Thursday, June 30, 2011

கொலம்பியா FARC கெரில்லாக்களின் பயிற்சி முகாம்

கொலம்பியாவின் FARC புரட்சி இயக்கத்தின் முகாம் ஒன்றில், போராளிகளின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் வீடியோ. போராளிகளுக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் நூலகம் ஆகியனவற்றை இந்த வீடியோவில் காணலாம்.



கொலம்பியா நாட்டின் FARC அமைப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு, எனது முன்னைய பதிவுகளை வாசிக்கவும்.
1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்
2.ஒரு பெண் போராளியின் கதை
3.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள் (வீடியோ)

Tuesday, June 28, 2011

"சாப்மி" : சாமிகளின் நாடு - ஓர் அறிமுகம்

வட ஐரோப்பாவின் பூர்வ குடிகளான சாமி இன மக்களின் தாயக பூமி, நான்கு நாடுகளின் எல்லைகளால் பிரிக்கப் பட்டுள்ளது. இன்று வரை, சாமி மக்களுக்கென்று தனியான நாடு கிடையாது. சாமி மக்கள் உரிமை கோரும் சாப்மி நாட்டை, ஐ.நா. அங்கீகரிக்கக் கோரி யாரும் போராடியதும் இல்லை. கடந்த 600 வருடங்களாக ஒடுக்கப்பட்ட இனம். ஒரு காலத்தில், அந்த மக்கள் தமது தனித்துவமான மொழியைப் பேசுவது கூட தடை செய்யப் பட்டிருந்தது. இன்றைய ஜனநாயக அரசுகள், கலாச்சார சுதந்திரம் வழங்கியுள்ளன. இருந்தாலும், பெரும் வணிக நிறுவனங்கள் அந்தப் பிரதேச வளங்களை சுரண்டுவதை தடுக்கவில்லை. ஐரோப்பாவின் அடக்கப்பட்ட சிறுபான்மை இனங்களில் ஒன்றான சாமிகளைப் பற்றிய சிறிய அறிமுகம் இது.

நோர்வே, சுவீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வட துருவத்தை அண்டிய பகுதிகளில் சாமி இன மக்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் பெரும்பான்மையினராக வாழ்ந்த சாமிகளின் வாழ்விடம், வந்தேறு குடிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இன்று வளர்ச்சி குன்றிய, மனித நடமாட்டம் குறைந்த ஆர்க்டிக் வட்டத்திற்குள் மட்டும் சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த நகரங்களில் பெரும்பான்மையின சமூகம் குடியேறி வருகின்றது. பூர்வ குடிகளான சாமிகள், நாட்டுப்புறங்களில் மட்டும் ஒதுங்கி வாழ்கின்றனர். ஸ்கண்டிநேவிய நாடுகளின் கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், ஒரு சிறுபான்மை இனத்தின் இருப்பு மறைக்கப் பட்டு வந்துள்ளது. இன்றும் கூட, அந்த நாடுகளின் மக்கள் ஒரே தேசிய மொழியை பேசுவதாகத் தான் வெளியில் உள்ள மக்கள் கருதுகின்றனர். மிக அண்மைக் காலத்தில் தான், சாமி மக்களின் கலாச்சார அடையாளங்கள் அங்கீகரிக்கப் பட்டன.

முதன் முதலாக, 12 ம் நூற்றாண்டின் நோர்வீஜிய (அல்லது டேனிஷ்) இலக்கியங்கள் சாமி மொழி பேசும் மக்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன. நோர்வீஜியர்கள் அவர்களை "பின் (Finn) மக்கள்" என்று அழைத்தனர். தற்போதும் சாமி மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமுனையில் உள்ள மாகாணம் பின்மார்க் என்று அழைக்கப் படுகின்றது. பின்லாந்து என்ற பெயரும் அவ்வாறே வந்திருக்கலாம். ஏனெனில், சுவோமி என்ற இயற்பெயரைக் கொண்ட பின்லாந்து மக்கள் பேசும் மொழிக்கும், சாமி மொழிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அநேகமாக, புராதன காலத்தில் இருந்து நாடோடி சமூகமாக வாழும் மக்கள், தமது பண்டைய மொழியான சாமியை பேசி வந்திருக்கலாம். விவசாய சமூகமாக நாகரீகமடைந்த மக்கள், பின்னிஷ் மொழியை தனியாக வளர்த்தெடுத்திருக்கலாம். மொழியியல் அறிஞர்களால் "பின்னோ-உங்காரிய" மொழிக்குடும்பம் என்று அழைக்கப் படுகின்றது. சாமி மட்டுமல்ல, பின்னிஷ், கரேலியா, எஸ்தோனியா, ஹங்கேரியா போன்ற மொழிகளும் இந்தக் குடும்பத்தை சேர்ந்தவை. பிற ஐரோப்பிய மொழிகளுடன், ஒரு சொல் கூட ஒற்றுமையற்ற தனித்துவமான மொழிகள் அவை. சொற்கள் மட்டுமல்ல, இலக்கண வடிவம் கூட வித்தியாசமானது. அநேகமாக, இன்றைய ஐரோப்பிய சமூகங்களின் வருகைக்கு முன்பு வாழ்ந்த இனங்களாக இருக்கலாம்.

வட ஐரோப்பாவில் வாழும் சாமி மக்களின் மொத்த எண்ணிக்கை 60000 - 100000. அதிலும் பல்வேறு மொழிப் பிரிவுகள் உள்ளன. பொதுவாக, நாடுகளின் எல்லைகள் அவர்களின் வாழ்விடங்களை பிரித்துள்ளன. நோர்வே, சுவீடன், பின்லாந்து நாடுகளில் வாழும் சாமி இன மக்களுக்கு இடையிலான தொடர்புகள் தொடர்ந்தும் பேணப் பட்டு வந்துள்ளன. இவர்கள் தமது மொழிக்கான எழுத்து வடிவத்தை லத்தீன் அடிப்படையில் அமைத்துள்ளனர். அரிச்சுவடியில் சில விசேட வரி வடிவங்களும் உள்ளன. இதற்கு மாறாக, ரஷ்யாவை சேர்ந்த சாமிக்களின் மொழி, ரஷ்ய எழுத்துக்களைக் கொண்டு எழுதப் படுகின்றது. முன்பு பனிப்போர் காரணமாக, அவர்களுடனான உறவு துண்டிக்கப் பட்டிருந்தது.

குளிர்காலத்தில், - 40 பாகை செல்சியஸ் வரை உறையும் காலநிலைக்கு ஏற்றவாறு, சாமி மக்கள் வாழப் பழகியுள்ளனர். "லவ்வு" என அழைக்கப்படும் எளிமையான கூடாரங்களே அவர்களது வாழ்விடங்கள். அந்தப் பிரதேசத்தில் மட்டும் காணப்படும் துருவ மான் (Reindear) வளர்ப்பு தான், அவர்களது வாழ்க்கைக்கு ஜீவநாடி. மான் பிடிப்பது எப்படி என்று, சிறு குழந்தையில் இருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். நமது ஊரில் மாடு வளர்ப்பதைப் போல, இவர்கள் துருவ மான்களை பிடித்து பட்டிகளில் அடைத்து வளர்ப்பார்கள். அந்த விலங்கினத்தின் இறைச்சி, பால், உணவாகப் பயன்படுகின்றது. அதன் தோலை எடுத்து, குளிருக்கேற்ற உடையாகவும், காலணியாகவும், அல்லது படுக்கை விரிப்பாகவும் தயாரிக்கின்றனர். சுமார் ஆறு மாத காலம், பனியால் உறைந்து போயிருக்கும் நிலத்தில் போக்குவரத்திற்கும் மான் பயன்படுகின்றது. பனியில் சறுக்கும் வண்டிலை மான்கள் இழுத்துச் செல்லும். நீங்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஓவியத்தை பார்த்திருப்பீர்கள். உண்மையில் துருவப் பகுதி பழங்குடியினரான சாமி மக்களின் அடையாளம் தான் அது. கிறிஸ்துமஸ் தாத்தாவை சர்வதேச வணிகச் சின்னமாக்கிய ஐரோப்பியர்கள், அவரின் "உறவுக்கார சாமிகளை" அடக்கி ஒடுக்கினார்கள்.

முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் ரஷ்ய சாமிகள், கூட்டுறவுப் பண்ணைகளில் மான்களை வளர்க்குமாறு வற்புறுத்தப் பட்டனர். சாமிக்களின் சமுதாயம் ஓரளவு பொதுவுடமைப் பொருளாதாரம் சார்ந்தது. இருப்பினும் சில வேறுபாடுகளும் இருக்கவே செய்தன. குறிப்பாக நாடோடி வாழ்க்கை கட்டுப்படுத்தப் பட்டது. ஓரிடத்தில் நிலையாக தங்க வைக்கப்பட்டனர். பண்ணையின் வருமானத்தின் ஒரு பகுதி அரசுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு பிரதியுபகாரமாக, முதன் முறையாக சாமியின பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் கட்டப்பட்டன. சோவியத் வீழ்ச்சியின் பின்னர் வந்த முதலாளித்துவ அரசு, பண்ணைகளுக்கு சொந்தம் கொண்டாடியது. தனியாருக்கு விற்பதாக அறிவித்தது. ஆனால், சாமி இனத்தவரின் கம்பனிகள் கேட்ட பொழுது அதிக விலை கூறியது. அதே நேரம், ரஷ்ய இனத்தவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றது. இன்றைய ரஷ்யாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சாமி மக்கள், மதுவுக்கு அடிமையாகவுள்ளனர். சாமி பிரதேசத்தில் பெரிய நகரமான மூர்மன்ஸ்கில் அவர்களின் எண்ணிக்கை 1 % மட்டுமே! கனிம வளத்தை உறிஞ்சும் பெரு நிறுவனங்கள் சாமிகளின் பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளன. அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப் படுகின்றது.

பனிப்போர் காலத்தில் சாமிகளின் வாழ்விடம், இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. எல்லைக்கு அப்பால் இருந்த நோர்வே நேட்டோ கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இதனால் சோவியத் படைகள் அங்கே நிலை கொண்டிருந்தன. ரஷ்ய எல்லையோரம் உள்ள நோர்வேயின் சாமி பகுதியில் நேட்டோ படைகள் தளம் அமைத்துள்ளன. புவி வெப்பமடைதல் காரணமாக, துருவப் பகுதியில் புதிதாக பெட்ரோலிய, எரிவாயு வளங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சாமிகளின் தாயகப் பகுதியில் எண்ணைக் கிணறுகள் தோண்டப்படும். இதில் கிடைக்கும் வருமானம் நேரடியாக சாமி மக்களுக்கு போய்ச் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஐரோப்பாவின் பணக்கார நாடான நோர்வேயிலும், வட பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளது. கரையோரத்தில் மீன்பிடியும், உள்நாட்டில் மான் வளர்ப்புமே, அந்தப் பகுதி மக்களின் வருமானம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தான், வட நோர்வேயின் பொருளாதாரம் சேவைத் துறைக்கு மாறியது. அதன் காரணமாக, சில சாமிகளும் கல்வியறிவு பெற்று முன்னேறினார்கள். ஐம்பதுகளில், அல்லது அறுபதுகளில் சாமி மத்தியதர வர்க்கம் உருவானது. அப்போதிருந்து சாமி தேசியவாதமும் வளர்ந்தது. ஒன்றிணைந்த சாமி மக்களின் தேசத்திற்கு "சாப்மி" (Sápmi) என்று பெயரிடப் பட்டது. அதற்கென தனியான தேசியக்கொடியும் உருவானது.

1987 ல், நோர்வே அரசு சாமி பாராளுமன்றம் அமைக்க அனுமதி வழங்கியது. வட நோர்வேயில் கரஷோக் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் Sámediggi என்று அழைக்கப் படுகின்றது. நோர்வேயை பின்பற்றி, சுவீடனும், பின்லாந்தும், சாமி மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து பாராளுமன்றம் அமைத்துக் கொடுத்தன. இருப்பினும் இந்தப் பாராளுமன்றங்கள், தொலைக்காட்சி கமேராக்களுக்கு முன்னால் நடக்கும் விவாத மேடையாக மட்டுமே செயற்படுகின்றன. பெரிதாக அதிகாரப் பரவலாக்கல் எதுவும் நடக்கவில்லை. இன்று சாமி பிரதேசங்களில், ஆரம்ப பாடசாலைகளில் சாமி மொழியில் கல்வி புகட்டப் படுகின்றது. நோர்வேயின் தொலைக்காட்சி தனியாக சாமி மொழி சேவை ஒன்றை நடத்துகின்றது. இது போன்ற கலாச்சார சுதந்திரம் காணப்பட்டாலும், பொருளாதாரத் தேவைகளுக்காக ஆதிக்க மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் போன்று, ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான கூட்டமைப்பு ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் கூட்டமைப்பில் டென்மார்க்குக்கு சொந்தமான பாரோ தீவுகள், கிரீன்லான்ட், மற்றும் பின்லாந்துக்கு சொந்தமான ஒலான்ட் தீவுகள் என்பனவற்றிற்கு தனியான சுயாட்சி அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. சாமிகளின் சாப்மி தேசத்திற்கு அது போன்ற அந்தஸ்து எதுவும் கிடையாது.

இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1. The Saami language - An introduction (Pekka Sammallahti)
2. Sámit, sánit, sátnehámit (Suomalais-Ugrilainen Seura,Helsinki)
3. Becoming Visible, Indigenous Politics and Self-Government (Centre for Sami Studies)


இணையத்திலும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்:
Sami People
Sami Parliament of Norway

Saturday, June 25, 2011

பின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு

சோஷலிச பின்லாந்தின் கொடி

நமது கால இளைஞர்கள், "நோக்கியா" செல்பேசியின் தாயகமான பின்லாந்து குறித்து, அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, இன்று அரசியல் குழப்பங்களற்ற அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கின்றது. இந்த வருடம், உலகில் சிறந்த வாழ்க்கை வசதிகளைக் கொண்ட முதலாவது நாடாக தெரிவு செய்யப் பட்டதில் அந் நாட்டினருக்கு பெருமை தான். சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர், பின்லாந்து மிகவும் வறிய நாடாக இருந்தது. ரஷ்யாவை பின்பற்றி சோஷலிசப் புரட்சி வெடித்ததும், அதன் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்ட வரலாறுகள் இன்று பெரிதும் மறைக்கப் பட்டு விட்டன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்த இது போன்ற புரட்சிகள் பல வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன. கிடைத்தற்கரிய ஆவணங்கள் பல, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள "சர்வதேச சமூக வரலாற்று ஆய்வு மையத்தில்" (International Institute of Social History) பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த நிலையத்தின் நூலகத்தில் சில நாட்களை செலவிட்டதன் பயனாக, பல தகவல்களை அறிய முடிந்தது. இந்தக் கட்டுரையில் பின்லாந்து பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பின்லாந்து ஐரோப்பாக் கண்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நாடு. பின்லாந்து நாட்டு மக்கள் பேசும் Suomen kieli மொழியடிப்படையில் அமைந்த உத்தியோகபூர்வ பெயர்: சுஒமி(Suomi). எமக்கு நன்கு பரிச்சயமான ஜெர்மானிய, அல்லது லத்தீன், அல்லது ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேராத தனித்துவமான மொழி அது. எஸ்தோனியா, லாட்வியா நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு நெருக்கமானது.

சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் வட பகுதியில் வாழும் "சாமி" (Sami) இன மக்கள், மற்றும் வட-மேற்கு ரஷ்யாவில் வாழும் கரேலிய (karelia) இன மக்கள் பேசும் மொழிகளுடன் தொடர்புடையது. பின்லாந்து என்பது, சுவீடிஷ்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். நீண்ட காலமாக பின்லாந்து அகண்ட சுவீடிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில், சுவீடனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தினால் உள்வாங்கப் பட்டது. 1918 ல் சுதந்திர நாடாகும் வரையில், ரஷ்யாவின் பகுதியாகவிருந்தது.

சார் மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே, பின்லாந்து ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது. சார் காலத்தில், பின்லாந்து தேசியவாதிகள் ரஷ்ய மொழித் திணிப்பை எதிர்த்து கலகம் செய்தனர். ரஷ்யாவில் லெனின் தலைமையில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. முன்னர் சார் மன்னனால் ஆளப்பட்ட ரஷ்யப் பகுதிகள், புதிய சோவியத் அரசுக்குள் உள்வாங்கப் பட்டன.

ஆயினும், போல்ஷெவிக்குகள் எதற்காக பின்லாந்தை சுதந்திர நாடாக்கினார்கள் என்ற கேள்வி எழலாம். அன்றைய புவிசார் அரசியல் காரணிகள் முக்கியமாக இருந்துள்ளன. முதலில், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்த லெனின் குழுவினர், ஜெர்மனியின் உதவியுடன் பின்லாந்து வரை ரயிலில் வந்தனர். பின்லாந்து எல்லையில் இருந்து சுமார் 200 கி.மி. தூரத்தில் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. லெனின் குழுவினர் பத்திரமாக ரஷ்யா போய்ச் சேருவதற்கு உதவிய பின்லாந்துக்கு நன்றிக்கடனாக, அதற்கு சுதந்திரம் வழங்கி இருக்கலாம். மேலும், ஜெர்மனியின் வற்புறுத்தலும் பின்லாந்து சுதந்திரத்தை விரைவு படுத்தியது எனலாம்.

"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" குறித்து லெனின் எழுதிய கோட்பாடுகளும், பின்லாந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது. இன்று "தமிழ்த் தேசியவாதிகள்" அதைக் காட்டித் தான், இடதுசாரி சக்திகளை தமக்குப் பின்னால் வருமாறு அழைக்கின்றனர். "தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன் கம்யூனிஸ்ட் அல்ல," என்று புது வியாக்கியானங்களை கொடுக்கின்றனர். "பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணயம்" என்ற கோட்பாடு, அந்த தேசங்களின் பாட்டாளி வர்க்கம் சமதர்ம புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கில், லெனினால் எழுதப்பட்டது.

வலதுசாரி தேசியவாத சக்திகளே அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும், அதிகாரத்திற்கு வந்ததும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்களை ஒடுக்குவார்கள் என்பதும், லெனின் கண்கூடாக கண்ட உண்மைகளாக உள்ளன. இதனால், பிற்காலத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, சோவியத் ஒன்றியத்திற்குள் தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்தியது. அது வேறு விடயம். இப்போது பின்லாந்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்று விரிவாக ஆராய்வோம்.

பின்லாந்தில் "சுதந்திரப் போராட்டம்" நடந்ததாகவும், அந்தக் காலத்தில் வடக்கே உள்ள வாசா (Vaasa) நகரம் தற்காலிக தலைநகரமாக திகழ்ந்ததாகவும், முதலாளித்துவ சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அநேகமாக, பின்லாந்து பாட நூல்களிலும், வெளிநாட்டவர்களுக்கான அறிமுக கையேடுகளிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. ரஷ்ய மேலாதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற்றதைப் போல காட்டுவதற்காக, பின்லாந்தில் நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் "ஆயுதக் களைவு பிரச்சினை" எடுத்துக் காட்டப் படுகின்றது. உண்மையில் சுதந்திரப் பிரகடனத்தை அடுத்துக் கிளம்பிய சோஷலிசப் புரட்சியை சிறுமைப் படுத்தவே அவ்வாறு பரப்புரை செய்யப் பட்டது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்தில், ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்ததில் வியப்பில்லை. அதே நேரம், ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், ரஷ்ய இராணுவத்தினுள் பிளவு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததும், புரட்சிக்கு ஆதரவான செம்படைகளும், மன்னருக்கு விசுவாசமான வெண் படைகளும் மோதிக் கொண்டன. இதே போன்றதொரு பிரிவு, பின்லாந்திலும் தோன்றியது. பழைமைவாத, நிலப்பிரபுத்துவ ஆதரவு வெண்படை அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தது. பின்லாந்தின் பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சமூக- ஜனநாயகக் கட்சி அதற்கு சவாலாக விளங்கியது. அவர்களைப் பொறுத்த வரையில், சோஷலிசப் புரட்சிக்கு ஏற்ற தருணம் அது.

"பின்லாந்தில் ஒரு போதும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருக்கவில்லை. ஆகவே ரஷ்யா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று புரட்சிக்கு ஏதுவான சூழ்நிலை இருக்கவில்லை." பூர்ஷுவா சரித்திரவியலாளர்களின் இன்னொரு திரிபுபடுத்தல் இது. அந்தக் கூற்றில் அரைவாசி மட்டுமே உண்மை. பின்லாந்தின் பெரும்பகுதி நாட்டுப்புறங்களில் சிறு விவசாயிகள், தமது ஜீவனோபாயத்தை தாமே தேடிக் கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவர்கள் எந்தவொரு நிலப்பிரபுவுக்கும் திறை செலுத்தவில்லை. இன்னும் வடக்கே போனால், பழங்குடியினரின் "லாப் லான்ட்"(Lapland) பிரதேசம் வரும். (அங்கே தான் கிறிஸ்மஸ் தாத்தா வாழ்வதாக ஐதீகம்!)

லாப் லான்ட் பழங்குடியினர் இன்றைக்கும் மான் பண்ணைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். சுய பொருளாதாரத்தை நம்பி வாழும் மக்கள் மத்தியில் பின்லாந்து தேசியவாதிகள் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், அன்று மட்டுமல்ல இன்றைக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட தென் பின்லாந்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. பின்லாந்தின் தெற்குப் பகுதியில் தான் அதிகளவு நகரமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. நகரங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெருந்திரள் பாட்டாளி மக்கள் தென் பின்லாந்தில் வசிக்கின்றனர். மத்திய காலத்தில், சுவீடிஷ் நிலப்பிரபுக்களும் தெற்குப் பகுதிகளில் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால், பெருமளவு விவசாயக் கூலிகளும் அங்கே காணப்பட்டனர். அத்தகைய சமூகத்தில், சமதர்மக் கொள்கைகள் பரவியதில் வியப்பில்லை.

பின்லாந்தின் சுதந்திரத்திற்கு முன்னரே, பாராளுமன்றம் அமைக்கப் பட்டு விட்டது. தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற சமூக- ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. உலகிலேயே முதல் தடவையாக, ஒரு சோஷலிசக் கட்சி அதிகளவு ஓட்டுகளைப் பெற்றது பின்லாந்தில் தான். நிலைமை அவ்வாறு இருக்கையில், "ரஷ்ய போல்ஷெவிக்குகளின் சூழ்ச்சியினால் பின்லாந்தின் செம் புரட்சி இடம்பெற்றதாக," என்று வரலாற்றைப் புரட்டுகின்றனர். உண்மையில், பின்லாந்துப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமையேற்ற சமூக- ஜனநாயகக் கட்சி லெனினைப் பின்பற்றவில்லை. அந்தக் கட்சியினர் மார்க்சிய நெறிகளை நம்பினார்கள். அதே நேரம், லெனினிசம் தவறான வழி முறைகளைக் கொண்டது எனக் கருதினார்கள். லெனின் முன் மொழிந்த "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்லாந்து சோஷலிஸ்டுகளின் வருடாந்த மகாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின், புரட்சிக்கு தயார் படுத்துமாறும், அதற்கு ரஷ்ய போல்ஷெவிக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், உறுதிமொழி வழங்கினார். ஆயினும், பெரும்பான்மை பின்லாந்து சோஷலிஸ்டுகள், தேசியவாத அரசியலையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். "பின்லாந்துக்காரர்கள் புரட்சிக்கு தகுதியற்ற மிதவாதிகள்" என்று லெனின் சாடினார். உண்மையில், சோஷலிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நேரத்தில், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கவே போல்ஷெவிக்குகள் விரும்பினார்கள்.

"பின்லாந்தின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் (ரஷ்ய) பேரினவாதிகள்...." (V.I.Lenin, Speech on the National Question) ரஷ்ய தரப்பு சலசலப்புகளை மீறித் தான் லெனின் பின்லாந்துக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தார். சுவீடனிடமிருந்து நோர்வே பிரிந்து சென்றதை உதாரணமாகக் காட்டினார். பின்னிஷ் தேசியவாதிகள் பூரண சுதந்திரம் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அந்த விடயத்தில் பின்னிஷ் சோஷலிஸ்டுகளும் உடன்பட்டனர். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தேசியவாதிகள் தம்மை அழித்தொழிக்கத் துணிவார்கள் என்பதை சோஷலிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தொழிலாளர்கள் மடிந்தனர். அந்த சம்பவம் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

சோஷலிஸ்டுகள், "தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை" உருவாக்கத் தொடங்கினார்கள். மறு பக்கத்தில் தேசியவாதிகளும் ஆயுதக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். பின்னிஷ் தேசியவாதிகளுக்கு ஜெர்மனியின் ஆதரவு கிட்டியது. ஜேர்மனிய, சுவீடிஷ் வீரர்கள், பின்னிஷ் தேசியவாத வெண் படையில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் தளபதியான மன்னேர்ஹைம் சார் மன்னனின் இராணுவத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப் பட்டவர். இன்றுள்ள பின்லாந்தின் "ஜனநாயக அரசு" கூட, அவர் ஒரு ஒப்பற்ற படைத் தளபதி என்று, மன்னேர்ஹைம் புகழ் பாடுகின்றது. ஆனால், மன்னேர்ஹைம் தலைமை தாங்கிய வெண் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றது.

சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில்
இருந்த பின்லாந்தின் பகுதிகள்
1918 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த போர், பின்லாந்து மக்கள் மத்தியில் பாரிய பிளவை ஏற்படுத்தியது. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கொள்கை அடிப்படையில் பிரிந்து நின்றனர். ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொன்று குவித்தனர். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படித் தான் தெரியும். ஆனால் அது ஒரு வர்க்கப் போர். வெவ்வேறு இனங்களை சேர்ந்தோர், தாம் சார்ந்த வர்க்கத்திற்கு ஆதரவளித்தனர். உதாரணத்திற்கு, பின்னிஷ் சோஷலிச செம்படையுடன் சேர்ந்து ரஷ்ய தொண்டர்கள் போரிட்டனர். அதே போல, பின்னிஷ் தேசியவாத வெண் படையில் ஜெர்மன், சுவீடிஷ் இனத்தவர்கள் சேர்ந்திருந்தனர்.

சனத்தொகை அடர்த்தியுள்ள, பெரு நகரங்களைக் கொண்ட பின்லாந்தின் தெற்குப் பகுதி சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "பின்லாந்து சோஷலிசக் குடியரசின்" தலைநகராக ஹெல்சிங்கி இருந்தது. சனத்தொகை குறைந்த பின்லாந்தின் வட- மத்திய பகுதி தேசியவாதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பின்லாந்து மன்னராட்சியின்" தலைநகராக வாசா இருந்தது.

ஆரம்பத்தில் சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ரஷ்யாவில் இருந்து ஆயுத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. இன்னமும் வாபஸ் பெறப்படாத ரஷ்ய படைகளும் உதவின. ஆயினும், ஏற்கனவே ஜெர்மனியுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ரஷ்ய ஆதரவு விலத்திக் கொள்ளப் பட்டது. பின்லாந்தில் செல்வாக்கு செலுத்த, இது தக்க தருணம் என்று ஜெர்மனி கருதியது. வெண் படையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஜெர்மன் படைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

பின்லாந்து சோஷலிச நாடானால், சுவீடிஷ் சோஷலிச இயக்கத்தையும் புரட்சிக்கு தூண்டி விடும் என்று பயந்த சுவீடனும், தொண்டர் படை அனுப்பியது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்ற தேசியவாதப் படைகள், அனைத்து முனைகளிலும் முன்னேறிச் சென்றன. குறிப்பாக பின்லாந்தின் தெற்குக் கரையோரம், ஜெர்மன் படைகள் நேரடியாக வந்திறங்கியமை, சோஷலிச செம்படைக்கு பேரிடியாக அமைந்து விட்டது. அதுவே பின்லாந்தின் சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். சுமார் மூன்று மாத காலம் நிலைத்து நின்ற "பின்லாந்து சோஷலிசக் குடியரசு" முடிவுக்கு வந்தது.

மூன்று மாத போரில், இரண்டு தரப்பிலும் குறைந்தது முப்பதாயிரம் பேர் கொல்லப் பட்டனர். செம்படையினர் பக்கமே அதிகளவு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. பெருமளவு செம்படை வீரர்கள், இராணுவ பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்கள் அல்ல. அவர்கள் ஆயுதமேந்திய சாதாரண மக்களாவர். செம்படையின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களும், செம்படையின் முக்கிய உறுப்பினர்களும், சோவியத் யூனியனுக்கு தப்பியோடி விட்டார்கள். கீழ்நிலைப் போராளிகளும், ஆதரவாளர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நூற்றுக் கணக்கான சரணடைந்த செம்படையினர், நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் குறையாத ரஷ்ய தொண்டர்களும் நீதிக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டனர்.

போர் நடந்த காலத்தில், செம்படையினரும் "நீதிக்கு புறம்பான கொலைகளில்" ஈடுபட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. நிலவுடமையாளர்கள்,முதலாளிகள்,அரசு அதிகாரிகள், சில மதகுருக்கள் போன்றோரே செம்படையினரால் "மரண தண்டனை" விதிக்கப்பட்டனர். ஆனால், தேசியவாதப் படையினரோ, சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் எல்லோருக்கும் "மரண தண்டனை" விதித்தார்கள். அவர்கள் மீது "தேசத் துரோக" குற்றச்சாட்டு சுமத்தியே தண்டனை நிறைவேற்றப் பட்டது. சோஷலிசத்திற்கு ஆதரவானோர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம், இன்று வரை கணக்கெடுக்கப் படவில்லை. குறைந்தது பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம்.
சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
சோஷலிசப் புரட்சிக்கு ஆதரவளித்த மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். பல வருடங்களாக அவர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். முகாம்களுக்கு உள்ளேயும் கொலைகள் நடந்தன. இதை விட, உணவுப் பற்றாக்குறை காரணமாக பட்டினி கிடந்தது மடிந்தோர் ஆயிரம். சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய்களும் பரவின. மொத்தம் பத்தாயிரம் பேராவது தடுப்பு முகாம்களில் இறந்திருப்பார்கள்.

ஹெல்சிங்கி நகருக்கு அண்மையில் உள்ள Suomenlinna தீவு, ஒரு காலத்தில் கொலைகள் மலிந்த தடுப்பு முகாமாக செயற்பட்டது. பின்லாந்து அரசு, தனது கடந்த கால போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, இன்று அந்த தீவை சுற்றுலாத்தலமாக்கியுள்ளது. பின்லாந்தின் தோற்றுப் போன சோஷலிசப் புரட்சியும், உள்நாட்டுப் போரும், மக்கள் மத்தியில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விட்டது. அண்மைக் காலம் வரையில், இடதுசாரி பின்னிஷ் மக்களும், வலதுசாரி பின்னிஷ் மக்களும், குரோதத்துடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் மற்றவரைக் கண்டால் வெறுக்குமளவிற்கு, அவர்கள் மனதில் வன்மம் குடி கொண்டிருந்தது.

பின்லாந்து சோஷலிசப் புரட்சியின் தோல்வியானது, இடதுசாரிகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியது. மிதவாத சமூக - ஜனநாயகவாதிகள் புதிய அரசுடன் ஒத்துழைத்தனர். அதற்கு மாறாக புரட்சியை தொடர விரும்பியவர்கள், "பின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி"யை ஸ்தாபித்தனர். அவர்கள் எல்லோரும் சோவியத் யூனியனில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால், சோவியத் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனம் பின்வருமாறு: "புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் ஜனநாயகவாதிகள். சோவியத் யூனியனுடன் கூட்டமைப்பை விரும்பாதவர்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை." 

ஆமாம், பின்லாந்து புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள், "நிரந்தரப் புரட்சியை" முன்னெடுத்த சமூக- ஜனநாயகவாதிகள். இன்று மேற்கத்திய ஜனநாயகத்தில் காணப்படும் "கருத்துச் சுதந்திரம், பல கட்சி ஜனநாயகம்" போன்றவற்றை நடைமுறைப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டால் போதும். மக்கள் ஆட்சி மலரும் என்று நம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதனை, "தூய ஜனநாயகவாதம்" என்று விமர்சித்தது.

__________________________________________________

படங்களுக்கான விளக்கம்:

1.மேலே: சோஷலிச பின்லாந்தின் கொடி
2.மத்தி: சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தின் பகுதிகள். செந்நிற மையினால் காட்டப்பட்டுள்ளது.
3.கீழே: சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
___________________________________________________


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1.Dokument från Finska Inbördeskriget (Hannu Soikkanen)
(ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டது. பல கிடைத்தற்கரிய ஆவணங்களை தொகுத்துள்ளது.)
2.A brief History of Modern Finland (Martti Häikiö)
3.The Winter War (Engle & Paananen)
4.Speech on the National Question (V.I.Lenin)
5.மற்றும் International Institute of Social History நூலகத்தில் கிடைத்த ஆவணங்கள்.

Monday, June 20, 2011

மேற்கத்திய நாடுகளால் வஞ்சிக்கப்பட்ட கடாபி (ஆவணப்படம்)


பிரெஞ்சு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடாபி பற்றிய ஆவணப்படம். மேற்குலகுடன் நட்பு பாராட்டி காரியங்களை சாதிக்கலாம் என்று நம்புவோருக்கு கடாபியின் கதை ஒரு சிறந்த படிப்பினை. கடாபி மிகுந்த தயக்கத்துடனேயே மேற்குலகுடன் நட்பை புதுப்பித்துக் கொண்டார். குறிப்பாக அமெரிக்கா முதுகில் குத்தி விடும் என்று அஞ்சினார். அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது போன்று லிபியாவையும் தாக்கலாம் என்று எதிர்பார்த்தார். பொருளாதாரத் தடையின் பின்னர் மேற்குலகுடன் ஏற்படுத்திக் கொண்ட இராஜதந்திர நகர்வுகள். அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் ஒத்துழைத்து, அல்கைதா குறித்த தகவல்களைக் கொடுத்தது. மேற்குலகின் நட்பை ஏற்படுத்தும் நோக்கில், அணுவாயுத உற்பத்தியை தானாகவே முன்வந்து நிறுத்தியமை. இது போன்ற விடயங்கள் அலசப்படுகின்றன.


Saturday, June 18, 2011

அநியாய உலகில் நமக்கு மட்டும் நியாயம் கேட்க முடியாது


இந்திய அரசின் போருக்கு எதிராக லண்டன் பொதுக் கூட்டம்: 12 ஜூன் 2011

மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் கனிம வளங்களை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்தியப் பெரும் வணிக நிரறுவனங்களுடன் இணைந்து கொள்ளையிட்டுச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இப்படி பல ஆயிரக்கணக்கிலான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ள மாநிலங்களில் ஒரிசா, சத்திஸ்கார், ஜார்கண்ட், ஆந்திரம் போன்ற பழங்குடிகள் வாழும் பகுதிகள் முக்கியமானவை. தங்கள் வாழ்வும் வளமும் பறிபோவது கண்டு இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடிகள் போராடிவருகின்றனர். மலைகள, ஆறுகள், நிலம் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரங்கம் தோண்டவும், ஆலைகள் அமைக்கவும் இந்திய அரசு விற்று வருவது கண்டு சகிக்காத இந்தப் பகுதி மக்களின் போராட்டம் முன்னெப்போதும் காணாத பெரும் வீச்சைக் கண்டு வருகிறது. ஏற்கனவே வறுமையில் உழலும் இந்த மக்கள் கொடுரமான முறையில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போராடும் மக்கள் மீது போலீசைக் கொண்டு நடத்தும் அடக்குமுறைகள் இந்திய அரசுக்கு புதியவை அல்ல. அனால் தற்போதைய அடக்குமுறையில் காந்தியவாதிகள், ஜனநாயக இயக்கங்கள், அரசு சாராத நிறுவனங்கள், இன்ன பிற சில்லறை அரசியல் கட்சிகள் அனைவரும் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.

சிதம்பரம் தலைமையிலான உள்நாட்டு அமைச்சகம் ஏறக்குறைய சாட்சிகள் இல்லாத, அறிவிக்கப்படாத ஒரு உள்நாட்டுப் போரை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்திய ராணுவத்தையும் விமானப் படையையும் இறக்கி விட்டுள்ளது. ஏறக்குறைய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவமும், போலிசும், ராணுவப் படிகளும், விமானப் படைப் பிரிவுகளும் இந்த மாநிலங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்திய அரசின் புள்ளி விபரப்படி நாட்டின் மிகவும் வறுமை வாய்ந்த இந்தப் பகுதியில் உலகின் அதி நவீனப் படைகள் ராக்கெட்டுகள், செய்மதிகள், ஆளில்லா விமானங்கள் அடங்கிய படைகள் இறக்கப்பட்டுள்ளனர். அனைத்து இயக்கங்களும் ஒடுக்கப்பட்டு அந்தப் பகுதியை விட்டு விரட்டியடிக்கப் பட்ட பின்னர் மாவோயிஸ்டுப் புரட்சியாளர்கள் போராடும் மக்களுக்கு தலைமையளித்து வருகின்றனர். எனவே, இந்தப் பழங்குடி மக்களின் எதிர்ப்பை மாவோயிஸ்டுகள் மீதான போர் என்று சிதம்பரம் வருணிப்பது ஒரு வகையில் உண்மையே.

ஏகாதிபத்தியப் போர்

எப்படிப் பார்க்கிலும், இந்தப் போர் ஏகாதிபத்தியங்களுக்காக அதன் ஏவலர்களான மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் நடத்தும் போர். இதன் நோக்கங்களை ஐரோப்பிய மக்களுக்கு விளக்கும் முகமாக இங்கிலாந்து நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்திய உழைப்பாளிகள் சங்கம் ((Indian workers Association-Great Britain) பொதுக் கூட்டங்கலையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி மாணவர்கள், தொழிலாளர்கள், அறிவுஜீவிகள் மத்தியில் பிரச்சாரம் வருகிறது. இந்தக கொடூரமான போர் குறித்த விழிப்புணர்வு ஐரோப்பிய நாடுகளின் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று சேரும் வண்ணம் பிற சர்வதேச அமைதி இயக்கங்களுடன் இணைந்து லண்டன் நகரில் ஒரு பெருந்திரளானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தமது மனித நேயக் கடமையை நிறைவேற்ற வேண்டி ஐரோப்பியப் பொதுமக்களை கேட்டுக கொள்ள இந்தியாவிலிருந்து அருந்ததி ராய், ஸ்வீடன நாட்டு எழுத்தாளர் ஜேன் மிர்தால், நேபாளப் புரட்சி இயக்கத்தின் செயல் வீரர்கள் கலந்து கொண்டு பேசினார். இக்கொட்டத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.

ஜேன் மிர்தால்

ஸ்வீடன நாட்டின் பிரபலமான பொருளாதார அறிஞர் குன்னர் மிர்தால் அவர்களின் மகனும் பிரபல எழுத்தாளருமான ஜேன் மிர்தால் கடந்த நாற்பது வருடங்களாக இந்தியப் புரட்சிகர இயக்களைக் குறித்து மேற்குலகில் எழுதியும் பேசியும் வருபவர். இந்தியப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து மாவோயிஸ்டுக் கட்சியை உருவாக்கிய பின்னர் அதன் செயலர் கணபதி அவர்களை முதன் முறையாக நேரடியாகக் கண்டுபேசி மேற்குலகின் பிரபல பத்திரிகைகளில் இந்திய மாவோயிஸ்ட் கட்சியின் அரும் பணிகளை விரிவாக எழுதிவருபவர். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இந்தியா போன்ற நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்காக எவ்வாறெல்லாம் பசப்புரைகளைப் பேசி கொள்ளையடித்து வருகின்றன; ஈவிரக்கம் அற்றவகையில் படுகொலைகளை நடத்தி வருகின்றன என்பது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

பழங்குடியினர் மீதான இந்திய அரசின் இந்தப் போர் காலனிய ஆதிக்கத்தின் துவக்கத்தில் அதன் பிதாமகனும் காட்டு மிராண்டியுமான கொலம்பஸ் தலைமையில் ஐரோப்பியர்கள் நடாத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு ஒப்பானதே. காலனியாதிக்கக் காலத்தியச் சட்டங்களைப் பின்பற்றியே இன்னமும் இந்திய அரசு பழங்குடியினரின் நிலங்களைப் பிடுங்கி அந்நிய நாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்கி வருகிறது. நடைமுறையில் பழைய காலனியச் செயல்பாட்டுக்கும் இப்போதைய செயல்முரைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை.

இந்திய அரசு வடக்கே உத்தரப் பிரதேசம் தொடங்கி தெற்கில் ஆந்திரம் வரையில் ஒரு காலனியாதிக்க அடக்குமுறை அரசு போலவே வதைத்து வருகிறது. இங்கே நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரிசாவின் வளமான வெற்றிலைக் கொடிக்கால் விளையும் நஞ்சை நிலங்களை கொரியாவின் போஸ்கோ கம்பெனிக்காக சுரங்கம் அமைக்க இந்திய அரசு பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது ஆயிரம் படையினர் (இருபது பட்டாலியன்கள்) குவிக்கப்பட்டு விவசாயிகள் நாளுக்கு இத்தனை விவசாயிகள் என்ற வகையில் விரட்டப்பட்டு வருகிறார்கள்.

மக்களின் நிலங்களைப் பிடுங்கி தனியாருக்கு அளிக்கும் இந்திய அரசு இதை ‘பொதுப் பணிக்காக’ செய்வதாகச் சொல்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை அளிக்கும் இப்பணியை எப்படி பொதுப் பணி என்று சொல்வது?

இத்தகைய வன்முறை இந்திய மக்களை மட்டும் அல்லாது இந்தியா என்ற நாட்டின் இருப்பையே கேள்விக்குரியதாக்கி வருகிறது.

ஆண்டுக்குப் பத்து சதம் வளருவதாக சொல்லப்படும் இந்தியாவில் உண்ண உணவின்றி நூற்றுக்கு நாற்பது பேர் வறுமையில் உழல்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு வளர்ச்சி இந்தியாவுக்குத் தேவையில்லை, மாறாக இந்திய மக்களுக்கு உணவளிக்கும் விதமான சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலான ஒரு வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை.

இந்திய மக்களின் வீரம் செறிந்த எதிர்ப்புப் போராட்டங்களை இந்தியாவில் மட்டும் அல்லாது, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்கலும் முழுதும் மறைத்து செய்திகளை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. இப்படி செய்திகளை மறைத்து வருவது இங்கே ஐரோப்பாவில் ஒன்றும் புதிய வழக்கம் அல்ல. முதல் உலகப்போருக்கு முந்திய காலத்திலும், அதன் பின்னர் இரண்டும் உலகப் போருக்கு ஜெர்மனியின் ஹிட்லர் தயாராகிக் கொண்டிருந்த காலத்திலும் இதுதான் நடந்தது.

ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயப்பெல்ஸ் கோண்டு வந்த பத்திரிக்கை ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் இதைத்தான் செய்தது. கூடவே, பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளம், கைக்கூலி, அந்தஸ்து இன்று அந்த வேலையை திறம்படச் செய்கிறது.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு ஆதரவு அளித்த எந்த ஒரு பத்திரிகை ஆசிரியரும் தண்டிக்கப்படவே இல்லை. அவர்கள் அளித்தது வந்த பொய்ச் செய்திகள் தான் போருக்கு ஊக்கம் அளித்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் அது தான் இன்று இங்கே ஐரோப்பாவிலும் அங்கே இந்தியாவிலும் நடக்கிறது.

உலகம் முழுக்க உள்ள அரசுகள் இந்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. நடுநிலை வகிப்பதாகச் சொல்லும் ஸ்வீடன போன்ற நாடுகள் கூட ஏகாதிபத்தியப் போர்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

எனவே, இந்திய அரசின் இந்தப் போரை ஐரோப்பாவில் உள்ள நியாயம் அறிந்த நல்ல உள்ளம படைத்தோர் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கடமைப் பட்டு உள்ளார்கள்.

அருந்ததி ராய்

மத்திய இந்தியாவில் இந்திய அரசு நடத்தி வரும் போர் குறித்து எழுதியும் பேசியும் பிரபல இந்திய நூல் ஆசிரியர் அருந்ததி ராய் சிதம்பரம் தலைமையில் நடத்தப் பட்டு வரும் இந்த மனிதாபிமானம் அற்ற இந்தப் போரின் கொடுமை குறித்து விரிவாக விளக்கினார். அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தியாவின் எல்லைப்புற மாநிலங்களில் நடந்து வந்த போர் இன்று இந்தியாவின் இதயத்திற்கு வந்திருக்கிறது. போராடும் தேசிய இனங்களான நாகர்கள், மிசோக்கள், மனிப்புரிகள், அஸ்சாமிகள், போடோக்கள், காஷ்மிரிகள் மீது இந்திய அரசு அறுபது ஆண்டுகளாக நடத்தி வரும் போரின் தொடர்ச்சியாகவே இந்தப் போரையும் நாம் பார்க்க வேண்டும். இந்தத் தேசிய இனங்கள் அனைத்தும் சிறுபான்மையான பழங்குடிகள் அதிலும் பலர் கிறித்தவம் அல்லது இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிருபானமையினர்.

எவ்வாறு அஸ்சாமிகளின் நில வளமும் கனி வளமும் இந்திய அரசுக்குத் தேவையோ அதைப் போலவே, மத்திய இந்தியப் பழங்குடிகளின் நிலம் தேவை. எனவே தான் இந்தப் போர் நடக்கிறது.

இரண்டு லட்சத்திற்கும் மேலான ராணுவத்தினர் சூழ்ந்து கொண்டு நிற்கும் போது மக்கள் எப்படி சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த முடியும். எனவே, ஆயுதம் தாங்கிய போர் என்பது தவிர்க்க முடியாதது. அதைத்தான் மாவோயிஸ்டுகள் தலைமையில் பழங்குடிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். நியாயம் மிக்க இந்தப் போராட்டத்தை சிதம்பரம் கொடுமையான வழியில் ஒடுக்கி வருகிறார்.

தான் நிதி அமைச்ச்சராவதற்கு முதல் நாள் வரை வேதாந்தா என்ற சுரங்கக் கம்பெனியின் இயக்குனராக இருந்தவர் சிதம்பரம். பல காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நில ஒதுக்கீடுகள் இவர் அமைச்சரானவுடன் மிக விரைவில் நடைபெறுகிறது. இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இந்திய அரசின் அமைச்சர்களை இயக்குவது யார் என்று.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில காலம் முன்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசும் போது இந்தியாவை அடிமையாக்கி ஆட்சி புரிந்த இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்துப் பேசியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். காலனிய ஆட்சி வழங்கிய சட்டங்கள், போலிஸ், நீதிமன்றங்கள் அனைத்தும் பிரிட்டன் இந்தியாவிற்கு வழங்கிய கொடிகள் என்றும் அவை மிகவும் உதவியாக இருப்பதாகவும் மன்மோகன் சிங் புகழ்ந்தார். அது உண்மை தான்- அதே காலனிய காலச் சட்டங்கள், நீதி மன்றங்கள், போலிஸ், ராணுவம் போன்ற அமைப்புகளைக் கொண்டு தான் இந்தப் போர் நடத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டால் மன்மோகன் புகழ்ந்த காரணத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இலங்கைப்போரில் இந்தியா

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடும் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் தற்சமயம் இந்தியா அரசும், அரசியல்வாதிகளும் காத்துவரும் அமைதி பற்றியும் அருந்ததி பேசினார்:

தமிழ் மக்கள் அனைவரையுமே ஒட்டு மொத்தமாகப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு பெரும் பேரழிவு ஆயுதங்களுடன் குண்டு மழை பொழிந்து ஒரு இனத்தையே அழிக்கும் போர் அங்கே நடந்திருக்கிறது. மருத்துவமனைகள் குறி வைத்துத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக பெருந்திரளான மக்கள் கொன்று ஓழிக்கப்பட்டிருக்கின்றர். ஆனால், இதுபற்றி இந்தியாவில் அனைவரும் மவுனமாக இருந்து வருகின்றனர்.

இந்த மயான அமைதியில் உறைந்திருப்பது கொலைகளுக்கு உதவியாக இருந்த இந்திய அரசு மட்டும் அல்ல. கூடவே, இந்திய அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிகைகள், மக்கள் உரிமை அமைப்பினர், ஜனநாயகவாதிகள், போராடும் மக்கள் இயக்கங்கள் கூட இது விசயத்தில் மவுனமாக இருக்கின்றனர். இந்த மனச் சாட்சியற்ற மவுனம் பல காலம் இந்திய மக்களை வதைக்க இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சின்னஞ்சிறு நாடான இலங்கை பல பத்து ஆயிரம் மக்களைக் கொன்று தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக் கொண்டது போலவே தாமும் தாம் விரும்பும் ஒடுக்குமுறைகளைச் சாதித்துக் கொள்ளவே இந்தியா போன்ற பிற தெற்காசிய நாட்டு அரசுகள் இவ்வாறு அமைதியாக இருந்து வருகிறார்கள். நமக்கு வருத்தம் தரும் வகையில் பிற போராடும் இனங்களான காஷ்மீரிகள் போன்றோர் கூட இதில் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனாலும், இது சரியல்ல.

இலங்கைப்போருக்கு நேரடி உதவி செய்த சீன, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசியாவில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் அனைவரும் தாமும் இலங்கையின் வழியைப் பின்பற்றுவது பற்றி மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இலங்கைத் தமிழ் மக்கள் மீது நடந்தது போன்ற ஒரு இன ஒழிப்பு இந்தியாவிலும் நடந்து கொண்டிருப்பதால் இந்திய அரசின் அரசியல் கட்சிகளின் மவுனம் ஒன்றும் புரியாததல்ல.

இந்த மவுனத்தை, நாம் அனுமதிக்க முடியாது, அதை உடைத்தே ஆக வேண்டும். ஒரு இனமோ அல்லது ஒரு பிரிவினரோ அழிக்கப்படும்போது நாம் அதைக் கண்டனம் செய்யாவிட்டால் சில காலம் கழித்து அது நம் மீதே வந்து சேரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அதைக் கண்டித்தே ஆக வேண்டும். அநியாயங்கள் நிறைந்த இந்த உலகில் நமக்குத் தேவையான நியாயத்தை மாத்திரம் நாம் கேட்டுப் பெற்று கொண்டு விட முடியாது. நியாயம் என்பது அனைவருக்குமான தேவை, எனவே, அனைவருக்கக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

(லண்டனில் இருந்து பவானி அனுப்பிய செய்தி அறிக்கை)

Thursday, June 16, 2011

ஏதென்ஸ் நகரில் "மக்கள் மன்றம்", கிரேக்க அரசு நெருக்கடியில்


ஜூன் 15 , அன்று கிரீசில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது திரண்ட பெருந்திரள் மக்கள், கிரேக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போலிஸின் வன்முறைத் தூண்டுதல்களுக்கு பயந்து கலைந்து செல்லாமல், முன்றலில் கூடியுள்ளனர். அங்கே தற்போது "மக்கள் பாராளுமன்றம்" அமைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ பாராளுன்றத்தினுள் ஜனநாயகம் கிடையாது. அதற்கு பதிலாக,
தெருவில் கூட ஜனநாயகம் மலரலாம் என்பதை கிரேக்க மக்கள் நிரூபித்துள்ளனர்.
அலையெனத் திரண்ட மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட அரசாங்கம், மந்திரி சபையை கலைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் பங்குபற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப் படும் என்று பிரதமர் Papandreou தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உத்தரவிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தியதால், கிரேக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்த நிமிடம் வரையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தை கைவிடவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல, வங்கிகளும், சர்வதேச நாணய நிதியமும் கிரீசை விட்டு அகல வேண்டும் என்று, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தலைநகர் ஏதென்சில் மட்டுமல்லாது, பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகிய நகரங்களில் உள்ள மேயரின் அலுவலகம், நகராட்சி கட்டிடங்கள் போன்றன சில மணி நேரங்கள் என்றாலும் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. கிரேக்க மக்கள் எழுச்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.


Monday, June 13, 2011

நமீபியாவின் விடுதலை எனும் நவீன அடிமை சாசனம்

மேற்குலக நாடுகளின் தயவில் கிடைக்கும் ஈழம், காலனிய சுரண்டலுக்கு வழி சமைக்கும் என்பதை நமீபியாவின் விடுதலை விளக்குகின்றது. நமீபியா, ஆப்பிரிக்க கண்டத்தின் இளைய தேசம். நிறவெறி தென்னாபிரிக்காவிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடிய ஸ்வாபோ (SWAPO) இயக்கம், தற்போது ஆளும் கட்சியாகவுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், பனிப்போர் முடிந்த பின்னர், நமீபியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நமீபியாவின் விடுதலைக்கு சர்வதேச ஆதரவும் கிட்டியிருந்தது. கிழக்கு தீமோர், கொசோவோ போன்ற நாடுகள் ஐ.நா.வினால் அங்கீகரிக்கப் பட்ட வேளை, ஈழம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது போன்று தான் அப்போதும் நடந்தது. நமீபியாவின் விடுதலையை கண்டவுடன், ஈழத்தின் விடுதலை வெகு தூரமில்லை என்று, தமிழ்த் தேசியவாதிகள் நம்பினார்கள். இதனால், இருபதாண்டுகளுக்கு பின்னர், நமீபியாவின் இன்றைய நிலை குறித்து ஆராய்வது அவசியமாகியுள்ளது. நமீபியாவுக்கு கிடைத்தது ஒரு போலிச் சுதந்திரம் என்பதும், முன்னாள் காலனிய எஜமானர்களே உண்மையான ஆட்சியாளர்கள் என்பதும் பலருக்கு தெரியாது.


முதன்முதலாக நமீபியா செல்லும் ஒருவர், ஐரோப்பாவில் கால் பதித்து விட்டதாக எண்ணுவார். பெரும்பான்மையான நமீபியர்கள் வாழும் தலைநகரத்தில் இருந்து ஆரம்பிப்போம். Windhoek (மூலம், டச்சு மொழி. உச்சரிப்பு:"வின்ட் ஹூக்") என்ற பெயரே, முன்னை நாள் தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியை நினைவுபடுத்தும். 1915 முதல் 1990 வரையில் தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. வெள்ளையின ஆட்சியாளர்களால், நிறவேற்றுமை பாராட்டும் சட்டங்கள் புகுத்தப்பட்டன. வின்ட் ஹூக் நகரின் விசாலமான தெருக்களும், தெளிவான அறிவிப்புப் பலகைகளும், சுத்தமான நடைபாதைகளும், இது ஆப்பிரிக்கா தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். வின்ட் ஹூக் ஆபிரிக்காவின் அழகான நகரம் மட்டுமல்ல, மிகவும் சுத்தமான நகரமும் கூட. கட்டிடங்களும் ஒரு ஐரோப்பிய நகரத்தினுள் பிரவேசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். ஆப்பிரிக்காவின் பணக்கார நாடும் இது தானோ, என்ற எண்ணம் தோன்றும். ஆடம்பரமான வீடுகளும், பணக்கார வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வணிக மையங்களும் நகரை ஆக்கிரமித்துள்ளன. அது மட்டுமல்ல, தெருக்களில் பெருமளவு வெள்ளையினத்தவர்கள் உலாவுவதையும் காணலாம்.


நமீபியா, ஆப்பிரிக்காவின் சிறந்த நாடாவதற்கு, அந்நாட்டை தாயகமாகக் கொண்ட ஜெர்மன் வம்சாவழியினர் காரணம் என்று பலர் கருதுகின்றனர். "ஒழுக்கத்தில் சிறந்த" ஜெர்மன் காலனியாதிக்கவாதிகளின் பிள்ளைகள் நமீபிய பிரஜைகளாக உள்ளனர். அவர்கள்
சிறுபான்மையினராக இருந்த போதிலும், அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும்
முதலாந்தர குடிமக்களாக நடத்தப் படுகின்றனர். குறிப்பாக வின்ட் ஹூக் நகராட்சி அவர்கள் ஆதிக்கத்தில் உள்ளது. அதனால் நகரின் கட்டுமானப் பணிகளை, ஐரோப்பிய கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றனர். இன்னமும், வின்ட் ஹூக் நகரின் பல தெருக்களுக்கு ஜெர்மன் பெயர்கள் இடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் நமீபியாவை ஆள்வது, பெரும்பான்மை கறுப்பினத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். காலனிய காலகட்டத்தின் எச்சங்களை அகற்றுவதற்கு, ஆளும் ஸ்வாபோ அரசு முயற்சித்தது. ஆனால், வெளிநாட்டு அழுத்தம் காரணமாக முயற்சியை கைவிட்டது. ஒரு பெயரைக் கூட மாற்ற முடியாவிட்டால், அந்த சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? நமீபியா இன்னமும் காலனிய காலகட்டத்தில் இருப்பதாக, கறுப்பின மக்கள் நம்புகின்றனர். அன்று இந்த வெள்ளையர்கள் நமீபியாவை ஆண்டார்கள், இன்று அவர்கள் முழு நாட்டையும் தனி உடமையாக மாற்றிக்
கொண்டுள்ளார்கள்.

நமீபியா உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வடக்கில் இருந்து தெற்காக, அண்ணளவாக நாலாயிரம் கி.மி. தூரத்தைக் கொண்டது. நாட்டின் பெரும்பான்மையான
நிலம், மனிதர்கள் வாழ முடியாத பாலைவனம். ஆனால், பெறுமதியான வைரக் கற்களும்,
யுரேனியமும், வேறு கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பாலைவனம். இந்த கனிம வளங்களை அகழும் வேலையில் மேற்கத்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்ட நமீபியாவின் கடல் வளங்களையும், அவை தான் அள்ளிச் செல்கின்றன. நமீபியாவின் மொத்த சனத்தொகை வெறும் இரண்டு மில்லியன்கள். ஆயினும், குறைந்தது 50 % மான மக்கள், வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களில் அநேகமானோர் கறுப்பின மக்கள் என்பதை இங்கே சொல்லத்
தேவையில்லை. இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் அதிகமாக இருப்பதற்கு, சனத்தொகைப் பெருக்கத்தைக் காரணமாகக் காட்டுவார்கள். நமீபியாவின் இரண்டு மில்லியன் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது முடியாத காரியமா? உண்மையில் அவர்கள் மறைக்க விரும்புவது, பெருமளவு செல்வத்தை ஒரு சிறிய பணக்காரக் கும்பல் மட்டுமே அனுபவிக்கிறது என்பதைத் தான். நமீபியாவின் மொத்த சனத்தொகையில் 6 % மாக உள்ள வெள்ளையர்கள், 90 % தேச உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

வந்தேறுகுடிகளான ஐரோப்பியர்கள் மாளிகை வீடுகளில் வசிக்கையில், மண்ணின் மைந்தர்களான கறுப்பின நமீபியர்கள் இன்னமும் சேரிகளில் வசிக்கின்றனர். வின்ட் ஹூக் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள Katutura எனுமிடத்தில், பெருமளவு கறுப்பினத்தவரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. Katutura என்றால், உள்ளூர் மொழியில் "நாங்கள் வாழ விரும்பாத இடம்" என்று அர்த்தம்! ஐ.நா.அபிவிருத்தி நிலையத்தின் அறிக்கை கூட, சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை சுட்டிக் காட்டியுள்ளது. 5 % மேட்டுக்குடியினர், தேசத்தின் மொத்த வருமானத்தில் 70 % தை அனுபவிக்கின்றனர். நாட்டிற்கு அதிகளவு வருவாய் ஈட்டித் தரும், வைரம், யுரேனியம் போன்றவற்றிற்கு பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன. இவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, மேற்கத்திய நாடுகளில் தங்கி விடுகின்றது. நமீபியாவின் கறுப்பின மக்களுக்கு இலாபத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடப் போய்ச் சேர்வதில்லை.

1844 முதல் 1915 வரையில் நமீபியாவை ஆண்ட ஜெர்மனியர்கள், கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்து,பெருமளவு நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை அது தான். சுமார் என்பதாயிரம் ஹெறேரோ மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டனர்.(http://www.ppu.org.uk/genocide/g_namibia.html) இனவாத சட்டங்களை நடைமுறைப் படுத்தியும்,அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டார்கள். கொள்ளையடிக்கப் பட்ட நிலங்கள் யாவும் அளக்கப்பட்டு, வெள்ளையின குடியேற்றக்காரர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. பிற்காலத்தில் தென் ஆப்பிரிக்கா ஆண்ட காலங்களிலும் அந்த நிலைமை மாறவில்லை. இன்று 40 % நமீபிய நிலங்கள், வெள்ளையின சிறுபான்மையினரின் தனிப்பட்ட சொத்தாக காணப்படுகின்றது. பல
உரிமையாளர்கள் நமீபியாவிலேயே வசிப்பதில்லை. ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில்
சொகுசாக வாழ்வார்கள். அதே நேரம், அவர்களது நிலங்கள் பயன்படுத்தப் படாமல் தரிசாகக்
கிடக்கும்.

நமீபியாவில் தொடரும் அநீதியை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத காரணம் என்ன? சுதந்திரம், ஜனநாயகம் பேசும் மேற்குலக நாடுகளின் முகமூடி இங்கே கிழிகின்றது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய ஐந்து நாடுகள் மத்தியஸ்தம் வகித்தமையினால் தான், நமீபியா சுதந்திரம் அடைந்தது. அப்போது அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தார்கள். தனியார் சொத்துரிமை பாதுகாக்கப் பட வேண்டும் என்ற வாக்குறுதியை, புதிய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டன. இதனை நிச்சயப்படுத்தும், நமீபிய அரசமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவில் எழுதப்பட்ட வாசகங்களை, எக் காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டன. கறுப்பின மக்கள், தமது இனத்தவரின் ஆட்சி நடப்பதாக பெருமைப்பட ஏதுமில்லை. கறுப்பின அரசாங்கத்தை திரையாகப் பயன்படுத்திக் கொண்டு, காலனிய சுரண்டல் தொடர்கின்றது. "மேற்கத்திய நாடுகளின் தயவில் ஈழம் கிடைக்கும்" என்று கனவு காணுவோர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. மேலைத்தேய கனவான்கள் பெற்றுக்
கொடுக்கும் தனி நாடு, எப்போதும் காலனிய அடிமை நாடாகவே இருக்கும்.

நமீபியாவின் ஆளும் கட்சியான ஸ்வாபோ மார்க்சிய பாரம்பரியத்தில் இருந்து வந்தது. அதனால், சமதர்மம், புரட்சி குறித்த சிந்தனை கறுப்பின மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது. தெருக்களுக்கும், பண்ணைகளுக்கும் பிடல் காஸ்ட்ரோ, சே என்று பெயரிடுவதை எதிர்ப்பு நடவடிக்கையாக கருதுகின்றனர். ரொபேர்ட் முகாபே கூட இங்கே பிரபலம். சிம்பாப்வேயில் வெள்ளையின பண்ணையாளர்களின் நிலங்களைப் பறித்து, கறுப்பின விவசாயிகளுக்கு வழங்கிய முகாபே நமீபியாவில் போற்றப் படுகின்றார். நமீபியாவிலும் அது போன்ற புரட்சி ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

Tuesday, June 07, 2011

திரைப்படம்: அமெரிக்காவின் மாவோயிஸ்ட் கருஞ் சிறுத்தைகள்

அமெரிக்காவில், அறுபதுகளில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடிய "கருஞ் சிறுத்தைகள்" (Black Panthers) பற்றிய திரைப்படம் இது. கறுப்பின மக்களை அரச பயங்கரவாத அடக்குமுறையில் இருந்து பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். குறிக்கோளின்றி வாழ்ந்த கறுப்பின பாட்டாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டினார்கள். ஒரு காலத்தில், அமெரிக்காவின் மிகவும் கட்டுக்கோப்பான தீவிர இடதுசாரிக் குழுவாக அறியப்பட்டது. மார்க்சிய- லெனினிச- மாவோயிச பாதையை அமைப்பின் அரசியல் சித்தாந்தமாக்கினார்கள். அமெரிக்காவின் பிற இடதுசாரி இயக்கங்களுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தனர். அதனால், அமெரிக்க போலிஸ் அடக்குமுறைக்கு பலியாகி இயக்கம் அழிந்து விட்டாலும், எஞ்சிய உறுப்பினர்களுக்கு கியூபா அரசியல் தஞ்சம் வழங்கியது.
(பிற்குறிப்பு: Youtube இது போன்ற வீடியோக்களை நீண்ட காலம் பாதுகாப்பதில்லை. அதனால் ஆர்வமுள்ள நண்பர்கள் உடனடியாக சேமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)


Part 1

Part2

Part 3

Part 4

Part 5

Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Part 11

Part 12

Sunday, June 05, 2011

தியன் அன் மென் படுகொலை : அம்பலமாகும் பொய்கள்!


இருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய, மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 

1989 ல், "சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக" அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளதாகவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. அன்று, தியன் அன் மென்னில் படுகொலை எதுவும் நடக்கவில்லை. 

உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் பின்வருமாறு:

கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள், பெய்ஜிங் நகரின் மையப் பகுதியை வாரக்கணக்காக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். பேரூந்து வண்டிகளைக் கூட வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தி வைத்து தடை போட்டிருந்தனர். வீதித் தடைகள் காவலரண்கள் போல, ஆள் மாறி ஆள் பாதுகாத்தனர். காவலரண்களுக்கு இடையில் "மோட்டர் சைக்கிள் நபர்கள்" தகவல் பரிமாற்றத்திற்காக ஈடுபடுத்தப் பட்டனர். தியன் அன் மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்த சுமார் மூவாயிரம் மாணவர்கள், காவல்துறையினரோ, இராணுவமோ நுழைய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி உட்சுற்றுக்கு விடுத்த அறிக்கையின் பிரகாரம், வாரக் கணக்காக தொடர்ந்த மாணவர்கள் போராட்டம் அரசின் அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியதாக தெரிகின்றது. போராட்டக்காரரை கலைப்பதற்காக கலகத்தடுப்பு பொலிஸ் அனுப்பப் பட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டுகள், பொல்லுகள் சகிதம் சென்ற படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. பாதுகாப்புப் படைகள் வன்முறை கொண்டு அடக்குவதற்கு முன்பே, ஆர்ப்பாட்டக் காரர்கள் தாமாகவே கலைந்து சென்று விட்டனர். இதனை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய நோபல் பரிசு பெற்ற Liu Xiaobo உறுதிப் படுத்தியுள்ளார்.

இந்த தகவல்களை நேரே கண்ட சாட்சியான சிலி நாட்டுத் தூதுவர் தெரிவித்துள்ளார். "சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் சுடவில்லை. அங்கே துப்பாக்கிப் பிரயோகம் எதுவும் நடக்கவில்லை." என்று கூறிய சிலி தூதுவரின் சாட்சியத்தை அமெரிக்க தூதரகம் புறக்கணித்துள்ளது. தியன் அன் மென் சதுக்கத்தில், செஞ்சிலுவைச் சங்க கூடாரத்தில் நின்ற வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரும் அதே போன்ற சாட்சியத்தை கூறினார். "திடீரென தோன்றிய இராணுவத்தைக் கண்டு தான் பயந்ததாகவும், ஆனால் அங்கே துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை," என்றும் கூறினார்.

1989 ம் ஆண்டு, சீனாவில் இருந்து செய்தி அறிவித்துக் கொண்டிருந்த பி.பி.சி. ஊடகவியலாளர் ஜேம்ஸ் மைல்ஸ், அன்று தான் தவறான தகவல்களை வழங்கியதை ஒத்துக் கொண்டார். "தியன் அன் மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை. உள்ளே நுழைந்த இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதற்குப் பின்னர் ஆர்ப்பாடக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்." இருபது வருடங்களுக்குப் பிறகு உண்மையை ஒத்துக் கொண்ட செய்தியாளர் மேலும் தெரிவித்ததாவது. "அங்கு நடந்ததை தியன் அன் மென் படுகொலை என்று கூறுவதை விட, பெய்ஜிங் படுகொலை என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருக்கும்." அதாவது, இராணுவம் சுட்டதில் சில கலகக்காரர்கள் மரணமடைந்தனர்.

அந்தச் சம்பவம் தியன் அன் மென் சதுக்கத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள Muxidi எனுமிடத்தில் நடந்தது. ஜூன் 3, இரவு 10 .30 மணியளவில் தெருவில் சென்ற இராணுவ வாகனத் தொடரணியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழி மறித்து தாக்கினார்கள். படையினர் முதலில் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பாவித்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். அவர்களது முயற்சி பலிக்காமல் போகவே, நிஜத் தோட்டாக்களை பாவிக்க நேர்ந்தது. படையினர் துப்பாக்கிச் சூட்டிற்கு சிலர் பலியானதும், மிகுதிப் பேர் வெகுண்டு ஓடினார்கள். ஆர்ப்பாட்டக் காரர்கள் எழுப்பியிருந்த வீதித் தடைகளும் அவர்களுக்கு எமனாக அமைந்ததன.

மேற்குறிப்பிட்ட தகவல்களை அன்றே சீன அரசு தெரிவித்திருந்தது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் பொய் கூறுவதாகத் தான் அன்று பலர் நம்பினார்கள். மாறாக "நாணயமான மேற்கத்தய கனவான்கள்" கூறுவதை உண்மை என்று நம்பி ஏமாந்தார்கள். ஏகாதிபத்திய அடிவருடிகளாக சேவகம் செய்யும் தமிழர்கள் சிலர், இன்றும் கூட ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.


மேலதிக தகவல்களுக்கு:
Wikileaks: no bloodshed inside Tiananmen Square, cables claim

-----------------------------------------------
This clip shows the facts and images that's long been swept under the rug by Western media---PLA troops were attacked by violent mobs at Tiananmen Square and surrounding areas in Beijing on June 4th, 1989. You see the burnt out military trucks, armored personal carriers, and even bystanders fiddling with machine guns. This clip comes straight from HK TV reporting which captures the results of a night of mob violence. It's time for the truth be told.

Saturday, June 04, 2011

நீங்கள் இதுவரை காணாத மே தின வீடியோக்கள்

இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் யாவும் 1 மே 2011 ல், பல நாடுகளில் இடம்பெற்ற மே தின ஊர்வலங்களின் தொகுப்பு. ஜனநாயகப் புரட்சி நடந்த எகிப்தில், முதல் தடவையாக கம்யூனிஸ்ட் கட்சியினரின் மே தின ஆர்ப்பாட்டம் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

Cairo, Egypt


Istanbul, Turkey


Bulgaria


Hamburg, Germany


Rotterdam, The Netherlands


Moscow, Russia


Kiev, Ukraine

Friday, June 03, 2011

இலங்கையில் எழுந்துள்ள தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு

மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியூள்ளது. ஒரு இளம் ஊழியர் கொல்லப்படவும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் காயங்கள், படுகாயங்கள் படவும் காரணமாக அமைந்த மிருகத்தனமான பொலீஸ் தாக்குதலை புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை தொழிலாளர்கள் ஊழியர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெற்றுள்ள தனியார் ஓய்வூதிய உத்தேச சட்ட மூலத்தை உடன் வாபஸ் வாங்க வேண்டும் எனவும் கட்சி வற்புறுத்துகின்றது.

இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மகிந்த சிந்தனை அரசாங்கம், எவ்வளவிற்கு தொழிலாளர் ஆதரவு அரசாங்கம் என வேடமிட்டுக் கொண்டாலும், அதற்கு பாராளுமன்ற இடதுசாரிகள் பதவிகளுக்காகப் பக்கவாத்தியங்கள் வாசித்தாலும், அதன் மக்கள் விரோத தொழிலாளர் விரோத அடக்கு முறை ஆட்சி அதிகாரப் போக்கை மறைத்து விடமுடியாது, என்பதையே கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான பொலீஸ் தாக்குதல் வெளிக் காட்டியுள்ளன. இன்றைய ஜனாதிபதி அன்று தொழில் அமைச்சராக இருந்த வேளை, நிறைவேற்ற முற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவு தானும் சாதகமானதாக இருந்த தொழிலாளர் சாசனம், உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவப் பெரு நிறுவனங்களினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கடும் அழுத்தங்களால் கைவிடப்பட்டது. இன்று நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்தில் இருந்து வரும் ஜனாதிபதியால், அது பற்றி எதுவுமே பேச முடியவில்லை. அதே வேளை சர்வதேச நாணய நிதியத்தினது ஆலோசனையின் கீழ் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களின் சுரண்டலுக்கும், தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து அவர்களது சேமிப்பை கொள்ளையிடவும் வழி வகுக்கும்.

தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டத்தைக் கொண்டுவர முன் நிற்பது அதன் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும், அந்நிய ஏகாதிபத்திய சார்பையும் தான் வெளிப்படுத்துகிறது. பொருட்களின் மீதான விலை அதிகரிப்பையும் வாழ்க்கைச் செலவு உயர்வையும் திசை திருப்புவதற்கு, அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பயங்கரவாதமாகக் காட்டியதுடன், வடக்கு கிழக்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையை சிங்கள் உழைக்கும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தியும் வந்தது. ஆனால் அதே ஒடுக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும், ஆயுதப்படைகளைப் பயன்படுத்தியும், சிங்கள உழைக்கும் மக்களையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும், அப்பட்டமாகவே மறுத்து அடக்கும் போக்கு இன்று வெளிப்பாடடைந்து வேகம் பெற்று வருவதையே கட்டுநாயக்க தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. கட்டுநாயக்க சுதந்திர வலைய ஊழியர்களும் ஏனைய தனியார் துறைத் தொழிலாளர்களும் காட்டிவரும் எதிர்ப்பையும் உறுதியான போராட்ட நிலைப்பாட்டையும் எமது கட்சி முழுமையாக ஆதரித்து நிற்கிறது.

எவ்வளவிற்கு பௌத்த தர்மம் பற்றிப் பேசினாலும், சிங்கள இனமொழி மேன்மை பற்றி எடுத்துரைத்தாலும் ஆளும் வர்க்க அரசாங்கங்கள் வர்க்க நிலையில் முதலாளித்துவ அடிப்படையையும் ஏகாதிபத்திய அரவணைப்பையும் கொண்டதேயாகும். இதனை பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்கள் நடைமுறை அனுபவங்கள் மூலம் உணர்ந்து, நாட்டின் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களோடும் தொழிலாளர்களோடும் ஐக்கியப்பட்டு, பரஸ்பரம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரல் வேண்டும் என்பது அவசியமானதாகும் என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி


(ஊடகங்களுக்கான அறிக்கை, 2.06.2011)

Thursday, June 02, 2011

"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

[இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு] (பகுதி : 2)

 பத்தாம்பசலித்தனமான வைதீக மார்க்சியத்தை துறந்து, நவீன மார்க்சியராக ஞானஸ்நானம் பெற்ற யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்:
//ஏகாதிபத்தியம் போலவே மனித உரிமை எனும் பிரச்சினையும் மார்க்சியர்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியத்தையும் மனித உரிமையையும் வித்தியாசப்படுத்திப் பார்ப்பது என்பது அவர்களைப் பொறுத்து பெரும் சிக்கலாக இருக்கிறது.//

காலனியாதிக்க காலத்தில் இருந்து தொடரும் பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் குறித்த பாமரனின் புரிதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். பிரிட்டிஷார் தம்மை "ஏகாதிபத்தியம்" என்று பெருமிதத்துடன் கூறிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. "தனி மனித சுதந்திரங்களின் தாயகமான" அமெரிக்க சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட பொழுது, ஏகாதிபத்தியம் என்ற சொல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் நடைமுறையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

எந்தவொரு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடும், மனித உரிமைகளை மதித்து நடந்ததாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. இருபதாம் நூற்றாண்டிலும் நிறவேற்றுமை நிலவியது. வெள்ளையர் தவிர்ந்த மற்றவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும், பாலியல் பலாத்காரம் செய்வதும், கொலை செய்வதும் தவறாக கருதாத காலம் ஒன்றிருந்தது. உலகம் காணாத அளவு இனப்படுகொலை நடத்தியிரா விட்டால், அமெரிக்க, அவுஸ்திரேலிய கண்டங்கள் அவர்களுக்கு சொந்தமாகியிராது. இன்று மனித உரிமை பேசும் நாடுகள் தான், உலக வரலாற்றில் முதன் முதலாக இரசாயனக் குண்டுகள், அணு குண்டுகள் எல்லாம் போட்டார்கள். அத்தகைய ஏகாதிபத்தியங்கள் மனித உரிமை பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலாகாதா?

பனிப்போர் காலத்தில், சோஷலிச நாடுகளை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு "மனித உரிமைகள் பிரச்சினை" பயன்படுத்தப் பட்டது. சோஷலிச நாடுகளில் பல கட்சி தேர்தல், கருத்துச் சுதந்திரம், சொத்து சேர்க்கும் சுதந்திரம் கிடையாது என்பன மனித உரிமைகள் பிரச்சினைகளாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்கு மாறாக, சோஷலிச நாடுகள் முன்வைத்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி, உணவு, வீடு போன்ற அடிப்படை மனித உரிமைகள் புறக்கணிக்கப் பட்டன.

மேற்கத்திய நாடுகள் வலியுறுத்திய மனித உரிமைகள், முதலாளிகளும், மேட்டுக்குடி வர்க்கத்தினரும் புவியின் வளங்களை அனுபவிக்கக் கோரும் உரிமையாகும். இதனை முன்னாள் சோஷலிச நாடுகளை சேர்ந்த மக்கள் காலந் தாழ்த்தித் தான் உணர்ந்து கொண்டனர். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். ஆகவே, தமிழ் மக்களும் ஏகாதிபத்தியம் பேசும் "மனித உரிமைகளின் தார்ப்பரியம் என்னவென்று", பட்டு அனுபவிக்க வேண்டுமென்பதே யமுனா ராஜேந்திரனின் பேரவா.

யமுனா: //தனிமனித உரிமை என்பதனை சொத்துரிமையுடன் வைத்து மட்டுமே புரிந்து கொள்வது வைதீக மார்க்சியர்களின் பார்வை. சொத்துரிமை என்பது அல்லாமல் தனி மனித உரிமை என்பதனை கலாச்சாரம், உயிர் வாழ்தலுக்கான உரிமை, மனிதன் எனும் சுயகண்ணியத்துக்கான உரிமை எனும் அடிப்படையில் பெரும்பாலுமான மார்க்சியர் காணத் தவறுகிறார்கள்.//

சொத்துரிமை மட்டுமே மனித உரிமை என்று எந்த மார்க்சியர்கள் கூறினார்கள்? முன்னர் கூறியது போன்ற, "உணவு, உறையுள், கல்வி, தொழில்" போன்ற உரிமைகள் உயிர் வாழ்தலுக்கான உரிமை இல்லையா? நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கையில், உலகின் முக்கால்வாசி வளங்களை பணக்காரர்கள் நுகர்வதை, எந்தவொரு மனித உரிமைவாதியும் தட்டிக் கேட்கவில்லை. உயிர்வாழ உரிமையற்று நாள் தோறும் மரித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக மார்க்சியர்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதிகள் அவர்களை திரும்பியும் பார்ப்பதில்லை. வயிற்றை விட மானம் முக்கியம் என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

யமுனா: //மனிதனது இருத்தல் சார்ந்த மனிதகண்ணியம் (human dignity) எனும் பிரச்சினை குறித்த, தலித்திய மீட்சி, இன மீட்சி எனும் பண்பாட்டு ஒடுக்குமுறைகளை இதனாலேயே இவர்களால் சரியாக அணுகமுடியாமலும் போகிறது.//

இலங்கையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக மார்க்சியர்கள் தான் போராடினார்கள். சாதியொழிப்புப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக ஒழுங்கு படுத்தியதில், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அந்தக் காலங்களில் தமிழ் தேசியவாதிகள் தலித் விடுதலைக்கு எதிராகவே செயற்பட்டனர். தலித் மக்களை ஒடுக்கிய சாதிவெறியர்களுக்கு தமிழ் தேசியவாதிகள் புகலிடம் வழங்கினார்கள். பேரினவாதிகளின் பாராளுமன்றத்திலும் அடக்குமுறையாளர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்கள். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட சம்பவமே, சிங்கள பேரினவாதம் முதலாவது தமிழின ஒடுக்குமுறை.

