Wednesday, September 28, 2016

டெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன?


ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் இருந்தது என்று சொன்னால் இன்று பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அது தான் உண்மை. ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து விடுதலை இயக்கங்கள் இயங்கின. அவற்றில் புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் பெரிய அளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுமே கொள்கை அளவில் வலதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொண்டன. நடைமுறையில் இராணுவவாதத்தை பின்பற்றி வந்தன.

1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு பின்னர், ஐந்து இயக்கங்களுக்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சியும், நிதியும், ஆயுதங்களும் வழங்கியது. இருப்பினும், டெலோவுக்கு அதிக கவனிப்பு கிடைத்து வந்தது. டெலோ எந்தளவுக்கு இந்திய ஆதரவைப் பெற்றிருந்தது என்பது, அவர்கள் நடத்திய பிரமிக்கத் தக்க தாக்குதல்களில் இருந்து வெளித் தெரிந்தது. இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நடந்த மிகப் பெரிய கெரில்லாத் தாக்குதல்கள் அவை.

1984 ம் ஆண்டு, நவம்பர் மாதம், டெலோ போராளிகளின் அதிரடி நடவடிக்கையாக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தாக்கப் பட்ட படியால், அதை மேலும் பலப்படுத்தி பெருமளவு இராணுவப் - பொலிசாரை குவித்து வைத்திருந்தனர். டெலோவின் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான பொலிசார் கொல்லப் பட்டனர். பொலிஸ் நிலைய கட்டிடம் தகர்க்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து உதவிக்கு வந்த படையினரின் வாகனம் கைதடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டது. அதிலும் சில படையினர் கொல்லப் பட்டனர்.

மேற்படி தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகள் டெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. டெலோ போராளிகள் தம்முடன் வீடியோ படப்பிடிப்பாளர்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தாக்குதல் அதுவாகும். பிற்காலத்தில் புலிகள் அந்தப் பாணியை பின்பற்றி, எல்லாத் தாக்குதல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

தாக்குதல் சம்பவங்களை காட்டும் வீடியோக்களை, புலிகள் தமது பிரச்சாரத்திற்கு திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான், அன்று டெலோவும் நடந்து கொண்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் வீடியோவை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று காட்டினார்கள். இந்தப் பிரச்சார நடவடிக்கையால் ஏராளமான இளைஞர்களை அணிதிரட்ட முடிந்தது. பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களும், கொள்கை, கோட்பாடுகளை விட, இராணுவ சாகசங்களுக்கு மயங்குபவர்கள் தான். ஆன படியால், அன்று டெலோவுக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.

1985, ஜனவரி, முருகண்டியில் டெலோ வைத்த நிலக்கண்ணி வெடியில், கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் வண்டி சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த எழுபதுக்கும் பேற்பட்ட படையினரும், பொது மக்களும் கொல்லப் பட்டனர். ஆயிரம் கிலோ எடையுடைய ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்ட படியால், பல ரயில் பெட்டிகள் தகர்க்கப் பட்டன.

அன்று டெலோ நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாகிய மாதிரி, ஏனைய இயக்கங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அந்தளவு வெடி மருந்துகளை பயன்படுத்தும் ஆயுத பலம், அன்று வேறெந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை. அதன் அர்த்தம், இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து டெலோவை வளர்த்து விட்டிருந்தது. உண்மையில், அன்றைய சூழலில் டெலோ எல்லாவற்றிலும் பலமான இயக்கமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

டெலோவின் வளர்ச்சி எந்தளவு துரித கதியில் நடந்ததோ, அந்தளவு வேகத்தில் அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. ஒரு இயக்கம் திடீரென வீக்கமடைவது நல்லதல்ல என்று அப்போதே பொது மக்கள் பேசிக் கொண்டனர். ஆயுத பலமும், போராளிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்த படியால் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கியது. யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல சமயங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு டெலோவின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.

தலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஒரு நல்ல மனிதர் என்று பிற இயக்கங்களாலும் மதிக்கப் பட்டு வந்தார். ஆனால் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்த யுத்த பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஒவ்வொரு தளபதியும் தமக்கென தனியான பிரதேசத்தையும், விசுவாசமான போராளிகளையும் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.

தாஸ், பொபி ஆகிய இரண்டு தளபதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடைந்து மோதல் நிலைக்கு வந்தது. "பொபி குறூப்", "தாஸ் குறூப்" என்று அழைக்கப் படுமளவிற்கு முரண்பாடுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. கல்வியங்க்காடும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் பொபி குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது. அதே மாதிரி, நெல்லியடியும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாஸ் குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது.

இதற்குள் பிரதேசவாதமும் மறைந்திருந்தது. பொபி குறூப் யாழ் நகரை அண்டிய வலிகாமம் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. தாஸ் குறூப் வட மராட்சிப் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. இருப்பினும் கல்வியங்காடு டெலோவின் தலைமையகமாக கருதப் பட்டது. அங்கு தான் டெலோவின் மிகப்பெரிய முகாம் இருந்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, குறிப்பாக திருகோணமலையை சேர்ந்த போராளிகளும் அதிகளவில் தங்கியிருந்தனர். அத்துடன் தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அங்கு தானிருந்தார்.

யாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்த படியால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தன. எல்லா இடங்களிலும் ஆயுதமேந்திய போராளிகள் காணப் பட்ட சூழலில், வழமையான கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டத் தயங்குவார்கள். ஆகையினால், இது இயக்கங்கள் நடத்திய கொள்ளை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

ஏற்கனவே தனியாரின் வாகனங்களை அடாவடித்தனமாக பறித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இயக்கங்களும் அதைச் செய்துள்ளன. ஆயுத முனையில் வாகனங்களை பறித்துச் சென்று விட்டு, அவர்களது நோக்கம் நிறைவேறியதும் திருப்பிக் கொடுப்பது வழமையாக இருந்தது. ஆனால், டெலோ வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். வாகனம் எங்கே என்று உரிமையாளருக்கும் தெரிவிப்பதில்லை. இது உண்மையில் ஒரு வழிப்பறிக் கொள்ளை.

இதைத் தவிர வசதி படைத்தவர்களின் வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் எப்போதும் முகமூடி அணிந்திருந்த படியால், அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் பொழுது, வீட்டிலிருந்தவர் அடையாளம் கண்டு விட்டதால், அவரை சுட்டுக் கொன்று விட்டனர். ஊர் முழுவதும் ரோந்து சுற்றும் இயக்கப் போராளிகளுக்கு தெரியாமல், எந்தத் திருடனும் வர முடியாது என்பது பொது மக்களின் அபிப்பிராயம். அத்துடன் கொள்ளையரின் கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.

இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று, நல்லூர் கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஆகிய மிகப்பெரிய பணக்கார கோயில்களில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அந்தளவு துணிச்சல் இயக்கங்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். அத்துடன் கோயில்களுக்கு அருகாமையில் இயக்கங்களின் சோதனைச் சாவடிகளும் இருந்தன. அவற்றை மீறி எந்தத் திருடனும் வர மாட்டான்.

துர்க்கையம்மன் கோயில் கொள்ளை டெலோவாலும், நல்லூர்க் கோயில் கொள்ளை புலிகளாலும் நடத்தப் பட்டதாக பொது மக்கள் நினைத்தற்கான காரணமும் அது தான். (தெல்லிப்பளை கோயில் கொள்ளையும் புலிகளால் நடத்தப் பட்டதாக பின்னர் ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.)

பிற்காலத்தில், புலிகளின் திடீர் தாக்குதலில் டெலோ இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்னர், டெலோ கொள்ளையடித்து வைத்திருந்த பொருட்களை புலிகள் காட்சிக்கு வைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் முதல் கோயில் நகைகள் வரையில் அதற்குள் இருந்தன. ஒரு சந்தை போடுமளவிற்கு போதுமான பொருட்கள் அங்கிருந்தன. புலிகள் தமது வாகனங்களில் சாரி சாரியாக அவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.

அதற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மை தான். அன்று டெலோ மட்டுமல்லாது, வேறு இயக்கங்களும் கொள்ளைகளில் சம்பந்தப் பட்டதாக பொது மக்கள் நம்பினார்கள். இருப்பினும், டெலோ அழிக்கப் பட்ட பின்னர், எல்லாப் பழியும் அவர்கள் மேல் விழுந்த படியால், வேறு யாரும் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

டெலோவின் அடாவடித்தனங்களால் பொது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். உண்மையில், அதுவும் புலிகளின் டெலோ அழிப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. நான் நேரில் கண்ட, அல்லது கேள்விப்பட்ட சில உதாரணங்களை குறிப்பிடலாம்.  

யாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில் கடைக்கு முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் கடத்திக் கொண்டு போக முயற்சித்தனர். உரிமையாளர் வந்து கூச்சல் போட்டதும், தாங்கள் "டெலோ" என்று சொன்னார்கள். உரிமையாளர் அதற்கும் மசியாமல் "டெலோ என்றால் திருடர்களா?" என்று சத்தம் போட்டார். உடனே ஒருவன் கிரனேட் எடுத்து கிளிப்பை கழற்றி மிரட்டினான். இருப்பினும், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் பின்வாங்கிச் சென்றனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதியில் ஒரு பிரபலமான வீடியோ கசெட் வாடகைக்கு விடும் கடை இருந்தது. அவர்களிடம் ஏராளமான படக் காசெட்டுகள் இருந்தன. அந்த வீடியோக் கடையில் ஆபாசப் படங்களும் வாடகைக்கு விடுவதாக ஒரு குற்றச்சாட்டு, யாராலோ டெலோ முகாமில் இருந்தவர்களிடம் அறிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து வீடியோக் கடையில் இருந்த அத்தனை காசெட்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.

ஆபாசப் படக் காசெட்டுக்காக ஒரு கடையில் இருந்த அத்தனை பொருட்களையும் அபகரித்து சென்றார்கள். இது மாதிரியான "கலாச்சாரப் பாதுகாப்பு நடவடிக்கை" பல இடங்களிலும் நடந்துள்ளது. பிற்காலத்தில், டெலோ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர், அங்கு பல ஆபாசப் படக் காசெட்டுகளை கண்டெடுத்ததாக கூறினார்கள்.

தமிழ்க் கலாச்சாரக் காவலர்களான டெலோ இயக்கத்தினர், கல்வியங்காட்டில் ஆபாசப் படம் தயாரித்ததாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர். டெலோவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளியான, ஒரு அழகான தமிழ்ப் பெண்ணை வைத்து அந்தப் படம் எடுக்கப் பட்டதாக உள்ளிருந்து கசிந்த தகவல்கள் தெரிவித்தன. அது உண்மையானால் கலாச்சார காவலர்களின் இரட்டை வேடத்தை அது காட்டுகின்றது.

டெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத யுத்தப் பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். இருபாலையில், டெலோ உறுப்பினர்களால் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டார். அந்தச் சம்பவத்தை ஒரு பதினான்கு வயது சிறுமி பார்த்து விட்டாள். வன்புணர்ச்சிக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான அந்தச் சிறுமியை பிடித்துச் சென்றனர். அந்த அப்பாவிச் சிறுமி கல்வியங்காடு முகாமில் சில நாட்கள் வைத்திருந்து சித்திரவதை செய்யப் பட்டாள். பின்னர் அரச உளவாளி என்று குற்றம் சுமத்தி தெருவில் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டாள்.

