Friday, February 22, 2019

இந்தியாவை குறிபார்த்த லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு


//ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் எந்த பூர்ஷுவா தேசியவாதத்திலும், ஒடுக்குமுறைக்கு எதிரான பொதுவான ஜனநாயகத் தன்மை ஒன்று இருக்கின்றது. இந்த தன்மையைத் தான், நிபந்தனையேதும் இன்றி நாங்கள் ஆதரிக்கின்றோம். அதே சமயத்தில், தேசியத் தனித்துவத்தை நோக்கிய போக்கிலிருந்து, இந்த ஜனநாயகத் தன்மை முற்றிலும் வேறானது, என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். யூதர்களை ஒடுக்கும் போலிஷ் பூர்ஷுவாக்களின் போக்கையும் மற்றும் அது போன்றவற்றையும் எதிர்த்து நாம் போராடுகின்றோம்.// - லெனின் ( தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை)

 //ஜனநாயகம் என்பது, பொதுவாக சொல்லப்போனால், சண்டை போடும் குணமுள்ள, ஒடுக்கும் தன்மையுள்ள தேசியவாதத்திற்கும் இயைந்ததாகும். அரசின் எல்லைகளுக்குள் எந்த ஒரு தேசிய இனத்தையும் பலவந்தமாக பிடித்து வைத்திருப்பதை அறவே ஒதுக்கி விடும் ஜனநாயகம் வேண்டுமென்று பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. எனவே, சுயநிர்ணய உரிமையை மீறாமல் இருக்கும் பொருட்டு.... பிரிந்து போவதற்கு சாதகமாக வாக்களிப்பது அல்ல, பிரிந்து போகும் பிரதேசமானது தானே அப் பிரச்சினையை முடிவு செய்து கொள்ளும் என்ற உரிமைக்கு சாதகமாக வாக்களிப்பதே நம்முடைய கடமை. விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை என்றால், அதற்கென விவாகரத்தை ஆதரித்து ஒருவன் வாக்களிக்க வேண்டியதில்லை.// - வி.இ. லெனின் (தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும்)

லெனினின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, உண்மையில் "பிரிட்டிஷ் காலனியான இந்தியாவை விடுதலை செய்யும் உள்நோக்கம் கொண்டது" என்று பிரிட்டன் நம்பியது. அதனால், செம்படைகளுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த, சார் மன்னனுக்கு ஆதரவான வெண் படைகளுக்கு பிரிட்டன் உதவியது. மத்திய ஆசியா போல்ஷெவிக் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை தடுத்து நிறுத்துவது அதன் நோக்கமாக இருந்தது.

ரஷ்யாவில் லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சி, நீண்ட காலம் நிலைக்கப் போவதில்லை என்றே அந்தக் காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதற்குக் காரணம், அப்போது சென் பீட்டர்ஸ்பேர்க் நகரமும், வேறு சில நகரங்களும் மட்டுமே போல்ஷெவிக் செம்படையினர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.

ரஷ்யாவின் பெரும்பான்மையான பகுதிகள், சார் மன்னனுக்கு ஆதரவான வெண் படையினர் கட்டுப்பாட்டில் இருந்தது. அது மட்டுமல்லாது, செம்படையினரை விட, வெண் படையின் எண்ணிக்கையும், பலமும் பல மடங்கு அதிகமாக இருந்தது.

மத்திய ஆசியாவில் உள்ள துருக்கி மொழி பேசும் முஸ்லிம் மக்கள், போல்ஷெவிக் புரட்சியாளர்களை வரவேற்கவில்லை. அவர்கள் சார் மன்னனின் படைகளையும், போல்ஷெவிக் செம்படையினரையும் ஒன்றாகக் கருதினார்கள். அதனால், உள்ளூர் மக்களின் மனதை வெல்வதற்காக, லெனின் சுயநிர்ணயக் கோட்பாட்டை அறிவித்தார்.

மதத்தால் முஸ்லிம்களான மத்திய ஆசிய இனங்கள், தேசிய சுயநிர்ணய உரிமையை விட, மத உரிமைக்கான ஜிகாத் முக்கியம் என கருதினார்கள். பிரிட்டன் அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பெய்லி போன்ற உளவாளிகள் இந்தியாவில் இருந்து ஊடுருவினார்கள். ஜிகாத் போராட்டம் நடத்த விரும்பிய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு, பிரிட்டன் ஆயுதங்கள் வழங்கி உதவியது.

(நன்றி: Setting the East Ablaze; Lenin's Dream of an Empire in Asia, by Peter Hopkirk)

Thursday, February 21, 2019

பல்கேரிய பயணக்கதை


"உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌" நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும்.

இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும் தான் வேறு. ம‌ற்றும் ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.

இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் - த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து. 

சுருங்க‌க் கூறின்: 
பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர்.

துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துருக்கியின் பிராந்திய‌ வல்ல‌ர‌சு ஆக்கிர‌மிப்பு ப‌ற்றி பேசுவார்க‌ள்.

அதை விட‌ இருப‌தாம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ள், இன‌ச் சுத்திக‌ரிப்புக‌ள் ப‌ற்றி இன்றும் நினைவுகூருகிறார்க‌ள். அத‌ற்காக‌ நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்க‌ள்.

இன்றைகும் இன‌ முர‌ண்பாடுக‌ளின் விளைநில‌மான‌ பால்க‌ன் பிராந்திய‌த்திற்கு உங்க‌ளை வ‌ர‌வேற்கிறோம்! இன‌ப் பிர‌ச்சினை ப‌ற்றி தெரிந்து கொள்வோமா? நான் சொல்லத் இன்னும் தொட‌ங்க‌வேயில்லை... 
எங்கே த‌லை தெறிக்க‌ ஓடுகிறீர்க‌ள்? 



பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி - இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.

ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர். 

இதைவிட "போமாக்" எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.

துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார். 



வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.

பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.
****** 



நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.

பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவின் 1949 ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.

பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப் பட்டது. 1999 ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப் பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.

ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப் படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை. 
  
 ப‌ல்கேரிய‌ த‌லைநகர் சோபியாவில் முன்பிருந்த‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சிலைக‌ளை எல்லாம் அக‌ற்றி விட்டார்க‌ள். அவ‌ற்றில் சில‌வ‌ற்றை ஓரிட‌த்தில் வைத்து மியூசிய‌ம் ஆக்கி விட்டார்க‌ள்.

அத‌ற்கு அருகில் Socialist art museum என்ற‌ பெய‌ரில் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஓவிய‌ங்க‌ளை காட்சிக்கு வைத்திருக்கிறார்க‌ள். அந்த‌ ஓவிய‌ங்க‌ள் 1989 ம் ஆண்டு முத‌லாளித்துவ‌த்திற்கு திரும்பிய‌தை கொண்டாடுகின்ற‌ன. அந்த‌ வருட‌த்திற்கு முந்திய‌ வ‌ர‌லாற்றை அழித்து விட‌ விரும்புகிறார்க‌ளாம்.

*****


தலைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அங்கு ஒரு ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ரின் விருந்தாளியாக‌ த‌ங்கி இருந்தேன். அந்த‌ ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ருக்கு ஆங்கில‌ம் ஒரு சொல் கூட‌ தெரியாது. இந்த தொட‌ர்பாட‌ல் பிர‌ச்சினை ப‌ற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த‌ ந‌ண்ப‌ரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கு என்ன‌ செய்ய‌லாம் என்று என்னைப் போல் அவ‌ரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ நேர‌ம் "பிரெஞ்சு தெரியுமா?" என்று கேட்டார். ந‌ல்ல‌வேளையாக‌ என‌க்கும் பிரெஞ்சு தெரிந்த‌ ப‌டியால், இருவ‌ரும் பிரெஞ்சில் உரையாடினோம். 


இங்கே முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப் பட வேண்டிய‌ விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. ப‌ல்கேரியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் ஆங்கில‌ம் இர‌ண்டாம் மொழியாக‌ க‌ற்பிக்க‌ப் ப‌ட‌வில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ர‌ஷ்ய‌ன் க‌ற்பித்தார்க‌ள். 90 க‌ளுக்கு பிற‌கு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள்.

தொண்ணூறுக‌ளுக்கு முன்ன‌ர், ர‌ஷ்ய‌ன் இர‌ண்டாம் மொழியாக‌ இருந்தாலும், பாட‌சாலைக‌ளில் இன்னொரு அந்நிய‌ மொழியும் க‌ற்பித்த‌ன‌ர். அது மாண‌வ‌ர்க‌ளின் சுய‌ தெரிவாக‌ இருந்த‌து. மூன்றாம் மொழியாக‌ ஆங்கில‌ம், பிரெஞ்சு, ஜெர்ம‌ன், ஸ்பானிஷ் ஆகிய‌ மொழிக‌ளை க‌ற்ற‌ன‌ர். இதே த‌க‌வ‌லை முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் வாழ்ந்த‌ ப‌ல‌ர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறு தான் என‌து ப‌ல்கேரிய‌ நண்ப‌ருக்கு பிரெஞ்சு பேச‌த் தெரிந்திருக்கிற‌து. ஓய்வு பெறும் வ‌ய‌திலும் அவ‌ர் பிரெஞ்சை ம‌ற‌க்க‌வில்லை. என‌க்கும் ச‌ர‌ள‌மாக‌ பிரெஞ்சு தெரியாது. கொஞ்ச‌ம் தான் தெரியும். ஆனால், அடிப்ப‌டை விட‌யங்க‌ள் ப‌ற்றிய‌ தொட‌ர்பாட‌லுக்கு தேவையான‌ அள‌வு பிரெஞ்சு தெரிந்தால் போதும். 

விராட்சா நகரில் ஒரு பெரிய அர‌ச‌ அச்ச‌க‌ம் இருந்த‌து. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாள‌ர்க‌ள் அங்கு வேலை செய்த‌ன‌ர். தொண்ணூறுக‌ளில் "ஜ‌ன‌நாயக‌ம்" வ‌ந்த‌ பின்ன‌ர் உற்ப‌த்தியை நிறுத்தி விட்டார்க‌ள். விலை உய‌ர்ந்த‌ அச்சு இய‌ந்திர‌ங்க‌ளை, இந்திய‌ நிறுவன‌ம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்ட‌னர். தொன் க‌ண‌க்கிலான‌ கட‌தாசிக‌ளை வீசி விட்ட‌ன‌ர். அங்கு வேலை செய்த‌வ‌ர்க‌ள் வேலையில்லாம‌ல் ந‌டுத் தெருவில் விட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ தொழில‌க‌த்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த‌ க‌ட்டிட‌மாக‌, உள்ளே ஒன்றும் இல்லாம‌ல் வெறுமையாக‌ இருந்த‌து. ஜ‌ன்னல் க‌ண்ணாடிக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு, த‌ரையெங்கும் க‌ண்ணாடித் துண்டுக‌ள் சித‌றிக் கிட‌ந்த‌ன‌. நொறுங்கிய‌ க‌ண்ணாடித் துண்டுக‌ள் போன்ற‌து தான், அந்த‌ ந‌க‌ர‌த்தில் வாழும் பெரும்பாலான தொழிலாள‌ர்க‌ளின் நிலைமையும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌வலைப்ப‌ட‌ யாருமில்லை. 


*****














Wednesday, February 20, 2019

அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை!


அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை! 

1945 - 1991 வ‌ரையில் அல்பேனியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌து. ஸ்டாலின் ம‌றைவுக்குப் பின்ன‌ர், சோவிய‌த் முகாமில் இருந்து வில‌கி, மாவோயிச‌ சீனாவுட‌ன் ம‌ட்டுமே ந‌ட்பாக‌ இருந்த குட்டி நாடான‌‌ அல்பேனியா, ஐரோப்பாவில் த‌னிமைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து.

த‌லைந‌க‌ர் டிரானாவில் உள்ள‌ தேசிய‌ திரைப்ப‌ட‌ க‌ள‌ஞ்சிய‌ அறைக‌ளில் இன்ன‌மும் ப‌ழைய‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சினிமாச் சுருள்க‌ள் பாதுகாக்க‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றின் வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் க‌ருதி, டிஜிட்ட‌லில் ப‌திவுசெய்து ம‌க்க‌ளுக்கு போட்டுக் காண்பிக்க‌ முடிவெடுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து.

அன்றைய‌ கால‌த்தில் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ எல்லாத் திரைப்ப‌ட‌ங்களையும் "க‌ம்யூனிச‌ப் பிர‌ச்சார‌ம்" குற்ற‌ம்சாட்ட‌ முடியாது. உதார‌ண‌த்திற்கு, "மாவீர‌ன் Skenderbeu" திரைப்ப‌ட‌ம், துருக்கிய‌ருக்கு எதிராக‌ போரிட்ட‌ ச‌ரித்திர‌ நாய‌க‌னின் வ‌ர‌லாற்றைக் கூறுகின்ற‌து.

இருப்பினும், க‌ம்யூனிச‌ கால‌க‌ட்ட திரைப்ப‌ட‌ங்களை மீள் வெளியீடு செய்தால், அவை ம‌க்க‌ளை "மூளைச் ச‌ல‌வை" செய்து விடும் என்று அர‌சிட‌ம் முறைப்பாடு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. இதிலே வேடிக்கை என்ன‌வென்றால், அன்றைய‌ க‌ம்யூனிச‌ அர‌சு த‌ணிக்கை செய்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையும் காண்பிக்க‌க் கூடாதாம்!

ICC (க‌ம்யூனிச‌ குற்ற‌ ஆய்வு மைய‌ம்) என்ற‌ நிறுவ‌ன‌ம் தான் இந்த‌ த‌டையுத்த‌ர‌வை கோரியுள்ள‌து. அது அர‌ச‌ நிதியில் இய‌ங்கும் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு நிறுவ‌ன‌ம் ஆகும். அத‌னால் செல்வாக்கு மிக்க‌தாக‌ உள்ள‌து.

அந்த‌க் கால‌ திரைப் ப‌ட‌ங்க‌ளை பார்வையிடும் ம‌க்க‌ள், "க‌ம்யூனிச‌ க‌ட‌ந்த‌ கால‌த்தை சிற‌ந்த‌தாக‌க் க‌ருத‌த் தொட‌ங்கி விடுவார்க‌ள்..." என்று குற்ற‌ப் ப‌த்திர‌த்தில் தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அர‌சு அந்த‌ நிறுவன‌த்தின் முறைப்பாட்டை ப‌ரிசீலித்து க‌ம்யூனிச‌ப் ப‌ட‌ங்க‌ளுக்கு த‌டை போடுமா என்று தெரிய‌வில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

அந்த‌க் கால‌த்து ந‌ட்ச‌த்திர‌ ந‌டிகை Monika Lubonja (பிற‌ந்த‌ ஆண்டு 1968) இது ப‌ற்றிக் குறிப்பிடும் பொழுது: "க‌லைஞ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் அது ஒரு பொற்கால‌ம். க‌லை என்ப‌து ஆத்மார்த்த‌மான‌தாக‌, உண‌ர்வுக‌ளை வெளிப்ப‌டுத்த‌க் கூடிய‌தாக‌, அன்பை ப‌ர‌வ‌ச்செய்வ‌தாக‌, அர்ப்ப‌ணிப்புக் கொண்ட‌தாக‌ இருந்த‌து." என்றார்.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: NRC Handelsblad, 31- 5- 2017)

Sunday, February 17, 2019

"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை


தி இந்து தமிழ் பத்திரிகையில், "வாழும் போதே நரகமாகும் வெனிசுலா" என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு அபத்தக் கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் பல உண்மைக்கு புறம்பான தகவல்களை கற்பனையாக புனைந்து எழுதி உள்ளார். அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன. இவற்றை தி இந்து போன்ற தரமான பத்திரிகைகள் கூட பிரசுரிப்பதன் மூலம் அவற்றின் நன்மதிப்பை குறைத்துக் கொள்கின்றன.

ஜெ.சரவணன்: //ஒருகாலத்தில் லத்தீன்- அமெரிக்க நாடுகளிலேயே பணம் கொழிக்கும் மிக செழிப்பான நாடாக வெனிசுலா இருந்தது. அதிக எண்ணெய் வளம் மிக்க நாடு.//

எண்ணை வளம் மிக்க நாடுகள் எல்லாம் "பணம் கொழிக்கும் நாடு" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. வெனிசுவேலா மட்டுமல்ல, அங்கோலா, நைஜீரியா, இந்தோனேசியா, என்று பல எண்ணெய் வளம் மிக்க நாடுகள் இன்னமும் ஏழை நாடுகளாக இருக்கின்றன.

எண்ணெய் விற்பனையால் கிடைக்கும் வருமானம் ஒரு சில பணக்காரர்களின் பைகளை மட்டுமே நிரப்புகின்றது. பெரும்பான்மை மக்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி உள்ளதா? குறைந்த பட்சம், அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளையாவது பூர்த்தி செய்துள்ளதா? இதுவே நாம் கேட்க வேண்டிய கேள்வி.

ஒரு காலத்தில் வெனிசுவெலாவிலும் அந்த நிலைமை தான் இருந்தது. அதாவது, எண்ணை ஏற்றுமதியால் கிடைத்த வருமானம் ஒரு சில பணக்காரக் குடும்பங்களின் சொத்துக்களாக முடங்கிக் கிடந்தது. பெரும்பான்மை மக்கள் எண்ணையால் எந்த நன்மையையும் கிட்டாதவர்களாக வறுமையில் வாடினார்கள். அதனால் தான், எண்ணெய் வருமானம் மக்களுக்கு கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்ட சாவேஸை பெரும்பான்மை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றினார். எண்ணெய் விற்பனையால் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதி, அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் பட்டது. அப்போது தான் பிரச்சினை ஆரம்பமானது.

உண்மையில், வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதியானது. அதே நேரம், அந்தக் கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணை விலை மிக அதிகமாக இருந்தது. இதனால் அரச கஜானா நிரம்பியதால், சாவேசின் மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவினத்திற்கும் இலகுவாக பணம் கிடைத்தது.

இதில் உள்ள ஆபத்துகளை உணராமல், சாவேஸ் உட்பட, வெனிசுவேலா ஆட்சியாளர்கள், அன்றைய பொருளாதார நிலைமையை குறைவாக மதிப்பிட்டமை தான் தவறு. பல தசாப்த காலமாக வெனிசுவேலா எண்ணையின் பெரும் பகுதியை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா, ஒரு காலத்தில் பொருளாதாரத் தடை கொண்டு வந்தால் என்ன நடக்கும்? திடீரென வேறு வாடிக்கையாளரை பிடிக்க முடியுமா?

அதே மாதிரி, சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்தால் என்ன நடக்கும்? அதை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரம் வீழ்ச்சி அடையாதா? இது தான் நடந்தது. இந்த உண்மைகளை மறைத்து விட்டு, எல்லாவற்றையும் சாவேஸ், மடூரோ தலையில் தூக்கிப் போடுவது ஒரு பக்கச் சார்பான அரசியல் பிரச்சாரம் அன்றி வேறென்ன?

//2010-ல் ஆரம்பித்தது வெனிசுலாவின் இருண்ட காலம். அப்போது அதிபராக இருந்த ஹியாகோ சாவேஸ் வெனிசுலா மக்களுக்காக சில முடிவுகளை எடுத்தார். அதாவது, அனைத்தையும் அரசு மயமாக்குவது.//

ஒரு சில பணக்காரர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருந்த எண்ணை வருமானத்தை கொண்டு, பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவினத்தை ஈடுகட்டும் அரசின் திட்டம் எப்படி "இருண்ட காலம்" ஆகும்? மக்களைப் பொறுத்தவரையில் அது தான் பொற்காலம். ஆனால், தமது பண வருவாய் குறைவதை பொறுக்க முடியாத பணக்காரர்களுக்கு மட்டுமே அது இருண்ட காலம்.

மேலும், "அனைத்தையும் அரசு மயமாக்கியதாக" குறிப்பிடுவது ஒரு தவறான தகவல். இன்று வரையில், வெனிசுவேலா பொருளாதாரத்தின் பெரும் பகுதி தனியார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கிறது. நாட்டிற்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும் பெற்றோலிய நிறுவனம் சாவேஸ் காலத்திலேயே அரசு மயமாக்கப் பட்டது. அதைக் கூட செய்யா விட்டால், பெட்ரோல் முதலாளிகள் எப்போதோ வெனிசுவேலா பொருளாதாரத்தை முடக்கி இருப்பார்கள். அவர்கள் தக்க தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

//உற்பத்தி நிறுவனங்களை எல்லாம் கையகப்படுத்தி ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தார். உணவு உற்பத்தியை இராணுவத்திடம் கொடுத்தார். அவர் போட்ட கணக்கு ஒன்று, நடந்தது ஒன்று. சாவேஸ் திட்டமிட்ட கொள்கைகள் எதுவுமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.//

இந்தக் கட்டுரையாளர், எது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்று அழுகிறார்? எத்தனயோ நட்டத்தில் இயங்கிய தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் பொறுப்பேற்று நடத்தினார்கள். அதற்கு அரசும் ஊக்கமளித்தது. இது ஜனநாயகம் இல்லையா?

தனியார் வீட்டுமனை நிறுவனங்கள் வாடகைக்கு விடும் வீடுகளில், குடியிருப்பாளர்கள் மாதக் கணக்காக வாடகை கட்டா விட்டாலும், அவர்களை வெளியேற்றி தெருவில் விட முடியாது. இந்தச் சட்டம் சாவேஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்டது. இது ஜனநாயகம் இல்லையா?

அது சரி, உலகில் எந்த நாட்டில் தனியார் நிறுவனங்கள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன? எந்த நிறுவனத்தில் ஒரு நிர்வாகி அல்லது மானேஜர்கள், ஊழியர்களின் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்? ஆனால், வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு கையகப் படுத்திய நிறுவனங்கள் யாவற்றிலும் ஜனநாயக ரீதியான பொது வாக்கெடுப்பு நடந்துள்ளது.

உற்பத்தி நிறுவனங்கள், உணவு உற்பத்தி எல்லாம் இன்றைக்கும் தனியாரிடம் தான் உள்ளன. அதனால் தான், தனியார் துறை முதலாளிகள் உற்பத்தியை குறைத்தும், பொருட்களைப் பதுக்கியும் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்க முடிந்தது. இது தனியார் துறையினர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய பொருளாதார நெருக்கடி.

தி ஹிந்து கட்டுரையாளர் குறிப்பிட்ட மாதிரி, சாவேஸ் அனைத்தையும் அரசு மயமாக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. அதைச் செய்யாமல் விட்டது தான் தவறு. எல்லோருக்கும், குறிப்பாக உற்பத்தியை கட்டுப்படுத்தும் சக்தி படைத்த தனியார் துறையினருக்கு சுதந்திரம் கொடுத்ததன் பலனை மக்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

அரசு நிறுவனங்கள் எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கின்றன. ஒரு சிலவற்றை இராணுவ அதிகாரிகள் நிர்வகிப்பதும் உண்மை தான். ஆனால், வெனிசுவேலாவின் மொத்த பொருளாதார உற்பத்தியுடன் ஒப்பிட்டால் அந்த அரசு நிறுவனங்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. பத்து சதவீதம் கூட இருக்காது.

//அத்துடன் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தொழில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்நியச் செலாவணி பெருமளவில் பாதிக்கப்பட்டது.//

இது ஓர் உண்மைக்குப் புறம்பான கூற்று. வெனிசுவேலா நாட்டில் இன்று வரைக்கும் அந்நிய நிறுவனங்கள் முதலிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. பிரச்சினை அதுவல்ல. பணவீக்கம் அதிகரிப்பதாலும், நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கு வர்த்தகம் செய்வதற்கு தயங்குகின்றன. இருப்பினும் தவித்த முயல் அடிப்பது போன்று, இந்த நேரத்திலும் முதலிடும் காரியவாதிகள் இருக்கிறார்கள். அண்மையில் நெதர்லாந்தில் இருந்து சென்ற இளம் வணிகர் ஒருவர், அங்கு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, மிகக் குறைந்த விலைக்கு வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ளார். ஒரு காலத்தில் நிலைமை சீரடைந்தால் அவற்றை நல்ல விலைக்கு விற்று விடுவது தான் திட்டம். (de Volkskrant, 30.01.2019)

தனியார் துறைக்கு சுதந்திரம் இருந்தாலும், வெளிநாட்டு மூலதனத்தை தாராளமாக அனுமதித்தாலும், தேசப் பாதுகாப்பு அல்லது பொது மக்களின் நன்மை கருதி சில அத்தியாவசிய துறைகளில் முதலிட அனுமதிக்கப் படுவதில்லை. உதாரணத்திற்கு, பெற்றோலிய நிறுவனம், துறைமுகம், விமானநிலையம் போன்ற துறைகளில் தனியார் முதலீடு அனுமதிக்கப் படுவதில்லை. மற்றும் படி, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலிடலாம், வணிகம் செய்யலாம். 

அதிகம் பேசுவானேன். எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு எங்கிருந்து கிடைக்கிறது? தனியார் நிறுவனங்கள் நூறு சதவீத ஆதரவு வழங்குகின்றன. ஊடகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தனியார் நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரச்சார சாதனங்கள் தான். அவை அரசுக்கெதிரான செய்திகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த போதிலும் தடைசெய்யப் படவில்லை. சுதந்திரமாக இயங்க விடப் பட்டுள்ளன.

//வெனிசுலாவின் கடன் 105 பில்லியன் டாலர். அதன் கையில் இருப்பது வெறும் 10 பில்லியன் டாலர்.// 

பல வருட காலமாக பொருளாதாரத் தடைகளை விதித்து வந்த அமெரிக்கா, எதிர்க்கட்சித் தலைவரை ஜனாதிபதியாக அங்கீகரித்ததுடன் நில்லாது, எண்ணை வாங்கியதற்காக கொடுக்க வேண்டிய பணத்தையும் தர மாட்டேன் என அடம் பிடித்தது. அத்துடன் நில்லாது அமெரிக்க வங்கிகளில் இருந்த வெனிசுவேலா நாட்டின் அந்நிய செலாவணியும் பறிமுதல் செய்யப் பட்டது. பிரித்தானியாவில், Bank of England இல் வெனிசுவேலா வைத்திருந்த பில்லியன் டாலர் பெறுமதியான தங்கத்தை திருப்பித் தர முடியாது என்று அறிவித்தது.

நீங்கள் உங்களிடமிருந்த பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைக்க, அவர் அதையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு தர முடியாது என்று அடாவடித்தனம் பண்ணுவது அநீதி இல்லையா? இந்த அடாவடித்தனங்களை கண்டிக்காமல், "வெனிசுவேலாவின் கையில் இருப்பது வெறும் பத்து பில்லியன் டாலர்" என்று நையாண்டி செய்வது நியாயமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போலுள்ளது இந்தக் கட்டுரையாளரின் வன்மம் நிறைந்த எழுத்துக்கள்.

//நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற நினைப்பவர்கள் பாஸ்போர்ட் கூட எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.//

ஐயா! அவர்கள் பொருளாதார அகதிகள். பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாட்டில் யுத்தம் நடந்தால் மட்டும் தான் அகதிகள் வெளியேற வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகவும் பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லலாம். அதிகம் பேசுவானேன். இலங்கை போன்ற யுத்தம் நடந்த நாடுகளில் இருந்து வந்தவர்களையும், "பொருளாதார அகதிகள்" என்று தான் மேற்கத்திய நாடுகளில் அழைக்கிறார்கள்.

வெனிசுவேலாவில் ஏன் பொருளாதார நெருக்கடி வந்தது? சாவேஸ் கொண்டு வந்த சோஷலிச திட்டங்கள் பெரும்பாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை அடியொற்றி கொண்டு வரப் பட்டன! அதாவது, மேற்கு ஐரோப்பாவில் தனியார் துறை இயங்குவதற்கு தாராளமாக அனுமதிக்கிறார்கள். அதே நேரம், அரசுக்கு கிடைக்கும் வரிப் பணம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப் படுகின்றது. அது வீட்டு வாடகை செலவை ஈடுகட்டுதல், உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் மானியம் என்று பல வகைப் படும். அதே திட்டங்களை தான் வெனிசுவேலாவில் சாவேஸ் அரசு நடைமுறைப் படுத்தியது. அது தான் இங்கே பிரச்சினை.

தனியார் நிறுவனங்கள் வீட்டு வாடகையை உயர்த்த விடாமல் அரசு சட்டம் போட்டு தடுத்தது. அதனால், புதிய வீடுகள் கட்டப் படுவது நின்று விட்டன. குழந்தைகளுக்கான பால்மா போன்ற பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் கொடுத்தது. அதனால், உணவு உற்பத்தியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்தன. இதற்குள் கடத்தல்காரர்களும் புகுந்து தமது கைவரிசையை காட்டினார்கள். வெனிசுவேலாவில் அரசு மானிய உதவியால் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பால்மா, அயல் நாடான கொலம்பியாவில் அதிக விலைக்கு விற்கப் பட்டது. இது ஓர் உதாரணம் மட்டுமே.

அதன் விளைவு தான் லட்சக்கணக்கானோரின் வெளியேற்றம். தனியார் துறையினரின் திட்டமிட்ட புறக்கணிப்பால், நாட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையில் அமெரிக்க பொருளாதாரத் தடை காரணமாக, பிரதானமான ஏற்றுமதிப் பொருளான பெற்றோல் விற்பனையும் வீழ்ச்சி கண்டது. ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையை உண்டாக்க இவ்வளவும் போதாதா?

ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் முழுவதும் ஒரு மனதாக அரசை ஆதரித்தார்கள். இன்று அவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இருப்பினும், மடூரோ அரசு அம்மக்களின் ஆதரவை இழந்து விட்டது என்று கூற முடியாது. இன்றைக்கும் புலம்பெயர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் அரச எதிர்ப்பாளர்களாக உள்ளனர். இது ஒரு வகையில் புலம்பெயர்ந்தோரின் உளவியல். அது ஒரு வகை சுயநல அரசியல். அவர்கள் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

//குற்றங்கள் அதிகரிக்கின்றன. திருடர்களும், தீவிரவாதிகளும் அதிகரித்துவருகின்றனர்.//

ஐயா, பெரியவரே! லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிகளவு குற்றங்கள் நடப்பது ஒன்றும் புதினம் அல்ல. வெனிசுவேலாவில் சாவேஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதிகளவு குற்றங்கள் நடப்பதால் தலைநகர் கராகஸ் ஒரு பாதுகாப்பற்ற தலைநகரம் என்ற கெட்ட பெயரைப் பெற்றிருந்தது. அயல்நாடான கொலம்பியாவில் குற்றங்கள், திருடர்கள், தீவிரவாதிகள் மட்டுமல்லாது உலகளவில் போதைவஸ்து கடத்தும் மாபியா கும்பல்களாலும் பாதிக்கப் பட்டுள்ளது. அதெல்லாம் உங்கள் கண்களுக்கு தென்படுவதில்லையா?

