Monday, June 29, 2015

வட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது!


வலதுசாரிகளும், அரச அடிவருடிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், புலி எதிர்ப்பு அறிவுஜீவிகளும், வரிந்து கட்டிக் கொண்டு வட கொரியாவை எதிர்ப்பதன் காரணம் மிகவும் தெளிவானது. வட கொரியா நீண்ட காலமாக புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் கொடுத்து உதவி வந்தது. 

உலகில் பல விடுதலை இயக்கங்களுக்கு, வட கொரியா உதவியுள்ளது, தற்போதும் உதவிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு வட கொரியா உதவுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, 1971 ல் நடந்த ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டில், கொழும்பில் இருந்த அதன் தூதுவராலயம் மூடப் பட்டது. 

வட கொரியா, புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியதாக, அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றஞ் சாட்டியிருந்தது. அது தொடர்பான விபரமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, வட கொரியாவையும், "பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில்" சேர்த்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

வட கொரியா பற்றிய தகவல்கள், பெரும்பாலும் தென் கொரியா மூலமே கிடைக்கின்றன. அந்த வகையில், புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்ட தகவலும், 2006 அல்லது 2007 ம் ஆண்டில், தென் கொரிய ஊடகங்களில் வெளியானது. வட கொரியாவில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், ராக்கட் லோஞ்சர்கள், ஆர்ட்டிலெறி ஷெல்கள் போன்றன கப்பல் மூலம் கொண்டு செல்லப் பட்டன. 

வட கொரிய ஆயுதங்கள், இலங்கை கடற் பிராந்தியத்திற்கு அண்மையாக கொண்டு செல்லப் பட்டு, பின்னர் புலிகளின் சிறு படகுகள் மூலம், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு பகுதிக்கு கடத்தப் பட்டுள்ளன. தென் கொரிய அரசின் உளவுத் தகவலைத் தொடர்ந்து, ஒரு வட கொரிய கப்பலை சிறிலங்கா கடற்படை தடுத்து திருப்பி அனுப்பியது. (இந்தத் தகவலை, ஒரு தென் கொரிய பத்திரிகை வெளியிட்டிருந்தது.)

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்கா வழங்கிய உளவுத் தகவல்கள் உதவியுடன், சிறிலங்கா கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து தாக்கி அழித்திருந்தது. ஆகவே, வட கொரிய ஆயுதக் கப்பல் வந்தமைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. (வட கொரியா, அமெரிக்காவின் எதிரி நாடென்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய அவசியமில்லை.)

அமெரிக்க எஜமான விசுவாசம் காரணமாக, புலி எதிர்ப்பு போலித் தமிழ் தேசியவாதிகள், இந்த உண்மையை தமிழ் மக்களிடம் இருந்து மறைப்பதற்காக, அடிக்கடி "வட கொரியா எதிர்ப்பு நாடகம்" போட்டு வருகின்றனர். அமெரிக்காவுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள் (அல்லது தந்திரசாலிகள்). 


மேலதிக தகவல்களுக்கு:
North Korea may have aided Hezbollah, LTTE - U.S. report 
http://in.reuters.com/article/2007/12/13/idINIndia-30964520071213 
North Korea: Illegal Exporting of Weapons to Sri Lanka Guerilla Groups
http://www.dailynk.com/english/read.php?cataId=nk00100&num=2709
Defiant Failed State: The North Korean Threat to International Security
http://www.amazon.com/Defiant-Failed-State-International-Security/dp/1597975311


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?
2.சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!
3.இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!



Saturday, June 27, 2015

இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும். வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.

"வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்..." என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.

புலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன. அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், கொழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.

அது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர். இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா?

எது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. "துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது....", "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை..." போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.

"முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்" மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது. சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

வன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் "de facto தமிழீழம்" சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது. நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

கொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது. ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது. புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது. எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.

புலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "தமிழீழ நாணயம்" அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர். சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது. தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். "100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்" என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, "ஸ்டாலினிச - சர்வாதிகார நாடுகள்" தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது. சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இடதுசாரிகளின் கனவான "தமிழீழ வைப்பகம்" என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது. இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன. மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே "தமிழ் தேசிய இன மான உணர்வு" உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் "சிங்கள வங்கிகளின்" சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.

ஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது? உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.

அந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது. 

அதற்கு, "ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்" (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது. அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம். ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, "தமிழ் தேசிய" முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. 

தமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற "இடதுசாரி புலிகள்" அழிக்கப் பட்டனர். "வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்", சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, June 26, 2015

சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!


சன் தொலைக்காட்சியில், "நிஜம்"(?) என்ற நிகழ்ச்சியில், "மர்ம தேசம்" என்ற பெயரில், வட கொரியா பற்றிய பல பொய்யான, கற்பனையான தகவல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு சில பொய்களை இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.

வட கொரிய மக்கள் வாரத்திற்கு ஏழு நாட்கள், தினசரி 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கடந்த தசாப்த காலமாகவே, தென் கொரிய நிறுவனங்கள், வட கொரியாவினுள் முதலீடு செய்து, அங்குள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துள்ளன. அவர்களும் 7 நாட்கள்/ 12 மணிநேரம் வேலை செய்கிறார்களா? சுதந்திர வர்த்தக வலையங்கள் பற்றி, சன் தொலைக்காட்சி ஒரு வார்த்தை கூட பேசாத மர்மம் என்ன?

