Saturday, July 31, 2010

காஷ்மீர்: விடுதலைக்கு கல்லும் ஆயுதம்

வீடியோவில் பதிவாகியுள்ள காஷ்மீர் சுதந்திரப் போராட்டக் காட்சிகள்.

வெற்றி எப்.எம். மீதான தாக்குதல், ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்

வெள்ளிக்கிழமை அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க் நிறுவனத்தின் ஊடக செய்திப்பிரிவு எரித்தழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததோடு பல இலட்சம் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து நாசமாகின.
இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் முற்றுப்புள்ளி வைப்பது அரசின் கடமையாகும்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக அந்நிறுவனத்தில் இயங்கும் வெற்றி எப்.எம். இன் நிகழ்ச்சி முகாமையாளர், செய்தியாசிரியர் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்ட அறிவிப்பாளர் ஆகியோரின் கருத்துக்களையும் சேதமடைந்த செய்திப்பிரிவினையும் காணொளியில் காணலாம்.



(www.tamilmirror.lk)

Thursday, July 29, 2010

கதிர்காமக் கந்தா! இனவாதிகளுடன் உனக்கும் பங்கா?


இலங்கையில் இனப்பிரச்சினை கடவுளையும் விட்டு வைக்கவில்லை. ஆடி மாதம் தெற்கே கதிர்காமத்திலும், வடக்கே நல்லூரிலுமாக இரு பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கதிர்காமம் வரும் பக்தர்கள் பெரும்பாலும் சிங்களவர்களாகவும், நல்லூர் வரும் பக்தர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவும் உள்ளனர்.

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை தோற்கடிப்பதற்காக, துட்டகைமுனுவுக்கு கதிர்காமக் கந்தன் உதவியதாக ஒரு பௌத்த-சிங்கள சார்பு சரித்திரக் கதை ஒன்றுண்டு. அந்தக் கதையின் சாராம்சம் இது.

தென்னிலங்கையில் துட்ட கைமுனுவின் படை முகாம்களைக் கொண்டிருந்த மாணிக்க கங்கை ஆற்றின் அருகில், கந்தசாமி வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியருடன் வாழ்ந்து வந்தார்.

கி.மு. 3 ம் நூற்றாண்டளவில், இந்தியாவில் இருந்து வந்திருந்த கந்தசாமி, பௌத்த நெறிகளைப் பின்பற்றி துறவியைப் போல வாழ்ந்தவர். மாணிக்க கங்கை பகுதி மக்களின் பிணி தீர்க்க பாடுபட்டவர். கந்தசாமி துட்டகைமுனுவுக்கு வழங்கிய படை நகர்த்தல் தொடர்பான ஆலோசனைகள் எல்லாள மகாராஜாவை வெல்வதற்கு பெரிதும் உதவின. போரில் வென்று இலங்கை தீவு முழுவதற்கும் அரசனான துட்ட கைமுனு, அதற்கு நன்றிக்கடனாக கந்தனுக்கு ஒரு மாளிகை கட்டிக் கொடுத்தான். அதுவே கதிர்காமக் கந்தசுவாமி கோயில். (பார்க்க: The land of God Kataragama )

நிச்சயமாக, இந்து சமயம் சார்ந்த புராணக் கதை இதிலிருந்து வேறுபடுகின்றது. தாய், தந்தையாரான சிவன், பார்வதியுடன் முரண்பட்ட கந்தன் இலங்கை வந்து மாணிக்க கங்கை ஆற்றின் அருகில் வசித்ததாக கூறுகின்றது. முன்னர் குறிப்பிட்ட சரித்திரக்(?) கதையை இந்துத் தமிழர்கள் நம்பப் போவதில்லை. ஆனால் கதிர்காம் இன்று வரை பௌத்த, இந்து மதத்தவர்களுக்கு பொதுவான புனித ஸ்தலமாக உள்ளது. புராதன காலத்தில் இருந்தே கதிர்காம வருடாந்த உற்சவம் நாடு முழுவதும் இருந்து யாத்ரீகர்களை வரவழைக்கின்றது.

தொலை தூர யாழ்ப்பாணத்தில் இருந்து கூட பக்தர்கள் நடந்து வருவார்கள். இடையில் முப்பதாண்டுகளாக யுத்தம் காரணமாக அந்த நடைப்பயணம் தடைப்பட்டிருந்தது. கதிர்காமம் தென்னிலங்கையின் வறண்ட பிரதேசமான அம்பாந்தோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. துட்ட கைமுனுவின் போருக்கு கந்தசாமி உதவிய கதை எந்தளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் சோழ மன்னன் எல்லாளன் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலத்தில், தென்னிலங்கையில் சிறு நிலப்பகுதி துட்ட கைமுனு தலைமையிலான கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கதிர்காமமும் அந்த பகுதியை சேர்ந்திருக்க சாத்தியமுண்டு.

பண்டைய காலங்களில், புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கும், ஆதிக்க சக்திகளின் ராணுவ வெற்றிக்கும் இடையே தொடர்புண்டு. மெக்காவை சேர்ந்த முகமது தலைமையிலான இஸ்லாமியப் படைகள், அரேபிய தீபகற்பத்தை கைப்பற்றிய பின்னர், மெக்கா நோக்கிய யாத்திரை கட்டாயமாக்கப்பட்டது. கங்கைக் கரையோர பிராமணர்கள் இந்திய உபகண்டத்தை வென்ற பின்னர் தான் காசி யாத்திரை செல்லும் முறை ஏற்பட்டது.

அதே போல, இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் வைத்திருக்க துட்ட கைமுனுவும் கதிர்காமத்தை யாத்திரைத் தலமாக்கியிருக்கலாம். மேலும் இலங்கையின் பூர்வகுடிகளான வேடுவர்களும் கதிர்காமத்தை தமது புனித ஸ்தலமாக கருதுகின்றனர். இதிலிருந்து கதிர்காம வழிபாடு சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவது தெளிவாகின்றது. இன்றைக்கும் கதிர்காமத்தை சுற்றிய பகுதியிலேயே ஆதிவாசிகள் அதிகமாக காணப்படுகின்றனர்.

பிற்காலத்தில் தோன்றிய பௌத்த-சிங்கள தேசியவாதிகள் வரலாற்றை தமக்கேற்ப திரிபு படுத்தி வந்துள்ளனர். அதே வேலையை மறு பக்கத்தில் இந்து-தமிழ் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். ஆறுபடை வீடு கொண்ட திருமுருகன் என்று குறிப்பிடப்படும், முக்கியமான முருகனின் ஆலயங்களில் கதிர்காமமும் உண்டு.

முருகன் தமிழர்களின் கடவுள் என்று சொல்வதிலும் பார்க்க, புராதன தென்னிந்திய இனங்களின் கடவுள் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. முருகன் தமிழருக்கு மட்டுமல்ல, கன்னடர்கள், சிங்களவர்களுக்கும் கடவுள் தான். வட இந்தியாவில் இருந்து இந்து (பிராமண) மதம் பரவுவதற்கு முன்பே முருகன் வழிபாடு தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிலவி வந்துள்ளது.

கௌதம புத்தர் பிராமண இந்து மதத்திற்கு எதிரான சீர்திருத்த இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினார். இது யூத மதத்தினுள் இயேசுவின் சீர்திருத்த இயக்கத்துடன் ஒப்பிடத் தக்கது. ஆரம்ப காலத்தில் பௌத்தம் இன்னொரு மதமாக மாறியிருக்கவில்லை. புத்தர் கூட தனது போதனைகளில் கடவுளைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அதனால் அவரைப் பின்பற்றிய மக்கள் இந்து மதக் கடவுளர்களையே தொடர்ந்தும் வழிபட்டு வந்தார்கள்.

பௌத்த மதம் நிறுவனப்படுத்தப் பட்ட பின்னரும் அது தொடர்ந்தது. இலங்கையிலும் அதுவே நடந்தது. புத்தரின் போதனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பிற இந்துக்களிடம் இருந்து பிரிந்து தம்மை பௌத்தர்கள் என அடையாள படுத்திக் கொண்டனர். துட்ட கைமுனுவும் புத்தரின் போதனைகளை பின்பற்றிய முருக பக்தனாக இருந்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. எல்லாளனின் ஆட்சியின் கீழ் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வந்துள்ளனர்.

பண்டைய கால அரசர்கள் தமது பிராந்திய விஸ்தரிப்புக்கு வசதியாக மதங்களை பயன்படுத்தி வந்தனர். தென்னிந்தியாவில் தோன்றிய சோழர்கள், பௌத்த, சமண மதங்களை அடக்கி, சைவ மத ஆதிக்கத்தை நிலைநாடினார்கள். பிராமண ஆதிக்கத்தின் கீழான வழிபாட்டு முறைகளையும் அறிமுகப் படுத்தினார்கள். அவர்களின் ஆட்சியின் கீழான கோயில்களில் எல்லாம் பிராமணப் பூசாரிகள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் சோழர்கள் வருகையுடன் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட பிராமண (இந்து) மதம் பரவியது. அதற்கு முன்னர் இருந்த ஆதி கால இந்துக் கோயில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக இருக்கவில்லை. இன்றைக்கும் கதிர்காமத்தில் பூசை செய்வது பிராமணர்கள் அல்ல.

துட்ட கைமுனு சிறுவனாக இருந்த பொழுது நடந்ததாக சொல்லப்படும் கதை சிங்கள மொழிப் பாடப் புத்தகத்தில் உள்ளது. "வடக்கே தமிழரும், தெற்கே கடலும் கொந்தளிக்கும் நேரம் நான் எப்படி நிம்மதியாக உறங்க முடியும்?" என்று துட்ட கைமுனு தாயைக் கேட்டானாம். மகா வம்ச நூலில் அந்தக் கதை வருகின்றது. உண்மையில் தமிழர்கள் என்பது சோழர்கள் என்றிருக்க வேண்டும். அன்றைய மனிதர்கள் நம்மைப் போல சிந்திக்கவில்லை. சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிபடையிலான இன வேறுபாடு பிற்காலத்தில் தோன்றியது.

ஆங்கிலேயர்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட மகா வம்சத்தை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்கள். அப்போதே இலங்கையை ஆண்ட தென்னிந்திய அரசர்களை (குறிப்பாக சோழர்களை) தமிழர்கள் என்று விளிக்கும் சொல் புகுத்தப்பட்டது. சிங்கள மன்னர்களுடன் நல்லுறவு பூண்டிருந்த பாண்டிய மன்னர்களும் தமிழர்கள் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழி பேசும் மக்களுக்கும் முருகன் பொதுவான கடவுள் என்ற உண்மை மக்களுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றது. விஷ்ணு, முருகன், போன்ற பல இந்து மத தெய்வங்கள் பௌத்த மதத்தினுள் உள்வாங்கப் பட்டுள்ளன. அதற்கு காரணம், அவற்றை வழிபட்ட மக்களை காலப்போக்கில் பௌத்தர்களாக மாற்றுவது.

இது அனைத்து மதங்களிலும் காணப்படும் நடைமுறை தான். இன்றுள்ள சிங்கள பேரினவாதம், பௌத்த மத அடிப்படைவாதம் சார்ந்தது. அது தமிழருக்கும், சிங்களவருக்குமான பொதுமைப் படுத்தப்பட்ட வரலாற்றை மறுக்கிறது. அதன் பலனாக கதிர்காமம் இன்று பௌத்த கோயிலாக காட்சி தருகின்றது. கதிர்காம திருவிழா, பௌத்த மத பெரஹரா ஆகி விட்டது.

இலங்கையில் சிங்கள தேசியவாதமும், தமிழ் தேசியவாதமும், இரு இனங்களுக்கிடையிலான பொதுவான கலாச்சாரங்களை மறுத்து வந்துள்ளன. அவை இரு இனங்களுக்குமிடையில் செயற்கையான தடுப்புச் சுவரை எழுப்ப விரும்புகின்றன. இனவாதிகளின் அரசியலுக்குள் கடவுளும் அகப்பட்டுக் கொண்டார். தெற்கே கதிர்காமத்தில் "சிங்களக் கந்தனும்", வடக்கே நல்லூரில் "தமிழ்க் கந்தனும்" ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

Wednesday, July 28, 2010

ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை! முருகனின் துரோகம்!!

கொழும்பு நகரில் ஆடிவேல் திருவிழாவில் ரத பவனி வந்த முருகப் பெருமான், ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ராஜபக்ஷவுக்கு முதல் மரியாதை வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகை அசினின் யாழ்ப்பாண விஜயத்திற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழருக்கு துரோகம் செய்த அசின் மீதான கண்டன அறிக்கைகள் நாலா பக்கமும் இருந்து பறந்து வந்தன. ஆனால் முருகப் பெருமான் மீது மட்டும் எந்தவொரு கண்டன அறிக்கையும் காணோம். "தமிழர்கள் முருகனின் திருவிழாக்களை பகிஷ்கரிக்க வேண்டும். பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு செல்லக்கூடாது." என்று தடையுத்தரவு எதுவும் வரவில்லை. இது கடவுளோடு சம்பந்தப்பட்ட விஷயம் என்று பயந்து ஒதுங்கி விட்டார்களா?

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து இப்போது தான் ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் முருகனுக்கு இந்த கோலாகலமான ஆடி வேல் திருவிழா தேவையா? அதுவும் யுத்தம் காரணமாக கடந்த 15 வருடங்களுக்காக தடைப் பட்டிருந்த திருவிழா அது. கந்தன் ரத பவனி வரும் பாதை கொழும்பின் அரசியல், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கூறி திருவிழா தடுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகை, இராணுவத் தலைமையகம், மத்திய வங்கி, அமைச்சகங்கள், தூதுவராலயங்கள் ஆகியனவற்றைக் கொண்ட கொழும்பின் இதயப் பகுதி என்பதால் அத்தனை கெடுபிடி. 15 வருடங்களுக்கு முன்னர் அந்தப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றின் பின்னர் தான் ஆடி வேல் ஊர்வலம் தடுக்கப்பட்டது. இருப்பினும் வன்னிப் பேரவலம் இடம்பெற்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த வருடம் ஆடி வேல் திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது. தனது திருவிழா மீண்டும் நடப்பதற்கு நன்றிக்கடனாக, முருகப்பெருமான் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்ததை, தமிழ்த் தேசியக் காவலர்கள் எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள்?

"ஆடி வேல் இரதத்தில் பவனி வந்தது ஒரு வெண்கலச் சிலை." என்று ஒரு நாஸ்திகன் கூறலாம், ஆனால் இந்து மதத்தை நம்பும் தமிழர்களுக்கு முருகன் எல்லாம் வல்ல இறைவன். முருகனின் பெயரில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி முதல் மரியாதை செய்த கோயில் தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் இதே இந்துக்களின் மதிப்புக்குரியவர்கள். தமிழ் தேசியவாதிகள் முருகன் என்ற கடவுளை பகைத்துக் கொள்ள விரும்பாதிருக்கலாம். (மயில் மீதேறி வந்து வேலாயுதத்தை வீசி விட்டால்? நமக்கேன் வம்பு.) ஆனால் தர்மகர்த்தாக்கள் என்ற மனிதர்களை நோக்கி கண்டனக் குரல்களை எழுப்பியிருக்கலாம். ஆலய தர்மகர்த்தாக்களும், ஆடி வேல் திருவிழாவுக்கு நிதி வழங்குவதும் பிரபல தமிழ் வர்த்தகப் புள்ளிகள். கொழும்பு நகரில் நகைக் கடைகளின் வீதியான செட்டித் தெரு முதலாளிகள். கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் இருந்து வந்து நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் செட்டியார்கள். பலருக்கு கொழும்பில் மட்டுமல்ல சென்னையிலும் கடைகள் இருக்கின்றன.

செட்டித்தெருவில் நகைக் கடையில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் கூறினார். ஆடி வேல் திருவிழா செலவுகளுக்காக அனைத்துக் கடைகளிலும் நிதி சேர்க்கிறார்கள். நகை ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுக்கும் சிறு தொழில் முனைவர் கூட குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்கிறார். பெரிய முதலாளிகள் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிறார்கள். அந்த தெருவில் மொத்தம் ஆயிரம் கடைகளுக்கு குறையாமல் இருக்கும். ஒரு திருவிழாவுக்கு மட்டும் எவ்வளவு பணம் வசூலாகி இருக்கும் என்று நீங்களே கணக்குப் பாருங்கள். இதற்கிடையே ஆடி வேல் திருவிழாவை "உத்தியோகபூர்வமாக" பொறுப்பெடுத்து நடத்தும் சம்மாங்கோடு சிறி கதிர்வேலாயுத சுவாமி கோயிலின் வருமானம் தனியானது.

ஆடி வேல் திருவிழா இலங்கைத் தீவின் பழமை வாய்ந்த பாரம்பரிய விழாக்களில் ஒன்று. 1874 தொடக்கம் அது நகைக்கடை முதலாளிகளின் செலவில் தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை விட புடவை வியாபாரம், இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இந்திய தமிழ் முதலாளிகளும் ஆடி வேல் திருவிழாவுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். அதற்கு சாட்சியமாக வீரகேசரி பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரமும் கொடுத்து விடுகின்றனர். சில நேரம் தமது சாதி அடையாளத்தைக் காட்டியே விளம்பரம் செய்கின்றனர். காமராஜரின் பிறந்த நாளை இலங்கையில் வர்த்தகம் செய்யும் நாடார் சமூகத்தினர் நினைவு கூர்வது ஒரு உதாரணம். இந்திய முதலாளிகள், இலங்கையில் நகை வியாபாரத்தில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய புடவை வகைகள், இரும்பு, உலோகம் போன்ற பொருட்களை இறக்குமதி செய்து விற்பதிலும் அவர்களின் ஆதிக்கம் தான். கடந்த 30 வருட காலமாக ஓயாத போர், அவர்களின் வருமானத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டிருந்தது. தற்போது தமது வணிக சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க தடையேதும் இல்லை என்ற சந்தோஷத்தில் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தியிருப்பார்கள்.

இதிலே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் தமிழ் தேசியவாதிகளின் வெற்று அறிக்கைப் போர்கள். அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகக் கருதும் எல்லோரையும் எதிர்ப்பார்கள், தமிழ் முதலாளிகளைத் தவிர. கூலிக்கு மாரடிக்கும் நடிகர்கள் இலங்கை செல்லக் கூடாது என்று "பத்வா" விதிப்பார்கள். ஆனால் பகிரங்கமாக இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படும் இந்திய/தமிழ் முதலாளிகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தமிழ் தேசியவாதிகள் உண்மையிலேயே இலங்கை அரசை கவிழ்க்க விரும்பினால் வேறொன்றும் செய்ய வேண்டாம். இலங்கையில் வர்த்தகம் செய்யும் இந்திய தமிழ் முதலாளிகளை தடுத்தாலே போதும். இலங்கையின் பொருளாதாரம் எப்போதோ ஆட்டம் கண்டிருக்கும்.

Friday, July 23, 2010

சுவிஸ் தமிழ் "மேட்டுக்குடி தொழிலாளர்கள்"


[ சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை - இரண்டாம் பகுதி]

பிற ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரினால், அவர் அகதியாக அங்கீகரிக்கப்படும் வரையில் வேலைக்கு போக முடியாது. ஆனால் சுவிட்சர்லாந்தில் ரெஸ்டாரன்ட் சமையலறை, துப்பரவு பணி, வெதுப்பகம், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் அடிமட்ட தொழிலாளர் பற்றாக்குறையை ஈடு செய்ய அகதிகளை பயன்படுத்தினார்கள். இதனால் சுவிஸ் அரசுக்கும் லாபம் இருந்தது. ஒரு அகதியை முகாமில் வைத்து பராமரிக்க தேவையான செலவை மிச்சம் பிடித்தது. மேலும் வேலை செய்யும் அகதி அரசுக்கு வரி கட்டுவதால், மேலதிக வருமானம் வேறு. காலப்போக்கில் அகதி உழைப்பாளர்களுக்கு பிரத்தியேகமான வரி அறவிட்டு அரசு மேலும் வருமானத்தை தேடிக் கொண்டது. ஒரே வேலைக்கு வழக்கமாக சுவிஸ் பிரஜைக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, அகதி உழைப்பாளிக்கு வழங்கும் சம்பளம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசால் சட்டரீதியாக அங்கீகரிக்கப் பட்டது.

நான் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த காலங்களில், ரெஸ்டாரன்ட் வேலைகளுக்கு தமிழர்கள் வேண்டும் என்று பகிரங்கமாக விளம்பரம் செய்வார்கள். சுவிஸ் முதலாளிகள் தமிழ் தொழிலாளிகள் மீது அளவுகடந்த அன்பு காட்டுவதாக, இதைச் சிலர் கருதலாம். ஆனால் உண்மை அதுவல்ல. பெரும்பாலான தமிழ் உழைப்பாளிகளுக்கு மொழித் தேர்ச்சி கிடையாது. அதனால் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வார்கள். அவர்களுக்கு சுவிஸ் தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்தும் எந்த அறிவும் இல்லை. தொழிற்சங்கம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விபட்டிராதவர்கள். இப்படியான அருமையான தொழிலாளர்களை வேறெங்கு தேடினாலும் கிடைக்காது. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள், வந்தவுடனே உள்ளூர் மொழியை பேசக் கற்றுக் கொள்கிறார்கள். தொழிலாளர் நலச் சட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் முதலாளி ஏய்க்க நினைத்தால், எதிர்த்துப் பேசி விட்டு கிளம்பி விடுகின்றனர்.

ரெஸ்டாரன்ட் இல்லாத சுவிஸ் கிராமத்தை காண்பது அரிது. பனிச் சிகரங்களால் சூளப்பட்ட மலைக் கிராமங்களில் வாழ்ந்த சுவிஸ் மக்கள், குளிர்காலத்தில் பட்டினியால் வாடிய காலம் மலையேறி விட்டது. உலகம் முழுவதிலும் இருந்து கறுப்புப் பணத்தை சேர்த்த சுவிஸ் வங்கிகள், தமது பிரஜைகளை நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் தள்ளி விட்டு பணத்தை சுழல விட்டது. அப்போது தோன்றிய உணவுவிடுதிக் கலாச்சாரம் சுவிஸ் பட்டி,தொட்டியெங்கும் பரவியது. அவற்றிற்கான வேலையாட்களை போர்த்துக்கல், ஸ்பெயின், (முன்னாள்) யூகோஸ்லேவியா போன்ற நாடுகளில் இருந்து தருவித்தார்கள். அவர்களுக்கான தொழில் அனுமதிப் பத்திரம் வருடத்திற்கு ஒன்பது மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வசித்திருந்தால், நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் ஒன்பது மாத விசா முறை மூலம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நிரந்தரமாக தங்குவதை தடை செய்திருந்தது.

சுவிட்சர்லாந்தில் அகதிகளைப் பதிவு செய்யும் முறை, அவர்களது சமஷ்டி அரசியலுக்குட்பட்டது. ஜெர்மன் எல்லையோர நகரமான பாசல், பிரெஞ்சு எல்லையில் உள்ள ஜெனீவா போன்ற இடங்களிலேயே, அகதிகளைப் பதியும் மையங்கள் உள்ளன. அங்கிருந்து கன்டொன் (மாநிலம்) தலைநகரங்களுக்கு மாற்றி விடுவார்கள். சமஷ்டி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், அகதிகளை தமது தொழிற்துறை விருத்திக்கு தேவையான உழைப்புச் சக்தியாக கருதுகின்றன. அதற்கேற்றாற்போல் அகதிகளை தொலை தூர மலைக் கிராமங்களுக்கு மாற்றி விடுகின்றன. அங்கிருக்கும் உள்ளூராட்சி சபை எப்பாடு பட்டாவது அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலைக்கு அமர்த்தி விடுகிறது. பல அகதிகளுக்கு இந்த நடைமுறை பிடித்திருந்தது. உழைக்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம் என்ற திருப்தியில் தமது தஞ்ச விண்ணப்பத்தையும் மறந்தார்கள்.

சுவிட்சர்லாந்தில் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக தங்கி தொழில் புரிந்தவர்களுக்கு, நிரந்தர தொழில் அனுமதிப் பத்திரம் வழங்கப் பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட பல தமிழ் அகதிகள், இலங்கைக்கு சென்று உறவினரை சந்தித்து விட்டு வந்தார்கள். தற்போது புதியதோர் பிரச்சினை கிளம்பியது. இலங்கை சென்று வந்த பலர், சுவிஸ் குடிவரவு அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளானார்கள். "அகதித் தஞ்சம் கோரும் பொழுது, இலங்கை திரும்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறியவர்கள், தற்போது எப்படி தாமாகவே சென்று வந்தார்கள்?" போன்ற கேள்விகளால் குடைந்தெடுத்தார்கள். சிலர் தமது உற்றார், உறவினரைக் காண்பதற்கு ஆபத்தை துச்சமென மதித்து சென்றதாக கூறினார். வேறு சிலரோ தாம் பணம் சம்பாதிக்கவே சுவிட்சர்லாந்து வந்ததாக உண்மையை போட்டுடைத்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில், அளவுக்கதிகமான அகதிகளின் வரவும், அதற்கு எதிர்வினையாக தீவிர வலதுசாரிக் கட்சிகளின் எழுச்சியும், கூடவே பொருளாதார பிரச்சினையும், பல அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்க காரணமாகின. அதுவரை தஞ்சம் கோருவதில் அதிக அக்கறை காட்டாத அகதிகள், வக்கீல் செலவு, மேன்முறையீடு என்று அலைய வேண்டியேற்பட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப் பட்ட தமிழ் அகதி ஒருவர் சித்திரவதைக்கு உள்ளானார். சிறிது காலத்தின் பின்னர் அவர் ஜெர்மனி வந்து தஞ்சம் கோரி, அகதியாக அங்கீகரிக்கப் பட்டார். சுவிட்சர்லாந்தில் இருந்த காலத்தில், அவரது வழக்கில் சுவிஸ் அரசு மோசடி செய்த விபரம் ஊடகங்களுக்கு கசிந்தது. இந்த அவமானத்தால் நாணமுற்ற சுவிஸ் அரசு அனேகமாக எல்லா ஈழத் தமிழ் அகதிகளையும் அங்கீகரித்தது. சில காலம் போன பின்னர், பழைய குருடி கதவைத் திறடி கதை தான். புதிய அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவதும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கின்றது.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளில் பலர் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்று விட்டனர். அதுவரையும் சம்பாதித்த பணத்தை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யக் கிளம்பினார்கள். தனியாக வந்தவர்கள் துணையோடு இல்லற வாழ்வில் இறங்கிய பின்னர், அவர்களது தேவைகளும் அதிகரித்தது. சொந்தமாக கார் வேண்டும், வீடு வாங்க வேண்டும், என்று குடித்தனம் நடத்த வந்த இல்லத்தரசிகளும் நச்சரித்தார்கள். இணங்கா விட்டால், "கையாலாகாத" கணவனிடம் இருந்து விவாகரத்து கோரினார்கள். இன்றைய சுவிஸ் தமிழ் சமூகம் சொந்த வீடு, வாகனம் என்று ஒரு பக்கம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் குடும்ப சச்சரவுகள், விவாகரத்துகள், இதய நோய் போன்றனவும் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சனைகளை மறைப்பதற்கு "புகலிட தமிழ்க் கலாச்சாரம்" என்ற மேல்பூச்சு பூசப்படுகின்றது.

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாட்டுடன் ஒட்டாமல் தாமரையிலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர். புலம்பெயர் மண்ணில் காலூன்றுதல் என்பதன் அர்த்தம், ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என தவறாக வியாக்கியானம் செய்யப்படுகின்றது. பெற்றோரைப் போலவே தவாறான புரிதலைக் கொண்ட இரண்டாம் தலைமுறையினரில் சிலர், ஐரோப்பிய பாணி நாகரீகத்தை எதிர்ப்புக் கலாச்சாராமாக்கிக் கொள்கின்றனர். இன்றைய ஐரோப்பிய சமூகம் பல வழிகளிலும் விழிப்புணர்வு பெற்று வருகின்றது, சுவிஸ் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள ஊடகங்கள் சினிமா தொழிற்துறை பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லி மக்களை மாயைக்குள் வைத்திருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்கின்றன. இதனால் இனிக்க இனிக்க பேசும் வியாபாரிகளிடம் மக்கள் ஏமாறுவது குறைவு. ஆனால் தமிழர்களின் வீடுகளைத் தேடிவரும் ஐரோப்பியத் தமிழ் ஊடகங்களின் பார்வைப்புலன் கோடம்பாக்கத்திற்கு அப்பால் விரிவடைவதில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆடம்பர வாழ்வுக்கான அவாவை, காப்புறுதி நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றன. சொத்துகளை சேர்த்து விட்டால் மட்டும் போதுமா? அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டாமா? அதற்காக காப்புறுதி நிறுவனங்கள் வீட்டுப் படியேறி வருகின்றன. "சுவிஸ் போன எனது பிள்ளைகள் ஒரு வருடத்தில் வீடு வாங்கி விட்டார்கள்." என்று கூறி ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாய்மார் வாழும் நாட்டில் இருந்து வந்தவர்களல்லவா? சுவிஸ் வந்து தொழில் செய்து கையில் கொஞ்சம் காசும் சேர்ந்து விட்டால், வீட்டுக்கடன் எடுத்தாவது சொந்த வீடு வாங்குகிறார்கள். என்னைப் போல இருபது வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து வந்தவர்களில் என்பது வீதமானோர் காணி வாங்கி வீடு கட்டியுள்ளனர். ஒரு புறம், இவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இடைத் தரகர்கள் லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொள்கின்றனர். மறு புறம், கடன் வழங்கும் வங்கிகள் வாழ்க்கை பூராவும் வட்டி கட்ட வைக்கின்றன.

"தமிழர்கள் கடின உழைப்பாளிகள்." என்று புகழுரை வழங்கிய படியே, சுவிஸ் ரெஸ்டாரன்ட் முதலாளிகள் தமிழரின் உழைப்பை சுரண்டி, இன்னொரு ரெஸ்டாரன்ட் போட்டார்கள். தற்போது சுவிஸ் வங்கிகளும் தமிழரின் உழைப்பில் பங்கு கேட்கின்றன. வாங்கிய வீட்டுக்கு கடன், வேறு தேவைகளுக்கென வாங்கிய மேலதிக கடன், என்று ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமை அழுத்திக் கொண்டிருக்கிறது. வங்கிகளும் கேட்கும் தொகையை அள்ளி வழங்குகின்றன. அவர்களுக்கென்ன? கடனைக் கொடுத்து விட்டு, அதேயளவு, அல்லது அதற்கும் மேலான பணத்தை வட்டி என்ற பெயரில் அறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். "கடன் கொடுப்பதன் மூலம் வங்கிகள் காசு உற்பத்தி செய்கின்றன." என்ற பொருளாதார பாடம் இங்கே நிரூபணமாகின்றது.

சுவிட்சர்லாந்து வெளிப் பார்வைக்கு அழகாகத் தான் தோன்றுகிறது. உலகெங்கிலும் இருந்து வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளை கவர்ந்திழுக்கிறது. ஆனால் அது உள்ளே அழுகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சுவிட்சர்லாந்தை அதிர வைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. சுவிஸ் பொருளாதாரத்தின் முதுகெலும்பான வங்கிகளே, தேசத்தின் அழிவையும் தேடித் தரவிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் குறைந்த வரி வீதத்தை பயன்படுத்தி, ஐரோப்பிய பணக்காரர்கள் தமது கறுப்புப் பணத்தை வைப்பிலிட்டு வந்தார்கள். தற்போது பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் காரணமாக கறுப்புப் பணம் வைப்பிலிட்டோரின் விபரங்களை வெளியிட வேண்டியுள்ளது. G 20 நாடுகளின் மகாநாட்டு தீர்மானங்கள் சுவிட்சர்லாந்தின் தலை மீது இடியாக இறங்கியுள்ளது.

இது ஒரு புறமிருக்க, அமெரிக்காவில் நடந்ததைப் போல, தகுதியில்லாதவர்க்கெல்லாம் வங்கிக்கடன், வீட்டுக்கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கடன் எடுத்தவர்கள் எல்லோரும் ஒழுங்காக தவணை முறையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவைப் போலவே இந்தக் கடன்களை எடுத்தவர்களில் பெரும்பான்மையானோர், அடிமட்ட தொழில்களை செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பொருளாதார பிரச்சினை வரும் பொழுது, வராக் கடன்கள் அதிகரிக்கும். அந்த நெருக்கடி மாயப் பொருளாதார கண்ணாடி மாளிகையை நொறுங்கச் செய்யும். அப்படியான ஒரு கலியுகம் தோன்றினால், சுவிட்சர்லாந்தில் வாழும் புகலிடத் தமிழரின் நிலை திரிசங்கு சொர்க்கமாகி விடும். சுவிஸ் அரசியல்வாதிகள் சிலர் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு வைத்திருக்கிறார்கள். தீவிர வலதுசாரிகள் பொதுத் தேர்தலுக்கு வைக்கப்பட்ட விளம்பரத் தட்டியில், வெள்ளாடுகள் சேர்ந்து ஒரு கருப்பு ஆட்டை உதைத்து விரட்டுவது போல வரைந்திருந்தார்கள். இன்று சுவிஸ் வெள்ளாடுகளின் செல்வந்த வாழ்வுக்கு கருப்பு ஆடுகளின் உழைப்பு தேவைப்படுகின்றது. அதனால் இப்போதைக்கு யாரும் உதைத்து விரட்ட மாட்டார்கள்.

(முற்றும்)


பகுதி : ஒன்று
சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

Thursday, July 22, 2010

சுவிஸ் பனியை உருக்கும் தமிழரின் வியர்வை

(பகுதி : ஒன்று)

ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழத் தமிழ் அகதிகள் வரத் தொடங்கி மூன்று தசாப்தங்களாகி விட்டன. எனது புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், இருபது வருடங்களைக் கடந்து விட்டது. இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் கால் பதித்த இடங்களை அண்மையில் சென்று பார்த்தேன். ஒரு சில அகதி முகாம்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் தமிழ் அகதிகள் இலங்கையில் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் தப்பி வந்த அகதிகளையும் சந்தித்தேன். அவர்கள் தம்மை அணுகும் அனைவரையும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். யாருடனும் மனம் விட்டு பேச அஞ்சுகிறார்கள். தாயகத்தின் கசப்பான அனுபவங்களை நேசில் சுமந்த வண்ணம் பிழைப்பதற்கு வழி தேடி அலைகின்றனர். அகதிகளுக்கான வேலை வாய்ப்பு இப்போதெல்லாம் முன்னரைப் போலல்ல. அங்கீகரிக்கப்படாத வரை சட்டப்படி வேலை செய்ய முடியாது. அதனால் தமிழ் முதலாளிகளின் கடைகளில் ஆயிரம் பிராங்குகளுக்கு வேலை செய்கிறார்கள். இது அந்நாட்டின் அடிப்படை சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி.

இருபது வருடங்களுக்கு முன்னர் வந்த பல தமிழ் அகதிகள், இன்று பிரஜாவுரிமையும் பெற்று விட்டார்கள். தனி மரமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்று குடும்பத் தலைவனாக பொறுப்புகளை தலையில் சுமந்த படி திரிகின்றனர். பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். அல்லது அப்படிக் காட்டிக் கொள்கின்றனர். காணி வாங்கி வீடு கட்டுகின்றனர். குடும்பத்திற்கு இரண்டு கார் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இருந்து புலம்பெயரும் போதே செல்வந்த ஐரோப்பிய கனவுலகத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என கருதிக் கொண்டார்கள். "ஐரோப்பாவில் எல்லோரும் சொந்த வீட்டில் வாழ்கிறார்கள், எல்லோரும் கார் வைத்திருக்கிறார்கள்." எல்லோரும் என்பது எந்தவொரு புள்ளிவிபரத்தினதும் அடிப்படையிலும் சொல்லப்படுவதல்ல.

தெற்காசிய நாடுகளில் பல தாழ்த்தப்பட்ட சாதியினரும் முதலாளித்துவ வளர்ச்சியினூடே வசதிகளைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். அதைக் காட்டியே மேலெழுந்தவாரியாக சாதியம் மறைந்து விட்டதாக கருதிக் கொள்வதைப் போன்றே, மேலை நாடுகளிலும் நிலைமை மாறியுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் மிக மோசமான இனவாதம் மறைபொருளாக உள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. பொதுப் போக்குவரத்துகளில் கருப்பனுக்குப் பக்கத்தில் உட்கார மறுக்கும் வெள்ளையர்களைக் கொண்ட நாடு இது. இளம் சமுதாயத்தினர் மத்தியில் நிறவெறி வெளிப்படையாக காணப்படாத போதிலும், பல பொது இடங்களில் நான் கண்கூடாக கண்ட அனுபவம் அது. அப்படிப்பட்ட சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தமக்கென சொந்த வாகனத்தில் பயணம் செய்வது இனத் தூய்மையை பாதுகாக்க உதவுகின்றது.

ஈழத் தமிழர்கள் செய்யும் தொழில்களைப் பொறுத்த வரை, இருபது வருடங்களுக்குள் பெரிய மாற்றமெதையும் நான் காணவில்லை. முதலாம் தலைமுறை தமிழ் குடியேறிகள், தற்போதும் ரெஸ்டாரன்ட் சமையலறை உதவியாளர்களாக, அல்லது வெதுப்பக (பேக்கரி) தொழிலாளிகளாக பணி புரிகின்றனர். சுவிஸ் முதலாளிகள் கறுப்புத் தமிழரை ரெஸ்டாரன்ட் உள்ளேயும், வெள்ளையின ஐரோப்பியரை வரவேற்பாளர்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனர். பல்லினத்தவரும் வருகை தரும் பெரும் நகரங்கள் விதிவிலக்காக இருக்கலாம். நான் சுவிசில் இருந்த காலங்களில் நன்றாக மொழிபேசும் சிலர், வெயிட்டர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினார்கள். அப்போது ரெஸ்டாரன்ட் முதலாளிகள் கூறியதாவது: "நான் தகுதியைப் பார்த்து உங்களை வேலைக்கு எடுக்கலாம். ஆனால் ஒரு கருப்பன் உணவு பரிமாறினால், சுவிஸ்காரர்கள் வரமாட்டார்கள்!"

இருபது வருடங்களுக்கு பின்னர் நான் பார்த்த சுவிட்சர்லாந்து நிறவாதமற்ற நாகரீகமடைந்த நாடாக மாறிவிடவில்லை. சுவிஸ் கல்வி கற்ற இரண்டாம் தலைமுறை தமிழ் இளையோர் சிலர் அரசியலில் ஈடுபட்டு மாநில அவைக்கு கூட தெரிவாகியுள்ளனர். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஒரு ஆப்பிரிக்கரின் கதையைக் கேட்டால், இனவாதம் எங்கே எல்லை வகுத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளின் சமூகசேவையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட பின்னரே, அவர் பாராளுமன்ற உறுப்பினரானார். அவர் இன்று "கள்ள வாக்கு" போட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். சுவிட்சர்லாந்தில் வாக்குச்சீட்டு வீடு தேடி வரும். வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். அந்த சலுகையை பயன்படுத்தி அரசியல் பிரக்ஞை அற்ற வெளிநாட்டவரின் வாக்குகளை தனக்கே போடுமாறு செய்தார், என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கனவான்களின் நாட்டில் வெள்ளையரின் ஊழல்களை கண்டுகொள்ளாத ஊடகங்கள், பூனையை யானையாக்கிக் காட்டிக் கொண்டிருந்தன.

சுவிட்சர்லாந்தில் பணம் சேர்த்த தமிழர்கள் சிலர், தாமே உணவுவிடுதிகளை சொந்தமாக நிர்வகிக்கின்றனர். தரநிர்ணயத்திற்கு பேர் போன சுவிட்சர்லாந்தில், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் சோதனைகளில் அகப்பட்ட உணவுவிடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. முதல் நாள் பொரித்த சமையல் எண்ணையை கொட்டாமல் வைத்திருந்தால் கூட இமாலயத் தவறாகலாம். அதே நேரம் நான் முன்பு வேலை செய்த உணவுவிடுதி ஒன்றில், ஒரு வாரத்திற்கு முன்பே இறுதிப் பாவனைத் தேதி முடிவடைந்த இறைச்சியை குளிரூட்டியில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். உணவுண்ண வருபவர்களுக்கு சமையலறையில் நாட்பட்ட பதார்த்தங்கள் சமைக்கப்படுவது தெரியாது. வெள்ளையின சுவிஸ்காரரான அந்த ரெஸ்டாரன்ட் முதலாளிக்கு தெரிந்தவர்கள் உள்ளூராட்சி சபையில் இருப்பதால், எந்தவொரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியும் எட்டியும் பார்ப்பதில்லை.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, சுவிட்சர்லாந்துக்கு நேரே வந்த ஈழத் தமிழர்கள் மிகக் குறைவு. அனேகமாக பிரான்ஸ், ஜெர்மனி போன்ற அயல்நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியவர்களே பின்னர் சுவிட்சர்லாந்து நோக்கி படையெடுத்தார்கள். சுவிசில் கொடுக்கப்படும் ஊதியம் அதிகம் என்ற செய்தியே, அவர்களை கவர்ந்திழுத்த காந்தமாகும். அன்று முதல் இன்று வரை சுவிட்சர்லாந்தில் ஐரோப்பாவிலேயே அதிக சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் அதே நேரம் ஐரோப்பாவிலேயே வாழ்க்கைச் செலவு கூடிய நாடும் அது தான். குப்பை கொட்டுவதென்றாலும் அதற்கென அதிக விலையில் விற்கப்படும் பைகளை வாங்கித் தான் வீச வேண்டும். வலது கையால் கொடுப்பதை, இடது கையால் வாங்கும் கண்கட்டி வித்தை தெரிந்தவர்கள் சுவிஸ் ஆட்சியாளர்கள்.

(தொடரும்)

Monday, July 05, 2010

இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா

உலகில் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த "ஐக்கிய அமெரிக்க நாடுகளை" விட பரப்பளவால் இரண்டு மடங்கு பெரியது. அந்தக் கண்டத்தை சேர்ந்த 500 மில்லியன் மக்கட்தொகை ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுவதால் "லத்தீன் அமெரிக்கா" என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிகள் பண்டைய லத்தீன் மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அந்தப் பெயர் வந்தது. சரியான அர்த்தத்துடன் தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டதா? வாஷிங்டனை தலைநகராகக் கொண்ட அமெரிக்கா என்ற 50 மாநிலங்களின் குடியரசில், நாற்பது மிலியன் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது இன்று உலகில் ஐந்தாவது ஸ்பானிய மொழி பேசும் நாடு! மியாமி, நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகின்றது. இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள். கனடாவில் லத்தீன் அடிப்படையில் அமைந்த இன்னொரு மொழியான பிரெஞ்சு பேசும் மக்கள் தனியாக "கெ பெக்" (Québec ) என்ற மாநில சுயாட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் லத்தீன் மொழிகள் மட்டுமே பேசப் படுகின்றனவா? கயானாவிலும் சிறிய கரீபியன் தீவுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழி. சுரினாமில் நெதர்லாந்து உத்தியோகபூர்வ மொழி. இவை லத்தீன் அடிப்படை அற்ற, ஜேர்மனிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். சிலி நாட்டில் கணிசமான அளவு ஜெர்மானியர்கள், தனிமைப்படுத்தப் பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றார்கள். அவை இன்றும் "குட்டி ஜெர்மனிகளாக" காணப்படுகின்றன. பிரேசிலில் சாவோ பவுலோ (São Paulo) நகரில் வாழும் சில மில்லியன் ஜப்பானியர்கள், இன்றைக்கும் தமது ஜப்பானிய மொழியை மறக்கவில்லை. பெரு நாட்டு பொருளாதாரத்தில், ஜப்பானிய வணிகர்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. அங்கே புஜிமோரி (புலம்பெயர்ந்தாலும் பெயரை மாற்றவில்லை) என்ற ஜப்பானியர் ஒரு தசாப்தமாக ஜனாதிபதியாக வீற்றிருந்தார். பதவியிழந்ததும் பாட்டன் மாரின் தாயகத்தில் சென்று தஞ்சம் புகுந்தார். ஆர்ஜன்தீனாவில் ஒரு மில்லியன் ஆங்கிலேயர்கள், விக்டோரியா இராணி காலத்து தொடர்புக்கு சாட்சியாக வாழ்கின்றனர். புவனொஸ் ஐரெஸ் (Buenos Aires ) நகரில் சாயங்கால தேநீர் விருந்தில் "புவனஸ் அயர்ஸ் ஹெரால்ட்" நாளேட்டுடன், ஆங்கிலம் பேசுவதை இன்றைக்கும் பார்க்கலாம்.

அமெரிக்கா என்ற புதிய பூமியை கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புறம் இருக்கட்டும். யார் "லத்தீன் அமெரிக்கா" என்ற சொல்லைக் கண்டுபிடித்தார்கள்? நிச்சயமாக 19 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் அரசியல் சொல்லாடலாக இருக்க வேண்டும். வட அமெரிக்கக் கண்டத்தில் பெருமளவு பகுதிகளை கபளீகரம் செய்த ஆங்கிலேயரை எதிர்க்க முடியாமல் போர்க்களத்தில் தோல்வியுற்றனர் பிரெஞ்சுக்காரர்கள். லூசியானா (அமெரிக்கா), கெபேக் (கனடா) என்று தமது உடன்பிறப்புகளின் மாநிலங்களையும் பறிகொடுத்தார்கள். பிரெஞ்சு அரசுக்கு கொள்கை வகுத்துக் கொடுத்த அறிவுஜீவிகளின் மனதில் தோன்றிய தீர்க்கதரிசனம் வரப்போகும் உலகை மாற்றியது. வட அமெரிக்க ஆங்கிலேயரின் பலத்தை சமன் செய்ய தென் அமெரிக்காவை முன் நிறுத்தினார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வைத்த பெயரான லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

"கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்." உலக நாடுகள் எங்கும் பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம். அமெரிக்கா ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை. கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு. கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரே ஆசியாவில் இருந்து (இன்றைய ரஷ்யாவின் கிழக்கு எல்லை) மக்கள் அமெரிக்கா வந்து குடிபுகுந்துள்ளனர். தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆசிய இனக்குழுக்கள், நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தனர். மாபெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியுள்ளனர். இந்த நாகரீங்களில் பல, கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் கால் பதிப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஸ்காண்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள் குடியேறியுள்ளனர். சிறு தொகையினரே என்றாலும், கனடாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட "நியூ பவுன்ட்லான்ட்"(New Foundland ) எனுமிடத்தில் தமது தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். இதைவிட எழுதப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறாத பினீசிய(லெபனான்), சீன கடலோடிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசப்படுவதில்லை. அப்படியானால் கொலம்பஸ் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்?

500 வருட கால "ஐரோப்பிய மையவாத அரசியல்" கொலம்பஸின் உதவி இன்றி உயிர் பெற்றிருக்காது. இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பியரின் அரசியல் ஆதிக்கம் உலகை அச்சுறுத்துகிறது. அதற்கெல்லாம் அவர்கள் கொலம்பஸிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். ஆம், ஐரோப்பியர்கள் உலகை ஆள வழி திறந்து விட்டவர் தான் கொலம்பஸ். அன்றைய ஸ்பானிய இராணி இசபெல்லா தனது நகைகளை விற்று கொலம்பஸின் கடற்பயணத்திற்கு நிதி சேர்த்தார். அவர் கண்களில் கனவுகள் இருந்தன. கடல் கடந்து புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் கனவு. நூறாண்டுகளுக்கு முன்பு உதிரிகளாக உலகை சுற்றிய கடலோடிகள் எழுதிவைத்த குறிப்புகளுடன் வந்தார், ஜெனோவாவை (இன்று, இத்தாலி) சேர்ந்த கொலம்பஸ். "செல்வந்த நாடான இந்தியாவில் இருந்து சரசேனர்கள் (அரேபிய முஸ்லிம்கள்) திரவியங்களை கொண்டு வந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். நாம் நேரடியாக வியாபாரத்தில் இறங்க வேண்டுமானால் கடல் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்." கொலம்பஸின் திட்டம் இசபெல்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது.

கஸ்திலிய நாட்டு (ஸ்பானியாவின் பழைய பெயர்) கொடியுடன் புறப்பட்ட கொலம்பஸின் கப்பல்கள் பஹாமாஸ் தீவில் தரை தட்டின. ஆரம்பத்தில் தங்கம் கிடைக்கிறதா எனத் தேடினார்கள். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கரீபியன் தீவுகளின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதைப் போல தேடித் தேடி அழைத்தார்கள். இன்றைய உலகம் அதை இனவழிப்பு என்று கூறும். அன்று அதுதான் அரச கொள்கை. கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும் இனவழிப்புக்கு துணை போனது. முதலில் கரீபியன் கடல் பகுதி தீவுகளை சுத்திகரித்தார்கள். பிறகு ஸ்பானியாவில் இருந்து படைகளை தருவித்தார்கள். மத்திய அமெரிக்காவை கைப்பற்ற குறி வைத்தார்கள். இவை அனைத்தும் கொலம்பஸின் காலத்தில் நடந்தவை. கொலம்பஸ் ஒரு கண்டுபிடிப்பாளன் மட்டுமல்ல, கப்பற்படைத் தலைவன், நிர்வாகி... இவ்வாறு மட்டும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கலாம். ஆனால் கூடச் சென்ற கொலம்பஸின் தம்பி ஒரு ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதி. ஆம், கொலம்பஸ் வெறுமனே அமெரிக்காவை கண்டுபிடித்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. படையெடுத்து ஆக்கிரமிக்கவும், அடிமைப்படுத்தவும் வழிகாட்டினான். அதனால் தான் எமது சரித்திரப் பாட நூல்களில் கொலம்பஸிற்கு சிறப்பான இடம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் இனவழிப்புக்கு வித்திட்ட ஒருவர் உதாரண புருஷராக போற்றப்படுகிறார்.

அமெரிக்காவை கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கொலம்பஸ் புறப்படுவதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே, ஸ்பானிய, போர்த்துக்கேய கடலோடிகள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் அருகில் இருந்த தீவுகளை கண்டுபிடித்தார்கள். கனாரி, மடைரா போன்ற தீவுகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆப்பிரிக்காவின் சில கரைகளுக்கும் சென்றார்கள். அங்கு வாழ்ந்த மக்களை சிறைப் பிடித்தார்கள். தாய்நாட்டில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அன்றைய ஐரோப்பாவில் அவர்களிடம் தான் சிறந்த கடற்படை இருந்தது. நவீன கப்பல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் தாயகம் இன்றைய ஸ்பெயின், போர்த்துக்கல்லின் வடக்கே உள்ள ஒரு சிறிய பிரதேசமாக இருந்தது. இபேரிய உபகண்டம் என்றழைக்கப் படும் அந்தப் பகுதியில், பெருமளவு அரேபியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது. உயர்தர கம்பளியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. தொழிற்துறை வளர்ச்சி காணப்பட்டது. வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான கத்தோலிக்கர்களின் புனிதப்போர் அறிவிக்கப் பட்டது. உண்மையான ஆண்டவரைக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தவர்கள், மோசக்கார முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டும் என்றார்கள். வத்திக்கானில் இருந்த பாப்பரசரும் ஆசீர்வாதம் வழங்கினார். வரலாற்றில் அது, இரு மதங்களுக்கு இடையிலான போராக பதியப்பட்டது. உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் அரசியல் பிரச்சாரம் அது. புனிதப் போரை நடத்தியவர்களிடம் கத்தோலிக்க மதவெறி மட்டும் காணப்படவில்லை. அவர்கள் மனதில் பூகோள அரசியல் ஆதிக்கமும், செல்வத்தைக் கொள்ளையிட்டு பொருளாதார முன்னேற்றம் காணும் நோக்கமும் மறைந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மதப் போர்வையால் மூடிக் கொண்டார்கள். மக்களை தம் பின்னால் அணிதிரட்ட மதம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறியது. மதம் மக்களைப் பிரித்தது. போர்க்கள வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

அன்றும் இன்றும் புனையப்படும் பிரச்சாரத்திற்கு மாறாக, அரபு முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் மதப் பிரச்சினை அறவே இருக்கவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும், யூதர்களும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து வந்தனர். கத்தோலிக்கப் படைகள், அரபு முஸ்லிம்களை ஸ்பெயினில் இருந்து அடித்து விரட்டின. ஸ்பெயினிலும், போர்த்துகல்லிலும் ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசர்களின் நாட்டில் முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடம் இருக்கவில்லை. அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அல்லாவிட்டால் கொல்லப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமியப் பேரரசை தோற்கடித்த கத்தோலிக்க ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பிய வல்லரசுகளாக மாறின. அவர்கள் வட ஆப்பிரிக்கா மீதும் படையெடுத்தனர். சில பகுதிகளை தக்க வைத்துக் கொண்டனர். (மொரோக்கோவின் வட கரையை சேர்ந்த செயுத்தா,மெலியா இன்றைக்கும் ஸ்பெயினின் பகுதிகள்.) ஆனால் அவர்களது தொலைநோக்கு முழுவதும் தங்கம் விளையும் புது உலகம் மீதிருந்தது. கொலம்பஸின் பின்னர் மாபெரும் கடற்படையணிகள் அமெரிக்கா என்ற கண்டம் நோக்கி பயணமாகின. அதில் ஒரு பகுதி தான் இந்தியாவிற்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிப்பது. அவர்களுக்கு அதுவரை தடையாகவிருந்த அரேபியரின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. உலகம் ஐரோப்பியருக்காக திறந்து விடப்பட்டது. அடுத்தடுத்து ஆப்பிரிக்கா, ஆசியா, இலங்கை, இந்தியா எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள். ஐரோப்பியரின் காலனிய சாம்ராஜ்யங்களின் கீழ் கொண்டு வந்தார்கள்.

உலகை வெல்லக் கிளம்பிய ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களை மட்டும் குடியேறுவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை ஆண்டவரால் தமக்கு நிச்சயிக்கப் பட்ட பூமியாக கருதிக் கொண்டார்கள். மத்திய அமெரிக்காவில் வந்திறங்கிய ஸ்பெயின் அரச பிரதிநிதிகளும், கத்தோலிக்க பாதிரிகளும் ஆண்டவன் கட்டளையை பறைசாற்றினார்கள். "இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்..." அவர்களின் அறிவிப்பை செவி மடுப்பதற்கு அந்தப் பிரதேசத்தில் எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை.

(தொடரும்)

Saturday, July 03, 2010

பிரிட்டிஷ் - இந்திய தொழிலதிபரின் "தடுப்பு முகாம் நிறுவனம்"


தடுப்பு முகாம்களை லாபம் கொழிக்கும் வர்த்தக ஸ்தாபனமாக நிர்வகிக்கலாமா? இதோ! தடுப்பு முகாம் நடத்தி கோடீஸ்வரரான பிரிட்டனின் சிறிந்த தொழிலதிபர். Businessman of the year?
ராஜேந்திரன் - பிரிட்டனின் வெற்றிகரமான இந்திய வம்சாவழி தொழிலதிபர். ஒரு நாளைக்கு 4000 பவுன்கள் சம்பாதிக்கும் பெருமைக்குரியவர். அவரது வருடாந்த வருமானம் 1.5 மில்லியன் பவுன்கள். Serco என்ற அவுட்சோர்சிங் கம்பெனி அதிபர். அவரது கம்பெனி என்ன செய்கின்றது? ஐக்கிய இராச்சியத்தில் Yarl's Wood , Colnbrook என்ற இரு இடங்களில் தடுப்பு முகாம்களை நிர்வகிக்கின்றது. அந்த தடுப்பு முகாம்களில் அடைபட்டுக் கிடப்பவர்கள், பிரிட்டனில் தஞ்சம் கோரி வந்த அப்பாவி அகதிகள். "பாருக்குள்ளே நல்ல நாடான" பிரிட்டனில் அடைக்கலம் கோரிய குற்றத்திற்காக பெண்களையும், குழந்தைகளையும் அடைத்து வைத்து வருத்தி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கின்றார். சொல்ல மறந்து விட்டேன்... ராஜேந்திரன் ஒரு பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபையை சேர்ந்த விசுவாசமான தேவ ஊழியர். அகதிகளை வருத்தி சேர்த்த லாபப் பணத்தில் ஒரு பகுதியை, ஒரு நல்ல கிறிஸ்தவனாக தனது சபைக்கு கொடுக்கிறார். (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்)

தொழிலதிபர் ராஜேந்திரனுக்கும், அவர் நடத்தும் சிறைமுகாமில் இருப்பவர்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். ராஜேந்திரன் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இந்தியர். அவரது தந்தை ஒரு பிரபலமான வாகன விற்பனையாளர். தென் ஆப்பிரிக்காவில் ஒரு கணக்காளராக பணியாற்றிய ராஜேந்திரன், நெல்சன் மண்டேலா விடுதலையாவதற்கு இரு வருடங்களுக்கு முன்னர் பிரிட்டன் வந்து விட்டார். இன்று அவரது நிறுவனம் ஐரோப்பா, ஆசியா என்று கிளை பரப்பிய போதிலும், தனது தாயகமான ஆப்பிரிக்காவில் எந்த முதலீடும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் முதலாவது ஜனநாயக தேர்தலில் நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர், அவர் தனது தாய்நாட்டை எட்டியும் பார்க்கவில்லை. அதற்கு காரணம் அவரது குடும்பத்தினரின் கடந்த கால அரசியல் ஈடுபாடு. அன்று தென் ஆப்பிரிக்காவில் இருந்த பெந்தெகொஸ்தே சபைகள் வெள்ளை நிறவெறி (Apartheid) அரசுக்கு ஆதரவளித்து வந்தன. ஆச்சாரமான பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களான ராஜேந்திரன் குடும்பத்தினரும் அத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். பொதுவாக அரசியலில் ஆர்வம் இல்லாதது போல காட்டிக் கொள்ளும் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்கள் , இது போன்ற சந்தர்ப்பங்களில் தம்மை வெளிப்படுத்துகின்றார்கள்.

ராஜேந்திரன் உள்ளூர் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபைக்கு தாராளமாக நன்கொடை வழங்குகிறார். பிற மக்களின் துன்பத்தில் லாபம் சம்பாதித்த ஒருவர் எப்படி கிறிஸ்தவ நன்னெறிகளை கடைப்பிடிக்கிறார்? ராஜேந்திரன் தனது செர்கோ நிறுவனத்தை வீடு மாதிரி கருதுவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். வருடம் ஒன்றரை மில்லியன் லாபம் சம்பாதிக்கும் ஒருவரால், ஏன் தடுப்பு முகாமில் (மன்னிக்கவும், வீடு) உள்ள வசதிக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை? அவரது தடுப்பு முகாம்களில் அழுகிய உணவு கொடுப்பது, நிறவெறி வசவுகள், காவலர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண நிகழ்வுகள். எத்தனையோ தடவை, கொடுமை தாங்க முடியாத அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மனிதர்களின் துன்பத்தில் லாபம் சம்பாதிக்கும் ராஜேந்திரன் கொடுக்கும் வருமானத்தில் பத்து வீதத்தை, மனச்சாட்சியற்ற பெந்தெகொஸ்தே சபை வாங்கிக் கொள்கின்றது. இத்தகைய நற்பண்புகள் தான், ராஜேந்திரனை "இந்த வருடத்திய சிறந்த தொழிலதிபர்" ஆக்குகின்றன. (ஆமென்)


பிரிட்டிஷ் தடுப்புமுகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த அகதி ஒருவருடனான நேர்காணல்