Monday, June 29, 2020

ஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை

அது ஒரு "புலி ஆதரவுக் குடும்பம்." ஆனால், புலிகளை "நிபந்தனையுடன்" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் முன்பு வன்னியில் வாழ்ந்த காலத்தில், குடும்பத் தலைவியின் தந்தை யாரோ ஒருவரை சாதிப்பெயர் சொல்லி ஏசிய குற்றத்திற்காக புலிகள் அவருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுத்திருந்தனர். அது மட்டுமே அவர்களுக்கு புலிகள் மீதிருந்த விமர்சனம்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், நான் ஐரோப்பா வந்த புதிதில் அந்தத் தமிழ்க் குடும்பத்துடன் பழக்கம் உண்டானது. என்னுடன் நல்ல நட்பாக இருந்தனர். காலப்போக்கில் சாதியம் குறித்தும் என்னுடன் குறித்தும் வெளிப்படையாக உரையாடினார்கள். அப்போது தான் வன்னியில் புலிகள் வழங்கிய தண்டனை பற்றி விவரித்தார்கள். பச்சை மிளகாய் சாப்பிடக் கொடுத்த தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான தண்டனை. ஆனால், அவர்களது ஆதிக்க சாதி மனநிலையானது, அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. "இது மிகவும் கொடுமையான தண்டனை, மனித உரிமை மீறல், புலிகளின் சர்வாதிகாரப் போக்கு..." என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஒருவேளை, பல வருட காலம் நிலக்கீழ் சிறைக்குள்  அடைத்து வைத்திருந்தால், அவர்கள் இப்போது தீவிர புலி எதிர்ப்பாளர்களாக காட்சியளித்திருப்பார்கள்.

நான் புலிகளின் தண்டனையை நியாயப்படுத்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்களால் சாதி சொல்லி ஏசுவதை ஒரு குற்றமாக கருத முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தண்டனையானது அவர்களது எண்ணத்திலும், நடத்தையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. அவர்கள் புலிகளின் செயலை மட்டுமே குறை கூறினார்களே தவிர, மனதளவில் சாதிவெறி குறையாதவர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் தம்மை சாதியால் உயர்த்தப்பட்டவர்களாக நம்பினார்கள். அதற்கு காரணம் கேட்ட பொழுது, "நல்ல சாதி" எனப்படுபவர்கள் சுத்தமானவர்கள் என்றும், "கெட்ட சாதி" எனப்படுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும், "முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை" என்றும் வாதாடினார்கள். "நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதே நோக்கம்" என்று தீண்டாமைக்கு ஒரு  "விஞ்ஞான விளக்கம்" கொடுத்து நியாயப் படுத்தினார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த உலகறிவு இல்லாதவர்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது வழமையானது. நாம் தான் அனுசரித்து போக வேண்டும்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் யார் எந்த சாதி என்று தெரியாத நிலைமை. எடுத்த உடனே நேரடியாக கேட்பது அநாகரிகமாக கருதப்பட்டது. ஆனால், தமிழர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டிய நிர்ப்பந்தம். தாம் (சாதி)"தெரியாதவர்களின்" வீடுகளுக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் தரும் தேநீரை குடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிப்பார்கள். சிலநேரம் கூடவே "தங்களது ஆள்" ஒருவரும் வந்திருந்தால் அவரை குடிக்க சொல்லிக் கொடுப்பார்களாம். இந்த விடயங்களை அவர்களாகவே என்னிடம் கூறினார்கள்.

சாதி பார்த்த காரணத்தால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இந்தக் குடும்பத்தினர் போன்றவர்கள் தான். மிகச் சரியாக சொன்னால், சாதி அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும் வர்க்க ரீதியாக தாழ்ந்திருந்த சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள். புலிகளும் இவர்களைத் தான் பிடித்து தண்டித்தார்கள். இப்படியான தண்டனைகள் பலரது மனதில் சாதிய வன்மத்தை அதிகரித்ததே தவிரக் குறைக்கவில்லை. சாதிப்பிரச்சினையை தனிநபர் சார்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தது தான் புலிகள் விட்ட தவறு.

அறிவூட்டல், பரஸ்பர நட்புறவு, கூட்டு உழைப்பு, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிப்பிரச்சினையை பெருமளவு ஒழிக்கலாம். ஒடுக்கும் சாதியை சேர்ந்த சாதிய உணர்வாளர்கள் பலர், ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்களுடனான பரஸ்பர தொடர்பாடல்களுக்கு பின்னர் மனம் திருந்தி இருக்கிறார்கள். இதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அறியாமையில் இருந்து விடுபட்டவர்கள், ஏனையோரையும் திருத்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த,  சாதிவெறி பிடித்த நிலவுடைமையாளர்கள், அல்லது பணக்காரர்களை புலிகள் என்றைக்குமே தண்டித்ததில்லை. அதிகம் பேசுவானேன். ஐரோப்பாவில் புலிகளின் பெயரில் தீவிரமாக இயங்கிய செயற்பாட்டாளர்கள் கூட அந்தரங்கத்தில் சாதி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படியானவர்கள் குறித்தும் புலிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் புலிகள் கேட்ட போதெல்லாம் பணம் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

ஆதிக்க சாதியை சேர்ந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தான் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். புலிகளைப் பொறுத்த வரையில் அது குறித்து எந்த விதமான புரிதலும் இருக்கவில்லை. அதனால் தான் சாதியம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் சாதியம் என்ற மரத்தை அகற்றுவதென்றால் அதை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். ஆனால் புலிகள் கிளைகளை வெட்டி விட்டு சாதியம் ஒழிந்து விட்டது என்றனர்.

நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கும், சாமானியர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாம் இங்கே நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை தான் எதிர்க்க வேண்டும். அது தான் மிகவும் ஆபத்தானது.

சாதிப் பிரச்சினையை மறுப்பதற்காக, "புலிகள் சாதி பார்க்கவில்லை" என்பதற்கு பலர் காட்டும் "ஆதாரங்கள்" யாவும் சிறுபிள்ளைத்தனமானவை. அவை பெரும்பாலும் சாமானியர்களின் சாதிவெறி தொடர்பானவை. புலிகள் தாம் சிங்கள பேரினவாத அரசை மட்டுமே எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். அதன் அர்த்தம் சாதாரண சிங்களவர்கள், இனவாதம் பேசினாலும் கூட, அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி சாதாரண வெள்ளாளர்கள் சாதியவாதம் பேசினாலும் அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் ஒருநாளும் சாதாரண மக்களுடன் சண்டைக்கு போகக் கூடாது. சாமானியர்கள் இனவெறி/சாதிவெறி கருத்துக்களை தெரிவித்தால், அதை புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் புலிகளிடம் அத்தகைய புரிதல் இருந்துள்ளதா என்பது கேள்விக்குறி. இதனை "புலிகள் சாதி  பார்க்கவில்லை" வக்காலத்து வாங்குவோரே, தாம் அறியாமல் புலிகளின் புரிதலின்மையை  வெளிப்படுத்தி  விடுகின்றனர். உதாரணத்திற்கு, முன்பு புலிகளின் நிர்வாகத்தில் சாதிப்பெயர் சொல்லி திட்டிய காரணத்திற்காக ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள், பச்சை மட்டையால் அடித்தார்கள், பச்சை மிளகாய் உண்ணக் கொடுத்தார்கள் என்று பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
இத்தகைய தண்டனைகளால் சாதியத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் அறியாமையால் செய்த தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வித் தகைமைக்கும், அறிவுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாத சமுதாயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட சாதி சொல்லித் திட்டுவதை கண்டிருக்கிறோம். அவர்கள் யாரும் அறிவுக்காக படிக்கவில்லை. உத்தியோகம் பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தவர்கள். அப்படியானவர்களை மீள் படிப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக பட்ச தண்டனையாக இருக்க வேண்டும். தமது பெற்றோரையும் திருத்தக் கூடிய வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சமதர்ம கல்வி புகட்டுவதும் ஒரு தீர்வாகலாம்.

இதற்கு நாம் Black Lives Matter போராட்டத்தில் இருந்து பாடம் கற்கலாம். அமெரிக்காவில் உள்ள நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவெறியை தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் வெள்ளையின மக்களும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். அத்தகைய நிலைமை அறுபதுகளில் யாழ் குடாநாட்டில் இருந்தது. அப்போது நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி சக்திகளுக்கு வெள்ளாளர்களும் ஆதரவாக நின்றனர். போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தனர். இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் Black Lives Matter போராட்டம் சாமானிய வெள்ளையர்களின் நிறவெறிக் கருத்துக்களுக்காக அவர்களை பகைக்கவில்லை. நாங்கள் எப்போதும் சாதாரண மக்களை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். சாதாரண வெள்ளையர்கள் காட்டும் நிறவெறியை அவர்களது பிள்ளைகளே எதிர்த்துப் போராடுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளால் அறிவு  புகட்டப் பட்டு Black Lives Matter போராட்டத்தில் இணைந்து கொண்ட வெள்ளையினப் பெற்றோர் பலருண்டு. அதே மாதிரி யாழ் வெள்ளாள குடும்பங்களில் நிலவும் சாதிவெறிக் கருத்துக்களை இளைய தலைமுறையினர் கேள்விக்குட்படுத்தி திருத்த வேண்டும். எமது அரசியல் போராட்டம் எப்போதும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சாதிவெறியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நிலப்பிரபுத்துவ கால எச்சங்களான குடிமை சாதித் தொழில் புலிகளின் காலத்திலும் இருந்ததாகவும், அதைப் புலிகள் ஒழித்து விட்டதாகவும் சிலர் வாதாடுகிறார்கள். அவர்கள் குடிமைத் தொழில் எனக் கருதுவது மரண வீடு போன்றவற்றில் செய்யப்படும் சடங்குகளை தான். அதைப் புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மை தான். எனினும் குடிமைத் தொழில் முறை பற்றிய புலிகளின் அறிவு போதாமை காரணமாக "சாதியில் குறைந்ததாக" சொல்லப்படும் தொழில்களை தான் தடுத்தார்கள். "சாதியில் உயர்ந்தவர்கள்" செய்து வந்த குடிமைத் தொழில் அப்படியே இருந்து வந்தன. அவற்றை "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால், அதைச் சுற்றி பல்வேறு குடிமைச் சாதியினர் தொழில் செய்வதைக் காணலாம். கோயிலில் பூசை செய்யும் ஐயர் முதல் மடைப்பள்ளி சமையல்காரர்கள் வரை சாதி அடிப்படையிலானதொழில்களை செய்து வந்தனர். தமிழர் கலாச்சாரம் என்பது, இந்துக் கலாச்சாரமாக இருப்பதால் இன்றைக்கும் அவை தொடர்கின்றன. உண்மையில் புலிகள் அதை ஒழிக்க முனைந்திருந்தால் அங்கு ஒரு பெரும் சமூகப் புரட்சியே நடந்திருக்கும். ஆதிக்க சாதியில் உள்ள பிற்போக்காளர்கள் புலிகளை எதிர்த்து கலகம் செய்திருப்பார்கள். "புலிகள் தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்..." என்று போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அன்று புலிகள் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை எதிர்க்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

உண்மையில் புலிகள் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடியதாக பெருமை பேசிய புலிகளால், உள்ளூரில் இருந்த வெள்ளாள சாதிவெறி அமைப்பை எதிர்க்க முடியவில்லை. அதற்கான துணிச்சலும் அவர்களிடம் இருக்கவில்லை. காரணம் மிக எளிது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலிகளுக்கு நிதியுதவி செய்து வந்த ஆதிக்க சாதி சமூகத்தை எதிர்த்தால் தமது இருப்பு கேள்விக்குரியதாகி விடும் என நினைத்தார்கள். அதற்கான சாத்தியம் இருக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது.

Saturday, June 27, 2020

யாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி


யாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்டு திறக்கப் படவிருந்த புதிய யாழ் மாநகர நூலகம், அங்கு எழுந்த சாதிப் பிரச்சினை காரணமாக பின்போடப் பட்டது. அதற்குக் காரணம், நூலகக் கட்டிடத்தை கட்டி முடித்து வைத்து, அதை திறக்கவிருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மேயர். சாதியில் குறைந்தவரின் பெயர் கல்வெட்டில் வந்து விடக் கூடாது எனும் ஆதிக்க சாதி ஆணவம்.

இதில் "நீதிமான்களாக" கருதப் பட்ட புலிகளும் ஒரு பக்கச் சார்பான நிலையெடுத்து தமது பெயரை தாமே கெடுத்துக் கொண்டனர். சிங்கள பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய புலிகளுக்கு வெள்ளாள சாதியவாத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியம் இருக்கவில்லை. ஆயிரக் கணக்கான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், ஆதிக்க சாதியினரின் அதிகார வர்க்கத்திற்கு அடங்கிப் போனார்கள். இறுதியில் சாதியம் வென்றது. தமிழ்த்தேசியம் தோற்றது.

இதில் சாதிப் பிரச்சினை இல்லையென்று வாதாடிய பிரிவினர், சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப் பட்ட நூலக கட்டிடம் அப்படியே ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அது உண்மையானால், புலிகள் ஏன் நூலகம் கட்டி முடிக்கப் படும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி கட்டுமானப் பணிகளை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்திருக்கலாமே? ஏற்கனவே புலிகளால் இவ்வாறு தடுக்கப் பட்ட திட்டங்கள் ஏராளம் உள்ளன. யாழ் நகர சிவில் நிர்வாகம் பல வழிகளில் குழப்பப் பட்டது.

புலிகள் தமது செல்வாக்கை பயன்படுத்தி யாழ் நகரில் நூலகம் கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு "ஆனந்தசங்கரி திறக்கவிருந்தார் அதனால் தடுத்தோம்" என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான பதில். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு ஒரு நூலகம் தேவைப் பட்டது. அதை ஆனந்த சங்கரி திறந்து வைத்தாலும், அன்டன் பாலசிங்கம் திறந்து வைத்தாலும் அவர்களுக்கு ஒன்று தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், நூலக பிர்ச்சினை நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், தாம் முக்கியமானதாக கருதும் புனரமைப்பு திட்டங்களுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என்று புலிகள் விரும்பி இருக்கிறார்கள். குறிப்பாக நல்லூரில் உள்ள கிட்டு பூங்கா, கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த விபரத்தை செல்லன் கந்தையா வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) சிங்களப் பேரினவாதிகளால் சேதமாக்கப் பட்ட பூங்காவும், மயானமும் யாழ் மாநகர நிதியில் புனரமைக்கப் படலாம் என்றால், நூலகம் புனரமைப்பதை மட்டும் புலிகள் ஏன் தடுக்க வேண்டும்? இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது.

செல்லன் கந்தையாவுடனான பேட்டியில் (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) அவர் ஒரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார். நூலகத்தை புனரமைப்பது தொடர்பாக மக்களின் விருப்பத்தை கேட்டு, நகர சபையில் முடிவெடுக்கப் பட்டது. அதற்கான நிதியையும் நகர சபை ஒதுக்கியது. புதிதாக வேறு இடத்தில் நூலகம் கட்டுவதானால் யாழ் நகரில் இடப்பற்றாக்குறை. ஆகவே முன்பிருந்த இடத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதற்கு மக்களும், நகர சபை உறுப்பினர்களும் சம்மதித்துள்ளனர்.

நல்லூரில் இராணுவத்தால் உடைக்கப் பட்ட திலீபனின் நினைவுச்சின்னத்தை, போர் முடிந்த பின்னர் மீண்டும் திருத்திக் கட்டி இருக்கிறார்கள். போர் நடந்த காலத்தில் விமானக் குண்டுவீச்சுகள் அல்லது ஷெல் தாக்குதலால் இடித்து நொறுக்கப் பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மீண்டும் புனரமைக்கப் பட்டு அதே இடத்தில் இயங்குகின்றன. இதெல்லாம் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கூட நடந்துள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கோயில்கள் புனரமைப்பதற்கான நிதி, புலிகளின் ஜென்ம விரோதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து வந்தது. அப்போது இடிந்த பள்ளிக்கூடங்கள், கோவில்களை அப்படியே நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அதை ஒரு சர்ச்சை ஆக்கவில்லை. ஏனென்றால் அதில் சாதிப் பிரச்சினை இருக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சாட்டுக் கூறி தடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நாய் விற்ற காசு குரைக்காது. ஜென்ம விரோதி டக்ளஸ் கொடுத்த பணம் கடிக்காது.

யாழ் நூலகத்தை புனரமைக்காமல் நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என வாதாடுவோர் யாரென்று பார்த்தால், அவர்களில் பலர் பல்கலைக்கழக நூலகத்தை பயன்படுத்தி படித்து பட்டதாரியானவர்கள்! இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது, தமிழ் நாட்டில் அல்லது கொழும்பில் வசதியாக வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். யாழ் நகருக்கு ஒரு நூலகம் அவசியமா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்கள் தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு நூலகம் வேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

வாழ்க்கையில் ஒரு நாளும் யாழ் நூலகத்தை பயன்படுத்தி இராதவர்கள், இனிமேலும் பயன்படுத்த போகாதவர்கள், "யாழ் நகருக்கு நூலகம் வேண்டாம்" என்று வாதிடுவது சுத்த அயோக்கியத்தனம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் அறிவு பெறுவதை தடுக்கும் ஈனப் புத்தி. இதை தமிழ்த் தேசியத்தின் பெயரால் சொல்வது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம்.

ஒரு மாநகரசபையின் பொது நூலகமானது பொது மக்களின் நன்மை கருதி மக்களின் வரிப் பணத்தில் இயக்கப் படுகிறது. நூல்களை இரவல் கொடுப்பதற்கு மட்டும் சிறிய தொகை அறவிடப் படுகிறது. நூலக செலவுகளை அரச மானியம் ஈடுகட்டுகிறது. இதனால் ஏழைகளுக்கே அதிக நன்மை உண்டாகும். உலகம் முழுவதும் பொது நூலகங்கள் இருப்பதன் காரணமும் அது தான்.

யாழ்ப்பாணத்திலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு புத்தகம் கூட வாங்க வசதியற்ற ஏழைகள் தான் பெரும்பான்மை. அவர்கள் யாழ் நகரில் உள்ள பொது நூலகத்தை பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் மட்டும் அங்கிருந்த நூலகத்தை பயன்படுத்தி பட்டம் பெற்ற பின்னர், பொதுவாக நூல்கள் வாசிப்பதையே நிறுத்தி விடும் மேட்டுக்குடி "அறிவு"ஜீவிகளுக்கு பொது நூலகத்தின் அருமை எங்கே தெரியப் போகிறது?

