Saturday, May 31, 2008

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

மியான்மரில் (ஆங்கிலேயர் இட்ட பெயர்: பர்மா) அடித்த புயல் ஓய்ந்தாலும், அதன் பிறகான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு நர்கீஸ் சூறாவளி பர்மாவின் நெல்விளையும் ஐராவதி ஆற்றுமுகப் பகுதியை தாக்கியதில் பல லட்சம் மக்கள் இறந்து, லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளான துயரச்சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளே, உதவி நிறுவனங்களின் நிவாரணப்பணிகள் ஆரம்பமாகி விட்டன. அள்ளிக்கொடுக்கும் ஐரோப்பியரின் நாடுகளில், மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேர்க்கும் பணி தீவிரமடைந்தது. சில நாட்களின் பின்னர், உதவி நிறுவனங்களும், அவை சார்ந்த நாடுகளும், அரசியல் சிக்கல்களில் மாட்டிக்கொண்டனர். மியான்மரை ஆளும் இராணுவ அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், தன்னார்வ தொண்டர்களை நாட்டினுள் பிரவேசிக்க விடாது தடுப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. இவை ஆரம்பத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், பின்னர் ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் முன் வைக்கப்பட்டன, பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரௌன், பர்மிய அரசு உதவிப்பொருட்கள் மக்களை போய் சேர விடாது தடுப்பதன் மூலம், பல ஆயிரம் உயிர்களை காவு கொள்கின்றது என்றும், இயற்கை அழித்தது போக, இப்போது மனிதனால் அழிவு உண்டாகிறது என்று பொருமினார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரோ, அதற்கும் மேலே போய், பர்மிய அரசு உதவிப்பொருட்களை ஏற்க மறுத்ததால், இதுவரை பத்தாயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்குலக சார்பு ஊடகங்களின் செய்திகளை பார்த்து வரும் ஒருவர் பின்வரும் முடிவுகளுக்கு வருவார். மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த நான்கு வாரங்களாக இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மக்கள் விரோத பர்மிய அரசு, அவசர தேவை இருந்த போதும், உதவிப்பொருட்களை வேண்டாம் என்று தடுத்து வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், இயற்கையால் பாதிக்கப்பட்டது போக, தற்போது அரசினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அப்படியே இருக்கட்டும். அத்தகைய செய்திகள் எல்லாம் உண்மையா? இதிலே ஓரளவு தான் உண்மை. பர்மிய இராணுவ அரசு நிவாரணப்பொருட்களை ஏற்க மறுப்பதும், பன்னாட்டு தொண்டர்களுக்கு விசா கொடுக்க மறுப்பதும் உண்மை தான். ஆனால் இந்த கெடுபிடி மேற்கு-ஐரோப்பா, மற்றும் அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டும் தான். சீனா, இந்தியா, மற்றைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் நிவராணப்பொருட்களுக்கும், தொண்டர்களுக்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் இது பற்றி மேற்குலகை சேர்ந்த எந்த ஊடகமும் கூறவில்லை. பல நாட்கள் நெருக்கடி கொடுத்த பின்னர், அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டும் நிவாரணப்பொருட்களை இறக்கி விட்டு செல்ல அனுமதித்தார்கள். அதே நேரம், எந்தவொரு அமெரிக்க தொண்டரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் கோபம் அதையிட்டு வந்தது தான்.

மேற்குலக தொண்டர்களை நாட்டினும் அனுமதிப்பதற்கு மியன்மார் அரசிற்கு என்ன பிரச்சினை? பல ஆண்டுகளாக மேற்குலகத்துடன் மிகக்குறைந்த அளவு உறவு வைத்திருந்த பர்மிய அரசு, "உதவி நிறுவன தொண்டர்கள்" என்ற போர்வையில் உளவாளிகள் வரலாம் என்று அஞ்சுகின்றது. தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது, பிற நாடுகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் கடந்த வருடம் தான், பெற்றோலின் விலை உயர்வை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்திற்கு, சக்தி வாய்ந்த பௌத்த பிக்குகள் தலைமை தாங்கியதை, பர்மிய அரசுக்கு எதிரான மதகுருக்களின் எழுச்சி என்று மேற்குலக ஊடகங்களும், அரசுகளும் சித்தரித்து வந்தன. ஏற்கனவே நூலிழையில் இருந்த மேற்குலக உறவு மிக மோசமான கட்டத்தை அடைந்தது. அப்போதெல்லாம் வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க தடை இருந்தது. ஆனால் தற்போது சூறாவளி ஏற்படுத்திய இயற்கை அழிவு அளவு கடந்ததாக உள்ளதால், சமாளிக்க முடியாத அரசு, வேறு வழியின்றி வெளியுலக தொடர்பினால் கிடைக்கும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கனவே தமது நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கலாம், தம்மை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சம் காரணமாகத் தான், மியன்மாரின் இராணுவ அரசு நாட்டின் தலைநகரை கடலை அண்டிய ரங்கூனில் இருந்து, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புதிதாக கட்டப்பட்ட "நய்பிடவ்" என்ற இடத்திற்கு மாற்றினார்கள். புதிய தலைநகரத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்பாக இருக்க நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டவர் நுழைய முடியாத மர்ம நகரான நியபிடவின் நிர்மாணம் ஓரிரு நம்பகமான ஆசிய கட்டுமான நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. மியன்மார் இராணுவ அரசு ஜோதிடத்திலும், எண் சாஸ்திரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. இலக்கம் 9 அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணாம். அதனால் தலைநகரின் பெயர் 9 ல் வரக்கூடியதாக வைத்திருக்கிறார்கள்.

சீனாவுடனான பொருளாதார உறவுகள், பர்மிய இராணுவ அரசின் நிலையான இருப்பிற்கு வழிவகுப்பது இரகசியமல்ல. கணிசமான மனிதஉரிமை மீறல்களை புரியும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு சீனா வழங்கும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலகம் கோரி வருகின்றது, அல்லது அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது. உண்மையில் எல்லாமே பொருளாதாரத்தை நோக்கி தான் நகர்கின்றன. மியன்மார் இதுவரை அளவிடப்படாத, இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "ரங்கூன் பெற்றோலிய நிறுவனம்" தற்போது இராணுவ அரசின் கையில். அந்நாட்டின் எண்ணை தற்போது சீனாவிற்கு ஏற்றுமதியாகின்றது. பர்மாவின் எண்ணை மட்டுமல்ல, நிலகீழ் வாயுவின் இருப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
உலகின் எரிபொருள் வளங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கம் கொண்ட அமெரிக்கா, பர்மா மீது கண் வைப்பதும் அதனால் தான். ஆனால் ஆசிய வல்லரசான சீனா, பர்மாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதன் காரணமாக, அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுவது எளிதன்று. இதனால் மனித உரிமை மீறல்களை காட்டி பிரச்சாரம் செய்து சர்வதேச ஆதரவை திரட்டி வருகின்றது. அதைபோலத்தான் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி, புதிய வாய்ப்புகளை வழங்கும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. உண்மையில் அமெரிக்காவிற்கு பர்மிய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. பர்மிய பொருளாதாரம் மீது உள்ள அக்கறை வேறு வடிவத்தில் வெளிப்படுகின்றது. தனது வீட்டை பார்க்காதவன், ஊருக்கு தொண்டு செய்வது போலத்தான் அமெரிக்க அரசின் நிலைப்பாடு. இரு வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க மாநிலமான நியூ ஒர்லின்சை சூறாவளி தாக்கிய பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, பாராமுகமாக இருந்த அரசின் செயல் பலரது கண்டனத்திற்குள்ளானது. அப்போதும் கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்களையும், தொண்டர்களையும் (அரசியல் காரணங்களுக்காக) ஏற்க மறுத்தது அமெரிக்க அரசு.

_________________________________________

Thursday, May 22, 2008

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.


பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

வெனிசுவேலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.

இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.

தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.

நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.

புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.

ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

__________________________________________________________
வெனிசுவேலா சம்பந்தமான பிற பதிவுகள்:
ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை


_________________________________________________

Monday, May 19, 2008

தென் ஆப்பிரிக்கா: "வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!"

தென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய ஊடகங்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா சிம்பாப்வே மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கோருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சினை வழக்கமான வேலை வாய்ப்பின்மை(தென் ஆப்பிரிக்காவில் வேலையற்றோர் 30%), அல்லது முதலாளித்துவ பொருளாதாரத்தின் இருண்ட மறுபக்கம் என்று பார்க்கத்தவறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின ஜனநாயகம் (நிறநாயகம்) ஆட்சியில் இருந்த காலத்தில், பெரும்பான்மை கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பொருளாதார பிரச்சினைகளும் முடிவுற்று விடும், என்று அப்பாவித்தனமாக நம்பினார், கறுப்பின மக்கள். ஆனால் பதவிக்கு வந்த நெல்சன் மண்டேலா என்றாலும், தபோ முபெகி என்றாலும் முதலாளித்துவ நியோ-லிபரல் பொருளாதாரம் நீடிக்க வழி வகுத்தனர். இதிலே மண்டேலா தனக்கு கம்யூனிசம் பற்றி தெரியும் ஆனால் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்று கூறியவர். தபோ முபெகியோ ஒரு மார்க்சிஸ்டின் மகன். இருவரும் தென் ஆப்பிரிக்காவின் தொழிற்சங்க கட்சி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் துணையுடன் பதவிக்கு வந்தவர்கள். இருப்பினும் மேற்குலகை அனுசரித்து, முதலாளித்துவ பொருளாதாரத்தை அப்படியே இருக்க விட்டார்கள்.

விளைவு? எல்லா நாட்டிலும் நடப்பது போல அதி குறைந்த கூலி கேட்கும் வேலையாட்களையே வேலைக்கு எடுக்க விரும்பும் முதலாளிகள், வறுமையான அயல் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தனர். தென் ஆப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்கள் இவர்களின் உழைப்பால் பலனடைந்தன. அதேநேரம் தென் ஆப்பிரிக்கவிலேயே வேலையற்ற தொழிலாளர்கள் பொறாமை கொண்டு தமது வேலைகளை, அயல் நாட்டினர் பறிப்பதாக நினைத்து, இந்த கலவரத்தில் இறங்கியுள்ளனர். சிறு வர்த்தகத்தில் ஈடுபட்ட சோமாலியர்களும் வன்முறைக்கு தப்பவில்லை. பூகோள மயப்பட்ட வேலையில்லாப்பிரச்சினை பற்றி கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்த செய்தியை தனது முதல் பக்கத்தில் வெளியிட்ட லண்டன் டைம்ஸ் பத்திரிகை, தென் ஆப்பிரிக்க வன்செயலில் பாதிக்கப்பட்டவர்கள் சிம்பாப்வே நாட்டினர் என்ற காரணத்தினால் அந்நாட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுதியுள்ளது. இதே டைம்ஸ் ஊடக தர்மம் கருதி, ஐரோப்பாவில் ஆசிய/ஆப்பிரிக்க நாட்டினர் பாதிக்கப்படும் போதும் இப்படி எழுதுமா? கடந்த தசாப்தங்களாக, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஆசிய, ஆப்பிரிக்க அகதிகள், அல்லது குடிவரவாளர்கள், வெள்ளையர்களால் தாக்கப்பட்ட போது; அந்த சம்பவங்களை வெறும் நிறவெறி வன்முறையாக காட்டின. ஆனால் பிரச்சினை எங்கேயும் ஒன்று தான். அது தென் ஆப்பிரிக்கவாக இருந்தாலென்ன, அல்லது இங்கிலாந்தாக இருந்தாலென்ன, முதலாளித்துவ சீர்திருத்தங்கள் காரணமாக, உள்ளூர் மக்கள் வேலை இழப்பதும், வெளிநாட்டவருக்கு குறைந்த ஊதியம் கொடுத்து, அதிக லாபம் சம்பாதிக்கும் முதலாளிகள் தமது சொந்த மக்களையே கண்டு கொள்ளாததும், எல்லா நாடுகளிலும் நடப்பது தான். முதலாளிகளுக்கு லாபம் மட்டும் முக்கியமே தவிர, தமது தேச நலன் முக்கியமல்ல.

கடந்த வருடம் ஜெர்மனியில் ஒரு இந்திய கணனிப் பொறியியலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். அப்போதும் அவரை தாக்கிய ஜெர்மன் இளைஞர்கள், இந்தியர்கள் தமது வேலைகளை பறிப்பதாக சொல்லித் தான் தாக்கினர். அடிமட்ட தொழிலாளர்களின் தொகை ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதால், அப்படியானவர்கள் வருவதை விரும்பாத ஐரோப்பிய யூனியன் நாடுகள் கணனிப் பொறியியல் வல்லுனர்களுக்கு தொழில் ஒப்பந்தம் வழங்கி வருகின்றன. அதேநேரம் அந்த வேலைகளுக்கு, அதே துறையில், ஐரோப்பாவில் கல்வி கற்றவர்கள் இருந்த போதும், அவர்கள் வேலை வாய்ப்பின்றி கஷ்டப்படுகின்றனர். அப்படி இருந்தும், இந்திய பொறியியலாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி வேலைக்கு வைத்திருக்கின்றன IT நிறுவனங்கள்.
துரதிர்ஷ்டவசமாக இத்தகைய வெளிநாட்டவர் மீதான வன்முறைகள் தொடரும் போக்கே புலப்படுகின்றது. இத்தனை நிறவெறி, இனவெறி,மதவெறி என்று பிரச்சினையை திசை திருப்பாமல், வேலையில்லாப்பிரச்சினையை தீர்க்க சம்பத்தப்பட்ட நாட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் வெளிநாட்டவர் எப்போதுமே வெறுக்கப்படவில்லை. ஐரோப்பாவில் அனைவருக்கும் வேலை இருந்த ஒரு காலத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வரவேற்க்கப்பட்டனர்.

______________________________________________

Sunday, May 18, 2008

அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது.

வழக்கமாகவே அந்த நாட்டில் இருந்து செய்திகள் எதுவும் வெளியுலகை எட்டுவதில்லை, என்ற அளவுக்கு பிரச்சினைகள் எதுவமற்ற நாடு என்று கருதப்படுகின்றது. அதுவும் பிற காலனிகளைப் போல் அல்லாது, ஆங்கிலேய குடியேற்றக்காரர்களும், உள்நாட்டு மவோரி மக்களும், ஒப்பந்தம் செய்து கொண்டு, சமாதானமாக வாழ்வதாக, நியூசிலாந்திலும் வெளியிலும் பெரும்பான்மையானோர் நினைத்துக்கொண்டிருக்கும் போது, சிறுபான்மை பூர்வீக மக்கள் பிரச்சினை அங்கேயும் தீரவில்லை, என்பதையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

19 ம் நூற்றாண்டில், ஹோலான்ட் நாட்டை சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசுபிக் சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் "கண்டுபிடித்த" தீவிற்கு , தனது தாயகத்தில் உள்ள மாகாணம் ஸேலாந்து (Zeeland) என்ற பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டின் ஐரோப்பிய காலனிய சரித்திரம் தொடங்குகின்றது. அங்கே குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினராக நியூசிலாந்தின் அரசியல்,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளை, பூர்வீககுடிகளான மவோரி மக்கள், சிறுபான்மையினராக சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தமது கலாச்சாரத்தை பேணிக்கொண்டு வாழ்கின்றனர்.

இருப்பினும், அந்த மக்கள் ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில், ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. அங்கே பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். முதலில் "மவோரி" என்ற பெயர் கூட, பல்வேறு மொழிகள் பேசும் உள்நாட்டு மக்களுக்கு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வழங்கிய பொதுப்பெயர் ஆகும். 1987 ம் ஆண்டில் இருந்து தான் மவோரி மொழிக்கு, ஆங்கிலத்துக்கு நிகரான உதிதியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழியிலேயே நியூசிலாந்துக்கு "அவோதியறோவா" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இருந்தே சில இனங்கள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தும், சில இனங்கள் எதிர்த்துப்போராடியும் வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் விவசாயநிலங்களை அபகரித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்த பூர்வீக மக்கள் காடுகளுக்குள் ஒளிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். காலனிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அன்னிய கலாச்சாரம் ஒன்றிற்கு அடிமையாதல், என்று கருதிய துஹோ இனம் தனது கடுமையான எதிர்ப்பை காலத்திற்கு காலம் காட்ட தவறவில்லை. 1975 ம் ஆண்டு நிலவுரிமை கோரி நடந்த ஊர்வலம் ஒன்றில், 40000 பேர் கலந்து கொண்டமை நியூசிலாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

சர்ச்சைக்குரிய "வைதாங்கி ஒப்பந்தம்", இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளை தூண்டிவிடும் காரணியாக உள்ளது. தேசியதினமாக அறிவிக்கப்பட்டுள்ள "வைதாங்கி தினம்" அன்று, மவோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் முடியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து தேசியக்கொடியை கிழிக்கும் போராட்டம் வருடாவருடம் நடக்கும். மவோரி மக்கள் வைதாங்கி ஒப்பந்தத்தை, நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை, என்றே கருதுகின்றனர்.

1840 ம் ஆண்டு, பெப்ருவரி 6 ம் திகதி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பிழையான மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சை இன்றைக்கும் தொடர்கின்றது.

ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியூசிலாந்து நாட்டின் "இறைமை"(sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என்று எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியூசிலாந்து நிலங்களின் மீதான "ஆளுகை"(governorship) உள்நாட்டு இனக்குழுத் தலைவகளின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது.

ஒப்பந்தத்தின் போது மவோரி தலைவர்கள் தாமே நியூசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளிகளாகவே அங்கே தங்கியிருப்பதாக கருதினர். அதற்குமாறாக நியூசிலாந்து ஆட்சியதிகாரத்தை மவோரிகள் தம்மிடம் ஒப்படைத்துவிட்டதாக, ஆங்கிலேயர் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அடுத்து வந்த வருடங்களில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்து கொண்டனர். பெரும்பான்மை நியூசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக்கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த, ஆங்கிலேயரின் ஈனச்செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிபெயர்ப்பால் சாத்தியமானது. "இறைமை", "ஆளுகை" போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம், அன்று மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்று அரசியல் அறிவு பெற்ற மவோரி மக்கள், தமக்கென சுயாட்சிப்பிரதேசங்களை கோருகின்றனர். தமது மொழி, பண்பாடு என்பன சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலமே சாத்தியமாகும் என நம்புவதால், அதற்கென அரசியல் வேலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகை மாற்றிய 2001 செப்டம்பர் 11 க்கு பிறகான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நியூசிலாந்தையும் பாதித்துள்ளது. அந்நாட்டு பயங்கரவாதிகள், சுயநிர்ணய உரிமை கோரும் பூர்வீக மவோரி மக்கள்.


Thursday, May 15, 2008

நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்

உலகில் மனித உரிமைகள் மீறும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் சேர்ந்துள்ளது. இவ்வாறு Human Rights Watch அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது. நெதர்லாந்தின் புதிய குடிவரவாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், அது பல்வேறு நாட்டு மக்களை பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, நெதர்லாந்து பிரஜை, அல்லது நெதர்லாந்தில் நிரந்தரமாக வசிக்கும் ஒருவரை திருமணம் செய்யும் வெளிநாட்டு பிரஜை இந்நாட்டின் டச்சு(நெதர்லாந்து) மொழி அறிவை பெற்றிருத்தல் வேண்டும். இதற்காக € 350,- செலுத்தி பரீட்சை எழுதி சித்தி அடைவதுடன், € 850,- கட்டி குடிவரவு விசா பெற்றுக்கொண்ட பின்னரே, புதிதாக மணம் முடித்த தம்பதிகள் ஒன்றுசேர முடியும். அதே நேரம் அவர்கள் 21 வயதிற்கு மேற்பட்டோராயும் இருக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை நிறுவனம் இந்த சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. முதலில் நெதர்லாந்து நாட்டில் வாழும் கணவன் அல்லது மனைவி தனது வாழ்க்கைத்துணையை பொறுப்பேற்பதற்கு, அடிப்படை சம்பளத்தை விட 120 % அதிகமாக எடுக்க வேண்டும். இது 23 வயது வரையான நபர்களுக்கு சாத்தியப்பட்டாத விடயம். இரண்டாவதாக கல்வியறிவு குறைந்தவர்களுக்கு பரீட்சையில் சித்தியடைவது கடினமாக இருக்கும். இது போன்ற காரணங்களால் புதுமண தம்பதிகள் வருடக்கணக்காக பிரிந்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இவ்வாறு பிரித்து வைப்பது குடும்ப நல சட்டங்களுக்கு முரணானது என்று, சுட்டிக்காட்டியுள்ள Human Rights Watch, நெதர்லாந்து அரசாங்கம் தனது கடும்போக்கை மாற்றிக்கொள்ளுமாறு கோரியுள்ளது. ஆனால் மனித உரிமைகள் பற்றி உலகிற்கு உபதேசம் செய்யும் நெதர்லாந்து அரசாங்கம், சட்டத்தை மேலும் கடுமையாக்கவே யோசித்து வருகின்றது. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை எடுப்போர் தொகை அதிகமாக இருப்பதாகவும், இதனால் குறைந்தளவு வீதமே தெரிவாகும் படி பரீட்சை கடினமாக்கப்பட வேண்டும் என்றும், குடிவரவு அமைச்சர் "கவலை தெரிவித்துள்ளார்."

புதிய குடிவரவாளர்கள் தனது தாயகத்தில் இருந்த படியே, மொழிப்பரீட்சையில் தேற வேண்டும் என்ற விதியை, உலகில் நெதர்லாந்து மட்டுமே முதன்முதல் கொண்டு வந்து "உலக சாதனை" படைத்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த சட்டம் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும், இலங்கை/இந்தியா போன்ற ஏழை நாடுகளை சேர்ந்த மக்களை மட்டுமே பாதிக்கின்றது. பிற ஐரோப்பிய யூனியன் நாட்டில் இருந்து, அல்லது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற பணக்கார நாடுகளில் இருந்து வந்து குடியேற விரும்பும் ஒரு நபர், இந்த நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலே நெதர்லாந்தில் இலகுவாக குடியேற முடியும். இவ்வாறு வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை பாகுபாடு காட்டுவதால், நெதர்லாந்து அரசாங்கம் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றது, என Human Rights Watch குற்றம் சாட்டுகின்றது.

இந்த சட்டம் ஒரு பக்கம் புதிதாக வரும் குடிவரவாளர்களை கட்டுப்படுத்தும் அதே சமயம், மறுபக்கத்தில் இந்த தடைகளை தாண்டி வருபவர்களிடம் பணம் கறக்கும் நோக்கிலும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. பரீட்சை, விசா கட்டணம் செலுத்தி நெதர்லந்திற்குள் வந்து விட்டால், நிம்மதி கிடைக்காது. டச்சு (நெதர்லாந்து) மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு € 3000,- செலவாகும். இந்த தொகையை செலுத்தமுடியாதவர்கள் அதனை அரசாங்கத்திடம் கடனாக பெற்றுக்கொள்ளலாம். வருடக்கணக்காக படித்தாலும் டிப்ளோமா எடுக்க முடியாதவர்கள் தண்டப்பணம் செலுத்த வைக்க வேண்டும் என்ற யோசனையும் அரசாங்கத்திடம் உள்ளது. மேலும் வலதுசாரி லிபரல் கட்சி தனது பிரேரணை ஒன்றில், € 7000, - வைப்புநிதியாக செலுத்தப்பட வேண்டும் என்றும், அது புதுமண தம்பதிகள் இருவரும் ஐந்து வருடம் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. அதன் நோக்கம், வெளிநாட்டவர்கள் 5 வருடத்திற்கு, வேலையற்றோர் உதவித்தொகை எடுக்காமல் அரசாங்கத்திற்கு தொடர்ந்து வரி செலுத்த வேண்டும் என்பது தான்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் கடும்போக்கு சட்டங்கள், தங்களை வேண்டா விருந்தாளிகளாக நடத்துவதாக மூன்றாம் உலகை சேர்ந்த குடிவரவாளர்கள் கருதுகிறார்கள். இதனால் டச்சு மொழி மட்டுமல்ல, நெதர்லாந்து கலாச்சாரம் பற்றி போதிக்கும் சமூகவியல் பாடங்களையும் கற்க மனமின்றி உள்ளனர். இதன் விளைவு, குடிவரவாளர் மொழி பயிலும் பாடசாலைகளை தனியார்மயமாக்கி பணம் சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்த்த அரசாங்கம், புதிதாக பதியும் மாணவர் தொகை மிகக்குறைவாக இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

குடிவரவாளர்களை "சிறந்த பிரஜைகளாக" மற்றும் சமூகவியல் பாடம், நெதர்லாந்தின் தேசியவாத அரசியலை திணிப்பதாகவும், அரச முடிக்குரிய விசுவாசிகளை உருவாக்குவதாகவும் உள்ளது. அதே நேரம் அவர்களை குறிப்பிட்ட தர வேலைகளுக்கு (சுத்திகரிப்பு, பண்ணை, தொழிற்சாலை) தயார்படுத்துவதாகவுமே உள்ளது. உதாரணத்திற்கு பரீட்சையில் கேட்கப்படும் சில கேள்விகளை இங்கே தருகிறேன். நெதர்லாந்தில் எப்படியான வேலைகளை நீங்கள் செய்யலாம்? நெதர்லாந்தில் பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? உங்கள் பிள்ளை ஓரினசேர்க்கையாளர் என்று தெரிய வந்தால் என்ன செய்வீர்கள்?

சிறந்த பிரசையாக்கும் நடைமுறை வெளிநாட்டு குடிவரவாளர்களை அவமதிப்பதாக, அப்படி இல்லாவிட்டால் நாகரிகம் பற்றி கற்க வேண்டியவர்களாக கருதுகின்றது. இது அவர்களின் மனதில் வெறுப்பை உருவாக்குவதாக மனித உரிமை நிறுவனம் சுட்டிக்காட்டியுளது.

  • Netherlands: Discrimination in the Name of Integration

  • .....................................................................................
    முன்னைய பதிவுகள் :
  • அகதி வைரஸ் 2.0(Made in Holland)

  • .....................................................................................

    Monday, May 12, 2008

    இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்


    "இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !

    இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.

    மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

    மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.

    இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.

    _______________________________________________

    Saturday, May 10, 2008

    லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு

    மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.

    லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.

    2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.

    அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.

    மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.

    "யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.

    இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.

    தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

    __________________________________________________