Showing posts with label பாசிசம். Show all posts
Showing posts with label பாசிசம். Show all posts

Thursday, November 02, 2023

பாசிஸ்டுகளால் பாழாகும் யாழ் பல்கலைக்கழகம்! பிற்போக்கு பழமைவாதிகளின் கழகம்!!

 


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருள்லிங்கத்தின் கருத்தரங்கம், மாணவர் போர்வையில் இருந்த பாஸிஸ்டுகளின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் நடக்கும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முன்னிலை வகிக்கும் ஒரு தமிழ் அரசியல் ஆர்வலரின் கருத்து சுதந்திரத்தை தடுத்த பாஸிஸ்டுகளின் செயலுக்கு வன்மையான கண்டனங்கள்.

அதற்கு சொல்லப்படும் ஒரேயொரு காரணம் இவர் முன்பு புலிகளை எதிர்த்து பேசியுள்ளார் என்பது தான். அதாவது புலிகளை பாஸிஸ்டுகள் என்று சொல்லி விட்டாராம். இன்று புலி விசுவாசிகளாக காட்டிக் கொள்பவர்கள் தமது செயல்கள் மூலம் தாமே பாஸிஸ்டுகள் தான் என்பதை நிரூபித்துள்ளனர்.

இது யாழ்ப்பாண "அறிவுஜீவி"(?)களின் பழமைவாத பிற்போக்குத்தனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்றுள்ள யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு கருத்தரங்கில் படு பிற்போக்குத்தனமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதை எல்லாம் கைதட்டி இரசித்த மாணவர்கள் முற்போக்கான கருத்துக்களுக்கு செவி கொடுக்க மறுத்து தடைசெய்துள்ளமை மாணவர் சமுதாயத்திற்கே இழுக்கு. இவர்கள் தான் நாளைக்கு நிர்வாகிகளாக, அதிகாரிகளாக பதவிகளில் அமரப் போகிறவர்கள். பழமைவாத பிற்போக்குவாதிகள் அதிகாரத்தில் இருந்தால் தமிழினம் எப்படி முன்னேறும்? நிச்சயமாக அது நாகரிகத்தில் பின்தங்கிய இனமாகத் தான் இருக்கும்.

வெளிப்படையாக இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்துவோருக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பிற்போக்குவாதிகளின் கூடாரமாக மாறியுள்ள யாழ் பல்கலைக்கழகம், இனவாதிகளுக்கு எதிராக போராடி மக்களை ஒன்றுபடுத்தும் முற்போக்காளர்களை பேச விடாமல் தடுத்தமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். இதுவும் ஒரு பாசிச அடக்குமுறை தான்.

இத்தாலியில் முசோலினி தலைமையிலான பாஸிஸ்டுகளும், ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஸிகளும் செய்த அதே வேலையை தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் போர்வையில் உள்ள பாஸிஸ்டுகளும் செய்துள்ளனர். குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாஸிஸ்டுகளுக்கு, தமிழினத்திற்கு தலைமை தாங்க எந்த தகுதியும் கிடையாது.

Saturday, September 30, 2017

பாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுகம்

அமெரிக்காவில் பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்து கௌரவித்த  முதலாளிய வர்க்கம்.

"பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது."  

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், முசோலினி எழுதிய பாசிச கொள்கை விளக்கத்தில் இருந்து சில பகுதிகள்:

//பாசிசம் என்பது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு தனி மனிதனை உன்னதமான ஆன்மீக சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாசிசம் என்பது அரசு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை முறையும் தான். தேசம் என்பதற்கு அப்பால், எந்தவொரு அரசியல் கட்சிகளோ, குழுக்களோ, வர்க்கங்களோ இருக்க முடியாது.

பாசிசம் சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால், சோஷலிசம், வரலாற்றுப் போக்கை வர்க்கப் போராட்டமாக வரையறை செய்கின்றது. வர்க்க ஐக்கியம் மூலம் கட்டப்படும் ஒரே முனைப்பான பொருளாதார, தார்மீக அரசமைப்பதை, அது புறக்கணிக்கின்றது./
- முசோலினி (The Doctrine of Fascism, 1932)

பாசிசக் கொள்கை, "ரோமர்களின் பொற்காலத்திற்கு திரும்பும் இத்தாலிய தேசியவாதம்" ஆக முசோலினியால் அதிகாரத்திற்கு வந்தது. அதனை, "பணக்கார மேல்தட்டு வர்க்கம் (Patricians), பெரும்பான்மை ஏழை மக்களை (Plebs) அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சி" என்றும் சொல்லலாம். (ரோமர்கள் காலத்தில் மேட்டுக் குடியினர் Patricians என அழைக்கப் பட்டனர். ஏழைகள் Plebs என அழைக்கப்பட்டனர்.)

இல்லாவிட்டால் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சிஞ்சினாத்தி (Cincinnati) நகரில் பாசிசத்திற்கு சிலை வைப்பார்களா? அமெரிக்கப் புரட்சியின் போது, இங்கிலாந்து மன்னரிடமிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தை, அமெரிக்க முதலாளிய வர்க்கம் கைப்பற்றி இருந்தது. முதலாளிய வர்க்கத்தினர் தமது வெற்றியின் அடையாளமாக பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்தார்கள்.

ரோமர்கள் காலத்தில், அவசர கால நடைமுறையாக மன்னரின் இடத்தில் இருந்து இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரியின் பெயர் Cincinnatus. (அமெரிக்க Cincinnati என்ற ஊரின் பெயர் அதை நினைவுபடுத்துகிறது.) அவரது கையில் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாக "பாசெஸ்" (Fasces) என்ற ஒரு வகை கோடரி இருந்தது. (படத்தை பார்க்கவும்)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியின் கட்சியின் பெயர் பாசிசக் கட்சி. பண்டைய பாசெஸ் ஆயுதத்தில் இருந்து தான் பாசிசம்(Fascism) என்ற சொல் உருவானது.

முசோலினி அந்த சொல்லை தெரிவு செய்வதற்கு காரணம் இருந்தது. பாசிசம் என்பது மன்னராட்சிக்கு எதிரான மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. அது மட்டுமல்ல, "பண்டைய கால பழம் பெருமை பேசும் தேசியவாதம்" பாசிசத்தின் அடிநாதமாக இருந்தது.

"ரோமர்கள் காலத்தில் எம்மவர்கள் (இத்தாலியர்கள்) உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்....." இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்கள், முசோலினியாலும், பாசிசக் கட்சியினராலும் இத்தாலி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் பட்டன.

பாசிசம் தனது சொந்த இன மக்களின் நலன்களை கூடப் பேணப் போவதில்லை. இன்றுள்ள அதே முதலாளித்துவ சுரண்டல் சமுதாயத்தை தொடர்ந்தும் வைத்திருக்கும். அதற்கு உலகின் முதலாவது பாசிச அரசு அமைந்த இத்தாலியின் உதாரணத்தை பார்ப்போம்.

இத்தாலியில் முசோலினி வாழ்ந்த காலத்திலும், மார்க்சிய, சோஷலிச அமைப்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வந்தன. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர், அதுவும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் ஊடாடும் ஒருவர், மார்க்சியத்தை பற்றி அறியாமல் விட்டிருக்க முடியாது.

சோஷலிஸ்டுகள் நடத்திய பத்திரிகை ஒன்றில், ஊடகவியலாளராக பணியாற்றிய முசோலினி, ஆரம்பத்தில் தன்னையும் ஒரு சோஷலிஸ்ட் மாதிரி காட்டிக் கொண்டார். இல்லாவிட்டால் அந்த வேலை கிடைத்திருக்காது. ஆனால், அவரது எழுத்துக்கள் இத்தாலி இனப் பெருமை பேசுவதாகவும், அரசின் போர்வெறியை ஆதரிப்பதாகவும் இருந்தன. அவரது தேசியவெறி நிலைப்பாடு காரணமாக பத்திரிகையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

முசோலினி பாசிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கி, "இத்தாலியர்களின் இழந்த இனப்பெருமையை மீட்டுத் தருவதாக" பிரச்சாரம் செய்தார். இனப்பற்று, மொழிப்பற்று, தேசியம் என்று வலதுசாரியம் பேசிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களை கவர்வதற்காக கொஞ்சம் இடதுசாரியம் பேசினார். அதனால் தான் பொதுத் தேர்தலில் பாசிசக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இத்தாலி மன்னர் இம்மானுவேல் அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு முசோலினி ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

முசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தில் ரயில்கள் நேரம் தவறாமல் ஓடியதாக சொல்வார்கள். அது மட்டுமல்ல, ரயில் டிக்கட் விலையும் குறைக்கப் பட்டது. இதனால், பொதுவாக தமது ஊரை விட்டு வெளியே சென்றிராத உழைக்கும் வர்க்க மக்கள், தூர இடத்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வர முடிந்தது.

பாசிச காலகட்டத்தில் தான் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைத்து என்பதை மறுக்க முடியாது. அதனால் ஓய்வு நேர பொழுதுபோக்குகளும் அதிகரித்தன. சினிமாத் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது, உதைபந்தாட்ட விளையாட்டுகளை கண்டுகளிப்பது என்று, பொது மக்கள் ஒன்று கூடி பொழுது போக்கினார்கள்.

இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிக்கட்டுமானம் பாசிச ஆட்சியில் போடப் பட்டு விட்டது. நாங்கள் இன்றைக்கும் ஒரு நவ பாசிச கலாச்சாரத்திற்குள் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் யாரோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்து எடுக்கும் சம்பளத்தை, ஓய்வு நேர பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்னொரு முதலாளிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேம்போக்காக பார்த்தால், பாசிசம் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்ததாக தெரியும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. 1921 ம் ஆண்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. 1939 ம் ஆண்டு முசோலினியின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பளத் தொகை வீழ்ச்சி கண்டது. ஒன்றில் சம்பளம் குறைந்தது அல்லது வாங்குதிறன் குறைந்தது. சம்பளம் மாறாமல் அப்படியே இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.

உழைக்கும் வர்க்க மக்கள் சோளம் மாவில் செய்த உணவை மட்டுமே உட்கொண்டார்கள். இறைச்சி அரிதாகக் கிடைத்தது. ஒரு நல்ல சைக்கிள் வாங்குவதென்றால் கூட மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டும். அத்தகைய அவல வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிச் சென்றதில் வியப்பில்லை.

பாசிச ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்தது. இருப்பினும், தலைமறைவாக இயங்கி வந்தனர். இரகசிய கெரில்லாக் குழுக்களும் இயங்கின. கம்யூனிச கெரில்லாக்கள் பாசிச அரச நிலைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, தொழிற்சாலைகளில் ஊடுருவி இருந்த கம்யூனிஸ்டுகள், வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இத்தாலியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. வடக்கு இத்தாலியில் பல இடங்கள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வந்து விட்டன. அத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில், மீண்டும் மன்னர் இமானுவேல் "இத்தாலியை காப்பாற்றும் பொறுப்பை" கையில் எடுத்தார்.

1943 ம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் முசோலினி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதே இத்தாலி பாதுகாப்புப் படைகளில் பிளவு உண்டாகி விட்டது. முசோலினிக்கு விசுவாசமான பாசிசப் படையும், மன்னருக்கு விசுவாசமான படையும் மோதிக் கொண்டன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் ஜெர்மன் நாஸி இராணுவம் படையெடுத்தது. தெற்கு இத்தாலி மட்டும் மன்னரின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நேச நாட்டுப் படைகளும் வந்திறங்கின.

