Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?

Saturday, September 23, 2023

ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன்!

Image
Gautama Buddha or Jesus Christ? இந்து மத சமூகத்தில் பிறந்த பரிதாபங்கள். 🤭🤭🤭 இவர்கள் யாரும் இயேசு, புத்தர் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை. 🤔🤔🤔

 

 
ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன். அஹிம்சையின் பெயரில் இனவெறி வன்முறை தூண்டி விடப் படுகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்து விடாதிருப்போம். இலங்கையில் இனங்களை பிரித்து ஆள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசும், அதன் தமிழ்த்தேசிய ஒட்டுக்குழுவும் தீயாக வேலைசெய்கின்றன.

இரு பக்கமும் இன உணர்வைத் தூண்டி விட்டு, சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை வளர்த்து விட்டு கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றன. அஹிம்சையின் பேரில் புத்தரும், திலீபனும் வன்முறையை தூண்டி விடும் கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன.

இதனால் நன்மையடையப் போவது சிங்கள- தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமே. இந்த குள்ள நரிகளின் சதித் திட்டத்தை அறியாத அப்பாவி சிங்கள- தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்.

தெற்கில் ராஜபக்சேக்களும், வடக்கில் கஜேந்திரகுமார்களும் நிரந்தர கோடீஸ்வரர்களாக நிலைத்திருப்பதற்காக இந்த இனவெறியூட்டும் அரசியல் நாடகம் அரங்கேற்றப் படுகிறது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.

அன்றாடம் உணவின்றி பட்டினி கிடந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், அதைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி, வயிறார உண்டு களிக்கும் மேட்டுக்குடி கும்பல், திலீபனின் படத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு மக்கள்விரோத அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் திலீபன் வழிபாட்டில் சங்கமிக்கின்றன. யாரை நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்? நாடகமே உலகம். 

"சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை யிரன்காரடீ 
கிளியே செம்மை மறந்தாரடீ. 
நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வரரடி 
கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி 
நாட்டத்திற் கொள்ளரடீ 
கிளியே நாளில் மறப்பாரடீ." 
- பாரதியார்

Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

Sunday, September 17, 2023

"பெரியாரை ஈழத்தில் யாருக்கும் தெரியாது!"

 

- ஈழத்து சங்கிகளின் உளறல்.

மார்பை மறைக்க முடியாத காலத்தில் மேல் சட்டை அணிந்த தமிழ்ப் பெண்களின் சட்டையை கத்தியால் கிழித்தெறிந்த, வெள்ளாள சாதிவெறி ஓநாய்களின் வாரிசுகள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

கோயில் கட்டிய தமிழ் தொழிலாளர்களின் குடும்பங்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காத வெள்ளாள சாதிவெறி பேய்களின் வாரிசுகள் கேட்கின்றன "பெரியார் யார்"?

இதெல்லாம் எப்போதோ நடந்த கதை என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஈழப் போர் தொடங்கிய எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட கிராமப்புறக் கோயில் கிணறுகளில் சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தண்ணீர் அள்ளத் தடை இருந்தது. அவர்களது கிராமங்களுக்கு போடப்பட்ட தொலைபேசி/மின்சாரக் கம்பிகள் அறுத்தெறியப் பட்டன.

அப்படி எதுவும் நடக்கவேயில்லை என்று பொய்யுரைக்கும் அயோக்கியர்கள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

ஆண்ட பரம்பரை சாதியின் நலன்களுக்காக தமிழீழம் கேட்ட வெள்ளாள பேரினவாதிகள் கேட்கிறார்கள், "பெரியார் யார்?"

டச்சுக் காலனிய காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளாளர்கள், பூர்வகுடி ஈழத் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்த வரலாற்றை மறைத்து விட்டுக் கேட்கிறார்கள், "பெரியார் யார்"?

சொந்த இனத்தவரான தமிழர்களையே அடிமைகளாக வைத்திருப்பதற்காக, அடிமைகளின் உழைப்பை சுரண்டிச் சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்காக, டச்சுக் காலனிய ஆட்சியாளருக்கு கால் கழுவி விட்டு, தேசவழமை சட்டம் என்ற ஒடுக்குமுறைச் சட்டம் எழுத வைத்த வெக்கங்கெட்ட வெள்ளாள ஒட்டுக்குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

நாகரீக காலத்திற்கு ஒத்துவராத, அடிமைகளை சீதனமாக கொடுப்பதை அங்கீகரித்த, ஒடுக்குமுறை தேசவழமை சட்டத்தை இன்றைக்கும் தூக்கிப் பிடிக்கும் வெள்ளாள துரோகக் குழுக்கள் கேட்கின்றன, "பெரியார் யார்?"

Saturday, September 16, 2023

கடவுள் இல்லை என்பதை நிரூபித்த ஈழப்போர்!

 

ஈழப் போர் நடந்த காலத்தில் நிறையப் பேர் தமது கண் முன்னே நடந்த கொடுமைகளைக் கண்டு நாத்திகர்களாக மாறி இருந்தனர். "கடவுள் இல்லை!" என்று பாமர மக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரசியல் அறிவு, கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் கடவுள் இல்லை என்ற உண்மையை கண்கூடாகக் கண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் தீவிர மத நம்பிக்கையாளர்களாக இருந்த பலர், யுத்த காலத்தில் கோயிலில் சாமி இல்லை என்று கூறி போகாமல் விட்டனர். கோயிலில் குண்டு போட்டால் யார் தான் அப்படி சிந்திக்க மாட்டார்கள்? இது சமூக யதார்த்தம்.

ஆனால், நமது தமிழ் சமூகத்தில் கற்பனை உலகில் வாழும் சில ஜீவன்கள் உள்ளன. சமூக வலைத் தளங்களில் தம்மை தீவிர தமிழ் இனப் பற்றாளர்களாக காட்டிக் கொள்வார்கள். தமிழ்த்தேசியம், புலித் தேசியம், தமிழீழம், சுயநிர்ணயம் என்றெல்லாம் மேதாவி மாதிரி பேசித் திரிவார்கள். வடக்கு கிழக்கில் நடக்கும் தமிழ்த் தேசிய ஆர்ப்பாட்டங்களில் முன்னுக்கு நிற்பார்கள். மேற்கண்ட போலித் தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் நல்லூர் முருகனின் தேர் வலம் கண்டு பக்திப் பரவசத்துடன் கை கூப்பி வணங்குகிறார்கள். இது மது மயக்கம் அல்ல மத மயக்கம்.

ஒரு பக்கம் "இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்! சர்வதேசமே தலையிடு!!" என்று இறந்த மக்களின் உடல்களை காட்டி அரசியல் செய்வார்கள். அவர்களே மறு பக்கம் திரும்பி "இனப்படுகொலையை தடுக்க சக்தியற்றிருந்த "இனத் துரோகி", நல்லூர் "ஒட்டுக்குழு" கந்தனுக்கு அரோகரா!" என்பார்கள். விசித்திரமான உலகம்.

ஏன்டா தற்குறிகளே! அது தான் கடவுள் இல்லை வெறும் கல் என்பதை 30 வருட ஈழப் போர் நிரூபித்து விட்டதே? பிறகேன்டா அதை கும்பிடுகிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே போருக்குள் இன்னல் பட்டு வாழ்ந்தீர்களா அல்லது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் சொகுசாக வாழ்ந்தீர்களா?

எந்த வகையிலும் போரினால் பாதிக்கப் படாத சொகுசுப் பேர்வழிகள் தான் பொழுதுபோக்காக தமிழ்த்தேசியம் பேசுகின்றனர். அதனால் தான் எந்த வித கூச்சமும் இல்லாமல், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நல்லூர் கந்தனுக்கு காவடி தூக்க முடிகிறது. அயோக்கியக் கும்பல்.

கடவுளை மற ! 
மனிதனை நினை ! 
கடவுள் இல்லை ! 
கடவுள் இல்லை !! 
கடவுள் இல்லவே இல்லை !!! 
கடவுளை கற்பித்தவன் முட்டாள்! 
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்! 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி ! 
கடவுளை மற! 
மனிதனை நினை! 
- தந்தை பெரியார்

Saturday, August 26, 2023

இராணுவ முகாமை அகற்றாதே! யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  Aug 15, 2023

யாழ் குடாநாட்டில், பிரபாகரன் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள, பருத்தித்துறையை சேர்ந்த கற்கோவளம் எனும் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். (15-8-2023) அந்த பகுதியில் திருட்டுகள், போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நேரத்தில் தமக்கு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், இராணுவம் இருந்தால் பாதுகாப்பு என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். உண்மையில் லஞ்சம், ஊழலில் ஊறிய, கையாலாகாத காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் பிரதிபலிப்பு.

இது இப்படி இருக்கையில், இவ்வளவு காலமும் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்றே அரசியல் செய்து வந்த elite தமிழ்த்தேசியவாதிகளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. "ஆட்டு மந்தைகள்... போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்... விலை மாதர்கள் (ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுமிகளும் இருந்தனர்.)" என்றெல்லாம் ஏசத் தொடங்கி விட்டனர். அடித்தட்டு தமிழ் மக்கள் மீது, மேட்டுக்குடி தமிழ்த்தேசிய போலிகள் கொண்டிருக்கும் வன்மம் நன்றாக வெளிப்பட்டது.

அது சரி, சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அச்சுவேலி பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்த நேரம் இவர்கள் எங்கே போனார்கள்? அந்த நேரம் அழகான ஆதிக்க சாதிப் பெண்கள் சட்டை போடாத சிங்கள இராணுவ வீரர்களுடன் உரசிக் கொண்டு தேரிழுத்தார்கள். பருத்தித்துறை ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த பெண்களை நாக்கூசாமல் "விலை மாதர்" தூற்றிய வாய்கள், அந்நேரம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அச்சச்சோ... மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டோம்! அந்தளவு வர்க்க பாசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னாலையில் மாட்டு வண்டில் சவாரியில் நடந்த கைகலப்பு காரணமாக, ஆதிக்க சாதியினர் அழைப்பின் பேரில் வந்த சிங்கள இராணுவம் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. நம்ம தமிழ் உணர்வாளர்களை இப்போது கேட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நடிப்பார்கள்.

அது போகட்டும். 1987 முதல் 1990 வரை, தொடர்ச்சியாக 3 வருடங்கள் விடுதலைப் புலிகளும், சிங்களப் படையினரும் இணைபிரியாத நண்பர்களாக நட்பு பாராட்டியதை எப்படி பார்க்கிறீங்க? ஆங்... அது மேட்டுக்குடி நலன் சார்ந்த "சாணக்கியம்" இல்லே? அந்த நேரம் நம்ம elite- தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் செவ்வாய்க் கிரக சுற்றுலா சென்றிருந்தனர். பாவம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

இது தான் மேட்டுக்குடி கனவான்களின் எலைட்- தமிழ்த்தேசியம். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றைய நேரங்களில் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்று தமக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள். 
Déjà vu.