செல்லன் கந்தையா சமீபத்திய வீடியோ பேட்டியில் ஒரு உண்மையை கூறுகிறார். யாழ் நகரை அண்டி வாழும் வசதியற்ற தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு பொது நூலகம் ஒரு கொடை என்பதால் தான் அதை புனரமைக்க விரும்பியதாக கூறுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த காரணத்தால் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திய செல்லன் கந்தையா, கல்வியின் அருமையை உணர்ந்து வருங்கால சந்ததியின் நன்மை கருதி நூலகத்தை கட்டி இருக்கிறார். அப்படி ஒரு நூலகம் மக்களுக்கு தேவையில்லை என்பவர்கள் எப்படிப் பட்ட அயோக்கியர்களாக இருக்க வேண்டும்?

சில அறிவுஜீவிகளும் சாதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். "ஆதிக்க சாதியில் வசதி படைத்தவர்கள் மட்டும் கல்வியில் முன்னேறினால் போதும், ஒடுக்கப் பட்ட சாதியினரில் வசதியற்ற பிரிவினர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?" என்ற மேட்டுக்குடி ஆணவம் தானே இப்படிப் பேச வைக்கிறது? ஆதிக்க சாதிய மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே "யாழ் மக்களுக்கு பொது நூலகம் தேவையில்லை" என்று கூறத் துணிவார்கள். சாதிவெறி பிடித்த எலிகள் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

முடிவாக, யாழ் நூலக திறப்பு விழா பிரச்சினைக்கு பின்னால் இருந்தது சாதிப் பிரச்சினை மட்டுமல்ல, வர்க்கப் பிரச்சினையும் தான். இதை மறுப்பவர்கள் ஒன்றில் உயர் சாதிய, அல்லது உயர் வர்க்க பெருமிதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.


Thursday, June 25, 2020

புலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...


விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட பத்திரிகையில் இருந்து ஒரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதாவது சாதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள படியால், அந்தக் கிராமங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்தால் சாதி ஒழிந்து விடும் என்பது புலிகளின் எண்ணமாக இருந்துள்ளது. இந்த பத்திரிகைத் துணுக்கில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் பூம்புகார் மாதிரிக் கிராம திட்டம் விவரிக்கப் படுகின்றது.

இது தவிர்க்கவியலாது சிறிலங்கா அரசு முன்னெடுத்த கிராமிய அபிவிருத்தி திட்டங்களை நினைவுபடுத்துகிறது. பல கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளன. அதனால் இலங்கையில் வறுமை ஒழிந்து விட்டதா, அல்லது நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதா என்பது நிச்சயமாக கேட்கப் பட வேண்டிய கேள்வி. மேலும் போர் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சே கூறிய, "தமிழர்களின் பிரதேசம் அபிவிருத்தி அடைந்தால் நாட்டில் இனப்பிரச்சினை மறைந்து விடும்" என்ற கூற்றையும் இது நினைவுபடுத்துகிறது. சிறிலங்கா அரசானாலும், விடுதலைப் புலிகள் என்றாலும் வலதுசாரி தாராளவாத பொருளாதார அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களால் இதற்கு மேல் வேறொன்றும் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் பலர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்து விட்டனர். அறுபதுகள், எழுபதுகளில் இந்த மாற்றம் தெளிவாக உணரப்பட்டது. குறிப்பாக இலவசக் கல்வியை பயன்படுத்தி, கஷ்டப்பட்டு படித்து மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அரச அதிகாரிகளாக வந்த ஏராளம் பேரை உதாரணம் காட்டலாம். இப்படியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்தில் இருந்தும் பலர் வசதியாக வாழ்கின்றனர். அவர்களில் ஒரு elite பிரிவினர், தமது மத்தியதர வர்க்க அடிப்படை காரணமாக தமிழரசுக் கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். அது இன்று TNA ஆதரவு வரை தொடர்கிறது.

சிறிமாவோ காலத்தில் கொண்டுவரப்பட்ட கள்ளுத்தவறணை கூட்டுறவு சங்கம் காரணமாக எத்தனையோ மரமேறும் தொழிலாளர்கள் கைகளில் தாராளமாக பணம் புழங்கியது. இந்த தகவலை காலஞ்சென்ற எழுத்தாளர் இரகுநாதன் தனது பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி எனும் நூலில் பதிவு செய்துள்ளார். அதே மாதிரி கரையோரங்களில் மீனவர் சங்கங்கள் மூலமும், வன்னியில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டும் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்தவர்கள் ஏராளம். அத்துடன் கராஜ் போன்ற சுயதொழில் செய்து முன்னேறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பலருண்டு. மேற்குறிப்பிட்ட பிரிவினர் தனிப்பட்ட முறையில் காணி, பூமி, நகை, நட்டு வாங்கி சொத்துக்களையும் சேர்த்துள்ளனர்.

அப்படியானால் ஏன் இன்னமும் சாதிப்பிரச்சினை ஒழியவில்லை? உலகில் எந்த நாடாகிலும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும். பெரும்பாலானோர் வறுமையில் துன்பப் பட வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் முற்றுமுழுதாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

இனப்பிரச்சினை மட்டுமல்ல, சாதிப்பிரச்சினையும் ஒரே அரசியல் பொருளாதார அடித்தளத்தை கொண்டவை தான். அடிப்படையில் இரண்டுமே வர்க்கப் பிரச்சினை தான். இலங்கையில் சிங்கள மொழி பேசும் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதால் தான், அதைப் பாதுகாப்பதற்காக சிங்கள பேரினவாத அரசியல் கட்டமைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் சாதியமும் அப்படித் தான். சாதிய படிநிலையில் மேன்நிலையில் உள்ள வெள்ளாளர்களில் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமது செல்வத்தை மற்றவர்களுடன் பங்கிட விரும்பாத காரணத்தால் தான் இன்று வரைக்கும் சாதிப்பிரச்சினை தொடர்கிறது.

வட மாகாணத்தில் பெருமளவு நிலங்கள் எந்த சாதியின் ஆதிக்கத்தில் இருக்கின்றன? எந்த சாதியை சேர்ந்தவர்களில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் சாதிப் பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து விடும். துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளிடம் அப்படியொரு தூரப் பார்வை இருக்கவில்லை. அதனை சயந்தன் கொடுத்த பத்திரிகை ஆதாரமே நிரூபிக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து அறிந்து வைத்திருந்த புலிகளுக்கு, வெள்ளாள சாதியவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம். ஒடுக்குபவர்கள் யார் என்பதிலும், ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதிலும் புலிகளிடம் தெளிவான அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லை என்பதை இங்குள்ள பத்திரிகை ஆதாரம் எடுத்துக் காட்டுகின்றது.

(படத்திற்கு நன்றி: Sayanthan Kathir)

Tuesday, June 23, 2020

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்!


புனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்" என்ற அமைப்பின் பெயரில் வெளியான அறிக்கையில் சாதியம் மூடி மறைக்கப் படுவது நன்றாகத் தெரிகிறது.

இந்த அறிக்கையின் தலைப்பே "உழுத்துப் போன சாதிப்பிரச்சினை..." என்று தான் தொடங்குகிறது. இது வழமையாக சாதியவாதிகள் பாவிக்கும் சொல்லாடல். "இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறாங்க?", "உழுத்துப்போன சாதிப்பிரச்சினை" ஆகிய இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "விடுதலைப் போராட்டம் வீரியம் பெற்றிருந்த" காலத்தில் தான், 1995 ம் ஆண்டு வலிகாமத்தில் இருந்து தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் வீடுகளில் சாதி பார்த்து தங்க வைக்கப் பட்டனர். பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவது தடுக்கப் பட்டது. அப்போதெல்லாம் யாழ் குடாநாடு ஆயுதமேந்திய புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

இந்த விடயங்களை தெரிந்து கொண்டும் "சாதிப்பிரச்சினை எப்பவோ உக்கி, உழுத்து, செத்து விட்டது" என்று அறிக்கை வெளியிட்டால், அதை எழுதியவர் ஒன்றில் பொய்யராக இருக்க வேண்டும் அல்லது சாதிவெறியராக இருக்க வேண்டும். உலகில் எந்தவொரு இனவாதியும் தான் பேசுவது இனவாதம் என்று சொல்வதில்லை. அதே மாதிரித் தான் சாதியவாதிகளும் நடந்து கொள்வார்கள். வேறு ஏதாவது காரணத்தைக் கூறித் தான் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

இந்த அறிக்கையில் நூலகத்தை திறக்க விடாமல் தடுத்தமைக்கு சொல்லப்படும் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமான வாதங்களாக தெரிகின்றன. "நூலகம் முழுமையடையவில்லை" என்பதால் தாம் போராட்டம் நடத்தியதாகவும், அப்படி இருந்தும் அன்றைய மேயர் செல்லன் கந்தையா நூலகத்தை திறக்க முயன்றதால் புலிகளிடம் முறையிட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் மேயராக இருந்த காரணத்தால் தாம் நூலகத் திறப்புவிழாவை தடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். செல்லன் கந்தையா உறுப்பினராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வேண்டுமென்றே சாதிப்பிரச்சினை புரளியை கிளப்பியதாகவும், தமக்கு சாதிய நோக்கம் எதுவும் கிடையாது என்றும் சொல்கின்றனர்.

சரி, அதை உண்மை என்றே நம்புவோம். அந்த நேரத்தில் திடீரென முளைத்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்திற்கு சாதிய நோக்கம் இல்லா விட்டால், வேறெந்த காரணத்திற்காக எதிர்த்தார்களாம்? அதையும் அவர்களே சொல்லி விடுகின்றனர். இந்த அறிக்கையில் பின்வரும் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்கப் பட்டுள்ளது:

  1. நூலகத்தில் காத்திரமான நூல்கள் இல்லை. 
  2. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு, இணையத்தள வசதி செய்து தரப்படவில்லை.

உலகம் முழுவதும் இயங்கும் நூலகங்கள் பயனாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய நூல்களை வாங்கிக் கொண்டிருக்கும். நூலகம் திறந்து 17 வருடங்கள் கடந்த பின்னரும், இப்போதும் அங்கே காத்திரமான நூல்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் எது காத்திரமான நூல் என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. ஒரு வாசகர் முக்கியமானதாக கருதும் ஒரு நூல் இன்னொருவருக்கு பிரயோசனமற்றதாக தெரியலாம். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சுவை கொண்டவர்கள் அல்ல. ஆகவே எது காத்திரமான நூல் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்க முடியாது. அதை தீர்மானிப்பது நூலகத்தின் பயனாளிகள்.

யாழ் நூலகம் இன்றைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளில் பின்தங்கியுள்ளது. 2003 ம் ஆண்டு காலகட்டத்தில் பல மேற்கத்திய நகரங்களில் இருந்த நூலகங்களில் கூட இணைய வசதி இருக்கவில்லை. இந்தப் பிரச்சினை நடந்து பத்து வருடங்களுக்குப் பிறகு, 2013 ம் ஆண்டு சாவகச்சேரி பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே நவீன தொழிநுட்ப, இணைய வசதி இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறேன்.

யாழ் நூலகத்திற்கு அடுத்த படியாக, அதுவும் ஒரு முக்கியமான பெரிய நூலகம் தான். (யாழ் குடாநாட்டின் தென் கிழக்கு பிரதேசத்தில் சாவகச்சேரி ஒரு பெரிய நகரம்.) எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருந்த சாவகச்சேரி பொது நூலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று வரை யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அப்போது இந்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் என்ன செய்து கொண்டிருந்தது? இப்போதாவது ஒரு பெரிய போராட்டம் நடத்தி நூலகத்திற்கு இணைய வசதியை பெற்றுத் தரலாமே?

"நூலகம் முழுமையடையவில்லை... காத்திரமான நூல்கள் இல்லை... இணைய வசதிகள் இல்லை..." என்பன போன்ற நொண்டிச் சாட்டுகளை சொல்லும் பொழுதே, "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய" முகமூடி அணிந்திருந்தவர்கள் யார் என்பது தெரிந்து விடுகிறது. நான் அறிந்த வரையில், அப்படி ஒரு அமைப்பு நூலக திறப்புவிழா பிரச்சினைக்கு முன்னரும், பின்னரும் இயங்கவில்லை. (தவறென்றால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.)

