Showing posts with label மியான்மர். Show all posts
Showing posts with label மியான்மர். Show all posts

Sunday, December 17, 2023

மியான்மரில் உயிர்த்தெழுந்த மக்கள் விடுதலைப் படை

 


மியான்மரில் உயிர்த்தெழுந்த கம்யூனிச விடுதலை இயக்கம். மியான்மரில் 2021 ம் நடந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து, அங்கு பல இயக்கங்கள் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முன்னாள் பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) உருவாக்கிய மக்கள் விடுதலைப் படையும்(PLA) ஒன்று. இந்த தகவல் ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றது.

நிச்சயமாக இது எண்பதுகளில் இயங்கிய பழைய PLA அல்ல. எண்பதுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய மூத்த கம்யூனிஸ்டுகளின் வழிகாட்டலில், இளைய தலைமுறையினரால் உருவாக்கப் பட்ட புதிய மக்கள் விடுதலைப் படை இது. அவர்களுடன் இடதுசாரி சிந்தனை கொண்ட பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். குறிப்பாக, 2 வருடங்களுக்கு முன்னர், 32 இளைஞர்களால் உருவாக்கப் பட்ட மக்கள் விடுதலைப் படையில் இன்று 1000 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் உள்ளனர். புதிய PLA, பெரும்பான்மையின பர்மியர்களைத் தவிர, பிற மொழிச் சிறுபான்மையினங்களை சேர்ந்த உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

உண்மையில் சிறுபான்மை இனங்களை சேர்ந்த தலைவர்களே புதிய கம்யூனிச இராணுவத்தை வழிநடத்துகின்றனர். மியான்மரில் கம்யூனிச மீள் உயிர்ப்பிற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். (எண்பதுகளில் நடந்த போராட்டத்தின் போது கட்சியின் தலைவர்களாக பெரும்பாலும் பர்மியர்களே இருந்தனர்.) விதிவிலக்காக காரென் சிறுபான்மையினத்தவரின் பிரதேசத்தில் மட்டும் முரண்பாடு நிலவுகிறது. ஏனெனில் அங்கு வலதுசாரிய காரென் தேசியவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது.

கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், பிற விடுதலை அமைப்புகளுடனான நட்புறவு. குறிப்பாக இராணுவ சதிப்புரட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜனநாயக ஆட்சியாளர்கள் தற்போது நிழல் அரசொன்றை நடத்துகின்றனர். அவர்கள் மூலம் PLA க்கு நிதி உதவி கிடைக்கிறது. இதை விட மறைமுகமான சீன உதவியும் இருக்க வாய்ப்புண்டு. அதை உறுதிப் படுத்த முடியாவிட்டாலும், வடக்கில் நீண்ட காலமாக கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருக்கும் சிறுபான்மையின தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சீன உதவி கிடைப்பது இரகசியம் அல்ல.

புதிய மக்கள் விடுதலைப் படை ஏற்கனவே பல இடங்களை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு உடனடியாக தமது கம்யூனிச கொள்கைகளை பரப்புரை செய்யவில்லை. "கம்யூனிஸ்டுகள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவார்கள்" என்று மட்டும் சொல்லிக் கொள்கின்றனர். ஏற்கனவே மியான்மர் இராணுவ அரசு மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பற்றி எதிர்மறையான பிரச்சாரம் செய்துள்ளமையும் ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன்னர் மியான்மர் இராணுவம் ஒரு மிகப் பலமான கம்யூனிச விடுதலைப் படையை எதிர்த்து போரிட்டமை குறிப்பிடத் தக்கது.

Friday, May 15, 2020

மியான்மர் காரென் தேசிய இன விடுதலைப் போராட்டம்

தமிழீழம் சாத்தியமில்லை என்று சொன்னால் பலர் இப்போது சண்டைக்கு வருவார்கள். அவர்கள் உலக நடப்புகள் எதையும் அறியாமல் இருக்கின்றனர். உலகில் பிற நாடுகளிலும் தனிநாட்டுக்கான விடுதலைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தனிநாடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்து சமஷ்டி உரிமைகளுக்காக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றன. அவற்றில் ஒன்று மியான்மரில் காரென் தனிநாடு கோரும் காரென் தேசிய விடுதலை இராணுவம்.

அவுஸ்திரேலிய எழுத்தாளர் Phil Thornton எழுதிய Restless Souls என்ற நூல் பற்றிய அறிமுகம். இப்படியான நூல்கள் மிகவும் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. நானும் இதை ஒரு பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தான் வாங்கினேன். இந்த நூலில் மியான்மரில் தனிநாடு கோரிப் போராடும் காரென் இன மக்களின் போராட்டம் பற்றிய பல அரிய தகவல்களை வாசித்து அறிந்து கொள்ள முடிகின்றது. இந்த எழுத்தாளர் தாய்லாந்தில் உள்ள மியான்மர் எல்லோயோர நகரமான Mae Sot எனும் இடத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து, அங்கு வாழ்ந்த காரென் அகதிகள், போராளிகளுடன் பழகிய அனுபவக் கதைகளை இதில் பகிர்ந்து கொள்கிறார்.

எந்தப் போரும் புனிதமானவை அல்ல. பர்மிய இராணுவம் காரென் பிரதேசத்தில் நடத்திய வெறியாட்டம் இந்த நூலில் விபரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அகதிகள் தமக்கு நடந்த கொடுமைகளை விபரிக்கிறார்கள். வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவது, கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்வது, இவற்றில் பர்மிய இராணுவமும் சளைத்தது அல்ல. சில இடங்களில் மனித மாமிசம் உண்ட கதைகளும் வதந்திகளாக உலாவுகின்றன. மியான்மர் இராணுவம் எத்தகைய கொடூரச் செயலுக்கும் தயங்குவதில்லை.

மியான்மரில் நடக்கும் போர் அவலங்களில் இருந்து தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த காரென் அகதிகளை தாய்லாந்து அரசும் பாராமுகமாக நடத்துகிறது. தாய்லாந்து மக்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப் படுகின்றனர். இருப்பினும், தாய்லாந்துக்குள் அமைந்துள்ள காரென் அகதி முகாம்களையும், KNLA இயக்க அலுவலகங்களையும் தாய்லாந்து அரசு பொறுத்துக் கொள்கிறது. அதாவது, மியான்மருடன் வர்த்தக தொடர்புகளை புதுப்பிக்கும் வரை அழுத்தம் கொடுப்பதற்கு காரென் மக்களை பயன்படுத்திக் கொள்கிறது.

தாய்லாந்து பணக்காரர்கள் மியான்மர் அகதிகளை மலிவுவிலைக் கூலிகளாக நடத்துகின்றனர். சில இடங்களில் கூலியே கொடுப்பதில்லை. தாய்லாந்து தொழில் வழங்குனர் வாக்குறுதி அளித்த கூலியை குறைத்துக் கொடுப்பதும், சிலநேரம் கூலியே கொடுக்காமல் ஏமாற்றுவதும் சர்வசாதாரணம். வேலை செய்த கூலியை கேட்ட பலர் ஆள் வைத்து கொல்லப் பட்டுள்ளனர். தாய்லாந்தில் மியான்மர் அகதிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

மியான்மர் நாட்டில் பர்மிய மொழி பேசுவோர் எழுபது சதவீத பெரும்பான்மையை கொண்டுள்ளனர். அவர்களைத் தவிர பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் தமக்குரிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு இனமும் தனக்கென தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்துள்ளது. இந்த நூல் காரென் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றி மட்டுமே அதிக கவனம் குவிக்கிறது.

காரென் இனத்தவரின் போராட்டம் சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றிருந்தது. அதற்குக் காரணம் காரென் இனத்தவரில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது மட்டுமல்ல. இரண்டாம் உலகப்போர் காலத்தில் பர்மா ஜப்பானியரின் ஆக்கிரமிப்பில் இருந்த காலத்தில், காரென் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து பர்மாவை விடுதலை செய்ய போராடியது. அப்போது யுத்தம் முடிந்த பின்னர் காரென் தேசத்திற்கு சுதந்திரம் தருவதாக பிரிட்டிஷார் வாக்குறுதி அளித்தனர். ஆனால் போர் முடிந்த பின்னர் ஏமாற்றி விட்டனர். பர்மிய ஆட்சியாளர்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரிட்டிஷார் வெளியேறி விட்டனர்.

அன்று பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை மறக்க வைப்பதற்காக, பிற்காலத்தில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் காரென் விடுதலைப் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கின. பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த கூலிப் படையினர் காரென் தேசிய விடுதலை இராணுவத்திற்கு (KNLA) பயிற்சி வழங்கினார்கள். இந்த நூலை எழுதிய எழுத்தாளர் காரென் தளபதிகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு கூலிப்படையினரையும் சந்தித்து உரையாடி இருக்கிறார்.

காரென் பிரதேசத்தில் உள்ள கூலிப்படையினரில் ஒரு சிலர் வியட்நாம் யுத்தம் முடிந்த பின்னர் இராணுவ சாகசம் செய்வதற்காக வந்தவர்கள். வேறு சிலர் கிறிஸ்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர்கள். மேலும் காரென் மக்கள் மேற்குலக சார்பானவர்களாக வைத்திருப்பதற்கு இது போன்ற தொடர்புகள் உதவுகின்றன. ஏராளமான மேற்கத்திய NGO க்கள் காரென் அகதிகளுக்கு உதவுவதற்கு வந்து முகாமிட்டுள்ளன. அவற்றில் சில KNLA க்கு ஆயுதங்கள் கடத்தி வருவதும் இரகசியம் அல்ல.

பல தசாப்த காலமாக KNLA கட்டுப்பாட்டில் இருந்த காரென் பிரதேசத்தை பர்மிய இராணுவம் கைப்பற்ற முடியவில்லை. அரச படைகள் அடுத்தடுத்து எடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியைத் தழுவின. இறுதியில் காரென் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே வெற்றி பெற முடிந்தது.

காரென் இனத்தவரில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவோர் பெரும்பான்மையாக இருந்தாலும், கணிசமான அளவினர் பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பெரும்பான்மை பர்மியர்களும் பௌத்தர்கள் என்பதால், மியான்மர் அரசு காரென் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றது. ஒரு சில பௌத்த காரென் இனத்தவர் காட்டிக் கொடுத்த படியால் தான் மியான்மர் இராணுவம் படையெடுத்து, KNLA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது.

காரென் பிரதேசம் முழுவதையும் மியான்மர் இராணுவம் கைப்பற்றிய பின்னர், DKBA என்ற துணைப்படையை உருவாக்கியது. காரென் ஜனநாயக பௌத்த இராணுவம் என்ற அந்த துணைப்படையினர் இன்று வரையில் மியான்மர் இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர். KNLA க்கும், DKBA க்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. சிலநேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களில் ஒருவர் KNLA இலும், இன்னொருவர் DKBA இலும் இருப்பார்கள். யுத்தம் நடக்கும் போது சகோதரர்கள் எதிரெதிர் அணியில் நின்று சுட வேண்டிய சந்தர்ப்பங்களும் வந்துள்ளன.

இந்த நூல் எழுதப் பட்ட 2004 ம் ஆண்டளவில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. (இந்த நூல் 2006 ம் ஆண்டு தாய்லாந்தில் வெளியிடப் பட்டுள்ளது.) அது பற்றிய விபரங்களும் வருகின்றன. அந்த நேரம் மியான்மர் ஜனநாயக வழிக்கு திரும்பும் அறிகுறிகள் தெரிந்த படியால், மேற்கத்திய நாடுகளும், NGO க்களும் மியான்மர் அரசை திருப்திப்படுத்துவதற்காக காரென் விடுதலை போராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டன.

NGO காரர்களின் இரட்டை வேடம் குறித்து காரென் மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து உள்ளூர் மனித உரிமைகள் நிறுவன ஆர்வலர் ஒருவர் நூலாசிரியருக்கு பின்வருமாறு கூறுகிறார்: "அவர்களுக்கு தேவையானதெல்லாம் எங்களது அவலக் கதைகள் தான். அவற்றை அறிக்கைகளாக எழுதி தமக்கென ஒதுக்கிய நிதியை செலவிடுகிறார்கள். ஆடம்பர ஹோட்டல்களில், உணவுவிடுதிகளில் கூட்டம் நடத்துகிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் எமக்கு உதவ வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் போகப் போக இவர்களது சுயரூபம் தெரிந்து விட்டது." அதே போன்று வருடமொருமுறை தலைகாட்டும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்க்கள சாகசக் காட்சிகளை நேரில் காண முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். ஒரு சிலர் போலி மோதல் காட்சிகளை, போலி மரணங்களை படமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அமெரிக்கா குறிப்பிட்ட அளவு காரென் அகதிகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. தாய்லாந்தில் உள்ள காரென் அகதிகள் UNHCR மூலம் அமெரிக்க தஞ்சக் கோரிக்கைக்கு விண்ணப்பித்தனர். பெரும்பாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், போன்ற அறிவுஜீவிகளை அமெரிக்கா அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்துக் கொண்டது. இது குறித்து காரென் அரசியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். காரென் பிரதேசத்தில் மருத்துவராக வேலை செய்தவர்கள் அமெரிக்காவுக்கு சென்று ரெஸ்டாரன்ட்களில் கோப்பை கழுவி பிழைக்கிறார்கள். அவர்களது தாயகத்தில் காரென் மக்களுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

