Wednesday, June 28, 2017

கம்யூனிசத்தை கருவறுக்க சி.ஐ.ஏ. உருவாக்கிய "எல்லை கடந்த பயங்கரவாதம்"!


சி.ஐ.ஏ. வரலாறு, "ஓர் அழிவின் சுவடு". Tim Weiner எழுதிய "Legacy of Ashes" ஆங்கில நூலின் டச்சு மொழிபெயர்ப்பு. இப்போது தான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். இன்னும் நூறு பக்கங்கள் தாண்டவில்லை. அதற்குள் கண்ணைக் கட்டுதே!

பனிப்போர் தொடங்கிய காலத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசத்தை கருவறுக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டது தான் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், கிரேக்க நாடு சோவியத் முகாமுக்குள் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஏதென்ஸ் நகரில் தரையிறங்கிய பிரிட்டிஷ் கடற்படையினர் ஊடாக, கிரேக்க மன்னருக்கு விசுவாசமான படைகளுக்கு உதவி செய்யப் பட்டது. அப்போது கிரேக்கத்தில் செல்வாக்குடன் இருந்த கம்யூனிச கிளர்ச்சிப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவி செய்யப் பட்டது.

கிரீஸ் ஒரு சோஷலிச நாடாகி, அங்கு சோவியத் இராணுவம் தளம் அமைத்தால், எண்ணை வள மத்திய கிழக்கு நாடுகளையும் கைப்பற்றி விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அதனால், சோவியத் இராணுவம் முன்னேறினால், எண்ணைக் கிணறுகளை குண்டு வைத்து தகர்ப்பதற்கு தயாராக இருந்துள்ளனர்.

இஸ்லாமியருக்கு மெக்கா மாதிரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கான் என்று சொல்லலாம். வத்திக்கான் இருக்கும் இத்தாலி கூட கம்யூனிச நாடாகும் அபாயம் இருந்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இத்தாலியில் சி.ஐ.ஏ. நிதியில் உருவாக்கப் பட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (NGO) பெயரில், தீவிரமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது. அதற்கு அமெரிக்கர்கள் நிதி வழங்க ஊக்குவிக்கப் பட்டனர். கம்யூனிச எதிர்ப்பு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கியவர்கள் அமெரிக்க அரசிடம் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள முடிந்தது.

சோவியத் யூனியன், மற்றும் கிழக்கைரோப்பிய சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவுவது சி.ஐ.ஏ. இன் நோக்கமாக இருந்தது. அதற்காக, அந்த நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த சமூகங்களில் ஆட்களை சேர்த்தார்கள். அப்போதே மேற்கு ஐரோப்பாவில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களை அணிதிரட்டுவது பெரிய விடயம் அல்ல.

முன்னாள் நாஸிகள், பாசிஸ்டுகள் எல்லாம் சி.ஐ.ஏ. கைக்கூலிகளாக மாறினார்கள். யூத இனப்படுகொலை நடத்திய உக்ரைனிய பாசிஸ்டுகள், சி.ஐ.ஏ. இனால் பயிற்றுவிக்க பட்டு உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அதே மாதிரி, இத்தாலி, கிரீசில் வாழ்ந்த மனராட்சி ஆதரவு அல்பேனியர்களுக்கு பயிற்சி கொடுத்து அல்பேனியாவுக்குள் அனுப்பினார்கள்.

இதற்கிடையே ஒரு குறிப்பிடத் தக்க சம்பவம் நடந்தது. ஹங்கேரியில் சிலர் ஒரு விமானத்தைக் கடத்தி மேற்கு ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர். மேற்கு ஜெர்மனி அரசு, அவர்களை "விமானம் கடத்திய பயங்கரவாதிகளாக" கருதி சிறையில் அடைக்கவில்லை. மாறாக, சி.ஐ.ஏ. அவர்களில் சிலருக்கு இராணுவப் பயிற்சி கொடுத்து, பயங்கரவாதிகளாக மாற்றி மீண்டும் ஹங்கேரிக்கு திருப்பி அனுப்பியது.

சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்டவர்கள், அடையாளமில்லா விமானங்களில் கொண்டு செல்லப் பட்டு பாரசூட்டுகளில் இறக்கி விட்டனர். அவ்வாறு பல நூற்றுக் கணக்கான "எல்லை கடந்த பயங்கரவாதிகளை" அனுப்பியும், அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு சில வருட காலம் எடுத்தது.

பாரசூட்டில் இறக்கி விடப் பட்டவர்கள் அனைவரும் கம்யூனிச இரகசியப் பொலிசாரால் கண்டுபிடிக்கப் பட்டு விட்டனர். முதலில் அவர்களை பிடித்து வைத்திருந்து தகவல் அனுப்ப சொன்னார்கள். அதன்படி, "குறிப்பிட்ட இடத்திற்கு மேலதிக வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்புமாறு" சி.ஐ.ஏ. க்கு தகவல் கொடுத்தனர். இதை உண்மை என்று நம்பிய சி.ஐ.ஏ. இன்னும் பலரை பாரசூட்டில் இறக்கி விட்டது. அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப் பட்டு விட்டனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் துன்பப் படுகிறார்கள்" என்று புனையப்பட்ட பொய்ப் பரப்புரைகளை சி.ஐ.ஏ. உண்மை என்று நம்பி விட்டது போலும். தாங்கள் "விடுதலை வீரர்களை" அனுப்பினால், அங்கு "மக்கள் எழுச்சி" ஏற்படும், கம்யூனிச அரசுகள் கவிழ்ந்து விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.

Monday, June 26, 2017

ஒரு அமெரிக்க கனவு: "ஏழைகளின் குருதி விற்பனைக்கு"!



மேற்கு ஐரோப்பாவில் குருதிக் கொடை கொடுப்பவர்களுக்கு பொதுவாக பணம் கொடுப்பதில்லை. அதற்குக் காரணம், பணத்திற்காக குருதியை விற்பவர்கள் தமக்கிருக்கும் நோய்களை மறைக்கப் பார்க்கலாம். அதனால், தாமாக மனமுவந்து கொடுப்பவர்களிடம் இருந்து மட்டும் குருதி எடுக்கப் படுகின்றது. இருப்பினும் இரத்தவங்கியில் போதுமான அளவு குருதி சேமிப்பில் இருப்பதில்லை.

அண்மைய ஐரோப்பிய சட்டத் திருத்தமானது, வெளிநாடுகளில் இருந்து குருதி இறக்குமதி செய்வதை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள், குருதி விற்று கோடிக் கணக்கான டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றன. உலகிலேயே குருதி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா தான் எழுபது சதவீத பங்கைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் ஒளிபரப்பானது. (https://www.npo.nl/zembla/19-04-2017/VARA_101382220

தற்காலத்தில், குருதியானது பிளாஸ்மா வடிவத்தில் சேமிக்கப் படுகின்றது. சிவப்பு நிறமான குருதியில் இருந்து, முக்கியமான கலங்களை மட்டும் பிரித்தெடுத்தால் அது மஞ்சள் நிறமான திரவமாக இருக்கும். அதுவே "பிளாஸ்மா" என்று அழைக்கப் படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் பிளாஸ்மா போத்தில் குறைந்தது 1000 - 1500 யூரோவுக்கு சந்தையில் விற்கப் படுகின்றது. அது எங்கிருந்து வருகின்றது என்பதை ஆராய்வதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழுவொன்று புறப்பட்டது.

