Thursday, December 29, 2016

மருதனாமடம் ஆஞ்சநேயர் சிலை உடைக்க வாருங்கள் தமிழ்த் தேசியர்களே!


முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிர தமிழ்த் தேசியர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், தமது சமூக வலைத்தளங்களில் சிலை உடைப்பை ஆதரித்து கருத்திட்டனர். அதில் அவர்கள் "காந்தி சிலை இந்திய மேலாதிக்கத்தின் குறியீடாக இருந்ததாலேயே உடைக்கப் பட்டதாக நியாயப் படுத்தினார்கள். மேலும், இந்திய தூதரகம் வடக்கு, கிழக்கில் நூறு காந்தி சிலைகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்களே தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் காந்தி சிலை உடைத்தவர்களுக்கும், அதை ஆதரித்தவர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்! மருதனாமடம் சந்தியில் உள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையை எப்போது உடைக்கப் போகிறீர்கள்? காந்தி சிலை இந்திய பிராந்திய மேலாதிக்கத்தின் குறியீடு என்றால், ஆஞ்சநேயர் சிலை மட்டும் என்னவாம்?

சைவ சமயிகளான ஈழத் தமிழர் மத்தியில், வரலாற்றில் என்றைக்குமே ஆஞ்சநேயர் வழிபாடு இருந்ததில்லை. ஈழத்தமிழருக்கு புத்தர் சிலையும், அனுமார் சிலையும் ஆக்கிரமிப்புச் சின்னங்கள் தான். இலங்கையை உள்ளடக்கிய அகண்ட இந்தியாவுக்கு உரிமை கோரும் இந்துத்துவா வாதிகள் தான் அதை ஆரம்பித்தார்கள். அதுவும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தான் பிரமாண்டமான அனுமார் சிலைகள் வைக்கப் பட்டுள்ளன.

இராமாயணத்தில் இராமருடன் ஒத்துழைத்த "இனத்துரோகி" அனுமான், இலங்கை மீது படையெடுக்க உதவிய "குரங்குப் படை" என்ற ஒட்டுக்குழுவின் தலைவனாக இருந்தான். அதற்கான நன்றிக் கடனாகத் தான், ஆக்கிரமிப்பாளன் இராமன் அனுமானை வழிபாட்டுக்கு உரியவன் ஆக்கினான்.

சிங்கள- பௌத்த பேரினவாதிகள், இலங்கை முழுவதும் புத்தர் சிலை வைப்பதைப் போல, ஹிந்தி- இந்து பேரினவாதிகள் இந்தியா முழுவதும் இராமர் சிலை வைத்தார்கள். ஆனால், அதே ஹிந்து - இந்து பேரினவாதிகள், தமிழ்நாட்டிலும் இலங்கையிலும், இராமன் சிலைக்கு பதிலாக அனுமான் சிலை வைக்கும் நோக்கம் என்ன?

இது "இராமாயண கால மனப்பான்மை" இல்லாமல் வேறென்ன? அதாவது, தமிழர்களை "குரங்குகளாக" சித்தரிப்பதும், இனத்துரோகி அனுமானை வழிபட வைப்பதும், எந்தளவு மோசமான கலாச்சார வன்முறை? காந்தியை விட மிகவும் மோசமான, இந்திய மேலாதிக்கக் குறியீடு தான் ஆஞ்சநேயர். அந்த சிலையை உடைப்பதற்கு ஏன் இன்னும் தயக்கம்?

இலங்கையில் முதன்முதலாக மலையகத்தில் ரம்பொடை எனும் ஊரில் தான் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப் பட்டது. ரம்பொடை என்ற பெயர் கூட "ராம் படை" என்பது மருவி வந்திருக்கலாம் என்று காரணம் சொல்கிறார்கள்.

அதாவது, இலங்கையில் இராமனின் ஆக்கிரமிப்பு இராணுவம் இருந்த இடத்தை நினைவுகூர்வதற்காக, அந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்திருக்கிறார்கள்! அப்படியானால் எதற்காக வடக்கே மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைத்தார்கள்?

"நவீன இராமன்" ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய இராணுவம், முகாமிட்டிருந்த இடத்தை நினைவுகூர்வதற்காகவா மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப் பட்டது? புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்ட காலத்தில், மருதனாமடம் பகுதியில் ஓர் அதிகாரி உட்பட ஏராளமான இந்தியப் படையினர் கொல்லப் பட்டனர். 


ரம்பொடையில் மட்டுமல்லாது, மருதனாமடத்தில் வைக்கப் பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைகள், முழுக்க முழுக்க இந்திய அரசின் நிதியுதவியுடன் தான் கட்டப் பட்டன. இது ஒன்றும் இரகசியம் இல்லை. மருதனாமடத்தில் ஆஞ்சநேயர் சிலைக்கு அருகில் புதிதாக கோயிலும் கட்டப் பட்டுள்ளது. அங்கே ஆஞ்சநேயர் வழிபாடு நடக்கிறது. கோயில் கட்டிய நிதி இந்தியாவுடையது.

இந்திய மேலாதிக்கத்தின் குறியீடான ஆஞ்சநேயர் சிலை உடைக்கப் படப் போகும் நன்னாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். காந்தி சிலையுடைத்த ஈழத் தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஆஞ்சநேயர் சிலை உடைப்பையும் ஆதரிப்பார்கள் என்று நம்புவோம்.

Wednesday, December 28, 2016

எழுபதுகளில் பொருளாதாரப் பிரச்சினை, எழுந்தது ஈழக் கோரிக்கை!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஏழாம் பாகம்)

கடந்த முப்பதாண்டு கால இலங்கை வரலாற்றில், தேசியவாத, இனவாத, மதவாதக் கருத்துக்கள் முன் எப்போதும் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாகக் காணப் படுகின்றது. அதே நேரம், இலங்கையின் பொருளாதாரம் முதலாளித்துவத்தை, குறிப்பாக நவ தாராளவாத கொள்கையை சிறப்பாக நடைமுறைப் படுத்தி வருவதையும் காணலாம். இவ்விரண்டு போக்குகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனது கடந்த கால வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு, அதை இங்கு ஆராய்கிறேன்.

இலங்கையில் இன்று தீவிரமாக தமிழ்த் தேசியம் பேசுவோர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினராக இருப்பார்கள். அதாவது, மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை இலகுவாக நிரூபிக்கலாம். அவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்கள். அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவிக்கிறார்கள். அதாவது, படித்து பட்டம் பெற்று, ஏதாவதொரு உத்தியோகம் பார்ப்பவர்களாக அல்லது வணிகத் துறையில் இருப்பார்கள்.

இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களாகவே ஒத்துக் கொள்ளும் உண்மை. சிங்களத் தேசியவாதிகள், முஸ்லிம் தேசியவாதிகள் யாரென்று பார்த்தால், அவர்களும் மேற்படி வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
- சமூகத்தில் மேன்நிலை அந்தஸ்தில் இருப்பவர்கள்.
- வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
- முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள்.
- கம்யூனிசத்தை, இடதுசாரியத்தை வெறுப்பவர்கள்.

சிங்கள-தமிழ்-முஸ்லிம் எந்த சமூகத்தை சேர்ந்த தேசியவாதியாக இருந்தாலும், மேற்படி அரசியல் கொள்கைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் நவ தாராளவாத பொருளாதாரத்தின் குழந்தைகள். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இந்த இளைய தலைமுறையினர். அதே காலகட்டத்தில் தான் இலங்கையில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்தது. முதலாளித்துவத்திற்கு சேவை செய்பவர்களை உருவாக்குவதற்காக, பாடத் திட்டங்களில் கூட மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன.

முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடாக இருந்த படியால், நிலப்பிரபுத்துவ எச்சங்களும் பரவலாக காணப் பட்டன. குறிப்பாக எழுபதுகளில் கூட, யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் சாதிய கட்டுமானங்களை கைவிட்டிருக்கவில்லை. அதனால் தான் தேசியவாதம் அங்கு காலூன்றுவதற்கு சிறிது காலம் எடுத்தது. தெற்கில் சிங்களத் தேசியவாதம் தோன்றி பல தசாப்தங்களுக்கு பிறகு தான், வடக்கில் தமிழ்த் தேசியவாதம் நிலை கொண்டது. அதற்கான காரணம் என்ன?

அப்போது வட மாகாணத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இலங்கையின் தொழிற்துறை முழுவதும் தெற்கில் தான் காணப்பட்டன. கொழும்புத் துறைமுகம் பெருமளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. இந்தியாவில் இருந்து கூட தொழிலாளர்கள் வந்து வேலை செய்தார்கள். ஆனால், வடக்கில் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை தவிர வேறெந்த தொழிற்துறையும் அங்கே இருக்கவில்லை.

முதலாளித்துவம் வரும் போதே தன்னோடு சேர்த்து வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு வரும். அதாவது, ஒரு நாட்டில் முதலாளித்துவ உற்பத்திகள் அதிகரிக்கும் பொழுது, ஒரு பக்கம் முதலாளிய- பூர்ஷுவா வர்க்கமும், மறுபக்கம் உழைக்கும்- பாட்டாளி வர்க்கமும் உருவாகும். அது பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளை சீர்குலைப்பதால், சாதிய முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. தென்னிலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதனால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அங்கே சிங்களத் தேசியவாதம் இருந்து வருவதில் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

ஒரு நாட்டில் தொழிற்துறையும், அதை சார்ந்த தொழிலாளர்களும் அதிகரிக்கும் நேரம், அங்கே இடதுசாரிக் கட்சிகள் பலம் பெறுவதையும் தவிர்க்க முடியாது. அது இலங்கையிலும் நடந்தது. எமது வீட்டில் நடக்கும் அரசியல் கலந்துரையாடல்களில், தவிர்க்கமுடியாமல் இடதுசாரிகள் பற்றிய கதைகளும் அடிபடும். அதற்குக் காரணம் இருக்கிறது. ஐம்பதுகள், அறுபதுகளில் கொழும்பில் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறும்.

பாலா தம்பு என்ற தமிழ் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பற்றி, எமது வீட்டில் அப்பாவும், அவர்களது நண்பர்களும் அடிக்கடி பேசுவார்கள். அன்று அவர்கள் மிகவும் மதித்த அரசியல் தலைவர்களில் பாலா தம்புவும் ஒருவர். அப்போது நான் சிறுவனாக இருந்த படியால், பல விடயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. இருப்பினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிப் பேசும் பொழுது, அது பற்றித் தெரியாமல் இருக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் மத்தியதர வர்க்கத்தினர் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கவில்லை. தமக்குக் கீழே இருந்த பாட்டாளி வர்க்கத்துடன் தங்களையும் சேர்த்து ஒரே உழைக்கும் வர்க்கம் என்ற எண்ணம் இருந்தது. எனது பெற்றோரின் தனிப்பட்ட கருத்துக்களும் அப்படித் தான் இருந்தன. அதனால், அன்று நடந்த வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவளித்தனர். அப்போதெல்லாம் அரச ஊழியர்களும் பங்கெடுத்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் ரீதியாக எனது அப்பாவும் ஒரு வலதுசாரி தான். தமிழ்த் தேசியவாதி தான். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், அவர் எதையும் பிரச்சார நோக்கில் பேசவில்லை. நியாயம் எங்கே இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தார். தற்போதுள்ள வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மாதிரி, "தமிழரின் சுய நிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகள் நாசமாகப் போகட்டும்!" என்று சாபம் போடவில்லை. அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்கள் பக்க நியாயங்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம் என்றுரைத்தார்.

உண்மையில், முதன்முதலாக ஜேவிபி யை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் என் தந்தை தான். அவர் வேலை செய்த இடத்தில் ஜேவிபி ஆதரவாளர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூலம் கிடைத்த ஜேவிபியின் தமிழ்ப் பிரசுரங்களையும் எனக்கு வாசிக்கத் தந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஒரு பிரசுரமும் அவற்றில் இருந்தது. அது இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. அப்போது அதைப் புரட்டி வாசித்திருக்கிறேன். ஆனால், அதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அரசியல் அறிவு போதுமானதாக இருக்கவில்லை.

அதற்காக, அப்பா அன்று ஜேவிபியை ஆதரித்தார் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அன்றிருந்த நிலைமை வேறு. பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் புலிகளின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கினர் என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அன்று ஜேவிபி தொடர்பாகவும் இருந்தது. கணிசமான அளவு சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும், மறைமுகமாக ஜேவிபிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி இருந்தனர். அதற்குக் காரணம், அரச இயந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அரசின் மீது எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது. அவர்கள் ஜேவிபி வடிவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

மேலும் ஜேவிபி குட்டி முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியது. தாய்மொழியில் கல்வி கற்ற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களை கவர்ந்திருந்தது. அப்போதிருந்த சிறிமாவோ அரசும் சோஷலிசத்தை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டது. சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தது. ஜேவிபி சோஷலிச இலங்கைக்காக ஆயுதமேந்திப் போராடுவதாக அறிவித்த நேரம், அந்த நாடுகள் எதுவும் ஆதரவு வழங்கவில்லை. மாறாக, ஜேவிபி கிளர்ச்சியை மூர்க்கமாக ஒடுக்கிய சிறிலங்கா அரசை ஆதரித்தன. ஆயுதங்களும் கொடுத்துதவின.

உலகில் எந்த நாட்டினதும் ஆதரவு கிடைக்காத நிலையில், அல்லது அப்படி எதையும் எதிர்பார்க்காத காரணத்தால், ஜேவிபி "மண்ணுக்கேற்ற மார்க்சியம்" ஒன்றை உருவாக்கி இருந்தது. அதில் தேசியவாதத்தின் கூறுகளும் அடங்கி இருந்தன. சர்வதேச அளவில், வட கொரியாவும், கம்பூச்சியாவும் இது போன்ற மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தன. வட கொரியாவில் கிம் இல் சுங், கம்பூச்சியாவில் பொல் பொட் ஆகியோரைப் பின்பற்றி, இலங்கையில் ரோகன விஜேவீர புதிய சித்தாந்தம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.

எழுபதுகளில் ஒரு குழப்ப நிலை இருந்தது. பலருக்கு சரியான அரசியல் பாதை எதுவென தெரிவு செய்ய முடியாமல் இருந்தது. அன்றைய இலங்கையின் சமூக பொருளாதாரமும் அதற்கான முக்கிய காரணம். அந்நிய நாட்டு இறக்குமதி பெருமளவு குறைக்கப் பட்டது. இலங்கை தற்காப்புப் பொருளாதாரத்தை பின்பற்றியது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசால் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அரசு தான் நாட்டில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக இருந்தது. பெரும்பான்மையான மத்திய தர வர்க்கத்தினர் அரச ஊழியர்களாக இருந்தனர்.

அன்று பங்குச் சந்தை என்ற சொல்லையே யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அப்படி எதுவும் இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தனியார்மயம் புகுத்தப் பட்டு பங்குச் சந்தை உருவானது. அப்போது பல பெரிய நிறுவனங்களின் மதிப்பு பங்குகளாக பிரிக்கப் பட்டு, பொது மக்களுக்கும் விற்பனை செய்யப் பட்டது. எனது அப்பாவும் சில பங்குகள் வாங்கி இருந்தார். அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விளையாட்டுப் போன்றிருந்தது. எதிர்கால பொருளாதாரத்தில் பங்குச் சந்தை வகிக்கப் போகும் பிரதானமான பாத்திரம் குறித்து அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, "சோஷலிசம் அல்லது இடதுசாரியம் பிடிக்காது" என்பதாக இன்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அன்றும் முதலாளித்துவத்தை ஆதரித்த லிபரல்வாதிகள் பலர் இருந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வாழும் மேட்டுக்குடியினராக இருப்பார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மொத்த சனத்தொகையில் அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது. அன்று அவர்களது குரல் பெரிதாகக் கேட்கவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு வலதுசாரி, முதலாளிய ஆதரவாளரான என் தந்தையே சோஷலிசத்தையும் ஆதரித்தார்! அதற்குக் காரணம் என்ன தான் முதலாளித்துவத்தின் மீது பற்று இருந்தாலும், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என நம்பினார். உதாரணத்திற்கு, சிறிமாவோ காலம் பற்றிய அப்பாவின் விமர்சனங்களை எடுத்துக் காட்டலாம்.

பொதுத் தேர்தலில் சிறிமாவோ ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டு, ஜே.ஆர். தாராளமயம் கொண்டு வந்த காலத்தில் தான், அப்பா அந்த விமர்சனத்தை முன்வைத்தார். பொருளாதார விடயத்தில் அந்த அரசாங்கத்தின் குறிக்கோள் நல்லது தான். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது தான். சிலவேளை, இன்னும் சில வருடங்கள் போயிருந்தால் அதன் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. மக்கள் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேலும் சகிக்க முடியாது என்ற நிலைமையில் தான் தேர்தலில் தோற்கடிக்க வைத்தனர்.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று சொல்லி, சிறிமாவோ அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக ஏழாண்டுகள் ஆட்சி நடத்தியது. வெளிநாட்டு இறக்குமதி நிறுத்தப் பட்டு, உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டம் என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன. விவசாயம் அதன் மையப் பொருளாக இருந்தது. அரசு மானியங்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தது.

எங்கும், எப்போதும் விவசாயம் பற்றிய பேச்சாக இருந்தது. அன்று மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பலர் விவசாயிகளாக மாறி இருந்ததை, இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒரு சாதாரணமான ஆசிரியர் கூட, மாதாந்த சம்பளப் பணத்தில் இருந்து சேமித்த தொகையில், ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்தார். வன்னியில் நிலம் இன்னும் மலிவாகக் கிடைத்தது. படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் அரசு இலவசமாகவும் நிலம் கொடுத்தது.

மத்திய தர வர்க்க உத்தியோகம் பார்த்தவர்கள், விவசாயத்தை ஒரு பகுதி நேரத் தொழிலாக செய்து வந்தனர். அதன் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைத்தது. அதனால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் பலருண்டு. எனது பெற்றோரும் அவர்களில் அடக்கம். எனது அப்பாவும் அடிக்கடி வன்னிக்கு சென்று விவசாயம் செய்து விட்டு வருவார்.

அந்தக் காலத்தில் "கமத்தொழில் விளக்கம்" என்ற சஞ்சிகை பிரபலமாக இருந்தது. பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு பற்றிய கட்டுரைகள், படங்களுடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. எல்லோருக்கும் புரியக் கூடிய மொழிநடையில் எழுதப் பட்டிருக்கும். எங்கள் வீட்டில் அது கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அவற்றை வாசித்து எனது விவசாய அறிவையும் பெருக்கிக் கொண்டேன். பாடசாலையில் தொழிற்கல்வி ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைமை வந்த நேரம், நான் விவசாய பாடம் தெரிவு செய்து படித்தேன். என்னைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுவான பாடங்களில் அதுவும் ஒன்று.

மேற்குறிப்பிட்ட காலப் பின்னணியை வைத்துப் பார்க்கும் பொழுது, அன்றிருந்த மக்கள் சோஷலிசத்தை சிறந்ததாக நினைத்ததில் தவறேதும் இல்லை என்பது தெளிவாகும். சிறிமாவோ காலத்தில் உணவுப் பொருட்கள், உடைகள், பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்தது. அதனால் ஏராளமான மக்கள் கஷ்டப் பட்டனர். இதற்கிடையே, ஓரிரு வருடங்கள் பருவ மழை பெய்யாத படியால் வரட்சி நிலவியது. அரசு செயற்கை மழை உருவாக்க எத்தனித்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

எழுபதுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தில் பெரியளவு தாக்கம் செலுத்தியது. அது சமூக அரசியலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மழை வீழ்ச்சி குறைந்த படியால் விவசாயம் பாதிக்கப் பட்டது. பஞ்சம் ஏற்பட்டது. இறக்குமதிக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்படியான பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட மக்களின் மனக்குமுறல் அரசியலில் எதிரொலித்தது.

பொதுத் தேர்தலில் சிறிமாவோவின் சுதந்திரக் கட்சிக்கு படுதோல்வி கிட்டியது. எதிர்பாராத விதமாக வடக்கு, கிழக்கில் அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக வந்தது. அது முன்வைத்த தமிழீழக் கோரிக்கை பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடுவதாக சொன்ன விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களும் அதிகரித்தன.

ஆகவே, இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வது போன்று, "ஒன்றுபட்ட தமிழ் இன உணர்வும், தமிழீழத்திற்கான வேட்கையும்" ஈழபோருக்கான உந்துசக்திகளாக இருக்கவில்லை. அதற்கான சமூகப் பொருளாதார காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. இலங்கையில் சிறிமாவோ அரசும், இந்தியாவில் இந்திராகாந்தி அரசும், இறக்குமதியை தடுத்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அந்தக் காலத்தில் இரு நாடுகளிலும் வெவ்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இது கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாகப் போனது. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி கடத்தல் படகுகள் சென்று வந்தன. அது ஒரு சட்டவிரோத பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. குட்டிமணி போன்ற கடத்தல்தொழிலில் ஈடுபட்ட சிலர், துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர்.

தமிழ்நாட்டுடன் கடத்தல் வியாபாரம் செய்து வந்த அரசியல் ஆர்வலர்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரை கைக்குள் வைத்திருந்தார்கள். ஒரு இரகசியமான ஆயுதக் குழுவின் உருவாக்கத்திற்கு அவை போதும். ஒரு காலத்தில் TELO "முதன் முதலாக தோன்றிய இயக்கம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தது. குட்டிமணி, தங்கத்துரையை தலைவர்களாகக் கொண்ட TELO இயக்கம் பற்றி நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம் பிரபாகரனும் அதில் இருந்தார். 1983 வெலிக்கடை சிறைப் படுகொலைகளில், குட்டிமணி, தங்கத்துரை கொல்லப் பட்டதும், இயல்பாகவே ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகியது.

அதை விட, எழுபதுகளில் மழைவீழ்ச்சி குறைந்த படியால், விவசாயம் பாதிக்கப் பட்டதும் மக்களை வேறு திசையில் சிந்திக்க வைத்திருந்தது. அதுவே கூட்டணி தமிழீழத்தை முன்மொழிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான ஆதரவாகவும் மாறி இருந்தது. தென்னிலங்கையில் சிங்கள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து யு.என்.பி. க்கு வாக்களித்தனர். அதே தான் வட இலங்கையிலும் நடந்தது. தமிழ் வாக்காளர்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான், த.வி.கூ. க்கு வாக்களித்தனர். அன்று இலங்கையில் நடந்த மாற்றம் ஒன்று தான். ஆனால், காலப்போக்கில், சிங்களவர்களும், தமிழர்களும், அதனை இன முனைப்புக் கொண்ட அரசியலாக மொழிபெயர்த்துக் கொண்டனர்.

(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3.தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4. ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்? 
5. ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!
6. தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி

Tuesday, December 27, 2016

வறுமை காரணமாக முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் புலிப் போராளி!

வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.

லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். (ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ) இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், "கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள்.

அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளர் "இது ஒரு நுணுக்கமான இனவழிப்பு" என்று பிதற்றினார். இதைக் கூறிய நிராஜ் டேவிட் என்ற அந்த அறிவிப்பாளர் ஒரு கிறிஸ்தவர்.முன்பொரு தடவை "தமிழர்கள் யூதர்களாக (மதம்) மாற வேண்டும்" என்று ஆலோசனை கூறியவர். இஸ்ரேலையும், யூதர்களையும் புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக் குவித்தவர். முஸ்லிமாக மாறும் தமிழர்கள் "இன்னொரு இனமாகி" விடுவார்கள். அதனால் அது ஒரு "நுணுக்கமான இனவழிப்பு" என்று விளக்கம் கூறுகிறார். முன்பு நிராஜ் டேவிட்டின் ஆலோசனையை கேட்டு தமிழர்கள் யூதர்களாக மாறி இருந்தால், அது இனவழிப்பு ஆகாதா? ஏன் இந்த இரட்டை வேடம்?

பரமேஸ்வரி சீவகன் அவர்கள் தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பேட்டி கண்டுள்ளனர். இவர்களைப் போன்று பலர் இருக்கிறார்கள் என்பதை அவரே கூறி இருந்தார். அதாவது, இந்த ஆவணப் படத்தில் காட்டப் படுபவர் மட்டுமல்லாது, ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் முஸ்லிம்களாக மதம் மாறியுள்ளனர்.

அதற்கான காரணத்தை ஆராய்ந்த மனநல மருத்துவர் பின்வரும் காரணங்களை கூறினார். முன்பு அவர்கள் சார்ந்திருந்த சைவக் கோயில்களில் இது போன்ற பிரச்சனைகளை கையாளும் நடைமுறை எதுவும் இல்லை. அது ஒரு பெரிய குறைபாடு. மேலை நாடுகளில் இருப்பது மாதிரி மனோவியல் ஆலோசனைகள் வழங்கும் பொறிமுறைகளும் போதுமான அளவிற்கு இல்லை. நகர்ப் புறங்களில் வாழும் வசதி படைத்தவர்களுக்கு கிட்டும் இது போன்ற சலுகைகள், போரினால் பாதிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் மதம் மாறுவதன் மூலம் பல நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிகின்றது.

முஸ்லிமாக மாறிய முன்னாள் போராளியும் அதனை தெளிவாக குறிப்பிடுகின்றார் போரில் பாதிக்கப் பட்டு நோயாளியான அவருக்கு உதவுவதற்கு இந்து சமூகத்தில் யாரும் முன்வரவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவுடன் இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, இங்கு சமூகத்தில் ஒதுக்கப் பட்டவர்கள் ஆதரவின்மை காரணமாக மன அழுத்தங்களுக்கு ஆளாவது கவனிக்கத் தக்கது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் புறக்கணிக்கப் படும் பொழுது, அது கிடைக்கும் இடத்தை நோக்கிச் செல்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேலும் முஸ்லிமாக மதம் மாறியதால், புலனாய்வுத்துறையினரின் சந்தேகக் கண்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ முடிந்துள்ளது.

இது போன்றதொரு சம்பவத்தை எங்கள் ஊரிலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். எனது உறவினர்களில் ஒருவர், இறுதியுத்தத்திற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார். அவரைத் தேடி வீட்டுக்குச் சென்ற படையினர், கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார். அதற்குப் பின்னர், அவரது மனைவியும் பிள்ளைகளும் அநாதரவாக நின்றனர். மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த நிலைமையில், அந்தப் பெண் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.

முன்பு கிழக்கு மாகாணத்தில் பெருமளவு காணப்பட்ட அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள், தற்போது வட மாகாணத்திலும் பல்கிப் பெருகி உள்ளன. அதில் சேர்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் அல்லது ஒடுக்கப் பட்ட சமூகத்தினர். ஆவணப் படத்தில் வரும் மனோதத்துவ நிபுணர் சொல்வதைப் போல, இதன் மூலம் அவர்களுக்கு ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது. இது ஒரு மனோவியல் பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கான சமூகக் கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும். ஆனால், பாமர மக்களுக்கு தெரிந்த ஒரே வழி மதம் மாறினால் ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது என்பது தான்.

சிவசேனை போன்ற இந்து மதவாதிகள், இந்தப் பிரச்சினையை கையாளத் தெரியாமல், "மதம் மாற்றுகிறார்கள்" என்று பிற மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. மாறாக, இருக்கும் பிரச்சினையை கூர்மைப் படுத்தவே அது உதவும். இங்கே பிரச்சினை மதம் அல்ல. இலங்கை போன்ற வறிய நாடுகளில், ஆதரவற்றவர்களை தாங்கிப் பிடிக்கும் நிறுவனமோ அதற்கான நடைமுறையோ எதுவும் இல்லை.

மேற்கத்திய நாடுகளில், அரசு அதற்கான வழிவகைகளை செய்து கொடுத்துள்ள படியால், அங்கு யாரும் மதம் மாறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒரு சோஷலிச நாட்டில் அல்லதுமேலைத்தேய நலன்புரி அரசுக்களில் நடைமுறையில் இருந்தது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பு அவசியமாகின்றது. அதைப் புறக்கணித்து விட்டு, வெறுமனே "கட்டாய மத மாற்றம் நடக்கிறது" என்று குற்றம் சாட்டுவதால் பயனேதுமில்லை. இலங்கையில் உள்ள தமிழ் பேசும் சிவில் சமூகம் தொடர்ந்தும் ஏழைகளை புறக்கணித்து வந்தால், அவர்களும் தமக்குத் தெரிந்த மதம் மாறும் வழிகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது.

வாய் நிறைய தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே, தமது சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரக்கப் படாத கயவர்கள் இவர்கள். தமது இனத் துரோகத்தை மறைப்பதற்காக எந்த பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்காதவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வசதிபடைத்த புலி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு முன்னாள் புலிப் போராளிக்கு உதவி செய்தாலே போதும். அதையும் இந்த ஆவணப் படமே கூறுகின்றது.

ஈழத் தமிழர் மத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வை மூடி மறைத்துக் கொண்டே "எல்லோரும் தமிழர் என்று ஒரே இனமாக சிந்திக்கிறார்கள்" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வீணர்கள் உண்மைகளை பேசப் போவதில்லை. இன்று கைவிடப் பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.

ஈழப் போர் முடிந்தவுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த போராளிகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக ஒதுக்கப் பட்டனர். எந்த நேரமும் சந்தேகப் படும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடி ஒரு பக்கம். வேலை வாய்ப்பில்லாத படியால் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் மறுபக்கம். அதேநேரம், போர் அனுபவங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் மனநிலை பாதிக்கப் பட்டுமுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு, எந்தவொரு இந்து மத அமைப்போ அல்லது தமிழ்த் தேசிய அமைப்போ முன்வரவில்லை. அப்படியான நிலையில் அவர்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத மாற்றத்தை எதிர்ப்பவர்கள் முதலில் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். அதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுங்கள். இல்லாவிட்டால் அங்கு நடக்கும் மதமாற்றத்திற்கு, நீங்களும் ஒரு வகையில் உடந்தை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.

Friday, December 23, 2016

தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஆறாம் பாகம்)

 "ஈழத் தமிழர்கள் அஹிம்சா வழியில் போராடி, அடிக்கு மேல் அடி வாங்கியதால் தான் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள்..." இவ்வாறு இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அன்றைய நிலவரம் அப்படி இருக்கவில்லை. அஹிம்சா வழிப் போராட்டம் எனும் பாராளுமன்றப் பாதையை மட்டுமே நம்பியிருந்த தமிழ்த் தேசியவாதிகள், 1982 ம் ஆண்டு வரையும் பலமான சக்தியாக இருந்தனர். விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் போராட்டத்தை நம்பிய இயக்கங்கள், முதலில் அஹிம்சா வழி தமிழ்த் தேசியவாதிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டி இருந்தது.

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், மீண்டும் பாராளுமன்ற அரசியல் பாதையை நம்பியிருக்க வைக்கப் பட்டுள்ளனர். அன்றிருந்த தலைமுறையினர் பாராளுமன்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது மாத்திரமே தமது அரசியல் கடமை என்றிருந்தார்கள். இன்றைய தலைமுறையினரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பசிக்கு தீனி போடுவது போல, ஊடகங்களும் அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பின்னர் அதுவே திண்ணைப் பேச்சாக விவாதிக்கப் படும்.

நான் இருபது வருட புலம்பெயர் வாழ்வுக்குப் பின்னர் ஊருக்கு திரும்பிச் சென்ற பொழுது, அங்கிருந்த மக்களின் அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதை நேரில் கண்டேன். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான உதயன் பத்திரிகை, யாழ் குடாநாட்டில் பிரதானமான கருத்துருவாக்கியாக இருக்கின்றது. அது உண்மையை எழுதுகிறதா, பொய் எழுதுகிறதா என்று ஆராயாமல், அப்படியே நம்பும் அளவிற்கு மக்கள் உள்ளனர்.

இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் பொழுது, எண்பதுகளில் வாழ்ந்த தலைமுறையினர் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டு சிந்தித்தனர் என்று கூறலாம். அன்றைக்கும் ஈழநாடு, சுதந்திரன் ஆகிய இரண்டு தினசரிப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் கருத்துருவாக்கிகளாக செயற்பட்டன. இரண்டுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தாலும் சிறியளவு வித்தியாசமும் இருந்தது.

ஈழநாடு யாழ் மையவாத பூர்ஷுவா வர்க்கத்தின் மனநிலையை பிரதிபலித்தது. அன்றைய நிலையில் எந்த இயக்கத்தையும், கட்சியையும் ஆதரிக்காமல் "நடுநிலையாக" நடந்து கொண்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்த போது, அது வெளிப்படையாகவே இந்திய ஆதரவு நிலை எடுத்தது. 1987 ம் ஆண்டு, புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டதும், ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.

புலிகள் நடத்தி வந்த நிதர்சனம் தொலைக்காட்சி நிலையம், ஈழமுரசு பத்திரிகை காரியாலயமும், இந்தியப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. அதற்குப் பதிலாக, புலிகள் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கு குண்டு வைத்து தகர்த்தார்கள். அந்த சமபவத்திற்குப் பின்னர் புலம்பெயர்ந்த ஈழநாடு, பாரிஸ் நகரில் இருந்து வெளியானது. அப்போது அது புலி ஆதரவு நிலை எடுத்திருந்தது.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னார். ஒரு (இங்கே ஈழத்திற்கான) விடுதலைப் போராட்டமும் அப்படித் தான். மனித உரிமைகள், தார்மீக ஆதரவு எல்லாவற்றையும் சரி பார்த்து போராட்டம் நடப்பதில்லை. ஒரு காலத்தில் பெரும்பான்மை ஈழத் தமிழரின் ஆதரவைப் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை புலிகள் சுட்டுக் கொல்ல முடிந்தது. அதற்குக் காரணம் அன்றைய மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மனமாற்றம் தான்.

2016 ல் தீர்வு பெற்றுத் தருவதாக சொன்ன சம்பந்தனையும், கூட்டமைப்பையும் விமர்சிக்கும் பலர் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். ஒரு சாதாரணமான பூர்ஷுவா (முதலாளித்துவ) வர்க்க அரசியல் கட்சியிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் அள்ளி வீசுவதும், வென்ற பின்னர் அதை மறந்து விடுவதும் பூர்ஷுவா கட்சிகளுக்கு வாடிக்கையான விடயங்கள். உலகம் முழுவதும் அப்படித் தான் பாராளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகின்றது.

1977 ம் ஆண்டு, கூட்டணி தேர்தலில் வென்றால் தமிழீழம் வாங்கித் தருவதாக ஏமாற்றியது. அதை விட பெரிய துரோகத்தையா இன்றைய கூட்டமைப்பு செய்துள்ளது? ஆனால், அன்று கூட்டணி சொன்னதை உண்மையென்று நம்பி வாக்களித்த மக்கள், அதுவும் வழமையான தேர்தல் வாக்குறுதி என்று அறிந்து கொண்டதும் கொந்தளித்தார்கள்.

ஒரு தடவை, எங்கள் ஊரில் நடந்த கூட்டணிக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்குமுக்காடினார்கள். அது 1982 ம் ஆண்டு என நினைக்கிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரட்ணம் பேசிக் கொண்டிருந்தார். "தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கதை என்னாச்சு?" என்று பலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த நவரட்ணம் "தம்பி மாருக்கு நிலைமை விளங்குவதில்லை.... இது கத்தி முனையில் நடப்பது போன்றது..." என்று சொல்லிச் சமாளித்தார்.

தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது சுகபோக வாழ்க்கைக்கு தேர்தல் அரசியல் அவசியமாக இருந்தது. அதனால் காலத்திற்கு காலம் புதுப்புது வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்தனர். இந்த உண்மைகள் சாதாரணமான பாமர மக்களுக்கும் தெரிய வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

1982 ம் ஆண்டு நடந்த மாவட்ட சபைத் தேர்தல் தான், ஈழப்போர் தொடங்க முன்னர் இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் ஆகும். தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கூட்டணி, மாவட்ட சபைகளை ஒரு சிறந்த தீர்வாக காட்டிக் கொண்டிருந்தது. அனைத்து ஆயுதக் குழுக்களும் அதை பகிஷ்கரித்திருந்தன. வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கா விட்டால், சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று புலிகள் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தனர்.

எமது ஊரில் மாவட்ட சபைக்கு போட்டியிட்ட கூட்டணி உறுப்பினர்கள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயமுற்றார். அவர்களை சுட்டவர்கள் புலிகள். யாழ்ப்பாணத்தில் காவல் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். புளொட் இயக்கம் அந்தத் தாக்குதலை நடத்தியது என நினைக்கிறேன். அதன் எதிர்விளைவாக, சிங்களப் பொலிசார் வெறியாட்டம் போட்டனர். யாழ் நகரில் இருந்த கடைகள் எரிக்கப் பட்டன. அப்போது தான் யாழ் பொது நூலகமும் எரிக்கப் பட்டது.

அந்தக் காலங்களில், கூட்டணிக் கட்சி இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் ஆவணப் படுத்தி வந்தது. அன்று யாழ் நகரில் நடந்த கலவரக் காட்சிகளை புகைப்படங்களாகவும், உணர்ச்சியை தூண்டும் வசனங்களாகவும் கொண்ட நூலாக வெளியிட்டது. அதன் பெயர் நினைவில்லை. அந்த நூல் வெளிவந்த உடனேயே கடைகளில் விற்றுத் தீர்ந்தது. பாடசாலையில் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அதை வாசித்தார்கள்.

சிங்களவர்களின் கொடுமைகளை கண்டு தமிழர்கள் கொதித்தெழ வைப்பது தான் இது போன்ற பிரசுரங்களை வெளியிடுவோரின் நோக்கமும். அன்று அது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்க உதவியது. பிற்காலத்தில் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு போராளிகளை சேர்க்க உதவியது. தமிழ் மக்களின் இன அடிப்படையிலான உணர்வுகளை தூண்டி விட்டால் போதும், தமிழீழம் கிடைத்து விடும் என்று கூட்டணி நம்பியது. அதையே பிற்காலத்தில் புலிகளும் நம்பினார்கள். இன்றைக்கு புலி ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும் அதே பாணியிலான அரசியலைத் தான் பின்பற்றுகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். எண்பதுகளில் பாராளுமன்றப் பாதையை முற்றிலும் நிராகரித்த புதிய தலைமுறை ஒன்று உருவாகி இருந்தது. அது ஒரு புரட்சிகரமான சமூக மாற்றம். பத்து வருடங்களுக்குப் பின்னர், ஆயுதப் போராட்டத்தையும்(பாராளுமன்ற)அரசியல் போராட்டத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கப் பழகிய சமூகமாக மாறி இருந்தது. இந்த மாற்றத்தை புலிகள் கூட காலந் தாழ்த்தி தான் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் அவசர அவசரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் பலனை அனுபவிப்பதற்குள் இறுதிப் போர் வந்து எல்லாம் முடிந்து போனது.

தமிழ்த்தேசிய சித்தாந்தவாதிகள் பரப்புரை செய்வது போன்று "அஹிம்சைப் போராட்டத்தில் பொறுமையிழந்த" தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை. இது புறக் காரணிகளை கவனத்தில் எடுக்காத ஒரு குறுகிய மனப்பான்மை. தமிழ்த்தேசியவாதிகள், உள்முரண்பாடுகள் காரணமாக, "அஹிம்சாவாதிகள், ஆயுதப் போராளிகள்" என்று இரண்டாகப் பிரிந்து உட்பகை கொண்டு மோதியதை மூடி மறைப்பது ஏன்? அது மட்டுமல்ல, தலைமுறை இடைவெளியும் முக்கிய பங்காற்றியது. அன்றைய இளைய தலைமுறையினர் பாராளுமன்ற பாதையை புறக்கணித்து ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தமைக்கு சர்வதேச நிலவரமும் காரணமாக இருந்தது. இன்றும் கூட, தமிழ்க் குறுந்தேசிய வாதிகள் இது போன்ற விடயங்களை கவனத்தில் எடுப்பதில்லை. இயங்கியல் போக்கை மறுத்து, வெறும் சித்தாந்தப் பற்று மட்டுமே விடுதலையை பெற்றுத் தரும் என்பது ஒரு மாயை.

கியூபாவில் பிடல்காஸ்ட்ரோ குழுவினர் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். அதே பாணியை பின்பற்றி நிகராகுவாவும் விடுதலை அடைந்தது. இந்தியாவில் நக்சலைட்டுகளின் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் தாக்குதல்கள் பற்றி, இந்திய வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. அதே நேரம், தென்னிலங்கையில் தோல்வியுற்ற ஜேவிபி கிளர்ச்சி பற்றி, "சேகுவேராவாதிகளின் போராட்டம்" என்ற தலைப்பில் தமிழ் மக்களால் ஆய்வு செய்யப் பட்டது. இவை எல்லாம் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்தவில்லை என்று சொல்ல முடியுமா?

இந்த இடத்தில் மீண்டும் ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதுவும் ஒரு ஈழத் தேசியவாத இயக்கம் தான். ஆனால், மார்க்சிய லெனினிச கோட்பாடுகளை கற்றறிந்த படியால், ஈழப் போராட்டத்தில் புதிய ஒளியை பாய்ச்சி இருந்தனர். அறுபதுகளில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டம் தான் தமிழர்களின் முதலாவது ஆயுதப் போராட்டம் என்று கூறி வந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுதும், பொதுக் கூட்டங்களிலும், அவர்கள் அந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தனர். இன்று இவ்வாறான கடந்த கால வரலாற்றை மறந்து விட்ட அரசியலற்ற தலைமுறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Thursday, December 22, 2016

ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (ஐந்தாம் பாகம்)

மேட்டுக்குடி சிந்தனை கொண்ட மத்திய தர வர்க்கத்தினர், வலதுசாரி அரசியல் கொள்கையை ஆதரிப்பது அதிசயமல்ல. இடதுசாரிகளை தமது எதிராளிகளாக கருதி வெறுப்பதும் அவர்களது அடிப்படை வர்க்கக் குணாம்சம். அதற்காக, "தமிழர்களுக்கு இடதுசாரிகளைக் கண்டால் பிடிக்காது" என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அளவுக்கதிகமானது. வலதுசாரிகளுக்குப் பிடிக்காதது எல்லாம், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பிடிக்கக் கூடாது என நினைப்பது அபத்தமானது.

அந்தக் காலகட்டத்தில் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தனே ஜனாதிபதியாக இருந்தார். விடுதலைப் புலிகள், மற்றும் புளொட் ஆகியவற்றின் கெரில்லாத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. எயர் லங்காவுக்கு சொந்தமான அவ்ரோ விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது. அப்போது விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், பத்திரிகைகளில் செய்திகளை வாசித்து விட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான்,அதிலிருந்து விலகி ஜே.ஆர். அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றிருந்தார். மாணவர்கள் அவரை "துரோகி" என்று சொல்லித் திட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று எமது அரசியல் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியே தீர்மானித்தது. அவர்கள் யாரையெல்லாம் துரோகி என்றார்களோ, நாங்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப் பழகினோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அஹிம்சா வழியில் போராடும் மிதவாதக் கட்சியாகக் காட்டிக் கொண்டது. ஆனால் அது உண்மை அல்ல. வலதுசாரி கூட்டணித் தலைவர்கள் இனவாதமும் பேசினார்கள், தீவிரவாதத்தையும் ஆதரித்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி இயங்கிய காலம் ஒன்றிருந்தது. இரண்டு தரப்பிலும் அது தொடர்பான புரிந்துணர்வு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்பட்டது. புலிகள் தனியாக இயங்கினாலும், அரசியல் கொள்கைகள் யாவும் கூட்டணியிடம் இருந்து சுவீகரித்துக் கொண்டவையாக இருந்தன.

ஆயுதப் போராட்ட அரசியல் தனது கையை விட்டுப் போவதை கூட்டணி விரும்பவில்லை. தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலிகள் பிரிந்து சென்று விட்ட படியால், கூட்டணியினர் இன்னொரு ஆயுதக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டனர். இந்திய அரசியல் தலைவர்களுடன் இருந்த நெருக்கத்தை பயன்படுத்தி, சில இளைஞர்களை திரட்டி தமிழ்நாட்டில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இது சம்பந்தமான திட்டங்களுடன், தமிழ்நாட்டில் இருந்து வள்ளுவன் என்பவரை இலங்கைக்கு அனுப்பினார்கள். எதிர்பாராத விதமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வள்ளுவன் கைது செய்யப் பட்டார். அதனால், கூட்டணி ஆயுதக் குழு அமைக்கும் யோசனையும் கைவிடப் பட்டது.

வள்ளுவன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்ற படியால், எனக்கு இந்தத் தகவல்கள் தெரிய வந்தன. அந்தளவுக்கு ஈழப் போராட்டத்திற்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. எனது ஒரே வகுப்பில் கூடப் படித்த மாணவன் ஒருவனின் அண்ணா தான் ஒபரோய் தேவன். யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவனான ஒபரோய் தேவன், தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) என்ற சிறிய இயக்கத்தின் தலைவராக இருந்தார். 1982 ம் ஆண்டளவில் புலிகளால் காரணமின்றி சுட்டுக் கொல்லப் பட்டார். புலிகள் அதனை தவறுதலாக நடந்த விபத்து என்றார்கள்.

யாழ் இந்து விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவன், எனக்கு சீனியரான திலீபன். (உண்ணாவிரதமிருந்த திலீபன் அல்ல.) வன்னியில் கண்டாவளையை சேர்ந்தவர். அந்தக் காலத்தில், ஓரளவு வசதியான, நடுத்தர வர்க்க பெற்றோரின் பிள்ளைகளே வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, யாழ் இந்துக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தனர்.

திலீபன் படிக்கும் காலத்தில் அரசியல் ஆர்வமற்று இருந்தவர். எங்களை மாதிரி சாதாரண பத்திரிகைச் செய்திகளை வாசித்து விட்டு கூட விவாதிப்பதில்லை. அந்தளவுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஒருவர். அவர் பின்னர் கேடில்ஸ் என்ற பெயரில் புலிகளின் சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளராக வந்திருந்தார்.

சாவகச்சேரி பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் கட்டுமானத்தில் கேடில்சின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. அரசியல் ஆர்வமற்ற அப்பாவியான திலீபன், மிகக் குறுகிய காலத்திற்குள் எவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட கேடில்ஸ் ஆக மாறினான் என்பது எனக்கும் புரியாத புதிராக இருந்தது. இவரும் வேறு சில மூத்த புலி உறுப்பினர்களும், கைதடியில் தவறுதலாக நடந்த குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப் பட்டனர்.

அந்தக் காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தமது கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு பொதுக் கூட்டங்கள் நடத்தின. அதற்கென பயிற்றுவிக்கப் பட்டவர்கள், கிராமம் கிராமமாக சென்று வந்தனர். பார்வையாளர்களிடம் இருந்து வரும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து சமாளிப்பதற்கு அசாத்தியமான திறமை வேண்டும். சாதாரணமான பாமர மக்களிடம் இருந்தும் பலதரப் பட்ட கேள்விகள் எழும்.

ஒரு தடவை, சரசாலை கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஈரோஸ் இயக்கத்திற்காக சின்ன பாலா கூட்டம் நடத்த வந்திருந்தார். அங்கு இருந்தவர்களும் சாதாரணமான ஏழை உழைக்கும் வர்க்கத்தினர் தான். அப்போது யாழ்நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தான். அனுபவம் மிக்க போராளியான சினபாலாவும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நாமிருந்த காலத்தில் இயங்காமல் நின்று விட்ட, தமிழ் இளைஞர் பேரவை பற்றிய பல தகவல்களையும் அப்போது தான் அறிந்து கொண்டேன்.

ஈரோஸ், ஈபிஆர்எல்ப், புளொட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள், தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை. (அப்போது புலிகளும் மார்க்சிச-லெனினிசம் பேசினார்கள்.) அவை எல்லாம் வழமையான தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் தான். 

எது எப்படி இருப்பினும், இடதுசாரி- தேசியவாத இயக்கங்கள் நடத்தும் பொதுக்   கூட்டங்களில் தான் அதிகமான அரசியல் விவாதங்கள் நடக்கும். அன்றைய காலங்களில் தமிழ் உழைக்கும் வர்க்த்தினர் எழுப்பிய அரசியல் கேள்விகள் சில: 
- இந்தியா படை அனுப்பி தமிழீழம் வாங்கித் தருமா?
- சிறிலங்கா அரசு அமெரிக்க சார்புடையது என்பதால் சோவியத் யூனியன் தமிழருக்கு உதவுமா? 
- இலங்கையில் ஏற்கனவே இருக்கும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்? 
- ஜேவிபி உடன் தந்திரோபாய கூட்டு வைக்க முடியுமா?
- எங்களது போராட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பார்களா? 

மேற்படி கேள்விகளுக்கு ஒவ்வொரு இயக்கமும் தமது நிலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு பதில்களை சொல்லிக் கொண்டிருந்தன. சாதாரண பாமர மக்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் விழிப்புணர்வு எந்தளவு முற்போக்காக இருந்தது என்பதைக் காட்டுவதற்கே இங்கே அவற்றைக் குறிப்பிட்டேன். பிற்காலத்தில் வலதுசாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த தமிழ் ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை பரப்பி வந்தன. அந்தக் கருத்தியல் ஆக்கிரமிப்பின் தாக்கம் இன்று வரை நீடிக்கிறது.

எந்த இனமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல. யாழ்ப்பாணத்தில் விமானக் குண்டுவீச்சில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டது தெரிந்தால், அந்த உயிர் இழப்புகளுக்காக பரிதாபப் பட்ட சிங்களவர்களை கண்டிருக்கிறேன். அரசும், ஊடகங்களும் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால் தான் இந்த உணர்வு வெளித் தெரிவதில்லை. அதே மாதிரி, சிங்களக் கிராமங்களிலும் கொல்லப் பட்ட அப்பாவி சிங்கள மக்களுக்காக இரக்கப் பட்ட தமிழர்களையும் கண்டிருக்கிறேன். "அவர்களும் எம்மைப் போன்ற மக்கள் தானே?" என்பது சாதாரணமான தமிழ் உழைக்கும் மக்களின் எதிர்வினையாக இருந்தது.

இந்த இடத்தில் சிலர் ஒரு கேள்வி எழுப்பலாம்: "என்னது? ஜேவிபியுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்து போராடுவதா? ஐயையோ! அது ஹராம் ஆச்சே? அபச்சாரம்! அபச்சாரம்!!" என்று சிலர் தலையில் அடித்துக் கொள்ளலாம். அது தமிழ் மேட்டுக்குடியினரின், வலதுசாரி  அரசியல் கண்ணோட்டம். அதற்கும் பெரும்பான்மை தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை. 

பிற்காலத்தில் ஜேவிபி ஒரு வலதுசாரிக் கட்சியாகி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களில் இனவாதம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. அது பெரும்பான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழ்த்தேசிய கருத்துருவாக்கிகள், "ஜேவிபி ஒரு இனவாதக் கட்சி" என்று பிரச்சாரம் செய்தார்கள் என்பது தெரிந்த விடயம். 

ஆனால், ஜேவிபி யும் அதே பாணியிலான அரசியலை முன்னெடுத்தது என்பது பலருக்குத் தெரியாத விடயம். அதாவது, "புலிகள் ஒரு இனவாத இயக்கம்" என்று தென்னிலங்கையில் ஜேவிபி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இது போன்ற வழமையான தேர்தல் அரசியலுக்கும், அதற்குமப்பால் உள்ள மக்கள் அரசியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருந்தது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்த எண்பதுகளில் இருந்த நிலைமை வேறு. வட, கிழக்கு மாகாணங்களில் புலிகள் உட்பட பல ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தன. இதனால், அரச படைகள் நிலைகுலைந்து போயிருந்தன. அதே காலட்டத்தில், தென்னிலங்கையில் ஜேவிபி யும் ஆயுதப்போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. அதனால், நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் அரச படைகள் திணறின.

ஈழப்போர் தொடங்கிய காலத்தில் இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. படையினர் எல்லோரும் துப்பாக்கிகள் வைத்திருக்குமளவிக்கு பலமாக இருக்கவில்லை. அரசு வடக்கில் தோன்றிய கிளர்ச்சியை நசுக்குவதற்காக படையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்காக ஆயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களை புதிதாக படையில் சேர்த்தனர். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பெருமளவு ஜேவிபி உறுப்பினர்களும் இராணுவத்தில் சேர்ந்திருந்தனர்.

சிறிலங்கா இராணுவத்தில் பெருமளவு ஜேவிபி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை, அன்று பல ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி இருந்தன. இது தொடர்பாக ஏதோ ஒரு இயக்கம், புளொட் என்று நினைக்கிறேன், பகிரங்கமாக துண்டுப் பிரசுரம் வெளியிட்டிருந்தது. அன்று தமிழ் மக்கள் அனைவரும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதற்காக அவர்கள் கூறிய காரணம் யதார்த்தமானது.

பெரும்பான்மை சிங்கள இனத்தின் ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா அரசை எதிர்த்துப் போரிட்டு, சிறுபான்மை இனமான தமிழர்கள் தமிழீழம் காணலாம் என்பது ஒரு கடினமான விடயம். அதை சாத்தியமாக்குவதற்கு சிறந்த தந்திரோபாயம் அவசியம். வடக்கில் ஈழ விடுதலை இயக்கங்களும், தெற்கில் ஜேவிபியும் ஒரே நேரத்தில் யுத்தம் செய்தால், சிறிலங்கா இராணுவத்தால் சமாளிக்க முடியாது.

அன்றிருந்த தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு இது தான். புலிகளுக்கும், ஜேவிபிக்கும் கொள்கை உடன்பாடு ஏற்பட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால், தமிழீழம் வேண்டுமென்றால் இது போன்ற தந்திரோபாய கூட்டு அவசியமல்லவா? தென்னிலங்கையில் ஜேவிபியின் போராட்டம் வெற்றி பெற்று அரசு கவிழுமாக இருந்தால், வடக்கு கிழக்கில் தமிழீழம் பிரகடனம் செய்வது சாத்தியமாகும் அல்லவா? 

இந்த நட்புறவை பேணுவதற்காக, சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது சாதாரண தமிழ் மக்களின் கோரிக்கையாக இருந்தது. சாதாரண தமிழ் மக்கள் ஜேவிபியையும், புலிகளையும் அரச இயந்திரத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரே மாதிரியான கெரில்லா இயக்கங்களாகவே கருதினார்கள். அரச ஒத்தோடிகளான தமிழ் வலதுசாரிகள், ஜேவிபி வெறுப்புப் பிரச்சாரம் மூலம் ஈழக் கோரிக்கையை தோற்கடித்தனர் என்பதே உண்மை! எந்த சந்தர்ப்பத்திலும், தமிழ் வலதுசாரிகள் சிறிலங்கா  அரசைக் கவிழ்க்க நினைக்கவில்லை. அதுவும் மறுக்க முடியாத உண்மை. 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஈழப் போர் தவறான திசையில் சென்று கொண்டிருந்தது. சிறிலங்கா அரசு மிகவும் தந்திரமாக காய் நகரத்தி விடுதலைப் புலிகளை தனது வலைக்குள் விழ வைத்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்திய இராணுவத்தை வரவழைத்து புலிகளுடன் மோத வைத்தது. இதன் மூலம், "இந்தியா வந்து ஈழம் பெற்றுத் தரும்" என்று காத்திருந்த தமிழ் வலதுசாரிகள் தலையில் மண்ணள்ளிப் போட்டது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அதே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4.  ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?

Wednesday, December 21, 2016

ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்?


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!]
 (நான்காம் பாகம்)

"தமிழர்கள் மத்தியில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் நிறையப் பேருண்டு. படிப்பறிவில்லாத பாமரர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், ஒரு சில வணிகவியல் பட்டதாரிகளும் அப்படிச் சொல்வது ஊரை ஏமாற்றும் அயோக்கியத்தனம். ஏனென்றால், பொருட்களை சந்தைப் படுத்தல் தொடர்பான மார்க்கெட்டிங் பாடத்தில், மிகத் தெளிவாக வர்க்கப் பிரிவினைகள் பற்றி விளக்கி இருப்பார்கள்.

சந்தைப் படுத்தலில் வர்க்க வேறுபாடுகளை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார விதி. பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சி, உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்பதும், அதற்குப் பின்னரே வர்க்க வேறுபாடுகள் தோன்றின என்பதும், எமது நாட்டு பாட நூல்களில் எழுதப் படவில்லை. இலங்கையும் ஒரு காலத்தில் ஆங்கிலேய காலனியாக இருந்ததையும், அப்போது முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி அறிமுகப் படுத்தப் பட்டதையும் பலர் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

எனது தந்தைக்கு வர்க்கங்கள் பற்றிய புரிதல் இருந்தது. அதை அவராகவே எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், கூடவே ஒரு பிழையான தகவலையும் சொன்னார். இலங்கையில் "மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாக" கூறினார். எனது தந்தை மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மத்தியதர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தில் ஒரு பகுதியினர் கூட, அப்படித் தான் பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனது 28 வயது வரையும், அதை நானும் உண்மை என நம்பி இருக்கிறேன். அப்போது நெதர்லாந்தில் சந்தித்த ஒருவர் மூலம் அறிவுக் கண் திறந்தது. அவர் நெதர்லாந்தில் ஜனநாயகத்தில் அதிக அக்கறை செலுத்தும் D66 என்ற கட்சி உறுப்பினரான இளம் பெண் ஆவார். இலங்கையில் உள்ள வர்க்கங்களின் விகிதாசாரம் பற்றி விசாரித்த பொழுது, நான் அப்பா சொன்ன விளக்கத்தை அப்படியே ஒப்புவித்தேன். அவரால் அதை நம்ப முடியவில்லை. நெதர்லாந்தில் கூட நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைவு என்று சொன்னார். நான் சொல்வது உண்மையானால், இலங்கை உலகிலேயே தனித்துவமான நாடாக இருக்க வேண்டும் என்றார்.

உண்மையில் அதற்குப் பிறகு தான், நானும் வர்க்கங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அதே வருடம், நெதர்லாந்தில் பல்கலைக் கழக நுழைவுப் பரீட்சைக்காக தயார் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது வரலாறு, மற்றும் சமூகவியல் பாட நூல்களில் வர்க்கம் பற்றி எழுதி இருந்ததை ஆழமாக படித்தறிந்தேன். 

