Sunday, July 30, 2023

வட இலங்கையில் தொடரும் வர்க்கப் படுகொலைகள்!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்த ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். பொலிஸ் இதை தற்கொலை என்று பதிவு செய்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியை வேலைக்கு வைத்திருந்தவர்கள், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு வைக்க அனுமதிக்கவில்லை. மாதம் 25000 ரூபாய் சம்பளம் பேசி விட்டு 5000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வேலை வழங்குநர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பிருந்தும், சிறுமியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியுள்ளனர். ஏனென்றால் சக்தி வாய்ந்த பணக்காரர்களை ஏழைகளால் எதிர்த்து நிற்க முடியாது. அதிகார வர்க்கம் எப்போதும் பணக்காரர்கள் பக்கமே நிற்கும்.

இதை தற்கொலை என்று பார்த்தாலும், அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களில் ஒரு பணிப்பெண் தற்கொலை செய்கிறாள் என்றால், அந்தளவுக்கு கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கொலை தான். அப்படி இருந்தும் பொலிஸ் அந்த பணக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

இலங்கையில் பல இடங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும் அதை தற்கொலை என்று சொல்லி மறைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு அமைச்சர் வீட்டில் வேலை செய்த சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலும், இறந்தது மலையக தமிழ்ச் சிறுமி என்பதாலும், அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனைய மரணங்கள் ஊடக கவனத்தை பெறுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நடந்த (தற்)கொலை சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதனை மேற்கொண்டு விசாரிக்காமல் வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. அந்த சம்பவத்தில் பலியானது ஓர் ஏழைச் சிறுமி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள். எப்போதும் பொலிஸும், நீதித் துறையும் பணக்காரர் பக்கமே நிற்கும்.

அது போகட்டும். சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக பேசக் கூடிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதேன்? பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிக்காக நீதி கோரிப் போராடாதது ஏன்? குற்றவாளியும் ஒரு தமிழர் என்பதாலா? பணக்கார வீடென்றால் "தமிழ் வீரம்" புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

சிங்கள இராணுவத்துடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சல் மிக்க தமிழ்தேசிய ஊடகவியலாளர் யாரும் இப்படியான விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? குறைந்த பட்சம் அங்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து மக்களுக்கு அறியத் தர வேண்டாமா?

ஏனென்றால் இவர்கள் எல்லோரும் பணக்கார வர்க்க அடிவருடிகள். இலங்கையில் இருப்பதும் வர்க்கப் பிரச்சினை தான். அதாவது பணக்கார வர்க்கமும், அதன் அடிவருடிகளும் ஏழைகள் மீதான ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக இனம், தேசியம் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தப்பித்தவறி ஒருபோதும் ஒரே தேசியத்தின் உள்ளே நடக்கும் வர்க்கப் படுகொலைகள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் பதில் வராது. பணக்கார அடிவருடித்தனத்தை வெளியே சொல்ல முடியுமா?

No comments: