Saturday, August 26, 2017

தொழிலாளர், விவசாயிகளுக்கே கல்லூரிகளில் முன்னுரிமை - கம்யூனிசக் கல்வி அமைப்பு


ஒரு முதலாளித்துவ நாட்டில் கல்வி அமைப்பானது, உத்தியோகம் பார்க்கும் சிறிய அளவிலான மேட்டுக்குடி வர்க்கத்தை உருவாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ளது. மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்கள் மட்டுமே சித்தி அடையும் வகையில், பாடங்கள் கடினமான மொழி நடையில் எழுதப் படுகின்றன. ஒன்றை சுற்றி வளைத்து சொல்வதன் மூலம், தேவையில்லாத சொற்களை புகுத்துவதன் மூலம், பலருக்கும் புரிந்து கொள்ள முடியாதவாறு வேண்டுமென்றே கடினமாக்கப் பட்டுள்ளது.

இது பற்றி விமர்சித்தால் ஒரு பதில் தயார் நிலையில் இருக்கும்: "பாடங்களையும், சோதனைகளையும் இலகுவாக்கினால் எல்லோரும் பாஸ் பண்ணி விடுவார்களே!" அதாவது, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அளவிற்கு தேவையான ஒரு சிறு தொகையினர் மட்டுமே போதும். எஞ்சியவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

சோஷலிசப் புரட்சிக்கு முன்பிருந்த ரஷ்யாவிலும், சீனாவிலும் நிலைமை அப்படித் தான் இருந்தது. அப்போதிருந்த முதலாளித்துவ கல்வி அமைப்பானது, சமூகத்தில் உத்தியோகம் பார்க்கும் ஒரு அறிவுஜீவிக் குழாமை உருவாக்கிக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பப் பட்டனர். அங்கு அவர்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, பண்ணைகளில், வயல்களில் வேலை செய்ய வேண்டும். அத்துடன் எழுத்தறிவற்ற கிராமிய மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

அறுபதுகளில் அமெரிக்க பொருளியல் பேராசிரியர் Granick, சோவியத் யூனியனில் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்வதற்காக சென்று வந்தார். தாயகம் திரும்பிய பின்னர், "சிவப்பு நிர்வாகி" என்ற பெயரில் அவர் எழுதிய நூலில், சோவியத் பல்கலைக்கழக பரீட்சைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழக பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருந்து மாணவர்கள் எப்படிப் பரீட்சிக்கப் படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்.

அந்த நூலில் இருந்து: பரீட்சை மண்டபத்திற்குள் ஒவ்வொரு மாணவர்களாக அழைக்கப் பட்டனர். அங்கு கேள்வித்தாள்கள் கொண்ட மூன்று கடித உறைகள் இருந்தன. மாணவர் அதிலொன்றை தெரிவு செய்ய வேண்டும். கேள்விகளை வாசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வதற்கு சில நேரம் ஒதுக்கப் பட்டது. மாணவர் தயாரானவுடன், பரீட்சை நடத்தும் ஆசிரியர் கேள்வி கேட்பார். அவை திறந்த கேள்விகளாக இருந்தன. அதாவது, மாணவர் விரிவான பதில் கொடுக்க முடிந்தது. மேலும் பரீட்சைகள் பெரும்பாலும் வாய்மூலம் தான் நடக்கும். எழுதுவதற்கான அவசியம் இல்லை.

அமெரிக்காவுக்கு திரும்பிய பேராசிரியர் Granick, அமெரிக்க மாணவர்களினதும், ரஷ்ய மாணவர்களினதும் கல்வித் தகைமை சமமாக இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துள்ளார். இரண்டு நாடுகளிலும் கல்வி போதிக்கும் முறையிலும், பரீட்சை நடத்தும் முறையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் சித்தி அடைந்த மாணவர்களின் கல்வித் தகைமை கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

கலாச்சார புரட்சிக்கு முந்திய சீனாவிலும், கல்வி முறை பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. அதிகாரத் தன்மை கொண்ட கல்வியாளர்கள், பாடத்திட்டங்களை வகுத்திருந்தார்கள்.

பல்கலைக்கழகம் என்பது உத்தியோகம் பார்க்கும் நோக்கில் சமூகத்தில் மேன் நிலைக்கு செல்ல விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாக இருந்தது. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர், அது தொழிலாளர், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக பல்கலைக்கழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகளை அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக அனுமதி இலகுவாக்கப் பட வேண்டும். அதற்காக, இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உற்பத்தியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது.

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவி, தான் வேலை செய்த தொழிற்சாலை அல்லது பண்ணையில் இருந்து சான்றிதழ் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட வேலை செய்த சக தொழிலாளி ஒருவரும், புரட்சிகர கமிட்டியும் அந்த சான்றிதழில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அது வரை காலமும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்கலைக்கழகத்தில் சேரத் தடையாக இருந்த கடினமான அனுமதிப் பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டன.

படிக்கும் காலத்தில் பரீட்சைகளும் வேறு விதமாக நடத்தப் பட்டன. சிலநேரம் மாணவர்கள் ஒரு சிறு குழுவாக கூடியிருந்து கேள்விகளுக்கு விடை கூறினார்கள். பெரும்பாலானவை "திறந்த புத்தக" பரீட்சைகளாக இருந்தன. அதாவது பரீட்சை நடக்கும் இடத்திற்கு தான் படித்த பாடநூலையும் கொண்டு செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட நேர அளவிற்கும் பதில் எழுத வேண்டும். இது போன்ற பரீட்சைகள், சிலநேரம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கின்றன.

பாடநூல்கள், அனைவருக்கும் புரியும் வகையில் இலகுவான மொழி நடையில் எழுதப் பட்டிருந்தன. அது மிகவும் முக்கியமாக இருந்தது. ஏனென்றால், முன்பு நூல்களை எழுதிய பேராசிரியர்கள் வேண்டுமென்றே கடினமாக்கி வைத்திருந்தார்கள். 

Tsinghua பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர் ஒருவர் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் வகையில் பின்வரும் கருத்துக்களை கூறினார்:  
"நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக பாடநூல்களை எழுதி இருக்கவில்லை. மாறாக, எனது திறமைகளை காட்டுவதற்காக, கல்வியறிவை வெளிப்படுத்தும் வகையில் எழுதி இருந்தேன். என்னால் என்னவெல்லாம் முடியும் என்று காட்டுவதற்காக, பிரமிக்க வைக்கும் நோக்கில் பார்முலாக்களையும், வெளிநாட்டு மேற்கோள்களையும் பயன்படுத்தி இருந்தேன். சில தெரிவு செய்யப் பட்ட வாக்கியங்கள் மூலம் இலகுவாக விளக்கக் கூடிய பிரச்சனைகளை கடுமையாக்கி வைத்திருந்தேன். பல அருமையான கண்டுபிடிப்புகளை செய்திருந்த அனுபவம் மிக்க தொழிலாளி ஒருவர், எனது கடினமான விளக்கத்தை கேட்டு மனமுடைந்து போயிருந்தார். இதையெல்லாம் தான் என்றைக்குமே புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்."

பாடநூல்கள் இலகுவாக்கப் பட்டது மட்டுமல்லாது, கல்வி அமைப்பு முழுவதும் நடைமுறையுடன் ஒன்றிணைக்கப் பட்டது. ஒவ்வொரு கற்கையும் நடைமுறையுடன் கூடியதாக இருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தமக்கென தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகளை கொண்டிருந்தன. ஆசிரியர்களும், மாணவர்களும் தொழிற்சாலைகள், பண்ணைகளுக்கு சென்று நடைமுறையில் எப்படி இருக்கிறதென்று படித்தார்கள்.

அதே மாதிரி, தொழிலாளர்கள், விவசாயிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று "வருகை தரும் பேராசிரியர்களாக" விரிவுரை ஆற்றினார்கள். மேலும், மாணவர்கள் தமது துறை சார்ந்த பாடங்களை மட்டும் படிக்கவில்லை. அரசியல் பாடம் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாய பாடமாக இருந்தது. அதில் தகைமை பெற்றிருந்த தொழிலாளர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள்.

நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மிகப்பெரும் இடைவெளியும் நிரப்பப் பட்டது. உதாரணத்திற்கு, மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்கு உதவினார்கள். அதே மாதிரி, கிராமிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றியும், மூலிகைகள் பற்றியும் விளக்கினார்கள். 

உசாத்துணை:
De Rode Directeur, David Granick
Sociaslisme en Herstel van het Kapitalisme, Niek Scheerder

Sunday, August 20, 2017

ஒரு முதலாளித்துவ நாட்டில் முற்றுப்பெறாத சோஷலிசத்திற்கான போராட்டம்


வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ள் மூல‌மே தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளை பெற்றுக் கொள்ள‌ முடியும். நான் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக நெதர்லாந்தில் வசிப்பதாலும், அந்நாட்டின் வரலாறு படித்திருப்பதாலும், அங்கு நடந்த உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெதர்லாந்து வரலாற்றில், முதன்முறையாக 1823 ம் ஆண்டு கால்வாய் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது, வேலைநிறுத்தம், தொழிற்சங்கம் போன்றன தடைசெய்யப்பட்டிருந்த  காலகட்டம். அதனால் வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு பகிரங்கமாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேலைநிறுத்தம் செய்வதால் தொழிலாளர்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. சம்பளம் கிடைக்காதது மட்டுமல்லாது, வேலை பறிபோகும் அபாயம் இருந்தது. அத்துடன் வேறெந்த முதலாளியும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப் போவதில்லை.அரச உதவி எதுவும் கிடைக்காத காலத்தில், குடும்பம் முழுவதும் பட்டினி கிடந்தது வாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

வைரக் கல் பட்டை தீட்டும் தொழில் செய்த கைவினைஞர்கள் மத்தியில் வலுவான தொழிற்சங்கம் இருந்தது. தொழிலாளர் நலன்களுக்காக உருவான (மார்க்சிய) சமூக ஜனநாயகக் கட்சி (SDP), அதனை முன்மாதிரியாகக் கொண்டு தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் அமைத்தது. அதனால், ஒரு தொழிலகத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் பொழுது, அவர்களுக்கான வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட முடிந்தது. 

ஐரோப்பாவில் தோன்றிய மார்க்சிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஆரம்ப காலத்தில் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்தன. அதனால், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர் மத்தியில் கருத்தொற்றுமை நிலவியது. சகோதர உணர்வு ஏற்பட்டிருந்தது. 

முதலாம் உலகப்போருக்கு முன்னர் பாட்டாளிவர்க்க சர்வதேசிய உணர்வு மிகவும் தீவிரமாக இருந்தது.அதனால், ஐரோப்பிய அரசுகள் தேசிய உணர்வை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அது பேரழிவு தந்த உலகப்போருக்கு இட்டுச் சென்றது.

1889 ம் ஆண்டு, ல‌ண்ட‌ன் துறைமுக‌த் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். போராட்ட‌ முடிவில், துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்து கோரிக்கைக‌ளை ஏற்றுக் கொண்ட‌ன‌ர். வேலைநேர‌த்தை குறைக்க‌வும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்ட‌வும் ச‌ம்ம‌தித்த‌ன‌ர். முத‌லாளிக‌ள் தொழிலாள‌ர்க‌ளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் எவ்வாறு உருவான‌து?

ல‌ண்ட‌ன் துறைமுக‌த்தில் வேலைநிறுத்த‌ம் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ நேர‌ம், இங்கிலாந்து முத‌லாளிக‌ள் த‌ம‌து க‌ப்ப‌ல்க‌ளை, ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு அனுப்பினார்க‌ள். ல‌ண்ட‌ன் வேலைநிறுத்த‌ம் ப‌ற்றிக் கேள்விப்ப‌ட்ட‌ ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ர்க‌ள், பொருட்க‌ளை இற‌க்கி ஏற்ற‌ ம‌றுத்து விட்ட‌ன‌ர்.

இந்த‌ ச‌ர்வ‌தேச‌ ஒருமைப்பாடு அத்துட‌ன் நின்று விட‌வில்லை. ல‌ண்ட‌ன் தொழிற்ச‌ங்க‌த் த‌லைவ‌ர்க‌ள் ரொட்ட‌ர்டாம் துறைமுக‌த்திற்கு வ‌ந்த‌ன‌ர். எவ்வாறு போராட வேண்டும் என்று ட‌ச்சுத் தொழிலாள‌ர்க‌ளுக்கு சொல்லிக் கொடுத்த‌ன‌ர்.

இந்த‌த் த‌ட‌வை ரொட்ட‌ர்டாம் தொழிலாள‌ரின் முறை. அவ‌ர்க‌ளும் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். வேலை நேர‌த்தை குறைக்குமாறும், ச‌ம்ப‌ள‌த்தை கூட்டுமாறும் கோரிக்கை வைத்த‌ன‌ர். அர‌சு பொலிஸ் அனுப்பி வேலைநிறுத்த‌த்தை த‌டுக்க‌ப் பார்த்த‌து. தொழிலாள‌ர்க‌ள் பாதுகாப்பு அர‌ண் அமைத்து எதிர்த்து நின்ற‌ன‌ர். அங்கு ந‌ட‌ந்த‌ மோத‌லில் சில‌ருக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து.

இறுதியில் துறைமுக‌ முத‌லாளிக‌ள் இற‌ங்கி வ‌ந்த‌ன‌ர். தொழிலாள‌ரின் கோரிக்கைக‌ளை நிறைவேற்ற‌ ச‌ம்ம‌தித்த‌னர். இவ்வாறு க‌டுமையான‌ போராட்ட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் தான் ஐரோப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து உரிமைக‌ளைப் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அதிலும் துருக்கிப் பெண்கள் வேலை நிறுத்தம் செய்த வரலாறு நெதர்லாந்தில் நடந்துள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் வளர்ந்தது. உள்நாட்டு தொழிலாளருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், துருக்கி, மொரோக்கோ ஆகிய நாடுகளில் இருந்து மலிவான ஒப்பந்தக் கூலிகளை இறக்குமதி செய்தனர்.

முதலாளிகள் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து, உழைப்பை சுரண்டி வந்தனர். தற்போது வளைகுடா அரபு நாடுகளில், தெற்காசியத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதே மாதிரித் அன்றைய ஐரோப்பாவிலும் நடந்து கொண்டிருந்தது.

அல்மேலோ நகரில் அமைந்திருந்த B.J.ten Dam என்ற தொழிற்சாலையின் உரிமையாளர் துருக்கிப் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார். கோழி இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்த பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப் பட்டனர்.

அந்தப் பெண் தொழிலாளர்கள் வாரத்திற்கு அறுபது மணித்தியாலம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டனர். நெதர்லாந்தின் அடிபப்டை சம்பளத்தை விடக் குறைவாக கொடுக்கப் பட்டது. அத்துடன், விடுமுறை இல்லை. சுகயீன விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது.

அவர்கள் FNV என்ற தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த பின்னர் தான் நிலைமை மாறியது. 1978 ம் ஆண்டு, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக நியாயமான ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொண்டனர். போராடாமல் எதுவும் கிடைக்காது.

நெத‌ர்லாந்தில் இதுவ‌ரை கால‌மும் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளை ஒருவ‌ர் ஆய்வு செய்துள்ளார். ஷாக் வ‌ன் டெர் வெல்ட‌ன் (Sjaak van der Velden) ஒரு முன்னாள்‌ ம‌ர‌வேலைத் தொழிலாளி. த‌ற்போது ம‌துபான‌சாலை ந‌ட‌த்துகிறார். அவ‌ரிட‌ம் எடுக்க‌ப் ப‌ட்ட‌ தொலைக்காட்சி பேட்டியில் இருந்து:

கேள்வி: க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ங்க‌ளால் கிடைத்த‌ ப‌ய‌ன்க‌ள் என்ன‌?

ப‌தில்: ஏராள‌ம் உள்ள‌ன‌. வேலைநிறுத்த‌ங்க‌ள் ந‌ட‌ந்திரா விட்டால், இன்றுள்ள‌ வாழ்க்கை வ‌ச‌திக‌ளை நாங்க‌ள் அனுப‌வித்திருக்க‌ முடியாது.

நெத‌ர்லாந்தில், க‌ட‌ந்த‌ 150 வ‌ருட‌ங்க‌ளில் 15000 வேலைநிறுத்த‌ங்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌ன‌. அவ‌ற்றில் பெரும்பாலான‌வை 20ம் நூற்றாண்டில் ந‌ட‌ந்துள்ள‌ன‌.

4000 வேலைநிறுத்த‌ங்க‌ள் எதிர்பார்த்த‌ வெற்றிக‌ளை த‌ந்துள்ள‌ன‌. 3500 வேலைநிறுத்த‌ங்க‌ள் இறுதியில் முத‌லாளிக‌ளுட‌ன் ச‌ம‌ர‌ச‌ ஒப்ப‌ந்த‌ம் செய்ய‌ வைத்த‌ன‌.

வேலைநிறுத்த‌ம் செய்வதால் ந‌ன்மை உண்டாகின்ற‌து என்ப‌தை வ‌ர‌லாறு நிரூபித்துள்ள‌து. வேலையை இடை நிறுத்துவ‌து அல்ல‌ இங்கே முக்கிய‌ம். தொழிலாள‌ர்க‌ள் த‌ம‌து ச‌க்தியை உண‌ர்ந்து கொள்வ‌தும், ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது ப‌ல‌த்தைக் காட்டுவ‌துமே முக்கிய‌ம்.

மேற்கு ஐரோப்பாவில், இரண்டாம் உலகப்போருக்கு முன்னரும், பின்னருமான நிலைமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது. போருக்கு முன்னர் வர்க்கப் போராட்டம் மூர்க்கமாக நடந்து கொண்டிருந்தது. சமூக ஜனநாயகக் கட்சியில் பல குறைபாடுகள் இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பதாக காட்டிக் கொண்டது. அதன் தலைவர்கள், முதலாம் உலகப்போர் காலத்திலேயே விலைக்கு வாங்கப் பட்டு விட்டனர். இருப்பினும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை தடுக்கவில்லை.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சமூக ஜனநாயகக் கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து கொண்டதுடன் மட்டுமல்லாது, முதலாளித்துவ அரச இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த சம்பவங்களை ஓர் உதாரணமாக எடுத்துப் பார்க்கவும். இப்படித் தான் ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்திருக்கும் என்று ஊகிக்கலாம்.

1940 ம் ஆண்டு, நெதர்லாந்து நாஸி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்டது. நாஸி ஆக்கிரமிப்பாளர்கள் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியை (CPN) தடை செய்தனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியை (SDAP) தம்முடன் சேர்ந்து வேலை செய்ய வருமாறு அழைத்தனர். தாங்கள் "இடதுசாரிகளும் அல்ல, வலதுசாரிகளும் அல்ல, தேசப் பற்றாளர்கள்..." என்று நாஸிகள் சொல்லிக் கொண்டனர். ஆனால், சமூக ஜனநாயகக் கட்சியினர் சேர்ந்து வேலை செய்ய மறுத்து விட்டனர். அதனால் அந்தக் கட்சியும் தடை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே SDAP இயங்குவதை நிறுத்திக் கொண்டது.

நாஸிகள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்த யூதர்களை கைது செய்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் வேலையை ஆரம்பித்தனர். அப்போது எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. ஒட்டுமொத்த ஆம்ஸ்டர்டாம் நகரமும் வேலைநிறுத்தம் செய்தது. அதற்குப் பின்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.

நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய நாடொன்றில் நடந்த முதலாவது வேலைநிறுத்தப் போராட்டம் அது தான். முதல் நாள் செய்வதறியாது திகைத்து நின்ற நாஸிகள், அடுத்தநாள் அடக்குமுறையை ஏவி விட்டனர். டச்சு தொழிற்சங்க தலைவர்கள், கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப் பட்டு, ஆஸ்திரியாவில் இருந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டனர். குறைந்தது அரைவாசிப் பேராவது அங்கிருந்து மீளவில்லை.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், நெதர்லாந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. நாஸி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுகளுக்கு பெருமளவு ஆதரவு இருந்தது. பெரும்பான்மையான நெதர்லாந்து பிரஜைகள் கம்யூனிஸ்டுகளை உண்மையான நாட்டுப் பற்றாளர்களாக பார்த்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், அரச குடும்பமும், பிற கட்சிகளின் தலைவர்களும் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி விட்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் அவர்களது கையில் தான் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது!

முன்னாள் SDAP கட்சியினரும், கிறிஸ்தவ கட்சி ஒன்றும் சேர்ந்து, புதிய சமூக ஜனநாயகக் கட்சியான தொழிற்கட்சி (PvdA) உருவானது. அதன் தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மறுத்தனர். அதற்குப் பதிலாக லிபரல் கட்சிகளுடன் கூட்டு வைத்தனர்.  இந்த "இடது - வலது கூட்டரசாங்கம்" இன்று வரை தொடர்கின்றது.

1955 - 1959 காலப் பகுதியில், சமூக ஜனநாயகவாதிகளின் நீண்ட கால சோஷலிசக் கோரிக்கைகள், "நலன்புரி அரசு" என்ற பெயரில் அமுல்படுத்தப் பட்டன. உதாரணத்திற்கு, அனைவருக்கும் ஓய்வூதியம், மணமுறிவு பெற்ற தாய்மார், வேலையற்றோர், நிரந்தர நோயாளிகளுக்கான அரச கொடுப்பனவுகள் போன்றவற்றை குறிப்பிடலாம். பாராளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் இந்த மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்தன. கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கட்சியான SGP மட்டும், "அபாயகரமான அரசு சோஷலிசம்" என்று கூறி எதிர்த்தது.

அதே காலகட்டத்தில் (1955), ஆம்ஸ்டர்டாம் நகரில் பொதுப் போக்குவரத்து ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அரசால் அங்கீகரிக்கப் படாத கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் அவர்களது போராட்டத்தை ஆதரித்தது. அந்தப் போராட்டத்தை பொது மக்களும் ஆதரித்தமை குறிப்பிடத் தக்கது. அரசு கருங்காலி சாரதிகளை கொண்டு சில டிராம் வண்டிகளை ஒட்டிய போதிலும், பொது மக்கள் அவற்றில் ஏற மறுத்தனர்.

ஆம்ஸ்டர்டாம் நகரின் பொதுப்போக்குவரத்து துறை ஓர் அரச நிறுவனம் ஆகும். அப்போது ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி, "வேலைநிறுத்தம் செய்வது சட்டவிரோதம்" என்றது! "தற்போதுள்ளது ஒரு புதிய சகாப்தம். முன்பிருந்த வர்க்கப் போராட்டம் மறைந்து, வர்க்க சமரசம் உருவாகி உள்ளது. அப்படியான நிலைமையில் வேலைநிறுத்தம் செய்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல..." என்று வாதிட்டது.

போருக்கு முன்னர் அடக்குமுறை அரசுக்கு எதிராக போராடிய அதே சமூக ஜனநாயகவாதிகள், தற்போது தாமே அடக்குமுறை அரசாக மாறி இருந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிஸ் படையை ஏவி விட்டனர். வேலைநிறுத்தம் செய்த குற்றத்திற்காக, ஆயிரக் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடியாது என்ற தடைச்சட்டம், முப்பதுகளில் இருந்த முதலாளித்துவ அடக்குமுறை அரசினால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். அப்போது அதற்கு எதிராகப் போராடிய சமூக ஜனநாயகவாதிகள், பின்னர் அதே சட்டத்தைக் காட்டி அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர்! அதற்கு அவர்கள் கூறிய ஒரே காரணம்: "வர்க்கங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணப்பட வேண்டும்! நீங்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் செய்தால், கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து தேசத்துரோகக் குற்றம் புரிகிறீர்கள்!! உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், ஜனநாயகத்திற்கும் துரோகம் செய்கிறீர்கள்!!!" என்றது அன்றைய சமூகஜனநாயக அரசாங்கம்.

முன்னொரு காலத்தில் போராட்டக் குணாம்சம் கொண்டதாக இருந்த சோஷலிச தொழிற்சங்கமும் (NVV: தற்போது FNV) அரசுடன் ஒத்துழைக்கத் தொடங்கியது. நலன்புரி அரசு என்ற பெயரில் முதலாளிகளுடனும், அரசுடனும் சேர்ந்து கூட்டு ஒப்பந்தங்கள் போடுவதில் பங்கெடுத்தது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்துவதில்லை என்ற நிபந்தனைக்கு தொழிற்சங்க தலைவர்கள் சம்மதித்தனர்.

அன்றிலிருந்து இன்றுவரை, இந்தத் துரோகம் தொடர்கதையாக உள்ளது. அண்மைக்காலமாக, அரசு கொண்டு வரும் சிக்கனப் பொருளாதார திட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றன. ஆனால், சமூக ஜனநாயக் கட்சியினரும், தொழிற்சங்கமும் அதற்கு ஒப்புதல் வழங்கி வருகின்றனர்.

Saturday, August 19, 2017

21 ம் நூற்றாண்டில் ஒரு க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி, இது "டிஸ்னி லேன்ட்" அல்ல‌!


இது "டிஸ்னி லேன்ட்" அல்ல‌, க‌ம்யூனிச‌ சொர்க்க‌புரி! ர‌ஷ்யாவில் இன்றைக்கும் சிற‌ப்பாக‌ இய‌ங்கும் க‌ம்யூனிச‌ ந‌க‌ர‌ம். இது அங்கு வாழும் ம‌க்க‌ளின் தெரிவு. யாரும் அவ‌ர்க‌ளை க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. (இன்றைய‌ ர‌ஷ்யாவில் க‌ம்யூனிச‌த்தை வெறுக்கும் முத‌லாளித்துவ‌ அர‌சு ஆட்சியில் இருப்ப‌தையும் குறிப்பிட‌ வேண்டும்.)

 ஸ்டாலின் கால‌த்தில், சோவிய‌த் யூனிய‌னில் கூட்டுழைப்பு ப‌ண்ணை (Collective farm) முறை கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. நாட்டுப்புற‌ங்க‌ளில், அனைவ‌ரும் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டி இருந்த‌து. அர‌ச‌ ப‌ண்ணைக‌ள் (Sovkhoz) த‌னியாக‌வும், ம‌க்க‌ளின் கூட்டுற‌வுப் ப‌ண்ணைக‌ள் (Kolkhoz) த‌னியாக‌வும் இருந்த‌ன‌.

தொண்ணூறுக‌ளில், சோவிய‌த் யூனிய‌னின் வீழ்ச்சிக்குப் பின்ன‌ர், பொதுவுடைமைப் ப‌ண்ணைக‌ள் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ன‌. நில‌ம் சிறு துண்டுக‌ளாக‌ ப‌கிர்ந்த‌ளிக்க‌ப் ப‌ட்ட‌து. விவ‌சாய‌ம் த‌னியார்ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர், ப‌ல‌ ப‌ண்ணைக‌ள் கைவிட‌ப் ப‌ட்ட‌ன‌. செல்வ‌ந்த‌ர்க‌ளால் வாங்க‌ப் ப‌ட்ட‌வை போக‌, எஞ்சிய‌வை த‌ரிசு நில‌மாகின‌. 


ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்திற்குப் பின்ன‌ர், சில‌ இட‌ங்களில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள், விவ‌சாய‌த்தை த‌னியார்ம‌ய‌மாக்குவ‌தால் த‌ம‌க்கு ந‌ட்ட‌மே உண்டாகும் என்ப‌தை அனுப‌வ‌ம் மூல‌ம் உண‌ர்ந்து கொண்ட‌ன‌ர். தனியொரு குடும்பம் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதை விட, நூறு குடும்பங்கள் சேர்ந்து நூறு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதால் அதிக நன்மை கிடைக்கும் அல்லவா? "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்றொரு பழமொழி உண்டு.

ஆகவே, அவ‌ர்க‌ள் ப‌ழைய‌ ப‌டி பொதுவுடைமைப் ப‌ண்ணை அமைப்பிற்கு திரும்பினார்க‌ள். அத‌னால் த‌ம‌க்கு ந‌ன்மை உண்டாகும் என்ப‌தை அறிந்து கொண்டார்க‌ள். ரஷ்யாவில் இன்று வரை சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் "விளாடிமிர் லெனின் கூட்டுழைப்புப் ப‌ண்ணை" (Collective farm of Vladimir Lenin) அதில் ஒன்று.

2017 ம் ஆண்டிலும், அந்த‌ப் ப‌ண்ணையில் உள்ள‌ தோட்ட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ விளைச்சல் கிடைக்கிற‌து. இந்த‌ வ‌ருட‌ம் தொன் க‌ண‌க்கில் ஸ்ட்ரோபெரி ப‌ழ‌ங்க‌ளை அறுவடை செய்துள்ள‌தாக பெருமையாக கூறிக் கொண்டனர். (நன்றி: English Russia இணையத்தளம்) அந்த விவசாய விளைபொருட்கள் பிற இட‌ங்க‌ளுக்கு விற்ப‌னைக்கு கொண்டு செல்ல‌ப் ப‌டும்.

ஒரு க‌ம்யூனிச‌ ச‌முதாய‌த்தில் எல்லோரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வ‌தால், அதில் கிடைக்கும் இலாப‌த்தையும் த‌ம‌க்குள் ப‌ங்கிட்டுக் கொள்கிறார்க‌ள். அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளை பூர்த்தி செய்து கொள்கிறார்க‌ள். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவ‌ர்க‌ள் வ‌சிக்கும் வ‌ச‌தியான‌ வீடுக‌ளுக்கு வாட‌கை கிடையாது. 


க‌ம்யூனிச‌ ப‌ண்ணை என்ற‌வுட‌ன், நீங்க‌ள் ஒரு கிராம‌த்தை க‌ற்ப‌னை செய்து விட‌க் கூடாது. அது ச‌க‌ல‌ வ‌ச‌திக‌ளும் கொண்ட‌ ந‌வீன‌‌ ந‌க‌ர‌ம். அனைத்து உய‌ர்த‌ர‌ தொழில்நுட்ப‌ங்க‌ளும் அங்கே கிடைக்கும்‌. வ‌ய‌ல்க‌ள், தோட்ட‌ங்க‌ள், ப‌ண்ணைக‌ளில் உற்ப‌த்தியாவ‌தை முடிவுப் பொருட்க‌ளாக மாற்றும் தொழிற்சாலைக‌ளும் அங்குள்ள‌ன‌. குழ‌ந்தைக‌ளை ப‌ராம‌ரிக்கும் இட‌ம், தேவ‌தைக் க‌தைக‌ளில் வ‌ருவ‌தைப் போன்று பிரமாண்டமான அழ‌கான‌ க‌ட்டிட‌மாக வ‌டிவ‌மைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து.

அதாவது, அது ஒரு தனிநாடு போன்று இயங்குகிறது. தன்னிறைவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. பண்ணை உறுப்பினர்கள் எல்லோரும் வயல்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் என்று கருதி விடக் கூடாது. ஒரு நகரக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், அனைத்து வகையான தொழில் வாய்ப்புகளும் உள்ளன. தொழிற்சாலைகள் இருந்தால் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. பாடசாலைகள் இருந்தால் அங்கு ஆசிரியர்கள் தேவை. மருத்துவமனை இருந்தால் மருத்துவர்கள், தாதியர்கள் தேவை. இவர்கள் எல்லோரும் கூட்டுழைப்பு பண்ணையின் உறுப்பினர்கள் தான்.

ரஷ்யாவில் 35 மில்லியன் ஹெக்டேயர் விவசாய நிலங்கள், ஒன்றில் அரசு அல்லது கூட்டுறவுப் பண்ணைகளுக்கு சொந்தமாக உள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவிக்கின்றது. (Russia’s Collective Farms: Hot Capitalist Property, AUG. 30, 2008) பிரித்தானியாவோடு ஒப்பிட்டால் அங்கே மொத்தம் ஆறு மில்லியன் ஹெக்டேயர் நிலங்களில் தான் விவசாயம் செய்யப் படுகின்றது. ஆகவே, கூட்டுறவுப் பண்ணை உற்பத்தி அதிகரித்தால், எதிர்காலத்தில் உலக உணவுத் தேவையில் கணிசமான அளவைப் பூர்த்தி செய்ய முடியும்.

(2017 ம் ஆண்டிலும் இய‌ங்கும் பொதுவுடைமைப் ப‌ண்ணையின் ப‌ட‌ங்க‌ளை இங்கே காண‌லாம். தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி: English Russia)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, August 18, 2017

யாருக்கு மார்க்சியம் தேவையில்லை?


"எங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை... மார்க்சிய‌ம் பேசுவ‌து ஒரு இள‌ம்ப‌ருவ‌க் கோளாறு..." என்று பூர்ஷுவா ம‌ன‌ப்பான்மையுட‌ன் பேசும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,

மார்க்சியம் என்பது ஏழைக‌ளின், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் அரசியல். அது உங்க‌ளுக்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் தேவையில்லாம‌ல் இருக்க‌லாம். அதாவ‌து உங்க‌ள‌து ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளுக்கு அது தேவையில்லை. முத‌லாளித்துவ‌ம் தாராள‌மாக‌ வ‌ழ‌ங்கும் வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்கு அது தேவையில்லை.

மார்க்சிய‌த்தால் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், முத‌லாளித்துவ‌ம் உங்களுக்கு போதுமான அளவு வருமானம் கொடுக்கிற‌து. வசதியான வாழ்க்கையை ஏற்ப‌டுத்திக் கொடுத்துள்ள‌து. அத‌னால் உங்க‌ளுக்கு மார்க்சிய‌ம் தேவையில்லை. இதைத் தான் வர்க்கக் குணாம்சம் என்று சொல்வார்கள்.

ஏழைகள் சார்பாகப் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அப்பாவி ம‌னித‌ர்க‌ளை சுர‌ண்டி ப‌ண‌ம் சேர்க்கும் குறுக்கு வ‌ழிக‌ளை, நுணுக்க‌மான‌ திருட்டுக்க‌ளை, ஏமாற்றிப் ப‌ண‌ம் ப‌றிப்ப‌தை, முத‌லாளிக‌ளுக்கு சொல்லிக் கொடுப்ப‌தே நீங்க‌ள் தானே? அத‌ற்காக‌த் தானே நீங்க‌ள் க‌ற்ற‌ க‌ல்வி ப‌ய‌ன்ப‌டுகிற‌து?

முத‌லாளி தான் கொள்ளைய‌டிக்கும் கோடிக் க‌ண‌க்கான‌ ப‌ண‌த்தில், உங்க‌ளுக்கு சில‌ ஆயிர‌ங்க‌ளை கிள்ளிக் கொடுக்கிறான். அந்த‌ பிச்சைக் காசுக்காக‌ விசுவாச‌மாக‌ வாலாட்டுகிறீர்க‌ள். அந்த‌ நாய்க் குண‌த்தை பெருமையாக‌ க‌ருதிக் கொள்கிறீர்க‌ள்.

உங்கள் அளவிற்கு பெரிய படிப்பு படித்திராத‌, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு மார்க்சியத்தை சொல்லிப் புரிய வைக்க படித்தவர்கள் தான் முன்வர வேண்டும். அத‌ற்கு நீங்க‌ள் உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களால் முடியாத ஒரு விடயத்தை, இன்னொருவன் செய்யும் பொழுது அதற்கு வழிவிட வேண்டும்.

உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள், எந்த‌க் கால‌த்திலும் உண்மை பேசுவதில்லை. முதலாளித்துவ சுரண்டல் பற்றிப் பேசுவதில்லை. க‌ட‌ன் சுமைக‌ளை க‌ண்டுகொள்வ‌தில்லை.

யுத்த‌ங்க‌ள், பேர‌ழிவுக‌ளை பார்க்கும் போதெல்லாம், அத‌ற்கு "இன‌ப் பிர‌ச்சினை, ம‌த‌ப் பிர‌ச்சினை" என்று கார‌ண‌ம் சொல்லிக் கொள்வீர்க‌ள். ம‌னித‌ அழிவில் இலாப‌ம் ச‌ம்பாதிக்கும் ஆயுத‌ வியாபாரிக‌ள் உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌ப் போவ‌தில்லை.

நீங்க‌ள் யாரும் வ‌றுமையைக் க‌ண்டு கொள்வ‌தில்லை. ஒவ்வொருநாளும் ப‌ட்டினியால் இற‌ந்து கொண்டிருக்கும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ளை ப‌ற்றிக் கேள்விப் ப‌ட்டாலும் பாராமுக‌மாக‌ இருக்கிறீர்க‌ள். ஏனென்றால் அது எதுவும் உங்க‌ள் குழ‌ந்தை அல்ல‌.

அதைப் ப‌ற்றி எல்லாம் நீங்க‌ள் பேசுவ‌தில்லை. கேள்விப் ப‌ட்டாலும் பேச‌ மாட்டீர்க‌ள். உங்க‌ள் வாயை திற‌க்க‌ விடாம‌ல் எதுவோ த‌டுக்கிற‌து. ஆனால், அதைப் ப‌ற்றி எல்லாம் மார்க்ஸிஸ்டுக‌ள் பேசுகிறார்கள். அத‌னால் உங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினை? குற்ற‌முள்ள‌ நெஞ்சு குறுகுறுக்கிற‌தா?

நாய்களுக்கும், மாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர் நாய்கள் போன்றவர்கள். முதலாளிகளுக்கு கீழே வேலை செய்பவர்கள் மாடுகள் போன்றவர்கள்.

நாய்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை. முதலாளிகளின் சொத்துக்களுக்கு காவல் காப்பது மட்டுமே அவற்றின் வேலை. முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும். முதலாளியை எதிர்ப்பவர்களை பார்த்துக் குரைக்கும். கடிக்கச் சொன்னால் கடிக்கும்.

மாடுகள் வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும். மாடுகளின் உழைப்பால் உருவான நெல் முதலாளிகளால் நுகரப் படுவதுடன், சந்தையில் விற்று பணமாக்கிக் கொள்வார்கள். நெல்லைப் பிரித்த பின்னர் கழிவாக அகற்றப்படும் வைக்கோல் மட்டுமே மாடுகளுக்கு உணவாகும்.

இன்றைய முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் அப்படித் தான் இயங்குகிறது. தொழிலாளர்கள் மாடுகள் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தியதர வர்க்க புத்திஜீவிகள், நாய்கள் மாதிரி முதலாளிகளுக்கு சேவை செய்வதில் பெருமை அடைகிறார்கள்.

பாட்டாளிவர்க்க அரசியலுக்கும், பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாவது யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது. இரண்டாவது கற்பனாவாத உலகை சிருஷ்டிக்கிறது.

பகல் முழுவதும் அலுவலகத்தில் குந்தியிருந்து, முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கும் வழிவகைகளை செய்து கொடுத்து விட்டு, மாலை நேரப் பொழுதுபோக்காக தேசியவாதம், மதவாதம், இனவாதம் என்று பேசித் திரிவது பூர்ஷுவா அரசியல்.

அதற்கு மாறாக, வேலை செய்யும் இடங்களிலும் அரசியல் பேசி சக ஊழியர்களின் உரிமைகளை உணர வைப்பது பாட்டாளிவர்க்க அரசியல். ஐரோப்பாவில் எனக்குத் தெரிந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தொழிற்சாலைகளில் சேர்ந்து வேலை செய்துள்ளனர்.

நெதர்லாந்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர். பொருளாதார நெருக்கடி காலத்தில் வேலையிழந்து இருந்த நேரம், தபால்கள் தரம் பிரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஏற்கனவே பல தபால் ஊழியர்கள் அவரது கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.

அந்த ஆசிரியர், தபால் தரம் பிரிக்கும் தொழிலகத்தில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொழிலாளர் தற்காலிக தீர்வுகளுக்காக அல்லாமல், நிரந்தரமான சோஷலிசப் புரட்சிக்காக போராட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்தத் தொழிலகத்தை சேர்ந்த பலர் தற்போது கட்சி ஆர்வலர்களாக உள்ளானர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. முதலாளித்துவ சுரண்டலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அனுபவமும் அவசியம். ஒரு அரசியல் ஆர்வலர், தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்வதன் மூலம் தேவையான அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்கிறார். அத்துடன் சக தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கிறார்.

Saturday, August 05, 2017

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்!

படத்திற்கு நன்றி: புத்தூா் கலைமதி மக்கள் ஒன்றியம் 

புத்தூரில் போராடும் மக்களுக்கு தோழமையுள்ள வணக்கம்,

யாழ்ப்பாணம், புத்தூர் மக்களின் மயானம் அகற்றக் கோரும் போராட்டம் இன்றுடன் 25 வது நாட்களாக (05.08.2017) தொடர்கின்றது. தீர்வு வரும் வரையில் போராட்டத்தை கைவிடாத புத்தூர் மக்களின் தளராத மனவுறுதிக்கு தலை வணங்குகிறேன்.

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எமது போராட்டம் ஒன்று தான். பாட்டாளிமக்களுக்கு தேசம் கிடையாது. சர்வதேச ஒருமைப்பாட்டுடன், ஒருமுனைப்பான போராட்டங்களின் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

யாழ்ப்பாணத்தில், இதுவரையில் பல விதமான கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவை பெரும்பாலும் மத்தியதர வர்க்க உத்தியோகஸ்தர்களின் நன்மை கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும். ஆனால், புத்தூர் மக்களின் போராட்டம் 25 வது நாட்களாக தொடர்வது குறிப்பிடத் தக்கது.

உழைக்கும் வர்க்க மக்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். அதனால் தான் அவர்கள் நாட்கணக்காக அல்லாது மாதக் கணக்காக போராட முன்வருகிறார்கள். அவர்களும் வேலைப் பளு காரணமாக ஒரு நாள் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு சென்றிருக்கலாம். அத்தகைய ஒரு நாள் போராட்டம் எந்தத் தீர்வையும் தராது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.

கேப்பாபிலவு மக்களின் போராட்டம் போன்று, புத்தூர் மக்களின் போராட்டமும் உழைக்கும் மக்களின் போராட்டம் தான். அதனால் தான் வீரியத்துடன் முன்னெடுக்கப் படுகின்றது. அதனை முன்னின்று ஏற்பாடு செய்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் அர்ப்பணிப்புடன் கூடிய தலைமைத்துவமும் முக்கியமானது.

உலக வரலாறு முழுவதும், போராடுவதன் மூலமே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுத்து இருக்கிறார்கள். இங்கிலாந்து போன்ற பணக்கார நாடாக இருந்தாலும், இலங்கை போன்ற ஏழை நாடாக இருந்தாலும், உழைக்கும் மக்கள் ஒருமுனைப்பான வர்க்க உணர்வுடன் போராடி வருகின்றனர். அந்த வகையில் புத்தூர் மக்களின் போராட்டமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

இது வெறும் மயானப் பிரச்சினை தானே என்று நாம் கடந்து சென்று விட முடியாது. மக்கள் விரோதிகள் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற போராட்ட அனுபவங்களில் இருந்து தான், மக்கள் தமது நண்பர்களையும், எதிரிகளையும் இனங்கண்டு கொள்கின்றனர்.

ஒரு தெற்காசிய நாடான இலங்கையில் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டம் மட்டுமே சாதிப் பாகுபாடுகளையும் ஒழித்துக் கட்டும். மயானத்தை அண்டிய குடியிருப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருடையவை என்பதால், உயர்த்தப் பட்ட சாதியினர் ஒதுங்கிக் கொள்கிறார்கள். படித்தவர்கள் கூட விதண்டாவாதம் செய்கிறார்கள்.

"இது ஒரு அரசியல் பிரமுகரின் தனிப்பட்ட பிரச்சினை" என்று அவதூறு பரப்பியவர்களையும் எமக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் இருப்பதை வேண்டுமென்றே மறைக்கிறார்கள். எதற்காக புத்தூர் மக்கள் மட்டுமே போராட வேண்டும்?