ஜெர்மன் படைகள் முசோலினியை சிறையில் இருந்து விடுவித்து, தமக்குக் கீழே ஒரு பொம்மை அரசை வைத்திருந்தன. இருப்பினும், பெரிய நகரங்களான மிலான், தூரின் போன்றன கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த படியால், முசோலினியால் அங்கு செல்ல முடியவில்லை. ஒதுக்குப் புறமான அல்ப்ஸ் மலையடிவார சிறிய நகரம் ஒன்றில், புதிய பாசிச அரசு அமைந்தது.

அப்போதே இத்தாலி முதலாளிகள் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டனர். கார் தயாரிக்கும் இத்தாலி பன்னாட்டு நிறுவனமான FIAT கம்பனிக்கு தூரின் நகரில் தொழிற்சாலை இருந்தது. FIAT தலைமை நிர்வாகி சுவிட்சர்லாந்து சென்று, அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தார். "இத்தாலியில் அமெரிக்கா முதலிட வேண்டுமென்றும், அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவு என்றும்" பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவுடனான இத்தாலி முதலாளிகளின் இரகசிய உறவு, ஓரளவு பயனைத் தந்தது எனலாம். 1945 ம் ஆண்டு, போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் சம்பந்தப் பட்ட FIAT நிர்வாகியை கைது செய்ய தேடி வந்தனர். அங்கே எதிர்பாராத விதமாக அமெரிக்க நிர்வாகி ஒருவரைக் கண்டு ஆச்சரியப் பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகளின் அணியில் இருந்தன. ஆகையினால், கம்யூனிஸ்டுகள், இத்தாலியை கைப்பற்றிய அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா மிகவும் தந்திரமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இத்தாலியை தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் கொண்டு வந்தது. பாசிச ஆட்சிக் காலத்தில் ஒத்துழைத்த இத்தாலி முதலாளிய வர்க்கத்தினர், போர் முடிந்த பின்னர் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்தனர். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது.
1945 ம் ஆண்டு, இத்தாலியின் தென் பகுதியில் நேச நாடுகளின் படையணிகள் வந்திறங்கி இருந்தன. கிழக்கே யூகோஸ்லேவிய பிரதேசங்களை, மார்ஷல் டிட்டோவின் கெரில்லா இராணுவம் கைப்பற்றி இருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான இடங்களை, இத்தாலி கம்யூனிச கெரில்லாக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

தோல்வியின் விளிம்பில் நின்ற முசோலினி, தனக்கு விசுவாசமான பத்துப் படையினரைக் கூட திரட்ட முடியாமல், நாஸி ஜெர்மன் படையினரின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை நோக்கி தப்பியோடினார். ஜெர்மன் படையினரின் டிரக் வண்டியொன்றில், ஜெர்மன் இராணுவ சீருடையில் மாறுவேடம் பூண்டிருந்த முசோலினி, கம்யூனிச கெரில்லாக்களின் சோதனைச் சாவடி ஒன்றில் அடையாளம் காணப் பட்டார். 

முசோலினியும், அவரது காதலியும், விசுவாசமான நண்பர்களும், பிடிபட்ட ஒரு சில தினங்களிலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களது இறந்த உடல்கள் மிலானோ நகர மத்தியில் தலை கீழாக கட்டித் தொங்க விடப் பட்டன. 28 ஏப்ரல் 1945 அன்று இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டது.

¡No pasarán! Fascism shall not pass. பாஸிசம் எம்மைக் கடந்து செல்ல முடியாது.


Tuesday, April 15, 2014

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது!

உக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது! 

கிழக்கு உக்ரைனில், பாசிச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வைத்திருந்த, கிரமாட்டோர்ஸ்க் (Kramatorsk) விமான நிலையத்தின் மீது, உக்ரைனிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. விமான நிலையம், உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வலது அணி என்ற பாசிசக் கட்சி உறுப்பினர்கள் பலர், உக்ரைனிய இராணுவ சீருடை அணிந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சில வெளிநாட்டு பாசிஸ்டுகளும் தாக்குதலில் பங்குபற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. அதனை உறுதிப் படுத்த முடியவில்லை.  


டானியேஸ்க் (Donetsk) நகரில், சோவியத் ஆதரவு ஆர்ப்பாட்டக் காரர்கள், பல பொலிஸ் நிலையங்களை கைப்பற்றி உள்ளனர். கடமையில் இருந்த உக்ரைனிய பொலிஸ்காரர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். பொலிஸ் நிலையங்கள் மட்டுமல்லாது, நேற்று ஒரு சிறிய விமானத் தளமும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. அதைத் தான், தற்போது உக்ரைனிய படைகள் கைப்பற்றியுள்ளன. 

கிழக்கு உக்ரைனிய கிளர்ச்சியாளர்கள், "ரஷ்ய ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள்" என்று உக்ரைனிய அரசும், மேற்கத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் தம்மை உக்ரைனியர்கள் என்று கூறிக் கொள்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் எல்லோரும் ரஷ்ய மொழி பேசுவோர் அல்ல. ரஷ்யா மொழிக்கும், உக்ரைனிய மொழிக்கும் இடைப்பட்ட வட்டார வழக்கு மொழியை பேசும் மக்களும் அடங்குவார்கள். அவர்கள் தம்மை ரஷ்ய இனத்தவராக அடையாளம் காட்டவில்லை. உக்ரைனியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

ரஷ்யர்களையும், உக்ரைனியர்களையும் இணைக்கும் வகையில், "சோவியத் பிரஜை" என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் சோவியத் யூனியனின் கொடிகள் பறப்பதில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம். பாசிச எதிர்ப்புணர்வு, பல்லின கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைக்கிறது.

முன்பு ஆப்கானிஸ்தானில் போரிட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகின்றனர். பொலிஸ் நிலையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, அவர்களே முன்னின்று தாக்கி உள்ளனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை அமைக்கும் நோக்குடன், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.

கிளர்ச்சியை அடக்குவதற்காக, கீவ் அனுப்பிய இராணுவ-பொலிஸ் படையினரும், கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து விட்டனர். கீவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி உள்ள பாசிஸ்டுகள், இராணுவ ரீதியாக மிகவும் பலவீனமாக இருக்கின்றனர். ஆக்கிரமிக்கப் பட்ட அரசாங்க கட்டிடங்களை விட்டு, கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும் என்று, அவர்கள் விதித்த காலக்கெடு காலாவதியாகி விட்டது.

உக்ரைன் அரசு, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றது. அதனால், ஐ.நா. சமாதானப் படை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் பாசிச ஆட்சியாளர்களுக்கு ஆயுத தளபாடங்களை விநியோகம் செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றி வாய் கிழியப் பேசும் தேசியவாதிகள், இன்னொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவது ஒரு முரண்நகை. உலக நாடுகள் முழுவதும் உள்ள தேசியவாதிகள், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாக உள்ளனர். 

உக்ரைன், கீவ் நகரில் சுயநிர்ணய உரிமை கோரிப் போராடியவர்களின் அரசாங்கம், இன்று கிழக்கு உக்ரைனில் ஸ்லாவியான்ஸ்க் நகரில் சுயநிர்ணய உரிமை கோருவோரின் போராட்டத்தை நசுக்குவதற்காக ஹெலிகாப்டர்களையும், படையினரையும் அனுப்பியுள்ளது. 


********


உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவுவதாக தெரிய வருகின்றது. ஐ.நா.மன்றத்தில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விட்ட பொழுது, இஸ்ரேல் கலந்து கொள்ளாமல் வெளிநடப்புச் செய்தது. அதிலிருந்தே, ஒபாமா நிர்வாகத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. 

பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் உக்ரைனில், யூதர்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தாக்கப் படுவது அதிகரித்துள்ளது. யூதர்களின் சமாதிகள் மீது, நாஸி சின்னம் கீறி களங்கப் படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன. உக்ரைனில் பாசிச சதிப்புரட்சிக்குப் பின்னர், ஆயிரக் கணக்கான யூதர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பான தகவல்களுக்கு, இஸ்ரேலிய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. இஸ்ரேல், அமெரிக்காவின் "உக்ரைனிய கொள்கையை" ஆதரிக்காமைக்கான காரணம் இது தான் என்று தெரிய வருகின்றது. ஆயினும், "உக்ரைனிய நாஸிகளின் யூத வெறுப்பு ஒரு கட்டுக்கதை(?)" என்று, ஒபாமா நிர்வாகம் மறுத்து வருகின்றது.