மேற்குலக நாடுகளில் உள்ள வர்க்க முரண்பாடு பற்றிப் பின்னர் எழுதுகின்றேன். உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் வர்க்க மக்களே பெரும்பான்மையாக இருப்பார்கள் என்ற உண்மையை, நானும் காலம் தாழ்த்தித் தான் அறிந்து கொண்டேன் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எனது பதினான்கு வயது வரைக்கும், நானும் தெய்வ நம்பிக்கை கொண்ட, ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட சாதாரணமான சிறுவனாகத் தானிருந்தேன். எனது முதலாவது கட்டுரையும் சைவ சமயம் பற்றியது தான். கடவுளை வழிபடுவது பற்றி நான் எழுதிய கட்டுரை கொழும்பு சைவ முன்னேற்றக் கழகம் வெளியிட்ட ஆண்டு மலரில் இடம்பெற்றிருந்தது. பாடசாலையில் சிவபுராணம் மனனம் செய்து ஒப்புவித்து பரிசு வாங்கி இருக்கிறேன். தேவாரம் பண்ணோடு பாடுவதற்கு அறிந்து வைத்திருந்தேன். பெரிய புராணம், கந்தபுராணம் நூல்களை எல்லாம் வாசித்திருந்தேன். 


அந்த வயதில் எனக்குள் எழுந்த முக்கியமான கேள்விக்கு மட்டும் யாரிடமும் பதில் இருக்கவில்லை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்றால், எதற்காக பணக்காரர்களுக்கு வசதியை அள்ளிக் கொடுத்து, ஏழைகளை கஷ்டப் படுத்தி, மனிதர்களுக்கு இடையில் பாகுபாடு காட்ட வேண்டும்? அந்த வயதிலேயே, இந்துகளின் "கர்ம வினைப் பயன்" கோட்பாடு அபத்தமாகப் பட்டது.  நான் அறிந்த வரையில் ஏழைகள் தான் அதிக நேரம் கோயில்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

சிறு வயதில், எனது பெற்றோருடன் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும், கோயிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இருப்பதைக் கண்டேன். கோயிலுக்குள்ளே செல்லும் பக்தர்களும் கடவுளிடம் பிச்சை தான் கேட்டார்கள். ஆனால், அதை அவர்கள் நாகரிகமாக வரம் என்று சொன்னார்கள். வெளியே வந்த பக்தர்கள் தம்மிடம் இரந்தவர் தட்டில் சில்லறைகளை போட்டார்கள். அதை அவர்கள் பிச்சை என்றார்கள். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் எனக்கு ஒரு தத்துவத்தை போதித்தார்கள். ஒரு சாதாரணமான பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுள் எப்படி சக்தி படைத்ததாக இருக்க முடியும்?

யாழ் மேட்டுக்குடியினரின் பாடசாலை என்று பெருமை தேடிக் கொள்ள விரும்பிய யாழ் இந்துக் கல்லூரி, ஆன்மீக சொற்பொழிவுகள் மூலம் தனது மாணவர்களை மூளைச்சலவை செய்து வந்தது. நான் படித்த காலத்தில் ஓர் இந்து அறிஞர் ஆன்மீக சொற்பொழிவாற்ற வந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் கேள்வி கேட்கச் சொன்னார். "இலட்சக் கணக்கான குழந்தைகள் பாலின்றி தவிக்கும் நாட்டில் எதற்காக சாமி சிலைகளுக்கு குடம் குடமாக பால் ஊற்றுகிறார்கள்?" என்று ஒரு மாணவன் கேட்டான்.

அதற்கு அவர், "கடவுளுக்கு பாலபிஷேகம் செய்தால் அவர் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் கிடைக்க அருள் செய்வார்." என்று சொல்லிச் சமாளித்தார். ஆனால், அந்தப் பதில் எங்களை திருப்திப் படுத்தவில்லை. சாமிக்கு பாலபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டு கால வழக்கம். ஆனால் வறுமை இன்னும் ஒழியவில்லை. எல்லாக் குழந்தைகளுக்கும் பாலும் கிடைப்பதில்லை. பாவம், இதற்கெல்லாம் பதில் கூறும் அளவிற்கு அந்த ஆன்மீக அறிஞர் படித்திருக்கவில்லை.

இலங்கை ஒரு "மதச் சார்புள்ள நாடு". அங்கு பள்ளிக்கூடத்தில் மதத்தை பிரித்துப் பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தில் இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பாடசாலைகளில், ஆண்டு தோறும் சரஸ்வதி பூசை நடத்துவார்கள். "சரஸ்வதி கல்விக் கடவுள்" என்பது ஒரு சாட்டு மட்டுமே. 

நான் படித்த காலத்தில், எட்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டோம். நாரதரை, சரஸ்வதியை கிண்டலடிக்கும் பகுத்தறிவு நாடகம் அது. ஏதோவொரு புத்தகத்தில் நான் தான் அதை வாசித்து விட்டு நாடகமாக்குவோம் என்று சொன்னேன். நான் அதில் பெண் வேடமிட்டு, அதாவது சரஸ்வதியாக நடித்திருந்தேன். நாடகத்தில் இருந்த நகைச்சுவை வசனங்கள் மாணவர்களை சிரிக்க வைத்தன. பலருக்கு அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

நாங்கள் ஒன்பதாவது, அல்லது பத்தாவது வகுப்புப் படிக்கும் பொழுது, யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கண்காட்சிகள் நடந்தன. யாழ் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கண்காட்சி பார்க்க சென்றிருந்தோம். அப்போது, பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பற்றி, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஓரிடத்தில் மூளையின் செயற்பாடுகள் குறித்து படம் கீறி வைத்திருந்தனர். மூளாய் (இடத்தின் பெயர்) வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர், அந்த இடத்தில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அவர் சொன்ன தகவல்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. எமக்கு சிறுவயதில் இருந்தே கடவுளைப் பற்றிய அச்சவுணர்வு திணிக்கப் படுகிறது. அது மூளையில் சேமிக்கப் படுகிறது. வளர்ந்த பின்னர் நாங்கள் அதை உண்மை என்றே நம்புகின்றோம் என்றார். தான் கடவுள் இல்லை என்று சொல்லி வருவதாகவும், அதனால் தனக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை என்றும் சொன்னார். அவரது கருத்துக்களை கேட்ட பின்னர் தான், நூலகத்தில் இருந்து மனோதத்துவ நூல்களை இரவல் எடுத்து வாசித்தேன். கடவுளை நம்புவது மனிதர்களின் உளவியல் பிரச்சினை என்பது அதற்குப் பிறகு தெரிய வந்தது.

நான் பத்தாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், எங்களது வகுப்பில் சசிகாந்தன் என்ற நண்பன் இருந்தான். இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்ப தாளில் தமிழில் கையொப்பம் இட்டு புரட்சி செய்திருந்தான். அவன் ஒரு நாள் வகுப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். "கடவுள் இல்லை" என்பதே அந்த அதிர்ச்சியான தகவல். வகுப்பில் கெட்டிக்கார மாணவனான அவனை எல்லோரும் விஞ்ஞானி என்று அழைப்போம். தானாகவே சில கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறான். அப்படியான ஒருவன் கடவுள் இல்லை என்று வாதிடும் பொழுது அலட்சியப் படுத்த முடியவில்லை.

எமது வகுப்பில் அடிக்கடி கடவுள் பற்றிய வாக்குவாதங்கள் நடந்தன. சிலர் சசிகாந்தனை தீவிரமாக எதிர்த்தார்கள். பலர் குழம்பினார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே அவன் சொன்னதைக் கேட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். கடவுள் பற்றிய எனது சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் தந்தான். ஓய்வுநேரங்களில், வண்ணார்பண்ணையில் இருக்கும் அவனது வீட்டுக்கு சென்றும் பல விடயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அப்போது எனக்கு வேறு தொடர்புகள் மூலமாக, மார்க்சியம் பற்றிய அறிமுகம் கிடைத்திருந்தது. அது பற்றிய தகவல்களை சசிகாந்தனுடன் பகிர்ந்து கொண்ட பொழுது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவம் படிக்க சென்ற நேரம், என்னிடம் விசாரித்து ஈரோஸ் இயக்கத் தொடர்பை பெற்றுக் கொண்டு செயற்பட்டு வந்தான். சில வருடங்களுக்குப் பின்னர், போர்ச் சூழல் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவிய இனந் தெரியாத நோய்க்கு பலியாகி இறந்ததை கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் அப்போது புலம்பெயர்ந்து சென்று விட்டேன்.

மேற்குறிப்பிட்ட அனுபவங்களுக்குப் பிறகு எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தன. முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், சாதி, வர்க்கம், மதம் என்பனவற்றுக்கு இடையிலான நெருங்கிய உறவு தெரிய வந்தது. இவையெல்லாம் எமது சமூகத்தில் வேரோடிப் போயிருந்தது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று சமரசம் செய்து கொண்டு நிலைத்து நிற்கின்றன.

சாதிப் பாகுபாடு காரணமாக, ஒரே மதத்தை சேர்ந்த மக்களை கோயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த நிலப்பிரபுத்துவ கால கட்டுப்பாடுகள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தேன். அப்போது அடக்குமுறையாளர்கள் பக்கம் நின்ற கடவுள் எவ்வாறு சக்தி படைத்தவராக இருக்க முடியும்? இதே கேள்வி தான் கொழும்பில் தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் கொல்லப் பட்ட நேரத்திலும் எழுந்தது. நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து விட்டு, இன ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தால் அங்கும் கடவுளின் சக்தி குறித்து சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

வட பகுதியில் நடந்த விமானக் குண்டுவீச்சுகளில் இந்துக் கோயில்கள் சேதமானதை நேரில் கண்டிருக்கிறேன். அப்போது "இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போயின?" என்று சாதாரண பாமர மக்களே கேட்டிருக்கிறார்கள். போர்ச் சூழலில் வாழ்ந்த படியால், அதன் குரூரங்களை நேரில் கண்ட படியால், என்னைப் பொருத்தவரையில் அது கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கப் போதுமானதாக இருந்தது.

போரில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்த பிறகும், பலர் கோயில்களில் தவமிருந்தார்கள். இங்கே தான் கடவுள் பற்றிய மனோதத்துவக் கோட்பாடு உதவுகின்றது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்து விட்ட மக்கள் ஒன்றில் புரட்சி செய்வார்கள் அல்லது கடவுளிடம் முறையிடுவார்கள்.

(தொடரும்) 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2.வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3. தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!

Tuesday, December 20, 2016

தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்!


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(மூன்றாம் பாகம்)

 ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், வேலிப் பிரச்சினைக்கு பக்கத்து வீட்டுக் காரனுடன் சண்டை பிடிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்கள், தம்முயிரை அர்ப்பணித்து போராட முன்வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. வேலியோரம் நட்ட மரத்தை சரித்து விட்டு, ஆறங்குலம் தள்ளி புதிய வேலி கட்டி, சிறு துண்டு காணியை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள் பலர் இருந்தனர். பக்கத்து வீட்டுக்காரன் அதைக் கண்டு பிடித்து, வாக்குவாதப் பட்டு, கத்தி எடுத்து வெட்டுப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தவர்கள் வேலிக்கு சண்டை பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், எல்லையோர நகரமான வவுனியாவில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தவர் மீது அவநம்பிக்கை எழக் காரணம் அவர்களது பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) மனப்பான்மை. கொழும்பில் வசித்த தமிழர்களில், அவர்கள்  பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களில் இருந்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவது மாதிரி, கொழும்பில் வேலை செய்து கொண்டு, மணி ஓடர் மூலம் ஊரில் இருந்த பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் முக்கியமான வருமானமாக மணி ஓர்டர் பொருளாதாரம் இருந்தது. அந்த நேரம் கொழும்பில் வாழ்ந்த என்னுடைய அப்பா, அம்மாவும் அவர்களது பெற்றோருக்கு பணம் அனுப்பி வந்தனர்.

கொழும்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த பலர் கொழும்பு வாசிகளாகி விட்டனர். இலங்கையின் பொருளாதார மையத்தில் வீடெடுத்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு, நகரத்தின் வசதிகளை அனுபவித்து வந்தனர். 1958, 1977, 1983 என்று அடுத்தடுத்து இனக்கலவரங்கள் நடந்த போதிலும் கொழும்பை விட்டு செல்லவில்லை. கலவரம் நடக்கும் பொழுது அகதிகளாக யாழ்ப்பாணம் சென்று, அதிக பட்சம் ஒரு மாதம் இருந்து விட்டு கொழும்புக்கு திரும்பிச் செல்வார்கள். 1983 க்குப் பின்னர் ஒரு பகுதியினர் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த விடயங்களை நான் எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால், "சிங்களவனிடம் அடி வாங்கிய" ஒரு காரணத்தால் மட்டும் யாரும் போராட வருவதில்லை. இனக் கலவரக் காலத்தில் கொழும்பில் நடந்த படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், சொத்தழிவுகளை அனுபவித்தவர்கள் கொழும்புத் தமிழர்கள். நாங்களும் அந்தக் கோரக் கதைகளை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டு வளர்ந்தோம். இருப்பினும், ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்ட கொழும்புத் தமிழர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தது.

உண்மையில், ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்டம் கொழும்பில் தான் தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தற்காப்பு நடவடிக்கையாக கூட எதுவும் நடக்கவில்லை. அவர்களில் யாரும் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் இணையவில்லை. அதற்கு மாறாக, தலைநகரில் தாம் ஏற்கனவே செய்து வந்த தொழில்களை தொடர்ந்தார்கள்.  

அதற்குக் காரணம் கொழும்புத் தமிழரின் பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை அன்றி வேறென்ன? ஆயுதப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன், வீட்டைத் துறந்து, பதவியை இழந்து, தலைமறைவு வாழ்க்கை வாழத் தயாராக இருக்கவில்லை.

தமிழ்த் தேசியத் தலைவர்களும் கொழும்பில் தான் வாழ்ந்தார்கள். அவர்கள் கொழும்பில் தான் தமிழ்த் தேசிய கொள்கை வகுப்பது சம்பந்தமான கூட்டங்களை நடத்தினார்கள். நான் சிறுவனாக இருந்த காலங்களில், அந்தக் கூட்டங்களுக்கு அப்பாவுடன் சென்று வருவது வழக்கம். அதைத் தவிர, சைவ சமயத்தின் பேரில் தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் சங்கங்களும் செயற்பட்டு வந்தன.

யாழ்ப்பாணத்தை விட, கொழும்பில் தான் தமிழ்க கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருவதாகவும், பக்தியோடு கோயிலுக்கு செல்வோரின் எண்ணிக்கை இங்கே அதிகம் என்றும் அப்பாவும், அம்மாவும் அடிக்கடி சொல்லி வந்தனர். மதமும், கலாச்சாரமும் அந்தஸ்தின் அடையாளமாக இருப்பதை நான் கொழும்பில் கண்டுகொண்டேன்.

1983 இனக்கலவரத்திற்கு முன்னரே நாங்கள் கொழும்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்து விட்டோம். அது வரையும் கொழும்பு வாசிகளாக இருந்த நாங்கள், யாழ்ப்பாணவாசிகளாகி விட்டோம். எனது வாழ்க்கையில் நடந்த இந்த மாற்றம் தான், ஈழப் போராட்ட அரசியலிலும் நாட்டம் கொள்ள வைத்தது. நாங்கள் தொடர்ந்தும் கொழும்பில் வாழ்ந்திருந்தால், இன்று நானும் எனது நண்பர்கள் மாதிரி எதாவதொரு நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். அரசியல் பற்றி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டேன்.

யாழ்ப்பாண வாழ்க்கையில், வர்க்கங்களுக்கு இடையில் ஊடாட முடிந்தது. எங்களது உறவினர்கள் மத்தியில் கூட இரண்டு வர்க்கங்களை காணக் கூடியதாக இருந்தது. ஒரு சிலர் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்ந்தனர். மறுபுறத்தில், பலர் கூலித் தொழிலாளர்களாக ஏழ்மையில் வாழ்ந்தனர். அப்போது பதினாறு வயதாகி விட்டதால் சமூகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஓய்வுநேரம் கூட எவ்வாறு மாறுபடுகின்றது என்பதைக் கண்கூடாக கண்டேன். மேட்டுக்குடியினர் ஓய்வு நேரத்தில் கூடியிருந்து, அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்பார்கள். அதே நேரம், ஏழைப் பாட்டாளி வர்க்கத்தினர் எந்தவித அரசியல் ஆர்வமும் இன்றி வாழ்ந்தனர். ஒரு சிலர், ஓய்வு நேரத்தில் குடிப்பதும், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுவதும் வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அடித்தட்டு மக்களுக்கு பொருளாதாரச் சுரண்டல் பற்றிய அறிவு கிடையாது என்று மேட்டுக்குடியினர் நினைக்கின்றனர். அது தவறு. கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் நண்பர்களுடனான உரையாடலில் அவர்களே பல தகவல்களை சொன்னார்கள். தங்களை வேலைக்கு வைத்திருக்கும் தொழில் வழங்குனர்கள், எவ்வாறு குறைந்த கூலி கொடுத்து உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதை அவர்கள் என்னிடம் விளக்கமாக கூறி இருக்கிறார்கள்.

ஒரு தடவை அப்பா நூலகத்தில் விற்கப் பட்ட பழைய நூல்களை கட்டுக் கட்டாக வாங்கி வந்திருந்தார். அவற்றிற்குள் சில மார்க்சியப் புத்தகங்களும் இருந்தன. லெனின் எழுதிய "நாட்டுப்புற ஏழை மக்களுக்கு" என்ற சிறிய நூலும் இருந்தது. அப்போதே அதை வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு இலகுவாக எழுதப் பட்டிருந்தது. அந்த நூலைக் கொண்டு சென்று, கூலித் தொழில் செய்யும் நண்பர்களுக்கு காட்டி விளங்கப் படுத்தினேன். லெனின் எழுதிய பல கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். அதற்குக் காரணம், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் ஒரே மாதிரி உள்ளது என்பது தானே?

இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடு என்று சொல்லப் படுவதற்கு ஏற்றவாறு யாழ்ப்பாண பொருளாதார அமைப்பும் இருந்தது. பிரிட்டிஷ் காலனிய காலத்தில் கட்டப் பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையை தவிர வேறு தொழிற்துறைகள் அங்கே இல்லை. அதனால், இந்த இரண்டு தொழிலகங்களை தவிர வேறெங்கும் குறிப்பிட்டளவு தொழிலாளர் வர்க்கம் உருவாகி இருக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் மில்க்வைற் சவர்க்காரம் எல்லாக் கடைகளிலும் விற்பனை செய்யப் பட்டது. உடுப்புகள் கழுவுவதற்கு பாவிக்கப் பட்ட சன்லைட் சவர்க்காரம் ஒரு தென்னிலங்கை சிங்களத் தயாரிப்பு. அதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்து தமிழ் முதலாளியின் உள்ளூர் தயாரிப்பாக மில்க்வைற் இருந்தது. யாழ் குடாநாட்டைப் பொருத்தவரையில், பெருமளவு தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலையை கொண்டிருந்தாலும் அது தனி ஒரு முதலாளியால் நடத்தப் பட்டது.

நான் யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நல்லூர்க் கோயிலுக்கு போவதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பிக் குளிக்க வேண்டும். நல்லூர்க் கோயில் சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த படியால் நடந்து சென்று சாமி கும்பிட்டு விட்டு வருவோம். 

நல்லூர் கந்தசுவாமி கோயில் பின்புற வீதி

நாங்கள் நல்லூர் கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், அங்கே மில்க்வைற் முதலாளியை அல்லது அவரது எடுபிடிகளை காணலாம். "சிவநெறிச் செல்வர்", "கொடை வள்ளல்", என்று தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக் கொண்ட மில்க்வைற் முதலாளி தனது பக்தியை பறைசாற்றிக் கொண்டிருப்பார். தேவாரம், திருவாசகம் அடங்கிய சிறு பிரசுரங்களை பக்தர்களுக்கு  இலவசமாக விநியோகித்துக் கொண்டிருப்பார். ஒவ்வொரு பிரசுரத்திலும் "இது மில்க்வைற் அன்பளிப்பு" என்று தவறாமல் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும், பக்தர்களுக்கு தேவாரப் புத்தகம் அன்பளிப்பு செய்யும் சாட்டில், விளம்பரம் தேடும் மில்க்வைற் முதலாளியின் செயல் அருவருப்பை ஊட்டியது. அவரது கடவுள் பக்தி போலியானது என்பது புரிந்தது. யாழ் இந்துக்கல்லூரி சுற்றாடலில் தான் மில்க்வைற் தொழிற்சாலையும் அமைந்திருந்தது. அப்போது தமக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தகவலும் எமது காதுகளுக்கு எட்டியிருந்தது.

வீட்டில் தாயை பட்டினி போட்டு விட்டு மகன் அன்னதானம் செய்தானாம். அது மாதிரி, மில்க்வைற் முதலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து உழைப்பை சுரண்டிக் கொண்டிருந்தார். அதைக் கூட ஒழுங்காக கொடுப்பதில்லை. அவரது சவர்க்காரத் தொழில் நட்டத்தில் ஓடியதாக சாட்டுச் சொல்ல முடியாது. (அளவுக்கு மிஞ்சி பணம் சேர்ந்ததால் தானே "கொடை வள்ளல்" ஆனார்?) யாழ் குடாநாட்டு கடைகள் எங்கும், மில்க்வைற் சன்லைட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையானது. சிறுவயதில் பொதுவுடமைக் கருத்துக்களை இயல்பானதாக உள்வாங்கிக் கொள்வதற்கு மேற்படி அனுபவங்கள் காரணமாக இருந்தன.

யாழ்ப்பாணத்தில் மில்க்வைற் முதலாளி தனது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உழைப்பை சுரண்டுவதும், அவ்வாறு திருடிய பணத்தில் பக்திமானாக கொடை வள்ளல் வேஷம் போடுவதும், சிறு பிள்ளைகளாலும் புரிந்து கொள்ளக் கூடிய விடயங்கள். 

இதற்கெல்லாம் யாரும் மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களைப் படித்து பட்டம் வாங்கியிருக்கத் தேவையில்லை. படிப்பறிவில்லாத பாமரத் தமிழர்களுக்கும் இலகுவாகப் புரியும். ஆனால், ஒரு சில மெத்தப் படித்த தமிழ் அறிவுஜீவிகள் மட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளாத காரணம் என்ன? அவர்களுக்கு அந்தளவு அறிவு இல்லையா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா?

(தொடரும்)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Friday, December 16, 2016

அலெப்போவின் முள்ளிவாய்க்கால்


சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அது ரஷ்ய விமானக் குண்டுவீச்சுகளின் பின்னர், சிரிய அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரியாவின் ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை என்று கருதப் படுகின்றது. அதாவது, உள்நாட்டுப் போரின் இறுதியில் வெல்லப் போவது யார், தோற்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அலெப்போ யுத்தம் இருந்துள்ளது.

சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. அனேகமாக எல்லா "விடுதலை" இயக்கங்களும், அல்கைதா அல்லது ஐ.எஸ். பாணியில் அமைந்த, இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்கள் தான். சுன்னி முஸ்லிம் சமூகத்தினரை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய அந்த இயக்கங்கள், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன. (சிரியா அடிப்படையில் ஒரு பல்லின கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் குழுமங்களின் தேசம்.)

உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில், சிரிய இராணுவம் ஆட்பலம், ஆயுதபலம் குறைந்திருந்த படியால், அலெப்போ போன்று பல பிரதேசங்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களினால் கைது செய்யப் பட்ட, அல்லது அவர்களிடம் சரணடைந்த சில நூற்றுக் கணக்கான படையினர் பொது இடங்களில் கழுத்து வெட்டிக் கொல்லப் பட்டனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப் பட்டிருந்தன.

சரணடைந்த சிரியப் படையினர் மட்டுமல்ல, ஷியா, கிறிஸ்தவ மற்றும் பல சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்களும், "தவறான இனத்தில் பிறந்த காரணத்தால்" படுகொலை செய்யப் பட்டனர். வாழ்வா, சாவா போராட்டத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, சிரிய இராணுவத்தினரும், சிறுபான்மை சமூகத்தினரும் அதிபர் ஆசாத் தலைமையின் கீழ் அணிதிரண்டனர். அப்படியானவர்களுக்கு ஆசாத் மீதான விசுவாசத்தை விட, தாம் சார்ந்த சமூகங்களின் பாதுகாப்பு முக்கியமாகப் பட்டதால் போர் தீவிரமடைந்தது. கிறிஸ்தவ, ஷியா, அலாவி போன்ற சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த வீரர்களை கொண்ட National Defence Force (NDF) என்ற ஊர்காவல் படைகள் சிரிய இராணுவத்தின் பக்கம் நின்று போரிட்டன.

இதற்கிடையே லெபனான் ஹிஸ்புல்லாவும் ஆசாத்திற்கு உதவியாக வந்தது. லெபனானில் எண்பதுகளில் நடந்த தசாப்த கால உள்நாட்டுப் போரில், சிரிய அரசு ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லா இயக்கத்தை ஆதரித்திருந்தது. அந்த செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக, ஆயிரக் கணக்கான ஹிஸ்புல்லா போராளிகள் தொண்டர் படையணியாக சிரியா போர்க்களத்தில் குதித்தனர். அவர்களுடன் ஷியா முஸ்லிம்களின் வல்லரசாக கருதப் படும் ஈரானும், தன பங்கிற்கு இராணுவ ஆலோசகர்களை அனுப்பி இருந்தது. இவர்கள் எல்லோரும் அலெப்போ யுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்கள் எவை? 
மேற்குலகால் ஆதரிக்கப் பட்ட அந்தக் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர். சிரியாவில் மதத்தால் முஸ்லிமாக இருந்தாலும், சுன்னி, ஷியா, அலாவி என்று ஒவ்வொரு முஸ்லிம் மதப் பிரிவினரும் தம்மை தனித் தனியான இனமாக கருதிக் கொள்கிறார்கள். ஆகையினால், இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்கள் கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி- முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. மது பாவனை தடை செய்யப் பட்டது. இசைத்தட்டில் பாடல்கள் கேட்பது கூட தடை செய்யப் பட்டது. பெண்கள் முகத்தை மூடும் கருநிற அங்கி அணிய கட்டாயப் படுத்தப் பட்டனர்.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிளர்ச்சிக் குழுக்களுக்கும், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்திற்கும் இடையில் பெரிய கொள்கை வேறு பாடு எதுவும் கிடையாது. ஐ.எஸ். இயக்கம், சுன்னி- முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தான் மட்டுமே என்று உரிமை கோருகின்றது. ஏனைய இயக்கங்களை "துரோகக் குழுக்கள்", "ஒட்டுக் குழுக்கள்" என்று குற்றஞ் சாட்டி தடை செய்துள்ளது. இதனால் அடிக்கடி சகோதர யுத்தங்கள் நடந்துள்ளன.

அலெப்போவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இயக்கங்கள் பற்றிய விபரம்:

1. சுதந்திர சிரிய இராணுவம்
சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய சுன்னி- முஸ்லிம் அதிகாரிகள், படையினர் உருவாக்கிய இயக்கம். அவர்களை "நல்ல போராளிகள்" என்று முத்திரை குத்தி, அமெரிக்கா நேரடியாக உதவி செய்து வந்தது. மேற்கத்திய ஊடகங்களில் அவர்கள் "மிதவாதிகளாக" காட்டப் பட்டனர். ஆனால், நடைமுறையில் சுதந்திர சிரிய இராணுவம் கூட இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் தான். மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரம் இருக்கலாம். ஆனால், அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். உண்மையில் சுதந்திர சிரிய இராணுவம் என்பது பல குழுக்களின் ஐக்கிய முன்னணி. அதற்கென பொதுவான தலைவர் எவரும் இல்லை.

2. நூர் அல் டின் அல் சென்கி (Nour al-Din al-Zenki)
மிகச் சிறிய இயக்கம். போராளிகளின் மொத்த எண்ணிக்கை 1500 இருக்கலாம். மத அடிப்படைவாத ஜிகாத்திற்காக போராடும் இந்த இயக்கத்திற்கு சி.ஐ.ஏ. நேரடியாக ஆயுதங்களை கொடுத்துதவி வந்தது! நிச்சயமாக, தாம் ஒரு ஜிகாதி இயக்கத்திற்கு உதவினோம் என்ற உண்மையை அமெரிக்கா வெளியில் சொல்லப் போவதில்லை. சில மாதங்களுக்கு முன்னர், சிரிய அரசுக்கு ஆதரவாக பேசிய குற்றத்திற்காக ஒரு 12 வயது சிறுவனை கழுத்து வெட்டி கொலை செய்த கோரக் காட்சி வீடியோ பதிவாக வெளியாகி உலகம் முழுவதையும் உலுக்கி இருந்தது. அந்தக் குரூரச் செயலை செய்த பெருமை இந்த இயக்கத்தை சேரும்.

3. அஹ்ரர் அல் ஷாம் (Ahrar al-Sham)
ஆப்கானிஸ்தனில் தாலிபான் செய்தது போல, சிரியா முழுவதையும் இஸ்லாமிய மயமாக்க விரும்பும் கடும்போக்கு இயக்கம். 2014 ம் ஆண்டு வரையில் ஐ.எஸ்.சுடன் சேர்ந்து இயங்கி வந்தது. ஆனால், ஐ.எஸ். காரர்கள் இந்த இயக்கத்தின் போராளிகள் சிலரை சுட்டுக் கொன்ற படியால் பிரிந்து சென்று தனியாக இயங்கியது. ஐ.எஸ். சிரியாவுக்கும் அப்பால், உலகம் முழுவதும் இஸ்லாமியப் புரட்சியை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது. அதற்கு மாறாக அஹ்ரர் அல் ஷாம் சிரியாவுக்குள் நின்று கொள்கிறது. மொத்தப் போராளிகளின் எண்ணிக்கை இருபதாயிரம் இருக்கலாம்.

4. பதே அல் ஷாம் (Fateh al-Sham)
மிக முக்கியமாக, அல்கைதாவுடன் தொடர்புடைய இயக்கம் இது தான். அல் நுஸ்ரா என்றால் எல்லோருக்கும் தெரியும். அண்மைக் காலத்தில் தான் பதே அல் ஷாம் என்று பெயர் மாற்றியது. தீவிரவாதம் இல்லாத, மிதவாத இயக்கமாக காட்டுவது அதன் நோக்கம். இதன் மூலம் சர்வதேச ஆயுத, நிதி உதவி கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. நீண்ட காலமாக, அல்நுஸ்ராவுக்கும், ஐ.எஸ். இற்கும் அடிக்கடி சகோதர யுத்தம் இடம்பெற்று வந்தது. இத்தனைக்கும் இரண்டுக்கும் இடையில் எந்தவொரு கொள்கை முரண்பாடும் கிடையாது. அல்நுஸ்ராவும் இஸ்லாமிய நாடுகளில் எல்லாம் ஜிகாத் போராட்டம் நடத்துவதை குறிக்கோளாக கொண்ட இயக்கம் தான். அதனால் சர்வதேச தொண்டர்களின் உதவியும் கிடைத்திருந்தது. பல உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய இளைஞ்ர்கள், சிரியாவுக்கு போராடச் சென்றனர். அவர்களில் ஒரு பகுதியினர் அல் நுஸ்ராவிலும், இன்னொரு பகுதியினர் ஐ.எஸ். இலும் சேர்ந்தனர். எதிர்பாராத விதமாக அவ்விரண்டு இயக்கங்களின் சகோதர யுத்தத்டிற்குள்ளும் அகப்பட்டுக் கொண்டனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. தற்போது அதற்கு முன்னால் இரண்டு தெரிவுகள் உள்ளன. வட மேற்கில், அலெப்போவில் இருந்து வெளியேறிய கிளர்ச்சிக் குழுக்கள் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இடிலிப் பிரதேசம். மற்றது, வட கிழக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ராக்கா பிரதேசம்.

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பகுதி நாலாபுறமும் சுற்றி வளைக்கப் பட்டுள்ளது. அந்நிய நாடுகளுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்டு விட்டன. அதனால், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம். ஆனால், துருக்கி எல்லையோரம் உள்ள இடிலிப் என்ற நாட்டுப்புறப் பகுதி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் யாவும் கிளர்ச்சி இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. அவை எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது கேள்விக்குறி தான். அவை சுதந்திரமான ஊடகவியலாளரால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை)

உண்மையில் போர் நடந்த இடத்தில் எந்தவொரு மேற்கத்திய ஊடகவியலாளரும் இருக்கவில்லை. இருப்பினும், பிரித்தானியாவிலும், துருக்கியிலும் உள்ள சிரிய கிளர்ச்சியாளரின் ஊடக மையங்கள் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அவை வெளியிடும், ஒரு பக்கச் சார்பான தகவல்களுக்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. மறுபக்கத்தில், சிரிய அரச ஊடகங்களும், ரஷ்ய ஊடகங்களும் கூட ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. அவற்றில் உண்மை எது, பொய் எதுவென்பது யாருக்கும் தெரியாது.

கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை "இஸ்லாமியப் பயங்கரவாதம்" அல்ல!

சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

தோல்வியின் விளிம்பில் நிற்கும், கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன. அவர்களைத் தான், மேற்குலக ஊடகங்கள் "பதே போராளிகள்" என்று குறிப்பிடுகின்றன. அது அல்நுஸ்ரா இயக்கம் என்பதை மறைக்கின்றன.

மேற்குலக நாடுகள் மற்றும் செஞ் சிலுவைச் சங்கம் போன்றவற்றின் தலையீடு காரணமாக, கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேறும் பொது மக்களையும், போராளிகளையும் கொண்டு செல்வதற்கு பேருந்து வண்டிகள் அனுப்பப் பட்டன. அவர்களை இடிலிப் பிரதேசத்தில் கொண்டு சென்று விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கிளர்ச்சிக் குழுக்கள் பொது மக்களை தம்மோடு பணயக் கைதிகளாக பிடித்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், அதை உறுதிப் படுத்த முடியவில்லை. போராளிக் குடும்பங்கள், இயக்க ஆதரவாளர்கள் ஆகிய பொது மக்களும் அவர்களுடன் செல்லக் கூடும். அவர்களைத் தவிர ஏனைய மக்கள் பலவந்தமாக கொண்டு செல்லப் படுவதையும் தவிர்க்க முடியாது.

இறுதிப் போர் இடிலிப் பகுதியில் நடைபெறவுள்ளது என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து விட்டது. அதாவது, அலெப்போவில் இருந்து வெளியேறிய இயக்கங்கள் அங்கு தமது பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுடன் போரினால் இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான மக்களும் தங்கியிருப்பார்கள். அதனால், இடிலிப் பிரதேசத்தை கைப்பற்றும் போரில் பேரழிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெருமளவு பொது மக்களும் கொல்லப் படலாம். அதை இப்போதே மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் எதிர்வு கூறி விட்டனர்.

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: