Wednesday, January 13, 2021

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும்

"இலங்கை சீனாவின் காலனி ஆகிறது" என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆபிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக, ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவ பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன அதுமட்டுமல்ல ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாத பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில் சீனாவின் நவ காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து சீன மொழி கற்பிக்கப்படுகின்றது அங்கு சீன மொழி படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு. 


கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். "எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?" என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்து போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார். 

 

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டோரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமான பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும் அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையை கூட பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரான போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாக பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததை தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாத பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இது தான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை "காப்பிலிகள்" என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்று தான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும் மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள் தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாத பாகுபாடும் அத்தகைய மனநிலையில் இருந்து தான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்களோ, அதையே தான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாக கண்டறிந்தார். அதாவது எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால் சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன் முன்னாள் காலனியாதிக்க வாதிகளான மேற்கத்திய நாடுகளும் இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களை பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன. 


முதலாவதாக பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்கு போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்க கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசி மெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆபிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை காலமும் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ஜனநாயகம் பேணப்பட வேண்டும் என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால் சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது, போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற் தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு. கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவ காலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆபிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந் நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும் முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துகொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது. இது போன்று தான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை, அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள் தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமை தான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

சீன மொழியை தாமாக விரும்பி படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்ப பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர். இலங்கை இந்தியாவில் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.


இந்தக் கட்டுரை யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

Friday, January 08, 2021

அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்!

அமெரிக்காவில் "தேடப்படும்" தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள்.  
 

"டிரம்ப் ஆதரவாளர்கள்" என்ற பெயரில், அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை சூறையாடி ஜனநாயகத்தை வீழ்த்திய தீவிர வலதுசாரி, பாஸிச, நிறவெறிக் கும்பல்கள் பற்றிய விரிவான தகவல்கள். அமெரிக்காவிலும் பாஸிஸ்டுகள் ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகள் என்பதால் ஊடகங்கள் இனிவரப்போகும் பாசிச அபாயத்தை குறைத்து மதிப்பிட்டு வருகின்றன. 

 

 

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கணிப்பிட்டு, அது குறித்து கீழேயுள்ள காணொளிப் பதிவை வெளியிட்டிருந்தேன். மேலதிக விபரங்களுக்கு அதையும் பார்க்கவும்: 

 

அமெரிக்காவில் டிரம்பின் பாசிச சதிப்புரட்சி! 

//- சனவரி 20 அளவில் புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அங்கு எதுவும் நடக்கலாம்.// (11 November 2020)

Thursday, January 07, 2021

சத்குருவின் கத்துக்குட்டி கம்யூனிசம், ஆன்மீகத்திற்கே அவமானம்!

 

News 18 நேர்காணலில் ஆன்மீகக் குரு சத்குரு ஜாக்கி வாசுதேவ், கம்யூனிசம், தனியுடமை குறித்து அரைவேக்காட்டுத்தனமான பதில்களைக் கூறியுள்ளார். இவற்றில் கம்யூனிசம் குறித்த அவரது அறியாமை, முட்டாள்தனம் நன்கு புலப்படுகின்றது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் கம்யூனிசம் குறித்த தேடல்கள் அதிகரித்து வருவதால், முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள் சத்குரு போன்ற பிரபலங்களின் வாயால் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வைக்கும் நோக்கமாகவே இந்த நேர்காணலை கருத இடமுண்டு. இங்கு நான் சத்குருவின் அரைவேக்காட்டுத்தனமான பதில்களுக்கு எனது எதிர்வினையை முன்வைக்கிறேன்.



சத்குருவின் அபத்தமான கூற்று: 
//சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தன்னை சோஷலிஸ்ட் (சமூகவுடைமை) நாடாக அறிவித்துக் கொண்டது. சோஷலிஸம் என்பது வீரியம் குறைக்கப்பட்ட கம்யூனிசம் (பொதுவுடைமை) தான். அதாவது முழுமையான கம்யூனிசத்தை பின்பற்ற தைரியம் இல்லாததால், சோஷலிஸக் கொள்கைகளை பின்பற்றுவதாக அறிவித்துக் கொண்டோம். இது தான் நம் நாட்டின் பிரச்சினைகளுக்குக் காரணம். நாம் யார், என்ன வேண்டும், என்ன செய்ய உத்தேசித்திருக்கிறோம் என எதையும் தெளிவாக, தைரியமாக சொல்லமாட்டோம். அது, இது, என்று ஏதேதோ சொல்லி மழுப்புவதால், ஒவ்வொருவரும் நாம் எவ்வழியில் செல்ல திட்டமிடுகிறோம் என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.//


