Monday, September 29, 2014

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்


ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர். கெல்ன் (Köln, ஆங்கிலத்தில்: Cologne) நகருக்கு அருகில் உள்ள, பூர்பாஹ் (Burbach) எனும் கிராமத்தில் உள்ள அகதி முகாமில் நடந்த சித்திரவதைகள் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன. 

ஓர் அல்ஜீரிய அகதியின் தலையை, இரண்டு பாதுகாவலர்கள் காலில் போட்டு மிதிக்கும் காட்சிகள், ஊடகங்களில் காட்டப் பட்டன. அதன் பின்னர், ஜெர்மன் அகதி முகாம்களில் வாழும் அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன. இது வரையில், கைத்தொலைபேசியால் எடுத்த வீடியோவும், நிழற்படமும் வெளியாகி உள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதாக கூறிய பொலிஸ் தரப்பு பேச்சாளர், "ஜெர்மனியின் குவாந்தனமோ பே" என்று வர்ணித்தார். 

கெல்ன் நகரம் அமைந்துள்ள, நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், உள்ளூர் தொலைக்காட்சி சேவையான WDR, இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அகதிகள் துன்புறுத்தப் படுவதாக படுவதாக, வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்ததாக அறிவித்துள்ளது. எஸ்சென்  (Essen) நகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள், வன்முறைக்கு உள்ளான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

ஜெர்மனியில், அகதிகளாக வருவோர், முகாம்களில் தங்க வைக்கப் படுகின்றனர். குறைந்தது ஒரு வருடத்திற்கு, அகதிகள் வேலை செய்ய அனுமதி கிடையாது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பிரயாணம் செய்ய முடியாது. 

முந்திய காலங்களில், அகதிகளின் பராமரிப்பை அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. தற்போது, அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். முழுப் பொருளாதாரமும் தனியார்மயத்தை நோக்கி நகரும் பொழுது, அகதிகளை மட்டும் விட்டு வைப்பார்களா?

நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், "European Homecare" எனும் தனியார் நிறுவனம் பல அகதி முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அந்த நிறுவனம், முகாம் தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு, பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. 

முகாமில் பணி புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், SKI எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் இரண்டு பாதுகாவலர்கள் தான், சித்திரவதை குற்றச்சாட்டில் சம்பந்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளனர். 

பூர்பார்க் முகாமில் சுமார் 700 அகதிகள் வசிக்கின்றனர். சித்திரவதை குற்றச்சாட்டு சம்பந்தமாக அவர்களில் பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும், சம்பந்தப் பட்ட பாதுகாவலர்கள் இனவெறியர்கள் என்பதை அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், "கடந்த காலங்களில் போதைவஸ்து பாவனை, வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக," பொலிஸ் தெரிவிக்கின்றது. "கிரிமினல்களை கடமையில் ஈடுபடுத்தும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்" என்று மாநில அரசின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

சாதாரணமாக, ஒருவர் விமான நிலையத்தில் கழுவித் துடைக்கும் வேலை செய்வதற்கு விண்ணப்பித்தாலே, பொலிஸ் சான்றிதழ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பு நிறுவனங்களில், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றி, பொலிஸ் பதிவுகளில் ஆராயாமல் சேர்த்துக் கொள்வார்களா? 

அகதி முகாம்களில் நடக்கும் சித்திரவதை தொடர்பாக, ஜெர்மன் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான die Linke மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்கள். 

"அகதிகளை முகாம்களில் தங்க வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதாபிமானமற்றது. அதிகார துஸ்பிரயோகத்தை உருவாக்குகின்றது. முகாம்களுக்குப் பதிலாக, அகதிகள் தாம் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்." என்று die Linke பாராளுமன்ற உறுப்பினர் Bernd Riexinger தனது கருத்தைத் தெரிவித்தார்.


மேலதிக தகவல்களுக்கு:
Bezirksregierung kündigt Sicherheitsdienst
NRW-Innenminister fordert nach Gewaltvorfall in Asylbewerberheim Härte
Misshandlungen in Burbach: Die Fakten über Sicherheitsdienste in Flüchtlingsheimen

அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது தொடர்பான தொலைக்காட்சி செய்தி அறிக்கை (ஜெர்மன் மொழியில்):
  

Thursday, September 25, 2014

"ஐ.எஸ். அழிப்புப் போர்" : அமெரிக்காவின் நிரந்தரப் போருக்கான ஆரம்பம்



சிரியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியில் அமர்ந்துள்ள 6 வருடங்களுக்குள், 7 நாடுகள் மீது குண்டு போட்டுள்ளார். அவை முறையே, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சோமாலியா, லிபியா, யேமன், ஈராக், சிரியா ஆகிய முஸ்லிம் நாடுகள். இந்த "உலக சாதனையை" நிலைநாட்டுவதற்குத் தான், ஒபாமாவிற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தார்கள் போலும்.

அமெரிக்காவின் "IS பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" உண்மையான நோக்கம் என்ன என்பது, இன்னும் யாருக்கும் புரியவில்லை. ஒபாமாவிடமே அது குறித்த தெளிவான கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. அனேகமாக, இது மத்திய கிழக்கில் ஒரு நிரந்தரப் போருக்கான ஆரம்பமாக இருக்கலாம்.

அமெரிக்காவின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பதா, அல்லது வளர்த்து விடுவதா? சிரிய போர்க்களத்தில் இருந்து எழும் பல கேள்விகளுக்கான விடைகள், இன்னமும் புரியாத புதிராகவே உள்ளன. அதற்குக் காரணம், இசிஸ் இயக்கத்திற்கு நாலா பக்கங்களிலும் எதிரிகள் உண்டு. அந்த எதிரிகள் கூட, அமெரிக்காவின் தாக்குதல்களினால் பாதிக்கப் படுகின்றனர். எதிரிக்கு எதிரி, எல்லா சந்தர்ப்பத்திலும் நண்பனாக இருப்பதில்லை.

சிரியா போர்க் களத்தில் இருந்து கிடைத்த தகவல்களை  இங்கே தொகுத்துத் தருகிறேன். "அமெரிக்காவின்  நண்பன் யார்? பகைவன் யார்?" என்று ஆராய்ந்தால், இறுதியில் நமக்கு குழப்பமே மிஞ்சும். உண்மையில், அமெரிக்காவின் நலன்களே எந்தக் காலத்திலும் நிரந்தரமானவை.


 1. சிரிய குர்து மக்களின் பேரவலம் 


சிரியாவில் குர்து மக்கள் வாழும் பிரதேசம், கடந்த மூன்று வருடங்களாக, PKK அல்லது YPG போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. YPG சிரியா குர்து விடுதலை இயக்கம் என்று தான் காட்டப் படுகின்றது. ஆனால், உண்மையில் YPG என்பது, துருக்கி குர்துக்களின் இயக்கமான PKK யின் ஒரு பிரிவு என்பது பொதுவான அபிப்பிராயம். அதனால், ஆரம்பத்தில் இருந்தே, துருக்கி சிரியாவுடனான எல்லைகளை மூடி விட்டு, கடுமையாக கண்காணித்து வந்தது.

செப்டம்பர் 20 அன்று, மொசுல் நகரில் கடந்த மூன்று மாதங்களாக, இசிஸ் இயக்கத்தினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டிருந்த, துருக்கி இராஜதந்திரிகளும், குடும்பத்தினரும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக, துருக்கி அரசு சில விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளது. குர்து மக்கள், துருக்கி தமது முதுகில் குத்தி விட்டதாக குற்றஞ் சாட்டுகின்றனர்.

அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். ஏனெனில், பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்ட அடுத்த நாளே, PKK/YPG கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்கள் பறிபோயின. பல குர்து கிராமங்களை கைப்பற்றிய இசிஸ் படையினர், இலட்சக் கணக்கான மக்கள் வாழும் கொபானி நகரை சுற்றி வளைத்துள்ளனர்.

இசிஸ் பயங்கரவாதத்திற்கு பயந்து இடம்பெயர்ந்த சிரிய குர்து அகதிகள், துருக்கிக்கு செல்ல முயன்றனர். ஆனால், எல்லையை பாதுகாக்கும் துருக்கிப் படையினர், அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். இதனால், சிரியா - துருக்கி எல்லையில் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. போக்கிடமற்ற அகதிகள், துருக்கி படையினர் மீது கல் வீசினார்கள். அகதிகளில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களும் இருந்த போதிலும், குறைந்த பட்ச மனிதாபிமான அடிப்படையிலாவது அவர்களை துருக்கிக்குள் அனுமதிக்கவில்லை.