//அதிபர் சாவேஸ் மறைந்த பிறகு, நிகோலஸ் மதுரோ அதிபரானார். அவர் மீது மக்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். கிட்டதட்ட வெனிசுலாவை மீட்பது என்பது, மணலைக் கயிறாகத் திரிக்கும் சவால்தான். ஆனால், தீவிர இடதுசாரி எனத் தன்னை முன்னிறுத்தும் மதுரோ ஆறு ஆண்டுகளாகியும் வெனிசுலாவை மீட்க எந்த முயற்சியையும் செய்யவில்லை.//

மடூரோ அதிபரான காலத்தில் தான், சர்வதேச சந்தையில் எண்ணை விலை பாதியாக குறைந்திருந்தது. அத்துடன், பெருமளவு எண்ணெயை வாங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா பல்வேறு வகையான பொருளாதாரத் தடைகளை கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வெளியேறின. தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர்.

முன்பு சாவேஸ், பின்னர் மடூரோ ஆகியோர் தம்மை "தீவிர இடதுசாரிகள்" என்று அறிவித்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திருந்தனர். அந்நிய மூலதனத்தையும் தடுக்கவில்லை. இது ஒரு காலத்தில் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. "எந்த முயற்சியும் செய்யவில்லை." ஆம், பொருளாதாரத்தில் தனியார் துறையினரின் ஆதிக்கத்தை குறைத்து, நிறுவனங்களை அரசுமயமாக்கவில்லை. இது தவறு தான்.

//எதிர்கட்சிகள் இவரது ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றன. மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.// 

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி காலத்தில் நடந்த தேர்தலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனால் ஜனாதிபதி மடூரோ கொண்டு வந்த பல திட்டங்களை நிறைவேற்ற விடாமல் முடக்கி உள்ளனர். மேலும், அண்மையில் தான், கடந்த இரண்டு வருடங்களுக்குள் பொதுத் தேர்தல் நடந்தது. மடூரோ கூட கடும் போட்டிக்கு பின்னர் தான் ஜனாதிபதியாக தெரிவானார். அப்படி இருக்கையில் குறுகிய காலத்திற்குள் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தக் கோருவது ஜனநாயக விரோதம் அல்லவா?

"மக்கள் புரட்சியில் ஈடுபடுகின்றனர்" என்று, இந்தக் கட்டுரையாளர் எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றார்? எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு சேரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்தா? இந்தியாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அல்லது தமிழகத்தில் திமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சேரும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கையை வைத்து, "இந்திய மக்கள் புரட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்." என்று கூற முடியுமா?

//அதிபர் மதுரோ இதற்கெல்லாம் அமெரிக்காதான் காரணம் என்கிறார். வெனிசுலாவின் உள்விவகாரங்களில் தலையிட்டால் வெள்ளை மாளிகையிலிருந்து ரத்தக்கறையோடுதான் வெளியே வருவார் என்கிறார்.//

ஐயனே! அமெரிக்கா வெனிசுவேலா மீது படையெடுக்கக் காத்திருப்பது தான் இன்றைய பிரச்சினை. உள்விவகாரங்களில் தலையிடுவது காலங்காலமாக நடக்கிறது. ஆனால், ஒரு நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டுவதை சாதாரணமான விடயமாக கடந்து போக முடியாது. அமெரிக்க இராணுவம் படையெடுத்து வந்தால், வெனிசுவேலா இராணுவம் புளியம்பழம் பறித்துக் கொண்டிருக்க வேண்டுமா? தகுந்த பதிலடி கொடுக்க வேண்டாமா?

//ரஷ்யாவும், சீனாவும் வெனிசுலாவுக்கு ஆதரவாக இருப்பதுபோல் பாவ்லா காட்டுகின்றன. ஆனால், உண்மையில் வெனிசுலாவுக்கு உதவ எந்த நாடோ அமைப்போ தயாராக இல்லை.//

அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்குப் பின்னர் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் எண்ணெய் விற்பதற்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. ஆமாம், இந்தியாவும் தான்! அமெரிக்க பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்தியா வெனிசுவேலா எண்ணையை வாங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு எண்ணை விநியோகம் செய்யும் நாடுகளில் வெனிசுவேலா மூன்றாம் இடத்தில் உள்ளது.

ரஷ்யாவுடனான உறவு வித்தியாசமானது. ரஷ்யாவின் பன்னாட்டு எண்ணை நிறுவனமான Rosneft, வெனிசுவேலாவின் பல்வேறு அந்நிய கடன்களை அடைப்பதற்கு பணம் கொடுத்துள்ளது. அதற்குப் பதிலாக அரச எண்ணை நிறுவனமான PDVSA, ரஷ்யாவுக்கு, அதாவது Rosneft கம்பனிக்கு எண்ணெய் விற்க வேண்டும். இதுவும் நவகாலனித்துவம் தான். ஆனால், இன்றைய நிலையில், வெனிசுவேலாவுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை.

//வெனிசுலாவின் இன்றைய நிலை என்பது எந்த நாட்டுக்கும் ஏற்படக்கூடியதுதான். இன்றைய பணமய பொருளாதாரத்தில் போட்டி நாடுகள் எந்த சூழ்ச்சியையும் செய்யலாம்.//

கட்டுரையாளரே! நீங்கள் குறிப்பிடும் "பணமய பொருளாதாரம்" என்பதன் உண்மையான பெயர் நவ- லிபரலிச பொருளாதாரம். "போட்டி நாடுகள்" என்பதன் அர்த்தம் (மேற்கத்திய) ஏகாதிபத்திய நாடுகள். இந்த உண்மையை மூடி மறைப்பதற்கு எப்படி எல்லாம் மாய்மாலம் செய்கிறீர்கள்?

//இந்தியாவில் தற்போது நுகர்வு என்பது அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. நாலைந்து செல்போன் வைத்திருக்கிறோம். வீடு முழுக்க ஆடைகளால் நிறைந்திருக்கின்றன. நிறுத்த இடமில்லை என்றாலும் நாலைந்து கார்களை வாங்குகிறோம். இதனால் வேகமான பொருளாதாரமாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறோம்.//

இதை நுகர்பொருள் கலாச்சாரம் என்று சொல்வார்கள். இன்றைய நவ- லிபரலிச முதலாளித்துவ அமைப்பு அதன் மேல் தான் கட்டப் பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமே உரிய விடயம் அல்ல. உலகம் முழுவதும், ஏன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கூட ஏற்கனவே பல தசாப்த காலமாக நடைமுறையில் உள்ளது. இதை இன்னொரு விதமாக கிரெடிட் கார்ட் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம். மக்கள் நுகர்வோர்களாக மட்டுமல்லாது, நிரந்தரக் கடன்காரர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இந்தக் கடன்களில் தான் பொருளாதாரம் வளர்கிறது.

//இந்தியா - வெனிசுலா: இந்தியா, தனியார் மய கொள்கையை தீவிரமாக்கி வருகிறது. இது நிறுவனங்களுக்கிடையே போட்டியை அதிகப்படுத்தும். இதனால் நாட்டின் வளங்கள் மீதும், மக்களின் மீதும் பெரும் சுரண்டலை நிகழ்த்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் எப்போது எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு கடையை காலி செய்வார்கள் என்று தெரியாது. அப்போது இந்தியாவின் கஜானா காலியாவதும் உறுதி.//

தனியார்மயத்தை தீவிரப் படுத்தும் பொழுதே இந்தியாவின் கஜானா காலியாகி விடும். ஏனெனில், அரசு நிர்வாகம், பாதுகாப்புத் துறை தவிர்ந்த அனைத்தையும் தனியார்மயமாக்குவது தான் நியோ லிபரலிச சித்தாந்தம். அதைத்தான் இந்தியாவுக்கு கடன் கொடுக்கும் நாடுகள், IMF, உலகவங்கி என்பன வலியுறுத்துகின்றன. அத்துடன் வரிகளையும் குறைக்குமாறு வற்புறுத்துகின்றன. 

உதாரணத்திற்கு, இந்தியாவில் முதலிடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டப்படி மிகக்குறைந்த வரி கட்டுகின்றன. (அதைக் கூட ஒழுங்காக கட்டுவதில்லை.) இந்திய அரசு அந்த வரித் தொகையை கூட்டுவதற்கு தயங்குகிறது. அப்படி செய்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வராமல் வேறு நாடுகளை தேடி ஓடி விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். அப்படியானால் எப்படி இந்திய கஜானா நிரம்பும்?

மேற்கு ஐரோப்பாவில் கார்ப்பரேட் வரித் தொகை மிக அதிகம். அதனால் தான் அந்த நாடுகளில் கஜானா நிரம்புகிறது. அரசு அந்தப் பணத்தை எடுத்து மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டு வருகின்றது. வெனிசுவேலாவும் அதைத் தான் பின்பற்ற விரும்பியது. மேற்கு ஐரோப்பிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், நடந்தது என்ன? 

அமெரிக்கப் பொருளாதார தடை. தனியார் துறையினரின் பதுக்கல்கள், உற்பத்திக் குறைப்புகள். அதனால் எழுந்த அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு. அதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், லட்சக்கணக்கான அகதிகளின் வெளியேற்றம்....

இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் ஆட்சியாளர்கள், வெனிசுவேலாவின் உதாரணத்தை பின்பற்றி தம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு கனவு கூடக் காணக் கூடாது. மீறினால் வெனிசுவேலா நிலைமை தான் உங்களுக்கும் உண்டாகும். இது அந் நாடுகளுக்கு விடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை.

Thursday, February 14, 2019

புனித வாலன்டைன் நினைவு தினம் காதலர் தினமான கதை

காத‌ல‌ர் தின‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தை. எல்லாவ‌ற்றுக்கும் ஒரு அர‌சிய‌ல் இருக்கிற‌து. காத‌ல‌ர் தின‌மும் அத‌ற்கு விதிவில‌க்கல்ல‌. வ‌ல‌ன்டைன் தின‌ம் கிறிஸ்த‌வ‌த்திற்கு முந்திய‌ ரோம‌ர்க‌ளின் ப‌ண்டிகையாக‌ இருந்திருக்க‌லாம். அது காத‌லுக்கு எதிரான‌ கிறிஸ்த‌வ‌ ச‌பையால் வால‌ன்டைன் தின‌மாக‌ மாற்ற‌ப் ப‌ட்டிருக்க‌லாம்.

வாலன்டைன் என்ற துறவி சிரச்சேதம் செய்யப் பட்ட நினைவு தினத்தை (பெப். 14), "காதலர் தினம்" என்று தமிழில் மொழிபெயர்த்தவர் யார் என்று தெரியவில்லை. அது காதலர்கள் மட்டுமே கொண்டாடப் பட வேண்டிய தினம் என்ற தப்பெண்ணத்தை உண்டாக்கி விடுகிறது. பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள், எமது அன்புக்குரிய அனைவருக்கும் வாலன்டைன் தினத்தன்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

பெப்ரவரி 14, வாலன்டைன் தினம் என்று பெயரிடப் பட்டதற்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒரு காரணம். கிறிஸ்தவத்திற்கு முந்திய ரோமாபுரியில், மன்மத விழா என்ற பெயரில், காதல் காமக் களியாட்டங்களுக்கான ஒரு தினம் இருந்தது. கிறிஸ்தவர்கள் அந்த "காட்டுமிராண்டி கால காதலர் தினத்தை" மறக்க வைப்பதற்காக, கத்தோலிக்க துறவி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் தினமாக அறிவிக்கப் பட்டது.

பண்டைய ரோமாபுரியில் ஒவ்வொரு வ‌ருட‌மும் பெப்ர‌வ‌ரி 15, ரோம‌ர்க‌ள் ம‌ன்ம‌த‌ன் ப‌ண்டிகை கொண்டாடுவார்க‌ள். அன்று திரும‌ண‌மாகாத‌ பெண்க‌ளின் பெய‌ர்க‌ளை ஓலையில் எழுதி ஒரு குட‌த்திற்குள் போடுவார்க‌ள். திரும‌ண‌மாகாத‌ ஆண்க‌ள் அவ‌ற்றை எடுக்க‌ வேண்டும். அன்று முத‌ல் அந்த‌ ஆணும், பெண்ணும் க‌ண‌வ‌ன், ம‌னைவியாக‌ வாழ்வார்க‌ள்.

கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம், ப‌ண்டைய‌ ரோம‌ர்க‌ளின் ம‌த‌ ச‌ம்பிராதாய‌ங்க‌ளை ஒழித்துக் க‌ட்டிய‌து. அவ‌ற்றிற்கு கிறிஸ்த‌வ‌ப் பெய‌ர்க‌ள் சூட்டி, கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் சார்ந்த‌ ப‌ண்டிகைக‌ள் ஆக்கினார்க‌ள். ரோம‌ ச‌க்க‌ர‌வ‌ர்த்தி ஆட்சிக்கால‌த்தில், பெப்ர‌வ‌ரி 14 அன்று வ‌ல‌ன்டைன் என்ற‌ சிர‌ச் சேத‌ம் செய்து கொல்ல‌ப் ப‌ட்டிருந்தார்.

ஆக‌வே, கிறிஸ்த‌வ‌த்திற்காக‌ உயிர்நீத்த‌ ஒரு தியாகியின் இற‌ப்பை, வ‌ல‌ன்டைன் நாளாக‌ நினைவுகூருமாறு கிறிஸ்த‌வ‌ திருச்ச‌பை அறிவித்த‌து. இத‌னால் ரோம‌ர்களின் புராத‌ன‌ ம‌த‌ப் ப‌ண்டிகை கொண்டாடுவ‌து த‌டுக்க‌ப் ப‌ட்ட‌து. நில‌ப்பிர‌புத்துவ‌ ச‌முதாய‌த்தில் சுத‌ந்திர‌மான‌ காத‌ல் ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட‌வில்லை. கிறிஸ்த‌வ‌ ச‌பையும் காத‌லுக்கு எதிராக‌ இருந்த‌து.

இருப்பினும், எவ்வாறோ ப‌ல‌ நூறாண்டுக‌ளுக்குப் பிற‌கு, இங்கிலாந்தில் பெப்ர‌வ‌ரி 14 காத‌ல‌ர் தின‌மாக‌ கொண்டாட‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து மிக‌வும் க‌ட்டுப்பாடான‌ நில‌ப்பிர‌புத்துவ‌ க‌லாச்சார‌த்தில், அன்றைக்கு ஒரு நாள் ம‌ட்டுமே, ஓர் ஆணும், பெண்ணும் சுத‌ந்திர‌மாக‌ த‌ன‌து காத‌லை தெரிவிப்ப‌த‌ற்கு அனும‌திக்க‌ப் ப‌ட்டார்க‌ள். இருபதாம் நூற்றாண்டில், கிறிஸ்தவ சபைகளின் கட்டுப்பாடுகள் தளர்ந்த பின்னர், அது மீண்டும் காதலர் தினமாக மாறி விட்டது.

பிற்கால‌த்தில் அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய‌ர்க‌ள் அங்கேயும் த‌ம‌து க‌லாச்சார‌த்தை பின்ப‌ற்றினார்க‌ள். அதே கால‌க‌ட்ட‌த்தில் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ முத‌லாளித்துவ‌ம், இந்த‌ப் ப‌ண்டிகையை வ‌ணிக‌ம‌ய‌மாக்கினால் நிறைய‌ப் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்க‌லாம் என்று க‌ண்டுகொண்ட‌து. இருப‌தாம் நூற்றாண்டில் வ‌ணிக‌ ம‌ய‌மாக்க‌ப் ப‌ட்ட‌ காத‌ல‌ர் தின‌ம், அமெரிக்க‌ ஆதிக்க‌ க‌லாச்சார‌த்தின் ஒரு ப‌குதியாக,‌‌ மேற்கு ஐரோப்பாவில் ப‌ர‌விய‌து.

சோஷ‌லிச‌ நாடுக‌ளாக‌ இருந்த‌ ர‌ஷ்யாவிலும், கிழ‌க்கு ஐரோப்பாவிலும் அது ப‌ர‌வ‌வில்லை. அந்த‌ நாடுக‌ளின் பிர‌ஜைக‌ளுக்கு தொண்ணூறுக‌ளுக்குப் பிற‌கு தான் காத‌ல‌ர் தின‌ம் என்ற‌ ஒன்றிருப்ப‌து தெரியும்.

எல்லா வகையான பண்டிகைகளிலும் பணம் பார்க்கும் வணிகத்துறை, அதனை "மதச் சார்பற்ற காதலர் தினமாக" மக்கள் மத்தியில் பிரபலப் படுத்தியது. ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த வாலன்டைன் தினம், உலகமயமாக்கல் காரணமாக பிற நாடுகளிலும் பரவி விட்டது.

Wednesday, February 06, 2019

அன்பான கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு....


எச்சரிக்கை!
கம்யூனிச வைரஸ் கிருமிகள் பரவி வருவதால், கம்யூனிச தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்.
கம்யூனிச வைரஸ் பின்வரும் நோய்களை உண்டாக்க வல்லது என்று கண்டறியப் பட்டுள்ளது: 
- அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி
- அனைத்து மட்டத்திலும் இலவசமான பொதுக் கல்வி 
- இனவாதம், ஆணாதிக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுதல்
- அனைவரும் சமத்துவமாக நடத்தப் படும் ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம்

மேற்குறிப்பிட்ட தொற்று நோய்களை தடுக்க விரும்புவோர், அருகில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு மருத்துவ நிலையத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். 
(கம்யூனிச எதிர்ப்பு மருத்துவர்கள், முதலில் இலவச ஆலோசனை வழங்கி விட்டு, பின்னர் உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுரண்டி எடுத்து விடுவார்கள்.) 


சில நண்பர்கள், மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களில் வெளியாகும், கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை வாசிக்குமாறு, எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது வெகுளித்தனத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பாவம், உலகம் அறியாப் பாலகர்கள்!

எதற்காக ஒரு முதலாளித்துவ ஊடகம், தனது ஜென்ம விரோதியாக கருதும் ஒன்றைப் பற்றி (கம்யூனிசம்) சாதகமான தகவல்களை வெளியிட வேண்டும்? உலகில் யாராவது தனது எதிரியை புகழ்ந்து பேசுவதைக் கண்டிருக்கிறீர்களா? உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசுக்கு சார்பான ஊடகம், புலிகளை புகழ்ந்து எழுதுமா? அப்படி எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றால், இதுவும் முட்டாள்தனம் தான்.

பனிப்போர் காலத்தில், சிறந்த கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை எழுதிக் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் வழங்கப் பட்டது. இது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். அது மட்டுமல்ல, சோவியத் யூனியன், மற்றும் பல கம்யூனிச நாடுகளில் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியேறி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோரியோர் பலருண்டு. அவர்களும் தமது கற்பனைக்கு எட்டிய புளுகுக் கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாங்கள் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது பனிப்போர் காலகட்டம். ஒரு கம்யூனிச நாட்டிலிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரும் ஒருவரை எடுத்த உடனே நம்ப முடியாது. கே.ஜி.பி. கூட அகதி என்ற போர்வையில் உளவாளிகளை அனுப்பலாம். உண்மையில் அப்படியும் நடந்துள்ளது.

அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரி விட்டு, சோவியத் யூனியனுக்காக உளவு பார்த்த பலர் பிடிபட்டிருக்கிறார்கள். இதனால் சி.ஐ.ஏ. யாரையும் நம்பாமல் கடுமையாக விசாரணை செய்தது. சிலர் சித்திரவதை தாங்காமல் இறந்துள்ளனர்.

அவர் சிலநேரம் நேர்மையான அகதியாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், சி.ஐ.ஏ. நம்பத் தயாராக இருக்கவில்லை. மேற்குலகிற்கு தப்பியோடிய சிலருக்கு இந்த விடயம் தெரிந்திருக்கலாம். அதற்காக தன்னை தயார்படுத்த வேண்டி இருந்தது.

அதைவிட, தனிப்பட்ட பொருளாதார நலன்களுக்காக தஞ்சம் கோரிய பொருளாதார அகதிகளும் இருந்தனர். ஒரு கம்யூனிச நாட்டில் இருந்து ஓடி வந்த அகதி என்றால் தனி மரியாதை கிடைக்கும். அவருக்கு வேண்டிய சலுகைகளை செய்து கொடுத்தனர். சிலநேரம், உள்நாட்டவரே பொறாமைப்படும் அளவிற்கு, நேற்று வந்த அகதிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

சரி, மேற்குலகில் அகதித் தஞ்சம் கோருவதற்கு என்ன செய்ய வேண்டும்? அது பெரிய கஷ்டமான விடயம் இல்லை. கம்யூனிச நாடுகளில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று கதை புனைந்து சொல்லத் தெரிந்திருந்தால் போதும். யாருக்கு கற்பனை வளம் அதிகமோ, அவருக்கு தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் பல திடுக்கிடும் திகில் கதைகளை சொன்ன கதாசிரியர்கள் இருந்தனர்.

இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே தெரிந்த விடயம். பெர்லின் மதில் விழுந்து, சோஷலிச நாடுகள் காணாமல்போன பின்னர், இந்தக் கதாசிரியர்களின் புளுகுக் கதைகள் பற்றிய உண்மையும் தெரிய வந்தது. தாம் எந்தளவு தூரம் முட்டாளாக்கப் பட்டிருக்கிறோம் என்று, மேற்கத்திய அரசுகள் வெட்கித்து நின்றிருக்கும். இருப்பினும் இன்றும் சில மேதாவிகள், அந்தக் கதைகளை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள். என்ன செய்வது? அவர்களது அப்பாவித்தனத்தை எண்ணி பரிதாபப் படத் தான் முடியும்.

கம்யூனிச எதிர்ப்பு காமெடிகள்: கம்யூனிச எதிர்ப்பாளர்கள் எப்போதும் "தானே ஜோக் சொல்லி தானே சிரிக்கும் வெகுளிகள்" போன்றவர்கள். அவர்களது பிரபலமான காமெடிகளில் ஒன்று:"முன்னாள் சோஷலிச நாடுகளில் வாழ்ந்த மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு அஞ்சி நடந்தார்கள். அதனால், சர்வாதிகாரம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் கூட தடை செய்யப் பட்டன..." இது முழுக்க முழுக்க மேற்குலகத்தினர் மட்டும் நம்பிய கற்பனைக் கதை.

அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்: 
1. கம்யூனிச ஆட்சியாளர்கள் யாருமே தம்மை சர்வாதிகாரிகளாக எண்ணிக் கொள்ளவில்லை. அவர்கள் எல்லோரும் தம்மை ஜனநாயகவாதிகள் என்று தான் கருதிக் கொண்டனர்.

2. சரியோ, பிழையோ, அந்நாடுகளின் பிரஜைகளும் தாம் ஒரு சிறந்த ஜனநாயக அரசமைப்பின் கீழ் வாழ்வதாக எண்ணிக் கொண்டனர். பள்ளிக்கூடங்களிலும் அவ்வாறு தான் கற்பிக்கப் பட்டது.

3. எத்தகைய அரசியல் அமைப்பு சிறந்தது என்பதை தெரிவு செய்வதற்கு அந்த நாட்டிற்கு உரிமை உண்டு. மேற்கத்திய அமைப்பு மட்டுமே சரியென்று கூற அது ஒன்றும் புனிதமானது அல்ல.

ஆகையினால், மேற்கத்திய நாடுகள் தயாரித்து அனுப்பிய "சர்வாதிகார எதிர்ப்பு இலக்கியங்கள், திரைப்படங்கள்" எதையும் கம்யூனிச ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. பொய்களை மட்டுமே கூறும் (விரும்பினால் அதை "விவாதத்திற்குரியது" என்று சொல்லுங்கள்) அவதூறு பரப்புரைகளை தவிர, ஏனையவற்றை தடை செய்யவில்லை.

உதாரணத்திற்கு Blakes 7 என்ற சயின்ஸ் பிக்சன் தொலைக்காட்சித் தொடர் எழுபதுகளில் பிரபலமாக இருந்தது. பிரித்தானியாவில் தயாரிக்கப் பட்ட அந்தத் தொடர், உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு முன்னாள் சோஷலிச நாடுகளில் காண்பிக்கப் பட்டன.

பிளேக்ஸ் செவன் தொடரின் கதை இது தான். பூமியும், வேறு கிரகங்களும், Terran Federation எனும் சர்வாதிகார (Totalitarian) அரசினால் ஆளப் படுகின்றன. அங்கு அரசுக்கு எதிரான அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சிறை உடைத்து, Liberator என்ற விண்கலத்தில் தப்பிச் செல்கின்றனர். அதை விரட்டிச் செல்லும் அரச படையினருடன் நடக்கும் போர் தான் கதைச் சுருக்கம்.

மேற்கத்திய பார்வையாளர்களை பொறுத்தவரையில், "Totalitarian, Liberator..." போன்ற சொற்களைக் கேள்விப் பட்டாலே "கம்யூனிச சர்வாதிகாரம்" நினைவுக்கு வரும் வகையில் மூளைச்சலவை செய்யப் பட்டுள்ளனர். ஆகவே இதை ஒரு "கம்யூனிச எதிர்ப்பு படம்" என்றும் கருதிக் கொள்ள வாய்ப்புண்டு.

அந்தோ பரிதாபம்! மேற்குலகில் நீங்கள் ஆவலுடன் கண்டு களித்த "கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்க்கும்" தொலைக்காட்சித் தொடர், கம்யூனிச நாடுகளில் அரசு அனுமதியுடன் ஒளிபரப்பானது. அதைப் பார்த்த மக்களில் ஒருவர் கூட இது தமது அரசை கிண்டல் அடிக்கிறது என்று நினைக்கவில்லை. அல்லது தொலைக்காட்சித் தொடரின் தூண்டுதலால் கிளர்ந்தெழவில்லை.

பிற்காலத்தில், சோஷலிச அரசுகள் வீழ்வதற்கான காரணம் வேறு. மேற்கைரோப்பாவில் இருந்து ஒலி/ஒளிபரப்ப பட்ட வானொலி, தொலைக்காட்சிகளில், "மேற்கில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக" பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதை உண்மை என்று நம்பினார்கள். அங்கு சென்றால் பணத்தில் மிதக்கலாம் எனக் கனவு கண்டார்கள்.

மேற்கைரோப்பாவில் அகதி தஞ்சம் கோரியவர்களுக்கு உடனே வீடும், வேலையும் கிடைக்கிறது. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகி விட்டார்கள். சொந்தமாக வீடு, கார் வாங்கி வசதியாக வாழ்கிறார்கள். இப்படியான கதைகளை அவிழ்த்து விட்டால் யாருக்கு தான் ஆசை வராது?

இது ஒரு வகையில் இன்றைய இலங்கை, இந்திய மக்களின் மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. மேற்குலகில் தான் சொர்க்கம் இருப்பதாக எத்தனை பேர் நம்புகிறார்கள்? எப் பாடு பட்டாவது ஒரு மேற்கத்திய நாட்டிற்கு சென்று விட்டால் பணக்காரர் ஆகலாம் என கனவு காண்பவர் எத்தனை பேர்?

கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், மத்தியதர வர்க்க இளைஞர்களிடம், அவர்களது மேட்டுக்குடி சிந்தனையை சுட்டிக் காட்டினால், பின்வருமாறு பதில் கூறுவார்கள்: "என்னைப் பற்றி தெரியுமா? நானும் ஏழைக் குடும்பத்தில் தான் பிறந்தேன்" என்று சொல்வார்கள்.

ஏழைக் குடும்பமோ, பணக்கார குடும்பமோ, பிறப்பினால் ஒருவரும் வர்க்க உணர்வு பெறுவதில்லை. ஏழையாக பிறந்தவர் முதலாளித்துவத்தை ஆதரிக்கலாம். அதே நேரம், மேட்டுக்குடியில் பிறந்தவர் கம்யூனிசத்தை ஆதரிக்கலாம். அதற்கு உண்மையில் நடந்த குட்டிக் கதையை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

ஒரு தடவை, சோவியத் யூனியன் அதிபர் குருஷேவும், சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சூ என் லாயும் சந்தித்துப் பேசினார்கள். அந்த நேரத்தில், குருஷேவ் சோவியத் யூனியனில் முதலாளித்துவ சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தினார். அதற்கு மாறாக, மாவோவின் சீனா, கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில், கடுமையான வர்க்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.

அப்படியான ஒரு நேரத்தில், குருஷேவ் தன்னை நியாயப் படுத்த வேண்டிய தேவையேற்பட்டது. "நான் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். நீங்களோ வசதியான மேட்டுக்குடியில் பிறந்தவர்." என்று குருஷேவ் சூ என் லாயிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த சூ என் லாய்: "அது உண்மை தான். ஆனால், எமக்கிடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது பாருங்கள். இருவருமே எமது சொந்த வர்க்கத்திற்கு துரோகம் செய்துள்ளோம்!"

Monday, February 04, 2019

பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக இலங்கையில் நடந்த சிப்பாய்க் கலகம்

பிரிட்டிஷ் கால‌னிய‌ ஆட்சிக் கால‌த்தில், இல‌ங்கைய‌ர்க‌ள் விடுத‌லை கோரிப் போராட‌வில்லை என்ற‌தொரு மாயை ப‌ர‌ப்ப‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ப் போர் கால‌த்தில், குறிப்பிட்ட‌ள‌வு கால‌னிய‌ எதிர்ப்புப் போராட்ட‌ம் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. ஆனால், கால‌னிய‌ ப‌டையில் இருந்த‌ இராணுவ‌ வீர‌ர்க‌ளின் க‌ல‌க‌ம் ஒன்று இட‌ம்பெற்ற‌து. அந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இன்று வ‌ரையும் இருட்ட‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்டு வருகின்ற‌து.

கால‌னிய‌ கால‌ இல‌ங்கையில் சிங்க‌ள‌-த‌மிழ் பூர்ஷுவா வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ "த‌லைவ‌ர்க‌ள்" பிரிட்டிஷ் எஜ‌மானுக்கு விசுவாச‌மான‌ அடிமைக‌ளாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். அப்போதே ட்ராஸ்கிச‌ பாதையில் சென்ற‌ LSSP என்ற‌ சோஷ‌லிச‌க் க‌ட்சி, ம‌ற்றும் க‌ம்யூனிஸ்டுக‌ள், இடதுசாரிக‌ள் ம‌ட்டுமே இல‌ங்கைக்கு சுத‌ந்திர‌ம் வேண்டுமென்ற‌ கோரிக்கையை முன்வைத்த‌னர்.

சிறில‌ங்கா இராணுவ‌த்தின் முன்னோடியான‌ Ceylon Defence Force (CDF) என்ற‌ ப‌டையில் பிரிட்டிஷ் அதிகாரிக‌ளின் கீழ் இல‌ங்கை வீர‌ர்க‌ளும் சேர்த்துக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதில் ப‌ல‌ சோஷ‌லிஸ்டுக‌ள்‌ இருந்த‌ன‌ர். பெரும்பாலும் LSSP ஆத‌ர‌வாள‌ர்க‌ள். உல‌க‌ப்போரை ப‌ய‌ன்ப‌டுத்தி விடுத‌லைப் போரை ந‌ட‌த்துவ‌த‌ற்கு த‌க்க‌ த‌ருண‌ம் பார்த்துக் காத்திருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போரில், ம‌லேசியாவை ஜ‌ப்பானிய‌ரிட‌ம் இழ‌ந்த‌ பிரிட்டிஷார், என்ன‌ விலை கொடுத்தேனும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இல‌ங்கைத் தீவை பாதுகாக்க‌ முடிவெடுத்த‌ன‌ர். பிர‌தான‌மாக‌ ர‌ப்ப‌ர் உற்ப‌த்தியால் கிடைத்த‌ வ‌ருமான‌த்தை இழ‌க்க‌ விரும்ப‌வில்லை. அத‌னால் சுமார் 75 CDF வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளில் இற‌க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

இன்று அவுஸ்திரேலியாவுக்கு சொந்த‌மான‌ கொகோஸ் தீவுக‌ள், இந்து ச‌முத்திர‌த்தில், ம‌லேசியாவுக்கும் இல‌ங்கைக்கும் ந‌டுவில் அமைந்துள்ள‌ன‌. தீவுவாசிக‌ள் ம‌லே மொழி பேசும் இஸ்லாமிய‌ர் ஆவ‌ர். ஏற்க‌ன‌வே ம‌லேசியா, சிங்க‌ப்பூரை கைப்ப‌ற்றிய‌ ஜ‌ப்பானிய‌ ப‌டைக‌ள், கொகோஸ் தீவுக‌ளையும் பிடித்திருந்தால், இல‌குவாக‌ இல‌ங்கை மீது ப‌டையெடுத்திருப்பார்க‌ள். அதைத் த‌டுப்ப‌தே பிரிட்டிஷாரின் திட்ட‌ம்.

எதிர்பாராத‌ வித‌மாக‌, கொகோஸ் தீவுக‌ளில் நிலைகொண்டிருந்த‌ இல‌ங்கை இராணுவ‌ வீர‌ர்க‌ள் க‌ல‌க‌ம் செய்து தீவின் க‌ட்டுப்பாட்டை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌ன‌ர். 8 மே 1942, அன்று இர‌வு க‌ல‌க‌ம் செய்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள், தொலைத் தொட‌ர்பு நிலைய‌த்தை கைப்ப‌ற்றி, பிரிட்டிஷ் அதிகாரிக‌ளை கைது செய்ய‌ முய‌ன்ற‌ன‌ர். ஆனால், இறுதி நேர‌த்தில் ஆயுத‌ங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ம‌றுத்த‌ன‌. அத‌னால் க‌ல‌க‌ம் முறிய‌டிக்க‌ப் ப‌ட்ட‌து.

க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு, இல‌ங்கைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்டு, கொழும்பு வெலிக்க‌டை சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். க‌ல‌க‌த்தில் ஈடுப‌ட்ட‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள், கொகோஸ் தீவுக‌ளை கைப்ப‌ற்றி, பின்ன‌ர் அதை ஜ‌ப்பானிய‌ ப‌டையின‌ரிட‌ம் ஒப்ப‌டைக்க‌ திட்ட‌ம் திட்ட‌ம் தீட்டிய‌தாக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌து. சில‌நேர‌ம் அப்ப‌டி ஒரு நோக்க‌ம் இருந்தாலும் அத‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை.

க‌ல‌க‌த்திற்கு த‌லைமை தாங்கிய‌ பெர்னான்டோ என்ப‌வ‌ரும், வேறு இர‌ண்டு பேரும் தூக்கிலிட‌ப் ப‌ட்ட‌ன‌ர். பெர்னான்டோ விசார‌ணையின் போது த‌ன் மீது சும‌த்த‌ப்ப‌ட்ட‌ தேச‌த்துரோக‌ குற்ற‌ச்சாட்டை ம‌றுத்து தான் ஒரு நாட்டுப்ப‌ற்றாள‌ன் என்று வாதாடினார். அவ‌ர் தூக்கில் தொங்குவ‌த‌ற்கு முன்ன‌ர் க‌டைசியாக‌ சொன்ன‌ வாச‌க‌ம்: "வெள்ளைய‌ருக்கு விசுவாசமாக‌ இருப்ப‌தென்ப‌து போலித்த‌ன‌மான‌து"

இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இல‌ங்கையின் ச‌ரித்திர‌ பாட‌நூல்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட‌வில்லை என்ப‌து ஆச்ச‌ரிய‌த்திற்குரிய‌து. சிறில‌ங்கா அர‌சோ, ஊடக‌ங்க‌ளோ நினைவுகூர்வ‌தில்லை. (விதிவில‌க்காக‌, LSSP க‌ட்சியின‌ர் இன்றைக்கும் நினைவுகூர‌ ம‌ற‌ப்ப‌திலை.) அத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌?

இராணுவ‌க் க‌ல‌க‌த்தின் பின்ன‌ர் விழிப்ப‌டைந்த‌ பிரிட்டிஷார், இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு அதிக‌ ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கி கால‌னிய‌ விசுவாசிக‌ளாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். குறிப்பாக‌, இந்திய‌ர்க‌ளை விட‌ இல‌ங்கைய‌ர்க‌ள் கால‌னிய‌ ஆட்சியாள‌ர்க‌ளினால் ந‌ன்றாக‌ க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். அத‌ன் விளைவாக‌, இன்றும் ப‌ல‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் பிரித்தானியாவுக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தை க‌ண்கூடாக‌க் காண‌லாம்.

அத்துட‌ன், சுத‌ந்திர‌ம் அடைந்த‌ பின்ன‌ர், பிரிட்டிஷாருக்கு விசுவாச‌மான‌ உள்நாட்டு பூர்ஷுவா வ‌ர்க்க‌ம் தான் ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ள‌து. சோஷ‌லிஸ்டுக‌ள் தான் இல‌ங்கையில் சுத‌ந்திர‌த்திற்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள் என்ற‌ உண்மையை மக்க‌ளுக்கு தெரிய‌ விடாம‌ல் மூடி ம‌றைத்து வ‌ந்த‌ன‌ர்.

Sunday, February 03, 2019

"என் முதல் ஆசிரியர்" - பெண்களை படிக்க வைத்த கம்யூனிச "கொடுங்கோன்மை(?)"


"என் முதல் ஆசிரியர்"- மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை(?)" பற்றி கூறும் குறுநாவல். கிர்கிஸ்தான் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பாக வெளிவந்துள்ளது. பெண்களின் கல்வி உரிமை தொடர்பாக அக்கறை கொண்டோர் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான நூல்.

 சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆப்கான் பெண்களின் கல்வி உரிமை பற்றி உலகம் முழுவதும் விவாதித்தார்கள். பள்ளிக்கூடம் செல்ல முடியாத அந்நாட்டு பெண்களின் அவலங்களை எண்ணிப் பரிதாபப் பட்டார்கள். ஆனால், இன்று ஆப்கான் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் கபடவேடதாரிகள், அன்று ஆப்கானிஸ்தான் கம்யூனிச ஆட்சியை தீவிரமாக எதிர்த்தார்கள். தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல், கூடவே பெண்களின் கல்வி உரிமையையும் எதிர்த்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதே இனத்தவரையும், மத, பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அயல்நாடுகளில் ஏறத்தாள அனைத்து பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். அந்தக் குடியரசுகள் முன்னர் ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் பகுதிகளாக இருந்த காரணத்தால் தான் இது சாத்தியமானது என்ற உண்மையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

பெரும்பாலும் பின்தங்கிய நாடோடி சமூக மக்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளில், கம்யூனிசப் புரட்சிக்கு முன்னர் பள்ளிக்கூடங்களே இருக்கவில்லை. புல்வெளிகளில் கால்நடைகளை மேய்ப்பதை மட்டுமே பிரதானமாக கருதிய அந்த மக்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெண்கள் கல்வி கற்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் இருந்தது. ஒவ்வொரு பெண் பிள்ளையும் பருவமடைந்ததும் பெற்றோரால் மணம் முடித்து வைக்கப் பட்டாள். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் என்றால், வசதி படைத்த வயதான ஆணுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக வாழ்க்கைப் பட வேண்டி இருக்கும். இந்த உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட்டது தான் "என் முதல் ஆசிரியர்" எனும் குறுநாவல்.

இந்தக் கதை முழுவதும் ரஷ்யப் புரட்சிக்கு பின்னரான காலத்தில் நடக்கிறது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த கிர்கீசிய மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை பின்பற்றும், நாடோடி மக்கள் சமூகங்களை கொண்ட கிர்கிஸ்தான் பிற்காலத்தில் தனியான குடியரசு ஆகியது. அயலில் உள்ள பிற மத்திய ஆசியக் குடியரசுகளுடன் ஒப்பிட்டால் கூட, கிர்கிஸ்தான் பிராந்தியம் நாகரிகத்தில் பல நூறாண்டுகள் பின்தங்கி இருந்தது.

இந்த நாவலில் வரும் தூய்ஷன் எனும் ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், தான் வாழும் குர்கிரி கிராமத்தில் ஒரு பாடசாலையை நிர்மாணிக்கிறார். அங்குள்ள பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்று படிக்க வைப்பதில் அவர் பட்ட கஷ்டங்களை இந்த நாவல் விபரிக்கிறது.

அந்தப் பாடசாலையில் படிக்கும் கெட்டிக்கார மாணவியான அல்டினாய் என்ற பதினைந்து வயது சிறுமி, அவளது விருப்பத்திற்கு மாறாக குடும்பத்தினரால் கட்டாயக் கலியாணம் செய்து வைக்கப் படுகிறாள். அதைத் தடுத்த ஆசிரியர் தூய்ஷன் அடித்து நொறுக்கப் படுகிறார்.

துள்ளித் திரிந்த பள்ளிச் சிறுமியான அல்டினாய், ஒரு வயதான ஆணுக்கு மனைவியாக வீட்டு அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறாள். ஆசிரியர் தூய்ஷன் செம்படை வீரர்களை கூட்டிக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்கு வந்து காப்பாற்றுகிறார். பின்னர் அவளை தொலைதூர நகரத்திற்கு அனுப்பி உயர்கல்வி படிக்க வைக்கிறார்.

நகரத்தில் விடுதியில் தங்கி படிக்கும் அல்டினாய் மறக்காமல் தூய்ஷனுக்கு கடிதங்கள் எழுதுகிறாள். அவற்றில் தனது காதலை மென்மையாக வெளிப்படுத்துகிறாள். இருப்பினும் ஆசிரியர் தூய்ஷனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சில வருடங்களுக்கு பின்னர் குக்கிரி கிராமத்திற்கு திரும்பும் அல்டினாய் அங்கு தூய்ஷனை காண முடியாமல் ஏமாற்றம் அடைகிறாள். அப்போது இரண்டாம் உலகப்போர் தொடங்கி விட்டதால் தூய்ஷன் போர்முனைக்கு சென்று விட்டதாக அறிந்து கொள்கிறாள்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் வந்த சோவியத் அரசு, பிற நாட்டு அரசுக்களைப் போன்று "உள்ளூர் மக்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து" ஒதுங்கி இருக்கவில்லை. அப்படி ஒதுங்கி இருந்தால், கிர்கிஸ்தான் இன்று இன்னொரு ஆப்கானிஸ்தானாக காட்சி அளித்திருக்கும். உண்மையில், சோவியத் அரசு தனி மனித உரிமைகளுக்கு எந்தளவு மதிப்பளித்துள்ளது என்பதை இந்த நாவலை வாசித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த நாவலில் வரும் பாடசாலை சுவரில் லெனின் படம் மாட்டப் பட்டிருந்தது. லெனின் மரணமடைந்த நேரம் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இது போன்ற பகுதிகளை காட்டி, "பார்த்தீர்களா? கம்யூனிசப் பிரச்சாரம்!" என்று சில விஷமிகள் குறை கூறலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. நாகரிக வளர்ச்சியில் பின்தங்கி இருந்த, எழுத்தறிவற்ற மக்கள் கல்வி கற்க வாய்ப்பளித்த, சோவியத் அரசையும், அதன் ஸ்தாபகரான லெனினையும் அந்த மக்கள் போற்றுவதில் என்ன பிழை இருக்கிறது?
நூலில் இருந்து ஒரு பகுதி:  
//குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு போக வேண்டும் என்று கூறும் இந்த அறிவிப்புக்கு விரோதமாக நீங்கள் நிற்கிறீர்களா? இதில் சோவியத் அரசாங்க முத்திரை குத்தப் பட்டுள்ளது. உங்களுக்கு வயலும் தண்ணீரும் கொடுத்தது யார்? உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தது யார்?.... நாமனைவரும் ஏழை விவசாயிகள். நம் வாழ்க்கை முழுவதும் நம்மை இழிவுபடுத்தி உதைத்துத் தள்ளினார்கள். நாம் கும்மிருட்டில் இதுவரை வாழ்ந்து விட்டோம். சோவியத் அரசாங்கம் நாம் ஒளியைப் பார்க்க வேண்டும் என்கிறது. இதற்காகவே நம்முடைய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிறேன்.// 

பிற்குறிப்பு:
இந்த நாவல் சிங்களத்தில் "குரு கீதய" என்ற பெயரில் ஒரு திரைப்படமாக வந்துள்ளது.

பிரேசிலில் ஒரு கிறிஸ்தவ மதகுரு உருவாக்கிய கம்யூனிச சமுதாயம்

அந்தோனியோ கொன்செஹெரோ (Antonio Conselheiro), 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், பிரேசிலில் ஒரு மாபெரும் பொதுவுடைமை சமுதாயத்தை உருவாக்கிய கிறிஸ்தவ மதகுரு.

"கம்யூனிசமும், மதமும் வேறு வேறான சித்தாந்தங்கள்" என்ற தவறான எண்ணத்தை, பிரேசில் நாட்டு முன்னாள் அடிமைகளும், ஏழை விவசாயிகளும் உடைத்தெறிந்தனர். Bahia மாநிலத்தில், Canudos எனுமிடத்தில், பிரேசிலின் முதலாவது கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

சுமார் 25000 பேரளவில், அந்தோனியோ என்ற கிறிஸ்தவ மதகுருவின் தலைமையில் அந்த புதிய நகரத்தை தாமே உருவாக்கிக் கொண்டனர். ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்கும் ஒரே வழியாக, அந்தோனியோ "கம்யூனிச கிறிஸ்தவத்தை" போதித்து வந்தார். அவரின் போதனைகளால் கவரப்பட்ட பல்லாயிரக் கணக்கான ஏழை விவசாயிகளும், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமைகளும், வெறுந் தரையில் கனுடோஸ் என்ற புதிய நகரத்தை உருவாக்கி சாதித்துக் காட்டினார்கள். 

அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், அவரவர் வாழ்க்கைக்கு தேவையான அளவு வேலை செய்தார்கள். வருமானத்தை தமக்குள் பகிர்ந்து கொண்டார்கள். பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்ட கனுடோஸ் கம்யூன் நகரத்தை மேற்பார்வையிட பொலிஸ் இருக்கவில்லை. குற்றச் செயல்கள் எதுவும் நடப்பதில்லை. அதனால் நீதிமன்றமும் இருக்கவில்லை. 

சுமார் 25000 க்கும் அதிகமான மக்கள், பிரேசில் அரசிடம் தங்கியிராமல், தாமாகவே தமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்ய கற்றுக் கொண்டால், பேராசைக்கார முதலாளிகள் மூலதனத்தை திரட்ட முடியுமா? முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்யும் பிரேசில் அரசு, இராணுவத்தை அனுப்பியது. 

அரச படைகள், கனுடோஸ் நகரை சுற்றி வளைத்தன. துருப் பிடித்த துப்பாக்கிகளை வைத்திருந்த மக்களால், நவீன ஆயுதமேந்திய இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. அந்தப் போரில், ஆயிரக் கணக்கான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். கம்யூனிச மதகுரு அந்தோனியோ கொன்செஹெரோ பிடிபட்டு சிரச்சேதம் செய்யப் பட்டார். 

"மனிதர்கள் இயற்கையாகவே சுயநலவாதிகள்" என்ற பொய்யை பரப்பி வரும், ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆதரவாளர்களும், இது போன்ற தகவல்களை மக்களுக்கு வேண்டுமென்றே மறைக்கப் பார்ப்பார்கள். 

மேலதிக விபரங்களுக்கு இந்த திரைப் படத்தை பார்க்கவும்: 
The Battle of canudos (Portuguese) 
https://www.youtube.com/watch?v=HJWn9ySyqEc

Saturday, February 02, 2019

ஜெர்மன் ஈழத் தமிழ் சமூகத்தில் நடந்த சாதி ஆணவக் கொலை


ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தில் இடம்பெற்ற சாதி ஆணவக் கொலை ஒன்று, ஜெர்மன் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, தமிழரின் மானம் சந்தி சிரித்தது.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காட்டுப் பகுதியில், பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் சடலம் ஒன்று, அரைவாசி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. ஆரம்பத்தில், வெள்ளையின நாஜி தீவிரவாதிகளே அந்தக் கொலையை செய்ததாக, எல்லோராலும் நம்பப் பட்டது. மரணமடைந்த பெண்ணின் பெற்றோரும் அவ்வாறே வாக்குமூலம் கொடுத்தனர்.

இருப்பினும், ஏதோ ஒரு சந்தேகத்தில் துப்புத் துலக்கிய ஜெர்மன் பொலிஸ், உண்மையான கொலையாளி அந்தப் பெண்ணின் தகப்பன் என்பதை கண்டுபிடித்தது. கொலைக்கான காரணம் என்னவென்பதையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பருவ மங்கை, ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனை காதலித்து வந்தார். அந்தக் காதலை பொறுக்க முடியாத தந்தையே, தனது மகளை அடித்துக் கொலை செய்திருக்கிறார். உடலை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று போட்டு விட்டு, அவசர அவசரமாக தகனம் செய்து விட்டு வந்திருக்கிறார். நவ-நாசிகளை கை காட்டி விட்டால், குடும்பத்திற்குள் நடந்த கௌரவக் கொலையை மறைக்கலாம் என்ற எண்ணம் ஈடேறவில்லை.

துருக்கிய சமூகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது, ஏற்கனவே ஜெர்மானியர்களுக்கு தெரிந்த விடயம். கௌரவக் கொலைகளை செய்வதில் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, தமிழர்களும் நிரூபித்தார்கள்.

இந்த சம்பவம் குறித்து, உயர்த்தப்பட்ட சாதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் கதைத்த பொழுது, அவர்கள் சம்பந்தப்பட்ட தந்தையை குற்றவாளியாக கருதவில்லை என்பது தெரிந்தது. "மகளை கண்டித்து அடிக்கும் பொழுது, தற்செயலாக படாத இடத்தில் பட்டு இறந்து விட்டதாக..." வக்காலத்து வாங்கினார்கள்.

ஜெர்மனியில், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது கூட குற்றம் என்பதையும் மறந்து, காதலித்த பிள்ளையிடம் தவறு காணும் அளவுக்கு தான், புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தில், உண்மையான காதல் சினிமாவில் மட்டுமே உள்ளது. நிஜத்தில் அது சாதிய கட்டுமானங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றது. சாதி கடந்த காதல், பல போராட்டங்களுக்கு பின்னரே நிலைத்து நிற்கின்றது. இளவரசனின் தற்கொலை/கொலை, அந்தப் போராட்டத்தில் ஒரு மைல் கல். அது வெறும் காதல் கதையின் சோக முடிவு அல்ல. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் நிகழ்ந்த திருப்புமுனை. முத்துக்குமார், செங்கொடியின் மரணங்கள் போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனச் சாட்சியை உலுக்கிய தியாக மரணம்.

இன்றைக்கும், தமிழர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றினாலும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர். காதலிக்கும் பொழுதே, சாதி பற்றி விசாரிக்கின்றனர். திருமணமாகி, குழந்தை பிறந்த பிறகும், சாதிப் பாகுபாடு காரணமாக பிரிந்து செல்கின்றனர். இது போன்ற பல சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன். 

இது தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. "தமிழீழப் போராட்டம் காரணமாக சாதி ஒழிந்து விட்டது", என்று கூறிக் கொள்ளும் ஈழத் தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை மறுப்பவர்கள், ஒன்றில் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள், அல்லது சாதிய கட்டுமானத்தை பாதுகாப்பவர்களாக இருப்பார்கள்.