நூலின் இறுதிப் பகுதியில் ஐ.நா.வில் வேலை செய்யும் இராஜதந்திரி உண்மையை போட்டுடைக்கிறார். எக்காரணம் கொண்டும் மியான்மர் பல துண்டுகளாக உடைவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. மியான்மர் ஒரே நாடாக இருந்தால் தொடர்புகளை பேணுவது இலகு என நினைக்கிறார்கள். காரென் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப் பட்டுள்ளனர். அன்று பிரித்தனியா, இன்று அமெரிக்கா. இரண்டு தடவையும் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் காரென் மக்களின் முதுகில் குத்தியுள்ளன. காரென் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இருந்து தமிழ் மக்களும் பாடம் படிக்க வேண்டும்.

Sunday, June 14, 2015

பௌத்த மதவெறி : சிறிலங்கா, மியான்மர் ஆட்சியாளரின் கம்யூனிச தடுப்பு மருந்து


  • இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், முன்னாள் ஐரோப்பிய காலனிகளாக இருந்த ஆசிய நாடுகள் சுதந்திரம் அடைந்து கொண்டிருந்த காலத்தில், அந்த நாடுகளில் "கம்யூனிச அபாயம்" பரவிக் கொண்டிருந்தது. சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நாடுகளுக்கிடையில் ஒரு முக்கியமான ஒற்றுமை இருந்தது. அவை எல்லாம் "பௌத்த நாடுகள்". அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள். 
  • இலங்கையும், பர்மாவும், அவற்றைப் போன்று, பௌத்த மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் தான். சிறிலங்கா, பர்மிய ஆட்சியாளர்களும், அந்தக் காலகட்டத்தில் கம்யூனிச பூதம் தமது நாடுகளிலும் வந்து விடும் என்று பீதியடைந்திருப்பார்கள். அதைத் தடுக்கும் நோக்கில், அவர்கள் பௌத்த மதவெறியை தூண்டி விட்டார்கள். அது பிற்காலத்தில், பௌத்தர் அல்லாத சிறுபான்மை இன மக்கள் மீது பாய்ந்தது வரலாறு.

ஒரு தடவை, நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்த நேரம், மியான்மார் (பர்மா) நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் சக தொழிலாளியாக வேலை செய்தான். அவன், மியான்மர் சிறுபான்மை இனங்களில் ஒன்றான, ஷின் பழங்குடி இனத்தை சேர்ந்த அகதி. ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான அகதிகள், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இளைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் விசாலமான உலகப்பார்வையும் அவனிடம் இருந்தது.

ஷின் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். பர்மிய மொழி பேசும் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்களாக இருந்த படியால், காலனிய காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஷின் போன்ற பழங்குடி சமூகங்களை மட்டுமே மதம் மாற்றி இருந்தனர். கிறிஸ்தவ மதத்துடன் மேலைத்தேய பண்பாடும் போதிக்கப் பட்டது என்பதை இங்கே கூறத் தேவையில்லை.

வேலை நேரங்களில் கிடைத்த இடைவேளைகளில், பர்மா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டோம். அப்போது நான், ரோஹிங்கியா முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி அவனது கருத்தை அறிய விரும்பினேன். அப்போது அவன் சொன்ன பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

//"அவர்கள் தம்மை தனியாக அடையாளப் படுத்திக் கொள்வதற்காக ரோஜிங்கியா (பர்மாவில் அப்படி அழைப்பார்கள்) என்று பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் வந்தேறுகுடிகள். ஒரு காலத்தில் பர்மிய பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. அப்போது பங்களாதேஷ் நாட்டில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி வந்தார்கள். அவர்கள் இப்போது தாங்கள் பர்மிய மண்ணின் மைந்தர்கள் என்று உரிமை கோருகிறார்கள்.

எமது நாட்டில் பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு ரோஹிங்கியா மக்கள் காரணமாக உள்ளனர். சில ரோஹிங்கியா இளைஞர்கள், பர்மிய இளம்பெண்களை பலாத்காரம் செய்த கொடுமை நடந்த பின்னர் தான், மக்கள் வெகுண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். அவர்கள் தமது தாய்நாடான பங்களாதேஷ்ஷுக்கு திரும்பிச் செல்வது நல்லது."//

நிச்சயமாக, மியான்மர் அரசு, அல்லது பெரும்பான்மை சமூகம் சார்ந்த ஊடகங்களின் பிரச்சாரம், அவனை அப்படி சொல்ல வைத்தது. மியான்மரில் ஒடுக்கப்படும் இன்னொரு சிறுபான்மை இனமான ஷின் மக்களிடமே, அப்படியான தவறான கருத்துக்கள் இருக்குமாகவிருந்தால், பெரும்பான்மை பர்மியர்களைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

அந்தக் கதைகளை கேட்கும் பொழுது, இலங்கையில் தமிழர்கள் பற்றி சிங்களவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்கள் தான் நினைவுக்கு வந்தன. இனப்பிரச்சினை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியான குணாம்சத்தை கொண்டுள்ளது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது. ஆயினும், இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது.

மியான்மரில் பல தசாப்த காலமாக இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. அப்போது அந்த நாட்டில், அனைவர் மீதும் ஒடுக்குமுறை பிரயோகிக்கப் பட்டது. ஆனால், அப்போது ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. பர்மிய- பௌத்த பேரினவாதிகள் அவர்களை இனப்படுகொலை செய்யவில்லை.

மியான்மர் ஜனநாயக நாடாக மாறிய பின்னர் தான், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் நடந்துள்ளன. இலங்கையும் மிக நீண்ட காலமாக மேலைத்தேய ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றி வரும் ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இனப்பிரச்சினை, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்பன, மேலைத்தேய ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகளில் மட்டுமே தீவிரமடைந்திருப்பதன் காரணம் என்ன? நம்மில் பலர் உணர்ந்து கொள்ளாத, மேலைத்தேய ஜனநாயகம் உற்பத்தி செய்யும் தீமைகளில் இதுவும் ஒன்று. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் "The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing"(by Michael Mann) என்ற நூலை வாசிக்கவும். 

அது என்னவோ தெரியவில்லை. நமது நண்பர்கள் சிலருக்கு, சோஷலிசம் என்ற சொல்லை எங்கே கண்டாலும் ஹிஸ்டீரியா வந்து விடுகின்றது. உடனே, "இந்தப் படுபாவிகள் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என்று திட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

அவர்கள் தமது முன்னோரின் கடந்த காலத்தை பற்றிக் கூட அறிந்திருக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், அவர்களின் பெற்றோரின் காலத்தில் கூட, சோஷலிசம் என்பது எதிர்க்கப் பட வேண்டிய தீமையாக கருதப் படவில்லை. மாறாக, பெரும்பான்மை பொது மக்களின் விருப்பத்திற்குரிய அரசியல் கொள்கையாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது.

முன்னர் ஒரு தடவை, "மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை, மேலைத்தேய ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் உருவான தீமை" என்று எழுதி விட்டேன்.  ஒரு நண்பர் அதைக் கண்டவுடனே, "மியான்மர் ஒரு காலத்தில் சோஷலிச நாடாகவிருந்தது தெரியுமா?" என்று கேட்டிருந்தார்.

நீங்கள் மியான்மர் பற்றி இணையத்தில் தேடினால், 1962 - 1988 காலப்பகுதியில் Burma Socialist Programme Party (BSPP) என்ற ஒரு கட்சி ஆட்சி முறை இருந்தது என்று எழுதப் பட்டிருக்கும். அந்தக் கட்சியின் சோஷலிச பொருளாதார திட்டங்கள் பற்றிய தகவல்களும் இருக்கும். அதை வைத்துக் கொண்டு, அன்றைய மியான்மர் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று சொல்ல முடியாது.

அன்றைய பர்மிய இராணுவ ஆட்சியாளர்கள், "நாஸ்திக" மார்க்சியத்தை நிராகரித்த, "பௌத்த - சோஷலிசம்" ஒன்றை நடைமுறைப் படுத்துவதாக சொல்லிக் கொண்டார்கள். அதே நேரம், உண்மையான சோஷலிசத்திற்காக பாடுபட்ட பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி (BCP) தலைமறைவாக இயங்கியது. இராணுவ ஆட்சியாளர்கள், பர்மிய கம்யூனிஸ்டுகளுடன் நீண்டதொரு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலகத்திற்கும், அன்றிருந்த உலகத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்று தெருவில் போவோர் வருவோர் எல்லாம், "ஜனநாயகம், திறந்த சந்தைப் பொருளாதாரம்" பற்றிப் பேசுவது மாதிரி, அன்றிருந்த மக்கள், அரசியல் தலைவர்கள் சோஷலிசம் பற்றிப் பேசினார்கள். அன்றைய காலங்களில், சோஷலிசம் பேசுவது தான் "பேஷன்". ஏனென்றால், அன்றிருந்த மக்களுக்கு சோஷலிசம் தான் விருப்பமாக இருந்தது.

இந்தியாவில் நேருவும் சோஷலிசம் பேசினார். இந்தியாவும் எண்பதுகள் வரையில் போலி- சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றி வந்தது. இலங்கையில் சிறிமாவோவின் காலத்திலும் போலி- சோஷலிச பொருளாதாரம் இருந்துள்ளது.

அதிகம் பேசுவானேன். நமது விடுதலைப் புலிகள் கூட, சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும் சொல்லிக் கொண்டார்கள். அதற்காக, வன்னியில் இருந்த de facto தமிழீழம் ஒரு சோஷலிச நாடாக இருந்தது என்று யாரும் சொல்வதில்லை.

எதற்காக அன்றைய காலங்களில் சோஷலிசம் பிரபலமான அரசியல் கொள்கையாக இருந்தது? முக்கியமான நோக்கம், காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும். அதனால், சோஷலிசப் பொருளாதாரம், காலனிய வல்லாதிக்கதிடம் இருந்து தம்மை முழுமையாக விடுதலை செய்யும் என்று நினைத்தார்கள்.

அன்றிருந்த அரசியல் தலைவர்களைப் பொருத்தவரையில், தேசியவாதமும், சோஷலிசமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த ஒரே மாதிரியான கொள்கைகளாக கருதப் பட்டன. சிலநேரம், எது தேசியவாதம், எது சோஷலிசம் என்று பிரித்தறிவது கடினமாக இருந்தது. 

இலங்கையில் பௌத்த மதம் அரச மதமாக பிரகடனப் படுத்தப் பட்டதும், பௌத்த மத வளர்ச்சிக்காக அரசு நிதி ஒதுக்குவதும், அதனால் "சிங்கள - பௌத்த மேலாதிக்கம்" நடைமுறை அரசியலானதும் அனைவரும் அறிந்ததே. இந்த விடயம் தொடர்பாக பலருக்குத் தெரியாத பக்கம் ஒன்றுள்ளது.

நாட்டில் உள்ள பௌத்தர் அல்லாத சிறுபான்மை இனங்கள், அல்லது சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, அரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்தது. சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் நோக்கில் பௌத்த மதவெறி வளர்க்கப் பட்டது என்றே பலரும் கருதுகின்றனர். உண்மையில் அது இரண்டாம் பட்ச காரணம் மட்டுமே. முதலாவது காரணம், பௌத்த மதவெறியை தூண்டி விட்டால், "கம்யூனிச அபாயத்தை" தடுத்து நிறுத்தலாம் என்று அரசு கணக்குப் போட்டது.

காலனிய காலத்திற்குப் பிந்திய காலகட்டத்தில், புதிதாக சுதந்திரமடைந்த நாடுகளில், கம்யூனிசமே முதலாவது எதிரியாகக் கருதப் பட்டது. இலங்கையிலும், இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு சவாலான மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வந்தன. குறிப்பாக பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில், கம்யூனிச அல்லது இடதுசாரி கொள்கைகள் வேரூன்றி பரவுவதை தடுப்பதற்கு, அரசு பல வழிகளிலும் முயன்றது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நிலைப்பாடு சிறந்த பலன்தரத் தக்கதாக அமைந்தது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் பர்மாவிலும், அதே நோக்கத்தோடு தான் பௌத்த மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டது. பௌத்த சங்கங்களுக்கு அரசு பெருமளவு நிதியை ஒதுக்கியது. இலங்கையில் நடப்பதைப் போன்று, அந்த நாட்டிலும் எல்லா இடங்களிலும் புதிது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்தன. அங்கேயும் இந்த நடவடிக்கை சிறுபான்மையின மக்களின் எழுச்சியை தூண்டி விட்டது.

