Showing posts with label குண்டுவெடிப்பு. Show all posts
Showing posts with label குண்டுவெடிப்பு. Show all posts

Sunday, September 10, 2023

ஈஸ்டர் தாக்குதல் - சேனல் 4 சொல்லாத செய்திகள்

 

ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சேனல் 4 ஆவணப்படம் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆனால் அது சொல்லாமல் மறைத்த விடயங்கள் பலவுள்ளன.

முதலாவதாக ஈஸ்டர் குண்டுவெடிப்புகளால் ஆதாயம் அடைந்தது கோத்தபாய ராஜபக்ச என்பது அப்போதே தெரிந்த விடயம். அரச புலனாய்வுத்துறை சம்பந்தப்பட்ட விடயமும் அப்போதே வெளியான தகவல் தான். ஆனால் நிரூபிக்க ஆதாரம் இருக்கவில்லை. சேனல் 4 தெரிவித்த மாதிரி பொலிஸ் விசாரணையை தொடர விடாமல் இடை நிறுத்தியதும் உண்மை தான்.

அந்த சதித்திட்டத்தில் பிள்ளையான் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது மட்டுமே புதிய தகவல். அநேகமாக கோத்தபாயவுக்கு இருந்த அதே அரசியல் நோக்கம் பிள்ளையானுக்கும் இருந்த படியால் கூட்டுச் சேர்ந்திருக்கலாம். அதாவது சிங்கள- முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது கோத்தபாயவின் நோக்கம் என்றால், தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டை வளர்ப்பது பிள்ளையானின் நோக்கம்.

அதே நேரம் புலனாய்வுத்துறை நேரடியாக செயல்படுத்தியிருக்க திட்டத்தில் பிள்ளையானின் பங்களிப்பு பெரிதாக இருந்திருக்க போவதில்லை. அநேகமாக, ஆசாத் அலி மௌலானாவுக்கு, சேனல் 4 வுக்கு தெரிவித்ததை விட அதிக தகவல்கள் தெரிந்திருக்கும். அவற்றை மறைத்து விட்டு பிள்ளையான் அல்லது கோத்தபாய சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி மட்டுமே பேசலாம் ஐரோப்பிய புலனாய்வுத்துறை அனுமதித்து இருக்கலாம். இலங்கை அரசியல் களத்தில் என்ன குழப்பம் ஏற்பட்டாலும் மேற்கிற்கு கவலையில்லை.

மேற்குலகை பொறுத்தவரையில் பிள்ளையான்கள் மட்டுமல்ல, ராஜபக்சேக்களும் கருவிகள் தான். நவ காலனிய, தரகு முதலாளிய அதிகார வர்க்கம், மேற்குலகால் எப்போதும் கருவியாக தான் கருதப் படுகிறது. அது வேறு விடயம்.

ஆகவே சேனல் 4 வீடியோவின் விளைவாக யாரும் பிள்ளையான், கோத்தபாயவை தூக்கில் போடப் போவதில்லை. எந்த விசாரணையும் நடக்கப் போவதுமில்லை. சில நாட்கள், அல்லது அதிக பட்சம் ஒரு மாதம் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும். அவ்வளவு தான்.

இன்னொரு விடயம், தவ்ஹீத் ஜமாத் கட்சியிலிருந்து ஸஹ்ரான் தலைமையில் பிரிந்த சிறு குழு ஏற்கனவே முஸ்லிம் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்தனர். அவர்கள் புலனாய்வுத்துறையால் பயன்படுத்த பட்டிருந்தாலும், "கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக" தாக்குதல் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களை கோத்தபாய பயன்படுத்திக் கொண்டார். அது உண்மை.

ஏற்கனவே 2001 ம் ஆண்டு நடந்த 9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் சதித் திட்டம் என்று ஏராளமான ஆவணப்படங்கள் வந்து விட்டன. ஆனால் என்ன நடந்தது? குற்றத்தை ஒப்புக் கொண்டு அமெரிக்க அரசு மன்னிப்புக் கோரியதா? இல்லையே? அதே நிலைமை தான் இலங்கையிலும்.

இங்கே முக்கியமான விடயம், அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எத்தகைய எல்லைக்கும் செல்வார்கள். தமது சொந்த மக்களையும் கொல்லத் தயங்க மாட்டார்கள். அரசியல் அறிஞர் மாக்கியவல்லியும் அதை தத்துவமாக எழுதி வைத்துச் சென்றுள்ளார். அவர் பிறந்த இத்தாலி தேசத்தில் 1974 ம் ஆண்டு நடந்த பொலோய்ஞோ ரயில் நிலைய குண்டுவெடிப்பில் 85 பொதுமக்கள் கொல்லப் பட்டனர். அது தொடர்பாக கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டவர்கள் தீவிர வலதுசாரி நவ நாஜிகள். ஆனால் அவர்களுக்குப் பின்னால் இத்தாலி அரசு இருந்தது என்ற உண்மை பல வருடங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. நேட்டோவின் பங்கு பற்றி எல்லாம் பேசப் போனால் நீண்டு விடும்.

அதே மாதிரி பிரான்ஸில் ஐ.ஸ். பெயரில் படுகொலைகளை நடத்தியவர்கள் பிரெஞ்சு அரச புலனாய்வுத்துறையுடன் தொடர்பில் இருந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் தெரிய வந்த உண்மைகள். ஆயினும் என்ன? பிரெஞ்சு வெள்ளையின மக்களுக்கும், முஸ்லிம் குடியேறிகளுக்கும் இடையிலான இன முரண்பாடு இன்னமும் அங்கே உள்ளது. இதைத் தான் கவனிக்க வேண்டும்.

அதாவது உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடக் கூடாது என்பதில் ஆளும் முதலாளிய வர்க்கம் மிகக் கவனமாக உள்ளது. அதற்காக இன/மத முரண்பாடுகளை தூண்டி விட்டு வளர்க்கிறார்கள். மக்களை இனரீதியாக அல்லது மதரீதியாக பிரித்து ஆண்டால் தான் இந்த அரசு நிலைத்திருக்க முடியும். அதன் அர்த்தம், முதலாளிய ஆதரவுத் தமிழ்த்தேசியம் கூட, என்ன தான் தன்னை முற்போக்கானதாக காட்டிக் கொண்டாலும், அதுவும் அரச நிகழ்ச்சிநிரலில் தான் இயங்குகிறது.

உண்மையில் சேனல் 4 ஆவணப்படம் பலரது கண்களை திறந்திருக்க வேண்டும். இப்படித் தானே இவ்வளவு காலமும் இந்த அரசு முஸ்லிம்களை மட்டுமல்லாது, சிங்களவர்களையும், தமிழர்களையும் பிரித்து வைத்து ஆள்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும். ஆனால் அந்த உண்மையை உணர விடாமல் தடுப்பதற்கு தான் சிங்களப் பேரினவாத அரசும் அதன் தமிழ்த்தேசிய கைக்கூலிகளும் விரும்புவார்கள். அதனால் தான் இப்போதும் அமைப்பில் உள்ள தவறுகளை பற்றி பேசாமல் தனி நபர்களை சுற்றி அரசியல் நடத்துகிறார்கள். 
 

இது தொடர்பான முந்திய பதிவு:

Saturday, April 26, 2014

கிரேக்க மத்திய வங்கி குண்டுவெடிப்பு : கம்யூனிச இயக்கம் உரிமைகோரல்



ஏதென்ஸ் நகரில், கிரேக்க மத்திய வங்கிக்கு முன்னால் ஒரு கார் குண்டு வெடித்துள்ளது. ஏப்ரல் 10 அன்று நடந்த இந்த சம்பவம், அன்று எந்த ஊடகத்திலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படவில்லை. அதற்குக் காரணம், குண்டுவெடிப்புக்கு அடுத்த நாள், ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல் கிரீசுக்கு விஜயம் செய்திருந்தார்.

10 ஏப்ரல் 2014, அதிகாலை 5.55 மணிக்கு, 75kg நிறையுள்ள குண்டு வெடித்துள்ளது. குண்டு வைத்தவர்கள், முன்கூட்டியே 5.15 மணியளவில் அது பற்றி அறிவித்திருந்தனர். Efimerida ton Syntakton பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில், "இன்னும் 40 நிமிடங்களில் குண்டு வெடிக்கும் என்றும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப் படுத்த வேண்டுமென்றும்..." அனாமதேய குரல் ஒன்று எச்சரித்திருந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், அந்தப் பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றி, வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர்.

உலகில் உள்ள, வலதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும், இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையிலான வேறுபாடு இது தான். வலதுசாரி தீவிரவாத அமைப்புகள், குண்டுவெடிக்கும் இடத்தில் பொது மக்களும் கொல்லப் படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. எந்தளவு அதிகமான மக்கள் பலியாகின்றனரோ, அந்தளவு வெற்றி கிடைத்து விட்டதாக நம்புவார்கள்.

அதற்கு மாறாக, இடதுசாரி அமைப்புகள், பொது மக்களின் உயிரிழப்புகளை முடிந்த அளவுக்கு தடுக்கப் பார்ப்பார்கள். பொது மக்கள் நடமாடாத நேரமாகப் பார்த்து தான், நேரக் கணிப்பு வெடிகுண்டு வைப்பார்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், குண்டுவெடிக்கப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிப்பார்கள். ஏற்கனவே, IRA (பிரிட்டன்), ETA(ஸ்பெயின்) போன்ற இடதுசாரி தேசியவாத இயக்கங்கள், இந்த நடைமுறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வந்துள்ளன.

அன்றைய குண்டுவெடிப்பில், மத்திய வங்கிக் கட்டிடம் மட்டும் சேதமடைந்தது. யாரும் கொல்லப் படவுமில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. "புரட்சிகர போராட்டம்" என்ற இடதுசாரி ஆயுதபாணி இயக்கம், குண்டுவெடிப்புக்கு உரிமை கோரியுள்ளது.

உரிமை கோரல் துண்டுப் பிரசுரத்தில் இருந்து: 
"IMF நிரந்தரப் பிரதிநிதி Wes McGrew, மத்திய வங்கி கட்டிடத்தில் தங்கியிருக்கிறார். கிரீஸ் சர்வதேச நாணய சந்தைக்கு திரும்புவதை எதிர்ப்பதற்காகவும், 10 மார்ச் 2010 ம் ஆண்டு, பொலிசாருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட எமது உறுப்பினர் Lambros Foundas நினைவாகவும், இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எமது இலட்சியம் லிபெர்ட்டேரியன் கம்யூனிசம்." 
 - Lambros Fountas கமாண்டோ அணி, 
   புரட்சிகர போராட்டம் 

"புரட்சிகர போராட்டம்" (Revolutionary Struggle) என்ற ஆயுதமேந்திய இயக்கம், Nikos Maziotis மற்றும் Panayiota (Paula) Roupa ஆகியோரால் தலைமை தாங்கப் படுகின்றது. இருவரும் 2012 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சில மாதங்கள் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர். நிபந்தனையுடனான பெயிலில் விடுதலையாகி, வீட்டில் இருக்க அனுமதித்த பொழுது தலைமறைவாகி விட்டனர். இது போன்றே, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த, நவம்பர் 17 இயக்க உறுப்பினர் ஒருவரும் தலைமறைவாகி இருந்தார். 

மத்திய வங்கி குண்டுவெடிப்பில், நவம்பர் 17 இயக்கமும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று, பொலிஸ் சந்தேகிக்கின்றது. புரட்சிகர போராட்ட தலைவர்களை கைது செய்ய உதவுவோருக்கு, இரண்டு மில்லியன் யூரோக்கள் சன்மானமாக வழங்குவதாக, பொலிஸ் அறிவித்துள்ளது. புரட்சிகர போராட்டம், ஏற்கனவே பல குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. ஏதென்ஸ் தலைமை நீதிமன்றம், சிட்டி வங்கி தலைமையகம், பங்குச் சந்தை கட்டிடம் என்பன கடந்த காலங்களில் வெடி குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகின.

 ********* 

கிரேக்க நாட்டில் இயங்கி வந்த, இடதுசாரி புரட்சி இயக்கமாகிய "நவம்பர் 17" மீண்டும் ஆயுதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்த ஆயுதபாணி இயக்கத்தின் பெயரில் முன்பு நடந்த கொலைகள், குண்டுவெடிப்புகளுக்காக கைது செய்யப் பட்ட Christodoulos Xiros (55 வயது) ஏதென்ஸ் சிறைச்சாலையில் 25 வருட தண்டனை அனுபவித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம், ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு செல்ல அனுமதித்திருந்த நேரம், அவர் தப்பிச் சென்றுள்ளார். தற்போது தலைமறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

"கிரேக்க நாட்டினை நாசமாக்கும் கொள்ளைக்காரர்கள், பாசிஸ்டுகளுக்கு எதிரான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப் படும்" என்று, Christodoulos Xiros அந்த வீடியோவில் கூறுகின்றார். பின்னணியில் சேகுவேரா, மற்றும் கிரேக்க விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் காணப் படுகின்றன.

வீடியோ இணைப்பு: http://www.youtube.com/watch?v=yA-EVHfdhy0

நவம்பர் 17 இயக்கம் பற்றி, முன்னர் எழுதிய கட்டுரை:
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை; 
http://kalaiy.blogspot.nl/2008/12/blog-post_13.html

*********


கிரேக்க புரட்சிகர ஆயுதப் போராட்டம் குறித்த முன்னைய பதிவுகள்: 

Saturday, May 15, 2010

ஏதென்ஸ் நகரில் பாரிய குண்டுவெடிப்பு!

(Thursday, May 13, 2010) ஏதென்ஸ் நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை (Korydalos - Central Prison of Athens) மதிலின் அருகில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. ஏதென்ஸ் மாநகரம் முழுவதும் குண்டுவெடிப்பின் சத்தம் கேட்டது. குண்டுவெடிப்பு பற்றிய அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே "Eleftherotypia” என்ற பத்திரிகைக்கும், "Alter TV" என்ற தொலைக்காட்சிக்கும் அனுப்பபட்டிருந்தன. இதனால் ஒரு பெண்மணி மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளானார். சிறைச்சாலைக்கு ஏற்பட்ட சேத விபரம் தெரியவில்லை. அண்மையில் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்த சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்கள் கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதற்கிடையே கிரீசின் வடக்கே உள்ள இரண்டாவது பெரிய நகரமான தெஸ்சலோனிக்கியில் உள்ள நீதிமன்றத்தின் அருகிலும் குண்டொன்று வெடித்துள்ளது. (Friday, May 14, 2010) குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து வெகுஜன ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. கிரீஸ் அபாயகரமான நாடாக காட்டப்பட்டால், உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து விடும் என்பதால் அரசும் எந்த அறிக்கையையும் விடுக்கவில்லை.
Bombenexplosion vor griechischem Gefängnis (in German)

மேலதிக விபரங்கள் தொடரும் ....

வீடியோ 1 : ஏதென்ஸ் சிறைச்சாலை குண்டுவெடிப்பு

வீடியோ 2 : தெஸ்சலோனிக்கி நீதிமன்ற குண்டுவெடிப்பு