Sunday, May 20, 2018

பெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்!


பெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வந்தனர். அங்கு பல நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நேற்றைய தினம் கலவரத்தில் முடிந்தது. ஆறு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ரூசெலாரே (Roeselare) எனும் சிறு நகரத்தில் வாழ்ந்து வந்த, கினே நாட்டை சேர்ந்த குடியேறியான Moïse ‘Lamine’ Bangoura என்ற 27 வயது இளைஞர், நீண்ட காலம் வாடகை பாக்கி வைத்திருந்தார். மே 7 அன்று, கடன் அறவிடும் நிறுவனம் பொலிஸ் உதவியுடன் சம்பந்தப் பட்ட நபரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

வாடகை கட்டத் தவறியதை தவிர வேறெந்த குற்றமும் செய்திராத அந்த இளைஞன், தெருவில் பொலிஸ் விலங்கு மாட்டி வைத்திருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர் "திடீர் சுகயீனம்" காரணமாக இறந்ததாக பொலிஸ் கூறுகின்றது. ஆனால், கண்டபடி அடித்த பொலிஸ் அத்துமீறல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என உறவினர்களும், நண்பர்களும் நம்புகின்றனர். 

பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகள், "பொலிஸ் தாக்குதலுக்கான ஆதாரம் இல்லை" என்று தெரிவித்தனர். இருப்பினும், உறவினர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இறந்த இளைஞனின் உடலில் எலும்பு முறிவுகளும், இரத்தக் காயங்களும் காணப் பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த மரணத்தை துயரத்துடன் நினைவுகூர்ந்த ரூசலாரே நகர வாசிகள், அமைதியான முறையில் வீட்டு வாசலில் மலர் வளையம் சாத்தி மெழுகுதிரி கொளுத்தி வந்தனர். இந்த அமைதி வழிப் போராட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. நேற்றைய தினம் (மே 19), கினே இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டது. சுமார் 350 பேர் வந்திருந்த ஆர்ப்பாட்டத்தில், ஆப்பிரிக்க குடியேறிகள் மட்டுமல்லாது, வெள்ளையின பெல்ஜிய மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், ஒரு கட்டத்தில் கைமீறிப் போனது. சில ஆர்ப்பாட்டக்காரர்கள், வழியை மறித்து நின்ற பொலிஸ்காரர்கள் மீது கற்களை வீசினார்கள். அது கலவரத்தில் முடிந்தது. பொலிஸ் அருகில் நின்று கல் வீசிய காரணத்திற்காக ஒருவர் மீது "கொலை முயற்சி" குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், சாதாரண வீட்டு வாடகை சராசரி வருமானத்தில் அரைவாசியை பிடிக்கிறது. குறைந்த அளவு வருமானம் ஈட்டுவோருக்கு இது ஒரு பெரிய தொகை. மாதாந்த செலவை ஈடுகட்ட முடியாமல் வாடகை கட்டத் தவறுவோர் பலருண்டு.

இரண்டு, மூன்று மாதங்கள் வாடகை கட்டத் தவறினால், Incasso எனப்படும் கடன் அறவிடும் நிறுவனம் மொத்த வாடகைத் தொகையுடன், மேலதிகமாக வட்டி, குட்டி போட்டு கடிதங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கும் கட்டத் தவறினால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவார்கள்.

நீதிமன்றப் படி ஏறினாலும், நீதிபதி ஏழைகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை. மேலதிகமாக நீதிமன்ற செலவையும் சேர்த்துக் கட்டச் சொல்லி தீர்ப்பு வரும். நீதிமன்ற உத்தரவுடன், போலீசாரையும் கூட்டிக் கொண்டு வரும் incasso நிறுவனம், வாடகை கட்டத் தவறியவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு, அவரது வீட்டில் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்யும். அதற்குப் பிறகு அவர் தெருவில் தான் படுக்க வேண்டும். இது மேற்கு ஐரோப்பாவில் பல இடங்களில் நடக்கிறது.

மேலதிக தகவல்களுக்கு: 
ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
Mars voor overleden Lamine lokt 350 deelnemers, heethoofden richten na afloop vernielingen aan

Tuesday, May 15, 2018

ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்!

ஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள இந்த அறிவிப்பு, ஒரு சாமானிய இந்தியக் குடிமகன் மீதும் தாக்கத்தை உண்டாக்க வல்லது. அத்துடன் மத்திய கிழக்கில் வரப்போகும் போர்களுக்கு கட்டியம் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அதிக அக்கறை செலுத்தாத சர்வதேச அரசியல் நிலவரம், எந்தளவு தூரம் நமது தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி படைத்தது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை.

டிரம்பின் திடீர் அறிவிப்புக்கு முதலில் எதிர்வினையாற்றியது பங்குச்சந்தை வர்த்தகம் தான். இதனால் எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் விளைவாக பெட்ரோல் மட்டுமல்லாது அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப் படவுள்ளன. ஏனெனில், 2015 ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பின்னர் ஈரான் மீதான பொருளாதாரத் தடை விலக்கப் பட்ட பின்னர், ஆசிய நாடுகள் தான் ஈரானிய எண்ணையை வாங்கி வந்தன.

இலங்கையில் இரவோடிரவாக எரிபொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டார்கள். அமைச்சர் மங்கள சமரவீர, டெய்லி மிரர் பத்திரிகை பெட்டியில், விலை உயர்வுக்கு ஈரான் பிரச்சினையை காரணமாகக் காட்டி இருந்தார். இருப்பினும், உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும், சர்வதேச பிரச்சினைகளுக்கும் தொடர்பிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில், முதலாளிய "அரசியல் ஆய்வாளர்கள்" மிகவும் அவதானமாக உள்ளனர். அவர்கள் "மைத்திரி அரசா, மகிந்த அரசா சிறந்தது?" என்று பட்டிமன்றம் நடத்தி மக்களின் கவனத்தை திசைதிருப்பினார்கள்.

உண்மையில், ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் தனியே அமெரிக்காவுடன் மட்டும் கைச்சாத்திடப் படவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் ஐந்து அணுவாயுத வல்லரசு நாடுகளுடன், ஜெர்மனியும் சேர்ந்து ஒப்பந்தம் போட்டிருந்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்,ஈரானின் பரம வைரிகளான இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் ஆரம்பத்தில் இருந்தே ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தன. அன்றிருந்த ஒபாமா நிர்வாகம், கடும்போக்காளர்களை ஓரங் கட்டி விட்டு ஒப்பந்தம் போட்டது.

டிரம்பின் ஒருதலைப்பட்சமான விலகலை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள், முடிவை மறுபரிசீலனைக்கு எடுக்குமாறும், புதிய ஒப்பந்தம் போடுமாறும் கேட்டு வருகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் எதிர்ப்பதற்கு காரணம், அந்நாடுகளின் வர்த்தக நலன்கள் என்று அமெரிக்க ஆதரவாளர்கள் வாதாடலாம். உண்மை தான். யாருக்கு தான் நலன்கள் இல்லை? அமெரிக்கா பொதுநலன் கருதி, உலகை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் செயற்படுவதாக சொன்னால், அது நகைப்புக்குரியது.

முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.

ஒப்பந்த விலகலைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் படுவதாக அறிவித்துள்ள டிரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு நிறுவனங்கள் ஈரானை விட்டு வெளியேறுவதற்கு மூன்று மாத தவணை கொடுத்துள்ளது. இதனால், எண்ணை ஏற்றுமதி மட்டுமல்லாது, அலுமினியம், இரும்பு, நிலக்கரி தொடர்பான வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப் படும். பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களுக்கான நிறுவனங்களுக்கு மட்டும் 180 நாட்கள் தவணை கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே ஈரானுடனான அமெரிக்க வர்த்தகம் மிகவும் அரிது என்பதால், டிரம்பின் முடிவால் அமெரிக்க வர்த்தகர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.

ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஈரானுடன் நெருங்கிய வர்த்தகத் தொடர்புகளை பேணி வருகின்றன. அதனால், அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் ஐரோப்பாவும் பாதிக்கப் படுகின்றது என்பது நிச்சயம். உலக சந்தையில் அமெரிக்காவுடன் போட்டி போடுவது எந்தளவு கடினமானது என்பது ஐரோப்பிய முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்காவின் நிழல் கூடப் படாத ஈரானில், ஏராளமான வணிக வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன. ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள், அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. இது அவர்களுக்கு கிடைத்துள்ள அருமையான சந்தர்ப்பம். அதை இலகுவில் இழக்க விரும்ப மாட்டார்கள்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா ஈராக் போரைத் தொடர்ந்து, ஈரான் மீது போர் தொடுக்கலாம் என எதிர்பார்க்கப் பட்டது. ஏற்கனவே, அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் ஈரானை சுற்றி வளைத்திருந்தன. இருப்பினும், அமெரிக்கா ஆழமறியாமல் காலை விட விரும்பவில்லை. அதனால், அரை மனதுடன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதன் விளைவு தான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம். இதனால் ஈரான் மீண்டும் சுதந்திரமாக சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்ய முடிந்தது.

தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுக்குப் பின்னால் இஸ்ரேலின் நெருக்குவாரம் உள்ளது. சிரியாப் போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஈரான் இரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு அறிவித்து வந்தார். அந்த நேரத்தில், அதை வெறும் இஸ்ரேலிய பிரச்சாரமாகக் கருதி, யாரும் பொருட்படுத்தவில்லை.

ஈரானில் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதை கண்காணித்துக் கொண்டிருக்கும் IAEA என்ற சர்வதேச அணு சக்தி முகாமைத்துவ நிறுவனம் அதை மறுத்துள்ளது. ஏற்கனவே ஈரானிய அணு உலைகளில் இருந்த யுரேனியம் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப் பட்டு விட்டது. ஐ.நா. மன்றம் வரை சென்று படம் காட்டி பயமுறுத்திய, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகுவின் குற்றச்சாட்டு எந்த விதமான ஆதாரமும் இல்லாத ஒரு அவதூறுப் பிரச்சாரம்.

இஸ்ரேலின் குற்றச்சாட்டை உலகில் யாரும் நம்பாவிட்டாலும், தான் அதை நம்புவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது, ஈரான் இரகசியமாக அணுவாயுதம் வைத்திருக்கிறது என்ற ஒரேயொரு காரணத்தை சொல்லித் தான், ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டுள்ளது. இது முன்பு சதாம் ஹுசைன் பேரழிவு தரும் ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய் கூறி ஈராக் மீது படையெடுத்த வரலாற்றை நினைவுபடுத்துகிறது. இது மீண்டும் மத்திய கிழக்கின் மீது போர் மேகங்கள் சூளுகின்றன என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்காவில் டிரம்ப் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இஸ்ரேல் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு ஈரானிய படையினர் வசமிருந்த ஆயுதக் கிடங்கு தாக்கப் பட்டதாகவும், சில ஈரானியரும் கொல்லப் பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிய அரசு அதை மறுத்திருந்தது. சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியமை அதுவே முதல் தடவை அல்ல. ஆகையினால், இந்தத் தடவையாவது இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானிய அரசியல் களத்தில் விவாதிக்கப் பட்டது.

கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த சிரியாவின் உள்நாட்டுப் போர் தற்போது பிராந்தியப் போராக மாறியுள்ளது. ஒருவேளை இது மூன்றாம் உலகப் போராகவும் இருக்கலாம். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே, அது ஈரானுக்கு வைக்கப் பட்டுள்ள குறி என்பது பலருக்கும் தெரிந்திருந்தது. குறிப்பாக, ஈரானிய இராணுவ ஆலோசகர்களும், லெபனானிய ஹிஸ்புல்லா தொண்டர்களும், சிரியாப் போரில் தலையிடுவதற்கு அதுவே காரணமாக இருந்தது.

போரின் முடிவில் சிரியாவை ஆளும் ஆசாத் அரசு கவிழும் என்றும், ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் வெற்றிவாகை சூடுவார்கள் என்றும், இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான விடயங்கள் நடந்தேறின. ரஷ்யாவின் வருகை ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கிளர்ச்சிக் குழுக்கள் தோற்கடிக்கப் பட்டு, இறுதியில் ஆசாத் அரசு வெற்றி வாகை சூடியது.

இஸ்ரேலின் அயல்நாடுகளில் சிரியா மட்டுமே இதுவரையில் எந்தவித சமரசமும் செய்யாமல் எதிரி நாடாக உள்ளது. அத்துடன், அது லெபனான் மீதும் செல்வாக்கு செலுத்தி வந்தது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் ஈரானுடன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பதும் சிரியா மட்டும் தான். இதனால், சிரியாப் பிரச்சினையை ஒரு வழியாக முடித்து விட்டால், ஈரானை தாக்குவது இலகுவாகி விடும் என்று இஸ்ரேல் கணக்குப் போட்டிருந்தது.

