Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.

No comments: