Tuesday, October 20, 2020

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இந்த சர்ச்சை வளர்ந்து வந்தது.

தமிழகத்தின் புதிய தமிழ்த்தேசியவாதிகளால் "துரோகி" முத்திரை குத்தப்பட்ட முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில், அரசியல் உணர்வுள்ள குணச்சித்திர நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். முத்தையா முரளிதரன் "இனப்படுகொலையை நியாயப் படுத்தி வந்தார், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்", அதனால் அப்படியானவரின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று "அன்புக் கட்டளை" இட்டனர். பகிரங்க மிரட்டல்களுக்கு "வேண்டுகோள்", "அறிவுரை" என்றும் அர்த்தம் இருப்பதாக இப்போது தான் தெரிகிறது.

இங்கே உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் விளையாட்டு சாதனைகள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அவர் பேசிய அபத்தமான அரசியல் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் உணர்வாளர்கள், ஒரு திரைப்படத் தயாரிப்பில் தலையிடுவது மட்டுமல்லாது, கருத்து சுதந்திர மறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் இன்னமும் ஜனநாயக சூழல் வளரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரத்தை கூட எதிராளிக்கு தர மறுப்பதையும், சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்த தமிழ்த்தேசிய அடிப்படைவாதிகள், தாம் ஈழத் தமிழர்களின் பெயரால் பேசுவதாக காட்டிக் கொண்டாலும், இவர்களது போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்பது தெரியவில்லை. இவர்களிடம் அது பற்றிக் கேட்டால், தாம் இனப்படுகொலைக்கு நீதிகோருவதாகவும், இந்த செய்தி சிறிலங்கா அரசை பிடித்து உலுக்கி விடும் என்றும் கூறுகிறார்கள். நான் அறிந்த வரையில், இலங்கையில் யாரும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

பொதுவாகவே தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை  இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட பெரிது படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு பொழுதுபோக்கு சினிமாப் படத்திற்காக உணர்ச்சிகரமாக பொங்கியெழும் யாரும், உண்மையான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன், தமிழ்நாடு மாதிரி, ஈழத்தில் சினிமா அரசியல் பெருமளவு தாக்கம் செலுத்துவதில்லை. ஒரு சினிமா நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ அரசியல் கருத்துக் கூற வேண்டும் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்ப்பதில்லை.

அந்த வகையில் அன்று முரளிதரன் தெரிவித்த "அரசியல்" கருத்துக்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். பெட்டைக் கோழி கூவி பொழுது விடிவதில்லை. ஒரு தடவை முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் தேர்தல் பிரச்சாரம் செய்தும், அவர் வெல்லவில்லை. இன்னொரு தடவை, கொழும்பில் UNP ஆதரவுடன் தேர்தலில் நின்ற மனோ கணேசனுக்கு எதிராக, மகிந்த ராஜபக்சேவின் கட்சியான SLFP முரளிதரனை கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்வித்தது. அப்படி இருந்தும் மனோகணேசன் வென்றார். இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.  அந்தளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் அரசியலையும், விளையாட்டையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

முரளிதரன் தனது அரச ஆதரவுக் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மட்டும் சொல்லி இருந்திருந்தால், அது இந்தளவு தூரம் சர்ச்சையை கொண்டு வந்திருக்காது. அங்கு ஏற்கனவே பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தத்துப் பித்து என்று உளறி இருக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் ஒரு சொல் தவறாக சொன்னாலும், அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் கருத்துருவாக்கிகள். விளையாட்டு வீரர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களிடம் விளையாட்டை தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

சிங்களவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்று தான் கூர்ந்து கவனிப்பார்கள். முன்பு ஜெயலலிதா, அதற்கு முன்னர் கருணாநிதி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிங்கள ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படும். அவை பொது மக்கள் மத்தியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும். தீவிர இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளும், அமைப்புகளும் "இந்திய விஸ்தரிப்புவாதிகளுக்கு" எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால், சீமான், தாமரை, பாரதிராஜா போன்ற தீவிர தமிழினப் பற்றாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்கள் யார் என்பதே சிங்கள மக்களுக்கு தெரியாது.

இலங்கையில் எந்தவொரு சிங்களவரும், இது போன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. காரணம் மிக இலகு. தற்போதைய 800 திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் எப்படி தெரிவிக்கும்?  "தமிழ்நாட்டில் தமிழர்கள் முரளிதரன் என்ற ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தமிழ்ப் படத்தை எதிர்க்கிறார்கள்!" சுருக்கமாக, இது தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சினை. இவ்வாறு தான் அந்த செய்தி வெளிவரும். இதைப் பார்க்கும் ஒரு சராசரி சிங்களவர், "தமிழர்கள் தங்கள் இனத்தில் ஒருவன் முன்னுக்கு வருவதை விரும்பாத அளவுக்கு பொறாமை மிக்கவர்கள் போலிருக்கிறது..." என்று நினைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்.

"அப்படி அல்ல, தமிழர்கள் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்" என்று சிங்கள ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யுத்தம் நடந்த காலங்களில், இராணுவத்தால் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களிடம் இதை விட வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? சில நேரம், இராணுவத்தால் பொது மக்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவை புலிகளின் தாக்குதலின் எதிர்வினையாக நடந்தவை என்றும் குறிப்பிடத் தவறுவதில்லை. தமது தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்பதற்காக போர்க்குற்றம் பற்றிக் கூட பேச மறுத்து வருகின்றனர். 

முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளில் பாரதூரமானது, காணாமல்போனவர்களை தேடி போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப் படுத்தியது தான். இதனை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி கூட விமர்சித்து இருந்தது. அவர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற பதில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத கூற்று. இது பாதிக்கப் பட்ட மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் தான் ஆதரிக்கும் அரசை நியாயப் படுத்த நினைத்தாலும், இது போன்ற பதில்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அநேகமாக அரசியல் அனுபவமின்மை காரணமாக அந்தக் கூற்று அவரது வாயில் இருந்து வந்திருக்கலாம். இருந்தாலும் தவறு தவறு தான்.

அதற்காக, அன்று முரளிதரன் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டித்திருக்க வேண்டும், இனப்படுகொலை பற்றிப் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் அவர் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், அது தேசத்துரோகமாக கருதப்பட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாடவே முடியாமல் தடைசெய்திருப்பார்கள். அன்றைய காலத்தில், அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அதிக பட்சம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஈழப் போர் முடிந்தது தொடர்பாக முரளிதரன் தெரிவித்த கருத்தானது, "இனப்படுகொலையை ஆதரித்தார்" என்பதாக திரிபுபடுத்தி பரப்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் சில அரசியல் அறிஞர்கள் கூட கண்ணை மூடிக் கொண்டு இப்படி ஒரு பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர். முரளிதரன் அவ்வாறு சொன்னதாக நான் எங்கேயும் கேள்விப் படவில்லை. இவர்களே அப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அன்று அவர் போர் முடிந்ததால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருந்தாலும், அது ஒரு சாமானியனின் கூற்றாக கருதப் பட வேண்டும். ஏனெனில் அன்று சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் முப்பதாண்டு கால போர் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் எந்த நாடாக இருந்தாலும், போர் முடிந்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சாதாரண விடயம். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையா? அதைக் கொண்டாடவில்லையா? ஜெர்மனியிலும் பலருக்கு போரின் முடிவு திருப்திகரமாக இருக்கவில்லை.

உண்மையில் இறுதிப் போர்கூட தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் நடந்தது. அதிகம் பேசுவானேன். புலிகள் இயக்கப் போராளிகளே இந்தப் போர் போதும் என்ற கட்டத்திற்கு வந்து விட்டிருந்தனர். அந்தளவுக்கு எல்லோரும் போரினால் களைத்துப் போயிருந்தனர். அன்று அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இது சாதாரண மக்களின் மனநிலை. நீண்ட காலப் போரினால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும், வார்த்தையில் வடிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்த மக்களிடம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களில் மிகுந்த மனச்சோர்வை தரும் விடயம் என்னவென்றால், பலரிடம் வர்க்கப் பார்வை மருந்துக்கும் கிடையாது. ஒரு சில இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்த முன்னாள் மார்க்சிஸ்ட் தியாகு கூட தட்டையான இனவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் நடப்பது வர்க்கப் போராட்டம் என்பவர்கள் கூட, ஈழம் என்று வந்து விட்டால் மட்டும் சிங்களவர் எதிர் தமிழர் என்று இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் முரண்நகையை புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளிதரனின் குடும்பம், இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டியில் வாழ்ந்து வருகின்றது. அவரது தந்தை முத்தையா, லக்கிலேன்ட் பிஸ்கட் கம்பனி நடத்திய ஒரு முதலாளி. அப்படியானால் முரளிதரனின் வர்க்கம் என்னவென்று நான் சொல்லியா புரிய வேண்டும்? அவர் கல்விகற்றதும் மத்தியதர வர்க்க பிள்ளைகள் செல்லும் தனியார் பாடசாலை ஒன்றில் தான். அதனால் தான் கிரிக்கெட் விளையாட்டில் முன்னுக்கு வந்து, தேசிய அணியில் இடம்பெற முடிந்தது. இலங்கையில் இன்றைக்கும் சாதாரண அரசு பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவது ஒரு கனவாக மட்டுமே உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் கிரிக்கெட் எப்போதும் மேட்டுக்குடியினரின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாகவே, தேசிய கிரிக்கெட் அணியில் தமிழ் விளையாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இதுவும் இனப் பிரச்சினையின் ஓரங்கம் தான் என்பதை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். எப்போதாவது ஓரிருவர் சேர்க்கப் பட்டாலும், அவர் நிச்சயம் ஏதாவதொரு மேட்டுக்குடி பாடசாலையில் கல்வி கற்றிருப்பார். அந்த வகையில் முரளிதரன் தமிழனாக இருந்தாலும், அவரது வர்க்க அடிப்படை தான் கிரிக்கெட்டில் முன்னுக்கு வர உதவியது எனலாம். நிச்சயமாக இதெல்லாம் திரைப்படத்தில் பேசப் படப் போவதில்லை. நமது பெரு மதிப்புக்குரிய தமிழின உணர்வாளர்களும் வாய் திறக்க மாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது முத்தையா குடும்பத்திற்கு சொந்தமான வணிக நிறுவனம் சிங்களக் காடையரினால் கொளுத்தப் பட்டது. முரளியின் தந்தைக்கு வெட்டு விழுந்தது. ஆகவே அவர்களும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் தான். இருப்பினும், இழந்த செல்வத்தை மீண்டும் திரட்டிக் கொண்டதும் தமது மேட்டுக்குடி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டனர். கிரிக்கெட்டால் நிறைய சம்பாதித்த முரளிதரனும் தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலிட்டுள்ளார். ஆகையினால், முதலாளிகளின் இடத்தில் இருந்து பார்த்தால், அரசுக்கு ஆதரவாக இருப்பது அவர்களது வர்க்க நலன்களுக்கு அனுகூலமானது.

தென்னிலங்கையில் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் தமிழ் முதலாளிகள் எல்லோரும் அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த விடயத்தில், தென்னிலங்கையில் வாழும் வட மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலதிபர்களும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் கோடீஸ்வரரான மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் நீண்ட காலமாக UNP அனுதாபி. UNP எனும் வலதுசாரி பேரினவாதக் கட்சி தான் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது. பேரழிவு தந்த ஈழப்போரை தொடங்கி வைத்த பெருமைக்குரியது.

அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமோக்கிராட்டிக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். அதனால் அந்நாட்டில் உள்ள முதலாளிகளும் இவ்விரு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பார்கள். அதே மாதிரியான நிலைமை தான் இலங்கையிலும் நிலவுகிறது. மகாராஜா முதலாளி UNP அனுதாபி என்றால், முத்தையா முரளிதரன் SLFP அனுதாபி. அவ்வளவு தான் வித்தியாசம். அதிகம் பேசுவானேன். போர் முடியும் வரை தீவிர புலி விசுவாசிகளாக வெளிநாடுகளில் நிதி சேகரித்து மூலதனம் திரட்டியவர்கள், இன்று இலங்கைக்கு சென்று ராஜபக்சே ஆசீர்வாதத்துடன் முதலிட்டுள்ளனர். அதிலென்ன ஆச்சரியம்? இனம் இனத்தோடு தான் சேரும். முதலாளிகள் எப்போதும் அதிகார வர்க்கம் சார்ந்து நிற்பார்கள். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நிழல் அரசை ஆதரித்த அதே முதலாளிகள், பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அரச ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். அது முதலாளிகளின் இயற்கையான வர்க்கக் குணாம்சம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

இன்னும் தயாரிக்கப் படாத திரைப்படம் ஒன்றுக்காக, இல்லாத எதிரிக்காக காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திடீர் தமிழின உணர்வாளர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் புரியப் போவதில்லை. முதலில், முரளிதரன் போன்ற முதலாளித்துவவாதிகள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதே மடமைத்தனம். "ஐயா, இது காளை மாடு, பால் தராது" என்கிறேன். அவர்களோ "இல்லை இல்லை, மாடென்றால் பால் தரத் தானே வேண்டும்?" என்று அடம் பிடிக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழின ஆதரவு, தமிழினத் துரோகம் என்று தட்டையாக பார்த்து பழகி விட்டனர். அவர்களிடம் சென்று வர்க்க அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வார்களா? இந்த விடயத்தில் முத்தையா முரளிதரன் மட்டுமல்லாது, அவரை எதிர்ப்பவர்களும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்கின்றனர்.

 

- கலையரசன் - 

20-10-2020

Saturday, October 17, 2020

முரளியை மிரட்டும் தாமரையின் அரைவேக்காட்டு ஈழ அரசியல்

"அன்று தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்...!" என்று கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையாக வன்முறையை ஆதரிக்கும் கூற்று மட்டுமல்ல. கவிஞர் தாமரை தனக்கு புலிகளின், ஈழத்து அரசியல் பற்றி ஒரு மண்ணும் தெரியாது என்பதை வெளிப்படுத்தி விடுகிறார். 

ஈழப்போர் முடிவுக்கு வரும் வரையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு அப்பால் புலிகளுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை என்பது தான் யதார்த்தம். அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே ஏக பிரதிநிதிகளாக இருக்க விரும்பினார்கள். அதனால் தமக்கு எதிராக மட்டுமல்லாது, போட்டியாக இருந்த தமிழ்த்தேசியவாதிகளைக் கூட கொன்றொழித்தார்கள். ஆனால், வட- கிழக்கு முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்ன அரசியல் பேசுகிறார்கள் என்பது பற்றி அக்கறைப் படவில்லை. அவர்கள் எல்லோரும் தமக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் இருந்தாலும் புலிகளைப் பொறுத்த வரையில் "Never mind" கொள்கை தான். 

இந்தப் பின்னணியில் பார்த்தால், முரளிதரனின் அரசியல் நிலைப்பாட்டை புலிகள் அன்றே கணக்கெடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அன்று கிரிக்கெட் வீரர்கள் அரசியலை தாண்டி அனைத்து மக்களாலும் ஆராதிக்கப் பட்டார்கள். சிங்களவர்கள், தமிழர்கள் யாராக இருந்தாலும் கிரிக்கெட் பைத்தியமாக இருந்தார்கள். இதற்கு புலிகள் இயக்க போராளிகளும் விதிவிலக்கல்ல. முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் எந்தத் தாக்குதலும் நடக்காது. அன்றைய தினங்களில் மட்டும் இராணுவத்தினரும், புலிகளும் "இலங்கையராக" ஒன்றிணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்து இரசிப்பார்கள். 

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் முத்தையா முரளிதரனை புலிகளே நேரில் அழைத்து வரவேற்று உபசரித்தார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து புலிகளையும் மயக்கி இருந்தது. சில நாட்கள் வன்னியில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஒழுங்கு படுத்தினார்கள். வன்னியில் புலிகளோடு சம்பந்தப் படாத ஒருவருக்கு கட் அவுட் வைத்திருந்தால், அது முரளிதரனுக்கு மட்டும் தான்! அத்துடன் கொக்க கோலா விளம்பரங்களும் சேர்ந்து கொண்டமை வேறு கதை. 

மீண்டும் அரசியலுக்கு வருவோம். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட முரளிதரனுக்கு அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும். அவரது அபத்தமான பேச்சுகள் யாவும் மேட்டுக்குடி மனப்பான்மையில் இருந்தும், ஒரு சாமானியனின் உலகப் பார்வையில் இருந்தும் பிறக்கின்றன. இந்த உண்மை அன்று புலிகளுக்கும் புரிந்திருக்கும். உண்மையில் புலிகள் இருந்த காலத்தில், தென்னிலங்கையில் வெளிப்படையாக அரசை ஆதரித்த கொழும்பு/மலையகத் தமிழ் அரசியல்வாதிகள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் தெரிந்து கொண்டே பேசிய நச்சுக் கருத்துகளுடன் ஒப்பிட்டால், முரளிதரன் பேசியது ஒன்றுமேயில்லை. Wait... இனித் தான் கிளைமாக்ஸ். அதே அரசியல்வாதிகள் சிலருடன் புலிகளும் நட்பு பாராட்டினார்கள்! எந்தளவுக்கு என்றால், கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிப் போராளிகளுக்கு மறைவிடம் ஒழுங்கு படுத்தியதும் அவர்கள் தான்! 

சுருக்கமாக: கொழும்பு, மலையகத் தமிழர்களில் சிலர் அரசுக்கு ஆதரவாக இருப்பதை புலிகள் கண்டிக்கவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. இன்னும் சொன்னால், புலிகள் அதை அங்கீகரிக்கும் நிலையில் தான் இருந்தனர். இதற்கு தேசியத் தலைவர் பிரபாகரனே மிகச் சிறந்த உதாரணம். 

கிளிநொச்சியில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் ஒருவர் கேள்வி கேட்டார்: 

"மலையகத் தமிழர்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?" 

தலைவர் பிரபாகரன்: 

"அவர்கள் சிறிலங்கா அரசுடன் சேர்ந்தியங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்!" 

 

மேலதிக தகவல்களுக்கு எனது காணொளியை பார்க்கவும்: 

 

Friday, October 16, 2020

மகாவம்சம் சொல்லாத "திராவிட விஜயன்" கதை!

Thor Heyderdahl ஒரு பிரபலமான நோர்வீஜிய அகழ்வாராய்ச்சியாளர். அவர் எழுதிய The Maldive Mystery என்ற நூல் வாசிக்கக் கிடைத்தது. பண்டைய நாகரிகங்கள் பற்றிய தோர் ஹெய்டர்தாள் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, ஆதி கால மனிதர்கள் வைக்கோல் படகுகளில் அட்லாண்டிக், பசுபிக் சமுத்திரங்களை கடந்து பிரயாணம் செய்தனர் என்பதை நிரூபித்தவர். ஆதி கால கடலோடிகள் பயன்படுத்திய அதே புற்களால் கட்டப் பட்ட KON TIKI என்ற படகை தானே உருவாக்கி அட்லாண்டிக் சமுத்திரத்தை கடந்து சென்றவர். அந்தச் சம்பவம் திரைப்படமாகவும் வந்தது. 

தென் அமெரிக்கா மட்டுமல்ல, மாலைதீவும் ஏற்கனவே பண்டைய கால மனிதர்களால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம் என்பது அவரது வாதம். அதை நிரூபிப்பதற்காக இரண்டு, மூன்று தடவைகள் மாலைதீவுக்கு பயணம் செய்து, அரசின் உதவியுடன் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் தயங்கிய மாலைதீவு அரசு பின்னர் வேண்டிய அளவு ஒத்துழைப்பு வழங்கியது.

இன்று நூறு சதவீதம் இஸ்லாமியர்களாக உள்ள மாலைதீவு பிரஜைகள், தமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை அறிந்துகொள்ள ஆர்வமற்று உள்ளனர். அதற்கு அங்குள்ள மத அடிப்படைவாத சக்திகளின் எதிர்ப்பும் ஒரு காரணம். மாலைதீவுக்கு இஸ்லாம் வருவதற்கு முன்னர், அங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் போன்று வாழ்ந்து வந்ததாக நம்ப வைக்கப் பட்டுள்ளனர். ஆகையினால், மாலைதீவுவாசிகளின் இஸ்லாத்திற்கு முந்திய மத நம்பிக்கைகளை காட்டும் இடிபாடுகள் எதையும் விட்டு வைக்கவில்லை. அவை அடித்து நொறுக்கப் பட்டன.

தோர் ஹைடர்தாளின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் கடும் பிரயத்தனத்தின் பின்னரே, புராதன கோயில்கள் இருந்த இடங்களை கண்டுபிடித்தனர். அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாலைதீவில் வாழ்ந்த மக்கள் இந்துக்களாகவும், பௌத்தர்களாகவும் இருந்த உண்மையை கண்டுபிடித்தனர். இது ஏற்கனவே மாலைதீவு அரசில் உள்ளவர்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை.

மாலைதீவு ஆயிரம் தீவுகளை கொண்ட தேசம். சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அனேகமாக தொலைதூர தீவுகளில் பண்டைய மதச் சின்னங்கள் இன்னமும் காணப்படுகின்றன. இந்த அகழ்வாராய்ச்சி குழுவினரும் அந்தத் தீவுகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த எழுபது, எண்பது வயதுகளை கடந்த வயோதிபர்களை கண்டு கதைத்தனர். அதன் மூலம் ரேடின் என்ற பண்டைய இன மக்கள் பற்றி அறிந்து கொள்கின்றனர். அவர்கள் பிரமிட் மாதிரியான கட்டிடங்களை கட்டியுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் ரேடின் இன மக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டனர்.

இலங்கையில் இருந்து பௌத்த- சிங்களவர்கள் படையெடுத்து வந்து மாலைதீவுகளை கைப்பற்றிய வரலாறு இன்று வரை பேசப் படுகின்றது. அதனால் மாலைதீவில் பல நூறாண்டுகள் பௌத்த மதம் இருந்துள்ளது. பண்டைய ரேடின் இனத்தவர்கள் கட்டிய பிரமிட்டின் இடிபாடுகளின் மீது புத்த ஸ்தூபா கட்டப் பட்டது. அவற்றின் இடிபாடுகளும் அங்கே உள்ளன. இன்றைய மாலைதீவு மக்கள், இலங்கையில் இருந்து வந்த சிங்களவர்களை அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதினாலும், அங்கு இனக்கலப்பு நடந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் மாலைதீவு மக்கள் பேசும் தீவேஹி மொழி கிட்டத்தட்ட சிங்களம் போன்றிருக்கும்.

மாலைதீவு மக்கள் பேசும் மொழியில் நிறைய தமிழ்ச் சொற்கள் உள்ளன. குறிப்பாக உறவுமுறைகளை தமிழில் அழைக்கிறார்கள். இதன் மூலம் தென்னிந்தியாவில் இருந்து சென்ற தமிழர்களும் மாலைதீவில் குடியேறி இருக்கலாம் என அறிய முடிகிறது. அத்துடன் மாலைதீவில் கண்டெடுக்கப் பட்ட இந்து மதச் சின்னங்களும், கோயில் இடிபாடுகளும் தமிழர்களுடையவையாக இருக்கலாம். அதே நேரம், வட இந்தியாவில், குறிப்பாக குஜராத்தில் இருந்து வந்து மாலைதீவில் குடியேறியவர்களும் இந்துக்களாக இருக்கலாம். அதற்கு ஆதாரமாக நல்லது என்பதற்காக பயன்படுத்தும் அதே சொல் குஜராத்தில் பேசப் படுவதை சுட்டிக் காட்டுகிறார்.

மாலைதீவின் வட இந்தியக் குடியேறிகளுடனான தொடர்பானது, அந்நாட்டின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாலே அருங்காட்சியகத்தில் உள்ள இந்த செப்புத் தகட்டில் எழுதப் பட்டுள்ள ஒரு புராணக் கதை, இலங்கையில் மகாவசத்தில் எழுதப் பட்ட விஜயன் கதையை ஒத்திருப்பது ஆச்சரியத்திற்கு உரியது.

மகாவம்சத்தில் வரும் விஜயன் கதை இவ்வாறு கூறுகின்றது: வட இந்தியாவில் ஒரு நாட்டை ஆண்ட சிங்கத்திற்கு பிறந்த மன்னன், தனது மகனான விஜயனையும், அவனது எழுநூறு தோழர்களையும் இரண்டு கப்பல்களில் ஏற்றி நாடுகடத்தி விட்டான். ஒரு கப்பல் நாகதீபத்தை (இலங்கை) வந்தடைந்தது. இன்னொரு கப்பல் மகிழதீவை அடைந்தது. மகாவம்சம் மகிழதீவு எனக் குறிப்பிடுவது மாலைதீவாக இருக்கலாம்.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயம் உள்ளது. ஒரு கப்பலில் ஆண்களும், இன்னொரு கப்பலில் பெண்களும், பிள்ளைகளுமாக இரண்டு கப்பல்கள் சென்றுள்ளன. ஆண்களின் கப்பல் இலங்கையை சென்றடைந்தது. பெண்களின் கப்பல் மாலைதீவை சென்றடைந்தது. அண்மைய வரலாற்றுக் காலகட்டத்திலும் மாலைதீவு "பெண்களின் ஆட்சி" நடக்கும் நாடாக கருதப்பட்டு வந்தது. இஸ்லாம் பரவிய காலத்தில் மாலைதீவை ஓர் அரசி ஆண்டு வந்தாள். அதை அரேபிய யாத்ரீகர்களும் தமது பயணக் குறிப்புகளில் எழுதி உள்ளனர். இன்றைக்கும் மாலைதீவு சமூகத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன.

மாலைதீவின் பண்டைய வரலாற்றைக் கூறும் செப்புத்தகடுகளில் எழுதப்பட்ட புராணக் கதையில் விஜயன் என்ற பெயர் மட்டுமே இல்லை. மற்றும்படி பல தகவல்கள் ஒத்துப் போகின்றன. அதிலும் வட இந்தியாவில் இருந்து எழுநூறு பேர் இரண்டு கப்பல்களில் வந்ததாக எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் ஒரு இடத்தில் மாறுபடுகிறது.

மாலைதீவு வரலாற்றின் படி, வட இந்திய நாட்டை ஆண்ட மன்னன் சிங்கத்திற்கு பிறக்கவில்லை. ஆனால், அவன் ஒரு காட்டு மனிதனை அரண்மனையில் வளர்த்து வந்ததாக கூறுகின்றது. அதாவது, காட்டுக்கு வேட்டையாட சென்ற மன்னன் இந்த காட்டு மனிதனை கண்டு அழைத்து வந்திருக்கிறான். மிருகம் போன்று நான்கு கால்களில் நடந்த அந்த மனிதனுக்கு எந்த மொழியும் பேசத் தெரிந்திருக்கவில்லை. அரண்மனையில் வளர்க்கப் பட்ட காட்டு மனிதன் மன்னனின் மொழியை பேசக் கற்றுக் கொண்டதுடன், அவனுக்கு காட்டுக்குள் உள்ள திரவியங்களையும் அடையாளம் காட்டியுள்ளான்.

ஒரு கட்டத்தில் பட்டத்து இளவரசியான தனது மகள் காட்டு மனிதன் மீது காதல் கொண்ட படியால், ஆத்திரமடைந்த மன்னன் இரண்டு போரையும் நாடுகடத்தி விடுகிறான். அந்தக் காட்டு மனிதனும், இளவரசியும் மாலைதீவில் வந்திறங்கி அரச வம்சத்தை தொடங்கியதாக கதை நகர்ந்து செல்கிறது. அநேகமாக இந்தக் காட்டு மனிதன், இலங்கை மகாவம்சக் கதையில் சிங்கமாக திரிபு பட்டிருக்கலாம். காட்டுக்குள் தவற விடப் பட்ட குழந்தை, காட்டு விலங்குகளால் வளர்க்கப் பட்ட கதைகளை கேள்விப் பட்டிருப்போம். இதுவும் அதே போன்று நடந்திருக்கலாம். அநேகமாக இந்த காட்டு மனிதன் சிங்கமாக திரிபடைந்து இருக்கலாம்.

விஜயனும் தோழர்களும் கிழக்கிந்திய பிரதேசமான வங்காளம் அல்லது ஒரிசாவில் இருந்து வந்திருக்கலாம் என சிங்களவர்களால் நீண்ட காலமாக நம்பப் பட்டு வந்தது. மகாவம்சத்தில் அப்படி எழுதப் பட்டிருந்தது. நாம் இங்கே ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். விஜயன் கதை நடந்ததாக மகாவம்சம் கூறும் காலகட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பின்னர் தான் பௌத்த மதம் இலங்கைக்கு வந்தது.

இலங்கைக்கு பௌத்த மதம் வந்து முன்னூறு வருடங்களுக்கு பிறகு தான் மகாவம்சம் எழுதப் பட்டது. ஆகவே மகாவம்சம் எழுதிய காலத்திலேயே விஜயனின் கதை ஒரு புராணக் கதையாகி விட்டது. அது நடந்தமைக்கான எந்த ஆதாரமும் கிடையாது. நாட்டார் கதைகள் போன்று ஒரு செவி வழிக் கதையாக மக்களால் பேசப் பட்டு வந்த விஜயன் கதையை தான் மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. ஆகவே அதை எழுதியவர்களுக்கும் அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது.

மேலும் மகாவம்சம் பௌத்த மதத்தை மேன்மைப் படுத்தும் நூல் ஆகும். சிங்களவரின் பூர்வீகம் என்னவாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் என்ன மொழி பேசினாலும், இலங்கையில் பௌத்த மதத்தின் வரலாற்றைக் கூறுவது தான் அதன் நோக்கம். அதற்கு பொருத்தமாக ஒரு ஜாதகக் கதையை தெரிவு செய்துள்ளது. அதாவது, வட இந்தியாவில் புத்த மதம் சார்ந்து பரப்பப் பட்ட ஜாதகக் கதைகளில் விஜயன் கதையும் ஒன்று. அதைத் தான் மகாவம்சம் சில மாற்றங்களுடன் பிரதி எடுத்துள்ளது. ஒரு வேளை, சிங்களவர்கள் இந்துக்களாக இருந்திருந்தால், மகாவம்சமும் இந்து மதத்தை உயர்த்திப் பிடித்திருக்கும். அது இராமனின் கதையில் இருந்து இலங்கையின் வரலாற்றை சொல்லத் தொடங்கி இருக்கும்.

இந்த உண்மையை, தோர் ஹைடர்தாள் தனது குஜராத் பயணத்தின் மூலம் இந்த நூலில் நிரூபிக்கிறார். அவர் குஜராத்தில் பாரூஷ் என்ற பண்டைய நாகரிகம் நிலவிய இடத்தை சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு காணப்பட்ட இந்து சின்னங்கள் மாலைதீவு இடிபாடுகளில் கண்டெடுக்கப் பட்டன. அந்தப் பிரதேசம் ஒரு காலத்தில் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்பு பட்டிருந்தது. அதாவது, குஜராத்தின் பாரூஷ் பிரதேசமும் ஹரப்பா நாகரிகம் நிலவிய இடம் தான். இலங்கைக்கு கடற்பயணம் செய்த விஜயனும், தோழர்களும் குஜராத்தில் இருந்தே சென்றிருக்க வேண்டும். The Maldive Mystery நூலில் எழுதப்பட்டுள்ள இந்த உண்மையை, தற்கால வரலாற்று ஆசிரியர்கள் கூட உறுதிப் படுத்தி உள்ளனர்.

மேற்படி தரவுகளில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வரலாம்:

  • இலங்கையில் சிங்களவர்கள் முன்னொரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய தமிழர்களாக இருந்தவர்கள். வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய குழுவினரின் ஆதிக்கம் காரணமாகத் தான் சிங்களம் என்ற புதிய மொழி தோன்றியது. அதைப் பேசியவர்கள் சிங்களவர்கள் ஆனார்கள். சிங்களம் இந்தோ- ஆரிய மொழியாக வகைப் படுத்தப் படுகின்றது. வட இந்திய குடியேறிகள் கொண்டு வந்த சமஸ்கிருதம், பாளி மொழிகள், தமிழுடன் கலந்து சிங்களம் உருவாகியது.
  • குஜராத்தியர்கள் பேசும் மொழியும் இந்தோ- ஆரிய மொழி தான். அது மட்டுமல்ல, ஹரப்பா நாகரிகம் நிலவிய பாகிஸ்தான் பகுதியில் வாழும் மக்கள் சிந்தி என்ற இன்னொரு இந்தோ- ஆரிய மொழியை பேசுகிறார்கள். இன்றைக்கும் சிந்தி மக்கள் தமது முன்னோர்கள் தான் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியதாக சொல்லிக் கொள்கிறார்கள்.

  • ஹரப்பா நாகரிகம் தமிழர்களுடையது என்று நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். அங்கு வாழ்ந்த மக்கள் தமிழ் பேசினார்கள், அல்லது அது போன்ற திராவிட மொழியை பேசினார்கள் என்கிறோம். அது உண்மையாயின், அங்கு வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் தாம் பேசிய திராவிட (அல்லது தமிழ்) மொழியை கைவிட்டு விட்டு இந்தோ- ஆரிய மொழியை பேசத் தொடங்கி இருக்கலாம். அவர்கள் இனத்தால் திராவிடர்களாகவும், மொழியால் ஆரியர்களாகவும் இருந்திருக்கலாம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் காட்டலாம். அந்தப் பிரதேசத்தில் பேசப்படும் பிராஹுய் ஒரு திராவிட மொழி. பலுச்சி ஒரு இந்தோ ஆரிய மொழி. ஆனால், முன்னொரு காலத்தில் பிராஹுய் மொழி பேசிய மக்கள் தான் பிற்காலத்தில் பலுச்சி மொழி பேசுவோராக மாறினார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
  • இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வட இந்தியாவில் வாழ்ந்த நாகரிக சமுதாயம், கொலம்பஸ் போன்ற கடலோடிகளாக பிற நாடுகளை கண்டுபிடிக்கும் கடற்பயணங்களை மேற்கொண்டிருக்கலாம். அவ்வாறு கிளம்பிய குழுக்களில் ஒன்று இலங்கையை வந்தடைந்து, அங்கேயே குடியேறி இருக்கலாம். அவர்கள் அங்கு வாழ்ந்த இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இன மக்களை படுகொலை செய்து, எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்துள்ளனர். இதே மாதிரியான வரலாறு, உலகின் பிற பாகங்களிலும் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, கொலம்பஸின் கடற்பயணங்களின் போது கண்டுபிடிக்கப் பட்ட மத்திய அமெரிக்கப் பகுதிகளில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், அங்கு வாழ்ந்த மாயா, அஸ்தேக் பழங்குடி இன மக்களை படுகொலை செய்து எஞ்சியவர்களுடன் இனக்கலப்பு செய்தனர். இன்று மெக்சிக்கோவில் இந்தக் கலப்பினத்தவர் தான பெரும்பான்மையாக உள்ளனர். 

 

இது குறித்து நான் வெளியிட்ட காணொளிப் பதிவு:

Thursday, October 15, 2020

நிலக்கரி வல்லரசு - பிரிட்டனின் உலக மேலாதிக்கம்

முதலாளித்துவம் தோற்றமும் வரலாறும் 

முதலாளித்துவ தத்துவ அறிஞர்களான அடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிறோர் மட்டுமல்ல, கம்யூனிச தத்துவ அறிஞரான கார்ல் மார்க்ஸ் கூட, நீராவி இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, இரும்புத் தொழிற்துறை தான் முதலாளித்துவத்தின் அடிப்படை என்று கூறியிருக்கின்றனர்.

இயந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி அத்தியாவசியமானது. அது அன்றைய காலத்தில் எண்ணை, அல்லது மின்சாரம் போன்று மதிப்பு வாய்ந்த எரிபொருளாக இருந்தது. அதற்கு முன்னர் காற்றாடி மற்றும் நீரில் சுழலும் சக்கரம் மூலம் இயந்திரங்கள் இயங்குவதற்கான சக்தி பெறப்பட்டது. இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தன.

நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், அது ஆடைத் தொழிற்சாலை உட்பட பல தொழிலகங்களில் பாவனைக்கு வந்தது. அத்துடன் தரமான இரும்பு, உருக்கு கிடைத்த படியால், குதிரை வலுவால் கணிப்படப் படும் இயந்திரங்களின் செயல்திறனும் அதிகரித்தது.

இங்கிலாந்தில் நீராவி இயந்திரங்களின் எரிபொருளாக பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியின் கேள்வி அதிகரித்த படியால் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. இந்த சுரங்கங்கள் பணக்கார முதலாளிகளின் சொந்தமாக இருந்தன. சிலநேரம் ஒரு பெரும் நிலவுடமையாளருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் தோண்டப் பட்டிருக்கலாம்.

சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான, வசதிகள் குறைந்த நிலையில் வேலை செய்தனர். சில நேரம் சுரங்கம் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இருப்பினும் இங்கிலாந்து முழுவதும் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் பட்டது. அதனால் அப்போதே அவர்கள் “தொழிலாளர்களில் ஒரு மேட்டுக்குடி” என்று அழைக்கப் பட்டனர். இதில் ஒரு நன்மையையும் உண்டானது. சுரங்கத் தொழிலாளர்கள் தான் முதன்முதலாக ஒன்று திரண்டு தமக்கென தொழிற்சங்கம் அமைத்தனர். மிகக் கடினமான உடல் உழைப்பைக் கோரும் சுரங்கத் தொழில் காரணமாக அவர்களுக்குள் தோழமை உறவு ஏற்பட்டிருந்தது.

அந்தக் காலத்தில் இங்கிலாந்து நிலக்கரி மிகவும் மலிவாக கிடைத்து வந்தது. அதனால் அதை எரிபொருளாக பயன்படுத்துவதும் மலிவாக இருந்தது. தொழில்நுட்ப தேர்ச்சி காரணமாக ஒவ்வொரு தொழிற்துறைக்கும் தனியான நீராவி இயந்திரங்கள் தயாரிக்கப் பட்டன. இதனால் நிலக்கரி எனும் எரிபொருளின் தேவையும் அதிகரித்தது.

ரயில், கப்பல்களில் நீராவி இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக போக்குவரத்து செலவு பெருமளவு குறைந்தது. தரையிலும் கடலிலும் விரைவான போக்குவரத்து நடந்தது. இதனால் புதிய பாதைகள் உருவாகின. இவற்றை பயன்படுத்தி பெருமளவு உற்பத்திப் பொருட்களை எல்லா இடங்களுக்கும் அனுப்ப முடிந்தது.

இங்கிலாந்தில் மட்டுமல்லாது, பெல்ஜியம், ஜெர்மனியிலும் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. அதனால் அவையும் இங்கிலாந்துக்குப் போட்டியாக தொழிற்துறை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் ஆகின. இந்த போட்டி, முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் முற்றி வெடித்து முதலாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. அது வேறு கதை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து தான் உலகம் முழுவதும் நிலக்கரி ஏற்றுமதி செய்து வந்தது. அன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இங்கிலாந்தில் இருந்து வந்தது. இதனால் பிரித்தானியா என்ற பெயரில் இருந்த இங்கிலாந்தின் உலக மேலாண்மை நிலை உறுதிப் படுத்தப் பட்டது. இது மேலும் சர்வதேச சமூக பொருளாதார மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. கார்ல் மார்க்ஸ், முதலளைத்துவத்தில் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து அதிகமாக ஆய்வு செய்ததில் எந்த அதிசயமும் இல்லை.

நீராவி இயந்திரங்களின் பயன்பாடு இங்கிலாந்தில் தொடங்கிய படியால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக மாறியது. இது பிற்காலத்தில் ஜெர்மனி, அமெரிக்காவால் பின்பற்றப் பட்டது. அன்றைய இங்கிலாந்து நிலக்கரி, பருத்தி ஆடைகள் போன்ற தொழிற்துறைப் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. இன்றும் பெரும்பாலான பணக்கார நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.

இங்கிலாந்தில் அந்தக் காலத்திலேயே பிரெஞ்சு மொழியில் “செய்ய விடு” என்று அர்த்தம் தரும் Laissez faire எனும் “சுதந்திர முதலாளித்துவம்” நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது அரசு முதலாளிகளின் விடயத்தில் தலையிடாக் கொள்கையை பின்பற்றியது. இதனை முதன்முதலாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்த பொருளியல் அறிஞரான அடம் ஸ்மித் வலியுறுத்தி வந்தார். அவரது சிந்தனைகள் முதலாளித்துவ கோட்பாடுகளாக பின்பற்றப் பட்டன. சுதந்திர வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. விவசாயத்தை பாதுகாப்பது தடுக்கப் பட்டது. அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப் பட்டன. சுருக்கமாக, எல்லா இடங்களிலும் முதலாளித்துவ- லிபரல் சித்தாந்தம் கட்டாயமாக்கப் பட்டது.

முதலாளித்துவத்தின் பக்க விளைவாக உருவான ஏழைகள் ஏறக்குறைய அடிமைகள் போன்று நடத்தப் பட்டனர். அவர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமான செலவை அரசு பொறுப்பேற்றது. “வேலை இல்லம்” என்ற பெயரில் கட்டாய வேலை வாங்கும் முகாம்கள் உருவாக்கப் பட்டன. நீண்ட காலமாக சமூகத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள் ஏழைகள் குறித்து எந்த அக்கறையும் அற்று இருந்தனர். மார்க் ட்வைன் ஒலிவர் டிவிஸ்ட் என்ற உலகப் புகழ் பெற்ற நாவல் எழுதி வெளியிட்ட பின்னர் தான் ஏழைகளின் அவலம் வெளியில் தெரிய வந்தது.

ஏழைகள் வாழ்ந்த சேரிப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதனால் அன்றைய இங்கிலாந்தில் இருந்த மக்கட்தொகையில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இங்கிலாந்தில் லண்டன் மட்டுமல்லாது, மான்செஸ்டர், பேர்மிங்ஹாம், லிவர்பூல் போன்ற தொழிற்துறை நகரங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக கிராமப் புறங்களில் இருந்தும், அயர்லாந்தில் இருந்தும் பெருமளவு மக்கள் படையெடுத்து வந்தனர். நகரங்களில் அவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தது. இதனை பிரெடெரிக் எங்கெல்ஸ் தனது உழைக்கும் மக்களின் நிலைமை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

Tuesday, October 06, 2020

அமெரிக்கா, ஐரோப்பாவை பிடித்தாட்டும் கம்யூனிச பூதம்!

"அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேறத் தடை" என்று தந்தி டிவி ஒரு தட்டையான செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் அது அமெரிக்க- சீன பனிப்போரின் விளைவாக, சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான தடை. தந்தி டிவி இந்தத் தகவலை, "ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரான நடவடிக்கை" என்பது போன்று திரித்து வெளியிட்டுள்ளது. 

 கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான சீன தொழிலதிபர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியேறி உள்ளனர். மேலை நாடுகளின் குடியுரிமை சட்டமானது, பிற உலக நாடுகளில் இருந்து வரும் பணக்காரர்கள் குடியேறுவதற்கு இலகுவாக வசதிகளை செய்து கொடுக்கிறது. ஏராளமான சீனப் பணக்காரர்களும் அந்த சலுகையை பயன்படுத்தி அமெரிக்க பிரஜாவுரிமை அல்லது வதிவிட உரிமை பெற்றுள்ளனர். அமெரிக்காவில் குடியேறியுள்ள தொழிலதிபர்களில் பலர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுமாக இருப்பதால் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களாக உள்ளனர். சீனாவைப் பொறுத்தவரையில், எந்தளவு சக்திவாய்ந்த முதலாளியாக இருந்தாலும், அவர் சீன அரசுக்கு (அல்லது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு) கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அமெரிக்கா குடியேற்ற தடை போட்டதற்கான காரணம் அது தான். அமெரிக்காவிலும் பெரும் முதலாளிகள் ரிப்பப்ளிக்கன் அல்லது டெமோக்கிராட்டிக் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பார்கள். ஆனால் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமே வித்தியாசம். 

 மற்றும் படி, பொதுவாக அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எந்த வகையில் குடியேறுவதையும் அமெரிக்கா அனுமதிப்பதில்லை. அகதியாக செல்பவர்களையும் கண்காணித்து, தீவிர விசாரணை செய்து, பல்வேறு தடைகளை உண்டாக்குவது வழமை. இது அங்கே காலங்காலமாக பின்பற்றப் பட்டு வரும் நடைமுறை. அது ஒன்றும் புதினம் அல்ல.

 அதே நேரம் பிரித்தானிய பாடசாலைகளில் கம்யூனிசம் போன்ற முதலாளித்துவத்திற்கு எதிரான பாடக்குறிப்புகளை கற்பிக்கக் கூடாது என அரசு தடையுத்தரவு போட்டுள்ளது! மேலதிக விபரங்களுக்கு இந்தக் காணொளியை பார்க்கவும்.