Sunday, August 06, 2023

ஈழப்போரில் "உரிமை கோரப் படாத" குண்டுவெடிப்புகள்!

ஈழப்போர் தொடங்கிய காலங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகரில் வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தியது புலிகள் அல்ல. அது ஈழப் புரட்சி அமைப்பு(EROS) எனும் இன்னொரு இயக்கம். 1984 ம் ஆண்டு ஒபரோய் ஹொட்டேல் தொடங்கி பல குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள். அவை யாவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். கொழும்பு மத்திய தபால் நிலைய குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட அளவு பொது மக்களும் பலியாகி இருந்த போதிலும், EROS தான் செய்த எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பேற்று உரிமை கோரி வந்தது. 


அப்போது புலிகள் இது போன்ற தாக்குதல்களை முற்றாக நிராகரித்து வந்தனர். "நீங்கள் இலங்கை முழுவதையும் தறிழீழமாக கேட்கிறீர்களா?" என்று கிண்டல் அடித்தார்கள். அந்த காலகட்டத்தில் இயக்கங்களுக்கு ஏதாவதொரு திரைப்படத்தின் பெயர் பட்டப்பெயராக வைக்கப் பட்டது. அவ்வாறு EROS இயக்கத்தை "தூரத்து இடிமுழக்கம்" என்று அழைத்தனர். அதாவது தமிழ் மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அதே நேரம் எந்த பாதிப்பும் இல்லாத இடத்தில் யுத்தம் செய்கிறார்களாம். அதை அன்று புலிகளும் வழிமொழிந்தனர்.
 

பல வருடங்களுக்கு பின்னர், குறிப்பாக 1991 இலிருந்து புலிகளும் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடத்த தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடவை 1987 ம் ஆண்டு கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் குண்டு வெடித்தது. பொது மக்கள் 100 பேரளவில் பலியாகினர். அன்று யாரும் அந்த குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை. இருப்பினும் அதை புலிகளே செய்ததாக நம்பப் படுகிறது. EROS தான் செய்யவில்லை என்று உடனடியாக மறுத்திருந்தது. 1987 ம் ஆண்டு வடக்கில் பிற இயக்கங்களை தடைசெய்து விட்டு புலிகள் மட்டுமே போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். EROS மீது தடை இல்லாத போதிலும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை வெகுவாக குறைத்து விட்டிருந்தனர்.

No comments: