Showing posts with label சாதியம். Show all posts
Showing posts with label சாதியம். Show all posts

Saturday, February 15, 2025

யாழில் பெரியார் சிலை உடைப்போம்! வெள்ளாள- தாலிபான்கள் மிரட்டல்!!


ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஒரு சைவ மத அடிப்படைவாதியும், ஆதிக்க வெள்ளாள சாதிவெறியனுமான  ஆறுமுக நாவலனின் சிலை இருக்கலாம் என்றால், ஏன் சமூக நீதிப் போராளியான பெரியாருக்கு சிலை வைக்க முடியாது?

இவ்வளவு காலமும் தமிழ்த் தேசிய முகமூடிக்கு பின்னால் இருந்த வெள்ளாள ஆதிக்க சாதி வெறியர்கள் தற்போது தமது சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

Well done. சாதி வெறி, இனவெறி, மதவெறி பிடித்தலையும் காகிதப் புலிகளின் முகத்திரை கிழிகிறது!

இதற்கு தான் ஈழத்திற்கு பெரியார் அவசியம்.

யாழ் நகரில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல் வந்தவுடனே, புலித் தோல் போர்த்திய வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. 

"சிலை உடைக்கப் படும்!" என்று இந்த சாதி வெறியன் பிரான்சில் இருந்து கொண்டு மிரட்டுகிறான். பிரான்ஸ் போன்ற ஜனநாயக பண்பு கொண்ட நாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டு, தாலிபான், ISIS பாணியில் பெரியார் சிலையை தகர்க்க போவதாக மிரட்டும் அளவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் சாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது. இ‌ந்த சாதி வெறி ஓநாய்களை தான் "தீவிர தமிழ்த் தேசியவாதிகள்" என்று சிலர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

"பெரியார்களுக்கு எல்லாம் பெரியார்" பிரபாகரன் சமூகநீதி குறித்து எழுதிய ஒரு புத்தகம் வேண்டாம், ஒரு கட்டுரை காட்டட்டும் பார்ப்போம்? சும்மா வாயில் வந்த படி எதையாவது உளற வேண்டியது. 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக இனப் படுகொலை நடந்திருக்காது.  40000 மாவீரர்களை பலி கொடுத்து இருக்க மாட்டீர்கள். 

ஏனென்றால் இனப் படுகொலைக்கு பலியான, மாவீரர்களான மக்கள் 90% ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அல்லது வறுமையில் வாடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

 சாதியின் பெயரில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக, பெரியார் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார். ஆனால் இவன் போன்ற வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களை தமிழீழ வேள்வித் தீயில் வீசி கொன்று குவித்து விட்டு, "மாவீரர்களை வணங்குகிறேன்... இனப் படுகொலைக்கு நீதி கேட்கிறேன்..." என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாம் கபட நாடகம். பகல் வேஷம். தமிழர்களை சுரண்டி வாழும் இவன் போன்ற சாதிவெறி ஓநாய்களை விரட்டி அடிக்க வேண்டுமானால் ஈழத்திற்கு பெரியார் தேவை. இனிமேல் நடக்கப் போவது தான் உண்மையான விடுதலைப் போராட்டம்.



Monday, September 04, 2023

முல்லா வேலனின் "சாதியமும் தேசியமும்" பிரார்த்தனைக் கூட்டம்

 

கிளப் ஹவுசில் முல்லா வேலன் (தோழர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தாது. அவர் ஒன்றில் Dogmatist அல்லது Fundamentalist.) தலைமையில் சாதியமும் தேசியமும் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேசினார்கள். வழமை போல இனவாத- பாஸிஸத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பேச அழைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் சிலர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் நியாயமாகப் பேசினார்கள். அதை முதலில் பாராட்ட வேண்டும்.

அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வந்ததாவது, அருண் சித்தார்த் தான் இவர்களை இந்தளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அதாவது, இவர்கள் பல வருட காலமாக அருண் சித்தார்த் மீது "கஞ்சா வியாபாரி, அரச கைக்கூலி" போன்ற பல்வேறு வகையான அவதூறுகள் செய்து, குற்றச்சாட்டுகள் சுமத்தி புறக்கணித்து வந்துள்ளனர். அருண் சித்தார்த்தை ஓரம் கட்டலாம் என நினைத்து மாறாக அவனை வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதை அங்கு உரையாற்றிய பலர் எதிரொலித்தனர்.

இது தொடர்பாக பாரதி எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. "அருண் சித்தார்த் ஒரு முக்கியமில்லாத, சாதாரண நபர் என்றால் எதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை அவனைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்றார். அதையே செண்பகம் பறவை (முன்பு இசைவேந்தன் என்ற பெயரில் இருந்தவர்) என்பவரும் கூறினார். "அருண் சித்தார்த்தின் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அங்கு இருக்கும் சாதிப் பிரச்சினையை அரசியல்வாதிகள் பேசத் தவறியதை, அவர் பேசுகிறார். நாளைக்கு இன்னொரு அருண் சித்தார்த் வரலாம்." என்றார்.

ஆயினும் அவரும் தற்போது அங்கே சாதி ஒடுக்குமுறை இல்லை என்றே வாதிட்டார். (இதே மாதிரி ஒரு சராசரி சிங்களவரைக் கேட்டால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லை என்பார்.) அவர் "ஒடுக்கப்படுத்தப் பட்டவர்கள்" என்று புதிய கலைச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். அதாவது அது இறந்த காலம். இப்போது இல்லை என நாம் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், அவர் அறியாமலே முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினார். ஒரு தடவை ஒடுக்குமுறை இல்லை என்றவர் மறு தடவை ஒடுக்குமுறையை விபரித்து பேசினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாராளுமன்ற பிரதிநிதி ஆக்காதது ஒரு குறைபாடு என்றார். அது தானே ஒடுக்குமுறை? சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தானே ஈழப்போர் தொடங்கியது? சிங்களப் பேரினவாதிகளின் அதே ஒடுக்குமுறை கொள்கையைத் தானே, தமிழ்ப் பேரினவாதிகளும் பின்பற்றுகிறார்கள்? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இசைவேந்தன் (செண்பகம் பறவை) அவர் அறியாமலே இன்றைய சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதானமான சாதிய ஒடுக்குமுறையை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகள் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது மகனுக்கு கொடுக்கும் வழக்கம் காரணமாக முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது என்றார். உண்மை தான். அரசு வேலைவாய்ப்புகளில் சிங்களவர்களை போட்டு விட்டு தமிழர்களைப் புறக்கணித்த படியால் தானே ஈழப் போராட்டம் தொடங்கியது? அதே பிரச்சினை, அதே ஒடுக்குமுறை, வடக்கில் சாதியின் பெயரால் நடைமுறையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசம்.

முந்திய காலங்களில் ஒடுக்குபவன் தன்னை சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வான். இன்றைய காலத்தில் இன அடையாளத்தை போர்வையாக மூடிக் கொள்கிறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும், இன்றும் ஒடுக்குபவனும், ஒடுக்குமுறையும் ஒன்று. தெற்கில் சிங்கள இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது கொவிகம சாதிய மேலாதிக்கவாதிகள். அதே மாதிரி வடக்கில் தமிழ் இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது வெள்ளாள சாதிய மேலாதிக்கவாதிகள். மேலதிக விளக்கம் தேவையில்லை.

தெற்கில் சிங்கள மேலாதிக்கம் என்றால் வடக்கில் வெள்ளாள மேலாதிக்கம் உள்ளது. இரண்டும் ஒடுக்குமுறை சக்திகள் தானே? நிச்சயமாக இந்த இடத்தில் சாதிப் பிரச்சினையின் மூலக்கருவுக்கு கிட்ட வந்து விட்டோம். ஆனால் கேட்பவர்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட முன்னர் முல்லா வேலன் விழித்துக் கொண்டார். இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் தடுத்தார். "இது வேறொரு தளத்திற்கு போகிறது.... அது இலங்கை அரசின் திணைக்களத்திற்குள் உள்ள பிரச்சினை... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..." என்று பேசி மழுப்பினார். இப்படித் தான் உண்மையான பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய விடாமல் திசைதிருப்பப் படுகின்றன. 
 

Sunday, August 27, 2023

சாதியால் பிரிந்த முன்னாள் போராளிக் குடும்பம்

 

இது ஓர் உண்மைக்கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு புலிப் போராளிகள் குடும்பத்தின் கதை. கணவன், மனைவி இருவரும் முன்பு போராளிகளாக இருந்த காலத்தில் இயக்கத்திற்குள்ளே சாதி கடந்த கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவன் உயர்த்தப்பட்ட சாதியையும், மனைவி தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. மனைவி தன்னிடமிருந்த நகைகளை விற்று அல்லது அடைவு வைத்து கணவனை சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

கணவன் விடுமுறைக்கு வந்த காலத்தில், அவரது பெற்றோர் சாதியை காரணமாக காட்டி பிரித்து விட்டனர். அவருக்கு உடனடியாக தமது சாதிக்குள் ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைத்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி விட்டனர். இந்த விடயங்கள் யாவும் மனைவிக்கு தெரியாமல் மறைக்கப் பட்டன. தற்போது அவர் கணவரது உதவியுமின்றி தனியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப் படுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இது தான் புலிகள் சாதியை ஒழித்த (ஒளித்த) இலட்சணம். சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வராமல், புலிப் போராளிகளுக்கு மட்டும் கலப்பு மணம் செய்து வைப்பதால் சாதி ஒழியப் போவதில்லை. உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் தொடங்கவேயில்லை.

Thursday, August 24, 2023

கிளப் ஹவுசில் நடந்த சாதி ஒளிப்பு 🤡 நாடகம் ⁉️

 

கிளப் ஹவுசில் இனவாத- பாஸிஸ்டுகள் ஒன்று சேர்ந்து "சாதி ஒழிப்பு மகாநாடு" நடத்தினார்கள். அங்கே இரண்டு கோமாளி "மார்க்சியர்களும்"(?) சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினார்கள். அவர்கள் தமது வழக்கமான இனவாதத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் புரியா விட்டாலும் இனவாத தற்குறிகள் "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்து "மார்க்சிய"(?) கோமாளிகளை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அடடே... என்ன இது இனவாதிகள், அதிலும் சிலர் தீவிர சாதிவெறியர்கள், திடீரென சமூக அக்கறையுடன் பேசுகிறார்களே!" என்று எட்டிப் பார்த்தால் ஒரே வழ வழா, கொள கொளா பாணியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாநாட்டில் கலந்து கொண்ட "அறிவுஜீவிகள்" சாதி ஒழிப்புக்கு (திருத்தம்: ஒளிப்புக்கு) முன்மொழிந்த தீர்வுகள்: 
- எல்லோருக்கும் கல்வி அறிவூட்டி சாதியை ஒழித்து விடுவார்களாம். ஏற்கனவே இலங்கையில் 95% எழுத்தறிவு இருப்பதை இவர்களுக்கு யாராவது சொல்லி விடுங்கள்.

- பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்து சாதி தவறு என்று உணர வைத்து விடுவார்களாம். பாலர் வகுப்பில் இருந்தே ஆத்திசூடி சொல்லிக் கொடுக்கிறார்கள். :""சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் கற்பிக்கிறார்கள். அட போங்கப்பா... நன்னெறி போதிக்கும் ஆசிரியரே தனிப்பட்ட வாழ்வில் சாதி பார்ப்பார். இங்கே ஊருக்கு தான் உபதேசம்.

இனவாத- பாஸிஸ்டுகள் திடீரென சமூக அக்கறை கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு தடவை சாதியே இல்லை என்பார்கள். இன்னொரு தடவை அதே வாயால் சாதிப் பிரச்சினை பற்றி உரையாடுவோம் என்பார்கள். அதற்கு காரணம் உள்ளது. சமுதாயத்தில் உள்ள மிக முக்கியமான பகை முரண்பாடுகளான சாதிய/வர்க்க பிரச்சினைகள் மேலெழும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு, மறுபடியும் கிடப்பில் போடுவதற்கான நாடகம்.

உலகில் உள்ள எல்லா பாஸிஸ்டுகளும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி". அந்த கட்சிக்கும் சோஷலிசத்திற்கும், தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் சுருக்கமாக நாஸி (தேசியம்) என்ற சொல்லை மட்டும் பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்.

"அந்த கூட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்கள் தானே? அப்போது (சாதி ஒழிப்புக்கான) தீர்வையும் சொல்லி இருக்கலாமே?" என்று கடிந்து கொண்டார் ஒரு நண்பர். வாஸ்தவம் தான். ஆனால் முதலில் என்னை பேச விட்டால் தானே? ஏற்கனவே அழைத்து விட்டு அடித்து துவைக்க காத்திருந்த இனவாத- பாஸிஸ்டுகள் நடத்திய கூட்டத்தில் நான் எந்த கருத்தை வைத்திருந்தாலும் பாய்ந்து பிடுங்கி இருப்பார்கள். உண்மையில் அது தான் நடந்தது.

"சிங்களவர்களிடம் சாதி இல்லை என்று டிவிட்டரில் எழுதினீர்களாமே?" என்று புலனாய்வுத்துறை அதிகாரி போன்றிருந்த ஒருவர் விசாரணையை ஆரம்பித்தார். உடல் ரீதியாக சித்திரவதை செய்யாத குறை. (ஆனால் உளவியல் சித்திரவதைக்கு குறைவில்லை) "சிங்களவர்கள் மத்தியில் சாதி இல்லை என்று எப்போது சொன்னேன்?" நான் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

அட தற்குறிகளே! சிங்களவர் மட்டுமல்ல, பாகிஸ்தானியர் மத்தியிலும் கூட சாதிகள் உள்ளன. "என்னால் ஜப்பானில் உள்ள சாதியம் பற்றியும் கூற முடியும். ஆனால் அதைப் பற்றி இவர்களுக்கென்ன கவலை?" - இதை அங்கே நேரடியாக கேட்டிருந்தேன்.

சிங்களவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு, திருகோணமலையில் வாழும் தமிழர்களும் தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். என்னை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் போலிருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களை மட்டும் விட்டு விட்டு, சிங்களவர்களை மட்டும் தூக்கிப் பிடித்தார். (அட... அப்போது தானே இனத்துரோகி பட்டம் சூட்டலாம்? புலனாய்வுத்துறை மூளை என்றால் சும்மாவா?)

ஆகவே, அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டாராம். குற்றப் பத்திரிகை வாசித்தார். "கனம் கோட்டார் அவர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் அவரை தமிழினத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன். அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும். அவருக்கு எந்த தமிழனும் சோறு, தண்ணி கொடுக்க கூடாது." என்று வழக்காடினார்.

என்ன கொடுமை இது? சாதி ஒளிப்பு, ஸாரி மழுப்பு, ச்சே ஒழிப்பு மகாநாட்டில் பேச வந்த என்னையே தீண்டத்தகாதவன் ஆக்கி விட்டார்களே? ஒருவேளை காலச்சக்கரத்தில் ஏறி 17ம் நூற்றாண்டுக்கு வந்து விட்டேனோ? எதற்கும் ஒரு தடவை மொபைல் நாட்காட்டியை தட்டிப் பார்த்தேன். ஆண்டு 2023 எனக் காட்டியது. அப்பாடா... இப்போது நடப்பது 21ம் நூற்றாண்டு தான்.

கிளப் ஹவுஸில் கைகோர்ட் நீதிபதி மாதிரி இருந்த ஒருவர் தீர்ப்பளிக்க முன்னர் ஒரு கேள்வி கேட்டார்: "நீவிர் யாழ்ப்பாணத்தில் மட்டும் சாதிய- தீண்டாமை இருப்பதாக சொல்கிறீர். யாழ்ப்பாணத்தார் மீது அப்படி என்ன வன்மம்?" என்று ஒரே போடாகப் போட்டார்.

ஐயயோ, இனி நீதிபதி ஷரியா சட்டத்தின் படி அல்லாவின் நாமத்தால் கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கப் போகிறார். அல்லாவே, ஆட்டுக்குட்டியே என்னை காப்பாற்ற வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

யோவ், மூளையை தலைப்பாகை சுருட்டி வைத்திருக்கும் அநீதிபதி! - அப்படி சொல்ல வந்ததை வாய்க்குள் வைத்துக் கொண்டு, "அடக்குமுறையை எதிர்த்தால் அது வன்மமா... சமூக ஒடுக்குமுறை பற்றி பேசினால் வன்மம் என்பீர்களா? இது என்ன நியாயம்?" என்று கேட்டு விட்டேன்.

நான் அப்படி கேட்பேன் என்று நீதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கு. ஒரு நொடி வாயடைத்து போனவர் சுதாகரித்துக் கொண்டே "அது வந்து... போயி... சிங்களவர்களிடமுள்ள தீண்டாமையை பற்றி பேச மட்டும் அனுமதிக்கப் படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசக் கூடாதென ஆயத்துல்லா பாணியில் ஃபத்வா உத்தரவு போட்டார்.

என்னடா இது? தப்பித் தவறி ஒருவேளை ஆப்கான் தாலிபான்களின் கிளப் ஹவுஸுக்கு வந்து விட்டேனோ? நான் யோசிக்க கொண்டிருக்கும் பொழுதே ரூமை விட்டு ரிமூவ் பண்ணி விட்டார்கள். அப்பாடா, மறுபடியும் நிஜ உலகிற்கு வந்து விட்டேன்.

Monday, July 03, 2023

தமிழீழத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்

 "ஈழத்தில் சாதி இல்லை" என்று பூசி மெழுகிய பாசிச பன்னாடைகள் அனைவரும் வரிசையில் வரவும். 

இது என்ன? 

வவுனியா மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊர்களின் பெயர்கள்: 

1. பறையனாலங் குளம் 

2. முதலியார் குளம் 

இன்றைக்கும் அதே சாதிப் பெயர்களுடன் புழக்கத்தில் உள்ளன. இவை முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருந்த காலத்தில் அவர்களும் கண்டுகொள்ளவில்லை. புலிகளின் ஊடகங்களில் எந்த விதக் கூச்சமும் இல்லாமல் இந்த இடப்பெயர்கள் உச்சரிக்கப் பட்டன. அது சரி, சாதியம் குறித்த அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? 

 

தமிழீழ அரசு ஆட்சியதிகாரம் செலுத்திய வன்னிப் பிரதேசத்தில் உள்ள சாதிப் பெயர் கொண்ட ஊர்களின் விபரம்: 

  • 1. "குருக்கள்" புதுக்குளம் 
  • 2. "செட்டி"குளம் 
  • 3. "பண்டாரி" குளம் 
  • 4. "வெள்ளாம்"குளம் 
  • 5. "செட்டியார்" குளம் 
  • 6. காசி "உடையார்" கட்டைக்காடு 
  • 7. "பள்ளன்" கோட்டை 
  • 8. "நளவன்" குளம் 
  • 9. "தச்சன்" மருதமடு 
  • 10. "உடையார்"கட்டு 
  • 11. "விஸ்வ"மடு 
  • 12. "பள்ள"மடு 
  • 13. "கரையாம்"முள்ளிவாய்க்கால் 
  • 14. "வெள்ளாம்"முள்ளிவாய்க்கால் 

 (இவற்றை விட இன்னும் நிறைய உள்ளன....) 

உலகப் புகழ் பெற்ற உருட்டுகள்: 

"ஈழத்தில் சாதிகள் இல்லை... யாரும் சாதி பார்ப்பதும் இல்லை..." "புலிகள் எப்போதோ சாதியத்தை அழித்து விட்டார்கள்...." 

"ஐயயோ... புதிதாக சாதியத்தை புகுத்த சிங்கள அரசு சூழ்ச்சி செய்கிறது..." 

ஆகவே ஆண்டவரே இந்த பிசாசு தமிழர்களை பிடிக்காமல் பார்த்துக் கொள்வீராக... 

அல்லேலூயா! 

ஆமென்!

Monday, January 24, 2022

கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த சாதிவெறி பூனைக்குட்டிகள்

கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்: 

"ஏம்பா, சபேசன், கலை மார்க்ஸ் மாதிரியான ஆளுங்க ஈழத்தில சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறாங்க... அங்க தான் சாதி என்ற ஒன்று இல்லையே? அப்புறம் எப்படி ஒழிப்பாங்க?" 

"அது வந்து.... அவங்களாகவே அங்க மொதல்ல புதுசா சாதிகளை உருவாக்கி வளர்த்து விடுவாங்களாம்.... அதுக்கு அப்புறம் அதையெல்லாம் அவங்களே வந்து ஒழிப்பாங்களாம்!" 

"இதெல்லாம் ஒரு ஏஜெண்டா கீழே நடக்குதில்லே?" 

"ஆமாம்மா... தமிழர்க ஒற்றுமையாக இருந்தா சீனாவை விடப் பெரிய ஒலக வல்லரசா மாறிடுவாங்க... அதை தடுக்கனும்னு நெனைக்கிறாங்க!"

 
கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த ஈழத்து சாதிவெறி பூனைக்குட்டிகள்

1. இந்தியாவில் பார்ப்பனர்கள் மாதிரி, ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ரிசர்வேஷன் (தரப் படுத்தல்) கொண்டு வந்தார்களாம். அவரைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் என்றால் யாழ் வெள்ளாளர்கள் என்று அர்த்தம். 

2. ஈழத்தில் சாதிக்கொரு கோயில், திருவிழாவில் சாதிப் பாகுபாடு இருக்கிறது தான். அதனால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். ஈழத்தில் நிறைய கலப்பு மணம் நடப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதாக கம்பி கட்டும் கதை பேசுகிறார்கள். 

3. இவர்கள் பெரும்பாலும் (95%) புலிகளை முகத்திரையாக மூடிக் கொண்டு சாதிவெறிக் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதனால் சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான விமர்சனத்தை, மிக இலகுவாக புலிகளுக்கு எதிரான கருத்தாக மடைமாற்ற முடிகிறது. இவர்கள் தமது சாதிவெறியை மறைப்பதற்காக மட்டுமே புலிகளை ஆதரிக்கிறார்கள். சில அறிவுஜீவிகள் கூட இதைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஈழத்து சங்கிகளின் கிளப் ஹவுஸ் கூட்டம் ஒன்றில், "ஈழத்தில் சாதிப் பிரச்சினை இருக்கிறது" என்று சொன்ன குற்றத்திற்காக, புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழ் பெரியாரிஸ்டான சபேசனை எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். "சாதி இருப்பதை ஒத்துக் கொள்கிறார்களாம்.... ஆனால் அதைப் பற்றி பேசாது விட்டால் அது தானாக மறைந்து விடும்" என்பது அவர்களது சங்கித்தனமான நிலைப்பாடு. 

அப்போது ஒருவர், ஒரு அவுஸ்திரேலிய வாசி, "சபேசன் என்ன சாதி என்று சொல்ல வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டார். சாதியின் பெயரை சொல்லா விட்டாலும், "உயர்ந்த பிரிவா, தாழ்ந்த பிரிவா" என்று குறிப்பிட வேண்டுமாம். "உயர்த்தப்பட்ட சாதி என்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்... தாழ்த்தப்பட்ட சாதி என்றால் பேசலாம்..." என்று விளக்கமும் சொன்னார். 

நல்ல வேளை, அங்கிருந்த பிற சங்கிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் கேட்பது தவறு என்று கேட்டவரை அடக்கி விட்டார்கள். நல்லது. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரான்ஸ்வாசி "வெள்ளாள பெண்களை வசியப் படுத்தும் நோக்கில் பெரியாரிசம் பேசுகிறார்கள்..." என்று வெளிப்படையாக சாதித் திமிருடன் பேசினார். அப்போது இவர்கள் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் சாதி பிரச்சினை பற்றி பேசினாலே அது "இலுமினாட்டிகளின் சதி" என்று பதறும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவர், "சதியை" முறியடிக்க ஒரு நல்ல ஐடியா சொன்னார். சிங்களவர்கள் மத்தியில் உள்ள அக முரண்பாடுகளை, சாதிப் பிரிவினைகளை வெளிப்படுத்தி கூர்மைப் படுத்த வேண்டுமாம். அதை பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமாம். இனிமேல் யாராவது தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிப்பிரச்சினை பற்றி பேச வந்தால் "சிங்களவர்களை பாருங்கள்" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமாம். சங்கிகள் என்றோர் பிரிவுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

"நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னுரிமை, மிகுதி பிற இனத்தவருக்கு என்று இட ஒதுக்கீடு கொடுக்க படும்." இவ்வாறு ஒருவர் கிளப் ஹவுஸ் கூட்டத்தில் தெரிவித்தார். அந்தக் கூட்டம் நடத்தியதும் நாதக தம்பிகள் தான்.

கவனிக்க: 1971 ம் ஆண்டு இலங்கையில் தரப்படுத்தல் கொண்டு வந்தார்கள். அதுவும் இன அடிப்படையில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை, மிகுதி தமிழர், முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப் பட்டது. நாம் தமிழர் கட்சியும் அதையே சொல்கிறது. இவர்களை பேரினவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு?  

****

Sunday, October 03, 2021

யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!

 

செப்டம்பர் 19, இரவு, யாழ். வட்டுக்கோட்டையில் 20 - 30 பேர்களைக் கொண்ட ஒரு வன்முறைக் கும்பல் அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதுவரை காவல்துறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட ஒருவரை தவிர மற்றவர்களை கைது செய்ய படவில்லை. இத்தனைக்கும் அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது நடந்து 12 நாட்கள் ஆகியும், இன்று வரையில் எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் செய்தி வெளிவரவில்லை. இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 4 தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டு தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன.

இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராத காரணம் என்ன? அரசின் செய்தித் தணிக்கையா? பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறை இருக்கிறதா? ஏன் இதைப் பற்றி எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் வாய் திறக்கவில்லை? எந்தவொரு தமிழ்தேசிய கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை?

காரணம்: அந்த வன்முறைக் கும்பல் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். அங்கு நடந்தது ஒரு சாதிவெறித் தாக்குதல்.




**********

இந்த சம்பவம் குறித்து விதை குழுமம் தொகுத்து வழங்கிய அறிக்கை:
 
வட்டுக்கோட்டை சாதி வெறித்தாக்குதல் பற்றிய அறிக்கை
https://vithaikulumam.com/2021/09/30/30092021/?fbclid=IwAR1KfIljdzXfQ7uY0QDBKJYKLMbnqnYbhx_E5i_dtlJeGxAfSelwfuUlSU8

வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் உள்ள முதலி கோயிலடிக்குப் பக்கத்தில் அரசடி என்ற கிராமத்தில் கடந்த 19.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சாதி வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை விதை குழுமச் செயற்பாட்டாளர்கள், நேரில் சென்று சந்தித்து உரையாடிய விடயங்களை இங்கு தொகுத்திருக்கிறோம். கைகள் வெட்டப்பட்டிருக்கும் இன்பநாதன் அவர்களின் வீட்டில் அந்தப் பிரதேச மக்களைச் சந்தித்தோம். பொலிஸ் ஒருவர் அந்த வீட்டுக்காரர்களின் பாதுகாப்பிற்காக வெளியிலிருந்தார்.

முதியவரும் இளைஞரும் ’முதல்ல தடியள் பொல்லுகளாலை அடிபட்டாங்கள், சுள்ளித்தடியோடை நிண்டம், பிறகு இப்ப வாளோடை வாறாங்கள், சுள்ளித்தடியோடை நிக்கிறம், இன்னும் கொஞ்சக்காலம் போக துவக்காலை சுடுவாங்கள், அப்பவும் சுள்ளித்தடியோடதான் நிக்கப்போறம்’. வெட்டப்பட்ட கையும் விரல்களும் மஞ்சள் நிற துணியில் ஏணைக்குள் கிடக்குமாறு அசைய இன்பநாதன் பேசிக்கொண்டிருந்தார். கிழிக்கப்பட்ட கையும் விரலுமாக அதன் வலியோடு அதே நேரம் உணர்ச்சிவசப்படாத உரத்த குரலோடு அவருடைய வார்த்தைகளிருந்தன. “பிள்ளையளை வேலைக்கு விட்டிட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு இருக்க வேண்டிக்கிடக்கு. சும்மா வாற பெடியளை மறிச்சு, காடுகளுக்கை கூட்டிக்கொண்டுபோய் வச்சு அடிப்பாங்கள். பந்தடிக்கப்போற பெடியள், பட்டம் விடப்போன பெடியள் எண்டு எல்லாரையும் மறிச்சு ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள். நாங்கள் சண்டைக்குப் போகேலாதுதானே, அவங்கள் வெளிநாட்டுக்காசு; வேலைக்கு போகத் தேவையில்லை. குடிச்சிட்டு என்னவும் செய்யலாம். நாங்கள் அப்பிடியில்லை, நாங்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகோனும். எங்களாலை சண்டை பிடிச்சுக்கொண்டே இருக்கேலாது.

அவங்களுக்கு நளவரைக் கொல்லோனும். இஞ்சை எங்களுக்கு மட்டுமில்லை செம்பாட்டன் தோட்டமெண்டால் அப்பிடி, மூளாயெண்டால் அப்பிடி, தொல்புரமெண்டால் அப்படி, சுழிபுரம் எண்டால் அப்பிடி, எல்லா இடமும் அப்பிடித்தான். தொடந்து இது நடந்துகொண்டிருக்கு, இண்டைக்கு நேற்றில்லை பல வருசமா இது நடந்துகொண்டுதானிருக்கு. எனக்குத் தனிய எண்டால் என்ர பிரச்சினைய நான் பாப்பன், இஞ்ச வா எனக்கடியப்பா எண்டு சொல்லுவன், ஆனால் எனக்கு மட்டுமில்லைத்தானே இஞ்ச நடக்கிறது. உந்த வேலித் தகரத்தப் பாருங்கோ. அந்தப்பக்கம் வேளாமாக்களின்ர வேலி, இது எங்கடை வேலி, வெறியிலை அடிக்கிறவன் அந்தப்பக்கம் இருக்கிறதையுமெல்லோ சேர்த்து அடிச்சுப்பிரிச்சிருப்பான். பாருங்கோ, அவங்கட ஆக்களின்ர தகரத்திலை ஒரு காயமிருக்கோ?

நாங்கள் இஞ்ச கிடங்குக்க இருக்கிற எலி மாதிரி. அவங்கள் எங்களைச்சுத்தி இருக்கிறாங்கள், வெக்கத்தை விட்டுச்சொல்லுறன் போற வாற எண்டாலே பயம். எங்கடையள் வேலைக்குபோய் பின்னேரம் ஆத்துப்பறந்து, செத்துப்பிழைச்சுத்தானுங்கோ வரும் வேலையாலை. அப்ப அதிலை மறிச்சு அடிப்பாங்கள், நொட்டைக் காரணங்கள் சொல்லுவாங்கள், வேலிலை குளை முறிச்சனியோ, மாங்காய் ஆஞ்சனியோ எண்டு அடிப்பாங்கள், பிள்ளையள் மூஞ்சை முகரை எல்லாம் வீங்கிப்போய் வருங்கள். ஏன் அடிச்சனி எண்டு போய்க் கேட்டால், பெட்டையளுக்கு விசில் அடிச்சவங்கள் எண்டு சொல்லுவாங்கள். வேலிக்குள்ளால எட்டிப் பார்த்தவங்கள், களை முறிச்சவங்கள் எண்டுவாங்கள். அவங்களுக்கு எங்கடை ’சாவுக்குச்சாட்டு வேணும்’ அவ்வளவுதான். கோயில், குளம், திருவிழாக்கள் எண்டால் நல்லா நடக்கும். அங்கையும் அடிபிடிதான். அங்கையும் எங்கடை பெடியளுக்குத்தான் அடிப்பாங்கள், குடிச்சிட்டு மட்டும் அடிபடுறவங்கள் தங்கடை பெடியளுக்கும் சேர்த்துத்தானே அடிப்பாங்கள், இவங்கள் தேடிவந்து ‘நளவனெண்டு’ சொல்லி அடிக்கிறாங்கள் எண்டால், உது என்ன?

என்ர மருமோன் அண்டைக்கு ஒருநாள் சும்மா வந்தவன், அண்டைக்கு அவனை கத்தியாலை குத்தக் கலைச்சுக்கொண்டு வந்தாங்கள், மனிசி ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடிக்காட்டி குத்தியிருப்பாங்கள். தங்கடை வெறிக்கு டேஸ்ட் நாங்கள்தான், ஒரு சவாரிக்குப்போனால் சண்டை, திருவிழாக்குப் போனால் சண்டை. அம்பது வயசு எனக்கு, கோட்சும் தெரியா பொலிசும் தெரியாது, ஆனால் உவங்களுக்கு நூறு கேஸ் கிடக்கு பொலிசிலை, உவங்கள் கொல்லுவாங்கள், எல்லாத்தையும் காசாலை உச்சிப்போடலாம் எண்டு தைரியம் உவங்களுக்கு”

இளைஞர் ஒருவர் அன்றைக்கு சம்பவத்தை விளக்கத்தொடங்கினார்.

அண்டைக்கு நானும் இவனும் வேலைக்குப்போய்ட்டு சைக்கிள்ளை வந்து கொண்டிருந்தனாங்கள், பேபிகடை முடக்கிலை திரும்பும்போது அவங்கள் நிண்டு பாத்தவங்கள், நாங்கள் போக மோட்டபைக்கில பின்னாலை வந்து தள்ளிவிட்டாங்கள். நாங்கள் தடுமாறி கிழுவம் வேலிக்கும் போஸ்ட்டுக்கும் நடுவில போய் விழுந்திட்டம், எழும்பி ஏன் அண்ணை தள்ளின்னீங்கள் எண்டு கேட்டம். அதுக்கு ‘எங்கையடா பம்மிப்பம்மிப் போறீங்கள், நீங்களோ வேலிலை கள்ளக் குளை முறிச்ச’ எண்டு கேட்டாங்கள். நாங்கள் ஏன் முறிக்கிறம், நீங்கள் கண்டனீங்களோ நாங்கள் முறிச்சதை எண்டு கேட்டம். குளை முறிக்கிறது நீங்கள் எண்டு நினைச்சுத் தள்ளின்னாங்கள் எண்டிச்சினம். அதுக்கேன் தள்ளுவான் கேட்டிருக்கலாம்தானே, நாங்களேன் குளை முறிக்கிறம் நாங்கள் என்ன விசரோ எண்டு கேட்டம். சரி விடுங்கோ நாங்கள் போறம் எண்டு வெளிக்கிட சைக்கிளை மறிச்சு முன் சில்லைத் தூக்கித் தூக்கிக் குத்திக்கொண்டு நிக்கிறார். ஆளுக்கு வெறி. நிக்கேலாத வெறி, நான் அப்பாட்டை அடிச்சுச் சொன்னன் இப்பிடி மறிக்கிறாங்கள் எண்டு.”

மகன்கள் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு இன்பநாதன் விரைந்து போயிருக்கிறார்.

‘’பிள்ளையள விடுங்கோ, உங்களுக்குத் தெரிஞ்ச பிள்ளையள்தானே எண்டு நாயிலும் கேவலமாக் கெஞ்சின்னான். ஒருமாதிரிப் பிள்ளையளைக் கொண்டு வாறதுக்குள்ள அவங்கடை ஆக்கள் நிறையப்பேர் வந்திட்டாங்கள். நான் கெஞ்சிக் கூத்தாடிச் சமாளிச்சுக் கொண்டிருக்க, அவங்கள்ள ஒருத்தன் கெல்மெட்ட களட்டி அடிக்க வந்திட்டான். நான் குறுக்க விழுந்து மறிச்சு சமாளிச்சு பிள்ளையளைக் கொண்டு வந்து சேர்க்கிறதுக்குள்ள, மோட்டச் சைக்கிளாலை கொண்டுவந்து சைக்கிள்ளை ஏத்திப்போட்டான். மகன் என்னை பிடிச்சு அங்காலை எறியாட்டி நான் துலஞ்சிருப்பன்.

என்னத்துக்காக இடிச்சனியள் எண்டு நாங்கள் கேக்கப் போக, ரெண்டு பேர் ஆட்டோவிலை வந்து ‘என்னதுக்கடா நளவா, பீனாண்டியள் இஞ்சாலை வாறியள்’ எண்டு கேட்டுக்கொண்டு பெரிய கல்லாலை எறிய வெளிக்கிட நாங்கள் ஓடி வந்திட்டம். அவங்கள் ரோட்டிலை லைட்ட நிப்பாட்டிட்டு எங்கட பக்கம் வாறாங்கள்.” என்றார் இளைஞர். அப்போதுதான் இன்பநாதன் அந்த இருளில் பளபளப்பாகத் தூக்கிக் காட்டிய வாளைப் பார்த்த சம்பவத்தைப் பற்றி விபரிக்கத் தொடங்கினார்.

“எனக்கு விளங்கீட்டு இவங்கள் வாளோடதான் வாறாங்கள் எண்டு, நான் வாளைக் கண்டிட்டன். அவன் வாளைத் தூக்கிக் காட்டுறான். டேய் பு…. யில் நளமே இந்தா பத்துத்தலை உறுளுமடா எண்டுகொண்டு வாறான். வாள் பளிச் பளிச்செண்டு மின்னுது. கதைச்சு சமாளிக்கத்தானே வேணும் எண்டு, முன்னாலை போனன், அண்ணை இஞ்ச வாவண்ணை கதைப்பம் எண்டு நான் கேட்டு முடிக்க முதல் கையுக்கு வெட்டிப் போட்டான், விரலும் பறந்து இந்த வெட்டும் விழுந்திட்டு. நான் பைப்ப எடுத்து விசுக்காட்டி அண்டைக்கு என்ர தலை போயிருக்கும். பெடியனுக்கு வெட்ட ஓங்கப் பெடியன் தகரத்தாலை விழுந்து அங்காலை ஓடிட்டான். அதுக்குப் பிறகு அடி நடக்குது, சும்மா சறாம் புறாமெண்டு தகரங்களை உந்த நீட்டுக்கு வேலியளை வெட்டி விழுத்திக்கொண்டு போறாங்கள். வேலியைக் கொழுத்தடா, வீட்டை கொழுத்தடா எண்டு கத்துறாங்கள்.

திருவிழா, சவாரி போன்ற நிகழ்வுகளிலும், வீதிகளில் போகும் போதும் இளைஞர்களுக்கு அடிப்பது துன்புறுத்துவது முதலான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கிராம மக்கள், தீடீரென இன்பநாதன் வாளால் வெட்டப்பட்டு, ‘நளவருடைய’ தகர வேலிகளும், கதவுகளும் நொறுக்கப்படுமென்பதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. இருட்டுக்குள் அவர்கள் பதுங்க, இருபது நிமிடங்களுக்கு மேல், ஆமியும் இயக்கமும் சண்டையில் ஒரு இடத்தைக் ‘கட்டுப்பாட்டில்’ வைத்திருப்பது போல் அவ்விடத்தை வைத்துக்கொண்டு ஆதிக்க வெள்ளாளர்கள் ஆடிய சதிரை இன்பநாதன் அவர்கள் விபரிக்க விபரிக்க குரல் நடுங்கியது.

“அவங்களுக்கு சண்டை செய்து பழக்கம் தானே, அவங்களிட்ட வாள் இருக்கு எங்களிட்டப் பாளைக்கத்தி கிடக்கு, அது எங்கடை தொழில் செய்யிற ஆயுதம், அதுக்கு உவங்கள் பயம், ஆனால் நாங்கள் தொழிற்செய்யிற ஆய்தத்தால குத்துவெட்டுக்குப் போமாட்டம். அதோட எங்கள் எல்லாரிட்டையும் ஆயுதம் இல்லை. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு தொழிற் செய்யிறம்தானே. அவங்களுக்கு நாங்கள் அடங்கி இருக்கோணும் எண்டு நினைக்கிறாங்கள். ஆனா எங்களுக்குச் சண்டைக்கு விருப்பமில்லை. எங்களை எல்லாருக்கும் நல்லாவே தெரியும். பழக்கமான முகங்கள்தான். அடிக்கிறவங்கள்தான். ஆனால் இப்பிடி வெட்டிற அளவுக்கு போவாங்கள் எண்டு நாங்கள் நினைக்கேல்லை. பிள்ளைத்தாச்சி பிள்ளையள் ஒருபக்கம், குழந்தைப்பிள்ளையள் ஒருபக்கம், குமர் பிள்ளையள் ஒருபக்கம் ஓடிப் பதுங்குதுகள், கத்துதுகள், பிள்ளைத் தாச்சிப் பிள்ளைய வேலிக்காலை தள்ளி ஓட விட்டம்.

கல்லுமழை. அப்பிடியே ஒரு பத்து நிமிசம் கடகத்துக்க கல்லுக் கொண்டு வந்து எறிஞ்சாங்கள். மழை மாதிரிக் கல்லு வருது. இந்தக் கொட்டிலெல்லாம் சரி. எல்லாரும் வீட்டுக்குள்ள ஓடிட்டம். அவங்கள் சண்டேலை நல்லா ஊறினவங்கள் எல்லாரும் கெல்மெட் போட்டுத்தான் வருவாங்கள். அண்டைக்கு ஓடேல்ல எண்டா பெடியளை வெட்டி இருப்பாங்கள். அந்தக் கதவு, வேலிகளை என்ன செய்திருக்கிறாங்கள் பாருங்கோ. எங்களுக்குச் சண்டேலை விருப்பமில்லை. அவங்களுக்கு அதுதான் வேணும். நாங்கள் ஒரு வழக்கெடுக்கேலா, எங்களுக்கு ஒரு பிரச்சினையெண்டு ஒரு இடத்த போகேலா, ஜனநாயகம், ஜனநாயகம் எண்டுறாங்களே, ஜனநாயகம் எண்டால் என்ன?”

இன்பநாதனின் நினைவு என்பது அவருக்கு விபரம் தெரிந்த இருபத்தைந்து வருடங்களில் இருந்து பின்னிக்கொண்டு மேலெழுந்து வெட்டப்பட்ட அவருடைய கைவரை ஏறுகின்றது. ஒவ்வொரு முறையும் தாக்கப்பட்ட அவருடைய முன்னோர்களை அவர் நேரடியாக நினைவுகூரவில்லை. அவருக்கு அவர்களை ஞாபகம் இருக்குமோ தெரியாது, ஆனால் அடிகளும், கொடுமைகளும் ஞாபகத்தில் இறுகிப்போயிருந்தது. முன்னோரைக்காட்டிலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளே பெரிய ஞாபகமாகவிருந்தது.

இரண்டு தாய்மார்கள்

சம்பவம் நடந்து பத்து நாட்களாகிவிட்டது. ஒரு கெட்டித்து இறுகிய கோவமும், இழந்து விட்ட நிம்மதியின் நடுக்கமும் அவர்களுக்குள் பரவியிருந்தது. பொருமி வெடித்த கோபமும், கெலித்த உடலுமாக அவர்கள் பேசினார்கள். அவை அங்கிருந்த ஆண்களைக் காட்டிலும் செறிந்து, உறுதி பெற்றிருந்தன. ’இதேமாரி எங்கடையாக்கள் அங்க போய் செய்திருந்தால் இண்டைக்கு பொலிஸ் வந்து எங்கடை வீட்டை நிண்டு எங்களைப் பிடிச்சு உலுப்பி இருக்கும். எங்க புரிசனக் கொண்டா, பிள்ளையைக் கொண்டா எண்டு. இதெல்லாம் இவ்வளவு காலமும் இப்பிடியே நடந்துகொண்டு இருக்கு, இண்டைக்கு நேற்றே இது நடக்குது? நீதி நியாயத்துக்கு இந்த நாட்டிலை இடமே இல்லை. இப்ப லொக்டவுன் எடுக்க பள்ளிகூடம் தொடங்கப் போகுது, பிள்ளையளை எப்பிடித் தனிய விடுறது. வேலையள் தொடங்கப்போகுது, ஆனால் எங்கட பிள்ளையளுக்கு ஆர் உத்தரவாதம், இது இதோட முடிஞ்சிடும் எண்டு விட்டிட்டு இருக்கேலுமோ? பாதுகாப்பிருக்குமோ? இதுகென்ன முடிவு? ஆரிட்டக் கேக்கிறது?

சும்மா நிண்ட எங்கட அம்பைய்யா பாவம், அண்டைக்கு நடந்த சம்பவத்திலை அடிச்சுப்போட்டாங்கள், நெத்திலை குத்தி இருக்கு, ஏலாத மனிசன், இப்ப புத்தி மாறி நிக்குது. வயசு போன ஆள் என்ன கேட்டது. அண்டைக்கு பொம்பிளையள ஓடியிருக்காட்டி துண்டு விழுந்திருக்கும், நிண்டிருந்தால் கட்டாயம் வெட்டி இருப்பாங்கள். நாங்கள் ரெண்டுபேரும் போய்க் கதைச்சனாங்கள் அவையளோடை, சின்னப் பெடியங்கள் வந்த இடத்தை ஏதோ தெரியாமச் செய்திருப்பாங்கள். நீங்கள் மன்னிச்சுக் கொள்ளுங்கோ தம்பியவை இந்தப்பிரச்சினை வேண்டாம், பேசாம விடுங்கோ அவையளும் போகட்டும் நீங்களும் போங்கோ எண்டு கெஞ்சிப் பாத்தனாங்கள். எங்களை உங்களுக்குத் தெரியும்தானே, எண்டு மன்னிப்பெல்லாம் கேட்டுக் கெஞ்சிப்போட்டு வந்தனாங்கள். வந்தால் பிறகுதான் உது நடந்தது.

எனக்கு நல்லாத் தெரியும் அவங்கள் எங்கடை பொம்பிளையளை மதிக்கிறேல்ல, எங்கடையாக்கள் எண்டாலே அவைக்கு இழக்காரம் இருக்கிது. எனக்கு உதுகள் பிடியாது. என்ர வீட்டு மனிசனும் என்னை எடி எண்டு கதைக்கிறேல்ல, மரியாதையாத்தான் கதைக்கிறது, ஆனால் அவை எங்கள கேவலமா வாங்கடி போங்கடி எண்டு கதைக்கிறாங்கள். இன்னும் என்னென்னவோ சொல்லக் கூடாததெல்லாம் சொன்னாங்கள். நீங்கள் ஆர்? தமிழர் தானே. நீங்களே இப்பிடிக்கேட்டால், அடுத்தவன் நாளைக்கு வந்து எங்களை என்ன செய்திட்டு போவான். நீங்கள் இப்பிடிச் செய்தால். சிங்களவன் செய்வான். அவன் அந்நியன். ஆனா இவங்கள் நிக்கிறாங்கள் பத்து கழுத்த விழுத்துவம், வீடெல்லாம் கொழுத்துவம் எண்டு. அப்ப நாங்கள் எல்லாம் ஆர்?

கேற்றை உடைக்கிறாங்கள், வெளியிலை கத்துறாங்கள் நாங்கள் பொம்பிள்ளைப் பிள்ளையள், குழந்தையள வச்சுக்கொண்டு இருக்கிறம், லைட்ட அணைச்சுப்போட்டு அறைக்க வச்சுப்பூட்டிக் கொண்டு கிடக்கிறம். ‘நான் ஆண்டவரைத்தான் மண்டாடின்னான். ஐய்யோ உள்ளுக்க வந்திடக்கூடாதெண்டு’ எங்கடை கதவென்ன இரும்போ ஐயா, இதைக் கொத்திட்டுவரக் கனநேரமோ எடுக்கும்? நான் பின்வேலியைக் காலாலை உதஞ்சு, விழுத்தி என்ர பிள்ளையளைக் காப்பாற்றின்னான். குமர்ப் பிள்ளையள் என்ர பிள்ளையள், அண்டைக்கு என்ன பாடுபட்டிருக்கிங்கள் சொல்லுங்கோ?

என்ர மனிசன் ஒரு சோலிக்கும் போமாட்டுது, ஏன் சும்மா பிரச்சினையெண்டு இரவிலை அம்மா வீட்டிலை போய்தான் எல்லாரும் படுக்கிற. இப்ப கூட்டம் கூட்டமாத் தான் எல்லாரும் படுக்கிறது. அண்டைக்கு எங்கட ஆக்களிட்ட ஒருத்தரிட்டையும் ஆயுதமில்லை, வெறுங்கையோட நிண்டவை. இவங்கள் இப்பிடிச்செய்வாங்கள் எண்டு ஆர் எதிர்பார்த்த? தம்பி நாங்கள் என்னெண்டாலும் செய்யிறம் இதுக்கொரு தீர்க்கமான முடிவு எடுத்துத்தாங்கோ, வாறனியள் வந்து சும்மா கதைச்சுப்போட்டுப் போற மாதிரி இருக்கக்கூடாது. திரும்பவும் இதுக்க இதுமாதிரி ஒரு பிரச்சினை வருமெண்டால் அதுக்குப்பிறகு இஞ்ச ஒருத்தரும் வரக்கூடாது, சொல்லிப்போட்டன். பொம்பிளையள் விடவும் மாட்டம் வர.

இரண்டு இளைஞர்கள்

அடிகளையும், சாதிவசைகளையும், சமாளித்துச் சமாளித்துச் சோர்ந்துபோன அவர்களுடைய அன்றாடம் முகங்களை விடியவிடாமல் செய்திருந்தது. “பொலிஸ் கோட், கேஸ் வழக்கு ஒண்டும் நிக்காது. இப்ப கூடக் கோட்டுக்குப் போயிருக்குத்தான், ஆனால் என்ன நடக்குமோ எப்பிடி முடியுமோ எண்டு எங்களுக்கு நம்பிக்கையில்லை. சடஞ்சு போடுவாங்கள் எண்டுதான் பயமாக் கிடக்கு. எங்கடை பெடியள் அடிச்சா திருப்பி அடிக்கோணும் தடுக்கோணும் எண்டுதான் நினைக்கிறாங்களே தவிர உண்மையா சண்டைக்கு போற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

நிறையப்பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். ஆனால் நாங்கள் சமாளிச்சுத்தான் போக வேணும். இல்லாட்டி நாங்கள் நாளைக்கு வேலைக்குப் போகேலா. அந்தக் காலத்திலை இருந்து அவங்களுக்கு நாங்கள்தான் வேலைக்குப் போறனாங்கள். நாங்கள் குடும்பத்தைப் பாக்க உழைக்கோணும், ஆனால் அவங்களுக்கு அப்பிடியில்லை. வெளிநாட்டுக்காசு கிடக்கு. அவைக்கு ஜெயிலுக்கு போறதும் வெளியிலை வாறதும் ஒரு பிரச்சினையில்லை. அவங்கள் நிறையப் பேருக்கு அடிச்சிருக்கிறாங்கள். பைக்கிலை போகேக்க கலைச்சுக்கொண்டு வருவாங்கள், திருவிழா, சவாரி எண்டால் சண்டை, அடி. எங்கடையாக்கள் கொஞ்சம் படிச்சு உத்தியோகம் அது இது எண்டு போனால் ஒரு இழக்காரம், எரிச்சல் ‘கொம்மா எங்கட வீட்டிலைதான் வேலை செஞ்சவா’ எண்டு நக்கல்.

பள்ளிக்கூடங்களிலை எங்கடை பிள்ளையள் படிக்கிறேல்ல எண்டு கொம்பிளைண்ட். ஏனெண்டு போய்ப் பாத்தால், எங்கடை பிள்ளையள் ஒழுங்கா வாறேல்ல எண்டினம். நாங்கள் ஏன் பிள்ளையள் போறேல்ல எண்டு பாத்தால், பிள்ளையள் ஐஞ்சு நிமிசம் பிந்திப்போனாலும் வீட்ட போய் தாய் தேப்பனைக் கூட்டிக்கொண்டு வாங்கோ எண்டுவாங்கள், பிள்ளையள் வீட்ட வந்தால் தாய் தேப்பன் கூலி வேலை, வயல் வேலை எண்டு போய்டும், பிள்ளையள் அவை இல்லாம எப்பிடிப்போறதெண்டு பள்ளிக்கூடம் போகாம நிண்டிடும். இதுதான் நடக்கும். இஞ்ச மட்டுமில்லை சுத்தி இருக்கிற துணைவி, மூளாய், செம்பரட்டை, பொன்னாலை எல்லா இடத்திலையும் இதே கோலம் தான். கம்பசுக்கு போய், அரசாங்க வேலையள் கிடைக்கிற பெடியள், பிள்ளையள் கொஞ்ச நாளிலையே இஞ்சாலை இருக்கேலா எண்டு ஊரை விட்டு போயிடுவினம். அதனால ஊர் அப்பிடியேதான் கிடக்கு.”

இவ் உரையாடலின் போது அந்த இரவின் சூட்டை உணர முடிந்தது. யாரை யார் காப்பாற்றுவது என்று திணறியபடி வாழ்ந்து கொண்டிருகிறார்கள். இரவில் ஏதாவது நடந்தாலும் என்று உறவினர்கள் சேர்ந்து தங்குகிறார்கள். இவ்வளவு கொடூரமான ஒரு சாதி வெறித் தாக்குதல் எமது சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவில்லை. இது சும்மா குழுச் சண்டை என்பதாகச் சித்தரித்துக் கடந்து கொண்டிருக்கிறோம். வெள்ளாள சாதியைச் சேர்ந்த சிலர் குடிப்பதற்கும் கொண்டாட்டங்களுக்குமாக அரசடியில் ஒரு வீட்டை வைத்திருக்கிறார்கள். அவர்கள் குடித்திருக்கும் போது கிடைக்கும் நளவர் சாதியைச் சேர்ந்த இளைஞர்களையும் வேறு வெளியாட்களையும் அடிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு. எந்தக் காரணங்களும் இன்றித் தாக்குவார்கள். வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஒரு குழுவினரே இத்தகைய செயல்களினாலும் வன்முறைகளாலும் அந்தக் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள். அத்தகைய மோசமான குழுவினரை அவ்விடத்தை விட்டு அகற்றும் வல்லமையோ அல்லது அம்மக்கள் மீதான அக்கறையோ பெரிதாக யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

பெரும்பாலன ஊடகங்கள் பயங்கரமான ஒரு சாதி வெறித் தாக்குதலை, குடி வெறித் தாக்குதலாகச் சுருக்கியிருக்கிறார்கள். பொதுச் சமூகத்தின் கவனத்தை சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்பான பிரச்சினைகளை நோக்கித் திருப்புவதில் அரசியற் தரப்பினருக்கும் பெரும்பாலான ஊடகங்களிற்கும் அக்கறையிருப்பதில்லை. அது அவர்களின் நலன்களைப் பாதிக்கும். ஆகவே சமூக நீதியின் மேலும் மக்களின் சுயமரியாதை மீதும் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் அம்மக்களின் துயரையும் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். காலந்தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு அடித்தவர்களிடம் சென்று, தவறு செய்யாத மகன்களைக் காப்பாற்ற அப்பாக்களும் அம்மாக்களும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். நாம் அவர்களையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற சாதிய ஒடுக்குமுறையையும் அகற்ற முன்வரவேண்டும். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியான தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இழந்த சொத்துக்களிற்கான இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சமூகநீதியின் பால் அக்கறைகொண்டவர்கள் அனைவரும் உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகள் தொழிற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் அதற்கெதிராக உணர்வுத் தோழமையுடன் ஒன்றிணைவதே அம்மக்களுக்கான சமூகநீதிக்கான முதற்படியாகும். நாம் கண்ணை மூடிக் கொண்டு இங்கு சாதியில்லை, சாதியில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதால் சாதி ஒருபோதும் ஒழிந்துவிடாது. சாதி ஒழிப்பென்பதே சமூக விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் முதற்படி. சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்ததோர் சமூகம் என்பதே சமூகநீதி. அதற்கான போராட்டமே சமூக விடுதலைக்கான செயற்பாடு. இவற்றை உணர்ந்து சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை அவற்றின் வேர்களில் இருந்து நுட்பமாக அறிவதே அரசியல்மயப்படுதலின் முதற்படி. நம் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளை இனங்கண்டு, அந்த ஒடுக்குமுறைக் களைவது பற்றிய அறிதலும் செயலாற்றலுமே அரசியல்மயப்படுதல். சாதியால் ஒடுக்கப்படுகின்ற மக்கள் சாதி எப்படி அவர்களை ஒடுக்குகின்றது என்பதை அறிவு பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும் அவர்களுடைய கல்வியில் அதிக கவனம் செலுத்துவதுடன் அக்கல்வியை அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சுயமரியாதையையும் சமூக நீதியையும் பெற்றுக்கொள்வதற்கான கருவியாகக் கையாளவேண்டும்.

ஆதிக்க சாதியில் பிறந்தவர்களும் தங்களது சொந்த சாதி நலன்களிலே மட்டும் மூழ்கிக் கிடக்காமல் சாதி ஒடுக்குமுறையையும், தாம் எப்படி ஒடுக்குமுறையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கற்று உணர்ந்து கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலைக்கு தமது முன்னோர்களும் தாமும் எப்படிக் காரணங்களாய் இருக்கிறோம் என்பதை அறிந்து அவற்றை மாற்ற முன்வர வேண்டும். இங்கு ஒவ்வொரு சாதியிலும் தனக்கு மேல் கீழென்று சாதிகள் இருக்கிறது என்று மூட நம்பிக்கை கொண்டு அப்படியே இருக்கிறார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று நம் குழந்தைகளை அறிவூட்டிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு வருடத்தில் நாம் இந்தச் சாதி வெறித் தாக்குதலை நம் கண் முன்னே காண்கிறோம். நமது சமூகம் சாதிய இழிவுகளிலிருந்து மீண்டெழ அறிவார்ந்து சிந்திக்கவும் ஒடுக்கப்படும் மக்களைக் காக்கவும் அவர்களுக்கான சமூக நீதியும் சுயமரியாதையும் மீட்கப்படவும் நம்மாலான ஒவ்வொரு காலடியையும் எடுத்து வைக்க வேண்டும். நமது சமூகத்திலிருந்து சாதி ஒழிக்கப்பட வேண்டும். சமூக நீதி வென்றெடுக்கப்பட வேண்டும்.

தோழமையுடன்

விதை குழுமம்

Sunday, May 09, 2021

யாழ்ப்பாணத்தில் எழும் சாதிய மதில் சுவர்!

யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள மயிலிணி கிராமத்தில் சாதிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வழமை போல இதுவும் கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த சாதிப் பிரச்சினை தான். ஈழப்போர் நடந்த முப்பது காலங்களில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்த சாதிப் பிரச்சினைகள் தற்போது மெல்ல மெல்ல தலைதூக்கி வருகின்றன.

மயிலிணி பிரச்சினை தொடர்பாக இதுவரை எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: அங்குள்ள முருகன் கோயிலை அண்டி யாராலும் உரிமை கோரப்படாத வெட்டையான காணி ஒன்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர்த் திருவிழாக் காலங்களில், சாமி வெளிவீதி உலா வருவதை தவிர ஏனைய நாட்களில் அந்த இடம் பாவனையில் இருப்பதில்லை.

அதனால், அயல் கிராமத்து இளைஞர்கள் அந்தக் காணிக்குள் வந்து உதைபந்து, அல்லது வலைப் பந்து விளையாடுவது வழக்கம். சிலநேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடந்துள்ளன. கடந்த பல வருடங்களாக அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் வந்து விளையாடி வந்தனர். ஏற்கனவே யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் பாடசாலைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் ஒன்று கூடும் இளைஞர்கள் தமக்குள் சாதி வேற்றுமை பார்ப்பதில்லை. இந்த வழக்கம் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றது.

அண்மைக் காலமாக குறிப்பிட்ட காணியில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம், உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் வேறொரு இடத்தில் தனியாக பிரிந்து விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருந்தாலும் ஆரம்பத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

சில தினங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட மைதானம் அமைந்துள்ள காணியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஊர் மக்கள் இதுகுறித்து காரணம் கேட்ட பொழுது, திருவிழாக் காலங்களில் சுவாமி வெளி உலா வருவதற்கான வீதியை சுற்றி மதில் கட்டுவதாக நிர்வாகத்தினர் பதில் கூறினார்கள். யாழ்ப்பாணக் கோயில்களில் பொதுவாக தேர்ப் பவனி நடக்கும் உள்வீதிகளை சுற்றித் தான் மதில் கட்டப் படுவதுண்டு. வெளி வீதி எப்போதும் குடியிருப்புகளை அண்டிய திறந்த வெளியாகத் தான் இருக்கும்.

மதில் கட்டுவதற்கு இன்னொரு காரணமாக, சில இளைஞர்களின் மது பாவனை சுட்டிக் காட்டப் பட்டது. அப்படியான ஒரு சிலர் இருந்தாலும் அதற்காக மதில் கட்டுவதை நியாயப் படுத்த முடியாது. இது சில மாதங்களுக்கு முன்னர், நல்லூர்க் கோயிலுக்கு அருகாமையில் காதல் ஜோடிகள் ஒன்று கூடுகிறார்கள் என்று கழிவு எண்ணை ஊற்றிய சம்பவத்தை நினைவுகூருகின்றது. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இந்துமதக் கலாச்சாரக் காவலர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும், இதே இடத்தில் இது போன்ற சாதிய மதில் கட்டப் பட்டதாகவும், அப்போது எழுந்த பிரச்சினையின் முடிவில் புலிகள் அந்த மதிலை இடித்து விழுத்தியதாகவும் தெரிய வருகின்றது. தற்போது ஆலய நிர்வாகத்தினர் பிரதேச சபையில் உள்ள தமது சாதியை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவில் மீண்டும் அந்த மதிலை கட்டி எழுப்பி உள்ளனர்.

இதைத் தவிர, மதிலை சுற்றி உயரமான கம்பங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. கோயில் காணியாக இருந்தாலும் பொது இடங்களில் கமெரா பொருத்த காவல்துறை அனுமதி தேவை. அப்படி எந்த அனுமதியும் பெறப் பட்டதாக தெரியவில்லை. பொது இடங்களில் மற்றவர்களின் சுதந்திரத்தில் (privacy) தலையிடுவதற்கு தனியாருக்கு உரிமை இல்லை.

அத்துடன் இந்தக் கமெராக்கள் அயலில் உள்ள வீடுகளை கண்காணிக்கும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன. இதனால் தங்களது தனிமனித சுதந்திரம் மீறப் படுவதாக ஊர் மக்கள் முறையிடுகின்றனர். கிணற்றடியில் குளிக்கும் பெண் பிள்ளைகளும் அச்சமடைந்து காணப் படுகின்றனர்.

கோயிலை அண்டிய கிராமங்களில் குடியிருப்பவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் ஆவர். அதனால் மதில்சுவர் மட்டுமல்லாது, கண்காணிப்பு காமெராக்களும் சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இரண்டுமே அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினை என்பதால், ஊர் மக்கள் அது குறித்து காவல்துறை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால், இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. வழமை போல ஆதிக்க சாதியினர் பக்கமே அதிகார வர்க்கமும் இருப்பதாகத் தெரிகின்றது.

இது குறித்து மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

Monday, March 01, 2021

ஈழப்போர் காலத்திலும் சாதி பார்த்த பாதித் தமிழர்கள்

த‌மிழ‌ர் என்றொரு இன‌முண்டு. அவர்க‌ளுக்கு சாதி என்றொரு குண‌ம் உண்டு.

 "சிங்க‌ள‌வ‌ர் சாதி பார்த்து அடித்த‌ன‌ரா?" என்றெல்லாம் புத்திசாலித்த‌ன‌மாக‌ கேள்வி கேட்க‌லாம். ஆனால், ந‌டைமுறை வாழ்வில், எத்த‌னை பேர‌ழிவுக‌ள் வ‌ந்தாலும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ள் சாதிவாரியாக‌த் தான் பிரிந்திருப்பார்க‌ள்.

கொழும்பில், இன‌க்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில், அக‌திக‌ளான‌ கொழும்புத் த‌மிழ‌ர்க‌ள் த‌ங்கியிருந்த‌ முகாம்க‌ளில் சாதி வாரியாக‌ பிரிந்திருந்த‌னர். (1983 கலவரத்தில் அந்த நிலைமை இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அகதி முகாமில் சாதி பார்த்த சம்பவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.) ஈழ‌ப் போர் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், யாழ் குடாநாட்டில் உள்ள‌ வ‌லிகாம‌ம் பிர‌தேச‌த்தில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து தென்ம‌ராட்சி சென்ற‌ அக‌திக‌ள் அங்கும் சாதிவாரியாக‌ பிரிந்து தான் த‌ங்கி இருந்த‌ன‌ர். இன்று போர் முடிந்த‌ பின்ன‌ரும் யாழ் குடாநாட்டில் மூட‌ப் ப‌டாத‌ முகாம் ஒன்றில் கணிச‌மான‌ அள‌வு அக‌திக‌ள் வாழ்வ‌த‌ற்கும் சாதி தான் கார‌ண‌ம்.

ஈழப்போரின் உச்சகட்டத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் சாதிவாரியாக பிரிந்திருந்தனர். அங்கிருந்த ஆதிக்க சாதியினரான வெள்ளாளர்கள், சிங்கள இராணுவத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரம், தாழ்த்தப்பட்ட சாதியினர் பகைவர்களாக நடந்து கொண்டனர். பெரும்பாலான புலிப்போராளிகள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தத் தகவல், யாழ் நகரை கைப்பற்றும் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன எழுதிய "நந்திக்கடல் நோக்கிய பாதை" எனும் நூலில் எழுதப் பட்டுள்ளது.

1995 ம் ஆண்டு, அதற்கு முன்பு பல வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா இராணுவம் படையெடுத்தது. பலாலி முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம் புலிகளின் எதிர்த் தாக்குதல்களை சமாளித்து, உரும்பிராய், கோண்டாவில் வழியாக யாழ் நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. "ஒப்பெறேஷன் ரிவிரெச" எனப் பெயரிடப்பட்ட போர் நடவடிக்கை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது புலிகள், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியான வலிகாமம் பிரதேசத்திலிருந்த மக்கள் அனைவரையும் வெளியேறி, குடாநாட்டின் கிழக்கே இருந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்லுமாறு உத்தரவிட்டனர். அதற்கமையை 95% மக்கள் வெளியேறி விட்டனர். ஆனால், 5% மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் கோயில்கள், பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த அகதிகளுடனான தனது அனுபவம் பற்றி கமால் குணரட்ன இந்த நூலில் பின்வருமாறு எழுதி இருக்கிறார்:

//யாழ் நகர் சென். பற்றிக்ஸ் கல்லூரி இடம்பெயர்ந்தோர் முகாமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த சுமார் ஐநூறு பேர் மத்தியில் சாதிய பாகுபாடுகள் எழுந்தன. உயர்சாதி வெள்ளாளர்கள் தாழ்ந்த சாதியினராக கருதப்பட்ட கள்ளிறக்குவோர், மீனவர்கள், துணி துவைப்போர், முடி திருத்துவோர், சுத்திகரிப்போர் போன்றோருடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிட மறுத்தனர். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து வீடியோவில் படம் பார்க்க கூட விரும்பாத அளவிற்கு தீவிரமாக இருந்தனர்!

இந்தப் பிரச்சினை எனது கவனத்திற்கு கொண்டுவரப் பட்ட நேரம் "நாசமாகப் போங்கள்!" என்று சொல்லத் தூண்டப் பட்டேன். இருப்பினும், உயர்சாதியினர் எமது நடவடிக்கைகளை பாராட்டி, எம்முடன் இணக்கமாக நடந்து கொண்ட படியால், கலாச்சார வித்தியாசங்களுக்கு மதிப்பளித்து இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடிவெடுத்தேன். தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் எம்முடன் வெளிப்படையாகவே எதிரிகளாக நடந்து கொண்டனர். பெரும்பாலான தீவிரவாதிகள் (புலிப் போராளிகள்) அந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தமை ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஒரு தற்காலிக தீர்வாக, உயர்சாதியினரையும், தாழ்ந்த சாதியினரையும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்தோம்.//

- மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன (Road to Nandikadal, Page 366) 


இதைக் கண்டதும் சிலர் இப்படி ஒரு சாட்டுச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்: //கமால் குணரட்ன ஒரு சிங்கள ராணுவத்தினை சேர்ந்த ஒரு சிங்களன் , ஆகவே இது தமிழர்களை பிரிக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாகவும் இருக்கலாம்...// 

யாழ்ப்பாண தமிழர்கள் மத்தியில் நிலவும் மோசமான சாதிப் பாகுபாடு உலகறிந்த விடயம். அதை கமால் குணரட்ன சொல்லித்தான் எமக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே யாழ்ப்பாண சமூகம் இப்படித்தான் இருந்து வருகின்றது. சாதிவெறியன் ஆறுமுகநாவலருக்கு யாழ் நகரில் சிலை வைத்திருப்பதே ஒரு சிறந்த ஆதாரம்.

மேலும், இந்த நூல் வெளிவந்த காலத்தில்(2016), "புலிகளின் தலைவர் பிரபாகரனை மெச்சும் தகவல்கள்" இருந்ததாக சொல்லி, தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் நந்திக்கடல் பாதை நூலுக்கு புகழாரம் சூட்டின. அன்று அவை பரப்பிய தகவல் இது:
//விடுதலைப் புலிகள் இயக்கம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் எதிர்பார்க்கப்படாத அதிகபட்ச நேர்மையை வெளிப்படுத்தியிருக்கிறது....இராணுவத்தினருக்கு மூன்று தசாப்தங்களாக சவால் மிக்க எதிரியாக விளங்கியிருந்த போதிலும் பிரபாகரனின் பண்புகள் தொடர்பாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நேர்மையாகவே கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.// (பார்க்க: எதிரியையும் மெச்ச வைத்த புலிகளின் தலைமைத்துவம்

அ.யேசுராசா போன்ற‌ மெத்த‌ப் ப‌டித்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் கூட‌ இவ்வாறு அப‌த்த‌மாக‌ப் பேசுகின்ற‌ன‌ர்: //ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளுக்குள் சாதிப் பிரிவினை, வ‌ர்க்க‌ப் பிரிவினை உண்டாக்குவ‌து சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி!//

மூளை இருந்தால் யோசித்துப் பார்க்க‌ வேண்டும். எவ‌னாவ‌து க‌ண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு க‌ல்லெறிவானா?

சிங்க‌ள‌ ச‌மூக‌த்திற்குள் சாதிய‌/வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் இல்லையா? அந்த‌ விட‌ய‌ம் இன்னும் தெரியாது என்றால், உங்க‌ளுக்கு இன‌ப்பிர‌ச்சினை ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லை என்று அர்த்த‌ம்.

ஒரு பேச்சுக்கு, இது சிங்க‌ள‌வ‌னின் சூழ்ச்சி என்றே வைத்துக் கொள்வோம். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் செவ்வாய்க் கிர‌க‌த்தில் வாழ‌வில்லை. அவ‌ர்க‌ளும் இல‌ங்கை என்ற‌ சிறிய‌ தீவுக்குள் வாழ்கிறார்க‌ள்.

ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் சாதிக‌ளாக‌, வ‌ர்க்க‌ங்க‌ளாக‌ பிரிந்து அடிப‌ட்டால், அது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் எதிரொலிக்காதா? அங்கேயும் சாதிய‌, வ‌ர்க்க‌ பிரிவினைக‌ள் உண்டாகாதா?

சாதிய‌, வ‌ர்க்க‌ முர‌ண்பாடுக‌ள் தீவிர‌ம‌டைந்தால், இல‌ங்கை முழுவ‌தும் க‌ல‌க‌ங்க‌ள் வெடித்து அர‌சு க‌விழும் நிலைக்கு செல்லாதா? சிறில‌ங்கா அர‌சைக் க‌விழ்ப்ப‌த‌ற்கு உங்க‌ளுக்கு விருப்ப‌ம் இல்லையா?

"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் த‌ம‌க்குள் முர‌ண்பாடுக‌ளை கொண்டிராத‌ இன‌ங்கள்" என்று நினைத்துக் கொள்வ‌த‌ற்குப் பெய‌ர் இன‌வாத‌ம். அது எந்த‌க் கால‌த்திலும் அர‌சுக்கு எதிரான‌து அல்ல‌. மாறாக‌, அர‌சைப் பாதுகாக்கிற‌து.

Thursday, July 16, 2020

ஆனந்தசங்கரி என்ற சாதிவெறிப் பூனை வெளியே வந்து விட்டது!


யாழ் ஊடக மையத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி உரையாற்றிய பொழுது அவரிடம், யாழ் நூலகத் திறப்புவிழா சர்ச்சை தொடர்பாக கேள்வி கேட்கப் பட்டது. அதற்குப் பதிலளித்த ஆனந்தசங்கரி "சாதி எப்போதோ ஒழிக்கப் பட்டு விட்டது, அதுவும் அறுபதுகளில் தான் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே ஒழிந்து விட்டது..." என்று பேசினார். ஆகவே நூலக திறப்புவிழா பிரச்சினையில் சாதி ஒரு விடயமாக இருக்கவில்லை என்பது அவரது வாதம்.

 அவர் மேலும் பேசுகையில் "நான் தான் கந்தையனை மேயர் ஆக்கினேன்..." என்றும் சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார். இலங்கையில் எந்த நகரசபையிலும் மேயர் பதவி மேலிருந்து தீர்மானிக்கப் படும் விடயம் அல்ல. மக்களால் தெரிவு செய்யப் பட்ட நகரசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி தம்மில் ஒருவரை மேயராக தெரிவு செய்வார்கள். இந்த ஜனநாயக அடிப்படை ஆனந்தசங்கரிக்கு தெரியாமல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் மேயராக பதவி வகித்தவர்கள் புலிகளால் கொலை செய்யப் பட்டனர். ஆகவே உயர்த்தப்பட்ட சாதியினர் யாரும் உயிரை துச்சமாகக் கருதி மேயர் பதவி வகிக்க முன்வராத நிலையில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த செல்லன் கந்தையாவை ஒரு பலியாடாக நியமித்தனர். ஆனந்தசங்கரி தன்னையறியாமலே இந்த உண்மையை வெளிப்படுத்தி விடுகிறார்.

அறுபதுகளில் தமது கூட்டணிக் கட்சி தான் "சமபந்தி போஜனம் நடத்தி சாதியை ஒழித்தது" என்று ஆனந்த சங்கரியை அடுத்து பேசிய அவரது கட்சிக்காரர் ஒருவர் பெருமையாகக் குறிப்பிட்டார். அன்று அது கட்சிக்கு விளம்பரம் தேட பயன்பட்டதே தவிர அதனால் சாதி ஒழிந்து விட்டது என்று பிதற்றுவது நகைப்புக்குரியது. இன்றைக்கும் பல யாழ் கிராமங்களில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் சமமாக அமர்ந்து உணவருந்த மறுக்கிறார்கள். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதியினர் சமைத்துப் பரிமாற ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. தாழ்த்தப் பட்ட சாதியினர் சமைத்து உணவுபரிமாறும் நாளில் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருவர் கூட சாப்பிட வர மாட்டார்! ஆனந்தசங்கரி ஐயாவை நேரில் வரச் சொல்லுங்கள். எனது சொந்த ஊரை சுற்றியுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் எந்தெந்த கோயில்களில் இன்னமும் இந்த பாகுபாடு நடக்கிறது என்ற விபரங்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன்.

ஆனந்தசங்கரி யாழ் ஊடக மையத்தில் ஆற்றிய உரையின் தொடக்கத்தில் (மாவை)சேனாதிராசா பற்றி சில (தனிப்பட்ட) தகவல்களை கூறினார். இன்று அவர்கள் இருவரும் அரசியல் எதிரிகள். இரு வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அப்படி இருந்தும் ஆனந்தசங்கரி சேனாதிராசாவை "வந்தார்... போனார்..." என்று மரியாதையாக பேசினார். இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் செல்லன் கந்தையாவை பற்றி குறிப்பிடும் பொழுது மட்டும் "அவன்... இவன்.." என்று மரியாதைக் குறைவாக பேசினார். இதற்குக் காரணம் சாதிவெறி அன்றி வேறென்ன?

"கந்தையன் வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு கூப்பிடுவான். நான் சென்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று ஆனந்தசங்கரி பேசினார். உங்களோடு கூடப் படிக்கும், அல்லது வேலை செய்யும் ஒருவர், தனது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு அழைத்து, அங்கு சென்று சாப்பிட்டதை இப்படி கூட்டம் போட்டு சொல்வீர்களா? அப்படி யாராவது செய்தால் அற்பத்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயலாக தோன்றாதா? ஆனால் ஆனந்தசங்கரி அதையே பெருமையாக சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

அதாவது தான் இன்னமும் சாதியால் உயர்ந்தவன், கந்தையன் சாதியால் தாழ்ந்தவன் என்ற எண்ணம் ஆனந்தசங்கரியின் மனதில் இருக்கிறது. "இப்ப யார் சாதி பார்க்கிறார்கள்?" என்று கேட்பது மாதிரி, "நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்." என்று சொல்வதற்குப் பின்னாலும் ஆதிக்க சாதிப் பெருமிதம் தான் மறைந்திருக்கிறது. அதன் மூலம், நாங்கள் இன்னமும் சாதியால் பிரிந்து தான் வாழ்கிறோம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கின்றனர். இதைத் தான் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். அது அவர்களை அறியாமலே வெளிப்படும்.