பர்மாவில் சிறுபான்மை இனங்கள் மட்டுமல்லாது, பர்மிய கம்யூனிஸ்டுகளும் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக, பெரும்பான்மை பர்மிய மக்கள், கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கலாம் என்ற அச்சத்தில், அரசு பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தது. பெரும்பாலான புத்த பிக்குகள் கம்யூனிச எதிர்பாளர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

பர்மாவுக்கு அயல்நாடான சீனாவில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். அங்கிருந்து பர்மிய கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைத்து வந்தது. அது மட்டுமல்லாது, வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய, அயலில் உள்ள பிற நாடுகளிலும் கம்யூனிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருந்தனர்.

இன்றைய உலகில், பொதுவுடமைக் கோட்பாடுகளின் செல்வாக்கு குறைந்துள்ள நேரத்தில், அதைப் பற்றி யாரும் அக்கறைப் படுவதில்லை. ஆயினும், இலங்கையில் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய இன்றைக்கும் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வருகின்றது. சிங்கள - பௌத்த பேரினவாதிகள், தமிழர்களையும், முஸ்லிம்களையும் எந்தளவு வெறுக்கின்றனரோ, அதற்கும் மேலாகவே கம்யூனிஸ்டுகளை வெறுக்கிறார்கள். 

Thursday, July 19, 2012

மியான்மர் : உலகை உலுக்காத இன்னொரு இனச் சுத்திகரிப்பு

மியான்மர் தேச, வங்காளி மொழி பேசும் ரோஹிங்கியா இன மக்கள், இனச்சுத்திகரிப்பு செய்யப்படும் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருந்தது. "20000 க்கும் அதிகமான ரோஹிங்கியா வங்காளிகள் இனப்படுகொலை செய்யப் பட்டதாகவும், சர்வதேச ஊடகங்கள் மௌனம் சாதிப்பதாகவும்" அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாகவே சர்வதேச ஊடகங்கள், மேற்கத்திய நலன்களுக்கு எதிரான நாடொன்றின் பிரச்சினை என்றால் மட்டுமே கவனம் செலுத்துவதுண்டு. நோபல் பரிசு வென்ற ஆயுங் சங் சுகியின் பர்மாவில் என்ன நடக்கின்றது என்று அவர்கள் விசாரிக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் அவர்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றது.

மியான்மரின், பங்களாதேச எல்லையோர மாநிலமான அரகானில் வாழும் வங்காளி மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவை அல்ல. அங்கே ஏற்கனவே பல தடவைகள் இனக்கலவரங்கள் நடந்துள்ளன. சுமார் ஒரு மில்லியன் சனத்தொகையை மட்டுமே கொண்ட, மிகச் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள் கடந்த பத்தாண்டுகளாகவே பெருமளவில் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்கள் தாமாகவே விரும்பி வெளியேறினாலும், பலவந்தமாக வெளியேற்றப் பட்டாலும், இனச் சுத்திகரிப்பாகவே கருதப்பட வேண்டும். இதனை நிரூபிக்கும் காரணிகளை பின்னர் பார்ப்போம்.


இந்தியா மட்டுமல்ல, பர்மாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாகவிருந்தது. அதனால், நவீன தெற்காசிய தேசங்களின் எல்லைகள்  பிரிக்கப்பட்ட காலத்தில், வங்காள இனத்தவர்கள் பர்மா (இன்று:மியான்மர்) என்ற புதிய தேசத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவே பலரும் கருதுகின்றனர். வங்காளிகள் தொழில் தேடி, அல்லது வணிகம் செய்வதற்காக பர்மா வந்து தங்கி விட்டதாகவும், அதனால் அவர்கள் பர்மிய குடிமக்களாக கருதப்பட முடியாதென்றும் ஒரு வாதம் முன்வைக்கப் படுகின்றது. 

"தேசிய அரசுகளின் உருவாக்கம், இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம்," என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம். அதற்கு முன்னர், ஒருவர் எந்த தேசிய இனத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், "தேசியம்"என்ற வார்த்தையே அன்றைய மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஹிங்கிய வங்காளிகள், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள், மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய பகுதியை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் உரிமை கோரப்படுகின்றது. 

இந்த உரிமை கோரல்கள் பெரும்பாலும், "ரோஹிங்கிய தேசியவாதிகள்" மத்தியில் இருந்து தான் எழுகின்றது. "பூர்வீக தாயக பூமி" க்கு உரிமை கோரும், தேசியவாத கதையாடலுக்கு அப்பால், உண்மையை அலசுவது அவசியம். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில், பர்மிய மன்னனுடன் நடந்த போரில், சிட்டகாங் மலைப்பகுதி கைப்பற்றப் பட்டது. (அது இன்றைக்கும், வங்காளதேசத்தின் ஒரு பகுதியாக உள்ளது.) அதற்கப்பால், மொகலாய சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்டதாக வரலாற்றில் குறிப்பிடப் படவில்லை. 

ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் வங்காளிகளிடம் இருந்து மாறுபட்ட வட்டார மொழியை பேசுகின்றனர். அனேகமாக, மொகலாய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக புலம்பெயர்ந்த ஒரு பகுதியினர் பர்மாவில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. அதே நேரம், அரேபிய வணிகர்களின் வழித்தோன்றல்களும் பர்மிய பெண்களை மணந்து, அங்கேயே தங்கியிருக்கலாம். ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளுடனான அரேபியரின் வர்த்தகத் தொடர்பு நன்கு அறியப்பட்டது தான். ஆகவே, மேற்குறிப்பிட்ட பிரிவினர் எல்லாம் கலந்து ரோஹிங்கியா வங்காளிகளாக மாறியிருக்கலாம். 

மேலும், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், "தேசிய எல்லைகளை சரி சமமாக பிரிப்பதில் கெட்டிக்காரர்கள்". தமது முன்னாள் காலனிகளில், தேசிய இனப்பிரச்சினைகள் என்றைக்கும் தீரக் கூடாது என்ற தீர்க்க தரிசனத்துடன், ஒரே தேசிய இனத்தை பிரித்து எல்லைக்கோடு வரைவதில் கெட்டிக்காரர்கள். ஆகவே, பிற்காலத்தில் பிரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகளின் காரணமாக, வங்காள மொழி பேசும் இனத்தவர்கள் பர்மா என்ற புதிய தேசத்திற்குள் அடங்கி இருப்பார்கள். 

ஒரு தேசிய இனம், தனது பூர்வீக தாயக பூமிக்கு உரிமை கோருவதை விட, அந்த இனத்தின் இருப்பை பாதுகாப்பதே முக்கியமானது. ஆகையினால், காலனிய ஆட்சியில் இருந்து சுதந்திரமடைந்த பர்மாவின் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா வங்காளிகள், ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்.

உலகில் சில இனங்கள், "நாடற்றவர்கள்" என்ற வகைக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஏற்கனவே நமது தமிழ்த் தேசியவாதிகள், "நாடற்றவர்கள்" என்ற சொல்லுக்கு, "தேசிய அரசு அற்றவர்கள்" என்றொரு அர்த்தத்தை பரப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும்,  நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு. உதாரணத்திற்கு, பாலஸ்தீன மக்களுக்கு, இஸ்ரேலோ, அல்லது ஜோர்டானோ குடியுரிமை வழங்கவில்லை. எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், பாஸ்போர்ட் எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.

ஐ.நா., பாலஸ்தீனர்களை நாடற்றவர்களாக அங்கீகரித்துள்ளதால், ஒரு சில தீர்வுகள் காணப்பட்டன. வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடிகின்றது. ஆனால், ரோஹிங்கியா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. 

மேற்கத்திய நாடுகளினால் மதிக்கப்படும் அவுங் சங் சுகி கூட, ரோஹிங்கிய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார். இனவெறிக் காடையரினால், அப்பாவி வங்காளிகள் கொல்லப்பட்டதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. ரோஹிங்கியா வங்காளிகளும், சமமான மனிதர்களாக மதிக்கப் பட வேண்டும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்கவில்லை.

பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982 ம் ஆண்டு, ரோஹிங்கிய வங்காளிகளின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது. இன்றைக்கு, ஜனநாயக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவுங் சங் சுகி கூட, பறிக்கப்பட்ட குடியுரிமையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பர்மிய இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய, ஜனநாயகப் போராளிகள் கூட, "வங்காளிகள் பங்களாதேஷுக்கு  திரும்பிச் செல்ல வேண்டும்" என்று பேசி வருகின்றனர். 

இவர்களே இப்படிப் பேசினால், தீவிர வலதுசாரி தேசியவாதிகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. "மியான்மரின் அரசியல் பிரச்சினைகள் எல்லாம் ஒரு நாளைக்கு தீர்ந்து விடும். அதன் பிறகு நாம் ஒன்று பட்டு, (ரோஹிங்கியா) வங்காளிகளை வெளியேற்றுவோம்." என்று இணையத் தளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், மியான்மரின் அனைத்துப் பிரஜைகளும் இராணுவ சர்வாதிகார அடக்குமுறையினால் துன்பப் பட்டார்கள். இப்பொழுது, ஜனநாயக ஆட்சியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். ஆசிய நாடுகளில், ஜனநாயகம் என்றால், மக்களுக்கு பேரினவாத வெறியை ஊட்டித் தான் ஆட்சி நடத்த வேண்டும் என்பது எழுதப்படாத விதி போலும்.

ஜூன் மாதம், 27 வயது ஒரு ராகின் பௌத்த பெண் ஒருவர் ,  பாலியல் வன்புணர்ச்சிக்கு பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றச் செயல் ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கி விட்டுள்ளது. குற்றவாளிகளான மூன்று வங்காள முஸ்லிம்கள் பின்னர் கண்டுபிடிக்கப் பட்டு தண்டிக்கப்பட்டாலும்,ராகின் மக்கள் மத்தியில்,வங்காளி முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறியூட்டும் பிரச்சாரம் நடந்தது. ஒரு குற்றச் செயலுக்காக, அனைத்து வங்காளிகளையும் பழிவாங்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன. 

வங்காளிகளை குறிக்கும் வசைச் சொல்லான "காலர்கள்" (Kaler - கருப்பர்கள்) என்று குறிப்பிட்டு, "மியான்மரை விட்டு காலர்கள் வெளியேற்றப்பட வேண்டும்" என்று ராகின் மக்களை உசுப்பி விட்டன.ராகின் இன மக்கள், பர்மிய மொழி போன்ற, ஆனால் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இந்து மதத்தையும், பின்னர் பௌத்த மதத்தையும் பின்பற்றிய திபெத்தோ-இந்திய இன மக்கள். பண்டைய இந்து புராணங்களில் "ராட்சதர்கள்" என்று குறிப்பிடப்பட்டனர். அதிலிருந்து இன்றைய ராகின், அரகான் என்ற சொற்கள் தோன்றின.

ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்து கொண்டிருந்த,தொண்டு நிறுவனமான Altsean அனுப்பி வைத்த செய்தி, நிலைமை எவ்வளவு மோசமானது என்று தெரிவிக்கின்றது.
"இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது."  - Debbie Stothard , Alternative ASEAN-netwerk for Birma (Altsean)

ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர். 2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது. மியான்மர் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது. ஆனால், அது வங்காளிகளை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. வங்காளிகளை வேட்டையாடிய, ராகின் இனவெறிக் காடையர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. பல வீடுகளில், வங்காளிகளின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது. பொலிசும், இராணுவமும் அதற்கு ஒத்துழைத்தன.

"பௌத்த பிக்குகள் கை காட்டிய திசையில், வங்காளிகள் கொன்று குவிக்கப்பட்டதாக" வந்த செய்தியை ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. பௌத்த பிக்குகளும் நேரடியாக வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  மொத்தம் எத்தனை வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. சுயாதீனமான ஊடகங்கள், 500 க்கும் 1000 க்கும் இடையில் கணக்குச் சொல்கின்றன. புலம்பெயர்ந்த ரோஹிங்கியா தேசியவாத ஆர்வலர்கள் 20000 பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அது ஒரு மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையாகவும் இருக்கலாம். 

உலகில் ஒவ்வொரு தேசிய இனமும், தமது இனத்தவர்கள் பாதிக்கப் படும் பொழுது மிகைப் படுத்திக் கூறுவது வழக்கம். அதனாலும், சர்வதேச ஊடகங்கள் அங்கு நடக்கும் இனப்படுகொலையை புறக்கணித்திருக்கலாம். இரண்டொரு வருடங்களுக்குப் பின்னர், ஐ.நா. விசாரணைக் குழு ஒன்றை நியமித்த பின்னர் தான் அதை எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் போலும். ஈழத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுதும் இதே போன்ற நிலைமை காணப்பட்டது.

வங்காள இன மக்கள் வாழும் அரகான் மாநிலப் பிரதேசம், இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. வங்காளிகளின் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே பௌத்த-பர்மியர்கள் குடியேற்றப் படுகின்றனர். ரோஹிங்கியா வங்காளிகள், இராணுவத்தினரால் கட்டாய வேலை வாங்கப் படுகின்றனர். பாதைகள் செப்பனிடவும், பாலங்கள் போடவும், வேறு பல கட்டுமானப் பணிகளிலும், வங்காளி அடிமை உழைப்பாளிகள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இராணுவத்தினரால்  வங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும் அடிக்கடி நடக்கிறது. 

ரோஹிங்கியா வங்காளிகளுக்கு குடியுரிமை இல்லாத படியால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது. உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை. திருமணம் செய்ய விரும்பும் வங்காளிகள் எல்லைக்காவல் படை அலுவலகம் உட்பட, நான்கு இடங்களில் அனுமதிப் பத்திரம் பெற வேண்டும். அது கிடைப்பது இலகுவானதல்ல. திருமணம் செய்யாமல், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமாகும். ஒரு இளம்பெண் அவ்வாறு சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமடைந்த பின்னர் தெரிய வந்ததால், அவர்கள் வீட்டில் இருந்த கால்நடைகளையும், பிற சொத்துகளையும் இராணுவத்தினர் அபகரித்து சென்று விட்டனர்.

கடந்த பத்தாண்டுகளாகவே, ரோஹிங்கியா வங்காளிகள், மியான்மரை விட்டு வெளியேறி வருகின்றனர். குறைந்தது மூன்று இலட்சம் பேராவது புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பெருந்தொகை அகதிகள், அயல்நாடான ஒரே மொழி பேசும் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். மியான்மர்-பங்களாதேஷ் எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லையை ஒரு ஆறு பிரிக்கின்றது. அகதிகள், சிறு எண்ணிக்கையில் வள்ளங்களில் எல்லை தாண்டுகின்றனர். பங்களாதேஷிலும் அவர்களுக்கு வரவேற்பில்லை. 

1996 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரோஹிங்கியா பங்களாதேஷில் தங்கி இருந்தனர். சில வருடங்களுக்குப் பின்னர், பங்களாதேஷ் அரசு அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பியது. இப்பொழுதும் தஞ்சம் கோரி வரும் ரோஹிங்கியா அகதிகளை, பங்களாதேஷ் எல்லைக் காவல் படை தடுத்து திருப்பி அனுப்புகிறது. அவர்களுக்கு தஞ்சமளிக்க வேண்டாம் என்று எல்லையோர கிராம மக்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். 

பங்களாதேஷ் மக்களில் ஒரு பகுதியினர் கூட, ரோஹிங்கியா அகதிகளை வெறுக்கின்றனர். மியான்மரில் வங்காளி சிறுபான்மையினர் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி, பங்களாதேஷ் மக்கள் அதிகமாக கேள்விப் பட்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையை, தமிழக இனவாதக் குழுக்கள் எப்படிக் கையாளுகின்றனவோ, அதே போன்று தான் பங்களாதேஷை சேர்ந்த இஸ்லாமிய மதவாதக் குழுக்கள் நடந்து கொள்கின்றன.

வதந்திகள், திரிபுபடுத்தல், இவற்றை தவிர்த்து விட்டு, உண்மையை கண்டறிவது கடினமான பணியாகும். பல சமயங்களில், பலருக்கு உண்மை அறிவதில் ஆர்வம் இருப்பதில்லை. படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்கிய வங்காளிகளின் எண்ணிக்கை 20000 க்கும் குறைவாக இருக்கலாம். பங்களாதேஷுக்கு அகதியாக சென்றவர்களின் எண்ணிக்கையையும்  சேர்த்து, படுகொலையானவர்கள் என்று கூறி இருக்கலாம். ஆனால், எது சரி? அதை எப்படி உறுதிப்படுத்துவது? ரோஹிங்கியா மக்களின் இனப்படுகொலை பற்றி, பாகிஸ்தானை மையமாகக் கொண்டியங்கும் அமைப்புகள் மிகப் படுத்தப்பட்ட பிரச்சாரம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.பாகிஸ்தான் மட்டுமல்ல, வளைகுடா அரபு நாடுகள், பிரிட்டனில் இருந்து இந்த பிரச்சார வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

புலம்பெயர்ந்த ரோஹிங்கியா வங்காளிகள், பங்களாதேஷ் இஸ்லாமியவாதிகள், மற்றும் பன்னாட்டு இஸ்லாமிய -சர்வதேசியவாதிகள், இதனை ஒரு "முஸ்லிம் இனப்படுகொலையாக" சித்தரித்து, சர்வதேச அளவில் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அணுகுமுறை, தமிழக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்களின் போராட்ட  முறையை பெரிதும் ஒத்திருக்கின்றது. 

இனவாதம், மதவாதம் முக்கியமாக கருதப்படும் இன்றைய உலகில், ஒரு பிரச்சினை பல மாறுபட்ட பரிணாமங்களை அடைகின்றது. ரோஹிங்கியா வங்காளிகளும், மியான்மார், பங்களாதேஷுக்கு இடையிலான சர்வதேச முரண்பாடாக மாற்றமடைகின்றது. ஆயிரம் வருடங்களுக்கு முந்திய மதப்போர் வரலாற்றின் தொடர்ச்சியாக இதனை மாற்ற எத்தனிக்கின்றனர். பர்மாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையிலான மத முரண்பாடு பற்றி, வேறொரு கட்டுரையில் பார்ப்போம்.


மேலதிக தகவல்களுக்கு:
1.Burma: Why Such Silence Over Muslim Genocide?
2.Ethnic Cleansing in Myanmar
3.Ethnic violence mars transition to democracy for Rohingya in Burma
4.'De Burmese Rohingya's worden langzaam weggezuiverd'
5.Arakan Journal
6.மியான்மர்: கலவரமும் நிலவரமும்
7.பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!

------------------------------------------------------------------------------------
மியான்மர் பற்றிய முந்திய பதிவுகள்:

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

Saturday, May 31, 2008

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

மியான்மரில் (ஆங்கிலேயர் இட்ட பெயர்: பர்மா) அடித்த புயல் ஓய்ந்தாலும், அதன் பிறகான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு நர்கீஸ் சூறாவளி பர்மாவின் நெல்விளையும் ஐராவதி ஆற்றுமுகப் பகுதியை தாக்கியதில் பல லட்சம் மக்கள் இறந்து, லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளான துயரச்சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளே, உதவி நிறுவனங்களின் நிவாரணப்பணிகள் ஆரம்பமாகி விட்டன. அள்ளிக்கொடுக்கும் ஐரோப்பியரின் நாடுகளில், மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேர்க்கும் பணி தீவிரமடைந்தது. சில நாட்களின் பின்னர், உதவி நிறுவனங்களும், அவை சார்ந்த நாடுகளும், அரசியல் சிக்கல்களில் மாட்டிக்கொண்டனர். மியான்மரை ஆளும் இராணுவ அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், தன்னார்வ தொண்டர்களை நாட்டினுள் பிரவேசிக்க விடாது தடுப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. இவை ஆரம்பத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், பின்னர் ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் முன் வைக்கப்பட்டன, பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரௌன், பர்மிய அரசு உதவிப்பொருட்கள் மக்களை போய் சேர விடாது தடுப்பதன் மூலம், பல ஆயிரம் உயிர்களை காவு கொள்கின்றது என்றும், இயற்கை அழித்தது போக, இப்போது மனிதனால் அழிவு உண்டாகிறது என்று பொருமினார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரோ, அதற்கும் மேலே போய், பர்மிய அரசு உதவிப்பொருட்களை ஏற்க மறுத்ததால், இதுவரை பத்தாயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்குலக சார்பு ஊடகங்களின் செய்திகளை பார்த்து வரும் ஒருவர் பின்வரும் முடிவுகளுக்கு வருவார். மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த நான்கு வாரங்களாக இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மக்கள் விரோத பர்மிய அரசு, அவசர தேவை இருந்த போதும், உதவிப்பொருட்களை வேண்டாம் என்று தடுத்து வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், இயற்கையால் பாதிக்கப்பட்டது போக, தற்போது அரசினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அப்படியே இருக்கட்டும். அத்தகைய செய்திகள் எல்லாம் உண்மையா? இதிலே ஓரளவு தான் உண்மை. பர்மிய இராணுவ அரசு நிவாரணப்பொருட்களை ஏற்க மறுப்பதும், பன்னாட்டு தொண்டர்களுக்கு விசா கொடுக்க மறுப்பதும் உண்மை தான். ஆனால் இந்த கெடுபிடி மேற்கு-ஐரோப்பா, மற்றும் அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டும் தான். சீனா, இந்தியா, மற்றைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் நிவராணப்பொருட்களுக்கும், தொண்டர்களுக்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் இது பற்றி மேற்குலகை சேர்ந்த எந்த ஊடகமும் கூறவில்லை. பல நாட்கள் நெருக்கடி கொடுத்த பின்னர், அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டும் நிவாரணப்பொருட்களை இறக்கி விட்டு செல்ல அனுமதித்தார்கள். அதே நேரம், எந்தவொரு அமெரிக்க தொண்டரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் கோபம் அதையிட்டு வந்தது தான்.

மேற்குலக தொண்டர்களை நாட்டினும் அனுமதிப்பதற்கு மியன்மார் அரசிற்கு என்ன பிரச்சினை? பல ஆண்டுகளாக மேற்குலகத்துடன் மிகக்குறைந்த அளவு உறவு வைத்திருந்த பர்மிய அரசு, "உதவி நிறுவன தொண்டர்கள்" என்ற போர்வையில் உளவாளிகள் வரலாம் என்று அஞ்சுகின்றது. தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது, பிற நாடுகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் கடந்த வருடம் தான், பெற்றோலின் விலை உயர்வை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்திற்கு, சக்தி வாய்ந்த பௌத்த பிக்குகள் தலைமை தாங்கியதை, பர்மிய அரசுக்கு எதிரான மதகுருக்களின் எழுச்சி என்று மேற்குலக ஊடகங்களும், அரசுகளும் சித்தரித்து வந்தன. ஏற்கனவே நூலிழையில் இருந்த மேற்குலக உறவு மிக மோசமான கட்டத்தை அடைந்தது. அப்போதெல்லாம் வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க தடை இருந்தது. ஆனால் தற்போது சூறாவளி ஏற்படுத்திய இயற்கை அழிவு அளவு கடந்ததாக உள்ளதால், சமாளிக்க முடியாத அரசு, வேறு வழியின்றி வெளியுலக தொடர்பினால் கிடைக்கும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கனவே தமது நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கலாம், தம்மை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சம் காரணமாகத் தான், மியன்மாரின் இராணுவ அரசு நாட்டின் தலைநகரை கடலை அண்டிய ரங்கூனில் இருந்து, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புதிதாக கட்டப்பட்ட "நய்பிடவ்" என்ற இடத்திற்கு மாற்றினார்கள். புதிய தலைநகரத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்பாக இருக்க நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டவர் நுழைய முடியாத மர்ம நகரான நியபிடவின் நிர்மாணம் ஓரிரு நம்பகமான ஆசிய கட்டுமான நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. மியன்மார் இராணுவ அரசு ஜோதிடத்திலும், எண் சாஸ்திரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. இலக்கம் 9 அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணாம். அதனால் தலைநகரின் பெயர் 9 ல் வரக்கூடியதாக வைத்திருக்கிறார்கள்.

சீனாவுடனான பொருளாதார உறவுகள், பர்மிய இராணுவ அரசின் நிலையான இருப்பிற்கு வழிவகுப்பது இரகசியமல்ல. கணிசமான மனிதஉரிமை மீறல்களை புரியும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு சீனா வழங்கும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலகம் கோரி வருகின்றது, அல்லது அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது. உண்மையில் எல்லாமே பொருளாதாரத்தை நோக்கி தான் நகர்கின்றன. மியன்மார் இதுவரை அளவிடப்படாத, இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "ரங்கூன் பெற்றோலிய நிறுவனம்" தற்போது இராணுவ அரசின் கையில். அந்நாட்டின் எண்ணை தற்போது சீனாவிற்கு ஏற்றுமதியாகின்றது. பர்மாவின் எண்ணை மட்டுமல்ல, நிலகீழ் வாயுவின் இருப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
உலகின் எரிபொருள் வளங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கம் கொண்ட அமெரிக்கா, பர்மா மீது கண் வைப்பதும் அதனால் தான். ஆனால் ஆசிய வல்லரசான சீனா, பர்மாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதன் காரணமாக, அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுவது எளிதன்று. இதனால் மனித உரிமை மீறல்களை காட்டி பிரச்சாரம் செய்து சர்வதேச ஆதரவை திரட்டி வருகின்றது. அதைபோலத்தான் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி, புதிய வாய்ப்புகளை வழங்கும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. உண்மையில் அமெரிக்காவிற்கு பர்மிய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. பர்மிய பொருளாதாரம் மீது உள்ள அக்கறை வேறு வடிவத்தில் வெளிப்படுகின்றது. தனது வீட்டை பார்க்காதவன், ஊருக்கு தொண்டு செய்வது போலத்தான் அமெரிக்க அரசின் நிலைப்பாடு. இரு வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க மாநிலமான நியூ ஒர்லின்சை சூறாவளி தாக்கிய பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, பாராமுகமாக இருந்த அரசின் செயல் பலரது கண்டனத்திற்குள்ளானது. அப்போதும் கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்களையும், தொண்டர்களையும் (அரசியல் காரணங்களுக்காக) ஏற்க மறுத்தது அமெரிக்க அரசு.

_________________________________________