Sunday, June 23, 2019

இஸ்லாமிய - அரேபியர்கள் உருவாக்கிய ஐரோப்பிய அறிவியல்!


இஸ்லாமோபோபியா எனும் இனவெறிக் கருத்துக்களில் ஒன்றான "இஸ்லாம் அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" எனும் கூற்று பிரபலமானது. ஒரு சில பல்கலைக்கழக பட்டதாரிகள் கூட அதை நம்பி பிரச்சாரம் செய்யும் அளவிற்கு சமூகத்தில் அறியாமை நிலவுகின்றது. உண்மையில் இது ஓர் ஐரோப்பிய மையவாதக் கருத்து. அது அடிப்படையில் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்லாமியர் அல்லாத ஆசிய நாட்டவர் அனைவருக்கும் எதிரான நிறவெறிக் கருத்து.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஐரோப்பியர் வருவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அரேபிய நாகரிகம் வந்து விட்டது. அது உள்நாட்டு காலச்சாரத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு ஓர் உதாரணம் யூனானி மருத்துவம். அது தற்போது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்பட்டாலும், அது உண்மையில் அரேபியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் விரிவாகச் சொன்னால் அரேபிய- கிரேக்க நாகரிகத்தின் விளைவு தான் யூனானி மருத்துவம்.

யூனானி என்ற சொல் கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பண்டைய தமிழகத்தில் கிரேக்கர்களை யவனர்கள் என்று அழைத்தனர். இன்றைய கிரேக்க தேசத்தின் மேற்கத்திய மாகாணமான இயோனியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். ஆனால், தமிழகத்தில் அரேபியரையும் யவனர்கள் என்றே அழைத்தனர். இன்று முஸ்லிம்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் சோனகர் என்ற சொல் கூட யவனர்களில் இருந்து திரிபடைந்த சொல் தான்.

பண்டைய தமிழர்களுக்கு கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்காலத்திலும் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரையும் சீனர்கள் என்று அழைப்பது சாதாரணமான விடயம். பண்டைய தமிழர்களும் அப்படித் தான் அரேபியரையும் யவனர்கள் என்றனர். அவர்களது உடற்தோற்றம் ஒரே மாதிரி இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். இப்போதும் சில நேரம் கிரேக்கர்கள், அரேபியர்களுக்கு இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் கிரேக்க சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஜோர்டானில் இன்றைக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவரும் பண்டைய நகரமான பேட்ரா, முன்னொரு காலத்தில் கிரேக்க நகரமாக இருந்தது. பேட்ரா என்பது கூட ஒரு கிரேக்கச் சொல் தான். பைபிளில் குறிப்பிடப்படும் இயேசுவும் சீடர்களும் வாழ்ந்த காலகட்டம், ரோமர்களின் ஆட்சிக் காலம் ஆகும். அந்த "ரோமர்கள்" பெரும்பாலும் கிரேக்க மொழி பேசிய கிரேக்கர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய கண்டத்தில் கிரேக்கம் மட்டுமே ஒரேயொரு நாகரிகமடைந்த பகுதியாக இருந்தது. அன்றைய காலத்தில் மேற்கு ஐரோப்பியர்கள் காடுகளுக்குள் வாழும் காட்டுமிராண்டிகளாக இருந்த படியால், கிரேக்கர்களுக்கு மேற்குலகம் பற்றி எந்த அக்கறையும் இருக்கவில்லை. அவர்களது நோக்கம் முழுவதும் கிழக்கில் இருந்த நாகரிகமடைந்த சமுதாயங்களை போரிட்டு வெல்வதாக இருந்தது. ஆகையினால், உலகம் முழுவதையும் ஆள விரும்பிய மசிடோனியா மன்னன் அலெக்சாண்டரின் படையெடுப்புகள் எல்லாம் கிழக்கை நோக்கியதாகவே இருந்துள்ளன.

அலெக்சாண்டர் வென்ற இடமெல்லாம் அலெக்சாண்ட்ரியா என்ற பெயரில் கிரேக்க நகரங்கள் அமைக்கப் பட்டன. எகிப்தில் இப்போதும் அந்தப் பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கியில் இன்றைக்கும் இஸ்கென்டருன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. துருக்கி மொழியில் அலெக்சாண்டரை இஸ்கெண்டர் என்று அழைக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் துருக்கியின் மத்திய பகுதியில் கூட பெருமளவு கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய ஆப்கானிஸ்தான், அபிவிருத்தியில் பின்தங்கிய ஏழை நாடாக இருந்தாலும், முன்னொரு காலத்தில் அங்கு கிரேக்க நாகரிகம் செழித்து வளர்ந்தது. கண்டஹார், ஹெராட் ஆகிய நகரங்கள் இன்றைக்கும் கிரேக்க பெயர்களால் அழைக்கப் படுகின்றன. ஒரு காலத்தில் அங்கு வாழ்ந்தவர்களும் கிரேக்கர்கள் தான். அவர்கள் பிற்காலத்தில் பௌத்தர்களாகவும், பின்னர் இஸ்லாமியராகவும் மாறி விட்டனர். பாகிஸ்தானில் இன்றைக்கும் கிரேக்க பாரம்பரியம் பேணும் பழங்குடி இனம் ஒன்றுள்ளது.

கிரேக்கர்கள் இஸ்லாமியராக மாறிய வரலாறு ஆப்கானிஸ்தானுடன் மட்டும் நின்று விடவில்லை. ஹெரோடோடுஸ் எனும் பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் கிரேக்கர்கள் சென்று குடியேறிய இடங்களை அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய யேமன் நாட்டில் உள்ளா சாபா, சானா வரையில் கிரேக்கர்கள் சென்று குடியேறி உள்ளனர். அதற்கு ஆதாரமாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த வெண்கலக் கிண்ணங்கள் உள்ளன. தெற்கு எகிப்தில் முகாமிட்டிருந்த இரண்டு இலட்சம் கிரேக்க படையினர், இன்றைய சூடானின் மத்திய பகுதி வரையில் சென்று குடியேறி உள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூகோள அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, நிறைய சூடானிய- கிரேக்கர்கள் சைப்பிரசிலும், கிரீசிலும் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர்.

இந்த வரலாற்றை இங்கு நினைவுபடுத்துவதற்குக் காரணம், இஸ்லாம் என்பது பாலவனத்து அரேபியரின் மதம் என்ற கருத்து எந்தளவு அபத்தமானது என்று நிரூபிக்கத் தான். இஸ்லாமியரின் இறைதூதர் முகம்மது நபி பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே அரேபியாவில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. இன்றைய சவூதி அரேபியாவின் தென் மேற்குப் பகுதியில் கூட சிறிதும் பெரிதுமான யூத, கிறிஸ்தவ ராஜ்ஜியங்கள் இருந்துள்ளன. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் யேமனில் இருந்த ஷீபா இராணியின் நாடு பற்றி பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ஆகையினால், அரேபியர்கள் என்றாலே முன்பு அவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர்" என்று எப்படிக் கூற முடியும்?

உண்மையில் அந்தக் காலத்தில் அரேபியாவில் இருந்த சமுதாய அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. கணிசமான அளவு அரேபியர்கள் யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பெரும்பாலானோர் பாரம்பரிய மதங்களை பின்பற்றினார்கள். இதனை இயற்கை வழிபாடு, சிலை வணக்கம், சிறு தெய்வ வழிபாடு என்று பலவாறாக அழைக்கலாம். 

மெக்காவில் உள்ள காபா, அதை நோக்கிய ஹஜ்ஜு யாத்திரை கூட இஸ்லாத்திற்கு முந்திய பாரம்பரிய மத வழிபாட்டின் தொடர்ச்சி தான். அந்தக் காலத்திலும் அரேபியாவின் பல பகுதிகளிலும் இருந்து மெக்காவுக்கு யாத்திரை சென்றவர்கள், அந்த இடத்தில் தமக்கிடையிலான பகை மறந்து சமாதானமாக நடந்து கொண்டனர். அதனால் வணிக ஒப்பந்தங்கள் செய்வதற்கு சிறந்த இடமாகக் கருதப் பட்டது.

முகம்மது நபி மெக்காவில் ஆதிக்கம் செலுத்திய குறைஷி இனக்குழுவை சேர்ந்தவர் என்றாலும், தனது சமூகத்தின் பழமைவாத பழக்கவழக்கங்களை எதிர்த்து வந்தார். அனேகமாக பைபிள் பற்றி கேள்விப் பட்டிராத பழமைவாத சமூகத்தில் இருந்து வந்த முகம்மது, மேற்கு அரேபியாவுக்கு சென்று வந்த வர்த்தகர்களின் தொடர்பினால் தான் புதிய மத சித்தாந்தம் பற்றி அறிந்து கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், இன்றைய பாலஸ்தீனம், ஜோர்டானை உள்ளடக்கிய மேற்கு அரேபியப் பகுதிகளில் தான் ஓரிறைக் கொள்கை கொண்ட யூத, கிறிஸ்தவ மதங்கள் செழித்து வளர்ந்தன.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவராலும் தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட மொசெசிற்கு, இறைவனால் முதல் தடைவையாக இறை வேதம் வெளிப்படுத்தப் பட்டதாக நம்புகிறார்கள். அதைத் தான் யூதர்களால் தோரா என்றும், கிறிஸ்தவர்களால் பைபிள் என்றும் அழைக்கப் படுகின்றது. அதே இறைவேதம் முகம்மதுவுக்கு கப்ரியேல் என்ற தேவதை மூலம் வெளிப்படுத்தப் பட்டதாகவும், அது தான் குரான் என்றும் இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். 

ஆகையினால், இஸ்லாம் என்பது "பாலவனத்தில் வாழ்ந்த அரேபிய காட்டுமிராண்டிகளின் மதம்" என்பது உண்மையானால், கிறிஸ்தவம், யூதம் ஆகியனவும் அதே பாலைவன காட்டுமிராண்டிகளின் மதங்கள் தான்! மொழி அடிப்படையில் பார்த்தாலும், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த யூதர்களின் ஹீபுரு மொழி, கிறிஸ்தவர்களின் அரேமிய மொழி, இஸ்லாமியரின் அரபு மொழி மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்பு பட்ட ஒரே மாதிரியான செமிட்டிக் குடும்ப மொழிகள் தான்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இன்றைய சவூதி அரேபியப் பகுதிகளில் வாழ்ந்த அரேபியர்கள் தான். ஆனால், இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு அங்கே தொடங்கவில்லை. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாக்தாத் நகரை தலைநகரமாகக் கொண்டிருந்த கலீபாக்களின் ஆட்சியில் தான் இஸ்லாமிய நாகரிக காலகட்டம் தோன்றி வளர்ந்தது. உண்மையில் அதை கிரேக்க நாகரிகத்தின் தொடர்ச்சியாகக் கருத வேண்டும். அதனால், இன்றைக்கு சில வரலாற்று ஆசிரியர்கள் அதனை "அரேபிய - ஹெலனிக் நாகரிகம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். ஹெலனிக் என்பது கிரேக்கத்தை குறிக்கும் கிரேக்கச் சொல்.

பாக்தாத்தில் உருவான இஸ்லாமிய நாகரிகத்தை, அரேபிய- ஹெலனிக் நாகரிகம் என்றும் குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் காலகட்டத்தில் அரேபியா, ஐரோப்பாவை விட நாகரிகத்தில் பல மடங்கு முன்னேறி இருந்தது. ஏற்கனவே அலெக்சாண்டர் காலத்திலும், அதற்குப் பிந்திய கிறிஸ்தவ- கிரேக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் பாக்தாத் நகரம் உன்னத நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது.

இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அரபு மொழியும், கிரேக்க மொழியும் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தனர். அறிவியல் துறையில் அவர்களது சேவை பெரிதும் தேவைப் பட்டது. பண்டைய இந்தியா, பாரசீகம், கிரேக்கத்தில் இருந்து ஏராளமான அறிவியல், இலக்கிய நூல்கள் பாக்தாத்திற்கு கொண்டு வரப் பட்டன. அங்கு அவை யாவும் அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன.

கிரேக்க தத்துவஞானிகளான அரிஸ்டாட்டில், பிளேட்டோ போன்றவர்கள் எழுதிய கிரேக்க தத்துவ நூல்கள் யாவும் முதன் முதலில் அரபு மொழியில் தான் மொழிபெயர்க்கப் பட்டன. அதற்குப் பிறகு தான் ஐரோப்பியர்கள் அவற்றை அறிந்து கொண்டனர். Galenos, Hippocrates, Dioscorides, Euclides, Ptolemeos, Archimedes, ஆகிய தத்துவ அறிஞர்களின் அனைத்து நூல்களும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இதில் பல பெயர்கள் இன்றைக்கும் அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பரிச்சயமாக இருக்கும். உண்மையில், அன்றைக்கு இந்த நூல்கள் அரபியில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கா விட்டால், இன்றைக்கு நாம் அறிவியல் அறியாத சமூகமாக இருந்திருப்போம்.

பண்டைய கிரேக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்டு, அரேபிய விஞ்ஞானமும், தத்துவ ஞானமும் உருவாகின. அரேபிய அறிவியல் மேற்கத்திய அறிவியலுக்கு பல நூறாண்டுகள் முந்தியது. இபுன் சினா (Ibn Sina), அல் ரழி (Al Razi) ஆகிய அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் தந்தையராக போற்றப் படுகின்றனர். அல் சாஹ்ராவி அறுவைச் சிகிச்சையை கண்டுபிடித்தார். Ibn Butlan, Ibn Haitham, Ibn Rushd என்று இன்னும் பல அறிஞர்கள் நவீன மருத்துவத்தின் மூலவர்களாக இருந்துள்ளனர்.

அரேபியர் கொண்டு சென்ற இஸ்லாம் பரவிய நாடுகளில் எல்லாம் அறிவியல் நூல்களும் கொண்டு செல்லப் பட்டன. அரேபிய வைத்தியர்கள் மருத்துவத் துறையில் முன்னேறி இருந்த காலத்தில், ஐரோப்பிய வைத்தியர்கள் நோயாளி குணமடைய பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். ஒரு நோயாளி தீராத தலைவலி காரணமாக வைத்தியரிடம் சென்றால், மண்டையில் ஆணி அடித்து அசுத்த ஆவியை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். சுருக்கமாக, அரேபிய மொழிபெயர்ப்பு நூல்கள் கிடைக்கும் வரையில், ஐரோப்பியர்களின் மருத்துவம் மிக மோசமாக பின்தங்கி இருந்தது.

தெற்கு இத்தாலியில் பாலேர்மோ, ஸ்பெயின் மத்தியில் உள்ள டொலேடோ ஆகிய நகரங்கள் ஒரு காலத்தில் அரேபியர்களின் நகரங்களாக இருந்தன. கிறிஸ்தவ மன்னர்கள் அவற்றைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த அறிவியல் நூல்களை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவ்வாறு தான் நவீன மருத்துவம் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. குறிப்பாக இபுன் சினா (ஐரோப்பியர்கள் அவிசேனா என்றழைத்தனர்.) எழுதிய மருத்துவ நூலும், அல் சஹ்ராவி எழுதிய அறுவைச் சிகிச்சை பற்றிய நூலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப் பட்டன.

ஐரோப்பிய நாகரிகம் வளர்வதற்கு அரேபியர்கள் செலுத்திய பங்களிப்பு பிற்காலத்தில் மறைக்கப் பட்டது. அது ஓர் அரசியல் படுகொலையுடன் ஆரம்பமானது. கிறிஸ்தவ ஐரோப்பாவில் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலாக அரேபிய தத்துவ ஞானம் கற்பதற்கான பிரிவு ஆரம்பிக்கப் பட்டது. அதை ஸ்தாபித்தவர்களில் ஒருவர் டச்சுக்காரரான Siger van Brabant. அரிஸ்டாட்டில் வழியை பின்பற்றிய அரேபிய தத்துவஞானி அவேரோஸ் (இபுன் ரஷிட்) அவர்களது வழிகாட்டியாக இருந்தார். ஆகையினால், பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்த மாணவர்கள் தம்மை அவேரோயிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர்.

அவேரோஸ் இரண்டு முக்கியமான புரட்சிகரமான தத்துவங்களை முன்வைத்திருந்தார். ஒன்று: இந்த பூமி ஆதியும், அந்தமும் இல்லாதது. (இது பூமியை ஆண்டவன் படைத்தான் என்ற பைபிள் கோட்பாட்டுக்கு முரணானது.) இரண்டு: நாங்கள் மத ரீதியான சிந்தனையை ஒரு பக்கமும், அறிவியல் சிந்தனையை இன்னொரு பக்கமுமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். (இது நவீன கால மதச்சார்பற்ற கொள்கை போன்றது. ஆகையினால் அன்றிருந்த கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு முரணானது.)

மேற்குறிப்பிட்ட தத்துவ வாதங்கள் அன்றைய கிறிஸ்தவ மத மேலாண்மைக்கு எதிராக திரும்பலாம் என வத்திகான் அஞ்சியதில் வியப்பில்லை. பாரிஸ் நகர பிஷப், இது கிறிஸ்தவ விரோதம் என அறிவித்தார். 1283 ம் ஆண்டு, சோர்போன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை அதிபர் ஒரு கத்தோலிக்க மதவெறியனால் படுகொலை செய்யப் பட்டார். அதற்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் அவெரோயிசம் என்ற இறைமறுப்புக் கொள்கையை வேரோடு அழிப்பதில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியரிடமிருந்து பாலஸ்தீனத்தை மீட்பதற்காக போப்பாண்டவர் அறிவித்த சிலுவைப்போர் காரணமாக, அரேபியருடனான எந்தத் தொடர்பையும் கிறிஸ்தவ மதத் துரோகமாக கருதும் நிலைமை உருவானது. அதனால், ஐரோப்பா இன்னும் பல நூற்றாண்டுகள் அறிவியலில் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பாராதவிதமாக சிலுவைப்போரினால் சில நன்மைகளும் ஏற்பட்டன. லெபனான், பாலஸ்தீனத்தை இஸ்லாமிய ஆட்சியாளரிடம் இருந்து மீட்டெடுத்து அங்கு கிறிஸ்தவ ராஜ்ஜியத்தை அமைத்தவர்கள் பல புதிய தகவல்களை அறிந்து கொண்டனர். சிலுவைப் போர்வீரர்கள், தாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, மத்திய கிழக்கில் ஒரு நாகரிகத்தில் முன்னேறிய சமுதாயம் இருக்கக் கண்டனர். அவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்றுக் கொண்டனர். இவ்வாறு தான் நவீன அறிவியல் ஐரோப்பாவுக்குப் பரவியது.