இந்தப் பிரச்சினை நடந்த அதே நாட்களில் தான், தினக்குரல் பத்திரிகையில் மேயர் செல்லன் கந்தையாவை மரமேறும் சீவல் தொழிலாளி போன்று சிறுமைப்படுத்தும் சாதிவெறிக் கார்ட்டூன் பிரசுரமானது. அதை இந்த ஒன்றியம் கண்டிக்கவில்லை. அது தான் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின்" ஒன்றியமாயிற்றே? உழுத்துப் போன சாதியத்தை உதறித் தள்ளிய "பொது அமைப்புகளுக்கு"(?) தினக்குரல் பத்திரிகையின் சாதிவெறிக் கேலிச்சித்திரம் ஒரு பொருட்டாக தெரியாதது மிகப் பெரிய ஆச்சரியம். பொது அமைப்புகளின் ஒன்றிய முகமூடி அணிந்திருந்த சாதியவாதிகள் தமது கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள். 


Monday, June 22, 2020

ஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்!

அமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம்  செக்கோஸ்லாவாக்கியாவில் வாழ்ந்து வந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு கம்யூனிசத்தில் வெறுப்புற்று அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இளம் தலைமுறையை சேர்ந்தவர். மேற்கத்திய முதலாளித்துவ சொர்க்கபுரியாக கருதப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த பின்னர், தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்தி இருக்கிறார். 

அவர் தனது செக் நாட்டு வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு உலக நாடுகளை நாசமாக்கி வருகிறது என்பதை இன்றைய ஹாங்காங் மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இதை எழுதி இருக்கிறார். முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை நான் இங்கே தமிழில் சுருக்கி தருகிறேன்.

அன்றைய வாழ்க்கை நன்றாக அர்த்தமுள்ளதாக இருந்தது. செல்வச் செழிப்புள்ளதாக இருந்தது. செல்வம் என்பது பணத்தின் அடிப்படையில் அல்லாது, பண்பாட்டு ரீதியாக, அறிவுபூர்வமானதாக, ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால், அது பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.

நாங்கள் கிளர்ந்தெழும் இளைஞர்களாக, அத்துடன் இலகுவில் ஏமாறக் கூடியவர்களாக இருந்தோம். எங்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் திருப்திப் படவில்லை. எல்லாம் தானாகக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டோம். இரவு நேரங்களில் BBC, Voice of America, Radio Free Europe ஆகிய வானொலிகளில் சொல்வதை செவிமடுத்தோம். அவை சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளையும் பற்றி அவதூறாகசொன்ன எல்லாவற்றையும் நம்பினோம்.

செக் நாட்டு சோஷலிச தொழிற்துறை நிறுவனங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நட்பு ரீதியாக பல தொழிற்சாலைகளை கட்டிக் கொடுத்தன. அவை உருக்காலை, சீனி ஆளை என்று பலதரப் பட்டன. ஆனால் நாங்கள் அவற்றை பெருமையாகக் கருதவில்லை ஏனென்றால் மேற்கத்திய ஊடகங்கள் அந்த திட்டங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தன.

எங்களுடைய சினிமா தியேட்டர்கள் இத்தாலி, பிரெஞ்சு, சோவியத், ஜப்பானிய ஆகிய நாடுகளில் இருந்து மிகச் சிறந்த திரைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் அமெரிக்க குப்பைப் படங்களை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேடைக் கச்சேரி ஆனாலும், பதிவுசெய்யப் பட்டதானாலும், எமக்குக் கிடைத்த இசை மிக உயர்ந்த தரத்தில் இருந்தது. சிறிது தாமதமானாலும் நாம் விரும்பிக் கேட்ட இசை உள்ளூர் கடைகளில் கிடைத்தது. அன்று எமது கடைகளில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் விற்கப் படவில்லை. ஆனால், நாங்கள் அதைத் தான் விரும்பிக் கேட்டோம். அதையெல்லாம் மத அனுஷ்டானம் மாதிரி விரும்பிக் கேட்டதுடன், கேசட் வடிவிலும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஏதாவது கிடைக்கவில்லை என்றால், சுதந்திர பேச்சுரிமை பறிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் அலறின.

இளம் மூளைகளை ஏமாற்றுவது எப்படி என்று அன்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஒரு கட்டத்தில் நாம் விரக்தி அடைந்தவர்களாக இருந்தோம். எங்கள் நாடுகளில் இருந்த எல்லாவற்றையும் விமர்சித்தோம். எதனோடும் ஒப்பிட்டுப் பாராமல், சிறிதளவு கூட நடுநிலைமை இல்லாமல் நடந்து கொண்டோம்.

(மேற்குலகு) எங்களுக்கு சொன்னதை எல்லாம் திருப்பிச் சொன்னோம்: சோவியத் யூனியன், செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்த எதுவுமே கூடாது. மேற்குலகில் இருந்த ஒவ்வொன்றும் சிறந்தது. ஆம், அன்றிருந்த நிலைமை மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம், அல்லது மத அடிப்படைவாதம் போன்ற நம்பிக்கை. உண்மையில் அன்று நாம் ஒரு தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருந்தோம். அது எங்களை முட்டாள்களாக மாற்றி விட்டது.

சோஷலிச மானியங்கள் மூலம் எமக்குக் கிடைத்த வசதிகளான நூலகம், அரங்கம், தேநீர் விடுதி ஆகிய பொது இடங்களை பயன்படுத்தி எமது தேசத்தின் மீது சேறு பூசிக் கொண்டே, மேற்குலகை மகிமைப் படுத்தினோம். மேற்குலக வானொலி, தொலைக்காட்சி, அங்கிருந்து கடத்தப்பட்டு வந்த சஞ்சிகைகள் என்பன இவ்வாறு தான் எம்மை மூளைச்சலவை செய்து வைத்திருந்தன.

அந்தக் காலங்களில் மேற்குலகில் இருந்து வந்த பொலித்தீன் பைகள் எமது அந்தஸ்தாக மாறின! உங்களுக்கு தெரியுமா? இன்றைக்கு பெட்டிக் கடைகளில், சில மலிவான சூப்பர் மார்க்கெட்டுகளில் கொடுக்கும் அதே பொலித்தீன் பைகள் (shopping bags) தான். அவற்றை நாம் நிறையப் பணம் கொடுத்து வாங்கினோம். ஏனென்றால் அது நுகர்வுக் கலாச்சாரத்தை அடையாள படுத்தியது! நுகர்வுக் கலாச்சாரம் தான் நல்லது என்று நாங்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தோம்.

சுதந்திரத்தை விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்லப் பட்டது. அதாவது, மேற்கத்திய பாணி சுதந்திரத்தை. "சுதந்திரத்திற்காக போராட வேண்டும்" என்று கற்பிக்கப் பட்டோம். உண்மையில் நாம் பல வகைகளில் மேற்குலக நாடுகளை விட அதிக சுதந்திரத்தை அனுபவித்து வந்தோம். இதை நான் முதல் தடவையாக அமெரிக்கா வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். நியூ யோர்க் நகரில் என்னுடைய வயதையொத்த பிள்ளைகள் உலக அறிவு குறைந்தவர்களாக, மோசமான கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர்.

எமது உணவுகள் சுவையானவையாக, இயற்கையாக உற்பத்தி செய்யப் பட்டவையாக இருந்தன. ஆனால், நாம் வர்ணமயமான பைகளில் அடைக்கப்பட்ட மேற்கத்திய பொருட்களுக்காக ஆசைப்பட்டோம். நாம் இரசாயன பொருட்களை உண்ண விரும்பினோம்.

நாம் எப்போதும் ஆத்திரத்தோடு எதிர்க்கத் தயாராக இருந்தோம். எமது குடும்பங்களை பகைத்துக் கொண்டோம். நாம் மிக இளமையாக இருந்தாலும் பெரியவர்களாக நினைத்துக் கொண்டோம். நான் எனது முதலாவது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு விட்டு,கதவை இழுத்து சாத்தி விட்டு, நியூ யோர்க்கிற்கு சென்று விட்டேன். நான் ஒரு முட்டாளாக்கப் பட்டு விட்டேன் என்பதை வெகு விரைவில் உணர்ந்து கொண்டேன்.


முழுமையான கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

Monday, June 15, 2020

மெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு!


தெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

1994ல் மெக்சிக்கோ அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய மார்க்சிய EZLN குறுகிய காலத்திற்குள் பல நகரங்களையும், கிராமங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அரசின் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து மெக்சிக்கோ முழுவதும் கம்யூனிச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாடளாவிய மக்கள் எழுச்சி கண்டு அஞ்சிய அரச இராணுவம், EZLN புரட்சியாளர்களுடன் போர்நிறுத்தம் செய்து கொண்டது. 

அன்றிலிருந்து இன்று வரை அங்கு கம்யூனிச தன்னாட்சிப் பிரதேசங்கள் தன்னிறைவுப் பொருளாதாரம் மூலம் வளர்ந்து வருகின்றன. அவர்கள் பின்பற்றும் பொதுவுடைமைக் கல்வி அமைப்பு நமக்கு தெரிந்த முதலாளித்துவ கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது மட்டுமல்ல நேரடி ஜனநாயகம் பின்பற்றப் படுகிறது. 

அங்கு பணமில்லாத சமுதாயம் உருவாகி உள்ளது. நகரசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப் படுவதில்லை. அவர்களது உணவு, உடை, உறையுள் அனைத்துக்கும் கம்யூன் பொறுப்பு. இன்றைக்கும் சிறுபான்மை மாயா இன மக்கள் இந்தக் கம்யூன் அமைப்பில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். பன்னாட்டு இடதுசாரி தொண்டர்கள் அங்கு சென்று கம்யூன் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர்.



Saturday, June 13, 2020

அமெரிக்காவில் ஒரு கம்யூனிச மக்கள் குடியரசு!

அமெரிக்காவில் சியாட்டில்(Seattle) நகரில் Capital Hill வட்டாரத்தில் ஒரு பகுதியில் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கடைசியாகக் கிடைத்த தகவலின் படி, குறைந்தது 6 அடுக்கு மாடி குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து பாரிஸ் கம்யூன் பாணியிலான விடுதலைப் பிரதேசம் அமைத்துள்ளனர். அங்குள்ள பொலிஸ் நிலையம் "மக்கள் நிலையம்" எனப் பெயர் மாற்றப் பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் கம்யூன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளன. அனைவருக்கும் இலவச உணவு வழங்கப் படுகிறது. 


நிறவெறிக்கும், பொலிஸ் வன்செயலுக்கும் எதிரான போராட்டத்தை Antifa அமைப்பினர் ஒரு கம்யூனிசப் புரட்சியை நோக்கி நகர்த்த தொடங்கி உள்ளனர். கம்யூன் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் பிரதேசத்தை சுற்றிவர தடையரண்கள் போடப் பட்டுள்ளன. தெருக்களில் இருந்த கமெராக்கள் அகற்றப் பட்டுள்ளன. ஆயுதமேந்திய மக்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

 சியாட்டில் நகரில் காப்பிட்டல்ஹில் பகுதியில் ஒரு "கம்யூனிச தனி நாடு" உருவாகி விட்டதாக அமெரிக்க வலதுசாரி ஊடகங்கள் அலறுகின்றன. ஜனாதிபதி டிரம்ப் இராணுவத்தை அனுப்பி நசுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜூன் 9 முதல் அமெரிக்காவில் இருந்து விடுதலை பெற்ற பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? அதைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தீவிர இடதுசாரி ஆன்டிஃபா இயக்கத்தின் பின்னணி என்ன? 

பொலிஸ் இல்லாத சமுதாயம் சாத்தியமே என்பதை சியாட்டில் நகரில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கம்யூனிச புரட்சியாளர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். "காவல்துறைக்கு நிதி வழங்காதே!" என்பது அமெரிக்க மக்கள் எழுச்சியின் கோஷமாக மாறியுள்ளது.

Seattle protesters take over city blocks to create police-free 'autonomous zone' 

மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள எனது இரண்டு வீடியோக்களையும் பார்க்கவும்:
பகுதி : ஒன்று


 பகுதி: இரண்டு

Friday, June 05, 2020

அமெரிக்கப் புரட்சி 2.0

அமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ளையின உழைக்கும் மக்கள் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். அவர்களும் பொலிஸ் வன்முறைக்கு பலியாகிறார்கள். 

அண்மைக் கால கொரோனா நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட வேலையிழப்புகளும் அவர்களை போராடத் தூண்டிய காரணிகள். அங்கு நடக்கும் கொள்ளைகளில் பெரும்பாலும் சிறுவணிகர்களின் கடைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அவர்களில் கறுப்பின உரிமையாளர்களும் அடங்குவார்கள். அவர்களது வியாபார நிறுவனங்களும் சூறையாடப் பட்டுள்ளன. அதிலென்ன ஆச்சரியம்? கருப்போ, வெள்ளையோ, குட்டி முதலாளிகளின் வர்க்கக் குணம் ஒன்று தான். 

கறுப்பின மேட்டுக்குடியினர் இப்போதும் அரசுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறார்கள். அரசும் முக்கிய கறுப்பின பிரமுகர்களை, விளையாட்டுத்துறை பிரபலங்களை தொலைக்காட்சியில் தோன்றி "அறிவுரை" கூற வைக்கிறது. அவர்களும் "மக்களே, அமைதி வழியில் போராடுங்கள்... கலவரங்களில் ஈடுபடாதீர்கள்... கடைகளை கொள்ளையடிக்காதீர்கள்... இது அராஜகம்... அதனால் எமது இனத்திற்கு தான் பாதகம்..." என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். அதற்கு யாரும் செவி கொடுக்கவில்லை. வசதி படைத்தவனுக்கு வசதி இல்லாதவனின் வலி புரியாது. 

இன்று போராடும் மக்களிடம் இழப்பதற்கு சங்கிலிகளை தவிர வேறெதுவும் இல்லை. ஆளும் வர்க்கம் கீறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு போராடுவதற்குப் பெயர் போராட்டம் அல்ல. முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது. முதலாளித்துவ அமைப்பை தகர்க்காமல் விடுதலை பெற முடியாது. அந்த உண்மையை அமெரிக்க உழைக்கும் மக்கள் எப்போதோ உணர்ந்து விட்டார்கள்.


Monday, June 01, 2020

வட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்

  சோஷலிச மாதிரிக் கிராமம்


வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: 
1. உழைக்கும் மக்களுக்காக அரச செலவில் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள். 
2. உழைத்துக் களைத்த உடல் புத்துணர்ச்சி பெறவும், பொழுதுபோக்கவும் கட்டப்பட்ட நீச்சல் தடாகம். அனுமதி இலவசம். 
3. குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை. மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசம். 
4. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். கணணி வசதி கொண்ட நவீன வகுப்பறைகள். கல்வி முற்றிலும் இலவசம். 

 Poman-ri எனும் இந்த மாதிரிக் கிராமம் Sohung மாவட்டத்தில் உள்ளது. அது தென் கொரிய எல்லையோரம் உள்ள வட Hwanghae மாகாணத்தில் உள்ளது. கடந்த வருடம் திறந்து வைக்கப் பட்ட நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை நீங்களாகவே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். 

சிறுவர் மாளிகை


இது வட கொரிய பள்ளிப் பிள்ளைகளுக்காக கட்டப் பட்ட "சிறுவர் மாளிகை". வட கொரிய சிறுவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபடவும், இசைக் கருவிகளை பழகவும், புதிய மொழிகளை கற்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்காக மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. முற்றிலும் இலவசம். இந்த சிறுவர் மாளிகையை நடத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வட கொரியா முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் இது மாதிரி அறுபது சிறுவர் மாளிகைகள் உள்ளன. தலைநகர் பியாங்கியாங்கின் புறநகர் பகுதியான Mangyongdae இல் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை எல்லாவற்றிலும் பெரியது. 1989 ம் ஆண்டு பியாங்கியாங் நகரில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டை ஒட்டி இந்த பிரமாண்டமான சிறுவர் மாளிகை திறந்து வைக்கப் பட்டது.

Mangyongdae சிறுவர் மாளிகையில் பள்ளிப் பிள்ளைகள் தங்குவதற்கான 120 அறைகள் உள்ளன. ஒரு நீச்சல் தடாகமும், திரையரங்கும் உள்ளன. அத்துடன் விஞ்ஞான பரிசோதனை சாலைகள், நட்சத்திரங்களை காணும் தொலைநோக்கிகள், நவீன தொழில்நுட்ப அறிவியல் போன்ற பல துறைகளிலும் சிறுவர்கள் செயல்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

வட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இந்த சிறுவர் மாளிகைக்கு நேரில் சென்று பார்க்கலாம். ஒரு சில மேற்கத்திய சுற்றுலா பயணிகள் இங்கு நடக்கும் சிறுவர்களின் நடன நிகழ்வை மட்டும் படமாக்கி விட்டு, அதை பிரச்சார நோக்கில் தவறாக பயன்படுத்துகிறார்கள். "இதோ பாருங்கள், வட கொரிய சர்வாதிகார மன்னராட்சி சிறுவர்களை கொடுமைப் படுத்துகிறது!" என்று திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் அங்கிருக்கும் சிறுவர் மாளிகை பற்றிய தகவலை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.


தொழிலாளர்களுக்கான சுற்றுலா மையம்

Yangdok Hot Spring Resort in DPRK

இந்த ஆடம்பர சுற்றுலா விடுதி இருப்பது சுவிட்சர்லாந்தில் அல்ல, வட கொரியாவில்! மலைப் பகுதியான Yangdok எனும் இடத்தில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகங்களும், ஸ்கீ சறுக்கும் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளன. இவை சாதாரணமான தொழிலாளர்கள் தமது ஒய்வு நாட்களை உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக கட்டப் பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சாதாரணமான வட கொரிய ஆலைத் தொழிலாளர்கள், தமது குளிர்கால விடுமுறைக் காலத்தில் இங்கே வந்து குடும்பத்தோடு தங்குகிறார்கள். மலையில் பனியில் ஸ்கீ சறுக்கி விளையாடி விட்டு வந்து, வெந்நீர் தடாகத்தில் குளித்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது தங்குமிட செலவுகளில் பெரும்பகுதியை வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் பொறுப்பெடுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப் பட்ட இந்த சுற்றுலா விடுதிகள் அதிபர் கிம் யொங் உண்ணால் திறந்து வைக்கப் பட்டது. அப்போது இதனை "உயர்ந்த சோஷலிச நாகரிகம்" என்று வட கொரிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின. வட கொரியா செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று தங்கலாம். Yangdok Hot Spring Resort என்று இணையத்தில் தேடிப் பார்க்கவும்.