Sunday, May 09, 2021

யாழ்ப்பாணத்தில் எழும் சாதிய மதில் சுவர்!

யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள மயிலிணி கிராமத்தில் சாதிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வழமை போல இதுவும் கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த சாதிப் பிரச்சினை தான். ஈழப்போர் நடந்த முப்பது காலங்களில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்த சாதிப் பிரச்சினைகள் தற்போது மெல்ல மெல்ல தலைதூக்கி வருகின்றன.

மயிலிணி பிரச்சினை தொடர்பாக இதுவரை எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: அங்குள்ள முருகன் கோயிலை அண்டி யாராலும் உரிமை கோரப்படாத வெட்டையான காணி ஒன்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர்த் திருவிழாக் காலங்களில், சாமி வெளிவீதி உலா வருவதை தவிர ஏனைய நாட்களில் அந்த இடம் பாவனையில் இருப்பதில்லை.

அதனால், அயல் கிராமத்து இளைஞர்கள் அந்தக் காணிக்குள் வந்து உதைபந்து, அல்லது வலைப் பந்து விளையாடுவது வழக்கம். சிலநேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடந்துள்ளன. கடந்த பல வருடங்களாக அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் வந்து விளையாடி வந்தனர். ஏற்கனவே யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் பாடசாலைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் ஒன்று கூடும் இளைஞர்கள் தமக்குள் சாதி வேற்றுமை பார்ப்பதில்லை. இந்த வழக்கம் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றது.

அண்மைக் காலமாக குறிப்பிட்ட காணியில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம், உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் வேறொரு இடத்தில் தனியாக பிரிந்து விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருந்தாலும் ஆரம்பத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

சில தினங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட மைதானம் அமைந்துள்ள காணியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஊர் மக்கள் இதுகுறித்து காரணம் கேட்ட பொழுது, திருவிழாக் காலங்களில் சுவாமி வெளி உலா வருவதற்கான வீதியை சுற்றி மதில் கட்டுவதாக நிர்வாகத்தினர் பதில் கூறினார்கள். யாழ்ப்பாணக் கோயில்களில் பொதுவாக தேர்ப் பவனி நடக்கும் உள்வீதிகளை சுற்றித் தான் மதில் கட்டப் படுவதுண்டு. வெளி வீதி எப்போதும் குடியிருப்புகளை அண்டிய திறந்த வெளியாகத் தான் இருக்கும்.

மதில் கட்டுவதற்கு இன்னொரு காரணமாக, சில இளைஞர்களின் மது பாவனை சுட்டிக் காட்டப் பட்டது. அப்படியான ஒரு சிலர் இருந்தாலும் அதற்காக மதில் கட்டுவதை நியாயப் படுத்த முடியாது. இது சில மாதங்களுக்கு முன்னர், நல்லூர்க் கோயிலுக்கு அருகாமையில் காதல் ஜோடிகள் ஒன்று கூடுகிறார்கள் என்று கழிவு எண்ணை ஊற்றிய சம்பவத்தை நினைவுகூருகின்றது. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இந்துமதக் கலாச்சாரக் காவலர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும், இதே இடத்தில் இது போன்ற சாதிய மதில் கட்டப் பட்டதாகவும், அப்போது எழுந்த பிரச்சினையின் முடிவில் புலிகள் அந்த மதிலை இடித்து விழுத்தியதாகவும் தெரிய வருகின்றது. தற்போது ஆலய நிர்வாகத்தினர் பிரதேச சபையில் உள்ள தமது சாதியை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவில் மீண்டும் அந்த மதிலை கட்டி எழுப்பி உள்ளனர்.

இதைத் தவிர, மதிலை சுற்றி உயரமான கம்பங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. கோயில் காணியாக இருந்தாலும் பொது இடங்களில் கமெரா பொருத்த காவல்துறை அனுமதி தேவை. அப்படி எந்த அனுமதியும் பெறப் பட்டதாக தெரியவில்லை. பொது இடங்களில் மற்றவர்களின் சுதந்திரத்தில் (privacy) தலையிடுவதற்கு தனியாருக்கு உரிமை இல்லை.

அத்துடன் இந்தக் கமெராக்கள் அயலில் உள்ள வீடுகளை கண்காணிக்கும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன. இதனால் தங்களது தனிமனித சுதந்திரம் மீறப் படுவதாக ஊர் மக்கள் முறையிடுகின்றனர். கிணற்றடியில் குளிக்கும் பெண் பிள்ளைகளும் அச்சமடைந்து காணப் படுகின்றனர்.

கோயிலை அண்டிய கிராமங்களில் குடியிருப்பவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் ஆவர். அதனால் மதில்சுவர் மட்டுமல்லாது, கண்காணிப்பு காமெராக்களும் சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இரண்டுமே அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினை என்பதால், ஊர் மக்கள் அது குறித்து காவல்துறை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால், இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. வழமை போல ஆதிக்க சாதியினர் பக்கமே அதிகார வர்க்கமும் இருப்பதாகத் தெரிகின்றது.

இது குறித்து மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

Wednesday, May 05, 2021

கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ "லூயி பொன‌பார்ட்டின் ப‌தினெட்டாம் புருமேர்"

கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ "லூயி பொன‌பார்ட்டின் ப‌தினெட்டாம் புருமேர்" (The Eighteenth Brumaire of Louis Bonaparte) நூலை வாசிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், க‌ட்டாய‌ம் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ விட‌ய‌ங்க‌ள்: 
 - அது இன்றைய,‌ ந‌ம‌து கால‌த்திய‌ முத‌லாளித்துவ‌ அர‌சின் தோற்ற‌ம், குணங்க‌ள், செய‌ற்பாடுக‌ள் போன்ற‌வ‌ற்றின் அடிப்ப‌டையை புரிந்து கொள்ள‌ உத‌வும் நூல். 

 - அது "முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்தில் த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌ம் இருக்கிறது... ஜ‌ன‌நாய‌க‌ம் இருக்கிறது... அத‌னால் இன்றுள்ள‌ அமைப்பே சிற‌ந்த‌து!" என்று சொல்லிக் கொண்டு திரிப‌வ‌ர்க‌ளை வாய‌டைக்க‌ வைக்கும் நூல். 

 - ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால் ப‌ல‌ க‌ட்சி தேர்த‌ல் ந‌ட‌க்கும் முறை என்று 19ம் நூற்றாண்டில் யாருமே க‌ன‌வு கூட‌க் க‌ண்டிருக்க‌வில்லை. உண்மையில், ஐரோப்பாவில் அன்றிருந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ம் என்ப‌து பாராளும‌ன்ற‌ அமைப்பைக் குறிக்கும். அது தொழில‌திப‌ர்க‌ள், ம‌ற்றும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ அறிவுஜீவிக‌ளின் பிர‌திநிதித்துவ‌த்தை கொண்டிருந்த‌து. 

 - பிரெஞ்சுப் புர‌ட்சிக்கு பின்ன‌ர் பிரான்ஸ் முற்றிலும் மாறுப‌ட்ட‌ நாடாக‌ இருந்த‌து. பூர்ஷுவா (முத‌லாளிய‌ வ‌ர்க்க‌ம்) புர‌ட்சியாள‌ர்க‌ளின் நாட்டுக்கு எதிராக, ம‌ன்ன‌ராட்சி ந‌ட‌ந்த‌‌ நாடுக‌ளான‌ பிரித்தானியா, ஜேர்ம‌னி, ஸ்பெயின், பியேமொன்த் (இத்தாலி) எல்லாம் போரிட்டு வ‌ந்த‌ன‌. ம‌திநுட்ப‌ம் வாய்ந்த‌ த‌ள‌ப‌தி நெப்போலிய‌னின் ப‌டைக‌ள் எதிர்ப்பை முறிய‌டித்தன‌. 

 - ஐரோப்பாவுட‌ன் ம‌ட்டும் நில்லாது, ஆங்கிலேய‌ கால‌னிய‌ மேலாதிக்க‌த்தை முறிய‌டித்து, வெற்றிக‌ர‌மாக‌ எகிப்து மீது ப‌டையெடுத்து, அதை கால‌னியாக்கி விட்டு திரும்பிய‌ நெப்போலிய‌னுக்கு பிரான்ஸில் ம‌க‌த்தான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப் ப‌ட்ட‌து. 

 - த‌லைந‌க‌ர் பாரிஸ் வ‌ந்த‌ நெப்போலிய‌ன், பாராளும‌ன்ற‌த்தில் த‌ன‌க்கு விசுவாச‌மான‌வ‌ர்க‌ளை சேர்த்துக் கொண்டு ச‌திப்புர‌ட்சி ந‌ட‌த்தினான். அத‌னால் ஜ‌ன‌நாய‌க‌ம் (அதாவ‌து: பாராளும‌ன்ற‌ம்) ந‌சுக்க‌ப் ப‌ட்டு நெப்போலிய‌னின் ச‌ர்வாதிகார‌ ஆட்சி உருவான‌து. 

 - இந்த‌ ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்த‌ தின‌ம் 18 ம் தேதி, புருமேர் (அக்டோப‌ர் அல்ல‌து ந‌வ‌ம்ப‌ர்?) VIII ம் ஆண்டு. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் புதிய‌ க‌ல‌ண்ட‌ர் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து. (அதே மாதிரி, பிற்கால‌த்தில் க‌ம்போடியாவில் க்மெர் ரூஜ் ஒரு புதிய கலண்டர் கொண்டு வந்தனர்) புதிய‌ க‌ல‌ண்ட‌ர் பிரெஞ்சுப் புர‌ட்சியில் இருந்து ஆர‌ம்பித்த‌து. மாத‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளும் மாற்ற‌ப் ப‌ட்ட‌ன‌. 

 - ஆக‌வே, அன்றிருந்த‌ பிரெஞ்சுப் புர‌ட்சிக் க‌ல‌ண்ட‌ர் ப‌டி, நெப்போலிய‌னின் ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்த‌ தின‌ம் 18 ம் தேதி, புருமேர் மாத‌த்தில் ஆகும். புருமேர் என்ற‌ சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் மூடுப‌னி என்று அர்த்த‌ம் உள்ள‌து. அன்று பிரான்ஸ் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌மும் மூடுப‌னியாக‌த் தான் இருந்த‌து. அர‌ச‌ ம‌ட்ட‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று தெரியாம‌ல் ம‌ர்ம‌மாக‌ இருந்த‌து. 

 - ஆக‌வே, கார்ல் மார்க்ஸ் ஒரு கார‌ண‌த்தோடு தான் த‌ன‌து க‌ட்டுரைக்கு 18ம் புருமேர் என்று த‌லைப்பிட்டிருக்கிறார். ஐரோப்பாவில், அன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் வாழ்ந்த‌வ‌ர்க‌ளுக்கு அத‌ன் அர்த்த‌ம் புரிந்திருக்கும். 

 - கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ நூல் இன்னொரு வித‌த்திலும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌து. பிரான்ஸில் நெப்போலிய‌னின் ச‌ர்வாதிகார‌ ஆட்சி உருவான‌ அதே பாணியில் தான், ஜேர்ம‌னியில் ஹிட்ல‌ரின் ச‌ர்வாதிகார‌மும் வ‌ந்த‌து. நிக‌ழ்வுக‌ளும், கார‌ண‌ங்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே மாதிரி அமைந்துள்ள‌ன‌. 

 - "வ‌ர‌லாறு திரும்புகிற‌து. ஒரு த‌ர‌ம் துய‌ர‌மாக‌வும், ம‌று த‌ர‌ம் வேடிக்கையாக‌வும்." எனும் மார்க்ஸின் பிர‌ப‌லமான‌‌ கூற்றும் அந்த‌ நூலில் தான் இட‌ம்பெற்றுள்ள‌து. 

 - எவ்வாறு ஒரு நாட்டில் உள்ள‌ முத‌லாளித்துவ‌ - ஜ‌ன‌நாய‌க‌ம், குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்ட‌த்தில் முத‌லாளித்துவ‌ - பாஸிச‌மாக‌ மாற்ற‌ம‌டைகின்ற‌து என்ப‌தை விள‌க்குகிற‌து. மார்க்ஸ் 19ம் நூற்றாண்டில் எழுதிய‌து, 21ம் நூற்றாண்டுக்கும் பொருந்துகிற‌து. இப்போதும் ப‌ல‌ர் ஜ‌ன‌நாய‌க‌ம் குறித்த‌ ம‌ய‌க்க‌த்தில் உள்ள‌ன‌ர். அந்த‌ ம‌ய‌க்க‌த்தை தெளிய‌ வைக்க‌ இந்த‌ நூல் உத‌வும்.