முதலாம் உலகப் போர் காலம் முதல் தேசியவாதிகள் செய்து வரும் பிரச்சாரம். தேசியவாதம் என்ற சொல்லுக்கு முன்னுக்கு தமிழ் என்ற அடைமொழியை போட்டு விட்டால் கொள்கை மாறி விடுமா? 
c'est la même chose
 

Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 

 

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Saturday, July 11, 2020

குடிமைகள் - ஈழத்தில் நிலவிய குடிமைச் சாதிய ஒடுக்குமுறை பற்றிய நாவல்

ஈழத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை பற்றியும், குடிமைத் தொழில் பற்றியும் அறிந்து கொள்ள தெணியான் எழுதிய "குடிமைகள்" நாவலை வாசிக்கவும். இதனை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்திலும் குடிமைத் தொழில் சம்பந்தமாக முகநூலில் வாக்குவாதம் இடம்பெற்றது. இன்றைக்கும் பலர் மனதில் குடிமைத் தொழில் குறித்து சரியான தெளிவு இல்லை. அதற்காக இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சில புரிதல்களை ஏற்படுத்த விரும்புகிறேன்.

ஈழத்தில் என்றால், குறிப்பாக யாழ் குடாநாட்டில் அல்லது வட மாகாணத்தில் நிலவிய சாதி அமைப்பை தான் நாம் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருந்த சாதி அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. யாழ்ப்பாண சாதி அமைப்பானது முந்திய நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பின் எச்சமாக இருந்துள்ளது. அது டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் மாற்றப் படவில்லை. (முன்பு போர்த்துக்கேயர்கள் காலத்தில் ஏறத்தாள அழிவு நிலையில் இருந்து பின்னர் மீளுருவாக்கம் செய்யப் பட்டது.)

யாழ் சமூகத்தில் குடிமை எனப்படுவது, ஏறக்குறைய ஐரோப்பிய சமூகத்தில் நிலவிய பண்ணையடிமை முறையை ஒத்தது. யாழ்ப்பாணத்தில் நிலவுடைமைச் சாதியாக இருந்த வெள்ளாளர்கள், பஞ்சமர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட சாதியினரை தமது குடிமைகளாக வைத்திருந்தனர். யாராவதொரு வெள்ளாள நிலவுடைமையாளர் தனது காணிக்குள் குடிமைகளை குடியேற்றி இருப்பார். அவர்கள் ஒரு துண்டு நிலத்தில் குடிசை வீடு கட்டி, அதைச் சுற்றி சிறு தோட்டமும் செய்யலாம். ஆனால், அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

குடிமைச் சாதியினர் வெள்ளாளர்களுக்கு குடிமைத் தொழில் செய்து வாழ வேண்டும். முடி வெட்டும் வேலை செய்யும் அம்பட்டர்கள், துணிகளை சலவை செய்யும் வண்ணார்கள், போன்று பல குடிமைத் தொழில் செய்யும் சாதிகள் இருந்தனர். இதனால் தான் இன்றைக்கு சில வெள்ளாள பரம்பரையில் வந்த அறிவுஜீவிகளும் சாதி என்பது தொழில் சார்ந்த பிரிவினை என்று தவறாக நினைக்கிறார்கள். அது வேறு விடயம். குடிமைகள் நாவலில் முடி வெட்டும் அம்பட்டர் சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை பற்றிக் கூறப் படுகின்றது. இது ஒரு புனைவு என்றாலும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. அநேகமாக ஐம்பதுகளில் அல்லது அறுபதுகளில் கதை நடக்கிறது. அப்போது நகரங்களில் சலூன் கடைகள் போடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இருப்பினும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் குடிமைத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

வெள்ளாளர்களின் வீடுகளில், யாராவது இறந்தாலும் பிணத்திற்கு முடி வழிப்பதற்கு குடிமைத் தொழில் செய்யும் அம்பட்டனை வரச் சொல்லி அனுப்புவார்கள். அவ்வாறு அடக்கமாக தொழில் செய்து வந்த முத்தன், இன்னொரு ஆதிக்க சாதியான கரையாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பொழுது பிரச்சினை உருவாகிறது. கரையாருக்கு அல்லது பிற சாதியினருக்கு குடிமைத் தொழில் செய்வதற்கு வேறு அம்பட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வழமையாக வெள்ளாளருக்கு குடிமைத் தொழில் செய்பவருக்கு அது அனுமதிக்கப் படுவதில்லை.

இந்த இடத்தில் தான் எவ்வாறு சாதி அமைப்பு, ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாகவும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது குடிமைத் தொழில் செய்பவருக்கான கூலியை பொருளாகவும், சொற்ப தொகை பணமாகவும் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் ஏழ்மையில் இருந்து மீள முடியாது. காலங்காலமாக வெள்ளாள நிலப்பிரபுக்களில் தங்கியிருக்க வேண்டும். திருமணம் போன்ற குடிமைகள் வீட்டு செலவுகளையும் வெள்ளாள நிலப்பிரபுவே பொறுப்பெடுப்பார். இது ஓரளவு மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய சாதிய அமைப்பை ஒத்துள்ளது.

ஏன் ஒரே குடிமைத் தொழிலை வேறு சாதியினருக்கும் செய்ய அனுமதிக்கவில்லை? இங்கே பணம் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட சமூக மாற்றம் தென்படுகின்றது. அதாவது அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு குடிமைத் தொழில் செய்தால் வறுமையில் இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சலூன் கடை போடுவதும் அப்படித் தான். அதை ஒடுக்கும் சாதியினரான வெள்ளாளர்கள் விரும்பப் போவதில்லை. அதாவது இது சொத்துடமை சார்ந்த பிரச்சினை. ஒடுக்கப்படும் சாதியினர் பணக்காரர்களாக வருவதை ஒடுக்கும் சாதியினர் எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

முத்தன் பருத்தித்துறை நகரத்தில் சலூன் கடை போடவிருந்த திட்டம் தெரிய வந்ததும் வெள்ளாளர்கள் நிலப்பிரபுக்கள் பல வழிகளிலும் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறு கடை போடுவதென்றாலும் கிராமத்தில் செய்யுமாறும், அதனால் வழமையான குடிமைத் தொழில் பார்க்க முடியும் என்றும் தமது சுயநலத்தின் நிமித்தம் பேசுகின்றனர். குடிமைத் தொழில் உண்மையில் அடிமைத் தொழில் என்பதை புரிந்து கொண்ட முத்தன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.

சாதிவெறியர்கள் தம்மால் சமாளிக்க முடியாத படியால், முதலியார், விதானையார் (இவர் சிறிலங்கா அரசின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது) ஆகியோர் மூலம் மிரட்டிப் பார்க்கின்றனர். அரசாங்கம் நியமித்த கிராம சேவகர் (விதானை) என்றாலும் சாதி அபிமானம் காரணமாக சாதி வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறைக்கு துணை போகின்றார். எவ்வாறு அதிகார வர்க்கம் முழுவதும் வெள்ளாள சாதிவெறிக்கு துணைபோனது என்பதை விளக்க இது ஒரு சிறந்த உதாரணம். இந்த நிலைமை ஈழப்போர் தொடங்கும் வரையில் காணப்பட்டது.

முத்தனின் தம்பி மணியன் கொழும்பில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் பருத்தித்துறையில் சலூன் திறந்து வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளாள சாதிவெறியர்கள் அவனைக் கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே சதி செய்து இரண்டு தம்பிமாரை கொன்று விடுகின்றனர். இதற்கிடையே முத்தனின் மனைவி மீது ஆசை கொண்ட குமாரசாமி என்ற சாதிவெறியனை முத்தனின் நண்பர்கள் மறைந்திருந்து தாக்கி விட்டனர். இந்தத் தகவலும் வெள்ளாள சாதிவெறியை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. தம் மீது கைவைக்கத் துணிந்த குடிமைச் சாதியினரை சும்மா விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். அதனால் முத்தனும் மனைவியும் கொழும்புக்கு ரயிலேற, ஊரில் அவனது சலூனும், குடிசை வீடும் எரிக்கப் படுகின்றன.

ஈழத்தில் நிலவுடைமை வெள்ளாளரின் சாதிவெறி எந்தளவு கொடூரமாக இருந்தது என்பது நூலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றது. "கஞ்சா, அபினுக்கு இல்லாத சாதிவெறி. அது ஒரு விசர் மாதிரி. அந்த சாதி வெறியிலே ஒரு குடலுக்குள்ளே இருந்து வந்த சகோதரம் என்றும் பாரான்கள்.... ஆளை முடிச்சுப் போடுவாங்கள். (ஆணவக் கொலை)"

ஈழத்தில் ஒரு காலத்தில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாக இருந்த சாதியத்தை எவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? புலிகளின் காலத்தில் குடிமைத் தொழில் ஒழிக்கப் பட்டது என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவர் அறியாத இரண்டு உண்மைகள் உள்ளன.

  1. ஐம்பதுகள், அறுபதுகளில் குடிமைச் சாதியினர் கிளர்ந்தெழுந்து குடிமை முறைக்கு எதிராக போராடினார்கள். அந்த போர்க்குணாம்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை குடிமைகள் நாவல் பதிவு செய்துள்ளது. 
  2. குடிமைச் சாதியினர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு (இங்கே: வெள்ளாளர்) மட்டும் தொழில் செய்து அவர்களால் பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறி விட்டது. பணம் கொடுத்தால் எந்த சாதியினருக்கும் தொழில் செய்ய முன்வந்தனர். அந்தக் காலத்தில் இதுவே ஒரு சமூகப் புரட்சி தான்.

இந்த நூலானது சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்லாது, ஒரே சாதிக்குள் நடக்கும் வர்க்க ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றது. குறிப்பாக முத்தனின் தம்பி மணியத்தை தென்னிலங்கையில் பதுளையில் உள்ள தனது சலூனில் வேலை பழக்க அழைத்துச் செல்லும் முதலாளி, அவனை எடுபிடி வேலையாளாக கொடுமையாக நடத்துவது பற்றி பல அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஈழத்து சாதிப்பிரச்சினையை பற்றி ஆழமாக புரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று குடிமைகள்.

Thursday, May 14, 2020

புலிப் போராளிகள் ஏழ்மையில் வாழ்ந்த ஓலைக் கொட்டில் வீடுகள்

(படத்திற்கு நன்றி: யோ. புரட்சி)
ஈழப்போர் முடிந்த பின்னர் கவனிக்காமல் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் அவல நிலை குறித்து பலரும் பலரும் கவலை தெரிவித்து விட்டனர். இது குறித்து வட இலங்கையில் வாழும் சமூக சேவை ஆர்வலரான யோ.புரட்சி தனது பேஸ்புக் சுவரில் பகிர்ந்த தகவல்:
//ஒரு பிள்ளை பெண் மாவீரர், ஆண்பிள்ளை கரும்புலி மாவீரர். தனித்து வாழும் விதவைத் தாயார். நீர் வார்த்த குடும்பம் கிணறுமின்றிய நிலை.//

(இது தொடர்பாக அவர் சில படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறி அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

 ******

உங்களில் பலர் அறிந்திராத புலிப் போராளிகள் பிறந்து வளர்ந்த வீடுகள் இப்படித் தான் இருக்கும். எந்த வசதியுமற்ற ஓலைக் குடிசைகள். அதாவது, தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் இன்னொரு இனமான ஏழைகள் வாழும் வீடுகள். அவர்களது அவலம் எப்போதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ் இன உணர்வு அரசியல் பேசும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

இவர்களது தியாகத்தை காட்டி வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள், தாம் "உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டதாக" பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். "உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்..." என்று அடித்த கொள்ளையை நியாயப் படுத்தும் குட்டி பூர்ஷுவா கும்பல் ஒன்று இப்போதும் உண்டு. முதலாளித்துவத்தை ஆராதிக்கும் அந்த வெட்கங் கெட்ட பிழைப்புவாத கும்பல் இலங்கையிலும் உண்டு. தமது பூர்ஷுவா வர்க்க நலனை தமிழ்த் தேசியம் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

"உழைத்து முன்னேறலாம் என்றால் எதற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு உழைக்கும் ஏழைகள் இன்னமும் இது போன்ற குடிசைகளில் வாழ்கிறார்கள்?" என்று கேட்டால் பதில் வராது. அது "கர்ம வினைப் பயன்... கடவுள் அப்படி சிலரை படைத்து விட்டார்..." என்று மதத்தை இழுத்து போதனை செய்வார்கள்.

முதலாளித்துவ சுரண்டல் பற்றிய பேச்செடுத்தால், "கம்யூனிசம் பேசாதே!" என்று வாயடைக்க வைப்பார்கள். இவர்கள் பிரச்சாரம் செய்வது மாதிரி கம்யூனிசம் இன்னும் காலாவதியாகவில்லை. அது இன்னமும் ஈழத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது. உழைத்து உருக்குலைந்த ஏழைத் தமிழ் மக்கள் மனத்தில் இருக்கிறது. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்.

இந்த ஏழைகள் ஈழப் போருக்கு முன்னர் எப்படி வாழ்ந்தனரோ இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். அவர்கள் உழைத்தும் முன்னேற முடியாத காரணத்தால் தான் புலிப் போராளிகளாக மாறி மாவீரர்கள் ஆனார்கள். தமிழீழம் என்ற சமநீதி கொண்ட இன்னொரு உலகம் சாத்தியமே என்று கனவு கண்டார்கள்.

அவர்கள் கண்ட தமிழீழக் கனவு இன்னொரு தேசியம் அல்ல, சோஷலிசம். பாவம், தமிழ் தேசிய அடையாளத்தின் பின்னால் தம்மை மறைத்துக் கொள்ளும் தமிழ் பூர்ஷுவாக்கள் எப்போதும் போன்று முதலாளிகளுக்கே அடிவருடப் போகிறார்கள் என்ற உண்மை அந்த அப்பாவிப் போராளிகளுக்கு தெரியாது. "சுதந்திரத்" தமிழீழத்திலும் மீண்டும் தாம் ஏழைகளாக ஒடுக்கப் படுவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம், புலித் தேசியம் பேசும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, ஏழைகள் எனும் இன்னோர் இனம் தமக்குள் ஒடுக்கப் படுவது தெரியாது. தெரிந்தாலும் எந்த உணர்வும் இன்றி உதாசீனப் படுத்துவார்கள். "தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் பாட்டாளி வர்க்கமா? அப்படி எதுவும் கிடையவே கிடையாது..." என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.

"இந்த ஏழைகள் தான் எமக்காக போராடினார்கள்." என்றால், "ஓ அவர்கள் தமிழர்கள்." என்று இன முத்திரை குத்தி மறைக்கப் பார்ப்பார்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற 99% போராளிகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராட சென்றதற்கு காரணம் வர்க்க உணர்வு என்ற உண்மையை மறைப்பார்கள். அதற்கு இன உணர்வு என்ற சாயம் பூசி மகிழ்வார்கள். இன முரண்பாடுகள் அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் என்பதை புரியும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் அறிவும் போதாது.

"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். 

மடிப்பு குலையாத சட்டையுடன் உத்தியோகம் பார்க்கும் குட்டி பூர்ஷுவா தமிழ்த் தேசியர்கள், தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டு, மீண்டும் இன விடுதலையின் பெயரால் அப்பாவி ஏழைகளை பலி கொடுக்கலாமா என்று பார்க்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்பினால் கோமாளித்தனமாக இருக்கும்.

"குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன். குனியக் குனியக் குட்டுகிறவனும் மடையன்." என்றொரு பழமொழி உள்ளது. இந்த ஏழைத் தமிழர்கள் எப்போதுமே பூர்ஷுவா வர்க்க நலன் காக்கும் வேள்விக்கு பலி கொடுப்பதற்காக வளர்க்கப் படும் ஆடுகளாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் ஆறறிவுள்ள உழைக்கும் வர்க்க மனிதர்கள். அடுத்த கட்ட ஆயுதப் போராட்டம் இன விடுதலைக்கானது அல்ல. அது வர்க்க விடுதலைக்கானது.


- கலையரசன்
 14.05.2020

Tuesday, April 10, 2018

ஈழப்போர் கூட மார்க்ஸிய பார்வையில் ஒரு வர்க்கப் போராட்டம் தான்

ஆப்கான் மக்கள் குறித்து எங்கெல்ஸ் எழுதிய குறிப்புகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த  ஈழத் தமிழ் மக்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றது. "ஆப்கான் மக்கள் துணிவு மிக்க, சுதந்திரமான இனத்தவர்கள். அவர்கள் கிராமிய மயமான அல்லது விவசாய தொழில்களில் மட்டுமே ஈடுபடுகின்றனர்... போரானது கிளர்ச்சியூட்டுவதாகவும், சலிப்பூட்டும் முதலாளித்துவ தொழில் பொறிமுறையின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அளிப்பதாகவும் இருந்தது." (Engels, On Afghanistan (1857))

முப்பதாண்டு கால ஈழப்போராட்டம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கியதை பலர் உணர்வதில்லை. ஸ்ரீலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள், உலகமயமாக்கல் என்ற மேலைத்தேய கலாச்சார ஆக்கிரமிப்பின் கீழ் வந்து கொண்டிருந்தது. அதே நேரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த "De Facto தமிழீழம்" அதற்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. மேலைத்தேய ஆடம்பர நுகர்பொருட்கள் எதுவும் அங்கே நுளைய முடியவில்லை.

உலகம் முழுவதும் அமெரிக்க கலாச்சார நோய்க் கிருமிகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஈழம் ஒரு அமெரிக்க கலாச்சாரத் தடுப்பு காப்பு முகாமாக இருந்தது. "மின்சாரம் இன்றி வாழ்வில்லை" என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகில், ஈழத் தமிழ்மக்கள் தசாப்த காலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து காட்டினார்கள். வெறும் நூறு கிலோ மீட்டர் பரப்பளவு மண்ணில் வாழ்ந்த இலட்சக் கணக்கான மக்கள், உலகமயமாக்கலை ஒதுக்கித் தள்ளி விட்டு, முப்பதாண்டுகள் வாழ முடிந்திருக்கிறது.

சாதாரண ஈழத் தமிழ் மக்கள் எந்தவொரு மார்க்சிய நூலையும் படிக்கவில்லை. ஆனால், வர்க்கப் போராட்டம் என்றால் என்னவென்று தமது வாழ்வியல் அனுபவங்கள் ஊடாக அறிந்து வைத்திருந்தார்கள். முதலாளிகளின் கால்களை நக்கிப் பிழைக்கும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் சிலர் இந்த உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்.

ஒரு சில உதாரணங்களை இங்கே தருகிறேன். யாழ் குடாநாட்டில், நன்னீர்க் கிணறுகள் எல்லாம் ஒன்றில் உயர்சாதியினரின் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் காணிகளுக்குள் இருக்கும். தாழ்த்தப்பட்ட சாதியினர் அருகிலேயே குடியிருந்தாலும், அவர்களின் கிணறுகளில் உவர் நீர் தான் கிடைக்கும். ஈழப்போர் தொடங்கியதும், சில கிராமங்களில் இருந்த கோயில் கிணறுகளை தலித் மக்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

அதே போன்று, பல தசாப்த காலமாக, ஊரில் உள்ள வசதியான, உயர்சாதியினரின் வீடுகளுக்கு தான் மின்சார இணைப்புக் கிடைத்தது. அருகிலேயே வாழ்ந்த, தாழ்த்தப்பட்ட சாதியினரான ஏழைத் தமிழர்களின் குடிசை வீடுகளில், மின்சாரம் அதிக செலவு பிடிக்கும் ஆடம்பரமாகவே இருந்து வந்தது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில், அரசு இயந்திரம் செயலற்றுப் போனது. அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட குடிசைவாசிகள், தெருவோர மின்கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுக்கத் தொடங்கி விட்டனர். சில தொழில்நுட்ப அறிவு பெற்ற குடிசை வாழ் இளைஞர்கள், எமது ஊரில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அதுவரை காலமும் குப்பி விளக்கு எரிந்து கொண்டிருந்த குடிசைகளில், அன்று முதல் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. சிலநேரம், மின்சார சபை ஊழியர்கள் வந்து இணைப்பை அறுத்து விட்டுச் செல்வார்கள். இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்கு தகவல் கொடுப்பது (அல்லது காட்டிக் கொடுப்பது), ஆண்டாண்டு காலமாக மின்சாரத்தை அனுபவித்து வரும் வசதி படைத்த மேல் சாதியினர் என்பது குறிப்பிடத் தக்கது. 

இறுதியில், ஸ்ரீலங்கா அரசு, முழு யாழ் குடாநாட்டிற்குமான மின் விநியோகத்தை தடை செய்து விட்டது. அதற்குப் பிறகு, எல்லோரும் சரி சமமாக எண்ணை விளக்குகளை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. போர் தீவிரமடைந்த காலங்களில், புலிகளே பல மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.

ஈழப் போர் நடந்த காலங்களில், வர்க்கப் போராட்டமும் மட்டுப் படுத்தப் பட்ட அளவில் நடந்து கொண்டிருந்தது. ஆரம்ப காலங்களில், போரில் இருந்து தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற பணக்கார தமிழர்களின், வெறுமையாகக் கிடந்த வீடுகள் உடைக்கப் பட்டன. குடிசைகளில் வாழ்ந்த ஏழைத் தமிழர்கள் அங்கு சென்று குடியேறினார்கள். ஊரில் இல்லாத பணக்கார விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்த நிலமற்ற விவசாயிகள், அங்கு பயிர் செய்கைகளில் ஈடுபட்டனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஏற்படுத்தப் பட்ட பின்னர், பொருளாதார வளங்களும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அவர்களும் வெளிநாடு சென்ற பணக்காரத் தமிழர்களின் வீடுகளை, காணிகளை பறிமுதல் செய்து, தமது இயக்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தனர். "போராளிக் குடும்பங்கள்" அல்லது "மாவீரர் குடும்பங்கள்" என்று, புலிகள் அமைப்புடன் சம்பந்தப் பட்ட குடும்பங்கள் பல, மார்க்சியம் வரையறுத்த பாட்டாளி வர்க்கத்திற்குள் அடங்குவன. குடிசைகளில் வாழ்ந்தவர்களுக்கு கல்வீடுகள் கிடைத்தன. நிலமற்ற விவசாயிகளுக்கு பயிர் செய்ய சிறுதுண்டு நிலமாவது கிடைத்தது.

புலிகள் மார்க்சிய புரட்சியாளர்கள் அல்லர். ஆரம்ப காலங்களில், போலி இடதுசாரிகளாக காட்டிக் கொண்டனர். ஆனால், ஒரு விடுதலைப் போராட்டம் அடிப்படையில் இடதுசாரிய தன்மை கொண்டது. அதாவது, மக்கள் மயப் பட்டது. ஈழத்திற்கான சுதந்திரப் போரை தமது தோள்களில் சுமந்த, பாட்டாளி வர்க்க தமிழர்களின் வர்க்கப் போராட்ட அபிலாஷைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு அடி கூட முன்னோக்கி நகர்ந்திருக்காது.

பிரபாகரனோ, புலிகளோ மார்க்சியம் பேசவில்லை. அது பற்றி அறிந்திருக்கவும் மாட்டார்கள். ஆனால், அவர்களது போராட்ட நடைமுறையானது, மார்க்சிய தத்துவார்த்த அடிப்படையின்றி சாத்தியப் படவில்லை. ஒரு போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை துச்சமென மத்தித்து போராடும் துணிவுடைய போராளிகளை சேர்க்க வேண்டும். யார் போராளிகளாக இணைந்து கொள்ள முன்வருவார்கள்? தமிழ் மேட்டுக்குடியை சேர்ந்த பிள்ளைகள் போராட முன்வருவார்களா?

ஒரு சிறிய ஆய்வை செய்து பாருங்கள். புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளில், மேட்டுக்குடியினர் எத்தனை சதவிகிதம்? வசதிபடைத்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஒரு பிள்ளை கூட, "கரும்புலி" ஆகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. நடுத்தர வர்க்க பெற்றோர்கள், தமது பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரையில் படிக்க வைத்து, கைநிறைய சம்பளம் வாங்கும் உத்தியோகத்திற்கு வழிகாட்டினார்கள்.

ஓரளவு வசதி படைத்த தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். வசதி படைத்த தமிழனின் பிள்ளை, வெளிநாடு சென்று சம்பாதித்து அனுப்பினான். அவன் குடும்பம் ஊரில் புதுப் பணக்காரர் அந்தஸ்தை பெற்றது. அதே நேரம், ஏழைத் தமிழனின் பிள்ளை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடி மாண்டான். அவனது குடும்பம் வறுமையில் வாடியது. வசதிபடைத்த தமிழனின் பிள்ளை, பல்கலைக்கழகம் சென்று பட்டம் வாங்கி விட்டு உத்தியோகம் பார்க்கிறான்.

ஏழைத் தமிழனின் பிள்ளை, எட்டாம் வகுப்பையும் முடிக்காமல் புலிப் போராளியாக மாறி, விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தான். "தமிழர்கள் மத்தியில் வர்க்கப் பிரச்சினை இல்லை, மார்க்சியவாதிகள் மட்டுமே வர்க்க வேறுபாட்டை வளர்த்து, சமூகத்தை கூறுபோடுகின்றார்கள்." என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் வர்க்கப் போராட்டத்தை மறுதலிக்கின்றனர். கனவான்களே! மேலே நான் எழுதிய யதார்த்தம், ஈழத்தில் நிலவும் வர்க்க முரண்பாட்டை எடுத்துக் காட்டவில்லையா?

புலிகள் இயக்கத்தில் சேர்ந்த போராளிகளில் பெரும்பான்மையானோர், குறைந்தது 80% மாகிலும், மார்க்சியம் கூறுவது போல, இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளிவர்க்க தமிழர்கள். இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியுமா? வசதி படைத்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் சிலரும் போராளிகளாக இருந்தனர். ஆனால், அவர்களது எண்ணிக்கை மிகக் குறைவு. 10% இருந்தால் கூட மிக அதிகம். 

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் பரப்புரைகளுக்கு மாறாகத் தான், ஈழத்தின் யதார்த்தம் இருந்தது. மார்க்சியம் சரியானது என்பதை, புலிகள் தமது போராட்டம் மூலம் மெய்ப்பித்திருந்தனர். மார்க்சியம் எதிர்வு கூறிய, பாட்டாளி மக்களின் பங்களிப்பின்றி புலிகளின் போராட்டம் சாத்தியப் பட்டிருக்குமா?

புலிப் போராளிகள் ஒன்றில் வறிய குடும்பப் பின்னணி கொண்டவர்கள், அல்லது தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை விட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களான மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி, மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் சேர்ந்திருந்தனர். 

சுருக்கமாக, மார்க்சியம் கூறுவது போல, "இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்க மக்கள்" தான் போராடினார்கள். தமிழ் சமுதாயம் எந்தளவு மோசமாக வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். இதற்குப் பிறகும், "தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது... மார்க்சியம் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவில்லை..." என்றெல்லாம் பிதற்றினால், நீங்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும்.

Sunday, April 08, 2018

"டட்லி மசாலா வடை சுட்ட கதை" - ஈழத்தேசிய வலதுசாரிகளின் கற்பிதங்கள்

பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் எடுத்துக் காட்டி, கம்யூனிசம் என்பது ஒரு பூச்சாண்டி என்று அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல.

அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் ஈடுபடுகின்றது.

ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், கம்யூனிசமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாக்கி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. LTTE என்ற புலிகள் கூட, ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள்.

அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம்.

ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர்.

அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது " சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

புலிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஈழத்தமிழர்கள் "அரசியலற்ற விலங்குகள்" என்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் இடதுசாரி, வலதுசாரி பிரிவினைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காட்டிக் கொள்வதும் வலதுசாரி அரசியல் தான். தொண்ணூறுகளில் உருவான, தோற்றவர்களுக்கு (இடதுசாரி) எதிரான வென்றவர்களின் (வலதுசாரி) மேலாதிக்க அரசியல்.

சிங்கள இடதுசாரி தலைவர்களின் பெயர்களை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், தமிழ் இடதுசாரி தலைவர்களை பற்றி கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். ஐம்பதுகளில் உருவான, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியன, அன்றைய காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் செல்வாக்கோடு இருந்த இடதுசாரிகளுக்கு எதிராக தோன்றிய வலதுசாரிக் கட்சிகள்.

"சிங்களவர்களில் இடதுசாரிகள் உண்டு... தமிழர்களில் கிடையாது..." என்ற தவறான கருத்து, தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் காலத்தில் தான் உருவாக்கப் பட்டது. சிங்கள வலதுசாரிக் கட்சிகளும், சிங்கள மக்கள் மத்தியில், ஏறக்குறைய இதே மாதிரியான பிரச்சாரம் செய்து வந்தன. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழர்களில் இடதுசாரிகள் இருக்கலாம். ஆனால், "சிங்களவர்கள் இடதுசாரி/வலதுசாரி அரசியலுக்கு அப்பாற்பட்ட விலங்குகள்" என்பது அவர்களது வாதம்.

புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் மேட்டுக்குடி வலதுசாரிகள், ஒரு முக்கியமான உண்மையை வேண்டுமென்றே மறைப்பார்கள். எப்போது புலிகள் தமிழீழ அரசுக் கட்டமைப்பை உருவாக்கினார்களோ, அப்போதே அங்கே இடதுசாரி, வலதுசாரி பிரிவினையும் தோன்றி விட்டது. அரசியல் பிரிவில் வெளிப்படையாக தெரிந்தது. போராளிகள் மத்தியில் மறைமுகமாக இருந்தது.

தமிழ்நாட்டு இடதுசாரி அமைப்புகள் புலிகளை ஆதரித்து வந்த படியால், அவர்களது பிரசுரங்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விநியோகிக்கப் பட்டன. ஈழத்தில் புதிய தலைமுறையினர் மத்தியில், இடதுசாரி, பெரியாரிய கருத்துக்கள் பரவுவதற்கு, தவிர்க்க முடியாமல் புலிகளும் ஒரு காரணமாக இருந்தனர்.

எண்பதுகளில் புலிகளுக்கு ஆதரவான பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட தளிர் தொடர்ந்தும் இடதுசாரி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. புலிகளின் வெளியீடுகள் அடிக்கடி பிடல் காஸ்ட்ரோவையும், கியூப புரட்சியையும் மேற்கோள் காட்டி எழுதி வந்தன. யாழ் குடாநாட்டின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர், போராளிகள், ஆதரவாளர்களின் மனோதிடத்தை உயர்த்துவதற்கு, லெனின்கிராட் முற்றுகை பற்றிய தகவல்கள் உதவின.

தமிழ் தேசியமும், இடதுசாரியமும் முரண்பாடான கொள்கைகள் அல்ல.

"இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் ஒன்றில் தீவிர தமிழ்தேசியவாதிகளாக, அல்லது தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள்" என்பது போன்ற தப்பெண்ணம் பலர் மனதில் உள்ளது. இது சில வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்களின், விஷமத்தனமான பிரச்சாரம் ஆகும். அவர்கள் போதுமான கல்வியறிவு பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட அரசியல் கலைச் சொற்களை தவறான அர்த்தத்தில் கையாளுகின்றனர். இது தற்செயலாக நடக்கும் தவறல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இடதுசாரியத்தை எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள் ஆவர். அவர்கள் தமிழ் தேசியவாதத்தையும், புலிகளையும் நிபந்தனையுடன் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது, இறுதி இலக்கு முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் யாரையும் ஆதரிப்பார்கள். "உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள்" என்ற கோஷத்தின் கீழ், சிங்கள முதலாளிகளுடன் கூட்டுச் சேர்வதிலும், அவர்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. (அவர்களில் பலர், ஏற்கனவே சிங்கள முதலாளித்துவத்திற்கு சேவை செய்த வரலாற்றைக் கொண்டவர்கள்.)

உலகில் உள்ள எல்லா தேசியவாத இயக்கங்களிலும் உள்ளதைப் போன்று, தமிழ் தேசிய இயக்கத்திலும், "வலதுசாரிகள், இடதுசாரிகள்" என்ற இரண்டு பிரிவுகள் உண்டு. புலிகள் போன்ற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்கள், ஆரம்ப காலங்களில் இடதுசாரி இயக்கங்களாக தம்மைக் காட்டிக் கொண்டன. அது ஒரு தவிர்க்க முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். ஏனெனில், அன்றிருந்த வலதுசாரி-தமிழ் முதலாளிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றாக தான், தம்மை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்திக் கொண்டன.

தமிழ் ஆயுதபாணி இயக்கங்களின் வர்க்க, அரசியல் நிலைப்பாடு எதுவாக இருப்பினும், இடதுசாரியம் பேசித் தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றனர். "புலிகளின் தாகம் சோஷலிசத் தமிழீழம்" என்று முழங்கிய காலம் ஒன்றிருந்தது. "புரட்சிகர கம்யூனிசமே எமது இலட்சியம்" என்று, புலிகளின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு, ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார். (பார்க்க: விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக கேபிள் தகவல். அன்றிருந்த அமெரிக்க தூதுவர் அதை நம்பவில்லை என்பது வேறு விடயம்.)

ஈரோஸ், ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள் வெளிப்படையாக மார்க்சிய - லெனினிசம் பேசின. ஆனால், புலிகள், டெலோ ஆகிய இயக்கங்கள் அந்தளவுக்கு அரசியல் சித்தாந்தம் பேசாவிட்டாலும், தம்மை இடதுசாரிகளாக காட்டிக் கொள்ள விரும்பினார்கள். ஏனென்றால், ஆயுதப்போராட்டம் நடத்த வேண்டுமானால், உயிரை அர்ப்பணிக்கத் தயங்காத போராளிகளும், போருக்கு அஞ்சாத மக்களும் தேவை. இழப்பதற்கு எதுவுமற்ற உழைக்கும் மக்கள் தான் அதற்கு முன் வருவார்கள். அவர்களை ஈர்க்க வேண்டுமானால், இடதுசாரியம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.

இடதுசாரியம் என்பது ஒரு பொதுவான அரசியல் சித்தாந்தம் அல்ல. பாராளுமன்ற ஜனநாயக கட்டமைப்பின் ஒரு பிரிவாகத் தான், ஆரம்ப காலங்களில் இடதுசாரியம் தோன்றியது. (பாராளுமன்றத்தில் இடதுபுற ஆசனங்களில் அமர்ந்தவர்கள், அல்லது மன்னரை எதிர்த்த குடியரசுவாதிகள்.) அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சி என்று, வலதுசாரி குடியரசுக் கட்சியினர் குற்றஞ்சாட்டுவது வழமை. அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆண்ட காலங்களில் தான், பொது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் சில கொண்டு வரப் பட்டன. இன்றைக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், பொதுத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். ஏனெனில், இடதுசாரிக் கட்சிகள் ஆண்ட காலத்தில் தான், அவர்களில் பலருக்கு வதிவிட அனுமதி, அல்லது குடியுரிமை கிடைத்தது.

வரலாற்றில் பல தடவைகள், வெகுஜன மக்கள் எழுச்சி சார்ந்த அரசியல் இயக்கங்கள் பலவற்றிற்கு இடதுசாரி முத்திரை குத்தப் பட்டது. அந்த வகையில், ஈழத் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய எழுச்சியும், மேற்கத்திய நாடுகளால் இடதுசாரி முத்திரை குத்தப் பட்டதில் வியப்பில்லை. பாலஸ்தீன PLO, தென்னாபிரிக்க ANC, தெற்கு சூடானின் SPLM ஆகியன கூட, ஒரு காலத்தில் இடதுசாரி முத்திரை குத்தப் பட்ட இயக்கங்கள் தான். விடுதலைப் புலிகள் அமைப்பு கூட, இடதுசாரி முத்திரை குத்தலுக்கு தப்பவில்லை.

சிங்கள இனவாதத்தை அரசு நிருவனமாக்கிய, இலங்கையின் முதலாவது ஜனாதிபதியும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடியுமான ஜே.ஆர். ஜெயவர்த்தன கூட, "புலிகள், (ஜேவிபி யுடன் கூட்டுச் சேர்ந்து?) இலங்கை முழுவதும் ஒரு மார்க்சிய அரசு அமைக்க விரும்புவதாக," மேலைத்தேய நாடுகளுக்கு அறிவித்திருந்தார். (பார்க்க: ஜே.ஆரின் BBC தொலைக்காட்சி பேட்டி: India Responsible for Dividing Sri Lanka, Training LTTE Terrorists - JR former SL President 1985) பிராந்திய வல்லரசான இந்தியாவும், ஈழ விடுதலை இயக்கங்களை RAW வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் இடதுசாரித் தன்மையை பிரித்தெடுத்தது. கூடவே, அமெரிக்க ஏகாதிபத்தியம், புலம்பெயர்ந்த தமிழர்களை தனது நலன்களுக்கு சார்பாக பயன்படுத்திக் கொண்டது. அதன் விளைவு, முள்ளிவாய்க்கால் முடிவில் எதிரொலித்தது.

இன்று இடதுசாரி எதிர்ப்பு அரசியல் பேசுவோர், தமது மத்தியதர வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றனர். அவர்களது வர்க்க நிலைப்பாடு ஒன்றும் இரகசியமானது அல்ல. பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கு வசதியான வாழ்க்கையை தேடிக் கொண்டவர்கள். ஈழப்போர் நடந்த காலத்திலும், உயர் கல்வியை கைவிடாமல், நல்ல சம்பளம் கிடைக்கும் பதவிகளை தேடிக் கொண்டவர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இவர்களின் எதிரி அல்ல, மாறாக நண்பன். முதலாளித்துவம் இவர்களின் விரோதி அல்ல, மாறாக வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள உதவிய பொருளாதார கோட்பாடு. இடதுசாரி எதிர்ப்பாளர்கள், தம்மை தீவிர தமிழ் தேசியவாதிகளாக காட்டிக் கொண்டாலும், அவர்கள் முதலாளிய சர்வதேசியவாதத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும், பொருளாதார வசதி வாய்ப்புகள், நாளைக்கு நின்று விட்டால், அன்றில் இருந்து இவர்களும் இடதுசாரிகளாக மாறி விடுவார்கள்.

Friday, April 06, 2018

"இடதுசாரியம் தவிர், இனவாதம் பயில்!" - போலித் தமிழ்த்தேசிய மலின அரசியல்


"படம் பார், பாடம் படி, இனவாதம் பயில்!"- போலித் தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்

இந்தப் படத்தில் உள்ள பிக்குவைப் பாருங்கள் குழந்தைகளே! அதை வைத்து இனவாதம் பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்வோம். 
  • - "இவர் யார்?" 
  • - "சிங்கள - பௌத்த பேரினவாதி." 
  • - "இவர் இங்கே என்ன செய்கிறார்?" 
  • - "தமிழர்களுக்கு சிங்களம் கற்பிக்கும் சாட்டில் மொழித் திணிப்பு செய்கிறார்."
  • - "இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?"
  • - "இல்லை, சிங்கள இனவெறிப் பிக்குவே ஓடிப் போ!"

இப்படித் தான் தமிழ் மக்கள் இனவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். "பிக்கு தமிழர்களுக்கு சிங்களம் படிப்பிக்கும்" படத்தைக் காட்டி, பலர் சமூகவலைத்தளங்களில் இனவாதக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
"படம் பார், பாடம் படி!"

சிங்கள மக்கள் மத்தியிலும், இதே பாணியில் தான் இனவாதத்தை பரப்புவார்கள். அதே மாதிரி, தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பரப்புவதற்கும் சில சக்திகள் தீயாக வேலை செய்கின்றன.

உலகம் முழுவதும் இனவாதிகளின் செயற்பாடுகள் ஒரே மாதிரித் தான் அமைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் மத்தியில் இவர்களது இனவாதப் புளுகுகள் எடுபடுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தப் படம் 2017 ம் ஆண்டு முற்பகுதியில், மட்டக்களப்பில் நடந்த, வேலையற்ற பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தின் போது எடுக்கப் பட்டது. முதல் படத்தில் சிங்களம் படிப்பிக்கும் அதே பிக்கு, அடுத்த படத்தில் போராட்டத்தில் கலந்து கொள்வதைக் காணலாம். போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் பட்டதாரிகள், சிங்களம் படிப்பதில் என்ன பிழையிருக்கிறது?

சிங்களப் பெரும்பான்மையின மக்களுக்கும் புரியும் வகையில் எமது நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சிங்கள மொழியறிவு இருப்பது அவசியம் அல்லவா? சர்வதேச சமூகத்திற்கு புரிய வேண்டும் என்பதற்காக பதாகைகளை ஆங்கிலத்தில் எழுதி வைப்பதில்லையா?

சாதாரணமான மக்கள், இவ்விடத்தில் பட்டதாரிகள், ஒரு போராட்டக் களத்தில் தான் உண்மையான அரசியலைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிகார வர்க்கத்திற்கு புரியும் மொழியில் பேசக் கற்றுக் கொள்வது அதில் ஒரு பாடம்.

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பது சிறந்தது அல்லவா? எதற்காக நாங்கள் பணம் கொடுத்து சிங்கள மொழிபெயர்ப்பாளர்களை பிடிக்க வேண்டும்? எமக்கு சிங்களம் தெரிந்தால் எமது பிரச்சனைகளை நாங்களே நேரடியாகப் பேசிக் கொள்வோம்.

இங்குள்ள வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் சிங்களம் படிப்பதால், உங்களைப் போன்ற சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு வேலை பறிபோகும் என்றால், அது அவர்களது பிரச்சினை அல்ல. உங்கள் சுயநலத்திற்காக இங்கே இனவாதத்தை கொண்டு வந்து புகுத்தாதீர்கள். பிழைப்பதற்கு நூறு வழிகள் உள்ளன.

போராட்டம் என்பது பல பரிணாமங்களை கொண்டது. தமிழரின் அரசியல் கோரிக்கை நியாயமானது என்றால், அதை சிங்கள மக்களுக்கு புரியும் வகையில் சிங்களத்தில் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? வெறுமனே தமிழில் கோஷம் போட்டு விட்டு கலைந்து போவதால், போராட்டம் குறுகிய வட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடும். அதையே அரசும் எதிர்பார்க்கின்றது.

ஒரே காலப்பகுதியில், மட்டக்களப்பில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடைபெற்றது. ஒரு சிங்கள பௌத்த பிக்கு வட மாகாண தமிழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு போலித் தமிழ்த் தேசியவாதிகள் பின்வருமாறு எதிர்வினை ஆற்றுவார்கள்:
  • "இதைக் கண்டாலும் காணாத மாதிரி கடந்து செல்லுங்கள் தமிழர்களே!"
  • "இடதுசாரியம் சோறு போடாது, மக்களே! வலது பக்கம் திரும்புங்கள்."
  •  "இனவாதப் பிக்குகள் மீது மட்டுமே உங்கள் கவனம் இருக்க வேண்டும்."
  •  "இனவாதி அல்லாத, தமிழர்களின் உரிமைகளை ஆதரிக்கும் பிக்குகள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தும் பார்க்கக் கூடாது! புரிந்ததா?"


இந்தப் படத்தை, உங்களில் பலர் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும், சமூகவலைத்தளத்திலும் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்தப் பிக்கு தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் போடவில்லை. இனவாதம் பேசவில்லை. அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், அந்தத் தகவல் சுடச் சுட பரப்பப் பட்டிருக்கும்.

இந்தப் பிக்கு இனவாதம் பேசி இருந்தால், போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு புதிய வில்லன் கிடைத்திருப்பான். பேஸ்புக்கில் படத்தை போட்டு, காறித் துப்பி கழுவி ஊத்தி இருப்பார்கள். என்ன செய்வது? இந்தப் பிக்கு வேலையற்ற பட்டதாரிகளுடன் உண்ணாவிரதம் அல்லவா இருக்கிறான்? இதைக் காட்டி பிழைக்க முடியுமா? நாலு காசு சம்பாதிக்க முடியுமா? இல்லைத் தானே? கண்டாலும் காணாத மாதிரி 'கம்' முன்னு இருக்கணும்.

இந்த நாட்டில் இனவாதம் ஒரு இலாபம் தரும் வியாபாரம். சினிமாவில் வரும் கவர்ச்சிக் காட்சிகள் பல இலட்சம் பார்வையாளர்களை கவர்வது மாதிரி, இனவாதப் பேச்சுக்களும் பலரைக் கவர்ந்திழுக்கும். அதை வைத்து அரசியல் செய்வதற்கும், ஆதாயம் பெறுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது.

புத்த‌ பிக்குக‌ள் எல்லோரும் ஒரே அர‌சிய‌லை பின்ப‌ற்றுவ‌தில்லை. முன்னிலை சோஷ‌லிச‌க் க‌ட்சி ம‌ற்றும் ப‌ல‌ சிங்க‌ள‌ இட‌துசாரி அமைப்புக‌ளில் புத்த‌ பிக்குக‌ளும் செய‌ற்ப‌டுவ‌துண்டு. அவ‌ர்க‌ள் த‌மிழ்ப் ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் போராட்ட‌ங்க‌ளில் த‌மிழ் ம‌க்க‌ளோடு க‌ல‌ந்து கொள்வ‌தில் என்ன‌ த‌ப்பு? க‌ண்ட‌தை எல்லாம் ச‌ந்தேக‌ப் ப‌டுவ‌த‌ன் மூல‌ம் ந‌ண்ப‌ர்க‌ளை ஒதுக்கி வைக்கிறோம். ப‌கைவ‌ர்க‌ளை கூட்டிக் கொள்கிறோம். எம்மை நாமே த‌னிமைப்ப‌டுத்திக் கொள்கிறோம்.

படத்திற்கு நன்றி: Newton Mariya Mainthan

பிக்கு பற்றிய விபரம் : //வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளின் போராட்டக்களத்திற்கு வலுச்சேர்ககும் முகமாக இலங்கையின் ஒன்றினணந்த அனைத்து வேலையற்ற பட்டதாரி சங்கத்தின் சார்பாக வணக்கத்துக்குரிய. தெத்தே ஞானானந்ததேரர் கலந்துகொண்டுள்ளார்.// 


Wednesday, March 21, 2018

ஜெனீவாவில் ஆப்பிழுத்த தமிழர்களின் கதை


வருடாந்தம் தவறாமல் நடைபெறும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் நிறுவன கூட்டத்தொடரில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஈழத் தமிழர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளன.
  1. தமிழர் தரப்பும், சிங்களவர் தரப்பும் பரஸ்பரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி. 
  2. புலிகளின் படையணிகளில் இருந்த சிறார் போராளிகள் பற்றி கஜேந்திரகுமாரின் வாக்குமூலம்.
மேற்குறிப்பிட்ட இரண்டும், ஜெனீவாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கும் சாதாரண நிகழ்வுகள். சிலர் வழமை போல தமது அரசியல் ஆதாயங்களுக்காக பெரிது படுத்துகின்றனரே தவிர, அதைப் பற்றிப் பேசுவதால் எந்த நன்மையையும், தீமையும் கிடைக்கப் போவதில்லை. ஜெனீவாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் அறிந்து கொள்கிறார்கள் என்பது மட்டுமே இதனால் ஏற்படும் பலன்.

ஜெனீவாவின் உள்ளே இரு தரப்பிற்கும் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோவுக்கு பின்வரும் தலைப்புக் கொடுத்திருந்தனர்."ஜெனீவாவில் தமிழர்களை மிரட்டும் சிங்கள இராணுவத்தினர்!" நடந்தது இது தான். ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு தரப்பு பிரதிநிதிகள், புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தனர். சிங்களவர்களின் பிரதிநிதிகள் அதுபற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். தமிழர்களின் பிரதிநிதிகள் அவற்றை பொய் என்று எதிர்த்து வாதிட்டனர். அனேகமாக, இதே வீடியோவை சிங்கள இணைய ஆர்வலர்களும் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அதற்கு "ஜெனீவாவில் சிங்களவர்களை மிரட்டும் புலிகள்!" என்று தலைப்பிட்டிருப்பார்கள்.

கடந்த இருபது, முப்பது வருடங்களாக இது தான் ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழர் தரப்பினர் சிறிலங்கா இராணுவம் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். அதே மாதிரி, சிங்கள தரப்பினர் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களை கொண்டு வருவார்கள். இரு தரப்பினரும் தமது பக்க நியாயங்களை மட்டும் பேசி விட்டு செல்வார்கள். ஐ.நா. பிரதிநிதிகள் அவற்றை எல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்து விட்டு எழுந்து செல்வார்கள்.

இத்தகைய பின்னணியை வைத்துப் பார்த்தால், புலிகளின் படையணிகளில் சிறார் போராளிகள் சேர்த்துக் கொண்டமை பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொடுத்த வாக்குமூலம் ஒன்றும் புதினம் அல்ல. ஹியூமன் ரைட்ஸ் வோச் போன்ற சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் பேசியுள்ளன. அதனால், தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் ஏற்கனவே இது பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இது புலிகள் இருந்த காலத்திலேயே நடந்தது. கஜேந்திரகுமார் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மட்டுமே, இதை பரபரப்பு செய்தியாக்குகிறார்கள்.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஒன்றுகூடலை, விவாகரத்து செய்யவிருக்கும் கணவனும், மனைவியும் கவுன்சிலிங் போவதுடன் ஒப்பிடலாம். நடுவராக இருப்பவர் இரண்டு பக்க குற்றச்சாட்டுகளையும் கேட்டுக் கொள்வார். ஆனால், யாருக்கும் சாதகமாக பதில் கூற மாட்டார். இரண்டு பக்கமும் பிழைகள் இருப்பதாக சொல்லி முடிப்பார். கவுன்சிலிங் செய்பவர் தனக்கு சார்பாக மட்டுமே தீர்ப்புக் கூற வேண்டும் என்று இரண்டு பேரும் எதிர்பார்க்கலாம். ஆனால், அது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. இது தான் ஜெனீவா கூட்டத்திலும் நடக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், சர்வதேச அரசியல் அரங்கில் உண்டாக்கும் தாக்கங்களை புரிந்து கொள்ளாதவர்கள் தான் ஜெனீவா பற்றிய மாயையில் வாழ்கின்றனர். நாங்கள் ஒரு இலங்கையை மட்டும் பார்க்கிறோம். ஜெனீவா உலக நாடுகள் அனைத்தையும் பார்க்கிறது.

அதாவது, வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதைப் போல, இலங்கையில் நடக்கும் அதே பிரச்சினைகள் இன்னும் பல உலக நாடுகளில் நடக்கின்றன. ஜெனீவா மகாநாடு இதுபோன்ற எண்ணிலடங்காத பிரச்சினைகளில் தலையிட்டு யாருடைய பக்கத்திற்கு சார்பாகவும் தீர்ப்புக் கூறப் போவதில்லை. அதற்கான அதிகாரமும் கொண்டிருக்கவில்லை.

குறிப்பாக, ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆராய்வது தான் ஜெனீவா மகாநாட்டின் நோக்கம். மூன்றாமுலக நாடுகள் என அழைக்கப் படும் இந்த நாடுகள் யாவும், முன்னொரு காலத்தில் காலனிய அடிமை நாடுகளாக இருந்தவை என்பது குறிப்பிடத் தக்கது. காலனிய காலத்தில் "வெள்ளை மனிதனின் கடமை" என்ற பெயரில் இயங்கிய ஐரோப்பியரின் மேலாண்மையை, இன்று "மனித உரிமை" என்ற பெயரில் நடைமுறைப் படுத்துகிறார்கள்.

இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டாலும், காலனியாதிக்க பிரபுக்களைப் பொறுத்தவரையில் இரண்டு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ஜெனீவாவில் தமக்கு சாதகமான பதில் வர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். மறுபக்கம், சிங்களவர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், இரண்டு பக்கமும் தமது பக்க நியாயங்களை அடுக்குவதில் மும்முரமாக இருக்கின்றன.

உணர்ச்சிவசமான அரசியலுக்குள் இழுபடாமல், மூன்றாவது மனிதராக பார்த்தால் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, பொஸ்னிய யுத்தம் நடந்த காலத்தில், செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்த் தரப்பை கடுமையாக சாடி, தமது பக்க நியாயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் பொஸ்னியா என்ற ஒரே நாட்டுக்குள் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இதற்கு இன்னும் பல நாடுகளை உதாரணம் காட்டலாம்.

இனப் பிரச்சினை நடக்கும் நாடொன்றில் இது சர்வ சாதாரணம். ஒவ்வொரு இனமும் தனது பக்கம் நியாயம் இருப்பதாக வாதாடிக் கொண்டிருக்கும். எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் எதிரி இனம் என்று குற்றம் சாட்டும். பெரும்பான்மையான மக்கள் இந்த உணர்ச்சிகர அரசியலுக்குள் இழுபட்டு செல்வார்கள். ஒரு குறிப்பிட்ட நாட்டில், பேரழிவுகள் தரும் யுத்தம் நடந்த பின்னர், இரண்டு பக்கமும் கசப்புணர்வுகள் உச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏகாதிபத்திய தலையீடு ஏற்படும். நாட்டாண்மை மாதிரி தலையிட்டு, இரண்டு பக்கமும் சமாதானமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். இலங்கையிலும் அதைத் தவிர வேறெதுவும் நடக்கப் போவதில்லை.

குரங்கு அப்பம் பங்கிட்ட கதை மாதிரி, மனித உரிமைகள் விவகாரம் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு அடிகோலும் காரணி என்பதை பலர் உணர்வதில்லை. மூன்றாமுலக நாடுகளில், மேற்குலகின் சொற் கேட்டு நடக்காத அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும், இயற்கை வளங்களை அபகரிப்பதற்கும், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் உதவுகின்றது.

சுருக்கமாக சொன்னால், ஜெனீவாவில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் கீழ் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால், தமிழர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. ஆனால், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கான அந்நிய இராணுவ தலையீடு இடம்பெற்றால், அதனால் தமிழர் உட்பட இலங்கையின் அனைத்து மக்களும் பாதிக்கப் படுவார்கள்.

Wednesday, July 19, 2017

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி : நான்கு )
மேலைத்தேய ஏகாதிபத்திய விசுவாசிகளான சில தமிழர்கள், அதே ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ஒடுக்கப்பட்ட யூதர்களை முன்னுதாரணமாகக் கொள்ளும் வினோதமான அரசியல் தோன்றியுள்ளது. பிரிட்டனும், அமெரிக்காவும் தமது ஏகாதிபத்திய நலன்களுக்காக இஸ்ரேல் என்ற அடியாளை உருவாக்கியது. இதன் மூலம் ஐரோப்பியர்கள் தமது கடந்த கால யூத அடக்குமுறைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டனர். அது ஒன்றும் இதயசுத்தியுடனான பாவவிமோசனம் அல்ல. ஐரோப்பிய நரிகளின் குள்ள புத்தியில் உதித்த யோசனை அது. ஐரோப்பிய கண்டத்தினுள் இஸ்ரேல் என்ற தேசம் உருவாவது தடுக்கப்பட்டது. அதே நேரம் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த அரபு நாடுகளுடன், யூதர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்தார்கள். கடந்த 60௦ வருடங்களாக, நிரந்தர யுத்தத்தில் சிக்குண்டு மரணிப்பது அரபுக்களும், யூதர்களும் தான். மேற்கத்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியை அறியாது, (அல்லது தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாது) தமிழர்களை யூதர்களின் உதாரணத்தை பின்தொடர வருமாறு அழைக்கின்றனர்.

"யூதர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்கள் இஸ்ரேல் என்ற தாயகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்." போன்ற புராணக் கதைகளை ஒதுக்கி விட்டு அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை இது. நாடிழந்து நாடோடியாக அலைவதற்காக, நரிக்குறவர்களும் தாயக உரிமை கோரி ஐ.நா.வில் மனுப் போடலாம். மத்திய அமெரிக்காவில், எட்டு நாடுகளில் வாழும், எட்டு மில்லியன் மாயா மக்களுக்கு ஒரு தேசமில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பானிய காலனியதிக்கவாதிகள் மாயாக்களின் தேசத்தை அழித்து, அந்த மக்களை அடிமைகளாக்கினார்கள். இவை சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன. முன்னாள் காலனிய எஜமானான ஸ்பெயின் தலையிட்டு மாயாக்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று யாரும் ஐ.நா. சபையில் குரல் எழுப்பவில்லை.

