துவோரின் தலைகளிலும் விழுகின்றது.  

மார்க்சின் மிகப் பிரபலமான, மூலதனக் குவிப்பு பற்றிய கோட்பாடு ஒன்றுண்டு. அதாவது, முதலாளித்துவ அமைப்பு, மூலதனம் குவிக்கப் படுவதை ஊக்குவிக்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகின்றனர். ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகின்றனர். "எங்கேயோ போகும் கோடிக் கணக்கான யூரோக்கள் எல்லாம் மண்ணில் வந்து விழுவதில்லை." நெருக்கடியை புரிந்து கொள்வதற்காக, ஒரு பார வாகன சாரதி அவ்வாறு கூறினார். அவர் கூறியது மிகச் சரியானது.  சந்தைகள் இயற்கையான தோற்றப்பாடுகள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

சந்தைகள் நெருக்கடிகளை உருவாக்குவதால், வெள்ளத்தை தடுக்க ஆணை கட்டுவதைப் போல அவற்றை நாங்கள் தடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சந்தைகள், உண்மையில் மக்களைக் குறிக்கும். ஒரு சிறு தொகை ஊக வணிகர்கள், நெருக்கடியினால் நாறிப் போகுமளவிற்கு பணத்தை அள்ளுகின்றனர். மண்ணில் வந்து விழாத கோடிகள் எல்லாம் அங்கே தான் போகின்றன.  ஒரு இயற்கையான தோற்றப்பாட்டை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், மனிதர்களின் துர் நடத்தையை தடை செய்யலாம். கோடிக் கணக்கான மக்களுக்கு பாதகமான முறையில், செல்வம் சேர்க்கும் ஒரு சிலருக்கு மட்டுமே உதவுமாக இருந்தால், அப்படிப் பட்ட சந்தைகளை தடை செய்வதற்கு அதுவே ஒரு சிறந்த காரணமாக இருக்கும். 

தாராளவாதம் என்பது சாலச் சிறந்தது. பல தடவைகளாக தவறாக பயன்படுத்தப் பட்ட சுதந்திரம் என்ற சொல்லானது, ஒவ்வொரு அரசியல் அமைப்பினதும் உயரிய இலட்சியமாக உள்ளது. "அனைத்து பிரஜைகளினதும் தனித்துவமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவது. ஒரு தனிநபர் அதிக பட்சம் முன்னேறுவதற்கு நிபந்தனைகள் விதிப்பது. ஒவ்வொருவரும் அவர் விரும்பியவாறு வாழ அனுமதிப்பது."  அதுவே ஒவ்வொரு அரசினதும், ஒரேயொரு, புனிதமான கடமையாக உள்ளது. 

அனைவருக்குமான சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, சுதந்திரத்திற்கான பாதை செப்பனிடப் பட வேண்டியுள்ளது. ஒருவரின் சுதந்திரத்தை மட்டுப் படுத்தி, இன்னொருவரின் சுதந்திரம் குறைக்கப் படுகின்றது. அடுத்தவரின் சுதந்திரத்தில்  தலையிடுவதும், பாதிப்பதுமான நடத்தைகள் தடை செய்யப் பட வேண்டும். அதனால் தான், நாங்கள் சில நேரம் பிரஜைகளின் சுதந்திரத்தை பறிக்கிறோம். இன்னொருவரின் கழுத்தை அறுப்பதற்கு, இன்னொருவரின் பொருளை திருடுவதற்கு, போக்குவரத்திற்கு இடையூறாக வாகனமோட்டுவதற்கு, அயலவரின் வீட்டை எரிப்பதற்கு, இது போன்றவற்றுக்கு எல்லாம் சுதந்திரம் கொடுக்கப் படுவதில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தை உறுதிப் படுத்துவதற்காக, எமது சுதந்திரத்தை குறைத்துக் கொள்வதை நாங்கள் சாதாரணமாக எடுக்கிறோம். 

தாராளவாதம் (லிபரலிசம்) என்ற சொல்லை, கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் ஒத்த கருத்துள்ள சொல்லாக புரிந்து கொள்கிறோம். பண்பாட்டு தாராளவாதத்திற்கும், பொருளியல் தாராளவாதத்திற்கும் இடையில் பாகுபாடு காட்டப்பட வேண்டும். சிந்திப்பதற்கு, நம்புவதற்கு, கருத்துக் கூறுவதற்கான சுதந்திரமும், கட்டற்ற சந்தைப் பொருளாதாரமும் ஒன்றல்ல.  சுதந்திரமான சந்தை, குடிமக்களின் நலன்களை பாதிக்கின்றது. அதனால், அது தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாக கருதப்பட வேண்டும். அதனாலேயே தடை நியாயப் படுத்தப் படுகின்றது, அத்தோடு அவசியமானதும் கூட. ஆனால், அதற்கு இன்னும் சில அர்த்தங்கள் உள்ளன. கட்டற்ற சுதந்திர சந்தையை தடை செய்வதென்பது, உண்மையில் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கு ஒப்பானது. அந்த இடத்தில் இனி வரப்போவது, அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் என்று அறியப் பட்டாலும், நாங்கள் அதனை கம்யூனிசம் என்றழைப்போம். 

இத்தகைய மாற்றத்தை தான் மார்க்ஸ் கண்டார். ஆனால், அதைக் கேட்டவுடன் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஏனென்றால், கம்யூனிசம் பற்றி தெரிந்து கொள்ள, இப்போதைக்கு எமக்கு எந்த விருப்பமும் கிடையாது. கம்யூனிசம் நடைமுறைச் சாத்தியமில்லாதது என்று,  நாங்கள்  இருபது வருடங்களுக்கு முன்னரே முடிவு செய்து விட்டோம். "ஐந்தாண்டு பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்தி, வறுமையையும், பஞ்சத்தையும் மட்டுமே உண்டாக்கும்", அரசியலாளருடன் கம்யூனிசத்தை ஒன்று படுத்திப் பார்க்கிறோம். ஆனால், அரசினால் நிர்வகிக்கப் படும் பொருளாதாரம் குறித்து நாங்கள் அச்சப் படத் தேவையில்லை. 

அரசு என்பது ஒரு காவல் நிலையம் அல்ல. ஒரு ஜனநாயக அமைப்பில், (மக்களாகிய) நாங்கள் தான் அரசாங்கம்.  எல்லாவிதமான அவலங்களையும் எமக்களித்த சுதந்திர சந்தையினால், மக்களாகிய நாங்கள் பொருளாதாரத்தை எமது கையில் எடுப்பதை தடுக்க முடியுமா? ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப் படும் பொருளாதாரத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்காவது இருக்கிறதா?  தங்களுக்கு மட்டுமே செல்வம் சேர்க்கும், மனச்சாட்சியே இல்லாத ஊக வணிகர்களிடம் நாங்கள் அதனை விட்டு விட முடியுமா? 

அதனால் தான், மதில் வீழ்ந்ததையும், சோவியத் சாம்ராஜ்யம் நொறுங்கியதையும் உதாரணமாக காட்டி,  "கம்யூனிசம் நடைமுறையில் சாத்தியப் படாது" என்ற முடிவுக்கு நாங்கள் வந்து விட முடியாது.  அங்கே இருந்தது கம்யூனிசம் அல்ல. இருபதாம் நூற்றாண்டில் இருந்த, இப்போது இருக்கும் ஒரு சில, "கம்யூனிச நாடுகள்" என்று கருதப் பட்ட நாடுகள் எல்லாம், உண்மையில் கூட்டுத்துவ அமைப்பு நாடுகள். 

மார்க்சின் அடிப்படைச் சுலோகத்தின் படி, மக்களின் கைகளில் உற்பத்திச் சாதனங்கள் இருந்தால் தான் அது கம்யூனிசம் என்று அறியப்படும். ஆனால், கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்ட எந்த நாட்டிலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. மக்கள் எதையும் தீர்மானிக்க முடியாது. மதிலின் வீழ்ச்சியானது எமக்கு எதனை உறுதிப் படுத்தியுள்ளது என்றால், "சர்வாதிகாரம் நடைமுறையில் சாத்தியப் படாது." மக்கள் ஜனநாயகமான உண்மையான கம்யூனிசம், சரித்திரத்தில் என்றுமே முயற்சிக்கப் படவில்லை. 

நிச்சயமாக,  அதற்கேற்ற ஜனநாயக கட்டமைப்பு இன்னமும் உருவாக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால், அந்த நிலைமை தற்போது மாறிக் கொண்டிருக்கிறது. Occupy இயக்கமானது, கட்டற்ற சுதந்திர சந்தைக்கு எதிராக எழுச்சியுறும் போராட்டங்கள் பற்றிய நற்செய்தியை அறிவித்த முதலாவது தூதுவன். இந்த இயக்கமானது பெருமளவு ஆர்வத்தை தூண்டுவதற்கு காரணம், அது அடித்தட்டு மக்களிடம் இருந்து தானாக கிளர்ந்தெழுந்தது.  19 ம் நூற்றாண்டில் மார்க்ஸ் திட்டமிட்டதைப் போல, அது ஒரு பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி. 

Occupy இயக்கத்தினரால் குறைந்தளவு தாக்கம் மட்டுமே செலுத்த முடிந்ததது. அத்தோடு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கவில்லை. ஆனால், அவர்கள் ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தார்கள். இப்போது இருக்கும் நிலைமை, என்றென்றைக்கும் தொடரப் போவதில்லை. வருங்காலத்தில், நெருக்கடிகளால் பாதிக்கப்படும் மக்கள் இந்த உணர்வைப் பெறுவார்கள்.  ஓய்வூதியம் கிடைக்கப் போவதில்லை என்றால், யாருமே வீட்டை விற்க முடியாது என்றால், அது விரைவில் நடக்கும். நாங்கள் அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டும் என்று, சமூகத்தின் பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் கருதுவதையும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜனநாயக கம்யூனிச ஐரோப்பாவில் நான் வாழ விரும்புகின்றேன். ஒரு தடவை, நாங்கள் அதனை முயற்சித்துப் பார்க்க வேண்டும். 

(நன்றி: Vrij Nederland , 11 ஆகஸ்ட் 2012 )

(மூலப் பிரதியை இங்கே வாசிக்கலாம்: http://www.vn.nl/boeken/essay-2/een-democratisch-communistisch-%E2%80%A8europa/)


அடிக்குறிப்பு: 
Vrij Nederland ஒரு "வழக்கமான இடதுசாரிகளின் பிரச்சார சஞ்சிகை" அல்ல. நாஜிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த நெதர்லாந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் குரலாக ஒலித்தது. சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்கத்தின் குறை நிறைகளை விமர்சித்து எழுதி வருகின்றது. சர்வதேச மட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் தவறுகளையும், சோஷலிச நாடுகளின் தவறுகளையும் சுட்டிக் காட்டி எழுதி வந்துள்ளது. நேர்மையான ஊடகவியல் காரணமாக, வலது, இடது பாகுபாடின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப் படுகின்றது. மேலதிக தகவல்களை விக்கிபீடியா இணைப்பில் வாசித்து அறிந்து கொள்ளலாம். 


Wednesday, August 22, 2012

முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்

புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்! 

இரத்தம் சிந்திய பெண் விடுதலைப் போரில், முதல் களப்பலியான நூர்ஜான், அவரது சகோதரர்களால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப் பட்டார்! "பெண்களே! உங்களைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்கை உடைத்தெறியுங்கள்." என்று புதுமைப் பெண்ணைப் பற்றி கவிதை பாடிய உஸ்பெகிய கவிஞர் ஹம்சா, நமது பாரதியாரை நினைவுபடுத்துகின்றார். கல்வி மறுக்கப்பட்ட மகளிரை கவிதை பாடி தட்டி எழுப்பிய புரட்சிக் கவிஞன், மதவெறியர்களால் அடித்துக் கொல்லப் பட்டான். (Hamza Hakimzade Niyazi,  http://en.wikipedia.org/wiki/Hamza_Hakimzade_Niyazi) சோஷலிச உஸ்பெகிஸ்தானில், ஹம்சாவுக்கும், நூர்ஜானுக்கும் சிலைகள் கட்டப் பட்டன. இத்தனைக்கும், அந்த இரண்டு தியாகிகளும் கம்யூனிஸ்டுகள் அல்ல! 

உஸ்பெகிஸ்தான் பெண்களின் உரிமைப் போர் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், அன்றைய மத்திய ஆசியாவின் சமூக அமைப்பு எப்படி இருந்தது என்று பார்ப்போம். இன்றைக்கு இருக்கும் தேசிய எல்லைகள் எல்லாம் பிற்காலத்தில் உருவானவை. அன்றைய மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் துருக்கெஸ்தான் என்று அழைக்கப் பட்ட பகுதிக்கு பொறுப்பாக ஒரு எமிர் இருந்தார். உண்மையில் அது ஒரு பிராந்திய கவர்னர் பதவி போன்றது என்றாலும், எமிர் ஒரு அரசனைப் போல ஆண்டு வந்தார்.  எமிரும், மத குருமாரான முல்லாக்களும், "பெண்கள் ஆண் துணையின்றி, தனியாக வெளியே செல்வதையும், கல்வி கற்பதையும்," தடை செய்து வைத்திருந்தனர். பெண்கள் வெளியே செல்வதென்றால், தாலிபான் கால ஆப்கானிஸ்தானில் இருந்ததைப் போன்று, முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூடும் திரை போட்டுக் கொண்டு தான் செல்ல வேண்டும். முகத்திரை அணியாமல் செல்லும் பெண்கள், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று அர்த்தம். அவர்களை யாரும் எதுவும் செய்யலாம். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவை நோக்கி விரிந்து கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம், துருக்கெஸ்தான் பகுதியையும் போரில் வென்று ஆக்கிரமித்தது. தெற்கே இன்னொரு உலக வல்லரசான பிரித்தானியா, என்ன விலை கொடுத்தென்றாலும், ரஷ்யாவின் முன்னேற்றத்தை தடுக்க விரும்பியது. அதனால், ஆப்கானிஸ்தானை இரண்டு வல்லரசுகளுக்கு இடைப்பட்ட நடுநிலைப் பிரதேசமாக, மோதல் தவிர்ப்பு  ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால், இன்று இந்தியாவும் ரஷ்யாவின் ஒரு மாநிலமாக இருந்திருக்கும்! 

ரஷ்யப் பேரரசன் சார் மன்னன், துருக்கெஸ்தான் பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டாலும், எமிரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டான். பிரிட்டிஷ் காலனியான இந்தியாவில், மகாராஜாக்கள் ஆட்சி செய்தது போல, எமிரின் உள்நாட்டு ஆட்சியதிகாரத்தில் ரஷ்யர்கள் தலையிடவில்லை. வெளிநாட்டுத் தொடர்பு, தேசிய இராணுவம்போன்ற முக்கிய விடயங்களை ரஷ்யர்கள் பார்த்துக் கொண்டனர். துருக்கெஸ்தான் பகுதிகளில் ரஷ்ய இராணுவ முகாம்கள் இருந்தன. நிர்வாகக் கட்டமைப்புக்காகவும் பெருமளவு ரஷ்யர்கள் குடியேற்றப் பட்டனர். இருந்தாலும், ரஷ்ய சட்டம் அவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம் மக்கள், ஷரியா சட்டத்தினால் ஆளப்பட்டனர். இதனால், சார்  மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்குள் வாழ்ந்தாலும், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை கிடைக்கவில்லை. அதே போன்று, துருக்கெஸ்தான் முஸ்லிம்களுக்கு ரஷ்ய பிரஜாவுரிமையும் வழங்கப் படவில்லை. அவர்கள் வழக்கம் போல, எமிரின் குடிமக்களாக நடத்தப் பட்டனர். 

துருக்கெஸ்தான் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், துருக்கி மொழிகளைப் பேசுகின்றனர். (காசக், உஸ்பெக், கிரிகிஸ் போன்ற மொழிகள் ஒன்றுக்கொன்று சிறிதளவு மாறு படும் ஒரே மாதிரியான மொழிகள்.) தாஜிக் மக்கள் மட்டும், ஈரானிய பார்சி மொழியை ஒத்த வேற்று மொழி பேசுகின்றனர். டாடார்ஸ்தான் என்ற இன்னொரு துருக்கி மொழி பேசும் மக்களின் நாடு, பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. இதனால், டாட்டார் மக்கள், ரஷ்ய நிர்வாகிகளாக வேலை வாய்ப்புப் பெற்று வந்தனர். டாட்டார் மக்களுக்கும், துருக்கெஸ்தான் மக்களுக்கும் இடையில், ஒரே மொழி காரணமாக நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. உண்மையில், ரஷ்ய அரசின் நோக்கமும் அதுவாக இருந்தது.

19 ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்கள் தாம் பிடித்த காலனிகளில் எவ்வாறு நடந்து கொண்டனரோ, அவ்வாறு தான் ரஷ்யர்களும் நடந்து கொண்டனர். காலனிய மக்களை நாகரீகப் படுத்துவது தமது கடமை என்று ஆங்கிலேயர்கள் நினைத்ததைப் போன்று, "பின்தங்கிய மத்திய ஆசிய மக்களை நாகரீகமயமாக்கும் பொறுப்பை" ரஷ்யர்கள் ஏற்றுக் கொண்டனர்.   காலனிப் படுத்திய பகுதிகளில், ரஷ்ய வழிக் கல்வி அளித்து, புதிய மத்தியதர வர்க்கம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். ஆங்கில மொழி பேசத் தெரிந்த இந்தியர்களைப் போல, ரஷ்ய மொழி பேசத் தெரிந்த துருக்கியர்களும் ரஷ்யர்களைப் போல சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது தான் மேலைத்தேய தத்துவங்களும், துருக்கெஸ்தான் பிராந்தியத்தில் பரவத் தொடங்கின. 

அமைதிப் பூங்காவாக காட்சியளித்த துருக்கெஸ்தானில், 1916 ம் ஆண்டு பெரும் கலவரம் உண்டானது. அப்போது முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. தோல்வியுற்றுக் கொண்டிருந்த ரஷ்யப் படைகளுக்கு மேலதிக துருப்புகளை சேர்ப்பதற்காக, கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தப் பட்டது. பதினாறுக்கும் நாற்பது வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், கட்டாயமாக ரஷ்ய  இராணுவத்தில் சேர வேண்டும் என உத்தரவிடப் பட்டது. கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்து, துருக்கெஸ்தான் பகுதி நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. இதிலே குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில், கலகத்தில் பெண்கள் அதிகளவில் பங்குபற்றினார்கள்! துருக்கெஸ்தான் வரலாற்றில், பெண்கள் பொது இடத்தில் ஒன்று கூடுவதும், அரசியல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதும் அதுவே முதல் தடவை. 

பெண்கள், ரஷ்ய அரச அலுவலகக் கட்டிடங்களை தாக்கி உடைத்தார்கள். இந்தக் கலவரம் சில வாரங்கள் நீடித்தது. இன்றைய நவீன காலத்தில், கைத் தொலைபேசி, இணையத்தை பாவித்து போராட்டத்திற்கு ஆட்களை சேர்க்கிறார்கள். அந்தக் காலத்தில், அப்போது தான் அறிமுகமான, தந்தி, தட்டச்சு இயந்திரங்கள் போராட்டத்தை ஒழுங்கு படுத்த உதவின. மேலும் மசூதிகளில் முல்லாக்களும் போராட்டத்திற்கு செல்லுமாறு அறைகூவல் விடுத்தனர். அந்நியர்களான ரஷ்யர்களுக்கு எதிராக பெண்களை போராட அழைத்த முல்லாக்கள், ஒரு பெரிய வரலாற்றுத் தவறிழைத்தார்கள். பத்து வருடங்களுக்குப் பின்னர், இதே பெண்கள், முல்லாக்களின் அதிகாரத்தை எதிர்த்தும் போராடப் போகிறார்கள் என்று, அன்றைக்கு யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சியினரின் சோஷலிசப் புரட்சி வென்றது. துருக்கெஸ்தானில் வாழ்ந்த ரஷ்யர்களுடன், துருக்கியருக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டு, புதிய சோவியத் ஒன்றியத்தின் பிரஜைகள் ஆக்கப் பட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி, பெண்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கினார்கள். அந்த கால கட்டத்தில், மேற்கு ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வாழ்ந்த பெண்கள், வாக்குரிமை பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.  அன்றைய ஐரோப்பாவில், குறைந்தது ஐந்து வீதப் பெண்கள் தான் வெளியே வேலைக்கு சென்று வந்தனர்.  ஆனால், சோவியத் யூனியனில், உழைக்க முடிந்த பெண்கள் அனைவருக்கும் வேலை கிடைத்தது. வேலை செய்வது தனி மனித உரிமையாக அங்கீகரிக்கப் பட்டதால், துருக்கெஸ்தான் பெண்களையும் வேலைக்கு அனுப்பினார்கள். ஆனால், அப்பொழுது ஒரு பிரச்சினை எழுந்தது. 

முஸ்லிம் பெண்கள், வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்து பழக்கப் பட்டிருக்கவில்லை. அவர்கள் விரும்பினாலும், முல்லாக்கள் தடுத்து வந்தனர். ஆண்களும் தம் வீட்டுப் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை. வீட்டிலேயே சமைப்பதும், குழந்தைகளை பராமரிப்பதுமே பெண்களின் கடமையாக கருதப்பட்டது. அதனால், ஒரு கலாச்சாரப் புரட்சி அவசியமாக இருந்தது. ஸ்டாலின் காலத்தில், "ஹுஜும்"(தாக்கு) என்ற பெயரில் பெண் உரிமைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது. முதன் முதலாக உஸ்பெகிஸ்தானில், சர்வதேச மகளிர் தினத்தன்று, தாஷ்கென்ட் நகரில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்த துருக்கி முஸ்லிம் உறுப்பினர்கள், தமது மனைவி மாரை அனுப்பி வைத்தனர். 

ஆயிரக்கணக்கான துருக்கி-முஸ்லிம் மகளிர், போல்ஷெவிக்குகளின் அறைகூவலுக்கு செவி கொடுத்தனர். பல பெண்கள், நகர மத்தியில் உள்ள சதுக்கத்தில் ஒன்று கூடி, தமது முகத்திரைகளை கழற்றிப் போட்டு எரித்தனர். அந்தக் காலத்தில் அப்படிச் செய்வதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். ஏனென்றால், தமது செய்கையானது உயிராபத்தை உண்டாக்கும் என்பதை தெரிந்தே செய்தனர்.  நூர்ஜான் என்ற இருபது வயது நிரம்பிய இளம்பெண், முகத்திரை அகற்றி விட்டு வீதியில் நடந்து சென்றதற்காக, அவரது சொந்த சகோதரர்களால் கழுத்து வெட்டி கொல்லப் பட்டார். அவரின் செயலால், "முழுக் குடும்பத்திற்கும் அவமானம் நேர்ந்து விட்டது" என்பது கொலைகாரர்களின் வாதம். 

முன்பெல்லாம், முல்லாக்களின் ஆட்சியில், அவ்வாறான கௌரவக் கொலைகளை புரிவோர் வீரர்களாக போற்றப் பட்டனர். ஆனால், காலம் மாறி விட்டது. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில், பழைமைவாத பிற்போக்காளர்களின் கொலை வெறிக்கு பலியான நூர்ஜான், ஒரு வீராங்கனையாக போற்றப் பட்டார். சரித்திரத்தில் முன்னொருபோதும் அது போன்ற சம்பவம் நடக்கவில்லை. நூர்ஜானுக்கு நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப் பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சி அடையும் வரையில், அந்த இடத்திற்கு பாடசாலைப் பிள்ளைகளை சுற்றுலாவாக கூட்டிச் செல்வது வழக்கமாக இருந்தது. தொன்னூறுகளில் சோஷலிசம் மறைந்த பின்னர், மீண்டும் தலைதூக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நூர்ஜான் சிலையை உடைத்தனர். இன்று அந்த இடம் கவனிப்பாரற்று சேதமுற்று காணப்படுகின்றது. 

கௌரவக் கொலைக்கு பலியான ஒரு நூர்ஜானின் கதை அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அன்றைய போராட்டத்தில் மரணத்தை தழுவிய பிற பெண்களின் கதைகளை உலகம் மறந்து விட்டது. துணிச்சலுடன் முகத்திரையை எடுத்து விட்டு வீதியில் சென்ற, ஆயிரக் கணக்கான பெண்கள் கொலை செய்யப் பட்டனர். அந்தக் கொலைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு இடங்களில் நடந்தன. குடும்ப கௌரவத்திற்கு இழுக்குத் தேடித் தந்த காரணத்தைக் கூறி, பல பெண்கள், அவர்களின் பெற்றோர், சகோதரர்களால் கொல்லப் பட்டனர். ஆனாலும், குடும்ப உறுப்பினரல்லாத வெளியாரும் கொலைகளில் ஈடுபட்டனர். 

முகத்திரை அணியாமல் செல்லும் பெண்ணைக் கண்டால், தெருவில் நிற்கும் ஆண்கள் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். சில நேரம், கும்பல் கும்பலாக பலாத்காரத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்கள் எல்லாம் பின்னர் கொல்லப் பட்டனர். ஏதோ ஒரு வகையில், குடும்பத்திற்கு அவமானத்தை தேடித் தந்தவர்கள் என்பதால், அந்தப் பெண்களை பாதுகாக்க குடும்ப உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. அன்றைய காலத்தில், முகத்திரை அணியாமல் சென்ற பெண்கள் எல்லோரும் ஒரு போர்க்களத்தை சந்தித்திருந்தனர். மகாத்மா காந்தி நடத்திய  போராட்டத்தை விட கடினமான அஹிம்சைப் போராட்டம் அது. அகப்பட்டால் அடித்துக் கொல்லப் படுவோம் என்று தெரிந்து கொண்டு தான், உஸ்பெகிஸ்தான் பெண்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். 

அன்று சோவியத் பொலிசும், நீதிமன்றங்களும் பெண்களுக்கு விரைவான நீதி கிடைக்குமாறு வழி செய்தன. உஸ்பெகிஸ்தான் நீதிமன்றங்களுக்கு வந்த முக்கால்வாசி வழக்குகள், பெண்கள் மீதான வன்முறை தொடர்பானதாக இருந்தன. முன்னரைப் போல எமிரின் சட்டம் செல்லுபடியாகாது என்பதால், முல்லாக்களும், மத அடிப்படைவாதிகளும் ஆப்கானிஸ்தானுக்கு தப்பியோடி விட்டனர். அந்தக் காலத்தில், மதவாத ஆயுதக் குழுக்களுடன் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்ததும், அவர்களின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணம். இதனால், பெண் அடக்குமுறையாளர்களின் எண்ணிக்கையும், அதிகாரமும் வெகுவாகக் குறைந்தது. 

மேலும், பெண்களும் வேலைக்கு போவது கட்டாயமாக்கப் பட்டதால், குடும்ப உறுப்பினர்களால் முகத்திரை போடுவதை கட்டாயப் படுத்த முடியவில்லை. காலப்போக்கில், தமது சொந்த நலன்களுக்காக, ஏராளமான துருக்கி முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்கள். அவர்கள் வெளியில் முகத்திரை அணிவதை எதிர்த்து பேசினார்கள். ஆனால், வீட்டிற்குள் தமது பெண்களை முகத்திரைக்குள் அடக்கி வைத்திருந்தார்கள். முகத்திரை தடைச் சட்டத்திற்கு ஆலோசிக்கப் பட்டாலும், அது பின்னர் கைவிடப் பட்டது. அதற்குக் காரணம், இஸ்லாமிய மதவாதிகள், புதிய சோஷலிச அரசுடன் ஒத்துழைக்க ஆரம்பித்திருந்தனர். ஏனெனில், மதரசா போன்ற சமயப் பள்ளிகள் இயங்குவதற்கு சோவியத் அரசிடம் அனுமதி பெற்றிருந்தனர். முல்லாக்களும் மசூதிகள், மதராசக்களை நடத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கவில்லை. 


மேலதிக தகவல்களுக்கு:
1.Veiled Empire: Gender & Power in Stalinist Central Asia, by Douglas Taylor Northrop
2.The New Woman in Uzbekistan: Islam, Modernity, and Unveiling Under Communism, by Marianne Kamp
3. In Centraal Azië, Een reis langs tradies en godsdiensten, by Linda Otter
4. Hujum, http://en.wikipedia.org/wiki/Hujum
5. Hamza Hakimzade Niyazi,  http://en.wikipedia.org/wiki/Hamza_Hakimzade_Niyazi

Tuesday, August 21, 2012

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்களின் முன்னோர்கள்

[இந்துக்களின் தாயகம் 
சீனாவில் உள்ளது! - 15]

(பதினைந்தாம் பாகம்)
வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளையும், அவை நடைபெற்ற ஆண்டுகளையும் மட்டுமே, வரலாற்றுப் பாடத்தில் சொல்லிக் கொடுப்பதால், பலருக்கு அந்தப் பாடம் கசக்கின்றது. ஆனால், சரித்திரத்தில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட விளைவுகளையும், அவை எமது அன்றாட வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கங்களையும் சொல்லிக் கொடுத்தால், மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால், அதிலே ஒரு பிரச்சினை. மக்கள் உண்மைகளை அறிந்து விட்டால், வருங்காலத்தில் ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுத்து விடும். அதனால் தான், நான் இங்கே எழுதிய விடயங்களை பற்றி யாரும் பேசுவதில்லை.  உதாரணத்திற்கு, அலெக்சாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பில் இருந்து ஆரம்பிப்போம். அலெக்சாண்டர் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? உலகம் முழுவதும் ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டான். அடுத்தடுத்து பல போர்களில் வெற்றிகளை குவித்தான். இந்தியாவில் தோல்வியுற்று திரும்பிச் சென்றான்.... அதன் பிறகு? அலெக்சாண்டர் வழிநடத்தி வந்த கிரேக்கப் படைகள் என்னவாகின. மாசிடோனியாவுக்கு (அலெக்சாண்டரின் தாய்நாடு) திரும்பிச் சென்றனவா?

கி.மு. 300 ல் படையெடுத்து வந்த அலெக்சாண்டரின் படைகள் திரும்பிச் செல்லவில்லை. வெள்ளையின கிரேக்கர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் நிரந்தரமாக தங்கி விட்டிருந்தனர். அலெக்சாண்டர் அதிக காலம் உயிர் வாழவில்லை. 32 வயதில் இறந்தான். உண்மை. ஆனால், அலெக்சாண்டரின் தளபதிகள், அவன் கைப்பற்றிய நாடுகளை ஆண்டு வந்தார்கள். அதாவது, ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும், அடுத்த 300 ஆண்டுகளுக்கு கிரேக்கர்களால் ஆளப்பட்டன! கிரேக்க வெள்ளையரின் காலனிகள் ஏற்பட்டன. அவர்கள் தமது மொழி, மதம், கலாச்சாரம் எதையும் விட்டுக் கொடாமல், தொடர்ந்து பின்பற்றி வந்தனர். இன்று அந்த கிரேக்கர்கள் எங்கே? உள்ளூர் மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். கிரேக்க வம்சாவளியினர், இந்து, கிரேக்க தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அந்தக் காலத்தில், ஆப்கானிஸ்தான் முதல் காஷ்மீர் வரையிலான கிரேக்க குடியேறிகளின் நாட்டில், இந்து-பௌத்த மதங்களின் செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. (பார்க்க:  India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara)

அலெக்சாண்டரின் படையெடுப்பு மட்டுமல்ல, செங்கிஸ்கானின் படையெடுப்பும் இந்திய மக்கள் சமூகத்தில் மாபெரும்  மாற்றங்களை உண்டாக்கின. செங்கிஸ்கான் தலைமையில், துருக்கி மொழி பேசும் மொங்கோலியர்கள் உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டார்கள். அவர்களின் சாம்ராஜ்யத்திற்குள் வட இந்தியாவின் ஒரு பகுதியும் (பஞ்சாப், காஷ்மீர், டெல்லி) அடங்கியது. மொங்கோலியர்களும் வெள்ளை இனத்தவர்கள் தான். அப்போது வந்த வெள்ளையின துருக்கியர்கள், வட இந்தியாவில் நிரந்தரமாக தங்கி விட்டனர். மொங்கோலியர்கள் படையெடுத்த காலத்தில், அவர்கள்  முஸ்லிம்களாக மாறி இருக்கவில்லை.  மொங்கோலிய மக்களின் புராணக் கதைகள் சில, இந்து மத புராணக் கதைகளை ஒத்திருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாரசீகத்தில் இருந்து படையெடுத்து வந்த பஹ்லவி மன்னர்கள், தென்னிந்தியா வரை பிடித்து ஆண்டார்கள். அவர்களுடன் ஈரானை தாயகமாக கொண்ட, வெள்ளையின படைவீரர்களும் வந்தார்கள்.  அவர்களும் திரும்பிச் செல்லவில்லை. பல்லவர்கள் என்ற பெயரில் தமிழர்களாக மாறி விட்டனர்!

செங்கிஸ்கானின் சாம்ராஜ்யம் இந்தியா வரை விரிந்த அதே காலகட்டத்தில்,  தென்னிந்தியாவில் சோழர்கள் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியிருந்தனர். சோழர்களுக்கும், செங்கிஸ்கானின் அரசுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்? சீனாவில் குவான் ஸௌ என்னும் நகரத்தில்,  சோழ நாட்டு வணிகர்கள் கட்டிய சைவக் கோயில் ஒன்றிருந்தது. அந்தக் கோயில் செங்கிஸ்கானுக்காக கட்டப்பட்ட விபரம், தமிழிலும், சீன மொழியிலும் ஒரு கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் குவான் ஸௌ அருங்காட்சியகத்தில் காணலாம். சோழர்கள் காலத்தில் சைவ மதம் நிறுவனமயப் படுத்தப் பட்டது. இன்றைய இந்து மதத்திற்கு அடிப்படையான, சோழர்களின் சைவ மதத்திற்குள், பல மொங்கோலிய கலாச்சாரக் கூறுகள் உள்வாங்கப் பட்டன. 

"என்னது! நாங்கள் (மொங்கோலிய) துருக்கியரின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறோமா? அதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா?"
நீங்கள் தமிழ்க் கலாச்சாரம் என்று கருதிக் கொண்டிருக்கும் பல விடயங்கள், மொங்கோலியாவில் இருந்து இறக்குமதியானவை! இன்றைய முற்போக்காளர்கள் அவற்றை பழமைவாதம் என்று ஒதுக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில், ஆண்களுக்கும், விருந்தினருக்கும் உணவளித்த பின்னர் எஞ்சியதை தான், அந்தக் குடும்பத்து பெண்கள் சாப்பிட வேண்டும்.  மணமாகாத பெண்கள் கற்பைக் காப்பற்றப் பாடுபடும் கலாச்சாரமும், துருக்கியரிடம் இருந்து கடன் வாங்கியது தான். இன்றைக்கும், தமிழ் சினிமாக்களில் வரும் கதாநாயகன், தன்னை காதலிக்காத பெண்ணை பலவந்தப் படுத்தி தாலி கட்டுவான். அதற்குப் பிறகு, அந்தப் பேதைப் பெண், கல்லானாலும் கணவன் என்று வாழத் தொடங்கி விடுவாள். அதெல்லாம்  தமிழரின் கலாச்சாரம் அல்ல. இன்றைக்கும், மத்திய ஆசிய நாடுகளில், துருக்கி மொழி பேசும் மக்கள் மத்தியில் அது போன்ற சம்பிரதாயம் பின்பற்றப் படுகின்றது. 

வரலாற்றில் எழுதப்பட்டுள்ள அன்னியப் படையெடுப்புகளுக்கு முன்னரும், வெள்ளையினத்தவர்களின் ஊடுருவல் இருந்துள்ளதை மறுக்க முடியாது.  கி.மு. 3000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியாக் கண்டம் எவ்வாறு காட்சியளித்தது? நாம் இலகுவாக புரிந்து கொள்வதற்காக, அன்றைய ஆசியாவை மூன்றாக பிரித்துப் பார்ப்போம். இந்தியாவுக்கு மேற்கே ஆப்பிரிக்க-திராவிட இனத்தவரின் நாகரீகம், இன்றைய ஈராக், ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளில் நாகா இன மக்களின் நாகரீகம் காணப்பட்டது. இந்த இரண்டு நாகரீகங்களும், பல துறைகளில் சிறந்து விளங்கின. 

மேற்கேயிருந்து ஆப்பிரிக்க-திராவிடர்கள், கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அந்த தருணங்களில், திராவிடர்-நாகர் மோதல்கள் நடந்துள்ளன. (இன்று மியான்மரில், நடக்கும் ரோஹிங்கியா பிரச்சினையையும், ஒரு வகையில் திராவிடர்-நாகர் போரின் தொடர்ச்சியாக கருதலாம்.) இருப்பினும், ஆப்பிரிக்க-திராவிடர்கள் இலங்கையின் அம்பாந்தோட்டை வரை வெற்றிகரமாக நகர்ந்து, தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அதாவது, இந்திய உப கண்டத்தைப் பொறுத்த வரையில், திராவிடர்களும் வந்தேறு குடிகள் தான். ஆனால், இரு இனங்களும் பரஸ்பரம் நட்பு பாராட்டி, ஒன்று கலந்து விட்டன. ஒரு இனத்தின் நாகரீகத்தை, மற்ற இனம் அழிக்கவில்லை. இரண்டும் சேர்ந்து புதிய நாகரீகம் உருவாகியது. (பார்க்க: Sun and the Serpent, by C.F. Oldham &  The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt)

ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதில், நாகரீகத்தில் சிறந்து விளங்கிய திராவிடர், நாகர் இனங்கள் வாழ்ந்த காலத்தில், வெள்ளையின மக்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்தனர். அவர்களின் தாயகம், இன்றைய ரஷ்யாவுக்கு சொந்தமான சைபீரியா, காசகஸ்தான், அல்லது மொங்கோலியா. அவர்களது தாயகப் பூமி விவசாயத்திற்கு ஏற்ற நிலவமைப்பை கொண்டிருக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்த புல்வெளிகள், கால்நடைகளை வளர்ப்பதற்கு ஏற்ற இடம். அதனால், கோடை  காலத்தில் ஓரிடம், பனிக் காலத்தில் இன்னொரு இடம் என்று, கால்நடைகளுடன் இடம்பெயர்வது வழக்கம். இன்றைக்கும் அந்த நாடுகளில் வாழும் கிராமப்புற மக்கள், கால்நடைகளை வளர்க்கும் நாடோடிக் கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்கள் குதிரைகளையும் சவாரி செய்யப் பயன்படுத்தி வந்தனர். ஓடிக் கொண்டிருக்கும்  குதிரைகள் மீது மாறி மாறி சவாரி செய்யும் திறமை காரணாமாக, பிற இனங்களுடனான போரில் வெல்ல முடிந்தது. 

திராவிட, நாக இன மக்கள் குதிரைகளின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.  வடக்கே இருந்து படையெடுத்து வந்த வெள்ளையின நாடோடிக் குழுக்களுடன் நடந்த போர்களில், இதன் காரணமாக தோல்வியை தழுவி இருக்கலாம். வெள்ளையின நாடோடிக் குழுக்கள், சில்லுகளின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர். அதனால், நாற்புறமும் மூடப்பட்ட வண்டிகளுக்கு சில்லு பூட்டி, குதிரைகளில் இழுத்துச் சென்றனர். அந்த குதிரை வண்டிகள் சிறிய வீடு போன்று, (நமது காலத்தில் "கரவன்" போன்று) காணப்பட்டன. முழுக் குடும்பமும் அதற்குள் இருந்து, நாடு விட்டு நாடு குடிபெயர்ந்தது. பிற்காலத்தில், மிகப்பெரிய கூடார வீட்டைக் கூட, குதிரைகள் கட்டி இழுத்துச் சென்றனர். இதை எல்லாம் உங்களுக்கு நிரூபிப்பதற்கு, நான் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. காசகஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, நீங்களே நேரில் பார்க்கலாம்.  

தாயக பூமியில் அரிதாகக்  கிடைத்த இயற்கை வளங்கள், வெள்ளையின நாடோடிக் குழுக்களை தெற்கு நோக்கி இடம்பெயர வைத்ததில் வியப்பில்லை. ஏற்கனவே பல குழுக்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்திருந்தன. இன்றைய ஐரோப்பிய இனங்களின் மூதாதையர் அவர்களே. வெள்ளையின நாடோடிக் குழுக்கள், இயற்கையை வழிபட்டு வந்தன. மரம், குன்று, ஆகாயம், நீர், இடிமுழக்கம் எல்லாமே அவர்களின் தெய்வங்களாக இருந்தன. இன்றைக்கும் சைபீரியாவில் வாழும் மக்கள், இயற்கை வழிபாட்டாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பல ஆயிரம் வருடங்களாக, இயற்கை வழி வந்த தெய்வங்கள் தான், வெள்ளையினத்தவரின் மத நம்பிக்கையை தீர்மானித்தன. ஸ்கன்டிநேவியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும், இந்திரன், வருண பகவான், அக்னி போன்ற இந்து-சம்ஸ்கிருத மக்கள் வழிபட்ட தெய்வங்களுக்கும் இடையிலான ஒற்றுமையே அதனை நிரூபிக்க போதுமானது. ஆனால், அந்த மத நம்பிக்கைகளுக்கும், எமக்குத் தெரிந்த இந்து மதத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதனை எப்படி விளக்குவீர்கள்?  எங்கோ ஒரு இடத்தில், வெள்ளையின நாடோடிக் குழுக்கள் தம்மை இந்துக்களாக, அல்லது பிரம்மாவை முழுமுதற் கடவுளாக வழிபடும் பிராமணர்களாக, தம்மை மாற்றிக் கொண்டன. அந்த மாற்றம் எங்கே நடந்தது? 

சமர்கண்ட் நகரம், இன்றைய உஸ்பெகிஸ்தான் நாட்டில், தாஜிகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பும் அது பல்லின கலாச்சாரங்களைக் கொண்ட நகரமாக திகழ்ந்தது. அப்பொழுது அதன் பெயர் "மார்க்கண்டு".  சொக்டியானா அல்லது சுகுதா என்ற ராஜ்யத்தின் தலைநகரம். அந்த நகர மக்கள், பிரமா, இந்திரன், சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டு வந்தனர்.இந்த தெய்வங்களுக்கு, அவர்களின் மொழியில் வேறு பெயர்கள் இருந்தன. அவை முறையே, சிரவன்  (பிரமா), அட்பட் (இந்திரன்), வெஷ்பாகர் (சிவன்). ஆனால், கடவுளர் உருவங்கள் ஒரே மாதிரி உள்ளன.   (அந்த சுவரோவியங்கள் சமர்கண்ட்  நகரில் இருந்து 60 கி.மி. தூரத்தில்  Penjikant ல்  உள்ளன. அல்லது ரஷ்யாவில், சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள  Hermitage Museum ல் பார்வையிடலாம்.) அன்றைய மத்திய ஆசியாவின் வேறு பகுதிகளிலும், இந்து மத வழிபாடு நிலவி இருக்கலாம். எப்போதும் பொருளாதார வளர்ச்சி காணும் நாடு, தன்னை விட அதிக வளர்ச்சி கண்ட நாட்டு நாகரீகத்தை பின்பற்றுவது வழமை. பண்டைய காலத்திலும் அது தான் நிலைமை. சொக்டியானா, தெற்கில் வாழ்ந்த திராவிடர்களின் மத வழிபாட்டை பின்பற்றி இருக்கலாம். ஏற்கனவே திபெத் பகுதிகளில், திராவிடர்களின் தாந்திரிய மதம் பரவி இருந்தது. 

வெள்ளையின நாடோடிக் குழுக்களின் தெற்கு நோக்கிய இடப்பெயர்வு, இரண்டு திசைகளில் நடந்துள்ளது. ஒன்று, சீனாவில் இருந்து திபெத் ஊடாக நடந்த இடப்பெயர்வு. மற்றது, ஈரானில் இருந்து பாகிஸ்தான் ஊடாக நடந்த இடப்பெயர்வு. இன்றைய நவீன காலத்திலும், சீனாவும், இந்தியாவும் ஆயிரக்கணக்கான மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளன. ஆகவே, பெருமளவு வெள்ளையின மக்களின் ஊடுருவல், சீனாவில் இருந்து நடந்திருக்க வாய்ப்புண்டு. இடைப்பட்ட காலத்தில், அவர்கள் இந்து மத தெய்வங்களை, தமது கடவுளராக மாற்றிக் கொண்டனர். ஏனெனில், சைபீரியாவில் வாழ்ந்த காலத்தில் பின்பற்றிய இயற்கை வழிபாட்டை விட, திராவிட-நாகர்களின் "இந்து மதம்" வளர்ச்சி அடைந்திருந்தது. ஈரானில் இருந்து நடந்த இடப்பெயர்வு, குறைந்தது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் நடந்திருக்கலாம். ஈரானில் தங்கி விட்ட வெள்ளையின மக்கள், தனியான நாகரிக மாற்றத்திற்கு உட்பட்டனர். சரதூசர் என்ற தத்துவ ஞானி, திராவிட மக்களின் தெய்வங்களில் ஒன்றை வைத்து, ஓரிறைக் கொள்கை கொண்ட புதிய மதம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.  அது புதியதொரு நாகரிக வளர்ச்சிக்கு வழி திறந்து விட்டது. 

சரதூசரின் மதத்தை பின்பற்றிய ஈரானியரின் மத நூல்கனான, அவெஸ்தா போன்ற இலக்கியங்கள், இந்து மத வேதங்களின் வடிவில் எழுதப் பட்டுள்ளன. இரண்டுமே செய்யுள் வடிவில் எழுதப் பட்டுள்ளது மட்டுமல்ல, பல கதைகள் ஒரே மாதிரி உள்ளன. சில சுவாரஸ்யமான விடயங்களையும் அவதானிக்க முடிகின்றது. பண்டைய ஈரானிய மத நூல்களில், "தேவர்கள் கெட்டவர்கள், அசுரர்கள் நல்லவர்கள்!"  மேலும், சரதூசரின் மதத்தின் ஒரேயொரு கடவுளின் பெயர், "அசுரா" மாஸ்டா! அப்படியானால், எதற்காக இந்து மத நூல்கள், தேவர்களை நல்லவர்களாகவும், அசுரர்களை கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றது? காரணத்தை நாங்கள் ஊகிக்க மட்டுமே முடியும். 

அநேகமாக, ஈரானில் குடியேறிய வெள்ளையின மக்கள், ஏற்கனவே அங்கிருந்த உன்னதமான திராவிட நாகரீகத்தை பின்பற்ற விரும்பி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் குடியேறிய வெள்ளையினத்தவர்கள், அசுரர்கள் (நாகர்கள்), தாசர்கள் (திராவிடர்கள்) ஆகிய இனங்களுடனான யுத்தங்களில் வென்றனர். அத்தோடு நில்லாது, யுத்த வெற்றிகளை பறைசாற்றும் புதிய மதம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டனர். அதுவே, பிராமண மதம் என்றும், பிற்காலத்தில் இந்துமதம் என்றும் அழைக்கப் பட்டது. ஈரானில் தோன்றிய சரதூசரின் மதத்திற்கும், இந்தியாவில் தோன்றிய இந்து மதத்திற்கும் இடையில், நடைமுறையில் பாரிய வித்தியாசங்கள் இருந்தன. இந்து மதத்தில், சைபீரியப் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் தொடர்ந்தும் பின்பற்றப் பட்டு வந்தது ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். 

மேற்கு சீனப் பிரதேசத்தில், தொகாரியன் என்ற ஐரோப்பியர் போன்ற தோற்றம் கொண்ட, ஒரு வெள்ளையினம் வாழ்ந்து வந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பட்டு வாணிபம் காரணமாக உண்டான பொருளாதார வளர்ச்சியினால், அவர்களும் நகரங்களை கட்டி நாகரீகமடைந்த சமுதாயமாக திகழ்ந்தனர். பிற்காலத்தில், கிழக்கே இருந்து படையெடுத்து வந்த சீனர்களுடனான போரின் விளைவாக, இன்று அந்த இனம் அழிந்து விட்டது. எஞ்சிய மக்கள், தாஜிக், துருக்கி இன மக்களுடன் ஒன்று கலந்து விட்டனர். சீனாவில் இன்றைக்கும் அழியாமல் உள்ள, துகாரியன் நகர இடிபாடுகளில் காணப்படும் ஓவியங்கள் சில உண்மைகளை உணர்த்துகின்றன. சுவரோவியங்களில் காணப்படும்  வெள்ளையின துகாரியன் மக்கள், இந்தியர்களைப் போல நெற்றியில் பொட்டு வைத்திருக்கிறார்கள்! சில முகங்கள் (வெள்ளை நிற) இந்திய முகங்கள் போல தெரிகின்றன.
(மேலதிக தகவல்களுக்கு இந்த இணைய வீடியோவை பார்க்கவும்:

China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808)   

பண்டைய இந்துக்களின் சடங்கு, சம்பிரதாயம், கலை, கலாச்சாரங்களை எடுத்துப் பார்த்தாலே புரிந்து விடும், அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்று. பிராமணர்கள் அஸ்வமேத யாகம் வளர்த்து, குதிரைகளை யாகத்தீயில் தூக்கிப் போடுவது வழக்கம்.  ஊர் மத்தியில், பெரியதொரு நெருப்பை உண்டாக்கி, அதனருகில் விருந்துண்டு மகிழ்வது, ஆதி கால வெள்ளையரின் பண்டைய காலப் பழக்கம். பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம் அந்த சம்பிரதாயத்தை தடை செய்து விட்டாலும், அது இன்னமும்  சில இடங்களில் தொடர்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர், நோர்வேயிலும், சைப்பிரசிலும், நானே நேரில் சென்று பார்த்திருக்கிறேன்.

உலக வரலாற்றில், எந்த இனம் அதிகளவு குதிரைகளை வீட்டுத் தேவைகளுக்காக பயன்படுத்தியது? மத்திய ஆசியாவிலோ வாழும், மொங்கோலிய/துருக்கி மொழிகளை பேசும் மக்களின் வாழ்வில் இன்றைக்கும் குதிரைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. வேத நூல்களில் எழுதப் பட்டுள்ள உணவுப் பதார்த்தங்கள் பல, இன்றைய இந்தியர்கள் யாருக்கும் தெரியாது. உதாரணத்திற்கு, சோம பானம். இன்றைக்கும் நீங்கள் ஆப்கானிஸ்தான் சென்றால், அங்கே சோம பானம் பருகலாம்! அடுத்தது, பெண்களை கடத்திச் சென்று மணம் முடிக்கும் கலாச்சாரம். வேதங்களில் எட்டு வகை திருமணங்கள்  பற்றி கூறப் பட்டுள்ளன. அசுரம், ராக்ஷசம், மற்றும் காந்தர்வம் போன்ற மண முறைகள், ஒரு பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று மணம் முடிப்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. அப்படியானால், அந்த மண முறைகள் எல்லாம், பண்டைய (ஆரிய) இந்துக்களின் பண்பாடாக இருந்துள்ளது. அந்தப் பண்பாடு, உலகில் வேறெந்த நாட்டிலாவது இருக்கின்றதா? கிரிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில், இன்றைக்கும் இளைஞர்கள் தனது வருங்கால துணைவியாரை கடத்திச் சென்று மணம் முடிக்கின்றனர். 

இந்துக்களின்  தாயகம் எது? பூர்வீக இந்துக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? இது போன்ற விபரங்களை இந்தத் தொடர் கட்டுரை தெளிவாக விளக்கி இருக்கும் என்று நம்புகின்றேன். இதற்குப் பிறகும் நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள், சீனா, ரஷ்யா, அல்லது மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள கலாச்சார, சம்பிரதாயங்களை மேற்கொண்டு ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுகிறேன். இந்தக் கட்டுரையை முடிப்பதற்கு முன்னர் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சமஸ்கிருதம், ஒரு இனத்தை சேர்ந்த மக்களின் தாய் மொழியாக இருந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை. அது, இறைவனை வழிபடவும், மத இலக்கியங்களை புனையவும், பிராமணர்களால் பயன்படுத்தப் பட்ட "இரகசிய" மொழியாகும். ஆதி காலத்தில், பிராமணர் என்பது சாதியைக் குறிக்கவில்லை. பௌத்த பிக்குகள் போன்று, ஒரு துறையில் பாண்டித்தியம் பெறுவதற்காக தெரிந்தெடுக்கப் பட்டவர்களை குறிக்கும். 

ஆரியர் என்பதும், சிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டது. அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்பதற்கோ, அல்லது ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடையாது. "ஆரியர்கள் வெள்ளையர்கள்" என்பது ஒரு நிறவெறிக் கோட்பாடு. சமஸ்கிருதத்திற்கும், ஜேர்மனிய மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமை, இவற்றுடன் சிவந்த நிற இந்தியர்களையும் ஒன்று சேர்த்து பார்த்து, பிரிட்டிஷ் காரர்கள் உருவாக்கிய கோட்பாடு.  "ஈரான்" (ஆரியர்களின் நாடு) என்ற பெயர் கூட, ஒரு இனத்தைக் குறிக்கும் பெயர் என்ற அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. "மேன் மக்களின் நாடு", என்ற ஒரு சிறப்பு தேசிய அடையாளமாகவும் இருக்கலாம்.  பண்டைய வரலாற்றை இலகுவாக புரிந்து கொள்வதற்காக, சில அறிஞர்கள் உருவாக்கிய ஆரியர், திராவிடர் போன்ற சொற்கள், இன்று வெகுவாக அரசியல் மயப் படுத்தப் பட்டு விட்டன. 