யாழ் ஊடக மையத்தில் ஆனந்தசங்கரியின் உரை:
 https://www.facebook.com/mayurapriyan104/videos/3779258802089449

Saturday, July 11, 2020

குடிமைகள் - ஈழத்தில் நிலவிய குடிமைச் சாதிய ஒடுக்குமுறை பற்றிய நாவல்

ஈழத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை பற்றியும், குடிமைத் தொழில் பற்றியும் அறிந்து கொள்ள தெணியான் எழுதிய "குடிமைகள்" நாவலை வாசிக்கவும். இதனை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்திலும் குடிமைத் தொழில் சம்பந்தமாக முகநூலில் வாக்குவாதம் இடம்பெற்றது. இன்றைக்கும் பலர் மனதில் குடிமைத் தொழில் குறித்து சரியான தெளிவு இல்லை. அதற்காக இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சில புரிதல்களை ஏற்படுத்த விரும்புகிறேன்.

ஈழத்தில் என்றால், குறிப்பாக யாழ் குடாநாட்டில் அல்லது வட மாகாணத்தில் நிலவிய சாதி அமைப்பை தான் நாம் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருந்த சாதி அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. யாழ்ப்பாண சாதி அமைப்பானது முந்திய நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பின் எச்சமாக இருந்துள்ளது. அது டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் மாற்றப் படவில்லை. (முன்பு போர்த்துக்கேயர்கள் காலத்தில் ஏறத்தாள அழிவு நிலையில் இருந்து பின்னர் மீளுருவாக்கம் செய்யப் பட்டது.)

யாழ் சமூகத்தில் குடிமை எனப்படுவது, ஏறக்குறைய ஐரோப்பிய சமூகத்தில் நிலவிய பண்ணையடிமை முறையை ஒத்தது. யாழ்ப்பாணத்தில் நிலவுடைமைச் சாதியாக இருந்த வெள்ளாளர்கள், பஞ்சமர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட சாதியினரை தமது குடிமைகளாக வைத்திருந்தனர். யாராவதொரு வெள்ளாள நிலவுடைமையாளர் தனது காணிக்குள் குடிமைகளை குடியேற்றி இருப்பார். அவர்கள் ஒரு துண்டு நிலத்தில் குடிசை வீடு கட்டி, அதைச் சுற்றி சிறு தோட்டமும் செய்யலாம். ஆனால், அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

குடிமைச் சாதியினர் வெள்ளாளர்களுக்கு குடிமைத் தொழில் செய்து வாழ வேண்டும். முடி வெட்டும் வேலை செய்யும் அம்பட்டர்கள், துணிகளை சலவை செய்யும் வண்ணார்கள், போன்று பல குடிமைத் தொழில் செய்யும் சாதிகள் இருந்தனர். இதனால் தான் இன்றைக்கு சில வெள்ளாள பரம்பரையில் வந்த அறிவுஜீவிகளும் சாதி என்பது தொழில் சார்ந்த பிரிவினை என்று தவறாக நினைக்கிறார்கள். அது வேறு விடயம். குடிமைகள் நாவலில் முடி வெட்டும் அம்பட்டர் சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை பற்றிக் கூறப் படுகின்றது. இது ஒரு புனைவு என்றாலும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. அநேகமாக ஐம்பதுகளில் அல்லது அறுபதுகளில் கதை நடக்கிறது. அப்போது நகரங்களில் சலூன் கடைகள் போடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இருப்பினும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் குடிமைத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

வெள்ளாளர்களின் வீடுகளில், யாராவது இறந்தாலும் பிணத்திற்கு முடி வழிப்பதற்கு குடிமைத் தொழில் செய்யும் அம்பட்டனை வரச் சொல்லி அனுப்புவார்கள். அவ்வாறு அடக்கமாக தொழில் செய்து வந்த முத்தன், இன்னொரு ஆதிக்க சாதியான கரையாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பொழுது பிரச்சினை உருவாகிறது. கரையாருக்கு அல்லது பிற சாதியினருக்கு குடிமைத் தொழில் செய்வதற்கு வேறு அம்பட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வழமையாக வெள்ளாளருக்கு குடிமைத் தொழில் செய்பவருக்கு அது அனுமதிக்கப் படுவதில்லை.

இந்த இடத்தில் தான் எவ்வாறு சாதி அமைப்பு, ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாகவும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது குடிமைத் தொழில் செய்பவருக்கான கூலியை பொருளாகவும், சொற்ப தொகை பணமாகவும் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் ஏழ்மையில் இருந்து மீள முடியாது. காலங்காலமாக வெள்ளாள நிலப்பிரபுக்களில் தங்கியிருக்க வேண்டும். திருமணம் போன்ற குடிமைகள் வீட்டு செலவுகளையும் வெள்ளாள நிலப்பிரபுவே பொறுப்பெடுப்பார். இது ஓரளவு மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய சாதிய அமைப்பை ஒத்துள்ளது.

ஏன் ஒரே குடிமைத் தொழிலை வேறு சாதியினருக்கும் செய்ய அனுமதிக்கவில்லை? இங்கே பணம் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட சமூக மாற்றம் தென்படுகின்றது. அதாவது அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு குடிமைத் தொழில் செய்தால் வறுமையில் இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சலூன் கடை போடுவதும் அப்படித் தான். அதை ஒடுக்கும் சாதியினரான வெள்ளாளர்கள் விரும்பப் போவதில்லை. அதாவது இது சொத்துடமை சார்ந்த பிரச்சினை. ஒடுக்கப்படும் சாதியினர் பணக்காரர்களாக வருவதை ஒடுக்கும் சாதியினர் எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

முத்தன் பருத்தித்துறை நகரத்தில் சலூன் கடை போடவிருந்த திட்டம் தெரிய வந்ததும் வெள்ளாளர்கள் நிலப்பிரபுக்கள் பல வழிகளிலும் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறு கடை போடுவதென்றாலும் கிராமத்தில் செய்யுமாறும், அதனால் வழமையான குடிமைத் தொழில் பார்க்க முடியும் என்றும் தமது சுயநலத்தின் நிமித்தம் பேசுகின்றனர். குடிமைத் தொழில் உண்மையில் அடிமைத் தொழில் என்பதை புரிந்து கொண்ட முத்தன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.

சாதிவெறியர்கள் தம்மால் சமாளிக்க முடியாத படியால், முதலியார், விதானையார் (இவர் சிறிலங்கா அரசின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது) ஆகியோர் மூலம் மிரட்டிப் பார்க்கின்றனர். அரசாங்கம் நியமித்த கிராம சேவகர் (விதானை) என்றாலும் சாதி அபிமானம் காரணமாக சாதி வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறைக்கு துணை போகின்றார். எவ்வாறு அதிகார வர்க்கம் முழுவதும் வெள்ளாள சாதிவெறிக்கு துணைபோனது என்பதை விளக்க இது ஒரு சிறந்த உதாரணம். இந்த நிலைமை ஈழப்போர் தொடங்கும் வரையில் காணப்பட்டது.

முத்தனின் தம்பி மணியன் கொழும்பில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் பருத்தித்துறையில் சலூன் திறந்து வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளாள சாதிவெறியர்கள் அவனைக் கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே சதி செய்து இரண்டு தம்பிமாரை கொன்று விடுகின்றனர். இதற்கிடையே முத்தனின் மனைவி மீது ஆசை கொண்ட குமாரசாமி என்ற சாதிவெறியனை முத்தனின் நண்பர்கள் மறைந்திருந்து தாக்கி விட்டனர். இந்தத் தகவலும் வெள்ளாள சாதிவெறியை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. தம் மீது கைவைக்கத் துணிந்த குடிமைச் சாதியினரை சும்மா விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். அதனால் முத்தனும் மனைவியும் கொழும்புக்கு ரயிலேற, ஊரில் அவனது சலூனும், குடிசை வீடும் எரிக்கப் படுகின்றன.

ஈழத்தில் நிலவுடைமை வெள்ளாளரின் சாதிவெறி எந்தளவு கொடூரமாக இருந்தது என்பது நூலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றது. "கஞ்சா, அபினுக்கு இல்லாத சாதிவெறி. அது ஒரு விசர் மாதிரி. அந்த சாதி வெறியிலே ஒரு குடலுக்குள்ளே இருந்து வந்த சகோதரம் என்றும் பாரான்கள்.... ஆளை முடிச்சுப் போடுவாங்கள். (ஆணவக் கொலை)"

ஈழத்தில் ஒரு காலத்தில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாக இருந்த சாதியத்தை எவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? புலிகளின் காலத்தில் குடிமைத் தொழில் ஒழிக்கப் பட்டது என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவர் அறியாத இரண்டு உண்மைகள் உள்ளன.

  1. ஐம்பதுகள், அறுபதுகளில் குடிமைச் சாதியினர் கிளர்ந்தெழுந்து குடிமை முறைக்கு எதிராக போராடினார்கள். அந்த போர்க்குணாம்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை குடிமைகள் நாவல் பதிவு செய்துள்ளது. 
  2. குடிமைச் சாதியினர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு (இங்கே: வெள்ளாளர்) மட்டும் தொழில் செய்து அவர்களால் பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறி விட்டது. பணம் கொடுத்தால் எந்த சாதியினருக்கும் தொழில் செய்ய முன்வந்தனர். அந்தக் காலத்தில் இதுவே ஒரு சமூகப் புரட்சி தான்.

இந்த நூலானது சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்லாது, ஒரே சாதிக்குள் நடக்கும் வர்க்க ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றது. குறிப்பாக முத்தனின் தம்பி மணியத்தை தென்னிலங்கையில் பதுளையில் உள்ள தனது சலூனில் வேலை பழக்க அழைத்துச் செல்லும் முதலாளி, அவனை எடுபிடி வேலையாளாக கொடுமையாக நடத்துவது பற்றி பல அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஈழத்து சாதிப்பிரச்சினையை பற்றி ஆழமாக புரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று குடிமைகள்.

Monday, June 29, 2020

ஒரு புலி ஆதரவுக் குடும்பத்தின் சாதியக் கதை

அது ஒரு "புலி ஆதரவுக் குடும்பம்." ஆனால், புலிகளை "நிபந்தனையுடன்" ஆதரித்த குடும்பம். அதற்குக் காரணம், அந்தக் குடும்பம் முன்பு வன்னியில் வாழ்ந்த காலத்தில், குடும்பத் தலைவியின் தந்தை யாரோ ஒருவரை சாதிப்பெயர் சொல்லி ஏசிய குற்றத்திற்காக புலிகள் அவருக்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை கொடுத்திருந்தனர். அது மட்டுமே அவர்களுக்கு புலிகள் மீதிருந்த விமர்சனம்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், நான் ஐரோப்பா வந்த புதிதில் அந்தத் தமிழ்க் குடும்பத்துடன் பழக்கம் உண்டானது. என்னுடன் நல்ல நட்பாக இருந்தனர். காலப்போக்கில் சாதியம் குறித்தும் என்னுடன் குறித்தும் வெளிப்படையாக உரையாடினார்கள். அப்போது தான் வன்னியில் புலிகள் வழங்கிய தண்டனை பற்றி விவரித்தார்கள். பச்சை மிளகாய் சாப்பிடக் கொடுத்த தண்டனை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் மென்மையான தண்டனை. ஆனால், அவர்களது ஆதிக்க சாதி மனநிலையானது, அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தது. "இது மிகவும் கொடுமையான தண்டனை, மனித உரிமை மீறல், புலிகளின் சர்வாதிகாரப் போக்கு..." என்றெல்லாம் விமர்சித்தார்கள். ஒருவேளை, பல வருட காலம் நிலக்கீழ் சிறைக்குள்  அடைத்து வைத்திருந்தால், அவர்கள் இப்போது தீவிர புலி எதிர்ப்பாளர்களாக காட்சியளித்திருப்பார்கள்.

நான் புலிகளின் தண்டனையை நியாயப்படுத்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும், அவர்களால் சாதி சொல்லி ஏசுவதை ஒரு குற்றமாக கருத முடியவில்லை. அது மட்டுமல்ல, அந்தத் தண்டனையானது அவர்களது எண்ணத்திலும், நடத்தையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. அவர்கள் புலிகளின் செயலை மட்டுமே குறை கூறினார்களே தவிர, மனதளவில் சாதிவெறி குறையாதவர்களாக காணப்பட்டனர்.

அவர்கள் தம்மை சாதியால் உயர்த்தப்பட்டவர்களாக நம்பினார்கள். அதற்கு காரணம் கேட்ட பொழுது, "நல்ல சாதி" எனப்படுபவர்கள் சுத்தமானவர்கள் என்றும், "கெட்ட சாதி" எனப்படுபவர்கள் அசுத்தமானவர்கள் என்றும், "முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை" என்றும் வாதாடினார்கள். "நோய்க்கிருமிகள் பரவுவதை தடுப்பதே நோக்கம்" என்று தீண்டாமைக்கு ஒரு  "விஞ்ஞான விளக்கம்" கொடுத்து நியாயப் படுத்தினார்கள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த உலகறிவு இல்லாதவர்களிடம் இப்படியான மூடநம்பிக்கைகள் இருப்பது வழமையானது. நாம் தான் அனுசரித்து போக வேண்டும்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் யார் எந்த சாதி என்று தெரியாத நிலைமை. எடுத்த உடனே நேரடியாக கேட்பது அநாகரிகமாக கருதப்பட்டது. ஆனால், தமிழர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டிய நிர்ப்பந்தம். தாம் (சாதி)"தெரியாதவர்களின்" வீடுகளுக்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் தரும் தேநீரை குடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தட்டிக் கழிப்பார்கள். சிலநேரம் கூடவே "தங்களது ஆள்" ஒருவரும் வந்திருந்தால் அவரை குடிக்க சொல்லிக் கொடுப்பார்களாம். இந்த விடயங்களை அவர்களாகவே என்னிடம் கூறினார்கள்.

சாதி பார்த்த காரணத்தால் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், இந்தக் குடும்பத்தினர் போன்றவர்கள் தான். மிகச் சரியாக சொன்னால், சாதி அந்தஸ்தில் உயர்ந்திருந்தாலும் வர்க்க ரீதியாக தாழ்ந்திருந்த சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள். புலிகளும் இவர்களைத் தான் பிடித்து தண்டித்தார்கள். இப்படியான தண்டனைகள் பலரது மனதில் சாதிய வன்மத்தை அதிகரித்ததே தவிரக் குறைக்கவில்லை. சாதிப்பிரச்சினையை தனிநபர் சார்ந்த சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தது தான் புலிகள் விட்ட தவறு.

அறிவூட்டல், பரஸ்பர நட்புறவு, கூட்டு உழைப்பு, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல் மூலம் சாதிப்பிரச்சினையை பெருமளவு ஒழிக்கலாம். ஒடுக்கும் சாதியை சேர்ந்த சாதிய உணர்வாளர்கள் பலர், ஒடுக்கப்படும் சாதியை சேர்ந்தவர்களுடனான பரஸ்பர தொடர்பாடல்களுக்கு பின்னர் மனம் திருந்தி இருக்கிறார்கள். இதை நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அறியாமையில் இருந்து விடுபட்டவர்கள், ஏனையோரையும் திருத்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த,  சாதிவெறி பிடித்த நிலவுடைமையாளர்கள், அல்லது பணக்காரர்களை புலிகள் என்றைக்குமே தண்டித்ததில்லை. அதிகம் பேசுவானேன். ஐரோப்பாவில் புலிகளின் பெயரில் தீவிரமாக இயங்கிய செயற்பாட்டாளர்கள் கூட அந்தரங்கத்தில் சாதி பார்த்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். இப்படியானவர்கள் குறித்தும் புலிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் புலிகள் கேட்ட போதெல்லாம் பணம் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.

ஆதிக்க சாதியை சேர்ந்த முதலாளிகள், நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதை தான் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதியம் என்கிறோம். புலிகளைப் பொறுத்த வரையில் அது குறித்து எந்த விதமான புரிதலும் இருக்கவில்லை. அதனால் தான் சாதியம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. சமூகத்தில் சாதியம் என்ற மரத்தை அகற்றுவதென்றால் அதை வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டும். ஆனால் புலிகள் கிளைகளை வெட்டி விட்டு சாதியம் ஒழிந்து விட்டது என்றனர்.

நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கும், சாமானியர்கள் வெளிப்படுத்தும் சாதிவெறிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. நாம் இங்கே நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை தான் எதிர்க்க வேண்டும். அது தான் மிகவும் ஆபத்தானது.

சாதிப் பிரச்சினையை மறுப்பதற்காக, "புலிகள் சாதி பார்க்கவில்லை" என்பதற்கு பலர் காட்டும் "ஆதாரங்கள்" யாவும் சிறுபிள்ளைத்தனமானவை. அவை பெரும்பாலும் சாமானியர்களின் சாதிவெறி தொடர்பானவை. புலிகள் தாம் சிங்கள பேரினவாத அரசை மட்டுமே எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். அதன் அர்த்தம் சாதாரண சிங்களவர்கள், இனவாதம் பேசினாலும் கூட, அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. அதே மாதிரி சாதாரண வெள்ளாளர்கள் சாதியவாதம் பேசினாலும் அவர்கள் எமக்கு எதிரிகள் அல்ல. நாங்கள் ஒருநாளும் சாதாரண மக்களுடன் சண்டைக்கு போகக் கூடாது. சாமானியர்கள் இனவெறி/சாதிவெறி கருத்துக்களை தெரிவித்தால், அதை புறக்கணிக்க வேண்டும்.

ஆனால் புலிகளிடம் அத்தகைய புரிதல் இருந்துள்ளதா என்பது கேள்விக்குறி. இதனை "புலிகள் சாதி  பார்க்கவில்லை" வக்காலத்து வாங்குவோரே, தாம் அறியாமல் புலிகளின் புரிதலின்மையை  வெளிப்படுத்தி  விடுகின்றனர். உதாரணத்திற்கு, முன்பு புலிகளின் நிர்வாகத்தில் சாதிப்பெயர் சொல்லி திட்டிய காரணத்திற்காக ஐநூறு ரூபாய் அபராதம் விதித்தார்கள், பச்சை மட்டையால் அடித்தார்கள், பச்சை மிளகாய் உண்ணக் கொடுத்தார்கள் என்று பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
இத்தகைய தண்டனைகளால் சாதியத்தை ஒழிக்க முடியாது.

அவர்கள் அறியாமையால் செய்த தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வித் தகைமைக்கும், அறிவுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாத சமுதாயத்தில் மெத்தப் படித்தவர்கள் கூட சாதி சொல்லித் திட்டுவதை கண்டிருக்கிறோம். அவர்கள் யாரும் அறிவுக்காக படிக்கவில்லை. உத்தியோகம் பெற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் படித்தவர்கள். அப்படியானவர்களை மீள் படிப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக பட்ச தண்டனையாக இருக்க வேண்டும். தமது பெற்றோரையும் திருத்தக் கூடிய வகையில், பள்ளிப் பிள்ளைகளுக்கு சமதர்ம கல்வி புகட்டுவதும் ஒரு தீர்வாகலாம்.

இதற்கு நாம் Black Lives Matter போராட்டத்தில் இருந்து பாடம் கற்கலாம். அமெரிக்காவில் உள்ள நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவெறியை தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். அதனால் தான் வெள்ளையின மக்களும் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். அத்தகைய நிலைமை அறுபதுகளில் யாழ் குடாநாட்டில் இருந்தது. அப்போது நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரி சக்திகளுக்கு வெள்ளாளர்களும் ஆதரவாக நின்றனர். போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தனர். இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவில் நடக்கும் Black Lives Matter போராட்டம் சாமானிய வெள்ளையர்களின் நிறவெறிக் கருத்துக்களுக்காக அவர்களை பகைக்கவில்லை. நாங்கள் எப்போதும் சாதாரண மக்களை எமது பக்கம் வென்றெடுக்க வேண்டும். சாதாரண வெள்ளையர்கள் காட்டும் நிறவெறியை அவர்களது பிள்ளைகளே எதிர்த்துப் போராடுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளால் அறிவு  புகட்டப் பட்டு Black Lives Matter போராட்டத்தில் இணைந்து கொண்ட வெள்ளையினப் பெற்றோர் பலருண்டு. அதே மாதிரி யாழ் வெள்ளாள குடும்பங்களில் நிலவும் சாதிவெறிக் கருத்துக்களை இளைய தலைமுறையினர் கேள்விக்குட்படுத்தி திருத்த வேண்டும். எமது அரசியல் போராட்டம் எப்போதும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சாதிவெறியை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நிலப்பிரபுத்துவ கால எச்சங்களான குடிமை சாதித் தொழில் புலிகளின் காலத்திலும் இருந்ததாகவும், அதைப் புலிகள் ஒழித்து விட்டதாகவும் சிலர் வாதாடுகிறார்கள். அவர்கள் குடிமைத் தொழில் எனக் கருதுவது மரண வீடு போன்றவற்றில் செய்யப்படும் சடங்குகளை தான். அதைப் புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மை தான். எனினும் குடிமைத் தொழில் முறை பற்றிய புலிகளின் அறிவு போதாமை காரணமாக "சாதியில் குறைந்ததாக" சொல்லப்படும் தொழில்களை தான் தடுத்தார்கள். "சாதியில் உயர்ந்தவர்கள்" செய்து வந்த குடிமைத் தொழில் அப்படியே இருந்து வந்தன. அவற்றை "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில் பேணிப் பாதுகாத்து வந்தனர்.

உதாரணத்திற்கு ஒரு கோயிலை எடுத்துக் கொண்டால், அதைச் சுற்றி பல்வேறு குடிமைச் சாதியினர் தொழில் செய்வதைக் காணலாம். கோயிலில் பூசை செய்யும் ஐயர் முதல் மடைப்பள்ளி சமையல்காரர்கள் வரை சாதி அடிப்படையிலானதொழில்களை செய்து வந்தனர். தமிழர் கலாச்சாரம் என்பது, இந்துக் கலாச்சாரமாக இருப்பதால் இன்றைக்கும் அவை தொடர்கின்றன. உண்மையில் புலிகள் அதை ஒழிக்க முனைந்திருந்தால் அங்கு ஒரு பெரும் சமூகப் புரட்சியே நடந்திருக்கும். ஆதிக்க சாதியில் உள்ள பிற்போக்காளர்கள் புலிகளை எதிர்த்து கலகம் செய்திருப்பார்கள். "புலிகள் தமிழர் கலாச்சாரத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள்..." என்று போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அன்று புலிகள் நிறுவனமயப் படுத்தப் பட்ட சாதிவெறியை எதிர்க்கவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கொண்டார்கள்.

உண்மையில் புலிகள் நிறுவனமயப்படுத்தப் பட்ட சாதிவெறிக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லை. உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடியதாக பெருமை பேசிய புலிகளால், உள்ளூரில் இருந்த வெள்ளாள சாதிவெறி அமைப்பை எதிர்க்க முடியவில்லை. அதற்கான துணிச்சலும் அவர்களிடம் இருக்கவில்லை. காரணம் மிக எளிது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து புலிகளுக்கு நிதியுதவி செய்து வந்த ஆதிக்க சாதி சமூகத்தை எதிர்த்தால் தமது இருப்பு கேள்விக்குரியதாகி விடும் என நினைத்தார்கள். அதற்கான சாத்தியம் இருக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது.

Saturday, June 27, 2020

யாழ் மக்களின் நூலக உரிமையை தட்டிப் பறிக்கும் ஆதிக்க சாதிவெறி


யாழ் நகரில் பொது மக்கள் பாவனைக்கான நூலகமே இருக்கக் கூடாது என்று வாதிடும் அளவிற்கு சிலர் (சாதி)வெறி பிடித்து அலைகிறார்கள். 2003 ம் ஆண்டு திறக்கப் படவிருந்த புதிய யாழ் மாநகர நூலகம், அங்கு எழுந்த சாதிப் பிரச்சினை காரணமாக பின்போடப் பட்டது. அதற்குக் காரணம், நூலகக் கட்டிடத்தை கட்டி முடித்து வைத்து, அதை திறக்கவிருந்தவர் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மேயர். சாதியில் குறைந்தவரின் பெயர் கல்வெட்டில் வந்து விடக் கூடாது எனும் ஆதிக்க சாதி ஆணவம்.

இதில் "நீதிமான்களாக" கருதப் பட்ட புலிகளும் ஒரு பக்கச் சார்பான நிலையெடுத்து தமது பெயரை தாமே கெடுத்துக் கொண்டனர். சிங்கள பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய புலிகளுக்கு வெள்ளாள சாதியவாத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியம் இருக்கவில்லை. ஆயிரக் கணக்கான ஆயுதங்கள் வைத்திருந்தாலும், ஆதிக்க சாதியினரின் அதிகார வர்க்கத்திற்கு அடங்கிப் போனார்கள். இறுதியில் சாதியம் வென்றது. தமிழ்த்தேசியம் தோற்றது.

இதில் சாதிப் பிரச்சினை இல்லையென்று வாதாடிய பிரிவினர், சிங்களப் பேரினவாதிகளால் எரிக்கப் பட்ட நூலக கட்டிடம் அப்படியே ஒரு நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அது உண்மையானால், புலிகள் ஏன் நூலகம் கட்டி முடிக்கப் படும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி கட்டுமானப் பணிகளை ஆரம்பக் கட்டத்திலேயே தடுத்திருக்கலாமே? ஏற்கனவே புலிகளால் இவ்வாறு தடுக்கப் பட்ட திட்டங்கள் ஏராளம் உள்ளன. யாழ் நகர சிவில் நிர்வாகம் பல வழிகளில் குழப்பப் பட்டது.

புலிகள் தமது செல்வாக்கை பயன்படுத்தி யாழ் நகரில் நூலகம் கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். எதுவுமே செய்யாமல் இருந்து விட்டு "ஆனந்தசங்கரி திறக்கவிருந்தார் அதனால் தடுத்தோம்" என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான பதில். யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு ஒரு நூலகம் தேவைப் பட்டது. அதை ஆனந்த சங்கரி திறந்து வைத்தாலும், அன்டன் பாலசிங்கம் திறந்து வைத்தாலும் அவர்களுக்கு ஒன்று தான்.

இதிலே வேடிக்கை என்னவென்றால், நூலக பிர்ச்சினை நடந்து கொண்டிருந்த அதே காலத்தில், தாம் முக்கியமானதாக கருதும் புனரமைப்பு திட்டங்களுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என்று புலிகள் விரும்பி இருக்கிறார்கள். குறிப்பாக நல்லூரில் உள்ள கிட்டு பூங்கா, கோப்பாயில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றுக்கு மாநகர சபை நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த விபரத்தை செல்லன் கந்தையா வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) சிங்களப் பேரினவாதிகளால் சேதமாக்கப் பட்ட பூங்காவும், மயானமும் யாழ் மாநகர நிதியில் புனரமைக்கப் படலாம் என்றால், நூலகம் புனரமைப்பதை மட்டும் புலிகள் ஏன் தடுக்க வேண்டும்? இது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுகிறது.

செல்லன் கந்தையாவுடனான பேட்டியில் (வீடியோ இணைப்பு கீழே உள்ளது.) அவர் ஒரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிடுகிறார். நூலகத்தை புனரமைப்பது தொடர்பாக மக்களின் விருப்பத்தை கேட்டு, நகர சபையில் முடிவெடுக்கப் பட்டது. அதற்கான நிதியையும் நகர சபை ஒதுக்கியது. புதிதாக வேறு இடத்தில் நூலகம் கட்டுவதானால் யாழ் நகரில் இடப்பற்றாக்குறை. ஆகவே முன்பிருந்த இடத்தில் கட்டுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதற்கு மக்களும், நகர சபை உறுப்பினர்களும் சம்மதித்துள்ளனர்.

நல்லூரில் இராணுவத்தால் உடைக்கப் பட்ட திலீபனின் நினைவுச்சின்னத்தை, போர் முடிந்த பின்னர் மீண்டும் திருத்திக் கட்டி இருக்கிறார்கள். போர் நடந்த காலத்தில் விமானக் குண்டுவீச்சுகள் அல்லது ஷெல் தாக்குதலால் இடித்து நொறுக்கப் பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மீண்டும் புனரமைக்கப் பட்டு அதே இடத்தில் இயங்குகின்றன. இதெல்லாம் புலிகள் அதிகாரத்தில் இருந்த காலத்தில், அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கூட நடந்துள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த கோயில்கள் புனரமைப்பதற்கான நிதி, புலிகளின் ஜென்ம விரோதியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இருந்து வந்தது. அப்போது இடிந்த பள்ளிக்கூடங்கள், கோவில்களை அப்படியே நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. அதை ஒரு சர்ச்சை ஆக்கவில்லை. ஏனென்றால் அதில் சாதிப் பிரச்சினை இருக்கவில்லை. அதனால் ஏதோ ஒரு சாட்டுக் கூறி தடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நாய் விற்ற காசு குரைக்காது. ஜென்ம விரோதி டக்ளஸ் கொடுத்த பணம் கடிக்காது.

யாழ் நூலகத்தை புனரமைக்காமல் நினைவுச்சின்னமாக வைத்திருக்க வேண்டும் என வாதாடுவோர் யாரென்று பார்த்தால், அவர்களில் பலர் பல்கலைக்கழக நூலகத்தை பயன்படுத்தி படித்து பட்டதாரியானவர்கள்! இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாது, தமிழ் நாட்டில் அல்லது கொழும்பில் வசதியாக வாழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். யாழ் நகருக்கு ஒரு நூலகம் அவசியமா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்கள் தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து கொண்டு நூலகம் வேண்டாம் என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

வாழ்க்கையில் ஒரு நாளும் யாழ் நூலகத்தை பயன்படுத்தி இராதவர்கள், இனிமேலும் பயன்படுத்த போகாதவர்கள், "யாழ் நகருக்கு நூலகம் வேண்டாம்" என்று வாதிடுவது சுத்த அயோக்கியத்தனம். யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்கள் அறிவு பெறுவதை தடுக்கும் ஈனப் புத்தி. இதை தமிழ்த் தேசியத்தின் பெயரால் சொல்வது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் அவமானம்.

ஒரு மாநகரசபையின் பொது நூலகமானது பொது மக்களின் நன்மை கருதி மக்களின் வரிப் பணத்தில் இயக்கப் படுகிறது. நூல்களை இரவல் கொடுப்பதற்கு மட்டும் சிறிய தொகை அறவிடப் படுகிறது. நூலக செலவுகளை அரச மானியம் ஈடுகட்டுகிறது. இதனால் ஏழைகளுக்கே அதிக நன்மை உண்டாகும். உலகம் முழுவதும் பொது நூலகங்கள் இருப்பதன் காரணமும் அது தான்.

யாழ்ப்பாணத்திலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்கும் சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு புத்தகம் கூட வாங்க வசதியற்ற ஏழைகள் தான் பெரும்பான்மை. அவர்கள் யாழ் நகரில் உள்ள பொது நூலகத்தை பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் மட்டும் அங்கிருந்த நூலகத்தை பயன்படுத்தி பட்டம் பெற்ற பின்னர், பொதுவாக நூல்கள் வாசிப்பதையே நிறுத்தி விடும் மேட்டுக்குடி "அறிவு"ஜீவிகளுக்கு பொது நூலகத்தின் அருமை எங்கே தெரியப் போகிறது?

செல்லன் கந்தையா சமீபத்திய வீடியோ பேட்டியில் ஒரு உண்மையை கூறுகிறார். யாழ் நகரை அண்டி வாழும் வசதியற்ற தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு பொது நூலகம் ஒரு கொடை என்பதால் தான் அதை புனரமைக்க விரும்பியதாக கூறுகிறார். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த காரணத்தால் மூன்றாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்திய செல்லன் கந்தையா, கல்வியின் அருமையை உணர்ந்து வருங்கால சந்ததியின் நன்மை கருதி நூலகத்தை கட்டி இருக்கிறார். அப்படி ஒரு நூலகம் மக்களுக்கு தேவையில்லை என்பவர்கள் எப்படிப் பட்ட அயோக்கியர்களாக இருக்க வேண்டும்?

சில அறிவுஜீவிகளும் சாதிய வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ளனர். "ஆதிக்க சாதியில் வசதி படைத்தவர்கள் மட்டும் கல்வியில் முன்னேறினால் போதும், ஒடுக்கப் பட்ட சாதியினரில் வசதியற்ற பிரிவினர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?" என்ற மேட்டுக்குடி ஆணவம் தானே இப்படிப் பேச வைக்கிறது? ஆதிக்க சாதிய மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே "யாழ் மக்களுக்கு பொது நூலகம் தேவையில்லை" என்று கூறத் துணிவார்கள். சாதிவெறி பிடித்த எலிகள் அம்மணமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

முடிவாக, யாழ் நூலக திறப்பு விழா பிரச்சினைக்கு பின்னால் இருந்தது சாதிப் பிரச்சினை மட்டுமல்ல, வர்க்கப் பிரச்சினையும் தான். இதை மறுப்பவர்கள் ஒன்றில் உயர் சாதிய, அல்லது உயர் வர்க்க பெருமிதம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.


Thursday, June 25, 2020

புலிகளின் சாதியொழிப்பு திட்டத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து...


விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சாதியொழிப்பு போராட்டம் நடத்தினார்கள் என்பதற்கு ஆதாரமாக எழுத்தாளர் சயந்தன் முன்பு புலிகள் வெளியிட்ட பத்திரிகையில் இருந்து ஒரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றார். அதாவது சாதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள படியால், அந்தக் கிராமங்களின் அபிவிருத்தியை முன்னெடுத்தால் சாதி ஒழிந்து விடும் என்பது புலிகளின் எண்ணமாக இருந்துள்ளது. இந்த பத்திரிகைத் துணுக்கில் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் வாழும் பூம்புகார் மாதிரிக் கிராம திட்டம் விவரிக்கப் படுகின்றது.

இது தவிர்க்கவியலாது சிறிலங்கா அரசு முன்னெடுத்த கிராமிய அபிவிருத்தி திட்டங்களை நினைவுபடுத்துகிறது. பல கவர்ச்சிகரமான பெயர்களுடன் அறிவிக்கப்பட்ட அந்த திட்டங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நடைமுறைப் படுத்தப் பட்டு வந்துள்ளன. அதனால் இலங்கையில் வறுமை ஒழிந்து விட்டதா, அல்லது நாடு அபிவிருத்தி அடைந்து விட்டதா என்பது நிச்சயமாக கேட்கப் பட வேண்டிய கேள்வி. மேலும் போர் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்சே கூறிய, "தமிழர்களின் பிரதேசம் அபிவிருத்தி அடைந்தால் நாட்டில் இனப்பிரச்சினை மறைந்து விடும்" என்ற கூற்றையும் இது நினைவுபடுத்துகிறது. சிறிலங்கா அரசானாலும், விடுதலைப் புலிகள் என்றாலும் வலதுசாரி தாராளவாத பொருளாதார அடிப்படையில் சிந்திப்பதால், அவர்களால் இதற்கு மேல் வேறொன்றும் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரில் பலர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்து விட்டனர். அறுபதுகள், எழுபதுகளில் இந்த மாற்றம் தெளிவாக உணரப்பட்டது. குறிப்பாக இலவசக் கல்வியை பயன்படுத்தி, கஷ்டப்பட்டு படித்து மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அரச அதிகாரிகளாக வந்த ஏராளம் பேரை உதாரணம் காட்டலாம். இப்படியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்தில் இருந்தும் பலர் வசதியாக வாழ்கின்றனர். அவர்களில் ஒரு elite பிரிவினர், தமது மத்தியதர வர்க்க அடிப்படை காரணமாக தமிழரசுக் கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். அது இன்று TNA ஆதரவு வரை தொடர்கிறது.

சிறிமாவோ காலத்தில் கொண்டுவரப்பட்ட கள்ளுத்தவறணை கூட்டுறவு சங்கம் காரணமாக எத்தனையோ மரமேறும் தொழிலாளர்கள் கைகளில் தாராளமாக பணம் புழங்கியது. இந்த தகவலை காலஞ்சென்ற எழுத்தாளர் இரகுநாதன் தனது பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி எனும் நூலில் பதிவு செய்துள்ளார். அதே மாதிரி கரையோரங்களில் மீனவர் சங்கங்கள் மூலமும், வன்னியில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டும் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்தவர்கள் ஏராளம். அத்துடன் கராஜ் போன்ற சுயதொழில் செய்து முன்னேறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பலருண்டு. மேற்குறிப்பிட்ட பிரிவினர் தனிப்பட்ட முறையில் காணி, பூமி, நகை, நட்டு வாங்கி சொத்துக்களையும் சேர்த்துள்ளனர்.

அப்படியானால் ஏன் இன்னமும் சாதிப்பிரச்சினை ஒழியவில்லை? உலகில் எந்த நாடாகிலும், முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பொருளாதாரத்தில் முன்னேற முடியும். பெரும்பாலானோர் வறுமையில் துன்பப் பட வேண்டும். ஏனெனில் முதலாளித்துவ பொருளாதாரம் முற்றுமுழுதாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாக இருப்பதால் தான் ஒரு சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

இனப்பிரச்சினை மட்டுமல்ல, சாதிப்பிரச்சினையும் ஒரே அரசியல் பொருளாதார அடித்தளத்தை கொண்டவை தான். அடிப்படையில் இரண்டுமே வர்க்கப் பிரச்சினை தான். இலங்கையில் சிங்கள மொழி பேசும் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருப்பதால் தான், அதைப் பாதுகாப்பதற்காக சிங்கள பேரினவாத அரசியல் கட்டமைக்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் சாதியமும் அப்படித் தான். சாதிய படிநிலையில் மேன்நிலையில் உள்ள வெள்ளாளர்களில் ஒரு மேட்டுக்குடியினர் பெருமளவு சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் தமது செல்வத்தை மற்றவர்களுடன் பங்கிட விரும்பாத காரணத்தால் தான் இன்று வரைக்கும் சாதிப்பிரச்சினை தொடர்கிறது.

வட மாகாணத்தில் பெருமளவு நிலங்கள் எந்த சாதியின் ஆதிக்கத்தில் இருக்கின்றன? எந்த சாதியை சேர்ந்தவர்களில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம்? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டால் சாதிப் பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து விடும். துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகளிடம் அப்படியொரு தூரப் பார்வை இருக்கவில்லை. அதனை சயந்தன் கொடுத்த பத்திரிகை ஆதாரமே நிரூபிக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து அறிந்து வைத்திருந்த புலிகளுக்கு, வெள்ளாள சாதியவாதத்தின் ஒடுக்குமுறை குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது ஆச்சரியம். ஒடுக்குபவர்கள் யார் என்பதிலும், ஒடுக்குமுறை என்றால் என்ன என்பதிலும் புலிகளிடம் தெளிவான அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லை என்பதை இங்குள்ள பத்திரிகை ஆதாரம் எடுத்துக் காட்டுகின்றது.

(படத்திற்கு நன்றி: Sayanthan Kathir)

Tuesday, June 23, 2020

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை": சாதிய கொண்டையை மறந்த யாழ் ஒன்றியம்!


புனரமைக்கப்பட்ட யாழ் நூலக மீள்திறப்பு விழா தொடர்பான ஆவணம் ஒன்றை இன்று பார்க்கக் கிடைத்தது. 17-02-2003 உதயன் பத்திரிகையில் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்" என்ற அமைப்பின் பெயரில் வெளியான அறிக்கையில் சாதியம் மூடி மறைக்கப் படுவது நன்றாகத் தெரிகிறது.

இந்த அறிக்கையின் தலைப்பே "உழுத்துப் போன சாதிப்பிரச்சினை..." என்று தான் தொடங்குகிறது. இது வழமையாக சாதியவாதிகள் பாவிக்கும் சொல்லாடல். "இப்பெல்லாம் யாரு சாதி பார்க்கிறாங்க?", "உழுத்துப்போன சாதிப்பிரச்சினை" ஆகிய இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "விடுதலைப் போராட்டம் வீரியம் பெற்றிருந்த" காலத்தில் தான், 1995 ம் ஆண்டு வலிகாமத்தில் இருந்து தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் வீடுகளில் சாதி பார்த்து தங்க வைக்கப் பட்டனர். பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவது தடுக்கப் பட்டது. அப்போதெல்லாம் யாழ் குடாநாடு ஆயுதமேந்திய புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

இந்த விடயங்களை தெரிந்து கொண்டும் "சாதிப்பிரச்சினை எப்பவோ உக்கி, உழுத்து, செத்து விட்டது" என்று அறிக்கை வெளியிட்டால், அதை எழுதியவர் ஒன்றில் பொய்யராக இருக்க வேண்டும் அல்லது சாதிவெறியராக இருக்க வேண்டும். உலகில் எந்தவொரு இனவாதியும் தான் பேசுவது இனவாதம் என்று சொல்வதில்லை. அதே மாதிரித் தான் சாதியவாதிகளும் நடந்து கொள்வார்கள். வேறு ஏதாவது காரணத்தைக் கூறித் தான் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

இந்த அறிக்கையில் நூலகத்தை திறக்க விடாமல் தடுத்தமைக்கு சொல்லப்படும் காரணங்கள் சிறுபிள்ளைத்தனமான வாதங்களாக தெரிகின்றன. "நூலகம் முழுமையடையவில்லை" என்பதால் தாம் போராட்டம் நடத்தியதாகவும், அப்படி இருந்தும் அன்றைய மேயர் செல்லன் கந்தையா நூலகத்தை திறக்க முயன்றதால் புலிகளிடம் முறையிட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் மேயராக இருந்த காரணத்தால் தாம் நூலகத் திறப்புவிழாவை தடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். செல்லன் கந்தையா உறுப்பினராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வேண்டுமென்றே சாதிப்பிரச்சினை புரளியை கிளப்பியதாகவும், தமக்கு சாதிய நோக்கம் எதுவும் கிடையாது என்றும் சொல்கின்றனர்.

சரி, அதை உண்மை என்றே நம்புவோம். அந்த நேரத்தில் திடீரென முளைத்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்திற்கு சாதிய நோக்கம் இல்லா விட்டால், வேறெந்த காரணத்திற்காக எதிர்த்தார்களாம்? அதையும் அவர்களே சொல்லி விடுகின்றனர். இந்த அறிக்கையில் பின்வரும் இரண்டு காரணங்களுக்காக மட்டுமே எதிர்க்கப் பட்டுள்ளது:

  1. நூலகத்தில் காத்திரமான நூல்கள் இல்லை. 
  2. நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு, இணையத்தள வசதி செய்து தரப்படவில்லை.

உலகம் முழுவதும் இயங்கும் நூலகங்கள் பயனாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதிய நூல்களை வாங்கிக் கொண்டிருக்கும். நூலகம் திறந்து 17 வருடங்கள் கடந்த பின்னரும், இப்போதும் அங்கே காத்திரமான நூல்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் எது காத்திரமான நூல் என்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்வி. ஒரு வாசகர் முக்கியமானதாக கருதும் ஒரு நூல் இன்னொருவருக்கு பிரயோசனமற்றதாக தெரியலாம். மனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான சுவை கொண்டவர்கள் அல்ல. ஆகவே எது காத்திரமான நூல் என்பதில் எல்லோரும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்க முடியாது. அதை தீர்மானிப்பது நூலகத்தின் பயனாளிகள்.

யாழ் நூலகம் இன்றைக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளில் பின்தங்கியுள்ளது. 2003 ம் ஆண்டு காலகட்டத்தில் பல மேற்கத்திய நகரங்களில் இருந்த நூலகங்களில் கூட இணைய வசதி இருக்கவில்லை. இந்தப் பிரச்சினை நடந்து பத்து வருடங்களுக்குப் பிறகு, 2013 ம் ஆண்டு சாவகச்சேரி பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன். அங்கே நவீன தொழிநுட்ப, இணைய வசதி இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கிறேன்.

யாழ் நூலகத்திற்கு அடுத்த படியாக, அதுவும் ஒரு முக்கியமான பெரிய நூலகம் தான். (யாழ் குடாநாட்டின் தென் கிழக்கு பிரதேசத்தில் சாவகச்சேரி ஒரு பெரிய நகரம்.) எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருந்த சாவகச்சேரி பொது நூலகத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இன்று வரை யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அப்போது இந்த யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் என்ன செய்து கொண்டிருந்தது? இப்போதாவது ஒரு பெரிய போராட்டம் நடத்தி நூலகத்திற்கு இணைய வசதியை பெற்றுத் தரலாமே?

"நூலகம் முழுமையடையவில்லை... காத்திரமான நூல்கள் இல்லை... இணைய வசதிகள் இல்லை..." என்பன போன்ற நொண்டிச் சாட்டுகளை சொல்லும் பொழுதே, "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய" முகமூடி அணிந்திருந்தவர்கள் யார் என்பது தெரிந்து விடுகிறது. நான் அறிந்த வரையில், அப்படி ஒரு அமைப்பு நூலக திறப்புவிழா பிரச்சினைக்கு முன்னரும், பின்னரும் இயங்கவில்லை. (தவறென்றால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.)

இந்தப் பிரச்சினை நடந்த அதே நாட்களில் தான், தினக்குரல் பத்திரிகையில் மேயர் செல்லன் கந்தையாவை மரமேறும் சீவல் தொழிலாளி போன்று சிறுமைப்படுத்தும் சாதிவெறிக் கார்ட்டூன் பிரசுரமானது. அதை இந்த ஒன்றியம் கண்டிக்கவில்லை. அது தான் "யாழ் மாவட்ட பொது அமைப்புகளின்" ஒன்றியமாயிற்றே? உழுத்துப் போன சாதியத்தை உதறித் தள்ளிய "பொது அமைப்புகளுக்கு"(?) தினக்குரல் பத்திரிகையின் சாதிவெறிக் கேலிச்சித்திரம் ஒரு பொருட்டாக தெரியாதது மிகப் பெரிய ஆச்சரியம். பொது அமைப்புகளின் ஒன்றிய முகமூடி அணிந்திருந்த சாதியவாதிகள் தமது கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்.