Monday, December 04, 2023

பாலகுமார் ஏன் புலியானார்?

 


ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமாரை, "புலிகள் இயக்க உறுப்பினர்" என்று மே17 இனவெறி லும்பன்கள் அயோக்கியத்தனமாக திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச்சாயம் பூசுவது வேண்டுமென்றே அவரை சிறுமைப்படுத்துவது மட்டுமல்ல, எதிரிக்கு காட்டிக் கொடுக்கும் துரோகத்தனமும் ஆகும். போர் முடிந்த பின்னர் இராணுவத்திடம் அகப்பட்ட பாலகுமாரையும், மகனையும் "விட்டு விடாதீர்கள்! அவர்களும் புலிகள் தான்!!" என்று காட்டிக் கொடுக்கும் வேலையை தான் மே17 துரோகக் கும்பல் செய்கிறது.

ஒரு காலத்தில் 5 பெரிய ஈழ விடுதலை இயக்கங்கள் ஈழத்தில் இயங்கின. இவற்றில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் மலையகத்திலும் இயங்கியது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை கறாராக பின்பற்றிய ஈரோஸ் உறுப்பினர்களின் அரசியல் அறிவு காரணமாக ஏனைய இயக்கங்களினாலும், பொது மக்களினாலும் எப்போதும் மதிக்கப் பட்டனர்.

1984 ம் ஆண்டு சென்னையில் EROS, EPRLF, TELO ஆகிய 3 இயக்கங்கள் ஒன்றிணைந்து ENLF என்ற கூட்டமைப்பாக இயங்குவதற்கு முடிவு செய்தனர். இதில் இணைய வருமாறு PLOTE, LTTE ஆகிய இயக்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அன்று அந்த இரு இயக்கங்களும் "பரம்பரைப் பகைமை" பாராட்டி வந்தன. அதனால் ஒன்று வந்தால் மற்றது வராது என்ற நிலைமை இருந்தது. நீண்ட கால இழுபறிக்குப் பின்னர் 1985 ம் ஆண்டு LTTE வந்து இணைந்து கொண்டது. அப்போது இயக்க தலைவர்கள் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அடுத்த வருடம், 1986 ம் ஆண்டு, "தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றிய" ENLF அமைப்பு இறுதி மூச்சை விட்டது. அதற்கு காரணம் தம்மோடு ஒன்றாக இருந்த TELO இயக்கத்தை, LTTE முற்றாக அழித்தொழித்து விட்டிருந்தது. அதன் தலைவர் சிறிசபாரத்தினமும் நிராயுதபாணியாக படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு EPRLF தடை செய்யப்பட்டது. 1990 ம் ஆ‌ண்டு, அதன் தலைவர் பத்மநாபா சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் ஊடுருவிய புலிகளால் படுகொலை செய்யப் பட்டார்.

இவ்வாறு ENLF கூட்டமைப்பில் இருந்த ஏனைய இயக்கங்கள் அழிக்கப் பட்டு, அவற்றின் தலைவர்களும் படுகொலை செய்யப் பட்ட பின்னர் எஞ்சியது ஈரோஸ் அமைப்பும், அதன் தலைவர் பாலகுமாரும் மட்டுமே.

மீண்டும் ஒரு சகோதர யுத்தத்தை தவிர்ப்பதற்காக, பாலகுமார் புலிகளுடன் இணக்கமாக நடந்து கொண்டார். புலிகளும், ஈரோஸும் மோதிக் கொண்டால் இரண்டு பக்கமும் மரணிக்கப் போவது தமிழ் இளைஞர்கள் தான். உண்மையில் பாலகுமார் எவ்வளவு விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் திருப்தி அடையாத புலிகள் இறுதியில் "மகாபாரதக் கதையில் கர்ணனிடம் கவச குண்டலங்களை யாசித்த" மாதிரி, ஈரோஸ் இயக்கத்தை கலைத்து விட்டு தம்மோடு சேருமாறு உத்தரவிட்டனர். அன்று பாலகுமாருக்கும் வேறு வழியிருக்கவில்லை. புலிகளை எதிர்த்துக் கொண்டு இயங்க முடியாது. TELO வுக்கு நடந்தது தான் EROS க்கும் நடக்கும். ஒரே நாளில் அழித்து விட்டு "சமூக விரோத ஒட்டுக்குழுவை அழித்தோம்..." என்று அறிக்கை விட்டிருப்பார்கள். அதிர்ச்சியில் உறைந்த மக்களும் ஆயுதங்களுக்கு பயந்து புலிகள் சொல்வதை வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

ஆகவே அன்று ஒரு சூழ்நிலைக் கைதியாக இருந்த பாலகுமார், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிது காலம் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். அவருக்கு "மெய்ப்பாதுகாவலர்களாக" சில புலிப் போராளிகள் நியமிக்கப் பட்டனர். உண்மையில் பாலகுமார் என்ன செய்கிறார் என்று கண்காணிக்கவும், உளவு பார்ப்பதற்காகவும் கூட நியமிக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் பாலகுமாருக்கு வேறு தெரிவு இருந்திருக்குமா? ஒரு கூண்டுக் கிளி மாதிரித் தான், அன்று புலிகளின் வீட்டுக் காவலில் இருந்த பாலகுமாரும் நடந்து கொண்டார். அதற்காக அவரை ஒரு புலி உறுப்பினர் என்பது அபத்தமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நல்ல வேளை, இறுதியில் பாலகுமார் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டார். அதனால் அவர் தியாகியாகி விட்டார். ஒரு வேளை அவர் புலிகளால் கொல்லப் பட்டிருந்தால் துரோகியாக்கப் பட்டிருப்பார்! விசித்திரமான உலகம்!

Saturday, December 02, 2023

தயவுசெய்து ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசாதீர்கள்!

 

தோழர் வே. பாலகுமாரின் எழுத்துக்களை தொகுத்து நூலாக வெளியிட்டமை நல்ல விடயம். ஆனால், சுமார் 15 வருடங்களாக ஈழப் புரட்சி அமைப்பு (EROS) என்ற மார்க்சிய லெனினிஸ இயக்கத்தின் தலைவராக இருந்த ஒருவரை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் "சிறப்பு உறுப்பினர்" என தரம் தாழ்த்தி அவமானப் படுத்தி இருக்கத் தேவையில்லை. இது ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரத்தை சிறுமைப்படுத்தியதாகவே கருத இடமுண்டு. அநேகமாக விற்பனையை நோக்கமாக கொண்டு அவ்வாறு தலைப்பிட்டிருக்கலாம்.

வே. பாலகுமார் கடைசி வரையில் ஒரு புலி உறுப்பினராக இருக்கவில்லை. அவர்களும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் புலிகளுக்கு ஆதரவாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அது மட்டுமல்ல இறுதி வரை புலிகள் மீது விமர்சனங்களை கொண்டிருந்தார். போரின் இறுதிக் கட்டத்தில், முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில் பிரபாகரனை சந்தித்து பேசிய பாலகுமார் குழுவினர், பொது மக்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக போர் முடிவுகளை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு 300 திரைப்பட கேசட் கொடுத்து தனது முடிவு என்னவென தெரிவித்தார். "தற்கொலைப் பாதையை நோக்கி செல்கிறார்கள்" என்று நம்பிக்கைக்குரிய சிலரிடம் வருத்தத்துடன் சொல்லி இருக்கிறார்.

இறுதிக் காலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற பாலகுமார் குடும்பத்தினர் நந்திக் கடலில் புலிகளிடம் பிடிபட்டு திருப்பி அனுப்ப பட்டனர். கடைசியில் போர் முடிந்து புலிகளின் தலைவர்களும் சரணடைந்த நேரத்தில் தான் பாலகுமாரும், மகனும் இராணுவத்தில் அகப்பட்டனர். அதனால் இராணுவம் பாலகுமாரையும் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதி இருக்க வேண்டும். அதற்குப் பிறகு எந்த தகவலும் தெரியாத படியால் இராணுவம் கொன்றிருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது.

பிற்குறிப்பு: 
ஈரோஸ் பாலகுமாருக்கு புலிச் சாயம் பூசும் அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவும்.

Thursday, November 02, 2023

பாசிஸ்டுகளால் பாழாகும் யாழ் பல்கலைக்கழகம்! பிற்போக்கு பழமைவாதிகளின் கழகம்!!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருள்லிங்கத்தின் கருத்தரங்கம், மாணவர் போர்வையில் இருந்த பாஸிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் நடக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு தமிழ் அரசியல் ஆர்வலரின் கருத்து சுதந்திரத்தை தடுத்த பாஸிஸ்டுகளின் செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.

அதற்கு சொல்லப்படும் ஒரேயொரு காரணம் இவர் முன்பு புலிகளை எதிர்த்து பேசியுள்ளார் என்பது தான். அதாவது புலிகளை பாஸிஸ்டுகள் என்று சொல்லி விட்டாராம். இன்று புலி விசுவாசிகளாக காட்டிக் கொள்பவர்கள் தமது செயல்கள் மூலம் தாமே பாஸிஸ்டுகள் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

இது யாழ்ப்பாண "அறிவுஜீவி"(?)களின் பழமைவாத பிற்போக்குத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றுள்ள யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு கருத்தரங்கில் படு பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதை எல்லாம் கைதட்டி இரசித்த மாணவர்கள் முற்போக்கான கருத்துக்களுக்கு செவி கொடுக்க மறுத்து தடைசெய்துள்ளமை மாணவர் சமுதாயத்திற்கே இழுக்கு. இவர்கள் தான் நாளைக்கு நிர்வாகிகளாக, அதிகாரிகளாக பதவிகளில் அமரப் போகிறவர்கள். பழமைவாத பிற்போக்குவாதிகள் அதிகாரத்தில் இருந்தால் தமிழினம் எப்படி முன்னேறும்? நிச்சயமாக அது நாகரிகத்தில் பின்தங்கிய இனமாகத் தான் இருக்கும்.

வெளிப்படையாக இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்துவோருக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறியுள்ள யாழ் பல்கலைக்கழகம், இனவாதிகளுக்கு எதிராக போராடி மக்களை ஒன்றுபடுத்தும் முற்போக்காளர்களை பேச விடாமல் தடுத்தமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு பாசிச அடக்குமுறை தான்.

இத்தாலியில் முசோலினி தலைமையிலான பாஸிஸ்டுகளும், ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஸிகளும் செய்த அதே வேலையை தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் போர்வையில் உள்ள பாஸிஸ்டுகளும் செய்துள்ளனர். குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஸிஸ்டுகளுக்கு, தமிழினத்திற்கு தலைமை தாங்க எந்த தகுதியும் கிடையாது.

Friday, September 29, 2023

ஏன் 80% ஈழத் தமிழர்கள் தூய தமிழ்ப் பெயர் வைக்கவில்லை?

 

"தாய் மொழியில் பெயர் வைக்க வேண்டும்"- சீமான்.

புலிகளின் காலத்திலும் அப்படி ஒரு சட்டம் இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பிறந்த நிறையப் பிள்ளைகளுக்கு 80% தமிழ்ப் பெயர் கிடையாது.

முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயர் சூட்டவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் 90 களுக்கு பின்னர் பிறந்தவர்களின் பெயரைக் கேட்டுப் பாருங்கள். பெரும்பாலான பெயர்கள் "ஸ், ஷ்" போன்ற சத்தம் வரும் வகையில் எந்த அர்த்தமுமில்லாத பெயர்களாக இருக்கும். ஏனென்றால் 80 களில் அவ்வாறான பெயர்கள் வைப்பது ஒரு நாகரிகமாக கருதப் பட்டது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

புலிகளின் ஆட்சிக் காலத்தில், அவர்களால் ஆளப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களை வைக்க வேண்டுமென்பது அவர்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக தூய தமிழ்ப் பெயர்களின் பட்டியல் கொண்ட நூல்களும் வெளியிட்டனர். அது மட்டுமல்ல தமது தமிழீழ வைப்பகத்தில் குழந்தையின் பெயரில் கணக்குத் தொடங்கி 500 ரூபா வைப்பிலிடுவதாகவும் அறிவித்தனர்.

இருப்பினும் புலிகளின் வேண்டுகோளை (கட்டாயம் அல்ல) ஏற்றுக் கொண்டவர்கள் மிக மிகக் குறைவு. அநேகமாக புலிகள் மீது விசுவாசமான, அல்லது அடித்தட்டு வர்க்க குடும்பத்தினர் சிலர் தமிழ்ப் பெயர் வைத்தனர். ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பது தான் உண்மை.

இதற்கு பின்வரும் 3 காரணங்களை குறிப்பிடலாம்:

1. முன்னர் சொன்ன மாதிரி தமிழ்ப் பெயர் வைப்பது "நாகரிகம் அல்ல" என நினைத்தனர். அதற்கு மாறாக எண் சாஸ்திரப் படி, சமஸ்கிருத ஒலியுடன் பெயர் வைப்பதே நாகரிகம் என நம்பினார்கள். இந்தப் போக்கு புலிகளின் கட்டுப்பாடு வருவதற்கு முன்னரே இருந்து வந்தது. இப்போதும் பரவலாக உள்ளது.

2. பலர் தவறாக நினைப்பது மாதிரி, அல்லது அரசியல்வாதிகள் சித்தரிப்பது மாதிரி, அரசியல்ரீதியாக பெரும்பாலான ஈழத் தமிழர்கள் "மொழிவெறியர்களோ" அல்லது "மொழிப் பற்றாளர்களோ" கிடையாது. ஆரம்ப காலத் தமிழ்த்தேசிய இயக்கத்தில் பிரிட்டிஷ் காலனிய விசுவாசம், அல்லது ஆங்கில மொழி மோகம் அதிகமாக இருந்தது. சுருக்கமாக, சிங்கள ஆளும் வர்க்கத்துடனான அதிகாரப் போட்டியின் விளைவாக எழுந்தது தான் ஈழத் தமிழ்த்தேசியம். புலம்பெயர்ந்த நாடுகளில் அடையாளம் தேடும் கலாச்சார மறுமலர்ச்சியுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. புலம்பெயர்ந்து தமிழ் வளர்ப்பவர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் வைப்பதில்லை. மிகத் தீவிரமாக புலிகளை ஆதரிக்கும் குடும்பங்களிலும் இது தான் நிலைமை. தமிழ்ப் பெயர் மிக அரிது.

3. ஈழத்தமிழ் சமூகத்தில் தமிழ்ப் பெயர்கள் வைப்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்று. அநேகமாக தி.க., தி.மு.க. வினரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள் மட்டுமே தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டினார்கள். அது வரையில் இந்து மத தெய்வங்களின் பெயரை சூட்டும் வழக்கம் பொதுவாக இருந்தது. யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில், குறிப்பாக ஆதிக்க சாதியினர் எந்தளவு தூரம் மிகத் தீவிரமாக திராவிட இயக்கத்தை எதிர்த்து வந்தனர் என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அவர்களது வாரிசுகள் இப்போதும் திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். அதனால், ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர்கள் தமிழ்ப் பெயர் வைப்பதை ஒரு "திராவிட ஊடுருவலாக" கருதி நிராகரித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இப்போது வருவார்கள். "புலிகள் அது செய்தார்கள்... இது செய்தார்கள்..." என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். இயக்கத்தில் போராளிகளுக்கு தமிழ்ப் பெயர் வைத்ததை எடுத்துக் காட்டுவார்கள். அது பேச்சு மொழியில் "இயக்கப் பெயர்" (nom de guerre) என்று அழைக்கப் படும். அதாவது, உலகில் எந்த நாட்டிலும் தலைமறைவாக செயற்படும் ஆயுதமேந்திய அமைப்பினர் ஒரு மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம். அதைப் பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. சாதாரண பொது மக்கள் தமக்குப் பிறந்த பிள்ளைகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள் என்பது தான் கேள்வி.

இதை நிரூபிக்க அதிக சிரமப் பட வேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் சொந்தப் பெயரில் கணக்கு வைத்துள்ள இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தமிழ்ப் பெயர் உள்ளது? விரல் விட்டு எண்ணலாம். இன்று முதல் அவதானித்துப் பாருங்கள்.

Monday, September 25, 2023

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது!

 

"ஆர்மீனிய ஈழம்" முடிவுக்கு வருகிறது! 

ஏன் தனிநாடு ஒருபோதும் சாத்தியமில்லை?

 பகுதி - 1 



சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணங்களில் ஒன்றாக பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை மட்டும் வைத்துக் கொண்டு, "பார்த்தீர்களா? உலகில் தேசிய இனப் பிரச்சினை தான் பிரதானமானது... தேசியவாதம் தான் நிரந்தரமான சித்தாந்தம்..." என்று சிலர் அரைவேக்காட்டுத்தனமாக பேசிக் கொண்டார்கள். குறிப்பாக தமிழ்த்தேசியவாதிகள் இதை வைத்தே பிரச்சாரம் செய்தனர். உண்மையில் இது மேலெழுந்தவாரியான பார்வை. ஒரு குறுந் தேசியவாத கண்ணோட்டம். அதற்கு சிறந்த உதாரணம் நாகார்னோ- கரபாக் பிரச்சினை.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ஆர்மீனியர்கள் வாழும் நாகார்னோ- கரபாக் பிரதேசம் தன்னாட்சி அதிகாரத்துடன் அஜர்பைஜான் குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தக் காலங்களில் இனப்பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. அஸேரிகளும், ஆர்மீனியர்களும் அயலவர்களாக எந்தவித பிரச்சினையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

