Sunday, August 25, 2019

ஹாங்காங் போராட்டம் - நடந்தது என்ன?


ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?


முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து.

உல‌கில் பெருமள‌வு மூல‌த‌ன‌ம் புழ‌க்க‌த்தில் உள்ள‌ நாடுக‌ளில் ஹாங்காங்கும் ஒன்று. ஆக‌வே சீனாவுக்கு அருகில் உள்ள‌ ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ள் சீன‌ ச‌ந்தையில் முத‌லிட‌ ஓடி வ‌ருவார்க‌ள். அத‌னால் சீன‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ச்சி அடையும் என்று க‌ண‌க்குப் போட்ட‌து. அப்ப‌டியே ந‌ட‌ந்த‌து. அது ம‌ட்டும‌ல்ல‌, ம‌று ப‌க்க‌மாக‌ சீன‌ அர‌சு நிறுவ‌ன‌ங்க‌ள் கூட‌ ஹாங்காங் ப‌ங்குச் ச‌ந்தையில் முத‌லிட்டு இலாப‌ம் ச‌ம்பாதித்துள்ள‌ன‌.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றி எம‌க்கு ஊட‌க‌ங்க‌ள் ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌. இது "குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்தும் ச‌ட்ட‌ம்" தொட‌ர்பான‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்ப‌து ஒரு ப‌குதி உண்மை ம‌ட்டுமே. அது அல்ல‌ முக்கிய‌ கார‌ண‌ம். உண்மையில் குற்ற‌வாளிக‌ளை நாடுக‌ட‌த்துவ‌தை எந்த‌ நாடும் த‌வ‌றென்று சொல்ல‌ப் போவ‌தில்லை. ஹாங்காங் ம‌க்க‌ளும் அந்த‌ள‌வு முட்டாள்க‌ள் அல்ல‌.

உண்மையான‌ பிர‌ச்சினை வேறெங்கோ உள்ள‌து. ஹாங்காங்கில் இன்று வ‌ரையில் பிரிட்டிஷ் கால‌னிய‌ கால‌ ச‌ட்ட‌ம் தான் அமுலில் உள்ள‌து. Common Law என்ற‌ பிரிட்டிஷ் ச‌ட்ட‌ம் நிதித் துறையில் அதிக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதிப்ப‌தில்லை. laisser faire (பிரெஞ்சு சொல்லின் அர்த்த‌ம் "செய்ய‌ விடு") எனும் பொருளாதார‌ சூத்திர‌த்தின் அடிப்ப‌டையில், வ‌ணிக‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சு த‌லையீடு இன்றி வ‌ர்த்த‌க‌ம் செய்து அதிக‌ இலாப‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். சுருக்க‌மாக‌, குறுக்கு வ‌ழியில் ப‌ண‌க்கார‌ராக‌ வர விரும்புவோருக்கு ஹாங்காங் ஒரு சிற‌ந்த‌ நாடு.

ஹாங்காங் அதி தாராள‌வாத‌ பொருளாதார‌த்தை கொண்டுள்ள‌தால் சாத‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ பாத‌க‌மும் உண்டு. அத‌ன் அர்த்த‌ம் அங்கு ந‌ட‌க்கும் மூல‌த‌ன‌ப் பாய்ச்ச‌லையும் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது. யார் எத்த‌னை கோடி டால‌ர் ப‌ண‌ம் ச‌ட்ட‌விரோத‌மாக‌ ச‌ம்பாதித்தார்க‌ள்? அதை எங்கே ப‌துக்கி வைக்கிறார்க‌ள்? இந்த‌க் கேள்விக‌ளுக்கு விடை தெரியாது.

இத‌னால் சீன‌ அர‌சால் புதிய கட்டுப்பாடுகள் போடப் பட்டன. நிதி மூல‌த‌ன‌ம் ஹாங்காங்கை விட்டு வேறு நாடுக‌ளுக்கு செல்வ‌தை க‌ட்டுப்ப‌டுத்தும் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அத‌ன் ஒரு ப‌குதி தான் குற்ற‌வாளிக‌ளை நாடு க‌ட‌த்தும் ச‌ட்ட‌ம். அதாவ‌து கோடிக்க‌ண‌க்கில் ப‌ண‌ மோச‌டி செய்த‌ க‌ம்ப‌னி நிர்வாகியும் குற்ற‌வாளி தான். புதிய‌ ச‌ட்ட‌த்தினால் அப்ப‌டியான‌ ஊழ‌ல்பேர்வ‌ழிக‌ள் நிறைய‌ அக‌ப்ப‌டுவார்க‌ள் என்ற‌ அச்ச‌ம் எழுந்த‌து. அத‌ன் விளைவு தான் அங்கு ந‌ட‌க்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள்.

அநேக‌மாக‌ எல்லா பெரிய‌ வ‌ங்கி நிறுவ‌ன‌ங்க‌ளும் ஹாங்காங்கில் த‌ள‌ம் அமைத்துள்ள‌ன‌. அதே போன்று பெரிய‌ அக்க‌வுன்ட‌ன்ட் நிறுவ‌ன‌ங்க‌ளும் உள்ள‌ன‌. அவை அங்கு முத‌லிட‌ வ‌ரும் ப‌ன்னாட்டு கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்குகின்ற‌ன‌. ஆனால், அவை அதை ம‌ட்டும் செய்ய‌வில்லை. அர‌சிய‌லிலும் த‌லையிடுகின்ற‌ன‌ என்ப‌த‌ற்கு அங்கு ந‌டக்கும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளே சாட்சிய‌ம்.

கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் நினைத்தால் ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை தெருவுக்கு கொண்டு வ‌ந்து ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌ வைக்க‌ முடியும். அத‌ற்கு ஆதார‌மாக‌ KPMG, EY, Deloitte, PwC ஆகிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் வெளியிட்ட‌ ஆர்ப்பாட்ட‌க் கார‌ரை ஆத‌ரிக்கும் விள‌ம்ப‌ர‌ங்க‌ளை குறிப்பிட‌லாம். இது அங்கு எந்த‌ள‌வு தூர‌ம் கார்ப்ப‌ரேட் க‌ம்ப‌னிக‌ள் அர‌சிய‌லில் ஈடுப‌டுகின்ற‌ன‌ என்ப‌தை நிரூபிக்கின்ற‌து. இது குறித்து சீன அர‌சு க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌ பின்ன‌ர் த‌ம‌து ஆதரவை வெளிப்ப‌டையாக‌ காட்டிக் கொள்வ‌தில்லை.

சீன‌ அர‌சுக்கும், ஹாங்காங் கார்ப்ப‌ரேட் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் இடையிலான‌ பிர‌ச்சினையில், அரசின் அழுத்த‌ம் அதிக‌ரிக்கும் போதெல்லாம் "ம‌க்க‌ள் எழுச்சி" ஏற்ப‌டுகிற‌து. உதார‌ண‌த்திற்கு, ஹாங்காங் விமான‌ சேவைக‌ள் நிறுவ‌ன‌மான‌ க‌தே ப‌சிபிக் தலைவ‌ர் ப‌த‌வி வில‌கினார். அந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ நேர‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை என்று அர‌சு குற்ற‌ம் சாட்டி இருந்த‌தே ப‌த‌வி வில‌க‌லுக்கு கார‌ண‌ம். அதைத் தொட‌ர்ந்து எங்கிருந்தோ வ‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் விமான‌ நிலைய‌த்தை முற்றுகையிட்டு விமான‌ப் போக்குவ‌ர‌த்தை சீர்குலைத்த‌ன‌ர்.

முன்னைய‌ ச‌ம்ப‌வ‌த்தை இருட்ட‌டிப்பு செய்து விட்டு பின்னைய‌தை ப‌ற்றி ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் தெரிவித்த‌ன‌. அதே மாதிரி ஹாங்காங்கில் சீனாவுக்கு ஆத‌ர‌வான‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ளில் காட்ட‌ப் ப‌டுவ‌தில்லை. அது ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கூட‌ த‌டைசெய்ய‌ப் ப‌டும் என்று ட்விட்ட‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிவித்திருந்த‌து.

Saturday, August 24, 2019

வளர்ந்து வரும் வலதுசாரி பயங்கரவாதம் - சில குறிப்புகள்

பெல்ஜிய‌ நாட்டில் உள்ள‌ தீவிர‌ வ‌ல‌துசாரி இன‌வாத‌க் க‌ட்சியான "பிலாம்ஸ் பெலாங்" (Vlaams Belang) இளைஞ‌ர் அணியின‌ர் ஆயுத‌ங்க‌ளுட‌ன் காட்சிய‌ளிக்கும் ப‌ட‌ம் ஒன்றை டிவிட்டரில் காணக் கிடைத்தது. அவ‌ர்க‌ள் 2019 ம் ஆண்டு கோடை விடுமுறைக் கால‌த்தில், போல‌ந்தில் கிராக‌வ் ந‌க‌ருக்கு அருகில் "அர‌சிய‌ல் வ‌குப்புக‌ள்" என்ற‌ பெய‌ரில் இராணுவ‌ப் ப‌யிற்சியில் ஈடுப‌ட்ட நேர‌ம் இந்த‌ப் ப‌ட‌ம் எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.


இதனால் தமக்கு ஏதாவது பிரச்சினை வரலாம் என்ற எந்த பயமும் இல்லாமல், இராணுவப் பயிற்சி பெரும் ப‌ட‌த்தையும், யூடியூப் வீடியோவையும் அவ‌ர்க‌ளே வெளியிட்டுள்ள‌ன‌ர். ஐரோப்பாவில் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் வ‌ள‌ர்ந்து வ‌ரும் இந்த‌ நேர‌த்தில் அர‌சு இது குறித்து க‌வ‌ன‌ம் எடுக்க‌வில்லை. அத்துட‌ன், இந்த‌ த‌க‌வல் எந்த‌வொரு ஊட‌க‌த்திலும் வெளிவராது என்ப‌தை நிச்ச‌ய‌மாக‌க் கூற‌லாம்.

பெல்ஜியத்தில் பிலாம்ஸ் பெலாங் கட்சி தன்னை ஒரு மிதவாத பொப்புலிஸ்ட் கட்சியாக காட்டிக் கொள்கிறது. அது வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான இனவாதம், இஸ்லாமோபோபியா கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் வளர்ந்து வரும் கட்சி. அது டச்சு மொழி (பெல்ஜியத்தில் பிலாம்ஸ் என்று அழைப்பார்கள்) பேசும் மாநிலத்தில் மட்டும் இயங்கும் பிரதேசக் கட்சி. அந்தக் கட்சி சார்பில் பல உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தெரிவாகி உள்ளனர்.

தீவிர‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் இன்றைய‌ உல‌கில் மிக‌ப் பெரும் அச்சுறுத்த‌லாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ருவ‌தாக‌ ப‌ல‌ புள்ளிவிப‌ர‌ங்க‌ளை மேற்கோள் காட்டி நெத‌ர்லாந்து தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ள‌து. (NOS, 18-08-2019) இதுவ‌ரை மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்துள்ள‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் யாவும் அங்கு வாழும் வெளிநாட்டு குடியேறிக‌ளை இல‌க்கு வைத்து ந‌ட‌ந்துள்ள‌ன‌.

பிரைவிக் (Brevik), டார‌ன்ட் (Tarrant) ஆகியோர் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் நாய‌க‌ர்க‌ளாக‌, வ‌ழிகாட்டிக‌ளாக‌ போற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். நோர்வேயை சேர்ந்த‌ பிரைவிக் ஒஸ்லோ ந‌க‌ரில் ந‌ட‌த்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லில் 90 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மாக‌ இருந்த‌வ‌ன். அதே மாதிரி நியூசிலாந்து கிரைஸ்ட் சேர்ச்சில் 50 பேர் ப‌லியாக‌ கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ன் டார‌ன்ட்.

அண்மையில் ந‌ட‌ந்த‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்திய‌ வெள்ளையின‌ இளைஞ‌ர்க‌ள் மேற்ப‌டி ந‌ப‌ர்க‌ளை த‌ம‌து நாய‌க‌ர்க‌ளாக‌ பிர‌க‌ட‌ன‌ப் ப‌டுத்தி இருந்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ நாடுக‌ளை நோக்கிய‌ பெரும‌ள‌விலான‌ அக‌திக‌ளின் வ‌ருகை வல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை ஊக்குவிக்கும் கார‌ணியாக‌ இருந்துள்ள‌து. குறிப்பாக‌ ஜேர்ம‌னியில் சிறிதும் பெரிதுமாக‌ ப‌ல‌ அக‌தி முகாம் எரிப்புச் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

பிரான்ஸ், ஜேர்ம‌னி, பிரித்தானியா, இத்தாலி ஆகிய‌ மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளை சேர்ந்த‌ அரச உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ல‌துசாரிப் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளின் அச்சுறுத்த‌ல் அதிக‌ரித்து வ‌ருவ‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கை விடுத்துள்ள‌ன‌.

ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌ப்ப‌ப் ப‌டும் வ‌த‌ந்திக‌ளும் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளினால் உண்மை என‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌. ஆசிய‌, ஆப்பிரிக்க‌ நாடுக‌ளில் இருந்து பெரும‌ள‌வில் ப‌டையெடுக்கும் அக‌திக‌ள், குடியேறிக‌ள் கார‌ண‌மாக‌, ஐரோப்பிய நாடுகளில் பூர்வீக‌ வெள்ளையின‌த்த‌வ‌ரின் ச‌ன‌த்தொகை குறைந்து வ‌ருவ‌தாக‌ வ‌த‌ந்திக‌ள் ப‌ர‌ப்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌.

நியூசிலாந்து நாட்டில் கிரைஸ்ட்சேர்ச் நகரில், ஒரு வெள்ளையின நிறவெறிப் பயங்கரவாதி மசூதியில் தொழுது கொண்டிருந்த ஐம்பது பேரை சுட்டுக் கொண்ட சம்பவம் உலகை உலுக்கி இருந்தது. 15 மார்ச் 2019 ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் ஒரு வெள்ளையின‌, நாஸி ப‌ய‌ங்க‌ர‌வாதி என்ப‌தால் விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் அவ‌னை "துப்பாக்கிதாரி" என்றும், ச‌ம்ப‌வ‌த்தை "துப்பாக்கிச் சூடு" என்று ம‌ட்டுமே குறிப்பிட்டன. த‌மிழ் அடிமை ஊட‌க‌ங்க‌ளும் "ம‌ர்ம‌ ந‌ப‌ர்" என்று அறிவித்தன. விரைவில் அவ‌னை ஒரு ம‌ன‌ நோயாளி என்று சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌ எதுவுமில்லை.

அதே நேர‌ம், எங்காவ‌து ஒரு முஸ்லிம் க‌த்தியால் குத்தினால் கூட‌, அதை ஒரு மிக‌ப் பெரிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லாக‌ சித்த‌ரித்து ஊட‌க‌ங்க‌ள் அல‌றிக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ பெரும‌ள‌வு ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்களுக்கு காரண‌ம் ந‌வ‌- நாஸிச‌, தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் என்று புள்ளிவிப‌ர‌ம் தெரிவிக்கிற‌து. இருப்பினும் இந்த‌ விப‌ச்சார‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தை க‌ண்டுகொள்வ‌தில்லை.

நான், 1991 ம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி, பேர்ன் மாநிலத்தில் உள்ள ஓர் அகதி முகாமில் தங்கி இருந்தேன். அப்போது எமது முகாமில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இன்னொரு அகதி முகாம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. அந்தச் சம்பவத்தில் யாரும் கொல்லப் படவில்லை, காயமடையவுமில்லை.

அந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஒரு (முன்னாள்?) சுவிஸ் இராணுவ வீரன். அகதிகளை பயமுறுத்தி வெளியேற வைக்கும் எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளான். அன்றைய தினம் வெளியான உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றின் (பெயர் நினைவில்லை) முன்பக்கத்தில் அவனது பேட்டி வெளியாகி இருந்தது. தானியங்கி துப்பாக்கி ஒன்றை மடியில் வைத்திருக்கும் படம் ஒன்றும் போட்டிருந்தார்கள்.

அன்றைய பத்திரிகை செய்தியில் பேட்டி கொடுத்த "துப்பாக்கிதாரி"(பயங்கரவாதி?) அகதி முகாம் மீதான தாக்குதலுக்கு தெரிவித்த காரணம் இது: "அகதிகள் வருகையால் சுவிட்சர்லாந்து பாழாகி விடும் என்றும், வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றும்..." குற்றம் சாட்டி இருந்தான். சுருக்கமாக, இனவெறியில் நடத்திய தாக்குதல்.

அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து நிறைய அகதிகள் வந்து கொண்டிருந்தனர். சுவிஸ் அகதி முகாம்கள் சிலவற்றில் ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யூகோஸ்லேவியா, அல்பேனியா, எரித்திரியா என்று பிற நாடுகளை சேர்ந்த அகதிகளும் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் தஞ்சம் கோரிய முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தக் காலத்தில் ஈரான், ஈராக், சிரியா போன்ற "முஸ்லிம்" நாடுகளில் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய அகதிகள் மட்டுமே வந்திருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளும் இருந்தனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் நவ- நாசிஸ தீவிர வலதுசாரிகள் ஆரம்பத்தில் ஆசிய/ ஆப்பிரிக்க அகதிகளை மட்டுமே எதிர்த்து வந்தனர். குறிப்பாக இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் அப்போது இருக்கவில்லை. அதற்கு மாறாக, பொதுவாக கறுப்பினத்தவர் மீதான வெறுப்புணர்வு இருந்தது. அதே மாதிரி, மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாட்டவரை "முஸ்லிம்கள்" என்ற பொதுப் பெயரில் துவேசம் காட்டும் போக்கும் இருந்தது.

அதாவது, வெள்ளையரின் நாடுகளில் நீங்கள் ஒரு தமிழ்க் கிறிஸ்தவராக இருந்தாலும், பெரும்பாலான வெள்ளையரின் பார்வையில் ஒரு "முஸ்லிம்" தான்! இதை எனது நாளாந்த அனுபவத்தில் கண்டிருக்கிறேன். தெற்காசிய இனத்தவர் போன்று தோன்றும் அத்தனை பேரும், வெள்ளையரின் கண்களுக்கு முஸ்லிம்கள் தான். "இல்லை நான் ஒரு இந்து/பௌத்தன்/கிறிஸ்தவன்" என்று தெளிவு படுத்தினாலும், வெள்ளையின மக்களின் பொதுப் புத்தியை இலகுவில் மாற்ற முடியாது.

நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதலுக்குப் பிறகு, முன்னர் ஒருபோதும் எதிர்பார்த்திராத சமூக மாற்றங்கள் உருவாகின. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி மூன்றாவது தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் மீதான இன ஒடுக்குமுறை பரவலாக வந்தது. அது சமுதாயத்தை இரண்டாகப் பிளவுபடுத்தியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, சிறுபான்மை இனத்தவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் பெரும்பான்மை இனத்தவரின் பேரினவாதம் முன்னுக்கு வந்தது.

எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போன்று, அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை தூண்டி விட்டது. இது ஒரு சில நாட்களிலேயே ஐரோப்பாவிலும் பரவி விட்டது. போதாக்குறைக்கு, அரசுகளும், ஊடகங்களும் இஸ்லாமிய பூதம் இருப்பதாக பயமுறுத்திக் கொண்டிருந்தன. அடுத்தடுத்து ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் நடந்த யுத்தங்களும், அங்கிருந்து வந்த அகதிகளும் புதிய நெருக்கடிகளை உண்டாக்கின.

அது வரையும் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடந்த நவ- நாசிஸ குழுக்கள், புதிதாக கிடைத்த வாய்ப்புகளை இறுகப் பற்றிக் கொண்டன. இஸ்லாம் என்ற மதத்திற்கு எதிரான பரப்புரைகள் வெகுஜன ஊடகங்களிலேயே நடக்கும் பொழுது அவர்கள் சும்மா இருப்பார்களா? இது தான் சந்தர்ப்பம் என்று முஸ்லிம் குடியேறிகளுக்கு எதிரான புனிதப் போரை அறிவித்தன. அதன் விளைவுகளில் ஒன்று தான், நியூசிலாந்து மசூதியில் ஐம்பது பேர் பலியாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.

வலதுசாரி நிறவெறிப் பயங்கரவாதம் குறித்து ஊடகங்கள் அக்கறை காட்டாது விடினும், ஐரோப்பிய அரசுகளும், அவற்றின் புலனாய்வுத்துறையினரும் இது குறித்து கவனம் எடுத்து கண்காணித்து வருகின்றனர். உள்நாட்டு பூர்வீக ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் உருவாகும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தமது இலக்கை அடைவதற்காக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

வளர்ந்து வரும் வலதுசாரிப் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து  மேற்கைரோப்பிய அரசுகள்  மென் போக்கை பின்பற்றி வருகின்றன அதற்குக் காரணம் இந்நாடுகளில் இனப்பிரச்சினையை உண்டாக்கி இனங்களை மோத விடுவதற்கு வலதுசாரி பயங்கரவாதம் அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றது.

அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஜேர்ம‌னியில் இய‌ங்கிய‌ வ‌ல‌துசாரி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இய‌க்க‌மான‌ "National Socialist Underground" (NSU) ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் ஒன்று பார்க்க‌க் கிடைத்த‌து. அதிலிருந்து எடுத்த சில குறிப்புகளை இங்கே தருகிறேன். ஐரோப்பிய அரசுக்களுக்கும், வலதுசாரி பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்புகள் அம்பலத்திற்கு வருகின்றன.

  •  முன்னாள் சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜேர்ம‌னியில், ந‌வ‌ நாஸிக‌ள் அல்ல‌து தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளே அர‌ச‌ எதிர்ப்பு ஆர்ப்பாட்ட‌ங்க‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌ ஜேர்ம‌னி ஒன்று சேர்ந்த‌து. இத‌னை முன்னாள் ந‌வ‌ நாஸி த‌ன‌து வாக்குமூல‌த்தில் குறிப்பிடுகின்றான்.
  •  
  • முன்ன‌ர் கிழ‌க்கு ஜேர்ம‌ன் இர‌க‌சிய‌ப் பொலிஸ் த‌ம் மீது க‌டுமையான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌தாக‌வும், ஒன்றிணைந்த‌ ஜேர்ம‌னியிலும் தாம் வ‌ர‌வேற்க‌ப் ப‌ட‌வில்லை என்றும் குறிப்பிட்டான். 
  •  
  • இட‌துசாரிக‌ளுக்கு எதிரான‌ வெறுப்புண‌ர்வு கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் ந‌வ‌ நாஸி அமைப்புக‌ளில் சேருகின்ற‌ன‌ர். தெருக்க‌ளில் காணும் இட‌துசாரிக‌ளுக்கு அடிப்ப‌தென்றால் அல்வா சாப்பிடுவ‌து மாதிரி. 
  •  
  •  ஜேர்ம‌ன் நாஸிக‌ள், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் தொட‌ர்புக‌ளை ஏற்ப‌டுத்திக் கொண்டுள்ளன‌ர். - ந‌வ‌ நாஸிக‌ள் இர‌க‌சிய‌மாக‌ இராணுவ‌ப் ப‌யிற்சி எடுக்கிறார்க‌ள். ஆயுத‌ங்க‌ளை சேக‌ரிக்கிறார்க‌ள். 
  •  
  •  எதிர்கால‌த்தில் இன‌ப் பிர‌ச்சினை தீவிர‌ம‌டைந்து இன‌ங்க‌ளுக்கு இடையில் உள்நாட்டுப் போர் ந‌ட‌க்கும் என்று ந‌ம்புகிறார்க‌ள். 
  •  
  • இன்றைய‌ ஜேர்ம‌ன் அர‌சு, நாஸிக‌ளை க‌ண்காணிப்ப‌த‌ற்காக‌ த‌ன‌து ஆட்க‌ளை ஊடுருவ‌ வைத்துள்ள‌து. 
  •  
  •  த‌லைம‌றைவாக‌ இய‌ங்கும் ந‌வ‌ நாஸிக‌ளில் ஏராள‌மான‌ அர‌ச‌ உளவாளிக‌ள் உள்ள‌ன‌ர். இருப்பினும், அர‌சுக்கு வேலை செய்த‌ அதே ந‌வ‌ நாஸிக‌ள் தான், த‌லைம‌றைவாக‌ இய‌ங்கிய‌ NSU உறுப்பின‌ர்க‌ள் என்ற‌ விட‌ய‌ம் த‌சாப்த‌ கால‌மாக‌ அர‌சுக்கு தெரிய‌வில்லையாம்! (ந‌ம்ப‌ முடியுமா?) 
  •  
  •  NSU உறுப்பின‌ர்க‌ள் மூன்று பேர் ம‌ட்டுமே என்று சொல்ல‌ப் ப‌டுகின்ற‌து. இருவ‌ர் வ‌ங்கிக் கொள்ளை முய‌ற்சியில் பொலிசால் வேட்டையாட‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் ம‌ர்ம‌மான‌ முறையில் இற‌ந்து கிட‌ந்த‌ன‌ர். மூன்றாவ‌து ந‌ப‌ரான‌ பெண் உறுப்பின‌ர் ச‌ர‌ண‌டைந்தார். - அந்த‌ மூவ‌ரைத் த‌விர‌ வேறு யாராவ‌து இருக்கிறார்க‌ளா? யாருக்கும் தெரியாது. அது தொட‌ர்பான‌ விசார‌ணை முடிவுக‌ள் இன்ன‌மும் மூடும‌ந்திர‌மாக‌ உள்ள‌ன‌. 
  •  
  •  NSU ப‌ல‌ த‌ட‌வைக‌ள் வங்கிக‌ளை கொள்ளைய‌டித்தும் பிடிப‌ட‌வில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, நாடு முழுவ‌தும் ப‌த்துப் பேர‌ள‌வில் கொலை செய்துள்ள‌து. கொல்ல‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் ஒரு பொலிஸ் பெண்ம‌ணியை த‌விர‌ ஏனையோர் வெளிநாட்டு குடியேறிக‌ள். துருக்கிய‌ர்க‌ள், ஒரு கிரேக்க‌ர். கொலை ச‌ம்ப‌ந்த‌மாக‌ துப்புத் துல‌க்கிய‌ பொலிஸ் "கிரிமின‌ல்க‌ளின் க‌ண‌க்குத் தீர்க்கும் கொலைக‌ள்" என்று அல‌ட்சிய‌ப் ப‌டுத்திய‌து. 
  •  
  •  ஒரு த‌ட‌வை கொலை ந‌ட‌ந்த‌ இட‌த்தில், "த‌ற்செய‌லாக‌" இருந்த‌ அர‌ச‌ உள‌வாளியான‌ ந‌வ‌ நாஸியிட‌ம் சாட்சிய‌ம் எடுக்க‌வில்லை. விசேட‌ விசார‌ணைக் குழு இந்த‌ விட‌ய‌த்தை வெளிக் கொண்டு வ‌ந்த‌து. இருப்பினும், அந்த‌ நேர‌டி சாட்சி விசாரிக்க‌ப் ப‌டாத‌து ம‌ட்டும‌ல்ல‌, வேறு ப‌த‌வி கொடுத்து இட‌ம் மாற்ற‌ப் ப‌ட்டார்.

Friday, August 23, 2019

தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் - நூல் அறிமுகம்


பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் யோகரட்ணம் எழுதிய "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்" என்ற நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2011 ம் ஆண்டு "இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி" ஆல் வெளியிடப் பட்டு இருந்தாலும் எனக்கு இப்போது தான் வாசிக்க நேரம் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிய எதிர்ப்புப் போராட்டங்களை பதிவு செய்துள்ள நூல்கள் கிடைப்பது மிக அரிது. குறிப்பாக இன்றைய ஈழத் தலைமுறையினரும், தமிழகத் தமிழர்களும் இது குறித்து மிக மிகக் குறைந்த அறிவையே கொண்டிருக்கிறார்கள். சிலநேரம் சுத்தமாக இல்லை என்றும் சொல்லலாம். அந்த வகையில், இது போன்ற பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தோழர் யோகரட்ணம் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் எனும் கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே சமூக விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். அறுபதுகளில் அல்லது எழுபதுகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகள் எத்தகைய போராட்டங்களின் ஊடாக பெறப் பட்டது என்பதை தனது நேரடி அனுபவங்கள் ஊடாக எழுதி இருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளாக ஒன்றுக்கொன்று கோர்வையற்று உள்ளன. அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சுயசரிதை போன்று எழுதி இருக்கிறார். சாதியப் போராட்டங்களில் பங்கெடுத்த பிற தனிநபர்கள் பற்றி விரிவான குறிப்புகள் சிறிதும் பெரிதுமாக தனித்தனி அத்தியாயங்களில் வருகின்றன. அதே நேரம் உரிமை போராட்டம் தொடர்பான ஒவ்வொரு சம்பவமும் தனித் தனியாக விளக்கப் பட்டுள்ளது.

தோழர் யோகரட்ணம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வேலை செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் யாழ்ப்பாணத்தில் பெருமளவு ஆதரவாளர்கள் இருந்தனர். ஆகவே இது அவரது தனிப்பட்ட அரசியல் தெரிவு. எழுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசாங்கம் பல முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகளை கொண்டிருந்த படியால் தான் அவர்களது அரசியலால் ஈர்க்கப் பட்டதாக சொல்கிறார்.

குறிப்பாக விவசாயம் செய்தவர்கள், கள் இறக்கும் தொழில் செய்தோர், சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் தான் வசதியை பெருக்கிக் கொண்டனர் என்பதை ஆதாரங்களோடு நிரூபிக்கிறார். உதாரணத்திற்கு தவறணை முறை வந்த படியால், காலையில் கள் இறக்கும் தொழிலாளி, மாலையில் விவசாயம் செய்து, கல் வீடு கட்டி வசதியாக வாழும் நிலை உருவானது.

யாழ்ப்பாணத்தில் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், நூறு தலித் இளைஞர்கள் புத்த மதத்தை தழுவுவதற்கு முன்வந்தனர். அவர்களில் இந்த நூலாசிரியரும் ஒருவர். அவர் தான் தென்னிலங்கைக்கு சென்று மடாலயத்தில் தங்கி இருந்து, சிங்கள மொழியையும், பௌத்த மத பாடங்களையும், கற்றுக்கொண்ட கதையை விலாவாரியாக விபரிக்கிறார். இது போன்ற சுயசரிதைக் கதைகள் வாசிப்பதற்கு சுவையாக எழுதப் பட்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் முன்பு தனியார் பாடசாலைகள் மட்டுமே இருந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது பாடசாலைகளை நிர்வகித்து வந்த உயர்த்தப்பட்ட சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்களை அனுமதிக்க மறுத்து வந்தனர். அதனால் தென்னிலங்கை புத்த பிக்குகள் சிலரது முயற்சியால், யாழ்ப்பாணத்தில் பௌத்த பாடசாலைகள் உருவாக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு கல்வி போதிக்கப் பட்டது.

மேற்குறிப்பிட்ட காரணங்களினால் தான், சட்டத்தரணிகளை கொண்ட தமிழரசுக் கட்சியினர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தனர் என்று நூலாசிரியர் வாதிடுகிறார். அது அவரது கருத்து. அதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அது மட்டுமே காரணம் என்று வாதிட முடியாது. அன்றைய காலகட்டத்தில் தீவிரமடைந்து வந்த இன முரண்பாடுகளுக்கு நூலாசிரியர் அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாடும் இந்த நூலில் உள்ளது.

தோழர் யோகரட்ணம் தனது நண்பனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளருமான வினோதன் பற்றி கூறுவதற்கு கிட்டத்தட்ட பதினைந்து பக்கங்கள் ஒதுக்கி இருக்கிறார். உயர்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளுக்காக பாடுபட்ட, தனிப்பட்ட வாழ்விலும் சமத்துவம் பாராட்டிய ஒருவர் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார்.

இந்த நூலில் பாராட்டத்தக்க விடயம் என்னவெனில், தோழர் யோகரட்ணம் தலித்தியம் பேசினாலும் இதை வெறுமனே தலித் போராட்டமாக மட்டும் சித்தரிக்கவில்லை. உயர்த்தப்பட்ட சாதியினரிலும் எத்தனையோ நல்லுள்ளம் படைத்த மனிதர்கள் இருந்தார்கள். தமது சாதியை சேர்ந்த சாதிவெறியர்களை எதிர்த்து நின்று, தலித் மக்களுக்கு ஆதரவாக போராடி உள்ளனர் என்ற உண்மையை அழுத்தமாக குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பங்களிப்பு பற்றி எழுதுவது தவிர்க்க முடியாதது. தனி நபர்கள் பற்றிய குறிப்புகளை கொண்ட அத்தியாயங்களில் பலவற்றின் நாயகர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தை பலவீனப் படுத்தின என்பதையும் குறிப்பிடுகிறார்.

இந்த நூல் முழுவதும் வரும் தலித் என்ற சொல் சிலநேரம் வலிந்து திணிக்கப் படுவதாக தெரிகிறது. இது சிலநேரம் தலித் என்ற சொல்லுடன் அதிகப் பரிச்சயம் இல்லாத ஈழத்தமிழ் வாசகர்களுக்கு அயர்ச்சியை கொடுக்கலாம். பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்ற வகையில், தோழர் யோகரட்ணம் இந்த நூலில் தலித் என்ற வார்த்தைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக எனக்குப் படுகின்றது.

ஒருவர் எழுதும் அனுபவப் பதிவுகளில் உள்ள குறைபாடுகள் விமர்சனத்திற்கு உரியவையாக இருந்த போதிலும், இது போன்ற நூல்கள் தமிழ்ச் சமூகத்திற்கு தேவை என்பதை மறுக்க முடியாது. அவரது தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், இதை ஒரு வரலாற்று ஆவணப் பதிவாக வைத்திருப்பது அவசியம்.

தொடர்பு முகவரி:
F.D.S.D.F.
70 Squzre des bauves
95140 Garges les Gonesse
France 


Wednesday, August 14, 2019

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறும் நூல் ஒன்றை வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டச்சு மொழியில் "Kannibalisme en mensenoffers" எனத் தலைப்பிடப் பட்ட அந்த நூலை Daniel Vangroenweghe எழுதி இருக்கிறார். இவர் பெல்ஜியத்தை சேர்ந்த மானிடவியல் பேராசிரியர். காலனிய கால ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார்.

இந்த நூலை வாசிக்கும் பொழுது நமது காலத்தில் நடக்கும் இனப் பகை போர்களுக்கு காரணமான இன வெறுப்பு மனப்பான்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இன்றைய இனவாத அரசியலுக்கு அடிப்படையான அதி உச்ச கட்ட இனத் துவேசம், ஈவிரக்கமில்லாத படுகொலைகளுக்கு காரணமாக உள்ளது. பண்டைய காலத்தில் எதிரி இனத்தவரைக் கொன்று அவர்களது மாமிசத்தை சாப்பிட்டார்கள். தற்காலத்தில் கொன்று புதைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, இனங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு கற்காலத்தில் இருந்து மாறாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நூலில் அரைவாசிப் பகுதி, ஐரோப்பியக் காலனிய காலகட்டத்திற்கு முன்னர் அமெரிக்க கண்டத்தில் நடந்த சம்பவங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. மிகுதிப் பகுதி ஆப்பிரிக்காவில் கொங்கோ பகுதிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றன. காலனிய காலத்தில் அவற்றை நேரில் கண்ட ஐரோப்பியரின் சாட்சியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எழுத்தாளர் டச்சு மொழி பேசும் பெல்ஜிய நாட்டவர் என்பதால், முன்னாள் பெல்ஜிய காலனியான கொங்கோ பற்றிய ஆவணங்களை ஆராய முடிந்துள்ளது. அத்துடன் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானா காலனியை ஸ்தாபித்த பிரெஞ்சுக்கார்கள் எழுதி வைத்த ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளார். ஆப்பிரிக்காவை விட, மத்திய அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதனால், இந்தக் கட்டுரையில் அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறேன்.

மனித மாமிசம் உண்பதற்கு, "கனிபலிசம்" (Cannibalism) என்ற சொல் பல ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. இந்தச் சொல் கொலம்பஸ் கரீபியன் தீவுகளை கண்டுபிடித்த காலத்தில் உருவானது. கொலம்பசுடன் சென்ற ஸ்பானிஷ் மாலுமிகள், அந்தத் தீவுகளில் வாழ்ந்த கரிபா இன மக்கள் மனித மாமிசம் உண்பதை கண்டிருக்கிறார்கள். கரிபா என்ற சொல் கனிபா எனத் திரிபடைந்து கனிபலிசம் ஆகியது.

இந்த நூலின் ஆரம்பத்தில் பிரேசிலின் வட பகுதிகளில் வாழ்ந்த துப்பி செவ்விந்தியர்களின் சடங்குகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன. இவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலும் வேடுவர் சமூகமாகத் தான் வாழ்ந்தனர். பழங்குடி இனங்களுக்கு இடையில் அடிக்கடி யுத்தங்கள் நடக்கும். அப்பொழுது பலர் போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் படுவார்கள். கைதிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த போதிலும், சிலநேரங்களில் பெண்கள், சிறுவர்களும் சிறைப்பிடிக்கப் படுவதுண்டு.

போர்க்கைதிகளாக பிடி பட்டவர்களை குறிப்பிட்ட காலம் சிறை வைத்திருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு நாள் நடக்கும் சடங்குகளின் பொழுது கொன்று சாப்பிடுவார்கள். நெருப்புக்கு மேலே பன்றியை வாட்டுவது போல, அந்த மனிதனையும் வாட்டுவர்கள். தோலை தனியாக உரித்தெடுத்து விட்டு, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவார்கள். எதிரி இனத்தவனது உடலை சாப்பிடுவதன் மூலம் தமக்கு சக்தி கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். அத்துடன் தம்மின மக்களை கொன்ற எதிரியை கொன்று சாப்பிடுவதன் மூலம் பழி தீர்க்கப் பட்டு விட்டதாக திருப்திப் படுகின்றனர். இது மிகத் தீவிரமான, கொடூரமான இன வெறுப்புணர்வு.

பண்டைய காலத்தில், இந்த நடைமுறை அனேகமாக எல்லா இனத்தவர் மத்தியிலும் இருந்துள்ளது. அதாவது போரில் வென்ற இனம் மட்டுமல்லாது, தோல்வியுற்ற இனத்தவரும் தம்மால் சிறைப் பிடிக்கப் பட்ட போர்க்கைதிகளை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். போர்க்கைதிகளை சுதந்திரமாக விட்டாலும், அவர்கள் தப்பியோட மாட்டார்கள். ஏனென்றால், அந்த நபர் தப்பிச் சென்று தனது இனத்தவரிடம் சேர முடியாது. அவர்கள் அவனை ஒரு கோழையாகக் கருதுவார்கள். இப்படித் தப்பி ஓடி வருவதை விட எதிரிகள் கைகளில் சாவது மேலானது என்று சொல்வார்கள்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. மனித மாமிசம் உண்ணும் மக்கள், ஒரு நாளும் தமது இனத்தை சேர்ந்தவர்களின் இறைச்சியை உண்ண மாட்டார்கள். கடுமையான பஞ்சம் வந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். அதற்குக் காரணம் தம்மினம் சார்ந்த சகோதரத்துவ உணர்வு. சுருக்கமாக சொன்னால், இனங்களுக்கு இடையிலான பகை உணர்வு தான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கென நடக்கும் சடங்கின் பொழுது அவர்கள் தமது வன்மத்தை வெளிப்படுத்துவார்கள்.

இனங்களுக்கு இடையில் நடக்கும் போர்களில், தம்மின மக்களை கொன்றதற்கு பழிவாங்குவதற்காக, எதிரி இனத்தவரை சிறைப் பிடித்து ஊருக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தமது சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து எதிரி இனத்தவரை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அந்தப் போர்க்கைதிகள் போரில் தம்மை எதிர்த்துப் போரிட்ட போர்வீரராக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் எதிரிகள் தான். அதாவது தம்மினத்தவரை கொன்றதற்காக, எதிரி இனத்தில் யாரை வேண்டுமானாலும் கொன்று சாப்பிட்டு பழி தீர்த்துக் கொள்ளலாம்.

அநேகமாக போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் பட்டவர்களை உடனடியாக கொன்று தின்பதில்லை. அதற்காக ஒரு சடங்கு நடக்கும் வரையில் உயிரோடு வைத்திருப்பார்கள். சிலநேரம் தம்மினப் பெண்களில் ஒருத்தியுடன் சில வருட காலம் குடும்பம் நடத்தவும் விடுவார்கள். அவ்வாறு மணம் முடித்து வைக்கப்படும் பெண், பெரும்பாலும் போரில் கணவனை இழந்த விதவையாக இருப்பாள். அவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது தந்தை வழியில் வந்த எதிரியின் பிள்ளையாகக் கருதப்படும். தந்தையை கொல்லும் அதே நாளில் பிள்ளையையும் கொன்று விடுவார்கள். அவர்களது இறைச்சியை சுவைப்பவர்களில் முதன்மையானவர்களாக அந்தப் பெண்ணும் இருப்பாள்.

இந்தக் கதைகளை கேள்விப் படும் பொழுது நம்ப முடியாமல் இருக்கும். இதனை நூலாசிரியரும் உணர்ந்துள்ளார். இதெல்லாம் இட்டுக்கட்டிய கற்பனைக் கதைகள் அல்ல என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார். அதற்காக நேரில் கண்ட சாட்சிகள் எழுதிய குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறார். அது கூட கற்பனையாக எழுதி இருக்கலாம் என்று சொல்வோம் என்பதற்காக, இன்னொரு நாட்டில் இன்னொருவர் எழுதிய குறிப்புகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் எவ்வாறு ஒரே மாதிரியான கதைகளை எழுத முடியும் என்று வாதிடுகிறார்.

இதிலே இன்னொரு ஆச்சரியமான விடயம், மெக்சிகோவில் உயர்ந்த நாகரிகத்தை கொண்டிருந்த அஸ்தேக் சாம்ராஜ்யத்திலும் நரபலி கொடுக்கும், மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு முன்னர் குறிப்பிட்ட பிரேசில் நாட்டு துப்பி (Tupi) இனத்தவர்கள் கற்கால மனிதர்கள் போன்று வேடுவர் சமுதாயமாக வாழ்ந்தவர்கள். அதே காலகட்டத்தில் மெக்சிகோவில் உலகிலேயே உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய மெக்சிகோ நாட்டின் வட பகுதியில் இருந்த அஸ்தேக் (Aztec) சாம்ராஜ்யத்தின் தலைநகரமும், அதன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் சிறந்த தொழில்நுட்பத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்தன. அதே காலகட்டத்தில் பிரான்சில் மன்னரின் மாளிகையில் கூட கழிவறை இருக்கவில்லை. அதே நேரம், மெக்சிகோவில் அஸ்தேக் நகரங்களில் வீட்டுக்கு வீடு கழிவறை இருந்துள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான தானியங்கி குழாய் அமைப்பு சிறப்பாக செயற்பட்டது.

அஸ்தேக் நாட்டு மக்கள் ஒழுங்கமைக்கப் பட்ட வர்க்க சமுதாயத்தில் வாழ்ந்தனர். உயர்மட்டத்தில் இருந்த பூசாரிகள், மன்னர் குடும்பத்தினர், நிலப்பிரபுக்கள் போன்றோரின் பிள்ளைகளுக்கு போர்க்கலை மட்டும் புகட்டப் படவில்லை. மதநெறி, தத்துவம், கணிதம், மொழி, மற்றும் பல அறிவியல் பாடங்கள் போதிக்கப் பட்டன. வருடங்கள், மாதங்கள், நாட்களை சரியாகக் கணிப்பிடும் கலண்டர்கள் இருந்தன. அஸ்தேக் சாம்ராஜ்யத்தின் பல நூறாண்டு கால வரலாறு எழுதி வைக்கப் பட்டிருந்தது.

அத்தகைய உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் நரபலி கொடுத்தார்கள், நரமாமிசம் உண்டார்கள் என்றால் நம்பக் கூடிய விடயமா? ஆம், இது அவர்களது சம்பிரதாயம் என்கிறார் நூலாசிரியர். அதாவது வருடத்தில் அல்லது மாதத்தில் ஒரு தடவை நடக்கும் கோயில் திருவிழாக்களில் நரபலி கொடுக்கப் பட்டது. பிரமிட் மாதிரி கட்டப்பட்ட கோயில்களில் பலி கொடுக்கப் படும் நபர் பூசாரியால் படிகளில் தூக்கிக் கொண்டு செல்லப் படுவார். அங்கு நடக்கும் சடங்குகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

பிரமிட் உச்சியில் இருக்கும் கடவுள் சிலைக்கு முன்னால் உள்ள பலிபீடத்தில் கட்டி வைக்கப் படுவார். நான்கு பேர் கைகளையும், கால்களையும் பிடித்து கொண்டிருக்கும் பொழுது, தலைமைப் பூசாரி நெஞ்சை அறுத்து இதயத்தை வெளியே எடுப்பார். இதற்காக கூரான எரிமலைக் கல் பொருத்தப் பட்ட ஒரு வகைக் கோடாலி ஆயுதமாகப் பயன்படுத்தப் படும். உடலைக் கீறும் பொழுது வடியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் சேகரிக்கப் படும். வெளியே எடுத்த இதயத்தை கடவுள் சிலைக்கு படைப்பதுடன், சிலையையும், சுவர்களையும் இரத்தத்தால் பூசுவார்கள். பலி கொடுக்கப் பட்டவரின் உயிரற்ற உடல் கீழே உள்ள பக்தர்களை நோக்கி வீசப்படும். அவர்கள் அதை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.

அஸ்தேக் சாம்ராஜ்யத்தில் நரபலி கொடுப்பதற்கு அரசியல்- மதக் காரணங்களை சொல்லி நியாயப் படுத்தினார்கள். உலகில் இயற்கைச் சமநிலை பேணுவதற்கு மனிதப் பலி கொடுக்க வேண்டும் என்பது அவர்களது மத நம்பிக்கை. வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களை தணிப்பதற்கு பலி கொடுப்பது அவசியம் என்று கருதினார்கள். இயற்கை அழிவுகளின் போது தான் நரபலி கொடுப்பதும் அதிகரித்துள்ளது. வருடத்திற்கு ஆயிரக் கணக்கான நரபலிகள் கொடுப்பது வழமையாக இருந்தது. சில வருடங்கள் பலி கொடுப்பது குறைந்து விட்டால், அதற்காகவே போர்களை நடத்தினார்கள். அன்று நடந்த போர்கள் நிலத்தை ஆக்கிரமித்து, பொன், பொருள்களை அபகரிப்பதுடன் முடிந்து விடுவதில்லை. போர்க்கைதிகளை பிடித்து வந்து பலி கொடுப்பது ஒரு மதக் கடமையாகக் கருதப் பட்டது.

ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாதமும் நரபலி கொடுப்பதன் மூலம் நியாயப் படுத்தப் பட்டது. மன்னர்கள் அதை ஒரு மதக் கடமை என்று கூறுவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். பிற நாடுகளின் மீது படையெடுத்து, அங்கு சிறைப்பிடிக்கப் பட்ட ஏராளமான போர்க்கைதிகளை கொண்டு வந்து, நகரங்களில் இருந்த கோயில்களில் பலி கொடுத்தனர். இதனை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஊக்குவிக்கப் பட்டனர்.

ஓயாத யுத்தங்கள் காரணமாக, மெக்சிகோவில் வாழ்ந்த பிற இனத்தவர்கள் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் பகைமை கொண்டிருந்தனர். ஸ்பானிஷ் காலனியப் படைகள் வந்திறங்கிய நேரம், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். ஸ்பானிஷ்காரர்கள் உள்நாட்டு பூர்வீக இனத்தவரின் உதவியுடன் தான் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் போர் தொடுத்து வெற்றி பெற்றனர். அந்தப் போரில் பல்லாயிரக் கணக்கான அஸ்தேக் மக்கள் கொல்லப் பட்டனர். அவர்களது உடல்கள் பூர்வகுடி வீரர்களினால் கொண்டு சென்று புசிக்கப் பட்டன.

அஸ்தேக் சாம்ராஜ்யத் தலைநகர் தெநோக்தித்லன்(Tenochtitlan) இரண்டு இலட்சம் பேரை சனத்தொகையாகக் கொண்ட மாபெரும் நகரம். அங்கு நீண்ட காலம் நடந்த சுற்றிவளைப்புப் போரின் இறுதியில் ஸ்பானிஷ் படைகள் வெற்றி பெற்ற நேரம், தெருக்களில் பிணக் குவியல்கள் கிடந்தன. எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினி கிடந்த போதிலும், தெநோக்தித்லன் நகரில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை உண்ணவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் தம்மினத்தை சேர்ந்தவர்களின் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள்.

தெநோக்தித்லன் நகரைக் கைப்பற்றுவதற்கு ஸ்பானிஷ் படையினருடன் சேர்ந்து போரிட்ட, பிற பூர்வீக செவ்விந்திய இனங்களை சேர்ந்த வீரர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்கள் அங்கிருந்த உடல்களை கொண்டு சென்று, ஊரில் இருந்த குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துண்டார்கள். அதாவது, தமது எதிரிகளின் உடல்களை சாப்பிடுவதை பெருமையாகக் கருதினார்கள். இந்த விபரங்களை யுத்தம் நடந்த காலத்தில் அங்கிருந்த ஸ்பானிஷ் பாதிரியார்கள் எழுதி வைத்துள்ளனர்.

அது போர்க்காலம் என்பதால், தம்முடன் சேர்ந்து போரிட்ட பூர்வீக செவ்விந்திய வீரர்கள் நரமாமிசம் உண்பதை ஸ்பானிஷ்வீரர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் போர் முடிந்த பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் நரமாமிசம் உண்பதை தடை செய்தார்கள். ஸ்பானிஷ்காரர்கள் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் நரபலி கொடுப்பதும் தடுக்கப் பட்டது. ஒவ்வொரு கிராமமாக கைப்பற்றியதும் அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். தடுக்க முயன்ற பூசாரிகளை கொன்றனர். இதன் மூலம் அவர்களது கடவுளரை விட தாமே சக்தி வாய்ந்தவர்களாக ஸ்பானிஷ் காலனிய வீரர்கள் காட்டிக் கொண்டனர்.

அஸ்தேக் நாடு நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது. அதன் அர்த்தம் அது பல அடுக்குகளை கொண்ட வர்க்க சமுதாயமாக இருந்தது. அந்நாட்டில் எந்த வகையான மக்கள் பிரிவினர் நரபலி கொடுக்கப் பட்டனர் என்ற விபரம், பண்டைய அஸ்தேக் ஆவணங்களில் இருந்து கிடைக்கிறது. ஆக்கிரமிப்புப் போர்களில் சிறைப் பிடிக்கப் பட்ட எதிரி இனத்தவர்கள் தான் நரபலி கொடுக்கப் பட்டவர்களில் பெரும்பான்மை. அதற்கு அடுத்த படியாக அடிமைகள் இருந்தனர்.

அஸ்தேக் நாகரிக காலத்தில், போரில் சிறைப்பிடிக்கப் பட்ட பிற இனங்களை சேர்ந்த போர்க்கைதிகள் எல்லோரும் நரபலி கொடுக்கப் பட்டனர் என்று அர்த்தமல்ல. கணிசமான அளவினர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டனர். பெரும்பாலும் பல்வேறு தொழில்களை செய்விப்பதற்கு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஒரு வர்க்க சமுதாயத்தில், மேல் தட்டில் இருக்கும் நிலப்பிரபுக்களுக்கு அடுத்த நிலையில் வணிகர்களும், விவசாயிகளும் இருப்பார்கள். அவர்களுக்கு கீழே அடிமைகளும், பிற ஒடுக்கப் பட்ட மக்களும் இருப்பார்கள்.

பிற இனத்தவர் மட்டுமல்லாது, சொந்த இனத்தை சேர்ந்தவர்களும் அடிமைகளாக மாறலாம். அளவுக்கு மீறி கடன் வாங்கி கட்ட முடியாமல் கஷ்டப் படுபவர்கள் தமது பிள்ளைகளை அடிமைகளாக விற்று விடுவார்கள். சிலநேரம் அப்படியானவர்கள் தம்மைத் தாமே அடிமைகளாக விற்று விடுவதுண்டு. அடிமைகளின் பிள்ளைகள் "சுயவிருப்பின்" பேரில் நரபலி கொடுக்கப் படுவதுண்டு. ஆனால், எக்காரணம் கொண்டும் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களை நரபலி கொடுப்பதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

எதற்காக உலகில் நரபலி கொடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்து வந்துள்ளது? அதற்குக் காரணம், நரபலி கொடுக்கப் படுபவர் தனது இனத்தவர் அல்ல என்ற உணர்வு. அதாவது எதிரி இனத்தை சேர்ந்தவர்களை மனிதர்களாக மதிக்காத மனப்பான்மை. மிக உயர்ந்த அஸ்தேக் நாகரிக சமுதாயத்தில் வர்க்க உணர்வும் சேர்ந்து கொண்டது. நரபலி கொடுக்கப் படுபவர்கள் எப்போதும் பொருளாதார ரீதியாக கீழ்த்தட்டு மக்களாக இருந்தனர். அதனால் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறக்கவில்லை. இந்த உணர்வு இப்போதும் நவீன காலத்திலும் தொடர்கிறது. 

"நாகரிக" வளர்ச்சி அடைந்த நவீன காலத்திலும், ஏழை மக்கள் பாதிக்கப் பட்டால் பணக்காரர்களுக்கு வலிப்பதில்லை. இன்று உலகில் நடக்கும் போர்களில் உயிர்ப் பலி கொடுக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான்.  இனப் பகை காரணமாக நடக்கும் போர்களில், பலியாவது எதிரி இனத்தவர்கள் என்றால், அது குறித்து யாரும் கவலைப் படுவதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே என்ற மனிதாபிமான உணர்வு எழுவதில்லை. தனது இனத்திற்கு வந்தால் இரத்தம், எதிரி இனத்திற்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மை பலரிடம் உள்ளது. முன்னொரு காலத்தில் நரபலி கொடுப்பதையும், மனித மாமிசம் உண்பதையும் மரபாகக் கொண்டிருந்த மக்களின் மனப்பான்மையும் அதே மாதிரித் தான் இருந்தது.

Friday, August 09, 2019

ஸ்லோவேனியா பயணக் கதை


கிழக்கு ஐரோப்பாவில், தொண்ணூறுகளில் பனிப்போரின் முடிவில் பல புதிய தேசங்கள் உருவாகின. அவற்றில் ஸ்லோவேனியா முதன்மையானது. இன்று வரைக்கும் ஸ்லோவேனியாவுக்கும், ஸ்லாவாக்கியாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்புவோர் பலருண்டு. இந்தக் குழப்பம் பல ஐரோப்பியருக்கும் உண்டு. முன்னாள் செக்கொஸ்லாவிக்கியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லாவாக்கியா. முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்றது ஸ்லோவேனியா. 


முன்பு யூகோஸ்லேவியா பல தேசிய இனக் குடியரசுகளின் சமஷ்டி நாடாக இருந்த காலத்தில், ஸ்லோவேனியா தான் எல்லாவற்றிலும் தனிநபர் வருமானம் கூடிய பணக்காரக் குடியரசாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்த ஏழைக் குடியரசுகளுக்கு ஸ்லோவேனியாவின் நிதி தான் உதவிக் கொண்டிருந்தது. இது குறித்த சர்ச்சை தான் யூகோஸ்லேவியா துண்டு துண்டாக உடைவதற்கான முதலாவது காரணம். 



எண்பதுகளுக்குப் பின்னர், குறிப்பாக முன்னாள் கம்யூனிச அதிபர் டிட்டோவின் மறைவுக்குப் பின், தங்களது வளங்களை பிற குடியரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்பாத ஸ்லோவேனியா தேசியவாதிகளின் கை ஓங்கியது. அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தனர். 1990 ம் ஆண்டளவில் (மேற்கு)ஜெர்மனியின் ஆதரவும் மறைமுகமாகக் கிடைத்து வந்தது. ஸ்லோவேனியா பொலிஸ் படை கிளர்ச்சி இராணுவமாக மாற்றப் பட்டது. யூகோஸ்லேவிய இராணுவத்துடனான போர் வெறும் பத்து நாட்கள் மட்டுமே நீடித்தது. பெருமளவு உயிரிழப்புகள், சொத்தழிவுகள் இல்லாமல் ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக பிரிந்து சென்றது. 


இவ்வளவு விரைவாக ஸ்லோவேனியா தனி நாடானதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். ஸ்லோவேனிய கிளர்ச்சிப் படை யூகோஸ்லேவிய இராணுவத்தை சுற்றிவளைத்து விட்டது என்றும் அதனாலேயே பின்வாங்கிச் சென்றனர் என்றும், முன்னர் ஒரு தடவை ஸ்லோவேனியா நண்பர் சொல்லக் கேள்விப் பட்டேன். நான் ஸ்லோவேனியா சுற்றுப் பயணம் செய்த நேரம் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நேரில் கண்டேன். அதே நேரம் அது மட்டும் தான் ஒரேயொரு காரணம் என்று சொல்வதும் தவறு. செர்பிய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் போரை தொடர்ந்திருக்கலாம். ஆனால், வேறு முக்கியமான காரணங்களுக்காக பின்வாங்கியிருக்கிறார்கள்.

முதலாவதாக ஸ்லோவேனியாவின் பூகோள அமைவிடம் போரை நடத்துவதற்கு ஏற்ற இடம் அல்ல. அது மேற்கத்திய, நேட்டோ நாடுகளான ஆஸ்திரியா, இத்தாலியுடன் எல்லைகளை கொண்டுள்ளது. ஸ்லோவேனியாவின் உள்நாட்டுப் போரின் விளைவாக நேட்டோ இராணுவத் தலையீடு ஏற்படலாம் என்ற அச்சம் இருந்திருக்கலாம். ஸ்லோவேனியா தேசியவாதிகளுக்கும், ஜெர்மனிக்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகளின் விளைவாக, ஜெர்மனியின் மறைமுகமான அழுத்தமும் இருந்திருக்கலாம்.

எது எப்படியோ, ஸ்லோவேனியா சுதந்திரமான குடியரசாக மாறியதுடன், பிற்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சேர்ந்து விட்டது. அது செங்கண் கூட்டமைப்பிலும் அங்கம் வகிப்பதால், எல்லைக் கட்டுப்பாடுகளும் கிடையாது. செங்கண் விசா இருப்பவர்கள் அந்நாட்டுக்கும் சென்று வரலாம். தலைநகர் லியூப்லியானாவில் நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு சிலி நாட்டு இளம் பெண்ணை சந்தித்தேன். அவர் ஏற்கனவே பன்னிரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து விட்டு வந்ததாக கூறினார். உண்மையில் சுற்றுலாப் பிரியர்களுக்கு ஒரே செங்கண் விசா ஒரு வரப்பிரசாதம் தான். 

ஸ்லோவேனியாவின் தலைநகரம் லியூப்லியானா ஏறக்குறைய நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கவனிக்கவும், Ljubljana என்ற பெயரில் உள்ள "J" என்ற எழுத்து "யே" என்று உச்சரிக்கப் பட வேண்டும். ஆகவே, லிஜூப்லிஜானா அல்ல லியூப்லியானா. மத்திய காலத்தில் அந்த நகரம் ஜெர்மன் மொழியில் லைபாக் (Laibach) என்ற பெயரில் அழைக்கப் பட்டது. பல நூறாண்டுகளாக, இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், ஆஸ்திரிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள ஸ்லோவேனியா நாட்டில் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே ஸ்லாவிய மொழி பேசும் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்லோவேனியா ஒரு ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. அதாவது செர்பிய, குரோவாசிய மொழிகளுக்கும் நெருக்கமானது. இவற்றிற்கு இடையில் பெரிய வித்தியாசம் கிடையாது. தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை விடக் குறைவு எனலாம். ஸ்லோவேனியா மொழியை எழுதுவதற்கு லத்தீன் எழுத்துக்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே, இடங்களின் பெயர்களை இலகுவாக வாசித்து அறிந்து கொள்ள முடிகிறது. விசேட உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களும் மிகக் குறைவு எனலாம்.

அந்நாட்டில் எங்கு பயணம் செய்வதென்றாலும் தலைநகர் லியூப்லியானா வந்து செல்ல வேண்டும். லியூப்லியான மத்திய ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் அனைத்துப் இடங்களுக்கும் ரயில், பஸ் சேவைகள் இருக்கின்றன. மத்திய பஸ் நிலையமும் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது. தலைநகரமாக இருந்தாலும், லியூப்லியானா ஒரு பெரிய நகரம் அல்ல. ஸ்லோவேனியாவின் சனத்தொகையும் மிகக் குறைவு. வெறும் இரண்டு மில்லியன் மட்டுமே.

நான் லியூப்லியானா போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஆறு மணி இருக்கும். ஜெர்மனியில் இருந்து இரவு நேர ரயிலில் பிரயாணம் செய்து வந்த களைப்பு வேறு வாட்டியது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த கழிவறைக்கு சென்று, முகம் கழுவி, காலைக்கடன்களை முடித்து விட்டு பயணத்திற்கு தயாரானேன். ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தின் போது நான் அவதானித்த விடயம், எங்கு பார்த்தாலும் பொதுக் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

ஸ்லோவேனியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பொஸ்டோன்யா குகைகளை பார்க்காமல் திரும்புவதில்லை. லியூப்லியானாவில் இருந்து தென் மேற்காக மலைப் பிரதேசத்தில் உள்ளது. ஒன்றரை மணிநேர பஸ் பயணத்திற்கான டிக்கட் ஒன்பது யூரோ மட்டுமே. ஸ்லோவேனியாவும் யூரோ நாணயம் தான் பயன்படுத்துகிறது. விலைகள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய தரத்தில் இருந்தாலும், ஒப்பீட்டளவில் போக்குவரத்து செலவு குறைவு தான்.

நிலத்தின் கீழே ஓர் அற்புத உலகம் என அழைக்கப்படும் பொஸ்டோன்யா குகை இருபது கிலோ மீட்டர் சுரங்கப் பாதையை கொண்டது. அதில் இரண்டு கிலோமீட்டர் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிக் காண்பிக்கிறார்கள். நிலத்தின் கீழே குறிப்பிட்ட தூரம் ஒரு சிறிய ரயில் வண்டியில் கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரமளவில் நடக்க விடுகிறார்கள். வெளியே கோடை கால வெயில் முப்பது பாகை செல்சியசில் கொளுத்திக் கொண்டிருந்தது. ஆனால் குகைக்குள்ளே பத்து பாகை செல்சியஸ் குளிராக இருந்தது.

பொஸ்டோன்யா சுரங்கத்தின் உள்ளே சுண்ணாம்புப் பாறைகள் விசித்திரமான கோலங்களில் பார்ப்பதற்கு அழகாக உள்ளன. மாயாஜால படங்களில் காட்டப் படுவதைப் போன்று வேறொரு உலகத்தினுள் வந்து விட்டதைப் போன்ற பிரமையை தோற்றுவிக்கிறது. மின் விளக்குகள் மட்டும் இல்லையென்றால் குகைக்குள் கும்மிருட்டாக இருக்கும். எதுவும் தெரியாது. அங்கு இருட்டுக்குள்ளே வாழும் உயிரினங்கள் உள்ளனவாம். தேள்கள் கூட இருப்பதாக எமது வழிகாட்டி சொன்னார். உடும்பு போன்ற தனித்துவமான உயிரினம் ஒன்று அங்கே கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கப் படும் பொருட்களில் எல்லாம் அந்த உயிரினத்தின் படம் பொறிக்கப் பட்டுள்ளது. 

பொஸ்டோன்யா சுரங்கப் பாதை இரண்டு உலகப்போர்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் படையினர் ரஷ்ய போர்க் கைதிகளை கொண்டு கட்டுவித்த பாலம் இன்னமும் உள்ளது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் பொஸ்டோன்யா சுரங்கத்தை தமது மறைவிடமாக பயன்படுத்தி வந்தனர். அங்கிருந்து கொண்டு நாஸி ஜெர்மன் ஆக்கிரமிப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். பொஸ்டோன்யா சுரங்கத்தை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அது பிள்ளைகளுக்கும் பிடித்த இடமாக இருக்கிறது. இருப்பினும், நுழைவுச் சீட்டு விலை அதிகம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அடுத்த நாள் பிளேட் (Bled) ஏரியை பார்வையிடச் சென்றேன். அது லியூப்லியானா நகரில் இருந்து வட மேற்காக ஆஸ்திரிய எல்லையோரம் அமைந்துள்ளது. உலகில் மிகவும் அழகான எரிகளில் அதுவும் ஒன்று. ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு உள்ளது. டிக்கட் எடுத்தால் கானோ எனும் வள்ளத்தில் துடுப்பு வலித்து சென்று வரலாம். பிலேட் சோஷலிச யூகோஸ்லேவியாவின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில் அதிபர் டிட்டோ வந்து தங்கிச் சென்ற ஏரிக்கரை மாளிகை இன்று ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப் பட்டுள்ளது. ஒரு நாள் தங்குவதற்கான செலவு 850 யூரோ. அடேங்கப்பா! 


மேற்கொண்டு பயணம் செல்வதற்கு முன்னர் லியூப்லியானா நகரை சுற்றிப் பார்க்க விரும்பினேன். பழைய நகரம் மிகவும் அழகானது. மத்திய காலத்து கட்டிடங்கள் இன்னமும் உருக் குலையாமல் பேணிப் பாதுக்காக்கப் பட்டு வருகின்றன. பழைய நகர மத்தியில் ஒரு குன்றும், அதன் மேலே ஒரு கோட்டையும் உள்ளது. மலையேறும் குட்டி ரயிலில் அங்கு சென்று வரலாம். அந்த ரயிலில் இருந்த படியே கீழே தெரியும் லியூப்லியானா நகரத்தை முழுமையாகக் கண்டு இரசிக்கலாம்.

ஸ்லோவேனியா சுற்றுப் பயணத்தில் கடைசியாக தெரிவு செய்த இடம் கோபர். அங்கு சென்றால் முற்றிலும் வித்தியாசமான இடத்தைக் காணலாம். ஸ்லோவேனியாவின் பெரும்பாலான பகுதிகள் அல்ப்ஸ் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. அதாவது, அல்ப்ஸ் மலை நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஆனால் கோபர் இத்தாலி மாதிரி இருக்கும். அதற்குக் காரணம் அந்த நகரம் மத்தியதரைக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் அயல் நாடுகளால் நிலத்தால் சூளப்பட்ட ஸ்லோவேனியா சுமார் ஐம்பது கிலோ மீட்டர் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. அந்தப் பகுதியை இஸ்திரியா என்றழைப்பார்கள். குரோவேசியாவின் முன்னூறு கிலோமீட்டர் கரையோரப் பகுதியும் அதற்குள் அடங்கும்.

கோபர் சென்ற நேரம் ஒரே நாளில் காலநிலை மாற்றத்தை உணரக் கூடியதாக இருந்தது. அதாவது லியூப்லியானாவை விட அங்கு வெப்பம் அதிகம். அதனால் பெருந்தெருவின் மத்தியில் ஈச்சை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். வெப்ப மண்டலத்தை சேர்ந்த, மத்தியதரைக் கடலோரம் உள்ள தெற்கு ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே ஈச்சை மரம் வளரும். விடுமுறையில் கடற்கரையில் பொழுதுபோக்க விரும்புவோருக்கு கோபர் சிறந்த இடம்.

இத்தாலியில் வெனிஸ் நகர கட்டிடக் கலைக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அதனை ஸ்லோவேனியாவின் கடலோரப் பகுதிகளில் காணலாம். பழைய கோபர் நகரம் துறைமுகத்திற்கு அருகில் உள்ளது. அங்குள்ள பழைய கட்டிடங்கள் யாவும் வெனிஸ் நகரை நினைவுபடுத்தும். அதற்குக் காரணம் அந்தப் பகுதி ஒரு காலத்தில் வெனிஸ் குடியரசின் கீழ் இருந்துள்ளது. இன்றைக்கும் அங்கே இத்தாலி மொழிபேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்கிறார்கள். தெருக்களின் பெயர்ப் பலகைகள் ஸ்லோவேனியா, இத்தாலி ஆகிய இரு மொழிகளிலும் எழுதப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களிலும் இரு மொழி அறிவிப்புகள் காணப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் வெனிஸ் சுதந்திரமான தனி நாடாக இருந்தது. ஸ்லோவேனியா மட்டுமல்ல, குரோவாசியாவினதும் கரையோரப் பிரதேசம் கூட ஒரு காலத்தில் வெனிஸ் நாட்டின் பகுதியாக இருந்தது. அங்கெல்லாம் இத்தாலி (வெனிஸ் மொழி?) பேசும் மக்களும் வாழ்ந்து வந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. அதற்குக் காரணம் முசோலினியின் விஸ்தரிப்புவாத அரசியல். அதாவது, இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னரே யூகோஸ்லேவியாவின் இஸ்திரியா கடல் பிரதேசம் முழுவதும் இத்தாலிக்கு சொந்தம் என்று முசோலினியால் உரிமை கோரப் பட்டது. முசோலினியின் இத்தாலி- பாசிசப் படைகள் இஸ்திரியாவை ஆக்கிரமித்தன.

பாசிச ஆக்கிரமிப்புக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தேடித் தேடி சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிக்கப் பட்டதும் டிட்டோவின் கம்யூனிச கெரில்லாக்கள் அந்த இடத்தை விடுதலை செய்தனர். அப்போது பாசிசக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப் பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். பெரும்பாலும் இத்தாலி மொழி பேசும் சிறுபான்மையினர் தான் பாசிச ஆதரவாளர்களாக இருந்தனர். ஆகையினால் யூகொஸ்லேவியரின் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் அஞ்சி, பெருமளவு இத்தாலியர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

இறுதியாக சில பயணக் குறிப்புகள். ஸ்லோவேனியா சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான நாடு. ஓரளவுக்காவது ஆங்கிலம் பேசுவோரை எல்லா இடங்களிலும் சந்திக்கலாம். போக்குவரத்து பிரயாணச் சீட்டு கொடுக்கும் இடங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தெருக்கள், பொது இடங்களில் ஆங்கிலம் பேசத் தெரிந்த நபரை சந்திக்கும் வாய்ப்பு அதிகம். வழிப்போக்கர்களில் யாராவது ஒருவர் உதவுவதற்கு முன்வருவார்கள். இருப்பினும் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் வேலை செய்வோருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.

சுற்றுலா ஸ்தலங்களில், நகரங்களில் அனைத்து வகையான ரெஸ்ட்டாரண்ட்களும் உண்டு. ஆனால், உணவு விடுதிகளில் சாப்பிடுவது அதிக செலவாகும் விடயம். குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பினால் சூப்பர் மார்க்கெட்டுகளை நாடலாம். அங்கு பொருட்களின் விலை மேற்கைரோப்பிய விலைகளை விடக் குறைவு. சமைத்த உணவுப் பொருட்களும் விற்கிறார்கள். ஹாஸ்டலில் தங்கி இருந்தால், அங்கு உணவை கொண்டு சென்று சூடாக்கிச் சாப்பிடும் வசதி உள்ளது. விசேடமாக, ஸ்லோவேனிய தயிர் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கவும். அது நமது ஊர்களில் கிடைக்கும் தயிர் மாதிரி சுவையாக இருக்கும். மேற்கைரோப்பாவில் எங்குமே அந்தத் தயிர் கிடைக்காது.

நான் ஸ்லோவேனியா வரும் பொழுது வடக்கே ஆஸ்திரியாவில் இருந்து ரயிலில் வந்தேன். திரும்பிப் போகும் பொழுது தெற்கே உள்ள இத்தாலி நகரான திரீஸ்டே க்கு பேருந்து வண்டியில் சென்றேன். கோபர் நகரில் இருந்து திரீஸ்டே அரை மணிநேர பஸ் பயணம் தான். பனிப்போர் காலத்தில் மிகவும் கெடுபிடியான எல்லை அது. தற்போது அங்கே எல்லைக் காவலரண் எதுவும் கிடையாது.

திரீஸ்டே நகரத்தினுள் நுழைந்த நேரம் வேறொரு உலகத்திற்கு வந்தது போலிருந்தது. அதற்குக் காரணம் சன நெருக்கடி. இந்தளவு இட நெருக்கடியுடன் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஸ்லோவேனியாவில் எங்குமே காணவில்லை. இத்தாலியின் திரீஸ்டே நகருடன் ஒப்பிட்டால், அதிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்லோவேனியாவின் கோபர் நகரம் ஒரு கிராமம் மாதிரிக் காட்சியளித்தது. 

திரீஸ்டே ஒரு காலத்தில் யூகோஸ்லேவியாவுக்கு சொந்தமான பகுதியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் எழுந்த அரசியல், இராஜதந்திர முரண்பாடுகளை தீர்ப்பதற்காக, ஓர் ஒப்பந்தம் போட்டு இத்தாலியிடம் ஒப்படைக்கப் பட்டது. அன்றிலிருந்து அந்தப் பிரதேசம் முழுவதும் இத்தாலிமயமாகி விட்டது. 


மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.