அரச உளவாளி என்ற பொய்க் குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட அப்பாவி சிறுமியின் குடும்பமும் வறுமையில் வாடியது. அந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். ஒரேயொரு அண்ணன் ஏற்கனவே இராணுவத்தால் பிடிக்கப் பட்டு பூசா முகாமில் அடைக்கப் பட்டிருந்தான். இரண்டு துயரச் சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த படியால், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. உண்மை தெரியாத பொது மக்கள், தெருவில் சுட்டுக் கொல்லப் படுபவர்கள் எல்லாம் உளவாளிகள் தான் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.

டெலோ இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது எந்தளவு பெரிய இயக்கமாக வளர்ந்திருந்தாலும், போராளிகளின் எண்ணிக்கையும், ஆயுத பலமும் அதிகமாக இருந்தாலும், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டால் அழிவு ஆரம்பமாகி விடும். 

டெலோ, பொது மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்லாது, இயக்கத்தில் இருந்த போராளிகளின் தார்மீகப் பலத்தையும் இழந்திருந்தது. ஏற்கனவே பலர் இயக்கத்தின் அகங்காரத்தை தமதாக்கிக் கொண்டிருந்தனர். தம்மை மிஞ்ச ஆளில்லை என்பது போல நடந்து கொண்டனர். அதனால் அடிமட்டப் போராளிகள் சோர்வடைந்து போராட்டத்தில் நம்பிக்கையிழந்து காணப் பட்டனர்.

புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்திற்கு முன்னரே, இந்திய அரசு டெலோவை கைவிட்டு விட்டது. நீண்ட காலமாக, தனது செல்லப் பிள்ளை போன்று முன்னுரிமை கொடுத்து வந்த இந்தியா டெலோவை கைவிடுவதற்கான காரணம் மிகவும் இலகு. எந்த சக்தியும் தனது கையை மீறிப் போய் விடக் கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக வருவதற்கு, இந்தியாவின் ஆசீர்வாதமும் மறைமுகமாக இருந்தது.   

(தொடரும்)

Tuesday, September 27, 2016

தோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்!


புலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.

"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது(?)" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்! நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.

1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.

சுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.

ஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, "பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

தமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.

ப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் "தோழ‌ர்க‌ள்" என்று அழைக்கும் வழமை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.

தந்தையை "ஐயா" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா? ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.

தாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.

ஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.

புலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.

விடுதலைப் புலிகள் "தோழர்" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன்! அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.

இந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.

அதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.

அநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.

"தோழர்" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். "ஐயா... அம்மா..." என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.

பாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் "தோழர்".

இனிமேல் யாரையும் "மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: "தோழர்."

பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் "காமராட்" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் "தேசியவாதம்". ஆகவே, தமிழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு "இஸ்லாமிய பண்பாடு" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
"தோழர் பிரபாகரன்!" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை

Sunday, September 25, 2016

சிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்


தமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன? எங்கேயோ உதைக்கிறதே?

"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.



மைந்தன் சிவாவின் நக்கலான பதிவு : 

//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு குண்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, "விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.!" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்? அட அதான் அண்ணன் சொல்றார்லே? அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு? ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா! இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610?pnref=story)

ஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா? அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா? அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.

மைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.

இதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பதில் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.

சிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும்? மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.

மைந்தன் சிவா திரிப்பது மாதிரி, "விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.!" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

கட்டுரையில் இருந்து: 
//விமல் வீரவம்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)

கொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்!

நான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.

வட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா? நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.


விமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)

ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா?)

கொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினால், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா?

மைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் கூட  அவதானமாக இருக்கிறார்கள். 

Saturday, September 24, 2016

ஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்


ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான். 

ஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.

அப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.

அந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் கப்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

புளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான "வங்கம் தந்த பாடம்" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.

புளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.

புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.

மார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.

அது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் நூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.

இந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று "தீப்பொறி அமைப்பு" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.

அப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.

புளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.

மேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.

அந்தக் காலத்தில், "மாத்தையா குறூப்" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.

இந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.

இருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.

இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். "வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.

முள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.

ஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி?

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.

ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், "Lebensraum" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை "இந்தியத் தமிழர்கள்" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுத் தளம் ஆட்டம் கண்டது.

மகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.

முதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.

Friday, September 23, 2016

ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்


பிரபலமான சிங்கள இனவாதி விமல் வீரவன்ச பிறப்பால் ஒரு தமிழர்! அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர்!! தமது தொப்புள்கொடி உறவுக்காக தமிழினவாதிகள் பெருமைப் படலாம். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் பலரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், அவர்களது முன்னோர் தமிழர்களாக இருந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.

விமல் வீரவன்ச பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நம்பிக்கைக்குரிய அடியாள். தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை உதிர்த்து பிரபலம் தேடி வந்தார். அவரது முன்னோர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறினார்கள்.

விமல் வீரவன்ச "பெறவா" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு. சிங்களத்திலும் பெற என்பது பறை மேளத்தை குறிக்கும் சொல் தான். (ஆதாரம்: Caste And Exclusion In Sinhala Buddhism)

சிங்களப் பிரதேசங்களில் முதலியார்கள், கொவிகம (தமிழில்:வெள்ளாளர்) போன்ற ஆதிக்க சாதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு அதிகாரத்தையும், விவசாய நிலங்களையும் பகிர்ந்தளித்து இருந்தனர். இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.

கொவிகம நிலவுடைமையாளர்களின் அடியாட்களாகவும் பெறவாக்களே இருந்தனர். மகிந்த ராஜபக்சே (கொவிகம), விமல் வீரவன்சவை (பெறவா) அடியாளாக வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இலங்கையில் சிங்களவர்களும் இன்னமும் சாதிய சமூகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், பெரும்பாலும் கொவிகம சாதியினர் தான்.

இராணுவத் தளபதிகளாக ஒன்றில் கொவிகம அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கரவா (கரையார்) சாதியினராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கோத்தபாய ராஜபக்சே ஒரு கொவிகம. சரத் பொன்சேகா ஒரு கரவா. ஆனால், இராணுவத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதாரணமான போர்வீரர்கள் பெரும்பாலும் பெறவாக்கள் அல்லது பிற தாழ்த்தப் பட்ட சாதியினர். ஈழப்போரில் பலி கொடுக்கப் பட்டவர்களும் அவர்கள் தான்.

"இனவெறியூட்டப் பட்ட சிங்கள இராணுவம்" என்று அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிராமப்புறங்களை சேர்ந்த படிப்பறிவில் குறைந்த பெறவா மற்றும் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை இனவாதிகளாக மூளைச்சலைவை செய்வது இலகு. அவ்வாறான ஒருவர் தான் விமல் வீரவம்ச.

உயர்த்தப் பட்ட சாதி சிங்களவர்கள், தமக்கு கீழே உள்ள தாழ்த்தப் பட்ட சாதியினரை இனவெறியூட்டி போரில் பீரங்கிக்கு தீனியாக பயன்படுத்தி வந்தனர். அதே நேரம், கொவிகம உயர்சாதியினர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டது மாத்திரமல்லாது, தமிழ் பேசும் வெள்ளாளர்களுடன் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டனர். ராஜபக்சே குடும்பமே அதற்கு சிறந்த உதாரணம்.

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்: 
1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண். 
2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன். 
3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.) 
4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார். இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றியவர், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கொல்லப் பட்டார்.
(ஆதாரம்: Gota's War, C.A. Chandraprema)

இல‌ங்கையில், சிங்க‌ள‌ - த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதின‌ம் அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். ஏனென்றால் அவ‌ர்க‌ள் ஒரே வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.

பார்த்தீர்க‌ளா ம‌க்க‌ளே! மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். "சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது" என்றுரைப்பார்க‌ள்.

த‌மிழ் ம‌க்களே உங்க‌ளது எதிரி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அல்ல‌. சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான். அவ‌ர்க‌ள் இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்வார்க‌ள். இர‌ண்டு இன‌ங்க‌ளையும் மோத‌ விட்டு வேடிக்கை பார்ப்பார்க‌ள். இந்த‌ அயோக்கிய‌ர்க‌ளை அடித்து விர‌ட்டாம‌ல் விடுத‌லை சாத்திய‌மில்லை.

Tuesday, September 20, 2016

ஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பாடுகள்


நடுநிலைவாதிகள் மாதிரி காட்டிக் கொள்ளும் சிலரும், "ஈழத் தமிழர் மத்தியில் சாதிய, வர்க்க முரண்பாடுகள் இல்லை" என்று கூறுவார்கள்.

ஈழத்தை சேர்ந்த ஆதிக்க சாதித் தமிழர்கள் சாதியத்தை பாதுகாப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். "தமிழ்த் தேசியம் பேசுதல், சைவ மதம் பேணுதல்" என்ற பெயரின் கீழ் மறைமுகமாக சாதியத்தை காப்பாற்றுகின்றனர். அதை யாராவது கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தில் சாதியே இல்லை என்று சாதிப்பார்கள். 

"ஈழத்தில் சாதி இல்லையென்று" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:
//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//

இதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின்  சாதி அமைப்பிற்கும், ஈழத்தின்  சாதி  அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லையா?
ஈழத்தமிழர்களில் ஆதிக்க சாதியினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதே சாதி சிங்களவர்களிலும் உண்டென்பதால், காலனிய காலத்தில் இருந்து ஆதிக்க சாதியாக இருந்து வருகின்றனர். 

ஒருகாலத்தில், நிலவுடைமையாளர்கள் மட்டுமல்லாது, கல்வி கற்றவர்களும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருந்த படியால், தனியாக  சாதிச் சங்கம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 

ஈழத்தில் சாதிக்கு என கட்சி இல்லையா?
ஈழத்தில் சாதிக்கென கட்சி இருந்தது. முதலாவது தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆதிக்க சாதியினரான வெள்ளாளரரின் சாதிக் கட்சியாக இருந்தது. அந்த சாதியினர் மட்டுமே, கட்சி வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும் இருந்தனர். அதிலிருந்து  தமிழரசுக் கட்சி  பிரிந்த  பின்னரும் அந்த  நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை.
//ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் தாழ்த்தப் பட்ட மக்களையோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ ஒரு பொருட்டாக ஒரு போதும் மதித்ததே கிடையாது.// (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்) 


ஈழத்தில் ஒரு சாதி தலைவர் இல்லையா?
ஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் உயர்சாதித் தலைவர்களாக இருந்தனர். அவர்களாகவே அப்படிக் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சர்வசன வாக்குரிமை வந்த நேரம், அதை அனைத்து சாதியினரும் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் எதிர்த்து வந்தனர்.

சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லையா?
ஆரம்ப காலத்தில், அனைத்து பள்ளிக்கூடங்களும் அதிக்க சாதி மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தன. சில கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள், மிகக் குறைந்த அளவு தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு இடம் கொடுத்த நேரம் கலவரமே வெடித்தது. 

அதனால் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் படிப்பதற்கு தனியான பாடசாலைகள் கட்டப் பட்டன. அவை பெரும்பாலும் கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சாதி பார்க்காமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டார்கள். 

ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லையா?
ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயில்கள் அனைத்தும், ஆதிக்க சாதியினரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தன. தாழ்த்தப் பட்ட சாதியினர் வெளியே நின்று சாமி கும்பிட வேண்டிய நிலைமை இருந்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களின் பிறகே எல்லோரையும் அனுமதித்தார்கள். அதே நேரம், கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக்காக கட்டப் பட்ட சிறிய அளவிலான கோயில்களுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே சென்று வந்தனர். தற்போது வெளிநாட்டுப் பண வரவு காரணமாக, மறைமுகமாக சாதிக்கொரு கோயில் உருவாக்கி வருகின்றது. 

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 
யாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:

//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.

காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.

அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.

கல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.

இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//


ஈழத்தமிழரின் சாதிய முரண்பாடுகள் மட்டுமல்ல, வர்க்க முரண்பாடுகளும் மூடி மறைக்கப் படுகின்றன.  அந்த "நடுநிலைமையாளர்கள்" எப்போதும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு தயங்குவதில்லை.

தமிழ்தேசிய முகமூடி அணிந்து, சொந்த இன மக்கள் மீது வர்க்கத்துவேஷம் காட்டும் ஈனப்பிறவிகள். சிறிய திருடர்களை கண்டிப்பார்கள். ஆனால், பெரிய கொள்ளையர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். தாம் சார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கவும் தயங்க மாட்டார்கள். 

கிளிநொச்சி நகர நவீன சந்தைக் கட்டிடத்தில் இருந்த புடவைக் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அருகில் இருந்த, தீப்பிடிக்கும் என எஞ்சிய கடைகளில் இருந்து பெருமளவான பொருட்கள் வெளியில் அள்ளி போடப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை சிலர் திருடிக் கொண்டு போனார்கள்.  

அதைக் கண்டித்து ஒரு "தமிழ்த் தேசிய உணவாளர்" பின்வருமாறு திட்டித் தீர்க்கிறார். அவர் இறுதியுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் வன்னி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்.
//என்ன பிறப்பு! எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு! இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர்? ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர்? நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்! இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு!

அப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும்? கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா?

பேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு? செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம்? நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா? அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.

இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு!

*******

Saturday, September 17, 2016

அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!


இந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. "தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்..." இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.

 2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் "குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்." என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.

சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து "நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.

அரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.

குடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை "இந்துக்களின் புனித ஸ்தலமாக" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், "இந்துக்களுக்கு புனிதமான" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.

குடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.

பழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.

குடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்கள். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.

அரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.



ஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான "திருப்பாச்சி அரிவாள்", "வீச்சு அரிவாள்" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.

பண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.

சங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. குடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர்! அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.

குடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

அது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன. 

கோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் "கங்கீ" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.

குடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.

குடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்காலத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.

குடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா? அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா? இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.

குடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். "மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)" அந்தப் பிரிவை சேர்ந்தது. 

இன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை "மாப்பிள்ளைகள்" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.

ஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் "சிரிய கிறிஸ்தவர்கள்" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.

அரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

சேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.

மாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர். 

இன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.

அந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்!

கேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே "பியாரி பாஷா" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள். 

எம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்! சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும். 

பண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர். 

ரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் "தேசிய இராணுவம்" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது  தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.

தென்னிந்தியாவில் குடியேறிய ரோமர்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் "யவனர்கள்" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் "இயோனியா" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் "ஜோனகர்கள்" என்று அழைக்கப் பட்டனர்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் "சோனகர்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது. 

இன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

உசாத்துணை மேலதிக தகவல்களுக்கு:


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Tracing The Exotic Kodavas

Thursday, September 08, 2016

இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா!


"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது." மத்தேயு 19:24

ஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.

அன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்ற கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்!

1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். "பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா?

அமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.

உலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா? அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்படிப் புனிதராக முடியும்?

மேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.

கீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக‌ எழுத்தாள‌ர். புனித‌ர் என்று அழைப்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌ அன்னை தெரேசாவை, வ‌த்திகான் புனித‌ராக‌ பிர‌க‌ட‌னப் ப‌டுத்தியுள்ள‌து தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.

அவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் இருந்து சில‌ குறிப்புக‌ள்:

1. ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தை விட‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவ‌தே அவ‌ர‌து நோக்க‌மாக‌ இருந்த‌து. 
2. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் நோயாளிக‌ள் மோச‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர். ம‌ருந்துக்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு. எப்போதாவ‌து ஒரு நாள் வ‌ரும் வைத்திய‌ர். சுத்திக‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஊசிக‌ள். சுகாதார‌ம‌ற்ற‌ இட‌ம். இவை ச‌ர்வ‌சாதார‌ண‌ம். 
3. பெரும்பாலும் தொண்ட‌ர்க‌ளே நோயாளிக‌ளுக்கு உத‌வினார்க‌ள். ஒரு த‌ட‌வை நோயாளியை அவ‌ச‌ர‌ சிகிச்சைக்கு கொண்டு போக‌ டாக்சியை வ‌ர‌ச் சொன்னார்க‌ள். அன்னை தெரேசா த‌டுத்து விட்டார். கார‌ண‌ம்? பிற‌கு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக‌ வேண்டி இருக்கும்! 
4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிர‌ச்சினை இருந்த‌தாக‌ சொல்ல‌ முடியாது. அமெரிக்காவில் உள்ள‌ க‌த்தோலிக்க கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் அள்ளிக் கொடுத்த‌ன‌ர். ஹைத்தி ச‌ர்வாதிகாரி டுவாலியேர் கூட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ டால‌ர் நிதி வ‌ழ‌ங்கினார். அந்த‌ப் பண‌ம் எல்லாம் எங்கே போன‌து? யாருக்கும் தெரியாது. 
5. போபால் Union Carbide நிறுவ‌ன‌த்தின் ந‌ச்சுவாயு க‌சிவில் 2500 பேர் ப‌லியானார்கள். பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அமெரிக்காவிட‌ம் ந‌ஷ்ட‌ஈடு கோரினார்க‌ள். அன்னை தெரேசா அவ‌ர்க‌ளை "ம‌ன்னித்து விடுங்க‌ள்" என்று ம‌ன்றாடினார்! 
6. யூகோஸ்லேவிய‌ போர்க‌ள் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், வ‌ன்புண‌ர்ச்சிக்கு ப‌லியான‌ பெண்க‌ள் க‌ர்ப்ப‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வேண்டாத‌ க‌ர்ப்ப‌த்தை க‌லைக்க‌ முய‌ன்ற‌ பொழுது அன்னை தெரேசா த‌டுத்தார். "க‌ருக்க‌லைப்பு ச‌மாதான‌த்திற்கு விரோத‌மான‌து. தாய்மாரே கொலை செய்கின்ற‌ன‌ர்....!" இது தான் "புனித‌ர்" தெரேசாவின் வாத‌ம்.
 (ந‌ன்றி: NRC Handelsblad, 6 sep. 2016)


Wednesday, September 07, 2016

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!" - புகழ்ச்சியின் மறுபக்கம்


வெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. "எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது "Road to Nandikadal" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். "சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்!

Financial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) "தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:

//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.

பெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.

அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.

அவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.

ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.

அவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.

இறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.

இறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//

மேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக்  குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா? "அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்..." இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா? இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா? 

உண்மையில் அது "புகழ்ச்சி" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. "ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்..." இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.

மேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: "இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்...."

ஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், "பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.

ஜெனரல் குணரத்னேயின் கூற்று: "1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை."

"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு "சிங்களப் பிரபாகரனாக" கருதப் பட்டார்!

மேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.

மேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.

கெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.

தமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார். 

அதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.

"நந்திக்கடல் பாதை" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன? அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் "அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை." என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

இப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று?

போர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்): 
//Being a Division Commander who was there in the final phase of the last battle, I strongly refute these allegations. No human rights abuses and no war crimes were committed by the SLA during the final battle. It was a war between the Army and the terrorists. During a war situation, definitely there could be casualties. We took all possible precautions to minimise civilian casualties following humanitarian law. That was why we named our military operation the ‘humanitarian operation’.//
- See more at: http://www.ft.lk/article/566048/Road-to-Nandikadal#sthash.phOd68At.dpuf

நூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal