Tuesday, March 28, 2017

தமிழன்டா! லைக்கா முதலாளிக்கு விசுவாசமான அடிமைடா!!


யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌ இந்தப் பதிவு. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அப்பாவி மக்கள் மீது அறச்சீற்றம் கொள்ளும் தமிழின எழுச்சியாளர்கள், அந்த அப்பாவி பின்னால் நின்று மக்களை ஆட்டுவித்த லைக்கா முதலாளியை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். இப்போதும் நாங்கள் இதற்கெல்லாம் மூலகாரணமான லைக்காவின் பெயரை தப்பித் தவறியும் உச்சரிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழன்டா, லைக்காவின் அடிமைடா!

 ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் "நியாய‌ம‌ற்ற‌து" என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்?

இத‌ற்குப் பின்னால் உள்ள‌ வ‌ர்க்க‌ அர‌சிய‌லைப் புரிந்து கொள்ளுங்க‌ள். ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கை வ‌ச‌திக‌ளை அனுப‌விக்கும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ள். ஏற்க‌ன‌வே சொந்த‌ வீடு, உய‌ர் க‌ல்வி, உத்தியோக‌ம் எல்லாம் கிடைக்க‌ப் பெற்ற‌வ‌ர்க‌ள். ஆயிர‌ம் வ‌ச‌திக‌ள் இருந்தும் த‌மிழீழ‌ம் இல்லையே என்ப‌து ம‌ட்டுமே அவ‌ர்க‌ள‌து க‌வ‌லை.

ர‌ஜ‌னி என்ற‌ ந‌டிக‌னுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், வாழ்க்கையில் எந்த‌ வ‌ச‌தியும‌ற்ற‌ அடித்த‌ட்டு உழைக்கும் ம‌க்க‌ள். போரினால் பாதிக்க‌ப் ப‌ட்டு, இட‌ம்பெய‌ர்ந்து குடிசைக‌ளில் வாழும் ஏழைக‌ள். அவ‌ர்களுக்கு லைக்காவோ, அல்ல‌து‌ தொண்டு நிறுவ‌ன‌மோ இல‌வ‌ச‌மாக‌ க‌ட்டிக் கொடுக்கும் வீடுக‌ளை ம‌ன‌முவ‌ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள்.

லைக்கா க‌ட்டிய‌ வீடுக‌ளின் சாவிக‌ளை கொடுப்ப‌த‌ற்கு ர‌ஜ‌னிகாந்தை வரச் சொன்ன‌தும் கார‌ண‌த்தோடு தான். அது த‌யாரிக்கும் எந்திர‌ன் ப‌ட‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌மும் இத‌ற்குள் அட‌ங்கியுள்ள‌து. லைக்கா த‌ன‌க்கு ஆதாய‌ம் கிடைக்கும் என்ப‌தால் தான், 150 வீடுக‌ளை ஏழைக‌ளுக்கு க‌ட்டிக் கொடுத்த‌து. இதைத் தான் கோயில்க‌ளில் அன்ன‌தான‌ம் கொடுக்கும் "வ‌ள்ள‌ல்க‌ளும்" செய்கிறார்க‌ள். எல்லாம் விள‌ம்ப‌ர‌ம் தேடும் ம‌லின‌ உத்தி தான் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.

ஆனால் இங்கே ப‌ல‌ர் முக்கிய‌மான‌தொரு உண்மையை ம‌ற‌ந்து விடுகிறார்க‌ள். இவ்வ‌ள‌வு கால‌மும், வீட‌ற்ற‌ ஏழைக‌ள் குர‌ல‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ புற‌க்க‌ணிக்க‌ப் ப‌ட்டு வ‌ந்த‌ன‌ர். கூட்ட‌மைப்புக்கும், சைக்கிள் க‌ட்சிக்கும் இடையிலான‌ குடுமிப் பிடி ச‌ண்டையில் அந்த‌ ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் பேச‌ப் ப‌டுவ‌தில்லை.

ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌த்தை லைக்கா பின் நின்று ந‌ட‌த்தி இருந்தாலும், அந்த‌ ம‌க்க‌ளை கூட்டி வ‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னுக்கு நிறுத்திய‌த‌ன் முக்கிய‌த்துவ‌த்தை குறைத்து ம‌திப்பிட‌ முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது, ர‌ஜ‌னி ஆத‌ர‌வுப் போராட்ட‌மாக‌த் தான் தெரியும். அது ஸ்பொன்ச‌ர் ப‌ண்ணிய‌ லைக்காவின் உத்த‌ர‌வு. ஆனால், போராட்ட‌த்திற்கு செல்லாவிட்டால் வீடு கிடைக்காது என்ற‌ ப‌ய‌மும் அந்த‌ அப்பாவி ம‌க்க‌ள் ம‌ன‌தில் இருந்திருக்கும்.

இந்த‌ நாட‌க‌த்தை பின்னுக்கு நின்று இய‌க்கிய‌ லைக்காவை குற்ற‌ம் சாட்டாமல், முன்னால் நின்ற‌ அப்பாவி ம‌க்களை தூற்றுவ‌து ஏன்? அவ‌ர்க‌ளை "முட்டாள்க‌ள், ஒரு பிய‌ருக்கு விலை போன‌வ‌ர்க‌ள்" என்றெல்லாம் இழிவு ப‌டுத்துவ‌து ஏன்? எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து ஏன்?

எய்தவன் யாரென்று தெரிந்த போதிலும், அம்புகளை குறை கூறுவோர் தானும் ஓர் அம்பு என்பதை அறியாமல் இருக்கிறார். முகநூலில் ஒருவர் கருத்திட்டார்: //சுவரொட்டி ஒட்டிய அந்த அக்னிக்குஞ்சுகளை பிடித்து வாருங்கள், *** எடுத்து விடுவோம்.// சுவரொட்டி அடித்துக் கொடுத்த லைக்கா முதலாளியின் பெயர் அல்லிராஜா சுபாஸ்கரன். எங்கே உங்களால் முடிந்ததை செய்யுங்கள் பார்ப்போம்?

இது தான் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின், குட்டி பூர்ஷுவா குணாம்ச‌ம். அவ‌ர்க‌ள் லைக்காவை விம‌ர்சிக்க‌ மாட்டார்க‌ள். ஏனென்றால் முத‌லாளிக‌ளை ப‌கைக்க‌க் கூடாது என்பார்க‌ள். அதே நேர‌ம், அடித்த‌ட்டு ம‌க்க‌ளை இழிவு ப‌டுத்துவார்க‌ள். அதை த‌ட்டிக் கேட்ப‌த‌ற்கு ஆளில்லை என்ற‌ தைரிய‌ம்.

ஒரு விட‌ய‌த்தை க‌வ‌னித்தீர்க‌ளா? ர‌ஜ‌னியின் இல‌ங்கை வ‌ருகைக்கு எதிராக‌ க‌ம்பு சுற்றிய‌ ஈழ‌த் "த‌மிழ் உண‌ர்வாள‌ர்க‌ள்", லைக்காவுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.

ஏனென்றால் "லைக்கா அதிப‌ர் ந‌ம்ம‌வ‌ர்(ஈழ‌த் த‌மிழ‌ர்)" என்று பெருமைப் ப‌ட‌ வேண்டுமாம். "பிரிட்டிஷ் ம‌காராணியை விட‌ப் ப‌ண‌க்கார‌ன்." என்று புளுகுக‌ள் வேறு. லைக்காவின் புக‌ழ் பாடும் ப‌ர‌ப்புரையாள‌ர்க‌ள், அநேக‌மாக‌ க‌ஜேந்திர‌குமாரின் த‌.தே.ம‌.மு. க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்ப‌து இர‌க‌சிய‌ம் அல்ல‌.

இதே நேர‌த்தில், யாழ்ப்பாண‌த்தில் ம‌கிந்த‌ விசுவாசியாக‌ அர‌சிய‌லில் அடியெடுத்து வைத்த‌ சுத‌ந்திர‌க் க‌ட்சி நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அங்க‌ஜ‌ன் ராம‌நாத‌ன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவ‌ர் "ர‌ஜ‌னியின் வ‌ருகை த‌டைப் ப‌ட்ட‌தால் லைக்காவின் திட்ட‌ம் பாழாகி விட்ட‌தாக‌வும், ஏழை ம‌க்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌வும்..." நீலிக் க‌ண்ணீர் வ‌டித்துள்ளார்.

அங்க‌ஜ‌ன் ஒரு நாடாளுமன்ற உறுப்பின‌ர் தானே? ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌து அவ‌ர‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா? எத‌ற்காக‌ ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தின் உத‌வியை எதிர்பார்க்க‌ வேண்டும்?

லைக்காவுக்கும் ராஜ‌ப‌க்சேக்கும் இடையிலான‌ வ‌ர்த்த‌க‌ உற‌வு ஏற்க‌ன‌வே அம்ப‌ல‌மான‌ விட‌ய‌ம். அது ஒன்றும் இர‌க‌சிய‌ம் அல்ல‌. ஆனால் வெளியே ம‌க்க‌ளுக்கு தெரியாத‌ ஒரு இர‌க‌சிய‌ம் உள்ள‌து.

தெற்கில் ராஜ‌ப‌க்சே விசுவாசிக‌ளுக்கும், வ‌ட‌க்கில் க‌ஜேந்திர‌குமார் விசுவாசிக‌ளுக்கும் இடையிலான‌ ந‌ட்புற‌வுப் பால‌மாக‌ லைக்கா செய‌ற்ப‌டுகின்ற‌து. முத‌லாளிக‌ளின் ப‌ண‌த்திற்கு முன்னால் இன‌ முர‌ண்பாடு மாய‌மாக‌ ம‌றைந்து விடும்.

ஒருவ‌ர் அடிப்ப‌து மாதிரி அடிப்பார். ம‌ற்ற‌வ‌ர் அழுவ‌து மாதிரி அழுவார். அர‌சிய‌லில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் ஐயா. இத‌ற்குப் பெய‌ர் #மேட்டுக்குடி அர‌சிய‌ல். 

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Sunday, March 26, 2017

லைக்கா தயாரிப்பில் ரஜனி நடித்த "150 வீடுகள்" - உண்மைக் கதை

அல்லிராஜா சுபாஸ்கரன்


லைக்கா ஈழத் தமிழருக்கு கட்டிக் கொடுத்தது 150 வீடுகள் மட்டுமே. ஆனால், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு கொடுத்தது இரண்டு மில்லியன் பவுன்ஸ். கடந்த வருடம் வரி கட்டாமல் பதுக்கிய பணம் இருபது மில்லியன் பவுன்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இலங்கை செல்வதாக வெளிவந்த தகவல், பலதரப் பட்ட வாதப் பிரதிவாதங்களையும், எதிர்ப்பலைகளையும் ஏற்படுத்தியதால், அந்தப் பயணத்தை இரத்து செய்வதாக ரஜனி அறிவித்திருந்தார்.

ரஜனியின் வருகை சம்பந்தமாக ஊடகங்களில் வெளியான தகவல் இது: 
//லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.//

வீடுக‌ள் க‌ட்டிக் கொடுப்ப‌து என்ப‌து ஒரு வியாபார‌ "போட்டி" அல்ல‌. அது முத‌லீட்டுக்கான அருமையான‌‌ வாய்ப்பு. ஒரு நாட்டில் போர் முடிந்த‌ பின்ன‌ர், அழிவில் இருந்து மீள‌க் க‌ட்டியெழுப்ப‌ முத‌லாளிக‌ளுக்கு கிடைக்கும் வாய்ப்புக‌ள். ஏற்க‌ன‌வே ஆப்கானிஸ்தான், ஈராக்கில் பெரிய‌ அள‌வில் ந‌ட‌ந்த‌து. அமெரிக்க‌ அர‌சே டென்ட‌ர் போட்டு யார் யாரெல்லாம் முத‌லிட‌லாம் என்று தெரிவு செய்த‌து. 

அங்கெல்லாம் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் மூலதன பலம் கிடையாது. அது அந்தளவு பெரிய நிறுவனம் அல்ல. ஆனால், இலங்கையில் முதலிடும் அளவிற்கு லைக்காவிடம் பண பலம் உள்ளது. "இலவச" வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் பின்னணியில், எதிர்காலத்தில் ஏதோ ஒரு தொழிற்துறையில் முதலீடு செய்யும் நோக்கம் இருக்கலாம்.

லைக்கா நிறுவனம், ஐரோப்பாவில் வரி கட்டாமல் ஏமாற்றி, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தில் தான், வவுனியாவில் 150 வீடுகள் கட்டப் பட்டன. உண்மையில் அந்த "தான தர்மம்" கூட, லைக்கா பிரிட்டிஷ் அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணத்தை விடக் குறைவு! 

முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அல்லது கன்சவேர்ட்டிவ் கட்சிக்கான நிதியாக, £2.2 மில்லியன் பவுன்ஸ் "தானம்" செய்திருந்த விடயம் ஏற்கனவே அம்பலமானது. முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சனின் தேர்தல் செலவையும் லைக்கா பொறுப்பேற்றிருந்தது.

லைக்காவின் மொத்த வருடாந்த வருமானம் சுமார் 1.5 பில்லியன் பவுன்கள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், போர்த்துக்கலுக்கு சொந்தமான மாடேயிரா தீவில் உள்ள வங்கிகளில் இரகசியக் கணக்கில் வைப்பிலிடப் படுகின்றது. வருமான வரி மட்டுமல்ல, மதிப்புக் கூட்டு வரியும் (VAT) கட்டாமல் பெருந்தொகைப் பணம் பதுக்கப் படுகின்றது. இதற்கென இருபதுக்கும் குறையாத போலி நிறுவனங்கள் இயங்குகின்றன. சட்டவிரோத கருப்புப் பணத்தை தூய்மைப் படுத்துவதும், அதை இரகசிய வங்கிக் கணக்குகளில் பதுக்குவது மட்டுமே இந்தப் போலி நிறுவனங்களின் வேலை.

லண்டன் தபால் நிலையங்களில் ஒவ்வொரு நாளும் கட்டுக் கட்டாக பண நோட்டுக்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப் படுவது கண்டுபிடிக்கப் பட்டது. அதை அடுத்து, பாரிஸ் நகரில் உள்ள லைக்கா கிளை அலுவலகம் கடந்த வருடம் பொலிஸ் சோதனைக்கு உள்ளானது. அங்கு 130,000 யூரோ தாள்களும், மேலதிகமாக வங்கியில் இருந்த 850,000 யூரோக்களும் பறிமுதல் செய்யப் பட்டன. பிரான்ஸில் பதினேழு மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் பிரெஞ்சுக் கிளை நிர்வாகி Alain Jochimek உட்பட ஒன்பது பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப் பட்டது.
(முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பில் வாசிக்கவும்:The French Connection: How Paris Police Closed In On Cameron’s Biggest Donor)

மேலும் இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஐரோப்பிய தீவிர வலதுசாரி அரசியல்வாதிளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார். பாரிஸ் பொலிஸ் சோதனையில் பிடிபட்டு கம்பி எண்ணிய அலென் ஜோகிமிக் இஸ்ரேலிய அரசுடன் தொடர்புடைய யூத வலதுசாரி நிறுவனம் ஒன்றை  நடத்துகிறார். பிரிட்டனில், முன்னாள் பிரதமர் டேவிட் கமேரூன், முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் போன்றோர் கன்சவேர்ட்டிவ் கட்சியை சேர்ந்த வலதுசாரிகள். கன்சர்வேட்டிவ் கட்சி, ஈழப்போர் நடந்த காலத்தில் வெளிப்படையாகவே சிறிலங்கா அரசை ஆதரித்திருந்தது. 

தமிழ்த் தேசியவாதிகளின் அரசியல் அகராதிப் படி, "லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு இனத் துரோகி!" இருப்பினும், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் யாரும் லைக்காவின் கிரிமினல் வேலைகளை கண்டுகொள்வதில்லை. அது அவர்களது வர்க்கக் குணாம்சம். அவர்கள் யாரும் உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் அல்ல, மாறாக முதலாளித்துவ ஆதரவு வலதுசாரிகள். 

//"லைக்கா அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் ஒரு "ஈழத் தமிழர்". "தனது செலவில்(?)" தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்..."// என்று போலித் தமிழ்த்தேசியவாதிகள் லைக்காவின் கிரிமினல் குற்றங்களுக்கு துணைபோகின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். வர்க்கம் வர்க்கத்தோடு தான் சேரும். பணம் பணத்தோடு சேரும்.

எதிர்பார்த்த‌ மாதிரியே அர‌சிய‌ல் நீக்க‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் ர‌ஜ‌னிகாந்துக்கு எதிராக‌வே க‌ம்பு சுற்றுகிறார்கள். "லைக்கா மாமா ந‌ல்ல‌வ‌ராம், ர‌ஜ‌னி மாமா கெட்ட‌வ‌ராம்!" என்று குழ‌ந்தை - ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் சிணுங்குகிறார். இவர் கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன் தலைமையில் நம்பிக்கை வைத்திருப்பவர். அவரைப் போன்றே தீவிர வலதுசாரிகளான த.தே.ம.மு. கட்சி ஆர்வலர்கள், ஆதரவாளர்கள் பிரபல நடிகரான ரஜனிகாந்திற்கு எதிராக கம்பு சுற்றுவதன் மூலம், லைக்காவின் குற்றங்களை மறைப்பதற்கு உதவுகிறார்கள்.

திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ரான‌ லைக்கா நிறுவ‌ன‌ம் நினைத்தால் ர‌ஜ‌னியை ம‌ட்டும‌ல்ல‌, ந‌மீதாவையும் கூட்டி வ‌ந்து விள‌ம்ப‌ர‌ம் தேட‌ முடியும். எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நோவ‌து மாதிரி, முத‌லீட்டாள‌ர் இருக்க‌ கூத்தாடிக‌ளை எதிர்க்கிறார்க‌ள். இது அவ‌ர்க‌ள‌து முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வான‌ வ‌ர்க்க‌க் குணாம்ச‌த்தின் வெளிப்பாடு.

இந்த விடயத்தில் ரஜனிகாந்த் நல்லவர் என்று சொல்ல வரவில்லை. அவருக்கும் சில அரசியல் ஆதாயங்கள் இருக்கலாம். தனக்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே தனது இலங்கைப் பயணம் தொடர்பான தகவலை வெளிவிட்டிருக்கலாம். ஒரு காலமும் அரசியல் பேசாத ரஜனி, பயணத்தை ரத்து செய்வது தொடர்பாக விளக்கமளித்த கடிதத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே, ரஜனிகாந்த் தன்னை இந்துத்துவா சார்பானவராக காட்டி வந்துள்ளார். இந்தக் கடிதத்திலும் புலிகளின் ஈழ விடுதலைப் போரை "புனிதப் போர்" என்று குறிப்பிடுள்ளார். இவ்வளவு காலமும் ஒன்றில் கிறிஸ்தவ, அல்லது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மட்டுமே புனிதப் போர் என்ற கருதுகோளை கொண்டிருந்தனர். தற்போது இந்து மத அடிப்படைவாதிகள் அதைப் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். புலிகளின் ஈழ விடுதலைப் போர், இந்துத்துவா வாதிகளின் கண்களுக்கு புனிதப் போராகத் தெரிகின்றது.

லைக்கா இல‌ங்கைக்கு அழைப்ப‌தாக சொன்ன‌தும், அத‌ற்கு எழுந்த‌ எதிர்ப்பும், அத‌ன் விளைவாக‌ ப‌ய‌ண‌த்தை இர‌த்து செய்த‌தும் முன்கூட்டியே திட்ட‌மிட‌ப் ப‌ட்ட‌ நாட‌க‌மாக‌ இருக்க‌லாம். இவ‌ர்க‌ள் எல்லோரையும் பாஜ‌க‌ பின்னால் இருந்து ஆட்டுவித்திருக்கிற‌து.

ர‌ஜ‌னிகாந்தின் க‌டித‌த்தில் பாஜ‌க‌ அர‌சிய‌லே தொக்கி நிற்கிறது. அத்துட‌ன் ர‌ஜ‌னியின் வ‌ருகையை எதிர்ப்ப‌தாக‌ காட்டிக் கொண்ட‌ ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளும், ம‌றைமுக‌மான‌ இந்திய‌ அடிவ‌ருடிக‌ள் தான். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே, இந்து ம‌த‌வெறி அமைப்பான‌, சிவ‌சேனையின் வ‌ருகையை வ‌ர‌வேற்ற‌வ‌ர்க‌ள் என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

Wednesday, March 22, 2017

சேமிப்பு பணம் வைப்பிலிட்டால் வங்கிக்கு வட்டி கட்ட வேண்டும்!


இனி வருங்காலத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைப்பிலிடும் பணத்திற்கு நாமே வட்டி கட்ட வேண்டி இருக்கும்! சிரிக்காதீர்கள், இது ஜோக் அல்ல! உண்மையில் நடக்கவுள்ளது.

நெதர்லாந்தில் Triodos வங்கி சேமிப்புப் பணத்திற்கு 0% வட்டி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆமாம், சேமிப்புப் பணத்திற்கு ஒரு சதம் கூட வட்டி கிடையாது. ஏற்கனவே பல ஐரோப்பிய வங்கிகள் மிகக் குறைந்த வட்டி கொடுத்து வந்துள்ளன.

இனிமேல் அது எதிர்மறை வட்டியாகவும் இருக்கலாம். அதாவது, நாங்கள் சேமிப்புக் கணக்கில் போடும் பணத்திற்கு நாமே தான் வட்டியும் கட்ட வேண்டும். அந்த வட்டிப் பணம் வங்கிக்கே போய்ச் சேரும்.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். உங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் 24.437 யூரோக்களுக்கு அதிகமான பணம் வைப்பில் இட்டுள்ளீர்களா? அப்படியானால் அது உங்கள் சொத்தாக கருதப் படும். அதாவது அந்தப் பணத்திற்காக அரசுக்கு மேலதிகமாக சொத்து வரி கட்ட வேண்டும்!

எதற்காக சேமிப்புக்கான வட்டி குறைந்து கொண்டே செல்கின்றது? அதற்குக் காரணம் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி வீதத்தை குறைத்துள்ளது. வட்டி குறைவாக இருந்தால் மத்திய வங்கியில் இருந்து வர்த்தக வங்கிகள் எடுக்கும் கடன் தொகையும் அதிகரிக்கும். மறுபக்கத்தில் அந்த வங்கிகள் மக்களுக்கு கொடுக்கும் கடனும் அதிகரிக்கும்.

சேமிப்பில் பணத்தை வைப்பிலிடுவதை மத்திய வங்கி ஊக்குவிக்கவில்லை. அதனால் இவ்வளவு காலமும் சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்த வட்டி கொடுக்கப் பட்டு வந்தது. அதற்குக் காரணம் பணம் சுற்றிச் சுழல வேண்டும். மக்கள் பணத்தை சேமிப்பதை விட, செலவளிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது.

சேமிப்பு பணத்திற்கு வட்டி குறைவதற்கு இன்னொரு காரணம் பணவீக்கம். எங்களது சேமிப்புப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி பணவீக்கத்தை விட அதிகமாக இருந்தால் தான் நன்மை உண்டு. இல்லாவிட்டால் அந்த வட்டியால் எந்தப் பயனும் இல்லை. உதாரணத்திற்கு, ஆயிரத்திற்கு பத்து ரூபாய் வட்டி சம்பாதித்து விட்டதாக நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. பணவீக்கம் காரணமாக அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை.

உண்மையில் நாட்டில் ஓரளவு பணவீக்கம் இருப்பதை வங்கிகள் விரும்புகின்றன. அதற்குக் காரணம் பணவீக்கம் இருந்தால் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு நல்லது. எப்படி? இன்றைய விலையை விட நாளைய விலை அதிகமாக இருக்கலாம். இனி வருங்காலத்தில் விலை கூடுமே தவிரக் குறையாது என்று நாமாகவே முடிவெடுப்போம். அதை கருத்தில் கொண்டு, நாங்கள் இன்றைக்கே அந்தப் பொருளை வாங்கி விடுவோம். அதனால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். விற்பனை கூடினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

சுருக்கமாக, பணம் ஓரிடத்தில் தேங்காமல் சுற்றிச் சுழல வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை. அவ்வாறு சுற்றிச் சுழலும் பணம் எல்லோரிடமும் வந்து சேரும் என்று நாங்கள் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், பணம் இறுதியில் ஒரு சில பணக்காரர்களின் பைகளில் சென்று தேங்கி விடுகின்றது. சாதாரண மக்கள் ஓட்டாண்டிகளாக சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் செலவவழித்துக் கொண்டிருக்க வேண்டும். முதலாளிகள் அதை மூலதனமாக திரட்டிக் கொண்டிருப்பார்கள். இதற்குப் பெயர் தான்  முதலாளித்துவம்.

உசாத்துணை: 

பிற்குறிப்பு: பெரும்பாலான கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு முதலாளித்துவத்தை பற்றி எதுவும் தெரியாது. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் ஒரு "பேராசிரியர்"(?) மார்க்சியத்தை ஏட்டுச் சுரைக்காய் என்று கேலி செய்யும் கட்டுரை ஒன்றை எழுதினார். (பார்க்க:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு அதில் அவர் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது கார்ல் மார்க்ஸின் தத்துவம் என்று கட்டுரை முழுக்க எழுதி இருந்தார். உண்மையில் அது ஒரு டச்சுப் பழமொழி. முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கை. அதை பொதுவுடைமை என்று திரித்துக் கூறுவது மக்களை முட்டாள்களாக்கும் செயல். (வாசிக்கவும்: கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Tuesday, March 21, 2017

மக்கள் நல வாதம் (Populism) என்றால் என்ன? - ஓர் அரசியல் ஆய்வு


ஐரோப்பிய அரசியல் அரங்கில் பொப்புலிசம் (Populism) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றது. அண்மைக் காலத்தில் வளர்ந்து வரும் தீவிர வலதுசாரிக் கட்சிகளை குறிப்பதற்கு அந்தச் சொல்லை பயன்படுத்திகிறார்கள். அந்தச் சொல்லை உருவாக்கியவர் யார் என்று தெரியாது.ஆனால், ஊடகங்களால் பிரபலமானது என்பது மட்டும் நிச்சயம். அதை தத்துவார்த்த நோக்கில் அலசுவது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் பொபுலிசம் என்ற வார்த்தை தமிழில் பெரியளவில் பயன்பாட்டில் வரவில்லை. அதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன என்று முகநூல் நண்பர்களிடம் கேட்ட பொழுது, "ஜனரஞ்சகவாதம், பெருந்திரள்வாதம்..." என்று பலவற்றை சொன்னார்கள். அவற்றில் மக்கள் நலவாதம் பொருத்தமானதாகப் படுகின்றது. அதனால் அதையே கட்டுரை முழுவதும் பயன்படுத்துகிறேன். மொழிபெயர்ப்பில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான ஐரோப்பிய அரசியலில், பாரம்பரிய கோட்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. இனவாதம் பேசிய தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு பரந்தளவு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. மிகச் சிறிய கட்சிகளான அவை தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியவில்லை. எந்த நாட்டிலாவது ஒரேயொரு பாராளுமன்ற ஆசனம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்தது.

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தோன்றிய, மக்களைக் கவர்ந்த வசீகரமான, ஜனரஞ்சகத் தலைவர்கள், தீவிர வலதுசாரி அரசியலுக்கு உந்துசக்தியாக இருந்தனர். ஆஸ்திரியாவில் ஹைடர், பிரான்ஸில் லெ பென், நெதர்லாந்தில் வில்டர்ஸ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களால் தலைமை தாங்கப் பட்ட கட்சிகள் யாவும் தனிமனித வழிபாட்டைக் கொண்டிருந்தன. அதாவது, கட்சிக்கென கொள்கை இருந்த காலம் மாறி, கட்சித் தலைவர் சொல்வெதெல்லாம் கொள்கை என்ற நிலைமை தோன்றியது.

புதிதாகத் தோன்றிய ஜனரஞ்சகத் தலைவர்கள், பாரம்பரிய தீவிர வலதுசாரிகள் மாதிரி வெளிப்படையாக இனவாதம் பேசவில்லை. அலங்காரச் சொற்களை பயன்படுத்தி, மக்கள் நலன் என்ற பெயரில், நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசினார்கள். இதிலே முக்கியமானது என்னவெனில், அரசாங்கத்தில் இருந்த ஆளும் கட்சிகள் பொதுவாக இனவாதம் வெறுக்கத் தக்க விடயம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தன. அல்லது அப்படி காட்டிக் கொண்டன. ஆனால், ஜனரஞ்சக அரசியல்வாதிகள் பேசிய "நாகரிகமான இனவாதம்" ஏற்றுக் கொள்ளத் தக்கது போன்று நடந்து கொண்டன. காலப்போக்கில் அவர்களே அவற்றைப் பேசத் தொடங்கினார்கள்.

இந்திய, இலங்கை நிலைமைகளுடன் ஒப்பிட்டு சொன்னால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்து மதவெறிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் மிகவும் குறைவு. அதனால், தேர்தலில் போட்டியிட்டாலும் பெருமளவில் ஜெயிப்பதில்லை. அதே நேரம், இந்து மதவெறியை நாகரிகமாக, நாசூக்காக பேசினால் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை உணர்ந்து கொண்ட பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ளது. இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றியதும் அப்படித் தான்.

இனி ஐரோப்பாவுக்கு வருவோம். மக்கள் நலவாதக் கட்சிகள் எப்போதும் வலதுசாரிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளும் உள்ளன. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் பற்றி ஆழமாக ஆராய்வது முக்கியமானது. ஏனெனில் அவை தான் பொதுத் தேர்தல்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக வருகின்றன. ஒரு காலத்தில் அரசாங்கம் அமைக்கலாம் என்ற நிலைமையில் உள்ளன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, பாரம்பரிய நாஸிகள், பாசிஸ்டுகளுடன் தொடர்பு கொண்ட கட்சிகள். இரண்டு, அப்படி எந்தத் தொடர்பும் இல்லாத "தூய்மையான" கட்சிகள். முதலாவது வகைக்குள் ஆஸ்திரியாவின் FPÖ, மற்றும் பெல்ஜியத்தின் Vlaams Blok/belang ஆகிய கட்சிகள் அடங்குகின்றன. இரண்டாவது வகைக்குள் நெதர்லாந்தின் PVV, ஜெர்மனியின் AfD ஆகிய கட்சிகள் அடங்குகின்றன.