********

ஸ்லாவியான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களையும், பொலிஸ் தலைமையகத்தையும் கைப்பற்றிய மக்கள், அவற்றை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். உள்ளூர் பொலிஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஸ்லாவியான்ஸ்க் நகரில் மக்கள் மனிதச் சங்கிலி அமைத்து வருகின்றனர். 


ஸ்லோவியான்ஸ்க், உக்ரைனிய படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராக காத்திருக்கும் மக்கள்.

வீடியோ: ஸ்லோவியான்ஸ்க் நகருக்குள் நிலை கொண்டிருந்த உக்ரைனிய அரச படையினர், மக்களிடம் தமது ஆயுதங்களை ஒப்படைத்த காட்சி.

 

*******


இவை, மேற்குலக ஊடகங்கள் மக்களுக்கு காட்டாமல் மறைக்கும் காட்சிகள். உக்ரைன், லுகான்ஸ்க் நகரில் அரசாங்க கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள மக்கள் மத்தியில், மேற்குலக எதிர்ப்பு தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. லுகான்ஸ்க் நகர ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட சில காட்சிகள்.


உக்ரைனை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ், லுகான்ஸ்க் (Luhansk) நகரமும் வந்துள்ளது. அங்குள்ள அரசாங்க கட்டிடம் ஒன்றில், முன்னாள் சோவியத் யூனியனின் கொடி பறக்கிறது.



*********

ஒடேசா (Odessa) நகரில் (10-4-2014), செம்படை வீரர்களின் சீருடை அணிந்த இளைஞர்கள், சோவியத் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுத்துச் செல்கின்றனர். 2 ம் உலகப் போரில், ஜெர்மன் நாஸிப் படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த ஒடேசா நகரம், சோவியத் செம் படையினரால் விடுதலை செய்யப்பட்ட எழுபதாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, இந்த அணிவகுப்பு நடந்தது. 70 வருடங்களுக்கு முன்னர், வெற்றி விழாக் கொண்டாடிய செம்படை வீரர்கள், இதே தெருக்களில், இதே மாதிரித் தான் அணிவகுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


ஒடேசா நகரில் நடந்த, பாசிச எதிர்ப்பு ஊர்வலத்தில் இருந்து ஒரு காட்சி. ஊர்வலத்தில் கலந்து கொண்ட, உக்ரைனில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இருவரை இந்தப் படத்தில் பார்க்கலாம். இந்தப் படமும், ஊர்வலம் பற்றிய தகவலும், "ஜனநாயகம் காக்கும்" மேலைத்தேய ஊடகம் எதிலும் வரவில்லை. அது தான் அவர்களது நடுநிலை தவறாத ஊடகத் தர்மம்.



உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், தமிழர்கள் வாழ்கிறார்கள். முன்பு கீவ் நகரில் இடம்பெற்ற, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களின் Euro Maidan ஆர்ப்பாட்டத்தில், ஒரு வெளிநாட்டவர் கூட தலை காட்டவில்லை. "வெளிநாட்டவர்களை வெறுக்கும் நவ நாஸிகளை ஆதரிக்கும் அளவிற்கு," அவர்கள் யாருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழும், ஒரு சில மேட்டுக்குடித் தமிழர்கள் மட்டும், இன்னமும் உக்ரைனிய நாஸிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.



 *******


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, March 08, 2014

உக்ரைனில் நாஸிகளின் பயங்கரவாத ஆட்சி - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்



இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், முதன் முதலாக ஒரு ஐரோப்பிய நாடான உக்ரைனில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இன்றைக்கும் பலர், அதன் ஆபத்தை உணராமல் இருக்கின்றனர். உக்ரைன் நாட்டில், ஆயிரக் கணக்கான தமிழர்கள், அல்லது தெற்காசிய நாட்டவர்கள் வாழ்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையினர் மாணவர்களாகவும், அகதிகளாகவும் உக்ரைனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு அவர்களின் நிலைமை என்னவென்று யாராவது நினைத்துப் பார்த்தார்களா?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று கருதப் படும், தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறன? இந்த ஆபத்தை மூடி மறைத்து, நாசிஸ பயங்கரவாதிகளுக்கு நற்சான்றிதழ் பத்திரம் வழங்கிக் கொண்டிருக்கிறன.

ஒரு தடவை, அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள், இந்தியா முழுவதும் பரபரப்புச் செய்தியாக பேசப் பட்டது. ஆனால், கடந்த வருடம், உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிலர் தாக்கப் பட்ட சம்பவம் பற்றி, எத்தனை பேருக்குத் தெரியும்? எந்த ஊடகம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது?

உக்ரைனில் இந்திய மாணவர்களை தாக்கியது யார் தெரியுமா? அந்த நாட்டில் ஒரு பலமான நவ நாஸி அரசியல் கட்சியின் உறுப்பினர்கள். அவர்கள் தான் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ரஷ்யாவுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தான் மேற்குலகம் ஆதரிக்கிறது. மேற்குலகம் ஆதரிப்பதால், நாங்களும் ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி ஒன்றில் தான், அந்த சம்பவம் இடம்பெற்றது. கடந்த வருடம், உக்ரைனில் நடந்த உதைபந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இந்திய மாணவர்களே, நவ நாஸிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை அடித்தார்கள்? இந்திய மாணவர்களின் கறுப்புத் தோல் நிறமே போதுமானது. வேறு எந்தக் காரணமும் தேவையில்லை. அதை நிறவெறி, இனவெறி என்று கண்டிப்பதற்கு பலர் முன்வருவார்கள். ஆனால், அன்று இந்தியர்களுக்கு அடித்த அதே நிறவெறியர்கள் / இனவெறியர்கள் தான், இன்று உக்ரைனிய அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றார்கள்.

ஆயுதமேந்திய நவ நாஸிக் குண்டர்கள், உக்ரைனில் கீவ் நகரில் அட்டகாசம் செய்து கொண்டிருந்த காலங்களில், "அரசுக்கு எதிரான அமைதி வழிப் போராட்டம் நடக்கின்றது" என்று தமிழ் ஊடகங்கள் புளுகிக் கொண்டிருந்தன. அவர்கள் சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சிக்கு வந்திருந்தாலும், மேற்குலகம் ஆதரிக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் ஊடகங்களும் ஒரு நிறவெறி- பாசிஸ அரசை ஆதரிக்கின்றன. பாசிச வன்முறையாளர்களை, ஜனநாயகவாதிகள் போன்று சித்தரிக்கின்றன. இன்று வரையில், ஏதாவது ஒரு வெகுஜன தமிழ் ஊடகம், குறைந்த பட்சம் ஒரு இணையத் தளமாவது, "உக்ரைனிய ஆட்சியாளர்கள் நாஸிகள் / பாசிஸ்டுகள்" என்று கூறி இருக்கிறதா? (இடதுசாரி சார்பான ஊடகங்களை இங்கே குறிப்பிடவில்லை.)

தமிழ் ஊடகங்களில் வெளியாகும், அண்மைக் கால உக்ரைன் பிரச்சினை பற்றிய பற்றிய செய்திகள் எல்லாவற்றிலும், "நாஸிகள், பாசிஸ்டுகள்" என்ற சொற்கள் வர விடாமல் தணிக்கை செய்யப் பட்டிருக்கும். தாங்கள் எத்தகைய ஆபத்தை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது, இந்த ஊடகங்களுக்கு தெரிவதில்லை. நாளைக்கு, உக்ரைனில் வாழும் இந்தியர்கள், ஈழத் தமிழர்கள், நவ நாஸி காடையர்களினால் அடித்து விரட்டப் படும் காலம் வரும் பொழுது மட்டுமே விழித்துக் கொள்ளும். ஆனால், அப்போது காலம் கடந்து விட்டிருக்கும்.

உக்ரைனில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியின் பொழுது, இந்திய மாணவர்களை நவ நாஸிகள் அடித்து உதைக்கும் காட்சிகள், இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. அப்போதே பிபிசி அதனை வெளியிட்டிருந்தது. 

Ukraine football fans are racist 

உக்ரைன் பற்றிய முன்னைய பதிவுகள்:

Tuesday, September 21, 2010

இஸ்ரேலில் பாஸிசம்: யூத பேரினவாத சட்டம்

"இஸ்ரேலை யூத இனத்தவருக்கான நாடாக ஏற்றுக் கொண்டு விசுவாச சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்", என்ற சட்ட மசோதா தற்போது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது. தீவிர வலதுசாரிக் கட்சியான Yisrael Beiteinu வின் நாடாளுமன்ற உறுப்பினர் David Rotem இந்த பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டம் அமுலுக்கு பட்சத்தில், இஸ்ரேலில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் "விசுவாச சத்தியப் பிரமாணம்" எடுக்க வேண்டும். அல்லாவிட்டால் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் இருபது வீதமானோர் பாலஸ்தீன பிரஜைகள். அவர்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் முகமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாலஸ்தீன-அரபு சிறுபான்மை இன மக்கள், இஸ்ரேலின் யூத பேரினவாதத்தின் கீழ் அடிபணிவதாக சத்தியம் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் சட்டப்படி குடியுரிமைகளை இழப்பார்கள். (பார்க்க:Palestinians may soon have to swear loyalty to 'Jewish' state)

ஒவ்வொரு பிரஜையும் பின்வருமாறு சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும்:
"நான் ஹாஷேம் (யூத கடவுள்) பெயரால் உறுதிமொழி எடுக்கிறேன். யூத தேசமான இஸ்ரேலுக்கும், அதனது தலைவர்களுக்கும், தளபதிகளுக்கும், இராணுவத்திற்கும் எனது நிபந்தனையற்ற விசுவாசத்தை வழங்குகிறேன். யூத தேசத்தின் விசுவாசியாக எந்த நேரத்திலும் எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறேன்."

நாஜி ஜெர்மனியில் ஒவ்வொரு பிரஜையும், ஜெர்மன் தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்களை வேட்டையாடிய மக்கார்த்தி சட்டம், ஒவ்வொரு பிரஜையும் அரச விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்று உறுதிமொழி எடுக்க நிர்ப்பந்தித்தது. இலங்கையில் ஈழப்போர் ஆரம்பமான காலத்தில், அரசாங்க ஊழியர்கள் "பிரிவினைக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகவும்" சத்தியப் பிரமாணம் எடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. முன்னொரு தடவை வட-கிழக்கு மாகாணங்களில் தெரிவான ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அந்த உறுதிமொழி எடுக்க மறுத்ததால் தமது பதவிகளை இழந்தார்கள். இப்போதுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், "பிரிவினைக்கு எதிரான" உறுதிமொழி எடுக்காமல் பதவிகளை தக்க வைத்திருக்க முடியாது.

இன்றைக்கும் இஸ்ரேலின் யூத பேரினவாத அரசுக்கு, நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தமிழர்கள் இருப்பது வேதனைக்குரியது. இஸ்ரேலின் உதாரணத்தை பின்பற்றி, "சிறிலங்கா என்ற சிங்கள-பௌத்த தேசத்திற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்குமாறு" இலங்கை அரசு சட்டம் கொண்டு வராதா? அப்போது இலங்கையில் வாழும் 20 வீதமான தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை என்னவாகும்?

பாசிச சட்ட மசோதாவிற்கு இஸ்ரேலியர்கள் எந்த அளவிற்கு ஆதரவு வழங்குகின்றனர்? இதை அறிவதற்காக எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை ஒரு தடவை பார்வையிடவும்.