யூதர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்ததாக கூறப்படும் அதே காலத்தில் தான், இந்திய உப கண்டத்தில் இருந்து ரோமா இன மக்கள் வெளியேறினார்கள். ரோமா இன மக்களும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்களைப் போலவே அவர்களும் மோசமாக அடக்கப்பட்டார்கள், ஈவிரக்கம் பாராது படுகொலை செய்யப்பட்டனர். ஜெர்மன் நாஸிகள், லட்சக் கணக்கான ரோமா மக்களையும் நச்சு வாயு பிரயோகித்து இனவழிப்பு செய்தார்கள். ரோமா இன மக்களுக்கு தனி நாடு வேண்டுமென்று யாரும் வாதாடுவதில்லை. இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் நியாயவான்களும் இந்த விஷயத்தில் மூச்சு விடுவதில்லை. (தெரிந்தெடுத்த சில இனங்களுக்கு மட்டுமே இவர்கள் சுயநிர்ணய உரிமை கோருவார்கள்.) இஸ்ரேலின் உதாரணத்தை பின் தொடர்ந்து, ஐரோப்பாவில் இனவழிப்பில் எஞ்சிய ரோமா இன மக்களை கூட்டிச் சென்று இந்தியாவில் குடியேற்றியிருக்க முடியாதா? இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஒரு பகுதியை ரோமா மக்களின் தாயகமாக அங்கீகரித்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத இந்திய தேசியவாதிகள், "ரோமா தேசிய அரசை" ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க அரசு நிதி, ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, இந்தியாவில் அத்தகைய குட்டி அரசை தக்க வைத்திருக்கலாம். அது "இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை போல", இந்திய உப கண்டத்தில் தீராத யுத்தத்தை கொண்டு வந்திருக்கும்.

யூதர்களின் பிரச்சினை, ஒரு ஐரோப்பியரின் பிரச்சினை. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அல்லது வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்து கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொணா அடக்குமுறைகளை சந்தித்துள்ளனர். யூதர்கள் ஐரோப்பாவில் மட்டும் வாழவில்லை. மத்திய ஆசியாவிலும், அரபு நாடுகளிலும், சுருக்கமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்கெல்லாம் ஐரோப்பாவில் இருந்த அளவுக்கு, மோசமான அடக்குமுறை நிலவியதாக எந்தவொரு வரலாற்று சான்றும் கிடையாது. அப்படிக் கூறுபவர்கள் இதுவரை ஒரே ஒரு ஆதாரத்தையேனும் காட்டவில்லை.(சிலுவைப்போர் காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை ஒரு கட்டுரையாளர் எடுத்துக் காட்டினார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஜெருசலேம் கிறிஸ்தவ நாடாக இருந்த உண்மையை மட்டும் மறைத்து விட்டார்.)

ஏன் ஐரோப்பாவில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்டது போல அரபு நாடுகளில் நடக்கவில்லை? யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளே அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் புனித நூலின் மக்களாக கருதினார்கள். திருக்குர்ஆன் அவர்களை சகோதர மதத்தவர்களாக நடத்தக் கோரியது. இஸ்லாமிய கலீபாக்கள், அந்த மதங்களை சேர்ந்தவர்கள் மீது வரி மட்டும் விதித்தார்கள். அதனால் தான், ஸ்பெயினை கத்தோலிக்க படைகள் கைப்பற்றிய நேரம் யூதர்கள் இஸ்லாமிய மொரோக்கோவில் அகதித் தஞ்சம் கோரினார்கள்.

அன்றைய ஐரோப்பாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மத சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ ஐரோப்பாவில் வாழ்ந்த பிற மதத்தவர்கள் யூதர்கள் மட்டுமே. "எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த அல்லது கொலை செய்த பாவிகள் யூதர்கள்" என்று தேவாலயங்களில் கிறிஸ்தவ பாதிரிகள் பிரசங்கம் செய்தனர்.

உதாரணத்திற்கு விவிலிய நூலில் இருந்து சில மேற்கோள்கள்:
You suffered from your own countrymen the same things those churches suffered from the Jews, who killed the Lord Jesus and the prophets and also drove us out. They displease God and are hostile to all men in their effort to keep us from speaking to the Gentiles so that they may be saved. In this way they always heap up their sins to the limit. The wrath of God has come upon them at last. (1 Thessalonians 2:14-16)
I will make those who are of the synagogue of Satan, who claim to be Jews though they are not, but are liars - I will make them come and fall down at your feet and acknowledge that I have loved you.(Revelation 3:9)
ரோமர்களின் காலத்தில் யூதர்கள் மீது அவ்வளவு வெறுப்பு இருந்ததில்லை. ஆயினும், யூதர்களின் வினோதமான பழக்க வழக்கங்களையிட்டு, ரோமாபுரியின் குடிமக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ரோமர்களின் குறிப்புகளில் இருந்து தெரிய வருவதாவது:
"ரோமாபுரியில் குடியேறிய முதலாவது தலைமுறையை சேர்ந்த கிரேக்க, ஆப்பிரிக்க, ஜேர்மனிய மக்கள் மட்டுமே தமது தாயகத்தில் இருந்து எடுத்து வந்த பண்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் சில காலம் அவற்றை பின்பற்றலாம். ஆனால் படிப்படியாக ரோமாபுரி பிரஜைகளாக இயைபாக்கம் அடைகின்றனர். தமது தாயகத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். இரண்டாவது தலைமுறை தன்னை ரோமர்களாக அடையாள படுத்துகின்றது. யூதர்கள் அதற்கு மாறாக தமது குடியிருப்புகளுக்குள் ஒதுங்கிக் கொள்கின்றனர். தமது மூதாதையரைப் போன்ற வாழ்க்கை நெறிகளின் படி வாழ்கின்றனர். தலைமுறை தலைமுறையாக ரோமர்களுடன் ஒன்று கலக்காது ஒதுங்கி வாழ்கின்றனர்." (Cassius Dio,ரோமாபுரியின் சரித்திரம் 17,1-2)
மேலேயுள்ள வாக்கியங்களை வாசிக்கும் பொழுது இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் பற்றி, இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. அன்று யூத மதம் கிறிஸ்தவத்திற்கு அடுத்த சிறுபான்மையின மதமாக இருந்தது. இன்று அதே இடத்தை இஸ்லாம் பிடித்துள்ளது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட யூதர்களில் எஞ்சியவர்களை இஸ்ரேலில் கொண்டு சென்று குடியேற்றி விட்டார்கள். அதனால் இன்றைய தீவிர வலதுசாரிகளின் பார்வையில், யூதர்களை விட இஸ்லாமியர்களே ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.

இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களுக்கும், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கும் இடையில் என்ன ஒற்றுமை? வரலாறு கூறுவதன் படி, இஸ்ரேலியரின் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டது. அதனால் அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியான ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். அதாவது தங்கள் தாயகத்தை அழித்த எதிரியின் தேசத்தினுள் தான் அகதிகளானார்கள். (கி.பி. 637 ல் இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்பு தான் முதன் முதலாக இஸ்ரேலிய பகுதியை, ரோம சாம்ராஜ்யத்தில் இருந்து துண்டித்தது. பிற்காலத்தில் போப்பாண்டவர், சிலுவைப் படைகளை அனுப்பி இழந்த ஜெருசலேமை மீட்டெடுத்தார்.)

தமிழர்களை யூதர்களை ஒப்பிட்டு வரும் அரசியல் அறிஞர்கள், சிங்கள தேசத்தினுள் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் அகதிகளை மனதில் கொண்டு சொல்லவில்லை. கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு புலம்பெயர்ந்த மக்களை குறித்தே பேசுகின்றனர். இஸ்ரேலை ரோம ஏகாதிபத்தியம் அழித்தது போல, தமிழீழத்தை சிங்கள ஏகாதிபத்தியம் அழித்தது. "சிங்கள ஏகாதிபத்தியம்" என்பது வழக்கமாக தமிழ் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொற்தொடர். ரோம சாம்ராஜ்யத்தில் அகதிகளாக அலைந்த யூதர்களை போல, மலையகத்திலும், கொழும்பிலும் பெருந்தொகை தமிழர்கள் (இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7 %) இன்னலுறுகின்றனர். ஆகவே, இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றி, அவர்கள் எதிர்கால ஈழத்தை நோக்கி அணிதிரட்டப் படுவார்கள் என நம்புவோமாக.

ரோமாபுரியின் தலைநகரில் வாழ்ந்த யூதர்கள் கூட, ரோம ஏகாதிபத்திய விசுவாசமாக இருந்ததில்லை. ரோமர்கள் எத்தனை அடக்குமுறைகளை பிரயோகித்த போதிலும், ஒரு யூதர் கூட ரோமர்களின் மதத்தை தழுவவில்லை. யூதர்கள் ஹீபுரு பேசுவதை மறந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஹீபுரு மொழிப் பெயர்களை மட்டுமே சூட்டினார்கள். அன்று யூதர்கள் வாழ்ந்த மேற்கத்திய நாடுகளில், இன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையோ, யூதர்களுக்கு எதிர்மாறானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை. ஆங்கில மொழி, அல்லது ஐரோப்பிய உச்சரிப்பு கொண்ட பெயரிடுவது பரவலாக காணப்படுகின்றது. இதனால் இரண்டாவது தலைமுறை தமிழர்களை, பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. தமிழ் பேசுவதை கைவிடும் இரண்டாவது தலைமுறை, ஐரோப்பிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விடும்.

யூதர்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகள், எப்போதும் அடக்குமுறை இயந்திரங்களாகவே இருந்தன. யூதர்களின் இரண்டாயிரம் வருட புலம்பெயர் வாழ்வில், ஒரு ஐரோப்பிய அரசு கூட அவர்களிடம் இரக்கம் காட்டியதில்லை. இன ஒடுக்குமுறையால், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒரு நாளும் மேற்கத்திய விசுவாசிகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. யூதர்கள் ஐரோப்பியர்களை அரக்கர்களாக கருதி வெறுத்திருந்தால், அந்த உணர்வு புரிந்து கொள்ளத் தக்கதே. யூதர்கள், கொடுமைக்கார ஐரோப்பியர்கள் வசிக்காத பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பியிருந்தால், அதுவும் புரிந்து கொள்ளத் தக்கதே. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள், யூதர்களை விட முற்றிலும் மாறுபட்ட குணாம்சத்தை கொண்டுள்ளனர். ஐரோப்பிய குடியுரிமை கிடைத்தவுடனே விருந்து வைப்பார்கள். தாம் குடியேறிய ஐரோப்பிய நாட்டிற்கான விசுவாசத்தை காட்டும் வண்ணம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். சுவிட்சர்லாந்தில் பிறந்த குழந்தைக்கு "சுவிஸ்த்ரா", டென்மார்க்கில் பிறந்த குழந்தைக்கு "டேனிஷா". இவ்வாறு சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. தமிழீழத் தனியரசை அழித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் கூட, தமிழர்கள் அகதிகளாக அலைகின்றனர். ஆனால் எத்தனையோ தமிழர்கள் தம்மை மேற்குலக விசுவாசிகளாக காட்டிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

(தொடரும்)

Friday, May 19, 2017

இடதுசாரி வெறுப்பு அரசியலின் எதிர்காலம்

தமிழீழத்திற்கு ஆதரவான ஐரிஷ் இடதுசாரிகளின் சுவரோவியம்.
படத்திற்கு நன்றி: Sinthujan Varatharajah

"வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ எந்த‌ தேசிய‌ இன‌ விடுத‌லைப் போராட்ட‌மும் முழுமைய‌டைய‌ சாத்திய‌மில்லை."
- புற‌ம்போக்கு ப‌ட‌ வ‌ச‌ன‌ம்

தொண்ணூறுகளுக்குப் பின்னரான காலத்தில், மார்க்சியத்தை கைகழுவி விட்டு, புதிய சித்தாந்தங்களை தேடி ஓடியோர் பலருண்டு. சிலர் பின்நவீனத்துவத்தை தூக்கிப் பிடித்தனர். வேறு சிலர் தேசியவாத அரசியலே சமூக விடுதலைக்கான வழியெனக் கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன். தேசியவாதக் கருத்தியலை நியாயப் படுத்துவதற்காக இடதுசாரிகள் மீது சேறடிக்க தயங்காதவர். 

அண்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதி வெளியான "ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்" என்ற நூலிலும், இடதுசாரிகள் மீதான வெறுப்பை காட்டியுள்ளார். 

போலி இடதுசாரி யமுனா ராஜேந்திரனின் திரிபுவாதங்களுக்கு எதிரான எதிர்வினைகள்:

//மார்க்சியரான அப்துல்லா ஒச்சலான் தமது மக்களின் இனவிடுதலைக்காக அமெரிக்க ‘ஏகாதிபத்தியத்தின்’ தலையீட்டைக் கோரும் காலமும், மார்க்சியரான கிழக்குதிமோரின் சனான குசாமா மேற்கத்திய அமெரிக்கத் தலையீடுகளின் பின் கிழக்கு திமோர் எனத் தனிநாடு பெற்றதுமான வரலாறு கொண்ட காலமும் இதுதான்.// 
- (யமுனா ராஜேந்திரன் - மரணத்தின் நிழல்: போராளிகளும் வெகுமக்களும்)

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், மேற்குலக ஆதரவைக் கோருவது தவறல்ல என்பது தான் இவரது வாதம். இவரது உதாரணத்திலேயே முரண்பாடு துலக்கமாக தெரிகின்றது. கிழக்கு தீமோர் விடுதலை அடைய உதவிய அதே மேற்கத்திய நாடுகள், குர்திஸ்தான் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏனோ?

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்று காரணம் சொன்னாலும், ஈராக்கில் சுதந்திர குர்திஸ்தான் உருவாவதை அமெரிக்கா இன்று வரையில் விரும்பவில்லை. இத்தனைக்கும் அங்கு ஒச்சலான் மாதிரி மார்க்சியத் தலைவர் எவரும் இருக்கவில்லை. ஈராக் போரில், குர்திஷ் படையினர் அமெரிக்கப் இராணுவத்துடன் ஒத்துழைத்த படியால் தான், சதாம் ஹுசைனை அகற்ற முடிந்தது. அந்த நன்றிக் கடனுக்காக ஆவது, அமெரிக்கா குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரித்திருக்கலாம் அல்லவா?

//"ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன்"// 
- ('ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' நூலில் யமுனா ராஜேந்திரன்.)

ஸ்டாலின், மாவோ என்று யாருமே விமர்சனம் இன்றிக் கொண்டாடப் படவில்லை. ஸ்டாலின் மீது மாவோ விமர்சனம் வைத்தார். மாவோவும், குருஷேவும் பகைமை வருமளவிற்கு விமர்சனங்களால் முரண்பட்டனர். அந்த விவாதங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் நடந்து வந்தன. அபிமால் குஸ்மான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டிருந்தார்.

அப்துல்லா ஒச்சலான் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்சியம் பேசினாலும், அவரது தீவிர தேசியவாத நடைமுறைகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டார். அதே மாதிரி, யாசிர் அரபாத்தும் வலதுசாரி தேசியவாதம், மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்காக எப்போதும் விமர்சிக்கப் பட்டார். மேற்படி உதாரணங்களில் கடுமையாக விமர்சிக்கப் படாதவர் யாரும் இல்லை.

அப்துல்லா ஒச்சலான், யாசிர் அரபாத் மாதிரி, பிரபாகரனை 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் வேண்டுகோள் விடுக்கிறார். இனத்தின் பேரில், மொழியின் பேரில், பெருமளவு மக்களை அணிதிரட்டும் சக்தி தேசியவாதத்திற்கு உண்டு.

அதுவே தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம். அதாவது, ஏகாதிபத்தியத்தால் முண்டுகொடுக்கப் படும் நவ காலனிய அரசுக்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சமூக மக்களை அணிதிரட்டி போராட வைக்க முடிகின்றது. மார்க்சிய பகுப்பாய்வின் படி, தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு வளர்ச்சிக் கட்டம். அதை யாரும் மறுக்கவில்லை.

தேசிய இன விடுதலைப் போராட்டத் தலைவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், ஏகாதிபத்திய அழுத்தம் காரணமாக மிதவாத நிலை எடுக்கிறார்கள். கிழக்குதிமோரின் சனான குசாமா, பாலஸ்தீனத்தின் யாசிர் அரபாத் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணியாத தலிவர்கள், தனிநாடு சாத்தியமில்லை என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் அப்துல்லா ஒச்சலான், குர்திஸ்தான் தனிநாடாவது சாத்தியமில்லை என்றும், துருக்கியை ஜனநாயக மயப் படுத்தும் குறிக்கோளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். பிரபாகரனும் ஏறத்தாள அதே நிலைமையில் தானிருந்தார். இறுதிப்போரில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, இறுதி மூச்சுள்ள வரை போராடிச் சாவது என்ற முடிவெடுத்திருந்தார்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி புகழ்ந்து பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்பது போல யமுனா ராஜேந்திரன் எழுதி இருப்பது, எந்த வகையான மார்க்சிய பகுப்பாய்வு என்று தெரியவில்லை. புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி வந்தனர். மன்னர்கள் அல்ல, மக்களின் வரலாறே எமக்கு முக்கியம் என்றது மார்க்சியம்.

அந்த வகையில் எந்தத் தலைவரும் முக்கியமல்ல. அவர்களைப் பின்பற்றிய மக்கள் தான் முக்கியம். அந்தத் தலைவர்கள் தம் மக்களுக்கு என்ன செய்தார்கள்? அது தான் முக்கியம். தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதல்ல, புலி இயக்க போராளிகளையும், தமிழ் மக்களையும் புரிந்து கொள்வது தான் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகும்.

கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிடம் இருந்து அயர்லாந்து விடுதலை அடைவதை ஆதரித்திருந்தார். மார்க்சின் "அயர்லாந்து கொள்கையை" அப்படியே ஈழத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமா? 

கார்ல் மார்க்ஸ் காலத்தில், அயர்லாந்து விவசாயப் பொருளாதாரத்தை கொண்டிருந்தது. அங்கிருந்த நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர்கள் அயர்லாந்தில் உற்பத்தியான விளைபொருட்களை, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். இதனால், ஒரு தடவை அயர்லாந்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இலட்சக் கணக்கான ஐரிஷ் மக்கள் பட்டினியால் இறந்தனர். 

மேலும் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில், சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய இடதுசாரி சக்திகளும் பங்கெடுத்திருந்தன. அயர்லாந்து சுதந்திரமடைந்த காலத்திலும், ஐரிஷ் சோஷலிஸ்டுகளின் கை மேலோங்கி இருந்தது. 

தமிழீழ போராட்டத்தை புலிகள் தலைமை தாங்குவதற்கு முன்னர், ஈழத்தில் ஏறக்குறைய அப்படியான சூழ்நிலை இருந்தது. ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் பல சோஷலிச ஈழம் அமைக்க விரும்பின. 

ஆயினும், அயர்லாந்தையும், ஈழத்தையும் எல்லா விஷயத்திலும் ஒப்பிட முடியாது. உதாரணத்திற்கு, ஈழத்தின் விவசாயப் பொருளாதாரத்தை சிங்கள நிலப்பிரபுக்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. அது தமிழ் நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. 

அயர்லாந்து, ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகளும் இருக்கின்றன.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, May 02, 2017

2017 மேதினம் - மொன்றியல் முதல் மாத்தளை வரை


இவ் வருட மேதினமும் உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்திருந்தது. பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு இம்முறை நடந்த மேதின ஊர்வலத்தில் வன்முறைகள் வெடித்தன. பாரிஸ் மட்டுமல்ல ரோன் போன்ற பிற நகரங்களிலும் கடந்த சில நாட்களாக இனவாதக் கட்சியான FN தலைவி மாரின் லே பென் இன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன.

பாரிஸ் மேதின‌க் க‌ல‌வ‌ர‌த்தில் பொலிசாரும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ரும் மோதிக் கொண்ட‌னர். பொலிஸ் க‌ண்ணீர்ப்புகை குண்டுக‌ளை வீசி பேர‌ணியை க‌லைக்க‌ முய‌ன்ற‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் பெட்ரோல் குண்டுக‌ளை வீசின‌ர். ஒரு பொலிஸ்கார‌ர் எரிகாய‌ங்க‌ளுக்கு உள்ளானார்.

பிரான்ஸில் முன்பு ந‌ட‌ந்த, தொழிலாள‌ர் ந‌ல உரிமைக்கான‌ தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கையின் தோல்வி, பொதுத்தேர்த‌லில் வென்ற‌ இன‌வாத‌க் க‌ட்சிக்கு எதிரான‌ எதிர்ப்புண‌ர்வு போன்ற‌ன‌வே மேதின‌ வ‌ன்முறைக்கு கார‌ண‌ம். மேதின‌ பேர‌ணியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் த‌னித்து நின்ற‌ இட‌துசாரி இளைஞ‌ர்க‌ள் தான் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.


கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத் தலைநகர் மொன்றியலில் நடந்த மேதினப் பேரணியில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், குறைந்த பட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. பல்வேறு கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. (http://montrealgazette.com/news/local-news/montreal-may-day-rallies-call-for-a-minimum-wage-of-15-end-to-capitalism)

கனடாவில் தற்போது வழங்கும் சம்பளம் வறுமையில் இருந்து மீளப் போதுமானது அல்ல. பல உழைப்பாளிகள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ்கிறார்கள். நாம் சம்பள உயர்வைக் கோராமல் பேசாமல் இருந்தால், அவர்களாக கூட்டப் போவதில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 


துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்கள், அடானா, அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய துருக்கியின் பல நகரங்களிலும் இடம்பெற்றன. துருக்கியில் மனிதஉரிமைகளை நசுக்கி வரும், ஜனாதிபதி ஏர்டோகனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் காவல்துறையினரின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 

படத்திற்கு நன்றி: David Suren

இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் பங்கு பற்றின. தென்னிலங்கையில் கூட ஜேவிபி, முன்னிலை சோஷலிசக் கட்சி, மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள் நடத்திய மேதினப் பேரணிகளில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

படத்திற்கு நன்றி: Seelan Saththiyaseelan

இருப்பினும், வழமை போல முதலாளித்துவ ஊடகங்கள், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மறைத்தன. அதற்குப் பதிலாக காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே நடத்திய மேதினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தை காட்டி, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஊடகங்கள் கூட ராஜபக்சவின் கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்கள் மேதினத்தில் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில், முதலாளித்துவ கட்சிகள் அந்த உணர்வை மடைமாற்றும் வேலையில் ஈடுபட்டன.

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/vigneswaran.kajee/videos/1876412175950974/?hc_location=ufi) மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் "சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். "தமிழ்த் தேச தொழிலாளர்கள்" என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.

கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள்.