சுவிஸ் அரச மருத்துவமனை மருத்துவர்கள் குருதி விற்கும் கம்பனிகள் பற்றிய விபரங்களை தந்துதவினார்கள். அதில் உள்ள விபரங்களின் படி, பெரும்பான்மையான குருதி அமெரிக்காவில் இருந்து வருகின்றது என்று தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக கிலீவ்லான்ட் பிரதேசத்தில் இருந்தே பெருமளவு குருதி-பிளாஸ்மா இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. ஆகவே, மேலதிக விபரங்களை திரட்டுவதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழு அமெரிக்கா, கிலீவ்லான்ட்க்கு பயணமானது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக, 2007ம் ஆண்டுக்குப் பின்னர் கிலீவ்லான்ட் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அங்கு தற்போதும் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். வருமானம் இன்றிக் கஷ்டப் படுகின்றனர். 

அமெரிக்காவில், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள், தமது குருதியை விற்றுப் பிழைக்கிறார்கள். இது ஒரு அமெரிக்கக் கனவின் மறுபக்கம். ஏழைகளை சுரண்டி பணம் சேர்ப்பது வர்த்தக உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நியதி. அந்த வகையில், அமெரிக்க ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி விற்கும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இது ஒரு வகையில் "நவீன காலத்து நரமாமிச வியாபாரம்". 

அமெரிக்காவில் இரத்தம் விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதனால் குருதி வாங்கும் நிறுவனங்கள் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கின்றன. நானூறு டாலர், இருநூறு டாலர் என்று விலைபேசுகின்றன. இரத்தம் விற்றால் பணம் கிடைக்கும் என்பதால், இரத்த வங்கிகளுக்கு முன்னால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகள் வரிசையில் நிற்கின்றனர். இரத்தவங்கி ஒரு சராசரி தொழிற்சாலை போன்று இயங்குகின்றது.

வணிக நோக்கில் இயங்கும் இரத்த வங்கிக்குள் சுவிஸ் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதனால் அவர்கள், தெருவில் நின்று குருதி கொடுக்கச் செல்லும் "கொடையாளிகளை" பேட்டி எடுத்தனர். அப்போதும் அந்த நிறுவனம் பொலிசிற்கு அறிவித்து விட்டது. ஊடகவியலாளர்கள் "தெருவில் போவோருக்கு இடையூறு செய்ததாக" தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் தெரிவித்தது.

அதனால், மறைத்து வைக்கப் பட்ட கேமராவை கொண்டு சென்று இரத்த வங்கிக்குள் நடப்பவற்றை படமாக்கினார்கள். உள்ளே நூற்றுக்கணக்கான கொடையாளிகள் வரிசையாக படுக்க வைக்கப் பட்டு குருதி சேகரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் கேட்கப் படும் கேள்விகளும் முக்கியமில்லாதவையாக இருந்தன. தான் எல்லாவற்றிற்கும் "இல்லை" என்று சும்மா சொன்னதாக, வெளியே பேட்டி எடுக்கப் பட்ட ஒருவர் தெரிவித்தார். இன்னொரு இளைஞர் போதைவஸ்து வாங்குவதற்காக குருதி விற்றதாக கூறினார்.

அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன. இதனால் பில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவில் படமாக்கப் பட்ட காட்சிகள் சுவிட்சர்லாந்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இருப்பினும், குருதி வாங்கி விற்கும் சுவிஸ் நிறுவனம் ஊடகவியலாளருடன் பேச மறுத்து விட்டது. தலைமையகத்திற்கு சென்ற நேரம் போலீசைக் கூப்பிட்டு வெளியேற்றியது.

இரத்தவங்கிகள் வணிக நோக்கில் செயற்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் பயங்கரமானவை. 1999 ம் ஆண்டு, பிரான்ஸில் ஒரு மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றது. குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தில் HIV எயிட்ஸ் வைரஸ் தொற்றி இருந்தது. முன்கூட்டியே பரிசோதிக்கப் படாத எயிட்ஸ் கிருமி கலந்த இரத்தம் பரிமாறப் பட்டதால் பலர் பாதிக்கப் பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஊழலுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரத்த வங்கிகள், சேமிப்பில் உள்ள இரத்தம் தரமானதா என்பதையிட்டு, ஒன்றுக்குப் பத்து தரம் பரிசோதனை செய்கின்றன.

ஆவணப் படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு:

Saturday, June 24, 2017

பொய்கள், புனைவுகள், IBC ஒளிபரப்பிய உக்ரைன் பஞ்சம் பற்றிய ஆபாசப் படம்!

அமெரிக்க- சியோனிச கைக்கூலி நிராஜ் டேவிட், நாஸி இனப்படுகொலைகளுக்கு வெள்ளையடிக்கும் நோக்கில், "ஸ்டாலின் இனப்படுகொலை செய்ததாக" திரிபுபடுத்தி தயாரித்த ஆவணப்படம் ஒன்று, 2009 ம் ஆண்டு மே மாதம் IBC தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. (http://www.nirajdavid.com/இன-அழிப்பு-என்றால்-என்ன-ப-5/) பொய்களும், புரட்டுகளும் நிறைந்த அந்த ஆவணப்படத்தில் சொல்லப் பட்டவை உண்மை என்று நம்பும் வடிகட்டிய முட்டாள்கள் இன்றைக்கும் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்தப் பதிவு. 

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில், "ஸ்டாலின் செய்த இனப்படுகொலைகள்" என்று நிராஜ் டேவிட் ஓர் ஆவணப்படத்தை தொகுத்து வழங்க வேண்டிய தேவை என்ன? இதற்குப் பின்னால் உள்ள, தமிழர்களை மூளைச்சலவை செய்யும் சி.ஐ.ஏ. இன்  சதித் திட்டங்களை சாதாரணமாக கடந்து சென்று விட முடியுமா? "ஈழத்தமிழர்கள் அனைவரும் (புரட்டஸ்தாந்து) கிறிஸ்தவர்களாக மதம் மாறி, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும்" என்று, தமிழ்வின் இணையத்தளத்தில் நிராஜ் டேவிட் வெளிப்படையாகவே எழுதி இருந்தார்.

ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் உக்ரைனில் ஏற்பட்ட பஞ்சம், அதனால் பலியான மக்களைத் தான், நிராஜ் டேவிட் "இனப்படுகொலை" என்று திரிக்கிறார். பஞ்சம் காரணமாக செத்தவர்களை இனப்படுகொலை கணக்கில் சேர்க்கலாம் என்றால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு, கொல்கத்தா, அயர்லாந்து பஞ்சங்களும் இனப்படுகொலை என்றே சொல்லப் பட வேண்டும். ஆனால், நிராஜ் டேவிட் தனக்கு பணம் கொடுக்கும் எஜமானுக்கு எதிராக பேச மாட்டார்.

நிராஜ்டேவிட், உக்ரைன் பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிப்பதன் நோக்கம் என்ன? நாஸிகள் நடத்திய இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அன்றி வேறென்ன?

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், சோவியத் யூனியனின் ஐரோப்பியப் பிரதேசங்கள் முழுவதும் நாஸிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டன. இன்றைய உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி, ரஷ்யாவில் உள்ள ஸ்டாலின்கிராட் வரையில் முன்னேறி இருந்தனர்.

இரண்டாம் உலகப்போர் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலை, ஆக்கிரமிக்கப் பட்ட சோவியத் பிரதேசங்களில் நாஸி- ஜெர்மனி படைகளால் நடத்தப் பட்டது. ஆக்கிரமிக்கப் பட்ட உக்ரைன், பெலாருஸ், பால்ட்டிக் நாடுகளில் யூதர்களையும், ரஷ்யர்களையும் பெருமளவில் சுட்டுக் கொன்று மனிதப் புதைகுழிகளில் போட்டு மூடினார்கள். ஜெர்மன் படையினர் "துப்பாக்கியால் சுட்டுக் களைத்து விட்ட படியால்" தான், அவுட்ஸ்விட்ஷ் தடுப்பு முகாமில் அடைத்து வைத்து விஷவாயு அடித்துக் கொல்லும் திட்டம் கொண்டு வந்தார்கள்.

க‌ம்யூனிச‌ வெறுப்புக் கார‌ண‌மாக‌, ஹிட்ல‌ர் சோவிய‌த் யூனிய‌னை ஆக்கிர‌மித்து அந்நாட்டு ம‌க்க‌ளை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவிக்க‌ திட்ட‌மிட்டிருந்தான்! "அவுஷ்விட்ஸ்" எனும் நாஸி த‌டுப்பு முகாம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப் ப‌ட‌ம் பார்க்க‌க் கிடைத்த‌து. அதிலிருந்து கிடைத்த‌ சில‌ முக்கிய‌ த‌க‌வ‌ல்க‌ள். 
  • இல‌ட்ச‌க் க‌ண‌க்கான‌ யூதர்களை ந‌ச்சுவாயு அடித்து கொன்று குவித்த‌ ப‌டியால் தீய‌ வ‌ழியில் பிர‌ப‌ல‌ம‌டைந்த‌ முகாம் அது. யூத‌ர்க‌ளை அங்கு கொண்டு செல்வ‌த‌ற்கு முன்ன‌ரே ர‌ஷ்ய‌ர்க‌ள் மீது ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. 

  • IG farben என்ற‌ ஜேர்ம‌ன் ப‌ன்னாட்டுக் க‌ம்ப‌னிக்கு தேவையான‌ மூல‌ப் பொருட்க‌ள் அவுஷ்விட்ஸ் சுற்றாட‌லில் கிடைத்த‌ன‌. அடிமை உழைப்பாளிக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளும் நோக்க‌ம் அந்த‌க் க‌ம்ப‌னிக்கு இருந்த‌து. அந்த‌ முத‌லாளித்துவ‌ சுர‌ண்ட‌லுக்கு உத‌வுவ‌த‌ன் மூல‌ம் நாஸிக‌ளும் ப‌ல‌ன‌டைந்த‌னர். 

  • சோவிய‌த் ப‌டையெடுப்புக்கு வ‌ச‌தியாக‌த் தான் அந்த‌ இட‌த்தில் முகாம் அமைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து சோவிய‌த் எல்லையில் இருந்து சில‌ நூறு கி.மீ. தொலைவில் போல‌ந்தில் அந்த‌ இட‌ம் இருந்த‌து. - ஹிட்ல‌ரும், நாஸிக‌ளும் யூத‌ர்க‌ளை வெறுத்த‌ அள‌விற்கு க‌ம்யூனிஸ்டுக‌ளை வெறுத்தார்க‌ள். ர‌ஷ்ய‌ யூத‌ர்க‌ள் ப‌ல‌ர் போல்ஷேவிக் க‌ட்சியில் இருந்த‌தாக‌ ந‌ம்பினார்க‌ள். 

  • பெலார‌ஸ் போன்ற‌ சோவிய‌த் யூனிய‌னின் ப‌குதிக‌ள் நாஸிக‌ளால் ஆக்கிர‌மிக்க‌ப் ப‌ட்ட‌தும், 3 மில்லிய‌ன் பேர‌ள‌வில் போர்க் கைதிக‌ளாக‌ சிறைப் பிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர், 2 மில்லிய‌ன் பேரள‌வில் கொன்று குவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். 

  • ஆர‌ம்ப‌த்தில் க‌ம்யூனிஸ்டுக‌ள், யூத‌ர்க‌ள் அல்ல‌து போரிடும் வ‌ய‌தில் இருந்த‌ ஆயிர‌க் க‌ண‌க்கான‌ ர‌ஷ்ய‌ர்க‌ளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற‌ன‌ர். ஆனால், பெருந்தொகையான ர‌ஷ்ய‌ர்க‌ளை இல‌குவான‌ முறையில் கொன்றொழிப்ப‌து எப்ப‌டி என்று யோசித்தார்க‌ள். அவுஷ்விட்ஸ் முகாமில் கார்ப‌ன் மொனோக்சைட் ந‌ச்சு வாயு பிர‌யோகித்து ப‌ரிசோத‌னை செய்த‌ன‌ர். அது வெற்றிக‌ர‌மாக‌ ந‌ட‌ந்த‌ பின்ன‌ர் தான், ஐரோப்பிய‌ யூத‌ர்க‌ள் அங்கு கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ன‌ர்.
உக்ரைனில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாகத் தான் இனப்படுகொலை ஆரம்பமானது. நாஸிகளுடன் ஒத்துழைத்த உக்ரைனிய தேசியவாத- பாசிஸ்டுகள் ஆயிரக் கணக்கான யூதர்களை தெருக்களில் அடித்துக் கொன்றார்கள். அப்போது உக்ரைனில் நடந்த இனப்படுகொலை எதுவென கேட்டால், அதைத் தான் குறிப்பிடலாம்.
(பார்க்க: உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்)

ஆனால், அதையெல்லாம் நிராஜ் டேவிட் தனது ஆவணப்படத்தில் மூடி மறைக்கிறார். உக்ரைனிய இனவாதிகள் யூதர்களை மட்டும் தாக்கவில்லை. போலிஷ், ரஷ்ய மொழி பேசும் மக்களை அடித்து விரட்டி இனச்சுத்திகரிப்பு செய்தனர். இவற்றை எல்லாம் ஜெர்மன் படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவல் எதுவும், நிராஜ் டேவிட் தயாரித்த ஆவணப்படத்தில் சொல்லப் படவில்லை. இருட்டடிப்பு!

பஞ்சத்தில் செத்தவர்களை "இனப்படுகொலையில் கொல்லப் பட்டவர்கள்" என்று எந்த முட்டாளும் சொல்வதில்லை. எதிரிகள் கூட சொல்லத் தயங்கும் பொய்களை நிராஜ் டேவிட் தனது ஆவணப் படத்தில் சொல்கிறார்.  அதைப் பார்க்கும் தமிழர்கள் எல்லோரும் வடிகட்டிய முட்டாள்கள் என்று அவரே முடிவு செய்துவிட்டார் போலும்.

ஸ்டாலின் காலத்தில், குலாக்குகள் என்ற பணக்கார விவசாயிகள் (நமது நாட்டில் "பண்ணையார்கள்") சமூக விரோதிகளாக செயற்பட்டனர். பொதுவுடமைக் - கூட்டுறவுப் பண்ணை அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டதும், இந்த "கிராமிய முதலாளிகள்" அல்லது பண்ணையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். அவர்கள் தம்மிடமிருந்த கால்நடைகளை தாமே கொன்றழித்தனர். தானியக் களஞ்சியங்களை தீவைத்துக் கொளுத்தினர். உக்ரைன் பஞ்சம் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

நிராஜ் டேவிட், தனது ஆவணப்படத்திற்கான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி நாஸி பரப்புரையாளர்களிடம் இருந்து தான்! நாஸிகள் சோவியத் யூனியன் மீது படையெடுப்பதற்கு முன்னர், பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் தாக்கத் தொடங்கி விட்டனர். அதில் ஒன்று தான் உக்ரைனிய பஞ்சத்தில் மில்லியன் கணக்கில் இறந்தனர் என்ற தகவலும். இது பின்னர் சி.ஐ.ஏ. இனரால் பிரதியெடுக்க பட்டு உலகம் முழுவதும் பரப்பப் பட்டது.
(பார்க்க: கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!)

இன்றைய உக்ரைனின் அரைவாசிப் பகுதி தான், அன்றைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. மிகுதி, போலந்து அல்லது ஆஸ்திரியா (ஹங்கேரி)வின் பகுதியாக இருந்தது. அப்படியானால், உக்ரைனிய பஞ்சத்திற்கு ஸ்டாலின் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியுமா? அன்றைய காலத்தில் பஞ்சம் ஐரோப்பா முழுவதும் எல்லா இடங்களிலும் இருந்தது.

உக்ரைனில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஏராளமான மக்கள் பஞ்சத்தால் இறந்து கொண்டிருந்தனர். ஒரு குறுகிய காலத்திற்குள் ஐரோப்பா பல போர்களை கண்டிருந்தது. நெப்போலியனின் போர்கள், கிரீமியா யுத்தம், முதலாம் உலகப்போர், இவை யாவும் அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் கடுமையாக பாதித்திருந்தன. அதைவிட, ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது.

இன்று ஐரோப்பாவிலேயே அதி கூடிய வருமானம் ஈட்டுவோரைக் கொண்ட, நோர்வே, சுவிட்சர்லாந்து போன்ற பணக்கார நாடுகள் கூட பட்டினிச் சாவுகளுக்கு தப்பவில்லை. அயர்லாந்து பஞ்சத்தால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கும். இலட்சக்கணக்கான ஐரோப்பியர்கள் பஞ்சம் பிழைப்பதற்காக அமெரிக்காவில் குடியேறினார்கள். இதெல்லாம் நிராஜ்டேவிட்டின் கண்களுக்கு தெரியவில்லை! அமெரிக்க டாலர்கள் அவரது கண்களை மறைத்து விட்டன.

ஒரு நாட்டில் பஞ்சம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீண்ட காலம் நீடிக்கும் போர், உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி, நிர்வாகச் சீர்கேடுகள் என்று பல காரணங்கள் உள்ளன. ஸ்டாலினிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் கூட தமது வரலாற்று நூல்களில் அவற்றை மட்டும் தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால், பஞ்சத்தை இனப்படுகொலை என்று திரிக்கும் அளவிற்கு முட்டாள்கள் யாரும் இல்லை. நிராஜ் டேவிட், மற்றும் அவரது அடிப்பொடிகளை தவிர.



*********


உக்ரைனிய பஞ்சம் தொடர்பாக முன்னர் எழுதிய பதிவு:

உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்

கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பொய்ப் பிரச்சாரங்களில் ஒன்று, "உக்ரைனிய பஞ்சம்." மேற்கத்திய நாடுகளினால் holodomor என்று பெயரிடப் பட்ட உக்ரைனிய பஞ்சம், "ஸ்டாலினின் சோஷலிச பொருளாதார திட்டங்களினால் ஏற்பட்ட தீய விளைவு" என்று சுட்டிக் காட்டுவார்கள். அப்படியா?

இரண்டாம் உலகப் போர் முடிவு வரையில், உக்ரைனின் மேற்குப் பகுதி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா, ருமேனியா ஆகிய அயல் நாடுகளினால் பங்கு போடப் பட்டிருந்தது. அங்கு வாழ்ந்த பெரும்பான்மை இன மக்கள் உக்ரைனியர்கள். ஆனால், போர் முடிந்த பின்னர் தான், அவை சோவியத் யூனியனின் பகுதிகள் ஆகின.


அந்தக் காலத்தில், உக்ரைனிய பஞ்சம் பற்றி அறிவித்த ஒரு பத்திரிகையின் பக்கத்தை இங்கே தருகிறேன். இது எந்த நாட்டின் செய்தித் தாள்? செக்கோஸ்லாவாக்கியா. தலைநகர் பிராஹாவின் பெயர் வந்துள்ளதை கவனிக்கவும். அதில் என்ன எழுதியிருக்கிறது? செக்கோஸ்லாவாக்கியாவின் உக்ரைனிய பிரதேசமான சகர்பாத்தி (Zakarpatie) யில், 15 000 குழந்தைகள் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கிறது.

இதன் அர்த்தம், அன்றைய சோவியத் உக்ரைனில் பட்டினிச் சாவுகள் இருக்கவில்லை என்பதல்ல. இரண்டாம் உலகப்போர் வரையில், பஞ்சம் ஐரோப்பாக் கண்டம் முழுவதற்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது. இன்று பஞ்சம் என்று சொன்னால், பெரும்பாலானோருக்கு சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் தான் நினைவுக்கு வரும்.

ஆனால், சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் வேறு. இன்று ஆப்பிரிக்கா இருக்கும் நிலைமையில், அன்று ஐரோப்பா இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சமும், இரண்டு மில்லியன் மக்களின் பட்டினிச் சாவுகளும் இன்றைக்கும் நினைவுகூரப் படுகின்றன.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, பஞ்சத்தினால் பாதிக்கப் படாத ஐரோப்பிய நாடுகள் எதுவுமில்லை எனலாம். நோர்வே முதல் இத்தாலி வரையில், அயர்லாந்து முதல் ரஷ்யா வரையில், பஞ்சம் எல்லா நாடுகளிலும் தலைவிரித்தாடியது. இன்றைக்கு வாழும் மக்கள், எவ்வாறு ஆப்பிரிக்க பஞ்சத்தை சாதாரண விடயமாக எடுத்துக் கொள்கிறார்களோ, அதே மாதிரித் தான் அன்றைய ஐரோப்பிய மக்களும் நடந்து கொண்டார்கள்.

Friday, June 23, 2017

3000 ஆண்டுகளுக்கு முந்திய எகிப்தில் நடந்த வர்க்கப் போராட்டம்

மூவாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர், ப‌ண்டைய‌ எகிப்தில் ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌ம். வ‌ர‌லாற்றில் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்ட‌ உல‌கின் முத‌லாவ‌து வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம்.

கி.மு. 1170 ம் ஆண்டு. ப‌ண்டைய‌ எகிப்தில் தெற்கே உள்ள‌ டெய்ர் எல் மெடீனா (Deir el- Medina) என்ற‌ ஊரில் தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தில் குதித்த‌ன‌ர். அத‌ற்குக் கார‌ண‌ம், அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய ஊதிய‌ம் கால‌ தாம‌த‌மான‌து தான். ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ ஊதிய‌ம் கொடுக்க‌ப் ப‌ட‌வில்லை.

இன்றைக்கும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை க‌வ‌ரும் "அர‌ச‌ர்க‌ளின் ப‌ள்ள‌த்தாக்கு" ப‌குதிக்கு அருகில் டெய்ர் எல் மெடீனா உள்ள‌து. பாரோ ம‌ன்ன‌ன் ஆட்சிக் கால‌த்தில், அங்கு வாழ்ந்த‌ ம‌க்க‌ள் தான் க‌ல்ல‌றைக‌ளை க‌ட்டினார்க‌ள். (அந்த‌க் கால‌த்தில், இற‌ந்த‌ பாரோ ம‌ன்ன‌ர்க‌ளின் உட‌ல்க‌ளை, பிர‌மிட்டுக‌ளுக்கு ப‌திலாக‌ அங்கிருந்த‌ க‌ல்ல‌றைக‌ளில் புதைத்த‌ன‌ர்.)

அங்கு வேலை செய்து வ‌ந்த‌, ப‌ல்வேறுப‌ட்ட‌ தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ளுக்கும், தொழிலாள‌ர்க‌ளுக்கும் ஊதிய‌மாக‌ தானிய‌ம் வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌து. (அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ப‌ண‌ப் புழ‌க்க‌ம் இருக்க‌வில்லை.) அவ‌ர்க‌ளுக்கு ஊதிய‌மாக‌ கிடைக்க‌ வேண்டிய் தானிய‌ங்க‌ள் தாம‌த‌மாக‌ வ‌ர‌த் தொட‌ங்கி, ஒரு க‌ட்ட‌த்தில் அரை வ‌ருட‌ கால‌ம் ச‌ம்ப‌ள‌ம் இன்றி வேலை செய்ய‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

"நாங்க‌ள் ப‌ட்டினியால் சாகிறோம்..." என்று கோஷ‌ம் எழுப்பிய‌ தொழிலாள‌ர்க‌ள் வேலை செய்ய‌ ம‌றுத்த‌ன‌ர். வேலைநிறுத்த‌ம் செய்த‌து ம‌ட்டும‌ல்லாது, ஊர்வ‌ல‌மாக‌ சென்று, அர‌சு அலுவ‌க‌த்திற்கு முன்னால் அம‌ர்ந்திருந்து, எதிர்ப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் ஈடுப‌ட்ட‌ன‌ர். சுருக்க‌மாக‌, இந்த‌க் கால‌த்து தொழிலாள‌ர்க‌ளின் வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம் மாதிரியே அப்போதும் ந‌ட‌ந்திருக்கிற‌து.

தொழிலாள‌ர்க‌ளின் இடைய‌றாத‌ போராட்ட‌ம் கார‌ணமாக‌ அர‌சு இய‌ந்திர‌ம் இற‌ங்கி வ‌ந்த‌து. ச‌ம்ப‌ள‌ப் பாக்கியை த‌ர‌ச் ச‌ம்ம‌தித்த‌து. அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ தானிய‌ மூட்டைக‌ள் வ‌ந்து சேர்ந்த‌ன‌.

அன்று ந‌ட‌ந்த‌ வேலைநிறுத்த‌ப் போராட்ட‌ம், விரிவான‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் ப‌திவுசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. அன்றைய‌ எகிப்திய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் ஒவ்வொரு நாளும் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை எழுதி வைத்துள்ள‌ன‌ர். (பார்க்க: Records of the strike at Deir el Medina under Ramses III)

இதிலே குறிப்பிட‌த்த‌க்க‌ விட‌ய‌ம் என்ன‌வெனில், அன்று ந‌ட‌ந்த‌ வ‌ர்க்க‌ப் போராட்ட‌மும் ப‌திவு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. உழைக்கும் வ‌ர்க்க‌மும், அதிகார‌ வ‌ர்க்க‌மும் (காவ‌ல‌ர்க‌ள்) மோதிக் கொண்ட‌தை ப‌ண்டைய‌ வ‌ர‌லாற்று ஆசிரிய‌ர்க‌ள் எழுதி வைத்துள்ள‌ன‌ர்.

ஒரு வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தால் டெய்ர் எல் மெடீனா ம‌க்க‌ள் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடித்து விட்ட‌ன‌ர்.

"முந்திய‌ ச‌முதாய‌ங்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் முழுவ‌தும் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ வ‌ர‌லாறாக‌வே இருந்துள்ள‌து." - கார்ல் மார்க்ஸ்

Thursday, June 22, 2017

பிகினி நீச்சல் உடையில் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்


பிகினி நீச்ச‌ல் உடையின் க‌வ‌ர்ச்சிக்குப் பின்னால் ம‌றைந்திருக்கும் அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கோர‌முக‌ம்!

பேஷ‌ன் உல‌கில்‌ பிகினி நீச்ச‌ல் உடை அறிமுக‌மான‌த‌ற்குப் பின்னால் நூற்றுக் க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளின் க‌ண்ணீர்க் க‌தை ம‌றைந்திருக்கிற‌து. முத‌லில் அத‌ற்கு ஏன் பிகினி என்ற‌ பெய‌ர் வ‌ந்த‌து என்ற‌ விப‌ர‌ம் ப‌ல‌ருக்குத் தெரியாது.

ப‌சுபிக் ச‌முத்திர‌த்தில் உள்ள‌ மார்ஷ‌ல் தீவுக‌ள், இன்று அமெரிக்காவின் கீழான‌ "சுத‌ந்திர‌மான‌ நாடு". அது ஆயிர‌ம் மைல் தூர‌த்திற்குள் உள்ள‌ தீவுக் கூட்ட‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. அதில் ஒன்று தான் பிகினித் தீவு. இர‌ண்டாம் உல‌க‌ப் போர்க் கால‌த்தில் ஜ‌ப்பானிய‌ர் வ‌சமிருந்த‌ மார்ஷ‌ல் தீவுக‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி த‌ன‌தாக்கிக் கொண்ட‌து. அது பின்ன‌ர் அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ க‌ட‌ல் க‌ட‌ந்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் ஒன்றான‌து.

1946 ம் ஆண்டு, உல‌கின் முத‌லாவ‌து ஹைட்ர‌ஜ‌ன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌து. அணு குண்டை விட‌ ச‌க்தி வாய்ந்த‌ ஹைட்ர‌ஜ‌ன் குண்டு ப‌ரிசோதிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், பிகினித் தீவில் இருந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அமெரிக்க‌ இராணுவ‌ம் அவ‌ர்க‌ளுக்கு பொய்யான‌ வாக்குறுதிக‌ள் வ‌ழ‌ங்கி இன்னொரு தீவில் த‌ங்க‌ வைத்த‌து.

சில‌ வார‌ங்க‌ளில் ஊர் திரும்ப‌லாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிக‌ள், வ‌ருட‌க் க‌ண‌க்காக‌ அக‌திக‌ளாக‌ வாழ‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ஏற்ப‌ட்ட‌து.

1970 ம் ஆண்ட‌ள‌வில், க‌திர்வீச்சு அபாய‌ம் இல்லையென்றும், திரும்பிச் செல்வ‌து பாதுகாப்பான‌து என்றும் சொல்ல‌ப் ப‌ட்ட‌து. அதை ந‌ம்பி திரும்பிச் சென்ற‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ருக்கு புற்றுநோய் வ‌ந்த‌து. குழ‌ந்தைக‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் என்றில்லாம‌ல் ப‌ல‌ர் குறுகிய‌ காலத்திற்குள் ம‌ர‌ண‌முற்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையே பிகினித் தீவு ம‌க்க‌ளை அமெரிக்க‌ இராணுவ‌ம் நிர‌ந்த‌ர‌ ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌து. அதாவ‌து, ஹைட்ர‌ஜ‌ன் குண்டு வெடிப்பால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பாதிப்புக‌ளை ஆராய்வ‌த‌ற்காக‌, அவ‌ர்க‌ளை ப‌ரிசோத‌னை எலிக‌ளாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌து. சில‌ர் அமெரிக்கா கொண்டு செல்ல‌ப் ப‌ட்டு ப‌ரிசோதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அப்போதெல்லாம் அமெரிக்க‌ அர‌சு அவ‌ர்க‌ளை ம‌னித‌ர்க‌ளாக‌வே ம‌திக்க‌வில்லை.

க‌திர்வீச்சின் தாக்க‌ம் இர‌ண்டாம் த‌லைமுறையின‌ரையும் விட்டு வைக்க‌வில்லை. அத‌னால் த‌ம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிக‌ள் அமெரிக்க‌ அர‌சை கேட்டுக் கொண்ட‌ன‌ர். ஆனால் அந்த‌ வேண்டுகோள் செவிட‌ன் காதில் ஊதிய‌ ச‌ங்காயிற்று. இறுதியில் கிறீன்பீஸ் அமைப்பின் க‌ப்ப‌ல் வந்து தான் அவ‌ர்க‌ளை பாதுகாப்பான‌ இட‌த்திற்கு அழைத்துச் சென்ற‌து.

ஹைட்ர‌ஜன் குண்டு ப‌ரிசோத‌னையின் விளைவாக‌ ஏற்ப‌ட்ட‌ பாதிப்புக‌ளுக்கு ந‌ஷ்ட‌ஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷ‌ல் தீவுக‌ளுக்கு "சுத‌ந்திர‌ம்" கொடுப்ப‌தாக‌ அமெரிக்கா தெரிவித்த‌து. ஆனால் ந‌ஷ்ட‌ஈட்டுப் ப‌ண‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் ம‌ருத்துவ‌ச் செல‌வுக்கே போதாது.

இர‌ண்டாம் உல‌க‌ப் போர் வ‌ரையில் பிகினித் தீவில் வ‌றுமை என்ற‌ சொல்லே இருக்க‌வில்லை. இன்று இன்னொரு தீவில் அக‌திக‌ளாக குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் இன்றி வ‌றுமைக்குள் வாழ்கின்ற‌ன‌ர்.

அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் இராணுவ‌வெறி பிகினித் தீவுட‌ன் நின்று விட‌வில்லை. மார்ஷ‌ல் தீவுக‌ளில் ஒன்றில் ந‌வீன‌ ஏவுக‌ணை த‌ள‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்குள்ள ஏவுகணைகள் சீனாவை நோக்கி குறி வைக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

ஏவுக‌ணை த‌ள‌ம் உள்ள‌ தீவில் வாழ்ந்த‌ ம‌க்க‌ள் வெளியேற்ற‌ப் ப‌ட்டு அய‌லில் உள்ள‌ தீவில் த‌ங்க‌ வைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் தின‌ச‌ரி ப‌ட‌கில் சென்று ஏவுக‌ணைத் த‌ள‌ ப‌ராம‌ரிப்பு வேலைக‌ளை செய்கின்ற‌னர். முன்பு அந்த‌ மக்க‌ளுக்கு சொந்த‌மான‌ நில‌ங்க‌ளை ஆக்கிர‌மித்த‌ அமெரிக்க‌ இராணுவ‌ம், அவ‌ர்க‌ளை அங்கு வேலை செய்யும் தொழிலாள‌ர்க‌ள் ஆக்கியுள்ள‌து. அந்த ம‌க்க‌ளின் குடியிருப்புக‌ள் இருந்த‌ இட‌த்தில் கோல்ப் விளையாட்டு மைதான‌ம் அமைக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அங்கிருக்கும் புல்த‌ரைக்கு த‌ண்ணீர் ஊற்றும் வேலையிலும் அந்த‌ ம‌க்க‌ளே ஈடுப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

பிகினித் தீவில் ஹைட்ர‌ஜன் குண்டு வெடித்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து, ச‌ரியாக‌ நான்காவ‌து நாள் பிகினி என்ற‌ நீச்ச‌ல் உடை உல‌க‌ ம‌க்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. ஒரு பிரெஞ்சு ஆடை அல‌ங்கார‌ நிபுண‌ர் த‌யாரித்த‌ பிகினி உடை, அப்போது உல‌கம் முழுவ‌தும் பிர‌ப‌லமாகப் பேச‌ வைக்க‌ப் ப‌ட்ட‌து.

இத‌னால் அமெரிக்க‌ இராணுவ‌த்தின் அணுகுண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் மூடி ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. இன்று எல்லோருக்கும் பிகினி என்றால் நீச்ச‌ல் உடை தான் நினைவுக்கு வ‌ரும். யாருக்கும் அமெரிக்க‌ அணு குண்டு ப‌ரிசோத‌னை ப‌ற்றித் தெரிய‌ வ‌ராது.

பிகினி உடைக்கும், அணுகுண்டு ப‌ரிசோத‌னைக்கும், அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்திற்கும் தொட‌ர்பிருக்கிற‌து என்று சொன்னால் இன்று யார் ந‌ம்ப‌ப் போகிறார்க‌ள்?


Tuesday, June 06, 2017

கோடை விடுமுறையில் சிறார்களுக்கான பொதுவுடைமை ஒன்றுகூடல்


ஐரோப்பிய அரசியல் கட்சிகள், கோடை கால விடுமுறை நாட்களை பயன்படுத்தி ஒன்றுகூடல்களை நடத்துவது வழக்கம். அதில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொடர்புள்ள அமைப்புகள் பங்குபற்றும். அரசியல் கலந்துரையாடல்கள் மட்டுமல்லாது, இசை நிகழ்ச்சிகள், பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்.

ஜெர்மனியின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD இன் கோடை கால ஒன்றுகூடலில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. (3-4 ஜூன் 2017) அங்கு வருபவர்கள் தமது கூடாரங்களை கொண்டு வந்து புல்தரையில் தங்க வேண்டும். நாங்களும் ஒரு கூடாரத்தை கொண்டு சென்று தங்கினோம். அது இயற்கையோடு ஒன்றுகலந்து வசிப்பதைப் போலிருந்தது. மழை, வெயில், குளிர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டோம்.

Camping எனப்படும் கூடாரத்தில் தங்கும் அனுபவம் எனக்கும் புதிது. நானும் எனது மகனும் ஒரு கூடாரத்தில் தங்கி இரண்டு நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். ஜெர்மனி முழுவதிலும் இருந்து, நூற்றுக் கணக்கான குடும்பங்கள், பிள்ளைகளுடன் வந்து தங்கி இருந்தனர். முதல் நாள் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும் கலந்து கொண்டனர். பலர் கைக்குழந்தைகளையும் எடுத்து வந்திருந்தனர்.


இறுதி நிகழ்வாக, முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்ததை போன்று, சிறுவர்களுக்கான Rotfüchse பயனீர் (Pioneer = சாரணர்கள்) அமைப்பின் அணிநடை இடம்பெற்றது. சோஷலிச நாடுகளில் நடப்பதைப் போன்று, சில பருவ வயது இளைஞர்கள் மேள தாளத்துடன் முன்னே செல்ல, சிறுவர்கள் அணிவகுத்து சென்றனர். உலகில் நடக்கும் போர்களுக்கு எதிரான உரையாற்றினார்கள்.

இதனை சில வலதுசாரிகள் "சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அவதூறு செய்யலாம். போரினால் ஏற்படும் பேரழிவுகளுக்கு எதிராக சிறுவர்கள் பேசுவது "துஸ்பிரயோகம்" என்றால், "இலட்சக் கணக்கான மக்கள் பலியாகக் காரணமான போர்கள் புனிதமானவையா?"   என்ற கேள்வி எழுகின்றது.


மரப் பலகைகளை கொண்டு சிறுவர்கள் தயாரித்த விளையாட்டுப் புகையிரத வண்டி கண்ணைக் கவருவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. "புரட்சிகளே வரலாற்றின் ரயில் எஞ்சின்கள்" என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் பொறிக்கப் பட்ட போஸ்டரும் ஒட்டப் பட்டிருந்தது.

நூறு வருடங்களுக்கு முன்னர், லெனினும் தோழர்களும் சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி, பின்லாந்து வழியாக ரஷ்யாவுக்கு புகையிரத வண்டியில் சென்றடைந்தனர். அந்த குறிப்பிட்ட நிகழ்வு ரஷ்யப் புரட்சியின் தொடக்கமாக அமைந்திருந்தது. 

அதே போன்ற புகையிரத வண்டியை தான் விளையாட்டுத் திடலில் வடிவமைத்திருந்தனர். சிறுவர்கள் மகிழ்வுடன் அதிலேறி விளையாடினார்கள். புகையிரதவண்டி பூர்த்தியானதும், பழைய புரட்சிப் பாடல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்பை ஒருவர் கிட்டார் இசைத்துப் பாடினார்.

அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் கலந்து கொண்ட போதிலும், எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக் கொள்ளும் பொதுநல மனப்பான்மையை காண முடிந்தது. எல்லோரும் நாகரிகமாக நடந்து கொண்டனர். யாருமே மற்றவர்களின் உடைமைகளுக்கு ஆசைப் படவில்லை.



ஜெர்மனியின் மேற்குப் பகுதியில், நெதர்லாந்து எல்லையோரம் உள்ள கேள்சென்கிர்ஷன் (Gelsenkirchen)  நகரில், வழமையாக குதிரையோட்ட போட்டிகள் நடக்கும் திடலில் நடந்த ஒன்றுகூடலுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சம்பந்தப் படாத வெளியாட்களும் வந்திருந்தனர். உள்ளூர் பத்திரிகையில் வெளியான விளம்பரத்தை பார்த்து விட்டும் சிலர் வந்திருந்தனர்.

அங்கு நடந்த பொதுக் கூட்டங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கலந்து கொண்ட ரஷ்யப் பெண்மணி ஒருவர், சோவியத் யூனியன், ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்தார். ஆனால், MLPD நடத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இவர் போன்ற கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலரும் அங்கு வந்து தமது தப்பெண்ணங்களை மாற்றிக் கொண்டனர்.

அங்கு வந்திருந்த எல்லோரும் ஜெர்மானியர்கள் அல்ல. MLPD கட்சியுடன் தொடர்புடைய நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளை சேர்ந்த மாவோயிச கட்சிகளை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர். அதை விட, குர்திஸ்தான், துருக்கி, பிலிப்பைன்ஸ், சிரியா, ஆப்கானிஸ்தான், டோகோ (ஆப்பிரிக்கா) என்று பல்வேறு உலக நாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்டெபன் என்கல் 


MLPD கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் சுரங்கத் தொழிலாளியுமான ஸ்டெபன் என்கல் கலந்து கொண்ட கூட்டம் இடம்பெற்றது.


வோல்க்ஸ்வாகன் மக்கள் நீதிமன்றம் 
அது மட்டுமல்லாது, வோல்க்ஸ்வாகன் தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விமர்சிக்கும் மக்கள் நீதிமன்ற அமரவும் இடம்பெற்றது. இதில் ஜெர்மனியின் போராட்டக் குணாம்சம் மிக்க தொழிற்சங்கமும் கலந்து கொண்டது.


ஒன்றுகூடலுக்கு வரும் ஒவ்வொருவரும், வாசலில் நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னர், உணவுத் தேவைக்காக கூப்பன்கள் வாங்க வேண்டும். அதாவது, தம்மிடமுள்ள யூரோ நாணயத்தை கொடுத்து கூப்பன் துண்டுகளை வாங்க வேண்டும். அது மட்டுமே திடலில் செல்லுபடியாகும்.

உணவுச்சாலையில் சாப்பிடவும், குடிபானங்கள் அருந்தவும், புத்தகங்கள், கைப்பணிப் பொருட்களை வாங்குவதற்கும், அந்த கூப்பன் துண்டுகள் தேவை. அவற்றை விற்கும் கடைகள், நாம் கொடுக்கும் கூப்பன் துண்டுகளை கொடுத்து காசாக மாற்றிக் கொள்ளும்.

எதற்காக காசுக்கு பதிலாக கூப்பன் துண்டுகள் பாவிக்கப் படுகின்றன? இதில் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. பொதுவுடைமை சமுதாயத்தில் பணம் பாவனையில் இருக்காது. அதற்கு முன்னோடியாக இந்த நடைமுறை பின்பற்றப் படுகின்றது.

இரண்டாவதாக, குறிப்பிட்ட கட்சி மட்டுமல்ல, அந்தக் கட்சியுடன் நல்லுறவைப் பேணும் பிற அமைப்புகளும்,  தனிநபர்களும் தமது கடைகளை போட முடியும். ஆனால், வருமானத்தில் ஒரு பகுதி கட்சி நிதிக்கு செலுத்த வேண்டும்.

பணம் பாவனையில் இருந்தால் அதைக் கண்காணிப்பது கடினம். விற்பனையாளர்கள் எவ்வாறேயினும் வாடிக்கையாளரின் கூப்பன் துண்டுகளை காசாக்க வேண்டி இருப்பதால், வியாபாரத்தில் எவ்வளவு வருமானம் ஈட்டப் பட்டது என்பது தெரிய வரும்.

நமது தாயகத்தில் இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் இந்த உதாரணத்தை நடைமுறைப் படுத்தலாம். இதன் மூலம், மக்கள் விடுமுறையை பிரயோசனமான முறையில் கழிப்பதுடன், பொதுவுடைமை சமுதாயம் பற்றிய புரிந்துணர்வு ஏற்படவும் வழிவகுக்கும்.

******

ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியான MLPD, எஸ்சென் நகரில் நடத்தி வரும் சோஷலிசத்திற்கான வருடாந்த பேரணி.



சர்வதேச தோழர்கள் கலந்து கொண்ட மேடையில் இசைக்கப் பட்ட பிரபல பாஸிச எதிர்ப்புப் பாடல்:  

துருக்கி/குர்திய இசை நடனம்:

Monday, June 05, 2017

கட்டார் இராஜதந்திர நெருக்கடிக்கு காரணம் என்ன?


கட்டார் நாட்டுடன் சவூதி அரேபியா உட்பட ஐந்து அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை முறித்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவான, எண்ணை வளம் நிறைந்த, பணக்கார வளைகுடா நாடுகளுக்கு இடையிலான திடீர் இராஜதந்திர நெருக்கடிக்கு காரணம் என்ன?

கட்டாரின் ஒரேயொரு நிலத்தொடர்பு சவூதி அரேபியாவுடன் மட்டுமே என்பதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியான உணவுப் பொருட்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதை அடுத்து, சூப்பர் மார்க்கெட்டுகளில் இருப்பதையெல்லாம் மக்கள் வாங்கி விட்டதால் அவை வெறுமையாகக் கிடக்கின்றன.

"கட்டார் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கிறது" என்ற குற்றச்சாட்டை சுமத்தியே சவூதி அரேபியா தொடர்பை முறித்துக் கொண்டது. அதை அடுத்து குவைத், ஐ.அ.எமிரேட்ஸ், பாஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் இராஜதந்திர உறவை துண்டித்துக் கொண்டன.

இதற்கு சொல்லப் படும் காரணம் வேடிக்கையானது. கட்டார் அதிபரின் இணையத்தளத்தில், ஹமாஸ், ஹிஸ்புல்லா, முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டிருந்ததாக சவூதி அரேபியாவில் காரணம் சொல்லப் படுகின்றது.

இது உண்மையில் அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பு என்று பழித்தது போன்றது. பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னுக்கு நிற்கிறது. அவ்விரண்டு நாடுகளும், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திற்கு நிதி, ஆயுத உதவிகள் வழங்கி இருந்தன. உலகில் வேறு பல இயக்கங்களுக்கும் அவை இரண்டும் சேர்ந்து உதவி செய்துள்ளன.

(சவூதி அரேபியாவின் பரம வைரியான) ஈரானின் ஆதரவு பெற்ற "பயங்கரவாத இயக்கங்களுக்கு", கட்டார் உதவி செய்தது என்று சவூதி குற்றம் சாட்டுகின்றது. யேமனில் நடக்கும் போரில் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பில் இருந்து கட்டார் வீரர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அமெரிக்காவுக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது. ஏனெனில் கட்டாரில் அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம் உள்ளது. அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கட்டார் ஈரானுடன் நெருங்குவதாக அமெரிக்கா சந்தேகப் படுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒபாமா நிர்வாகம் நடந்த காலத்திலேயே, கட்டாருக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை போடப் பட்டிருந்தது.

கட்டார் தொடர்பான இராஜதந்திர நெருக்கடிக்கு இன்னொரு காரணமும் சொல்லப் படுகின்றது. பிரிட்டனில் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், லண்டனில் நடந்த தாக்குதல் கடும்போக்கு வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் கட்சியின் மீதான கண்டனங்கள் அதிகரித்தன. தேர்தல் பிரச்சாரக் காலத்தில், சவூதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை தெரேசா மே அம்மையார் நியாயப் படுத்தி வந்தார். தற்போது எதிர்க்கட்சிகள் அதை வைத்தே திருப்பித் தாக்குகின்றன.

லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகாவது, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியாவுடனான தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று, லேபர் கட்சியும், லிபரல் ஜனநாயகக் கட்சியும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆயுத பெற ஊழல் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

பல தசாப்த காலமாக, சவூதி அரேபியாவிற்கான பெருமளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா இருந்து வருகின்றது. கொலைக்கருவிகளின் ஏற்றுமதியால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைக்கிறது. (இல்லாவிட்டால் பிரிட்டன் ஒரு பணக்கார நாடாக இருக்க முடியுமா?) ஆகவே, எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, இரகசிய ஆயுத பேரம் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி முன்வருமா என்பது சந்தேகத்திற்குரியது.

இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, கட்டாருடனான இராஜதந்திர நெருக்கடிக்கான காரணம் புரியும். கட்டார் "பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுகின்றது" என்று சவூதி அரேபியா குற்றம் சுமத்திய காரணம் புரியும். அதாவது, "கட்டார் மட்டுமே குற்றவாளி" என்று சுட்டிக் காட்டி விட்டு, சவூதி அரேபியா நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது. தன்னோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்த சிறிய திருடனை காட்டிக் கொடுத்து விட்டு, பெரிய திருடன் தப்பிக் கொள்வதைப் போன்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு நடந்த கதியும் அதே தான்.

இதற்கிடையில், உலக சந்தையில் எண்ணை விலை உயர்ந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஐந்தாண்டு காலமாக படு வேகமாக சரிவடைந்து வந்த எண்ணை விலை, பல்வேறு பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருந்தது. எண்ணை வள ஒபெக் நாடுகளின் பொருளாதார நலன்களுக்காக கட்டார் பலி கொடுக்கப் பட்டிருக்கலாம். 

தொண்ணூறுகளுக்கு முன்னர், சோவியத் யூனியன் என்ற "கம்யூனிசப் பூதம்" இருந்த படியால், அமெரிக்கர்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஆப்கான் போரில் "தீய சக்திக்கு" எதிராக போரிட்டார்கள். சோவியத் யூனியன் வீழ்ந்து "கம்யூனிசப் பூதத்தின் அச்சுறுத்தல்" மறைந்த பின்னர், அவர்கள் தமக்குள் முரண்பட்டு சண்டையிடத் தொடங்கினார்கள். 

தற்கால உலக மக்கள் இஸ்லாமிய- பயங்கரவாத பீதியூட்டப் பட்டு, ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் படுகின்றனர். "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற போர்வையின் கீழ் ஆயுத விற்பனை அமோகமாக நடக்கிறது. பல கோடி இலாபம் வருமானம் தரும் வியாபாரத்தில் ஊழல்கள் நடப்பது சர்வசாதாரணம். இதற்கிடையே எண்ணை விலையை வைத்து சூதாடும் வணிகர்களுக்கும் பஞ்சமில்லை. 

"முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளுக்கு விசா தடை விதித்து" உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்மையில் தான் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து சொந்தம் கொண்டாடினார். முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை கூட்டி வைத்துக் கொண்டு "பயங்கரவாதத்தை இந்தப் பூமியில் இருந்து துடைத்தழிப்போம்" என்று சூளுரைத்தார். இந்த வாய்ச் சவடால் எல்லாம் ஆயுத விற்பனைக்காகத் தான் என்பது தெரிந்த விடயம்.