வரலாறு நெடுகிலும், மக்கள் மாறாமல் அப்படியே இருந்ததில்லை.  ஆனால், இருபதாம் நூற்றாண்டு இனவாதிகள் மட்டுமே, ஒரு இனத்தின் மாறாத் தன்மை பற்றிய மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்.  எமது மூதாதையர் யாரும், எம்மைப் போல இனவாதிகளாக இருக்கவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்து மதம். இந்திய நாகரக்ளினதும், திராவிடர்களினதும் மத நம்பிக்கைகளை ஆரியர்களும் பின்பற்றினார்கள். மதம், மொழி, இவை எல்லாம் மக்களால் இலகுவில் மாற்றிக் கொள்ளக் கூடியவை.  ஒருவர் பிறப்பால் மட்டுமே இந்துவாக முடியும் என்று இன்னமும் நம்புகிறவர்கள், தமது முன்னோர்களை  சீனாவிலோ, ரஷ்யாவிலோ தேடிச் செல்லட்டும். 

(முற்றும்) 

உசாத்துணை :
1. The Horse, the Wheel, and Language: How Bronze- Age Riders from the Eurasian Steppes, by David W.Anthony
2.Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress
3. Sons of the Conquerers, by Hugh Pope
4. In Centraal Azië, Een reis langs tradities en godsdiensten, by Linda Otter
5. Sun and the Serpent, by C.F. Oldham
6. India and Central Asia: Classical to Contemporary Periods, by Braja Bihari Kumara 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!
14.காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

Monday, August 20, 2012

காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 14]

(பதினான்காம் பாகம்)

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது.  இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார்.  அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்.

அவர்களின் தேடல் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. இலங்கை, திபெத் (அன்று சுதந்திரமான தனிநாடு) ஆகிய  நாடுகளுக்கும் சென்றார்கள். சமஸ்கிருதம், பாளி மொழிகளில் எழுதப் பட்ட இலக்கியங்களை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர். அவர்கள் கற்றறிந்த பண்டைய இலக்கியங்களில் இருந்து, தாமாகவே சில முடிவுகளுக்கு வந்தார்கள். அவர்களது ஆராய்ச்சி பெரும்பாலும் தொல்பொருள் துறை, அகழ்வாராய்ச்சி, பண்டைய வரலாறு, போன்ற "நாகரிக உலகிற்கு சம்பந்தமற்ற" விடயங்களாக இருந்தன. ஆனால், எமது இன்றைய கருத்துருவாக்கம், சிந்தனை முறை, அரசியல்-மத நம்பிக்கைகள், எல்லாம், குறிப்பிட்ட சில ஐரோப்பிய அறிவுஜீவிகளால் உருவாக்கப் பட்டவை என்பதை பலர் அறிவதில்லை. 

ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள், அதனை முதலில் இந்துக்களின் புனித நூல் என்றார்கள். ஆனால், விரைவிலேயே அது ஆரியர்களின் வரலாற்று நூலாக புரிந்து கொள்ளப்பட்டது. வேத நூல்களில் எந்த ஒரு இடத்திலும், இந்து என்ற சொல்லே எழுதப் பட்டிருக்கவில்லை. அதனால், அதனை ஆரியர்கள் என்ற இனத்தை சேர்ந்த மக்களின் நூல் என்று கருதலாமா? பைபிளை (பழைய ஏற்பாடு) "யூதர்களின் வரலாற்றைக் கூறும் நூல்", என்று படித்தவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திரனும், அவனது மக்களும், குதிரை வண்டிகளில்,  கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த கதைகள் செய்யுள்களாக இயற்றப் பட்டுள்ளன. ஆனால், அவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த இன மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் தாயகம் எங்கேயுள்ளது? அதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ள அரசர்கள்/தலைவர்கள்  எல்லாம் ஆரியர்களும் அல்ல.  ஆரிய இனக்குழுக்களுக்கு திராவிட அரசர்கள் தலைமை தாங்கியுள்ளமை, அவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகின்றது. (The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, David W. Anthony) ஆகவே, இங்கே ஒரு குழப்பம் எழுகின்றது. ஆரியர்கள் என்றால் யார்? அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா?  முக்கியமாக, ஆரியர் என்பது வெள்ளையினத்தைக் குறிக்கும் சொல்லா? 19 ம் நூற்றாண்டு, ஐரோப்பிய அறிவுஜீவிகளுக்கு அந்தக் குழப்பம் இருக்கவில்லை.  "ஆரியர் என்பது வெள்ளயினத்தைக் குறிக்கும்.வெள்ளையினக் குடியேறிகளின் இந்தியப் படையெடுப்புகளைப் பற்றிய கதைகள் தான் ரிக் வேதத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன." இத்தகைய ஒரு தலைப்பட்சமான முடிவுகள் தான், பிற்காலத்தில் நிறவெறிக் கொள்கை வகுப்பாளர்களால் ஹிட்லருக்குப் போதிக்கப் பட்டன.

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று, அர்த்தமில்லாமல் எழுந்தமானமாக தலைப்பிடவில்லை. இந்து என்ற சொல், இந்தியாவில் வாழ்ந்த புராதன மத நம்பிக்கைகளை கொண்ட மக்களைக் குறிப்பதற்காக, பிரிட்டிஷ் காரர்களால் சூட்டப் பட்ட பெயராகும். முன்பு இஸ்லாமிய-அரேபியர்கள் பாவித்த சொல்லை, பிரிட்டிஷார் கடன் வாங்கி இருந்தனர். இந்துக்களின் புனித சின்னமாக கருதப்படும் ஸ்வாஸ்திகா, ஹிட்லரினால் நாஜிக் கட்சியின் சின்னத்திற்காக கடன் வாங்கப் பட்டது. அது தொடர்பாக, இந்துக்களின் பூர்வீகத்தை ஆராய அக்கறை கொண்டிருந்தார். அதற்காக சில தூதுவர்களை திபெத் வரை அனுப்பினார். (1938–1939 German expedition to Tibet, http://en.wikipedia.org/wiki/1938%E2%80%931939_German_expedition_to_Tibet) அவர்கள், திபெத்தில் இந்துக்களின் தாயகத்தை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பது தெரியாது. அதற்குள் நாஜி ஜெர்மனி போரில் தோற்று விட்டது. சில வருடங்களில், தீபெத் சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்டது. உண்மையில், ஜெர்மனியர்கள் மத்திய ஆசியாவிலும்  இந்துக்களின் வேர்களை தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால், அன்று அந்தப் பகுதி முழுவதும், எதிரியான சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 

"இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமையான மதம். அதனை தோற்றுவித்தவர் யார் என்பது தெரியாது." என்று இந்துக்கள் பெருமையாக கூறிக் கொள்கின்றனர். சரி, பழமையான மதம் என்பதற்கு எதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்?  ரிக் வேதத்தை விட, காலத்தால் பழைமையான வேறு நூல்கள் ஏதாவது கிடைக்கின்றனவா? ரிக் வேதம், இந்துக்களின் புனித நூல் என்றால், ஆரியர்களின் வரலாறும் அதில் மட்டுமே எழுதப் பட்டுள்ளது. ஆகவே, இந்து மதம் ஆரியர்களின் மதம் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால், அது சரியா? இந்து மதம் ஆரியர்களுடையது என்றால், ஆரியர்கள் வெள்ளையினத்தவர் என்றால், அவர்களின் பூர்வீகம் எது? சீனாவில் உள்ள திபெத்தில் தான், இந்து மத சின்னங்கள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

யாரும் எளிதில் நெருங்க முடியாத, இமய மலை உச்சியில் இருக்கும் நாடு என்பதால், அந்நிய நாகரீகங்களால் பாதிக்கப்படவில்லை. மேலும், "சிவபெருமான் வசிக்கும்" கைலாய மலை, "சிவனின்  உச்சந் தலையில் இருந்து உற்பத்தியாகும்" கங்கை நதியின் மூலம், போன்ற பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உள்ளன. சிவபெருமான் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு பற்றிய கதையும், அந்தப் பிரதேசத்தில் பிரசித்தமானது. முன்னொரு காலத்தில், கருட இனத்தவர்களுக்கும், நாக இனத்தவர்களுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. போரில் நாக இனத்தை அழிய விடாமல், சிவன் பாதுகாத்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றது.  (சில புராணங்கள் நூல் வடிவில் எழுதப் படாமல் மறைந்து விட்டன. அப்படி ஒரு புராணத்தில் இருந்த கதை.) அந்தக் கதைகளை, காஷ்மீர், திபெத் பகுதியில் வாழும் மக்கள் சொல்லக் கேட்டு சிலர் எழுதியுள்ளனர்.

காஷ்மீரின் பண்டைய சரித்திரம், நாகர்  இன மக்களே காஷ்மீரின் பூர்வகுடிகள் என்று கூறுகின்றது. காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களும், இந்துக்களும் அதனை நம்புகின்றனர். இன்றைக்கும் காஷ்மீரில், நதி நீர் உற்பத்தியாகும் மூலத்தை "நாகா" என்ற பெயரில் அழைக்கின்றனர். அந்த இடங்களில் நாகதேவதைகள் வசிப்பதாக நம்புகின்றனர். அது மட்டுமல்ல, வருடத்தின் முதலாவது பனிப் பொழிவை, "நிலா பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே சிறப்பான, இந்துக்கள், முஸ்லிம்களுக்கு பொதுவான பண்டிகை அது.  நமது காலத்தில், எழுத்து வடிவில் வாசிக்கக் கிடைக்கும் பண்டைய இலக்கியம் ஒன்றின் பெயர், "நிலா மத புராணம்". (The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html)  பிற்போக்கான இந்து மத புராணங்களோடு ஒப்பிடும் பொழுது, நிலா மத புராணம் ஒரு இனத்தின் அல்லது நாட்டின், அனைத்து அம்சங்களையும் கூறுகின்றது. அதாவது, கடவுளரின் வீரசாகசக் கதைகளும் உண்டு. அதே நேரம், வரலாறு, சட்டம், பூகோளம், சமூகவியல், மதச் சுதந்திரம், பெண் சுதந்திரம், போன்ற பல துறைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

அதை வாசிக்கும் பொழுது, இன்றைய "மேற்கத்திய ஜனநாயக சமூகம்" போன்றதொரு நாகரிக சமுதாயம், காஷ்மீரில் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.  பிராமணர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்தாலும், சூத்திரர்களை கீழானவர்களாக கருதவில்லை. மன்னனின் முடிசூட்டு விழாவில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் நடக்கும் பண்டிகைகளில் கலந்து கொள்ள முடிந்தது. விசேட தினங்களில் நடக்கும் நீர் விளையாட்டுகளில், ஆண்களோடு பெண்களும் சேர்ந்து பங்குபற்றினார்கள். நாக தெய்வத்தை வழிபடும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டாலும், பிரம்மா, சிவன், விஷ்ணு, புத்தர்  போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களுக்கும், மதச் சுதந்திரம் இருந்தது. மன்னன் எப்போதும் நாக இனத்தை சேர்ந்தவனாக இருந்த போதிலும், "மன்னன் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்!" இத்தகைய "சட்டத்தின் ஆட்சி", 19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

நிலாமத்த புராணத்தில் குறிப்பிடப் படும், நாகர்களின் மன்னனின் பெயர் நிலா. (வாசுகி என்பதும் ஒரு நாக இன மன்னனின் பெயர் தான். நிலா, வாசுகி இருவரும் நாக (பாம்புத்) தெய்வங்களாக மக்களால் வழிபடப் பட்டு வந்தனர்.) நிலா வின் தந்தை, காசியப்ப முனிவர். அவரின் பெயரில் இருந்து காஷ்மீர் (காஷ்யப்பா) என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆதி காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், மலைகளால் அணைக்கட்டு போல சூழப்பட்ட நீரேரி போன்று காணப்பட்டதாம். நீர் அகற்றப் பட்ட பின்னர், நாகா இன மக்கள் வந்து குடியேறினார்கள். இது ஒரு காலத்தில், ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரையிலான பகுதி, பனியினால் மூடப்பட்டு கிடந்ததது என்ற விஞ்ஞான அறிவியலை நினைவு படுத்துகின்றது. பனி உருகும் பொழுது, பெரும் நீர்ப் பெருக்கெடுத்து, மலைகளை ஊடறுத்து ஓடிய அடையாளங்களை கிரேக்க நாட்டில்  இப்பொழுதும் காணலாம். 

பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், காஷ்மீரில் குடியேறிய நாகா இன மக்கள், புதிய குடியேறிகளான மனுவின் மக்களுடன் (ஆரியர்கள்) கூடி வாழ வேண்டியேற்பட்டது. மேற்கே இருந்து வந்த மணவர்கள் என்ற இன்னொரு இனம் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவர்களோடு மோதல் ஏற்பட்டு, பின்னர் (கடவுளர் தலையிட்டு) சமரசம் செய்து வைத்தார்கள்.  (நிலாமத்த புராணம், Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html )  இந்த மணவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த திராவிடர்களாக இருக்கலாம்.  ஆப்பிரிக்க திராவிடர்கள் இந்திய உப கண்டத்தில் குடியேறிய காலத்தில், அங்கே நாகா இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றாலும், பல இடங்களில் இரண்டு இனங்களும் கூடிக் கலந்து வாழ்ந்தன. நாகர்-திராவிடர் இனக்கலப்பு, இலங்கைத் தீவு வரையில் இடம்பெற்றுள்ளது. (பார்க்க: The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt) பண்டைய காலத்தில், திராவிடர் என்ற சொல் இருக்கவில்லை. ரிக் வேதத்தில் தாசர்கள், மகாவம்சத்தில் இயக்கர்கள், இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப் பட்டு வந்தனர். 

இந்து புராணங்களுக்கும், சீனப் புராணங்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவது ஒன்றும் புதினமல்ல. உதாரணத்திற்கு சில: விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் ஆமை. சிருஷ்டிப்பு பற்றிய சீனக் கதையிலும் ஆமை முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. சீன பௌத்த நம்பிக்கையிலும், பூமியை தாங்கிப் பிடிக்கும் அண்ட வெளி ஆமை முக்கிய இடம் வகிக்கின்றது. சுன் வுகொங் (Sun Wukong) என்ற குரங்கு அரசன் பற்றிய சீனப் புராணக் கதை, இராமாயணத்தில் வரும் அனுமானை நினவு படுத்துகின்றது. அனுமான் சீதையை தேடிச் சென்றால், சுன் வுகொங் பௌத்த சூத்திர நூல்களை தேடிச் செல்கிறான். அனுமான் போன்று, சுன் வுகொங் மலையைத் தூக்குமளவு பலம் பொருந்தியவன். நினைத்த நேரம், உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன். எமக்கு நன்கு தெரிந்த வேலேந்திய முருகன் போன்று, வாளேந்திய மஞ்சு ஸ்ரீ  (Manjushri) தெய்வம் சீனாவில் பிரசித்தமானது. மஞ்சுஸ்ரீ தெய்வத்தை வழிபடும் மந்திரமான, "ஓம் அர பசா நாதின்..."(Oṃ A Ra Pa Ca Na Dhīḥ)    உங்கள் காதில் "ஓம் அரஹரா நாதா" என்று ஒலிக்கலாம். முருகன் சிவனுக்கும், மஞ்சுஸ்ரீ புத்தனுக்கும், "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் என்பது ஐதீகம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடுகளின் சர்வதேச எல்லைகளும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும், வேறு விதமாக இருந்தன. வட இந்தியப் பிரதேசங்களுக்கும், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. பட்டு வாணிபமும், அதனோடு தொடர்பான நகரங்களும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, வட சீனாவில் இருந்து வட இந்தியா வரையில், ஒரு நாகரிக உலகை சிருஷ்டித்து இருந்தன. அந்த மக்களுக்கிடையில் வர்த்தகத் தொடர்பு மட்டுமல்ல, மத, கலாச்சாரத் தொடர்புகளும் ஏற்பட்டன. எந்த மத நம்பிக்கையும், யாரும் யாரையும் அடிமைப் படுத்தி பரவவில்லை.

இன்றைய உலகில், ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதங்களை கீழாகப் பார்க்கின்றனர். மதச் சகிப்புத் தன்மை குறைந்து வருகின்றது. ஆனால், நாங்கள் "நாகரீகமடைந்த மனிதர்கள்" என்று பெருமையடித்துக் கொள்கிறோம். வடக்கே சமர்கண்ட் (இன்று உஸ்பெகிஸ்தான்) நகரில் இருந்து, தெற்கே காஷ்மீர் வரையில், மக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருந்தது. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அதனால், மக்கள் விரும்பினால் பிற மதத்தவரின் தெய்வங்களையும் வழிபட்டார்கள். ஆட்சியாளர்களும் தமது மதங்களை மக்கள் மேல் திணிக்கவில்லை. (பார்க்க: Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress)

ஆரியர்கள் இந்திய உபகண்டத்திற்கு வந்த காலம், கி.மு. 1000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், ஆரியர்களின் படையெடுப்பு,  ஒரே நேரத்தில் நடந்திருக்க முடியுமா? உலக வரலாற்றில் பல பொய்கள் புனையப் பட்டுள்ளன என்பதை, இன்று பல சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆரியர்கள் என்ற வெள்ளையின மக்களின் இந்தியா நோக்கிய இடப்பெயர்வு, வரலாற்றில் ஒரு தடவை மட்டும் நடந்திருக்குமா? இந்திய உபகண்டத்தில் வெள்ளையின மக்களின் குடியேற்றம், கி.மு. 5000 ஆண்டிலிருந்து, 20 ம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்த உண்மையை எல்லா வரலாற்று நூல்களும் மறைத்து வந்துள்ளன. எதற்காக?


(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:
1.The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html
2.Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html
3.Sun Wukong, http://en.wikipedia.org/wiki/Sun_wukong
4.Manju Shri,  http://en.wikipedia.org/wiki/Manjusri
5.China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!