சோஷலிசம் என்பது "வீரியம் குறைக்கப் பட்ட கம்யூனிசம்" அல்ல. இது ஒரு சிறுபிள்ளைத்தனமான புரிதல். பெரும்பாலான உலக நாடுகளைப் பொறுத்த வரையில், சோஷலிசம் என்பது முதலாளித்துவ துன்பங்களில் இருந்து தற்காலிக வநிவாரணியாக அரசு முன்னெடுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உள்ளடக்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சமூக ஜனநாயக கட்சிகளின் செல்வாக்கு காரணமாக சோஷலிச திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவில் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், தன்னை ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாகக் கருதிக் கொண்டது. சோஷலிசம் என்றாலே திட்டமிடல் பொருளாதாரம் என்று தான் அர்த்தம். ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில் தாம் அடைய விரும்பும் இலக்குகள் பற்றி முன்கூட்டியே தெளிவாக சொல்லி விடுவார்கள். அந்த இலக்குகள் எட்டப் பட்டனவா? தோல்வி அடைந்தனவா? என்பதெல்லாம் வேறு விடயம். இந்தியாவில் அரசு முன்னெடுத்த திட்டங்களில் இருந்த குறைகளை கூறலாம். குறைந்த பட்சம் அதைப் பற்றி விமர்சித்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இங்கே சத்குரு சோஷலிசம் என்றால் என்னவென்று தெரியாமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்.

சத்குருவின் அபத்தமான கூற்று: 
//கார்ல் மார்க்ஸ்-க்கு பொருளாதாரம் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால் மனிதர்களைப் பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது என்று தான் சொல்லவேண்டும்.// 
 
இதைச் சொல்வதற்கு முன்னர் கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்க வேண்டும். அவர் எழுதிய நூல்களை மேம்போக்காக என்றாலும் விரித்துப் பார்த்திருக்க வேண்டும். எதுவும் தெரியாமல் உளறக் கூடாது. கார்ல் மார்க்ஸ் இரண்டாவது தெரிவாகத் தான் பொருளாதாரம் படித்தார். அவர் முதலில் படித்தது தத்துவம். அது மனிதர்களைப் பற்றியது அல்லாமல் வேறென்ன? ஓர் "ஆன்மீகக்"(?) குருவான சத்குருவுக்கு தத்துவம் என்றால் என்னவென்று நான் விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். இங்கேயுள்ள பிரச்சினை ஆன்மிகம் சாராத பொருள்முதல்வாத தத்துவம் என்ற ஒன்று இருப்பதை சத்குரு மறைக்கப் பார்க்கிறார். இதையே ஐரோப்பாவில் இருந்த கிறிஸ்தவ ஆன்மீகக் குருக்களும் செய்தனர். அரிஸ்டாட்டில், சோக்கிரடீஸ் போன்ற ஆதிகால கிரேக்க தத்துவ ஞானிகள் முன்மொழிந்த பொருள்முதல்வாதக் கருத்துக்கள் கூட இருட்டடிப்பு செய்யப் பட்டன. கார்ல் மார்க்ஸ் அவற்றை தூசு தட்டி எடுத்துக் காட்டினார். தத்துவஞானிகளின் நோக்கம் உலகை மாற்றுவது தான் என்று எடுத்துரைத்தார். தத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்றார். அதனால் தான் கார்ல் மார்க்ஸ் வரலாற்று இயங்கியல் என்ற தத்துவத்தை உருவாக்கினார்.

சத்குருவின் அபத்தமான கூற்று: 
//....(கார்ல் மார்க்ஸ்) தான் வழங்கிய கோட்பாட்டைப் பின்பற்றி உலகின் செல்வச் செழிப்பான நாடுகள் எப்படி கம்யூனிஸ்ட்டாக மாறிவிடும் என்றும் மக்கள் அனைவரும் தங்கள் செல்வங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார்கள் என்றும், அதன்பின் இவ்வுலகே எப்படி பிரமாதமாக மாறிவிடும் என்றும் அவர் விவரித்திருந்தார். இது ஒரு அற்புதமான கனவு. அதில் சந்தேகம் இல்லை. யோசித்துப் பாருங்கள், உலகில் எல்லோரும் சமமாக இருப்பர். 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி அதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வார். கேட்பதற்கு இது நிச்சயம் நன்றாகத் தான் இருக்கிறது!//


சிறுபிள்ளைத்தனமான உளறல். சத்குரு இந்தளவு பாமரத்தனமாக பேசுவார் என்று நாமும் கனவு கூட கண்டிருக்க மாட்டோம். கார்ல் மார்க்ஸ் தனது கோட்பாட்டை பின்பற்ற சொல்லவில்லை. ஒரு சோஷலிச சமுதாயத்தை விஞ்ஞானபூர்வமாக அடைவது எப்படி என்பதை விளக்கிக் கூறினார். எழுத்துடன் நில்லாமல் செயலிலும் இறங்கினார். முதலாவது பாட்டாளிவர்க்க அகிலம் உருவாக ஒத்துழைத்தார். அது ஒரு போராட்டத்தின் தொடக்கம் மட்டுமே. செல்வச் செழிப்பான நாடுகள் ஒரே இரவில் கம்யூனிஸ்டாக மாறிவிடும் என்று மார்க்ஸ் ஒருபோதும் சொல்லவில்லை. உழைக்கும் வர்க்க மக்களின் ஆயுதமேந்திய புரட்சிகள் மூலம் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சி வீழ்த்தப் படும் என்றார். அதை அவர் கண்கூடாகக் கண்டார். கார்ல் மார்க்ஸ், 1848ம் ஆண்டு நடந்த ஜெர்மன் புரட்சியில் பங்கெடுத்தமைக்காக இரகசியப் பொலிசாரால் தேடப் பட்டு வந்தமையால் தான், பெல்ஜியம், பிரான்ஸ் என்று அகதியாக அலைந்தார். அவரது வாழ்நாள் காலத்தில் தான், 1871ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் புரட்சி நடந்தது. ஆனால், அவையெல்லாம் ஆளும் முதலளைத்துவ அரசால் கொடூரமாக நசுக்கப் பட்ட பாட்டாளிவர்க்க புரட்சிகள். தனது பாதுகாப்புக்காக ஒரு கூலிப்படையை போஷித்து வளர்த்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு, பாட்டாளி வர்க்க மக்களும் ஆயுதபாணிகளாக்கப் பட வேண்டும். இது ஒரு மிக நீண்ட போராட்டம். ஒரே இரவில் எதுவும் மாறாது. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. 100 கோடி சம்பாதிப்பவரும், சிறிதும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புரட்சிக்குப் பின்னர், மக்கள் விரோத சக்திகளான நிலப்பிரபுக்கள், பணக்காரர்கள், முதலாளிகள் போன்றவர்கள் மக்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப் படுவார்கள். அவர்களது சொத்துக்கள் மக்கள் உடைமையாக்கப் படும்.

சத்குருவின் அபத்தமான கூற்று: 
//பொதுவுடைமைப் புரட்சி நடந்து முடிந்த ருஷிய நாட்டிற்கு, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் சென்றிருந்தார். ‘அடடா! செல்வந்தர்கள் எல்லாம் தங்கள் செல்வத்தை எளியோருடன் பகிர்ந்து கொள்ளப்போகும் அற்புதக் காட்சியை காணப் போகிறேன். எல்லோரும் சமம். எல்லோருக்கும் சமவாய்ப்பு. கேட்பதற்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே, இதை நேரில் பார்த்தால்...’ என்று ஆனந்தக் கனவோடு ருஷியாவிற்கு சென்றார் அவர்.//


இதைச் சொல்வதற்கு முன்னர், மார்க் டிவைன் எந்தக் காலத்தில் வாழ்ந்தார் என்பதை தேடி அறிந்து கொள்வது நல்லது. ரஷ்யப் புரட்சி நடந்தது 1917ம் ஆண்டு. மார்க் டிவைன் அதற்கு முன்னரே அதாவது 1910ம் ஆண்டே இறந்து விட்டார். ரஷ்யா சென்றது மார்க் டிவைன் ஆவியாக இருக்க வேண்டும்! பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். சத்குரு தானாக கற்பனை செய்த ஒரு கதையை புளுகுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.

சத்குருவின் அபத்தமான கூற்று: 
//எப்போதுமே மக்கள் தங்களிடம் இல்லாதவற்றை பகிர்ந்து கொள்ளவே தயாராக இருக்கின்றனர். பரம ஏழைகள் பொதுவுடைமை பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நிலைமை மிக மோசமாக மாறியது. பொதுவுடைமை மிக அற்புதமான எண்ணம்தான். அதை செல்வந்தர்கள் பின்பற்றி இருந்தால், அது ஒரு அழகான சூழ்நிலையை உருவாக்கியிருக்கும். இவ்வுலகில் ஒரு ஆன்மீக சூழலை அது தோற்றுவித்திருக்கும். இவ்வுலகமே ஆசிரமமாக மாறி இருக்கும்.//


சத்குருவுக்கே ஆன்மீக போதனை செய்ய வேண்டிய நிலைமை இருப்பது ஒரு காலக்கொடுமை! குருவே! சாதாரண உழைக்கும் மக்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால், சொத்துக்களை ஆண்டு அனுபவித்து வரும் பேராசை பிடித்த பணக்காரர்கள் பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்பது தான் கேள்வி. பொதுவுடைமை சமுதாயத்தில் இருப்பவன், இல்லாதவன் என்ற வேறுபாடு இருக்காது. அதை செல்வந்தர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது, "மயிலே மயிலே இறகு போடு" என்று கேட்பது போன்று மடமையானது. ஓர் இடத்தில் மேடு இருந்தால் பக்கத்தில் பள்ளம் இருக்கும். அதாவது, பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் சிறுபான்மை பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த செல்வங்களை தான் இவர்கள் பறித்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இன்று மனித சமுதாயம் அனுபவிக்கும் பல துன்பங்கள், துயரங்களுக்கு பின்னால் முதலாளித்துவ சுரண்டல் உள்ளது. அதை திரை போட்டு மறைப்பதற்கு தான் சத்குருவுக்கு ஆன்மிகம் தேவைப் படுகிறது. பொதுவுடைமை "அற்புதமான எண்ணம்" அல்ல, அது மனித நாகரிக வளர்ச்சியின் உச்சக்கட்டம். ஒரு பொதுவுடமைச் சமுதாயத்தில் ஆச்சிரமங்களுக்கு அவசியம் இருக்காது. அதற்குப் பதிலாக கூட்டுறவு பண்ணைகள் இருக்கும்.

சத்குருவின் அபத்தமான கூற்று: 
//ஆனால் உலகின் ஏழைகள்தான் அதை ஆதரிக்கத் துவங்கினர். தங்களால் உழைத்து சம்பாதிக்க முடியாததை, அடித்துப்பிடுங்க அவர்கள் முனைந்தனர். எல்லோருக்கும் சமபங்கு என்னும் போர்வையில் கொள்ளையும், திருட்டும் ஒரு தத்துவமாக ஆதரிக்கப்பட்டன. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பழகி, பகிர்ந்து, மிக அழகான, அற்புதமான ஒன்றாய் இருந்திருக்க வேண்டியது... மனித நேயத்தின் இணையில்லா வெளிப்பாடாய் அமைந்திருக்க வேண்டியது... மிக அசிங்கமான, கொடூரமான ஒன்றாய் உருவெடுத்தது. ஆம், பொதுவுடைமை என்ற பெயரில் மிகமிகக் கொடூரமான செயல்கள் அரங்கேற்றப்பட்டன.//


யாரும் ஏழையாக இருப்பதால் பொதுவுடைமையை ஆதரிக்கவில்லை. பெரும்பாலான ஏழைகளுக்கு தாம் ஏன் ஏழையாக இருக்கிறோம் என்ற அடிப்படை அறிவு கூடக் கிடையாது. இந்தியாவில் உள்ளவர்கள் இதை தமது "கர்ம வினைப் பயன்" என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளால் ஏழைகளாக படைக்கப் பட்டனர் என்று காலங்காலமாக ஏமாற்றப் பட்டு வந்தனர். அது சரி, ஏன் ஏழைகள் இருக்கிறார்கள் என்ற விடயம் ஓர் "ஆன்மீகக் குருவான"(?) சத்குருவுக்கே தெரியவில்லை, பிறகெப்படி சாதாரண ஏழைகளுக்கு தெரியும்? பணக்காரர்கள் ஏழைகளின் உழைப்பை திருடுவது தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பைத் திருடுகிறார்கள். விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் கையிருப்பில் உள்ள பணத்தை திருடுகிறார்கள். சில நேரம் அவை பகற்கொள்ளையாக நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு சட்டபூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ நடந்து கொண்டிருக்கும் திருட்டு சத்குருவின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால், "சமபங்கு எனும் போர்வையில் ஏழைகள் திருடினார்கள்..." என்று பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிகள் ஆக்குகிறார். இதன் மூலம் சத்குரு தானும் பணக்காரக் கொள்ளையர்கள் பக்கம் நிற்பதை வெளிப்படுத்தி விடுகிறார். இதன் மூலம் தனது அசிங்கமான பக்கத்தை காட்டி விடுகிறார். இவ்வாறு ஆன்மீகப் போர்வையின் கீழ் திருட்டுக் கும்பல்களை, கொள்ளைக் கோஷ்டிகளை ஆதரிப்பதை விட, தெருவில் பிச்சை எடுத்துப் பிழைப்பது மேலானது.