Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Monday, November 28, 2016

பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவும் பிரபாகரனின் ஈழமும் பிரியாத உறவுகள்


தனது 90வது வயதில், 25 நவம்பர் 2016 அன்று காலமான முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிற்கு செவ்வணக்கம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் தமிழர்களின் எண்ணிக்கை சமூகவலைத்தளங்களில் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கலக்கமடைந்த மக்கள் விரோத சக்திகள், மீண்டும் தமது அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. ஒன்றில் அடிப்படை கல்வியறிவு இருக்க வேண்டும் அல்லது அனுபவ அறிவாவது வேண்டும். இரண்டும் இல்லாத தற்குறிகள் தான், பிடல் காஸ்ட்ரோ பற்றி அவதூறு பரப்பித் திரிகின்றன. அது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

ஒரு தலைவர் எல்லோராலும் விரும்பப் பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பிரபாகரனை வெறுக்கும் தமிழர்களும், பிடல்காஸ்ட்ரோவை வெறுக்கும் கியூபர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஈழத்தில் புலிகளின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அவர்களால் தடைசெய்யப் பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு தப்பியோடி அங்கு ஒன்று சேர்ந்தவர். 

அதே மாதிரியான சம்பவங்கள் கியூபாவிலும் நடந்துள்ளன. அங்கும் காஸ்ட்ரோவின் ஜூலை 26 இயக்கம், பிற கட்சிகள், இயக்கங்களை தடை செய்திருந்தது. ஈழத்தில் முன்பிருந்த மிதவாத தமிழ்த் தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் புலி ஆதரவாளர்களாக மாறினார்கள். அதே நிலைமை கியூபாவிலும் இருந்தது. மிதவாத கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள், பின்னாளில் ஜூலை 26 இயக்க ஆதரவாளர்களாக மாறினார்கள்.

கியூபப் புரட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள், அருகில் இருக்கும் அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் ஒன்று சேர்ந்தனர். அவர்களில் பலர் புரட்சிக்கு முந்திய அரசின் ஆதரவாளர்கள். அதே நேரம், மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சாரத் தரகர்கள் போன்றோரும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்குள் அடங்குவார்கள். புரட்சிக்குப் பிந்திய கியூபாவில் ஒரு அதிசயம் நடந்தது. விபச்சாரத் தரகர்கள், மற்றும் பல்வேறு கிரிமினல்களை கைது செய்து, ஒரு வழிப்பாதை பயணச் சீட்டு வாங்கி, அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற்றி நாடுகடத்தினார்கள்!

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்து, நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியிருந்த கியூபர் ஒருவர் எனது நண்பராக இருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி அப்போது அவரும் ஒரு காஸ்ட்ரோ எதிர்ப்பாளராகத் தானிருந்தார். (அப்படியானவர்களுக்குத் தான் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கொடுப்பார்கள் என்பது வேறு விடயம்.) இருப்பினும், ஒரு காலத்தில் தீவிரமாக காஸ்ட்ரோவை எதிர்த்து வந்த  அவர், பிற்காலத்தில்  தனது முடிவை மாற்றிக் கொண்டார். ஒரு மேற்குலக நாட்டில் வாழும் பொழுது தான், பிடல் காஸ்ட்ரோ சொன்னவை யாவும் உண்மைகள் என்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக கூறினார். 

அவர் முதலில் ஸ்பெயின் வந்து சில காலம் தங்கியிருந்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் தான் காண்போர் எல்லாம் காஸ்ட்ரோ ஆதரவாளராக இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். தான் ஏதாவது குறை சொல்லி விட்டால், அவர்கள் சண்டைக்கு வருகிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் நிலவும் பிரபாகரன் ஆதரவு அலையை இதனோடு ஒப்பிடலாம். அங்கும் யாரும் பிரபாகரன் பற்றி குறை சொல்ல முடியாது. உடனே சண்டைக்கு வருவார்கள்.



பிடல்காஸ்ட்ரோவை எதிர்க்கும் தமிழ் வலதுசாரிகள், ஜே.ஆர். ஜெயவர்த்தனேயும், காஸ்ட்ரோவும் சந்தித்துக் கொண்ட ஒரு புகைப் படத்தை, ஏதோ புதையலை கண்டுபிடித்த மாதிரி சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் மழைக்கு கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கி இருப்பார்களா என்பது சந்தேகமே.

பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, அல்லது சோவியத் யூனியனில் தங்கியிருக்க விரும்பாத அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவானது. பெரும்பாலும் மூன்றமுலக நாடுகளின் கூட்டமைப்பான அது, குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அங்கத்துவ நாடுகளில் உச்சிமகாநாடு நடத்துவது வழக்கம்.

இலங்கையில், கொழும்பு நகரில், 16–19 ஆகஸ்ட் 1976 ல் உச்சி மகாநாடு நடைபெற்றது. அணிசேரா நாடுகளின் விதிகளின் படி, மகாநாட்டை ஒழுங்கு படுத்தும் நாட்டின் அதிபர், அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார். அவ்வாறு தான் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

3–9 செப்டம்பர் 1979 ம் ஆண்டு, கியூபாவில், ஹவானா நகரில் மீண்டும் மகாநாடு கூடியது. அப்போது அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை, ஜே.ஆர்.ஜெயவர்த்தனே பிடல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். அப்போது எடுத்த படம் தான் அது.

1976 ம் ஆண்டு இலங்கையில் நடந்த அணிசேரா நாடுகளின் நாடுகளின் உச்சி மகாநாடு மூலம் தான் எனக்கு பிடல்காஸ்ட்ரோ அறிமுகமானார். அன்று இலங்கையில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் அது தான் அறிமுகமாக இருந்திருக்கும். அன்று உச்சி மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களில் காஸ்ட்ரோவும், கடாபியும் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தனர். பொது மக்களும் அவர்களைப் பற்றிக் கதை கதையாக பேசிக் கொண்டனர்.

வட மாகாணத் தமிழர்கள் மத்தியிலும் பிடல் காஸ்ட்ரோ பிரமிப்புக்கு உரியவராக பார்க்கப் பட்டார். காஸ்ட்ரோ பற்றியும், கியூபப் புரட்சி பற்றியும் மனோரம்மியமான கதைகளும் உலாவின. சில தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு பிடல்காஸ்ட்ரோ என்று பெயரிட்டிருந்தனர். இந்த விடயம் எண்பதுகள், தொண்ணூறுகளுக்கு பின்னர் பிறந்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.

அது மட்டுமல்ல, ஈழ விடுதலைக்கு ஆயுதமேந்திய போராளிகளும் காஸ்ட்ரோ என்ற பெயரை விரும்பிச் சூட்டிக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவருக்கும் காஸ்ட்ரோ என்ற புனைபெயர் இருந்தது. 2009 இறுதிப்போரரில் மரணிக்கும் வரையில் அவர் அந்தப் பெயரில் தானிருந்தார். அவரைத் தவிர பல பிடல்கள், காஸ்ட்ரோக்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தனர்.

விடுதலைப் புலிகளின் போராட்டமும் "கியூபாப் பாணியில்" இருந்ததை மறுக்க முடியாது. பல கெரில்லாத் தாக்குதல்கள், மினி முகாம் தாக்குதல்கள், கியூபப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளுக்கு அமைய அமைந்திருந்தன. அப்போது போராளிகள் விரும்பி வாசிக்கும் புத்தகமாக கியூப விடுதலைப் போராட்டம் இருந்தது.

1984 ம் ஆண்டு, "விடுதலைப் புலிகள்" என்ற புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை வெளியானது. அதன் முதலாவது இதழில் பிடல்காஸ்ட்ரோவின் பேட்டி பிரசுரமானது. அப்போதே புலிகள் சோஷலிச கருத்துக்களை புறக்கணித்து, தீவிர தேசியவாதம் பேசி வந்தனர். 

இருப்பினும் அவர்களுக்கும் காஸ்ட்ரோ ஒரு ஆதர்ச நாயகனாக இருந்தார். அதற்கு வலுவான காரணம் இருந்தது. புலிகளை மாதிரி ஆயுதமேந்திய தலைமறைவு இயக்கம் கெரில்லா யுத்தம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பதை, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ நிரூபித்துக் காட்டி இருந்தார். அது விடுதலைப் புலிகளை வெகுவாக கவர்ந்து இருந்ததில் வியப்பில்லை.

தொண்ணூறுகளுக்கு பிறகு ஏற்பட்ட உலக மாற்றங்கள் ஈழத்திலும் எதிரொலிக்காமல் இல்லை. சோவியத் யூனியனின் மறைவுடன் கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்று நம்பும் புதிய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. உயர்கல்வி கற்று உத்தியோகம் பார்த்த காரணத்தால், அல்லது பொருளாதார வசதிகள் காரணமாக, முதலாளித்துவ விசுவாசிகளாகவும் கம்யூனிச எதிர்ப்பாளர்களாகவும் இருந்தனர். 

மேட்டுக்குடி மனப்பான்மை கொண்ட அந்தத் தமிழ்  இளைஞர்கள், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் நட்பு சக்திகளாக பார்க்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவின் எதிரிகளாக இருந்த நாடுகளை எல்லாம், அவர்களும் எதிர்க்கத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் கியூபாவையும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் கற்றுக் கொண்டார்கள். அடிமைகள் வேறெப்படி தமது எஜமான விசுவாசத்தைக் காட்டுவார்கள்?

இந்த மாற்றம், 2009 க்குப் பின்னர் (ஈழப்போரில் நடந்த இனப்படுகொலையால்) ஏற்பட்டது என்பது ஒரு பொய் பித்தலாட்டம். அப்படியானால், அவர்கள் அமெரிக்காவை தான் முதலில் எதிர்த்திருக்க வேண்டும். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, "புலிகள் பேச்ச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்..." என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எச்சரித்திருந்தார். முள்ளிவாய்க்கால் சென்றால் அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும் என்று ஏமாற்றியதால், சிறு துண்டு நிலத்திற்குள் அகப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்கள் கனரக ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டனர். 

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத மாதிரி, அமெரிக்க அடிவருடிகள் தமிழினப் படுகொலையை சொல்லி நீலிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களது எஜமானான அமெரிக்க அரசும், சிறிலங்கா அரசும் சேர்ந்து தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்தின என்பதை மூடி மறைப்பார்கள். அப்படியான பாசாங்குக் காரர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காஸ்ட்ரோவின் மரணத்தில் தமது அரசியலை திணிக்கிறார்கள்.

த‌மிழ் ம‌க்க‌ளில் பெரும்பாலானோர் பிட‌ல் காஸ்ட்ரோவின் ம‌றைவுக்கு அஞ்ச‌லி செலுத்துவ‌து, ஏகாதிப‌த்திய‌ அடிவ‌ருடிக‌ளின் க‌ண்க‌ளை உறுத்துகின்ற‌து. அத‌னால், "த‌மிழ‌ர் ந‌ல‌ன்" என்ற‌ போர்வையில் காஸ்ட்ரோ எதிர்ப்பு பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர். டால‌ர்க‌ள் பேசுகின்ற‌ன‌.

ப‌ழைய‌ குருடி க‌த‌வைத் திற‌டி க‌தையாக‌, திரும்ப‌வும் அதே ஐ.நா. தீர்மான‌ நாட‌க‌த்தை அர‌ங்கேற்றுகிறார்க‌ள். வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ த‌மிழ‌ர்க‌ளை இன‌ப்ப‌டுகொலை செய்த‌ அமெரிக்காவை க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ளாம். ஆனால் இன‌ப்ப‌டுகொலையாளி கொண்டு வ‌ந்த‌ ஐ.நா. தீர்மான‌த்தை எதிர்த்த‌து கியூபாவின் மாபெரும் "த‌மிழின‌த் துரோக‌ம்" என்கிறார்க‌ள். இர‌ட்டைவேட‌ம் போடுகிறார்கள்.

இதே போலித் தமிழ்த் தேசிய‌வாதிக‌ள், மாக்கிர‌ட் தாட்ச‌ர் கால‌மான‌ போது க‌ண்ணீர் வ‌டித்தார்க‌ள். யார் இந்த‌ மார்க்கிர‌ட் தாட்ச‌ர்? ஜே.ஆர். ஆட்சிக் கால‌த்தில் புலிக‌ளை அழிப்ப‌த‌ற்கு பிரிட்டிஷ் SAS கூலிப்ப‌டையை அனுப்பிய‌வ‌ர்! அவ‌ர் த‌மிழ் ம‌க்க‌ளின் ந‌ண்ப‌ராம். ஆனால் ஒரு தோட்டா கூட‌ அனுப்பாத‌ பிட‌ல் காஸ்ட்ரோ த‌மிழ‌ரின் எதிரியாம்.

அமெரிக்காவினால் விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் கைக்கூலிகளின், பிடல் காஸ்ட்ரோ பற்றிய பிதற்றல் இது: //பிடல் காஸ்ட்ரோ ஈழத்தில் தமிழினத்தை அழித்து முடித்த சிங்களத்தைப் பாராட்ட வேண்டும் என்றார்!//

தமிழர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு, எவனும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு வர மாட்டான் என்ற நம்பிக்கையில் சொல்லப் படும் பொய் அது.

இலங்கைப் பிரச்சினை பற்றி பிடல்காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் ஏதாவது கருத்து தெரிவித்து இருக்கிறாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? 15 வருடங்களுக்கு முன்னரே, கடும் சுகயீனம் காரணமாக காஸ்ட்ரோ அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார். அமெரிக்க கைக்கூலிகள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் கடந்த ஏழு வருடங்களுக்குள் நடந்தவை. கியூப அரசுப் பிரதிநிதிகளின் கூற்றுக்களை காஸ்ட்ரோவின் கூற்றாக திரிப்பதில் இருந்தே பொய் அம்பலமாகத் தொடங்கி விடுகிறது.

முதலில் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கு பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் தோற்றம் பெற்றதும், அதற்கு கியூபா அடிபணிந்து சென்றதும் வரலாறு. தனது தேசத்தின் ஒரு பகுதியில் இருக்கும் குவாந்தனமோ தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்கு தைரியமில்லாத கியூபாவிடம், ஏன் ஈழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்று கேட்பது மடத்தனமானது.

2001 ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்திருந்தது. அதற்குப் பிறகு உலகில் எல்லா நாடுகளும் தமக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிக் கொண்டன. இல்லாவிட்டால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கும் அச்சம் இருந்தது. (உண்மையிலேயே சில நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது.)

சூடான் போன்ற பல நாடுகள் ஏற்கனவே பல்வேறு இயக்கங்களுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கின. அவ்வாறான சூழ்நிலையில் "ஏன் கியூபா புலிகளை ஆதரிக்கவில்லை?" என்று கேட்பது சிறுபிள்ளைத் தனமானது. கியூபா மட்டுமல்ல உலகில் எந்த நாடும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. ஏனென்று கேட்டால், அது தான் அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". அமெரிக்க அடிவருடிகளான தமிழ் பேசும் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்கு இந்த உண்மை தெரியாமல் இல்லை. தெரிந்தும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.

அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருந்தன. தாம் வெளியிட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலை உலகில் எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென வற்புறுத்தின. ஆகையினால், கியூபாவும் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்டது. அதற்கான காரணம் மிகவும் தெளிவானது.

அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ஒன்றை அறிவித்திருந்தது. அப்படியான சூழ்நிலையில் தானும் அதற்கு ஆதரவளிப்பதாக சொல்வது ஒரு இராஜதந்திர நடவடிக்கை. ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகளே அதற்கு ஆதரவளித்தன. ஐ.நா. மன்றத்தில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

ஒரு பேச்சுக்கு, கியூபா புலிகளை (அல்லது அது போன்ற ஆயுதபாணி இயக்கத்தை) மறைமுகமாகவேனும் ஆதரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? கியூபா பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது என்று அமெரிக்கா அதை ஆதாரமாகக் காட்டும். கியூபா மீது படையெடுப்பதற்கு நாள் குறிக்கப் படும். இவ்வாறு தான் அமெரிக்கா பல நாடுகளை அடிபணிய வைத்திருந்தது. அதனால், பனிப்போருக்கு பின்னரான உலகில் எந்த நாடும் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் கீழ் புலிகளை அழிப்பதற்கு கியூபா மட்டும் ஆதரிக்கவில்லை, அமெரிக்கா, மற்றும் மேற்குலக நாடுகளும் அதே நிலைப்பாட்டை கொண்டிருந்தன. எதற்காக கியூபாவை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டும்? தமிழினத்தை அழித்ததற்கு பிடல்காஸ்ட்ரோ நன்றி தெரிவித்தாராம்! எப்படி இப்படி பொய் சொல்ல முடிகிறது? ஆதாரம் எங்கே?

இவர்களது லாஜிக் என்னவென்றால்: "புலிகளை அழிப்பது தமிழ் மக்களுக்கு அழிப்பதற்கு சமமானது. ஆகவே கியூபா தமிழர்களுக்கு எதிரானது." அதாவது, "காகம் கருப்பு நிறம், கந்தசாமி கருப்பு நிறம், ஆகவே கந்தசாமி ஒரு காகம்!" இது தான் இவர்களது முட்டாள்தனமான லாஜிக். இப்படி திரித்து விட்டு, "கியூபா தமிழர்களை அழிக்க நினைத்தது" என்று சுற்றும் ரீல்கள் இருக்கிறதே! அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு எல்லாவற்றையும் மிஞ்சி விட்டது.

இன்று சிரியாவில், ஐ.எஸ். (ISIS) இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று கியூபா உட்பட எல்லா உலக நாடுகளும் ஒத்து நிற்கின்றன. அதை "முஸ்லிம்களை அழிக்க துணை நின்றதாக" சொல்வீர்களா? ISIS எதிர்ப்பு நடவடிக்கை, உங்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மத அழிப்பு ஆகாதா? உண்மையிலேயே, அது தான் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் லாஜிக். 

இந்த இடத்தில் ஓர் உண்மையை கூற வேண்டும். அமெரிக்காவில், தொண்ணூறுகளின் இறுதியில், விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப் பட்டிருந்தது. அந்தத் தடையானது புலிகளின் சர்வதேச செயற்பாடுகளுக்கு இடையூறாக இருந்தது. அதனால், புலிகள் இயக்கம் பெருமளவு பணம் செலவளித்து தடையை நீக்குமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். 

அதற்காக, அமெரிக்காவில் உள்ள பிரபல சட்டத்தரணியான ராம்சி கிளார்க் என்பவரை நியமித்திருந்தனர். புலிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு அவர் தலைமை தாங்கினார். (LTTE takes battle to the US courts) யார் இந்த ராம்சி கிளார்க்? ஒரு இடதுசாரி செயற்பாட்டாளர். அது மட்டுமல்ல, ஒரு தீவிரமான காஸ்ட்ரோ ஆதரவாளர்! அவர் இன்றைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசில் (TGTE) அங்கம் வகிக்கிறார்!! (Former US Attorney General Joins LTTE Senate)

ஏன் அன்று புலிகள் இன்னொரு வழக்கறிஞரை, குறிப்பாக ஒரு "காஸ்ட்ரோ எதிர்ப்பாளரை" நியமித்திருக்கலாமே? அது முடியாத காரியம். ஏனென்றால் அமெரிக்காவில் இருந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு வழக்கறிஞர்கள் அனைவரும், புலிகள் மீதான அரசின் தடையை ஆதரித்தவர்கள் தான். அதனால், புலிகள் ஒரு இடதுசாரி வழக்கறிஞரை தேடிப் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.



அமெரிக்காவில் இடதுசாரி அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ராம்சி கிளார்க் International Action Center (http://iacenter.org/) என்ற அமைப்பை நடத்தி வருகின்றார். அவரது அமைப்பு, நீண்ட காலமாக கியூபா மீதான பொருளாதார தடையை எடுக்குமாறு போராடிக் கொண்டிருந்தது. கியூபாவுக்கு ஆதரவான பல வழக்குகளில் ராம்சி கிளார்க் வாதாடியிருந்தார். அமெரிக்காவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான ஐந்து கியூபர்கள் தொடர்பான வழக்கை குறிப்பிடலாம். அதையெல்லாம் பார்த்த பிறகு தான், புலிகள் தமக்காக வாதாடுமாறு அவரை நியமித்திருந்தனர்.

இன்று சிலர் "புலி ஆதரவாளர்" என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, "கியூபாவும் காஸ்ட்ரோவும் தமிழினத்திற்கு எதிரானவர்கள்" என்ற விஷமத் தனமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும், சில வலதுசாரி ஊடகவியலாளர்களும் இந்த எதிர்ப்பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் அமெரிக்காவால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஏ. மட்டுமல்ல, சோரோஸ் பவுண்டேஷன், யு.எஸ். எயிட் போன்ற பல நிறுவனங்கள் இதற்காகவே இலங்கையில் இயங்கி வருகின்றன. ஏகாதிபத்திய அடிவருடிகளை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன.   ஈழப்போர் முடிந்து விட்ட பின்னர் பிணங்களை கொத்துவதற்கு அமெரிக்க கழுகுகள் பறந்து வருகின்றன.

Wednesday, November 23, 2016

சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ஈழத் தமிழரின் வர்க்க முரண்பாடுகள்

"ஈழத் தமிழர் மத்தியில் வர்க்க முரண்பாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தினராக இருப்பது அதிசயமல்ல. நிரந்தரமான வருமானம், வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தமக்கு கீழே உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். 

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத" சதிகாரர்களின் முகத்திரை கிழியும் போதெல்லாம் இனவாத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள். "ஐயோ! தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்களே...." என்று ஊளையிடுவார்கள். இவர்களது "இனப் பற்று" பணக்காரர்களை பாதுகாக்கும் கவசம் என்பதை மக்கள் உணர விடாது ஒப்பாரி வைப்பார்கள். 

சமூக கட்டமைப்பில் மேலே உள்ள முதலாளிய வர்க்கத்தையும், கீழே உள்ள உழைக்கும் வர்க்கத்தையும் சமரசப் படுத்தி வைத்து ஆதாயம் அடைந்தவர்கள். போலியான வர்க்க சமரசத்தை உடைய விடாமல் பாதுகாக்கும் நோக்கில் "இன ஒற்றுமை", "மத உணர்வு", "கலாச்சார பாரம்பரியம்" போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வார்கள்.

(ஈழத்) தமிழர்கள் தமக்கிடையிலான வர்க்க முரண்பாடுகளை மறைத்து வந்தாலும், சில நேரங்களில் அவர்களை அறியாமலே வெளிக் கிளம்பி வருகின்றன. புலம்பெயர் நாடொன்றில் வாழும் புதுப் பணக்காரர், தமது மகளின் சாமத்திய (மஞ்சள் நீராட்டு) சடங்கை ஆடம்பரமாக நடத்திய விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சாமத்திய சடங்கு சரியா, பிழையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது போன்ற பணக்காரர்கள் பகட்டுக் காட்டும் ஆடம்பரமான விழாக்கள் பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்துவதை மறுக்க முடியாது.

ஆடம்பரத்தை எதிர்ப்பவர்கள், "எம்மக்கள் வறுமையில் வாழ்கையில் இத்தகைய ஆடம்பரம் தேவையா? அந்தப் பணத்தை கஷ்டப் படுவோருக்கு கொடுக்கலாமே?" என்று நியாயம் கூறுகின்றனர்.

அதே நேரம், ஆடம்பரத்தை ஆதரிப்பவர்களும் தமக்கென நியாயம் வைத்திருக்கிறார்கள். "அவனுடைய பணம்... அவன் காசு வைத்திருக்கிறான் அதனால் செலவு செய்கிறான்... நீங்க ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது!" என்று பணக்காரத் திமிருடன் நியாயம் பேசுகின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா இனங்களைப் போன்றும், (ஈழத்) தமிழர்களும் இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயம் தான். நீண்ட காலமாகவே பரம்பரைப் பணக்காரர்கள் தமது ஆடம்பர விழாக்களை மற்றவர்கள் கண்களுக்கு தெரியா வண்ணம் மூடி மறைத்து வந்தனர். அதனால், எஞ்சிய உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்தியில் இருந்து புதிய பணக்கார வர்க்கம் ஒன்று தோன்றியது. அவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும், "அற்பனுக்கு பவுசு வந்த மாதிரி" புதிய பணக்காரர்கள் தமது செல்வத்தை விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொண்டனர். அதில் ஒரு வகை தான் மகளின் சாமத்திய சடங்கை ஆடம்பரமாக நடத்துவது.

பரம்பரைப் பணக்காரர்கள் ஒரு மூடுண்ட சமூகமாக தமது வர்க்கத்தை சேர்ந்தவர்களுடன் மட்டும் பழகுவார்கள். ஈழத்தில் பரம்பரைப் பணக்காரர்களாக இருந்த சமூகம் புலம்பெயர்ந்து, பல தசாப்த காலமாகவே இங்கிலாந்தில் வாழ்கின்றது. அவர்களது வீடுகளில் நடக்கும் ஆடம்பர விழாக்களின் படங்கள், வீடியோக்கள் வெளியே கசிவதில்லை. அந்தளவுக்கு இரகசியம் பேணப் படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களது வர்க்கத்தினரை தவிர, வெளியில் யாருடனும் பழகுவதில்லை.

ஆனால், புதுப் பணக்காரர்களால் அப்படி நடக்க முடிவதில்லை. பத்து, அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் அவர்களும் சாதாரண உழைக்கும் வர்க்கமாக இருந்திருப்பார்கள். அவரது சமூகத்தில் அவர் மட்டும் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தவராக இருப்பார். முன்பொரு தடவை தனது மகளை சாமத்திய சடங்கிற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றவர், புலிகளுக்காக சேர்த்த பணத்தை சுருட்டியவர் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் புதுப் பணக்காரர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு பழைய பணக்காரர்கள் செல்வதில்லை. அதனால் இன்னமும் தொடர்பில் உள்ள உழைக்கும் வர்க்க உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அப்படி அழைக்கப் படுபவர்கள் தமது உறவினர்/நண்பரின் ஆடம்பர களியாட்டத்தை அம்பலப் படுத்தும் வீடியோ, படங்களை வெளியே கசிய விடுகின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதை பொறாமை என்று சொன்னாலும் அதுவும் வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எழுகின்றது. இதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகளால் ஏற்படும் இது போன்ற சச்சரவுகள் ஏனைய இனங்களிலும் நடக்கிறது. ஐரோப்பிய மொழிகளைப் பேசும் சமூகங்களில் கூட இந்தப் பிரச்சினை உள்ளது. டச்சு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Doe maar normaal, dan doe je al gek genoeg!" அதன் மொழிபெயர்ப்பு: "நீ சாதாரணமாக நடந்து கொள், அதுவே மற்றவர்களை கிறங்க வைக்கப் போதுமானது!"

பந்தா காட்டுவது, பகட்டுக் காட்டுவது, இதுவே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் நம்மிடையே உண்டு? "அந்தஸ்து", "கெளரவம்" முக்கியம் என்பதற்காக பலர் தம்மையறியாமலே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இப்படியான அந்தஸ்து பார்க்கும் செயல்கள் வர்க்க முரண்பாடுகளை அதிகரிக்கும். அதன் விளைவை தான் மேலே பார்த்தோம்.

இந்த வர்க்க முரண்பாடு புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். கீழே உள்ளது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவு. புட்சிட்டி எனப்படும் நவீன சூப்பர் மார்க்கெட்டில் மரக்கறி வாங்கச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமாரை ஒருவர் படம் பிடித்து போட்டிருந்தார்.
 

//ஏன்டா டேய் நீ எங்களை மாதிரி சந்தையிலை மரக்கறி வாங்க மாட்டிய டா பூட்சிற்றில வாங்கினாத்தான் சாப்பிடுவியா?//

இது யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவரது முகநூல் பதிவு. இதைக் கண்டித்த எல்லோரும் "பிரபலங்களை பின்தொடர்ந்து படம் பிடிக்கும் தவறை" மட்டுமே சுட்டிக் காட்டினார்கள். இந்தப் பதிவை இட்டவர் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளராக இருக்கலாம். கஜேந்திரகுமார் கட்சியுடன் நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அதையும் மீறி அவர் சொல்ல வரும் வர்க்க வேறுபாட்டை யாரும் கணக்கெடுக்கவில்லை. இதில் த.தே.கூ. ஆதரவாளர்களும் அடக்கம்.

ஈழப்போருக்கு பின்னரான உலகமயமாக்கல் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்திலும் Food City என்ற நவீன பல்பொருள் அங்காடிகள் வந்து விட்டன. முன்னொரு காலத்தில், யாழ்ப்பாணத்தவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு, மேற்குலகிற்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது மேற்குலகு அங்கே செல்கின்றது. அது தான் உலகமயமாக்கல்.

இலங்கையில் இன்று இரண்டு முரண்பாடு கொண்ட வர்க்கங்கள் இருப்பது முன்னரை விட துலக்கமாகத் தெரிகின்றது. நகரங்களில் முளைக்கும் நவீன அங்காடிகளில் ஐரோப்பாவில் உள்ள அத்தனை பாவனைப் பொருட்களும் கிடைக்கும். விலையும் ஐரோப்பிய மட்டத்திற்கு உள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

ஏழைகள், வசதி குறைந்தவர்கள் இன்றைக்கும் வழமையான மரக்கறி சந்தைகளை நம்பி வாழ்கின்றனர். சிலபேர் சாதாரண மரக்கறி சந்தையை விட, புட்சிட்டியில் விலை மலிவு என்று வாதாடலாம். சிலநேரம் இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையில் வர்க்கம் சார்ந்த இரண்டு வகையான பொருளாதாரங்கள் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. அது தான் இங்கே முக்கியம். பணக்காரர்கள் செல்லும் கடைகள், ஏழைகள் செல்லும் கடைகள் என்று வித்தியாசம் வந்துவிட்டது. அதற்கு இந்தப் பதிவே சாட்சியம்.

கஜேந்திரகுமார் கட்சியுடன் முரண்படும் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இந்தப் பதிவை கண்டித்த காரணமும் அது தான். அவர்களும் பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் தான். என்ன தான் எதிர்ப்பு அரசியல் பேசினாலும், கடைசியில் எல்லோரும் சங்கமிக்கும் இடமும் இது தான்.

சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய நகரங்களுக்கும் வந்து விட்டன. அவற்றில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் ஐரோப்பிய தரம் அளவிற்கு அதிகமாக உள்ளன. "ஐரோப்பிய தரத்திற்கு விலை இருந்தாலும் அது ஒரு பிரச்சினை இல்லை" என்று அங்கு வாழும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஏழைகளும் அங்கு பொருட்களை வாங்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாம்.

அடடே... இலங்கையும் ஒரு பணக்கார நாடாகி விட்டது என்பதை அறியும் பொழுது மெய்சிலிர்க்கிறது. பிறகெதற்கு அங்கிருப்பவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்? ஒரு பணக்கார நாடான இலங்கை, எதற்காக IMF, உலகவங்கியிடம் கடன் வாங்குகிறது?

இலங்கையில் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் ஐரோப்பிய விலைகளை ஒத்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு தரமான சட்டையின் விலை 1600 ரூபாய்கள். அதாவது சரியாகப் பத்து யூரோ! அண்மைக் கால விலையேற்றத்தின் பின்னர், மதுபானங்களின் விலை ஐரோப்பாவை விட அதிகம் என்பது வேடிக்கையானது.

பணக்காரர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால், வருமானம் குறைந்த ஏழைகளின் நிலைமை? பெரும்பாலான உழைக்கும் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் கூட விலைவாசி உயர்வு குறித்து முறையிடுகிறார்கள். பொருட்களின் விலைகள் ஏறி விட்டதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் முன்னரை விடக் குறைந்த அளவில் விற்பனையாகின்றது. அதை விட தமக்குக் கொடுக்கும் கமிஷனின் அளவையும் குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலை ஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்திருந்தால், அங்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் ஐரோப்பிய தரத்திற்கு சமமாக இருப்பது தானே நியாயம்? விலைவாசியை உயர்த்தியது மாதிரி சம்பளத்தையும் உயர்த்துவது தானே முறை?

இந்தக் கேள்வியை கேட்டால் இனப் பற்றாளர்கள், கருத்துக் கந்தசாமிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.


Monday, November 21, 2016

மார்க்சியம் என்றால் என்ன?


மார்க்சியம் என்றால் என்ன?

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர்.

சமூக விஞ்ஞான பாரவையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது ஒரு சித்தாந்தம் அல்ல. அதாவது முடிந்த முடிவு அல்ல.

விஞ்ஞானம் என்பது முழுமை பெறாத கோட்பாடுகளை கொண்டது. அதே மாதிரி மார்க்சியமும் முழுமை பெற்றதாக கருதப் பட முடியாதது. பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் தமது அனுபவங்களையும், ஆய்வுகளையும் சேர்த்துக் கொண்டனர். உதாரணத்திற்கு, லெனின், மாவோ ஆகியோர், மார்க்ஸ் சொல்லியிராத பல விடயங்களையும் இணைத்துக் கொண்டனர்.

மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் ஆதிக்கம் செலுத்திய, முதலாளித்துவத்தை பற்றி தீவிரமாக ஆய்வு செய்திருந்தார். இலாபம், கூலி போன்ற பல விடயங்களை வெறுமனே பொருளியல் ரீதியாக பார்க்காமல், அதில் வரலாறு, சமுதாயம் என்பன ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை ஆராய்ந்தார். அதன் விளைவாக தொழில் வழங்குனர்களும், தொழிலாளர்களும் பற்றிய தெளிவு கிடைத்தது.

மார்க்சியம் என்பது எந்த வித அங்கீகாரத்தையும், மதம் போன்றதொரு நம்பிக்கையையும் கோரவில்லை. அது உண்மைகளை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம் ஆகும். இன்றைக்கும் மனித இனத்தை பாதிக்கும் தீங்குகள், அவலங்களில் இருந்து மனிதர்களை விடுவித்து, சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதை நோக்கமாகக் கொண்டது.

மன்னராட்சிக்கு எதிரான முதலாளிய வர்க்கத்தின் எழுச்சி

உலக வரலாறு முழுவதும் யுத்தங்கள் நடந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பாடிய புலவர்கள், மன்னர்களின் மகிமையையும், தளபதிகளின் வீரத்தையும் புகழ்ந்து எழுதியுள்ளனர். இவ்வாறான வரலாற்றுப் பார்வை குறித்து மார்க்சியம் திருப்திப் படவில்லை.

மார்க்சியம் மக்களின் கோணத்தில் இருந்து வரலாற்றைப் பார்க்கிறது. உண்மையான வரலாறு தனி நபர்களை விட்டு, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட மன்னர்கள் போன்ற தனிநபர்களும், ஏதோ ஒரு வகையில் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலித்துள்ளனர்.

ஆகையினால், மார்க்சியமானது மனித வரலாறு நெடுகிலும் காணப்படும் இயற்கையின் விதிகளை ஆராய்கின்றது. இந்த நோக்கிற்காக அது தனிநபர்களை தவிர்த்து மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில் மக்களின் குறிப்பிட்ட பிரிவினர் வரலாற்றின் உந்துசக்தியாக இருந்ததை கண்டறிகின்றது. அத்தகைய மக்கட் பிரிவுகள் வர்க்கங்கள் என்று அழைக்கப் படுகின்றன.

வர்க்கம் என்றால் என்ன? ஒரே மாதிரியான வாழ்க்கைத்தரம் கொண்ட மக்கட் குழுவினர் என்பது சாமானியர்களின் புரிதல். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில், ஒரு நாட்டின் நிலம் முழுவதும் மன்னர் அல்லது நிலப்பிரபுக்களுக்கு சொந்தமாக இருந்தது. அந்த நிலங்களை உழுது பயிரிட்ட பண்ணையடிமைகள் செலுத்திய கப்பத்தில் வாழ்ந்து வந்தனர்.

மேலதிக வளங்கள், செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் மன்னர்கள் பிற நாடுகள் மீது படையெடுத்து நிலங்களை விஸ்தரித்தார்கள். அதே நேரம் நிலங்களில் வேலை செய்த பண்ணையடிமைகள், விளைச்சலில் திறை செலுத்துவது போக, தமக்கான பங்கை அதிகரிப்பது பற்றிக் கவலைப் பட்டனர். இத்தகைய சமுதாயத்தில், நிலப்பிரபுக்கள் (மன்னர் உட்பட) ஒரு வர்க்கமாகவும், பண்ணையடிமைகள் இன்னொரு வர்க்கமாகவும் காணப்பட்டனர். அவர்களது நலன் சார்ந்து வர்க்க முரண்பாடும் வளர்ந்து வந்தது.

நிலப்பிரபுக்களுக்கும், பண்ணையடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் சிலநேரம் மோதல்களாக வெடித்துள்ளன. தனிநபர்கள் மட்டுமல்ல, குழுக்களாகவும் கலகம் செய்தனர். தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, பெருமளவில் நடந்த பண்ணையடிமைகளின் எழுச்சிகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. உதாரணத்திற்கு, இங்கிலாந்தில், 1381 ம் ஆண்டு, Jon Ball, Wat Tyler ஆகிய இருவரின் தலைமையில் ஒரு கிளர்ச்சி நடந்தது. இது பற்றி H. Fagan எழுதிய Nine Days that Shook England எனும் நூலில் வாசிக்கலாம்.

நிலவுடைமையாளர்களின் நிலங்களில் வேலை செய்தவர்களில் தொழில்நுட்ப அறிவு பெற்ற கைவினைஞர்களும் இருந்தனர். அதே நேரம் வியாபாரத்தில் ஈடுபட்டோரும் இருந்தனர். தூர தேசத்திற்கு சென்று பொருட்களை விற்று வந்த வியாபாரிகளுக்கு, பண்ணையடிமைகள் மேலதிகமாக உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் அதிகமாக தேவைப்பட்டன. அந்த வகையில் சந்தையில் விற்பதை நோக்கமாகக் கொண்ட தொழில் பட்டறைகள் தொடங்கப் பட்டன.

சிற்பக் கலைஞர்கள், தச்சர்கள், கொல்லர்கள் போன்ற தொழிற்துறை நிபுணர்கள் பலர், ஏற்கனவே விடுதலைப் பத்திரம் வாங்கிக் கொண்ட பண்ணையடிமைகள் ஆவர். காலவோட்டத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பினுள் சுதந்திரமாக இயங்கிய கைவினைஞர்களின் எண்ணிக்கை பெருகியது.

மத்திய கால இங்கிலாந்தில் "ஜெர்னிமன்" (Journeyman) என்ற பிரிவினர் இருந்தனர். அவர்கள் நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழில் பயிலுனர்கள். உண்மையில் அது Journee என்ற பிரெஞ்சு சொல்லின் திரிபடைந்த ஆங்கில வடிவம்.

ஜெர்னிமன் என்பதை தமிழில் நாட்கூலிகள் என்று சொல்லலாம். ஜெர்னிமன் கைவினைஞர்களில் பாண்டித்தியம் பெற்ற திறமைசாலிகள் தொழில் வழங்குனர்கள் ஆனார்கள். அவர்களுக்கு கீழே இருந்த தொழில் பெறுநர்கள் சம்பளத்திற்கு வேலை செய்தனர்.

இவ்வாறு தான் நவீன கால முதலாளி, தொழிலாளிகளின் முன்னோடிகள் உருவானார்கள். 16 ம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான தொழிற்துறை முதலாளிகளின் வர்க்கமானது, தம்முடன் நிழல் போல தொடர்ந்த உழைக்கும் வர்க்கத்தையும் கொண்டிருந்தது.

நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் உருவான முதலாளிய வர்க்கமானது, வந்தவுடனே மன்னராட்சியை ஒழித்து விடவில்லை. அதற்கு மாறாக, மன்னர்களின் ஆளுகையின் கீழ் முதலாளித்துவம் மன்னர்களுக்கு சேவை செய்யும் தொழிற்துறையாக இயங்கியது.

விடுதலைப் பத்திரம் வாங்கிய பண்ணையடிமைகளின் வம்சாவழியினர் கைவினைஞர்களாகி பணக்காரர்களாக மாறியிருந்தனர். இருப்பினும் தாங்கள் உண்மையிலேயே சுதந்திரமானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொண்டனர். அவர்களது வர்த்தக முயற்சிகளுக்கு பல்வேறு தடைகள் போடப் பட்டிருந்தன. வர்த்தகத்தை விரும்பிய வடிவில் வளர்க்க முடியவில்லை. மேலும் அவர்கள் மீது பல வகையான வரிகள் சுமத்தப் பட்டன.

நாடு முழுவதும் மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படியால், அவர் சொன்னதே சட்டமாக இருந்தது. இராணுவம், நீதிபதிகள், சிறைச்சாலைகள் எல்லாம் மன்னரின் கீழ் இயங்கின. ஆதி கால முதலாளிய வர்க்கம், நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டியிருந்தது. இந்தப் போராட்டமானது பல நூறாண்டுகளாக தொடர்ந்தது.

பிரித்தானியாவில் இருந்த முதலாளிய வர்க்கம் ஆயுதமேந்திய புரட்சி மூலம் மன்னராட்சியை தூக்கியெறிந்தது. 17 ம் நூற்றாண்டில் குரொம்வெல் தலைமையில் அந்தப் புரட்சி நடந்தது.

குரொம்வெல் ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதியாக இருந்த படியால், அன்று நடந்த போரானது புரட்டஸ்தாந்து பிரிவினரின் எழுச்சியாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டது. கத்தோலிக்க மன்னருக்கு எதிராக புரட்டஸ்தாந்து படையினர் தொடுத்த போராக குறிப்பிடப் படுகின்றது.

இருப்பினும், அன்றைய பிரித்தானியாவில் முதலாளிய வர்க்கம் கடும் வரிச் சுமைகளால் பாதிக்கப் பட்டிருந்தது. 17ம் நூற்றாண்டில் சுமத்தப்பட்ட வரிகளின் அளவு பல மடங்கு அதிகரித்திருந்தது. வர்த்தகம் விரிவடைய முடியாதவாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு முதலாளிகள் அரசனிடம் தயவாக கேட்டுக் கொண்டனர். மனுக்களை அனுப்பினார்கள். வரி கட்ட மாட்டோம் என்று மிரட்டினார்கள்.

முதலாளிகளின் கோரிக்கைகள் யாவும் மன்னரால் உதாசீனம் செய்யப்பட்டன. பலமான அரசு இயந்திரத்தை எதிர்த்து சமாதானமாக போராட முடியாது என்பதை அறிந்து கொண்டு, மக்களை அணிதிரட்டி ஆயுதமேந்திய புரட்சியை நடத்தினார்கள்.

கண்மூடித்தனமான வரிகள் மக்களையும் கிளர்ந்தெழச் செய்திருந்தன. அன்று நடந்த ஆயுதமேந்திய புரட்சியின் பின்னர் தான், முதலாளிய வர்க்கம் ஆட்சியுரிமையை கைப்பற்றியது. அதன் பிரகாரம் தனது நலன்களுக்கேற்ற சட்டங்களை பிறப்பித்தது.

பிரித்தானியாவில், மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டு புரட்சியாளர்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், அந்த நாட்டில் 1689 ம் ஆண்டு நடந்த புரட்சியின் பின்னர் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்துக் கொண்டது.

பிரான்ஸ் நாட்டில், நூறு வருடங்களுக்குப் பின்னர், அதாவது 1789 ம் ஆண்டில் தான் முதலாளிய வர்க்கம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. இந்தப் புரட்சிகளின் விளைவாக பழைய நிலப்பிரபுத்துவ சமூகக் கட்டுமானம் பெருமளவில் அழித்தொழிக்கப் பட்டது. இருப்பினும் புரட்சியில் தப்பிப் பிழைத்த நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ நிலவுடைமையாளர்களாக மாற்றமடைந்தனர்.

பொருளியல் சார்ந்த உறவுமுறை மனிதர்களின் கருத்துக்களை தீர்மானிக்கிறது

வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உந்துசக்தியாக உள்ளது என்பது வரலாறு பற்றிய மார்க்சிய அணுகுமுறை. விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் வர்க்கப் போராட்டம் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கும். வாழ்க்கைக்கு அவசியமானவற்றை உற்பத்தி செய்யும் மனிதனின் வல்லமையும், இயற்கையின் மீதான் ஆளுமையும் கூடவே இருக்கும்.

அது மட்டுமல்லாது, மிகப் பெரும் சக்தி படைத்த இயந்திரங்களின் உருவாக்கம், அதனுடன் போட்டியிட முடியாத சிறுதொழில் துறையையும் அழித்து விடும். உதாரணத்திற்கு, பெருமளவில் துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நெசவுத் தறிப் பட்டறைகளை இல்லாதொழித்து விட்டன. இதனால் சிறு கைத்தொழில் முனைவோர் இருந்த இடத்தில், இரண்டு பெரும் சமூகப் பிரிவுகள் தோன்றின. இயந்திரங்களின் உரிமையாளர்கான முதலாளிகள், அவர்களுக்காக சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளிகள் ஆகியோரே அந்தப் பிரிவுகள்.

இந்த மாற்றமானது எவராலும் திட்டமிடப் படாமல் நடந்துள்ளது. ஒரு சிலரது அறிவு அவர்களது நலன் சார்ந்த உற்பத்திக்கு பயன்படுத்தப் பட்டதால் உண்டான நேரடி விளைவு. சமூகத்திற்கு அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றி அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

சித்தாந்தங்களும், அவற்றை முன்னெடுக்கும் நிறுவனங்களும் எவ்வாறு உருவாகின்றன? ஆதி கால இனக்குழு முறை, முன்னைய நிலப்பிரபுத்துவ முறை, நவீன கால முதலாளித்துவ அமைப்பு எதுவாக இருந்தாலும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பொருள் உற்பத்தியில் தங்கியுள்ளனர்.

சமூக நிறுவனங்கள், சட்டங்கள், ஒழுங்கு விதிகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் உற்பத்தி சார்ந்தே உருவாகின்றன. ஆகையினால், பொருள் உற்பத்தி மாற்றமடையும் பொழுது, சமூக மாற்றங்களும் உண்டாகின்றன. உதாரணத்திற்கு, நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதும், சமூக நிறுவனங்கள், சமூகப் பழக்க வழக்கங்களும் மாறின. ஒரு காலகட்டத்தில் ஒழுக்கமாக கருதப் படுவது, இன்னொரு காலகட்டத்தில் ஒழுக்க சீர்கேடாக கருதப் படலாம்.

முதலாளித்துவ பொருள் உற்பத்தி முன்னுக்கு வருவதற்காக, நிலப்பிரபுத்துவத்துடன் முரண்பட்டு மோதிக் கொண்டது. அதன் விளைவாக கடவுளின் பெயரால் கோரப் பட்ட உரிமைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி கட்டுவதில்லை என்ற முடிவு. சுதந்திரமாக வர்த்தகம் செய்வதற்கான உரிமை. இது போன்று பல மாற்றங்கள், நிலப்பிரபுத்துவம், முதலளைத்துவம் இரண்டுக்கும் இடையில் நடந்த போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டன.

நடைமுறையில் உள்ள கருத்து, கொள்கை, கோட்பாடு எல்லாம், குறிப்பிட்ட ஒரு இடத்தில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தோன்றிய நிறுவனங்களின் பிரதிபலிப்புகள் தான். அவை எப்போதும், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதும் இல்லை. அதாவது, "இன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்து" என்பது, உலகம் முழுவதும் எல்லாக் காலத்திலும் இருந்ததில்லை.

உதாரணத்திற்கு, பண்டைய கிரேக்க நாகரிகத்தில், ஜனநாயக அமைப்பு, மனிதர்களுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் இருந்தன என்று சொல்வார்கள். ஆனால், பண்டைய கிரேக்க நாடுகளில், அந்த "சம உரிமை", "ஜனநாயகம்" என்பன அடிமைகளுக்கு இருக்கவில்லை.

அதே மாதிரி, "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" போதித்த பிரெஞ்சுப் புரட்சி பற்றியும் பலர் புகழ்வதுண்டு. ஆனால், உண்மை நிலைமையோ வேறு. முதலாளித்துவ வர்க்கத்திற்கு சுதந்திரம் கொடுப்பது பற்றியே பிரெஞ்சுப் புரட்சி பேசியது. பிரெஞ்சுக் காலனிகளில் வாழ்ந்த (கறுப்பின) அடிமைகளுக்கு சுதந்திரம், சமத்துவம் எதுவும் கிடைக்கவில்லை. அதே போன்று, அடித்தட்டு பிரெஞ்சு மக்களும் புறக்கணிக்கப் பட்டனர்.

ஆகையினால், பெரும்பாலான சமூகம் சார்ந்த கருத்துக்கள் யாவும் வர்க்கக் கருத்துக்கள் என்று நாம் சொல்ல முடியும். சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமானது, தன்னிடமுள்ள பிரச்சார இயந்திரங்கள் மூலம் மக்கள் மீது திணிக்கப் படுகின்றன. அது கல்வி மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. எதிர்க் கருத்துக்களை அடக்குவதற்காக நீதிமன்று போன்ற நிறுவனங்களையும் கொண்டிருக்கிறது.

அதன் அர்த்தம், அந்தக் கருத்துக்கள் எல்லாம் மாயைகள் என்பதல்ல. நிஜ வாழ்வில் இருந்து தான் கருத்துக்கள் உருவாகின்றன. ஒரு மன்னர் அல்லது தொழிற்துறை முதலாளி, தங்களை உயர்வாக காட்டிக் கொள்வதற்கு ஏற்ற பொருளாதார வளங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

ஒருவர் "மேன்மை பொருந்தியவர்" என்று கூறும் பொழுது, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆதிக்க வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் அதிகாரத்தை மீறியவர்களாக கருதப் படுவர். ஆதிக்க வர்க்கமானது, "அபாயகரமான சிந்தனைகளை" தடுப்பதற்கு முயற்சி செய்யும்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பொருளியல் உற்பத்தியால் ஏற்படும் மாற்றங்கள் முதன்மையானவை. கருத்துக்கள் இரண்டாம்பட்சமானவை என்றால், அபாயகரமான சிந்தனைகள் எவ்வாறு தோன்ற முடியும்? இதற்கான பதிலானது, ஒரு குறிப்பிட்ட பொருளியல் உற்பத்தி நடைமுறைக்கு வந்த பின்னர், அது தொடர்பான கருத்துக்களும் தோன்றிக் கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு, கூலி உழைப்பாளிகளால் வளர்ந்து வந்த தொழிற்துறை, மேலதிக இலாபத்திற்காக பெருமளவு விளை பொருட்களை விற்க வேண்டியிருந்ததால், நிலப்பிரபுத்துவத்துடன் மோதல் ஏற்பட்டது. அதனால், கட்டுப்பாடுகளை மீறும் சுதந்திரம், வரியை ஸ்திரப் படுத்தல் போன்ற கருத்துக்களும் தோன்றின. அந்தக் காலத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியிருக்கவில்லை. ஆனால், அதற்கான சூழ்நிலை எழுந்தது. அதிலிருந்து முதலாளித்துவ கருத்துக்கள் தோன்றின.

இதே விதிகள் சோஷலிசத்திற்கும் பொருந்தும். முதலாளித்துவம் பெருமளவில் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும். அளவுக்கு மிஞ்சிய உற்பத்தி காரணமாக தேக்கம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். அப்போது முதலாளித்துவம் சமூக வளர்ச்சியை தடுத்து நிற்கும். அதற்கான சூழ்நிலைகள் சோஷலிசத்திற்கான நிபந்தனைகளை தோற்றுவிக்கும். அப்போது, சோஷலிச கருத்துக்களும் மக்களை பற்றிக் கொள்ளும். 

(பிற்குறிப்பு: Emile Burns எழுதிய What is Marxism? நூலில் இருந்து எடுத்த குறிப்புகளுக்கு, சில இடங்களில் நான் மேலதிக விளக்கம் கொடுத்துள்ளேன். மொழிபெயர்த்த பகுதிகளுக்கான மூலப் பிரதிகளை இத்துடன் இணைத்துள்ளேன். விரும்பியவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.)










Saturday, November 19, 2016

மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும், நீ என்ன சொல்கிறாய் என்பதை சொல்!


//மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்றால்.... மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்!//

இப்படிக் கேட்டவர் தன்னை ஈழத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என்று கூறிக் கொள்ளும் சுப்ரமணிய பிரபா. ஒரு காலத்தில் மார்க்சிய லெனினிசம் பேசிய விடுதலைப் புலிகளின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொள்பவர். தற்போது வலதுசாரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதால் அவ்வாறு பொங்கியிருக்கிறார்.

குறைந்த பட்சம் விமர்சிப்பதற்காவது மார்க்சியம் என்றால் என்னவென்று ஓரளவு படித்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அதற்குப் பெயர் விமர்சனம் அல்ல, அவதூறு! இன்றைய உலகில் மனிதர்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். இது குறித்து சுப்பிரமணிய பிரபா என்ற அந்த மேதாவி என்ன சொல்கிறார்? ஆகையினால், அவரிடமே மேற்குறிப்பிட்ட கேள்வியை கேட்கலாம் என நினைக்கிறேன்.

1. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்பது மார்க்ஸ் சொன்னது. இன்று சர்வதேச சட்டங்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. அது ஈழத்தில் சரியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றதா? தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சிலநேரம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர்.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

2. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. உலகின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சியான பாரிஸ் கம்யூனில் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. இலங்கையில் உள்ள இன்றைய செலவினத்தைப் பொறுத்தவரையில், ஒருவர் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெற வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். அது எல்லோருக்கும் கிடைகிறதா? ஒரே நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளி ஏழாயிரம் ரூபாயும், மனேஜர் ஒரு இலட்சம் ரூபாயும் சம்பளம் வாங்கும் கொடுமையும் நடக்கிறது.

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

3. உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஈழப் பிரதேசங்களில் ஆயிரக் கணக்கான உழவர்கள் இன்னொருவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிடுகிறார்கள். நில உரிமையாளர்கள் வயலில் இறங்கி உழைக்காமல் சொகுசாக காலாட்டிக் கொண்டு சாப்பிடுகிறார்கள். ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்போர் வாழும் நாட்டில் தான் ஒரு துண்டு நிலம் இல்லாத மக்களும் வாழ்கிறார்கள். அந்த நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டாமா? எல்லோரும் தமிழர்கள் தானே? சகோதரத்துவம் தமிழ் இன உணர்வு இருக்காதா?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

4. ஆண், பெண் சமத்துவம் பேணப் பட வேண்டும். சிறார் தொழிலாளர்களை சுரண்டுவது ஒழிக்கப் பட வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. ஆண், பெண் உழைப்பாளிகளுக்கு சமமான ஊதியம் வழங்கப் படுகின்றதா? ஈழத்தில் சிறார் தொழிலாளர்களே கிடையாதா? தோட்டங்கள், உணவகங்கள், தொழிலகங்களில், இன்றைக்கும் எத்தனை ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக்கு போகாமல் வேலை செய்கிறார்கள்?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... இந்த நிலைமையை மாற்றுவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

5. நேரடி ஜனநாயக அமைப்பான தொழிலாளர் பாராளுமன்றம், ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்க வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்னது. அதிகாரப் பரவாலாக்கல் மூலம், ஊருக்கு ஊர் தொழிலாளர்கள் நேரடியாகப் பங்கு பற்றும் பாராளுமன்றம் அமைப்போம். அதன் மூலம், உழைக்கும் மக்கள் தமது நலன்களை பிரதிநிதித்துவப் படுத்த முடியும். தொழிற்சாலைகளையும் தொழிலாளர்கள் நிர்வகிக்கும் அமைப்பை உருவாக்குவோம். இதற்கெல்லாம் நீ சம்மதிக்கிறாயா?

மேற்குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் விடுவதற்கு, நீ ஆயிரம் நியாயங்களை அடுக்கலாம். அந்தக் காரணங்களையும், இங்கே கூறப்பட்ட விடயங்களையும் தமிழ் மக்கள் முன்னால் வைத்து பொது வாக்கெடுப்பை கோருவோம். யார் சரி, பிழை என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அதற்கு நீ சம்மதிக்கிறாயா?

மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்.... குறைந்த பட்ச மக்கள் ஜனநாயகத்தை கொண்டு வருவது பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று சொல்!

யானை பார்த்த குருடர்கள் மாதிரி, "மார்க்சியம் பார்த்த மடையர்கள்" இருக்கிறார்கள். காலங்காலமாக முதலாளித்துவம் பரப்பி வரும் மக்கள் விரோதக் கருத்துக்களை, தமது சொந்தக் கருத்து மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

"மார்க்சிய‌ பூச்சாண்டி" காட்டி, பாமர மக்களை ப‌ய‌முறுத்துகிற‌வ‌ர்க‌ள் எந்த‌ள‌வு ப‌டித்திருக்கிறார்க‌ள்? பொருளிய‌ல், ச‌மூக‌விய‌ல், அர‌சிய‌ல், வ‌ர‌லாறு, மெய்யிய‌ல், விஞ்ஞான‌ம், மானிட‌விய‌ல் போன்ற‌ ப‌ல‌ பாட‌ங்க‌ள் மார்க்சியத்திற்குள் அட‌ங்குகின்ற‌ன‌ என்பதை அவர்கள் அறிவார்க‌ளோ?

இன்றைய கல்வி அமைப்பு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்குகின்றது. அதற்கு மாறாக கல்வியை மக்களின் நலன்களுக்காக மாற்றி அமைப்பது தான் மார்க்சியத்தின் குறிக்கோள். அதற்காகத் தான் நடைமுறையில் உள்ள கல்வியை விமர்சனபூர்வமாக அணுகுகின்றது.

மார்க்ஸ் சொன்னது இருக்கட்டும். "சுயமாக சிந்திக்கும் அறிவுஜீவிகள்", அடிமைகளை உருவாக்கும் கல்வி தொடர்பாக என்னென்ன விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்? நடைமுறையில் உள்ள கல்வி அமைப்பை கேள்விக்குட்படுத்தாமல், "கற்றவைகளை ஒப்புவிக்கும் இயந்திர மனிதர்கள்" மார்க்சியத்தை விமர்சிப்பது வேடிக்கையானது.

மார்க்சியம் ஒரு தத்துவமாக கருதினால், பண்டைய கிரேக்க தத்துவ அறிஞர்களையும் குறை கூற வேண்டியிருக்கும். சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையில் எழுதி வைத்த தத்துவங்கள் மார்க்சியத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளன. இதையெல்லாம் இன்றைக்கும் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்சியத்தை நிராகரிப்பவர்கள் உலக மக்களுக்கு செய்த, இனிமேல் செய்யப் போகும் உதவிகள் என்ன? வறுமையை ஒழிப்பதற்கு வைத்திருக்கும் திட்டங்கள் என்ன? பட்டினியால் வாடும் மக்களை காப்பாற்றுவதற்கான கொள்கை என்ன? அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு, இருப்பிடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான தத்துவம் என்ன?

மார்க்சியத்திற்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்து இவர்கள் முன்வைக்கும் தத்துவம் அல்லது கொள்கைகள் என்ன? ஒன்றுமேயில்லை. இதுவரையும் இல்லை. இனிமேலும் வரப் போவதில்லை. அதனால், மக்கள் தமது உரிமைகளுக்காக போராடுவது எந்த வகையில் தவறாகும்? அப்படிப் போராடுங்கள் என்பதையும் மார்க்சியம் தானே சொல்லிக் கொடுத்தது?

அது ஒரு புறம் இருக்கட்டும். //மார்க்ஸ் சொல்வது இருக்கட்டும்... நீ என்ன சொல்கிறாய் என்பதைச்சொல்// என்று அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு, மார்க்ஸ், லெனினை விட்டால், உலகில் வேறு யாரையும் தெரியாதா?

19 ம் நூற்றாண்டில் சோஷலிசத்தை முன்மொழிந்த ஜாகோபின், புருதோன், பகுனின் என்று ஏராளமான தத்துவ அறிஞர்கள் இருக்கிறார்களே? அவர்களை பற்றியும் பேசலாமே? சமதர்மம் போதித்த சங்க கால தமிழ்ப் புலவர்கள் பற்றிப் பேசலாமே?

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பற்றி இவர்கள் கேள்விப் பட்டதே இல்லையா? "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்." என்று கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னரே மார்க்சியம் பேசிய திருவள்ளுவர் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதியார் ஒரு கம்யூனிஸ்டா? "ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது இலகு. ஆனால், பணக்காரன் பரலோகம் போக முடியாது" என்று போதித்த இயேசு கிறிஸ்து மார்க்சிஸ்ட் அல்லவே?

“நான் ஏழைக்கு உணவளித்தேன். அவர்கள் என்னை புனிதர் என்று போற்றினார்கள். ஏழைக்கு ஏன் உணவு கிடைப்பதில்லை என்று கேட்டேன். என்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்தார்கள்!” – Dom Hélder Pessoa Câmara (பிரேசில் நாட்டு கத்தோலிக்க பாதிரியார்)

Friday, November 18, 2016

அமெரிக்காவில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட யூதர்கள்


சியோனிஸ்ட் தேசியவாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும், யூதர்களை வரலாறு முழுவதும் ஒடுக்கப் பட்டவர்களாக குறிப்பிடுவார்கள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக நடத்தப் பட்டதாக சொல்வார்கள். ஆனால், யூதர்களும் ஒரு காலத்தில் ஒடுக்குபவர்களாக, அடிமைகளை வைத்திருந்ததாக, யாரும் பேசுவதில்லை. ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. சரித்திர நூல்கள் மூடி மறைக்கின்றன. குறிப்பாக, 16 ம் நூற்றாண்டில், யூதர்கள் அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட தகவலை நீங்கள் எங்கேயும் கேள்விப் பட முடியாது.

அட்லாண்டிக் சமுத்திரத்தின் ஊடாக நடந்த, டச்சுக் காரர்களின் அடிமை வாணிபம், ஆரம்பத்தில் யூத வணிகர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரேசிலில் உருவான போர்த்துகேய காலனிகளுக்கு அடிமைகளை விநியோகம் செய்து வந்தனர். பின்னர் டச்சு கயானா (இன்று: சுரினாம்) என்ற நெதர்லாந்து காலனியும், யூத வணிகர்கள் கொண்டு வந்த அடிமைகளை கொண்டு உருவானது. யூதர்கள், டச்சு காலனிய நிறுவனமான "மேற்கிந்தியக் கம்பனி" க்கும், போர்த்துக்கேய காலனிகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்த இடைத் தரகர்களாக இருந்தனர். கிட்டத்தட்ட 60% மான அடிமை வர்த்தகம் அவர்களின் கைகளில் இருந்தது.

எவ்வாறு யூதர்கள் அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள்? 16 ம் நூற்றாண்டில், ஏராளமான போர்த்துக்கேய யூதர்கள் நெதர்லாந்தில் வந்து குடியேறினார்கள். ஏற்கனவே, போர்த்துக்கல் அடிமை வாணிபத்தில் இறங்கி இருந்த படியால், யூதர்களும் அந்த தொடர்புகளை பேணி வந்தனர். யூதர்களுக்கு, போர்த்துக்கேய மொழியும், டச்சு மொழியும் சரளமாக பேசத் தெரிந்திருந்ததால், இரு தரப்பு வாணிபத்தில் இறங்குவது இலகுவாக இருந்தது.

யூதர்களுக்கும், கறுப்பின அடிமைகளுக்கும் இடையிலான தொடர்பு, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபட்டு வந்தது. குறிப்பிட்ட சில காலம், கறுப்பின அடிமைகளை யூத மதத்திற்கு மாறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். சில இடங்களில் கலப்புத் திருமணங்களும் நடந்துள்ளன. இதற்கான சான்றுகளை, இன்றைக்கும் போர்த்துக்கல் நாட்டில் உள்ள ஆவணங்களில் காணலாம். ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த யூதர்கள், கறுப்பின அடிமைகளை வீட்டுப் பணியாளர்களாக வைத்திருந்திருக்கிறார்கள்.

Elieser என்ற, யூத மதத்திற்கு மாறிய கறுப்பின அடிமையின் கல்லறை, இன்றைக்கும் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு அருகில் உள்ளது. Ouderkerk aan de Amstel எனும் இடத்தில் உள்ள யூத கல்லறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அதிலே, ”Sepultura do bom servo Elieser” (போர்த்துகேய மொழியில்: "நல்ல அடிமை எலிசரின் கல்லறை."), என்ற வாசகம் பொறிக்கப் பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் புதைக்கப்பட்ட முதலாவது கறுப்பின அடிமை எலிசர் ஆக இருக்கலாம். கறுப்பின அடிமைகளை வைத்திருந்த யூத எஜமானின் கல்லறையும், அதற்கு அருகில் தான் உள்ளது. (Op Joodse begraafplaats ligt zwarte slaaf Elieser naast slavenhandelaar; http://www.refdag.nl/achtergrond/geschiedenis-cultuur/op_joodse_begraafplaats_ligt_zwarte_slaaf_elieser_naast_slavenhandelaar_1_656045)

Monday, November 14, 2016

ஈழத்தில் தமிழரை பேரழிவுக்குள் சுரண்டிக் கொழுத்த தமிழ் முதலாளிகள்


ஈழ‌ப்போர் ந‌ட‌ந்த‌ கால‌ம், யாழ்ப்பாணத் த‌மிழ் முத‌லாளிக‌ளின் பொற்கால‌ம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேர‌ழிவுக‌ளுக்கு ம‌த்தியிலும் கோடி கோடியாக‌ பணம் ச‌ம்பாதித்தார்க‌ள். ஒரு ப‌க்க‌ம் த‌மிழ‌ர்க‌ள் செத்து ம‌டிந்து கொண்டிருக்கையில், ம‌றுப‌க்க‌ம் முத‌லாளிக‌ளின் க‌ஜானாவில் ப‌ண‌ம் குவிந்து கொண்டிருந்த‌து. அதற்காக அவர்கள் ஒரு நிமிடம் கூட வருத்தப் படவில்லை.

பெரும்பாலானோருக்கு ந‌ன்கு தெரிந்த‌ வ‌ர்த்த‌க‌ப் பிர‌ப‌ல‌ம், காலஞ்சென்ற ம‌கேஸ்வ‌ர‌னை உதார‌ண‌மாக‌ எடுக்க‌லாம். இவ‌ர் ஒன்றுமில்லாத ஓட்டாண்டியாக‌ தனது வ‌ர்த்த‌க‌ வாழ்வை ஆர‌ம்பித்த‌வ‌ர். போர்க் காலத்தில் ம‌ண்ணெண்ணை (கெரசின் ஆயில்) க‌ட‌த்த‌ல் மூல‌ம் கோடீஸ்வ‌ர‌னாக‌ மாறினார். சட்டவிரோதமான கடத்தல் வேலை செய்து முதலாளி ஆகலாம் என்று நிரூபித்தார்.

அந்த‌க் கால‌த்தில் பொருளாதாரத் தடை இருந்தது. புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு கொண்டு செல்ல‌க் கூடாது என்று, அர‌சு ப‌ல‌ பொருட்க‌ளை த‌டை செய்திருந்த‌து. அத‌னால், ம‌ண்ணெண்ணை போன்ற‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கும் த‌ட்டுப்பாடு ஏற்ப‌ட்ட‌து. வீடுகளில் சமைப்பதற்கும், வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் தேவைப் பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக ஓடாமல் நின்ற வாகனங்களையும் மண்ணெண்ணெய்யில் ஓட வைத்தார்கள்.

கடத்தல் பேர்வழி ம‌கேஸ்வ‌ர‌ன் அர‌ச‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் ம‌ண்ணெண்ணை வாங்கி, புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்திற்கு க‌ட‌த்திச் சென்றார். அத‌ற்காக‌ காவ‌லர‌ணில் இருந்த‌ இராணுவ‌த்தின‌ருக்கும் இல‌ஞ்ச‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

அன்று ஒரு லீட்ட‌ர் ம‌ண்ணெண்ணையின் விலை 13 ரூபாய்க‌ள் ம‌ட்டுமே. ஆனால், புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் 300 ரூபாய்க்கு விற்க‌ப் ப‌ட்ட‌து! அதாவது முப்பது மடங்கு இலாபம் வைத்து விற்றார். இந்த‌ப் ப‌க‌ல் கொள்ளை கார‌ண‌மாக‌, அவர் தமிழ் மக்களால் "ம‌ண்ணெண்ணை ம‌கேஸ்வ‌ர‌ன்" என்ற பட்டப் பெயரால் அழைக்கப் ப‌ட்டார். மகேஸ்வரனின் பணம் பாதாளம் மட்டும் பாய்ந்தது.

யாழ் குடாநாட்டு பத்திரிகையான உதயன், "மண்ணெண்ணெய் விலை குறைத்த வள்ளல்" என்று அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. அதாவது, சிறு வியாபாரிகள் மண்ணெண்ணெய்யை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில், மகேஸ்வரன் ஒரு மொத்த வியாபாரியாக கப்பல் மூலம் "இறக்குமதி" செய்தாராம். அதனால் மண்ணெண்ணெய் விலை குறைந்ததாம். கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

மகேஸ்வரனின் த‌ம்பி துவார‌கேஸ்வ‌ர‌னும் ம‌ண்ணெண்ணை க‌ட‌த்தி விற்று கோடீஸ்வ‌ர‌ன் ஆன‌வ‌ர் தான். இன்று யாழ் ந‌கரில் ஒரு பெரிய‌ ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதிக்கு சொந்த‌க்கார‌ன். புலிக‌ளின் கால‌த்தில் உத‌ய‌ன் ப‌த்திரிகை யாழ் குடாநாட்டில் ஏக‌ போக‌ உரிமை கொண்டிருந்த‌து. இன்றைக்கும் அது தான் அதிக‌ள‌வில் விற்ப‌னையாகின்றது. உத‌ய‌ன் நிறுவ‌ன‌ முத‌லாளி ச‌ர‌வ‌ண‌ப‌வ‌னும், யாழ் ந‌க‌ரில் ஒரு ந‌ட்ச‌த்திர‌ த‌ங்குவிடுதி வைத்திருக்கிறார்.

அர‌சிய‌லில் விடுத‌லைப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளின் ஏக‌ பிர‌திநிதித்துவ‌ம் கோரிய‌ மாதிரித் தான், த‌மிழ் முத‌லாளிக‌ளும் ந‌ட‌ந்து கொண்டார்க‌ள். போர் ந‌ட‌ந்த‌ கால‌ம் முழுவ‌தும், அவ‌ர்க‌ள் சொன்ன‌ விலைக்கு ம‌க்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இருந்த‌து.

"ஐயோ பாவ‌ம், ந‌ம‌து சொந்த‌ இன‌ ம‌க்க‌ள் தானே," என்று ஒரு முத‌லாளி கூட‌ ப‌ரிதாப‌ப் ப‌ட‌வில்லை. உட‌மைக‌ளை இழ‌ந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த‌ ம‌க்க‌ளிட‌ம் இர‌க்க‌மின்றி சுர‌ண்டிக் கொழுத்த‌ன‌ர். ம‌னித‌னின் இர‌த்த‌த்தை உறிஞ்சி வாழும் அட்டைக்கும், இந்தத் "த‌மிழ்"(?) முத‌லாளிக‌ளுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

முத‌லாளித்துவ‌த்தில் போட்டி இருக்க‌ வேண்டும் என்று பொருளிய‌ல் அறிஞ‌ர்க‌ள் சொல்வார்க‌ள். யாழ்ப்பாண‌ த‌மிழ் வ‌ணிக‌ர்க‌ள், எந்த‌ப் போட்டியாள‌ரும் இல்லாம‌ல் த‌னிக்காட்டு ராஜாவாக‌ வ‌ர்த்த‌க‌ம் செய்த‌ன‌ர்.

1983 ம் ஆண்டு போர் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து சிங்க‌ள‌ வ‌ணிக‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ப் ப‌க்க‌ம் த‌லை வைத்தும் ப‌டுக்க‌வில்லை. 1991 ம் ஆண்டு முஸ்லிம்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். யாழ் குடாநாட்டு வ‌ர்த்த‌க‌த்தில் முஸ்லிம்க‌ளின் ஆதிக்க‌ம் ச‌ற்று அதிக‌மாக‌ இருந்த‌து. அந்த‌த் த‌டை அக‌ற்ற‌ப் ப‌ட்ட‌தும் த‌மிழ் வ‌ர்த்த‌க‌ர்க‌ள் காட்டில் ஒரே ம‌ழை தான்.

அப்பாவித் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு இந்த‌ உண்மையெல்லாம் எப்ப‌டித் தெரியும்? "சிங்க‌ள‌வ‌ர்க‌ள் எங்க‌ளை அழிக்க‌த் துடிக்கும் எதிரிக‌ள்." "முஸ்லிம்க‌ள் எங்க‌ளை காட்டிக் கொடுக்கும் துரோகிக‌ள்." இப்ப‌டி சொல்லிக் கொடுத்தால் போதும். உட‌னே ந‌ம்பி விடுவார்க‌ள். அத‌ற்குப் பிற‌கு த‌மிழ‌ர்க‌ளை வேண்டிய‌ ம‌ட்டும் சுரண்டி, கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம். எதிர்த்துப் பேசினால் அவ‌னுக்கும் துரோகிப் ப‌ட்ட‌ம் சூட்டி விட‌லாம்.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்ன‌ரும் பேச‌ப் ப‌டும் தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் அல்ல‌து த‌மிழ் இன‌வாத‌த்தின் பின்ன‌ணியில் த‌மிழ் முத‌லாளிக‌ளின் ந‌ல‌ன்க‌ளும் அட‌ங்கியுள்ள‌ன‌. த‌மிழ்த்தேசிய‌ அர‌சிய‌லும் முத‌லாளித்துவ‌மும் ஒன்றில் இருந்து ம‌ற்ற‌து பிரிக்க‌ முடியாம‌ல் உள்ள‌ன‌.

ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ பொற்கால‌த்தில் கோடி கோடியாக‌ ச‌ம்பாதித்துக் கொண்டிருந்த‌ த‌மிழ் முத‌லாளிக‌ள், சில‌நேர‌ம் புலிக‌ளையும் திட்டித் தீர்த்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம் புலிக‌ள் 5% வ‌ரி அற‌விட்ட‌து தான்.

உண்மையில் 5% வ‌ரி, முத‌லாளிக‌ளின் கோடிக் க‌ண‌க்கான‌ நிக‌ர‌ இலாப‌த்துட‌ன் ஒப்பிட்டால், இந்த‌த் தொகை மிக‌ மிக‌க் குறைவு. மேற்கு ஐரோப்பாவில் 20% அல்ல‌து 30% வ‌ரியாக‌ க‌ட்ட‌ வேண்டும். போர் முடிந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ ஆத‌ர‌வு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளால் எழுப்ப‌ப் ப‌ட்ட‌ கோஷ‌ங்க‌ளுக்கான‌ விள‌க்க‌ம்:

- "எங்க‌ளுக்கு த‌மிழீழ‌ம் வேண்டும்!" (விள‌க்க‌ம்: த‌மிழ் ம‌க்க‌ளை சுர‌ண்டுவ‌தற்கு த‌மிழ் முத‌லாளிக‌ளுக்கே ஏக‌போக‌ உரிமை வேண்டும்.)

- "இருப்ப‌வ‌ர்க‌ள் இருந்திருந்தால் இப்போது இப்ப‌டி ந‌ட‌ந்திருக்குமா?" (விள‌க்க‌ம்: சிங்க‌ள‌, முஸ்லிம் முத‌லாளிக‌ள், த‌மிழ் முத‌லாளிக‌ளுட‌ன் போட்டிக்கு வ‌ந்திருப்பார்க‌ளா?)

தமிழ்த் தேசியவாத கட்சிகளின் தலைவர்கள் முதலாளித்துவத்தை ஆதரிப்பது வியப்புக்குரியதல்ல. பலர் பரம்பரை பரம்பரையாக நிலவுடைமையாளர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். அந்த சொத்துக்களை இன்றளவும் ஆண்டு அனுபவிப்பவர்கள். 

இன்று தீவிர புலி ஆதரவு, தீவிர தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட ஒரு பெருந்தோட்ட முதலாளி தான். அவரது பெயரில் மலையகத் தேயிலைத் தோட்டம் மட்டுமல்லாது, மலேசியாவிலும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன.

1947 இல், அன்றைய‌ இல‌ங்கை பிர‌த‌ம‌ர் டி.எஸ். சேன‌நாய‌க்க‌ த‌லைமையிலான‌ குழுவின‌ர் பெருந்தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் பிர‌ஜாவுரிமையை ப‌றித்த‌ன‌ர். பெருந்தோட்ட‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரும் அர‌சிய‌ல் ச‌க்தியாகி, க‌ண்டிச் சிங்க‌ளவ‌ரின் பிர‌திநிதித்துவ‌த்தில் பிர‌ச்சினை கொடுப்பார்க‌ள் என்ப‌து ஒரு கார‌ண‌ம். அதேவேளை, சோஷ‌லிச‌ சித்தாந்த‌ங்கள், ம‌லைய‌க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆழ‌மாக‌ நிலைகொண்டு விடும் என‌ப் ப‌ய‌ந்த‌மை இன்னொரு கார‌ண‌ம்.

ம‌லைய‌க‌த் த‌மிழ‌ரின் பிர‌ஜாவுரிமை ப‌றிக்கும் ச‌ட்ட‌த்திற்கு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரான‌ ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌ம் (கஜேந்திரகுமாரின் தாத்தா) ஆத‌ர‌வாக‌ இருந்தார். அத‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ரும் ஒரு பெருந்தோட்ட‌ முத‌லாளியாக‌ இருந்தார்.

அண்மையில் தேயிலைத் தோட்ட‌த் தொழிலாள‌ர்க‌ளின் ச‌ம்ப‌ள‌ உய‌ர்வுக் கோரிக்கையை ஆத‌ரித்து, யாழ் ந‌க‌ரிலும் ஆர்ப்பாட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அப்போது ஜி.ஜி.பொன்ன‌ம்ப‌ல‌த்தின் பேர‌ன் க‌ஜேந்திர‌குமாரும் ப‌ங்குப‌ற்றி இருந்தார்.

பெருந்தோட்ட‌ உரிமையாள‌ர் பொன்ன‌ம்ப‌ல‌த்தின் வாரிசான‌ க‌ஜேந்திர‌குமார், த‌ன‌க்கு சொந்த‌மான‌ தேயிலைத் தோட்ட‌த்தில் வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ளுக்கு ச‌ம்ப‌ள‌ம் கூட்டிக் கொடுத்து முன்னுதார‌ண‌மாக‌ திக‌ழ்ந்திருக்க‌லாம்.

இப்ப‌டியான த‌க‌வ‌ல்க‌ளை இருட்ட‌டிப்பு செய்யும் த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள், முத‌லாளி க‌ஜேந்திர‌குமாரை தொழிலாள‌ரின் ந‌ண்ப‌னாக காட்டும் பித்த‌லாட்ட‌மும் ந‌ட‌க்கிற‌து. க‌ஜேந்திர‌குமாருக்கு (யாழ் குடாநாட்டில்) ப‌ளைப் பிர‌தேச‌த்திலும் ப‌ல‌ ஏக்க‌ர் காணி சொந்த‌மாக‌ இருக்கிற‌தாம். ஒரு த‌ட‌வை வைத்திய‌சாலை விஸ்த‌ரிப்புக்காக‌ இர‌ண்டு ப‌ர‌ப்பு காணி கேட்ட‌ நேர‌ம் கொடுக்க ம‌றுத்து விட்டாராம். இவ‌ர்க‌ள் தான் த‌மிழ‌ர்க‌ளின் தேசிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.

வாழ்க‌ த‌மிழ்த் தேசிய‌ம்!


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, November 12, 2016

ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியன் ஒரு தமிழ்த் தேசிய மறுப்பாளன்


ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பாள‌ன் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌த‌ற்கு த‌மிழ் குறுந் தேசிய‌வாதிக‌ளுக்கு எந்தத் த‌குதியும் கிடையாது! 

வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால், அன்றைய வரலாற்று நாயகர்களுக்கும் இன்றைய தேசியவாதிகளுக்கும் இடையில் பெருமளவு கொள்கை வேறுபாடு இருக்கும். அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதே மாதிரி, அன்றைய பண்டார வன்னியனுக்கும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளுக்கும் கடுகளவு ஒற்றுமை கூடக் கிடையாது. பண்டார வன்னியனின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுபட்டது. இன வேற்றுமை பாராட்டாமல், சிங்களவருடன் கூட்டுச் சேர்ந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினான்.

அன்றைய‌ கால‌த்தில் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் முன்னெடுத்த‌ அர‌சிய‌லுக்கும், இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளின் அர‌சிய‌லுக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் இன்றிருந்தால், "சிங்க‌ள‌வ‌ருட‌ன் ந‌ல்லிண‌க்க‌ம் பேசிய‌ ஒத்தோடி" என்று, ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திட்டித் தீர்த்திருப்பார்க‌ள்.

சிங்க‌ள‌ - த‌மிழ் இன‌ முர‌ண்பாடு ஒரு இருப‌தாம் நூற்றாண்டின் தோற்ற‌ப்பாடு. இன்று ப‌ல‌ர் க‌ற்ப‌னை செய்வ‌து போல‌, சிங்க‌ள‌வரும், த‌மிழ‌ரும் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ ப‌கைவ‌ர்க‌ளாக‌ வாழ‌வில்லை. அத‌ற்கு ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் வ‌ர‌லாறு சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.

த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ந்து குடியேறிய‌ வ‌ன்னிய‌ர்க‌ளால், அந்த‌ப் பிர‌தேச‌த்திற்கு வ‌ன்னி என்று பெய‌ர் வ‌ந்த‌தாக‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌து. ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ரும், த‌மிழ‌க‌ வ‌ன்னிய‌ர்க‌ள் சிங்க‌ள‌ அர‌ச‌ வ‌ம்ச‌த்துட‌ன் இன‌க் க‌ல‌ப்பு செய்திருந்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஐரோப்பிய‌ கால‌னியாதிக்க‌வாதிக‌ள் இல‌ங்கையில் கால் ப‌தித்த‌ நேர‌ம், க‌ண்டி ராஜ்ஜிய‌ம் சுத‌ந்திர‌மாக‌ இருந்த‌து. வ‌ன்னிப் பிர‌தேச‌த்தை ஆண்ட‌ குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், க‌ண்டி ராஜ்ஜிய‌த்திற்கு திறை செலுத்தி வ‌ந்தான்.

யாழ் குடா நாடு ஐரோப்பிய‌ கால‌னிய‌ ஆட்சியின் கீழ் இருந்த‌து. வ‌ன்னிப் பிராந்திய‌ம், க‌ண்டிய‌ ராஜ்ஜிய‌த்தின் வ‌ட‌க்குப் புற‌ பாதுகாப்பு அர‌ணாக‌ இருந்த‌து. அத‌னால் தான், கால‌னிய‌ ப‌டைக‌ள் முத‌லில் இடையில் இருந்த‌ த‌டையான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னை அக‌ற்றும் போரை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போர்க‌ளில், ட‌ச்சுக் கால‌னிய‌ப் ப‌டைக‌ள் ப‌ல‌ த‌ட‌வை தோல்வியை ச‌ந்தித்த‌ன‌. க‌ண்டி ராஜ்ஜிய‌த்திட‌ம் இருந்து கிடைத்த‌ பீர‌ங்கி போன்ற‌ "ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ள்" வ‌ன்னிப் ப‌டைக‌ளுக்கு உத‌வின‌. மேலும் காடுக‌ளுக்குள் ம‌றைந்திருந்து கெரில்லாப் போரிலும் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர்.

வ‌ன்னி குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், ட‌ச்சு, ஆங்கிலேய‌ கால‌னிய ஆக்கிர‌மிப்பாள‌ரருக்கு எதிராக‌ போரிட்டு ம‌டிந்தான். 31 அக்டோப‌ர் 1803 அன்று, ஒட்டிசுட்டானில் ந‌ட‌ந்த‌ போரில், ட‌ச்சு ப‌டைத் த‌ள‌ப‌தி ஃபொன் டிரிபேர்க்கினால் (Von Drieberg) தோற்க‌டிக்க‌ப் ப‌ட்டான்.

அப்போது இல‌ங்கையில் ஆங்கிலேய‌ கால‌னிய‌ ஆட்சி ஆர‌ம்ப‌மாகி விட்டிருந்த‌து. ட‌ச்சு கால‌னியவாதிக‌ளுட‌னான‌ போரில், இல‌ங்கையை ஆங்கிலேய‌ர் கைப்ப‌ற்றி விட்டிருந்த‌ன‌ர். இருப்பினும், ப‌ண்டார‌வ‌ன்னிய‌னுக்கு எதிரான‌ ப‌டை ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்டிருந்த‌ லெப்டின‌ன்ட் ஃபொன் டிரிபேர்க், ஆங்கிலேய‌ருட‌ன் ஒத்துழைத்திருந்தான்.

பண்டாரவன்னியனை தோற்கடித்த தளபதியின் பெயரில் ஒரு (கிறிஸ்தவ) தனியார் பாடசாலையும் உருவானது. டிறிபேர்க் கல்லூரி என்ற அந்தப் பாடசாலை இன்றைக்கும் சாவகச்சேரியில் உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக இயங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அதன் பெயர் மாற்றப் படவில்லை. இன்றைக்கும் டிறிபேர்க் கல்லூரி என்ற பெயரில் தான் இயங்குகின்றது.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னும், அவ‌ன‌து ப‌டையில் இருந்த‌ பெரும்பாலான‌ வீர‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான். ஆனால், சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளும் இருந்த‌ன‌ர். அதில் எந்த அதிசயமும் இல்லை. வன்னி குறுநில மன்னர்கள், கண்டி ராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தி ஆண்டு வந்தனர். அத்துடன் அந்தக் காலத்தில் தேசிய இராணுவ அமைப்பு இருக்கவில்லை. மன்னர்களிடம் இருந்ததெல்லாம் கூலிப்படைகள் தான். அந்தக் கூலிப் படையில் பல வேறுபட்ட இனம், மதம், மொழிப் பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர்.

பண்டாரவன்னியன் "தூய தமிழன்" என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. த‌னிப்ப‌ட்ட‌ முறையில், ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் குடும்ப‌ம் சிங்க‌ள‌வ‌ருட‌ன் திருமண உறவுகளைப் பேணி வந்தது. பண்டைய அனுராதபுர நகரத்தில் பண்டாரவன்னியனின் சிங்கள உறவினர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் இந்திய வர்ணாச்சிரம விதிகள் இலங்கையிலும் பின்பற்றப் பட்டு வந்தன. அரச வம்சத்தினர் எப்போதும் சத்திரியர்களாக இருக்க வேண்டுமென்ற விதி இருந்தது. பேசும் மொழியை விட, பிறப்பால் வந்த சாதி முக்கியமாகக் கருதப் பட்ட காலம் அது.

19ம் நூற்றாண்டு வரையிலுமான இலங்கையில் சிங்க‌ளவ‌ர், த‌மிழ‌ர் என்ற‌ இன‌ வேற்றுமை உண‌ர்வு யாரிடமும் இருக்க‌வில்லை. அது பிற்கால‌த்தில் ஆங்கிலேய‌ரால் திணிக்க‌ப் ப‌ட்ட‌து. கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்றும் நோக்கில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாடு தூண்டி விடப் பட்டது. கண்டி ராஜ்ஜியம் வீழ்ந்தமைக்கு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு காரணம்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றே வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது. அவன் எந்தக் காலத்திலும் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கவில்லை. தேசியவாதம் என்ற கருத்தியல் அன்று யாருடைய மனதிலும் இருக்கவில்லை. பண்டார வன்னியன், இலங்கையை ஆக்கிரமிக்கத் துடித்த ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் போரிட்டான்.

இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளையும் எதிரிக‌ளாக‌க் க‌ருதுகின்ற‌ன‌ர். அத்துடன் அவர்கள் தீவிரமான ஏகாதிப‌த்திய‌ விசுவாசிக‌ள். இந்த‌க் கால‌த்தில், சில‌நேர‌ம் இட‌துசாரிக‌ள் ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பு ப‌ற்றிப் பேசினாலும், ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் காதைப் பொத்திக் கொண்டு ஓடுவார்க‌ள். 

அதாவ‌து, ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் யாரை எதிரிகளாகக் கருதி போரிட்டானோ, அவர்களது நண்பர்கள் நண்பர்கள் தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள்!பண்டார வன்னியன் இன்றிருந்தால், "ஒத்தோடிகளான" தமிழ்த் தேசியர்களை துரோகிகள் என்று தூற்றி இருப்பான்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள், ஆகிய‌ இர‌ண்டு த‌ர‌ப்பின‌ர‌தும் அர‌சிய‌ல் கொள்கைக‌ள் முற்றிலும் வேறுப‌ட்ட‌வை. ப‌கை முர‌ண்பாடு கொண்ட‌வை. எந்த‌க் கால‌த்திலும் ஒன்று சேர‌ முடியாத‌வை.

அப்ப‌டி இருக்கையில் இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌து ஒரு முர‌ண்ந‌கை. தேசிய‌வாதிக‌ள் த‌ம‌க்கு எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ ச‌ரித்திர‌ நாய‌க‌ர்க‌ளுக்கு சொந்த‌ம் கொண்டாடும் கேலிக்கூத்தை, இது போன்ற‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் அவ‌தானிக்க‌லாம்.