ஐரோப்பாவில் இன்றைக்கும் நாசிஸம், அல்லது பாஸிசம் வெறுக்கத் தக்க கொள்கையாக, சிலநேரம் தடைசெய்யப் பட்டதாக உள்ளது. உதாரணத்திற்கு, பெல்ஜியத்தில் Vlaams Blok மீது நாசிஸ தொடர்பு, இனவாதம் பேசிய குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டதால், அது தடை செய்யப் பட்டது. அது பின்னர் Vlaams Belang புதிய பெயரில் தோன்றிய போதும் பெருமளவு வளர்ச்சி பெற முடியவில்லை. அதே நேரம் Nieuw-Vlaamse Alliantie (N-VA) என்ற புதிய கட்சி அதே அரசியலை முன்னெடுத்து பெல்ஜியத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றானது. N-VA நாகரிகமாக, நாசூக்காக இனவாதம் பேசத் தெரிந்த மக்கள் நலக் கட்சி என்பதால் தான் அதன் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்தன.

இனி தத்துவத்திற்கு வருவோம். மக்கள் நலவாதம் என்றால் என்ன? ஆளும் கட்சிகளுக்கு மாற்றீடாக, ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதாக, பொது மக்கள் நலனில் இருந்து பேசுவதாக காட்டிக் கொள்ளும் தத்துவம் அது. உண்மையில் ஐரோப்பிய அரசியல் சூழல் ஒரு நெருக்கடிக்குள் சிக்கி உள்ளதை அது எடுத்துக் காட்டுகின்றது. அதாவது, இது வரை காலமும் மாறி மாறி ஆண்டு வந்த பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் நலனை கணக்கெடுக்காத ஆளும் வர்க்கத்தை தேர்தலில் தண்டிக்க நினைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு நெதர்லாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த சமூக ஜனநாயகக் கட்சியை எடுக்கலாம். ஒவ்வொரு தடவையும் நடக்கும் தேர்தல்களில் முப்பது ஆசனங்களுக்கு குறையாமல் வென்று வந்த டச்சு தொழிற்கட்சி (PvdA), இந்தத் தடவை ஒன்பது ஆசனங்களை மட்டுமே எடுத்திருந்தது. 

நெதர்லாந்து வரலாற்றில் மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சமூக ஜனாயகக் கட்சி இத்தகைய அவமானகரமான தோல்வியை சந்திக்கவில்லை. பாரம்பரிய சமூக ஜனநாயகவாத, இடதுசாரிக் கட்சியான PvdA, ஆட்சியில் அமர்ந்ததும் ஒரு வலதுசாரிக் கட்சியாகி சீரழிந்தது. அதனால் பெருமளவு ஆதரவாளர்களை இழந்து விட்டது.

சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவுத் தளமாக இருந்த உழைக்கும் வர்க்க வாக்காளர்களில் ஒரு பகுதி SP என்ற புதிய இடதுசாரிக் கட்சிக்கும், இன்னொரு பகுதி PVV என்ற புதிய வலதுசாரிக் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர். SP (சோஷலிஸ்ட் கட்சி), PVV (சுதந்திரக் கட்சி) இரண்டுமே கொள்கை அடிப்படையில் எதிரெதிர் நிலையில் நிற்கும் கட்சிகள். ஆனால் இரண்டுமே ஆளும் வர்க்கத்திற்கு எதிரானதாகவும், ஆளும் கட்சிகளுக்கு மாற்றாகவும் தம்மை காட்டிக் கொள்கின்றன. 

இடதுசாரி வெகுஜனம் SP யையும், வலதுசாரி வெகுஜனம் PVV யையும் ஆதரிக்கின்றது. அதனால் தான் அத்தகைய கட்சிகளை நாங்கள் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று அழைக்கிறோம். நெதர்லாந்தின் SP மட்டுமல்ல, ஜெர்மனியின் Die Linke, கிரேக்கத்தின் Syriza போன்ற இடதுசாரிக் கட்சிகளையும் மக்கள் நலவாதக் கட்சிகள் என்று தான் அழைக்கிறார்கள். ஆகவே, இந்த சொற்பதம் தனியே வலதுசாரிகளை மட்டும் குறிக்கவில்லை என்பது தெளிவாகும்.

மக்கள் நலவாதம் என்றால் என்ன? சுருக்கமாக சொன்னால், அது பனிப்போருக்கு பிந்திய "பின் நவீனத்துவ அரசியல் போக்கு"! பனிப்போர் காலகட்டத்தில், மேற்கத்திய நாடுகளின் முதலாளித்துவ அரசுகள் தமது மக்களை அரசியல் நீக்கம் செய்யும் பணியை திறம் பட செய்து வந்தன. நீண்ட காலமாக அரசியல் ஆர்வமற்று ஒதுங்கியிருந்த மக்கள், 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்கள்.

அதற்குக் காரணம், அதுவரை காலமும் மக்கள் அனுபவித்து வந்த சலுகைகளை அரசு வெட்டத் தொடங்கியது. குறிப்பாக புதிதாக உருவான மத்திய தர வர்க்கம் எண்ணிக்கையில் பெருகி இருந்தது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு பின்னர் உருவான புதிய மத்தியதர வர்க்கத்துடன் இதனை ஒப்பிடலாம். தொண்ணூறுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்து வந்த பொருளாதார நெருக்கடிகளால் அந்தப் புதிய மத்தியதர வர்க்கமும் பாதிக்கப் பட்டது.

உலகமயமாக்கல் இன்னொரு முக்கியமான காரணம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்த்துக் கொள்ள பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் தொழிலாளர்களின் சம்பளம் குறைவு என்ற காரணத்தால், மேற்கு ஐரோப்பிய முதலாளிகள் தமது தொழிற்சாலைகளை கிழக்கு ஐரோப்பா நோக்கி நகர்த்தினார்கள். இதனால் மேற்கு ஐரோப்பாவில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழந்தனர். 

அதே நேரம், விசாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டதால் கிழக்கு ஐரோப்பிய உழைப்பாளிகள் வேலை தேடி மேற்கு ஐரோப்பாவுக்கு வந்தனர். இத்தகைய அரசியல் - பொருளாதாரப் பின்னணியில் தான் மக்கள் நலவாதக் கட்சிகள் தோன்றின. 

இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் தொழிற்சாலைகளை மூடி வேலையில்லாப் பிரச்சனைகளை உருவாக்கும் முதலாளிகளை நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றன. பெரும் வணிக நிறுவனங்கள், செல்வந்தர்களிடம் அதிக வரி அறவிட்டு, அந்தப் பணத்தை ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த  பயன்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றன.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் உலகமயமாக்கலுக்கு காரணமான முதலாளிகளை குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக, அகதிகள், குடியேறிகள் உள்ளூர் மக்களின் வேலைகளை பறிக்கிறார்கள். அது மட்டும் தான் பிரச்சினை என்று பிரச்சாரம் செய்கின்றன.

மேற்குலக அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் மக்கள் நலவாதம் என்ற புதிய அரசியல் தத்துவம் இருப்பதாக சொல்வதற்கு, பலரும் கவனிக்காத காரணம் ஒன்றுள்ளது. இன்றைய அரசியல் சூழலில், பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் தோற்று விட்டதாக கருதப் படுகின்றது. 