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாடுகள் புத்தூரை மையப் படுத்தியதாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த அமைப்பு மலையகத்திலும் நடத்திய போராட்டங்களுடன் ஒப்பிட்டால், இது இலங்கை முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் உன்னதமான போராட்டத்தின் ஓர் அங்கம் என்ற உண்மை துலக்கமாகும்.

"முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?" என்று கேட்பதைப் போன்று தான், மயானப் பிரச்சினையை மறுப்பவர்களின் வாதங்கள் அமைந்துள்ளன. "மக்கள் குடியிருப்புகளுக்குள் மயானம் வந்ததா? மயானத்திற்குள் மக்கள் குடியிருப்புகள் வந்தனவா?" என்று கேட்கிறார்கள்.

மக்கட்தொகைப் பெருக்கம் காரணமாக இடப்பற்றாக்குறை ஏற்படுவதொன்றும் புதினம் அல்ல. அபிவிருத்தி காரணமாக பல கிராமங்கள் நகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. காணிகளின் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய காலத்தில், மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மயானத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதும் நியாயமானது தான்.

பிணங்கள் எரிக்கப் படும் இந்து மயானங்களில் இருந்து வரும் புகை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதுடன், உடல் உபாதைகளையும் உண்டாக்க வல்லது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். தனது பிரஜைகளின், ஆரோக்கியமான வாழ்வை உறுதிப் படுத்துவது அரசின் கடமை. அது மத்திய அரசாக இருந்தாலும், மாகாண அரசாக இருந்தாலும் கடமையை தட்டிக் கழிக்க முடியாது.

கொழும்புக்கு அருகில் மீதொட்டமுல்லையில் குவிக்கப் பட்ட குப்பை மேடு சரிந்து விழுந்து, அருகில் குடியிருந்தவர்களை வீட்டுக்குள் சமாதியாக்கியது. இந்த துயர சம்பவம் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்கு முன்னரே குப்பைகளை அங்கிருந்து அகற்றுமாறு குடியிருப்புகளில் இருந்த மக்கள் போராடி வந்திருக்கின்றனர். அதையெல்லாம் அரசும், ஊடகங்களும் புறக்கணித்து வந்தன. அதன் விளைவு தான் அந்த துயர சம்பவம்.

இலங்கை அரசியல்வாதிகள் யாரும் தவறுகளில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. புத்தூர் மக்களும், மீதொட்டமுல்லை மக்களைப் போன்று சுற்றுச்சூழல் மாசடையும் காரணத்தை சுட்டிக் காட்டித் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது மயானம் அகற்றும் கோரிக்கைக்கு நியாயமான காரணங்களை குறிப்பிட்டு, எழுத்து வடிவில் மகஜர்களை அனுப்பியுள்ளனர். வட மாகாண சபை உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்துள்ளனர். ஆனால், இன்று வரையில் யாரிடம் இருந்தும் பதில் இல்லை.

புத்தூர் மக்களின் போராட்டம் வெற்றி அடைவதற்கு உறுதுணையாக இருப்போம். அரசியல்வாதிகள் மக்களின் சேவகர்கள் என்ற உண்மையை உணர வைப்போம். மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களை, வாக்களித்த மக்கள் திருப்பி அழைக்கும் அதிகாரம் கைவர வேண்டும். புத்தூர் மக்களின் போராட்டமும், மக்கள் ஜனநாயக கட்டமைப்பிற்கான போராட்டமும் வேறு வேறல்ல.

தோழமையுடன், 
 கலையரசன் 
 நெதர்லாந்து 
 5-8-2017


புத்தூர் மயானப் பிரச்சினை தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

சாதிக்கொரு மயானம் ஈழத்தமிழரின் சாபம்! 

விடுதலைப் புலிகளை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் தூய தமிழ்தேசியவாதிகளே!! 
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்ற வாருங்கள்!!!

விடுதலைப் புலிகளில் பெரும்பான்மையான போராளிகள் இந்துக்களாக இருந்த போதிலும், இறந்த பின் அவர்களது உடல்களை எரிக்காமல் புதைக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், புலிகளை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்ளும் பலர், சாதியம் காப்பாற்றும் இந்து மயானங்கள் இருப்பதை அங்கீகரிக்கும் முரண்நகையை காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில், மக்கள் குடியிருப்புகள் மத்தியில் உள்ள இந்து மயானத்தை அகற்றுமாறு போராட்டம் நடக்கிறது. பிணங்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழல் மாசடைவைதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் காட்டியே, மேற்கு ஐரோப்பாவில் மின் தகன முறை கொண்டு வந்தார்கள். அதை இந்துக்கள் மட்டுமல்லாது, கிறிஸ்தவ மத நம்பிக்கையற்ற பூர்வீக மக்களும் பயன்படுத்துகிறார்கள்.

அதே நேரம், யாழ்ப்பாணத்தில் இன்னமும் சாதிக்கொரு மயானம் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இது ஒரு சாபக்கேடு. "தமிழ்த்தேசியத்தில் சாதி இல்லை" என்று சொல்லித் திரிவோர், சாதிக்கொரு மயானம் இருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி? புலிகளின் நடைமுறை தமிழீழ அரசு இருந்த காலத்திலேயே அகற்றி இருக்க வேண்டாமா?

அது மட்டுமல்லாது, மயானத்தை அகற்றுமாறு பொது மக்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தியும் வருகின்றனர். ஆதிக்க சாதிப் பத்திரிகையான யாழ் உதயன், "ஒரு கட்சி பின்னால் இருந்து வன்முறையை தூண்டி விடுகின்றது" என்று விஷமத்தனமாக எழுதியது. அத்துடன் மக்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களப் பொலிஸ் எடுத்த வன்முறை நடவடிக்கையை பாராட்டி எழுதியது. வெளிப்படையாகவே சிங்கள அரசின் அடக்குமுறையை ஆதரித்தது. இது தானா உதயனின் தமிழ்த் தேசியம்?

"மக்கள் குடியிருப்புக்குள் மயானம் இருக்கவில்லை. மயானத்தின் அருகில் மக்கள் குடியிருக்கிறார்கள்." என்று வாதாடுவோர் பலருண்டு. உலகில் எந்த நாடாக இருந்தாலும் மக்கட்தொகைப் பெருக்கம் இயற்கையானது. அதற்கு ஈடுகொடுக்க முடியாதவாறு இடநெருக்கடி ஏற்படுவதும் வழமை. ஆனால், அதற்காக மயானத்தை அகற்றக் கூடாது என்று வாதாடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மயானம் சம்பந்தமான விடயத்தில் சாதியம் இல்லையென்றால், அதை அகற்றுவதில் ஏனிந்த தயக்கம்? அது மட்டுமல்ல, இன்றைக்கும் ஈழத் தமிழர்கள் எல்லோரும், கவனிக்கவும் "எல்லோரும்", விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களாகவும், பின்பற்றுவோராகவும் உள்ளனர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

அப்படியானால், புலிகளை பின்பற்றி இறந்தவர்களை புதைக்கும் வழக்கத்தை கொண்டு வந்தால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கலாமே? புலிகளின் "மாவீரர் துயிலும் இல்லம்" மாதிரி, "மாண்டவர் துயிலும் இல்லம்" என்று சில இடங்களை ஒதுக்கி, அங்கு இறந்தவர்களை கொண்டு சென்று புதைக்கலாம். இதனால் சுற்றுச் சூழலை பாதுகாப்பதுடன், மயானத்தை சாதிப் பாகுபாடற்ற சமரசம் நிலாவும் இடமாகவும் காட்டிக் கொள்ளலாம். செய்வீர்களா தமிழ்த் தேசியவாதிகளே?
 (12-7-2017)

(பிற்குறிப்பு: இவ்விரண்டு கட்டுரைகளும் புத்தூரில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு முன்னிலையில் வாசிக்கப் பட்டன.)

Tuesday, August 01, 2017

ALO : ஆப்கானிஸ்தான் மாவோயிஸ்ட் விடுதலை இயக்கம் - சில குறிப்புகள்


ஆப்கானிஸ்தானில் இருந்த சோஷலிச அரசையும், சோவியத் படைகளையும், இஸ்லாமிய முஜாகிதீன்கள் எதிர்த்துப் போராடிய வரலாற்றை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், முஜாகிதீன் குழுக்களுடன் சேராத ஒரு மதச் சார்பற்ற இயக்கமும் அரசை எதிர்த்துப் போராடியது. அதுவும் "கம்யூனிசத்தின் பெயரால், கம்யூனிச அரசை எதிர்த்து போராடியது." என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

அதன் பெயர் "ஆப்கானிஸ்தான் விடுதலை இயக்கம்" (ALO). அவர்கள் தம்மை மாவோயிச கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டனர். ஆனால் உண்மையில் அது ஒரு மதச் சார்பற்ற தேசியவாத அமைப்பாகவே இயங்கியது. வெளிப் பார்வைக்கு கம்யூனிச புரட்சிகர கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தது.

ALO இன்னொரு முஜாகிதீன் குழு அல்ல. ஆனால் அது கம்யூனிசப் புரட்சி இயக்கமும் அல்ல. உள்நாட்டு தேசிய பூர்ஷுவா வர்க்கத்தினரைக் கொண்டிருந்தது. அவர்களுக்கென்று ஒரு இராணுவப் பிரிவு இருந்தது. அதில் பெண்களையும் போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். (இஸ்லாமிய கடும்போக்கு முஜாகிதீன் இயக்கங்களில், பெண் போராளி என்ற கதைக்கே இடமில்லை.) சோவியத் ஆதரவு ஆப்கான் படைகளுக்கு எதிராக சில தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இருப்பினும் அந்த இயக்கம் பற்றி மேற்கத்திய நாடுகள் அக்கறை காட்டவில்லை. அமெரிக்கா இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை ஆதரித்து வந்தது.

ALO அயல்நாடான சீனாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி இருந்தது. சீனாவும் அந்த இயக்கத்திற்கு ஆயுத தளபாடங்கள் வழங்கியது. ALO வின் புரட்சிகர கொள்கை விளக்கங்கள் எல்லாம், அன்று சீனாவிடம் கற்ற பாடங்கள் தான். மாவோ இறந்து ஓரிரு வருடங்களே ஆகி இருந்ததால், அன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் இன்னமும் மதிக்கப் பட்டு வந்தன. மாவோ வகுத்த "சமூக-ஏகாதிபத்திய கோட்பாட்டை" ALO பின்பற்றியது. (மாவோவின் கோட்பாடு அன்றைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு கன கச்சிதமாகப் பொருந்தியது.)

ஸ்டாலினின் மரணத்திற்கு பின்னர், குருஷேவ், பிரஷ்னேவ் போன்ற ஆட்சியாளர்களின் காலத்தில், சோவியத் யூனியன் ஒரு சமூக - ஏகாதிபத்தியமாக செயற்படுவதாக, மாவோ குற்றஞ் சாட்டினார். அதாவது சோவியத் யூனியன் சோஷலிசம் பேசிக் கொண்டே ஒரு ஏகாதிபத்தியமாக நடந்து கொண்டது. ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் படையெடுப்பு அதனை உறுதிப் படுத்தியது. ஆகவே, "சோவியத் சமூக - ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுவதாக" ALO அறிவித்துக் கொண்டது.

சீனா ALO வுக்கு உதவி செய்வதற்கு, பூகோள அரசியல் காரணம் ஒன்றிருந்தது. சீனாவின் மேற்குப் பிராந்திய மாநிலத்தில் வாழும் உய்கூர் மக்களின் பிரிவினைப் போராட்டம் சீனாவுக்கு தலையிடியாக அமைந்திருந்தது. இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், துருக்கி மொழி பேசும் உய்கூர் மக்கள், ஆப்கான் இனங்களுடன் சகோதர உறவு முறை கொண்டாடினர். 

அந்தக் காலத்தில், ஆயிரக் கணக்கான உய்கூர் போராளிகள் ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஆப்கான் போர்க்களத்தில் அனுபவத்தை பெற்றுக் கொண்டு, சீனாவுக்கு திரும்பிச் சென்று போராட விரும்பினார்கள். ஆகவே, ALO ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றினால், அங்கிருக்கும் உய்கூர் போராளிகளை வெளியேற்றுவதாக உறுதிமொழி அளித்தனர். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் சீனாவும் உதவியது.

துரதிர்ஷ்டவசமாக, சோவியத் படைகள் வெளியேறிய இறுதிக் காலத்தில், ALO மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. ஒரு முஜாகிதீன் குழுவுக்கு தலைமை தாங்கிய மசூத்தின் பாதுகாப்பை கோர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், மசூத் அல்லது வேறு யாராவது, அந்த இயக்கத்தை அழிப்பதற்கு திட்டம் தீட்டி இருக்கிறார்கள். வட கிழக்கே மசூத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரில் இருந்து, வட மேற்கே தொஸ்தம் என்ற தளபதியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு பிரயாணம் செய்த நேரம் தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.

ALO இயக்கத் தலைவர்கள் அனைவரும் ஒரு விமானத்தில் (அந்த இயக்கத்தினர் தமது சொந்த ஹெலிகாப்டர் என்று கூறுகின்றனர்) ஏறிச் சென்றுள்ளனர். விமானம் தரையிறங்கும் நேரம், பாரிய குண்டு ஒன்று வெடித்ததால், ALO தலைவர்கள் அனைவரும் ஸ்தலத்திலேயே கொல்லப் பட்டனர். 

தற்போது, ஆப்கானிஸ்தானில் ALO வின் செயற்பாடுகள் ஏறக்குறைய ஸ்தம்பிதமடைந்து விட்டன. பெரும்பாலான ALO உறுப்பினர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். (அவர்கள் மூலம் தான், எனக்கு இந்தத் தகவல்கள் கிடைத்தன.) 

ஆப்கானிஸ்தான் கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள், சர்வதேச ஊடகங்களால் தொடர்ச்சியாக இருட்டடிப்பு செய்யப் பட்டு வருகின்றன. இதற்கு இன்னொரு உதாரணத்தையும் காட்டலாம். 2000- 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களை கொடுமைப் படுத்துவது பற்றிய வீடியோ ஒன்றை, CNN உட்பட பல மேற்குலக தொலைக்காட்சிகள் அடிக்கடி ஒளிபரப்பின. 

தாலிபான் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அந்த வீடியோவை எடுத்து உலகிற்கு அறிவித்தவர்கள், Revolutionary Association of the Women of Afghanistan (RAWA) என்ற, மார்க்சிய பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை மட்டும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விட்டனர். 

உலகம் முழுவதும், "இஸ்லாமிய நாடுகள்" என்று அழைக்கப்படும் நாடுகளில் கூட, இன/மதவாத சக்திகளுக்கு எதிராக மார்க்சிஸ்டுகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்திய ஊடகங்களின் தணிக்கையையும் மீறி அந்த செய்தி உலக மக்களை போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும்.