Saturday, April 23, 2016

வர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்த் தலைவர்கள்!

பண்டாரநாயக்க, சேர் பொன் இராமநாதன் 

"ஈழத் தமிழர்களுக்கு, வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்பை, 1926 ம் ஆண்டே பண்டாரநாயக்க முன்மொழிந்திருந்தார். ஆனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்!" இந்தத் தகவலை, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். (Bandaranaike Proposed Federalism to Isolate Tamils, Charges Wigneswaran)

அவர் மேலும் தெரிவிக்கையில்:"பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு இருந்தனர். நாடு முழுவதும் எந்த இடத்திலும் காணி வாங்க முடிந்தது. உத்தியோகம் பார்க்க முடிந்தது. அதனால், தமிழர்களை வடக்கு- கிழக்கிற்குள் ஒதுக்கி வைக்கும் சமஷ்டி அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தலில் வியப்பில்லை. எது எப்படி இருந்தாலும், 1956 ம் ஆண்டு பண்டாரநாயக்க பிரதமரான பின்னர், தமிழ் சமஷ்டிக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. அப்போது பண்டாரநாயக்க மனதை மாற்றிக் கொண்டு விட்டார். தமிழ் அடையாளத்தை அழிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தார்." என்று கூறினார்.

அண்மையில் பேசிய ஜேவிபி தலைவர் டில்வின் சில்வா, "(விக்னேஸ்வரன் போன்ற) தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே சமஷ்டி கோருகிறார்கள்." என்று குற்றஞ் சாட்டி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாக, "பண்டாரநாயக்கவின் சமஷ்டி கோரிக்கையை" விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டி இருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை கருப்பு - வெள்ளையாக பார்க்க முடியாது என்பதைத் தான், விக்கினேஸ்வரனின் கூற்று தெளிவு படுத்துகின்றது. "வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழரின் தாயகம்" என்று இன்றைய தமிழ் தேசியவாதிகள் உரிமை கோருகின்றனர். ஆனால், அன்றைய தமிழ் தலைவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. தமிழீழம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றிய எண்ணக்கரு தான்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த, அரசால் திட்டமிடப் பட்ட இனக் கலவரங்கள், ஈழத் தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் முடங்க வைத்தது. தென்னிலங்கையில், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பண்டாரநாயக்கவின் சமஷ்டி திட்டம், தமிழர்களை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் ஒதுங்க வைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே பல சம்பவங்கள் நடந்துள்ளன.

1925 ம் ஆண்டு, இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று விட்டு நாடு திரும்பிய பண்டாரநாயக்க, முற்போக்கு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினார். முற்போக்கு தேசியக் கட்சி, ஆங்கிலேயக் காலனியான இலங்கையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு தன்னைத் தயார் படுத்தி வந்தது. பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டித் திட்டத்தின் படி, இலங்கை மூன்று சமஷ்டி அலகுகளாக பிரிக்கப் பட வேண்டும். 
1.கரையோர சிங்களவர்களின் தென்னிலங்கைப் பிரதேசம். 
2.முன்பு கண்டி ராஜ்ஜியமாக இருந்த மத்திய மலைநாடு. 
3.வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்ட தமிழர் பிரதேசம்.

இலங்கைக்கான அரசியல் யாப்பு எழுத வந்த டொனமூர் ஆணைக்குழுவிடம் பண்டாரநாயக்கவின் சமஷ்டித் திட்டம் கையளிக்கப் பட்டது. அன்று பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கும் சென்று, தமிழர்கள் முன்னிலையில் தனது சமஷ்டித் திட்டம் பற்றி உரையாற்றினார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒழுங்கு படுத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், சமஷ்டிக்கு பெரிய வரவேற்பு இருக்கவில்லை.

முற்போக்குத் தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவின் தமிழ் நண்பர் ஜேம்ஸ் ரத்தினமும் அங்கம் வகித்திருந்தார். பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டி அமைப்பை எதிர்த்து வாக்களித்தவர்களில் அவர் முக்கியமானவர். தான் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறேன் என்று, “Ceylon Morning Leader” (19 May 1926) பத்திரிகையில் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் சமஷ்டிக் கோரிக்கை ஒற்றையாட்சியை சீர்குலைத்து விடுமென்றும், பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என்றும் வாதிட்டு இருந்தார்!

இவ்வாறு தமிழர்கள் சமஷ்டி எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கண்டிச் சிங்களவர்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இலங்கை சுதந்திரமடையும் வரையில், கண்டிச் சிங்களவர்கள் தமது சமஷ்டிக் கோரிக்கையை கைவிடவில்லை. ஒற்றையாட்சியின் கீழான இலங்கையில், கரையோரச் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவார்கள் என்று அஞ்சினார்கள். தமது பிரதேசங்களில் கரையோச் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

1927 ம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது. பல்வேறு பட்ட உள்நாட்டு அரசியல் தலைவரகள் ஆணைக்குழுவிடம் தமது பிரேரணைகளை முன்வைத்தனர். தமிழர்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன் இராமநாதன்  தமிழ் லீக் கட்சி சார்பில் தனது ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். 

டொனமூர் ஆணைக்குழு முன்பு சாட்சியமளித்த, அன்றைய "ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர்" சேர் பொன் இராமநாதன், வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான பிரிவினையை கோரவில்லை. குறைந்த பட்சம், அன்று பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டிக் கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அரசியல் தலைமைத்துவத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

சேர் பொன் இராமநாதன், பிரதேச அடிப்படையிலான பிரதிநித்துவத்திற்கு மாறாக இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்தினார். பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்களவர்களுக்கு, மூன்றிலொன்று தமிழர்களுக்கு என்று ஒதுக்கப் பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

ஆனால், டொனமூர் ஆணைக்குழு அந்த யோசனையை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக பிரதேசவாரி பிரதிநித்துவத்தை ஏற்றுக் கொண்டது. அது சிங்களவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று, தமிழ்த் தலைவர்கள் ஆதங்கப் பட்டனர். ஆனால், வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அப்போது கை நழுவ விட்டிருந்தனர்.

ஏன் பிரிட்டிஷ் காலனிய காலத்திலேயே வடக்கு- கிழக்கு சமஷ்டியை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைவர்கள் தவற விட்டனர்? அதற்குக் காரணம், தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள், தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கினார்கள். "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்ற எண்ணம் அன்று அவர்கள் மனதில் இருக்கவில்லை. அதற்கு மாறாக மேட்டுக்குடியினருக்கு உரிய மத்தியதர வர்க்க சிந்தனை மட்டுமே இருந்தது.

அன்றைய காலகட்டத்தில், தமிழ் மேட்டுக்குடியினர் கொழும்பு அல்லது தென்னிலங்கையில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்தனர். அவர்கள் ஒன்றில் அதிகம் சம்பாதிக்கும் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர்களாக இருந்தனர், அல்லது வணிகத் துறையில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டி வந்தனர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் பல காணிகளுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதிகளாக இருந்தனர். இதையெல்லாம் விட்டு விட்டு யாழ் குடாநாட்டுக்குள் முடங்கிக் கொள்ள விரும்புவார்களா?

