Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

Monday, September 18, 2023

தமிழர் என்பது இனம் அல்ல!

 Image

ஈழத்தின் வரலாற்றில் எழுந்த முதலாவது தமிழ் நூல் ஒரு சிங்கள மன்னனின் ராஜ்ஜியத்தில் இருந்து வெளியானது! கி.பி. 1232 இல், தம்பதெனிய அரசன் 4ம் பராக்கிரமபாகு ஆணைப்படி தேவனுவரப் பெருமாள் என்பவரால் எழுதப்பட்ட சரசோதிமாலை என்ற சோதிட நூல் வெளியிடப்பட்டது.

இன்றைக்கு தமிழ்த்தேசிய பொய்யர்கள் பரப்புரை செய்வது மாதிரி, மன்னராட்சிக் காலங்களில் "சிங்கள தேசம்", "தமிழ் தேசம்" என்ற பிரிவினை இருக்கவில்லை. அது வெறும் கற்பனை.

அன்று வாழ்ந்த மக்களிடம் சிங்களவர், தமிழர் என்ற இன உணர்வு இருக்கவில்லை. அவை பிற்காலத்தில் ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்களால் வலிந்து திணிக்கப்பட்ட இன அடையாளங்கள். ஒரு பக்கம் சிங்களத் தேசியவாதிகளும், மறுபக்கம் தமிழ்த்தேசியவாதிகளும் தாமே உருவாக்கிய ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
Image

தமிழர் என்பது இனம் அல்ல. சிங்களவர் என்பதும் இனம் அல்ல. இரண்டுமே குறிப்பிட்ட மொழி பேசும் மக்களைக் குறிக்கும். இரண்டுமே பல்வேறு இனங்களின் கூட்டுக் கலவை. அது மட்டுமல்ல. தமிழர்கள் சிங்களவர்களாக மாறுவதும், சிங்களவர்கள் தமிழர்களாக மாறுவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு வரலாறு நூலில் எவ்வாறு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு மகியங்கனையில் இருந்து வந்து குடியேறிய, சிங்களம் பேசிய வேடுவர்கள், காலப்போக்கில் தமிழர்களாக மாறினார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆகவே தமிழர் என்பது தனி இனம் அல்ல. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால், தமிழ்- இனவாதிகள் அதைப் பற்றி ஒரு நாளும் பேச மாட்டார்கள். (தமிழர்/சிங்களவர் தனித்தனியான இனங்கள் என்று நம்புவோர் இனவாதிகள் மட்டும் தான்.) காரணம்: பிழைப்பு அரசியல்.

Wednesday, November 30, 2016

பிரபா சொன்னால் "இராஜதந்திரம்", பிடல் சொன்னால் "தமிழினத் துரோகம்"!


என்று த‌ணியும் இந்த‌ கியூப‌ எதிர்ப்புக் காய்ச்ச‌ல்?

ஐ.நா.வில் இல‌ங்கையை ஆத‌ரித்த‌ ப‌டியால் கியூபா த‌மிழ‌ரின் எதிரி என்றால், அதே ஐ.நா. தீர்மான‌த்தில் வாக்க‌ளித்த‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள், ஆசிய‌ நாடுக‌ள், ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ள், இந்தியா, எல்லாம் த‌மிழ‌ர்க‌ளின் எதிரிக‌ள் தான்.

அதே நேர‌ம் இல‌ங்கைக்கு ஆயுத‌ விற்ப‌னை செய்த‌ அமெரிக்கா, ர‌ஷ்யா, சீனா, ஐரோப்பிய‌ நாடுக‌ள் எல்லாம் த‌மிழ‌ரின் எதிரிக‌ள் தான். இப்ப‌டியே த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌கைத்துக் கொண்டு வாழ‌ முடியாது. 

பிட‌ல் காஸ்ட்ரோவை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ செய்து கிழித்தார்க‌ள்? 
1. எத்த‌னை எழுத்த‌றிவ‌ற்ற த‌மிழ‌ருக்கு இல‌வ‌ச‌மாக‌ க‌ல்விய‌றிவு புக‌ட்டினார்க‌ள்? 
2. எத்த‌னை த‌மிழ் நோயாளிக‌ளிக்கு இல‌வ‌ச‌மாக‌ ம‌ருத்துவ‌ சேவை செய்தார்க‌ள்? 
3. எத்த‌னை ஏழைத் த‌மிழ் விவ‌சாயிக‌ளுக்கு கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் அமைத்துக் கொடுத்தார்க‌ள்?

த‌மிழ் ம‌க்க‌ளுக்காக (க‌வ‌னிக்க‌வும்: "ம‌க்க‌ளுக்காக‌")‌ ஒரு துரும்பைத் தானும் தூக்கிப் போடாத‌வ‌ர்க‌ள், த‌மிழின‌த்தின் பெய‌ரால் பிழைப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்துகிறார்க‌ள்.

பிரபாகரன் சொன்னால் "இராஜதந்திரம்", அதையே பிடல்காஸ்ட்ரோவும் சொன்னால் "தமிழினத் துரோகம்"! என்பது தான் இங்கு பலரது நிலைப்பாடாக உள்ளது. அதாவது, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

"தமிழ் நாடு தனிநாடாக பிரிவதை ஆதரிக்க மாட்டோம்" என்று, பிரபாகரனும், புலிகளும், இந்திய அரசுக்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அது ஒடுக்கப் படும் தமிழினத்திற்கு செய்த துரோகம் இல்லையா? ஹிந்தி பேரினவாத அரசை ஆதரிப்பது ஆகாதா?

அதே மாதிரி, மலையகத் தமிழருக்கான தீர்வு பற்றிக் கேட்ட பொழுதும், "சிறிலங்காவின் அதிகார கட்டமைப்புக்குள் தீர்வு காண வேண்டும்" என்றார்கள். அது மலையகத் தமிழரின் விடுதலையை மறுக்கும் செயல் அல்லவா? வடக்கு கிழக்கு தமிழரை ஒடுக்கும் அதே சிங்கள அரசு, மலையகத் தமிழருக்கு நல்லதொரு தீர்வைத் தந்து விடுமா?

இதற்கு காரணம் கேட்டால், அது "இராஜதந்திரம்", "பூகோள அரசியல்" என்று சொல்லி சமாளிப்பார்கள். ஆனால், உலகின் மறு கோடியில் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கியூபாவும், பிடல் காஸ்ட்ரோவும் "தமிழினத்திற்கு துரோகம்" செய்து விட்டார்கள் என்று பரப்புரை செய்கின்றனர். இது என்ன வகை நியாயம்?

ஒடுக்கப்படும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், மலையகத் தமிழரின் விடுதலையை, புலிகள் ஆதரிக்காத செயல் அப்பட்டமான "தமிழினத் துரோகம்" ஆகாதா? அதெல்லாம் பூகோள அரசியல் இராஜத்திரத்திற்குள் அடங்கும் என்றால், பிடல் காஸ்ட்ரோ அல்லது கியூப அரசின் நிலைப்பாட்டிற்கான காரணமும் அது தான்.

எப்போது பார்த்தாலும் தமிழினம் என்று முழங்குவோர், உலகில் வேறெந்த இனத்தை பற்றியும் அக்கறைப்படாத சுயநலவாதிகளாக இருக்கின்றனர். கியூபாவின் அயல் நாடான ஹைத்தியில் இருந்து வெளியேறி தஞ்சம் கோரிய அகதிகளை கியூபா திருப்பி அனுப்பியது. அப்போது இந்த தமிழினக் காவலர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அதே மாதிரி, சோமாலி மொழி பேசும் ஒரோமோ சிறுபான்மை இனத்திற்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த எத்தியோப்பிய இராணுவத்திற்கு கியூபா உதவியிருந்தது. அப்போது சோமாலியர்களுக்கு ஆதரவாக நமது தமிழினப் பற்றாளர் யாரும் குரல் கொடுக்காத காரணம் என்ன? இப்போதும் அதைப் பற்றிப் பேசுவதில்லையே? "உலகில் எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எனது இனத்தின் நன்மை, தீமைகள் மட்டுமே முக்கியம்" என்ற சுயநலம் தானே இதற்குக் காரணம்?

கொள்கை வேறு, பூகோள அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியல் இல்லை. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கொள்கையை பின்பற்றும் காரணத்தால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் பிரிவினைக்கு உதவியிருக்கப் போவதில்லை. உண்மை நிலைமையும் அது தானே? தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சென்றாலும் அதற்கு உதவ மாட்டோம் என்று புலிகள் இந்தியாவிடம் உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஏனென்று கேட்டால், அது தான் இராஜதந்திரமாம். ஆனால், அதையே கியூபா செய்தால் தமிழினத் துரோகமாம். இரட்டைவேடத்திற்கு சிறந்த உதாரணம் இது தான்.

வலதுசாரி கியூப எதிர்ப்பாளர்களின் அரசியல் மொழியில் சொன்னால் : "உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் தமிழினத்திற்கு, பிரபாகரன் இழைத்த துரோகமானது, பிடல் காஸ்ட்ரோ செய்ததை விட பல மடங்கு அதிகமானது!" 

இலங்கையில் மலையகம், இந்தியாவில் தமிழ் நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்களை உதாசீனப் படுத்தியது மட்டுமல்லாது, அந்த மக்களின் போராட்டத்தை ஆதரித்து புலிகளின் பெயரில் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. 

கர்நாடகா, மும்பாய் (தாராவி சேரிகள்), போன்ற இந்திய மாநிலங்களிலும், மலேசியா போன்ற நாடுகளிலும் ஒடுக்கபடும் தமிழர்களுக்கு ஆதரவாக புலிகள் ஒரு அறிக்கை கூட விடவில்லை.  அது மட்டுமல்ல, கனடாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும், அடித்தட்டு தொழிலாளர் வர்க்கமாக ஒடுக்கப்படும் ஈழத் தமிழருக்கு அனுதாபம் தெரிவித்து, புலிகள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

கம்யூனிசத் தலைவர்களின் உரைகளில்,  பிற உலக நாடுகளில் நடக்கும் கம்யூனிச இயக்கங்களின் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப் படும். ஆனால், தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர் தின உரைகளில், மலையகத்தில், தென்னிலங்கையில், பிற நாடுகளில் ஒடுக்கப்படும் தமிழர்களின் போராட்டம் பற்றி ஒரு வரி கூட இருக்கவில்லை. 

எழுப‌துக‌ளில் புலிக‌ள் கியூபாவை தொட‌ர்பு கொண்டார்க‌ள். ஆனால் அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்ட‌வில்லை. மேலும் கியூபா ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ம‌ட்டுமே க‌வ‌ன‌ம் செலுத்திய‌து. அது ஏன் ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌த்தை ஆத‌ரிக்க‌வில்லை என்று கேட்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. அத‌ற்கு முத‌லில் சோஷ‌லிச‌ ஈழ‌த்திற்காக‌ போராடுவ‌தாக‌ நிரூபித்திருக்க‌ வேண்டும். 

கியூபா தமக்கு உத‌வ‌ வேண்டுமானால், புலிக‌ளும் க‌ம்யூனிஸ்டுக‌ளாக‌ அல்ல‌வா இருந்திருக்க வேண்டும்? பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் என்று அறிவித்துக் கொண்ட‌த‌ற்கான‌ ஆதார‌ம் எங்கே? முத‌லாளித்துவ - தமிழீழம் தான் வேண்டுமானால், அமெரிக்காவின் உத‌வியை தான் நாடி இருக்க வேண்டும். அது தான் ந‌ட‌ந்த‌து. புலிக‌ள் தமக்கு அமெரிக்கா உத‌வும் என்று நம்பிக் காத்திருந்து ஏமாந்தார்க‌ள். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

புலிக‌ளுக்காக அமெரிக்காவில் இய‌ங்கிய‌வ‌ர்க‌ள், ஒபாமாவுக்கான‌ த‌மிழ‌ர் அமைப்பு வைத்திருந்தார்க‌ள். அதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர் மத்தியில் நிதி சேகரித்தார்கள். ஹிலாரி கிளின்ட‌னின் தேர்த‌ல் நிதிய‌த்திற்கு, கோடிக்கணக்கான டாலர்கள் நிதி கொடுத்தார்க‌ள். 

அதைவிட‌, தமிழீழம் திற‌ந்த‌ ச‌ந்தைப் பொருளாதார‌த்தை கொண்டிருக்கும் என்று, மேற்குலகை திருப்திப் படுத்தும் நோக்கில், தலைவர் பிர‌பாக‌ர‌னே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு சென்றால், அமெரிக்கா க‌ப்ப‌ல் அனுப்பி காப்பாற்றும் என்று ந‌ம்பிக் காத்திருந்தார்கள்.

"ஏன் கியூபா புலிக‌ளை ஆத‌ரிக்க‌வில்லை" என்ற‌ கேள்வியை எதனை அடிப்படையாக வைத்துக் கேட்கிறார்கள்? ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? 

ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில், கியூபா உத‌விய‌ இய‌க்க‌ங்க‌ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான். உதார‌ண‌த்திற்கு நிக‌ராகுவா சான்டினிஸ்டா இய‌க்க‌ம். அத‌ன் த‌லைவ‌ர் ஒர்ட்டேகா ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட். கியூபா எத‌ற்கு புலிகளை ஆத‌ரிக்க‌ வேண்டும்? புலிக‌ள் க‌ம்யூனிஸ்டுக‌ளா? என்றைக்காவது பிர‌பாக‌ர‌ன் த‌ன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் என்று அறிவித்திருக்கிறாரா? இல்லவே இல்லை.

ஒருவ‌ன் த‌ன‌க்கு பிடித்த‌, த‌ன் கொள்கையோடு ஒத்துப் போகிற‌வ‌னுக்கு தானே உத‌வுவான்? அது தானே உல‌க‌ வ‌ழ‌க்க‌ம்? புலிகளை ஆதரிப்பவர்கள், லாக்ச‌ர் இ தொய்பா, தாலிபான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஐ.எஸ். போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளுக்கு உத‌வி செய்வார்களா?

இங்கே ஒரு கேள்வியை எழுப்பலாம். "அப்படியானால் கியூபா ஆதரித்த சிறி லங்கா அரசு காஸ்றோவுக்குப் பிடித்த மார்சிஸ்ட் - லெனினிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில்தான் ஆட்சி செய்தது என்கிறீர்களா?" இதற்கான பதிலை நான் ஏற்க‌ன‌வே சொல்லி இருக்கிறேன். ச‌ர்வ‌தேச‌ ம‌ட்ட‌த்தில் அர‌சுக்க‌ளின் இராஜ‌த‌ந்திர‌ உற‌வுக‌ள் வேறு. 

கியூபாவை பிர‌பாக‌ர‌ன் ஆண்டாலும் இது தான் ந‌ட‌ந்திருக்கும். த‌மிழீழ‌ம் இருந்திருந்தால் அது இந்தியாவிக்கு விரோத‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுமா? அல்ல‌து ந‌ட்புற‌வு பேண‌ விரும்புமா? புலிகளின் தமிழீழ அரசின் நிலைப்பாடு, காஷ்மீர், அசாம் விடுதலைக்காக போராடும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?

த‌மிழீழ‌ம் இருந்திருந்தால், பிர‌பாக‌ர‌ன் அத‌ன் ஜ‌னாதிப‌தியாக‌ இருந்தால், அவர்கள் எந்த‌ உலக நாட்டுடனும் இராஜதந்திர உற‌வு வைக்காம‌ல் த‌னித்து நின்றிருப்பார்க‌ளா? எந்த இனத்தையும் ஒடுக்காத சுத்தமான நாடாகப் பார்த்து உறவுகளை ஏற்படுத்திக் கொள்வார்களா? அப்படியானால், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இந்தியா உட்பட நூற்றுக் கணக்கான நாடுகளுடன் தமிழீழம் பகைக்க வேண்டி இருக்கும். அது கடைசியில் வட கொரியா மாதிரி தனிமைப் படுத்த பட்ட நிலைக்கு தள்ளி விடும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tuesday, February 17, 2015

அரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்

பழைய மரக்கேஷ் நகரம் 

புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தங்களுக்கும் அரேபியருக்கும் இடையில் ஜென்மப் பகை இருப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். தாங்கள் அரேபியரை விட மேலானவர்கள் (அனால், வெள்ளையரை விட கீழானவர்கள்) என்று கருதிக் கொள்வோரும் உண்டு. இது உயர்வுச் சிக்கலும், தாழ்வுச் சிக்கலும் கலந்த மனோவியல் பிரச்சினை. 

பெரும்பான்மைத் தமிழர்கள் இந்துக்கள், பெரும்பான்மை அரேபியர்கள் முஸ்லிம்கள் என்ற மத வேறுபாட்டுக்கு அப்பால், இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையில் பல கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சிலநேரம் 80% சதவீத ஒற்றுமை இருக்கிறதோ என்று ஐயுறும் அளவிற்கு, அவர்களது நடத்தைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அமைந்துள்ளன.

நான் வழமையாக முடி வெட்டிக் கொள்வதற்காக, வீட்டுக்கு அருகில் இருக்கும் மொரோக்கோ - அரேபியர் ஒருவரின் சலூனுக்கு செல்வதுண்டு. அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கே அரட்டை அடிப்பதற்காக கூடுவார்கள். (நம்ம ஊர் சலூன் ஞாபகம் வருகிறதா?) அப்படிக் கூடும் அரபி இளைஞர்கள் பலதையும் பத்தையும் பற்றி அலசுவார்கள். அவர்கள் அரைவாசி அரபி, அரைவாசி டச்சு மொழி கலந்து பேசுவதால், எனக்கும் சிலது விளங்கும். சொற்கள் மட்டுமல்ல, வசனங்கள் கூட இரண்டு மொழிகளிலும் கலந்து  கதைப்பார்கள். 

எனது ஐந்து வயது மகன் செல்லும் ஆரம்ப பாடசாலையில், நிறைய மொரோக்கோ - அரபிக் குழந்தைகள் படிக்கின்றன. அவர்களை கூட்டி வரும் தாய், தந்தையர் தமது பிள்ளைகளுடன், டச்சு மொழியில் மட்டுமே உரையாடுவார்கள். தமிழர்களைப் போன்று தான் அரபுக் காரர்களும். தங்களது பிள்ளை டச்சு போன்ற ஐரோப்பிய மொழி கதைப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள். 

காரணம் கேட்டால், சிறு வயதில் இருந்தே பிள்ளை டச்சு மொழியை கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நன்றாகப் படிக்கும் என்று சொல்வார்கள். எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளை நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால், அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது.

ஒரு தடவை, சுற்றுலாப் பயணியாக மொரோக்கோ நாட்டிற்கு சென்றிருந்தேன். மொரோக்கோ ஒரு காலத்தில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. அகடிர் நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்திருந்த நேரம், தனியாக இருந்த அழகான யுவதியுடன், ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான். 

இருவரும் மொரோக்கோவை தாயகமாக கொண்ட, அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களது அறிமுக உரையாடல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நமது தமிழர்களில் பலர், ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாகக் கருதுவது போன்று, மொரோக்கோ அரேபியர்கள் பிரெஞ்சு கதைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

நான் எந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்றாலும், சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்து சேவையில் பயணம் செய்வது வழக்கம். அகடிர் நகரில் இருந்து மரக்கேஷ் நகருக்கு செல்லும் கடுகதி பேருந்து வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த வண்டி, இடையில் பிரேக் டவுன் ஆகி ஓடாமல் நின்று விட்டது. 

அதனால், வேறொரு வண்டி வரும் வரையில் பயணிகள் எல்லோரும் இறங்கி தெருவில் நின்று கொண்டிருந்தோம். பேருந்து வண்டியில் பயணம் செய்த மொரோக்கோக் காரர்கள், அநேகமானோர் மத்திய தர வர்க்கத்தினர். முன் பின் அறிமுகமில்லாத அவர்களும் தமக்குள் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடினார்கள்!

போர்த்துகேயரின் காவல் கோட்டை,
அகடிர் 
மொரோக்கோவில் அகடிர் நகரத்தை, தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல வருடங்களாக, போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாண்டிச்சேரி மாதிரி அதுவும் ஒரு கடற்கரைப் பட்டிணம். அகடிர் நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு இளம் மொரோக்கோ தம்பதிகள் அறிமுகமானார்கள். 

சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர்கள் என்னுடன் மணிக் கணக்கில் உரையாடினார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எளிமையாக நடந்து கொண்டாலும், அவர்களின் மனதில் ஒரு வகை உயர் சாதிப் பெருமிதம் இருப்பது தெரிந்தது. அதாவது, இறைதூதர் முகமது நபியின் வம்சாவளியினர் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். அது குறித்த தகவல்களை, பரம்பரை பரம்பரையாக கடத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்கள்.

மொரோக்கோ சமூக அமைப்பிற்கும், இந்திய, இலங்கை சமூக அமைப்பிற்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகமாக இருந்ததை, அந்த இளம் தம்பதிகளுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகம், என்று பல மட்டங்களிலும் நிறைய ஒற்றுமைகள் காணப் பட்டன.

மொரோக்கோவில் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளின் பிரதானமான தொழில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவது தான். ஆளும் கட்சி பதவியில் இருக்கும் ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடித்து சேர்த்த பின்னர், அடுத்த தேர்தலில் வென்று வரும் எதிர்க் கட்சி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடிப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஐந்து வருட காலம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மொரோக்கோ நாட்டில் ஒருவர் மட்டும் தனது ஆயுள் காலம் முழுவதும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார். மக்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. அவர் தான் மொரோக்கோவின் மன்னர்!

"உலகில் பெரிய பள்ளிவாசல்",
காசப்பிளாங்கா 
மொரோக்கோவின் மன்னர் காலம் முழுவதும் நாட்டை சுரண்டுவது போதாது என்று, காசாபிளாங்கா நகரில் "உலகில் பெரிய பள்ளிவாசல்" ஒன்றைக் கட்டி, அதிலும் பெரும் பணம் ஊழல் செய்துள்ளார். 

நமது ஊரில் கோயில் நிதி சேகரிப்பது என்ற பெயரில், ஒரு பட்டாளமே திரண்டு வந்து காசு சேர்த்துக் கொண்டு செல்வதைப் போன்று தான் மொரோக்கோவிலும் நடந்துள்ளது. இந்தக் காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக கோயில் கட்ட நிதி திரட்டுகிறார்கள் என்று சாதாரண தமிழ் மக்கள் பேசிக் கொள்வதைப் போன்று தான், மொரோக்கோவில் சாதாரண அரபு மக்களும் பேசிக் கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்?

அரசியலில் மட்டும் தான் ஊழல் என்பதில்லை. வர்த்தக நிறுவனங்களிலும் ஊழல் தான் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, நிறுவனத்தின் முதலாளி அல்லது மனேஜரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். 

அப்படி யாரையும் தெரியாது என்றால், நிறையப் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், திறமை இல்லா விட்டாலும் மனேஜருடன் நெருக்கமாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாவாடை எந்தளவுக்கு உயருகின்றதோ, அந்தளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப் படுமாம்.

இந்தியாவில் இந்துப் பெண்கள் எந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்களோ, மொரோக்கோவில் முஸ்லிம் பெண்களும் அந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளதைப் போன்று, இன்னமும் அழியாத நிலப்பிரபுத்துவ கால பழக்க வழக்கங்கள், மொரோக்கோவிலும் உள்ளன. வெளியில் உள்ளவர்கள் அதைப் பார்த்து விட்டு, "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழமைவாத மொரோக்கோ காரர்களும் அப்படி சொல்லிக் கொள்வதுண்டு.