துருக்கி ஜனாதிபதி எர்டோகன், "இசிஸ் பயங்கரவாதிகள் அல்ல, போராளிகள், ஆத்திரமுற்ற இளைஞர்கள்..." என்றெல்லாம் பேசியுள்ளமை, துருக்கியில் பலரால் கண்டிக்கப் பட்டது. அமெரிக்காவின் "இசிஸ் எதிர்ப்பு கூட்டணி நாடுகளில்" துருக்கி பங்குபற்றவில்லை. அது மட்டுமல்ல, துருக்கிக்குள் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக, கைது செய்யப் பட்டு சிறை வைக்கப் பட்டிருந்த, 150 இசிஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.

கொபானி நகரை முற்றுகை இட்ட சம்பவம், இசிஸ் - துருக்கி அரசின் கூட்டுச் சதித் திட்டம் என்று PKK கூறுகின்றது. ஒரு பக்கம் இசிஸ், மறுபக்கம் துருக்கி இராணுவம், அந்த நகருக்கு வெளியில் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்து வருகின்றன.

அண்மையில், துருக்கி அரசு, இசிஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள், யுத்த தாங்கிகள் அனுப்பியுள்ளதாக, PKK குற்றஞ் சாட்டுகின்றது. இசிஸ் இற்கு துருக்கி ஆயுத விநியோகம் செய்தமைக்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, PKK கமாண்டர் கராலியன் தெரிவித்துள்ளார். இசிஸ் இற்கும், துருக்கிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்புகளும் உள்ளன. இசிஸ், சிரியா எண்ணையை திருடி, துருக்கிக்கு விற்று வருவது தெரிந்ததே.


2. அல் நுஸ்ரா மீதான தாக்குதல் ஒரு தவறல்ல



சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களில், இசிஸ் பெரிய இயக்கமாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில், அல் நுஸ்ரா உள்ளது. சிரியாவில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பெருமளவு பகுதிகள், இசிஸ் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அல் நுஸ்ரா இன்னமும் சில பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

இசிஸ் இயக்கத்திற்கும், அல் நுஸ்ராவுக்கும் இடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. இசிஸ் ஒரு "பன்னாட்டு இயக்கம்." அதாவது, பல நாடுகளை சேர்ந்த ஜிகாத் போராளிகளே அதில் பெரும்பான்மையாக உள்ளனர். இசிஸ் ஈராக்கில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியா உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கையில் இடையில் நுளைந்தது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து, சிரியாவிலும், ஈராக்கிலும் வாழும் சன்னி முஸ்லிம் சமூகத்தின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என்று, இசிஸ் அறிவித்துக் கொண்டது. அது சிரியாவில் இருந்த பிற போராளிக் குழுக்களை அழிக்கத் தொடங்கியது.

சிறிய இயக்கங்கள் இசிஸ் உடன் மோத முடியாமல் மறைந்து போயின. மேற்குலகில் "மிதவாத" இயக்கம் என்று போற்றப்படும் சுதந்திர சிரிய இராணுவத்தின் (FSA) தளபதிகளும், போராளிகளும் தாமாகவே விரும்பி, இசிஸ் உடன் ஐக்கியமாகி விட்டனர். அல் நுஸ்ரா கொஞ்சம் பலமான இயக்கம் என்பதால், இசிஸ் அறிவித்த "ஏக பிரதிநிதி கோட்பாட்டை" ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. அதனால், இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் அடிக்கடி சகோதர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

அல் நுஸ்ரா, சிரியாவில் ஸ்தாபிக்கப் பட்டது. சிரியாவின் சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களின், தீவிர மதவாத இயக்கம். மேற்குலகில் அதிகம் ஆதரிக்கப் பட்ட கிளர்ச்சி இயக்கமான FSA யுடன் கூட்டணி அமைத்துள்ளது. அல் நுஸ்ராவிலும் வெளிநாட்டு ஜிகாதிகள் சேர்ந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் பலர் உண்மையிலேயே "இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வில்", சிரிய அரசுக்கு எதிராக போரிடுவதற்காக சென்றவர்கள்.

குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அல் நுஸ்ராவுக்கு ஆதரவாக நடந்து கொண்டன. அதனால், தாங்கள் ஒரு நீதியான போரில் ஈடுபட்டிருப்பதாக அந்த இளைஞர்கள் நம்பினார்கள். தற்போது, மேற்குலக நாடுகள் தமக்கு துரோகம் இழைத்து விட்டதாக குமுறுகிறார்கள். மேற்குலக நாட்டவர்கள் "பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள்" என்று குறைப் படுகின்றனர்.

அதற்குக் காரணம், அல் நுஸ்ராவின் முகாம்கள், கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளது. குறைந்தது பத்து அல் நுஸ்ரா போராளிகள் கொல்லப் பட்டனர். அதில் இரண்டு பேர் நெதர்லாந்து பிரஜைகள். இந்தத் தகவலை, தற்போது சிரியாவில் இருக்கும் நெதர்லாந்து ஜிகாதி ஒருவர் அறிவித்துள்ளார். அவர் தன்னை அல் நுஸ்ரா உறுப்பினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டுள்ளார். நெதர்லாந்தின் பிரபல தினசரியான de Volkskrant உடன் ஸ்கைப் மூலம் பேசி உள்ளார். மேலும், அமெரிக்க குண்டு வீச்சினால் சேதமடைந்த கட்டிடம் ஒன்றின் முன்னால் நின்று கொண்டு, டச்சு மொழியில் உரையாற்றும் வீடியோ இணையம் மூலம் பரப்பப் பட்டது.

அது நெதர்லாந்து தொலைக் காட்சியிலும் காண்பிக்கப் பட்டது. "இதோ பாருங்கள்! அமெரிக்கர்களும், அவர்களின் கூட்டாளிகளும் என்ன செய்திருக்கிறார்கள் என்று...." அந்த ஜிகாத் போராளியின் கூற்றின் படி, "அமெரிக்க குண்டுவீச்சுகள் பேரழிவை விளைவிக்கின்றன. அங்கு வாழும் மக்கள், மாவீரர்களாக தியாக மரணத்தை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்..." மேலும், அந்த வீடியோவில் ஜிகாதிப் போராளி கேட்கும் கேள்விகள் ஒரு வகையில் நியாயமானவை. 
  "அமெரிக்கா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்புப் போரின் நோக்கம் இசிஸ் இயக்கத்தை அழிப்பது என்றால், எதற்காக அல் நுஸ்ராவின் முகாம்கள் மீது குண்டு வீச வேண்டும்? அப்படியானால், உண்மையில் இது இசிஸ் எதிர்ப்புப் போர் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான போர்!"

அல் நுஸ்ரா முகாம் மீதான அமெரிக்க குண்டுவீச்சு, தற்செயலாக நடந்த விபத்து அல்ல. எது இசிஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசம், எது அல் நுஸ்ரா கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற துல்லியமான தகவல்கள் அமெரிக்காவிடம் உள்ளன. அல் நுஸ்ரா வெளிப்படையாகவே தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தனது இயக்கக் கொடிகளை பறக்க விட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு தெரிந்த ஒரு விடயம், அமெரிக்காவுக்கு தெரியாது என்று வாதிட முடியாது. அதனால், இது வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப் பட்ட தாக்குதல் தான்.

அமெரிக்காவின் இன்றைய பயங்கரவாத எதிர்ப்புப் போரின் முடிவுகள், நாங்கள் எதிர்பாராததாக அமையலாம். நேற்று வரையில், விரோதிகளாக மோதிக் கொண்டிருந்த இசிஸ் உம், அல் நுஸ்ராவும் ஒன்று சேரலாம். சிலநேரம், அது தான் அமெரிக்காவின் நோக்கமா என்பதும் தெரியவில்லை. மேலும், இத்தனை காலமும் மேற்குலகால் வெறுக்கப் பட்டு வந்த, சிரியாவின் ஆசாத் அரசின் எதிரிகள் தான், இன்று தாக்கப் படுகின்றனர். இது யாருமே எதிர்பார்க்காத ஒரு திருப்பம். அமெரிக்காவின் நோக்கம், ஆசாத் அரசு நிலைத்திருக்க வேண்டும் என்பதா?

சிரியா பிரச்சினையை, இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலகுவாகப் புரியும். ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரையில், பெரும்பாலான தமிழ் தேசியவாதிகள், அமெரிக்கா சிறிலங்கா மீது குண்டு போடும் என்று நம்பிக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அமெரிக்க விமானங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குண்டு போட்டிருந்தால், அது எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும்? அதை விட பல மடங்கு அதிர்ச்சி தான், தற்போது சிரியாவில் உண்டாகி உள்ளது.

ஏனெனில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆசாத் பதவி விலக வேண்டும் என்று, ஒபாமாவின் நிர்வாகம் வற்புறுத்தி வந்தது. சிரியாவிடம் இருந்த இரசாயன ஆயுதங்களை காரணமாகக் காட்டி, ஆசாத் அரசை கவிழ்க்கப் போவதாக சூளுரைத்து வந்தது. இது எல்லாவற்றையும் விட, இன்றைக்கும் சிரியா தான் இஸ்ரேலுடன் சமாதானமாகப் போகாத ஒரேயொரு அயல் நாடு. மேற்குலக எதிரி நாடாக கருதப் படும், சிரியாவில் ஆசாத் அரசு தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது தான், அமெரிக்காவின் நோக்கமா? இருக்காது. கணக்கு எங்கேயோ பிழைக்கிறது.

Tuesday, September 23, 2014

வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!


ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.php?fbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில், மே 17 இயக்கத்தின் "சுதந்திர வேட்கை" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.

முதலாளித்துவ நாகரிகம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது?

ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.

இது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.

வட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.

ஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.

வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் காரணம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.

ஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். "நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்..." என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.

அதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.

தமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.

1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.

உண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா? இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

சிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. "புலி ஆதரவாளர்கள்", "புலி எதிர்ப்பாளர்கள்" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.

ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும்? "உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழிநடத்த முடியாது.

தமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா? நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், "ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது?" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.

தமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.

ஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.

"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது..." என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.

1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.

ஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.

வளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.

ஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன? ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

பவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் "இங்கிலாந்துக்காரர்களை" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா? ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள்? எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள்? வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.

அது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா? எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்? பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா? ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.

அது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள்? எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர்? ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு "இல்லை" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.

ஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, "இல்லை" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை? உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன? விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா?

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

இதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா? அதனால் அதற்கு என்ன இலாபம்? ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக? கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா? இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.

தமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமிழீழத்தின் நாணயம் எது? சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா? அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

தமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள்  = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)

தமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.) 

உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.


  • பொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!





ஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:

Saturday, September 20, 2014

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில் கள்ள ஒட்டு மோசடி! பிரிட்டனின் பித்தலாட்டம்!!


இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளில் மட்டும் தான், தேர்தலில் கள்ள ஒட்டு போடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? "வளர்ச்சி அடைந்த", "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளிலும் அது தாராளமாக நடக்கிறது.  ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில், பிரிட்டிஷ் அரசுக்கு சார்பான முடிவுகளைப் பெறுவதற்காக, கள்ள ஒட்டு போடப் பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. வாக்குச் சீட்டு எண்ணுபவர்களே கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர். ஆஹா! இதுவன்றோ ஜனநாயகம்!

ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு, கடந்த 18 செப்டம்பர் இடம்பெற்றது. வாக்கெடுப்புக்கு முன்னர், பிரிவினைக்கு ஆதரவாக "ஆம்" என்று வாக்களிக்க விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப் பட்டது. பிரிந்து சென்றால் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்கள் வந்த படியால், "இல்லை" என்று வாக்களிக்க விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இறுதியில், ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரானவர்கள் வென்றதாக அறிவிக்கப் பட்டது.

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பிரிவினைக்கு எதிரான, "இல்லை" ஓட்டுக்களில் பல, கள்ள ஓட்டுகளாக போடப் பட்டிருக்க வாய்ப்புண்டு. இங்கேயுள்ள வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் பதிவாகி உள்ளன. வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில், பல "ஆம்" ஓட்டுகள், "இல்லை" ஓட்டுகளுடன் சேர்த்து எண்ணப் பட்டுள்ளன. வாக்குச் சீட்டு எண்ணும் நிலையத்தில் இருந்தவர்களே கள்ள ஒட்டு போட்டுள்ளனர். அதுவும், இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் என்பது, பொது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு மோசடி நாடகம். அமெரிக்காவில் 2000 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில், நிறைய முறைகேடுகள் நடந்த படியால், உலகமே அமெரிக்காவின் ஜனநாயகத்தை பார்த்து கை கொட்டிச் சிரித்தது. கள்ள ஓட்டுகள் காரணமாக, புளோரிடா மாநிலத்தில் வாக்குகள் எண்ணும் பணி திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்த படியால், முடிவுகள் ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் ஜோர்ஜ் புஷ்ஷும், ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோரும் போட்டியிட்டார்கள். தேர்தலில் பெரும்பான்மை வாக்காளர்கள் அல் கோருக்கு வாக்களித்திருந்த போதிலும், ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக தெரிவானார். அமெரிக்க ஜனாதிபதி, மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மையை, அன்று தான் உலகம் முழுவதும் அறிந்து கொண்டது.




உலகில் எந்தவொரு தேசிய இன விடுதலைக்கான இயக்கத்தினதும் பின்னால், ஏழை உழைக்கும் வர்க்க மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மறைந்திருக்கும். ஈழம் மட்டுமல்ல, ஸ்காட்லாந்திலும் அது தான் உண்மை. ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பில், வர்க்க வேறுபாடு துலக்கமாகத் தெரிகின்றது. ஏழை மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "ஆம்" என்றும், மத்தியதர, மேல்தட்டு வர்க்க மக்கள் வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் "இல்லை" என்றும் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, ஏழை உழைக்கும் வர்க்க மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிளாஸ்கவ் நகரில், கூடுதலான ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன.

மேற்கத்திய நாடுகள் தேர்தல் ஜனநாயகத்தை விரும்புவதற்கு காரணம், அதன் முடிவுகளை விரும்பியவாறு மாற்றிக் கொள்ளலாம். பெரும் மூலதனத்தை கொண்டுள்ள முதலாளிகளின் விசுவாசம் எந்தப் பக்கம் உள்ளது என்பது மட்டுமே முக்கியம். அது தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறது. மக்களின் கருத்துக்களை கட்டமைக்கும் வல்லமை பொருந்திய ஊடகங்கள் அவர்களின் கைகளில் இருக்கின்றன.

இந்த வாக்கெடுப்பின் முடிவில், ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவான சக்திகள் தோல்வியடைந்து விட்டதாக கருதுவது அபத்தமானது. உண்மையில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. "இல்லை" என்று வாக்களித்தால், மாநில சுயாட்சியும், அதிகாரப் பரவலாக்கலும் தருவதாக, பிரிட்டிஷ் அரசு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும். தனி அரசு அமைப்பது ஒரு தூர நோக்கிலான இலட்சியமாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலத்தில் நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அனேகமாக, உலகில் உள்ள எல்லா தேசியவாத அமைப்புகளின் அரசியல் அது தான்.

சுயநிர்ணய உரிமை என்றால், பிரிந்து சென்று தனி அரசு அமைப்பது என்ற அர்த்தம் இல்லை. இந்த உண்மையை, புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த காலஞ்சென்ற அன்டன் பாலசிங்கம் உணர்ந்திருந்தார். "தமிழீழம் பிரிந்து செல்வதை, எந்தக் காலத்திலும் சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் பிரிவினையை உச்ச பட்ச கோரிக்கையாக வைத்திருப்போம். அதிக பட்சம் அதிகாரப் பரவலாக்கலுடன் மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள முடியும்." புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்தவர்களிடம் அன்டன் பாலசிங்கம் அவ்வாறு கூறி இருந்தார். இறுதி யுத்தத்திற்கு முன்னர், தாய்லாந்தில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அன்டன் பாலசிங்கம் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தார்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்;
ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு

Thursday, September 18, 2014

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது


1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.

 "Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.

"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.

எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.

உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.

அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.

வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக தகவல்களுக்கு: 
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr 
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson

Monday, September 15, 2014

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு


ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2005 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட அனர்த்தத்தை பார்வையிட, இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் வந்திருந்தனர். அப்போது, வடக்கிலும், கிழக்கிலும், விடுதலைப் புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

புலிகளும், புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களும், அமெரிக்க ஜனாதிபதிகள் சுனாமியால் பாதிக்கப் பட்ட முல்லைத்தீவுக்கு வருவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான கிளிண்டனும், ஜோர்ஜ் புஷ்ஷும், மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களை பார்வையிட்டு விட்டு நாடு திரும்பினார்கள்.

சுனாமி அனர்த்த நிவாரணமாக, USAID மூலமாக, அமெரிக்க அரசு ஏராளமான நிதி வழங்கி இருந்தது. USAID, தனது நடவடிக்கைகளை சுனாமியுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக பயன்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து, கள அறிக்கை ஒன்றை தயாரித்தது. திருகோணமலை முதல் அம்பாறை வரையிலான, தமிழ்ப் பிரதேசங்களில் எந்தெந்த இடங்கள் சுற்றுலாத் துறையை வளர்க்க உதவும் என்று ஆராய்ந்துள்ளனர்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக, மகிந்த ராஜபக்ச, "மகிந்த சிந்தனை" என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்து வெளியிட்டார். அதிலும், USAID குறிப்பிட்ட கிழக்கு மாகாணப் பிரதேசங்களில், சுற்றுலாத் துறையை வளம் படுத்துவது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திருக்குமா?