Thursday, April 21, 2016

கம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்


நக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்ஜிலிங் பகுதியில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், சாரு மஜூம்தார் தலைமையில் விவசாயிகளின் புரட்சி வெடித்தது. இந்தியா முழுவதும் ஆயுதமேந்திய கம்யூனிசப் புரட்சிக்கு அது வித்திட்டது. 

அத்தகைய பெருமைக்குரிய நக்சல்பாரி கிராமத்தின் இன்றைய நிலை என்ன? டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையில், Avijit Ghosh என்பவர் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். (பார்க்க: Pitch report - Lenin is just a bust in Charu's Naxalbarihttp://timesofindia.indiatimes.com/elections-2016/west-bengal-elections-2016/news/Pitch-report-Lenin-is-just-a-bust-in-Charus-Naxalbari/articleshow/51789203.cms)

லெனின், மாவோ, சாருமஜூம்தார் சிலைகளைத் தவிர, அந்த இடத்தில் கம்யூனிசப் புரட்சி நடந்ததற்கான தடயமே இல்லை என்றும், மக்களுக்கு அதைப் பற்றிய நினைப்பே இல்லை என்றும் எழுதி இருக்கிறார்.

முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரம் நக்சல்பாரிக் கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் தான் மக்கள் குறியாக இருக்கிறார்கள்.

தேர்தல் அரசியலில் கூட, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றன என்றும், நக்சல்பாரி புரட்சியின் பின்னர் உருவான CP ML - லிபெரேஷன் கட்சி, வெறும் இரண்டு சதவீத வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது என்றும் எழுதுகின்றார்.

சுருக்கமாக சொல்வதென்றால், "கம்யூனிசம் காலாவதியாகிவிட்டது" என்ற முதலாளித்துவ பரப்புரைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுதப் பட்ட கட்டுரை இது.

நல்லது, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்த யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்த்தாலும் இதே மாதிரியான காட்சிகளைக் காணலாம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள், நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும், விலை ஏறிக் கொண்டிருக்கும் காணிகளை வாங்கி விற்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தலில் கூட, தமிழீழத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்துக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு தான் பெருமளவில் ஓட்டுப் போடுகின்றார்கள்.

நக்சல்பாரியில் நடந்த விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்தையும், யாழ்ப்பாணத்தில் நடந்த தேசியவாதப் போராட்டத்தையும் ஒப்பிட முடியுமா என்று சிலர் கேட்கலாம். மார்க்சியத்தின் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இருந்து இதைப் பார்க்க வேண்டும்.  முதலில், எழுபதுகளில் இந்தியாவிலும், இலங்கையிலும் இருந்த அரசியல் பொருளாதார நிலைமையை கருத்தில் எடுக்க வேண்டும்.

நக்சல்பாரி கிராமம், இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் நிலைமையும் அது தான். ஒரு காலத்தில், யாழ்ப்பாணப் பொருளாதாரம் "மணி ஓர்டர் (Money Order) பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. (அதாவது, கொழும்பில் வேலை செய்த அரச ஊழியர்கள் அனுப்பும் பணத்தில் தங்கி இருந்தது.) மேலும், எழுபதுகளில் இருந்த யாழ்ப்பாணம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை கறாராக பின்பற்றி வந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி குன்றியிருந்த படியால், நிலப்பிரபுத்துவ பொருளாதார அடிப்படை கொண்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

தற்போது எழுபதுகளில் இருந்த நக்சல்பாரி பக்கம் பார்வையை திருப்புவோம். முதலாளித்துவம் ஊடுருவி இருக்காத காலகட்டத்தில், அது நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இதைப் புரிந்து கொள்ள அதிக சிரமப் படத் தேவையில்லை. சாரு மஜூம்தார் தலைமையிலான விவசாயிகளின் புரட்சி யாருக்கெதிராக நடந்தது? 

அன்று நிலவுடையாளர்கள் தான் நக்சல்பாரி மக்களின் எதிரிகளாக இருந்தனர். நக்சல்பாரி புரட்சி வெடித்த நேரம், காலங் காலமாக உழைப்பாளிகளை சுரண்டிக் கொழுத்து வந்த, நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், கந்துவட்டிக் காரர்கள் ஆகியோர் எழுச்சி பெற்ற மக்களால் கொல்லப் பட்டனர், அல்லது விரட்டப் பட்டனர்.

நிச்சயமாக, இதையெல்லாம் இந்திய அரசு கையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அரச படைகளை அனுப்பி விவசாயிகளின் புரட்சியை அடக்கியது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர். நக்சல்பாரியில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு? அங்கு முதலாளித்துவ பொருள் உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த இடத்தில் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திய அரசு ஒரு முதலாளித்துவ அரசு. அதன் அர்த்தம், அது முதலாளித்துவ பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு தன்னாலியன்ற முயற்சிகளை செய்யும். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது என்ற உண்மையையும் மறந்து விடக் கூடாது. 

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட முதலாளித்துவ அரசுக்கள், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டன. அங்கே நிலப்பிரபுத்துவ காலத்தின் எச்சசொச்சங்கள் அடியோடு ஒழிக்கப் பட்டு விட்டன. ஆனால், இந்தியா, இலங்கை போன்ற நாடுகள், "அரை- நிலப்பிரபுத்துவ, அரை- முதலாளித்துவ" நாடுகளாக இருந்து வந்தன. கடந்த இருபது வருடங்களாக, அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. இன்று முதலாளித்துவம் நுழையாத இடமே இல்லை.

சந்தேகம் இருந்தால், ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு சென்று பாருங்கள். மேற்கத்திய பாணியில் அமைந்த பல்பொருள் அங்காடிகள், யாழ் நகரிலும், சிறிய நகரங்களிலும் வந்து விட்டன. மேற்கத்திய நாடுகளில் கிடைக்கும் அதே நுகர்வுப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் கிடைக்கின்றன. கல்வியறிவு பெற்ற இளைய தலைமுறையினர் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்கிறார்கள்.

நிலத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், பிரதான வீதிக்கருகில் உள்ள காணிகளின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. வழமையாகவே, யாழ்ப்பாணத்து மக்கள் காணி வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். தற்போது சொல்லவே தேவையில்லை. "தமிழீழமா, கிலோ என்ன விலை?" என்று கேட்கும் அளவிற்கு யாழ்ப்பாணம் மாறி விட்டது.

"கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும், "தமிழ் தேசியம் காலாவதியாகி விட்டது" என்ற பிரச்சாரமும் ஒரே கோட்பாட்டு அடிப்படை கொண்டவை. அறிவிலிகளுக்கும், மர மண்டைகளுக்கும் புரியும் படியாக சொன்னால், உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம் போன்றன, உலகம் முழுவதும் உள்ள மக்களை முதலாளித்துவ நலன்களுக்காக உயிர் வாழும் விலங்குகளாக மாற்றி விட்டன. சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்த அடிமைகளுக்கு, தாங்கள் அடிமைகள் என்ற உணர்வாவது இருந்தது. ஆனால், இன்று கடன் என்ற கண்ணுக்குப் புலப்படாத சங்கிலிகளால் கட்டப் பட்டிருக்கும் அடிமைகளுக்கு அந்த உணர்வே கிடையாது.

மார்க்சியம் படிக்காத தற்குறிகள் தான் "கம்யூனிசம் காலாவதியாகி விட்டது" என்று சொல்வார்கள். மார்க்சியம் என்ன சொல்கிறது? ஆண்டான், அடிமை பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, நிலப்பிரபுத்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. அதே மாதிரி, நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தியை ஒழித்துக் கட்டி விட்டு, முதலாளித்துவம் மேலாதிக்கத்திற்கு வந்தது. முதலாளித்துவ சமுதாய மாற்றம், நக்சல்பாரி போன்ற கிராமங்களை வந்தடைவதற்கு சிறிது காலதமாதமாகி விட்டது.

உண்மையில், நக்சல்பாரி விவசாயிகளின் புரட்சி ஒரு சமுதாய மாற்றத்திற்கான தேவையில் இருந்து உருவானது. முதலாளித்துவம் காலூன்றி இருக்காத பலவீனமான ஒரு பகுதியில் அந்தப் புரட்சி வெடித்தது. அதை இந்திய அரசு ஒடுக்கி விட்டது. தற்போது அந்த வெற்றிடம் முதலாளித்துவத்தால் நிரப்பப் பட்டுள்ளது. இது தான் நடந்தது. ஆகவே, இதை நாங்கள் "நிலப்பிரபுத்துவம் காலாவதியாகி விட்டது" என்றல்லவா சொல்ல வேண்டும்?

Saturday, April 16, 2016

ஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்


சுவிட்சர்லாந்தில், 1992 - 1994 காலப்பகுதியில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஏடு எனும் மாதாந்த பத்திரிகையை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றில், எந்த அரசியல் சார்புமற்று நடுநிலையாக பத்திரிகை நடத்துவது ஒரு பெரிய சாதனை. அதே காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வந்து கொண்டிருந்த "சுவிஸ் தமிழர்", அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாக பல்சுவை அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

அந்த வகையில் தமிழ் ஏடு, புலம்பெயர்ந்த தமிழரின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளது. அது பற்றிய தகவல்கள், எதிர்கால சந்ததியினரின் அறிவுத் தேடலுக்கு உதவும் வகையில் பதிவு செய்யப் பட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகையின் ஆசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எனது ஊடகவியல் அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் மூலமாக அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சுவிட்சர்லாந்தில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த தமிழ் அரசியல் ஆர்வலரான பாலசுப்ரமணியம், கடும் சுகவீனமுற்று இலங்கைக்கு சென்றிருந்த நேரம் 10-4-2016 அன்று காலமானார். அவரது இறுதிக் காலங்களில், ஒரு சமூக ஆர்வலராக, அரசியல் ஆர்வலராக பலராலும் அறியப் பட்டவர். 

சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப் பட்ட முதலாவது தமிழ் செய்திப் பத்திரிகையை நடத்தியவர் என்ற பெருமையும் அமரர் பாலசுப்ரமணித்தையே சேரும். தமிழ் ஏடு என்ற அந்தப் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரதம ஆசிரியரும் அவர் தான். அமரர் பாலாவின் நினைவாக, தமிழ் ஏடு பத்திரிகை தொடர்பான நினைவுக் குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"தமிழ் ஏடு" பத்திரிகையின் (உதவி) ஆசிரியர் என்ற வகையில், அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருந்துள்ளது. திரு பாலசுப்ரமணியம், நிர்வாகம், விநியோகம் சம்பந்தமான விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பத்திரிகையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். 

அதன் முதல் இதழில் இருந்து, "எடிட்டோர் பக்கம்" என்ற பெயரின் கீழ் ஆசிரியர் தலையங்கம் எழுதி வந்தேன். அது மட்டுமல்லாது, "கலை, அநாமிகா, தரணியன், தான்தோன்றி, யூரேசியன்" போன்ற பல புனை பெயர்களின் கீழும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். உலகச் செய்திகள், உலக அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் நானே எழுதினேன். 

தமிழ் ஏடு, 1992 முதல் 1994 வரையில், இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக மாதமொருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. பொருளாதார கஷ்டம் காரணமாக இடையிடையே காலதாமதம் ஏற்பட்டு பின்னர் ஒரேயடியாக வராமல் நின்று விட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த அனைத்து தமிழ்க் கடைகளிலும் விற்பனைக்கு விடப் பட்டது. அது மட்டுமல்லாது, உலகம் முழுவதும் சந்தாதாரர்களுக்கு அனுப்பப் பட்டது.

தமிழ் ஏடு பத்திரிகையை, இந்திய, இலங்கை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். அதைவிட, ஐரோப்பாவில் வெளிவந்து கொண்டிருந்த முற்போக்கான சிற்றிதழ்களுடன் இதழ் பரிமாற்றம் செய்து கொண்டோம். 

மனிதம் (சுவிட்சர்லாந்து), தூண்டில் (ஜெர்மனி), சுவடுகள் (நோர்வே), ஓசை (பிரான்ஸ்) போன்ற பல சஞ்சிகைகள், தமிழ் ஏட்டுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தன. அந்தக் காலங்களில் இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த, நடுநிலை தவறாத முற்போக்கான சரிநிகர் பத்திரிகையுடன், தமிழ் ஏட்டை ஒப்பிட்டுப் பார்த்தவர்களும் உண்டு.

தமிழ் ஏடு, ஒரு காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப் பட்ட பிரபலமான பத்திரிகையாக இருந்தது. அது எந்த அரசையும், எந்தவொரு தமிழ் அரசியல் அமைப்பையும் சார்திருக்கவில்லை. அதனால், அனைத்து தரப்பினரினதும் கடும் விமரிசனங்களை சந்தித்து இருந்தது. நிதி விடயத்தில், கொடையாளிகள், முதலாளிகளின் பணத்தில் தங்கியிருக்கவில்லை. தமிழ் விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து வந்தாலும், பிற்காலத்தில் ஒரு சிலரின் பயமுறுத்தல் காரணமாக பின்வாங்கி இருந்தனர்.

வெளிநாட்டு சமூகத்தினரின் கலாச்சார ஏடு என்ற காரணத்தால், சுவிஸ் அரசு ஒரு சில நேரங்களில் சிக்கனமான நிதி வழங்கி இருந்தது. அது பத்திரிகை அச்சடிக்கும் செலவுக்கே போதவில்லை. அமரர் பாலசுப்ரமணியம், தனது சொந்தப் பணத்தை முதலிட்டு ஆரம்பித்த பத்திரிகை, கடைசியில் நஷ்டத்தையும், பெரும் செலவையும் உண்டாக்கியது. அப்படி இருந்தும் பாலா அண்ணா அதை ஒரு சமூக சேவையாக கருதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி மூலம் சுவிட்சர்லாந்து வந்த ஆரம்ப கட்ட தமிழ் அகதிகளில் பாலசுப்ரமணியமும் ஒருவர். அழகிய எழில் கொஞ்சும் ஸ்பீஸ் (Spiez) என்ற எரிக் கரை கிராமத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வதிவிட அனுமதி பெற்ற பின்னர், ஸ்பீஸ் கிராமத்தில் இருந்த வயோதிபர் மடத்தில் உதவியாளர் வேலை செய்து வந்தார். தனது தஞ்சக் கோரிக்கைக்கு, பேர்ன் நகரில் இருந்த பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபை உதவிய காரணத்தால், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.

பேர்ன் (Bern) நகரில் தமிழர்கள் ஒன்றுகூடும் கிறிஸ்தவ தேவாலயத்தில் தான், நான் பாலா அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது 40 கி.மி. தூரத்தில் உள்ள பீல் (Biel) நகரத்தில் வாழ்ந்த என்னையும், பிற தமிழ் இளைஞர்களையும், கூட்டிச் செல்வதற்கு தேவாலய ஊழியர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு, பயணச் சீட்டு கொடுத்து அழைத்துச் செல்வார்கள். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதாக இருந்தது. எமது நோக்கம் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதாக இருந்தது.

இலங்கையில் வவுனியாவில் பிறந்த பாலசுப்ரமணியம் ஓர் இந்து. அவரது (முதல்)மனைவி ஒரு கத்தோலிக்கர். இருப்பினும் பெந்தெகொஸ்தே சபையுடன் ஒத்துழைத்தனர். இதை நாங்கள் வெறுமனே மதம் சார்ந்த விடயமாக பார்க்க முடியாது. 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், திக்குத்தெரியாத அந்நிய நாடொன்றில் வந்திறங்கிய அகதிகள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறத் துடித்தனர். உண்மையில், அந்த கிறிஸ்தவ சபை தொடர்பு காரணமாக கிடைத்த சுவிஸ் வயோதிப நட்புறவுகள், தமிழ் ஏடு பத்திரிகை தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருந்தனர். அவர்களுடைய உதவியின் மூலம், சுவிஸ் அமைச்சர் வரையில் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

தொடக்கத்தில், தமிழ் எழுத்துரு மூலம் கணணி தட்டச்சு செய்யும் மென்பொருள் தொடர்பாகத் தான், எனக்கும் பாலா அண்ணாவுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் கணணி தொழில் நுட்பத்துடன் பரிச்சயம் உடையவர்கள் மிகக் குறைவு. ஸ்பீஸ் கிராமத்தில், பாலா குடும்பத்தினரின் வீட்டுக்கு நான் சென்றிருந்த நேரம், பத்திரிகை தொடங்குவது பற்றிய யோசனையை தெரிவித்தார். அப்போது இன்னும் பெயர் வைக்கவில்லை. நான் தமிழ் ஏடு என்ற பெயரை முன்மொழிந்தேன். பாலா அண்ணாவுக்கும் அது பிடித்து விட்டது.

தமிழ் ஏடு முதலாவது இதழுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. நான் கணனியில் தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகள், கதைகள், கவிதைகளை தட்டச்சு செய்து கொடுத்தேன். பாலா அண்ணா அவற்றை வெட்டி வெள்ளைத் தாளில் ஒட்டி வடிவமைத்தார். சிறிய அளவில், பதினாறு பக்கத்தில் தயாரான பத்திரிகையின் மூலப்பிரதியை அச்சகத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார். இரவு பகலாக உறக்கமில்லாமல் உழைத்து நாம் தயாரித்திருந்த தமிழ் ஏடு, சுவிட்சர்லாந்து முழுவதும் இருந்த தமிழ்க் கடைகளுக்கு அனுப்பப் பட்டது. அது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வரவேரப் பெற்ற நேரம், நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


அந்தக் காலகட்டத்தில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பிரான்சில் "பாரிஸ் ஈழநாடு", பிரிட்டனில் "தமிழன்" ஆகிய இரண்டு பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. இரண்டும் இலங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், எங்கோ ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக வெளிவரும். 

நாங்கள் அதற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாடுகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டோம். ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் விதத்திலும், தமிழ் ஏடு செய்திகள் அமைந்திருந்தன. அன்றைய காலத்தில், பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட புரட்சி அதுவெனலாம்.

தமிழ் ஏடு பத்திரிகையின் முதலாவது இதழில், சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்று முன்பக்கத்தில் பிரசுரமானது. அந்தப் பிரதி தற்போது என்னிடம் இல்லை. அதனால் என்ன எழுதியிருந்தது என்பதை சொல்ல முடியாமல் உள்ளது. ஆயினும், அன்று தமிழ் ஏடு வெளியிட்ட, யாரும் அறிந்திராத, குடியேறிகளுக்கு அவசியமான தகவல் காரணமாக, விற்பனைக்கு வைத்திருந்த கடைகளில் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது.

பத்திரிகை வெளியிட்டவர்கள் கைகளில் கூட ஒரு பிரதியும் மிஞ்சாத அளவிற்கு, அனைத்தும் விற்றுத் தீர்ந்தமை எமக்கும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த மாதம் வந்த இரண்டாவது இதழும் அனைத்தும் சுடச் சுட விற்கப் பட்டன. அன்றில் இருந்து தமிழ் ஏடு பத்திரிகையின் புகழ் சுவிட்சர்லாந்து முழுவதும் பரவியது. "பத்திரிகை அலுவலகத்திற்கு", அதாவது பாலசுப்ரமணியம் வீட்டிற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலர், தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வாசகர் கடிதங்கள் வந்து குவிந்தன. பலர் தாமாகவே முன்வந்து ஆக்கங்களை எழுதி அனுப்பினார்கள். இலங்கைக்கும் பத்திரிகை சென்றதால், அங்கிருந்தும் கடிதங்கள், ஆக்கங்கள் வந்தன. தமிழ் ஏடு பத்திரிகை, பல இலக்கிய ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை மக்கள் முன் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் நானும் ஒருவன் என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகைத் துறை அனுபவம், என்னை ஓர் அரசியல் ஆர்வலராக, எழுத்தாளராக உருவாக்கியது.

தமிழ் ஏடு மூலம் பிரபலமடைந்த பலர், இன்று தாமிருக்கும் நிலைமை காரணமாக அதை சொல்லிக் காட்ட விரும்புவதில்லை. இருப்பினும் பலருக்கும் தெரிந்த பிரபலங்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டாக வேண்டும். வவுனியாவில் இருந்து கொண்டு தமிழ் ஏட்டுக்கு இலங்கையின் உள்நாட்டு அனுப்பிக் கொண்டிருந்த மாணிக்கவாசகர், பிற்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர் பரிசு பெற்றார்.

தனது பூஸா சிறைச்சாலை அனுபவங்களை தொடராக எழுதிய கல்லாறு சதீஷ், இன்று வணிகத்துறையில் கொடி கட்டிப் பறக்கிறார். கோடம்பாக்கம் சினிமாத்துறை அனுபவங்களை எழுதிய அஜீவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற குறும்படத் தயாரிப்பாளர் ஆனார். அரசியல் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் அழகு குணசீலன். சுவிட்சர்லாந்தில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளில் பிரபலமான கஜேந்திர சர்மா, மற்றும் ஜெயக்கொடி இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.

1992 ம் ஆண்டு, இரண்டு பேரின் உழைப்பால் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் ஏடு பத்திரிகை பிரபலமான பின்னர், தாமாகவே விரும்பி பங்களிப்பை செலுத்துவதற்கு பலர் முன்வந்தார்கள். ஆசிரியர் குழுவில் மேலும் பலர் உள்வாங்கப் பட்டனர். பத்திரிகையின் உள்ளே வந்தவர்கள் தமது உழைப்பை மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் பரவாயில்லை. சிலர் கூடவே பிரச்சினைகளையும் இழுத்துக் கொண்டு வந்தார்கள். 

ஆரம்ப கட்டத்தில், ஒரு நடுநிலைப் பத்திரிகை, முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது தவறல்ல என்று கருதப் பட்டது. ஆனால், சுயநலவாதிகளையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் சேர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானது என்பது போகப் போக தெளிவானது.

(தொடரும்)

Friday, April 08, 2016

கிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கிடைத்திருக்கும்!

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அகதி முகாமுக்குள் தஞ்சம் அடைந்த புதிதில், அடிக்கடி அல்லேலூயா சபைக் காரர்கள் வந்து போவார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தங்கள் பிரசங்கத்தை கேட்குமாறு சொல்வார்கள். பைபிளை உயர்த்திக் காட்டி ஜெபித்து விட்டு, பிரசங்கமும் செய்து விட்டுப் போவார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே, எப்படியோ சில ஜீவன்களை மதம் மாற்றி விட்டார்கள்.

 புதிய கிறிஸ்தவர்கள் பைபிளும் கையுமாக வந்து எமக்கு புத்தி சொல்வார்கள்: "இது கிறிஸ்தவர்களின் நாடு... இங்கே கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தான் முறையாகும்..."  தாங்கள் இப்போது கிறிஸ்தவராக மதம் மாறி விட்டதால், இலகுவாக வதிவிட அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பினார்கள்.

இன்னொரு முகாமில் எனக்கேற்பட்ட அனுபவம் இது. அகதிகள் விடயத்தில் அலசி ஆராயும் கிரிமினல் மூளை கொண்ட நண்பன் ஒருவன் இருந்தான். இந்துவாகப் பிறந்து விட்டதால் தனது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு  வந்து விட்டது. "ச்சே... இந்த வீணாப் போன புலிகள் கிறிஸ்தவ ஈழம் கேட்டிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டான்.

திடீரென ஒரு யோசனை சொன்னான். "வடக்கு கிழக்கில் கிறிஸ்தவ தமிழர்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் இருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுவோம். அதற்காக துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து வைத்திருப்போம். அவற்றை ஆதாரமாகக் காட்டுவோம்."

நல்ல வேளை, அந்த நண்பனின் திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. அப்படியே எடுத்துக் காட்டி இருந்தாலும் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஈழத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவ ஆயுதக் குழு இருந்திருந்தால், அரசும், புலிகளும் சேர்ந்தே அதை அழித்திருப்பார்கள். 

இதை நான் இங்கே நினைவுகூரக் காரணம், இப்போதும் ஐரோப்பா கிறிஸ்தவ அகதிகளை மட்டுமே வரவேற்கும் என்று நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள். "இது நம்ம நாடு!" என்று சட்டைக் காலரை உயர்த்தி பெருமைப்படும் தமிழ் கிறிஸ்தவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு சோஷலிசம் பேசினால், "ஏன் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரவில்லை?" என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களது புத்திசாலித்தனத்தை அவர்களே மெச்சிக் கொள்ளட்டும்.

அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், "இந்துக்கள் இந்தியாவிலோ, நேபாளத்திலோ தான் அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்? தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக ஐரோப்பிய மொழிகளை பேசும் வேற்றினத்தவரின் நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்?"

"வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன், சோஷலிசத்திற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் ஏராளம். அமெரிக்க தொழிலாளர்கள் தான், எட்டு மணி நேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடி, மேதினத்தை உலகிற்கு கொடுத்தார்கள். 

அமெரிக்க சோஷலிச பெண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் பலன் தான் மார்ச் 8 ல் வரும் மகளிர் தினம்.  பிரிட்டனில் கம்யூனிசப் பெண்கள் அமைப்பு நடத்திய ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பலன் தான் பெண்களுக்கான வாக்குரிமை. 

உலக வரலாற்றில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் வெடித்தது. முதன் முதலாக பிரிட்டனில் தான் சோஷலிசத்திற்கான அரசியல் அமைப்பு உதயமானது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

பிரச்சினை என்னவென்றால், இந்த உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நூறு தடவைகள் இடித்துரைத்தாலும் துளி கூட  மண்டையில் ஏறாது. எத்தனை தடவை புரிய வைத்தாலும் புரியாத மாதிரி நடித்துக் கொண்டிருப்பார்கள்.  நாய் வாலை நிமிர்த்த முடியாது. மேட்டுக்குடியை திருத்த முடியாது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகள், எமது நாடுகளை காலனிய அடிமைகளாக வைத்திருந்தன. தற்போதும் நவ காலனிய சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன. அது தான் அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான அடிப்படைக் காரணம். யுத்தம், மனித உரிமை மீறல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அது கடந்த கால பிணைப்பை நினைவு படுத்துகின்றது. சோஷலிசம் பேசினால் சோஷலிச நாடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறும் புத்திசாலிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா?

எதனால் நாங்கள் இப்போதும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கிறோம், பேசுகின்றோம்? எதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேறினார்கள்? பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசும் அல்ஜீரியர்களும், மொரோக்கர்களும் எதற்காக பிரான்சுக்கு சென்றார்கள்? ஸ்பானிஷ் பேசும் லத்தின் அமெரிக்க அகதிகள் எதற்காக ஸ்பெயின் சென்றார்கள்?

அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு காலனிய கால பிணைப்பு முக்கியமானது. அது மட்டும் ஒரேயொரு காரணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் தாராள வாத கொள்கையை பின்பற்றும் ஜனநாயக நாடுகளாக காட்டிக் கொள்ள விரும்புகின்றன.

அதன் அர்த்தம், ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கொள்கையை பின்பற்றினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை காரணமாக காட்டி நிராகரித்தால், அது பாரபட்சமான கொள்கையாக கருதப்படும். அதற்குப் பிறகு உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி வகுப்பெடுக்க முடியாது. 

அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் போலந்து, ஸ்லாவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள், முஸ்லிம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தன. அந்த நாடுகள் இந்த நிராகரிப்புக்கு பதிலாக ஆணித்தரமான காரணம் ஒன்றை தெரிவித்திருந்தன: "கிழக்கு ஐரோப்பிய நாடுகள், எந்தக் காலத்திலும் ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ காலனிகளை வைத்திருக்கவில்லை."

ஆகவே, இது காலனித்துவ கடந்த காலம் தொடர்பான பிரச்சினை. மேற்கத்திய நாடுகளுக்கும், முன்னாள் காலனிய நாடுகளுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அவற்றின் தலையீடு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 

முதலில் நீங்கள் காலனிய கடந்த காலம் காரணமாக இன்னமும் தொடரும் இனப் பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டு வாருங்கள். அதற்குப் பிறகு சோஷலிசம் பேசலாமா, சோஷலிச நாடுகளுக்கு போகலாமா என்று கேள்வி கேட்கலாம். 

சோஷலிசம் பேசினால், நீங்கள் எந்தெந்த சோஷலிச நாடுகளுக்கு போகச் சொல்லி சொல்கிறீர்களோ, அவை பெரும்பாலும் காலனிய அடிமை நாடுகளாக இருந்துள்ளன. அவை மேற்கத்திய காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள். 

ஆதாரம் வேண்டுமா?
சீனா: பிரிட்டிஷ் காலனி.
வியட்நாம்: பிரெஞ்சுக் காலனி.
கியூபா: ஸ்பானிஷ் காலனி.
வட கொரியா : ஜப்பானிய காலனி.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்....

இப்போது சொல்லுங்கள். உங்களது பிரச்சினை என்ன? நீங்கள் அடிமைகளா அல்லது சுதந்திரமான மனிதர்களா? நவ காலனிய ஆதிக்கத்தின் கீழ், மேற்கத்திய காலனிய எஜமானின் காலை நக்கிப் பிழைக்கும் அடிமை வாழ்வு சிறந்ததா? அல்லது சுதந்திரமாக எதிர்த்து நிற்கும் சோஷலிச மக்கள் குடியரசு சிறந்ததா? 

Thursday, April 07, 2016

நெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?

உக்ரைனுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக, 6-4-2016 அன்று நெதர்லாந்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. ஏற்கனவே கிரீமியா பிரச்சினைக்கும் உக்ரைன் உள்நாட்டுப் போருக்கும் காரணமாக இருந்த, அதே வர்த்தக உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு தான் இது. அந்த ஒப்பந்தத்தில் இன்று வரையில் நெதர்லாந்து கையெழுத்திடவில்லை.

உக்ரைன் கருத்துக் கணிப்பில் கிடைக்கும் முடிவு உடன்படிக்கைக்கு எதிராக இருந்தால், அரசு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முப்பது சதவீத வாக்காளர்கள் ஓட்டுப் போட்டால் தான், அதன் முடிவுகள் செல்லுபடியாகும். அப்போதும் அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது மக்கள் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம் சம்பந்தமான விடயம்.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பில், அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகள் உடன்படிக்கையை ஆதரிக்கின்றன. அதனால், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு அந்தக் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இடதுசாரி சோஷலிசக் கட்சி (SP) மட்டுமே எதிர்த்து வாக்களிக்கச் சொன்னது. பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் கூட எதிர்த்து வாக்களித்தனர்.

உக்ரைன் உடன்படிக்கைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள், இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஓட்டுக்களாக கருதுகின்றனர். ஏனெனில், நிறையப் பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மீதான நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.

இந்த வர்த்தக உடன்படிக்கை, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக்கலாம் என்று நினைக்கிறார்கள். (அரசு அதை கடுமையாக மறுத்து வருகின்றது.) அப்படியானால், ஐரோப்பாவிலேயே ஊழலில் மலிந்த ஒரு நாட்டை சேர்த்துக் கொண்டு, தேவையில்லாத தலையிடிகளால் அவதிப் பட வேண்டும் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மையில், உக்ரைனை பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் காலனியாக்குவதே திட்டம். தரகுப் பணத்திற்கு ஆசைப்படும் உக்ரைனிய மேட்டுக்குடி வர்க்கமும் அதனை ஆதரிக்கின்றது. நெதர்லாந்து அரசு, தனது செலவிலேயே உக்ரைனிய மேட்டுக்குடி இளைஞர்கள் சிலரை வரவழைத்து ஆதரவுப் பிரச்சாரம் செய்ய வைத்தது. இருப்பினும் மக்கள் அதற்கு மயங்கி விடவில்லை.

இந்த வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், உக்ரைன் நிர்வாகங்களில் தலையிட்டு ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒப்பந்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை நம்பும் நிலையில் யாரும் இல்லை. பெரும்பாலும் ரஷ்யாவுடனான பூகோள அரசியல் மேலாதிக்க போட்டியின் ஓர் அங்கமே இந்த உடன்படிக்கை என்று பலர் கருதுகின்றனர்.

நெதர்லாந்தில் இடம்பெற்ற உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. 32,2% வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளதால், அதன் முடிவு செல்லுபடியாகும். பெரும்பான்மையான மக்கள் (61,1%) உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 38,1% ஆதரித்து வாக்களித்தனர். ஆகவே எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கருத்துக்கு அரசு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் இருப்பதைப் போன்று, நேரடி ஜனநாயக முறையாக கருதப் படும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தற்போது நெதர்லாந்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவது எப்படி? நெதர்லாந்தில் அண்மையில் திருத்தப் பட்ட தேர்தல் சட்டமூலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் தகவல், இந்தியா, இலங்கையில் உள்ள அரசியல் ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

30 செப்டம்பர் 2014 கொண்டு வரப் பட்ட திருத்தச் சட்டம், பொது மக்களும் கருத்துக் கணிப்பு ஆலோசனை வழங்க அனுமதித்துள்ளது. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம் தொடர்பாக அல்லது கைச்சாத்திடவிருக்கும் உடன்படிக்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.

பொது வாக்கெடுப்பில் இரண்டு வகை உண்டு. 
1. ஆலோசனை கோரும் வாக்கெடுப்பு: அரசாங்கம் நேரடியாக மக்களின் சம்மதத்தை கோரும் நடைமுறை. 
2. ஆலோசனை வழங்கும் வாக்கெடுப்பு: குறிப்பிட்ட அளவு மக்கள் அமைப்பாகக் கூடி முடிவெடுத்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது.

உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு, இரண்டாவது வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் உடன்படிக்கையை எதிர்க்கும் அமைப்புகள் வாக்கெடுப்பு கோரும் கையெழுத்து வேட்டை நடத்தின. ஒரு கோரிக்கை எழுப்புவதற்கு, நான்கு வாரங்களுக்குள் 10.000 கையெழுத்துக்களை சேர்த்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால் அரசு வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவித்தல் விடுக்கும்.

அப்போதும் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பின்னர், ஆறு வாரங்களுக்குள் 300.000 கையெழுத்துக்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழு கையொப்பம் இட்டவர்களின் உண்மைத் தன்மையை ஆராயும். அதற்குப் பின்னர் பொது வாக்கெடுப்புக்கான திகதி குறிக்கப் படும்.

பொது வாக்கெடுப்பு தொடர்பான சட்ட விதிகள் மக்களுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும். அதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ பரப்புரை செய்யும் அமைப்புகள் அரசு மானியம் பெறலாம். பொது வாக்கெடுப்பில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்போது தான் அந்த முடிவு செல்லுபடியாகும். வாக்களித்தோர் எண்ணிக்கை முப்பது சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகமாக இருந்தால் அரசு மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

Tuesday, April 05, 2016

சோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம்


சோவியத் யூனியனில் சோஷலிச பொருளாதார கட்டுமானம் எவ்வாறு இயங்கியது? எத்தனை முதலாளித்துவ அரசியல் ஆர்வலர்கள் அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள்? சோவியத் நாட்டில் தொழிலகங்கள் எவ்வாறு நிர்வகிக்கப் பட்டன? நம் நாட்டில், வணிகவியல், பொருளியல், முகாமைத்துவப் படிப்புகளில் பட்டம் வாங்கியவர்களுக்கே அது குறித்த அறிவு கிடையாது. சோஷலிச நாடுகளின் பொருளாதார அமைப்பு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. அவற்றை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சோவியத் யூனியனின் பொருளாதார கட்டுமானம் எப்படி இயங்கியது என்பதை அங்கு நேரில் சென்று ஆராய்ந்து கூறியவர்களை விரல் விட்டு என்னலாம். பொதுவாக மேற்குலக ஊடகங்களினால் பரப்பப் படும் கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பி ஏமாறுவோர் ஏராளம். ஐம்பதுகளில் சோவியத் யூனியனுக்கு சுற்றுலா சென்ற, அமெரிக்க பொருளியல் நிபுணர் David Granick, அங்கு தான் கண்டவற்றை The Red Executive என்ற நூலாக எழுதி இருக்கிறார். 1960 ம் ஆண்டு வெளியான அந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஒரு பழைய புத்தகக் கடையில் அதன் டச்சு மொழிபெயர்ப்பு நூல் இருந்ததைக் கண்டு வாங்கி விட்டேன். அதிலிருந்த பல தகவல்களை இங்கே சுருக்கமாக எழுதுகின்றேன். மேலதிக விளக்கம் தேவைப்படுமிடத்து, அதனை அடைப்புக்குறிக்குள் (italic) எழுதி இருக்கிறேன்.


மொஸ்கோ நகரில் சுற்றுலாப் பயணியாக வந்திறங்கிய டேவிட், "இன்டூரிஸ்ட்" எனப்படும் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு தொழிற்சாலை ஒன்றை பார்வையிட விரும்புவதாக கேட்டிருக்கிறார். வழமையாக மியூசியம், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் இன்டூரிஸ்ட் அலுவலகம் அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இறுதியில் தானாகவே நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டார். ஒரு டாக்சியை பிடித்து தொழிற்சாலை ஒன்றின் வாசலில் போயிறங்கினார். அதன் தலைமை முகாமையாளரை சந்திக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். ஆனால், எப்படித் தொடர்பு கொள்வது?

தொழிற்சாலைக்குள்ளே போவதற்கு விசேட பாஸ் வேண்டும். வாயிற் காவலர் பாஸ் கொடுக்கும் இடத்திற்கு செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார். அங்கு புதிதாக வேலை தேடி வந்தவர்களுடன் வரிசையில் காத்து நின்று பாஸ் எடுத்து விட்டார். இருப்பினும் நிர்வாகியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இவரது அமெரிக்க பாஸ்போர்ட்டை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, பிராந்திய பொருளியல் திணைக்களம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

சோவியத் யூனியனில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழமையான விடயம். தொழிற்சாலைகள், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை பார்வையிடுவதற்கு விசேட பாஸ் வைத்திருக்க வேண்டும். எங்கும் எதற்கும் பாஸ் தான். ஆனால், சட்டத்தில் இருக்கும் பல விடயங்கள் நடைமுறையில் கறாராக பின்பற்றப் படுவதில்லை. உக்ரைனில், இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளரான இளம் பெண் ஒருவரை டேவிட் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தான் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டையை எப்போதும் கொண்டு திரிவதில்லை என்றும் கூட்டங்களிலும் அதைப் பார்க்காமல் உள்ளே அனுமதித்தார்கள் என்றும் சொன்னார்.

மொஸ்கோ நகர சபையின் அலுலகத்திற்கு சென்ற டேவிட், தொழிற்சாலைகளை பார்வையிட அனுமதி கேட்டிருக்கிறார். அவரை வரவேற்ற அதிகாரிகள், குறைந்தது பத்து தொழிற்சாலைகளின் பெயரைக் கூறுமாறு கேட்டனர். இவர் சொன்ன இடங்களில் எல்லாம் தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்தனர். பல தொழிலதிபர்கள் நேரமில்லை என்று தட்டிக் கழித்தனர். இறுதியில் ஒரு தொழிற்சாலையில் அனுமதி கிடைத்தது. சோவியத் நாட்டில் அரசாங்கம் ஒரு மத்தியஸ்தர் போன்று நடந்து கொள்கின்றது என்பதும், சம்பந்தப் பட்ட நிறுவனமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதும் அதிலிருந்து தெரிய வந்தது.

சோவியத் முகாமையாளர்களும், அமெரிக்க முகாமையாளர்களும் ஒரே மாதிரியான கல்வித் தகமையை கொண்டிருக்கின்றனர். கணக்கியல், புள்ளி விபரம், முகாமைத்துவம்,அலுவலக நிர்வாகம் போன்ற பாடங்களை படிக்கின்றனர். ஆனாலும், கல்வி அமைப்பில் வித்தியாசம் உள்ளது. அமெரிக்க முகாமையாளர் உயர்தர வணிகக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுகின்றார். சோவியத் முகாமையாளர் பொறியியல் கல்லூரியில் படிப்பதால் பொறியியலாளர் பட்டம் பெறுகின்றார். அது மட்டுமல்லாது, படித்து முடிப்பதற்கு முன்னரே தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

பெரும்பாலும் இளம் முகாமையாளர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளூராட்சி சபைகள் அவர்களுக்கான வெற்றிடங்களை ஒதுக்கி வைத்திருக்கும். இதனால் பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு நகரத்தில் முகாமையாளர் பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை என்றால், பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பார்கள். வேறு இடங்களில் இருந்து விண்ணப்பம் அனுப்புவோரில் தகுதியானவரை சேர்த்துக் கொள்வார்கள்.

அமெரிக்க நிறுவனங்களை நிர்வகிக்கும் முகாமையாளர்கள் பெருமளவு இலாபம் சம்பாதிப்பதை, அல்லது செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதற்கு மாறாக, சோவியத் தொழிலதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதுடன், சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லது செயலாளர் ஒரு தொழிற்சாலை முகாமையாளராக வந்திருக்கிறார்கள். இதை குறித்து வைத்துக் கொண்டு, தொழிலக நிர்வாகத்தையும் கட்சி கட்டுப்படுத்துவதாக சிலர் கருதலாம். அது உண்மையா?

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட்டுப் பேசுகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது செயலாளர்கள் கூட, பெரும்பாலும் ஏதாவதொரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முழு நேரத் தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் கட்சி வேலைகளை தொண்டு அடிப்படையில் செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, தகுதி வாய்ந்த தொழிலாளர் ஒருவர், கட்சி உறுப்பினராக இருந்து, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று முகாமையாளராக வருவது சாதாரணமான விடயம்.

குறிப்பிட்ட சில விடயங்களில், மேற்கத்திய நாடுகளில் இருந்த அதே அமைப்பு முறை, சோவியத் யூனியனிலும் பின்பற்றப் பட்டு வந்தது. சோஷலிச அரசியல் அமைப்பிலும், எல்லோருக்கும், எல்லா தொழில்களுக்கும், பதவி வேறுபாடின்றி ஒரே சம்பளம் வழங்குவதில்லை. கல்வித் தகுதி, அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் அதிகரிக்கும். (சோஷலிச நாடுகளில் எல்லோருக்கும் ஒரே அளவான சம்பளம் வழங்கியதால், உற்பத்தி குறைந்தது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அதில் எந்த உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, நிர்வாகி தொழிலாளியை விட இருபது மடங்கு அதிகமாக சம்பாதிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.)

சோவியத் யூனியனில், அதிக சம்பளம் வாங்குவோர் அந்தக் காசைக் கொண்டு பெரிதாக எதையும் அனுபவிக்க முடியாது. சொத்துக்களை வாங்கிச் சேர்க்க முடியாது. அதிக பட்சம், தனக்கென சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அது கூட ஆடம்பரமான வீடாக இருக்கக் கூடாது. வீட்டின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். (மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது. நாம் நினைத்த மாதிரி கட்ட முடியாது.)

முதலாளித்துவ நாடுகளில் பெரிய நிறுவனங்களை நடத்தும் முகாமையாளர்கள், அதிக சம்பளம் எடுப்பதால் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான் பணி புரியும் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பார். ஆனால், சோஷலிச நாட்டில் அதனை நினைத்துப் பார்க்கவே முடியாது. சோவியத் முகாமையாளர், தனது நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்க முடியாது. இலாபத்தில் பங்கு கிடையாது. தனது பிள்ளைகளை உயர்தரமான தனியார் பாடசாலைக்கு அனுப்ப முடியாது.

ஐம்பதுகளில், ஒரு சராசரி தொழிலாளரின் மாதாந்த சம்பளம் எழுநூறு அல்லது எண்ணூறு ரூபிள்கள். அதே நேரம், தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி மூவாயிரம் ரூபிள் சம்பாதித்தார். அதை விட மேலதிகமாக 1500 ரூபிள்கள் போனசாக கிடைக்கும். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் வருமான வரியாக 13% கட்ட வேண்டும். அது கூட அமெரிக்காவை விடக் குறைவு தான்.

முகாமையாளர்கள் தொழிலாளர்களை விட அதிகமாக சம்பாதித்தாலும் அவர்கள் எப்போதும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், தொலதிபர்கள், முகாமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப் படும் ஆபத்து நிலவியது. ஒரே இரவில் பலரது பதவிகள் பறிபோயின.

புரட்சிக்குப் பின்னரான காலத்தில், பொதுவாக முகாமையாளர்கள் மேட்டுக்குடி (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவர்களாக கருதப் பட்டனர். உயர் மத்தியதர வர்க்க பின்னணி காரணமாக, புரட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் திடீரென செயற்படாமல் நின்று விட்டால், நாசவேலை காரணமாக இருக்கலாம் என நம்பப் பட்டது. நாசவேலைக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல தொழிலதிபர்கள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டனர். ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பயம் நீங்கி விட்டது.

சோவியத் யூனியனில் அரசு திட்டமிடல் பொருளாதாரத்தை அமுல் படுத்தி வந்தது. அதன் அர்த்தம், ஒரு தொழிற்சாலைக்கு வேண்டிய சகலதும் அரசு வழங்கும். முதலீடு மட்டுமல்லாது, மூலப்பொருட்களையும் அரசு வழங்கியது. ஒரு தொழிற்சாலை எந்தளவு மூலப்பொருள் பாவிக்க வேண்டும், எந்தளவு முடிவுப் பொருட்களை விற்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்தது. அதாவது, சந்தைப் படுத்துவது, விற்பனையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் முகாமையாளர்களின் பிரச்சினை அல்ல. அதை அரசே பார்த்துக் கொள்ளும். (இதனால் விளம்பரங்களுக்கு பெருமளவு பணம் செலவிடுவதும், தொழிலாளர்கள் சுரண்டப் படுவதும் தவிர்க்கப் படுகின்றது. அதற்கு அங்கு இடமேயில்லை.)

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அரசு முடிவெடுத்தது. (குறைந்த பட்ச ஊதிய அளவை விடக் குறைவாக சம்பளம் கொடுக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.) உண்மையில், அரசும், தொழிற்சங்கமும் இணைந்து அது போன்ற முடிவுகளை எடுத்து வந்தன. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் சம்பளத் திட்டம் மாறுபடும். இது சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதே மாதிரியான திட்டம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரசு கொடுத்த வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை நிர்வகிப்பது மட்டுமே முகாமையாளர்களின் கடமை. முதலீடு செய்யும் உரிமையாளராக அரசே இருப்பதால், விற்பனையினால் கிடைக்கும் இலாபத்தையும் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதில், முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. ஆயினும் சந்தைப் படுத்தலில் வித்தியாசம் உள்ளது. சோஷலிச நாட்டில் விளம்பரம் செய்து அதிகளவு வாடிக்கையார்களை கவர வேண்டிய தேவை இல்லை. வேறு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை.

அதற்காக, விற்பனை தொடர்பாக தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. தொழிற்சாலையில் உற்பத்தியான முடிவுப் பொருட்கள், பெருமளவு கொள்வனவு செய்யும் விநியோக நிறுவனத்திடம் விற்கப் படும். விநியோகஸ்தர்கள் சில்லறைக் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பார்கள். இறுதியில் நுகர்வோர் தான் தரத்தை தீர்மானிக்கிறார்கள். அதனால், நுகர்வோரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய மாதிரிகளும் சந்தைக்கு வரும்.

நுகர்வோரின் சுவைக்கு ஏற்றவாறு, சற்று ஆடம்பரமாக வடிவமைக்கப் பட்டு விலை கூட்டி விற்கப்படும் பொருட்களும் உண்டு. அந்த ஆடம்பர மாதிரிகளை வடிவமைப்பதும், அவற்றின் விலைகளை தீர்மானிப்பதும் தொழிலதிபர்களின் பொறுப்பு. அதில் அரசு தலையிடுவதில்லை. ஆனால், ஒரு பொருளின் அடிப்படை விலை எதுவென அரசு மட்டுமே தீர்மானிக்கும். உண்மையில், ஒரு பொருளின் விலையை உற்பத்திச் செலவுகள் தீர்மானிக்கின்றன என்பது தெரிந்த விடயம். அதற்கும் சற்று அதிகமான விலையில் சந்தையில் விற்கப் படும். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் அனைவரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும். அதற்காக கணிசமான அளவுக்கு விலையை குறைத்து விற்பார்கள். துண்டு விழும் தொகையை அரசு மானியம் ஈடுகட்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும், கோடை கால விடுமுறையை தமது பிள்ளைகளுடன் களிப்பதற்கு உரிமை உண்டு. கடற்கரை போன்ற சுற்றுலாத் ஸ்தலங்களில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப் படும். தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளும் தங்கிக் கொள்ளலாம். தொழிலாளர்களின் சுற்றுலா செலவு முற்றிலும் இலவசம். பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளைக்கு அதிக பட்சம் தொண்ணூறு ரூபிள்கள் (அன்றைய மதிப்பில் பத்து அமெரிக்க டாலர்கள்) கட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நிறுவனங்கள் பிள்ளைகளுக்கும் இலவச பயணச் சீட்டு வழங்கின. தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட கடமைகளில், கோடைகால விடுமுறைகளை ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் அடங்கும்.