நான் மொரோக்கோவில் எல்லா இடங்களுக்கும் செல்லா விட்டாலும், குறைந்தது மூன்று, நான்கு நகரங்களைப் பார்த்து விட்டேன். எங்கேயும் முக்காடு போட்ட இளம் பெண்களைக் காணவில்லை. மிக மிக அரிதாகத் தான் இளம் யுவதிகள் முக்காடு அணிகிறார்கள். அதற்கு மாறாக, வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் வயதான குடும்பப் பெண்மணிகள் முக்காடு அணிகிறார்கள்.

சரித்திர காலத்தில் இருந்து, பொதுவாக மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் அரேபியர்கள் முக்காடு அணிவதில்லை. அது அவர்களது பண்பாட்டில் இல்லை. ஆனால், இன்று அது பழமைவாத கலாச்சார அடையாளமாக பின்பற்றப் படுகின்றது.

அதாவது, இந்தியாவில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பப் பெண்மணிகள் சேலை அணிந்து செல்வது போன்று தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இளம் வயதில் ஐரோப்பிய பாணி உடை அணியும் நங்கையர்கள், திருமணமாகி குழந்தை பெற்றதும் அடக்கமான உடை (முக்காடு) அணியத் தொடங்கி விடுவார்கள்.

அதே நேரத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளம் மொரோக்கோ பெண்கள் பெருமளவில் முக்காடு அணிகிறார்கள். அந்தப் பழக்கமும் அண்மையில், கடந்த இருபதாண்டுகளுக்குள் தோன்றியது தான். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்களாம். இதிலும் தமிழர்களுடன் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். 

புலம்பெயர்ந்த நாட்டில், "பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம், கோயில் திருவிழா செய்கிறோம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம், தமிழ்ப் பெண்கள் புடவை உடுத்துகிறார்கள்..." என்றெல்லாம் கூறி தமிழ் இனப் பெருமை பேசிக் கொள்வதில்லையா? அதையே தான் அரேபியர்களும் செய்கிறார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.

இந்து இந்தியாவில் உள்ளதைப் போன்று தான், முஸ்லிம் மொரோக்கோவிலும் பெண்களின் "கற்புக்கு" முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணம் முடிக்கும் வரையில் கன்னியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக பாலியல் சுதந்திரம் அனுபவிக்கும் ஆண் சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்க மறுப்பார்கள். "படிக்கப் போகிறேன் என்று சொல்லி கண்டவனுடன் காதலித்துக் கொண்டு திரிகிறாயா? வீட்டுக்குள்ளே  இருடி...!" என்று சொல்லி தம்பியே அக்காவை அடக்கி வைக்கும் சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம், முன்பிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், பெண்களும் வீட்டுக்கு வெளியே சென்று, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்யும் லிபரல் சமுதாயத்தில், அது சில நேரம் கேலிக்குரியதாகி விடுகின்றது. மொரோக்கோ பெண்களுக்கும் காதலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அவர்களின் காதலில் தலையிடுவது அரசாங்கம் அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள்.

திருமணத்திற்கு முன்னர் காதலிக்கும், சிலநேரம் காதலனுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் நிறையப் பேர் மொரோக்கோவில் உள்ளனர். அவர்களது காதல் திருமணத்தில் முடியாவிட்டால் அதோ கதி தான். இந்திய சமுதாயத்தில் அப்படியான பென்னுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அது அவ்வளவையும் மொரோக்கோ பெண்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணக்கார வீடுகளில், அந்தப் பிரச்சினையை அப்படியே அமுக்கி விடுவார்கள். ஆனால், நடுத்தர வர்க்க, ஏழைக் குடும்பங்களில் கெளரவம் பார்ப்பார்கள். அதனாலேயே குடும்பங்களில் அடிதடிகள் நடக்கும்.

தமிழ் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்தவர்களுக்கு, நான் இங்கே விரிவாக சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறது. தமிழர்கள், அரேபியர்களுக்கு இடையிலான இது போன்ற ஒற்றுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்
அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்
பண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்

Saturday, June 14, 2014

தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிகளின் பிரச்சாரங்கள்




"எங்கெல்லாம் அநியாயம் நடக்கிற போது, உன் ரத்தம் கொதித்தால், நீயும் நானும் நண்பனே." - சேகுவேரா

ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்து கொண்டே, முதலாளித்துவத்திற்கு எதிராக பேசலாமா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஒரு சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வாழும் மக்கள், சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக பேசக் கூடாதா?

தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரான, மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் பரப்புரைகளில் ஒன்று. (எனது நண்பர் ஒருவர் என் மேல் தொடுத்த விமர்சனம்.)

//நான் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. அப்படியே எதிர்ப்பது என்றாலும், அதனை ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் ஒரு மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிசம் சம்பந்தமான தகவல்களை வழங்க முடிகின்றது!!!//

ஒரு தவறான அனுமானம். தவறான புரிதல். 
"ஒரு கம்யூனிச நாடு" என்பதற்கு எதிர்ச் சொல்லாக, "ஒரு மேற்கத்திய நாடு" என்று எழுதுவது, அறியாமல் நேர்ந்த தவறாக தெரியவில்லை. முதலில், கம்யூனிஸ்ட் நாடு என்ற ஒன்று உலகில் எங்கேயும் இருக்கவில்லை. மனித வரலாற்றில் கம்யூனிஸ்ட் சமுதாயங்கள் இருந்தன. ஆனால் ஒரு தேசக் கட்டமைப்பு இருக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் இருந்தவை எல்லாம் "சோஷலிச நாடுகள்". சோஷலிசம் என்பது ஒரு அரசியல்- பொருளாதாரக் கொள்கை. அதற்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. மார்க்சியம் கூறுவதன் படி, உலகில் முதலாளித்துவ நாடுகள் இல்லாமல் அழிந்து போன பின்னர், சோஷலிச நாடுகள் உருவாகும். அது ஒரு சமூக விஞ்ஞான நியதி. ஆகவே, இதற்கு முன்னர் இருந்த சோஷலிச நாடுகள் பரிசோதனை முயற்சியாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிசம் பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்கிறார்களே என்று நீங்கள் ஆதங்கப் படுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உழைத்து வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்க மக்கள் தமது சித்தாந்தம் கம்யூனிசம் என்று சொன்னால், அதை தடை செய்யும் நிலையில் முதலாளித்துவ நாடுகள் இல்லை. ஏனென்றால் அது முடியாத காரியம். உலக நாடுகள் எல்லாவற்றிலும், உழைக்கும் வர்க்க மக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.

ஒரு சோஷலிச நாட்டில், முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது உங்களது மனக்குறையாக உள்ளது. அதை நீங்கள் கம்யூனிச எதிர்ப்பு வாதம் என்று குறிப்பிடலாம். ஆனால், உங்களது கூற்றிலேயே முரண்பாடு உள்ளது. முதலாளித்துவ நாட்டில் வாழும் ஒருவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்றால், சோஷலிச நாட்டில் வாழும் ஒருவர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்று எழுதி இருக்க வேண்டும்.

சோஷலிச நாடு என்பது, இதற்கு முன்பிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் உருவானது. ஆகவே, புரட்சிக்குப் பின்னர் முந்திய அரசு ஆதரவாளர்களுக்கு தடை விதிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. உலக வரலாற்றில் நடந்துள்ள எல்லாப் புரட்சிகளிலும் அது தான் நடக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், தாராளவாதமும், குடியரசுவாதமும் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆகின. புரட்சிக்கு முன்பிருந்த மன்னராட்சியை ஆதரித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நாங்கள் உலக வரலாற்றை, சமூக விஞ்ஞானத்தை படித்து அறிந்து, அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது தான் முறை.

//கம்யூனிசம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது//

"ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லை" என்று ஒரு சிங்களவர் சொல்வது போன்றுள்ளது உங்களது கூற்று. கம்யூனிசம் ஒரு Utopia என்று நீங்கள் கருதலாம். அதாவது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற ஒரு கற்பனை சமுதாயம். வசதி இல்லாதவர்கள், அத்தகைய சமுதாயத்திற்காக கனவு காண்பது மட்டுமல்ல, அதற்காக போராடவும் செய்யலாம். அது அந்த மக்களின் உரிமை. அந்த உரிமையை மறுப்பதற்கு நாங்கள் யார்?

உங்களைப் பொறுத்த வரையில், தமிழீழம் கூட ஒரு Utopia தான். //பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது// ஆனால், ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர், தமிழீழம் அமைப்பதற்காக போராட விரும்பினால், அதைத் தடுப்பதற்கு நாங்கள் யார்?

******

"நான் தமிழருக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் பேசும், சில சிங்கள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அதே மாதிரி, "நான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள்.

முகநூலில் ஒரு அறிவுஜீவி பகிர்ந்து கொண்ட கம்யூனிச எதிர்ப்பு நிலைத் தகவல்:

//அப்பா, கொம்யூனிஸ்ட் என்றால் யார்? மகனே, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துக் கிழித்தவர்கள். அப்ப, anti-கொம்யூனிஸ்ட் என்றால் யார்? கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துச் சரியாகப் புரிந்தவர்கள்.//

"கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதியதை படித்தவர்கள் மட்டும் தான் கம்யூனிஸ்டுகள்" என்று இவர்கள் எங்கே கற்றார்கள்? புத்தகங்களை மட்டுமே படிப்பது அறிவுஜீவித் தனம். அதைத் தான் நமது சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பரீட்சையில் சித்தி பெற வேண்டும், உத்தியோகம் பார்க்க வேண்டும், என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் புத்தகங்களை விழுந்து விழுந்து படிப்பார்கள்.

அவர்களது நோக்கம் நிறைவேறியதும், குறைந்த பட்ச அறிவுத் தேடலுக்காக கூட நூல்களை படிக்க மாட்டார்கள். அத்தகைய மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளினால் சமூகத்திற்கு என்ன பிரயோசனம்? அதனால், தங்களது அறிவுஜீவி மனோபாவத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளாதார உற்பத்தி முறையான கம்யூனிசத்தையும் வெறும் நூல்களாக மட்டுமே பார்ப்பதில் வியப்பில்லை.

ஆதி கால தமிழர்கள் மத்தியில் இருந்த கம்யூனிச பொருளாதார அமைப்பு பற்றி, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்கள். ஆதி கால கிறிஸ்தவர்களும், கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயமாக இயங்கினார்கள். நமது கால அரசியலில், அவர்களையும் கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கலாம். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யாரும், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய நூல்களை படித்திருக்க வாய்ப்பில்லை.

******

முன்னாள் தமிழ் தேசியவாதிகளான DMK, EPDP, TMVP ஆகிய குழுக்களின் அடாவடித்தனங்கள், "தமிழ்தேசியவாதிகளின் செயல்கள்" ஆகாது. அந்தக் கட்சிகளின் பெயரிலும் ஈழம், தமிழ் என்றெல்லாம் இருக்கின்றன. அதை சுட்டிக்காட்டி, அவை எல்லாம் தமிழ் தேசியவாத கட்சிகள் என்று யாரும் சொல்வதில்லை. பாராளுமன்ற அரசியலில் பங்கெடுக்கும் தமிழ் தேசியவாத கட்சிகளை, எவனும் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் தேசியவாதிகளான புலிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டான்.

ஆனால், கம்யூனிச எதிர்ப்பாளர்களிடம் மட்டும் அப்படிப் பிரித்து அறியும் தன்மை இல்லாமல் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் திரிபுவாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரிகின்றன. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு, சிவப்பாக தெரிவதெல்லாம் கம்யூனிசம் தான். அது அவர்களது அறியாமையா அல்லது மக்களை முட்டாள்களாக வைத்திருக்கும் நோக்கில் செய்யப்படும் அரசியல் பிரச்சாரமா?

******

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமின்னும் ஒரு காலத்தில் தேசியவாதிகளாகத் தான் இருந்தார்கள். ஆயுதமேந்திய கெரில்லாப் போராட்டத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியதும், தங்களது விடுதலை இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆக்கினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்தார்கள். சோஷலிச பொருளாதார திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.

ஒரு பேச்சுக்கு, கியூபா, வியட்நாம் மாதிரி, ஈழத் தேசியவாதி பிரபாகரனின் கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்று, தமிழீழமும் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். புலிகள் தங்களது இயக்ககத்திற்கு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்கின்றனர். தமிழீழத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்து விட்டு, சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

அப்படியான தருணத்தில், இன்று புலிகளை தீவிரமாக ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும், வசதியான நடுத்தர வர்க்க தமிழர்களில் எத்தனை பேர், அப்போதும் புலிகளை ஆதரிப்பார்கள்? அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கேள்வி இது. 

தமது வர்க்க நலன்களுக்கு விரோதமாக நடந்தால், இன்று புலிகளை ஆதரிக்கும் தமிழ் மேட்டுக் குடியினர், நாளைக்கு அதே புலிகளை எதிர்ப்பார்கள். ஏனென்றால், அவர்களது "புலி ஆதரவு அரசியல்" பூர்ஷுவா வர்க்க அடிப்படை கொண்டது. என்றைக்கோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும்.

*******


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Wednesday, December 01, 2010

ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது.

கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக "தமிழினத் தலைவர்" சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள்.

லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது.

"தமிழர்களின் தலைமை" எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய "தமிழர்கள்" மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது.

நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, "வெள்ளாள கருத்தியல்" மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன.

ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப் பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

  1. சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
  2. முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
  3. நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
  4. அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.


முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், "முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப் படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், "யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்." என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. "முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல." வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள்.

 வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது.

இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை "வெள்ளாளக் கட்சிகளாக" கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

"ஆண்ட பரம்பரை நாம்" என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது.

"முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்." இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் "யூதர்களை நம்ப முடியாது." போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் "தொப்பி பிரட்டிகள்" போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப் பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர்.

மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந் தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.