Saturday, January 28, 2012

மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை

மேற்கத்திய நகரங்களை ஆக்கிரமிக்கும் மக்கள் போராட்டம் தற்போது நெருக்கடியை சந்திக்கின்றது. போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இருந்த போதிலும், அரசு அடக்குமுறை வடிவங்கள் காரணமாக பின்னடைவை எதிர்நோக்குகின்றது. மேற்கத்திய நாடுகளில், மிகவும் நுணுக்கமாக அடக்குமுறை பிரயோகிக்கப் படுவதுண்டு. எதிர்காலத்தில் புரட்சி ஏற்படுவதை தடுப்பதற்காக, சில நேரம் அரசே இடதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொள்ளும். அமெரிக்காவில் அந்த அதிசயம் நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர்கள், தாங்கள் வரி கட்டப் போவதாக ஒபாமாவுக்கு கடிதம் எழுதிக் கேட்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியுடனான தொலைக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டு, "எம்மிடம் அதிக வரி அறவிடுங்கள்." என்று கெஞ்சுகின்றனர். முதன் முறையாக அமெரிக்க பணக்காரர்கள், தாங்கள் வரி கட்டுவதில்லை என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கின்றனர். அமெரிக்காவில் இதுவரை காலமும் "இடதுசாரிகளின் வெறுப்புப் பிரச்சாரமாக" கருதப்பட்ட விடயம், இவ்வாறு மக்கள் அரங்கில் நிரூபிக்கப் பட்டதாக நினைவில்லை. இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நியூ யோர்க் நகரில் முளைத்து, வெகு விரைவில் அமெரிக்க நகரங்கள் எங்கினும் கிளை விட்ட "Occupy " எனும் இயக்கம் தான் காரணம். "ஆக்கிரமித்தல்" எனும் பொருள் படும் Occupy இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது?

உலகிற்கே ஜனநாயகத்தை போதித்த நாடு என்று, அமெரிக்கா பீற்றிக் கொண்டாலும், அங்கே ஜனநாயகத்திற்கும் எல்லை வகுக்கப் பட்டுள்ளது. மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். அத்துடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது. Occupy இயக்கம் அதற்கு மாறாக, மக்களே நேரடியாக பங்கேற்கும் ஜனநாயகத்தை கோரி நிற்கின்றது. இதுவரை காலமும், பலவீனமாகவிருந்த இடதுசாரி சக்திகளுக்கு, மக்களை அணிதிரட்டுவது ஒரு சவாலாக இருந்தது. மேற்கத்திய அரசுகளும், இடதுசாரிகளின் கோரிக்கைகளை அறிவிக்காமலே நடைமுறைப் படுத்தி வந்தது. வாழ்க்கை வசதிகள் உயர்ந்திருந்த காலத்தில், மக்களுக்கும் சோஷலிசத்தின் பால் ஈடுபாடு ஏற்படவில்லை. உண்மையிலேயே அரசு மக்களுக்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததா, அல்லது இடதுசாரி சக்திகளை அமுக்குவதற்கான தந்திரமா என்பது வேறு விடயம். என்ன இருந்தாலும், இன்றுள்ள மக்கள் பெருமளவு இடதுசாரிக் கருத்துகளால் ஈர்க்கப் படுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.

தொண்ணூறுகளின் மத்தியில், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்திருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் அந்த நெருக்கடியில் இருந்து தம்மை தற்காத்துக் கொண்டன. வளர்ச்சி அடைந்து வந்த தூர கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரமே அதிகளவு பாதிக்கப் பட்டது. அதற்கு மாறாக, 2008 ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, மேலைத்தேய நாடுகளை கடுமையாக பாதித்தது. உலகில் எந்த மூலையில் நெருக்கடி ஏற்பட்டாலும், சர்வதேச மூலதனமானது தனது தாயகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டது. இம்முறை, வங்கிகள் இந்த நெருக்கடியை தோற்றுவித்தன. வங்கிகளை காப்பாற்றுவதற்காக, அரசு மக்களின் வரிப் பணத்தை எடுத்து செலவிட்டது. இதனால், வேலையிழப்புகள் ஏற்பாட்டது மட்டுமல்ல, மக்களுக்கு வழங்கப் பட்ட சலுகைகளும் குறைக்கப் பட்டன. இதுவே ஒரு மூன்றாம் உலக நாடாக இருந்திருந்தால், கடவுள் மேல் பழியைப் போட்டு விட்டு அரசு தப்பியிருக்கும். மக்களின் மத நம்பிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில், மக்களும் பொருளாதார நலன்கள் குறித்து சிந்திக்கப் பழகி விட்டனர். அதனால், நெருக்கடிக்கு காரணமான அரசையும், முதலாளித்துவத்தையும் நேரடியாகவே விமர்சிக்கின்றனர். மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம், நகரங்களை ஆக்கிரமிக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவை பெருக்க காரணமாக அமைந்தது.

"பசித்த மனிதன், கோபமாக இருப்பான்." என்ற பழமொழிகேற்ப, மக்கள் உணவுக்காக வீதிக்கு வந்தும் போராட தயாராக இருப்பார்கள். அதனால் தான், அரசு உணவுப் பொருட்களுக்கு மானியங்களை அள்ளி வழங்கி வருகின்றது. மூன்றாம் உலக நாடுகளில், மத உணர்வு, இன உணர்வு என்பன, மக்களின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்தாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் மத்திய தர வர்க்கமும், தன்னை சிறந்த மத/இன உணர்வாளர்களாக காட்டிக் கொள்ளும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இது போன்ற கருத்துக்கள் அடக்கப் பட்டன. தேசியவாதத்தின் பெயரால் ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையும், அதைத் தொடர்ந்து கோடிக் கணக்கான மக்களை காவு கொண்ட யுத்தமும், மக்கள் மனதை விட்டு அகலவில்லை. அதனால், இன உணர்வு என்றால் தள்ளிச் செல்லும் மேலைத்தேய மக்களிடம், அது போன்ற கருத்துக்கள் எடுபடப் போவதில்லை.

இருப்பினும், Occupy இயக்கத்தின் மீதான அரச அடக்குமுறையானது, எதிர்காலத்தில் இரண்டு வகையான அரசியல் சக்திகளை பலப்படுத்தும். "மக்களுக்கு உணவு மட்டும் முக்கியமில்லை. மதம், இன உணர்வு என்பனவும் முக்கியம்." என்று கூறி வரும் தீவிர வலதுசாரி பாஸிச சக்திகளை, சில நேரம் அரசே ஊக்குவிக்கலாம். அதற்கு எதிராக, தீவிர இடதுசாரிகளும் நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால், Occupy இயக்கத்தை தோற்றுவித்த இடதுசாரிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்குள் இறங்கி சீரழியலாம். ஏனெனில், "மக்கள் போராடுவார்கள், மக்கள் தீர்மானிப்பார்கள்." என்று அரசியல் மயப் படுத்தப் படாத மக்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். முதலாளித்துவ அரசும், ஊடகங்களும் இருக்கும் வரையில் மக்களை சிந்திக்க விட மாட்டார்கள்.


Occupy இயக்கத்தை ஒடுக்கியதில் ஊடகங்களின் பங்கு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. ஆரம்பத்தில், மேற்கத்திய நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப் பட்டன. நாட்கள், வாரங்களாகியும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால், மக்களின் ஆதரவும் பெருகியதால், வேறு வழியின்றி ஊடகங்கள் கவனத்தை திருப்பியிருந்தன. அப்போதும், அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, பொலிஸ் வன்முறை கொண்டு ஒடுக்கியதை அறிவிக்கவில்லை. பங்குச் சந்தை தரகர்களும், பெரு நிறுவனங்களின் முதலாளிகளும், "மனித உரிமைகளை மதிப்பதாக" பாசாங்கு செய்வதற்காக எதிர்ப்பாளர்களை பொறுத்துக் கொண்டார்கள். நாள் செல்லச் செல்ல அவர்களது பொறுமையும் எல்லை கடந்து விட்டது. அடக்குமுறை பிரயோகித்து போராட்டத்தை முறியடிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர். கவனிக்கவும், இதே முதலாளிகள் தான், தங்களிடம் அதிக வரி அறவிடுமாறு ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்தனர். முதலாளிகள் மனம் திருந்தவில்லை. நேரத்திற்கு ஏற்றவாறு நெகிழ்ச்சிப் போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

அமெரிக்காவில், எதிர்காலத்தில் இது போன்ற போராட்டங்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய அரசு சாரா அமைப்பிற்கு, பெரும் தனவந்தர்கள் புரவலர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. அதே போன்று, இலாப நோக்கை குறிக்கோளாக கொண்டு நடத்தப் படும் ஊடகங்களும், Occupy இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எப்போதும் சாமானியரின் உணர்வுகளோடு விளையாடும் ஊடகங்கள், இம்முறையும் எதிர்மறையான செய்திகளை பரப்பின. இந்தச் செய்திகள், Occupy ஆதரவாளர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தன. நகர மத்தியில், Occupy போராட்டம் நடைபெற்ற இடங்களில், கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. போராட்டக் காரர்கள் தங்குவதற்காக, நண்பர்களுடன் அரசியல் விவாதங்கள் நடத்தும் நோக்குடன் அமைக்கப் பட்ட கூடாரங்கள்.

கறையான் புற்றெடுக்க பாம்பு நுழைந்தது போல, பல சமூக விரோதிகளும் கூடாரங்களுக்குள் தங்குவதாக செய்தி பரப்பப் பட்டது. அந்த இடத்தில், குடிகாரர்களும், திருடர்களும் நடமாடுவதாகவும், பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறப் பட்டது. இதனால் தமது பாதுகாப்பு கருதி பல பெண்கள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கினார்கள். இதை விட, வீடற்றவர்கள், உல்லாசப்பிரயாணிகள் போன்ற போராட்டத்திற்கு சம்பந்தமற்ற நபர்களும், இலவசமாக கிடைக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்கின்றனர். நகரின் மத்தியில் இலவசமாக தங்குமிடமும், இலவச உணவும் கிடைக்கிறது. எல்லாம் Occupy இயக்கத்தின் புண்ணியத்தால் கிடைக்கின்றன. சுருங்கக் கூறின், "Occupy ஆர்வலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும், ஆனால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறுவதை மட்டுமே எதிர்ப்பதாகவும்" ஊடகங்கள் நீலிக் கண்ணீர் வடித்தன.

எகிப்தில், லிபியாவில், சிரியாவில் Occupy ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போதெல்லாம், ஊடகங்கள் இதுபோன்ற தகவல்களை பரப்பவில்லை. அதற்கும் முதல், பெல்கிரேட் (செர்பியா), கியெவ் (உக்ரைன்), திபிலிசி (ஜோர்ஜியா) போன்ற நகரங்களிலும் இதே மாதிரி கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு, "சோரோஸ் பவுண்டேஷன்" போன்ற அமெரிக்க கோடீஸ்வரர்களின் அமைப்புகள் நிதி வழங்கின. அந்த ஆர்ப்பாட்டங்களை எல்லாம், "நீதிக்கான மக்கள் எழுச்சி", "ஜனநாயகப் புரட்சி" என்று வர்ணித்தார்கள். இந்த நகரங்களில் நடந்த போராட்டங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி விட்டிருந்ததாக, எப்போதாவது கேள்விப் பட்டிருப்போமா? ஊடகங்களில் அவ்வாறான செய்தி வந்திருக்குமா? "எமது அரசியல் நண்பர்கள் செய்வதெல்லாம் புரட்சி, எமது அரசியல் எதிரிகள் செய்வதெல்லாம் சமூக விரோதச் செயல்." என்பது தான் மேற்கத்திய ஊடகங்களின் தாரக மந்திரமாக இருந்து வருகின்றது.

Tuesday, January 24, 2012

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


"பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது" என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், "சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது." என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள "பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி" அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது. இனவாத அமைப்புகளின் சுயரூபம் வெளிப்படும் தருணம் ஒன்றுண்டு. ஒரு நாட்டில், என்றைக்கு வர்க்கப் பிரச்சினை மேலெழுந்து வருகின்றதோ, அன்றைக்கு அனைத்து இனவாதிகளும் ஒரே அணியில் சேர்ந்து நிற்பார்கள். இதுவரை காலமும், ஜென்ம விரோதிகளாக பாவனை செய்து வந்த சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும், இன்று ஒரே நோக்கத்துடன் செயற்பட்டு வருவதைக் கண்கூடாகக் காணலாம். வர்க்கப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதை மறுப்பது மட்டுமல்ல, அதனை அடக்குவதிலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான எதிரி இடதுசாரிகள் என்பதால், அவர்கள் சிறிலங்கா அரசின் இருப்பை காப்பாற்றுவதற்காக பாடுபடுவார்கள். எந்தவொரு தமிழ் இனவாதிக்கும், சிறிலங்கா அரசை கவிழ்க்கும் எண்ணம் அறவே கிடையாது. இதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிசம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் லலித், குகன் என்ற இரண்டு சமூக ஆர்வலர்கள் காணாமல் போனார்கள். லலித் சிங்கள இனத்தையும், குகன் தமிழ் இனத்தையும் சேர்ந்தவர்கள். போர் நடந்த காலத்தில் காணாமல்போன மக்களை மீட்டுத் தருமாறு, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லலித், குகன் ஆகியோர் அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள். கானாமல்போனோருக்காக போராடியவர்கள் காணாமல் போகும் அதிசயம் இலங்கையில் மட்டுமே நடக்கின்றது. யாழ் குடாநாடு சிறிலங்கா படையினரின் இரும்புப் பிடிக்குள் இருக்கிறது. இராணுவ அதிகாரத்தை மீறி, ஈ,எறும்பு கூட நுழைய முடியாது. அவ்வாறான இடத்தில் காணாமல் போனவர்களை மாதக் கணக்காக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அதற்கு இராணுவமே பொறுப்பு. அந்த ஆர்வலர்கள் இருவரும் காணாமல் போகவில்லை. கடத்தப் பட்டுள்ளனர், என்றே மக்கள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப் பட்டது.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, சமாதானம் நிலவுவதாக, அரசு கூறி வரும் வேளையில், நிராயுதபாணிகளான இரண்டு ஆர்வலர்கள் கடத்தப் பட வேண்டிய காரணம் என்ன? அரசு இப்போது யாரைக் கண்டு அஞ்சுகின்றது? வைகோ அறிவித்தது போன்று, "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" ஆரம்பமாகி விட்டதா? காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் காட்டி வரும் அலட்சியப் போக்கு, அந்த சாத்தியப் பாட்டை நிராகரிக்கின்றது. மேலும் "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" என்பது, தமிழ் உணர்வாளர்களை கிளர்ச்சியடைய வைத்து ஆதாயம் தேடும் மலின அரசியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். போரின் இறுதிக் கட்டத்தில், காங்கிரஸ் அரசு சற்றே இறங்கி வந்ததாக நோர்வே கூறுகின்றது. அந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுடன் பேச வேண்டாமென்றும், அப்போது நடந்த பொதுத் தேர்தலில் பாஜக வெல்லும் வாய்ப்பு இருக்கிறதென்றும், வைகோ தூது அனுப்பினார். வைகோவின் ஆலோசனைக்கு செவி மடுத்த புலித் தலைவர்கள், இறுதி வரை இந்திய அரசின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின் போது, "பிரபாகரன் ஆகிய புலித் தலைவர்களை தப்ப விடாமல் தடுத்து பலி கொடுத்த," வைகோவின் துரோகம் குறித்து தமிழ் உணர்வாளர்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால், பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயின் அறிக்கை அதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. "ஐந்தாம் கட்ட ஈழப்போர்" பற்றிய வைகோவின் அறிவிப்பு, அவர் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடும் முயற்சியே தவிர வேறில்லை. ஆகவே, வட இலங்கையில், தமிழ் தேசியம் தவிர, வேறொரு சக்தி, சிறிலங்கா அரசை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி எது? எதற்காக தமிழ் ஊடகங்கள் அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிக்கின்றன?

"வட பகுதி மக்கள், நீண்ட காலமாக இடதுசாரி அரசியலை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டாதவர்கள். தமிழரின் உரிமைப் போராட்டத்தை, வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்க விரும்புகிறோம்." - ஜேவிபி யில் இருந்து பிரிந்த மத்திய குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண, சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போது தெரிவித்தார். "இலங்கையில் வர்க்கப் போராட்டம் சாத்தியமேயில்லை, தமிழர்களுக்கு தேசிய விடுதலை தவிர வேறெந்த அரசியல் குறித்தும் அக்கறை அற்றவர்கள்." தமிழ் தேசியவாதிகளைக் கேட்டால் அப்படித் தான் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் கொள்கை சிறந்தது என்று கூறுவதில் தவறில்லை. ஆனால், மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் புறக்கணிப்பது ஆபத்தானது. தமிழ் தேசிய உணர்வை விட, தமிழ் மக்களின் வர்க்கப் பிரச்சினை, புலிகளின் முப்பதாண்டு கால ஈழப்போருக்கு உறுதுணையாக இருந்தது. வசதி படைத்தோர் அதிகமாக வாழும் யாழ் மாவட்டத்தை விட, பொருளாதாரத்தால் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் தான் பெருமளவில் போராளிகளானார்கள். வசதி படைத்த மக்கள், வெளிநாடுகளுக்கு சென்று, யுத்த செலவுகளுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பின்னர், வெளிநாட்டு பணவரவும் நின்று விட்டது. புலிகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், ஒன்றில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள், அல்லது இராணுவ புலனாய்வுத் துறையில் பணியாற்றுகின்றனர். உண்மையில், அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள், ஆயிரக் கணக்கான சாதாரண போராளிகள் தான். இராணுவத்திடம் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், வேலை வாய்ப்பின்றி கஷ்டப் பட்டார்கள். அவர்கள் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால், பெற்றோராலும் உதவி செய்ய முடியாத நிலைமை.

புலிகள் அமைப்பும் அழிந்து விட்ட பிறகு, புலம்பெயர்ந்த தமிழ் சகோதரர்களால் கைவிடப் பட்ட நிலையில், முன்னாள் போராளிகளின் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசு, மேற்குலக நிதியில் நடக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சில காலம் வைத்திருந்து, ஏதாவது தொழிற்பயிற்சியை கற்பித்து விட்டு விடுவித்து விடுகின்றது. சிறு தொகையினருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும், அரசாங்க வேலைகளும் வழங்கப் பட்டன. பெரும்பான்மையான முன்னாள் போராளிகள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முன்னாள் போராளிகளில் சிலர் அரச இராணுவத்தின் வீரர்களாக சேர்ந்துள்ளனர். ஆனால், ஒரு காலத்தில் எதிரியாக கருதி போரிட்ட சிறிலங்கா இராணுவத்தில் எல்லோரும் போய்ச் சேர மாட்டார்கள். சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான அடக்குமுறை காரணமாக, தாமாகவே புலிகள் அமைப்பில் சேர்ந்த போராளிகள் பலருள்ளனர். அவர்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் கோர முகத்தையும், அதன் அடக்குமுறைக் கருவியான இராணுவத்தையும் மிகச் சரியாக இனங் கண்டவர்கள்.

ஒரு காலத்தில், இலங்கை முழுவதும் ஒரே அரசியல் கட்சிகள் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தின. தமிழ்க் காங்கிரஸ் என்ற பிராந்தியக் கட்சி தோன்றிய காலத்திலும், அது "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்" என்று தான் பெயரிட்டுக் கொண்டது. தமிழீழத் தமிழர்கள் என்பதை விட, அகில இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொண்டது. பிற்காலத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்திய தமிழரசுக் கட்சியின் தோற்றமும், அவர்களின் தமிழீழ கோரிக்கையும் ஈழப்போர் வரை செல்வாக்கு செலுத்தியது. கடந்த முப்பதாண்டு காலமாக, இடதுசாரிக் கட்சிகளை ஓரங் கட்டுவதிலே தான், தமிழ் தேசியக் கட்சிகள் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கூறிய காரணம், "தமிழ் தேசியக் கோட்பாடு புனிதமானது, அதற்கு இடதுசாரிகள் உடன்படுகிறார்கள் இல்லை." என்பது தான். "தமிழீழம் சாத்தியமா? இல்லையா?" என்பது குறித்து, யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டங்களில் இடதுசாரிகளுடன் விவாதங்கள் நடந்தன. இதற்கிடையில், தெற்கில் ரோகன விஜேவீர தலைமையில் குட்டி-பூர்ஷுவா இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர். அவர்களது மார்க்சியமும்- சிங்கள தேசியவாதமும் கலந்த புதிய இயக்கமான ஜேவிபியில் தமிழ் மக்களுக்கு இடம் இருக்கவில்லை. தோல்வியுற்ற 1971 கிளர்ச்சியின் பின்னர், ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற சிலர் தமிழர் உரிமைப் பிரச்சினை குறித்து கவனம் எடுத்தனர். அவ்வாறு சென்றவர்களில் லயனல் போபகே போன்ற சிலரைக் குறிப்பிடலாம்.

1988 -1989 காலத்திய, ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர், மேலும் சிலர் பிரிந்து சென்றனர். சுனந்த தேசப்பிரிய போன்ற ஊடகவியலாளர்கள் அத்தகையோரில் முக்கியமானவர்கள். லயனல் போபகே, சுனந்த தேசப்பிரிய போன்றோர், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு சிறிலங்கா அரசையும், ஜேவிபி யையும் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த ஜேவிபி, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, இனவாத அரசியல் பேசி வந்தது. மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றிய நாளில் இருந்து, ஜேவிபியின் தனித்துவமான இனவாத கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார். அதனால், ஜேவிபிக்கு ஆதரவளித்த இனவாத சிங்கள வாக்காளர்கள், ராஜபக்ச பக்கம் திரும்பி விட்டனர். விமல் வீரவன்ச தலைமையில் ஒரு குழு, ஜேவிபி யில் இருந்து பிரிந்து சென்று ஆளும் கட்சியுடன் இணைந்தது. அதற்கும் ராஜபக்சவின் சாணக்கியம் (சூழ்ச்சி) காரணம் என்று நம்பப் படுகின்றது. ஒரு காலத்தில், மூன்றாவது அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஜேவிபி, இன்று மிகவும் பலவீனமடைந்து காணப் படுகின்றது. அந்த நிலையில், அண்மையில் மேலும் ஒரு பிளவு. இந்த முறை கட்சி இரண்டாக உடைந்தது. மத்திய குழு உறுப்பினர்கள் இரண்டு பக்கமும் சம அளவில் பிரிந்து சென்றனர்.

நீண்ட காலமாக, ஜேவிபியின் வெளிநாட்டு தொடர்பாளராகவும், நிதி சேகரிப்புக்கு பொறுப்பாகவும் செயற்பட்டவர் பிரேம்குமார் குணரத்தினம். புலிகள் இயக்கத்தின் ஆயுத, நிதி விநியோகத்தை நெறிப் படுத்திய கேபி போன்று, ஜேவிபிக்கு குணரத்தினம் இருந்தார். இவர் ஒரு மேற்கிலங்கைத் தமிழர். சிங்கள மொழியில் கல்வி கற்றதால், தமிழ் எழுதத் தெரியாது. ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் திருகோணமலையில் செயற்பட்ட நேரம், சில தமிழ் தேசிய போராளிகளுடனும் தொடர்பு வைத்திருந்தார். இதனால், வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்கும், குனரத்தினத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகப் படுகின்றது. அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், குணரத்தினம் பற்றிய விபரங்கள், ஜேவிபி யில் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை சொல்ல வேண்டும். ஜேவிபி, இரண்டு சமாந்தரமான அமைப்புகளாக செயற்படுகின்றது. ஒன்று, வெளிப்படையாக மக்கள் மத்தியில் வேலை செய்யும் உறுப்பினர்கள். இரண்டு, மத்திய குழு உறுப்பினர்களுக்கு கூட தெரியாமல் தலைமறைவாக இயங்கும் உறுப்பினர்கள். உண்மையில், தலைமறைவு உறுப்பினர்கள் தான் இயக்கத்தின் அச்சாணியாக விளங்குகின்றனர். 1971 ல் ஒரு தடவை, 1989 ல் மறு தடவை, ஜேவிபி இயக்கம் அரச படைகளினால் அழிக்கப் பட்டது. அப்போது அரச ஒடுக்குமுறைக்கு தப்பிப் பிழைத்த உறுப்பினர்களை ஒன்று சேர்ந்தது, இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பினார்கள்.

குணரத்தினம் தலைமையில் இரகசியமாக இயங்கிய அமைப்பினால் தான், மிகக் குறுகிய காலத்தினுள் அந்த சாதனையை நிறைவேற்றினார்கள். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த குணரத்தினம், சில வருடங்களுக்கு முன்னர், சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், தாயகம் திரும்பினார். அவரது விஜயம் இரகசியமாக வைக்கப் பட்டிருந்த போதிலும், அரசு எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. குணரட்ணத்தின் அண்மைய புகைப்படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கிடையே, கிழக்கிலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள், அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, கருணா குழுவினர் பிரிந்திருந்த நேரம் அது. பிரபாகரன் தலைமையிலான புலிகளினால், கருணாவின் கிளர்ச்சி ஒடுக்கப் பட்டது. இதனால் அரசியல் வாழ்வை விட்டு ஒதுங்கிய கருணா ஆதரவுப் போராளிகள், பணத் தேவைக்காக தம்மிடமிருந்த இயந்திரத் துப்பாக்கிகளை விற்று விட்டனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை வாங்குவதில், ஜேவிபி ஆர்வம் காட்டியுள்ளது. இந்தச் செய்தி காதுக்கெட்டியவுடன், அரச மட்டத்தில் கலக்கம் ஏற்பட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைந்து, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் ஜேவிபிக்கு ஆயுதங்கள் எதற்கு? எதிர்காலத்தில் அரசை கவிழ்ப்பதற்காக, இரகசியமாக திட்டம் தீட்டுகிறார்களா?

(இன்னும் வரும்)



மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group

Sunday, January 22, 2012

லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்


மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு, உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை, பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.
அரசியல் செயற்பாட்டாளரும் தொழில்சங்கவாதியுமான பி.எ.காதர் அவர்களுடனான திறந்த அரசியல் உரையாடலும் இம்முறை எழுத்தாளர்களான கலையரசன், றஷ்மி ஆகியோரின் இரு நூல்கள் பற்றிய அறிமுகமும் கருத்துரையும் நடைபெற உள்ளது.

காலம்-29-01-2012 – 11.30am -06pm

இடம்:
South Ruislip Methodist Church Hall,
Queens Walk, Ruislip HA4 0NL


கலையரசன், சுசீந்திரன் (ஜெர்மன்), நிர்மலா இராஜசிங்கம், சிவகுமார்(சரிநிகர்), சந்தூஸ் பரராஜசிங்கம், வேலு, றஷ்மி, பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும். உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்.
தயவு செய்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.


தொடர்புகளுக்கு- email – eathuvarai@gmail.com

tel – 078 17 262980,075 33 087523,074 35 703902


மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.

நன்றி

Saturday, January 21, 2012

தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்ற கட்டுரைத் தொடரில், இந்துக்கள் (ஆரியர்கள்) மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி இனத்தவர்கள் என்று பல விளக்கங்களுடன் எழுதி இருந்தேன். (இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!) அப்போது எனது கட்டுரைகளை நிராகரித்த நண்பர்கள், இந்த ஆவணப் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள், ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறிவர்கள் என்பதையும், முன்னர் ஒரு தடவை ஆப்பிரிக்கா தொடர்பான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். (ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்) தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டு மகிழும் தமிழினவாதிகள், எந்தவொரு ஆப்பிரிக்க மொழியுடனும் ஒப்பிட நினைத்துக் கூட பார்ப்பதில்லை. தமிழரின் ஆப்பிரிக்க தொடர்பை கண்டுகொள்ளாமல், "முன் தோன்றிய மூத்த குடி" என்று பெருமை பேசுவதால் பயனென்ன விளைந்திடப் போகின்றது? தமிழர்களின் ஆப்பிரிக்க பூர்வீகம் குறித்து ஆராய்வதற்கு, எந்தவொரு தமிழ் அறிஞரும் முன்வராதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த நிலைமை இனி வருங்காலத்தில் மாற வேண்டும். "நாம் தமிழ் பேசும் ஆப்பிரிக்க இனத்தவர்கள்" என்று பெருமையாக பேசிடும் காலம் வர வேண்டும்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.


இந்துக்களின் புனித நூலான ரிக்வேதம், அமிர்தம் என்று குறிப்பிடும் சோம பானம், இன்றும் ஆப்கானிஸ்தானில் கிடைக்கிறது! சோம பானம் தயாரிக்க பயன்படும் சோமா செடி, ஆப்கானிஸ்தானில் மட்டுமே வளர்கின்றது. வட இந்திய "இந்துக்களும்", ஆப்கானிய "முஸ்லிம்களும்" அடிப்படையில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் உள்ளன. மொழியல் ஆய்வின் பிரகாரம், சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களும், ஐரோப்பியரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். சமஸ்கிருதம், கிரேக்கம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான சொற்கள் அதனை நிரூபிக்கின்றன. உதாரணத்திற்கு, சமஸ்கிருதத்தில் குதிரையை குறிக்கும் "அஸ்வா" என்ற சொல், லிதுவேனியா மொழியிலும் ஒன்றாக உள்ளது.

துருக்மெனிஸ்தான், காரகோரம் பாலைவனத்தில் இந்து ஆரியர்களின் நாகரீகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த மன்னரின் புதைகுழி பல தகவல்களை வழங்குகின்றது. இந்தியாவில், சிந்து வெளி நாகரிக காலத்தில் குதிரைகளின் பாவனை அறியப் படவில்லை. வந்தேறுகுடிகளான ஆரியராலேயே அவை அறிமுகப் படுத்தப் பட்டன. துருக்மேநிச்தானில் மன்னரின் புதைகுழியில் குதிரையின் எலும்புக்கூடும், ரிக் வேதம் விபரிப்பது போன்ற ரதங்களும் கண்டெடுக்கப் பட்டன. சோம பானம் தயாரிக்க பயன்படுத்தும் இடமும் அங்கே காணப்படுகின்றது. இந்தியாவின் இந்து ஆரியர்கள், துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும் மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து ஈரானை நோக்கி நகர்ந்துள்ளனர். அங்கிருந்து வட இந்தியாவில் குடியேறி உள்ளனர்.





தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!

Wednesday, January 18, 2012

அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல்

(மெக்சிகோ, பகுதி : 3 )

கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர், நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது. ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.

மெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால் அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் "இழிந்த தொழிலை" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், "இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு" என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது. இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன...", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் "பாஞ்சோ வியா", வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். "நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் "சப்பாத்தா" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன். பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத "ராபின் ஹூட் வகையறாக்கள்" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, "புரட்சியை பாதுகாக்கும்" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன. கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு "கிரான்மா" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.

1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.

நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் "ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை தாங்குகிறார்..." என்பது போன்ற சர்ச்சை அது. இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், "நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக..." எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.

ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார். பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது. அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.

2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. "ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன், சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.

ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.) மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு. அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.


(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவு :
1 மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்
2 அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்

Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்

இந்தியாவில் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டுப் பிரதேசமான தண்டகாரண்யாவில், இந்த ஆவணப் படம் படமாக்கப் பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகக் குழுவினர், அடர்ந்த காட்டிற்குள் மாவோயிஸ்ட் போராளிகளின் முகாமில் நடக்கும் நிகழ்வுகளை படமாக்கியுள்ளனர்.

Monday, January 16, 2012

எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்



[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 3)

"ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்." (மகாவம்சம்)

துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. "எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்." என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள், துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும் நியாயம், "எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்" என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும் சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு "மதப் புரட்சி". நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள். இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில் வியப்பில்லை.

தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள்.
"பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ....... கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்." (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி)

இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் "தாய் நாடான" இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து நின்றிருக்குமா?
"தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது.....சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன." (சமணமும் தமிழும்)

ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா?
அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம்.

ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. "எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை..... அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்." (மகாவம்சம்)

எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது.
" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்." (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை. இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி. இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான்.

நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த - இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத பௌத்த - சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, "சிங்கள மன்னனான" துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா .... இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

எல்லாளன் - துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும். நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது.

சோழர்கள் "தமிழுணர்வு" கொண்டவர்கள் அல்ல, மாறாக "சைவ ஆகம மத உணர்வு" கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால் சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை! அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது.

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
2.துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!
1.மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

Saturday, January 14, 2012

தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்



அனைவருக்கும், சர்வதேச, சமதர்மப் பொங்கல் வாழ்த்துக்கள்!

மேற்கத்திய நாட்டு மக்கள் "கிறிஸ்துமஸ்" என்ற பெயரில் கொண்டாடும் பண்டிகையை, தமிழர்கள் தைப்பொங்கல் என்ற பெயரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்! பலருக்கு இதனை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்குக் காரணம், "உலகத்தில், தமிழர்கள் மட்டுமே தைப் பொங்கல் கொண்டாடுகின்றனர்." என்று தமிழ் மக்கள் நம்ப வைக்கப் பட்டுள்ளனர்.

உலகத்தில் தமிழர்கள் மட்டுமே வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் "அறிவுஜீவிகள்", இன்றைக்கும் அவ்வாறு தான் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், "தைப்பொங்கல் தினத்தை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமா?" என்று, நமது தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். உழவர் திருநாளான பொங்கலும், புது வருடப் பிறப்பும் ஒரே காலத்தில் வருகின்றது. இரண்டுமே சரி தான். அதே நேரம், பண்டிகையின் வேறு சில கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

பண்டைய தமிழர்களைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல், புது வருடம் என்பதற்கு அப்பால்,அந்த தினம் வேறு காரணங்களிற்காக முக்கியத்துவம் பெறுகின்றது.
சாதி, மத, வர்க்கங்களைக் கடந்த ஒரேயொரு சமத்துவமான பண்டிகை நாள் பொங்கல் மட்டுமே. பொங்கல் கொண்டாடுவது, தமிழர்களுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு அல்ல. உலகின் பண்டைய நாகரீகங்களுக்குப் பொதுவான தினம் அது. பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே விசேஷமான பண்டிகை அல்ல, பல உலக இனங்களுக்குப் பொதுவானது. 

பிற்காலத்தில் தோன்றிய மதங்கள், அதன் முக்கியத்துவத்தை மறைத்து விட்டன. மேற்குலகில் கிறிஸ்தவ மதமும், இந்தியாவில் இந்து மதமும் அந்த மாபெரும் இருட்டடிப்பு வேலையை நிறைவேற்றின. தமிழகத்தில் நீண்ட காலமாக "இந்து எதிர்ப்பு போர்" நடந்து வந்ததால், இந்து மதம் மிகவும் தாமதமாகத் தான் அதனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டியது. அதனால் தான், பண்டைய தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.

பொங்கல் எதற்காகக் கொண்டாடப் படுகின்றது? விவசாயிகள் தமது வயலில் விளைந்த தானியத்தை, பானையில் இட்டுப் பொங்கி சூரியக் கடவுளுக்கு படைப்பார்கள். (அரிசி உணவு சீனர்களால் அறிமுகப் படுத்தப் பட்டது. அதனால், பண்டைய தமிழர்கள் அரிசியைத் தவிர வேறு தானியங்களில் பொங்கல் செய்திருப்பார்கள்.) அமெரிக்க கண்டத்தில் வாழும் செவ்விந்தியர்கள், அறுவடை செய்த சோளத்தை கடவுளுக்கு படைக்கும் பண்டிகை ஒன்றைக் கொண்டாடுகின்றனர்.

பழந் தமிழர்கள் பொங்கலுக்கு முதல் நாள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து வந்து,ஊரில் உள்ள பொது இடத்தில் போட்டு எரித்தார்கள்.(Bonfire) இந்தப் பழக்கம், பாபிலோன், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப் பட்டது. அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் சென்றிருந்த வேளை, ஈஸ்டர் தினத்தன்று கிராமங்களில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கேயும், கிராம மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு வந்து போட்டு, ஊர் கூடி எரிப்பார்கள்.

உலகின் பிற இனங்களும் விவசாய சமூகங்களாக இருந்துள்ளன, இருந்து வருகின்றன. பிற இனங்ககளைச் சேர்ந்த விவசாயிகளும், அறுவடை நாள் என்று ஒன்றைக் கொண்டாடும் சாத்தியக்கூறுகள் உண்டல்லவா? தமிழ்ப் பெருமை பேசுவோர், மதங்களுக்கு அப்பாற்பட்ட உலகை கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. அதனால் தான், "கிறிஸ்தவ" ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த, "பொங்கல் பண்டிகைகள்" அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. கிறிஸ்துமஸ் தினத்திற்கும், தைப் பொங்கலுக்கும் என்ன தொடர்பு? அதற்கு கிறிஸ்தவத்திற்கு முந்திய ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை சற்று அறிந்து கொள்ள வேண்டும்.

வட ஐரோப்பிய பகுதிகளில், அதாவது ஸ்கண்டிநேவிய நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம், "யூல்" (அல்லது யூலே) என்று அழைக்கப் படுகின்றது. இங்கிலாந்தில், சில இடங்களில் யூல் பண்டிகை கிறிஸ்துமஸ் தினத்தை விட்டு தனியாக கொண்டாடப் படுகின்றது. ஸ்கண்டிநேவிய பாரம்பரியத்தின் படி, யூல் பண்டிகை, விவசாயிகளின் அறுவடை நாளாகவே கொண்டாடப் படுகின்றது. ஆனால், அந்த நாடுகளில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைக்க முடியாது. அங்கெல்லாம், குளிர் காலத்தில் மாதம் முழுவதும் சூரியனைக் காண முடியாது.

டிசம்பர் 21 - ஜனவரி 21 வரையிலான நாட்கள், வருடத்திலேயே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் நாட்கள். அந்த நேரத்தில், சூரியனின் வரவுக்காக வேண்டி வழிபாடு நடத்தும் நோக்குடன், பண்டிகை கொண்டாடுவது உசிதமல்லவா? வட ஐரோப்பாவில், கோடை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பனிக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியது தான். பனிக்காலம் ஆரம்பமாகும் முன்னர், பயிரிட்ட உணவுப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து களஞ்சியப் படுத்தி வைத்திருப்பார்கள். யூல் பண்டிகையின் போது, அறுவடை செய்த பொருட்களை உண்டு, களித்து அனுபவிப்பார்கள். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் இறைச்சியும் அப்போது நுகரப்படும்.

ஒவ்வொரு வருடமும், டிசம்பர் 21 அன்று, சூரியன் இடம் மாறுகின்றது. (பூமியின் வட பகுதியில் டிசம்பர் 21 என்றால், தென் பகுதியில் டிசம்பர் 25 அளவில் அந்த மாற்றம் நடக்கலாம்.) ரஷ்யாவின் துருவப் பகுதியில், அல்லது நோர்வேயின் வட முனையில் வாழ்பவர்கள், சூரியன் இடம் மாறும் அதிசயத்தை கண்ணால் காணலாம். இந்தியாவில், இந்து மத நம்பிக்கையின் படி, "சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பதாக" கூறுகின்றனர். இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை, உலகின் பல பாகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

பண்டைய தமிழர்கள், அதனை தைப்பொங்கல் தினம் என்று அழைத்தனர். பெயர்கள் வேறாக இருந்த போதிலும், பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் ஒன்று தான். பொங்கல் பண்டிகையை புது வருடப் பிறப்பாக கருதினால் அதில் தவறெதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். குறிப்பாக, இஸ்லாத்திற்கு முந்திய ஈரானில், டிசம்பர் 25, யால்டா தினம் கொண்டாடப் பட்டது. யால்டாவில் இருந்து மருவியது தான் யூல். அது மித்ரா (மேஹ்ர்) கடவுளின் பிறந்த தினமாகவும் கொண்டாடப் பட்டது. பண்டைய ஈரானில் யால்டா ஒரு அறுவடை நாளாகவும், அதே நேரத்தில் புது வருடம் பிறப்பதாகவும் கருதப் பட்டது. "யால்டா" என்றால், பிறப்பு என்று அர்த்தம் வரும்.

ஐரோப்பியக் கண்டத்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க திருச்சபை, மக்கள் ஆதரவு பெற்ற வேற்று மத கொண்டாட்டங்களை உள்வாங்கிக் கொண்டது, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் எல்லாம் அவ்வாறு கிறிஸ்தவத்திற்கு மாற்றப் பட்ட பண்டிகைகள் தான். கிறிஸ்துமஸ், சூரிய ஒளி மிகக் குறைவாகக் கிடைக்கும் தினம். ஈஸ்டர், இரவும், பகலும் சரிசமமாக வரும் இளவேனில் காலத்தின் தொடக்கம். இந்தக் காரணங்களுக்காகத் தான், அந்தப் பண்டிகைகள் கொண்டாடப் பட்டனவே தவிர, அவற்றிற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இந்த இடத்தில் யாராவது "புத்திசாலித் தனமான" கேள்வி ஒன்றை எழுப்பலாம். கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வருகின்றது, ஆனால் பொங்கல் ஜனவரி 15 அல்லவா வருகின்றது?