அமெரிக்காவால் எதிரி நாடுகளாக நடத்தப் படும் ஈரான் போன்ற நாடுகள், கடந்த கால உலக வரலாற்றில் இருந்து படிப்பினைகளை பெற்றுள்ளன. ஈராக், லிபியா என்று ஒவ்வொன்றாக தீர்த்துக் கட்டிய அமெரிக்கா, சிரியாவையும் பிடித்து விட்டால் எஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. ஆகையினால், தனது சொந்த நலன் கருதியாவது, ஈரான் சிரியாப் போரில் தலையிட வேண்டி இருந்தது. ஆசாத் அரசை வெல்ல வைப்பதன் மூலம், சிரியாவை தொடர்ந்தும் ஈரானின் பாதுகாப்புக் கவசமாக வைத்திருக்கலாம்.

அதே நேரம், சிரியாவின் உள்நாட்டுப் போரானது, "ஜென்ம விரோதிகளான" இஸ்ரேலையும், ஈரானையும் அருகருகே கொண்டு வந்து விட்டுள்ளது. தனது வடக்கு எல்லையில் ஈரானியப் படைகள் நிலை கொண்டிருப்பதால், இஸ்ரேலுக்கு எந்நேரமும் வயிற்றைக் கலக்கிக் கொண்டிருக்கும். சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர், தனது பலமடைந்துள்ள சிரியாவின் அரச இராணுவம், எதிர்காலத்தில் கோலான் குன்றுப் பகுதியை மீட்கும் யுத்தத்தை தொடங்கலாம். அதை ஈரானும் நிபந்தனையின்றி ஆதரிக்கும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது. அவ்வாறு எல்லைப்போர் மூண்டால், வடக்கே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, "கடைசி ஐரோப்பிய காலனியான" இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளை அடிபணிய வைக்கும் திட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. அயல்நாடுகளான ஜோர்டான், எகிப்து போன்றவற்றை போரில் தோற்கடித்து நட்பு நாடுகளாக்கி விட்டார்கள். இதுவரை காலமும் கள்ள உறவு வைத்திருந்த சவூதி அரேபியா, தற்போது பகிரங்கமாகவே இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. இவை அனைத்தும் சன்னி- இஸ்லாமிய பிரிவை பின்பற்றும் நாடுகள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்கு மாறாக, ஷியா- இஸ்லாமிய பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள லெபனான், சிரியா ஆகிய நாடுகள் இன்று வரைக்கும் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டுகின்றன. அதற்கு மூல காரணம், ஷியாக்களின் கோட்டையாக கருதப்படும், பிராந்திய வல்லரசாக வளர்ந்துள்ள ஈரான். ஆகவே, பொருளாதாரத் தடைகள், யுத்தங்கள் மூலம் ஈரானை பலவீனப் படுத்தி, அமெரிக்காவுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை கொண்டு வருவதற்கான காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை கேள்வி கேட்கும் சக்தி படைத்த நாடுகள் எதுவும் இருக்கவில்லை. ஐரோப்பா மட்டுமல்லாது, ரஷ்யா, சீனா கூட, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அனுசரித்து போன காலம் ஒன்றிருந்தது. அத்தகைய காலகட்டத்தில், இஸ்ரேலுக்கு ஈரானை ஒடுக்குவது இலகுவாக இருந்திருக்கும். எதிர்பாராத விதமாக, சிரியாவின் உள்நாட்டுப் போரில் ரஷ்யா தலையிட்ட பின்னர் நிலைமை சிக்கலாகியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டால், ரஷ்யா எந்தப் பக்கத்தை ஆதரிக்கும்? உண்மையில், இது ரஷ்யாவுக்கும் ஒரு நெருக்கடியான நிலைமை. இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன ஜார் மன்னன் என அழைக்கப் படும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் கோஷத்தின் கீழ் தான் சிரியாப் போரில் ஈடுபட்டார். இது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் வெளிவிவகார கொள்கையாக இருந்தது.

இருப்பினும், இஸ்ரேலில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ரஷ்யர்களை புட்டின் புறக்கணிக்க முடியாது. இலட்சக்கணக்கான ரஷ்ய யூதர்கள் மட்டுமல்லாது, பொருளாதார காரணங்களுக்காக குடியேறிய ரஷ்யர்களும் இஸ்ரேலில் உள்ளனர். இஸ்ரேலிய தேர்தல்களில் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு பலமான வாக்கு வங்கியாக உள்ளனர். பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேலிய ரஷ்யர்களை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தி வருகின்றார். அதாவது, ரஷ்யா சென்று புட்டினை சந்தித்து பேசிய பொழுது, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை சுட்டிக் காட்ட மறக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான கூட்டு இராணுவ நடவடிக்கை, ஈரானை ஆளும் ஆயத்துலாக்களின் கரங்களை பலப்படுத்தும். அமெரிக்காவுக்கு ஆதரவான லிபரல் முகாமை பலவீனப் படுத்தும். அமெரிக்காவை நம்ப முடியாது என்று கூறி வரும் கடும்போக்காளர்களின் கரம் உயரும். "அமெரிக்கர்கள் அயோக்கியர்கள் என்றால், ஐரோப்பியர்கள் கோழைகள்" என்று ஈரானில் பேசிக் கொள்கின்றனர்.

ஈரான் இன்று வரையில், ஷியா இஸ்லாமிய மத அடிப்படைவாத கருத்தியலை அரச கொள்கையாக கொண்டுள்ள போதிலும், சவூதி அரேபியா போன்ற "இஸ்லாமிய" நாடுகளே அதன் பிரதானமான எதிரிகளாக உள்ளன. அதனால், ஈரான் தவிர்க்கவியலாது, "கிறிஸ்தவ" ரஷ்யாவுடனும், "நாஸ்திக" சீனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டியுள்ளது. அரசியல்- பொருளாதாரக் காரணங்களுக்காக உருவான இந்தக் கூட்டணி, மதத்திற்கு அப்பாலும் கவனிக்கப் பட வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது.

- கலையரசன் 14-05-2018 ******

Tuesday, May 08, 2018

இணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்

இன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கைத்தொலைபேசியில் சொடுக்கி வாங்கி விடலாம். நாம் வாங்கிய பொருள் அடுத்த நாளே வீடு தேடி வரும்.

முந்திய காலங்களைப் போல வெளியே கடைக்கு செல்லாமல், வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்கும் தொழில்நுட்ப அதிசயத்தை எண்ணி வியக்கிறோம். வருங்காலத்தில் தெருக்களில் கடைகளை காண முடியாமல் போகலாம். இணையக் கடைகளின் பெருக்கம் காரணமாக, பல பெரிய நிறுவனங்களின் அங்காடிகள் கூட விற்பனையின்றி மூடப் படுகின்றன.

மறுபக்கத்தில் இணையக் கடைகளுக்கான களஞ்சிய அறைகள், விநியோக மையங்கள் என்பன திறக்கப் படுகின்றன. அவை நகரத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப் படுகின்றன. இணைய சேவை காரணமாக இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தூங்காமல் இரவிரவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றியது இந்தக் கட்டுரை. என்ன தான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளை பெருக்கினாலும், உழைப்புச் சுரண்டல் மட்டும் மாறுவதில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தை விட, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தக் கட்டுரையை எனது சொந்த அனுபவத்தில் இருந்து எழுதுகிறேன். நான் குறைந்தது ஒரு வருடமேனும் தபால் துறையில் வேலை செய்திருக்கிறேன். சில மாதங்கள், விநியோக மையத்தில் பார்சல் தரம் பிரிப்பவராக செய்த வேலை தான் மிகவும் கடினமானது. அடிமை வேலைக்கு ஒப்பானது.

2012 ம் ஆண்டளவில், நான் வசிக்கும் நெதர்லாந்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியது. எல்லா இடங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை. வேலை எங்கே தேடியும் கிடைக்காத நிலைமை. நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு எடுப்பதை விட, இருப்பவர்களின் வேலையை பறிப்பதில் ஆர்வமாக இருந்தன.

அத்தகைய பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும், பார்சல் தரம் பிரிக்கும் நிலையத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு இருந்தது. அப்போது அது வளர்ந்து வரும் நவீன தொழிற்துறை என ஊடகங்களால் புகழப் பட்டது. அங்கே சென்ற பிறகு தான், எதற்காக அந்த தொழிற்துறையில் மட்டும் வேலையாள் பற்றாக்குறை நிலவுகின்றது என்பது தெரிய வந்தது.

நெதர்லாந்து நாட்டின் தபால்துறை முழுக்க முழுக்க PostNL என்ற தனியார் நிறுவனத்தினால் நடத்தப் படுகின்றது. இது முன்பிருந்த அரசுத் தபால்துறையின் தொடர்ச்சி ஆகும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த நூறு சதவீத தனியார்மயமாக்கல் காரணமாக, ஆயிரக் கணக்கான தபால்துறை ஊழியர்கள் வேலையிழந்தனர்.

முந்திய காலங்களைப் போல தற்போது யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. இன்று உலகம் முழுவதும் அப்படித்தான். கடிதப் போக்குவரத்து மின்னஞ்சல் ஆகி, அது பின்னர் வாட்ஸ் ஆப் வரை வந்து விட்டது. கடிதங்களை மட்டுமல்ல, முத்திரைகளை கூட கண்ணால் கண்டிராத தலைமுறை ஒன்று உருவாகி விட்டது.

தனியார் மயப் படுத்தப் பட்ட தபால் நிறுவனம், அதைக் காரணமாகக் காட்டியே தபால்காரர்களின் வேலை நேரத்தைக் குறைத்து விட்டது. நான் சுமார் ஒரு வருடமாவது தபால்காரர் வேலை செய்துள்ளேன். தற்காலத்தில் அது ஒன்றும் பெருமைக்குரிய வேலை அல்ல. நிச்சயமற்ற தன்மை காரணமாக பலர் அந்த வேலையை தெரிவு செய்வதில்லை.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வீடுகளுக்கு தபால் போடும் வேலை செய்து, வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாது. ஏனெனில், வேலை நேரம் மிகக் குறைவு. மொத்தம் வாரத்திற்கு பன்னிரண்டு மணித்தியாலம் மட்டுமே. எப்போதும் அது ஒரு பகுதி நேர வேலை தான். அதனால் கிடைக்கும் வருமானம் வீட்டு வாடகை கட்டுவதற்கு கூடப் போதாது.

சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் ஐம்பது கிலோ பொதிகளை சுமந்து கொண்டு, உறை பனியில் நடுங்கிய படியும், அடை மழையில் நனைந்த படியும் செய்யும் வேலையை எண்ணிப் பாருங்கள். நாம் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும், சம்பளம் ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட தொகை தான் கிடைக்கும். தபால்கள் அதிகளவில் வரும் சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேரம், குறைவாக வரும் புதன்கிழமைகளில் அரை மணிநேரம் மட்டுமே சம்பளம் போடுவார்கள். அதுவும் மிகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் தான்.

சிலநேரம், சாதாரண தபால்களை மட்டுமல்லாது, விளம்பரப் பத்திரிகைகளையும் சேர்த்துப் போடுமாறு கொடுத்து விடுவார்கள். அதை விட, மாதமொருமுறை நகரசபை வெளியிடும், குடி மக்களுக்கான தகவல் தெரிவிக்கும் பத்திரிகையையும் நாமே விநியோகிக்க வேண்டும். அதற்காக மேலதிக கொடுப்பனவு எதுவும் கிடையாது.

இந்த மேலதிக விளம்பர சேவைக்காக நகர சபையும், விளம்பர நிறுவனங்களும் கொடுக்கும் பணம் முழுவதையும் தபால் நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. அதில் ஒரு துளி கூட வேலையாட்களுக்கு கொடுப்பதில்லை. அதற்கான காரணம் கேட்ட பொழுது, "தபால் சேவை நட்டத்தில் இயங்குவதாகவும், அதை ஈடுகட்டுவதற்காக கம்பனி விளம்பரப் பத்திரிகை போடும் சேவையை நடத்துவதாகவும்" தெரிவித்தார்கள்.

தபால்துறையில் ஒரு அரச நிறுவனம் ஏகபோக ஆதிக்கம் செலுத்திய காலம் எப்போதோ மலையேறி விட்டது. இன்று கூரியர் நிறுவனங்கள் என்ற பெயரில், ஒரு டசினுக்கும் குறையாத தனியார் தபால் நிறுவனங்கள் சந்தையில் போட்டி போடுகின்றன. இணைய வணிகம் காரணமாக பார்சல் விநியோகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. இதனால் "பாரம்பரிய" தபால் நிறுவனம், முடிந்தளவுக்கு தொழிலாளர்களை சுரண்டி இலாபம் சம்பாதிக்கப் பார்க்கின்றது.

இணைய வணிகத்தின் வருகை காரணமாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளதாக சொல்லப் படுகின்றது. ஆயிரம் பேரின் வேலை காணாமல் போன இடத்தில், சில பத்துப் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதற்குப் பெயர் பொருளாதார வளர்ச்சி அல்ல. பொருளாதார வீழ்ச்சி. இதனால் முதலாளிகளின் இலாபம் மட்டுமே கூடியுள்ளது.

இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போது தான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்.

நானும் பார்சல்கள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்துள்ளேன். அது வழமையாக இரவு வேலை தான். இரவு பன்னிரண்டு மணி முதல் அதிகாலை ஆறு மணி வரையில் தூங்காமல் கண் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இரவு வேலை செய்து வந்தால், நீரிழிவு வருத்தம் வரும். இதய நோய் கூட உண்டாகலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தரம் பிரிக்கும் வேலை இரண்டு ஷிப்டுகளாக நடக்கும். மாலை ஆறு மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரையில் ஒரு ஷிப்ட். அது மாலை நேர வேலை. அதை அங்கு நீண்ட காலம் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். புதிதாக வேலைக்கு சேருவோரும், தற்காலிகத் தொழிலாளர்களும் இரவு வேலை மட்டுமே செய்யலாம். நடுநிசி பன்னிரண்டு மணியில் இருந்து அதிகாலை ஆறு மணி வரை வேலை செய்ய வேண்டும்.

அதை விட, தரம் பிரிக்கும் நிலையத்தில் உள்ள இராட்சத இயந்திரங்கள் போடும் இரைச்சலில் காது செவிடாகி விடும். பக்கத்தில் நிற்பவர் சத்தமாகப் பேசினாலும் கேட்காத அளவிற்கு பேரிரைச்சல். தொழிலகங்களில் சத்தம் 80 டெசிபெல் அளவுக்கு மீறினால், காதுக்கு பாதுகாப்புக் கவசம் போட வேண்டும் என்று தொழிற்துறை பாதுகாப்பு விதி கூறுகின்றது. ஆனால், அதையெல்லாம் யார் பின்பற்றுகிறார்கள்?

அந்தக் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாலும், வேலை இயந்திரகதியில் இருக்க வேண்டும். அதாவது, ஒரு மெஷின் போல இயங்க வேண்டும். இது ரோபோவுக்கும் மனிதனுக்கும் இடையிலான போட்டி. ஒரு தொழிற்சாலையில் இருப்பதைப் போன்று, ரப்பர் பட்டி ஓடிக் கொண்டிருக்கும். ஒரு ரோபோ இயந்திரம் அதை இயக்கிக் கொண்டிருக்கும்.

இணையக் கடைகளில் வாங்கப் பட்ட பொருட்களின் பார்சல்கள், வண்டி வண்டியாக வந்து குவிந்து கொண்டே இருக்கும். சிறிதும் பெரிதுமான பார்சல்களை (அதிக பட்ச நிறை இருபது கிலோ) ஒவ்வொன்றாக எடுத்து பட்டியில் போட வேண்டும்.

மறுபக்கத்தில் தானாகவே தரம் பிரித்து வரும் பார்சல்களை எடுத்து, பிரதேச வாரியாக அடுக்க வேண்டும். முகவரிகளை ஸ்கேன் பண்ணி தரம் பிரிப்பதை மட்டுமே ரோபோ இயந்திரம் செய்கிறது. மற்றதை எல்லாம் மனிதர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு நிமிடத்தில் எத்தனை பார்சல்கள் போடுகிறோம் என்பதை நேரக் கணிப்பு மணிக்கூடு வைத்து அளப்பார்கள். நிமிடத்திற்கு சராசரி ஐம்பது பார்சல்கள் தூக்கிப் போட வேண்டும். எமது செயற்படும் வேகம் குறைந்தால் பட்டி ஓடுவது நின்று விடும். அப்படி நின்றால் மேற்பார்வையாளரிடம் திட்டு வாங்க வேண்டும்.

அதனால், நாம் ஒரு நிமிடம் கூட ஓய்வின்றி இயந்திரம் மாதிரி இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். எம்மிடம் இருந்து கூடிய அளவுக்கு உழைப்பை பிழிந்து எடுப்பதற்காக, வேண்டுமென்றே ரப்பர் பட்டி வேகமாக ஓட விடப் படுவதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

இது எனது அனுபவம். அண்மையில் பத்திரிகையில் ஒரு தகவலைக் கண்டேன். தரம் பிரிக்கும் நிலையத்தில் எட்டு வருடங்களாக மேற்பார்வையாளர் வேலை செய்து வந்த ஒருவர் வேலையை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், தான் அங்கு வேலை செய்யும் பொழுது "அடிமை மேய்ப்பர்" போன்று உணர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் அடிமைகள் வைத்திருந்த காலத்தில், அவர்களை ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க விடாமல் விரட்டி விரட்டி வேலை வாங்க ஒரு மேற்பார்வையாளர் இருந்தார். அவரை "அடிமை மேய்ப்பவர்" என்று சொல்வார்கள். அது நூறாண்டுகளுக்கு முந்திய வரலாறு என்று தான் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் வேலைக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யாரையும் சவுக்கால் அடிப்பதில்லை. உண்மை தான். ஆனால், எட்டு மணி நேரமென்றாலும், ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் இயந்திரத்தனமாக செய்யும் வேலையை அடிமைத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பதாம்?

ஒரு நிமிடம் கூட இடத்தை விட்டு நகர முடியாது. இடையில் சிறுநீர் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்கவே வேண்டாம். எமது இடத்திற்கு இன்னொரு தொழிலாளியை பிடித்து விட்டுத் தான் கழிவறைக்கு செல்ல வேண்டும். அதுவும் எப்போதும் சாத்தியமில்லை.

இதனால் வேலை நேரத்தில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்வோம். ஓய்வில்லாத வேலை காரணமாக வியர்த்துக் களைப்படைந்து, உடலில் நீர்த் தன்மை வற்றி, தாகம் அதிகமாக இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வேலை செய்ய வேண்டும்.

நிச்சயமாக இப்படியான இடங்களில் பலர் நீண்ட காலம் வேலை செய்வதில்லை. அடிக்கடி சுகயீன விடுப்பில் நிற்கிறார்கள். அதனால் தான் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை நிலவும் காலத்திலும் அங்கே வேலை கிடைக்கிறது. அங்கு வேலை செய்பவர்களில் அரைவாசிப் பேராவது, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த தொழிலாளர்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ், மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருக்கின்றன. குறைந்த கூலிக்கு அதிக உழைப்பை செலுத்தத் தயாரான மலிவு விலை தொழிலாளர்கள் அங்கிருந்து வருகிறார்கள்.

தபால் தரம் பிரிக்கும் நிலையத்தில் ஆள் பற்றாக்குறையா? போலந்தில் உள்ள முகவருக்கு தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு வந்து, திங்கட்கிழமை வேலை தொடங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வேலைக்கு வருவோர் மாடு மாதிரி உழைப்பார்கள். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்தவர்கள், இந்நாட்டு சட்ட விதிகளை அறிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். அதற்குள் வேண்டியளவு சுரண்டி விடலாம். இணைய வணிகம் என்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், நவீன அடிமைத்தனம் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கமும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றது.

தற்காலத்தில் தபால் சேவையால் இலாபம் இல்லை என்ற காரணத்தைக் கூறி, முத்திரை விலையை கூட்டி வைத்திருக்கிறார்கள். பார்சல் அனுப்பும் கட்டணமும் மிக அதிகம். இருந்த போதிலும் தபால் நிறுவனம் இலாபம் சம்பாதிப்பது மட்டும் குறையவில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களை சுரண்டி, வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். மறுபக்கம் தலைமை நிர்வாகிகளின் ஊதியமும், இலாபத்தில் அவர்களது பங்கும் அதிகரிக்கின்றது.

பொது மக்கள் தபால்கள் அனுப்புவது குறைந்து விட்டதால், "நட்டத்தில்" இயங்குவதாக எதிர்பார்க்கப் படும், தபால் நிறுவனம் சம்பாதிக்கும் நிகர இலாபம் வருடத்திற்கு ஐந்து சதவீதமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அடிமைத் தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் உழைப்பு தான் இலாபமாக மாறுகின்றது என்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

- கலையரசன்