Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, September 23, 2023

ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன்!

Image
Gautama Buddha or Jesus Christ? இந்து மத சமூகத்தில் பிறந்த பரிதாபங்கள். 🤭🤭🤭 இவர்கள் யாரும் இயேசு, புத்தர் பற்றி கேள்விப் பட்டிருக்கவே இல்லை. 🤔🤔🤔

 

 
ஒரு புறம் புத்தர், மறுபுறம் திலீபன். அஹிம்சையின் பெயரில் இனவெறி வன்முறை தூண்டி விடப் படுகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். இனவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்து விடாதிருப்போம். இலங்கையில் இனங்களை பிரித்து ஆள்வதற்கு சிறிலங்காவின் சிங்கள பேரினவாத அரசும், அதன் தமிழ்த்தேசிய ஒட்டுக்குழுவும் தீயாக வேலைசெய்கின்றன.

இரு பக்கமும் இன உணர்வைத் தூண்டி விட்டு, சிங்கள- தமிழ் மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை வளர்த்து விட்டு கலவரங்களை உண்டாக்குவதற்கு முயற்சிக்கின்றன. அஹிம்சையின் பேரில் புத்தரும், திலீபனும் வன்முறையை தூண்டி விடும் கருவிகளாக பயன்படுத்தப் படுகின்றன.

இதனால் நன்மையடையப் போவது சிங்கள- தமிழ் மேட்டுக்குடியினர் மட்டுமே. இந்த குள்ள நரிகளின் சதித் திட்டத்தை அறியாத அப்பாவி சிங்கள- தமிழ் மக்கள் தம்மிடம் இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்.

தெற்கில் ராஜபக்சேக்களும், வடக்கில் கஜேந்திரகுமார்களும் நிரந்தர கோடீஸ்வரர்களாக நிலைத்திருப்பதற்காக இந்த இனவெறியூட்டும் அரசியல் நாடகம் அரங்கேற்றப் படுகிறது. தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம்.

அன்றாடம் உணவின்றி பட்டினி கிடந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் வாழும் ஒரு நாட்டில், அதைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி, வயிறார உண்டு களிக்கும் மேட்டுக்குடி கும்பல், திலீபனின் படத்தை வைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு மக்கள்விரோத அரசின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் திலீபன் வழிபாட்டில் சங்கமிக்கின்றன. யாரை நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்? நாடகமே உலகம். 

"சொந்தச் சகோதரர்கள் 
துன்பத்தில் சாதல் கண்டும் 
சிந்தை யிரன்காரடீ 
கிளியே செம்மை மறந்தாரடீ. 
நெஞ்சி லுரமுமின்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வரரடி 
கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று 
கூவிப் பிதற்றல்லன்றி 
நாட்டத்திற் கொள்ளரடீ 
கிளியே நாளில் மறப்பாரடீ." 
- பாரதியார்

Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

Wednesday, December 08, 2021

திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்

திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.


முதலில் திருகோணமலை இனப்பரம்பல் தொடர்பாக சில சுருக்கமான குறிப்புகள்:

- திருமுருகன் காந்தி குறிப்பிடும் தமிழீழம் அல்லது தமிழர் பிரதேசம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை குறிக்கும். குறிப்பாக திருகோணமலை பட்டினமும், அதை அண்டிய பகுதிகளும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தனித் தன்மை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக திருகோணமலைத் தமிழர்கள், யாழ்ப்பாண, மட்டக்களப்பு தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாகவும் மாறுபட்டவர்கள். உதாரணத்திற்கு, அங்கே சாதிப் பாகுபாடுகள் பார்ப்பது மிக மிகக் குறைவு. அதற்கு பல நூறாண்டுகளாக திருகோணமலையில் வசித்து வந்த ஐரோப்பிய குடியேறிகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம்.

- கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கும் திருகோணமலை "தமிழர் பிரதேசம்" என்று சொன்னாலும், அந்த மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பகுதிகளில் முஸ்லிம்கள் (அல்லது இலங்கைச் சோனகர்கள்) எண்ணிக்கை மிக அதிகம். அந்தப் பகுதிகள் நேரடியாக துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளன.

- தொண்ணூறுகளில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற, இன முரண்பாடுகளில் விரிசலை உண்டாக்கிய புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள் காரணமாக, கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கத் தலைப்பட்டனர். ஒரு தனியான தேசிய இனமாக பிரிந்து நின்றனர்.

- அது போதாதென்று, ஆகஸ்ட் 2006ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் மூதூரை கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். ஆகவே, 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு மூதூரிலுமாக, இரண்டு தடவைகள் முஸ்லிகள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். இன்னொருவிதமாக சொன்னால், புலிகளின் பார்வையில் தமிழீழம் என்பது "தூய" தமிழர்களின் பிரதேசம். அங்கிருந்து சிங்களவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள். இதுபோன்ற புலிகளின் இனவாத நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு தமிழீழப் போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமுருகன் காந்தி இதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், திருகோணமலையை சேர்த்து ஈழம் அமைத்து விடுவோம் என்று கனவு காண்கிறார்.

- திருகோணமலை மாவட்டத்தை, வடக்கில் உள்ள முல்லைத்தீவுடன் இணைக்கும் பதவியா பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதைத் தவிர துறைமுகத்தை அண்டிய கந்தளாய், சேருவில பகுதிகளிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குடியேறியவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சிங்களவர்களை ஈழம் கிடைத்த பின்னர் இனச்சுத்திகரிப்பு செய்ய முடியாது.

இனி திருமுருகன் காந்தி கூறிய வரலாற்றுத் திரிபுகளுக்கு வருவோம்: 

- இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியா, பர்மா வரை வந்து விட்ட ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக திருகோணமலையில் இருந்து தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு சென்றதாக திருமுருகன் காந்தி கூறுகின்றார்.

- உண்மையில் அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. திருகோணமலை துறைமுகமும், அங்கிருந்த படைத்தளமும் ஜப்பானிய வான்படை விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதல்களில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. பல விமானங்கள், கப்பல்கள் அழிக்கப் பட்டன.

- இந்தியாவை இந்திரா காந்தி ஆண்ட காலத்தில், திருகோணமலைக்கு அமெரிக்க இராணுவம் வந்திறங்கவிருந்ததாகவும் அதனால் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப் படதாகவும் திருமுருகன் காந்தி கூறுகின்றார். இது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல்.

- அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் வருவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இருக்கவில்லை. ஆனால், புத்தளத்தில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவைக்கான ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. புத்தளம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து அமெரிக்கா உளவறிய முயற்சிக்கலாம் என்று இந்திய அரசு விசனம் தெரிவித்திருந்தது.

- ஆனால், இந்தியா ஈழப் போராட்டத்திற்கு உதவியதன் காரணம் அதுவல்ல. பனிப்போர் காலத்தில் ஒரு நாடு எந்த முகாமில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எதிரி முகாமின் பதிலிப் போராக உள்நாட்டு குழப்பங்கள் தூண்டி விடப்பட்டன. 1977 ம் ஆண்டிலிருந்து இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னர் இலங்கையும் சோவியத் முகாமில் இருந்த படியால், இந்திரா காலத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இது ஒரு மிகப்பெரிய பண்பியல் மாற்றம். ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு, சோவியத் யூனியன் விழுந்த பின்னர் எல்லா நாடுகளும் ஒரே அமெரிக்க குடையின் கீழ் வந்து விட்டன.

- மேலதிகமாக திருமுருகன் காந்தி சொல்லாத ஒரு தகவலையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். (நிச்சயமாக அவர் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்.) திருகோணமலையில் 1956 ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அந்த வருடம் தான் தன்னை ஒரு இடதுசாரி சமூக ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்ட பண்டாரநாயக்க பிரதமரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, மிகப்பெரிய பிரிட்டிஷ் கம்பனிகளை அரசுடமையாக்கியது. அத்துடன் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமையும் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் "முடிக்குரிய" பிரிட்டிஷ் படைகள் வெளியேற, அந்த இடத்தில் "முடிக்குரிய" சிலோன் படைகள் நிலைகொண்டன.

- இலங்கையின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான அரசியல், இராணுவ, பொருளாதார மாற்றங்களின் பின்னர், 1958 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதைத் தூண்டி விட்டவர்கள், அன்று எதிர்க்கட்சியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி. அன்றிலிருந்து வளர்ந்து வந்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் ஒரு துயர முடிவை சந்தித்தது. ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியா மீண்டும் திருகோணமலையில் படைத்தளம் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் அதற்கு சம்மதித்துள்ளது. 

திருகோணமலை கோளாறு பதிகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


Saturday, July 24, 2021

இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு

 - ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.

- இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள்... இவ்வாறு பலவகையான தொழிற் பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.

- 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாத போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

- இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 -1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.

- எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

- இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல்: 
  • 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது. 
  • 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
  • 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 
  • 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன. 
  • 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது. 
  • 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன. 
  • 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

- 1977 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.

- ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ- லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.

- 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.

- அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.

- நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.

- 1980 ம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

- அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

- ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப் பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

- 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடைசெய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப் பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.

- வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்று விட்டது.

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002 ம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

- தென்னிலங்கையில் 1987 -1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

- ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்க போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.

- மறு புறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

- தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்க பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.

Saturday, July 10, 2021

இலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்

 


இலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: "இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழுதியிருக்கவில்லை..." என்று சில ஈழத்தமிழ் "சீமானிஸ்டுகள்" என்னுடன் கிளப் ஹவுசில் வாதிட்டனர். 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் "பல்கலைக்கழக பட்டதாரிகளும்" தாம் படித்த பாடநூல் எதிலும் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன். 

 இந்தக் குழுவினர் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பதற்கான காரணங்கள்: 
  • 1) தமிழகத்து சீமானால் பரப்பப்பட்ட திராவிட எதிர்ப்பு அரசியலின் தாக்கம். சீமானை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்கள் கூட சீமானிச கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். 
  •  2) இவர்கள் தமது மனதில் உள்ள சாதிவெறியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். "ஈழத்தில் சாதிப்பிரச்சினை இல்லை" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பவர்கள். 
  •  3) சாதிவெறிக்கும், பெரியார் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஒரு சமூகநீதி இயக்கமாக பார்க்கிறார்கள். ஈழத்திலும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். தமது மேலாதிக்க கட்டுமானத்தை திராவிடக் கருத்தியல் தகர்த்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.

Friday, July 10, 2020

ஈழத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? - ஒரு விவாதம்


ஈழத் தமிழ் அரசியலை ஆழமாக ஆராயும் இணையக் கலந்துரையாடல் (5 July 2020) பேஸ்புக்கில் பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/tamildebaterscouncil/videos/574320763283712) இதுபோன்ற விவாதத்தை இதுவரையில் இலங்கையில் எந்த ஊடகமும் செய்யவில்லை. ஒரு மகத்தான பணியை இணையத்தில் நிறைவேற்றிய இலங்கை வாழ் தமிழ் விவாதிகள் கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் முதலில் உரையாடிய அஷோக்பரன், குருபரன் இருவரும் சட்ட வல்லுனர்கள். ஆகவே ஆரம்பத்தில் தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பாக சட்டரீதியான நிலைப்பாடுகளை ஆராய்ந்து விட்டு, இறுதியில் அரசியல் தீர்வு முக்கியம் என்று ஒருமித்த கருத்து நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் குருபரன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும் தமிழர் தாயகத்தில் வாழ விட வேண்டும் என்ற யதார்த்த நோக்கில் பேசினார். அத்துடன் சாதி ஒழிப்பு, பெண் உரிமை தொடர்பாக பெரியாரின் திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஈழத்தமிழரின் தொன்மையான வரலாறு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்றும், சமீபத்திய அரசியல் வரலாற்று விளைவுகளின் ஊடாக சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதாகவும் சொன்னார்.

குருபரன் இந்தளவு தூரம் முற்போக்காக பேசினாலும், இது குறித்து எத்தனை தமிழ்த்தேசியவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. குருபரன் தான் ஒரு உறுப்பினர் அல்ல என்று அடிக்கடி மறுத்து வந்தாலும், அவர் எப்போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாகவே பேசி வந்துள்ளார். அந்தக் கட்சியில் தான் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவாதிகளும், மதவாதிகளும், சாதியவாதிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே மேற்படி முற்போக்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு, குருபரன் தவிர வேறெந்த தமிழ்த்தேசியவாதியாவது முன்வருவாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இலங்கை என்ற ஒற்றையாட்சியை மையப் படுத்திய சட்டத்தில், குருபரன் எதிர்பார்க்கும் "தமிழர் தாயகம்" என்பதை குறிக்கோளாக கொண்ட "புறவய" அல்லது "அகவய" சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை என்பது உண்மை தான். அஷோக்பரன் சுட்டிக் காட்டியது போன்று இதனை மேலிருந்து திணிக்க முடியாது. அடிமட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஊடாக எட்டப் பட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ளது போன்று ஒற்றையாட்சி அலகின் கீழான சமஷ்டி அமைப்பு குறித்து அஷோக்பரனும், குருபரனும் நீண்ட நேரமாக உரையாடினார்கள். அவ்வாறான ஒரு தீர்வு இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அஷோக்பரனின் எதிர்பார்ப்பு. ஆனால், அது இலங்கையில் சாத்தியமல்ல என்று கூறிய குருபரன், அதற்குக் காரணம் சிங்கள- பௌத்த பேரினவாத கருத்தியல் என்றும் பதிலளித்தார்.

நான் இந்த இடத்தில் ஸ்கொட்லாந்து சுயநிர்ணயம் தொடர்பாக குருபரனுக்கு விளக்கம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிரித்தானியா என்ற பொதுப் பெயரின் கீழ், இங்கிலாந்து மன்னராட்சியானது ஸ்கொட்லாந்து மன்னராட்சியை பெயரளவில் தனக்கு சமமான அரசாக இணைத்துக் கொண்டது. இருப்பினும் ஸ்கொட்லாந்தில் கடந்த முன்னூறு வருட காலமாக இங்கிலாந்தின் மேலாதிக்கம் இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆங்கிலேய- புரட்டஸ்தாந்து பேரினவாதம், ஸ்கொட்டிஷ் கத்தோலிக்க மக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. இன்றைக்கும் ஸ்கொட்லாந்தில் மட்டுமல்லாது வேல்சிலும் ஆங்கிலம் தான் பிரதானமான மொழியாக பேசப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஸ்கொட்டிஷ் தேசியவாத இயக்கம் அடக்கப் பட்டு வந்தது. தன்னாட்சி, தனியான பாராளுமன்றம் இருந்தாலும் பிரித்தானியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகம். அதைவிட ஸ்கொட்லாந்தில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ஆங்கிலேய இனத்தவரையும் கணக்கில் எடுக்க வேண்டும். வெளிவிவகாரம் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துக்கு கீழே கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் உலகை காலனிப் படுத்திய காலத்தில் ஸ்கொட்டிஷ்காரர்களின் பங்களிப்பு காரணமாக தமக்கென தன்னாட்சிப் பிரதேசத்தை பெற்றுக் கொண்டனர். ஆகவே ஒரு காலனியாதிக்க நாட்டில் இருந்த நிலைமையை, முன்பு காலனியாக இருந்த இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

விவாதத்தில் கலந்து கொண்ட இன்னொரு சட்ட வல்லுனரான அம்பாறையை சேர்ந்த சிவகுமார் நவரத்தினம், ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் புறக்கணிக்கப் பட்டு வந்த ஒரு விடயத்தை தொட்டுக் காட்டினார். அம்பாறை என்பது கிழக்கு மாகாணதின் தென் கோடியில் தமிழர் வாழுமிடம் என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். மட்டக்களப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அம்பாறைக்கு கொடுக்கப் படுவதில்லை. மேலும் அவர் மலையகத் தமிழரின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இந்த இடத்தில் அஷோக்பரன் கூறிய சில கருத்துக்களை விமர்சிக்க வேண்டி உள்ளது. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வைக் காண விரும்பும் தாராளவாதி. முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமக்கென தனியான தேசியத்தை கட்டமைத்துக் கொண்டது அவர்களது தெரிவு என்றும், வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவர்களை ஒதுக்கவில்லை என்றும் வாதாடினார். இதில் பாதியளவு மட்டுமே உண்மை உள்ளது.

ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தொண்டமானின் இந்திய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்தன. இருப்பினும் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் தொண்டமான் தன்வழி தனிவழி என்று சென்று விட்டார். அதனை வடக்குத் தமிழ்த்தேசியவாதிகள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. "தொண்டமான் ஒரு துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் சரி, பிழை என்று நான் சொல்ல வரவில்லை. மலையக அரசியல் தனியாக பிரிந்தமைக்கு, வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களின் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவே முஸ்லிம்கள் குறித்த நிலைப்பாடாகவும் இருந்தது. கூட்டணி முதல் புலிகள் வரை முஸ்லிம் காங்கிரசின் இருப்பை ஜீரணிக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

கடைசியாக பேச வந்த விரிவுரையாளர் மீநிலங்கோ அன்றும் இன்றும் பேசப்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியலானது மேட்டுக்குடி (பூர்ஷுவா) தன்மை கொண்டது என்பதையும், அது அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் வாதாடினார். அதற்கு உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுருட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற தகவல்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. அது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் முற்போக்கான அரசியல் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.

மீநிலங்கோ தனது உரையில் சுயநிர்ணய உரிமை குறித்து சரியான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்றும், "ஆகவயம்", "புறவயம்" என்று, நாமாகவே உலகில் இல்லாத ஒரு விடயத்தை உருவாக்கி விட்டு வாதிடக் கூடாது என்றார். இது தொடர்பாக லெனின் கூறிய வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டி விளங்கப் படுத்தினார். ஒவ்வொருவருக்கும் விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக மணம் முடிக்கும் பொழுதே அதைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த உரிமையை வைத்துக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கு சேர்ந்து வாழ்வது எப்படி என்பது தான் முக்கியமே தவிர பிரிந்து செல்வதல்ல. மேலும் இதற்கு முன்னர் அஷோக்பரனும், குருபரனும் நடத்திய வாதாட்டத்தில் சிலாகித்துப் பேசப் பட்ட பிரான்ஸ் நாட்டின் மறுபக்கம் பற்றி எடுத்துக் கூறினார். பிரான்சில் பேசப்பட்டு வந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி ஒடுக்கி பிரெஞ்சு மொழி திணிக்கப் பட்டது வரலாறு. அத்தகைய பேரினவாத பிரான்ஸ் நாட்டை ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு உதாரணம் கற்பிப்பது ஒரு நகைப்புக்குரிய விடயம்.

Monday, June 10, 2019

"முஸ்லிம் நாடுகள் தலையிடும்" எனும் தப்பெண்ணம்


"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில் "அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்" கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது. அதாவது "தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்..." என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.

இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது. அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.

ஆகையினால் "முஸ்லிம் நாடுகள் தலையிடும்... கேள்வி கேட்கும்..." என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து. நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது. அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.

இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா? வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா? தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.

அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.

அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.

இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல. முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம். அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.

Saturday, June 01, 2019

முஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி


பதினைந்தாம் நூற்றாண்டில் "சீன நாட்டு கொலம்பஸ்" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார். இன்றுள்ளதை போன்று அந்தக் காலத்திலும் சீனாவில் இருந்து அரேபியா வரையில், இந்து சமுத்திரம் ஊடாக வணிகப் போக்குவரத்து கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அவை இலங்கை துறைமுகத்தில் தரித்து நின்று பொருட்களை வேறு கப்பல்களுக்கு மாற்றுவதுண்டு.

சீன அட்மிரல் செங்க்ஹோவின் பிரதான நோக்கமும் சர்வதேச வர்த்தகம் தான். ஒரு தடவை இலங்கைக்கு வந்த செங்க்ஹோ சிவனொளிபாத மலைக்கு சென்று தரிசித்து விட்டு வந்தார். அதை நினைவுகூர்வதற்காக காலியில் (?) ஒரு கல்வெட்டு செதுக்கி வைத்திருந்தார். அதில் சீனம், அரபி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப் பட்டிருந்தன. சீன மொழி செங்க்ஹோவின் தாய்மொழி. இலங்கையில் இருந்து அரபிக் கடலுக்கு பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அரபு வணிகர்கள். அதனால் அரபு மொழி. மூன்றாவதாக இலங்கையின் உள்நாட்டு மொழியாக தமிழில் எழுத வேண்டிய காரணம் என்ன?

அந்தப் பிரதேசம் கோட்டே ராஜ்ஜியத்திற்கு உட்பட்டது. அங்கு சிங்களம் பேசப் பட்டது. அது சீனர்களுக்கும் தெரியும். ஒரு தடவை கோட்டே மன்னன் வர்த்தகத்திற்கு இடையூறு செய்த காரணத்தால், பெரும் படையுடன் திரும்பி வந்த சீனர்கள் இலங்கை முழுவதையும் கைப்பற்றி முப்பதாண்டுகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனாவுக்கு கொண்டு சென்று விட்டனர். இந்தப் போர் பற்றிய சீன வரலாற்றுத் தகவல்களில் "சிங்கள மன்னன் அழகேஸ்வரன்"(ஒரு தமிழன்?) என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். திரும்பவும் கேள்விக்கு வருவோம். கல்வெட்டில் சிங்களத்தை தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? அதற்குக் காரணம் அன்றைய சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தமிழ் மொழியை பயன்படுத்தினார்கள். (அப்போது அதை தமிழ் என்று சொல்லாமல் மலபார் என்ற பெயரில் அழைத்தனர்.) செங்க்ஹோ ஒரு சீன முஸ்லிம். இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில், இலங்கை முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. அதனால் இலகுவாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது ஐரோப்பிய காலனியாதிக்கம் வருவதற்கு முன்பிருந்தே இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழாக இருந்து வருகின்றது. அவர்கள் அரேபியருடன் வணிகத் தொடர்புகளை வைத்திருந்த போதிலும் எந்தக் காலத்திலும் அரபி மொழிக்கு மாற விரும்பி இருக்கவில்லை. அதற்கான எந்த நிர்ப்பந்தமும் இருக்கவில்லை.

அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். அரேபியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னரே இலங்கையுடன் வணிகம் செய்து வந்தனர். அப்போதும் சர்வதேச வணிக மொழியாக தமிழ் இருந்து வந்துள்ளது. இலங்கையில் இஸ்லாம் அரபு வணிகர்கள் மூலமாகவே பரப்பப் பட்டது. மாலைதீவிலும் அப்படித் தான்.

இஸ்லாமியராக மதம் மாறியவர்கள் தமது மொழியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை. அதனால் தான் இந்தியா, இலங்கை, மாலைதீவுகளில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் தமது பூர்வீக மொழிகளை பேசி வருகின்றனர். புள்ளிவிபரக் கணக்கெடுப்பை எடுத்துப் பார்த்தால் கூட, உலகில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள், அரபி அல்லாத பிற மொழிகளைப் பேசுகின்றனர்.

இன்று சவூதி வஹாபிச வழிகாட்டலில் இயங்கும் சில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், அரபியை இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியாக கொண்டு வரும் கொள்கையை கொண்டிருக்கின்றனர். இது ஒரு நவீன காலத்து மதவாத அரசியல்.

இந்தியாவில் இந்து மத அடிப்படைவாத ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வர விரும்புகிறது. (இது அந்த அமைப்பின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளது.) அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும்.

உண்மையில் இது நவீன காலத்து இஸ்ரேலை பார்த்து உருவான அரசியல் கோட்பாடு. காலங்காலமாக ஹீபுரு பேசத் தெரியாமல் இருந்த யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் தான் ஹீபுரு படித்தார்கள். இன்றைக்கும் இஸ்ரேலில் வாழும் முதலாம் தலைமுறை யூதர்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். ஏன் அரபியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்களும் உள்ளனர். அது மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு செல்லாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் யூதர்களுக்கு இன்றைக்கும் ஹீபுரு தெரியாது.

இது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவின் கொள்கை மட்டுமே. இதை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் பொருத்திப் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் முஸ்லிம்களின் தாய்மொழியாக அரபி மொழியை கொண்டு வந்தால், அதற்கான முதல் எதிர்ப்பு முஸ்லிம் சமூகத்தில் இருந்து தான் கிளம்பும். இலகுவாக தாய்மொழியான தமிழில் படிக்கும் வசதி இருக்கையில், யாரும் கஷ்டப்பட்டு அந்நிய மொழியான அரபியில் படிக்க விரும்ப மாட்டார்கள். அதை ஒரு பலவந்தமான திணிப்பாகவே உணர்வார்கள்.

இலங்கையை ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலமாக காலனியாக வைத்திருந்தாலும், இலங்கையர் அனைவரும் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசவில்லை. ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால், குறைந்த பட்சம் கிறிஸ்தவரின் தாய்மொழியாக ஆங்கிலத்தை கொண்டுவர முடியவில்லை. இன்றைக்கும் அவர்கள் சிங்களம் அல்லது தமிழ் தான் பேசுகிறார்கள். இந்த நிலைமை தான் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படும் அரபி மொழிக்கும் ஏற்படும். ஆகவே நடைமுறைச் சாத்தியமில்லாத ஒரு விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணிப்பதே நல்லது.

Sunday, April 28, 2019

இலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்

ஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 250 அப்பாவி மக்கள் கொல்ல‌ப் பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வந்தனர்.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளை தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

இலங்கையில் ஏற்கனவே பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. திட்டமிட்ட கலவரங்களும் நடந்துள்ளன. அப்படி இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களை குறி வைக்காமல், கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியுள்ளனர். இலங்கையின் வரலாற்றில், இதுவரை காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. இரண்டு சமூகங்களும் இலங்கையில் சிறுபான்மை மதங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது பெருமளவு சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, நீர்கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து 30 க்கும் மேற்பட்ட  வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளை பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

- இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப் ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

- இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்க‌ன‌வே க‌ண்டுள்ளோம்.

- குண்டுவெடிப்புக‌ளுக்கு பின்ன‌ர் இல‌ங்கை மீதான‌ இஸ்ரேலின் க‌ரிச‌னை அதிக‌ரிக்க‌ கார‌ண‌ம் என்ன‌? இல‌ங்கை அர‌சுக்கு வேண்டிய‌ உத‌விக‌ள் செய்ய‌த் த‌யாராக‌ இருப்ப‌தாக‌ பிர‌த‌ம‌ர் நெத்த‌ன்யாகு அறிவித்துள்ளார். டெல் அவிவ் நகர சபைக் க‌ட்டிட‌ம் சிறில‌ங்கா தேசிய‌க் கொடியால் அல‌ங்க‌ரிக்க‌ப் பட்டது. இத‌ன் மூல‌ம் இஸ்ரேல் ஒரே நாளில் சிங்க‌ள‌ தேசிய‌வாதிக‌ளின் ம‌ன‌ங்க‌ளை வென்றுள்ள‌து.

- இலங்கை அரசுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க FBI ம‌ற்றும் இராணுவ‌ ஆய்வாள‌ர்க‌ள் இல‌ங்கையில் வ‌ந்திற‌ங்கி உள்ள‌ன‌ர். இந்த நேரத்தில் தாம் இலங்கையின் பக்கம் நிற்க வேண்டும் என்று டிரம்ப் அரசு அறிவித்திருந்தது. அதே நேரம், இவ்வளவு காலமும் பேசப்பட்டு வந்த சிறிலங்கா இராணுவம் மீதான போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளன.

- வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை எடுக்க வேண்டாம் என்று, முன்பு அதே இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட புலிகள் இயக்கத் தளபதி ஒருவரின் மனைவியான ஆனந்தி சசிதரன் கூறியுள்ளார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப் பட்ட வட மாகாண சபை அமைச்சர். தமிழ்த் தேசியவாதிகளை, அதிலும் தமிழீழத்திற்காக போராடியவர்களையே இவ்வாறு பேச வைத்துள்ளமை ஒரு சிங்களப் பேரினவாத அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளுக்கு, ISIS இயக்கத் தகவல்களை தெரிவிக்கும் இணையத்தளத்தில் உரிமை கோரப் பட்டுள்ளது. இவ‌ர்க‌ள் தான் த‌ற்கொலைத் தாக்குத‌ல்தாரிக‌ள் என்று மூன்று பேரின் ப‌ட‌ங்க‌ளும், அவ‌ர்க‌ள‌து இயக்கப் பெய‌ர்க‌ளும் வெளியிட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. குண்டுவெடிப்புகள் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த உரிமை கோரல் வந்துள்ளது. இது வழமையான ஐ.எஸ். பாணி அல்ல. பொதுவாக சம்பவம் நடந்த அன்றே உரிமை கோரப்படும்.

நிற்க‌, சிரியாவில் ந‌ட‌ந்த‌ இறுதிப் போரில் த‌ன் வ‌ச‌ம் இருந்த‌ சிறு துண்டு நில‌ப் ப‌குதியையும் இழ‌ந்து விட்ட‌ ஐ.எஸ். இய‌க்க‌ம் இன்னும் தோற்க‌டிக்க‌ப் ப‌ட‌வில்லை என்று ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ஆய்வாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

அண்மையில் நெத‌ர்லாந்து தொலைக்காட்சியில் பேட்டிய‌ளித்த‌ ஒரு ட‌ச்சு ஆய்வாள‌ர், "விரைவில் இந்தியா போன்ற‌ இன்னொரு ஆசிய‌ நாட்டில் ஐ.எஸ். புதிய‌ போர் முனையை ஆர‌ம்பிக்க‌லாம்" என்று கூறியிருந்தார்.

சிரியா விட‌ய‌த்தில் கூட‌ ஐ.எஸ். இடையில் வ‌ந்து குட்டையை குழ‌ப்பிய‌து. அப்போது அந்த‌ இய‌க்க‌த்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ச‌வூதி அரேபியா, க‌ட்டார், ஆகிய‌ நாடுக‌ள் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாக‌வோ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கி இருந்த‌ன‌.

அதே நிலைமை இல‌ங்கையில் அல்ல‌து இந்தியாவில் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு என்ன‌ நிச்ச‌ய‌ம்? பெரும்பான்மை ம‌க்க‌ள் உண‌ர்ச்சிவ‌ச‌ப் ப‌டும் முட்டாள்க‌ள். அவ‌ர்க‌ளை ம‌த‌வெறிய‌ர்க‌ளாக‌ மூளைச்ச‌ல‌வை செய்வ‌து இல‌கு. அதே நேர‌ம் எதிர்த் த‌ர‌ப்பில் உள்ள‌வ‌ர்க‌ளை அதே ம‌த‌த்தின் எதிரிக‌ளாக‌ மாற்றுவ‌தும் இல‌கு.

இல‌ங்கையில் 290 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் நாட்டு ம‌க்க‌ளை இர‌ண்டாக‌ பிள‌வுப‌டுத்துமானால், அத‌னால் ஆதாய‌ம‌டைவோர் ப‌ல‌ருண்டு. இல‌ங்கையில் இர‌த்த‌ம் குடிப்ப‌த‌ற்கு ஐ.எஸ். ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்னால் அமெரிக்கா, ச‌வூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளும் காத்திருக்கின்ற‌ன‌.

இந்தப் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அது தான் ச‌வூதி அரேபியா.

இல‌ங்கையில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் ச‌வூதி அரேபியா. பார‌ம்ப‌ரிய‌மாக‌ மித‌வாத‌த் த‌ன்மை கொண்ட‌ ஸூபி முஸ்லிம்க‌ளை, க‌டும்போக்கு வ‌ஹாபிய‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து ச‌வூதிப் ப‌ண‌ம் தான்.

கிழ‌க்கில‌ங்கையில் மாத்திர‌ம் ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ள், குரான் பாட‌சாலைக‌ள் ச‌வூதி நிதியில் க‌ட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கெல்லாம் ச‌வூதி பாணியிலான‌ வ‌ஹாபிச‌ இஸ்லாம் போதிக்க‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

இல‌ங்கைக்கு ச‌வூதி க‌லாச்சார‌ம் இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் மித‌வாத‌ முஸ்லிம்க‌ள் அதை எதிர்க்காத‌ கார‌ண‌ம் என்ன‌? ஒரு கால‌த்தில் அபாயா அணிவ‌தை விசித்திர‌மாக‌க் க‌ருதிய‌, சேலை அணியும் இல‌ங்கை முஸ்லிம் பெண்க‌ள், எந்த‌ த‌ய‌க்க‌மும் இல்லாம‌ல் அபாயாவை ஏற்றுக் கொள்ளும் நிலைமை எப்ப‌டி உருவான‌து?

இந்த‌க் கேள்விக‌ளுக்கான ஒரே விடை ச‌வூதி அள்ளிக் கொடுத்த‌ ரியால்க‌ள் ப‌ல‌ர‌து வாய்க‌ளை அடைக்க‌ வைத்துள்ள‌ன‌. ச‌வூதியின் த‌லையீட்டை ச‌மூக‌ அபிவிருத்திக்கான‌ ப‌ங்க‌ளிப்பாக‌ க‌ருதிய‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. குறிப்பிட்ட‌ சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ச‌வூதி நிதியில் தான் த‌ம‌து தொகுதிக‌ளை அபிவிருத்தி செய்த‌ன‌ர் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விட‌ய‌ம்.

சோழிய‌ன் குடுமி சும்மா ஆடாது என்ப‌து போல‌ ச‌வூதி நிதியுத‌வியும் தான‌மாக‌ கிடைக்க‌வில்லை. அத‌ற்குப் பின்னால் ஒரு ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ வ‌ல்ல‌ர‌சின் மேலாதிக்க‌க் க‌ன‌வு இருந்த‌து. அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் ஆசீர்வாத‌ம் இருந்த‌து.

இதைப் ப‌ற்றி எல்லாம் பேசாம‌ல் ந‌க‌ர்ந்து செல்லும் போக்கான‌து, எந்த‌க் கால‌த்திலும் பிர‌ச்சினையை தீர்க்க‌ உத‌வ‌ப் போவ‌தில்லை. மித‌வாத‌ முஸ்லிம்க‌ளுக்கும், இட‌துசாரிக‌ளுக்கும் சேர்த்து வ‌குப்பெடுக்கும் சில‌ முஸ்லிம் முற்போக்காள‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விட‌ய‌த்தை ப‌ற்றிப் பேசாம‌ல் க‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.

Monday, February 04, 2019

பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்

பிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌த்தில், குறிப்பிட்ட‌ள‌வு கால‌னிய‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆனால், கால‌னிய‌ ப‌டையில் இருந்த‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளின் க‌ல‌க‌ம் ஒன்று இட‌ம்பெற்ற‌து. அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இன்று வ‌ரையும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டு வருகின்ற‌து.

கால‌னிய‌ கால‌ இல‌ங்கையில் சிங்க‌ள‌-த‌மிழ் பூர்ஷுவா வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ "த‌லைவ‌ர்க‌ள்" பிரிட்டிஷ் எஜ‌மானுக்கு விசுவாச‌மான‌ அடிமைக‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அப்போதே ட்ராஸ்கிச‌ பாதையில் சென்ற‌ LSSP என்ற‌ சோஷ‌லிச‌க் க‌ட்சி, ம‌ற்றும் க‌ம்யூனிஸ்டுக‌ள், இடதுசாரிக‌ள் ம‌ட்டுமே இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் வேண்டுமென்ற‌ கோரிக்கையை முன்வைத்த‌னர்.

சிறில‌ங்கா இராணுவ‌த்தின் முன்னோடியான‌ Ceylon Defence Force (CDF) என்ற‌ ப‌டையில் பிரிட்டிஷ் அதிகாரிக‌ளின் கீழ் இல‌ங்கை வீர‌ர்க‌ளும் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதில் ப‌ல‌ சோஷ‌லிஸ்டுக‌ள்‌ இருந்த‌ன‌ர். பெரும்பாலும் LSSP ஆத‌ர‌வாள‌ர்க‌ள். உல‌க‌ப்போரை ப‌ய‌ன்ப‌டுத்தி விடுத‌லைப் போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌க்க‌ த‌ருண‌ம் பார்த்துக் காத்திருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போரில், ம‌லேசியாவை ஜ‌ப்பானிய‌ரிட‌ம் இழ‌ந்த‌ பிரிட்டிஷார், என்ன‌ விலை கொடுத்தேனும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌ங்கைத் தீவை பாதுகாக்க‌ முடிவெடுத்த‌ன‌ர். பிர‌தான‌மாக‌ ர‌ப்ப‌ர் உற்ப‌த்தியால் கிடைத்த‌ வ‌ருமான‌த்தை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை. அத‌னால் சுமார் 75 CDF வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளில் இற‌க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்த‌மான‌ கொகோஸ் தீவுக‌ள், இந்து ச‌முத்திர‌த்தில், ம‌லேசியாவுக்கும் இல‌ங்கைக்கும் ந‌டுவில் அமைந்துள்ள‌ன‌. தீவுவாசிக‌ள் ம‌லே மொழி பேசும் இஸ்லாமிய‌ர் ஆவ‌ர். ஏற்க‌ன‌வே ம‌லேசியா, சிங்க‌ப்பூரை கைப்ப‌ற்றிய‌ ஜ‌ப்பானிய‌ ப‌டைக‌ள், கொகோஸ் தீவுக‌ளையும் பிடித்திருந்தால், இல‌குவாக‌ இல‌ங்கை மீது ப‌டையெடுத்திருப்பார்க‌ள். அதைத் த‌டுப்ப‌தே பிரிட்டிஷாரின் திட்ட‌ம்.

எதிர்பாராத‌ வித‌மாக‌, கொகோஸ் தீவுக‌ளில் நிலைகொண்டிருந்த‌ இல‌ங்கை இராணுவ‌ வீர‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்து தீவின் க‌ட்டுப்பாட்டை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌ன‌ர். 8 மே 1942, அன்று இர‌வு க‌ல‌க‌ம் செய்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், தொலைத் தொட‌ர்பு நிலைய‌த்தை கைப்ப‌ற்றி, பிரிட்டிஷ் அதிகாரிக‌ளை கைது செய்ய‌ முய‌ன்ற‌ன‌ர். ஆனால், இறுதி நேர‌த்தில் ஆயுத‌ங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ம‌றுத்த‌ன‌. அத‌னால் க‌ல‌க‌ம் முறிய‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு, இல‌ங்கைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு, கொழும்பு வெலிக்க‌டை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளை கைப்ப‌ற்றி, பின்ன‌ர் அதை ஜ‌ப்பானிய‌ ப‌டையின‌ரிட‌ம் ஒப்ப‌டைக்க‌ திட்ட‌ம் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌து. சில‌நேர‌ம் அப்ப‌டி ஒரு நோக்க‌ம் இருந்தாலும் அத‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை.

க‌ல‌க‌த்திற்கு த‌லைமை தாங்கிய‌ பெர்னான்டோ என்ப‌வ‌ரும், வேறு இர‌ண்டு பேரும் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெர்னான்டோ விசார‌ணையின் போது த‌ன் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ தேச‌த்துரோக‌ குற்ற‌ச்சாட்டை ம‌றுத்து தான் ஒரு நாட்டுப்ப‌ற்றாள‌ன் என்று வாதாடினார். அவ‌ர் தூக்கில் தொங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் க‌டைசியாக‌ சொன்ன‌ வாச‌க‌ம்: "வெள்ளைய‌ருக்கு விசுவாசமாக‌ இருப்ப‌தென்ப‌து போலித்த‌ன‌மான‌து"

இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இல‌ங்கையின் ச‌ரித்திர‌ பாட‌நூல்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து ஆச்ச‌ரிய‌த்திற்குரிய‌து. சிறில‌ங்கா அர‌சோ, ஊடக‌ங்க‌ளோ நினைவுகூர்வ‌தில்லை. (விதிவில‌க்காக‌, LSSP க‌ட்சியின‌ர் இன்றைக்கும் நினைவுகூர‌ ம‌ற‌ப்ப‌திலை.) அத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌?

இராணுவ‌க் க‌ல‌க‌த்தின் பின்ன‌ர் விழிப்ப‌டைந்த‌ பிரிட்டிஷார், இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கி கால‌னிய‌ விசுவாசிக‌ளாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். குறிப்பாக‌, இந்திய‌ர்க‌ளை விட‌ இல‌ங்கைய‌ர்க‌ள் கால‌னிய‌ ஆட்சியாள‌ர்க‌ளினால் ந‌ன்றாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌, இன்றும் ப‌ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் பிரித்தானியாவுக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தை க‌ண்கூடாக‌க் காண‌லாம்.

அத்துட‌ன், சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், பிரிட்டிஷாருக்கு விசுவாச‌மான‌ உள்நாட்டு பூர்ஷுவா வ‌ர்க்க‌ம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள‌து. சோஷ‌லிஸ்டுக‌ள் தான் இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்திற்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள் என்ற‌ உண்மையை மக்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் மூடி ம‌றைத்து வ‌ந்த‌ன‌ர்.

Saturday, October 27, 2018

இலங்கையில் திடீர் சதிப்புரட்சி! மைத்திரி- மகிந்த அரசின் "பொல்லாட்சி" ஆரம்பம்!!


26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், நாட்டிலும் பெரும் குழப்பங்களை உண்டாக்கி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில், தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளின் அரசுகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தற்போது இலங்கையில் இரண்டு பிரதமர்கள் உள்ளனர். விரைவில் பன்முக அழுத்தம் காரணமாக ரணில் பதவியை விட்டு விலகிச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2) கீழ், ஜனாதிபதி திடீரென பிரதமரை பதவி விலக்குவதற்கான காரணம் எதுவுமில்லை. பிரதமர் தானாக பதவியை துறந்தால், அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போனால் மட்டுமே, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் செயலானது அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதானது, இலங்கையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதை சுட்டிக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை வைத்து, ரணிலுக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்காது என்று தமிழர் தரப்பில் சொல்லப் படுகின்றது.

இந்த விடயம், மைத்திரி, மகிந்தவுக்கும் தெரியாமல் இருக்காது. ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்பார்க்காமல், மகிந்த பிரதமராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்கப் படவில்லை. ஒரு வேளை, பாராளுமன்ற பெரும்பான்மை மகிந்தவுக்கு கிடைக்காவிட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும். அதற்குப் பிறகு நாட்டில் ஏற்படப் போகும் குழப்பங்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கும் போகலாம். அதனால், நவம்பர் பதினாறு வரையில் பாராளுமன்றம் கூடுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை இரவு வெளியானதையும் அவதானிக்க வேண்டும். எவராவது அரசியமைப்பு சட்டத்தை காரணம் காட்டி, நீதிமன்றத்தை நாடுவதென்றாலும், திங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி, மைத்திரியும், மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி விடுவார்கள். ரணிலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏற்கனவே இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். 

காவல்துறையில் பணியாற்றுவோரின் லீவுகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. இராணுவம், காவல்துறையில் மகிந்த ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். ஏற்கனவே, அரச ஊடகம் உட்பட, பெரும்பாலான சிங்கள/ஆங்கில வெகுஜன ஊடகங்கள் அவர்களது கைகளுக்குள் விழுந்து விட்டன.

இதற்குள் சிலர் இந்தியா, சீனாவை இழுத்து முடிச்சுப் போடுவது வேடிக்கையானது. இலங்கையில் வர்த்தகம் தவிர்ந்த, அரசியல் நிலவரம் தொடர்பாக, சீனா, இந்தியாவுக்கு இடையில் எந்த பகை முரண்பாடும் இல்லை. 

சில தினங்களுக்கு முன்னர், RAW தன்னைக் கொல்ல சதிசெய்வதாக ஜனாதிபதி அறிவித்து இருந்தார். அந்தக் காரணத்தை காட்டி ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப் பட்டார். இருப்பினும் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விடயத்தை யாரும் பெரிது படுத்தவில்லை.

அனேகமாக, தற்போது நடக்கும் சதிப்புரட்சி திட்டங்களை மறைப்பதற்காக, "இந்தியா - சீனா முரண்பாடு" எனும் கதையை மைத்திரியே உருவாக்கி பரப்பி விட்டிருக்கலாம். மகிந்த ராஜபக்சே பிரதமராக வருவதால், அல்லது மீண்டும் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மைத்திரி - மகிந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகர் சுப்பிரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளார். ஆகவே, இதற்கு மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்ப இடமுண்டு. 

இதற்கிடையே, வட இலங்கையில், இந்துத்துவா சார்பான, தமிழ்த்தேசிய பழமைவாதியான விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்ததற்கு பின்னணியிலும் இந்தியாவின் கை இருக்கலாம். இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையில் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து மத அடிப்படைவாத சக்திகளின் ஊடுருவலும் நடந்துள்ளது. இதுவரை காலமும் போலியாக  தமிழ்த்தேசியம் பேசியவர்களை, அசல் இந்து மத அடிப்படைவாதிகளாக மாற்றி உள்ளமை இந்தியாவின் வெற்றி எனலாம். 

இந்தியாவில் அரச இயந்திரம் பாசிச மயப்பட்டு வருவதைப் போன்ற அதே பாணியில் இலங்கை அரசியலும் பாசிசமயமாக்கப் படுகின்றது. மகிந்தவின் பிரதமர் பதவியேற்பு குறித்து, அவரது சகோதரர் கோத்தபாய வரவேற்றுப் பேசிய நேரம், பக்கத்தில் 'ராவண பலய' தலைவரும் இருந்தார். சிங்கள-பௌத்த பாசிச இயக்கமான 'ராவண பலய', கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சே பிரதமரான விடயம், "அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு உவப்பானதல்ல" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் ஆசீர்வாதம் இருந்தது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்திருக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்தியதால், 2015 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, மைத்திரி - ரணில் தலைமையிலான "நல்லாட்சி" அரசாங்கம் வந்தது. ஆனால், காலப்போக்கில் "நல்லாட்சி" அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சி அரசு, தம்மால் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும், பழைய பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப் படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் அதிகரித்தது. இதற்கிடையே, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் காரணமாக, முஸ்லிம் மக்களின் ஆதரவும் வெகுவாக குறைந்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு இருப்பதால், சிங்கள மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. சிங்கள மக்கள் மத்தியிலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு குறைந்து வருகின்றது. 

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய கட்சிக்கு பெருமளவு வாக்குகள் விழுந்ததில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். மகிந்த ராஜபகச்வுக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் இனவாத ஓட்டுகள் அல்ல. பல வாக்காளர்கள் ஆளும் கட்சி மீதான அதிருப்தி காரணமாகவும் மகிந்தவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

எரிபொருள், உணவுப்பொருட்களின் விலையேற்றம், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இன வேறுபாடின்றி பாதித்து வருகின்றது. இலங்கையில் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய தரத்திலும், தனிநபர் வருமானம் ஆப்பிரிக்கத் தரத்திலும் உள்ளன. இதனால் மைத்திரியின் "நல்லாட்சி" அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழமையானது. இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி, ரணில் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் இறங்கலாம் என்று சர்வதேச சமூகம் (அதாவது: மேற்குலம்) எதிர்பார்க்கின்றது. மகிந்த ஆதரவாளர்கள், ரணில் ஆதரவாளர்கள் என்ற பிரிவினை, இலங்கையின் தற்கால அரசியலில் பிரதானமான முரண்பாடாக காட்டப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் ஏற்படும் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறலாம். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு மகிந்த ராஜபக்சே சரியானவர் என்பதை கணித்து வைத்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் இதை சதிப்புரட்சி என்று அழைக்க வேண்டியுள்ளது.

இது போன்ற நிலைமைகளில், அதாவது சதிப்புரட்சிகளில் எப்போதும் இராணுவம் சம்பந்தப் பட வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் அரச மாளிகைக்குள் சதிப்புரட்சி நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்னர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில், அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டில் இப்படியான சதிப்புரட்சி நடந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம்.

அப்படியான நாடுகளை "வாழைப்பழக் குடியரசு" என்று அழைப்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் நேரத்தில், திடீரென ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரு பாசிச நிர்வாகக் கட்டமைப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கும். மனித உரிமை பற்றிப் பேசினால் சிறையில் அடைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாவிட்டால், பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுக்களின் வாடிக்கை. இலங்கை அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

Wednesday, August 01, 2018

பாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்



நாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகான கடற்கரைப் பிரதேசமான பாசிக்குடா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அங்கு நான் நேரில் சென்று திரட்டிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட, புலிகளின் வாகரை கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகில் உள்ளது "பாசிக் குடா". குறிப்பாக, வாழைச்சேனை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இன்று இலங்கையின் பிரபலமான சுற்றுலா மையம். சர்வதேச தரத்திற்கு நிகரான ஐந்து நட்சத்திரக் ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்கிருந்து கடல் விமானம் பிடித்து நேரடியாக பாசிக்குடா கடற்கரையில் வந்திறங்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.

தூய்மையான நீல நிறக் கடற்கரை கொண்ட பாசிக் குடா ரிசோர்ட்டில் விடுமுறையை கழிக்க வருமாறு, மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூவிக் கூவி அழைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களும், பாசிக்குடாவை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றன. அதை விட, இலங்கையில் உள்ள பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் அங்கு சென்று விடுமுறையை கழிக்கின்றனர்.

அந்தப் பகுதியில், ஒரு காலத்தில் கடுமையான போர் நடைபெற்றது என்பது, பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது. தமது விடுமுறையை ஆனந்தமாக கழிக்கும் உல்லாசப் பயணிகளுக்கு, அது பிணம் தின்ற பூமி என்பது தெரியாது. அப்படியே தெரிந்தாலும், "நல்ல வேளை, போர் முடிந்தது" என்று நிம்மதியாக விடுமுறையை கழிப்பார்கள்.

அது மட்டுமல்ல, இன்று ஆடம்பர நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்ட இடம், தமிழ்/முஸ்லிம் மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறித்தெடுக்கப் பட்டது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. மெக்சிகோ, எகிப்து என்று பெருமளவு சுற்றுலாப்பயணிகள் செல்லும் நாடுகளில் எல்லாம் நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்ல, இன்று பல தமிழர்களுக்கே இந்த விபரங்கள் தெரியாது. தமிழ் தேசியவாதிகள் கூட, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நில அபகரிப்பில் கவனம் செலுத்துமளவிற்கு, கிழக்கு மாகாண நில அபகரிப்புகள் பற்றி அக்கறை இன்றி இருக்கின்றனர். ஏனென்றால், அது தான் வர்க்க உணர்வு. பாசிக்குடாவில் தமது பாரம்பரிய காணிகளை பறிகொடுத்தவர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்கள். அவர்களின் உரிமைகளுக்காக வாதாடுவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் யாரும் இல்லை. 

பாசிக்குடாவை சுற்றுலா ஸ்தலமாக்கும் திட்டம், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப் பட்டது. சிலநேரம், இயற்கைப் பேரழிவுகளும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. 2004 ம் ஆண்டு, இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி சுனாமி பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதில் பாசிக்குடாவும் ஒன்று. சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மீண்டும் வந்து குடிசைகள் கட்டி வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கம் வேறு திட்டம் வைத்திருந்தது.

பாசிக்குடாவில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழை மீனவக் குடும்பங்கள். காலங் காலமாக மீன்பிடியை தவிர வேறெந்த தொழிலும் தெரிந்திராதவர்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திய அரசாங்கம், அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்பகுதியில் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. தேர்ச்சி பெற்ற தொழிலான மீன்பிடியை விட்டு, அனுபவம் இல்லாத தொழிலான விவசாயம் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அதனை கவனத்தில் எடுக்காமல் மக்களை வெளியேற்றி விட்டது. 

சில குடும்பங்கள், காணி உறுதிப் பத்திரம் வைத்திருந்தன. அவர்களிடம் இருந்து நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். உண்மையில், அங்கு ஆடம்பர ஹோட்டேல்கள் வரப் போகின்றன என்ற விடயம் அந்த மக்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விலையை கூட்டிக் கேட்டிருக்கலாம். தமது காணியை சில இலட்சம் ரூபாய்களுக்கு விற்ற ஒரு தம்பதியினர், கையில் இருந்த காசு முடிந்ததும் ஹோட்டேல் பணியாளர்களாக வேலை செய்யும் அவலமும் நடந்துள்ளது.

ஆடம்பர ஹோட்டேல்கள் கட்டி முடிந்து, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கிய பின்னர், உள்ளூர் மக்கள் பாசிக்குடா செல்வதற்கு பல விதமான தடைகள் விதிக்கப் பட்டன. ஒவ்வொரு ஹோட்டேலும் தனக்கென தனியான கடற்கரை வைத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் நீராடுவதற்காக தனிதனி கடற்கரைகள் ஒதுக்கப் பட்டன.  உள்ளூர் மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீராடும் கடற்கரைக்கு செல்ல முடியாது. 

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடற்கரை

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய அப்பார்ட்ஹைட் இன இனப்பாகுபாடு காலத்தில் இருந்தது போன்று, பாசிக்குடா கடற்கரை கயிறு கட்டி பிரிக்கப் பட்டது. இது ஒரு வர்க்க அடிப்படையிலான பிரிவினை. ஏனெனில், வெளிநாட்டவர் மட்டுமல்லாது, பணக்கார இலங்கையர்களும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள்.

பிற்காலத்தில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த படியால், அந்தக் கயிறு பிரிக்கும் எல்லைக் கோடுகள் அகற்றப் பட்டன. நான் அங்கு சென்றிருந்த நேரம் (ஜூலை 2018), கயிறு எதையும் காணவில்லை. ஹோட்டல்களுக்கு "சொந்தமான" கடற்கரையிலும், காலாற நடந்து சென்று வர முடிந்தது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாசிக்குடா சுற்றுலாத்துறை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. 

பாசிக்குடா ரிசோட்டின் சிறப்பம்சம், மாலைத்தீவில் உள்ளது போல பாரம்பரிய பாணியில் கட்டப் பட்ட நட்சத்திர ஹோட்டல்கள். அதாவது, இயற்கையோடு இணைந்த ஓலைக் குடிசைகள் மாதிரி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அறைகள். குறிப்பாக ஐரோப்பிய உல்லாசப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டப் பட்டுள்ளன. இவற்றைக் கட்டுவதற்கு இலங்கையில் உள்ள ஒப்பந்தக் காரர்கள் அதிக காலம் எடுத்ததாகவும், அதனால் சீன நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகின்றது.


தரகு முதலாளித்துவம் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு பாசிக்குடாவை உதாரணம் காட்டலாம். இலங்கையில் எவ்வாறு அரசாங்கமும், முதலாளித்துவமும் கையோடு கைகோர்த்து நடக்கின்றன என்பதை அங்கு சென்றால் நேரில் காணலாம். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும், சொந்தமாக ஆளுக்கொரு ஹோட்டேல்  வைத்திருக்கிறார்கள். விடுமுறைக்கு பாசிக்குடா கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரும் ஹோட்டேல் முதலாளிகள் தான். அதைவிட சில அமைச்சர்களும் அங்கு முதலிட்டுள்ளனர். சுருங்கக் கூறின், அரசியல் தலைவர்கள் சேர்த்த ஊழல் பணத்தை சுற்றுலாத்துறையில் முதலிட்டு பெரும் முதலாளிகளாகி விட்டார்கள். பாசிக்குடா சுற்றுலா வணிகம் சூடு பிடிக்கும் காலத்தில், ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வார்கள், அல்லது நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் தீட்டுவதில், மகிந்த அரசுக்கும்,மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மகிந்த ஆட்சிக்காலத்தில், தெற்குக் கடற்கரையோரம், அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தள விமான நிலையம் கட்டப் பட்டது. சீன நிதியில் கட்டப்பட்டு, "உலகில் வெறுமையான விமான நிலையம்" என்று எள்ளி நகையாடப் பட்டது. தற்போது மைத்திரி அரசு அதை இந்தியாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், மத்தள விமான நிலையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தங்கும் கடற்கரை ரிசோட்கள், காலியில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசத்தில் உள்ளன. அதே மாதிரி, மட்டக்களப்பு, அம்பாறை கடற்கரைப் பிரதேசத்தையும் சுற்றுலாத்துறையின் கீழ் கொண்டு வரலாம். தற்போதைய நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு திசைகளிலும் பயணம் செய்து தங்குமிடங்களை அடையலாம்.

Tuesday, May 30, 2017

இயற்கை அழிவில் இன்பம் காணும் இனவாதத்தை விட்டொழிப்போம்


சிங்க‌ள‌ பேரின‌வாத‌ அர‌சின் நிக‌ழ்ச்சிநிர‌லில் இய‌ங்கும் ஈழ‌த்து த‌மிழின‌வாதிக‌ள், மீண்டும் ம‌க்க‌ளை பிரித்து வைக்கும் சூழ்ச்சியில் இற‌ங்கி உள்ள‌ன‌ர்.

அண்மையில் தென்னில‌ங்கையில் வெள்ள‌த்தால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளை, முள்ளிவாய்க்கால் போரினால் ஏற்ப‌ட்ட‌ அழிவுக‌ளுட‌ன் ஒப்பிட்டு, "எங்க‌ள் ம‌க்க‌ள் கொல்ல‌ப் ப‌டும் போது பார்த்துக் கொண்டிருந்த‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு இதுவும் வேண்டும், இன்ன‌மும் வேண்டும்..." என்று இன‌வாத‌ப் பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இல‌ங்கையின் இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றி அரைகுறையாக‌ அறிந்து கொண்ட‌, அல்ல‌து ஒரு ப‌க்க‌ச் சார்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம்பும் புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ம‌ட்டும‌ல்ல‌, ஈழ‌ப் போரின் ப‌ல்வேறு ப‌ரிமாணங்க‌ளும் தெரியாது.

இறுதிப் போர் தொட‌ங்குவ‌த‌ற்கு முன்ன‌ரே, தென்னில‌ங்கையில் அர‌ச‌ அட‌க்குமுறை தொட‌ங்கி விட்ட‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வான‌ சிங்க‌ள‌ அர‌சியல் ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டு சிறைக‌ளில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். "இன‌த் துரோகிக‌ள், புலிக‌ளின் ஒட்டுக் குழுக்க‌ள்" என்றெல்லாம் பிர‌ச்சார‌ம் செய்து ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்நிய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அதைத் த‌விர‌ ஊட‌க‌ங்க‌ள் க‌டுமையான‌ த‌ணிக்கைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ன‌. பாதுகாப்பு கார‌ண‌ங்க‌ளை குறிப்பிட்டு க‌ருத்து சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து. இத‌னால் ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌தே தெரியாத‌ நிலை இருந்த‌து. அமெரிக்க‌ ம‌க்க‌ளைப் போன்று, சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் இது ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்திற்கு எதிரான‌ போர் என்று ந‌ம்ப‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ளில் இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ப் ப‌ட்ட‌து.

ஒரு நாட்டில் ம‌க்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைத்தால், ஆள்வ‌து இல‌குவாகி விடும். ஒவ்வொரு இன‌மும் த‌ங்க‌ள‌து பாதிப்புக‌ளுக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து சிந்திக்கும். த‌ங்க‌ள‌து த‌ர‌ப்பு இழ‌ப்புக‌ளை ப‌ற்றி ம‌ட்டுமே திரும்ப‌த் திரும்ப‌ பேசி ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெறுப்பை விதைப்பார்க‌ள். சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள், த‌மிழ் இன‌வாதிக‌ள், முஸ்லிம் இன‌வாதிக‌ள் எல்லோரும் இதில் கைதேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள‌து அர‌சிய‌ல், கொள்கை, ந‌டைமுறை எல்லாம் ஒன்று தான்.

க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் இஸ்ரேலில் காட்டுத்தீ ப‌ர‌வி பெரும் நாச‌ம் விளைவித்த‌து. அப்போது ப‌ல‌ முஸ்லிம் அடிப்ப‌டைவாதிக‌ள் "இது அல்லாவின் த‌ண்ட‌னை" என்றார்க‌ள். அதே மாதிரி, த‌மிழ் அடிப்ப‌டைவாதிக‌ளும் பேசுகின்ற‌ன‌ர். தென்னில‌ங்கை வெள்ள‌ அழிவுக‌ள் "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்கிறார்க‌ள்.

சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளும் வெள்ள‌ அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனாலும் த‌மிழின‌வாதிக‌ளுக்கு அதைப் ப‌ற்றி எந்த‌க் க‌வ‌லையும் இல்லை. தென்னில‌ங்கையில் வாழும் த‌மிழ‌ர்க‌ளையும் த‌ம‌து ச‌கோத‌ர‌ இன‌மாக‌ க‌ருதாத‌ குருட்டுத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல் பார்வை கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர்.

வ‌ட‌க்கில் த‌மிழ‌ரும், தெற்கில் சிங்க‌ள‌வ‌ரும் இரு வேறு உல‌க‌ங்க‌ளில் வாழ்கின்ற‌ன‌ர். இந்த‌ வேறுபாட்டை அர‌சு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கிற‌து. 1971 ம் ஆண்டு தெற்கில் சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் வ‌ட‌க்கில் இருந்த‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள்? எந்த‌ எதிர்ப்பும் காட்டாம‌ல் மௌன‌மாக‌ இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு பிற‌ இனங்க‌ளை ப‌ற்றி எந்த‌ அக்கறையும் இருக்க‌வில்லை.

அதே மாதிரித் தானே சிங்க‌ள‌த் தேசிய‌வாதிக‌ளும் ந‌ட‌ந்து கொள்வார்க‌ள்? இவ‌ர்க‌ள் பேசும் மொழிக‌ள் வேறாக‌ இருந்தாலும் தேசிய‌வாத‌ம் என்ற‌ சுய‌ந‌ல‌வாத‌க் கொள்கை ஒன்று தானே? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய‌ ம‌ட்டைக‌ள் தானே? ச‌ட்டியை பார்த்து அடுப்பு க‌றுப்பு என்று சொல்லிய‌தாம்.

வெள்ள‌ அன‌ர்த்த‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான். ஈழ‌ப்போரை நட‌த்தி ப‌ல்லாயிர‌க் க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ப‌டுகொலைக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் எந்த‌ப் பாதிப்புக்கும் உட்ப‌ட‌வில்லை. இது உண்மையிலேயே "க‌ட‌வுளின் த‌ண்ட‌னை" என்றால், உண்மையில் அவ‌ர்க‌ள் அல்ல‌வா பாதிக்க‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும்?

இன‌வாத‌ம் பேசுவ‌து ஒரு சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ அர‌சிய‌ல். எந்த‌ அறிவும் அத‌ற்குத் தேவையில்லை. சாதாரண‌ மக்க‌ளை இன‌ அடிப்ப‌டையில் பிரித்து வைப்ப‌தன் மூல‌ம் விடுத‌லை பெற‌ முடியாது. அத‌ற்குப் பெய‌ர் சுய‌நிர்ண‌ய‌மும் அல்ல‌. எந்த‌ அர‌சிய‌ல் கோட்பாடும‌ற்ற‌ இன‌வாத‌க் கோஷ‌ங்க‌ள் இறுதியில் ஆள்வோருக்கே ந‌ன்மை உண்டாக்கும்.

இனக்குழுவாத சுயநல அரசியலுக்கு தமிழ்த் தேசியம் என்று பெயர் வைக்காதீர்கள். அது உங்களது அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. நீங்கள் தேசிய அரசியலில் ஹீரோவாக இருக்கலாம். ஆனால், சர்வதேச அரசியலில் ஸீரோ தான்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 150 பேர் மரணமடைந்தும், இலட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் உள்ளனர். இது இலங்கையில் சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தம்.

தென்னிலங்கை என்றாலே அங்கே சிங்களவர்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்று தான் வடக்கு-கிழக்கு தமிழ்த் தேசிய "அறிஞர்கள்" நினைத்துக் கொள்கிறார்கள். ஆகையினால், "முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பழிவாங்கலாக, தற்போது கடவுள் சிங்களவர்களை தண்டிக்கிறார்..." என்று சொல்லிக் கொண்டனர்.

ஒருவர் கவிதையாக எழுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட "சிங்கள" மக்களுக்கு, சிங்களத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கச் சொன்னார். இது போன்ற கருத்துப் பரிமாற்றங்கள் இனவாத அரசியலுக்கு தூபம் போட்டு, தமிழர்களை இருட்டறைக்குள் வைத்திருக்கவே உதவுகின்றன.

வெள்ள அழிவுகளை ஏற்படுத்திய "கடவுளின் தண்டனை" காரணமாக, சிங்கள மக்கள் விழிப்படைந்து தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்காக வருந்துவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்பதை சிலர் பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இந்தியா, சீனா, ஜப்பான், மற்றும் பல உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றன. உலக நாடுகளில் எல்லா ஊடகங்களிலும் இலங்கையில் நடந்த வெள்ள அனர்த்தம் முக்கிய செய்தியாக இடம்பெற்றது.

அதனால், "தமிழ்த் தேசியவாதிகளின்" கோபம் சர்வதேசம் மீது திரும்பியது. "முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த நேரம் இந்த சர்வதேசம் எங்கே இருந்தது? தமிழ் மக்கள் அழிந்த நேரம், ஏன் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை?" என்று கேட்கத் தொடங்கி விட்டனர்.

இவர்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் மண்டையில் ஏறாத சில விடயங்கள் உள்ளன. போரில் மனிதனால் உண்டாக்கப் படும் அழிவுகள், அவரவர் அரசியல் நலன் சார்ந்தே பார்க்கப் படும். உலக மக்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதை ஏகாதிபத்திய நலன் சார்ந்த சர்வதேச ஊடகங்கள் தீர்மானிக்கின்றன.

கொங்கோவில் நடந்த போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்ட நேரம் சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை. அப்போது அந்த மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இன்று, யேமன், தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் கொல்லப் படும் மக்கள் பற்றிய தகவல்கள், நமது "தமிழ்த் தேசிய அறிஞர்களுக்கு" கூடத் தெரியாது. ஏனென்றால், அதில் சர்வதேசம் கவனம் செலுத்தவில்லை.

அதே நேரம், வறட்சியால் பாதிக்கப் பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு, அங்கு பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப் படுகின்றன. அதற்கான நிதி சேகரிக்கும் விளம்பரங்கள் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி காண்பிக்கப் படுகின்றன. "போர் நடந்த காலத்தில் எமது இனம் அழிக்கப் பட்ட நேரம், ஏன் சர்வதேசம் பாராமுகமாக இருந்தது?" என்று அந்த ஆப்பிரிக்க நாடுகளின் மக்களும் கேட்கலாம்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த போர்கள், தற்போது இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அதாவது, முன்னர் ஐரோப்பியர்கள் பிரிந்து நின்று தமக்குள் யுத்தம் செய்தார்கள். தற்போது மூன்றாமுலக நாடுகளின் மக்களை இன, மத அடிப்படையில் பிரிந்து நின்று யுத்தம் செய்ய வைக்கிறார்கள்.

இலங்கை போன்ற நாடுகளில் நடைபெறும் யுத்தங்களுக்கும், முதலாளித்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. யுத்தம் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். கடன் கொடுக்கும் வங்கிகளின் வட்டியால் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். "ஆதலினால் யுத்தம் செய்வீர்!" என்பது முதலாளித்துவ அடிப்படை தத்துவம்.

அதே மாதிரி, இயற்கைப் பேரழிவுகளுக்கும், முதலாளித்துவத்திற்கும் தொடர்பு இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெரும் நிறுவனங்களின் இலாபவெறி காரணமாக பூமியின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு தீய விளைவுகளை உண்டாக்குகிறது. வெள்ள அனர்த்தம் அதில் ஒன்று.

இயற்கைப் பேரழிவுகளால், முதலாம் உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவு. ஆனால், மூன்றாமுலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெருந்தொகையில் மக்கள் கொல்லப் பாடவும், வீடுகளை இழக்கவும் காரணமாகி விடுகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர் நிகராகுவா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வந்த வெள்ளப் பெருக்கு, இலங்கையை விட அதிகமான அழிவுகளை உண்டாக்கி இருந்தது.

ஆகவே, போரினால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், இயற்கையால் ஏற்படும் அழிவாக இருந்தாலும், மேலைத்தேய முதலாளித்துவம் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டுள்ளது. போர் போன்ற செயற்கை அழிவுகள் மனிதனால் உண்டாக்கப் பட்டவை என்பதற்கு விளக்கம் தேவையில்லை. அது சிறு பிள்ளைக்கும் புரியும்.

ஆனால், இயற்கை அழிவுகளில் சர்வதேச முதலாளித்துவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக் கொள்வது இலகு. மெத்தப் படித்தவர்கள் கூட இயற்கை அழிவுக்கு காரணமான காலநிலை மாற்றம் என்ற காரணியை நம்ப மறுப்பார்கள். அதனால் தான் சர்வதேசம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.