அமெரிக்க பின்னணியில், நோர்வே அனுசரணையில், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப் படாமல் காலம் கடந்து கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு, சுனாமி அனர்த்தம் நடப்பதற்கு முன்னர், இரண்டு தரப்பினரும் எந்த விதமான சமரச உடன்படிக்கைக்கும் வரவில்லை.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவுகள் காரணமாக, அரசினதும், புலிகளினதும் போரிடும் ஆற்றல் வெகுவாகக் குறைத்திருந்தது. அந்தத் தருணத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் P-TOMS எனும் உடன்படிக்கை எட்டப் பட்டது. சுனாமி நிவாரணத்தை நிர்வகிக்கும் பெயரில், சிறிலங்கா அரசும், புலிகளும் ஒரு சமரசத்திற்கு கொண்டு வரும் நோக்கிலான, அமெரிக்காவின் முயற்சியில் தான் அதுவும் சாத்தியமானது.

பேச்சுவார்த்தைகள் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும், அமெரிக்கா எதிர்பார்த்த சமாதானம் மட்டும் வரவில்லை. இதற்கிடையில், புலிகளும் போருக்கு தயாராவதற்காக, நான்கு ஆயுதக் கப்பல்களை தருவித்திருந்தனர். மட்டக்களப்பு கரையில் இருந்து, சுமார் ஆயிரம் கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில், சிறிலங்கா கடற்படையினரால் அந்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப் பட்டன. புலிகளின் கப்பல்கள் பற்றிய தகவல்களையும், செய்மதிப் படங்களையும் கொடுத்துதவியது வேறு யாருமல்ல. அமெரிக்காவே தான்.

தற்போது ஈழப் போர் நடந்து முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. கிழக்கு மாகாண கரையோரத்தை சுற்றுலாத் துறைக்கு தாரை வார்க்கும் திட்டம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. புலிகள் இருந்த காலத்தில், அவர்கள் அமெரிக்காவையோ, அந்நிய மூலதனத்தையோ எதிர்க்கவில்லை. சுற்றுலாத்துறையை ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு குண்டு கூட வெடிக்க வைக்கவில்லை. ஏனெனில், புலிகள் மேற்கத்திய நாடுகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. 

நீண்ட காலமாக இழுபட்ட தமிழ் - சிங்கள இன முரண்பாடு, சுற்றுலா முதலாளிகளின் எண்ணம் ஈடேற விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அதாவது, ஒரு தமிழ்க் கிராமத்தின் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிலங்கள் அபகரிக்கப் பட்டாலும், அவற்றை பயன்படுத்த முடியாத அளவிற்கு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் புலிகளின் பிரதேசங்களுக்குள் தஞ்சம் கோருவதும், பின்னர் அந்த மக்கள் மத்தியில் இருந்து போராளிகள் உருவாவதும் தொடர்கதையாக நடந்து கொண்டிருந்தது.

புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழர்களின் நிலங்களை அபகரித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஏழைத் தமிழர்கள் என்பதால், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் அக்கறை இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாசிக்குடா, அறுகம் குடா, அம்பாறை, பொத்துவில் போன்ற பிரதேசங்களில், தமிழருக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப் பட்டுள்ளன. 

அம்பாறையில் சில தமிழ்க் கிராமங்களில், சீருடை அணிந்த நபர்கள் குடிசை வீடுகளை கொளுத்தி, மக்களை வெளியேற்றி உள்ளனர். சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களும் கூட இந்த தகவல்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளன. ஏனெனில், வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமையை விட மிகவும் உறுதியானது. 

கிழக்கு மாகாணத்தில், சிறிலங்கா அரச படைகளின் நில அபகரிப்பினால் பாதிக்கப் பட்டவர்கள், தமிழர்கள் மட்டுமல்ல. வில்பத்து சரணாலயத்தை அண்டிய 900 ஏக்கர் நிலங்களை, கடற்படையினர் அடாத்தாக பறித்துள்ளனர். சில சிங்களக் கிராமங்களும் அதற்குள் அடங்குகின்றன. கிழக்கு மாகாணத்தில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

முன்னொரு காலத்தில், சிங்கள இராணுவம் தமிழர்களுக்கு என்ன கொடுமை இழைத்ததுவோ, அதையே தற்போது சிங்களவர்களுக்கும் செய்கின்றது. ஏனெனில், சிறிலங்காவில் இருப்பது வெறுமனே சிங்கள பேரினவாத இராணுவம் மட்டுமல்ல. பெரும் முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதும் அதன் முக்கிய கடமை தான். 

ஈழப்போர் நடந்த காலங்களில், தமிழர்கள் மட்டுமே பாதிக்கப் பட்டனர். பல தமிழ்க் கிராமங்களில் வாழ்ந்த மக்களை வெளியேற்றிய அரச படையினர், அவற்றை சிங்களக் கிராமங்களாக மாற்றினார்கள். பிற்காலத்தில் போர் நடந்த காலத்தில், புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்களக் கிராமங்களை தாக்கினார்கள். இதன் மூலம், அரசு சிங்களவர்களையும், தமிழர்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்க முடிந்தது. 

2014, மார்ச் மாதம், என்றுமில்லாத அதிசயமாக, நிலமிழந்த தமிழ், சிங்கள கிராமவாசிகளின் ஒன்று பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பாணமை, சாஸ்திரவெல, ராகம்வெல, உல்லா ஆகிய கிராமங்களை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

போர் முடிந்த அடுத்த வருடம், 2010 ஆம் ஆண்டு, அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். நிலமிழந்த கிராம மக்கள், கொழும்பில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், அரசு சார்பான மனித உரிமைகள் ஆணைக்குழு, நிலமிழந்த மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும், காலங்காலமாக வசித்து வந்த கிராமங்களில் இருந்து விரட்டப் படும் காரணம் என்ன? இங்கே தான், சிங்கள பேரினவாதம், அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாகின்றது. இலங்கையை, தாய்லாந்து போன்று உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக்குவது தான் அவர்களது குறிக்கோள்.

சுற்றுலா நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வளங்கள் அத்தனையும் இலங்கையில் உள்ளன. இலங்கையின் அழகான கடற்கரைகள் உலகப் புகழ் பெற்றவை. மேலைத்தேய உல்லாசப் பிரயாணிகள் பலருக்கு, இலங்கை ஒரு சொர்க்கபுரி. "கிழக்கு மாகாணக் கடற்கரைகள், அலை மேல் சறுக்கும் விளையாட்டிற்கு (surf) ஏற்ற இடம். உலகத் தரம் வாய்ந்தது." என்று USAID கூறுகின்றது. உள்ளூர் இளைஞர்களுக்கு சிறிது ஆங்கில மொழி அறிவைக் கொடுத்து, ஹோட்டல் பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது.

அதாவது, நேரடியாகச் சொல்வதென்றால், சிறிலங்கா படையினரால் அபகரிக்கப் பட்ட நிலங்களில், சுற்றுலா விடுதிகள் கட்டப் படவுள்ளன. அவற்றில் வேலை செய்வதற்கு, நிலங்களை பறிகொடுத்த மக்களை பணியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம். தாய்லாந்திலும், தென்னிலங்கையிலும் நடப்பதைப் போன்று, சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தால் பாலியல் தொழிலாளர்களும் பெருகி விடுவார்கள். முதலாளிகளின் இலாபவெறியை கருத்தில் கொண்டு, அது போன்ற தீய விளைவுகளை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விட வேண்டும்.

"மகிந்த ராஜபக்ச இனப் படுகொலையாளன். எப்படியும் அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் போட்டு தண்டித்து விடும்..." என்று நாங்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருந்தாலும், எதுவுமே நடக்காத காரணம் இது தான். மகிந்த சிந்தனையும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். 

"புலிகள் இப்போதும் இருக்கிறார்கள். மீண்டும் போரிட வருவார்கள்..." என்றொரு பொய்யைக் கூறித் தான், பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய நில அபகரிப்புகளை நியாயப் படுத்துகிறார். ஆனால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன என்ற உண்மையை மட்டும் கூற மாட்டார். மரத்தால் விழுந்தனை, மாடேறி மிதித்தது போல, தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கு உலக வங்கியும் ஒத்துழைக்கிறது.

உலக வங்கி, அமெரிக்க அரசு, மகிந்த அரசு ஆகியன தமிழர்களை கூட்டாக சேர்ந்து ஒடுக்குகின்றன. இந்த நேரத்தில், நடுத்தர வர்க்க தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வலதுசாரி தமிழ்தேசியவாதிகள் சிலர், ஏகாதிபத்திய விசுவாசத்தை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றனர். அதாவது, "தமிழர்கள் நில உரிமைக்காக போராடவில்லையாம், தன்னைத் தானே ஆளும் அரசு அமைக்க போராடுகிறார்களாம்."