கொரிய யுத்தம் ஐ.நா. தலையீட்டால் முடிவுக்கு வந்ததாக, வரலாற்றுப் புனைவு ஒன்றை திணிக்கிறார்கள். அன்றைய யுத்தத்தில், வட கொரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டதே "ஐ.நா. படைகள்" தான்! அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்திய "ஐ.நா. படைகள்". இந்தியா கூட பெயருக்கு ஒரு சிறு படையணியை அனுப்பி இருந்தது. போர்க்காலத்தில் நடந்த படுகொலைகளில் ஈடுபட்ட, ஐ.நா. படையினரும் போர்க் குற்றவாளிகள் தான்.

ஓர் "இந்திய" தொலைக்காட்சிக்கு, இந்த உண்மை தெரியாமல் போனதெப்படி? அது மட்டுமல்ல, கொரியப் போர் இன்னும் முடியவில்லை. அன்று ஒரு போர் நிறுத்தம் தான் கைச் சாத்திடப் பட்டது. அதன் அர்த்தம், இன்று வரைக்கும் வட கொரியாவும், அமெரிக்காவும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதுவும் தெரியாதா?

"நிஜம்" என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு, பொய்களை பரப்புவது தான் சன் தொலைக்காட்சியின் நோக்கமா? நிகழ்ச்சி தயாரிப்பதற்கு முன்னர், வட கொரியாவுக்கு நேரில் சென்ற சிலரின் ஆவணப் படங்களை பார்த்திருக்க வேண்டும். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில், கற்பனைக் கதைகளை சோடிப்பது சிலருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

வட கொரிய சிறைகளில் இருக்கும் கைதிகளை விட, பத்து மடங்கு அதிகமானோர் அமெரிக்க சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். ஏழைகள், அல்லது இனப்பாகுபாடு காரணமாகப் பல இலட்சம் பேர் கைது செய்யப் படுகின்றனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்கள் அகதிகள் என்றாலும் சிறைகளில் தடுத்து வைக்கப் படுகின்றனர். இவர்களில் ஈழத் தமிழ் அகதிகளும் அடக்கம்.

வட கொரியா ஓர் ஏழை நாடாக இருந்தாலும், அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்து வருகின்றது. அமெரிக்காவில், பணம் இல்லாவிட்டால் படிக்க முடியாது. காசில்லா விட்டால் நோய் வாய்ப்பட்டு சாக வேண்டியது தான்.

வட கொரிய அரசு, தனது மக்களுக்கு வீடுகளும் இலவசமாக கட்டிக் கொடுக்கிறது. அமெரிக்காவில் இலட்சக் கணக்கானோர் கடன் கட்ட முடியாமல், வருடக் கணக்காக வாழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவும், வட கொரியாவும் இன்று வரையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எதிரி நாடுகள். வட கொரியா, கொரிய தேசிய இனத்தை ஒன்றிணைப்பதற்கான மண் மீட்புப் போர் மட்டுமே நடத்தியது. ஆனால், அமெரிக்கா இன்று வரையில், சிறிதும் பெரிதுமான ஒரு டசின் உலக நாடுகள் மீது படையெடுத்துள்ளது.

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டு இலட்சக் கணக்கானோரை கொன்றது. கொரிய யுத்தத்தின் போது, கொரியாவிலும், சீனாவிலும் அணுகுண்டு போடப் போவதாக மிரட்டியது. 21 ம் நூற்றாண்டிலும், ஆப்கானிஸ்தான், ஈராக், ஆகிய நாடுகள் மீது படையெடுத்த அமெரிக்கப் படையினர், அங்கு இலட்சக் கணக்கான அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர்.

வட கொரியாவை விட, அமெரிக்கா தான், உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, பெரும்பான்மையான உலக மக்கள் நம்புகின்றனர். இதனை சில மேலைத்தேய புள்ளிவிபரங்களே உறுதிப் படுத்தி உள்ளன. அப்படி இருந்தும், இன்றும் சிலர், "வட கொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக" முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அமெரிக்க டாலர்களுக்காக கையேந்திப் பிழைக்கும் போலி மனிதநேயவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்காவின் இனப்படுகொலைகளை கண்டுகொள்ள மறுக்கும் மர்மம் என்னவோ? ஈழப்போரின் இறுதியில், வன்னிக்குள் அகப்பட்ட புலிகளையும், பொது மக்களையும், சாட்டலைட் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, குண்டு போட்டு அழிக்க உதவியதும் அமெரிக்கா தான் என்பதை அதற்குள் மறந்து விட்டார்களா?

வடகொரியா-மர்ம தேசம்

Tuesday, June 23, 2015

இந்தியாவுக்கு எதிரான வியூகத்தில் சீனா தமிழ் தேசியவாதிகளுக்கு உதவுமா?

சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு, பூகோள அரசியல் தந்திரோபாயம் குறித்த ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒரு நிபுணர்கள் குழு இயங்குகின்றது. China Institute of International Studies (CIIS) (http://www.ciis.org.cn/english/index.htm ) என்ற அந்த அமைப்பில், இந்தியா தொடர்பான கட்டுரை ஒன்று சீன மொழியில் பிரசுரமானது. 

Zhan Lue என்ற புனைபெயரில் ஒரு நிபுணர் எழுதிய கட்டுரை, இன்று வரையில் யாருடைய கவனத்தையும் பெறவில்லை. ஆனால், அதில் தமிழ் தேசியவாதிகள் பற்றியும் குறிப்பிட்டிருப்பது எம்மைப் பொருத்தவரையில் முக்கியமான விடயம் தான்!

அந்தக் கட்டுரையின் சாராம்சம் இது: 
சீனா தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவில் பத்து அல்லது இருபது தனி நாடுகளை உருவாக்குவதற்கு முன் வர வேண்டும். சீனா சிறிதளவு முயற்சி எடுத்தாலே, இந்திய மாநிலங்களை உடைத்து விடலாம். அதற்காக, சீனா பல வேறுபட்ட தேசிய இனங்களுடன் கூட்டுச் சேர வேண்டும். அசாமியர்கள், காஷ்மீரிகள், தமிழர்கள் போன்ற தேசியவாதிகள் தமக்கான தனி நாட்டை அமைத்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்.
(ஆதாரம்: Where China Meets India, Burma and the New Crossroads of Asia, by Thant Myint-U) 

சீனாவிலும், இந்தியாவிலும் இந்த அறிக்கையை பலர் அபத்தம் என்று புறக்கணித்திருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் நடைமுறைச் சாத்தியமற்றது என்று சொல்ல முடியாது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நட்புறவு அறுந்து, மோதல் நிலைக்கு செல்லும் காலகட்டத்தில் அந்த அறிக்கை தூசு தட்டி எடுக்கப் பட்டு, அதில் கூறப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப் படுத்த முனையலாம்.

அனேகமாக, இந்திய அரசு ஏற்கனவே இப்படியான அபாயம் இருப்பதைப் பற்றி யோசித்து இருக்கலாம். அதனால், தானே முந்திக் கொண்டு, இந்திய நலன் சார்ந்த தமிழ் தேசிய சக்திகளை உருவாக்கி விட்டிருக்கலாம். அதை நாம் அனுபவத்தில் கண்டறியலாம். 

தங்களைத் தாங்களே தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்ளும் பலர், சீனாவை கடுமையான தொனியில் எதிர்ப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். அதே நேரம் இந்தியா தொடர்பான மென்மையான போக்கை கடைப் பிடிக்கின்றனர். 

"கருணாநிதி - சோனியா" அல்லது "திமுக - காங்கிரஸ்" போன்ற தனி நபர்களையும், கட்சிகளையும் மட்டும் எதிர்த்தால் போதும், அதுவே இந்திய எதிர்ப்புவாதம் ஆகிவிடும் என்று சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னொரு கட்டத்தில், மோடியையும், பாஜகவையும் ஆதரித்தார்கள். அப்படி இல்லா விடினும், இந்தியாவில் இருந்து பிரிவது பற்றி பேசாமல், இந்திய இறையாண்மைக்கு ஆதரவாகப் பேசுவார்கள்.

ஈழப்போரின் இறுதியில், சீனா சிறிலங்கா அரசுக்கு ஆதரவளித்தது. கன ரக ஆயுதங்களை விற்றது என்று சிலர் காரணங்களை அடுக்கலாம். அதெல்லாம் உண்மை தான். ஆனால், சர்வதேச விவகாரங்களில், சீனாவும் ஒரு மேற்கத்திய வல்லரசு போன்றே நடந்து கொள்கின்றது. 

ஒரு நாட்டுக்குள் நிலவும் தேசிய இனப் பிரச்சினையில், அது இரண்டு பக்கத்தையும் ஆதரிக்கும். ஒன்றை நேரடியாகவும், மற்றதை மறைமுகமாகவும் ஆதரிக்கும். சீனாவின் இந்த தந்திரோபாயம், ஏற்கனவே மியான்மரில் வெற்றிகரமாக பாவிக்கப் பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்திடம் மட்டுமல்ல, புலிகளிடமும் சீன ஆயுதங்கள் தான் இருந்தன என்பது இரகசியமல்ல. புலிகளின் சர்வதேச ஆயுத முகவர் குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் தங்கியிருந்து ஆயுதங்களை கடத்தி வந்ததும் தெரிந்த விடயம். அவர் எங்கே, யாரிடம் இருந்து ஆயுதங்களை வாங்கினார் என்பதை ஆராய்ந்தாலே போதும். மியான்மரிலும், கம்போடியாவிலும் சீன ஆயுதங்களை விற்பனை செய்யும் தரகர்கள் உள்ளனர்.

மியான்மரில் சீன எல்லையோரம் "வா" சிறுபான்மை இன மக்களின் தனி நாட்டுக்காக போராடிய கிளர்ச்சிப் படை (United Wa State Army), தசாப்த காலமாக ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளது. அதற்கு சீனா மறைமுகமான ஆதரவு வழங்குவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அந்தப் பிரதேசத்தில் சீன நாணயம் புழக்கத்தில் உள்ளது. சீனாவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப் படுகின்றது. பெரும்பாலான முதலீடுகள் சீனர்களுடையவை.

நவீன ஆயுதங்களை கொண்டுள்ள United Wa State Army (UWSA), தனது "de facto வா தேசத்திற்கு" வருமானம் தேடுவதற்காக ஆயுத விற்பனையில் இறங்கியுள்ளது. சீனா தனது இராணுவத்தை நவீனப் படுத்தும் பொருட்டு, பழைய AK-47, T-56 ரக துப்பாக்கிகளை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலைக்கோ விற்று விட்டது. சீனாவுடன் தொடர்புடைய ஆயுதத் தரகர்கள் அவற்றை வாங்கி விற்கின்றனர். UWSA , அவற்றை மணிப்பூர் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு விற்றுள்ளன. 

அண்மையில் மியான்மர் எல்லைக்குள் நுளைந்த இந்திய இராணுவம், அங்கு முகாமிட்டிருந்த இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கு மியான்மர் அரசு மறைமுகமான ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. வெளியில் தெரியா விட்டாலும், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாக ஏற்படும் பதிலிப் போர்களும் அவ்வப்போது நடந்து கொண்டு தானிருக்கின்றன.

Monday, June 22, 2015

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!


புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.


Wednesday, June 17, 2015

கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!


"தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டில், மோசஸ் நாகமுத்து என்ற ஒரு தமிழர் பிரதமராக வந்துள்ளதாகவும், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும்" என்று ஒரு தகவலை சிலர் பரப்பி வருகின்றனர். கயானா நாட்டின் அரசியல் நிலவரம், அல்லது  "தமிழ்ப்" பிரதமரின் அரசியல் வரலாறு பற்றி எதுவும் அறியாமல் பரப்பப்படும் தகவல் ஆபத்தானது. அது இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கே உதவப் போகின்றது.

தமிழர்களே ஏமாறாதீர்கள்! மோசஸ் நாகமுத்து ஒரு சி.ஐ.ஏ. உளவாளி! கயானாவில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள எண்ணை வளத்தை அபகரிக்கும் நோக்குடன், CIA செய்யும் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று.

மோசஸ் வீராசாமி நாகமுத்து: யார் இவர்? 
நாகமுத்து என்பது குடும்பப் பெயர். அனேகமாக, கயானாவில் காலடி எடுத்து வைத்த முப்பாட்டனின் பெயர். ஆங்கிலேயர் வாயில் நுழையாத படியால் நகமூட்டூ (Nagamootoo) என்று மாற்றி விட்டார்கள்.

மோசஸ் நாகமுத்து, கயானாவில் விம் கிராமத்தில் பிறந்தவர். அங்கு வாழும் மக்கள் சென்னையில் இருந்து வந்து குடியேறியவர்கள். இருநூறு வருடங்களுக்கு முன்னர், இவரது மூதாதையர் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றனர். இன்று அங்கே வாழும் "தமிழர்கள்" யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது. அவர்கள் ஒன்றில் ஆங்கிலம் அல்லது ஹிந்துஸ்தானி பேசுகிறார்கள்.

உலகில் நீண்ட கால இனப்பகை முரண்பாடுகளை கொண்ட நாடுகளில் கயானாவும் ஒன்று. தென் அமெரிக்காவில், வெனிசுவேலாவுக்கு அருகில் உள்ள முன்னாள் பிரிட்டிஷ் காலனியில், ஆப்பிரிக்க அடிமைகளும், இந்திய கூலிகளும் பெருமளவில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்களின் வம்சாவளியினர் இரண்டு பெரும்பான்மை சமூகங்களாக வாழ்கின்றனர்.

கயானாவுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னரே, பிரிட்டிஷார் அந்த நாட்டில் சுதந்திரமான பொதுத் தேர்தல்களை நடத்தினார்கள். அப்போது முற்போக்கு மக்கள் கட்சி (The Progressive People's Party) (PPP) பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெற்றது. உண்மையில் PPP, ஆப்பிரிக்க, இந்திய உழைக்கும் வர்க்க மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய மார்க்சியக் கட்சியாக இருந்தது.

PPP தலைவர் டாக்டர் செட்டி ஜெகன் ஓர் இந்தியர் (இவரது முன்னோர் கூட தமிழராக இருக்கலாம்.) செட்டி ஜெகன் தன்னை ஒரு மார்க்சிய - லெனினிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர். கியூபாவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். சேகுவேராவை கூட நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

அன்றிருந்த நிலைமையில், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கினால், அது அடுத்த நாளே ஒரு கம்யூனிச நாடாகி விடும் என்று பிரிட்டன் அஞ்சியது. செட்டி ஜெகன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது உறுதியானதும், காலனிய எஜமானான பிரிட்டன் படைகளை அனுப்பி மிரட்டியது.

அப்படி இருந்தும், அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் PPP தொடர்ந்தும் வெற்றி பெற்று வந்த படியால், பிரிட்டன் அமெரிக்காவின் உதவியை நாடியது. CIA, MI5 இரண்டும் கூட்டுச் சேர்ந்து, செட்டி ஜெகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டின.

ஓர் ஏழை நாடான கயானாவில், PPP தனது தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர் மத்தியில் பேராதரவு பெற்றிருந்தது. அதனால் CIA, தனது அமெரிக்க தொழிற்சங்க கைக்கூலிகளான AFL-CIO மூலம் இரகசியமாக நிதி அனுப்பி, இனக் கலவரங்களை தூண்டி விட்டது.

1964 ம் ஆண்டு, கயானாவில் இந்தியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் இனக்கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, PPP இல் இருந்த ஆப்பிரிக்க இனத் தலைவர் போர்ப்ஸ் பெர்ன்ஹம் (Forbes Burnham) கட்சியை விட்டு விலகினார். அவருடன் ஆப்பிரிக்க உறுப்பினர்களும் வெளியேறினார்கள். அதனால், PPP இந்தியர்களின் கட்சியாகியது.

போர்ப்ஸ் பெர்ன்ஹம் தலைமையில், ஆப்பிரிக்க இனத்தவரை பிரதிநிதித்துவப் படுத்தும் People's National Congress (PNC) என்ற புதிய கட்சி உருவானது. இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரிட்டன், கயானாவுக்கு சுதந்திரம் வழங்கியது. 1966 ம் ஆண்டு கயானா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, போர்ப்ஸ் பெர்ன்ஹம் ஒரு சர்வாதிகாரியாக அரசாண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப் பட்டனர்.

நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் சி.ஐ.ஏ. மேலதிகாரி  Bryan Hunt (Charge´ d´ affaires) ஐ சந்தித்து பேசினார்.

கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் தான், PPP கட்சி சார்பில் மந்திரிப் பதவி வகித்த மோசஸ் நாகமுத்துவுக்கும் சி.ஐ.ஏ. க்குமிடையில் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற காரணத்தினால், செட்டி ஜெகனால் கட்சியை விட்டு நீக்கப் பட்டிருந்தார். அந்தத் தகவலை, அன்றைய அமெரிக்க இராஜதந்திரி Wayne, மற்றும் சில கயானா ஊடகவியலாளர்கள் உறுதிப் படுத்தி உள்ளனர். மேலும், நாகமுத்து பிரதமராக பதவியேற்றவுடன் முதல் வேலையாக தனது சி.ஐ.ஏ. தொடர்பாளரை சந்தித்துள்ளார். (PM Nagamootoo meets with US Chargé d’ Affaires; http://www.kaieteurnewsonline.com/2015/05/28/pm-nagamootoo-meets-with-us-charge-d-affaires/)

தொண்ணூறுகளுக்கு பின்னர், PPP மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. கடந்தாண்டு தேர்தல் வரையில், குறைந்தது ஒரு தசாப்த காலமாக PPP ஆட்சி செய்தது. அதன் ஆட்சிக் காலத்தில், கயானாவில் எண்ணை கண்டுபிடிக்கப் பட்டதாக Exxon Mobil அறிவித்தது.



கடந்த பொதுத் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிந்தாலும், ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான அமெரிக்க கண்காணிப்பாளர்கள் "தேர்தல் நல்ல முறையில் நடந்துள்ளதாக" கூறியுள்ளனர். PPP க்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் தான் "தமிழரான" மோசஸ் நாகமுத்து கூட்டுச் சேர்ந்துள்ளார்.

உண்மையில், எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பான APNU+AFC இனை, ஆப்பிரிக்க, ஐரோப்பிய வம்சாவளியினரே பெரும்பான்மையாக ஆதரிக்கின்றனர்.  PPP இப்போதும் இந்தியர்களின் கட்சியாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.

இலங்கையில், மோசஸ் நாகமுத்து போன்ற ஒரு அரசியல்வாதி, சிங்கள அரசில் அங்கம் வகித்தால், அவருக்கு என்ன பட்டம் கொடுத்திருப்பார்கள் என்பதை நான் இங்கே கூறத் தேவையில்லை. கயானாவிலும் அது தான் நிலைமை.


இது குறித்து மேலும் அறிய விரும்புவோருக்காக. 
கயானாவில் CIA செய்த சதி நடவடிக்கைகள் பற்றிய முழுமையான விபரங்கள் இந்த நூலில் எழுதப் பட்டுள்ளன:
U.S. Intervention in British Guiana: A Cold War Story 
http://www.amazon.com/U-S-Intervention-British-Guiana-History/dp/0807856398

Sunday, June 14, 2015

பௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் கம்யூனிச தடுப்பு மருந்து


  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், முன்னாள் ஐரோப்பிய காலனிகளாக இருந்த ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்து கொண்டிருந்த காலத்தில், அந்த நாடுகளில் "கம்யூனிச அபாயம்" பரவிக் கொண்டிருந்தது. சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நாடுகளுக்கிடையில் ஒரு முக்கியமான ஒற்றுமை இருந்தது. அவை எல்லாம் "பௌத்த நாடுகள்". அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள். 
  • இலங்கையும், பர்மாவும், அவற்றைப் போன்று, பௌத்த மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் தான். சிறிலங்கா, பர்மிய ஆட்சியாளர்களும், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச பூதம் தமது நாடுகளிலும் வந்து விடும் என்று பீதியடைந்திருப்பார்கள். அதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் பௌத்த மதவெறியை தூண்டி விட்டார்கள். அது பிற்காலத்தில், பௌத்தர் அல்லாத சிறுபான்மை இன மக்கள் மீது பாய்ந்தது வரலாறு.

ஒரு தடவை, நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்த நேரம், மியான்மார் (பர்மா) நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் சக தொழிலாளியாக வேலை செய்தான். அவன், மியான்மர் சிறுபான்மை இனங்களில் ஒன்றான, ஷின் பழங்குடி இனத்தை சேர்ந்த அகதி. ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான அகதிகள், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இளைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் விசாலமான உலகப்பார்வையும் அவனிடம் இருந்தது.

ஷின் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். பர்மிய மொழி பேசும் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்களாக இருந்த படியால், காலனிய காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஷின் போன்ற பழங்குடி சமூகங்களை மட்டுமே மதம் மாற்றி இருந்தனர். கிறிஸ்தவ மதத்துடன் மேலைத்தேய பண்பாடும் போதிக்கப் பட்டது என்பதை இங்கே கூறத் தேவையில்லை.

வேலை நேரங்களில் கிடைத்த இடைவேளைகளில், பர்மா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது நான், ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி அவனது கருத்தை அறிய விரும்பினேன். அப்போது அவன் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

//"அவர்கள் தம்மை தனியாக அடையாளப் படுத்திக் கொள்வதற்காக ரோஜிங்கியா (பர்மாவில் அப்படி அழைப்பார்கள்) என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் வந்தேறுகுடிகள். ஒரு காலத்தில் பர்மிய பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. அப்போது பங்களாதேஷ் நாட்டில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். அவர்கள் இப்போது தாங்கள் பர்மிய மண்ணின் மைந்தர்கள் என்று உரிமை கோருகிறார்கள்.

எமது நாட்டில் பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு ரோஹிங்கியா மக்கள் காரணமாக உள்ளனர். சில ரோஹிங்கியா இளைஞர்கள், பர்மிய இளம்பெண்களை பலாத்காரம் செய்த கொடுமை நடந்த பின்னர் தான், மக்கள் வெகுண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் தமது தாய்நாடான பங்களாதேஷ்ஷுக்கு திரும்பிச் செல்வது நல்லது."//

நிச்சயமாக, மியான்மர் அரசு, அல்லது பெரும்பான்மை சமூகம் சார்ந்த ஊடகங்களின் பிரச்சாரம், அவனை அப்படி சொல்ல வைத்தது. மியான்மரில் ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனமான ஷின் மக்களிடமே, அப்படியான தவறான கருத்துக்கள் இருக்குமாகவிருந்தால், பெரும்பான்மை பர்மியர்களைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

அந்தக் கதைகளை கேட்கும் பொழுது, இலங்கையில் தமிழர்கள் பற்றி சிங்களவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் தான் நினைவுக்கு வந்தன. இனப்பிரச்சினை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியான குணாம்சத்தை கொண்டுள்ளது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது. ஆயினும், இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

மியான்மரில் பல தசாப்த காலமாக இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போது அந்த நாட்டில், அனைவர் மீதும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. ஆனால், அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. பர்மிய- பௌத்த பேரினவாதிகள் அவர்களை இனப்படுகொலை செய்யவில்லை.

மியான்மர் ஜனநாயக நாடாக மாறிய பின்னர் தான், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடந்துள்ளன. இலங்கையும் மிக நீண்ட காலமாக மேலைத்தேய ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றி வரும் ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இனப்பிரச்சினை, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்பன, மேலைத்தேய ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் மட்டுமே தீவிரமடைந்திருப்பதன் காரணம் என்ன? நம்மில் பலர் உணர்ந்து கொள்ளாத, மேலைத்தேய ஜனநாயகம் உற்பத்தி செய்யும் தீமைகளில் இதுவும் ஒன்று. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் "The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing"(by Michael Mann) என்ற நூலை வாசிக்கவும். 

அது என்னவோ தெரியவில்லை. நமது நண்பர்கள் சிலருக்கு, சோஷலிசம் என்ற சொல்லை எங்கே கண்டாலும் ஹிஸ்டீரியா வந்து விடுகின்றது. உடனே, "இந்தப் படுபாவிகள் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என்று திட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

அவர்கள் தமது முன்னோரின் கடந்த காலத்தை பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், அவர்களின் பெற்றோரின் காலத்தில் கூட, சோஷலிசம் என்பது எதிர்க்கப் பட வேண்டிய தீமையாக கருதப் படவில்லை. மாறாக, பெரும்பான்மை பொது மக்களின் விருப்பத்திற்குரிய அரசியல் கொள்கையாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது.

முன்னர் ஒரு தடவை, "மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை, மேலைத்தேய ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் உருவான தீமை" என்று எழுதி விட்டேன்.  ஒரு நண்பர் அதைக் கண்டவுடனே, "மியான்மர் ஒரு காலத்தில் சோஷலிச நாடாகவிருந்தது தெரியுமா?" என்று கேட்டிருந்தார்.

நீங்கள் மியான்மர் பற்றி இணையத்தில் தேடினால், 1962 - 1988 காலப்பகுதியில் Burma Socialist Programme Party (BSPP) என்ற ஒரு கட்சி ஆட்சி முறை இருந்தது என்று எழுதப் பட்டிருக்கும். அந்தக் கட்சியின் சோஷலிச பொருளாதார திட்டங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும். அதை வைத்துக் கொண்டு, அன்றைய மியான்மர் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று சொல்ல முடியாது.

அன்றைய பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள், "நாஸ்திக" மார்க்சியத்தை நிராகரித்த, "பௌத்த - சோஷலிசம்" ஒன்றை நடைமுறைப் படுத்துவதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், உண்மையான சோஷலிசத்திற்காக பாடுபட்ட பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) தலைமறைவாக இயங்கியது. இராணுவ ஆட்சியாளர்கள், பர்மிய கம்யூனிஸ்டுகளுடன் நீண்டதொரு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலகத்திற்கும், அன்றிருந்த உலகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று தெருவில் போவோர் வருவோர் எல்லாம், "ஜனநாயகம், திறந்த சந்தைப் பொருளாதாரம்" பற்றிப் பேசுவது மாதிரி, அன்றிருந்த மக்கள், அரசியல் தலைவர்கள் சோஷலிசம் பற்றிப் பேசினார்கள். அன்றைய காலங்களில், சோஷலிசம் பேசுவது தான் "பேஷன்". ஏனென்றால், அன்றிருந்த மக்களுக்கு சோஷலிசம் தான் விருப்பமாக இருந்தது.

இந்தியாவில் நேருவும் சோஷலிசம் பேசினார். இந்தியாவும் எண்பதுகள் வரையில் போலி- சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றி வந்தது. இலங்கையில் சிறிமாவோவின் காலத்திலும் போலி- சோஷலிச பொருளாதாரம் இருந்துள்ளது.

அதிகம் பேசுவானேன். நமது விடுதலைப் புலிகள் கூட, சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும் சொல்லிக் கொண்டார்கள். அதற்காக, வன்னியில் இருந்த de facto தமிழீழம் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று யாரும் சொல்வதில்லை.

எதற்காக அன்றைய காலங்களில் சோஷலிசம் பிரபலமான அரசியல் கொள்கையாக இருந்தது? முக்கியமான நோக்கம், காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும். அதனால், சோஷலிசப் பொருளாதாரம், காலனிய வல்லாதிக்கதிடம் இருந்து தம்மை முழுமையாக விடுதலை செய்யும் என்று நினைத்தார்கள்.

அன்றிருந்த அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில், தேசியவாதமும், சோஷலிசமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒரே மாதிரியான கொள்கைகளாக கருதப் பட்டன. சிலநேரம், எது தேசியவாதம், எது சோஷலிசம் என்று பிரித்தறிவது கடினமாக இருந்தது. 

இலங்கையில் பௌத்த மதம் அரச மதமாக பிரகடனப் படுத்தப் பட்டதும், பௌத்த மத வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்குவதும், அதனால் "சிங்கள - பௌத்த மேலாதிக்கம்" நடைமுறை அரசியலானதும் அனைவரும் அறிந்ததே. இந்த விடயம் தொடர்பாக பலருக்குத் தெரியாத பக்கம் ஒன்றுள்ளது.

நாட்டில் உள்ள பௌத்தர் அல்லாத சிறுபான்மை இனங்கள், அல்லது சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, அரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தது. சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் நோக்கில் பௌத்த மதவெறி வளர்க்கப் பட்டது என்றே பலரும் கருதுகின்றனர். உண்மையில் அது இரண்டாம் பட்ச காரணம் மட்டுமே. முதலாவது காரணம், பௌத்த மதவெறியை தூண்டி விட்டால், "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தலாம் என்று அரசு கணக்குப் போட்டது.

காலனிய காலத்திற்குப் பிந்திய காலகட்டத்தில், புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், கம்யூனிசமே முதலாவது எதிரியாகக் கருதப் பட்டது. இலங்கையிலும், இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு சவாலான மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வந்தன. குறிப்பாக பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில், கம்யூனிச அல்லது இடதுசாரி கொள்கைகள் வேரூன்றி பரவுவதை தடுப்பதற்கு, அரசு பல வழிகளிலும் முயன்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நிலைப்பாடு சிறந்த பலன்தரத் தக்கதாக அமைந்தது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவிலும், அதே நோக்கத்தோடு தான் பௌத்த மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டது. பௌத்த சங்கங்களுக்கு அரசு பெருமளவு நிதியை ஒதுக்கியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, அந்த நாட்டிலும் எல்லா இடங்களிலும் புதிது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்தன. அங்கேயும் இந்த நடவடிக்கை சிறுபான்மையின மக்களின் எழுச்சியை தூண்டி விட்டது.

பர்மாவில் சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாது, பர்மிய கம்யூனிஸ்டுகளும் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக, பெரும்பான்மை பர்மிய மக்கள், கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கலாம் என்ற அச்சத்தில், அரசு பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது. பெரும்பாலான புத்த பிக்குகள் கம்யூனிச எதிர்பாளர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

பர்மாவுக்கு அயல்நாடான சீனாவில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். அங்கிருந்து பர்மிய கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைத்து வந்தது. அது மட்டுமல்லாது, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய, அயலில் உள்ள பிற நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருந்தனர்.

இன்றைய உலகில், பொதுவுடமைக் கோட்பாடுகளின் செல்வாக்கு குறைந்துள்ள நேரத்தில், அதைப் பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை. ஆயினும், இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்றைக்கும் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றது. சிங்கள - பௌத்த பேரினவாதிகள், தமிழர்களையும், முஸ்லிம்களையும் எந்தளவு வெறுக்கின்றனரோ, அதற்கும் மேலாகவே கம்யூனிஸ்டுகளை வெறுக்கிறார்கள். 

Saturday, June 06, 2015

கடன்கள் : வங்கிகளின் பணம் பெருக்கும் இயந்திரம்


மிலேச்சத்தனமான முதலாளித்துவ சர்வாதிகாரம் பற்றிய உண்மைகளை உரைப்பவர்கள், "நீர்க்குமிழிக்குள் வாழ்கிறார்கள்" என்று ஒரு நண்பர் விமர்சித்திருந்தார். இன்றுள்ள முதலாளித்துவ பொருளாதாரம், அடிப்படையில் ஒரு நீர்க்குமிழி பொருளாதாரம் என்பதற்கு அடுத்தடுத்து வந்த நெருக்கடிகளே சாட்சியம் கூறுகின்றன. அண்மையில் அமெரிக்காவில் வந்த கடன் நெருக்கடி, கடந்த நூறாண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடன் என்றால் என்ன? அதனால் நன்மை அடைவோர் யார்? பாதிக்கப் படுவோர் யார்? இது பற்றிய ஆவணப் படம் ஒன்று, நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டது. பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், Zembla ஊடகவியலாளர்கள் தயாரித்தளித்த நிகழ்ச்சியில் பேசப் பட்ட விடயங்களை இங்கே சுருக்கமாகத் தருகிறேன்.

பண்டைய காலத்தில், மெசப்பத்தோமியா நாட்டில் பணம் புழக்கத்தில் இருக்கவில்லை ஆனால் கடன் இருந்தது. கடன் பத்திரங்களை கல்வெட்டுகளில் பொறித்து வைத்தார்கள். மத்திய காலத்தில், போர்ச் செலவுகளுக்காக, மன்னர்கள் வணிகர்களிடம் கடன் வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. அது நவீன கால கடன் வழங்கும் வங்கிகளின் தோற்றத்திற்கு வித்திட்டது.

நாங்கள் எல்லோரும் கடன் வாங்குகிறோம். தனி மனிதர்கள் கடன் வாங்குவது போல, அரசுகளும் கடன் வாங்குகின்றன. அரசு என்பதற்காக, கடன் கொடுப்பவர்கள் தமது நிபந்தனைகளை தளர்த்திக் கொள்வதில்லை. ஒரு சாதாரண மனிதன், அளவுக்கு மிஞ்சி கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் என்ன நடக்கும்? அவனது செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், பட்டினி கிடந்தாயினும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் கூறுவார்கள். 

அதையே தான், நாடுகள் விடயத்திலும் பின்பற்றுகிறார்கள். கடன் வாங்கிய அரசுகள், தமது செலவுகளை சிக்கனப் படுத்தி கடனை அடைக்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை நாங்கள் அரசியல்-பொருளாதார கலைச்சொல்லில் சிக்கனப் படுத்தும் கொள்கை (Austerity) என்று சொல்கிறோம். ஆனால் விஷயம் ஒன்று தான். "உன்னுடைய செலவுகளை குறைத்து, மிச்சம் பிடித்து, வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடு."

இன்று கிரீஸ் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் அது தான். ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப் பட்ட காலத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள். ஒரு ஐரோப்பிய நாடு அந்த அமைப்பில் உறுப்புரிமை பெறுவதற்காக, கடன்களை குறைவாக வைத்திருக்க வேண்டும். அது அந்த தேசத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியின் அளவுக்கு கீழே, அதாவது 60% க்கும் கீழே இருக்க வேண்டும். 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், மொத்த பொருளாதார உற்பத்தியையும் (BNP), மொத்த கடன்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். கடன் தொகை BNP யை விட அதிகரித்து விட்டால், அந்த நாடு திவாலாகி விடும். கிரேக்க நாட்டில் அது தான் நடந்தது. மொத்த கடன் தொகை, மொத்த பொருளாதார உற்பத்தியை விட, 129% அதிகமாக இருந்தது!

கடன் வழங்கும் வங்கிகள், நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை விட, அரசாங்கங்களுக்கு கடன் கொடுப்பதை பெரிதும் விரும்புகின்றன. கடன் வாங்கிய நிறுவனம் ஒன்று திவாலாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். கடனை திருப்பி வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆனால், நாடுகள் விடயத்தில் அப்படி அல்ல. ஓர் அரசு கடன் வாங்கினால், அந்த நாடு கடனை குறுகிய காலத்தில் திருப்பிக் கொடுக்கா விட்டாலும், வங்கிகள் கவலைப் படப் போவதில்லை. ஏன்?

இலங்கை, இந்தியா போன்ற ஏழை நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன், போன்ற பணக்கார நாடுகளும் கடன் வாங்குகின்றன. கடன் விடயத்தில், ஏழை நாடு, பணக்கார நாடு என்ற பாகுபாடு கிடையாது. அதாவது, கடன் வழங்கும் வங்கிகளை பொறுத்தவரையில் எல்லா அரசுகளும் ஒன்று தான். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்தால் சரி.

இந்தக் கடன்களை யார் அடைக்கப் போகிறார்கள்? நிச்சயமாக, வரி கட்டும் சாதாரண மக்கள் தான். ஒவ்வொரு நாளும் இலட்சக் கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. வருங்காலத்தில் அவர்கள் வரி கட்டுவார்கள். அதாவது, தனது சொந்த நாட்டு மக்களை பிணை வைத்து தான், அரசுகள் கடன் வாங்குகின்றன. எமது அரசுக்கள் வாங்கிய கடன்களையும், வட்டிகளையும் நாங்கள் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். 

அதனால் தான், எந்த நாட்டு அரசு கடன் கேட்டாலும், அது இலங்கை மாதிரி போரினால் அழிந்து கொண்டிருக்கும் ஏழை நாடாக இருந்தாலும், வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன. அதற்குக் காரணம், அந்தப் பணத்தை எந்தக் காலத்திலும் திருப்பி வாங்கலாம். நூறு வருடங்களுக்குப் பிறகு அங்கு பிறக்கும் பிள்ளைகளிடம் இருந்தென்றாலும் வட்டியோடு வாங்கலாம். 

கடன்களுக்காக கட்டப் படும் வட்டித் தொகையினால், வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிக்கின்றன. வங்கிகளைப் பொறுத்தவரையில், கடன் என்பது பணம் பெருக்கும் இயந்திரம். இதனால், உலகின் ஒரு மூலையில் பெரும் கோடீஸ்வரர்களிடம் உள்ள பணம் பெருகிக் கொண்டே செல்கிறது. அதே நேரத்தில், ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அரசுகள், வங்கிகளின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கின்றன. அதனால் பொது மக்கள் நலன் பேணும் திட்டங்களை கைவிடுகின்றன. அதன் விளைவு என்ன? மக்கள் தமது அரசுகள் மீது நம்பிக்கை இழக்கின்றனர். அதற்குப் பதிலாக, ஒரு பலமான தலைவருக்காக ஏங்குகிறார்கள். 

அந்தப் புதிய அரசியல் தலைவர் ஒரு பாசிஸ்டாக இருந்தாலும், மக்கள் அதைப் பற்றி கவலைப் படப் போவதில்லை. சாதாரண மக்களின் பிரச்சனைகளை பற்றி எவர் பேசினாலும், அவரது அரசியல் பின்னணி பற்றி ஆராயாமல் ஆதரிக்கிறனர். ஜெர்மனியில் நாஸிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்த நிலைமையில், இன்றைய ஐரோப்பா உள்ளது. அந்த ஆபத்து குறித்து அரசியல் தலைவர்கள் மத்தியில் எச்சரிக்கையுணர்வு இல்லை. இருந்தாலும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவில்லையா? இருக்கிறது. புரட்சி மட்டுமே தீர்வைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் புரட்சி நடந்து புதிதாக ஆட்சியமைக்கும் அரசு புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் கடன்களை இரத்து செய்ய முடியும். அது மட்டுமல்ல, உலகப்போர்களும் கடன்களை இரத்து செய்வதற்கான காரணங்களை வழங்குகின்றன. 

உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், ஜெர்மனியின் பழைய கடன்கள் யாவும் இரத்து செய்யப் பட்டன. அதனால் தான் ஜெர்மனி ஒரு பொருளாதார வல்லரசாக வளர்ச்சி அடைய முடிந்தது. அன்று கடன்களை இரத்து செய்தபடியால் நன்மை அடைந்த ஜெர்மனி, இன்று கிரீசுக்கு தான் வழங்கிய கடன்களை இரத்து செய்ய மறுத்து வருகின்றது!

ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு:
De schuldenmachine; http://www.npo.nl/zembla/20-05-2015/VARA_101372895