Tuesday, June 06, 2023

டிஸ்கோ நடனத்தை தடைசெய்த புலிகள் & தாலிபான்!

யாழ் குடாநாட்டில், எண்பதுகளின் தொடக்கத்தில், இளைஞர்கள் மத்தியில் டிஸ்கோ நடனக் கலாச்சாரம் பரவி இருந்தது. சிறிய கிராமங்களில் கூட இரவில் மின் விளக்கொளியில் நடனப் போட்டிகள் நடக்கும். 

பெரும்பாலும் தென்னிந்திய திரையிசைப் பாடலுக்கு தான் அபிநயம் பிடிப்பார்கள். தனியாகவும் குழுவாகவும் ஆடுவார்கள். போட்டியில் வெல்லும் இளைஞருக்கு அல்லது குழுவுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பேபி ஷாலினி என்ற ஒரு 8-9 வயது சிறுமி மிகப் பிரபலமான நடனத் தாரகையாக இருந்தார். அவரது நடனத்தை பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அதை விட தனிப்பட்ட முறையில் சில இடங்களில் திருமண, பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் டிஸ்கோ நடன நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு இந்த டிஸ்கோ நடனம் ஈழத்தமிழ் மக்களது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

அப்போது யாழ் குடாநாடு முழுவதும் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லா இயக்கங்களும் சமமான அதிகாரத்துடன் இருக்கையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. யாரும் மக்களின் கலாச்சார நிகழ்வுகளில் தலையிடவில்லை. ஒரு கட்டத்தில், 1986 ம் ஆண்டு, புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அதற்குப் பிறகு தான் கலாச்சாரக் காவலர் வேலையில் இறங்கினார்கள். "இந்திய சினிமாக்களால் ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரம் சீரழிவதாகவும்", குறிப்பாக டிஸ்கோ நடன நிகழ்வுகள் "சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என அறிவித்து விட்டு டிஸ்கோ நடன நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதித்தனர். அதற்குப் பிறகு, யுத்தம் முடியும் வரையில் அங்கே எந்தவொரு நடன நிகழ்வும் நடக்கவில்லை. பிரபல நடனத் தாரகை பேபி ஷாலினியும் அகதியாக வெளியேறி படகு மூலம் இந்தியாவுக்கு சென்று விட்டார். 

இது நடந்து ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தனர். அவர்களும் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் டிஸ்கோ நடன நிகழ்வுகளை தடைசெய்தனர். அதற்கும் அவர்கள் "இந்திய சினிமாக்களால் ஆப்கான் கலாச்சாரம் சீரழிவதாக" ஒரு காரணம் சொல்லித் தான் தடையுத்தரவு போட்டார்கள். தாலிபான் மதத்தின் பெயரால் செய்ததை, புலிகள் இனத்தின் பெயரால் செய்தனர். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, பொதுவாக மக்கள் யாரும் நடனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இனத்தினதும், மதத்தினதும் பெயரால் நடக்கும் அரசியல் தான் மக்களின் கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

Sunday, June 04, 2023

பெல்ஜியத்தை உலுக்கிய கொலை வழக்கு - வர்க்க நீதி

2018 ம் ஆண்டு பெல்ஜியத்தில் மேட்டுக்குடி மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கொலை, அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு, தற்போது பெல்ஜிய சமூகத்தை வர்க்க ரீதியில் பிளவு படுத்தும் விவகாரமாக உள்ளது. (பார்க்க: Escalatie in België na heksenjacht op daders fatale ontgroening: ‘Mensen spelen voor eigen rechter’

பொதுவாக பல மேட்டுக்குடியினரின் கல்லூரிகளில், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த திறைமைசாலி மாணவர்களுக்கும் இடம்கொடுப்பார்கள். அவ்வாறு தான் Sanda Dia என்ற ஆப்பிரிக்க பூர்வீகத்தை கொண்ட மாணவனுக்கும் இடம் கிடைத்தது. கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு பகிடி வதை அல்லது ரேங்கிங் நடப்பதுண்டு. அவ்வாறு சொல்லித் தான் குறிப்பிட்ட சில மாணவர்கள் Sanda Dia வை துன்புறுத்தியுள்ளனர். காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று குளிர் தண்ணீரில் மணித்தியால கணக்காக நிற்க வைத்து, ஒரு மீனை விழுங்கி, மீன் எண்ணெய் குடிக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கங்கள் செயலிழந்து சுய நினைவற்று கிடந்தவனை மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது. 

வருடக் கணக்காக இழுபட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கொலைக் குற்றம் தெளிவாக இருந்த போதிலும் குற்றவாளிகளுக்கு மென்மையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதாவது 400 யூரோ தண்டப்பணம், 300 மணிநேரம் கட்டாய வேலை. கொலைக் குற்றத்திற்கு இது தான் தண்டனை! அத்துடன் அவர்கள் பெயரில் குற்றப் பத்திரிகை பதிவுசெய்யப் பட மாட்டாது. ஆகவே எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கப் போகும் பதவிகளுக்கும் எந்த பிரச்சினையும் வராது. 

ஏனென்றால் சம்பத்தப்பட்ட குற்றவாளிகள் மேட்டுக்குடி குடும்பங்களை சேர்ந்தவர்கள். நாளைக்கு இவர்கள் தான் அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக வலம்வரப் போகிறார்கள். இது தான் வர்க்க நீதி. வழக்கு முடிந்த பின்னரும் குற்றவாளிகளின் பெயர், விபரம் மறைக்கப்பட்டு வருகின்றது. இந்த அநீதி கண்டு கொதித்தெழுந்த ஒரு யூடியூப் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டார். உடனே அந்த வீடியோ அகற்றப் பட்டது. சில காலம் எதுவும் வெளியிட தடைவிதிக்க பட்டது. 

ஆனால் பெல்ஜிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒரு குற்றவாளியின் பெற்றோர் நடத்தும் ஆடம்பர ரெஸ்டாரண்டில் போலியான முன்பதிவுகள் செய்து, எதிர்மறையான கருத்திட்டு நட்டமேற்படுத்தினார்கள். இன்னொரு குற்றவாளிக் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனத்தின் சுவரில் கொலைகாரர்கள் என்ற வாசகம் எழுதப் பட்டது.

Wednesday, May 31, 2023

யாழ் நூலக எரிப்பும் வலதுசாரிகளின் நெருக்கமும்

யாழ் நூலகத்தை எரித்தது, காமினி திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வலதுசாரி UNP கும்பல். மிக கவனமாக திட்டமிட்டு, தமிழர்களின் பொக்கிஷங்களை, தமிழில் இருந்த அரிய ஆவணங்களை, பழைய ஓலைச்சுவடிகளை அழிப்பதை நோக்கமாக கொண்டு நூலகத்தை எரித்துள்ளனர். முதல் நாள் ஆயுதபாணி இளைஞர்களின் துப்பாக்கி சூட்டில் இரண்டு பொலிஸ்காரர்கள் பலியானதை சாட்டாக வைத்து இந்த நாசகார செயலை பொலிஸ் உதவியுடன் நிறைவேற்றி இருந்தனர். 


இலங்கையில் இதுவரை காலமும் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் இதே வலதுசாரி UNP இனால் தான் தூண்டி விடப்பட்டன. 1958 ம் ஆண்டு மத்திய இடது சார்ந்த SLFP ஆட்சியில் இருந்தாலும் கலவரத்தை நடத்தியது UNP தான். இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தனர். சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை உண்டாக்கியது மட்டுமல்லாது, பணக்கார வர்க்கத்தை பாதித்த சீர்திருத்த சட்டங்களை சீர்குலைத்தனர். 


இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் நூலக எரிப்பு, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான UNP கட்சியை, பிற்காலத்தில் புலிகளும் ஆதரித்தார்கள்! குறிப்பாக சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் புலிகளின் UNP ஆதரவு அலை உச்சக்கட்டத்தில் இருந்தது. (புலிகள் செய்தால் துரோகம் ஆகாது!) ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காலத்தில் UNP புலிகளுடன் இரகசிய தொடர்பை பேணியது. அதனால் தான் ஒரு கட்டத்தில் தான் கைப்பற்றிய இடங்களில் இருந்து இராணுவம் திடீரென பின்வாங்கியது. (UNP ஆதரவு இராணுவ அதிகாரிகளின் திடீர் முடிவு.) உண்மையில் அதன் விளைவாக நோர்வே மத்தியஸ்தம் வகித்த பேச்சுவார்த்தையும் வந்தது. மிகுதி வரலாறு. 


போர் முடிந்த பின்னர், புலிகளின் ஆதரவை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, UNP உடன் நெருக்கமான தொடர்புகளை பேணியது. அந்த நட்புறவு இப்போதும் தொடர்கிறது. ஏனென்றால் இவர்களுக்கு இடையில் பொதுவான கொள்கை உடன்பாடு உள்ளது. அது மேற்கத்திய நலன் சார்ந்த நவ தாராளவாத பொருளாதாரத்தை பாதுகாக்கும் கொள்கை. காரணம் இவர்கள் எல்லாம் வலதுசாரிகள் தான். மொழி மாறுவதால் அரசியல் கொள்கை மாறிவிடாது.

Saturday, May 07, 2022

அன்டன் பாலசிங்கம் திரிபுபடுத்திய சுயநிர்ணயம் பற்றிய லெனினின் மேற்கோள்

 

"தமிழ் மொழியின் பெயரில் ஈழம் பிரிவதையும் லெனின் எழுதிய கோட்பாடு அங்கீகரிக்கின்றது" என்பது மாதிரி தமிழ்த்தேசியம் பேசும் சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, லெனின் எழுதிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசும் இனங்கள், ஆயிரம் தேசங்களாக பிரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளதைப் போன்று பிதற்றுகிறார்கள். முதலில் உலகில் இவ்வாறு ஆயிரம் மொழிவாரி தேசங்களை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமா என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

லெனின் வாழ்ந்த ரஷ்யாவில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளைப் பேசும் வேற்றின மக்கள் வாழ்கிறார்கள். அப்படியானால் லெனின் எதற்காக ரஷ்யாவை நூறு துண்டுகளாக உடைத்து தனித்தனி தேசங்களாக பிரித்து விடவில்லை? எல்லாவற்றையும் இணைத்து சோவியத் யூனியன் என்ற ஒரே நாடாக்க வேண்டும்? சோவியத் குடியரசுகளுக்குள் தனித்தனி பாஸ்போர்ட் நடைமுறை இருந்தது வேறு விடயம். அதைக் கொண்டு யாரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய முடியாது. அதற்கு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட USSR பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

அது போகட்டும். லெனின் தமிழீழம் பிரிவதையும் ஆதரித்திருப்பார் என்றால், அதற்கு என்ன ஆதாரம்? இதற்கு தமிழ்த்தேசியம் பேசும் புலி விசுவாசிகள் அவர்களது தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்த ஒரு கூற்றை கொண்டு வந்து காட்டினார்கள். அதில் அவர் லெனின் சொன்னதாக ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.

//"எந்தவொரு ஒடுக்கும் தேசத்தையும் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய (பிரிவதற்கான) உரிமையை அங்கீகரிக்காமல், அதற்காக போராடாமல் இருப்பாரேயானால் அவர் ஒரு பேரினவாதியாக இருக்கலாமே தவிர ஒரு சோஷலிஸ்டாக இருக்க முடியாது."//

லெனின் இதை எந்த நூலில் எந்த இடத்தில் கூறியுள்ளார்? ஆதாரம் என்ன? அதற்கு அவர்கள் கொடுத்த ஆதாரத்தை இங்கே இணைத்துள்ளேன். லெனின் எழுதிய சமாதானம் குறித்து என்ற தலைப்பிலான கட்டுரை. (The Question of Peace, V.I. Lenin, July-August 1915) இது 1915ல் எழுதப்பட்ட காலனிய நாடுகளின் விடுதலை பற்றிய கட்டுரை. மிகத் தெளிவாக இருக்கிறது.

லெனின் இதை எழுதிய காலத்தில், 1ம் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அப்போது இன்றுள்ள மாதிரியான வரைபடத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அன்று உருவாகி இருக்கவில்லை. ஐரோப்பா, வட அமெரிக்கா தவிர உலகின் பிற நாடுகள் ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டின் காலனிகளாக இருந்தன. ஐரோப்பாவிலேயே பல நாடுகள் ஏதாவதொரு சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன. இப்படியான ஒரு காலகட்டத்தில் தான் லெனின் அந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் போன்ற ஏகாதிபத்தியங்கள் தமக்குள் நிலவிய முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக முதலாம் உலகப்போரில் ஈடுபட்டன. இந்த ஏகாதிபத்திய நாடு ஒவ்வொன்றும், தனக்குள்ளே பல நாடுகளை கொண்டிருந்தன. இவற்றை தான் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் லெனின் வரையறுக்கிறார். (கட்டுரையை பார்க்கவும்.)

முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் அவை தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட போராடிக் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு செர்பியா தவிர்ந்த முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசுகள், மற்றும் செக்(மற்றும் ஸ்லாவாக்கியா) ஆகியன அந்தக் காலத்தில் ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தன. போலந்து ஜெர்மனிக்குள் இருந்தது.

பிரான்ஸ் ஆப்பிரிக்காவில் பல காலனிகளை வைத்திருந்தது. பிரித்தானியா ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பல காலனிகளை வைத்திருந்தது. பிரிட்டன், பிரான்சினால் காலனிப் படுத்தப்பட்ட நாடுகளும் (உதாரணம்: இந்தியா) விடுதலைக்காக அல்லது சுயநிர்ணயத்திற்காக அல்லது பிரிவதற்காக போராடிக் கொண்டிருந்தன. இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவும். இது போன்று காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதைத் தான் லெனின் ஆதரித்து எழுதி இருக்கிறார்.

இங்கே கவனிக்க வேண்டிய விடயம், அன்டன் பாலசிங்கம் மேற்கோள் காட்டிய கூற்றில் உள்ள "சோஷலிஸ்ட்" என்ற வார்த்தை கம்யூனிஸ்டுகளை அல்லது மார்க்சியவாதிகளை குறிப்பிடவில்லை. அது சமூக ஜனநாயகவாதிகளை குறிப்பிடுகிறது. உதாரணமாக பிரிட்டனில் தொழிற் கட்சி, பிரான்சில் சோஷலிஸ்ட் கட்சி, ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி. இவற்றைத் தான் லெனின் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

அன்று லெனின் "பேரினவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டிய சமூக ஜனநாயகக் கட்சிகள் இப்போதும் பல ஐரோப்பிய நாடுகளில் தேர்தலில் போட்டியிடுகின்றன. அவை முற்றுமுழுதாக முதலாளிகளை ஆதரிக்கின்றன. அவை கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல. வழமையான முதலாளித்துவக் கட்சிகள். அவை எதுவும் இன்று மார்க்சியம் பேசுவதுமில்லை.

பாலசிங்கம் குறிப்பிடும் ஒடுக்கும் தேசங்களாக, உதாரணத்திற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருந்தன. ஒடுக்கப்பட்ட தேசங்களாக போலந்து, ஸ்லோவேனியா, குரோவேசியா ஆகிய பல ஐரோப்பிய நாடுகள் இருந்தன. இவை அப்போது ஜெர்மன் மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்யங்களின் மாகாணங்கள். அவற்றின் விடுதலைக்கு ஜெர்மனி, ஆஸ்திரியாவை சேர்ந்த சோஷலிச அல்லது சமூக ஜனநாயக (Social Democratic) கட்சிகள் ஆதரிக்கவில்லை.

சோஷலிஸ்டுகள் அல்லது சமூக ஜனநாயகவாதிகள், முதலாம் உலகப்போரில் ஈடுபட்ட ஜெர்மன்/பிரிட்டிஷ்/ஆஸ்திரிய அரசுக்களை ஆதரித்தார்கள். அதைத்தான் "ஒடுக்கப்பட்ட தேசங்களின் பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்தை ஆதரிக்காத சோஷலிஸ்டுகள் பேரினவாதிகள்" என்று லெனின் சாடினார். லெனின் எழுதியதை அன்டன் பாலசிங்கம் பிழையாக திரித்துள்ளார். தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்ட புலி விசுவாசிகள் அரசியல் அறிவற்ற தற்குறிகள். அவர்களை எப்படியும் ஏமாற்றலாம் என்பது அன்டன் பாலசிங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

1915 ல் லெனின் எழுதிய மாதிரி, அன்று காலனிகளாக ஒடுக்கப்பட்ட இந்தியாவும், இலங்கையும், ஒடுக்கிய பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைந்து விட்டன. இது நடந்தது 1947ல். அப்போது லெனின் உயிரோடு இல்லை. இரண்டாம் உலகப்போர் நடந்து முடிந்து காலனிய தேசங்கள் சுதந்திரம் பெறப்போகின்றன என்ற விடயம், 1924 ம் ஆண்டு காலமான லெனினுக்கு எப்படித் தெரியும்? ஞானக் கண்ணால் பார்த்தாரா? அல்லது இறந்த பிறகு அவரது ஆவி எழுதியதா?

வரலாறு தெரியாத பாஸிஸ்ட்கள் தமிழ்தேசியம் பேசக் கூடாது. இப்படித் தான் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.