மலையகத் தமிழர்கள் தலித்துக்கள் என்ற காரணத்தால், தமிழ் தேசியவாதிகள் அவர்கள் மீது அனுதாபம் காட்டவில்லை. மாறாக, சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து தமிழின ஒடுக்குமுறை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அதற்குப் பிறகு வட- கிழக்கு தமிழர் மீதான சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையை, தமிழ் இனவாதம் மூலம் எதிர்கொண்டார்கள். இரண்டு பக்கமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இனவாதம் தீவிரமாக வளர்ந்தது. அத்தகைய சூழ்நிலையில் மார்க்சியர்கள் எவ்வாறு அணுக வேண்டும்? இப்போதும் கூட, தமிழர்களுக்கு எந்த இசங்களும் வேண்டாம், "நேஷனலிசம்" மட்டுமே வேண்டும் என்று நம்பும் தமிழ் தேசியர்கள், மார்க்சிய அணுகுமுறைகளை ஏற்றுக் கொள்வார்களா?

யமுனா: //தமிழ் மக்களுக்கான நீதி என்னும் பிரச்சினை என்ன ஆனது?//

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையினால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று, யமுனா எப்படி நம்புகிறார்? "போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால், தமிழர்கள் மீதான சிங்களவர்களின் குரோதம் அதிகரிக்கும். தமிழர்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்கள் நடக்கலாம்." இவ்வாறு ஈழத்தமிழர்கள் அச்சமடைந்திருப்பதாக அமெரிக்க தூதுவரின் கேபிளை மேற்கோள் காட்டி விக்கிலீக்ஸ் தெரிவித்தது.(விக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர் தயாரில்லை) அதை விட, போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல, புலிகளின் ஆதரவாளர்களும் விரும்பவில்லை. ஏனெனில் நிபுணர் குழு அறிக்கை இராணுவமும், புலிகளும் மனித குலத்திற்கு விரோதமான குற்றங்கள் புரிந்ததாக கூறுகின்றது. இதற்கான சாட்சியங்களை போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர்.

ஆகவே நீதி கோரும் தமிழர்களுக்கு ஒரு கேள்வி எழுகின்றது. சிறிலங்கா அரச, இராணுவ அதிகாரிகள், சிறிலங்கா சார்பாக துணை நின்ற இந்திய, அமெரிக்க தலைவர்கள், புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப் படுவார்களா? //முன்னாள் ஆந்திர நக்சல் ஆதரவாளரும் பின்னாளில் முழுமையான மனித உரிமையாளராகவும் பரிமாணம் எய்திய அமரர் பாலகோபால் போன்றோருக்கு இந்தத் தரிசனம் இருந்தது. இந்தக் காரணத்தினாலேயே விடுதலைப் புலிகள் பற்றி, அவர்களது மனித உரிமைமீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்களுடனேயே அவர் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். அவர் இன்று இருந்திருப்பின் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையையும் முதலாக அவர் வரவேற்றிருப்பார் எனவே நான் நம்புகிறேன். - யமுனா ராஜேந்திரன்//

யமுனா: //தமிழ் மக்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏதேனும் முனைப்புக்கள் இந்த இடதுசாரிகளிடம் உண்டா? இது ஏதும் இல்லாத நிலைமையில் தெற்கிலுள்ள இடதுசாரிகளுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லை.//

கடந்த அறுபதாண்டுகளாக சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் ஒரு சீனப் பெருஞ்சுவர் எழுந்துள்ளது. சிங்கள இனவாதிகள் ஒரு புறம், தமிழ் இனவாதிகள் மறுபுறம் அந்த தடுப்புச் சுவரின் உயரத்தை அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர். பெரும்பான்மை சிங்களவர்களுக்கு தமிழ் தெரியாது. பெரும்பான்மை தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. இரண்டு சமூகங்களும் தனிதனி தீவுகளாக வளர்ந்து வந்ததால், இடதுசாரிகளும் பிரிந்து விட்டனர். இரு துருவங்களாகிக் கிடக்கும் இவ்விரு இனங்களிற்கு மத்தியில், தொடர்பை ஏற்படுத்துவது எப்படி என்பதை, யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். "சிங்களவனோடு பேசக்கூடாது, பார்த்து சிரிக்கக் கூடாது." என்று தமிழினவாதிகள் எங்களுக்கு தடையுத்தரவு போடுகின்றனர். அவர்களையும், சிங்கள இனவாதிகளையும் சமாளிக்கும் தந்திரோபாயங்களை யமுனா ராஜேந்திரன் எமக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

யமுனா: //தமிழீழப் பிரிவினையை ஒப்புவதுபோல எப்போதேனும் இந்தியாவோ அல்லது அமெரிக்க மேற்கத்திய அரசுகளோ செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவான தோற்றப்பாட்டை அமெரிக்க மேற்கத்திய அரசுகள் காண்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் என்ன?//

தமிழீழப் பிரிவினையை இந்தியாவோ, மேற்கத்திய அரசுகளோ ஏற்கவில்லை. ஆனால், தமிழீழப் பிரிவினையை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றன. அதே நேரம், சிறிலங்கா அரசுடனான உறவுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்கின்றன. இலங்கையில் சிங்கள, தமிழ் இனங்களை நிரந்தரமாக பிரித்து வைக்க, இவ்விரு சக்திகளும் உதவுவார்கள் என்பது, ஏகாதிபத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உலகம் முழுவதும் மனித உரிமைகளை போதிக்கும் நடுநிலையாளர்கள் அல்லவா? இரண்டு தரப்பிற்கும் பொதுவானவர்கள் என்று காட்ட வேண்டாமா? மகிந்த ராஜபக்சவின் அரசு, நாட்டை எந்தளவு விலை பேச தயாராக இருக்கிறது என்பது தான் அவர்களுக்கு தேவையானது. முன்னர் ஒரு தடவை இந்தியா, சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஈழ விடுதலை இயக்கங்களை ஆதரித்தது. அதே வேலையை அமெரிக்கா இன்று, நாடு கடந்த தமிழீழ அரசை வைத்துச் செய்கிறது.

யமுனா: //அனைத்து மக்களை ஒன்றிணையச் செய்ய வேண்டும். இலங்கை நிலைமையில் அனைத்து மக்கள் என்றால் யார்? மேலே கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, பெரமுனா, சம சமாஜக் கட்சி போன்ற இடதுசாரிகளா? அல்லது இவர்களால் தலைமை தாங்கப்படும் இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கமா? ஓன்றிணைவு இவர்களுடன், எதன் அடிப்படையில், எவ்வாறு சாத்தியம்?//

யமுனா ராஜேந்திரன் சுற்றி வளைத்துச் சொல்வதை, தமிழினவாதிகள் ஒரே வாக்கியத்தில் சுருக்கமாக முடித்து விடுகின்றனர். "சிங்களவனுடன் சேர்ந்து வாழ முடியாது." இந்தியாவில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடும் இடதுசாரி கட்சிகள் சீரழிந்து கிடப்பதைப் போலத் தான் இலங்கையிலும் நடக்கிறது. ஜேவிபி யை தவிர பிற இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இலங்கையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் இடதுசாரி சக்திகளை பலவீனப் படுத்துவதற்கென்றே இனவாதப் பூதம் கிளப்பி விடப்பட்டது.

சிங்களவர்களை மட்டுமல்ல, தமிழர்களையும் பிடித்தாட்டும் இனவாதப் பூதத்தை விரட்டாமல், அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பது எப்படி? "இனவாதம் பீடிக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளி வர்க்கம்" என்று யமுனா எழுதுவது சுத்த அபத்தம். இலங்கைத் தொழிலாளி வர்க்கத்துடன் யமுனாவுக்கு எந்தப் பரிச்சயமும் கிடையாது. "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்..." என்று ஒரு சிங்கள எழுத்தாளர் எழுதியிருந்தால், யமுனாவும் அவரது வாசகர்களும் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். ஆனால், சிங்கள அல்லது தமிழ் இனவாதத்தை ஆதரிக்கும் எல்லோரும் இவ்வாறு தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஈழத்தில் வாழும் தமிழர்கள், மார்க்ஸியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். கடந்த முப்பதாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய தமிழ் தேசிய அரசியல், இடதுசாரி சிந்தனைகளை முற்றாக துடைத்தழித்து விட்டது. தமிழ்த் தேசியத்தை தவிர வேறெதுவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது. (யமுனாவின் மொழியில் கூறினால்: "இனவாதத்தால் பீடிக்கப்பட்ட தமிழ் தொழிலாளி வர்க்கம்.) சிங்களப் பகுதிகளிலும் அது தான் நிலைமை. மார்க்ஸியம், சோஷலிசம் போன்ற சொற்களைக் கூட கேள்விப்படாத மக்கள் தான் பெரும்பான்மையினர். தமிழ் தொழிலாளி வர்க்கத்துடன், சிங்கள தொழிலாளி வர்க்கம் சேரக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக உள்ளது. தமிழ் தேசியவாதிகளின் நோக்கமும் அது தான்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை எந்தவொரு இடதுசாரியும் இதுவரை மறுத்ததில்லை. யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் கூட்டிய சர்வகட்சி மகாநாட்டுத் தீர்மானங்களை கிடப்பில் போட்ட மகிந்த ராஜபக்சவின் செயல் கண்டிக்கத் தக்கது. அவரே உறுதிமொழி அளித்த 13 வது சீர்திருத்தத்தையும் அமுல்படுத்தவில்லை. இப்படியான தருணத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் மீது அந்நிய சக்தி அழுத்தம் கொடுப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா. நிபுணர் குழு அப்படியான தீர்வைப் பெற்றுத் தருவதற்காக உருவானதல்ல.

இப்போதே நிபுணர் குழு அறிக்கைக்கு பின்னர், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் கச்சை கட்டத் தொடங்கி விட்டனர். அறிக்கையில் சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "அந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. நாட்டைப் பாதுகாத்த வீரர்களுக்கு அபகீர்த்தி உண்டாக்குகின்றன.", இவ்வாறு சிங்கள இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழினவாதிகளும் அதே மாதிரியான அரசியலில் ஈடுபடுகின்றனர். அறிக்கையில் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், "விடுதலைக்கு போராடிய புலிகளுக்கு அபகீர்த்தி உண்டாக்கிய" அறிக்கையை நிராகரிக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் தற்போது ஐ.நா. மன்றத்தை மாசு படுத்தி ஒதுக்க கிளம்பியுள்ளமை, அவர்களுக்கு இடையிலான ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது.

(முற்றும்)

பகுதி 1:
இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு http://kalaiy.blogspot.nl/2011/06/blog-post.html

Wednesday, June 01, 2011

இடதுசாரிகளை இனவாதத்துடன் இணைக்கும் யமுனாவின் முடிச்சு


ஐரோப்பிய நாடொன்றில் இருந்து, இலங்கை சென்று திரும்பிய மனித உரிமை உரிமை ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு கூறினார். "இலங்கையில் இன முரண்பாடுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. சிங்களவர்கள், தமிழர்கள் என்பது மொழி அடிப்படையில் பிரிந்த ஒரே இனம். ஆனால் இரண்டு தரப்பிலும் படித்தவர்கள் கூட இனவாதம் பேசுவது கவலைக்குரியது. பக்கச்சாற்பற்றவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் இடதுசாரி புத்திஜீவிகள் கூட, இன அடிப்படையில் பிரிந்திருக்கின்றனர்." (இதைக் கூறியவர், நெதர்லாந்தை சேர்ந்த Srilanka Werkgroup என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் உறுப்பினர். அவர் தான் சார்ந்த நாட்டின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத தூய சமதர்மவாதி.) 


இலங்கையின் இன முரண்பாடுகள் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. சுதந்திரத்திற்கு பின்னர் வளர்ச்சியடைந்த சிங்கள தேசியத்திற்கு எதிர்வினையாற்றவே தமிழ் தேசியம் பிறந்தது. இரண்டு தேசியங்களும் தமது அரசியல் இருப்பிற்கு ஒருவரை ஒருவர் தங்கியுள்ளனர். பண்டைய கால இந்து - பௌத்த மத முரண்பாடுகளை, இரு தரப்பு தேசியவாதிகளும் மொழி அடிப்படையிலான இன முரண்பாடுகளாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இவ்விரு மொழித் தேசியவாதிகளும், தம்மை இனவாதிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. நியாயமான கோரிக்கையை முன் வைத்து, இன விடுதலைக்காக போராடுவதாக கூறிக் கொள்வார்கள். 

சிங்கள தேசியவாதி என்றாலும், தமிழ் தேசியவாதி என்றாலும், ஒரு விடயத்தில் மட்டும் அவர்களுக்கு இடையில் பொதுத்தன்மை காணப்படும். மார்க்ஸியம், சோஷலிசம், கம்யூனிசம் என்று எத்தகைய இடதுசாரி கோட்பாடுகளையும் ஆக்ரோஷமாக எதிர்ப்பார்கள். இடதுசாரிகளின் வர்க்கக் கோட்பாடு, புனிதமான தேசியத்தை சிதைத்து விடும் என்ற அச்சம் மனதில் குடி கொண்டிருக்கும். சிங்களவர்கள், தமிழர்கள் மட்டுமே அவர்களுக்கு தெரிந்த வர்க்கப் பிரிவினை.

சிங்கள-தமிழ் தேசியவாதிகள், தமது இனத்திற்கு அப்பால் வேறு உலகம் இருப்பதாக சிந்திப்பதில்லை. உலகில் பிற நாடுகளில் ஒடுக்கப் படும் மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதுமில்லை. மாறாக அப்படிப் பேசுபவர்களை நையாண்டி செய்வார்கள். எழுபதுகளில் வியட்நாமில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தன. யாழ்ப்பாணத்தில் அத்தகைய போராட்டங்களை கிண்டலடித்த தமிழ் தேசியவாதிகள் பின்வருமாறு கூறினார்கள். "மாஸ்கோவில் மழை பெய்தால், மானிப்பாயில் குடை பிடிக்கிறார்கள்." 

வியட்நாமியர்கள் வேற்றினத்தவர்கள் என்பதால் மட்டும் தமிழ் தேசியவாதிகள் அவ்வாறு கூறவில்லை. சொந்த தமிழினத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடும் போதும் அப்படித் தான் கிண்டலடித்தார்கள். யாழ்ப்பாணத்தில் சங்கானை என்ற ஊரில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் பேசிய வாசகம் குறிப்பிடத் தக்கது. "சங்கானை ஷாங்காய் ஆக மாறுகின்றது." என்று கம்யூனிச வெறுப்புக் கொண்ட சிங்களவர்களையும் கவரும் வண்ணம் பேசினார். 

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்கள், நவீன தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியாதது மட்டுமல்ல, தேவைப்படாததும் கூட. தற்போது ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை சாட்டாக வைத்து, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சார நெடி வீசும் கட்டுரையை எழுதியுள்ள யமுனா ராஜேந்திரனுக்கும் அது குறித்த அக்கறை இல்லை.

புலம்பெயர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட தமிழர்களுக்கு, யமுனா ராஜேந்திரன் என்ற "தூய மார்க்சியவாதியை" நன்றாகத் தெரியும். இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து செலவை பங்கிட்டு இலக்கியக் கூட்டம் நடத்துவார்கள். அதிலே கலந்து கொள்பவர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமது சொந்தக் காசில் பிரயாணம் செய்து வருவார்கள். ஜமுனா ராஜேந்திரன் மட்டும் பயணச் செலவுக்கு பணம் கொடுக்கா விட்டால் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பார். 

விரல்விட்டு எண்ணக் கூடிய இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே வாசிக்கப்படும் சிறு பத்திரிகைகள், கடினமான பொருளாதார நெருக்கடிக்குள் வெளிவரும். அவற்றில் பிரசுரமாகும் கட்டுரைகளுக்கும் ஜமுனா ராஜேந்திரன் கறாராக பணம் வாங்கி விடுவார். விளம்பரப் பணத்தில் வெளியாகும், இலாப நோக்கில் நடத்தப்படும் வணிக சஞ்சிகைகளில் எழுதுவதற்கு பணம் கேட்பதில் எந்த தவறும் இல்லை. கொடுக்க வேண்டியதும் அவர்களது கடமை தான். ஆனால், விளம்பரமே கூடாது என்ற பிடிவாதத்துடன் வெளிவரும் சிறு சஞ்சிகைகள் நஷ்டத்தில் நடத்தப்படுகின்றன. யமுனா ராஜேந்திரனுக்கு அது குறித்த சமூகப் பார்வை எதுவும் கிடையாது. காசு கொடுத்தால் கட்டுரை கிடைக்கும்.

கடந்த இரு தசாப்தங்களாக தன்னை தூய மார்க்சியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் யமுனா, தமிழ் இனவாத சேற்றுக்குள் நின்று கொண்டு, இடதுசாரிகள் மீது சேறள்ளிப் பூசுகிறார். அவர் குளோபல் தமிழ் நெட்வேர்க் இணையத்தளத்திற்கு எழுதிய, "இந்திய இலங்கை இடதுசாரிகளும், நிபுணர் குழு அறிக்கையும்" என்ற கட்டுரை கீற்று இணையத் தளத்திலும் மறுபிரசுரமானது. 

அந்தக் கட்டுரையில் அவர் என்ன சொல்ல வருகிறார்? "இந்திய, இலங்கை இடதுசாரிக் கட்சிகள் தமிழர் விரோத நிலைப்பாட்டில் இருந்து, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை எதிர்க்கின்றன. இலங்கை, இந்திய அரசுகளுக்கு ஆதரவளிக்கும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல், புரட்சிகர பாதையை கைவிடாத கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வரை, நிபுணர் குழு அறிக்கையை ஏகாதிபத்திய சதியாக பார்க்கின்றனர். அவர்கள் தமிழர்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்கள்?" இது போன்ற விமர்சனங்களுடன் எழுதப் பட்டுள்ளது. 

அது சரி, இந்தியாவில், இலங்கையில் இருக்கும் அத்தனை இடதுசாரிக் கட்சிகளையும் விமர்சிக்கும் யமுனா ராஜேந்திரன் முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழர்கள் அனைவரும் இனவாத சக்திகளுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும், என்பதைத் தானே? தமிழகத்தில் வினவு போன்றவர்கள், "தமிழினவாதக் கட்சிகள்" என்று கூறுவதையிட்டு விசனப் படுகிறார். "தமிழினவாதக் கட்சிகள்" இனவாதம் பேசவில்லை என்று, யமுனா ராஜேந்திரன் எங்காவது நிரூபித்திருக்கிறா என்று தேடிப் பார்த்தேன். "ஐயோ, எங்களை இனவாதிகள் என்கிறார்களே!" என்ற ஆதங்கத்தை தவிர வேறெதையும் காணவில்லை.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் காலத்தில், "பெரும்பான்மையினர் விருப்பத்தை ஆதரிப்பது" என்ற சாட்டில், இடதுசாரிக் கட்சிகளும் "தேசிய நீரோட்டத்தில்" இழுபட்டுச் செல்லும். இந்தப் போக்கு, சிங்கள இடதுசாரிகள் மத்தியில் மட்டும் காணப்படும் குறைபாடல்ல. சிங்கள இனவாதிகள், பெரும்பான்மை சிங்கள மக்களை கவர்ந்த காலத்தில், மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக சிங்கள இடதுசாரிகளும் அவர்களைப் போல பேசக் கற்றுக் கொண்டனர். ஆனால், அது இறுதியில் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்தது மட்டுமல்ல, இடதுசாரிக் கட்சிகள் பலவீனமடையவும் காரணமாக அமைந்தது. தமிழ் இடதுசாரிகள் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. 

ஈழத்தில் தமிழ் இனவாதக் கருத்துக்கள் மேலோங்கியிருந்த கடந்த முப்பதாண்டு காலத்தில், ஈழத் தமிழ் இடதுசாரிகளில் பலர் அதற்குள் உள்வாங்கப் பட்டனர். தற்போது ஈழத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய இடதுசாரிகளே எஞ்சியுள்ளனர். தற்போது இதே மாதிரியான போக்கு தமிழகத்தில் காணப் படுகின்றது. தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களைப் போல பேசுவதால் மக்கள் ஆதரவை திரட்ட முடியும் என்று நம்பும் தமிழக இடதுசாரிகள் பெருகி வருகின்றனர். அவர்களை முற்று முழுதாக, இனவாதத்தினுள் இரண்டறக் கலக்க வைக்கும் இரசாயண மாற்றத்தை, யமுனாவின் கட்டுரை வேண்டி நிற்கின்றது.

சர்வதேச நிலைமைகளை அலசி ஆராய்ந்து, தமிழ் தேசியத்திற்கு சரியான வழியைக் காட்டும் வேலையை யமுனாவின் கட்டுரை செய்யவில்லை. ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக நடந்து கொண்டால், தமிழ் தேசியம் தப்பிப் பிழைக்கும் என்ற முன் அனுமானத்துடன் எழுதப் பட்டுள்ளது. ஏகாதிபத்திய நாடொன்றினால் மேற்கொள்ளப்படும் "மனிதாபிமானத் தலையீடு", தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும், என்று நம்பச் சொல்கிறார். 

இதற்கு முன்னர், ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனிதாபிமானத் தலையீடுகளை கண்டித்து கட்டுரைகள் எழுதித் தள்ளிய யமுனா ராஜேந்திரன் தான் இப்படி எழுதுகிறார். கடந்த அறுபதாண்டுகளாக, இஸ்ரேலை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமும், பாதுகாப்புச் சபையும் கொண்டு வந்த கண்டனத் தீர்மானங்கள், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்கவில்லை. 

அதையும் யமுனா ராஜேந்திரன் தான், ஒரு காலத்தில் எழுதினார்! தற்போது, ஐ.நா. மீது ஒட்டு மொத்த தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும், அப்போது தான் ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் என்று உடுக்கடிக்கிறார். "ஐ.நா. தீர்மானங்களால் பாலஸ்தீனர்களுக்கு கிடைக்காத நீதி, தமிழர்களுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்பதை யமுனா ராஜேந்திரன் விளக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமானத் தலையீட்டுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், மக்கள் எந்தளவு சுபீட்சமாக வாழ்கின்றனர் என்பதையும் யமுனா விளக்குவாரா? ஒரு வேளை, அந்த மக்களுக்கு நேர்ந்த அவலம், தமிழ் மக்களுக்கும் நேரிட வேண்டும் என்பது யமுனாவின் உள்நோக்கமாக இருக்கலாம்.

மார்க்சியர்கள் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றனர் என்பது, யமுனா முன் வைக்கும் குற்றச்சாட்டு. எப்போதும் தமக்கு சாதகமான பதில்களை பெற விரும்புவோர், உண்மைகளை ஆராய்வதில்லை. இலங்கையில் மனித உரிமைகள் நிறுவனங்களை ஸ்தாபித்ததும், அதனை அரசியல் நடவடிக்கையாக முன்னெடுத்ததும் மார்க்சியர்கள் தான். 

தென்னிலங்கையில் 1971 ஜேவிபி கிளர்ச்சி நடந்த காலத்தில் இருந்தே அந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன. வட இலங்கையில் சாதியொழிப்பு போராட்டம் நடந்த காலத்தில், முதல் தமிழ் மனித உரிமைகள் அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. பரவலாக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட எண்பதுகளில், அந்த வலைப்பின்னல் விரிவடைந்தது. சிங்கள இடதுசாரிகளும், தமிழ் இடதுசாரிகளும் ஆற்றிய பங்கை இங்கே குறிப்பிட இடம் போதாது.

புலம்பெயர்ந்த நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்திய அமைப்புகளால், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் கண்டிக்கப் பட்டன. இந்தக் காலத்தில் தமிழ் தேசியவாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஆரம்பத்தில் மனித உரிமை மீறல்கள் பிரச்சினை குறித்து அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புகள், போரில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் குற்றம் சாட்டி வந்தன. 

அவற்றை மேற்கோள் காட்டும் சர்வதேச சமூகம், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. இதனால், மனித உரிமைகள் விவகாரம் என்றால் தமிழ் தேசியவாதிகளுக்கு வேப்பங்காயாக கசத்தது. பிற்காலத்தில், அமெரிக்காவில் உள்ள "லாபி குரூப்" பாணியில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை ஆவணப் படுத்தி சமர்ப்பிக்கத் தொடங்கினார்கள். இந்த அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் ஐ.நா. மனித உரிமை ஆணையகமும், மேற்கத்திய அரசுகளும், அந்த அமைப்புகளை ஒரு குறிப்பிட்ட அரசியல் அல்லது சமூகம் சார்ந்ததாக மட்டுமே கருதி வந்தன.

தமிழர்கள் மனதில், சர்வதேச சமூகம் பற்றிய மாயையை உருவாக்கும் வேலையை ஜமுனா கச்சிதமாக செய்திருக்கிறார். குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா என்று எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ, அங்கெல்லாம் "மனிதாபிமான ஏகாதிபத்தியம்" தலையிட்டு வருகின்றது. ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தமிழர்களுக்கும் நன்மையே செய்யும் என்பது முன்னாள் மார்க்சியரான யமுனாவின் வாதம். இன்னலுற்ற ஈழத் தமிழர்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் யமுனா ராஜேந்திரன், அதற்காக முன் வைக்கும் வாதங்களையும் அடுத்துப் பார்ப்போம்.

Part 2:"சிங்கள- தமிழ் தொழிலாளர் வேற்றுமை ஓங்குக!" - யமுனா

(தொடரும்)