சோவியத் காலகட்டத்தில் யாராவது தேசியவாதம், இனவாதம் பேசினால் பிடித்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். தேசியவாத இயக்கம் எதையும் தலையெடுக்க விடவில்லை. ஆனால் கோர்பசேவ் ஆட்சிக்கு வந்த நேரம் நிலைமை மாறியது. பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளித்துவம் வந்தது. அரசியல் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசியவாதிகளுக்கும் (அல்லது இனவாதிகளுக்கு) சுதந்திரம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாகார்னோ- கரபாக்கில் ஆர்மீனிய தேசிய இயக்கம் எழுந்தது. அதற்கு முன்னர் அஸேரி தேசியவாதிகள் பேரினவாத மனப்பான்மையுடன் செயற்பட்டதும், ஆர்மீனிய சிறுபான்மையினரை ஒடுக்கியதும் தூண்டுகோலாக இருந்தது. ஆர்மீனிய சிறுபான்மையினர் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகி, நாகார்னோ- கரபாக் பிரதேசத்தை தமது பிரதேசத்தை தனிநாடாக்க விரும்பினார்கள். அதை ஆர்மீனியாவுடன் இணைக்கவும் விரும்பினர். அதற்கு ஆர்மீனியாவில் இருந்த தேசியவாதிகளும் ஆதரவாக இருந்தனர்.

1991 ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்து குடியரசுகள் தனித்தனி தேசங்கள் ஆகின. புதிதாக சுதந்திர நாடான ஆர்மீனியாவின் ஆட்சிப் பொறுப்பு தேசியவாதிகளின் கைகளில் வந்தது. அதற்குப் பிறகு சொல்லவும் வேண்டுமா? ஆர்மீனிய இராணுவ உதவியுடன் நாகார்னோ- கரபாக் அஜர்பைஜானிடமிருந்து பிரிக்கப் பட்டு, அல்லது விடுதலை செய்யப்பட்டு "தனி நாடு" ஆக்கப் பட்டது. ஆயினும் அந்த தனிநாட்டை உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அந்த பிரதேசத்தின் ஒரேயொரு வெளியுலகத் தொடர்பு ஆர்மீனியவுடனான ஒரு குறுகலான நிலத் தொடர்பு மட்டுமே. அந்த இடத்தில் வாழ்ந்த அஸேரிகள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர்.

அன்று நடந்த போரில் ஆர்மீனிய படைகள் பிரமிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதற்கான காரணம் என்ன? ஆர்மீனிய தேசியவாதிகளிடம் கேட்டால் தமது இனமே உலகில் சிறந்த வீரர்களைக் கொண்டது என்று பழம்பெருமையுடன் கூடிய இனப்பெருமை பேசுவார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு. உலக வல்லரசு நாடான ரஷ்யா, "கிறிஸ்தவ சகோதர நாடு" என்ற பண்டைய கால நட்புறவு காரணமாக ஆர்மீனியாவை ஆதரித்தது. ஒரு பக்கச்சார்பாக ஆர்மீனிய அரசுக்கு ரஷ்ய ஆயுதங்கள் கிடைத்து வந்தன.

ரஷ்யா ஆர்மேனியாவுக்கு உதவுவதற்கு அது ஒரு கிறிஸ்தவ நாடு என்பதற்கும் அப்பால், அதிகம் அறியப்படாத ஒரு பொருளாதார காரணமும் இருந்தது. அஜர்பைஜான் ஜோர்ஜியா ஊடாக துருக்கிக்கு எண்ணை வழங்கும் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது. அது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அஜர்பைஜான் எண்ணை ரஷ்யா ஊடாகத் தான் பிற நாடுகளுக்கு சென்றது. செச்னிய பிரச்சினைக்கும் எண்ணைக் குழாய்ப் பாதை காரணமாக இருந்தமை இன்னொரு கிளைக் கதை.

மறுபக்கத்தில் அன்றைய அஜர்பைஜான் இராணுவ, பொருளாதார ரீதியாக மிகவும பலவீனமான நிலையில் இருந்தது. வாயளவில் மட்டுமே தேசியவாதம் பேசிக் கொண்டு, தமது குடும்பங்களுக்கு செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த, ஆட்சியாளர்களின் ஊழல் காரணமாக இராணுவத்தில் இருந்த வீரர்களுக்கு போரிடும் ஆர்வம் இருக்கவில்லை. அதை விட "சகோதர இனத்தவர் ஆளும்" துருக்கியும் சொல்லிக்கொள்ளும் படியான உதவி எதுவும் செய்யவில்லை.

இத்தகைய காரணங்களினால் தான் நாகார்னோ- கரபாக் நீண்ட காலம் "தனிநாடாக" இருக்க முடிந்தது. ஆயினும் தற்போது முப்பது வருடங்களுக்கு பின்னர் தனிநாடு சாத்தியமில்லை என்ற சுடலை ஞானம் பிறக்க காரணம் என்ன?

(இரண்டாம் பகுதியில் தொடரும்...)