இதனால் அவர்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி இது தான்: "எங்களிடம் தமிழீழம் தந்திருந்தால், நாங்களே அந்த நிலங்களை அபகரித்துக் கொடுத்திருப்போம்!" அப்படி இல்லையென்றால், அபகரிக்கப் பட்ட தமிழரின் நிலங்களை சுற்றுலா ஸ்தலமாக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்பாக அவர்களது நிலைப்பாடு என்ன? 

"தமிழீழத்தை ஆளப் போகும் தமிழர்களும்", உலக வங்கியிடம் தானே கடனுதவி கேட்டு கையேந்தப் போகிறார்கள்? அப்போது இதே அம்பாறை நிலங்களை பறித்து பன்னாட்டு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, உலக வங்கி உத்தரவிட மாட்டாதா?

இங்கே கூறப்பட்டுள்ள விபரங்கள், மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட மேட்டுக்குடி பெரு மக்களுக்கு மட்டும் தான் புதினமாகத் தோன்றும். அம்பாறையில் வாழும் ஏழை உழைக்கும் வர்க்க தமிழர்கள், தமது  எதிரிகளை சரியாகவே எடை போட அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள், நிலமிழந்த சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடினார்கள். 

அம்பாறையில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழ் மக்கள், தமது பொது எதிரியான, சிறிலங்கா தரகு முதலாளிய அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, உலகவங்கி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவ்வளவு காலமும், இனவாத சக்திகளின் சொல்லைக் கேட்டு, சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்கள் இழந்தது அதிகம்.

இவ்வளவு காலமும் இனவாதக் குட்டையை கலக்கிக் கொண்டிருந்த முதலைகளான பன்னாட்டு முதலாளிகள், சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் தைரியமாக திரிகின்றனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருமில்லை. எல்லோரும் தமிழனா, சிங்களவனா என்ற கயிறிழுப்புப் போட்டியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையை மறுகாலனியாக்குவதற்கு இதுவே சரியான தருணம்.


மேலதிக தகவல்களுக்கு:

  • USAID: Sri Lanka connecting regional economies, Assesment of Tourism in Eastern, Uva, and North Central provinces of Sri Lanka; http://www.bpa-srilanka.com/files/USAID-CORE-Tourism-Assessment_1_.pdf
  • Illegal Land Grabs By Sri Lanka Navy Destroys Wilpattu National Park; https://www.colombotelegraph.com/index.php/illegal-land-grabs-by-sri-lanka-navy-destroys-wilpattu-national-park/
  • Human Rights Commission Is Inactive: Villagers Of Panama Protest Land Grabbing; https://www.colombotelegraph.com/index.php/human-rights-commission-is-inactive-villagers-of-panama-protest-land-grabbing/

Saturday, September 13, 2014

சினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு!


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் "ஹவுஸ் புல்" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு "மாற்றுக்"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.

தமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.

தமிழகத்தில் வெளியான ஒரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது? தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

ஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் "அடுத்த தேசியத் தலைவர்" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

ஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.

பிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்கள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, "ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.

சிறிலங்கா அரசு உடனே அதனை "புலி ஆதரவு படம்" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா? இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.

தமிழ் நாட்டில் நிறைய "தீவிரவாதிகள்" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, "தீவிரவாதிகள்" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.

அரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் "தமிழ் தேசிய" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.

ஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்?

வேறொன்றுமில்லை. "இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே!" என்பதை கொஞ்சம் "நாகரிகமாக" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்
2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது
3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!

Thursday, September 11, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு, தமிழீழவாதிகள் நிராகரிப்பு


ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும், என்பதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பின் பின்னர், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிந்து செல்லுமா? அதனால் ஏற்படப் போகும் விளைவுகள் என்ன? எதிர்காலம் குறித்து யாராலும் கணிப்பிட முடியாமல் உள்ளது.

பிரிட்டனில் ஸ்காட்லாந்தில் மட்டுமே எண்ணை, எரிவாயு வளம் உள்ளது. ஸ்காட்லாந்து பிரிவினை, பிரிட்டனுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கலாம். அதனால், பங்குச் சந்தையில் பதற்றம் நிலவுகின்றது. நிச்சயமற்ற தன்மை காரணமாக, பிரிட்டிஷ் பவுனுடைய பெறுமதி திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

அது சரி, ஸ்காட்லாந்து தனி நாடாவது குறித்து, "தமிழீழ ஆதரவாளர்கள்" என்ன நினைக்கிறார்கள்? பாலஸ்தீன பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம், "What about Tamileelam?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்பவர்கள், தற்போது மௌனமாக இருக்கும் காரணம் என்ன? "ஸ்காட்லாந்து மாதிரி தமிழீழத்திற்கும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்து, அதை மாபெரும் அரசியல் இயக்கமாக முன்னெடுக்கலாமே?

குறிப்பாக, பிரிட்டனில் வாழும் தமிழீழவாதிகளான தமிழர்கள் பலர், இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்திற்குரியது. கியூபெக் தனி நாடாவதை, எத்தனை கனடாத் தமிழர்கள் ஆதரிக்கிறார்கள்? புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பலர், தங்களை தமிழீழவாதிகள் என்று காட்டிக் கொண்டாலும், மேற்குலக நாட்டு அரசுக்களுக்கு விசுவாசமாகத் தான் இருக்கிறார்கள்.

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர்.

முதலில் இதனை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவாக கருத முடியுமா? இரண்டாம் உலகப்போரின் இறுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலகட்டமும் முடிவுக்கு வந்து விட்டது. முன்பு பிரிட்டன் வகித்திருந்த பாத்திரத்தை அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளது. மேலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது, கண்ணுக்கு புலனாகும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வெளித் தோற்றம் ஆகும். ஸ்காட்லாந்தில் எண்ணை, எரிவாயுத் துறையில் முதலிட்டுள்ள BP, உலகப் புகழ் பெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதித் துறை ஜாம்பவான்களான ஸ்காட்டிஷ் வங்கிகள் போன்றவற்றில், இங்கிலாந்தின் செல்வாக்கு அளவுக்கு அதிகமாகவே உள்ளது.

பெரும் வணிக நிறுவனங்களின் பங்குகள், ஸ்காட்லாந்து பிரிவினைக்குப் பிறகும் மாறப் போவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு, அவை தமது தலைமையகங்களை லண்டனில் வைத்திருக்க சாத்தியம் உண்டு. ஸ்காட்லாந்து தனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கப் படும். பிரிட்டன் தொடர்ந்தும் இருக்கும். அது மட்டுமல்ல, ஒரே பவுன் நாணயத்தை வைத்திருப்பதற்கு ஸ்காட்லாந்து தேசியவாதிகள் விரும்பினாலும், இங்கிலாந்தில் உள்ளவர்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள். 

இது போன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்து பிரிந்து சென்றாலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறையப் போவதில்லை. மேலும், லண்டனில் இருந்து கிடைக்கும் நிதியுதவியை இழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய மாநிலங்கள், தனி நாட்டுக் கோரிக்கையை நினைத்துப் பார்க்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஸ்காட்லாந்து பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள், அண்மைக் காலத்தில் அதிகரித்தமைக்கு, இடதுசாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி (Scottish National party (SNP)) தான் ஸ்காட்லாந்து பிரிவினைக்கு பாடுபட்டு வந்தது. அது ஒரு தேசியவாதக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், பொது மக்களைக் கவர்வதற்காக இடதுசாரி அரசியல் பேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள இடதுசாரி சக்திகளை அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது.

SNP இன் தோற்றம் கூட, மார்க்கிரட் தாட்சரின் நியோ லிபரல் கொள்கையின் எதிர்விளைவாக உருவானது தான். தாட்சர் அறிமுகப் படுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்கும் மக்களை வரி என்ற பெயரில் சுரண்டி வந்தது. பெரும்பான்மை மக்களால் வெறுக்கப் பட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்து பரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இன் அரசியல் கூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்கள் நினைவுபடுத்தப் பட்டன. 

மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்போரை தண்டிக்கும் நோக்கில் bedroom tax எனும் புதிய வரி கொண்டு வரப் பட்டது. அதாவது, ஏழைக் குடும்பங்கள் வாழும் வீடுகளில், தேவைக்கு அதிகமாக படுக்கையறைகள் இருந்தால், ஒவ்வொரு அறைக்கும் வரி கட்ட வேண்டும். பெரும்பான்மை ஸ்காட்டிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரிப்பதற்கு, அதுவும் ஒரு காரணம்.

Glasgow போன்ற நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சினையும் அங்கே அதிகம். அதனால், "ஸ்காட்லாந்து தனி நாடானால், சமூக நலத் திட்டங்கள் தொடர்ந்தும் இருக்கும், எண்ணை விற்பனையில் வரும் வருமானம் அதற்கு செலவிடப் படும்" என்றெல்லாம், SNP பிரச்சாரம் செய்து வருகின்றது. 

SNP கட்சியினர், தங்களை இடதுசாரி தேசியவாதிகள் என்று காட்டிக் கொள்வது பாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைக் கட்சியினரும், ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியினரும், இடதுசாரி கொள்கைகளின் கீழ்த் தான், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள்.

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்லாது, லேபர் கட்சியும் ஸ்காட்லாந்து பிரிவினையை ஒன்று சேர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவ் கட்சியை விட, லேபர் கட்சிக்கு தான் இழப்புகள் அதிகம். அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்காட்டிஷ் லேபர் கட்சியினர், தற்போது பிரிவினையை ஆதரிக்கிறார்கள். 

மேலும் பிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகள் எல்லாம் ஸ்காட்லாந்து பிரிவினயை எதிர்த்து வருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்தில் இடதுசாரி அலை வீசுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் கூறி வருகின்றனர். அது எந்தளவு சாத்தியம் என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளின் சம்மதம் அதற்கு அவசியம். தங்களது நாடுகளுக்கு உள்ளே பிரிவினைவாத சக்திகளை கொண்டுள்ள, ஸ்பெயின் போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டலாம். 

சுதந்திர ஸ்காட்லாந்து ஏற்படுத்தக் கூடிய முதலாவது சர்வதேச தொடர்பு, IMF அல்லது உலகவங்கியிடம் கடன் வாங்குவது தான். அது அயர்லாந்து குடியரசான காலகட்டத்திற்கு தான் ஸ்காட்லாந்தை இழுத்துச் செல்லும். இறுதியில் தேசியக் கொடிகள் மட்டுமே மாறி இருக்கும். மற்றவை எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்.

Tuesday, September 09, 2014

மதுரை முதல் மாத்தறை வரை : பாண்டியர்களின் சிங்கள உறவுகள்


தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான், தமிழர், மலையாளிகள், சிங்களவர் என்று தெளிவாக வேறு பிரித்து அறியக் கூடிய மொழி அடிப்படையிலான இனங்கள் உருவாகி இருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள், மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன. அதற்கு முன்னர் இருந்த சமுதாயங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி நாகரிகமடைந்து வந்துள்ளன.

மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு, விஜயனின் வருகையுடன் ஆரம்பமாகின்றது. வட இந்தியாவில் இருந்து கப்பலில் வந்திறங்கிய விஜயனும், அவன் தோழர்களும் சிங்களவர்கள் அல்ல. அவர்கள் சிங்களம் பேசியதாக மகாவம்சமும் குறிப்பிடவில்லை. ஆனால், வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தவறான தகவல். பௌத்த மத மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த பிக்குகளால் மகாவம்சம் எழுதப் பட்டது. அதனால், பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, விஜயனின் பூர்வீகம் வங்காள தேசம் என்று எழுதினார்கள். ஏனெனில், வங்காள தேசத்தில் இருந்து தான் இலங்கைக்கு பௌத்த மதம் கொண்டு வரப் பட்டது.

அப்படியானால், விஜயனின் தாயகம் எது? சரித்திர அறிஞர்கள், அகழ்வாராய்ச்சியாளர்களின் நீண்ட கால ஆய்வுக்குப் பின்னர், அது குஜராத் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. கி.மு. 5௦௦ ஆண்டளவில் குஜராத் கடலோடிகள் தெற்காசியாவின் பல பாகங்களுக்கும் சென்றுள்ளனர். இலங்கைத் தீவுக்கு செல்லும் கடல் பாதையில் உள்ள மாலைதீவிலும் அவர்கள் குடியேறி இருக்கலாம். ஜாதக, புராணக் கதைகளில் அது தொடர்பான குறிப்புகள் உள்ளன. சிங்களவர், குஜராத்திகளின் படகு கட்டும் பாணியும் ஒரே மாதிரி உள்ளது. அது மட்டுமல்லாது, இலங்கையிலும், குஜராத்திலும் ஒரே மாதிரியான வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே, சிங்களவர்களின் மூதாதையர் குஜராத்தில் இருந்து வந்திருக்கலாம்.

சிங்கள மொழி கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய புதிய மொழி. பாளி,சமஸ்கிருதம்,தமிழ் ஆகிய மொழிகள் ஒன்று கலந்து உருவானது. விஜயனின் கதை உண்மையா என்பது இன்னமும் நிரூபிக்கப் படவில்லை. அனேகமாக, குஜராத்தில் இருந்து அந்நிய நாடொன்றுக்கு வாணிபம் செய்வதற்கு சென்ற கடலோடிகளின் கப்பல் உடைந்து, இலங்கைக் கரையை வந்து சேர்ந்திருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், விஜயன் வந்த காலத்தில், தென்னிந்தியாவில் பாண்டியர்களின் நாடு இருந்திருக்கிறது. குவேனி உள்நாட்டு ஆதிவாசிப் பெண்ணை விட்டுப் பிரிந்து சென்ற விஜயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணம் முடித்திருக்கிறான். பாண்டிய மன்னனும் பல நூறு பெண்களை இலங்கைக்கு அனுப்பி, விஜயனின் தோழர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கிறான்.

இதிலிருந்து ஓர் உண்மை தெரிய வருகின்றது. விஜயனும் அவன் தோழர்களும் ஆரம்பத்தில் குஜராத் மொழி பேசி இருக்கலாம். ஆனால், அவர்களின் வழித்தோன்றல்கள் ஒரு வகையில் பாண்டியர்களாக அல்லது தமிழர்களாக மாறி விட்டனர். இதற்குப் பல ஆதாரங்களைக் காட்டலாம். பாண்டிய நாட்டின் தலைநகராக மதுரை இருந்தது. தென்னிலங்கையில் உள்ள மாத்தறை நகரம், மதுர என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், மாத்தறையிலும், அம்பாந்தோட்டையிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்று பாழடைந்து போயுள்ள இந்துக் கோயில்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன.

பாண்டிய நாட்டின் நாகரிகம் வளர்ந்த நதியின் பெயர் தாமிரபரணி ஆறு. விஜயனும் தோழர்களும், தம்பபண்ணி எனும் இடத்தில் வந்திறங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது. தம்பபண்ணி என்பது இலங்கையின் புராதன காலப் பெயர். அத்தோடு, இன்றைய புத்தளம் பகுதியில் இருந்த பழைய நகரம். கிரேக்கர்கள் தப்ரோபானே(Tabrobane) என்று அழைத்தார்கள்.

அனேகமாக, தப்ரபேன், தம்பபண்ணி ஆகிய சொற்கள் தாமிரபரணி என்ற பெயரின் திரிபாக இருக்கலாம். இலங்கையில் நடந்த சம்ஸ்கிருதமயமாக்கலை தொடர்ந்து, பௌத்த பிக்குகள் சிஹலம், சீலம் போன்ற சொற்களை விரும்பிப் பாவித்தனர். வெனிஸ் நாட்டு கடலோடியான மார்க்கோ போலோ, அதனை செய்லான் என்று குறிப்பிட்டார். அதனால் தான் போர்த்துக்கேயர்கள் செய்லோன் என்றும், ஆங்கிலேயர்கள் சிலோன் என்றும் அழைத்து வந்தனர்.

கிறிஸ்துவுக்கு முந்திய காலகட்டத்திலேயே, இலங்கை பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இருந்துள்ளது. அதற்கு காரணம், நீரைத் தேக்கி வைக்க கட்டப்பட்ட அணைக் கட்டுகள், மற்றும் பல நாடளாவிய நீர்ப்பாசன திட்டங்கள். ஆங்கிலத்தில் "Anicut" என்றால், தமிழில் அணைக்கட்டு. ஆங்கிலம் கடன் வாங்கிய தமிழ்ச் சொற்களில் அதுவும் ஒன்று. இந்தியாவின் மிகப் பழைய அணைக்கட்டு, தாமிரபரணி ஆற்றை மறித்துக் கட்டப் பட்டது. அநேகமாக, அணைக்கட்டு கட்டும் தொழில்நுட்ப அறிவு, அன்றைய பாண்டிய நாட்டிற்கும், இலங்கைக்கும் இடையில் பரிமாறப் பட்டு வந்துள்ளது.

மகாவம்சம் குறிப்பிடும், விஜயனின் வம்சாவளியில் வந்த முக்கியமான அரசன் ஒருவனின் பெயர் "பண்டுகாபயன்." பண்டு என்பது பாண்டியர்களைக் குறிக்கும் சொல். உண்மையில், பண்டு அல்லது பண்டைய என்ற சொல் தான் பாண்டியர்கள் என்று மருவி வந்திருக்க வேண்டும். அனேகமாக, பாண்டியர்கள் தான் மிகவும் பழமையான தமிழ் அரச வம்சமாக, இன்னும் சொல்லப் போனால் புராதன தமிழ்க் குடியாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு காலத்தில், பாண்டிய மன்னர்களும், மக்களும் ஆதி கால வரலாற்றில் மறவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். இன்றைக்கும் ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள மறவர் சாதியினர் அந்த தொடர்பை நினைவுபடுத்தலாம். காலனிய காலத்திற்கு சற்று முந்திய நாயக்கர் ஆட்சிக் காலம் வரையில், மறவர்கள் போர்க்குணாம்சம் மிக்க தென்னிந்திய சத்திரியர்கள் போன்று கருதப் பட்டனர்.

பாண்டியர்கள் என்பது சம்ஸ்கிருதமயமாகிய பெயர்ச் சொல். ரோம சாம்ராஜ்யத்திற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்துள்ளன. ரோமர் காலத்தில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான பிளினி, பாண்டிய நாட்டைப் பற்றிப் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாண்டியர்களை "பாண்டியோனிஸ்" என்று கிரேக்க மயப் படுத்தி உள்ளார். மதுரை நகரம் "மெதூரா" என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இன்றைய ராமேஸ்வரம் என்ற பெயர் பிற்காலத்தில் வந்திருக்கலாம். ஏனெனில், பிளினியின் வரலாற்று நூலில் அது பாம்பன் தீவு என்று எழுதப் பட்டுள்ளது. மேலும், பாண்டிய நாட்டின் வரலாற்றையும் பிளினி கிரேக்க கண்ணோட்டத்துடன் எழுதி உள்ளார். (இந்திய) ஹெர்குலஸ் தெய்வத்தின் ஒரே மகளான பாண்டியா அரசி ஆட்சி செய்த படியால், அதற்கு பாண்டிய நாடு என்று பெயர் வந்த கர்ண பரம்பரைக் கதையை கூட எழுதி இருக்கிறார்.

சேர, சோழ, பாண்டியர்கள் தமிழ் சமூகத்தில் மூவேந்தர்கள் என்று கொண்டாடப் படுகின்றனர். ஆனால், அன்றைய காலத்தில் அந்த மன்னர்களுக்கு இடையில், ஓர் "இன அடிப்படையிலான ஒற்றுமை உணர்வு" இருந்திருக்கவில்லை. உண்மையில் மொழி உணர்வு, தேசியவாதம் என்பன இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களினால் அறிமுகப் படுத்தப் பட்ட அரசியல் கொள்கைகள் ஆகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களிடம் அப்படி எந்த உணர்வும் இருக்கவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே இருக்கவில்லை. ஆகவே, பண்டைய சமூகங்களின் வரலாற்றை, மொழி அடிப்படையில் பார்ப்பது எமது தவறு.

சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள், கிட்டத்தட்ட தமிழ் போன்று ஒலிக்கும் பல வட்டார மொழிகளைப் பேசி இருப்பார்கள். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய மொழிகளாக இருக்கலாம். ஆனால், இன்றிருப்பதைப் போன்று, அன்றைய மக்கள் எல்லோரும் ஒரே பொது மொழியை பேசியதாக கூற முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டிலும் அப்படியான நிலைமை இருக்கவில்லை.

சங்க காலத்தில் இலக்கியங்கள் புனைவதற்கும், செய்யுள்கள் இயற்றுவதற்கும் தமிழ் மொழி பயன்பட்டது. சமுதாயத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிரபுக்களும், புலவர்களும் செம் மொழியான தமிழைப் பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தார்கள். அதற்காக, பண்டைய காலங்களில் வாழ்ந்த "தமிழர்கள்" செந்தமிழ் பேசினார்கள் என்று நாம் நினைத்துக் கொள்வது அறியாமை.

சிங்களமும் பல நூறாண்டுகளாக பிரபுக்களாலும், பிக்குகளாலும் மட்டுமே பேசப் பட்டது. பண்டைய காலங்களில் வாழ்ந்த "சிங்களவர்கள்" எல்லோரும் சிங்களம் பேசினார்கள் என்று நினைத்துக் கொள்வது அவர்களது அறியாமை. சாதாரண மக்களும் சிங்களம் படிக்கும் உரிமை, சாதியின் பெயரால் மறுக்கப் பட்டது. இந்தியாவில் சமஸ்கிருதம் கோலோச்சிய காலங்களில் சூத்திரர்கள் அதனைப் படிப்பது தடுக்கப் பட்டது. அமெரிக்கக் கண்டங்களில், கருப்பின அடிமைகள் ஐரோப்பியரின் மொழிகளை கற்பது தடை செய்யப் பட்டிருந்தது.

உலகில் பல நாடுகளில், அரசர்களின் மொழியும், குடிமக்களின் மொழியும் வேறு வேறாக இருந்துள்ளன. அதற்குப் பல உதாரணங்களைக் காட்டலாம். இங்கிலாந்து அரச வம்சத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். நோர்வீஜிய பிரபுக்கள் டேனிஷ் மொழி பேசினார்கள். ஹங்கேரி நாட்டு மேட்டுக்குடியினர் ஜெர்மன் மொழி பேசினார்கள். இந்தியாவில் மொகலாயர்கள் பாரசீக மொழி பேசினார்கள். இவை எதுவும் அவர்களின் சொந்த மொழியும் அல்ல, அதே நேரத்தில் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களாலும் பேசப் படவில்லை.

ஐரோப்பாவில்,19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட, அரசியல் பொருளாதார மாற்றங்களின் காரணமாகத் தான், உலகம் முழுவதும் தேசிய மொழிகளின் அவசியம் உணரப் பட்டது. ஆனால் அந்த தேசிய மொழிக் கொள்கை, வட்டார மொழிகளின் அழிவின் மேல் நிலைநாட்டப் பட்டது.


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்: 
1.The International Institute for Asian Studies (IIAS) 
2.A History of Tinnevelly, Bishop R. Caldwell 
3.The Hindus: An Alternative History, Wendy Doniger


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, September 06, 2014

அமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்!


அமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.  

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். "ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது.  பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். "இது எனது முதல் துப்பாக்கி!" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் வகையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் "குழந்தைத் துப்பாக்கி" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். "எனது முதல் துப்பாக்கி" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 "குழந்தைத் துப்பாக்கிகள்" விற்கப் பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென  விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன? பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள். 

அமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். "துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.

சிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்! அதற்கு வயதெல்லை கிடையாது!! 

மிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். "ஆயுத உரிமைகள் நிறுவனம்" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான். 

(தகவல்களுக்கு நன்றி: NRC Handelsblad, 6 september 2014)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"
2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

Friday, September 05, 2014

மலபார் தமிழ் : காலனிய காலத்தில் ஏற்பட்ட நவீன தமிழின் உருவாக்கம்


"தமிழர்" என்ற சொல், எந்தக் காலத்தில் இருந்து ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லானது? நிச்சயமாக, இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது, அந்நியர்கள் கூட "தமிழர்" என்ற வார்த்தையை பாவித்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. ஆனால், தென்னிந்தியாவில் தமிழர்கள், மலையாளிகளுக்கு பொதுவாக "மலபாரிகள்" என்ற பெயர் இருந்துள்ளது. அந்நிய நாட்டவர்கள், பல நூறு வருடங்களாக தமிழர்களையும் "மலபாரிகள்" என்று தான் அழைத்து வந்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், அநதச் சொல் புழக்கத்தில் இருந்துள்ளது.

ரொட்டர்டாம் நகரில் நடந்த
மலபாரிகளின் (தமிழர்) கண்காட்சி.
அந்தக் காலங்களில், காலனிய நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களை கூட்டிக் கொண்டு வந்து, அவர்களை வேடிக்கையான காட்சிப் பொருளாக்குவது சர்வசாதாரணம். ஐரோப்பியர்கள் தமிழர்களையும், மிருகங்கள் போன்று மனிதக் காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள். 

1902 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் தமிழர்களின் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 50 பேர் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், "பாம்புக்கு மகுடி ஊதுவது, கயிற்றின் மேல் நடப்பது" போன்ற பாரம்பரிய கலைகளை, ஐரோப்பியர்களின் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும். ரொட்டர்டாம் நகரில் நடைபெற்ற அந்தக் கண்காட்சியை பார்க்க வருமாறு, டச்சு மக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதற்காக ஒரு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப் பட்டுள்ளது. 
(ஆதாரம்: De exotische mens; Andere culturen als amusement)

ரொட்டர்டாம் நகரில் நடந்த கண்காட்சி பற்றிய துண்டுப்பிரசுரத்தில், "மலபாரிகள் (அதாவது இன்றைய தமிழ்நாட்டவர்கள்) தமது பாரம்பரிய கலைகளை நிகழ்த்திக் காட்டுவதாகவும், அதனைக் கண்டுகளிக்க வருமாறும்" எழுதப் பட்டுள்ளது. ஓரிடத்தில் "மலபாரிகளின் பாடசாலை" கீறிக் காட்டி, அதிலே கரும்பலகையில் "கடவுள்" என்று தமிழ் எழுத்துக்கள் இருந்தன. வீணை வாசிப்பவர்கள், மிருதங்கம் அடிப்பவர்களும் வரையப் பட்டிருந்தனர்.

காலனிய காலத்தில், கிறிஸ்தவ மதத்தை தழுவிய மலபாரிகள் (இன்றைய தமிழர்கள்) பேசிய மொழி, ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களினால் "தமுள்" (தமிழ்) என்று அழைக்கப் பட்டது. அதுவே நாங்கள் இன்று பேசும், எழுதும் நவீன தமிழ் மொழி ஆகியது. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன.

முதன்முதலாக அச்சிடப் பட்ட தமிழ் நூல் 
இந்தியாவில் முதன்முதலாக அச்சிடப் பட்ட நூல், ஒரு தமிழ் நூல். 1578 ஆம் ஆண்டு, கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அச்சிடப் பட்ட அந்த நூலின் பெயர் Doctrina Christam. இன்றைய கேரளாவின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக அது எழுதப் பட்டது.

இருபது வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அச்சிடப் பட்ட அதன் பெயர் "Doctrina Christam In Lingua Malabar Tamul" என்றிருந்தது. போர்த்துகேய எசுயிஸ்ட் பாதிரியார் ஹென்றிக், அதனை தொகுத்திருந்தார். ஆரம்பத்தில் லத்தீன் எழுத்துக்களைக் கொண்டும், பின்னர் மலையாள, தமிழ் எழுத்து வடிவங்களிலும் எழுதப்பட்டது. இந்தியாவில் இருந்த போர்த்துகேய காலனியான கோவாவில் அது அச்சிடப் பட்டது.

காலனிய காலத்தில், ஐரோப்பியர்கள் தென்னிந்தியர்கள் அனைவரையும் "மலபாரிகள்" என்று அழைத்து வந்தனர். வடக்கு கேரளாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பேசிய மொழி தனியாக "தமுள்" என்று அழைக்கப் பட்டது. வடக்கு கேரளாவில் ஏற்கனவே சிரிய கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். அவர்கள் மூலமும் "தமுள்" என்ற சொல் வந்திருக்கலாம். தமுள் என்பது, இன்றைய சிரியா, ஈராக்கில் வாழ்ந்த புராதன மக்கள் இனமான அசிரியர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் ஆகும்.

1716 ஆம் ஆண்டு, Ziegenbalg எனும் டச்சு கத்தோலிக்க பாதிரியார் தமிழ் இலக்கண நூல் எழுதினார். அதிலும் அவர், தமிழை, "மலபாரி மொழி" என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கான நூல் என்பதால், மெட்ராஸ் பகுதியை ஆண்ட ஆங்கிலேயர்கள் "Ziegenbalg's Grammatica Damulica" என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.

Philippus Baldaeus எனும் இன்னொரு டச்சு பாதிரியார், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து ஈழத் தமிழ் மக்களின் மொழியை கற்றுத் தேறினார். அவர் "ஈழத் தமிழ் மக்களை மலபாரிகள்" என்று தான் அழைத்துள்ளார். Philippus Baldaeus எழுதிய முக்கியமான நூலான "Nauwkeurige beschrijving Malabar en Choromandel" தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளது.

ஐரோப்பிய பாதிரிகளால் எழுதப் பட்ட தமிழ் இலக்கண நூல்கள் யாவும், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்குடன் தான் எழுதப் பட்டுள்ளன. அனேகமாக, ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டவர்கள் தமிழ் பிராமணர்கள். அதனால், தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட கிறிஸ்தவ போதனைகளில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் கலந்துள்ளன.

எது எப்படி இருந்த போதிலும், காலனிய ஆட்சிக் காலமும், கிறிஸ்தவ மதப் பரப்புரைகளும், நவீன தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வாழ்ந்த கிறிஸ்தவ மலபாரிகள் பேசிய "தமுள்", இன்றைக்கு நாம் பாவிக்கும் தமிழாகி உள்ளது.

தமிழ் மொழி ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தான். ஆனால், பண்டைய கால, மத்திய கால தமிழர்கள் பேசிய தமிழ் எமக்கு சுத்தமாகப் புரியாது. சிலநேரம் அது வேறொரு மொழியாகத் தோன்றும். நாங்கள் இன்றைக்குப் பேசும் நவீன தமிழ் மொழி, காலனிய காலத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய மக்களின் மொழியாக இருந்தது. அது ஆரம்பத்தில் மலபாரிகளின் மொழி என்று அழைக்கப் பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவர் அல்லாத மலபாரிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய தேவை உணரப் பட்டது. அதனால், தமுள்-மலையாளம் என்றும், கடைசியில் தமிழ் என்றும் அழைக்கப் பட்டது.

கன்னடம் தெலுங்கு, மலையாளம் என்பவற்றிற்கு தாய் தமிழ் என்று மொழியாய்வாளர்கள் சொல்கிறார்கள். அது இன்றைக்கு நாங்கள் பேசும் நவீன தமிழ் என்று, நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு பொது மொழி இருந்திருக்க வேண்டும். அதன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாம் இன்று பேசும் தமிழ் மொழி, சம்ஸ்கிருதம் அதிகளவில் கலக்காத மொழி. அதனால், அது புராதன கால பொது மொழியுடன் தொடர்புடையது என்று நம்ப இடமுண்டு.

இன்றைய தமிழுக்கும், மலையாளத்திற்கும் முந்திய மொழியை, மொழியியலாளர்கள் தமிழ் என்றே குறிப்பிட்டு வந்தனர். கல்வியாளர்கள் படிப்பதற்கு இலகுவாக ஒரு சொல்லை பாவித்தார்கள். உயிரியலில் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவான பெயர் சூட்டி படிப்பது மாதிரித் தான் இதுவும்.

 தென்னிந்தியர்களுக்கு இடையிலான பொதுவான தன்மையை குறிப்பிடுவதற்கு, சமூக விஞ்ஞானிகள் "திராவிடர்" என்ற சொல்லை பயன்படுத்தினார்கள். ஆனால், உண்மையில் திராவிடர் என்ற இனம் அல்லது மொழி இருக்கவில்லை. சமூக - விஞ்ஞானிகள் தாம் இலகுவாக கற்பதற்கு வசதியாக பாவித்த கலைச் சொற்களை, அரசியல்வாதிகள் தமது அரசியல் கொள்கைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

தமிழில் இருந்து மலையாளம் பிறந்தது என்று, தமிழர்களான நாங்கள் மட்டும் தான் சொல்கிறோம். மலையாளிகள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஜெர்மன் மொழியில் இருந்து, டேனிஷ், டச்சு மொழிகள் உருவாகின என்று ஜெர்மன் காரர்கள் சொல்லலாம். ஆனால், டேனிஷ், டச்சு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இன்றைய ஜெர்மன், டேனிஷ், டச்சு மொழிகளுக்கு பொதுவான புராதன ஜெர்மன் மொழி ஒன்று இருந்தது என்று தெளிவாக கூற வேண்டியுள்ளது. அது தான் உண்மையும் கூட.

ஆங்கிலம் கூட ஒரு ஜெர்மானிய மொழி தான். ஆனால், அதன் அர்த்தம் இன்றைக்கு பேசப்படும் ஜெர்மன் மொழியில் இருந்து ஆங்கிலம் வந்தது என்பதல்ல. முற்கால ஜேர்மனிய இனமான ஆங்கிலோ - சாக்சன் மக்கள் பேசிய முற்கால ஜெர்மன், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ், கெல்டிக் மொழிகளுடன் கலந்து தான் நவீன ஆங்கிலம் உருவானது. அதே மாதிரி தமிழும் சமஸ்கிருதமும் கலந்து மலையாளம் உருவானது. ஆனால், அந்தத் தமிழ், இன்றைக்கு நாங்கள் பேசும் அதே தமிழ் அல்ல.

பண்டைய கால ஆங்கிலம் ஐஸ்லாந்து மொழி போல எழுதப் பட்டிருக்கும். அதனை இன்றுள்ள ஆங்கிலேயர்களினால் வாசித்தறிய முடியாது. தமிழ், ஆங்கிலம் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா மொழிகளும் மாற்றங்களுக்கு உள்ளாகித் தான் வளர்ந்து வந்துள்ளன. அவற்றைப் பேசும் மக்களும் வெவ்வேறு இனங்களில் இருந்து கலந்து உருவாகினார்கள். இது உலக நியதி. அதை மாற்ற முடியாது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
2.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்