சூரியனின் பருவகால மாற்றம், உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப் படுவதில்லை. ஜப்பானியர்கள், சீனர்கள், யூதர்கள், ஆப்பிரிக்காவில் டோகன் இனத்தவர்கள், என்று பலவிதமான மக்கள் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரியான பண்டிகையை கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25 அன்று தான் கிறிஸ்துமஸ் என்று, தீர்மானம் நிறைவேற்றியது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. கிரேக்க, ரஷ்ய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 ம் தேதி அன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் சூரியக் கலண்டரை அமுல் படுத்தியது. அதற்கு முன்னர், சந்திரக் கலண்டர் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பாவனையில் இருந்தது. அந்தக் கலண்டரின் படி, நாட்கள் மாறி மாறி வரும்.

சங்க காலத்தில் பொங்கல் பண்டிகை வேறு விதமாகக் கொண்டாடப் பட்டது. மார்கழி மாதம், பெண்கள் பாவை நோன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. திருமணமாகாத கன்னிப் பெண்கள், காலையில் எழுந்து நீராடி, ஒரு மாதம் விரதம் இருப்பார்கள். அதனால் இது "தை நீராடல்" என்றும் அழைக்கப் படுகின்றது. பொங்கல் பண்டிகையின் போது, அனைவரும் சாதி,மத வேறுபாடின்றி கலந்து கொள்வார்கள். அன்றைக்கு மட்டும் வர்க்க வேறுபாடுகளும் தளர்த்தப் படும். அதனால், பொங்கல் பண்டிகையை, பண்டைய தமிழரின் சமதர்மத் திருவிழா என்றும் அழைக்கலாம்.

இன்று பல வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கு, அரிவாளும், சுட்டியலும் சின்னத்தைக் கண்டாலே ஒவ்வாமை நோய் வந்து விடுகின்றது. எமது முன்னோர்கள், பொங்கல் தினத்தன்று, நெற் கதிர் அறுக்கும் அரிவாளுக்கும், நிலத்தைப் பண்படுத்தும் கலப்பைக்கும், சந்தனம் பூசி மரியாதை செலுத்துவார்கள். இராணுவ கலாச்சாரத்தை வளர்க்கும் பார்ப்பனீய ஆயுதபூஜையை விட, தமிழ் உழைக்கும் வர்க்கப் பொங்கல் திருநாள் பல மடங்கு சிறந்தது.

பண்டைய பாபிலோன், அல்லது ஈரானில், இது இன்னும் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அன்றைக்கு மட்டும், அடிமைகள் எஜமானர்கள் போன்று நடந்து கொள்ள அனுமதிக்கப் படுவர். எஜமானர்கள் அடிமைகளாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கும் சுதந்திரம் வழங்கப் படும். இது போன்ற நடைமுறையினால், நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து, குழப்பகரமான சூழ்நிலை நிலவுவது போன்று காணப்படும். பாபிலோனியரின், இறையியல் நம்பிக்கை அதிலிருந்து ஆரம்பமாகின்றது. அதாவது, பூமியில் ஆரம்பத்தில் குழப்பகரமான சூழ்நிலை இருந்ததாகவும், அதன் பிறகே அதிகாரம் நிலைநாட்டப் பட்டதாகவும் நம்புகிறார்கள். எது எப்படி இருப்பினும், அந்த சில நாட்களுக்காவது, எஜமானர்களும், அடிமைகளும் நண்பர்களாக நடந்து கொள்வது குறிப்பிடத் தக்கது. இந்த சமதர்மப் பண்டிகைக் கலாச்சாரம், ஒரு காலத்தில் ரோமாபுரி வரையில் பரவி இருந்தது.

பழந் தமிழரின் பெருமையை மீட்டெடுக்க வேண்டுமாயின், நாம் பொங்கல் பண்டிகையை, வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாளாக கொண்டாட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு:

1 Pongal History
2 List of harvest festivals
3 Yule festival
****************************************


பொங்கலுடன் தொடர்புடைய யால்டா தினம் பற்றிய கட்டுரை:

Thursday, January 12, 2012

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!

[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 2)

துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.

எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.
"ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்." ( சூளவம்சம். 22 )
அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.

"இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.
It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : www.tamilcanadian,com)

அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.

துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.

இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.

துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.

கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.

மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன.

மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல.

கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

Tuesday, January 10, 2012

நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு

சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:



முன்னுரை

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.

நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.

அன்புடன்,
கலையரசன்

Monday, January 09, 2012

மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. ("கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?" - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.

சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.

பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.

இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.

எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.

எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).

அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?


(தொடரும்)

Friday, January 06, 2012

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்

"கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள், சீனக் கடற்படையுடன் இராணுவ ஒத்திகையில் ஈடுபடுவதற்கு ஒப்பந்தங்கள் போடப் பட்டுள்ளன." இது போன்ற செய்தி, சர்வதேச அரங்கில் எந்தளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், சீனாவை சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகமும் அது போன்றது தான். நாங்கள் அமெரிக்காவையோ, சீனாவை ஆதரிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் சோவியத் யூனியனுடனான பனிப்போர் யாரால், எப்போது தொடங்கப்பட்டது என்பதை இன்று எல்லோரும் மறந்து விட்டனர். அன்று "சிவப்பு அபாயம்" குறித்து, மேற்குலக நாடுகளில் பிரச்சாரம் செய்யப் பட்டது. இன்று, "மஞ்சள் அபாயம்" பற்றிய அச்சவுணர்வு மக்கள் மனதில் விதைக்கப் படுகின்றது. முன்னரைப் போலவே, இரண்டு அணுவாயுத வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சில இராஜதந்திர சந்திப்புகள், ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அந்த நேரம், அனைத்து ஊடகங்களும், லிபியா, சிரியா என்று மத்திய கிழக்குப் பக்கமே தமது பார்வையை செலுத்தி இருந்தன. புதிய பனிப்போரின் வரவை கட்டியம் கூறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, அந்த சந்திப்புகளை விரிவாகப் பார்ப்போம்.

நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.

சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.

வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.

யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது.


---------------------------------------------
அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:
திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்