Monday, September 04, 2023

முல்லா வேலனின் "சாதியமும் தேசியமும்" பிரார்த்தனைக் கூட்டம்

 

கிளப் ஹவுசில் முல்லா வேலன் (தோழர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தாது. அவர் ஒன்றில் Dogmatist அல்லது Fundamentalist.) தலைமையில் சாதியமும் தேசியமும் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேசினார்கள். வழமை போல இனவாத- பாஸிஸத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பேச அழைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் சிலர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் நியாயமாகப் பேசினார்கள். அதை முதலில் பாராட்ட வேண்டும்.

அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வந்ததாவது, அருண் சித்தார்த் தான் இவர்களை இந்தளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அதாவது, இவர்கள் பல வருட காலமாக அருண் சித்தார்த் மீது "கஞ்சா வியாபாரி, அரச கைக்கூலி" போன்ற பல்வேறு வகையான அவதூறுகள் செய்து, குற்றச்சாட்டுகள் சுமத்தி புறக்கணித்து வந்துள்ளனர். அருண் சித்தார்த்தை ஓரம் கட்டலாம் என நினைத்து மாறாக அவனை வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதை அங்கு உரையாற்றிய பலர் எதிரொலித்தனர்.

இது தொடர்பாக பாரதி எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. "அருண் சித்தார்த் ஒரு முக்கியமில்லாத, சாதாரண நபர் என்றால் எதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை அவனைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்றார். அதையே செண்பகம் பறவை (முன்பு இசைவேந்தன் என்ற பெயரில் இருந்தவர்) என்பவரும் கூறினார். "அருண் சித்தார்த்தின் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அங்கு இருக்கும் சாதிப் பிரச்சினையை அரசியல்வாதிகள் பேசத் தவறியதை, அவர் பேசுகிறார். நாளைக்கு இன்னொரு அருண் சித்தார்த் வரலாம்." என்றார்.

ஆயினும் அவரும் தற்போது அங்கே சாதி ஒடுக்குமுறை இல்லை என்றே வாதிட்டார். (இதே மாதிரி ஒரு சராசரி சிங்களவரைக் கேட்டால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லை என்பார்.) அவர் "ஒடுக்கப்படுத்தப் பட்டவர்கள்" என்று புதிய கலைச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். அதாவது அது இறந்த காலம். இப்போது இல்லை என நாம் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், அவர் அறியாமலே முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினார். ஒரு தடவை ஒடுக்குமுறை இல்லை என்றவர் மறு தடவை ஒடுக்குமுறையை விபரித்து பேசினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாராளுமன்ற பிரதிநிதி ஆக்காதது ஒரு குறைபாடு என்றார். அது தானே ஒடுக்குமுறை? சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தானே ஈழப்போர் தொடங்கியது? சிங்களப் பேரினவாதிகளின் அதே ஒடுக்குமுறை கொள்கையைத் தானே, தமிழ்ப் பேரினவாதிகளும் பின்பற்றுகிறார்கள்? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இசைவேந்தன் (செண்பகம் பறவை) அவர் அறியாமலே இன்றைய சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதானமான சாதிய ஒடுக்குமுறையை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகள் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது மகனுக்கு கொடுக்கும் வழக்கம் காரணமாக முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது என்றார். உண்மை தான். அரசு வேலைவாய்ப்புகளில் சிங்களவர்களை போட்டு விட்டு தமிழர்களைப் புறக்கணித்த படியால் தானே ஈழப் போராட்டம் தொடங்கியது? அதே பிரச்சினை, அதே ஒடுக்குமுறை, வடக்கில் சாதியின் பெயரால் நடைமுறையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசம்.

முந்திய காலங்களில் ஒடுக்குபவன் தன்னை சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வான். இன்றைய காலத்தில் இன அடையாளத்தை போர்வையாக மூடிக் கொள்கிறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும், இன்றும் ஒடுக்குபவனும், ஒடுக்குமுறையும் ஒன்று. தெற்கில் சிங்கள இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது கொவிகம சாதிய மேலாதிக்கவாதிகள். அதே மாதிரி வடக்கில் தமிழ் இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது வெள்ளாள சாதிய மேலாதிக்கவாதிகள். மேலதிக விளக்கம் தேவையில்லை.

தெற்கில் சிங்கள மேலாதிக்கம் என்றால் வடக்கில் வெள்ளாள மேலாதிக்கம் உள்ளது. இரண்டும் ஒடுக்குமுறை சக்திகள் தானே? நிச்சயமாக இந்த இடத்தில் சாதிப் பிரச்சினையின் மூலக்கருவுக்கு கிட்ட வந்து விட்டோம். ஆனால் கேட்பவர்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட முன்னர் முல்லா வேலன் விழித்துக் கொண்டார். இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் தடுத்தார். "இது வேறொரு தளத்திற்கு போகிறது.... அது இலங்கை அரசின் திணைக்களத்திற்குள் உள்ள பிரச்சினை... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..." என்று பேசி மழுப்பினார். இப்படித் தான் உண்மையான பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய விடாமல் திசைதிருப்பப் படுகின்றன. 
 

No comments: