Saturday, July 13, 2024

சாவகச்சேரி மருத்துவமனை ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி. 

அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது. 

சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது. இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. 

இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது. யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது. 

இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை. 

இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது? 

சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன? முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை. "காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள். 

Saturday, May 11, 2024

30 உலக நாடுகள் சேர்ந்து அழித்த 1971 ஜே.வி.பி. எழுச்சி!


"இலங்கையில் 1971 ம் ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து அழித்த ஜேவிபி கிளர்ச்சி!"*  

Revolution in the Air, Sixties Radicals turn to Lenin, Mao and Che  நூலில் எழுதப் பட்டுள்ள வரலாற்றுக் குறிப்பு. 

அந்த காலகட்டத்தில்  "எதிரி நாடுகளாக" கருதப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய உலக வல்லரசு நாடுகள், இலங்கையில் ஒரு  சோஷலிச புரட்சியை நடத்த கிளம்பிய ஜேவிபி இயக்கத்தை ஒன்று சேர்ந்து ஒடுக்கின. சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின. 

இந்த புரிதல் தமிழர்களிடம் இருந்திருந்தால் "2009 ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து இனவழிப்பு செய்தான..." என்று சொல்ல வேண்டிய தேவை வந்திருக்காது. இவர்கள் ஒருநாளும் வரலாற்றில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். 

1971ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தன.  

இந்த வல்லரசுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்தன:

1. இந்தியா எப்போதும் தன்னை இலங்கையின் பாதுகாவலனாக கருதி வந்துள்ளது. அங்கு நடக்கும் அரச கவிழ்ப்பு, மார்க்சிய புரட்சி எல்லாம் இந்தியாவுக்கும் ஆபத்தானது. 

2. அமெரிக்காவுக்கு இலங்கையில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்ற வெறி காரணம்.

3. பிரித்தானியாவை பொறுத்தவரையில் வழமையான கம்யூனிச எதிர்ப்புடன், முன்னாள் காலனிய நாடு என்ற கூடுதல் அக்கறை.

4. சோவியத் ரஷ்யா மேற்குலகுடன் முரண்பட விரும்பவில்லை. அதனால் சிறிமாவோ தலைமையிலான சமூக- ஜனநாயக அரசை ஆதரித்தது. 

4. சீனாவை பொறுத்தவரையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முக்கியம். அவர்கள் ஜேவிபி கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு நட்பு நாட்டை இழக்க விரும்பவில்லை. 

இது குறித்து ஒரு தடவை மலேசியாவை சேர்ந்த ஒரு மாவோயிஸ்டுடன் உரையாடிய பொழுது, "சீனா‌வி‌ன் அன்றைய  நிலைப்பாடு தவறு தான்" என்பதை ஒத்துக் கொண்டார். அவரும் ஒரு தமிழர் தான். 

ஒரு காலத்தில் சீனா, இந்தியா ஒன்று சேர்ந்து தம்மை அழித்தார்கள் என்பதற்காக, ஜேவிபி எப்போதும் சீன- இந்திய எதிர்ப்பு வன்மத்துடன் அலையவில்லை. இந்த விஷயத்தில் தமிழ்த் தேசியவாதிகள் ஜேவிபி இடமிருந்து  கற்றுக் கொள்ள வேண்டும்.

*நாம் வரலாற்றில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.


Wednesday, May 08, 2024

"ஜே.வி.பி. தமிழர்களின் எதிரி!" - புதிய ஜனநாயகத்தின் பு‌திய அவதூறு


புதிய ஜனநாயகம் இதழில் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை! 

ஜேவிபி இந்திய- இலங்கை முதலாளிய ஆளும் வர்க்க நலன்களுக்கு விலை போவதாக சொல்வதில் ஒரு நியாயம் இருக்கலாம். அதே நேரத்தில், அதே ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் ஜேவிபி தொடர்பாக செய்யும் பொய் பிரச்சாரங்களை ஒரு உழைக்கும் வர்க்க பிரதிநிதி நம்புவது அநியாயம். 

"ஜேவிபி, 1980 க‌ளி‌ல் நிகழ்த்திய இனப் படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா?" என்று சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க ஊடகங்கள் விவாதங்களை கட்டமைத்தால் அதை புதிய ஜனநாயகத்தில் அ‌ப்படியே போடுவீர்களா? 1988-89 இனப் படுகொலை பழியை ஜேவிபி மீது போடுவது அபத்தம் மாத்திரம் அல்ல, ஆளும் வர்க்கத்தின் பொய்ப் பிரச்சாரத்தை அ‌ப்படியே வாந்தி எடுப்பதும் ஆகும்.

"LTTE, 2009 ல் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமா?" என்று ஊடகங்கள் ஒரு விவாதத்தை கட்டமைப்பது சரியா? இது அரச படைகள் செய்த படுகொலைகளை மூடி மறைப்பது ஆகாதா? 2009 இனப் படுகொலைக்கு LTTE மட்டுமே காரணம் என்ற மாதிரி கட்டமைத்து ஒரு கேள்வி கேட்கப் பட்டால் அதற்கு தமிழர்களிடம் இருந்து எப்படியான எதிர்வினைகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது எப்படி இவர்களால் ஜேவிபி என்றால் மட்டும் உடனே அரச ஆதரவு நிலைப்பாடு எடுக்க முடிகிறது? எனக்கு புரியவில்லை. 

இந்தக் கட்டுரையில் இன்னொரு இடத்தில் "1983 ஜூலையில் நடந்த ஈழ மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஜேவிபி முன் நின்று செயற் பட்டது." என்று அவதூறு புனைந்து அபாண்டமான பழி சுமத்த படுகிறது. இது படு அபத்தம் மட்டுமல்ல. ஜூலை படுகொலைகளை முன் நின்று நடத்திய, உண்மையான குற்றவாளிகளான, அன்று ஆட்சியில் இருந்த வலதுசாரி- இனவாத UNP அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலை. நிச்சயமாக, புதிய ஜனநாயகத்திடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!

"1983 இனக் கலவரத்தை ஜேவிபி நடத்தியது!" என்று அன்றைய ஜே. ஆர். அரசாங்கம் செய்த பொய் பிரச்சாரத்தை இந்த கட்டுரையாளர் உண்மை என்று நம்பி இருக்கிறார். இலங்கையில் அன்று அதை யாரும் நம்பவில்லை. சிங்களவர் மட்டுமல்ல தமிழரும் நம்பவில்லை. அன்றிருந்த ஜே. ஆர். அரசாங்கம் இதை ஒரு சாட்டாக வைத்து, ஜேவிபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் அது. இப்படிப் பார்ப்போம். இந்தியாவில் மோடி அரசாங்கம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டி புதிய ஜனநாயகம் மற்றும் பல இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தால் அதை நாங்கள் உண்மை என்று நம்ப வேண்டுமா? 

ஆளும் வர்க்க நலன் சார்ந்த சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள் கூட இனவாத கண்ணோட்டத்தில் திரிபு படுத்தி செய்தி தெரிவிப்பது வழமையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று ரணில் அரசாங்க சார்பு ஊடகங்கள் ஜேவிபி யை தமிழர்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதையே தமிழ் ஊடகங்களும் செய்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதை எல்லாம் நம்புவதாக கட்டுரையாளர் நினைத்துக் கொள்வது சுத்த அபத்தம். எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முடியாது. சுய புத்தியில் சிந்திக்கும் தமிழர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் யாரும் ஜேவிபி யை எதிரியாக கருதவில்லை.

1988-89 இனப்படுகொலயை ஒவ்வொரு வருடமும் ஜேவிபி நினைவு கூர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஜேவிபி நடத்திய கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த கிராம மக்களும் அரச படையினரால் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் 18 வயதை அடையாத பாடசாலை மாணவர்கள் கூட ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பட்டுள்ளனர். இணையத்தில் சூரியகந்த புதை குழி என்று தேடிப் பாருங்கள். இது பிற்காலத்தில் தற்செயலாக கண்டுபிடிக்க பட்டது. இதை விட இன்னமும் தோண்டப் படாத மனித புதை குழிகள் ஏராளம் உள்ளன.

1988-89 இனப் படுகொலைக்கு நீதி கிடைத்து விட்டதா? அந்தப் படுகொலைகளுக்கு இதுவரை யார் பொறுப்பு ஏற்றார்கள்? எத்தனை பேர் தண்டிக்க பட்டனர்? ஒன்றுமே இல்லை. காரணம் என்ன? ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான ஏழைகள், உழைப்பாளிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் கொன்று குவிக்கப் பட்டால் அது கு‌றி‌த்து யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் தான் இன்று வரையில் முதலாளித்துவ ஊடகங்கள் இதைப் பற்றி பேச மறுக்கின்றன. மேற்கத்திய, சர்வதேச நாடுகள் பாராமுகமாக உள்ளன. ஆனால் வர்க்க அரசியல் பேசும் புதிய ஜனநாயகம் இந்த உண்மைகளை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது கவலை அளிக்கிறது. 




Tuesday, April 30, 2024

தமிழ்த் தேசிய மே நாள்!

 


இவ்விரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஒரு கட்சி "தமிழ்த் தேசிய மே நாள்" என்று பிரிவினை பேசுகிறது.
மற்ற கட்சியும் அதே பாணியில் "தமிழ்த் தேசத்து தொழிலாளர்" என்று பிரிவினை அரசியலை பேசுகிறது.

முதலாளிகள் ஒற்றுமையை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
அதற்கு தான் தமிழ்த் தேசியம் என்ற மாயத் திரை தேவைப் படுகிறது.

உலகில் எந்த நாட்டிலும், இப்படியான மோசடியான மே தினத்தை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஜெர்மனியில் ஹிட்லரின் Nazi கட்சி இதே மாதிரி "ஜெர்மன் தேசிய மே நாள்", அல்லது "ஜெர்மன் தேசத்து தொழிலாளர்" பற்றி பேசியது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போது யாரும் அப்படி பேசத் துணிய மாட்டார்கள். உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தொழிலாளர்களை தேசியம் பேசி பிரிப்பது அயோக்கியத்தனமானது.

அது போகட்டும்.
இவர்கள் சொல்லும் தமிழ் தேசத்தில் இன்றைக்கும் உள்ள தொழிற்சாலைகளை விரல் விட்டு எண்ணலாம். பெரும்பாலானவை சிறிய தொழிலகங்கள். அதனால் அமைப்பு ரீதியாக அணிசேரா தொழிலாளர்கள் சிறு முதலாளிகளின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். 
அந்த சிறு முதலாளிகள் செய்யும்  கொடுமைகள் எண்ணில் அடங்காதவை:
- மிகக் குறைந்த கூலி கொடுப்பது.
- அதிக நேரம் வேலை வாங்குவது.
- ஓய்வு நாட்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திப்பது. 
- தினசரி வேலைக்கு வரச் சொல்வது.
- ஆபத்தானவை வேலைக்கு பாதுகா‌ப்பு கவசங்கள் கொடுக்க மறுப்பது.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் இந்த முதலாளித்துவ கட்சிகள் மேதின கோரிக்கைகளாக வைக்க மாட்டார்கள்.

காரணம்: மேற்படி கொடுமைகளுக்கு காரணமான தமிழ் பேசும் சிறு முதலாளிகள் தான் இந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார்கள். அதாவது தமிழ் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டி அவர்களிடம் இருந்து திருடிய பணத்தில் தான் இந்த முதலாளித்துவ கட்சிகள் அரசியல் நடத்துகின்றன!
பணம் பேசுகிறது!


Saturday, April 27, 2024

EPDP & TMVP யின் இணக்க அர‌சிய‌ல், ஆயுதப் போராட்டத்தின் தோல்வி!

டக்ளஸ் தலைமையிலான EPDP மற்றும் கருணா/பிள்ளையான் தலைமையிலான TMVP ஆகிய அரசியல் கட்சிகள், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைப்பது தமிழீழத்திற்கான ஆயுத போராட்டத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகின்றது! 

விளக்கம் கீழே 👇👇👇

இவ்விரு கட்சிகளை உருவாக்கிய ஆரம்ப கால உறுப்பினர்கள் முன் ஒரு காலத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அவர்கள் வந்தடைந்த இடம் என்னவென்று விபரிக்க தேவையில்லை.

இன்னொரு வகையில் பார்த்தால், அவர்களால் தனித்து நின்று எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாது. காரணம், முன்பு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் என்பதால், அரசு எந்நேரமும் சந்தேகம் கொண்டிருக்கும். இனவாத மனநிலையும் இலகுவில் நம்ப விடாது. இதற்கு பல ஆதாரங்களை காட்டலாம். 

முன்னாள் இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய நந்திக் கடல் நோக்கி நூலை வாசிக்கவும். புலிகளால் இயங்க விடாமல் தடுக்கப் பட்ட முன்னாள் போராளிக் குழுக்கள், அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை எதிர்த்து போரிட முன்வந்த போதிலும் அவர்களை தம்முடன் சேர்க்காமல் தனித்து இயங்க விட பட்டதாக குறிப்பிடுகிறார். காரணம்: "அவர்களை நம்ப முடியாது. ஒரு காலத்தில் எமக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்டவர்கள்." 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் துணைப் படைக் குழுக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு இருந்தன. அரசு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி இருந்தாலும், இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் குழுக்கள் தமது நிதி ஆதாயத்திற்காக தமிழ் வர்த்தகர்களிடம் மிரட்டி கப்பம் வசூலிப்பதை கண்டு கொள்ளவில்லை.  

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இன்று எதிர்ப்பு அரசியல் செய்யும் தரப்பினர் யார் என்று பார்த்தால், அவர்களுக்கும் ஆயுத போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது! சிலரது உறவினர்கள் போராளிகளாக இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் யாரும் இயக்கத்தில் சேரவில்லை. உறங்காமல் விழித்திருந்து படித்து இருப்பார்களே தவிர, ஒரு இரவாவது காவலரண் கடமையில் இருந்திருக்க மாட்டார்கள். 

அனைவருக்கும் தெரிந்த தமிழரசுக் கட்சி, அதிலிருந்து பிரிந்து சென்று "தீவிர புலி அரசியல்" பேசும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி. இவ்விரண்டு கட்சிகள் தான் அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தூய தமிழ்த் தேசியக் கட்சிகளாக தம்மைக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒரு போதும் துப்பாக்கியை கையால் தொட்டிருக்க மாட்டார்கள். 

ஆயுத பாணி இயக்கங்களை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் இரு‌ந்து அரச இராணுவத்தை எதிர்த்து போராட்டிக் கொண்டிருந்த காலத்தில், இவர்கள் படித்து பட்டம் பெற்று அதே அரச இயந்திரத்தில் வேலைக்கு சென்றனர். இது தான் யதார்த்தம். 

ஆழமாக சிந்தித்து பாருங்கள். ஒரு போதும் ஆயுதம் தூக்கியிராதவர்கள், இன்னொரு விதமாக சொன்னால் மிதவாதிகள் "எதிர்ப்பு அரசியல்" செய்வதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே நேரம் அவர்களே இணக்க அரசியல் செய்யும் முன்னாள் போராளிகளை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும் எவனாவது தமிழீழத்திற்காக ஆயுதமேந்தி போராட முன்வருவானா? ஆளை விட்டால் போதும் சாமி என்று ஓடி விடுவான். 

அது... வந்து... என்று இழுக்காதீர்கள். ஒருவேளை பிரபாகரன் ஆயுதங்களை கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினாலும் அரசுடன் ஒத்தோடும் இணக்க அரசியல் செய்து கொண்டிருப்பார். உலகில் தனிநாடு பிரிவினை கேட்டு போராடிய இயக்கங்கள் எல்லாம் கடைசியில் அவ்வாறான இடத்திற்கு வந்தடைந்து உள்ளன. PLO முதல் IRA வரை பல உதாரணங்கள் காட்டலாம்.