Saturday, June 22, 2019

Volkspolizei - கிழக்கு ஜெர்மனியின் மக்களுக்கான சோஷலிச போலிஸ்


ஜூலை 1, GDR எனும் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் "மக்கள் காவலர் தினம்" கொண்டாடப் பட்டது. உண்மையிலேயே, அன்றைய கிழக்கு ஜெர்மன் போலிஸ், "மக்களின் காவலர்" என அழைக்கத் தகுதியானதா? இது பற்றி ஒரு மேற்கத்திய சஞ்சிகையில் வந்த தகவலை இங்கே தருகிறேன். அதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

"கொலை, வன்முறை, பாலியல் தொழில் ஆகிய குற்றச் செயல்கள் எல்லாம், முதலாளித்துவத்தின் விளைவுகள். சோஷலிச சமுதாயத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாததால், பொறாமைக்கும், பேராசைக்கும் அங்கே இடமில்லை." முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயக குடியரசு) இவ்வாறு கூறி வந்தது. அந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அரிதாகவே நடந்தன. புள்ளிவிபரங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.

1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கு ஜெர்மனியில், ஒரு இலட்சம் பேருக்கு 6200 குற்றச் செயல்கள் நடந்துள்ளன. அதே நேரம் கிழக்கு ஜெர்மனியில், அதே காலப் பகுதியில், அதே அளவு சனத்தொகைக்கு, வெறும் 550 குற்றச்செயல்கள் மட்டுமே நடந்துள்ளன.

எல்லைகளில் கடுமையான கண்காணிப்பின் காரணமாகவும், அந்நிய நாணயப் பற்றாக்குறை காரணமாகவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

மக்களின் காவலர்கள் (Volkspolizei) என்ற பெயரைக் கொண்ட காவல் துறை, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குற்றங்களுக்கான காரணங்களையும் உடனுடக்குடன் கண்டுபிடித்து தீர்த்து வைத்தது.

மக்கள் மீதான அதீத கண்காணிப்பே அதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் மட்டுமே மக்கள் கண்காணிக்கப் படுவார்கள் என்று நம்புவது பேதைமை. இன்று எல்லா மேற்கத்திய நாடுகளிலும், வீடியோ கமெராக்கள், செய்மதி மூலம் மக்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1981 ம் ஆண்டு, Neustadt எனும் நகரத்தில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே நீண்ட காலமாக இழுபட்ட விசாரணை ஆகும்.

குறைந்தது ஆறு மாதங்களாவது, கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸ் தடுமாறியது. கொலை நடந்த இடத்தில் கண்டுபிடித்த பத்திரிகைத் தாள் ஒன்றில் இருந்த புதிர் விளையாட்டில் காணப்பட்ட கையெழுத்தை மட்டுமே வைத்து துப்புத் துலக்கினார்கள்.

பொலிஸ் ஆய்வாளரும், Stasi என்ற புலனாய்வுத்துறையும் சேர்ந்து, ஒருவரின் கையெழுத்தை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கினார்கள். இறுதியில் கையெழுத்தை வைத்து, சிறுவனை கொன்ற கொலைகாரனை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு நடந்து சில வருடங்களில் பெர்லின் மதில் விழுந்தது. ஜெர்மனி ஒன்றாகியது. கிழக்கு ஜெர்மனியை பொறுப்பெடுத்த மேற்கு ஜெர்மனி, அந்த கொலைகாரனை விடுதலை செய்தது.

1985 ம் ஆண்டு, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றச் செயல்கள் பற்றிய புள்ளி விபரம்: 
கொலை - 137, 
வன்முறை - 10132, 
பாலியல் வல்லுறவு - 571, 
தீவைப்பு -338, 
போதையில் வாகனம் ஓட்டுதல் - 2574.

Source: 
Der Kreuzworträtsel Mord und andere Kriminalfalle aus der DDR, Hans Girod 
http://mdr.de/doku/175228.html

Thursday, June 20, 2019

நாஸிகளுடன் ஒத்துழைத்த "யூத ஒட்டுக் குழு" பற்றிய திரைப்படம்


கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருது பெற்ற, "சவுலின் மகன்" என்ற ஹங்கேரி நாட்டுப் படம், நாஸிகள் காலத்து யூத இனப் படுகொலையை விபரமாக சித்தரிக்கின்றது. போலந்தில் உள்ள அவுஷ்விட்ஸ் தடுப்பு முகாமில், யூதர்கள் வகை தொகையின்றி, நச்சு வாயு கொடுத்து படுகொலை செய்த சம்பவங்களைப் பற்றி அறிந்திருப்போம். இந்தத் திரைப் படம் அதனை மிகவும் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது என்பது, அதன் சிறப்பம்சம்.

ஜெர்மன் நாஸிகள், யூதர்களை படுகொலை செய்வதற்கு, யூதர்களையே பணியில் ஈடுபடுத்தினார்கள்! கொஞ்சம் பலசாலிகளான யூதர்களை தேர்ந்தெடுத்து, "சொன்டர் கமாண்டோ" (Sonder Kommando) என்று பெயரிட்டார்கள். தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப் படும் யூதர்களின், ஆடைகளைக் களைவது, அவர்களது உடைமைகளை வகைப் படுத்தி, தனித் தனியாக அடுக்கி வைப்பதில் இருந்து அவர்களது பணிகள் ஆரம்பமாகின்றன.

நிர்வாணமாக்கப் பட்ட யூதர்களை, நச்சு வாயு ஊட்டி கொலை செய்வது மட்டுமல்ல, சடலங்களை இழுத்துச் சென்று நிலக்கரி போட்டு எரிப்பதும், சாம்பலை ஆற்றில் கரைப்பதும், சொன்டர் கமாண்டோவின் பணிகள். இறந்த யூதர்களின் உடல்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் குவித்து வைக்க வேண்டும். நச்சு வாயுக் குளியல் நடந்த இடத்தில், நிலத்தை சுத்தம் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்களை, வேறெந்த திரைப்படமாகிலும் இந்தளவு விபரமாக எடுத்துக் காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

திரைப்படத்தின் கதை மிகச் சிறியது. அவுஷ்வித்ஸ் முகாமில், சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும், ஹங்கேரி நாட்டை சேர்ந்த சவுலின் மகனும் நச்சு வாயு ஊட்டி படுகொலை செய்யப் படுகிறான். தனது மகனின் உடலை, யூத மத அனுஷ்டானங்களின் படி, அடக்கம் செய்ய வேண்டும் என்பது சவுலின் விருப்பம். அதனால், சடலங்களை பரிசோதிக்கும் மருத்துவர் (மருத்துவர்களும் யூதக் கைதிகள் தான்) ஒருவரின் உதவியுடன், மகனின் சடலத்தை தனது வதிவிடத்தில் மறைத்து வைக்கிறான்.

சொன்டர் கமாண்டோக்களில் யூத ராபி (மத குரு) இருக்கிறாரா என்று, சவுல் பல இடங்களிலும் தேடுகிறான். ஆனால், ராபிக்கள் யாரும் தம்மை அடையாளப் படுத்த அஞ்சுகின்றனர். இறந்த யூதர்களின் சாம்பலை ஆற்றில் கரைக்கும் இடத்தில், ஒரு கிரேக்க யூத ராபியை கண்ட சவுல், அவரை தன்னோடு வருமாறு கெஞ்சுகிறான். ஆனால், அவர் எதுவும் பேசாமல், தான் அடையாளம் காணப் பட்டதால் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அசம்பாவிதம் நடக்கும் இடத்திற்கு வரும் நாஸி இராணுவ அதிகாரி, அந்த ராபியை சுட்டுக் கொல்கிறான்.

இறுதியில், எரிப்பதற்காக கொண்டு செல்லப் பட்ட பிரெஞ்சு யூதர்களில் ஒரு ராபியை கண்டுபிடித்த சவுல், அவரை தன்னோடு வருமாறு கூட்டிச் செல்கிறார். நாஸிகளின் கெடுபிடிகளை மீறி, சொன்டர் கமாண்டோக்கள் தாங்கும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும், அங்கே வரும் பிற யூத பணியாளர்கள், சவுலின் மகனின் பிரேதம் கிடப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அப்போது "எங்களை எல்லாம் கொல்லப் பார்க்கிறாய்..." என்று சொல்லும் பொழுது, "நாங்கள் எப்போது இறந்து விட்டோம்..." என்று சவுல் பதில் கூறுகின்றான்.

அதே நேரம், நாஸிகளுக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சிக்கு, பிற சொன்டர் கமாண்டோக்கள் தயாராகிறார்கள். அவர்களுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வந்து சேருகின்றன. ஒரு தருணத்தில், தங்களில் ஒருவனை நாஸிகள் எரித்து விட்டார்கள் என்று அறிந்த சொன்டர் கமாண்டோக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்.

முகாமில் ஆயுத மோதல் நடக்கிறது. அங்கு நடக்கும் கலவரத்தை பயன்படுத்திக் கொண்டு, சவுல் தனது மகனின் சடலத்தை தூக்கிக் கொண்டு, ராபியுடன் தப்பி ஓடுகின்றான். காட்டுப் பகுதி ஒன்றில், மத அனுஷ்டானங்களுடன் சிறுவனின் சடலத்தை புதைக்கும் முயற்சி தோல்வியடைகின்றது.

ஏனெனில், முகாமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாஸி படையினரிடம் இருந்து தப்பியோடும், சொன்டர் கமாண்டோக்கள் அந்த வழியாக வருகின்றனர். ஓர் ஆற்றைக் கடக்கும் நேரம், சவுல் தனது மகனின் சடலத்தை பறிகொடுக்கிறான்.

காட்டுக்குள் இன்னும் சில மைல் தூரம் ஓடினால் போதும். அப்போது, ஏற்கனவே போலந்தின் சில பகுதிகளை விடுதலை செய்து விட்ட, சோவியத் செம்படையினரிடம் தஞ்சம் கோரலாம். இல்லாவிட்டால், காடுகளுக்குள் மறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ளலாம்.

ஓடி வந்த களைப்பில், சவுலும், யூத கிளர்ச்சியாளர்களும் ஒரு குடிசைக்குள் ஓய்வெடுக்கிறார்கள். ஆனால், வேட்டை நாய்களுடன் வரும் நாஸி படையினர், அந்த இடத்தை அண்மித்து விடுகின்றனர். இறுதியில் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் படுவதுடன் படம் முடிவடைகின்றது.

யூதர்களை அழித்தொழிக்கும் பணிக்கு, நாஸிகளால் ஈடுபடுத்தப் பட்ட சொன்டர் கமாண்டோக்களின் வரலாறு ஏற்கனவே தெரிந்த விடயம் தான். உண்மையில், அவர்களது ஆயுட்காலமும், வேலை செய்யும் சிறிது காலம் தான் நீடித்தது. தேவை முடிந்தவுடன், நாஸிகள் அவர்களையும் கொன்றனர்.

நாஸிகளின் காட்டாட்சியில் நடந்த கொடூரங்களை விரிவாக எடுத்துரைக்கும் இந்தத் திரைப்படம், வெளியில் அதிகம் அறியப் படாத பக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. சொன்டர் கமாண்டோவாக வேலை செய்யும் யூதர்கள், தமது சொந்த இனத்தவர்களை எரிக்கும் பொழுது, எந்தளவு வேதனையுடன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருப்பார்கள்? படத்தில் ஓரிடத்தில் கதாநாயகன் சொல்வதைப் போன்று, "எப்போதோ இறந்து விட்ட", நடைப்பிணமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள்.

இரண்டாம் போரின் முடிவில் இனப்படுகொலையில் அகப்படாமல் உயிர் தப்பிய யூதர்களில் பலர், நாஸிகளுடன் ஒத்துழைத்த "சொன்டர் கமாண்டோக்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளின்  படையினர் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை.  அந்த யூதர்களை நாஸிகளின் ஒட்டுக் குழுவாகவே கருதினார்கள். அதனால் சிலருக்கு சிறைத் தண்டனை வழங்கப் பட்டது.


Monday, June 17, 2019

இலங்கை இனப்பகையின் எதிர்வினையாக உலக முஸ்லிம்களை பகைப்பது மடமை


முன்பொரு த‌ட‌வை, நெத‌ர்லாந்து கிராம‌ம் ஒன்றில் நாங்க‌ள் இருந்த‌ அக‌தி முகாமில் பெந்த‌கொஸ்தே கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பிரார்த்த‌னைக் கூட்ட‌ம் ந‌ட‌ந்த‌து. அதை ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள் ட‌ச்சுக் கார‌ர்க‌ள். க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌மிழ் அக‌திக‌ள். மேற்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில், கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவோர் பெரும்பாலும் அக‌தி முகாம்க‌ளில் தான் பிர‌ச‌ங்க‌ம் செய்து கொண்டிருப்பார்க‌ள். இது எம‌க்கு ப‌ழ‌கிப் போன‌ விட‌ய‌ம்.

அந்த‌ வீட்டில் எம்முட‌ன் ஒரு பொஸ்னிய‌ இளைஞ‌னும் த‌ங்கி இருந்தான். த‌ற்செய‌லாக‌ நாம் பைபிள் ப‌டித்துக் கொண்டிருந்த‌ இட‌த்திற்கு வ‌ந்த‌ அந்த‌ இளைஞ‌ன், கிறிஸ்த‌வ‌ போத‌னைக‌ளை கேட்டு குழ‌ம்பி விட்டான். வ‌ழ‌மையாக‌ அமைதியாக‌ இருக்கும் அந்த‌ இளைஞ‌ன் அழுது குள‌றி ஆர்ப்பாட்ட‌ம் செய்து விட்டான். நானும், முகாம் பொறுப்பாள‌ரும் சேர்ந்து அவ‌னை த‌னியே அழைத்து சென்று ஆறுத‌ல் ப‌டுத்தினோம்.

பொஸ்னிய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை சேர்ந்த‌ அந்த‌ இளைஞ‌ன், முன்பு பொஸ்னிய‌- சேர்பிய‌ அக‌திக‌ளுடன் த‌ங்கி இருந்தான். அப்போது பொஸ்னிய‌ போர் உச்ச‌க‌ட்ட‌த்தில் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. அது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எதிரொலித்த‌து. முகாமில் இருந்த‌ அக‌திக‌ளும் கிறிஸ்த‌வ‌- முஸ்லிம் வெறுப்பு அர‌சிய‌ல் பேசி த‌ம‌க்குள் ச‌ண்டை பிடித்த‌ ப‌டியால், இவ‌னை வேறு வீட்டில் த‌ங்க‌ வைத்திருந்த‌ன‌ர்.

பொஸ்னியாவில், கிறிஸ்த‌வ‌- சேர்பிய‌ ப‌டையின‌ரின் வ‌ன்முறைக்கு உற‌வின‌ர்களை ப‌லி கொடுத்த‌ அக‌திக‌ள், அந்த‌ இழ‌ப்புக‌ள் கார‌ண‌மாக‌ க‌டுமையான‌ ம‌ன‌ அழுத்த‌த்திற்கு உள்ளாகி இருந்த‌தை புரிந்து கொள்ள‌ முடியும். ஆனால், பொஸ்னிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளால் ஏற்ப‌ட்ட‌ பாதிப்பு கார‌ண‌மாக‌ உல‌கில் உள்ள‌ அத்த‌னை கிறிஸ்த‌வ‌ர்க‌ளையும் வெறுக்கும் வெகுளித்த‌ன‌மான‌ ம‌ன‌நிலையை ஏற்றுக் கொள்ள‌ வேண்டுமென்ப‌தில்லை.

அன்று முகாமில் பைபிள் ப‌டிக்க‌ வ‌ந்த‌ ட‌ச்சு கிறிஸ்த‌வர்க‌ளை க‌ண்ட‌தும் ப‌ய‌ந்து அல‌றிய‌ கார‌ண‌ம் என்ன‌வென‌க் கேட்டேன். "என‌து நாட்டிலும் பைபிள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் தான் எங்க‌ள் இன‌ப் பெண்க‌ளையும், குழ‌ந்தைக‌ளையும் கொடூரமாக‌ கொலை செய்தார்க‌ள்..." என்று அந்த‌ பொஸ்னிய‌ இளைஞ‌ன் ப‌தற்ற‌த்துட‌ன் சொன்னான்.

பொஸ்னியாவில் யுத்த‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் கொலை வெறியுட‌ன் ந‌ட‌ந்து கொண்ட‌ சேர்பிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும், புல‌ம்பெய‌ர்ந்த‌ நாட்டில் யாருக்கும் எந்த‌த் தீங்கும் செய்யாத‌ ட‌ச்சுக் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் இடையிலான‌ வித்தியாச‌த்தை நான் அவ‌னுக்கு புரிய‌ வைப்ப‌த‌ற்கு முய‌ன்றேன். அன்று என‌து ஆறுத‌ல் வார்த்தைக‌ளால் அட‌ங்கிப் போனாலும், அவ‌ன‌து ம‌ன‌தில் இருந்த‌ "பைபிள் ப‌டிக்கும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு" எதிரான‌ வெறுப்புண‌ர்வு எளிதில் ம‌றைந்து விடும் என‌ நான் நினைக்க‌வில்லை. அது இப்போதும் அடி ம‌ன‌தில் த‌ண‌லாக‌ புகைந்து கொண்டிருக்க‌லாம்.

அந்த‌ச் ச‌ம்ப‌வ‌த்தை இங்கே நினைவுகூரக் கார‌ண‌ம், அந்த‌ பொஸ்னிய‌ இளைஞ‌னின் ம‌ன‌நிலையில் தான் இன்று ப‌ல‌ (ஈழத்) த‌மிழ‌ர்க‌ள் இருக்கின்ற‌ன‌ர். முன்பு ஈழ‌ப்போர் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ வ‌ன்முறைக‌ளை ம‌ன‌தில் இருத்தி, உல‌க‌ முஸ்லிம்க‌ள் அனைவ‌ரையும் கொடூர‌மான‌வர்க‌ளாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

முப்ப‌தாண்டு கால‌ ஈழ‌ப்போரான‌து, கிழ‌க்கில‌ங்கையில் வாழும் மூவின‌ ம‌க்க‌ளையும் தீர்க்க‌ முடியாத‌ ப‌கை முர‌ண்பாடு கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாற்றி உள்ள‌து. நீங்க‌ள் அந்த‌ப் பிர‌தேச‌த்திற்கு சென்று எந்த‌ இன‌ மக்க‌ளோடு பேசினாலும், அவர்கள் த‌ம‌து இன‌த்திற்கு ஏற்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளை ம‌ட்டும் பேசுவார்க‌ள். த‌மிழ், சிங்க‌ள‌, முஸ்லிம், எனும் இன‌ அடையாள‌ம் ம‌ட்டுமே முக்கிய‌மாக‌க் க‌ருத‌ப் ப‌டும் ஒரு நாட்டில், த‌ன்னின‌ம் சார்ந்த‌ சுய‌ந‌ல‌மே மேலோங்கி இருக்கும்.

குறிப்பாக‌ த‌மிழ‌ர்க‌ள் ஒரு ப‌க்க‌ம் சிங்க‌ள‌வ‌ராலும், ம‌று ப‌க்க‌ம் முஸ்லிம்க‌ளாலும் க‌டுமையாக‌ப் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். முஸ்லிம் கிராம‌ங்க‌ளை புலிக‌ளின் தாக்குத‌ல்க‌ளில் இருந்து பாதுகாப்ப‌து என்ற‌ கார‌ண‌ம் கூறி, அர‌ச‌ இராணுவ‌த்தின் துணைப்ப‌டையாக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌ முஸ்லிம் ஊர்காவ‌ல் ப‌டைக‌ள், த‌மிழ்க் கிராம‌ங்க‌ளை சூறையாடி அப்பாவிப் பொது ம‌க்க‌ளை ப‌டுகொலை செய்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. த‌மிழ்க் கிராம‌ங்க‌ள் மீதான‌ முஸ்லிம் ஊர்காவ‌ல் ப‌டைகளின் நேர‌டித் தாக்குத‌ல்க‌ளின் போது ம‌ட்டும‌ல்லாது, இர‌க‌சிய‌மான‌ ஆட்க‌ட‌த்த‌ல்க‌ளிலும் பெரும‌ள‌வு த‌மிழ‌ர்க‌ள் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளினதும், அந்த‌க் க‌தைக‌ளை கேள்விப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளினதும் ம‌ன‌தில் எழும் முஸ்லிம்க‌ள் மீதான‌ வெறுப்புண‌ர்வு புரிந்து கொள்ள‌த் த‌க்க‌து.

கிழ‌க்கில‌ங்கையில் க‌ட‌ந்த‌ கால‌த்தில் ந‌ட‌ந்த க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் கார‌ண‌மாக‌, அங்குள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் த‌ம‌து பிர‌தேச‌ முஸ்லிம்க‌ள் மீது ஆத்திர‌ப் ப‌டுவ‌தில் நியாய‌ம் இருக்க‌லாம். அத‌ற்காக‌ த‌மிழ‌ருட‌ன் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ முஸ்லிம் பொது மக்க‌ள் பாதிக்க‌ப் ப‌டும் போது ம‌கிழ்ச்சி அடைவ‌தில் எந்த‌ நியாய‌மும் இல்லை.

கிழ‌க்கில‌ங்கையில் ந‌ட‌க்கும் த‌மிழ‌ருக்கும், முஸ்லிம்க‌ளுக்கும் இடையிலான‌ தாய‌க உரிமைப் பிர‌ச்சினை, நில அப‌க‌ரிப்புக‌ள், அதனால் ந‌ட‌ந்த‌ கொலைக‌ள் எல்லாம் இன‌ப் பிர‌ச்சினைக்கு உட்ப‌ட்ட‌ விட‌ய‌ம். தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ளையும், வ‌ட‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ளையும் அதற்குள் இழுத்து முடிச்சுப் போடுவ‌து புத்திசாலித்த‌ன‌மான‌து அல்ல‌. அதை விட‌, அவர்களை உலக‌ முஸ்லிம்க‌ளுட‌ன் சேர்த்து ஒன்றாகப் பார்ப்ப‌து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து.

இல‌ங்கை இந்துவுக்கும், நேபாள‌ இந்துவுக்கும் இடையில் ம‌த‌த்தை த‌விர‌ வேறென்ன‌ ஒற்றுமை இருக்கிற‌து? இல‌ங்கைப் பௌத்த‌ரும் சீன‌ப் பௌத்த‌ரும் ஒரே இன‌த்த‌வ‌ர்க‌ளா? இல‌ங்கை கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அமெரிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் த‌ம்மின‌ ம‌க்க‌ளாக‌க் க‌ருதுகிறார்க‌ளா?

ஒரே ம‌த‌த்தை பின்பற்றும் கார‌ண‌த்தால், க‌லாச்சார‌மும் ஒன்றாக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. நிற‌த்தால், இன‌த்தால், ப‌ண்பாட்டால் மாறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் ஒரே ம‌த‌த்தை பின்ப‌ற்றுவ‌தால் ம‌ட்டும் ஒன்றாகி விடுவ‌தில்லை.

அர‌ச‌ அதிகார‌த்தில் இருந்து ஒடுக்கும் முஸ்லிம்க‌ளும், குடிமக்க‌ளாக‌ ஒடுக்க‌ப் ப‌டும் முஸ்லிம்க‌ளுக்கு இடையிலான‌ வித்தியாச‌த்திற்கு காரண‌ம் வ‌ர்க்க‌ முர‌ண்பாடு. அத‌ன் விளைவாக‌ ப‌ல‌ நாடுக‌ளில் ம‌க்க‌ள் எழுச்சிக‌ளும், யுத்த‌ங்க‌ளும் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ள், இஸ்லாமிய‌ ம‌க்க‌ள் த‌ம‌து ச‌மூக‌த்தில் நில‌வும் வ‌ர்க்க‌ முர‌ண்பாட்டை க‌ண்டுகொள்ள விடாம‌ல் ம‌த‌த் திரை போட்டுத் த‌டுக்கின்ற‌ன‌ர். முர‌ண்ந‌கையாக‌, இஸ்லாமோபோபியா- இன‌வாதிக‌ளும் இந்த‌ விட‌ய‌த்தில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாதிக‌ளுட‌ன் கொள்கை ரீதியாக‌ ஒன்று சேர்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளும் ம‌த‌ முத்திரை குத்தி அனைத்து முஸ்லிம்க‌ளையும் த‌னிமைப் ப‌டுத்துகிறார்க‌ள். இவ்விர‌ண்டு த‌ர‌ப்பின‌ரும் பாஸிச‌ம் என்ற‌ ஒரே நாண‌ய‌த்தின் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ள் தான்.

Sunday, June 16, 2019

வரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை!

ராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை? 


கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்ள மக்களை இனப்படுகொலை செய்து, அவர்களது சொத்துக்களை சூறையாடிய காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இன்றைய கடாரம் மலேசியாவின் தனி மாகாணமாக உள்ளது. அங்கு வாழும் மக்கள் இன்றைக்கும் சோழப் படைகள் செய்த இனப்படுகொலைகளை நினைவுகூர்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், அன்றைய ராஜராஜசோழன், இன்றைய ராஜபக்சே மாதிரியான ஒருவன்.

மதிகெட்ட தமிழினவாதிகள் மறைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை! 



ராஜராஜ சோழனின் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பாண்டிய நாட்டையும், ஈழ நாட்டையும் ஆக்கிரமித்த சோழப் படைகள் அங்கு வாழ்ந்த மக்களை பிராமணர்கள், தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் இனப்படுகொலை செய்துள்ளனர். சோழப் படைகள் சென்றவிடமெல்லாம் மக்களை இனப்படுகொலை செய்வதும், சொத்துக்களை சூறையாடுவதும் வழமையானவை. 

அயல்நாடுகளில் வாழ்ந்த மக்கள் சோழ இராணுவத்தைக் கண்டு அஞ்சினார்கள். ஆனால், படுகொலைகளையும், சூறையாடுவதையும் சோழர்கள் பெருமையாகக் கருதிக் கொண்டனர். பிற நாடுகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்த செல்வங்களில் ஒரு பகுதி கோயில்களுக்கு தானமாக வழங்கப் பட்டது. ஒரு கட்டத்தில் ராஜராஜசோழன் முன்னூறு கிலோ தங்கம் தானம் கொடுத்ததாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது. 

சோழ நாட்டு பொருளாதாரம் கோயில் நகரங்களில் தங்கி இருந்தது. பெருமளவு நிலங்களை கையகப் படுத்தி வைத்திருந்த, கோயிலை மையமாகக் கொண்டு இயங்கும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வணிகர் சங்கங்கள் அரசனுக்கு வரி கட்டுவதில்லை. ஆகையினால், அரச கஜானாவை நிரப்புவதற்காக அயல் நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை சோழர்கள் ஒரு கொள்கையாக வைத்திருந்தனர். 

(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, by Paul Michel Munoz) 

******

ராஜ‌ராஜ‌சோழ‌ன் - செங்கிஸ்கான் நட்புற‌வு வாழ்க‌!
 
"மொங்கோலிய- ராஜ‌ராஜ‌சோழ‌ன்" செங்கிஸ்கானை, த‌மிழின‌வாதிக‌ள் த‌ம‌து "த‌மிழ்- செங்கிஸ்கான்" ராஜ‌ராஜ‌சோழ‌னுட‌ன் ஒப்பிட்டு பெருமைப் ப‌டுவ‌தில் த‌வ‌றில்லை. அத‌ற்காக‌ "த‌மிழீழ‌த் தேசிய‌த் தலைவ‌ர் ம‌கிந்த‌ ராஜ‌பக்ச‌...." என்ற‌ மாதிரி த‌ப்புத் த‌ப்பாக‌ எழுதி ப‌திவு போடுவ‌து ந‌ல்ல‌ நகைச்சுவை.

"மொங்கோலிய‌ ராஜ‌ராஜ‌ சோழ‌ன்" செங்கிஸ்கானின் ப‌டையெடுப்புகளை த‌டுப்ப‌த‌ற்காக‌த் தான் சீன‌ப் பெருஞ்சுவ‌ர் க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. அப்ப‌டி இருந்தும் மொங்கோலிய‌ப் ப‌டைக‌ள் சீனாவை கைப்ப‌ற்றி ஆக்கிர‌மித்த‌ன‌. செங்கிஸ்கானின் பேர‌னின் ஆட்சிக் கால‌ம் வ‌ரையில் சீனா மொங்கோலிய சாம்ராஜ்ய‌த்தின் கீழான‌ அடிமை நாடாக‌ இருந்த‌து.

ஆர்.எஸ்.எஸ். பிர‌ச்சார‌ பீர‌ங்கியான‌ "ஈழ‌த்து மாரிதாஸ்" என‌ அழைக்க‌ப்ப‌டும் வாசு முருக‌வேள், மொங்கோலியாவை சீனாவுட‌ன் போட்டு குழ‌ப்பிக் கொள்கிறார். இப்ப‌டி ஒரு அரைவேக்காட்டுத் த‌ன‌மான‌ ப‌திவு எழுத‌ முன்ன‌ர் கொஞ்ச‌ம் வ‌ர‌லாறு ப‌டிக்க‌ வேண்டும். பொல்லுக் கொடுத்து அடிவாங்க‌க் கூடாது.

த‌மிழ்த் தேசிய‌த்தை த‌லைப்பாகையாக‌ க‌ட்டிக் கொண்டு "ராஜ‌ராஜ‌ சோழ‌ன் எம் முப்பாட்ட‌ன்" என்று கூவும் சில‌ த‌மிழ‌ர்க‌ள் மாதிரி, "செங்கிஸ்கான் எம் முப்பாட்ட‌ன்" என்று சில‌ மொங்கோலிய‌ர்க‌ள் கூவுகிறார்க‌ள். த‌மிழ்த் தேசிய‌த் த‌ந்தை ராஜ‌ராஜ‌சோழ‌ன் என்றால், மொங்கோலிய‌த் தேசிய‌த் த‌ந்தை செங்கிஸ்கான். இர‌ண்டுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்?

அது ம‌ட்டும‌ல்ல‌, உங்க‌ளுடைய‌ ராஜ‌ராஜ‌ சோழ‌னும், அவ‌ர்க‌ளுடைய‌ செங்கிஸ்கானும் ஒரே கால‌க‌ட்ட‌த்தில் ஒரே மாதிரி ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். உண்மையிலேயே அன்றைய செங்கிஸ்கானின் பேர‌ர‌சு, சோழ‌ப் பேர‌ர‌சுட‌ன் ந‌ட்பாக‌ இருந்த‌து. சீனாவில் சோழ‌ வ‌ணிக‌ர்க‌ளின் குடியிருப்பும் இருந்த‌து. அப்போது க‌ட்டிய‌ சைவ‌க் கோயில் இன்ன‌மும் இடிபாடுக‌ளுட‌ன் அங்குள்ள‌து.

த‌மிழ்நாடாக‌ இருந்தாலும், மொங்கோலியாவாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌/இன‌வாத‌க் கொள்கை ஒன்று தான். இன‌ம் இன‌த்தோடு தானே சேரும்? இனி என்ன‌? மொங்கோலிய‌ இன‌வாதிக‌ளுக்கும், த‌மிழ் இன‌வாதிகளுக்கும் இடையிலான‌ மாம‌ன், ம‌ச்சான் உற‌வை புதுப்பிக்க‌ வேண்டிய‌து தானே?

Monday, June 10, 2019

"முஸ்லிம் நாடுகள் தலையிடும்" எனும் தப்பெண்ணம்


"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில் "அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்" கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது. அதாவது "தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்..." என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.

இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது. அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.

ஆகையினால் "முஸ்லிம் நாடுகள் தலையிடும்... கேள்வி கேட்கும்..." என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து. நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது. அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.

இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா? வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா? தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.

அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.

அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.

இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல. முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம். அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.

Sunday, June 09, 2019

பூர்காவுக்கு த‌டைவிதித்தால் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடுமா?

"பூர்காவுக்கு த‌டைவிதித்தால் முஸ்லிம் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடும்" என்ற‌ த‌ப்பெண்ண‌ம் ப‌ல‌ரிட‌ம் காண‌ப் ப‌டுகின்ற‌து. பிற‌ ம‌த‌த்த‌வ‌ர் ம‌ட்டும‌ல்லாது, முன்னாள் முஸ்லிம்க‌ள் கூட‌ இஸ்லாம் என்ற‌ ம‌த‌த்தை த‌டை செய்து விட்டால் இந்த‌ப் பிர‌ச்சினை தீர்ந்து விடும் என்று பாம‌ர‌த்த‌ன‌மாக‌ நினைக்கிறார்க‌ள்.

எல்லாப் பெண்க‌ளும் ம‌த‌ம் அல்ல‌து ஆண் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் நிர்ப்ப‌ந்திப்ப‌த‌ன் காரண‌மாக‌ பூர்க்கா அணிவ‌தில்லை. தாமாக‌ விரும்பி அணியும் பெண்க‌ளும் உண்டு. சில‌ குடும்ப‌ங்க‌ளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பூர்க்கா அணிந்த‌ ம‌க‌ள்மாரும் உண்டு.

இந்த‌ உண்மைக‌ளை அறியாம‌ல், "ஐயோ பாவ‌ம், இஸ்லாமிய‌ க‌டும்போக்காள‌ர்க‌ளால் முஸ்லிம் பெண்க‌ள் ஒடுக்க‌ப் ப‌டுகிறார்க‌ள்" என்று நீலிக் க‌ண்ணீர் வ‌டிப்போர் உண்மையில் அந்த‌ப் பெண்க‌ள் மீதான‌ அக்க‌றையில் அதைச் சொல்ல‌வில்லை. இது போன்ற‌ க‌தைக‌ளை ப‌ர‌ப்பி முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ இன‌வாத‌த்தை வ‌ள‌ர்ப்ப‌தே அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ உள்ள‌து.

வ‌ற‌ட்டுத்த‌ன‌மான‌ வாத‌ங்க‌ளால் மத‌த்தை போட்டுத் தாக்குவோர், பூர்க்கா அணிவ‌த‌ற்கு பின்னால் உள்ள‌ ச‌மூக‌- பொருளாதார‌ கார‌ணிக‌ளை கவ‌னிக்க‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு இர‌ண்டு உதார‌ண‌ங்க‌ளை காட்டி விள‌ங்க‌ப் ப‌டுத்த‌லாம்.

"பூர்க்காவில் இருந்து ஆப்கான் பெண்க‌ளை விடுதலை செய்ய‌ப் போவ‌தாக‌" அறிவித்து விட்டுத் தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ப‌டையெடுத்த‌து. அந்தோ ப‌ரிதாப‌ம்! அமெரிக்கா "விடுத‌லை" செய்து ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ள் க‌ழிந்த‌ பின்ன‌ரும், இன்றும் பெரும்பாலான‌ ஆப்கான் பெண்க‌ள் பூர்க்கா அணியாம‌ல் வெளியே செல்வ‌தில்லை.

உல‌கிலேயே மிக‌ப் ப‌ல‌ம் வாய்ந்த‌, அமெரிக்காவின் "ஜ‌ன‌நாய‌க‌" இராணுவ‌ம், ஆப்கான் பெண்க‌ளின் பாதுகாப்புக்கு இருக்கிற‌தென்ற‌ தைரிய‌த்தில் யாரும் பூர்க்காவை தூக்கி வீச‌வில்லை. நாட்டு நிலைமை மோச‌மாக இருப்ப‌தால், த‌ம‌து பாதுகாப்பு க‌ருதி தாமாக‌வே பூர்க்கா அணிந்து செல்கிறார்க‌ள். அங்கே எந்த‌ப் பெண்ணும் பிர‌ச்சினைக‌ளை விலை கொடுத்து வாங்கத் த‌யாராக‌ இல்லை.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிர‌மிப்புக்கு பின்ன‌ர் தான் பூர்க்கா க‌லாச்சார‌ம் ப‌ர‌விய‌து என்று சொன்னால், ப‌ல‌ருக்கு ந‌ம்புவ‌து க‌டின‌மாக‌ இருக்கும். உண்மையில், அமெரிக்க‌ இராணுவ‌ம் "விடுத‌லை" செய்த‌ பிற‌கு தான், ஈராக்கில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் மிக‌ வேக‌மாக‌ப் ப‌ர‌விய‌து. ஒவ்வொரு தெருவிலும் அமெரிக்க‌ இராணுவ‌ம் நிலைகொண்டிருந்த‌ கால‌த்தில் தான், ஈராக் பெண்க‌ள் பூர்க்கா அணியாம‌ல் வெளியில் செல்ல‌ அஞ்சினார்க‌ள். அந்த‌ நிலைமை இப்போதும் தொட‌ர்கிற‌து.

ப‌ல‌ த‌சாப்த‌ கால‌மாக‌ நீடித்த‌ ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில், ஈராக்கில் எந்த‌ இட‌த்திலும் பூர்க்கா அணிந்த‌ ஒரு பெண்ணைக் கூட‌ காண‌ முடியாது. எல்லோரும் ஐரோப்பிய‌ பாணியிலான‌ ந‌வ‌ நாக‌ரிக‌ உடை தான் உடுத்துவார்க‌ள். முக்காடு போடும் பெண்க‌ளைக் கூட‌ காண்ப‌து அரிது. எங்காவ‌து கிராம‌ங்க‌ளில் வ‌ய‌தான‌ பெண்க‌ள் ம‌ட்டுமே முக‌ம் மூடாத‌ பூர்க்கா, அல்ல‌து முக்காடு அணிந்திருப்பார்க‌ள்.

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் சுத‌ந்திர‌மாக‌ திரிந்த‌ ஈராக்கிய‌ பெண்க‌ள், எத‌ற்காக‌ இப்போது பூர்க்காவுக்குள் த‌ம்மை சிறைப் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும்?

ச‌தாம் ஹுசைன் ச‌ர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌த்தினாலும், அந்த‌க் கால‌த்தில் ஈராக் ம‌க்க‌ளின் த‌னி ந‌ப‌ர் வ‌ருமான‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌ம் உய‌ர்ந்திருந்த‌து. ஏழைக‌ள் குறைவாக‌ இருந்த‌ன‌ர். கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் ந‌ட‌ப்ப‌தும் மிக‌க் குறைவு.

அமெரிக்கா "விடுதலை" பெற்றுத் த‌ந்த‌ பின்ன‌ர், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத‌வாறு கிரிமின‌ல் குற்ற‌ங்க‌ள் ப‌ல‌ மட‌ங்கு அதிக‌ரித்த‌ன‌. எங்கு பார்த்தாலும் அள‌வுகட‌ந்த‌ வேலையில்லாப் பிர‌ச்சினையும், வ‌றுமையும் மக்க‌ளை வாட்டிய‌து.

நாட்டில் நில‌வும் பாதுகாப்ப‌ற்ற‌ நிலைமைக்கு கார‌ண‌ம் பொருளாதார‌ பிர‌ச்சினைக‌ள் என்ப‌தை அறிந்திராத‌ அல்ல‌து புரிந்து கொள்ள‌ விரும்பாத‌, ம‌த‌- க‌லாச்சார‌க் காவ‌ல‌ர்க‌ள் பூர்க்கா அணிவ‌தே பெண்க‌ளுக்கு பாதுகாப்பு என்ற‌ன‌ர். அப்பாவி ஆண்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, பெண்க‌ளும் அதை ந‌ம்பினார்க‌ள்.

ம‌த‌ உண‌ர்வு வ‌ர்க்க‌ உண‌ர்வை ம‌ழுங்க‌டித்து விடும் என்ப‌தால் அர‌சும் ம‌றைமுக‌மாக‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌த்தை ஊக்குவிக்கும். இத‌ன் மூல‌ம் ம‌க்க‌ளின் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து அர‌சாங்க‌ம் த‌ப்பிக் கொள்கிற‌து.

உல‌கில் எந்த‌ நாட்டிலும் வாழும் பெரும்பாலான‌ ச‌ராச‌ரி ம‌க்க‌ள், உண‌வுக்கு வ‌ழியில்லை என்றால் புர‌ட்சி செய்ய‌ நினைக்க‌ மாட்டார்க‌ள். த‌ம‌து க‌ஷ்ட‌ங்க‌ளை சொல்லி இறைவ‌னிட‌ம் முறையிடுவார்க‌ள். ம‌த‌ ஒழுக்க‌த்தை பேணி வ‌ந்தால் போதும், க‌ட‌வுள் ந‌ல்ல‌ வ‌ழி காட்டுவார் என‌ நினைப்பார்க‌ள்.

மூன்று நேர‌மும் உண்டு கொழுத்திருக்கும், வ‌ச‌தியான‌ மேட்டுக்குடியின‌ருக்கு சாதார‌ண‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் புரியாது. அவ‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து எல்லாம் "ம‌த‌ம்...ம‌த‌ம்...ம‌த‌ம்" ம‌ட்டும் தான்.

Saturday, June 08, 2019

கத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்


நான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் தெரிய வந்தது. அவரது தாய்மொழி கத்தலான். அதாவது ஸ்பெயினில் சிறுபான்மை இனத்தவர். பெரும்பான்மை சமூகத்தினரின் "பேரினவாத ஸ்பானிஷ் மொழி" கற்பிக்கும் ஆசிரியர்.

நாங்கள் ஸ்பானிஷ் மொழி என்று பொதுவாக சொல்வது கஸ்திலியான் மொழியைத் தான். தலைநகரம் மாட்ரிட், அதை அண்டிய மத்திய ஸ்பெயின் பகுதியில் பேசப்படும் பெரும்பான்மையின மொழி. அதில் நிறைய அரபு மொழிச் சொற்கள் கலந்துள்ளன.

ஸ்பெயினில் அதைத் தவிர, கத்தலான், பாஸ்க், கலேக்கோ மொழிகளை பேசும் சிறுபான்மையின மக்களும் வாழ்கின்றனர். ஆனால், இன்று வரைக்கும் கஸ்திலியான் (ஸ்பானிஷ்) மட்டும் தான் உத்தியோகபூர்வ மொழி.

ஏற்கனவே பாஸ்க் மொழி பற்றி உலகில் பலருக்கும் தெரியும். அதற்குக் காரணம் அவர்களது ஆயுதப் போராட்டம். எங்களது ஸ்பானிஷ் ஆசிரியையும் அதைக் குறிப்பிடத் தயங்கவில்லை. "நாங்கள் பாஸ்க்காரர் மாதிரி பயங்கரவாதிகள் அல்ல. மேலும் நாங்கள் தனிநாடு கோரவில்லை." என்றார்.

கத்தலான் ரோம மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இத்தாலி மொழிக்கு நெருக்கமானது. கத்தலான் மக்கள், ஸ்பெயின் தேசிய நீரோட்டத்தில் ஒன்றுகலந்து விட்டவர்கள். பார்சலோனா போன்ற தொழிற்துறை நகரங்களின் வளர்ச்சி அதற்கு முக்கிய காரணம்.

ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிரான உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில், கத்தலூனியா, கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகள் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரமாக இருந்தது. அவர்கள் அப்போதே நினைத்திருந்தால் தனிநாடு பிரகடனம் செய்திருக்கலாம்.

கத்தலூனியாவின் இடதுசாரிப் பாரம்பரியம் இன்றைக்கும் தொடர்ந்து இருக்கிறது. அகதிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு முற்போக்கான சமூகம். ஸ்பெயின் பிற பாகங்களை விட, அங்கு தான் வெளிநாட்டவருக்கு வரவேற்பு அதிகம்.

பொதுவாக, மேற்கத்திய நாடுகளில் பிரிவினைக் கோரிக்கைகள் எழும் பொழுது, தமிழர் உட்பட வெளிநாட்டுக் குடியேறிகள் எதிராக இருப்பார்கள். உதாரணத்திற்கு, கனடாவில் இருந்து கியூபெக் மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த நேரம், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் (தமிழர்கள் உட்பட) எதிர்த்து வாக்களித்தனர். ஸ்கொட்லாந்து வாக்கெடுப்பிலும் இது தென்பட்டது.

ஆனால், கத்தலூனியா விடயத்தில் நடந்ததோ வேறு. அங்கு வாழும் வெளிநாட்டவரும் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதற்குக் காரணம், கத்தலூனியா தேசியவாதிகளின் இடதுசாரி சார்புத் தன்மை என்றால் அது மிகையாகாது. தமிழ்த் தேசியவாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயம் இது.

இதற்கு முன்னர் பிரிவினை கோராத கத்தலான் சமூகம், இப்போது மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டிய காரணம் என்ன? அநேகமாக, அண்மைக் காலத்தில் ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முக்கியமான காரணம். மேற்கு ஐரோப்பாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஸ்பெயினில் அதிகம்.

ஸ்பெயின் பொருளாதாரத்தில், கத்தலூனியா பிரதேசத்தின் பங்களிப்பு அதிகம். பொருளாதார உற்பத்தி அடிப்படையில், "பணக்கார மாநிலம்" என்று சொல்லலாம். ஸ்பெயின் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பிரிவினை சிறந்த வழி என்று நம்புகிறார்கள். அது சாத்தியமா என்பது கேள்விக்குறி. கத்தலூனியா தனி நாடானால், அது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டி இருக்கும். அதே நேரம், யூரோ நாணயமும் பாவிக்க முடியாது.

Sunday, June 02, 2019

தமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்


ஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ள் என்று அழைக்க‌ப் ப‌டுவார்க‌ள். புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் அர‌ச‌ எதிர்ப்பாள‌ராக‌ க‌ருத‌ப் ப‌டுவார்க‌ள். ஏனென்றால், இறுதியில் புலிக‌ளின் நோக்க‌மும் த‌மிழீழ‌ "அர‌சு" அமைப்ப‌து தான் இல்லையா?

இப்போது க‌ண் முன்னால் காண‌க்கூடிய‌ ஆதார‌த்திற்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுத‌லை செய்வ‌த‌ற்காக‌ EPLF இய‌க்க‌ம் போராடிய‌து. EPLF என்ப‌து ந‌ம‌க்குப் புலிக‌ள் மாதிரி. அத‌ன் த‌லைவ‌ர் இசையாஸ் அபெவெர்கி ந‌ம‌க்கு பிர‌பாக‌ர‌ன் மாதிரி.

எரித்திரியா சுத‌ந்திர‌மான‌ த‌னி நாடான‌ பின்ன‌ர், முன்பு விடுத‌லை இய‌க்க‌மாக‌ இருந்த‌ EPLF ஆட்சி அமைத்த‌து. அத‌ன் த‌லைவ‌ர் ஜ‌னாதிப‌தி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த‌ பின்ன‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் எல்லைப் போர் ந‌ட‌ந்த‌து. எரித்திரிய‌ அர‌சு அதைக் கார‌ண‌மாக‌க் காட்டி, ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுத்து வ‌ருகின்ற‌து. தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்துவ‌தில்லை.

இப்போது புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளுக்கு வ‌ருவோம். இரு த‌சாப்த‌ கால‌த்திற்கு முன்ன‌ர், அதாவ‌து எரித்திரிய‌ விடுத‌லைப் போராட்ட‌ம் ந‌ட‌ந்த‌ கால‌த்தில் பெருந்தொகை அக‌திக‌ள் ஐரோப்பா சென்று குடியேறி விட்ட‌ன‌ர்.

புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் புலிக‌ளை ஆத‌ரிப்ப‌து மாதிரி, அன்று வ‌ந்த‌ எரித்திரிய‌ர்க‌ளில் பெரும்ப‌குதியின‌ர் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். அதாவ‌து இன்றைய‌ நிலையில்‌ எரித்திரிய‌ அர‌ச‌ ஆத‌ர‌வாள‌ர்கள்.

2017 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், எரித்திரிய‌ அதிப‌ரின் வ‌ல‌துக‌ர‌மாக‌ ப‌த‌வியில் இருக்கும் ஒருவ‌ர் நெத‌ர்லாந்திற்கு வ‌ருகை த‌ந்திருந்தார். ந‌ம‌க்கு அன்ட‌ன் பால‌சிங்க‌ம் மாதிரி ஒருவ‌ர் என்று நினைத்துக் கொள்ளுங்க‌ள். அவ‌ர் அங்கு ஒரு ம‌காநாட்டில் பேசுவ‌த‌ற்கு ஏற்பாடாகி இருந்த‌து. ஆனால், க‌டைசி நேர‌த்தில் ம‌காநாடு ந‌ட‌த்த‌ அனும‌தி ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ இட‌த்தில் ஒரு சிறிய‌ க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து ஓய்ந்துள்ள‌து. உண்மையில் என்ன‌ ந‌ட‌ந்த‌து?

ம‌காநாட்டை ஒழுங்கு ப‌டுத்திய‌வ‌ர்க‌ள், நெத‌ர்லாந்தில் வாழும் இர‌ண்டாந்த‌லைமுறை எரித்திரிய‌ இளைஞ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள‌து பெற்றோர் இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் வ‌ந்து குடியேறிய‌வ‌ர்க‌ள். த‌ம‌து பெற்றோர் மாதிரியே, இந்த‌ இளையோரும் EPLF ஆத‌ர‌வாள‌ர்க‌ள். ஐரோப்பாவில் பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையை சேர்ந்த‌ புலி ஆத‌ர‌வு த‌மிழ் இளையோருட‌ன் ஒப்பிட்டுப் பார்த்தால் இல‌குவாக‌ப் புரியும்.

அதே நேர‌ம், எரித்திரியா த‌னி நாடாக சுத‌ந்திர‌ம் அடைந்த பின்ன‌ர், பெரும‌ள‌வு அக‌திகள் ஐரோப்பா வ‌ந்துள்ள‌ன‌ர். அண்மைக் கால‌ அக‌திக‌ள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்க‌ள். இல்லாவிட்டால் அபெவெர்கி அர‌சை எதிர்ப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.

நெத‌ர்லாந்தில் ம‌காநாடு ந‌ட‌க்க‌விருந்த‌ இட‌த்தில், அபெவெர்கி அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் (ந‌ம‌க்கு புலி எதிர்ப்பாள‌ர்க‌ள் மாதிரி) ஒன்று கூடி விட்ட‌ன‌ர். ம‌காநாட்டை ந‌ட‌த்த‌ விடுவ‌தில்லை என்று க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். நிலைமை எல்லை மீறிச் செல்வ‌தைக் க‌ண்ட‌ உள்ளூராட்சி ச‌பை ம‌காநாட்டை த‌டை செய்து விட்ட‌து.

அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எவ்வாறு புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளிலும் எரித்திரிய‌ ம‌க்க‌ள் பிள‌வு ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ற‌ உண்மையை உண‌ர்த்திய‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ந்த‌ அக‌திக‌ள், த‌ம‌க்கு தாய‌க‌த்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்ற‌ன‌ர். அத‌ற்கு மாறாக‌ புல‌ம்பெய‌ர் சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌ இர‌ண்டாந் த‌லைமுறையின‌ருக்கு அங்குள்ள‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாது என்று வாதிடுகின்ற‌ன‌ர்.

Saturday, June 01, 2019

முஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி


பதினைந்தாம் நூற்றாண்டில் "சீன நாட்டு கொலம்பஸ்" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இன்றுள்ளதை போன்று அந்தக் காலத்திலும் சீனாவில் இருந்து அரேபியா வரையில், இந்து சமுத்திரம் ஊடாக வணிகப் போக்குவரத்து கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அவை இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்று பொருட்களை வேறு கப்பல்களுக்கு மாற்றுவதுண்டு.

சீன அட்மிரல் செங்க்ஹோவின் பிரதான நோக்கமும் சர்வதேச வர்த்தகம் தான். ஒரு தடவை இலங்கைக்கு வந்த செங்க்ஹோ சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசித்து விட்டு வந்தார். அதை நினைவுகூர்வதற்காக காலியில் (?) ஒரு கல்வெட்டு செதுக்கி வைத்திருந்தார். அதில் சீனம், அரபி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப் பட்டிருந்தன. சீன மொழி செங்க்ஹோவின் தாய்மொழி. இலங்கையில் இருந்து அரபிக் கடலுக்கு பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அரபு வணிகர்கள். அதனால் அரபு மொழி. மூன்றாவதாக இலங்கையின் உள்நாட்டு மொழியாக தமிழில் எழுத வேண்டிய காரணம் என்ன?

அந்தப் பிரதேசம் கோட்டே ராஜ்ஜியத்திற்கு உட்பட்டது. அங்கு சிங்களம் பேசப் பட்டது. அது சீனர்களுக்கும் தெரியும். ஒரு தடவை கோட்டே மன்னன் வர்த்தகத்திற்கு இடையூறு செய்த காரணத்தால், பெரும் படையுடன் திரும்பி வந்த சீனர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி முப்பதாண்டுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனாவுக்கு கொண்டு சென்று விட்டனர். இந்தப் போர் பற்றிய சீன வரலாற்றுத் தகவல்களில் "சிங்கள மன்னன் அழகேஸ்வரன்"(ஒரு தமிழன்?) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். திரும்பவும் கேள்விக்கு வருவோம். கல்வெட்டில் சிங்களத்தை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அதற்குக் காரணம் அன்றைய சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தினார்கள். (அப்போது அதை தமிழ் என்று சொல்லாமல் மலபார் என்ற பெயரில் அழைத்தனர்.) செங்க்ஹோ ஒரு சீன முஸ்லிம். இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில், இலங்கை முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. அதனால் இலகுவாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஐரோப்பிய காலனியாதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்து வருகின்றது. அவர்கள் அரேபியருடன் வணிகத் தொடர்புகளை வைத்திருந்த போதிலும் எந்தக் காலத்திலும் அரபி மொழிக்கு மாற விரும்பி இருக்கவில்லை. அதற்கான எந்த நிர்ப்பந்தமும் இருக்கவில்லை.

அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். அரேபியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னரே இலங்கையுடன் வணிகம் செய்து வந்தனர். அப்போதும் சர்வதேச வணிக மொழியாக தமிழ் இருந்து வந்துள்ளது. இலங்கையில் இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலமாகவே பரப்பப் பட்டது. மாலைதீவிலும் அப்படித் தான்.

இஸ்லாமியராக மதம் மாறியவர்கள் தமது மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை. அதனால் தான் இந்தியா, இலங்கை, மாலைதீவுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் தமது பூர்வீக மொழிகளை பேசி வருகின்றனர். புள்ளிவிபரக் கணக்கெடுப்பை எடுத்துப் பார்த்தால் கூட, உலகில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள், அரபி அல்லாத பிற மொழிகளைப் பேசுகின்றனர்.

இன்று சவூதி வஹாபிச வழிகாட்டலில் இயங்கும் சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அரபியை இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியாக கொண்டு வரும் கொள்கையை கொண்டிருக்கின்றனர். இது ஒரு நவீன காலத்து மதவாத அரசியல்.

இந்தியாவில் இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வர விரும்புகிறது. (இது அந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளது.) அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும்.

உண்மையில் இது நவீன காலத்து இஸ்ரேலை பார்த்து உருவான அரசியல் கோட்பாடு. காலங்காலமாக ஹீபுரு பேசத் தெரியாமல் இருந்த யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் தான் ஹீபுரு படித்தார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழும் முதலாம் தலைமுறை யூதர்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். ஏன் அரபியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்களும் உள்ளனர். அது மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு செல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் யூதர்களுக்கு இன்றைக்கும் ஹீபுரு தெரியாது.

இது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவின் கொள்கை மட்டுமே. இதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருத்திப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் முஸ்லிம்களின் தாய்மொழியாக அரபி மொழியை கொண்டு வந்தால், அதற்கான முதல் எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் கிளம்பும். இலகுவாக தாய்மொழியான தமிழில் படிக்கும் வசதி இருக்கையில், யாரும் கஷ்டப்பட்டு அந்நிய மொழியான அரபியில் படிக்க விரும்ப மாட்டார்கள். அதை ஒரு பலவந்தமான திணிப்பாகவே உணர்வார்கள்.

இலங்கையை ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலமாக காலனியாக வைத்திருந்தாலும், இலங்கையர் அனைவரும் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசவில்லை. ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால், குறைந்த பட்சம் கிறிஸ்தவரின் தாய்மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவர முடியவில்லை. இன்றைக்கும் அவர்கள் சிங்களம் அல்லது தமிழ் தான் பேசுகிறார்கள். இந்த நிலைமை தான் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படும் அரபி மொழிக்கும் ஏற்படும். ஆகவே நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பதே நல்லது.