Tuesday, May 30, 2017

இயற்கை அழிவில் இன்பம் காணும் இனவாதத்தை விட்டொழிப்போம்


சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லில் இய‌ங்கும் ஈழ‌த்து த‌மிழின‌வாதிக‌ள், மீண்டும் ம‌க்க‌ளை பிரித்து வைக்கும் சூழ்ச்சியில் இற‌ங்கி உள்ள‌ன‌ர்.

அண்மையில் தென்னில‌ங்கையில் வெள்ள‌த்தால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை, முள்ளிவாய்க்கால் போரினால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளுட‌ன் ஒப்பிட்டு, "எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌டும் போது பார்த்துக் கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும்..." என்று இன‌வாத‌ப் பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றி அரைகுறையாக‌ அறிந்து கொண்ட‌, அல்ல‌து ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌ப் போரின் ப‌ல்வேறு ப‌ரிமாணங்க‌ளும் தெரியாது.

இறுதிப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ரே, தென்னில‌ங்கையில் அர‌ச‌ அட‌க்குமுறை தொட‌ங்கி விட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சிங்க‌ள‌ அர‌சியல் ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டு சிறைக‌ளில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். "இன‌த் துரோகிக‌ள், புலிக‌ளின் ஒட்டுக் குழுக்க‌ள்" என்றெல்லாம் பிர‌ச்சார‌ம் செய்து ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்நிய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அதைத் த‌விர‌ ஊட‌க‌ங்க‌ள் க‌டுமையான‌ த‌ணிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளை குறிப்பிட்டு க‌ருத்து சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. இத‌னால் ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே தெரியாத‌ நிலை இருந்த‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ளைப் போன்று, சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் இது ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் என்று ந‌ம்ப‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ளில் இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒரு நாட்டில் ம‌க்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்தால், ஆள்வ‌து இல‌குவாகி விடும். ஒவ்வொரு இன‌மும் த‌ங்க‌ள‌து பாதிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து சிந்திக்கும். த‌ங்க‌ள‌து த‌ர‌ப்பு இழ‌ப்புக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே திரும்ப‌த் திரும்ப‌ பேசி ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெறுப்பை விதைப்பார்க‌ள். சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள், த‌மிழ் இன‌வாதிக‌ள், முஸ்லிம் இன‌வாதிக‌ள் எல்லோரும் இதில் கைதேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள‌து அர‌சிய‌ல், கொள்கை, ந‌டைமுறை எல்லாம் ஒன்று தான்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இஸ்ரேலில் காட்டுத்தீ ப‌ர‌வி பெரும் நாச‌ம் விளைவித்த‌து. அப்போது ப‌ல‌ முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ள் "இது அல்லாவின் த‌ண்ட‌னை" என்றார்க‌ள். அதே மாதிரி, த‌மிழ் அடிப்ப‌டைவாதிக‌ளும் பேசுகின்ற‌ன‌ர். தென்னில‌ங்கை வெள்ள‌ அழிவுக‌ள் "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்கிறார்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் வெள்ள‌ அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் த‌மிழின‌வாதிக‌ளுக்கு அதைப் ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் இல்லை. தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளையும் த‌ம‌து ச‌கோத‌ர‌ இன‌மாக‌ க‌ருதாத‌ குருட்டுத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல் பார்வை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

வ‌ட‌க்கில் த‌மிழ‌ரும், தெற்கில் சிங்க‌ள‌வ‌ரும் இரு வேறு உல‌க‌ங்க‌ளில் வாழ்கின்ற‌ன‌ர். இந்த‌ வேறுபாட்டை அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிற‌து. 1971 ம் ஆண்டு தெற்கில் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் வ‌ட‌க்கில் இருந்த‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள்? எந்த‌ எதிர்ப்பும் காட்டாம‌ல் மௌன‌மாக‌ இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு பிற‌ இனங்க‌ளை ப‌ற்றி எந்த‌ அக்கறையும் இருக்க‌வில்லை.

அதே மாதிரித் தானே சிங்க‌ள‌த் தேசிய‌வாதிக‌ளும் ந‌ட‌ந்து கொள்வார்க‌ள்? இவ‌ர்க‌ள் பேசும் மொழிக‌ள் வேறாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌ம் என்ற‌ சுய‌ந‌ல‌வாத‌க் கொள்கை ஒன்று தானே? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள் தானே? ச‌ட்டியை பார்த்து அடுப்பு க‌றுப்பு என்று சொல்லிய‌தாம்.

வெள்ள‌ அன‌ர்த்த‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான். ஈழ‌ப்போரை நட‌த்தி ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் எந்த‌ப் பாதிப்புக்கும் உட்ப‌ட‌வில்லை. இது உண்மையிலேயே "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்றால், உண்மையில் அவ‌ர்க‌ள் அல்ல‌வா பாதிக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்?

இன‌வாத‌ம் பேசுவ‌து ஒரு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல். எந்த‌ அறிவும் அத‌ற்குத் தேவையில்லை. சாதாரண‌ மக்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைப்ப‌தன் மூல‌ம் விடுத‌லை பெற‌ முடியாது. அத‌ற்குப் பெய‌ர் சுய‌நிர்ண‌ய‌மும் அல்ல‌. எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாடும‌ற்ற‌ இன‌வாத‌க் கோஷ‌ங்க‌ள் இறுதியில் ஆள்வோருக்கே ந‌ன்மை உண்டாக்கும்.

இனக்குழுவாத சுயநல அரசியலுக்கு தமிழ்த் தேசியம் என்று பெயர் வைக்காதீர்கள். அது உங்களது அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. நீங்கள் தேசிய அரசியலில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சர்வதேச அரசியலில் ஸீரோ தான்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் மரணமடைந்தும், இலட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் உள்ளனர். இது இலங்கையில் சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்.

தென்னிலங்கை என்றாலே அங்கே சிங்களவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்று தான் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய "அறிஞர்கள்" நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையினால், "முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பழிவாங்கலாக, தற்போது கடவுள் சிங்களவர்களை தண்டிக்கிறார்..." என்று சொல்லிக் கொண்டனர்.

ஒருவர் கவிதையாக எழுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட "சிங்கள" மக்களுக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னார். இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டு, தமிழர்களை இருட்டறைக்குள் வைத்திருக்கவே உதவுகின்றன.

வெள்ள அழிவுகளை ஏற்படுத்திய "கடவுளின் தண்டனை" காரணமாக, சிங்கள மக்கள் விழிப்படைந்து தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக வருந்துவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்பதை சிலர் பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் பல உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றன. உலக நாடுகளில் எல்லா ஊடகங்களிலும் இலங்கையில் நடந்த வெள்ள அனர்த்தம் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.

அதனால், "தமிழ்த் தேசியவாதிகளின்" கோபம் சர்வதேசம் மீது திரும்பியது. "முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த நேரம் இந்த சர்வதேசம் எங்கே இருந்தது? தமிழ் மக்கள் அழிந்த நேரம், ஏன் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?" என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏறாத சில விடயங்கள் உள்ளன. போரில் மனிதனால் உண்டாக்கப் படும் அழிவுகள், அவரவர் அரசியல் நலன் சார்ந்தே பார்க்கப் படும். உலக மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

கொங்கோவில் நடந்த போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட நேரம் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இன்று, யேமன், தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் கொல்லப் படும் மக்கள் பற்றிய தகவல்கள், நமது "தமிழ்த் தேசிய அறிஞர்களுக்கு" கூடத் தெரியாது. ஏனென்றால், அதில் சர்வதேசம் கவனம் செலுத்தவில்லை.

அதே நேரம், வறட்சியால் பாதிக்கப் பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு, அங்கு பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப் படுகின்றன. அதற்கான நிதி சேகரிக்கும் விளம்பரங்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி காண்பிக்கப் படுகின்றன. "போர் நடந்த காலத்தில் எமது இனம் அழிக்கப் பட்ட நேரம், ஏன் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது?" என்று அந்த ஆப்பிரிக்க நாடுகளின் மக்களும் கேட்கலாம்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த போர்கள், தற்போது இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அதாவது, முன்னர் ஐரோப்பியர்கள் பிரிந்து நின்று தமக்குள் யுத்தம் செய்தார்கள். தற்போது மூன்றாமுலக நாடுகளின் மக்களை இன, மத அடிப்படையில் பிரிந்து நின்று யுத்தம் செய்ய வைக்கிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் யுத்தங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யுத்தம் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். கடன் கொடுக்கும் வங்கிகளின் வட்டியால் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். "ஆதலினால் யுத்தம் செய்வீர்!" என்பது முதலாளித்துவ அடிப்படை தத்துவம்.

அதே மாதிரி, இயற்கைப் பேரழிவுகளுக்கும், முதலாளித்துவத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெரும் நிறுவனங்களின் இலாபவெறி காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகிறது. வெள்ள அனர்த்தம் அதில் ஒன்று.

இயற்கைப் பேரழிவுகளால், முதலாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனால், மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெருந்தொகையில் மக்கள் கொல்லப் பாடவும், வீடுகளை இழக்கவும் காரணமாகி விடுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் நிகராகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வந்த வெள்ளப் பெருக்கு, இலங்கையை விட அதிகமான அழிவுகளை உண்டாக்கி இருந்தது.

ஆகவே, போரினால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், மேலைத்தேய முதலாளித்துவம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டுள்ளது. போர் போன்ற செயற்கை அழிவுகள் மனிதனால் உண்டாக்கப் பட்டவை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது சிறு பிள்ளைக்கும் புரியும்.

ஆனால், இயற்கை அழிவுகளில் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்வது இலகு. மெத்தப் படித்தவர்கள் கூட இயற்கை அழிவுக்கு காரணமான காலநிலை மாற்றம் என்ற காரணியை நம்ப மறுப்பார்கள். அதனால் தான் சர்வதேசம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

Thursday, May 25, 2017

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்


யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.

யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.

யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் "தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌" என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்: 
1. கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி - கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்: 
1. கன்னடி - மாவிட்டபுரம்
2. குலபாளையம் - குலனை (அராலி)
 3. சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் - பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி - முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்): 
1. துளு - அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). 
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்)

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: விஜ‌ய் ப‌ல்ல‌வ‌)

Saturday, May 20, 2017

ஈழப்போரின் வலிகளைப் பேசும் இரண்டு டச்சு மொழிக் கவிதைகள்


இலங்கையில் நடந்த போர் தொடர்பாக நான் டச்சு மொழியில் எழுதிய இரண்டு கவிதைகளும், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளும். 1996 ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் பொழுது எழுதிய கவிதைகள். 


SRILANKA
-----------------
Het was een middernacht
Hij was verdwenen
inmiddels de honden blaften.
*HRTF zoekt naar een ooggetuige
die waarschijnlijk niet kan zien.
Een zeventig jarige jeugd(?)
alias terrorist, was vermoord
tijdens een vuurgevecht;
volgens staatskrant.
Een soldaat die
twee school meisjes verkrachte
als een volksheld beschouwd.
Een
gevechtsvliegtuig bombardeert
een rebellenkamp,
dat in werkelijkheid
een lagerschool was.
De studenten die
bij die gebeurtenis omkwamen
werden als terroristen beschouwd.
"Wij vechten voor de vrede"
verkondigde de president,
die hiervoor
door de EU wordt geprezen.


*HRTF-Human Rights Task Force
(werd opgericht door de regering)



இலங்கை
------------------
நாய்கள் குரைத்த அந்த நடு இரவில்
அவன் தொலைந்து போனான்
பார்வையிழந்த
சாட்சியை தேடுகிறது HRTF
தீவிரவாதி என அழைக்கப்பட்ட
எழுபது வயது இளைஞன்
துப்பாக்கி சமரில் மரணித்தான்
என்றது ஒரு அரச நாளேடு
இரண்டு பள்ளிச் சிறுமிகளை
வன்புணர்ச்சி செய்த சிப்பாய்
தேசிய நாயகனாக போற்றப்பட்டான்
போராளிகளின் முகாம் என்ற
ஆரம்ப பாடசாலை மீது
குண்டு போட்டது ஒரு போர்விமானம்
சம்பவத்தில் மரணித்தவர்கள்
பயங்கரவாதிகளாக கருதப்பட்டனர்
ஐரோப்பிய யூனியனால் போற்றப் பட்ட
ஜனாதிபதி அறிவித்தார்
"சமாதானத்திற்காக போரிடுகின்றோம்"
_____________________________________


BEVRIJDINGSDAG
----------------------------
Toenmalige zon mocht
het zeker weten.
Daarom ging die snel onder
om komende bloedbaden
te vermijden.
De geweren waren
weer bezig met hun taak;
Zeker negentig onschuldige
burgers zijn er omgekomen,
in de
verlengde wraakneming van
Veiligheidstroepen.
Onder de slachtoffers
ook kinderen die
als Tamil geboren zijnde,
zondaren waren.
Het land was bevrijd
zonder volk.
De honden konden weer
vrij op straat lopen,
Maar de mensen?
Daarvan kon geen sprake zijn.


சுதந்திர தினம்
---------------------------
அன்று அந்த சூரியனும் அறிந்திருக்கும்
வரப்போகும் இரத்தக்களரியை தவிர்க்க
நேரத்தோடு ஓடி மறைந்தது
ஆயுதங்கள் மீண்டும் தங்கள்
கடமைக்கு திரும்பி விட்டன
பாதுகாப்புப் படைகளின்
நீடிக்கப்பட்ட பழிவாங்கலில்
மரணித்தனர்
தொண்ணூறு அப்பாவிகள்
தமிழர் ஆகிய குழந்தைகளும்
பாவம் இழைத்ததால் பலியாகினர்
மக்களற்ற மண் விடுதலையானது
வீதிகளில் நடமாட
நாய்களுக்கு சுதந்திரம் கிடைத்தது
ஆனால் மனிதர்கள்?
யார் அதைக் கேட்டார்கள்?

- கலையரசன் 

Friday, May 19, 2017

இடதுசாரி வெறுப்பு அரசியலின் எதிர்காலம்

தமிழீழத்திற்கு ஆதரவான ஐரிஷ் இடதுசாரிகளின் சுவரோவியம்.
படத்திற்கு நன்றி: Sinthujan Varatharajah

"வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ளை க‌ண‌க்கில் எடுக்காத‌ எந்த‌ தேசிய‌ இன‌ விடுத‌லைப் போராட்ட‌மும் முழுமைய‌டைய‌ சாத்திய‌மில்லை."
- புற‌ம்போக்கு ப‌ட‌ வ‌ச‌ன‌ம்

தொண்ணூறுகளுக்குப் பின்னரான காலத்தில், மார்க்சியத்தை கைகழுவி விட்டு, புதிய சித்தாந்தங்களை தேடி ஓடியோர் பலருண்டு. சிலர் பின்நவீனத்துவத்தை தூக்கிப் பிடித்தனர். வேறு சிலர் தேசியவாத அரசியலே சமூக விடுதலைக்கான வழியெனக் கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் யமுனா ராஜேந்திரன். தேசியவாதக் கருத்தியலை நியாயப் படுத்துவதற்காக இடதுசாரிகள் மீது சேறடிக்க தயங்காதவர். 

அண்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதி வெளியான "ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்" என்ற நூலிலும், இடதுசாரிகள் மீதான வெறுப்பை காட்டியுள்ளார். 

போலி இடதுசாரி யமுனா ராஜேந்திரனின் திரிபுவாதங்களுக்கு எதிரான எதிர்வினைகள்:

//மார்க்சியரான அப்துல்லா ஒச்சலான் தமது மக்களின் இனவிடுதலைக்காக அமெரிக்க ‘ஏகாதிபத்தியத்தின்’ தலையீட்டைக் கோரும் காலமும், மார்க்சியரான கிழக்குதிமோரின் சனான குசாமா மேற்கத்திய அமெரிக்கத் தலையீடுகளின் பின் கிழக்கு திமோர் எனத் தனிநாடு பெற்றதுமான வரலாறு கொண்ட காலமும் இதுதான்.// 
- (யமுனா ராஜேந்திரன் - மரணத்தின் நிழல்: போராளிகளும் வெகுமக்களும்)

இன விடுதலைக்காக போராடும் இயக்கங்கள், மேற்குலக ஆதரவைக் கோருவது தவறல்ல என்பது தான் இவரது வாதம். இவரது உதாரணத்திலேயே முரண்பாடு துலக்கமாக தெரிகின்றது. கிழக்கு தீமோர் விடுதலை அடைய உதவிய அதே மேற்கத்திய நாடுகள், குர்திஸ்தான் விடுதலைக்கு எதிராக செயற்படுவது ஏனோ?

துருக்கி ஒரு நேட்டோ நாடு என்று காரணம் சொன்னாலும், ஈராக்கில் சுதந்திர குர்திஸ்தான் உருவாவதை அமெரிக்கா இன்று வரையில் விரும்பவில்லை. இத்தனைக்கும் அங்கு ஒச்சலான் மாதிரி மார்க்சியத் தலைவர் எவரும் இருக்கவில்லை. ஈராக் போரில், குர்திஷ் படையினர் அமெரிக்கப் இராணுவத்துடன் ஒத்துழைத்த படியால் தான், சதாம் ஹுசைனை அகற்ற முடிந்தது. அந்த நன்றிக் கடனுக்காக ஆவது, அமெரிக்கா குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரித்திருக்கலாம் அல்லவா?

//"ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன்"// 
- ('ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்' நூலில் யமுனா ராஜேந்திரன்.)

ஸ்டாலின், மாவோ என்று யாருமே விமர்சனம் இன்றிக் கொண்டாடப் படவில்லை. ஸ்டாலின் மீது மாவோ விமர்சனம் வைத்தார். மாவோவும், குருஷேவும் பகைமை வருமளவிற்கு விமர்சனங்களால் முரண்பட்டனர். அந்த விவாதங்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் நடந்து வந்தன. அபிமால் குஸ்மான் குண்டுவெடிப்புகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டிருந்தார்.

அப்துல்லா ஒச்சலான் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்சியம் பேசினாலும், அவரது தீவிர தேசியவாத நடைமுறைகள் தொடர்பாக விமர்சிக்கப் பட்டார். அதே மாதிரி, யாசிர் அரபாத்தும் வலதுசாரி தேசியவாதம், மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்காக எப்போதும் விமர்சிக்கப் பட்டார். மேற்படி உதாரணங்களில் கடுமையாக விமர்சிக்கப் படாதவர் யாரும் இல்லை.

அப்துல்லா ஒச்சலான், யாசிர் அரபாத் மாதிரி, பிரபாகரனை 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் வேண்டுகோள் விடுக்கிறார். இனத்தின் பேரில், மொழியின் பேரில், பெருமளவு மக்களை அணிதிரட்டும் சக்தி தேசியவாதத்திற்கு உண்டு.

அதுவே தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம். அதாவது, ஏகாதிபத்தியத்தால் முண்டுகொடுக்கப் படும் நவ காலனிய அரசுக்களுக்கு எதிராக, குறிப்பிட்ட சமூக மக்களை அணிதிரட்டி போராட வைக்க முடிகின்றது. மார்க்சிய பகுப்பாய்வின் படி, தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு வளர்ச்சிக் கட்டம். அதை யாரும் மறுக்கவில்லை.

தேசிய இன விடுதலைப் போராட்டத் தலைவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர், ஏகாதிபத்திய அழுத்தம் காரணமாக மிதவாத நிலை எடுக்கிறார்கள். கிழக்குதிமோரின் சனான குசாமா, பாலஸ்தீனத்தின் யாசிர் அரபாத் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணியாத தலிவர்கள், தனிநாடு சாத்தியமில்லை என்பதை இறுதியில் உணர்ந்து கொண்டனர்.

தற்போது சிறையில் இருக்கும் அப்துல்லா ஒச்சலான், குர்திஸ்தான் தனிநாடாவது சாத்தியமில்லை என்றும், துருக்கியை ஜனநாயக மயப் படுத்தும் குறிக்கோளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். பிரபாகரனும் ஏறத்தாள அதே நிலைமையில் தானிருந்தார். இறுதிப்போரில் தமிழீழம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, இறுதி மூச்சுள்ள வரை போராடிச் சாவது என்ற முடிவெடுத்திருந்தார்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி புகழ்ந்து பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்பது போல யமுனா ராஜேந்திரன் எழுதி இருப்பது, எந்த வகையான மார்க்சிய பகுப்பாய்வு என்று தெரியவில்லை. புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி வந்தனர். மன்னர்கள் அல்ல, மக்களின் வரலாறே எமக்கு முக்கியம் என்றது மார்க்சியம்.

அந்த வகையில் எந்தத் தலைவரும் முக்கியமல்ல. அவர்களைப் பின்பற்றிய மக்கள் தான் முக்கியம். அந்தத் தலைவர்கள் தம் மக்களுக்கு என்ன செய்தார்கள்? அது தான் முக்கியம். தலைவர் பிரபாகரனைப் புரிந்து கொள்வதல்ல, புலி இயக்க போராளிகளையும், தமிழ் மக்களையும் புரிந்து கொள்வது தான் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகும்.

கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிடம் இருந்து அயர்லாந்து விடுதலை அடைவதை ஆதரித்திருந்தார். மார்க்சின் "அயர்லாந்து கொள்கையை" அப்படியே ஈழத்திற்குப் பொருத்திப் பார்க்க முடியுமா? 

கார்ல் மார்க்ஸ் காலத்தில், அயர்லாந்து விவசாயப் பொருளாதாரத்தை கொண்டிருந்தது. அங்கிருந்த நிலப்பிரபுக்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள். அவர்கள் அயர்லாந்தில் உற்பத்தியான விளைபொருட்களை, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். இதனால், ஒரு தடவை அயர்லாந்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இலட்சக் கணக்கான ஐரிஷ் மக்கள் பட்டினியால் இறந்தனர். 

மேலும் அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில், சோஷலிசத்தை கொண்டு வர விரும்பிய இடதுசாரி சக்திகளும் பங்கெடுத்திருந்தன. அயர்லாந்து சுதந்திரமடைந்த காலத்திலும், ஐரிஷ் சோஷலிஸ்டுகளின் கை மேலோங்கி இருந்தது. 

தமிழீழ போராட்டத்தை புலிகள் தலைமை தாங்குவதற்கு முன்னர், ஈழத்தில் ஏறக்குறைய அப்படியான சூழ்நிலை இருந்தது. ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் பல சோஷலிச ஈழம் அமைக்க விரும்பின. 

ஆயினும், அயர்லாந்தையும், ஈழத்தையும் எல்லா விஷயத்திலும் ஒப்பிட முடியாது. உதாரணத்திற்கு, ஈழத்தின் விவசாயப் பொருளாதாரத்தை சிங்கள நிலப்பிரபுக்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. அது தமிழ் நிலப்பிரபுக்களின் கையில் இருந்தது. 

அயர்லாந்து, ஈழ விடுதலைப் போராட்டங்களுக்கு இடையில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், நிறைய வேற்றுமைகளும் இருக்கின்றன.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, May 16, 2017

அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சிய தொழிற்புர‌ட்சி


தொழிற்புர‌ட்சியின் இருண்ட‌ ப‌க்க‌ம். அடிமைச் சிறுவ‌ர்க‌ளின் உழைப்பை உறிஞ்சி வ‌ள‌ர்ந்த‌ நெச‌வாலைக‌ள். 19ம் நூற்றாண்டு வ‌ரையில் இங்கிலாந்தில், அனாதைச் சிறுவ‌ர்க‌ள் நெச‌வுத் தொழிற்சாலைக‌ளில் அடிமைக‌ளாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

கிறிஸ்த‌வ‌ ம‌டால‌ய‌ங்க‌ள் அனாதைக் குழ‌ந்தைக‌ளை பொறுப்பெடுத்தாலும், ப‌ராம‌ரிப்புச் செல‌வுக்காக‌ ஒரு நெச‌வாலை முத‌லாளிக்கு விற்ப‌து வ‌ழ‌மையாக இருந்தது. அவ‌ர்க‌ளுக்கு 7 வ‌ய‌தாகும் பொழுது வேலைக்கு செல்ல‌ வேண்டும். தொட‌ர்ந்து 14 வ‌ருட‌ங்க‌ள் அடிமையாக‌ வேலை செய்து வ‌ந்தன‌ர்.

அதாவ‌து அந்த‌ சிறார் தொழிலாள‌ருக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுப்ப‌தில்லை. இருப்பிட‌மும், உண‌வும் கொடுத்து இல‌வ‌ச‌மாக‌ வேலை வாங்கினார்க‌ள். ச‌த்துண‌வு கொடுப்ப‌தில்லை. சிறு துண்டு குர‌க்க‌ன் மா ரொட்டி, சூப், பிஸ்க‌ட் இவ்வ‌ள‌வு தான் ஆகார‌ம்.

வேலையும் க‌டின‌மான‌து. காதை செவிடாக்கும் இரைச்ச‌லுட‌ன் இய‌ங்கும் இய‌ந்திர‌ங்க‌ள். பாதுகாப்பு ஏற்பாடுக‌ள் எதுவுமில்லை. அடிக்க‌டி யாராவ‌து விப‌த்தில் சிக்கி ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌விக்கும். அவ்வாறு இற‌க்கும் சிறுவ‌ர்க‌ளை தூர‌த்தில் இருக்கும் ம‌யான‌த்தில் கொண்டு சென்று புதைப்பார்க‌ள்.

மெதுவாக‌ வேலை செய்யும் சிறுவ‌ர்க‌ளுக்கு ச‌வுக்கால், அல்ல‌து பிர‌ம்பால் அடித்து த‌ண்ட‌னை கொடுப்ப‌து வ‌ழ‌மை. த‌ப்பியோடி பிடிப‌ட்டால் அடித்து துவைத்து விடுவார்க‌ள். விப‌த்தில் சிக்கி விர‌ல் துண்டிக்க‌ப் ப‌ட்டாலும், ம‌ருந்து க‌ட்டிக் கொண்டு திரும்ப‌ வேலைக்கு போக‌ வேண்டும்.

ஆடை உற்ப‌த்திக்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌டும் ப‌ருத்திப் ப‌ஞ்சில் இருந்து வரும் துக‌ள்க‌ள் நுரையீர‌லைத் தாக்கும். நாசித் துவார‌ங்க‌ளை அடைக்கும். புற்றுநோயும் வ‌ர‌லாம். இத‌னால் க‌டும் நோய்வாய்ப் பட்ட‌ சிறுவ‌ர்க‌ள் மர‌ண‌ம‌டைவ‌து சாதார‌ண‌ விட‌ய‌ம்.

சிறுவ‌ர்க‌ள் தானே என்று முதலாளிக‌ள் அது குறித்து இர‌க்க‌ம் காட்ட‌வில்லை. இலாப‌த்தை பெருக்குவ‌த‌ற்காக‌ சொற்ப‌ உண‌வையும் குறைத்து ப‌ட்டினி போட்டார்க‌ள். சிறுவ‌ர்க‌ள் ப‌சிக் கொடுமையால் ப‌ன்றிக்கு கொடுத்த‌ உண‌வையும், இலை குழைக‌ளையும் சாப்பிட்டார்க‌ள்.

அந்த‌க் கால‌த்தில் பிரிட்ட‌னில் பொதுக் க‌ல்வி இருக்க‌வில்லை. 1870 இலிருந்து தான் பெரும்பாலான‌ பிரிட்டிஷ் பிள்ளைக‌ள் ப‌ள்ளிக்கூட‌ம் செல்ல‌த் தொட‌ங்கின‌ர்.

அனாதைக் குழ‌ந்தைக‌ள் அடிமைக‌ளாக‌ வேலை வாங்க‌ப் படுவ‌து பிரிட்டிஷ் அர‌சுக்கு தெரிந்தாலும் க‌ண்ணை மூடிக் கொண்டிருந்த‌து. ப‌ல‌ தொழில‌திப‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌, அல்ல‌து அர‌சிய‌ல் ப‌த‌விக‌ளில் இருந்த‌ன‌ர். அத‌னால் பொது ம‌க்க‌ளுக்கு த‌க‌வ‌ல் செல்ல‌ விடாம‌ல் அமுக்க‌ப் ப‌ட்ட‌து.

தொழிற்சாலை ந‌ட்ட‌த்தில் மூட‌ப் ப‌ட்டாலும், சிறுவ‌ர்க‌ளுக்கு விடுத‌லை கிடைக்காது. அவ‌ர்க‌ளுக்கு 21 வ‌ய‌தாகும் வ‌ரையில் இன்னொரு முத‌லாளிக்கு கீழே வேலை செய்ய வேண்டும்.

த‌ன‌து 21 வ‌து வ‌ய‌தில் விடுதலை அடைந்த‌ Robert Blincoe என்ற‌ இளைஞ‌ன் பிற்கால‌த்தில் உழைத்து சேமித்த‌ ப‌ண‌த்தில் தானே ஒரு தொழிற்சாலை ஆர‌ம்பித்தான். தொழிலாள‌ர்க‌ளை க‌ச‌க்கிப் பிழியாம‌ல் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்று நிரூபித்தான். அவ‌ன் த‌ன‌து அடிமை அனுப‌வ‌ங்க‌ளை நூலாக‌ எழுதி வெளியிட்டான். அதில் வ‌ந்த‌ த‌க‌வ‌ல்க‌ள் பிரிட்டிஷ் ச‌மூக‌த்தை அதிர்ச்சி அடைய‌ வைத்த‌ன‌.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: Historia, 4/2017)


Monday, May 15, 2017

தென் கொரியா : சாம்சுங் கம்பனி ஆட்சி நடக்கும் தேசம்

வீடிழந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் படுக்கும் தென்கொரியர்கள். இது தான் "சுதந்திரம்"!
"கிம் தேச‌ம்" தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு "சாம்சுங் தேச‌ம்" பற்றித் தெரியுமா? வ‌ட‌ கொரியாவில் ந‌ட‌க்கும் ம‌ன்ன‌ராட்சி ப‌ற்றி பாட‌ம் ந‌ட‌த்துவோருக்கு, தென் கொரியாவில் ந‌ட‌க்கு‌ம் க‌ம்ப‌னி ஆட்சி க‌ண்ணில் ப‌டாத‌தேன்?

அண்மையில் தான், தென்கொரியாவை ஆண்ட‌ ப‌ழ‌மைவாதக் க‌ட்சிப் பிர‌த‌ம‌ர் ப‌த‌வி வில‌கி தேர்த‌ல் ந‌ட‌ந்த‌து. சாம்சுங் நிறுவ‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌ட்ட‌தால், ம‌க்க‌ள் எழுச்சிக்குப் பின்ன‌ர் ப‌த‌வி வில‌கினார்.

இன்று உல‌க‌ம் முழுவ‌தும் விற்ப‌னையாகும் மின்ன‌ணு சாத‌ன‌ங்க‌ளை தயாரிக்கும் சாம்சுங் க‌ம்ப‌னியை அறியாத‌வ‌ர் எவ‌ருமில்லை. ஆனால் அந்த‌க் க‌ம்ப‌னி தென் கொரியாவை ஆளும் அள‌விற்கு வ‌ள‌ர்ந்துள்ள‌து என்ப‌து ப‌ல‌ருக்குத் தெரியாது.

தென் கொரியாவில் எங்கு பார்த்தாலும் சாம்சுங் ம‌ய‌மாக‌ இருக்கும். சாம்சுங் விளையாட்டுக் க‌ழ‌க‌ம், சாம்சுங் ம‌ருத்துவ‌ ம‌னை, சாம்சுங் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சாம்சுங் துறைமுக‌ம்..... இப்ப‌டி முடிவில்லாம‌ல் சென்று கொண்டிருக்கும். தென் கொரிய‌ பொருளாதார‌த்தின் பெரும் ப‌குதி சாம்சுங் கையில் உள்ள‌து.

ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ தென்கொரிய‌ர்க‌ள் சாம்சுங் நிறுவ‌ன‌த்தில் வேலை செய்கிறார்க‌ள். "நல்ல‌ ச‌ம்ப‌ள‌ம், போன‌ஸ்" கிடைக்கிற‌து என்ப‌த‌ற்காக‌ ப‌ல‌ர் திருப்திப் ப‌ட‌லாம். ஆனால் அத‌ற்குப் பின்னால் உள்ள‌ அவ‌ல‌ங்க‌ள் வெளியே தெரிவ‌தில்லை.

நாளொன்றுக்கு 14 ம‌ணிநேர‌ம் வேலை செய்வ‌து அங்கே ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். வேலைப்ப‌ளு, பிற‌ கெடுபிடிக‌ள் கார‌ண‌மாக‌ த‌ற்கொலை செய்து கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ருண்டு.

சாம்சுங் நிறுவ‌ன‌த்தின் 75 வ‌ருட‌ கால‌ வ‌ர‌லாற்றில் தொழிற்ச‌ங்க‌ம் அமைக்க‌ அனும‌திக்க‌வில்லை. தொழிலாள‌ர்க‌ளின் நீண்ட‌ கால‌ போராட்ட‌த்தின் பின்ன‌ர், சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் தான் அனும‌தித்தார்க‌ள். தொழிற்ச‌ங்க‌த்தை உருவாக்கிய‌ தொழிலாள‌ர் த‌லைவ‌ர் ம‌ர்ம‌மான‌ முறையில் த‌ற்கொலை செய்து கொண்டார். அது ஒரு கொலையாக‌ இருக்க‌லாமா? அதை விசாரிக்க‌ப் போவ‌து யார்? அர‌சும், காவ‌ல்துறையும் சாம்சுங் நிறுவ‌ன‌த்திற்கு விசுவாச‌மாக‌ இருக்கும் நாட்டில் உண்மை வெளிவ‌ரும் என்று எதிர்பார்க்க‌லாமா?

(த‌க‌வ‌ல்: அவுஸ்திரேலிய‌ SBS தொலைக்காட்சி ஆவ‌ண‌ப்ப‌ட‌ம்.)

******

தென் கொரியா: ந‌ர‌க‌த்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கும் இளைஞ‌ர்க‌ள்

Young South Koreans call their country ‘hell’ and look for ways out. (The Washington Post, January31, 2016)

வ‌ட‌ கொரியாவை ப‌ற்றி மிக‌ மோச‌மாக‌ க‌ற்ப‌னை செய்து க‌ட்டுக்க‌தைக‌ளை ப‌ர‌ப்பும் விஷ‌மிக‌ள், தென் கொரியா ப‌ற்றி ஆஹா ஓஹோ என்று புக‌ழ்ந்து பேசுவார்க‌ள். ஆனால் தென் கொரிய‌ ம‌க்க‌ள், குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ள், த‌ம‌து நாட்டை ந‌ர‌க‌ம் என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள்.

ப‌ண‌க்கார‌ குடும்பங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் ம‌ட்டுமே, உய‌ர் க‌ல்வி க‌ற்று உய‌ர் ப‌த‌வி வ‌கிக்கும் வாய்ப்புக‌ளை பெறுகிறார்க‌ள். அந்த‌ப் பிள்ளைக‌ள் த‌ர‌மான‌ க‌ல்விக்கு செல‌விடும் அள‌விற்கு வ‌ச‌தியாக‌ உள்ள‌ன‌ர். ப‌ண‌ வ‌ச‌தியில்லாத‌ குடும்ப‌ங்க‌ளை சேர்ந்த‌ பிள்ளைக‌ள் அதையெல்லாம் நினைத்தும் பார்க்க‌ முடியாது.

"சொகுசான‌" அலுவ‌ல‌க‌ வேலை செய்யும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் கூட‌ க‌டும் வேலைப் ப‌ளுவினால் அவ‌திப் ப‌டுகின்ற‌ன‌ர். அதிக‌ நேர‌ம் வேலை செய்ய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். ச‌ம்ப‌ள‌ம் கூட‌ ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை.

உல‌க‌ப் புக‌ழ் பெற்ற‌ பிரான்ட் பொருட்க‌ளை உற்ப‌த்தி செய்யும் சாம்சுங், ஹையுன்டாய் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ளிலும் ப‌ணிப் பாதுகாப்பு கிடைப்ப‌தில்லை. விரும்பிய‌ நேர‌ம் வேலையில் இருந்து தூக்கி வீச‌ப் ப‌ட‌லாம். முதுமை அடைந்தால் முன்கூட்டியே ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட‌லாம்.

தென் கொரியாவில் த‌ம‌க்கு எதிர்கால‌ம் இல்லையென்ப‌தை உண‌ர்ந்து கொண்ட‌ இளைஞ‌ர்க‌ள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று புல‌ம்பெய‌ர்ந்து செல்கிறார்க‌ள். அமெரிக்க‌ இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ணியாற்றினால் குறுக்கு வ‌ழியில் அமெரிக்க‌ குடியுரிமை கிடைக்கும், பிற்கால‌த்தில் அமெரிக்காவில் குடியேற‌லாம் என‌ ந‌ம்புகிறார்க‌ள்.

பிற்குறிப்பு: வ‌ட‌ கொரியாவில் மேற்குறிப்பிட்ட‌ பிர‌ச்சினை எதுவும் கிடையாது. ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ரையில் க‌ல்வி அனைவ‌ருக்கும் இல‌வ‌ச‌ம். தொழில் வாய்ப்புக‌ள் நிச்ச‌ய‌ம். ப‌ணியில் அம‌ர்ந்தால் அது நிர‌ந்த‌ர‌ம். யாரையும் இல‌குவில் வீட்டுக்கு அனுப்ப‌ முடியாது. ச‌ம்ப‌ள‌ம் மிக‌க் குறைவாக‌ இருந்தாலும் குடியிருக்கும் வீட்டுக்கு வாட‌கை இல்லை. எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌ மிக‌க் குறைவு.


Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?


தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Tuesday, May 09, 2017

சுயநிர்ணயம் என்பதன் அர்த்தம் அமெரிக்காவின் அடிமை நாடாவதல்ல!


சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌து பிரிந்து த‌னி நாடாகி, பின்ன‌ர் அமெரிக்காவுக்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக் கொடுப்ப‌த‌ல்ல‌. லெனின் கூறிய‌ பிரிந்து செல்வ‌த‌ற்கான‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை என்ப‌தன் அர்த்த‌ம், புதிய‌ முத‌லாளித்துவ‌ குடிய‌ர‌சுக‌ளை உருவாக்குவ‌த‌ல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில் ப‌ல‌ர், தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்லாது, சில தமிழ் இடதுசாரிகளும் த‌வ‌றாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

சார் மன்னன் காலத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டது. ஆரம்பத்தில் தலைநகரும் அதை அண்டிய பகுதிகளும் தான் போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள் ரஷ்யாவின் பிறபகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.

அந்த நிலையில், முதலாம் உலகப்போரை முடித்து வைக்கும் வகையில், 1918 ம் ஆண்டு, ஜெர்மனியுடன் Brest - Litovsk எனும் இடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப் படி, ரஷ்யாவின் மேற்கே இருந்த நாடுகள் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் விடப் பட்டன. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜெர்மனியுடன் பொருளாதாரத் தொடர்புகளை கொண்டிருந்தன. அதனால், ஜெர்மனி அவற்றை தனது செல்வாக்கு மண்டலமாக கருதியது.

1919 ம் ஆண்டு, ஜெர்மனி முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னரும், அவை தனி நாடுகளாக தொடர்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரில் தான், அந்த நாடுகள் மீண்டும் சோவியத் யூனியனின் பகுதிகளாக ஒன்று சேர்க்கப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனி நாடுகளான பின்லாந்து, போலந்து ஆகிய இரண்டும் தொடர்ந்து சுதந்திரத்தை பேணுவதற்கு அனுமதிக்கப் பட்டன.

அதே நேரம், ஆர்மேனியா, ஜோர்ஜியா, அஸ‌ர்பைஜான் ஆகிய‌ நாடுக‌ள் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்துட‌ன் உட‌ன்ப‌டிக்கை செய்து கொண்டு த‌னி நாடுக‌ளாக‌ மாறின. அந்த‌க் கால‌த்திலும் "ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம்" என்ப‌த‌ன் அர்த்த‌ம் முத‌லாளித்துவ‌- ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் தான்.

ஜோர்ஜியாவில், தேசியவாதிகள் தலைமையில் ஒரு   மேற்கத்திய பாணி பாராளுமன்றம் உருவானது. அந்த அரசில் ஜோர்ஜிய சமூக ஜனநாயகக் கட்சி பங்குபற்றியது. அதே நேரம், ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷெவிக் புரட்சியாளர்களை ஆதரித்தது.

மேற்படி தனி நாடுகள், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக இருந்துள்ளன.  மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகள், அவற்றின் சுதந்திரத்தை பாதுகாத்தன. ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் உருவான கம்யூனிஸ்ட் அரசை ஒடுக்குவதற்கு, அந்த நாடுகளின் பூகோள அமைவிடம் பெரிதும் உதவியது.

அதாவது, அன்று ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரில், கம்யூனிசப் புரட்சிகர அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள், சார் மன்னனுக்கு விசுவாசமான படையினர் மட்டுமல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா என்று பன்னாட்டுப் படைகள் களமிறங்கி இருந்தன. ஒவ்வொருவரும் தமக்கென சில பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். அத்தகைய குழப்பமான நிலையில் தான், மேற்படி நாடுகள் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அது மட்டுமல்ல, செச்னியா போன்ற ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் தனிநாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன.

லெனின் த‌லைமையிலான‌ போல்ஷேவிக்- கம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர், அந்த‌ நாடுக‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த உள்நாட்டு க‌ம்யூனிஸ்டுக‌ளுட‌ன் தொட‌ர்புக‌ளை எற்ப‌டுத்திக் கொண்ட‌ன‌ர். துருக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய மத்திய ஆசிய பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் யாரும் இருக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் பழமைவாத மதவாதிகளுக்கு எதிரான, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இனங்கண்டு ஊக்குவிக்கப் பட்டன. தமக்கு ஆதரவளித்தால், அவர்களை பதவியில் அமர்த்துவதாக கம்யூனிஸ்ட் செம்படை உறுதியளித்தது.

ரஷ்யாவில் நூற்றுக் கணக்கான வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தன. மன்னராட்சிக் காலத்தில் அவை யாவும் ரஷ்யக் காலனிய நாடுகளாக இருந்தன. ஆர்மேனியா, ஜோர்ஜியா போன்ற வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களை கொண்ட நாடுகள் தாமாகவே தேசிய அரசுக்களை அறிவித்துக் கொண்டன. அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், சுல்த்தான் அரசாட்சியை கொண்டு வர முயன்றனர்.

அந்த நாடுகளில் எல்லாம், போல்ஷெவிக் கட்சிக்கு ஆதரவான அரசியல் சக்திகள் ஊக்குவிக்கப் பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற தேசியவாதிகள், மற்றும் மதவாதிகளுக்கு எதிராக அவர்களை கிள‌ர்ச்சி செய்ய‌ ஊக்குவித்தனர். ச‌ரியான த‌ருண‌த்தில் செம்படையை அனுப்பி ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள். பின்ன‌ர் அவை ஒவ்வொன்றாக இணைக்க‌ப் ப‌ட்டு, 1922 ம் ஆண்டு, தனித்தனி சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

செம்படையின் இராணுவ வெற்றி மட்டும் அதற்குக் காரணம் அல்ல. போரில் வென்ற பின்னர், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப் படும் என்று லெனின் வாக்குறுதி அளித்தமையும் ஒரு முக்கிய காரணம். சுயநிர்ணய உரிமை தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவவில்லை. அது அளவு கடந்தால் மார்க்சிய சர்வதேசியத்தை பாதிக்கும் என்று பலர் வாதாடினார்கள். 

சுயநிர்ணய உரிமையானது பல்லின மக்களுக்கானது மட்டுமே. அதன் அர்த்தம், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட தேசியவாத இயக்கங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்பதல்ல. மக்கள் விரோதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டவர்களில் பல்வேறுபட்ட  தேசியவாதிகளும் அடங்கி இருந்தனர். ரஷ்ய பேரினவாதியாக இருந்தாலும், ஏதாவதொரு சிறுபான்மையினத்தை சேர்ந்த குறுந் தேசியவாதியாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.

சோவியத் யூனியனை கட்டியெழுப்பும் பணியில், Narkomnats என்ற சுருக்கப் பெயரிலான தேசிய விவகாரங்களுக்கான மக்கள் அதிகார சபை குறிப்பிடத் தக்க பங்காற்றியது. முன்பு சார் மன்னனின் கீழ் பணியாற்றிய மானிடவியல் அறிஞர்கள், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை ஏற்று வேலை செய்தனர். ரஷ்யாவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவர்களது உதவி தேவைப் பட்டது.

துறை சார்ந்த அறிஞர்கள், சோவியத் யூனியன் முழுவதும் பயணம் செய்து, பல்லின மக்களிடம் கேள்விக் கொத்துக்களை கொடுத்து நிரப்பிக் கொண்டனர். இனத்தின் பெயர், மொழியின் பெயர், நிரந்தரமான வாழிடம், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப் பட்டன.

தேசிய‌ங்க‌ளை பிரித்து, தேசிய‌ எல்லைக‌ளை தீர்மானித்து, சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ழ‌ங்கி விட்டால், அத‌ற்குப் பிற‌கு அந்த‌ நாடுக‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்து கொள்ள‌லாம் என்று அர்த்த‌ம் அல்ல‌. Gosplan என்ற‌ அர‌ச‌ திட்டமிடல் அதிகார சபை, சோவியத் நாடு முழுவதற்குமான பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை வ‌குத்த‌து. அது சந்தேகத்திற்கிடமின்றி சோஷ‌லிச பொருள் உற்ப‌த்தி முறையை கொண்டிருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ங்க‌ளின் தாயகங்களில் இருந்த சிறு கிராம‌ங்க‌ள் கூட‌, பொதுவுடைமைக் கூட்டுற‌வுப் ப‌ண்ணைத் திட்ட‌த்திற்கு த‌ப்ப‌வில்லை. ஏனெனில், சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்திற்குள், இன்னொரு சிறுபான்மை தேசிய இன‌ம் இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட‌க் கூடாது. எந்த‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்தாலும், ச‌ம‌ உரிமை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

குறிப்பிட்ட‌ ஒரு தேச‌ம் விரும்பிய‌வாறு பொருளாதார‌ முடிவெடுக்க‌ விட்டிருந்தால், அது முத‌லாளித்துவ‌த்தை நாடிச் சென்றிருக்கும். அத‌ற்குப் பின்ன‌ர் அந்த‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்தில், இன்னொரு இன‌ம் ஒடுக்க‌ப் ப‌டும். இப்ப‌டியான‌ விரும்ப‌த் த‌காத‌ விளைவுக‌ள் த‌டுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பாட்டாளிவ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு த‌ரும்.

//அக்டோப‌ர் புர‌ட்சியான‌து முத‌லாளிகளையும், நில‌வுட‌மையாள‌ர்க‌ளையும் வீழ்த்திய‌தால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ ம‌க்க‌ளின் தேசிய‌, கால‌னிய‌ அடிமைச் ச‌ங்கிலி உடைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னால், அனைத்து ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் ஒருவ‌ர் த‌வ‌றாது விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை விடுத‌லை செய்யாம‌ல் பாட்டாளிவ‌ர்க்க‌ம் த‌னது விடுத‌லையை பெற்றுக் கொள்ள‌ முடியாது. அக்டோப‌ர் புர‌ட்சியின் குண‌விய‌ல்பு பின்வ‌ருமாறு அமைந்திருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லையான‌து, தேசிய‌ங்க‌ளுக்கு இடையிலான‌ வெறுப்புண‌ர்வு, இன‌ மோத‌ல்க‌ளை கொண்டிருக்க‌வில்லை. அத‌ற்கு மாறாக, ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌ தொழிலாள‌ர்க‌ள், விவ‌சாயிக‌ளின்‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை, ப‌ர‌ஸ்ப‌ர‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம் மூல‌ம் விடுத‌லை பெற்றுக்கொள்ள‌ப் ப‌ட்ட‌து.

தேசிய‌வாத‌த்தின் பெய‌ரால் அல்ல‌, ச‌ர்வ‌தேசிய‌த்தின் பெய‌ரால் தான் ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லை சாத்தியமாகிய‌து.//

- ஸ்டாலின் (அக்டோப‌ர் புர‌ட்சி நூலில் இருந்து.)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, May 06, 2017

யார் இந்த இலுமினாட்டி? - ஓர் அறிவொளி இயக்க வரலாறு


இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர்.

அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18 ம் நூற்றாண்டில் இருந்து தொடரும்  வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20 ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக இலுமினாட்டி எனும் பூச்சாண்டி காட்டப் படுகின்றது.

யார் இந்த இலுமினாட்டிகள்? அது தொடர்பான வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம். உண்மையில், 18ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஐரோப்பாவில் இலுமினாட்டி என்ற ஓர் அமைப்பு இருந்துள்ளது. ஆனால், அது வெறும் பதினோரு வருடங்கள் மட்டுமே இயங்கியது. தற்காலத்தில் அப்படி எந்த அமைப்பும் கிடையாது. அது பற்றி இன்று உலாவும் கதைகள் யாவும் ஒரு சிலரின் கற்பனை மட்டுமே.

18ம் நூற்றாண்டில் இன்றுள்ள ஜெர்மனி என்ற தேசம் இருக்கவில்லை. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா எல்லைக்கு வடக்கே உள்ள ஜெர்மன் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் பையரன் (Bayern) என்று அழைக்கப்படுகின்றது. அன்றைய ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் தனிமனித சுதந்திரம் இருக்கவில்லை. மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவ சுரண்டலும், தேவாலயங்களின் மதக் கட்டுப்பாடுகளும் மக்களை ஒடுக்கிய காலகட்டம் அது. படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளுக்கும் குறைவிருக்கவில்லை.

மக்களை அறியாமை இருளுக்குள் வைத்திருக்கும் மன்னர்கள், மதகுருக்களின் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பையரன் பகுதியில் ஓர் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதற்காக, ஆடம் வைஸ்ஹவுப்ட் (Adam Weishaupt 1748 – 1830) என்பவர் 1776 ம் ஆண்டு இலுமினாட்டி என்ற அமைப்பைத் தொடங்கினார். லத்தீன் (அல்லது இத்தாலி) மொழியில் இலுமினாட்டி என்றால் ஒளி பாய்ச்சுதல் என்ற அர்த்தம் வரும். அதாவது, தமிழில் அதை அறிவொளி இயக்கம் என்று குறிப்பிடலாம்.

ஆங்கில மொழியில் பகுத்தறிவாளர்கள் பாவிக்கும் Enlightenment என்ற சொல் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. அதன் அடிப்படையும் ஒளி கொடுத்தல் என்பது தான். ஆகவே, இலுமினாட்டி ஒரு பகுத்தறிவு இயக்கம் என்றும் சொல்லலாம். அதன் குறிக்கோளும் அப்படித் தான் இருந்தது. மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். தேவாலயங்களின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல். மன்னர்கள், நிலப்பிரபுக்களின் அதிகார துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்தல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் பள்ளிக்கூடம் இருக்கவில்லை. பொதுக்கல்வி இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. ஜனநாயகம் இருக்கவில்லை. தேர்தல்கள் நடக்கவில்லை. இப்படிப் பல இல்லைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். சுருக்கமாக சொன்னால், தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தான் மாதிரித் தான் அன்றைய ஐரோப்பா இருந்தது. அதை விட மோசமாக இருந்தது என்றும் சொல்லலாம்.

மக்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்ப விரும்பிய இலுமினாட்டிகள் தமக்கு ஆபத்தானவர்கள் என்பதை நிலப்பிரபுக்களும், மதகுருக்களும் உணர்ந்து கொண்டனர். ஒரு சாதாரணமான அறிவொளி இயக்கமான இலுமினாட்டி, மிக விரைவில் பலம் வாய்ந்த எதிரிகளை சம்பாதித்துக் கொண்டது. இலுமினாட்டி ஆரம்பித்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு, பையரன் நாட்டை ஆண்ட குறுநில மன்னன் கார்ல் தியோடோர் அதைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்தான். அத்துடன் இலுமினாட்டி என்ற அறிவொளி இயக்கத்தின் கதை முடிந்தது.

இலுமினாட்டிகள் தடைசெய்யப்பட்டு ஓரிரு வருடங்களுக்குள், 1789 ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியாளர்களும் பகுத்தறிவுவாதிகளாக இருந்தனர். அவர்களும் மன்னராட்சியை, மத மேலாதிக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் மதம் தடைசெய்யப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன. மத நிறுவனங்களின் சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் அடித்து விரட்டப் பட்டனர், அல்லது சிரச்சேதம் செய்யப் பட்டனர். கன்னியாஸ்திரிகள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள். நகர மத்தியில், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், மன்னர் குடும்பத்தினரின் தலைகள் வெட்டப் பட்டன. இந்தத் தகவல்கள் ஐரோப்பாவில் இருந்த மன்னர்கள், மதகுருக்கள் மனதில் கிலியை உண்டாக்கியது. தடைக்குப் பின்னரும் இலுமினாட்டிகள் இரகசியமாக இயங்கியதாகவும், அவர்களே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இருந்ததாகவும் நம்பத் தொடங்கினார்கள். அவ்வாறு தான் இலுமினாட்டிகள் பற்றிய கட்டுக்கதைகள் பரவ ஆரம்பித்தன.

இந்தக் காலத்தில், இலுமினாட்டிகள் பற்றி பரவும் வதந்திகளும் மேற்படி வரலாற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் தாராளவாத சித்தாந்தம் உலகெங்கும் பரவியது. அத்துடன், கூடவே முதலாளித்துவ பொருளாதாரமும் பரவியது. உலகம் முழுவதும் சுரண்டப் படும் செல்வத்தை குவித்துக் கொண்ட கோடீஸ்வரர்களை முதலாளித்துவமே உருவாக்கியது. 

முதலாளித்துவத்தில் உருவாகும் மூலதன திரட்சி பற்றி எந்த வித அடிப்படை அறிவுமற்ற தற்குறிகளின் கண்டுபிடிப்பு தான் இலுமினாட்டி.  பன்னாட்டு நிறுவனங்களால், உலகம் முழுவதும் சுரண்டப்படும் பணம் மூலதனமாக ஓரிடத்தில் குவிகின்றது. இதனால் இலாபமடைபவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத பணக்காரர்கள், உலகில் அரைவாசி செல்வத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதையே, "பதின்மூன்று இலுமினாட்டி குடும்பங்கள் உலகை ஆள்வதாக" திரித்துக் கூறுகிறார்கள். இது ஒரு பாமரத்தனமான புரிதல். 

இலுமினாட்டி என்ற பெயரில் யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும் பரப்பப் படுகின்றன. உலகில் மிகப் பெரிய முதலாளிகள் யூதர்களாக இருக்கலாம். அதற்காக யூதர்கள் உலகை ஆள்வதாக சொல்வதெல்லாம் சுத்த அபத்தம். உண்மையான இலுமினாட்டிகளுக்கும் யூதர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இடையில் சிலரால் இட்டுக் கட்டப் பட்ட கதை.

யூதர்களை இலுமினாட்டிகளாக சித்தரிப்பதற்கு ஒரு நூலைக் காட்டி திரிபுபடுத்துகிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட, "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை" (The Protocols of the Elders of Zion) என்ற நூல், இன்று பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் அதற்கு "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்று தலைப்பிட்டுள்ளனர். மூல நூல் ரஷ்ய மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும்.

சுவிஸ் ஜெர்மன் பூர்வீகத்தை கொண்ட, செர்கெய் நீலுஸ் ஒரு ரஷ்ய ஒர்தொடக்ஸ் மத அடிப்படைவாதி. சார் மன்னனுக்கு விசுவாசமான நிலவுடமையாளர் குடும்பத்தை சேர்ந்தவர். அப்படியான சமூகப் பின்னணி கொண்டவர்கள் பழமைவாதிகளாக இருப்பதில் அதிசயமில்லை. அவர் வாழ்ந்த காலத்து ரஷ்யா மிகப் பெரிய சமுதாய மாற்றத்திற்கு உள்ளானது. 

ரஷ்ய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப்பட்டு மேற்கத்திய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. அப்படியான சந்தர்ப்பத்தில், ரஷ்யப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்களிப்பும் இருந்திருக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கும் அதிகரித்தது. ரஷ்யாவில் உரிமைகள் அற்ற, ஒடுக்கப்பட்ட சமுதாயமாக இருந்த யூதர்கள், சம உரிமை வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருந்ததில் அதிசயம் ஒன்றுமில்லை. 

அத்தகைய சூழலில் வாழ்ந்த செர்கெய் நீலுஸ் என்ற பழைமைவாதி எழுதிய சிறு நூல் தான் "சியோன் மூதறிஞர்களின் உடன்படிக்கை". இதை அவர் கிறிஸ்துவுக்கு எதிரான சக்திகள் என்ற தலைப்பின் கீழ், தீவிர கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கண்ணோட்டத்தில் எழுதி இருந்தார். முழுக்க முழுக்க யூதர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துக்களை கொண்ட நூல். அதிலே பல கற்பனையான வாதங்களை அடுக்கி உள்ளார். பெரும் முதலாளிகள், யூதர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் கிறிஸ்துவுக்கு எதிரான தீய சக்திகள் என்பது அவரது நிலைப்பாடு. அதனால், இந்த நூல் நாஸிகளினாலும் வாசிக்கப் பட்டதில் வியப்பில்லை.

1917 ம் ஆண்டு ரஷ்யப் புரட்சி வெடித்தது. கம்யூனிச போல்ஷெவிக் கட்சியினர் அந்த நூலை தடை செய்திருந்தனர். அதை வாசிப்பதும், வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை வழங்கப் பட்டதாக சொல்லப் படுகின்றது. நூலாசிரியர் செர்கெய் நீலுஸ் கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்தார்.

அந்தக் காலத்தில், மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பாசிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியை யூதர்களின் சதியாகப் பார்த்தனர். ஹிட்லர் கூட தனது உரைகளில் அதைக் குறிப்பிட்டு பேசி வந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் (போல்ஷெவிக்) கட்சியில் யூதர்கள் தலைமைப் பொறுப்பில் கூட இருந்தனர். உதாரணத்திற்கு செம்படைத் தளபதி ட்ராஸ்கியை குறிப்பிடலாம். ஆனால், அன்றிருந்த சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. ரஷ்யாவில் யூதர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப் பட்ட காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியிலும் யூதர்கள் மேன்நிலைக்கு வர முடியவில்லை. ரஷ்யாவில் மட்டுமல்ல, அன்றைய ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் இருந்த பேரினவாதிகள், சிறுபான்மையினமான யூதர்களை வளர விடாமல் ஒடுக்கி வந்தனர்.

இலுமினாட்டி பற்றிய பொய் வதந்திகளையும், "யூதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை" என்ற இனவெறியூட்டும் நூலையும் நம்புவோரும், பரப்புவோரும் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், மத அடிப்படைவாதிகள், பழமைவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகியோர் தான். இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன. ஏற்கனவே ஜெர்மனியில் நாஸிகளால் பரப்பப் பட்ட இனவாத விஷக்கருத்துக்கள், தமிழ் வலதுசாரிகள் மத்தியில் பரவுவது ஆரோக்கியமானதல்ல. 

இலுமினாட்டி பற்றிய முன்னைய பதிவு:

Thursday, May 04, 2017

அமெரிக்கா கொரியாவில் நடத்திய இனப்படுகொலை மறைக்கப் படுவது ஏன்?


எந்தப் பெரிய மதிப்புக்குரிய ஊடகமாக இருந்தாலும், வட கொரியா விடயத்தில் பொய்களையும், புளுகுகளையும் துணிந்து சொல்லலாம். விரும்பியவாறு கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடலாம். யாரும் ஏனென்று கேட்க மாட்டார்கள். மக்களை அந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். 

வட கொரியா பற்றி தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கும் கட்டுக் கதைகளுக்கு "மர்ம மன்னன்", "மர்ம தேசம்" என்றெல்லாம் பெயர் வைப்பார்கள். அவற்றைப் பார்ப்பவர்கள், வாசிப்பவர்கள் திகில் உணர்வுடன் இரசிப்பார்கள். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று,மெல்ல மெல்ல நச்சுக் கருத்துக்கள் மூளைக்குள் திணிக்கப் பட்டு விடும்.

தமிழகத்திலும், இலங்கையிலும் அதிகளவு விற்பனையாகும் ஆனந்த விகடன் சஞ்சிகையில் (26 Apr, 2017 ) மர்ம மன்னன்! என்ற பெயரில் ஓர் அபத்தக் கட்டுரை பிரசுரமாகி உள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் பற்றி கிண்டல் அடிக்கிறார்களாம். கட்டுரை எழுத முன்னர் இணையத்தில் தேடிப் பார்த்தார்களாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் என்ன சாப்பிடுவார்?" "கேக், கம்ப்யூட்டர், கட்டடம், கார் மற்றும் நாய்க்குட்டி." இப்படி எல்லாம் இருந்ததாம். இண்டர்வியூ என்ற ஹாலிவூட் படத்தைப் பார்த்து விட்டும் இப்படி எழுதலாம். "வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பொழுதுபோக்கு என்ன?" "நீலப் படம் பார்ப்பது...அழகான பெண்களுடன் கும்மாளம் அடிப்பது..." இப்படி எல்லாம் பாலியல் சுவை ததும்பவும் எழுதலாம். வாசிப்பவர்களுக்கும் கிளுகிளுப்பாக இருக்கும்.

அது சரி. கட்டுரை எழுதுவதற்கு முன்னர் கொஞ்சமாவது ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா? அதெல்லாம் எதற்கு? தமிழர்கள் அந்தளவு அறிவாளிகளா? வட கொரியா பற்றி எப்படிப் புளுகினாலும் நம்புவதற்கு பல வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள். வட கொரியா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அணுவாயுதம் தயாரித்து வைத்திருக்கிறது. ஆனால், அது அண்மையில் எழுந்த பிரச்சினை என்பது போல கட்டுரையாளர் எழுதும் புளுகுக் கதை அபாரம். 

கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: 
//அமெரிக்காவைச் சீண்டிக்கொண்டே இருப்பது, கிம்முக்குப் பிடித்த பொழுதுபோக்கு. சென்ற ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அணு ஆயுதப் பரிசோதனையை வட கொரியா நிகழ்த்தியபோது, அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது. எப்படியாவது அணு ஆயுதப் பரிசோதனையில் வெற்றிபெற வேண்டும் என்று தீராத துடிப்புடன் இருக்கிறார் கிம். அதற்கான காரணம் புரிந்து கொள்ளக் கூடியது தான்.//

கட்டுரையாளரே! உங்களுக்கு இணையம் பாவிக்கத் தெரியும் தானே? கொஞ்சம் தேடிப் பார்க்கலாமே? தொண்ணூறுகளில், அதாவது பனிப்போர் முடிவில், வட கொரியா அணு உலைகள் கட்டுவதாக தகவல்கள் வந்தன. அப்போதே அணுவாயுதம் தயாரிக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. உலகில் எந்த நாட்டுடனும் வர்த்தகத் தொடர்பில்லாமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த வட கொரியா, எரிசக்தி தேவைக்காக அணு உலை அமைப்பதாக சொல்லிக் கொண்டாலும், இன்னொரு எதிர்பாராத நோக்கமும் இருந்தது. அமெரிக்காவிடம் இருந்து பொருளாதார உதவி பெற்றுக் கொள்வது!

வட கொரியாவும், இந்தியா, இலங்கை மாதிரி ஒரு மூன்றாமுலக வறிய நாடு தான். இருப்பினும், மேற்குலக நாடுகள் இந்தியா, இலங்கைக்கு வழங்குவது வட்டியுடனான கடன். ஆனால், அதே நாடுகள் வட கொரியாவுக்கு கொடுத்தது நன்கொடை! 

வட கொரியாவின் அணு உலைத் திட்டத்தை கைவிடுமாறு, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மூலம் அழுத்தம் கொடுத்தது. அதன் படி, சர்வதேச மேற்பார்வையின் கீழ் அணு உலை அகற்றுவதற்கு வட கொரியா சம்மதித்தது. அமெரிக்கா அதற்கு பதிலாக இலவச உணவுப் பொருட்களும், பெருமளவு பணமும் கொடுத்திருந்தது. 

நண்பர்களே இவர்களில் யார் புத்திசாலி? மேற்குலகிற்கு சமர்த்துப் பிள்ளையாக நடந்து, வாங்கிய கடனை வட்டியுடன் ஒழுங்காக கட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவா? அல்லது அணுகுண்டை காட்டி மிரட்டி செல்வந்த நாடுகளில் இருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளும் வட கொரியாவா?

அணுவாயுதம் வைத்திருப்பது தான் பிரச்சினை என்றால், பின்வரும் கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா?

1. கொரிய‌ப் போரானது, யுத்த நிறுத்தத்தில் முடிந்து ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாகியும், அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ள் தென் கொரியாவை விட்டு வெளியேற‌ ம‌றுப்ப‌து ஏன்?

2. அமெரிக்கா தனது ஆயிர‌க்க‌ணக்கான‌ ப‌டையின‌ரை ம‌ட்டும‌ல்லாது, அணுவாயுத‌ங்க‌ளையும் தென் கொரியாவில் குவித்து வைத்திருந்தது ஏன்? அவற்றை இப்போதும் அங்கிருந்து அகற்ற மறுப்பது ஏன்?

3. ஏற்கனவே ஜப்பான் மீது அணுகுண்டு வீசி, பல இலட்சம் அப்பாவி மக்களைக் படுகொலை செய்த அமெரிக்கா, கொரியா மீது அணுகுண்டு வீசவும் திட்டமிட்டிருந்தது. இதனை அன்றைய அமெரிக்க படைத் தளபதி மக் ஆர்தர் உறுதிப் படுத்தி உள்ளார். அப்போதே அணுகுண்டு வீச நினைத்த எதிரி இடமிருந்து வேறு எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?

முன்பு சோஷலிச நாடுகள் இருந்த காலத்தில், சோவியத் யூனியன், சீனா இரண்டுடனும் வட கொரியா நெருக்கமான உறவுகளைப் பேணியது அனைவரும் அறிந்த விடயம். அப்போதே அவ்விரண்டு நாடுகளிடம் இருந்தும் அணுவாயுத உதவி கோரப் பட்டது. ஆனால், இரண்டு சோஷலிச வல்லரசுகளும் அணுவாயுதம் தருவதற்கு சம்மதிக்கவில்லை.

அணுகுண்டு தயாரிப்பதற்கான அறிவு வட கொரியாவுக்கு எப்படிக் கிடைத்தது என்பது இன்று வரையில் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. அனேகமாக, பாகிஸ்தான் மூலமாக கிடைத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. நெதர்லாந்தில் கல்வி கற்ற பாகிஸ்தானிய விஞ்ஞானி கான், அணுத் தொழில்நுட்ப இரகசியங்களை கடத்திச் சென்றிருந்தார். அதை வைத்துத் தான் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரித்தது. அனேகமாக, கான் தனது தகவல்களை வட கொரியாவுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.

பனிப்போரின் முடிவில், அமெரிக்கா ஒற்றை வல்லரசாகியது. அது தனக்கு எதிரான நாடுகளை "தீய நாடுகளின் அச்சு" எனப் பிரகடனம் செய்திருந்தது. சர்வதேச சமூகத்தால் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப் பட்ட நாடுகளில் வட கொரியாவும் ஒன்று. அப்போதே ஒதுக்கப் பட்ட நாடுகள் ஒன்று சேரத் தொடங்கி விட்டன. தம்மிடமிருந்த வளங்களை பகிர்ந்து கொண்டன. உதாரணத்திற்கு, வட கொரியா கடாபியின் லிபியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்றது. ஈரானிய பாவனைப் பொருட்கள் வட கொரியாவுக்கு ஏற்றுமதியாகின.

சதாம் ஹுசைனின் ஈராக்கும், கடாபியின் லிபியாவும் அணுகுண்டு மாதிரி பேரழிவு தரும் ஆயுதங்கள் வைத்திருப்பதாக அமெரிக்காவால் குற்றஞ் சாட்டப் பட்டன. உண்மையிலேயே அங்கு இரசாயன ஆயுதங்கள் இருந்துள்ளன. சர்வதேச அழுத்தம் காரணமாக, ஐ.நா. மேற்பார்வையின் கீழ் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டன. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஈராக்கில் சதாமும், லிபியாவில் கடாபியும் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்டு, அந்த நாடுகள் சின்னாபின்னமாகின.

வட கொரியா தனது அணுவாயுதக் கொள்கைக்கு, ஈராக், லிபியாவில் நடந்தவற்றை காரணமாக சுட்டிக் காட்டுகின்றது. அதாவது, சர்வதேச அழுத்ததிற்கு அடிபணிந்து அணுவாயுதத்தை அழிப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தால், வட கொரியாவும் இன்று இருந்த இடம் தெரியாமல் காணாமல்போயிருக்கும். மேலும் அருகில் சீனா என்ற வல்லரசின் ஆதரவு இருப்பதும் வட கொரியாவுக்கு சாதகமாகப் போய் விட்டது.

சீனாவுக்கு வட கொரியா மீது தனிப்பட்ட பாசம் எதுவும் கிடையாது. முன்பிருந்த சித்தாந்த உறவு இப்போது இல்லை. இன்றைய சீனா ஒரு முதலாளித்துவ நாடு என்பதால், பணத்திற்கே முன்னுரிமை. இருப்பினும், வட  கொரியாவால் சீனாவுக்கு சில அரசியல் ஆதாயங்கள் உள்ளன.

முதலாவதாக, வட கொரியா நிர்மூலமானால் அங்கிருந்து வெளியேறும் பெருமளவு அகதிகள் சீனாவில் தான் தஞ்சம் கோருவார்கள். இரண்டாவதாக, கொரியா ஒரே நாடானால் அமெரிக்க இராணுவம் சீன எல்லை வரை வந்து விடும். இந்த அபாயத்தை தடுப்பதற்கு, வட கொரியா தொடர்ந்தும் இருப்பதே சீனாவுக்கு பாதுகாப்பானது.


அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் அப்படி என்ன தகராறு? நம்மில் பலருக்கு வரலாறு தெரியாது, அல்லது பழைய வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறோம். 1950 - 1953, இந்த மூன்று வருடங்களுக்குள் நடந்த போரில் மாத்திரம், கொரிய சனத்தொகையில் இருபது சதவீதம் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் அழித்தொழிக்கப் பட்டனர். அன்று நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டிய காரணம் என்ன? அன்று அமெரிக்க படையினர் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்தது?

இரண்டாம் உலகப்போரில், ஆசியாவில் ஜப்பானை தோற்கடிப்பதற்கு அமெரிக்கா போட்ட குண்டுகளை விட அதிகமாக கொரியா என்ற சிறிய நிலப்பரப்பினுள் போடப் பட்டன. 635,000 தொன் குண்டுகள்! அதைவிட 32,557 தொன் நேபாம் நச்சுவாயுக் குண்டுகள் போடப் பட்டுள்ளன!! வட கொரியாவில் (தென் கொரியாவிலும் சில பகுதிகளில்) இருந்த நகரங்கள், கிராமங்கள் ஒன்று விடாமல் தரைமட்டமாக்கப் பட்டன. மூன்று மில்லியன் பொதுமக்கள் குண்டுவீச்சில் கொல்லப் பட்டனர்.
(ஆதாரம்: Air Force General Curtis LeMay, head of the Strategic Air Command during the Korean War, “we killed off … 20 percent of the population”?)

இருபது, முப்பது அணுகுண்டுகளை போட்டு, கொரியப் போரை பத்து நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்ட அமெரிக்க படைத் தளபதி ஜெனரல் மக் ஆர்தர் (Douglas MacArthur) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர் ஐ.நா. சமாதானப் படையின் தளபதியாகத் தான் கொரியாவில் போரிட்டார்!

வட கொரியாவை விட்டு விடுவோம். தென் கொரியாவில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? தென் கொரியாவில், நோகன்ரீ எனும் இடத்தில், பாதுகாப்புத் தேடி பாலத்தின் கீழ் பதுங்கி இருந்த நூற்றுக் கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொன்றனர். (ஆதாரம்: G.I.'s Tell of a U.S. Massacre in Korean War) இது போர்க்குற்றம் அல்லவா? அதற்காக யாருக்காவது தண்டனை கிடைத்துள்ளதா? இன்று வரையில் இல்லை.

அமெரிக்க‌ப் ப‌டைக‌ள் ஆக்கிர‌மித்திருந்த‌ தென் கொரியாவில், ம‌க்க‌ள் ம‌த்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த‌‌ கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி த‌டை செய்யப் ப‌ட்ட‌து. அங்கு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. அடுத்து வ‌ந்த‌ ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌, தென் கொரியாவில் கொடூர‌மான‌ இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்த‌து. தென் கொரியாவில் எண்ப‌துக‌ள் வ‌ரையில் தேர்த‌ல் என்ற‌ பேச்சுக்கே இட‌ம் இருக்க‌வில்லை. க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் ந‌சுக்க‌ப் ப‌ட்ட‌து. ம‌னித‌ உரிமைக‌ள் மீற‌ப் ப‌ட்ட‌ன‌. கொரிய‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி மீதான‌ தடை இப்போதும் தொட‌ர்கின்ற‌து.

கொரிய‌ப் போருக்குப் பின் அமெரிக்கா ஆத‌ரித்த‌ கொரிய‌ இராணுவ‌ ஆட்சியாள‌ர்க‌ள், முன்பு கொரியாவை கால‌னிப் ப‌டுத்திய‌ எதிரிக‌ளான‌ ஜ‌ப்பானிய‌ருட‌ன் ஒத்துழைத்த‌வ‌ர்க‌ள். அதாவது ஒட்டுக்குழுக்கள், துரோகிகள் என அழைக்கப் பட்டவர்கள். அத‌னால் ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆளானார்க‌ள். தென் கொரியாவில், அமெரிக்க அரச ஒத்தோடிகள் செய்த படுகொலைகள் எத்தனை?

ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்ட் சந்தேக நபர்களை தேடிப் பிடித்து, ஜீப் வண்டிகளில் ஏற்றிச் சென்று, வெட்ட வெளிகளில் சுட்டுக் கொன்று, பெரும் மனிதப் புதைகுழிகளுக்குள் போட்டு மூடினார்கள். அன்று பலியானவர்களில்  பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளும் அடங்குவார்கள். அமெரிக்கப் படையினர் அந்தப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். (ஆதாரம்: AP: U.S. Allowed Korean Massacre In 1950)

வ‌ட‌ கொரிய‌ பிர‌ச்சினையில் ப‌ல‌ருக்குத் தெரியாத‌ அல்ல‌து வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விடும் விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. அந் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் மிக‌த் தீவிர‌மான‌ கொரிய‌த் தேசிய‌வாதிக‌ள். வ‌ட‌ கொரியா ஸ்தாபிக்க‌ப் ப‌ட்ட‌ நாளில் இருந்து கொரிய‌ ஒன்றிணைப்பை இல‌ட்சிய‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌ர்.

வ‌ட‌ கொரிய‌ தேச‌ வ‌ரைப‌ட‌ம் தென் கொரியாவையும் உள்ள‌ட‌க்கி இருக்கும்! இப்போதும் பாட‌சாலைக‌ளில் கொரியா தீப‌க‌ற்ப‌ம் முழுவ‌தையும் தாய்நாடு என்றே க‌ற்பிக்கிறார்கள். இப்போதும் தென் கொரிய‌ பிர‌தேச‌ங்க‌ளுக்கான‌ ஆளுந‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப் ப‌டுவ‌து ஒரு ச‌ட‌ங்காக‌ உள்ள‌து. ம‌று ப‌க்க‌த்தில் தென் கொரிய‌ ஆட்சியாள‌ர்க‌ளும் அவ்வாறே ந‌ட‌ந்து கொள்வ‌ர்.

விய‌ட்நாம் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்பான‌ நிலைமையும் அவ்வாறே இருந்த‌து. வ‌ட‌ விய‌ட்நாம் சுத‌ந்திர‌ம‌டைந்து சோஷ‌லிச‌ நாடாகிய‌து. ஆனால் தென் விய‌ட்நாம் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்டிருந்த‌து. தென் விய‌ட்நாமில் இய‌ங்கிய‌ கெரில்லாக் குழுக்க‌ளுக்கு வ‌ட விய‌ட்நாமில் இருந்து ஆயுத‌ங்க‌ள் அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌. ஏராள‌மான‌ போராளிக‌ள் வட‌ விய‌ட்நாமில் இருந்து சென்ற‌வ‌ர்க‌ள் என்ற‌ குற்ற‌ச்சாட்டையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

வ‌ட‌ கொரியாவிலும் விய‌ட்நாம் போர் முடிவு ஆர்வ‌த்தை தூண்டி விட்டிருந்த‌து. இறுதியில் விய‌ட்நாம் ஒரே நாடான‌ மாதிரி கொரியாவும் ஒன்று சேரும் என்று ந‌ம்பினார்க‌ள். ஒரு த‌ட‌வை கெரில்லாப் போராளிக‌ளை, ஒரு சிறு குழுவை அனுப்பிப் பார்த்த‌ன‌ர். ஆனால் எதிர்பார்த்த‌ ப‌டி தென் கொரியாவுக்குள் கெரில்லாப் போர் ந‌ட‌த்த‌ முடிய‌வில்லை.

வட கொரிய பிரச்சினையில் பலர் அடிக்கடி மறந்து விடும், அல்லது மறைக்கும் விடயம் ஒன்றுண்டு. தென் கொரிய மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? அதை அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை. அதற்குக் காரணம் தென் கொரிய மக்களில் பெரும்பான்மையினர் வட கொரியா மீதான போரை எதிர்க்கிறார்கள். தென் கொரிய அரசு இந்த விடயத்தில் ஒரு பொம்மை அரசாகவே இருக்கிறது. அதன், இராணுவம், அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனால் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

வட கொரிய ஏவுகணைகள் தாக்கவிடாமல் இடையில் தடுத்து அழிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நவீன ஏவுகணையான THAAD தென் கொரியாவுக்கு கொண்டு வரப் பட்டு பொருத்தப் பட்டது. அப்போது அது சென்ற வழியெங்கும் கூடிய தென் கொரிய மக்கள் கற்களை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஏவுகணைக்கு பாதுகாப்பாக ஆயிரக் கணக்கான படையினர் கூடவே செல்ல வேண்டியிருந்தது.

வ‌ட‌ கொரிய‌ ம‌க்க‌ள் எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாட்டுடன் தான் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து அர‌சு போர்வெறி கொண்டு அலைய‌வில்லை. அதைச் செய்வ‌து அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ம். அது அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். நாளைக்கு அமெரிக்க‌ இராணுவ‌ம் ப‌டையெடுத்தால் அந்த‌ ம‌க்க‌ளை கையைக் க‌ட்டி வேடிக்கை பார்க்க‌ சொல்கிறீர்க‌ளா? அமெரிக்க‌ குண்டு வீச்சில் அப்பாவி ம‌க்க‌ள் பலியாக‌ மாட்டார்க‌ளா? த‌ங்க‌ள் நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வ‌ரும் அந்நிய‌ இராணுவ‌த்தை எதிர்த்து போரிடுவ‌து த‌ப்பா? உங்க‌ள் வீட்டை கொள்ளைய‌ர்க‌ள் தாக்கும் அபாய‌ம் இருந்தால் என்ன‌ செய்வீர்க‌ள்?

இங்கு யார் பக்க‌ம் நியாய‌ம் உள்ள‌து? மிக‌ப் பெரிய ப‌ல‌சாலியான‌ கோலிய‌த்திற்கு எதிரான‌ நோஞ்சான் டேவிட்டின் போராட்ட‌ம் நியாய‌மான‌து. அதை ஆத‌ரிப்ப‌து நீதியான‌வ‌ர்க‌ளின் க‌ட‌மை.

அமெரிக்கா தான் வ‌ட‌ கொரியாவை ஆக்கிர‌மிக்கும் எண்ண‌த்துட‌ன் போர்ப் பிர‌க‌ட‌ன‌ம் செய்கின்ற‌து. வ‌ட‌ கொரியா அல்ல. அது உலகில் எந்த‌ நாட்டின் மீதாவ‌து படையெடுத்துள்ள‌தா? அது மெக்சிகோ அல்ல‌து க‌ன‌டாவுக்கு த‌ன‌து ப‌டைக‌ளை அனுப்பியுள்ள‌தா?

அமெரிக்காவின் இராணுவ‌ ப‌ல‌த்துட‌ன் ஒப்பிடும் பொழுது வ‌ட‌ கொரியா ஒரு நாள் கூட‌ தாக்குப் பிடிக்க‌ முடியாது. அத‌ற்காக‌த் தான் அணுவாயுத‌ம் வைத்திருக்கிற‌து. அந்த‌ உரிமை எல்லோருக்கும் இருக்கிற‌து. தற்காப்பு உரிமை. விரும்பினால் அதை சர்வாதிகாரம் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

ச‌ர்வாதிகார‌ம் என்ப‌து என்ன‌? பெரும்பான்மை ம‌க்க‌ளின் விருப்ப‌த்திற்கு மாறான‌ ஒரு சிறு குழுவின் ஆட்சி. இன்று ப‌ல‌ நாடுக‌ளில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பெய‌ரில் ச‌ர்வாதிகார‌மே நில‌வுகின்ற‌து. தேர்த‌லில் வோட்டுப் போட்ட‌வுட‌ன் ம‌க்க‌ளின் க‌ட‌மை முடிந்து விடுகிற‌து. ஆளுவ‌து எப்போதுமே ப‌ண‌ம் ப‌டைத்த‌ கிரிமின‌ல் கும்ப‌ல் தான்.

அத‌ற்கு மாற்றான‌ நேர‌டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி பலருக்கும் தெரியாது. வ‌ட‌ கொரியாவிலும் தேர்த‌ல்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌. பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள். சமூகத்தின் பல மட்டங்களில் ஜனநாயகப் பொறிமுறை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு தொழிற்சாலை நிர்வாக‌த்தில் தொழிலாள‌ர்க‌ள் ப‌ங்கெடுக்க‌ முடியும். அமெரிக்காவில் கூட‌ அத்த‌கைய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் கிடையாது.

Wednesday, May 03, 2017

பாரிஸ் 93 ம் வட்டாரம் : ஏழைகளின் தெரிவு கம்யூனிச வேட்பாளர் மட்டுமே


சான் டேனி (Saint-Denis) பாரிஸ் நகரில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கட்தொகை கொண்ட வட்டாரம். பாரிஸ் நகர நிர்வாகத்தில் 93 வது வட்டாரமாக பிரிக்கப் பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்க, அரேபிய குடியேறிகளை பெருமளவில் கொண்ட பகுதி. ஒருவர் அந்த இடத்தில் முகவரியை கொண்டிருந்தால், பாரிசின் பிற பகுதிகளில் வேலை எடுப்பது மிகவும் கடினம். CV இல் 93 இலக்கத்தை கண்டவுடனே நிராகரித்து விடுவார்கள்.

சான் டேனி பகுதியில் தான், பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களின் சமாதிகள் உள்ளன. ஆனால், உல்லாசப் பிரயாணிகள் யாரும் அங்கே செல்வதில்லை. அதற்குக் காரணம் அந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றது என்ற அச்சம். அங்கே யாரும் வீடு வாடகைக்கு எடுக்கவும் விரும்புவதில்லை. உண்மையிலேயே குற்றச் செயல்கள் பெருகிய பிரதேசம் தான். அதே நேரம், வேலையில்லாப் பிரச்சினை, வறுமையும் அதிகளவில் கொண்ட பிரதேசம்.

எண்பதுகள் வரையில், அதாவது பிரான்ஸ் பொருளாதார நிலைமை நன்றாக இருந்த காலம் வரையில், சான் டேனி நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பாவில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி வெளியுலகில் பலர் அறிந்திருக்கவில்லை. அப்போது எல்லோருடைய கவனமும் "கம்யூனிச நாடுகள் எப்போது கவிழும்" என்பதில் தான் குறியாக இருந்தது. ஒருவேளை சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் நல்ல மாதிரி தொடர்ந்தும் இருந்திருந்தால், மேற்கு ஐரோப்பாவில் அப்போதே மிகப் பெரிய குழப்பங்கள் உண்டாகி இருக்கலாம். அது வேறு கதை.

எண்பதுகளில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவில் பாதிக்கப் பட்ட பிரெஞ்சுப் பகுதிகளில் சான் டேனியும் ஒன்று. அதுவரை காலமும் அங்கு இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் மூடப் பட்டன. அதில் ஒரு பகுதி உற்பத்தி, மீண்டும் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றது. சான் டேனி பகுதியில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. கூடவே வறுமையும் அதிகரித்தது. குற்றச் செயல்கள் அதிகரித்தன. அந்தப் பகுதி முழுவதும் சட்டவிரோத குடியேறிகளின் புகலிடமாகியது. அன்று அதைப் பற்றி ஆட்சியாளர்கள் யாரும் கவலைப் படவில்லை.

காலங்கள் உருண்டோடின. விளிம்பு நிலையில் வாழ்ந்த அரபு - முஸ்லிம் சமூகத்தினுள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் ஊடுருவின. வறுமை, வேலையில்லாப் பிரச்சினைக்கு வடிகாலாக, இளம் சமுதாயம் மதத்திற்குள் மூழ்கியது. 2015 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பொலிசார் ஒரு தீவிரவாத சந்தேகநபரைத் தேடி சான் டேனி வந்தனர். இரண்டு மணிநேர துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் சந்தேகநபரை சுட்டுக் கொன்றனர். இப்போதும் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப் பட்ட ஓட்டைகளை காணலாம்.

தற்போது, பாரிஸ் சான் டேனி பிரதேசத்தில் வாழும் வெளிநாட்டவர் சமூகத்தில் ஓர் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதவாத அரசியல் ஆபத்தானது மட்டுமல்ல, அரசும் அதையே எதிர்பார்க்கிறது என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ்த் தேசியம் பேசுவதும், பிரான்ஸில் இஸ்லாமிய மதவாதம் பேசுவதும் ஒன்று தான். மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கே நன்மையாக முடியும். அரசின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொண்ட சான் டேனி பிரதேச மக்கள் தீவிர இடதுசாரி அரசியலை கையில் எடுத்துள்ளனர். ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு மட்டுமே ஓட்டுப் போடுவோம், இல்லாவிட்டால் தேர்தலைப் பகிஷ்கரிப்போம் என்று சொல்கின்றனர்.

23 April 2017 நடந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மெலேன்ஷோன் அதிகப் படியான வாக்குகள் பெற்ற இடம் சான் டேனி மட்டுமே! அன்று நடந்த தேர்தலில்,சான் டேனி தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரம் பின்வருமாறு: 
Jean-Luc Mélenchon : 43,39 
Emmanuel Macron : 23,02 
Marine Le Pen : 10,07 
மெலென்ஷோன் முன்ன‌ர் ஆளும் சோஷ‌லிஸ்ட் க‌ட்சிக்குள் தீவிர‌ இட‌துசாரிய‌ம் பேசிக் கொண்டிருந்த‌வ‌ர். பின்ன‌ர் அதிலிருந்து பிரிந்து "இட‌து க‌ட்சி" என்ற‌ த‌னிக்க‌ட்சி அமைத்து அத‌ன் சார்பாக‌ ஜனாதிப‌தி வேட்பாள‌ராக‌ போட்டியிட்டார்.

வெற்றி பெற்ற முதலிரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு, மே 7 அன்று நடைபெறவுள்ளது. யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை பலர் இன்னும் தீர்மானிக்கவில்லை. இரண்டு வேட்பாளர்களும் தமது நலன்களுக்கு எதிரானவர்கள் என்பதால், பெருமளவு மக்கள் பகிஷ்கரிக்கவுள்ளனர். இனவாதக் கட்சியான FN சார்பில் போட்டியிடும் மாரின் லெபென் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓர் இனவாதியிடம் இருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், இரண்டாவது வேட்பாளர் எமானுவேல் மக்ரோன் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்பது வெளிப்படையானது. அரசின் அதிகாரங்களை குறைத்து, முதலாளிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கும் திட்டம் ஆபத்தானது. ஏற்கனவே அரசு என்ற ஒன்று பெயருக்காவது இயங்குவதால் தான் ஏழை மக்கள் உயிர்பிழைத்து வாழ முடிகின்றது. அதுவும் இல்லையென்றால் சென் டேனி ஒரு பாலைவனமாகி விடும் என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அந்த நாட்டில் ஒரு சிறிய கட்சியாக இருக்கலாம். ஆட்சியதிகாரத்தை பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கலாம். ஆனால், காலங்காலமாக சான் டேனி பிரதேசவாசிகள் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிரான்ஸில் நூறாயிரம் சனத்தொகை கொண்ட மூன்று நகரங்களில் கம்யூனிஸ்ட் மேயர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அதில் ஒன்று சான் டேனி. கம்யூனிஸ்ட் மேயர் லோரன்ட் ருசியே (Laurent Russier) ஐந்தாவது தடவையாக மேயராகப் பதவியேற்றுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு : 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, May 02, 2017

2017 மேதினம் - மொன்றியல் முதல் மாத்தளை வரை


இவ் வருட மேதினமும் உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களை ஒன்று சேர்த்திருந்தது. பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு இம்முறை நடந்த மேதின ஊர்வலத்தில் வன்முறைகள் வெடித்தன. பாரிஸ் மட்டுமல்ல ரோன் போன்ற பிற நகரங்களிலும் கடந்த சில நாட்களாக இனவாதக் கட்சியான FN தலைவி மாரின் லே பென் இன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்துள்ளன.

பாரிஸ் மேதின‌க் க‌ல‌வ‌ர‌த்தில் பொலிசாரும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ரும் மோதிக் கொண்ட‌னர். பொலிஸ் க‌ண்ணீர்ப்புகை குண்டுக‌ளை வீசி பேர‌ணியை க‌லைக்க‌ முய‌ன்ற‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் பெட்ரோல் குண்டுக‌ளை வீசின‌ர். ஒரு பொலிஸ்கார‌ர் எரிகாய‌ங்க‌ளுக்கு உள்ளானார்.

பிரான்ஸில் முன்பு ந‌ட‌ந்த, தொழிலாள‌ர் ந‌ல உரிமைக்கான‌ தொழிற்ச‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கையின் தோல்வி, பொதுத்தேர்த‌லில் வென்ற‌ இன‌வாத‌க் க‌ட்சிக்கு எதிரான‌ எதிர்ப்புண‌ர்வு போன்ற‌ன‌வே மேதின‌ வ‌ன்முறைக்கு கார‌ண‌ம். மேதின‌ பேர‌ணியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ல் த‌னித்து நின்ற‌ இட‌துசாரி இளைஞ‌ர்க‌ள் தான் வ‌ன்முறையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.


கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலத் தலைநகர் மொன்றியலில் நடந்த மேதினப் பேரணியில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், குறைந்த பட்ச கூலியை அதிகரிக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. பல்வேறு கம்யூனிச, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. (http://montrealgazette.com/news/local-news/montreal-may-day-rallies-call-for-a-minimum-wage-of-15-end-to-capitalism)

கனடாவில் தற்போது வழங்கும் சம்பளம் வறுமையில் இருந்து மீளப் போதுமானது அல்ல. பல உழைப்பாளிகள் கஞ்சித் தொட்டிகளை நம்பி வாழ்கிறார்கள். நாம் சம்பள உயர்வைக் கோராமல் பேசாமல் இருந்தால், அவர்களாக கூட்டப் போவதில்லை என்று பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர். 


துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலங்கள், அடானா, அங்காரா, இஸ்தான்புல், இஸ்மிர் ஆகிய துருக்கியின் பல நகரங்களிலும் இடம்பெற்றன. துருக்கியில் மனிதஉரிமைகளை நசுக்கி வரும், ஜனாதிபதி ஏர்டோகனின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதால் காவல்துறையினரின் விசேட கவனத்தைப் பெற்றிருந்தது. 

படத்திற்கு நன்றி: David Suren

இலங்கையில், புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியினர் யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை ஆகிய நகரங்களில் நடத்திய மேதின ஊர்வலங்களில் தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மாத்தளை நகரில் நடந்த பேரணியில் சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னனி,பெண் விடுதலை சிந்தனை அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகளும் பங்கு பற்றின. தென்னிலங்கையில் கூட ஜேவிபி, முன்னிலை சோஷலிசக் கட்சி, மற்றும் பல இடதுசாரிக் கட்சிகள் நடத்திய மேதினப் பேரணிகளில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

படத்திற்கு நன்றி: Seelan Saththiyaseelan

இருப்பினும், வழமை போல முதலாளித்துவ ஊடகங்கள், அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மறைத்தன. அதற்குப் பதிலாக காலிமுகத் திடலில் மகிந்த ராஜபக்சே நடத்திய மேதினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளத்தை காட்டி, அதை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தன. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஊடகங்கள் கூட ராஜபக்சவின் கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்கள் மேதினத்தில் தமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கையில், முதலாளித்துவ கட்சிகள் அந்த உணர்வை மடைமாற்றும் வேலையில் ஈடுபட்டன.

தமிழ் முதலாளிகளின் கட்சியான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின கூட்ட வீடியோ பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/vigneswaran.kajee/videos/1876412175950974/?hc_location=ufi) மேடையில் தொழிலாளர் தினம் என்று பேனர் வைத்திருந்தார்கள். ஆனால், உரையாற்றிவர்கள், தப்பித் தவறிக் கூட தொழிலாளர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஒரு சம்பிரதாயத்திற்காக என்றாலும், மேதினம் எதற்காக கொண்டாடப் படுகின்றது என்ற தகவலைக் கூறவில்லை.

சிலருக்கு எங்காவது மேடை கிடைத்தால் போதும் போலிருக்கிறது. மேதினக் கூட்டத்திலும் "சம்பந்தன் ஐயா என்ன செய்தார்? யாருடைய வீட்டைக் கட்டினார்?" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொண்டிருந்தார்கள். மேடைக்கு கீழே நின்று கொண்டு அதற்கு கைதட்டி இரசிக்கும் தொழிலாளர்கள் எந்தளவு தூரம் அரசியலற்ற சமூகமாக மாறி உள்ளனர் என்பதைக் காட்டுகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூட ஒரு முதலாளி தான். அவரது குடும்பத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் தென்னிலங்கையிலும், இரப்பர் தோட்டங்கள் மலேசியாவிலும் உள்ளன. அங்கெல்லாம் தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுவதில்லை. குறைந்த பட்சம் கூலி உயர்வு கூட வழங்குவதில்லை.

இந்த உண்மைகள் யாவும், கஜேந்திரகுமாரை பின்தொடரும் மத்தியதர வர்க்க ஆதரவாளர்களுக்கும் தெரியாமல் இல்லை. அதனால் தான் மேதினத்தில் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள். "தமிழ்த் தேச தொழிலாளர்கள்" என்று சொல்லித் தான் மேதினக் கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.

கஜேந்திரகுமாரின் மலையகத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் இல்லையா? குறைந்த பட்சம், அவர்களில் ஒருவரை மேடையில் ஏற்றிப் பேச வைத்திருக்கலாமே? சும்மா பாசாங்குக்காவது தொழிலாளர் தினம் கொண்டாடுவதாகக் காட்ட வேண்டாமா? இது போன்ற முதலாளியக் கட்சிகள் அம்மணமாகத் திரிகின்றன. அந்த அம்மணம் தான் அழகு என்று மக்களை நம்ப வைத்திருகிறார்கள்.