பொபுலிசம் என்பது ஐரோப்பாவில் உருவாக்கப் பட்ட  ஒரு பின்நவீனத்துவ சொல்லாடல். பனிப்போர் முடிவுடன் சோஷலிசம் மட்டுமல்லாது, முதலாளித்துவம், லிபரலிசம், ஜனநாயகம் போன்றனவும் காலாவதியாகி விட்டன என்று இதன் மூலம் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வந்தவை தான் மக்கள் நலவாதக் கட்சிகள். அதாவது, எந்த கோட்பாட்டையும் பின்பற்றாத அரசியல் கட்சிகள்.

வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள், பழமைவாதம், தேசியவாதம், இனவாதம், கலந்த கலவையாக உள்ளன. புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்வார்கள். அதே தான். மறுபக்கத்தில் இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் மார்க்சியத்திற்கு புதிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஒரு மார்க்சியக் கருத்தை கட்சியின் கருத்தாக தெரிவித்து விட்டு, தமது கட்சி மார்க்சியத்தை பின்பற்றவில்லை என்று காட்டிக் கொள்வார்கள். சீட்டாட்டம் மாதிரி எல்லோரும் தமது துருப்புச் சீட்டுக்களை ஒளித்து வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள்.

பொதுவாக மக்கள் நலவாதக் கட்சிகள் எதுவும் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிக்கவில்லை. தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டலாம் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தாலும் பெரிய மாற்றம் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணரவில்லை.

உதாரணத்திற்கு, வலதுசாரி மக்கள் நலவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அகதிகள், குடியேறிகள் வருகையை தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், உலகின் மறு பக்கத்தில் யுத்தங்கள் நடப்பது குறையவில்லை. வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும், சுரண்டலும் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கும் வரையில் ஐரோப்பாவை நோக்கி குடியேறிகள் படையெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

அதே மாதிரி, இடதுசாரி மக்கள் நலவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், செல்வத்தை எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியாது. ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்து தமது பைக்குள் போடும் முதலாளிகள் அந்தளவு இலகுவாக விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி முதலாளித்துவத்தை தூக்கி எறிவது தான். பாராளுமன்றத்திற்கு அந்தளவு சக்தி கிடையாது.

Thursday, March 16, 2017

நெதர்லாந்து தேர்தல்: இனவாதிகளின் "தேசிய வீழ்ச்சி"! இடதுசாரிகளின் எழுச்சி!!

நெதர்லாந்து பொதுத் தேர்தல்: இனவாதம் தோற்கடிக்கப் பட்டது!
15-3-2017 ல் நடந்த நெதர்லாந்து பாராளுமன்றப் பொதுத் தேர்தல் உலகளவில் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், பிரித்தானியாவின் Brexit வாக்கெடுப்பு, அமெரிக்காவில் டிரம்பின் தெரிவுக்குப் பிறகு நடந்த பிரதானமான தேர்தல் இது. அந்த நிகழ்வுகள் நெதர்லாந்தின் இனவாத அரசியல்வாதி வில்டர்சின் வெற்றி வாய்ப்புக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப் பட்டது.

ஊடகங்களால் ஊதிப் பெருக்கப் பட்ட இனவாத அரசியல் எழுச்சி இறுதியில் நடக்கவேயில்லை. வில்டர்சின் சுதந்திரக் கட்சி (PVV) 20 ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த தேர்தலை விட ஐந்து ஆசனங்கள் அதிகமாக எடுத்துள்ளது. இருப்பினும் அதை ஒரு வெற்றியாக கருத முடியாது. உண்மையில் வில்டர்சின் இனவாத அரசியலுக்கு கிடைத்த தோல்வியே அது.

உண்மையில் சுதந்திரக் கட்சி முழுக்க முழுக்க தனிமனித வழிபாட்டைக் கொண்டுள்ளது. அதன் தலைவர் வில்டர்ஸ் மட்டும் தான் எல்லாமே. அவரது வாயில் இருந்து வருவது தான் அரசியல். தன்னை ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டிருந்தார். மசூதிகளை மூட வேண்டும், குரானை தடை செய்ய வேண்டும் என்று தீவிர அரசியல் பேசினார். அதே நேரம், அகதிகள், குடியேறிகள் வருவதை தடை செய்யவேண்டும் என்றும் பேசி வருபவர்.

வழமையாக இப்படியானவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த ஊடகங்கள், அமெரிக்காவில் டிரம்பின் வெற்றிக்குப் பின்னர் நெதர்லாந்தில் வில்டர்ஸ் வெற்றி பெறலாம் என்ற மாயையை உருவாக்கி விட்டிருந்தன. கடந்த வருடம் எடுக்கப் பட்ட கருத்துக் கணிப்புகளில் கூட வில்டர்சின் சுதந்திரக் கட்சி குறைந்தது முப்பது ஆசனங்களை பெற்று முதலிடத்திற்கு வரும் என்று எதிர்வு கூறப் பட்டது. ஆனால் அந்த கணிப்புகள் இறுதியில் பொய்த்து விட்டன. அதற்கு என்ன காரணம்?

உண்மையில் வில்டர்ஸ் ஊடகங்களை நம்பி அரசியல் செய்து வந்தார். "பாதுகாப்பு குறைபாடு காரணமாக" வாக்காளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே "மொரோக்கோ குடியேறிகளை குறைப்போம்" என்ற இனவாதப் பேச்சு காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டிருந்தார். அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சி கைகூடவில்லை.

வில்டர்ஸ் தனது எதிராளிகளுடன் விவாதிப்பதை தவிர்த்து வந்தார். ரொட்டர்டாம் மசூதியில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப் பட்டும் செல்லவில்லை. அது மட்டுமல்ல, ஊடகங்கள் ஒழுங்கு படுத்திய விவாத அரங்குகளிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். அதே நேரம், பிரதமர் மார்க் ருத்தே ஒரு முக்கியமான அறிவிப்பை விடுத்தார். PVV பெரிய கட்சிகளில் ஒன்றாக வந்தாலும், அதனோடு கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

மார்க் ருத்தேயின் அறிவிப்பு வில்டர்சின் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால், நெதர்லாந்தில் கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக கூட்டு அரசாங்கம் தான் ஆட்சி அமைக்கின்றது. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலைமையில் கூட்டணியை விட மாற்று வழி இல்லை. 

அடிப்படையில், மார்க் ருத்தேயின் லிபரல் கட்சியும், வில்டர்சின் சுதந்திரக் கட்சியும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகள் தான். ஆனால், வில்டர்ஸ் பகிரங்கமாக இனவாதம் பேசுவதால், அவரது கட்சியோடு கூட்டு அரசாங்கம் அமைப்பது சங்கடத்திற்கு உள்ளாக்கும் என்பது மார்க் ருத்தேவுக்கு தெரியும்.

தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், பிரதமர் மார்க் ருத்தவும், வில்டர்சும் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக் கொண்டனர். டச்சு மக்களின் மருத்துவ வசதிகளுக்கான செலவினத்தை குறைத்துள்ள அரசாங்கம், அகதிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகின்றது என்று வில்டர்ஸ் குற்றம் சாட்டினார். அகதிகளை வர விடாமல் தடுப்பதற்கு எல்லையில் மதில் கட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வில்டர்ஸ் அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தை வலிந்து புகுத்தினார். அகதிகளை வெளியேற்றினால், குடியேற்றத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்தால் உள்நாட்டு டச்சு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொன்னார். பிரித்தானியா மாதிரி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றார்.

இவை எல்லாம் சாத்தியமா என்பது ஒருபுறமிருக்க, ஆளும் லிபரல் கட்சி ஏற்கனவே குடியேறிகள் விடயத்தில் கடுமையாகத் தான் நடந்து கொள்கின்றது. வில்டர்ஸ் நேரடியாக சொல்வதை, லிபரல் கட்சி சுற்றிவளைத்து சொல்கிறது என்பது மட்டுமே வித்தியாசம். அகதிகள் வருகையை தடுப்பதற்காக துருக்கியுடன் ஒப்பந்தம் செய்ததை அந்த விவாதத்தில் மார்க் ருத்தே சுட்டிக் காட்டினார். அதாவது, "நாங்களும் அகதிகளுக்கு எதிரானவர்கள் தான்" என்பதை சொல்லாமல் சொன்னார்.

வீட்டுக்கு வீடு குரான் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வில்டர்ஸ் சொன்னதை நினைவுபடுத்திய மார்க் ருத்தே, "அந்த குரான் பொலிஸ் எப்படி இயங்கும்?" என்று கேட்டார். அதற்கு பதில் கூற முடியாமல் வில்டர்ஸ் தடுமாறினார். "ஓ! போலி வாக்குறுதி கொடுத்தீர்களா?" என்று மார்க் ருத்தே கிண்டலடித்தார்.

உண்மையில், வில்டர்ஸ் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றம் எதையும் கொண்டு வரப் போவதில்லை. அகதிகள், முஸ்லிம்கள், குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. அப்படி நடந்தால் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும். இந்த நாட்டில் துப்பரவுப் பணி போன்ற அடித்தட்டு வேலைகளை செய்வோர் அந்தப் பிரிவினர் தான்.

அகதிகள், முஸ்லிம்களை வெளியேற்றுவதால் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. முதலாவதாக, பெரும்பாலான டச்சுக் காரர்கள் அடித்தட்டு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. இரண்டாவதாக, மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்ய வர மாட்டார்கள். மூன்றாவதாக, இன்றைய நிலையில் எந்த முதலாளியும் சம்பளம் கூட்டிக் கொடுக்க தயாராக இல்லை.

மேலும், வில்டர்ஸ் போன்ற இனவாத சக்திகளின் எழுச்சிக்கு "உலகமயமாக்கல்" காரணம் என்றும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அப்படிச் சொல்வதும் அதே இனவாத சக்திகள் தான். "தேசிய எழுச்சி" என்ற பெயரில் உலகமயமாக்கலை தடுப்பது நடைமுறைச் சாத்தியமன்று.

நெதர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நினைத்தும் பார்க்க முடியாது. ஒருவேளை, பிரித்தானியா மாதிரி பிரிந்தாலும் உலகமயமாக்கலில் இருந்து தப்ப முடியாது. அதற்குக் காரணம் நெதர்லாந்து பொருளாதாரமும் உலகமயமாக்கலால் நன்மை அடைகின்றது. பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும், சிறிய ஏற்றுமதி நிறுவனங்களும் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்கின்றன.

ஆகவே, வில்டர்ஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர் பிரதமராக வந்தாலும் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. பெரிய முதலாளித்துவ நிறுவனங்களை பகைக்க முடியாது. அதனால், அவருக்கு ஓட்டுப் போட்ட மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும், வில்டர்சின் "தேசிய எழுச்சி" எந்தளவு தூய்மையானது? இன்னொரு விதமாகக் கேட்டால், வில்டர்ஸ் உண்மையிலேயே ஒரு "தேசியவாதி" தானா? அவரது கட்சிக்கு இஸ்ரேல், அமெரிக்காவில் இருந்து நிதியுதவி கிடைப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. கடந்த வருடம், வில்டர்ஸ் இஸ்ரேலின் கைப்பொம்மையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வுத்துறையால் (AIVD) விசாரணை செய்யப் பட்டார்.

எதற்காக வில்டர்ஸ் போன்ற இனவாதிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கிறது? உண்மையில் ஊடகங்கள் இப்படியானவர்களை வளர்த்து விடுகின்றன. பல வருடங்களாக பொருளாதாரப் பிரச்சினை நிலவியது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அரசாங்கம் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், மக்கள் அனுபவித்த சலுகைகளை வெட்டியது.

காலங்காலமாக ஆண்டு வரும் பெரிய கட்சிகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனால், மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகின்றது. மக்களின் ஏமாற்றத்திற்கு வடிகாலாக, வில்டர்ஸ் போன்ற இனவாதக் கோமாளிகளை மாற்று அரசியல் சக்தியாக காட்டுகிறார்கள். இந்த நாடகம் இன்னும் சில வருடங்கள் அரங்கேறும்.

நெதர்லாந்து தேர்தல் தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்த தகவல் ஒன்றுள்ளது. 21 ம் நூற்றாண்டின் முற்போக்கு இடதுசாரிகள் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளனர். குறிப்பாக, இட‌துசாரி ப‌சுமைக் க‌ட்சி (Groen Links) மாபெரும் வெற்றி ஈட்டியுள்ள‌து. க‌ட‌ந்த‌ தேர்தலை விட‌ 10 ஆச‌ன‌ங்க‌ள் அதிக‌மாக‌ப் பெற்றுள்ள‌து. த‌லைந‌க‌ர் ஆம்ஸ்ட‌ர்டாமில் அதுவே பெரிய‌ க‌ட்சி. இன்னொரு இடதுசாரிக் கட்சியான சோஷலிசக் கட்சியும் 15 ஆசனங்களுடன் தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டது.

அதே நேர‌ம், பாரம்பரிய சமூக ஜனநாயக அரசியல் வழிவந்த, வ‌ல‌துசாரி அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ போலி இட‌துசாரி தொழிற்க‌ட்சி (PvdA) அவமானகரமான ப‌டுதோல்வி அடைந்துள்ள‌து. இவ்வ‌ள‌வு கால‌மும் அது பெரிய‌ ஆளும் க‌ட்சிக‌ளில் ஒன்றாக‌ இருந்த‌து. இந்தத் தேர்தலில் வெறும் 9 ஆச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் எடுத்துள்ள‌து. இது ஒரு வ‌ர‌லாற்றுத் தோல்வி ஆகும்.

புதிய‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Groen Links (ப‌சுமை இட‌து), 1992 ம் ஆண்டு உருவான‌ ந‌வீன‌ இட‌துசாரிக் க‌ட்சி ஆகும். தொண்ணூறுகளில் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் நெருக்கடிக்கு உள்ளான நெதர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி (CPN) கலைக்கப் பட்டு, இன்னும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, Groen Links என்ற புதிய கட்சி உருவாக்கப் பட்டது.

தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த சுற்றுச் சூழலியல் அரசியலுடன், செல்வத்தை பங்கிட்டு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடதுசாரி அரசியலையும் சேர்த்துக் கொண்டது. அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் இளைய தலைமுறையை சேர்ந்த இடதுசாரி என்பதால், பெரும்பாலான இளைஞர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

Sunday, March 12, 2017

புதிய தலைமுறை டிவியில் வட கொரிய புளுகுகள் (வயது வந்தோருக்கு மட்டும்)

வட கொரியா பற்றி எத்தகைய கட்டுக்கதைகளையும் பரப்பலாம். அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர், சண் டிவி இல் "மர்ம தேசம்" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "கிம் தேசம்" என்ற இன்னொரு நிகழ்ச்சியில் வட கொரியா பற்றிய புளுகுகளை ஒளிபரப்பியுள்ளனர். (நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்:கிம் தேசம்)

"அம்மா தேசத்தில்" இருந்து ஒளிபரப்பான, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "கிம் தேசம்" காமெடி நிகழ்ச்சியில் சொல்லப் பட்ட நகைச்சுவை துணுக்குகள் இவை தாம்:

புளுகு 1: 
//அதிபர் கடவுளுக்கு நிகரானவர்!!!// 
வட கொரியாவின் ஸ்தாபகர் என்று கருதப்படும் கிம் இல் சுங், "ஜூச்சே தத்துவம்" என்ற பெயரில் தேசிய சித்தாந்தம் ஒன்றை எழுதியுள்ளார். இன்றைக்கும் அது அங்கே கட்டாய பாடமாக படிக்கப் படுகின்றது. இயற்கையில் மனிதன் தான் எல்லா உயிரினங்களையும் விட சிறந்தவன் என்பது அடிப்படைக் கொள்கை. அந்த வகையில் கடவுள் என்ற கோட்பாட்டுக்கே அங்கே இடமில்லை. அதனால் யாரும் அங்கே அதிபரை கடவுளுக்கு நிகராக கருதப் போவதில்லை.

இதற்கு மாறாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அம்மா தேசத்தில் (தமிழ் நாடு), முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடவுளுக்கு நிகரானவராக கருதப் பட்டார். ஒரு தடவை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டதால், பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உடனே, தமிழ் நாடு முழுவதும் "கடவுளை தண்டிக்கலாமா?" என்று சுவரொட்டிகள் முளைத்தன. ஆகையினால், அம்மா தேசம் மாதிரித் தான் கிம் தேசம் இருக்கும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நினைப்பதில் ஆச்சரியமில்லை. பழக்கதோஷத்தில் அப்படி சொல்லி விட்டார்கள்.

புளுகு 2: 
//வட கொரியா தான் உலகை ஆள்வதாக அங்குள்ள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!//  
இது உண்மைக்கு புறம்பான பொய்ப் பிரச்சாரம். உலகம் முழுவதும் தங்களை ஒடுக்குவதாக வட கொரிய மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். நாங்கள் எல்லோரும் கவனிக்காமல் விடுகின்ற, மிக  முக்கியமான தவறு ஒன்றுள்ளது. இன்றைக்கும் வட கொரியா அமெரிக்காவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது! இது மிகைப் படுத்தல் அல்ல. உண்மையான நிலவரம் அது தான். 

அதாவது, ஐம்பதுகளில் நடந்த கொரிய யுத்தம் இன்னும் முடியவில்லை. அன்று ஏற்பட்ட யுத்த நிறுத்தம் இன்னமும் தொடர்கின்றது. யுத்த நிறுத்தம் என்றால், சமாதானம் என்று அர்த்தம் அல்ல. அந்த நிலைமையில், மீண்டும் அமெரிக்காவுடன் போர் வெடிக்குமா என்று கொரிய மக்கள் அஞ்சுவதில் தவறேதும் இல்லை. இன்னமும் யுத்தத்தின் மத்தியில் வாழும் மக்கள் எவ்வாறு தமது நாடு உலகை ஆள்வதாக நினைக்க முடியும்? இது போன்ற ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு முன்னர், அந்த நாடு சம்பந்தமான வரலாற்றை ஆராய்ந்திருக்க வேண்டும். எழுந்தமானமாக பேசுவதற்குப் பெயர்: பிரச்சாரம்.

புளுகு 3: 
//படித்தவர்களுக்கும் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் யாரென்று தெரியாது!// 
இதுவும் ஒரு கலப்படமற்ற பொய். சிலநேரம், தமிழ் நாட்டில் படித்தவர்களை விட, வட கொரியாவில் படித்தவர்களுக்கு அதிக விடயங்கள் தெரிந்திருக்கலாம். குறிப்பாக, அமெரிக்க அரசியல் நிலவரம் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வது அபத்தமானது. ஏனென்றால், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், தவிர்க்க முடியாமல் ஒபாமா, டிரம்ப் பற்றியும் பேச வேண்டி இருக்கும். 

"வட கொரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல்" என்று அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. அதற்கு பதிலாக, "அமெரிக்காவால் தமக்கு அச்சுறுத்தல்" என்று வட கொரிய ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டாதா? இது பிரச்சாரம் என்றால் அதுவும் பிரச்சாரம் தான். இருப்பினும் இவை தலைப்புச் செய்தியாக இடம்பிடிப்பவை. இதைப் புரிந்து கொள்ள பொது அறிவு இருந்தால் போதும்.

புளுகு 4: 
//அதிபர் சிரித்தால் மக்களும் சிரிக்க வேண்டும், அதிபர் அழுதால் அழ வேண்டும்!// 
இது சிறு குழந்தைகளுக்கு சொல்லும் தேவதைக் கதை போலுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது பார்வையாளர்களை குழந்தைகளாக கருதிக் கொண்டு அம்புலிமாமா கதை சொல்கின்றது. இதை எல்லாம் நம்புவதற்கும் சில வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள் தானே? அதிபரின் முடியலங்காரத்தை பார்த்து, கொரிய ஆண்கள் முடி திருத்த வேண்டும் என்றும் மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள். அது ஒரு கட்டுக்கதை என்பதை, வட கொரியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் நேரில் கண்டறிந்தனர்.

புளுகு 5: 
//அதிபர் இறந்து விட்டால் துணை நடிகர்களும் தோற்றுப் போகும் அளவிற்கு கதறிக் கதறி அழுவார்கள்.// 
கிம் இல் சுங் இறந்த நேரம் மக்கள் கதறிக் கதறி அழுதது உண்மை தான். அதற்குப் பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் இறந்த நேரம் அப்படி நடக்கவில்லை. கிம் இல் சுங்கின் கதை வேறு. பல தசாப்த காலமாக ஜப்பானிய காலனிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கொரிய தீபகற்பத்தை விடுதலை செய்ததில் கிம் இல் சுங்கின் பங்கு அளப்பெரியது.

சுருக்கமாக, இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி, தமிழர்களுக்கு பிரபாகரன் மாதிரி, கொரியர்களுக்கு கிம் இல் சுங் என்று வைத்துக் கொள்வோம். பிரபாகரன் இறந்ததை கேள்விப் பட்டு தமிழ் நாட்டில் கூட பலர் கதறிக் கதறி அழுதார்கள். அவர்கள் எல்லாம் துணை நடிகர்கள் அல்ல. அப்படிச் சொல்வது சாதாரண மனித உணர்வுகளை புண்படுத்துவதாகும். 

பிரபாகரனின் பிம்பம் மாதிரி, வட கொரியாவில் கிம் இல் சுங் பற்றிய பிம்பமும் உணர்ச்சிவசப் பட்ட மக்கள் குழுமத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. வெளியில் இருப்பவர்களுக்கு அது புரிந்து கொள்ள முடியாத விடயம் தான். சாதாரண மக்களின் மனவுணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒதுங்கிக் கொள்வோமே?

புளுகு 6: 
//வட கொரியா உலகில் "ஆபத்தான நாடு", "கலகக் காரர்களின் நாடு" என்று வர்ணிக்கிறார்கள். இங்குள்ள மக்களுக்கு அதெல்லாம் "தெரியாது"!// 
இதற்குப் பதில் ஏற்கனவே சொல்லி விட்டேன். எதற்காக தமது ஜென்ம எதிரியான அமெரிக்காவின் பிரச்சாரங்களை வட கொரிய மக்கள் நம்ப வேண்டும்?

புளுகு 7: 
//ஒருவர் செய்தியாளராக ஆசைப் படுவதும், தோட்டக் காரராக வேலை செய்வதும் ஒன்று தான்!// 
தனது பார்வையாளர்கள் எல்லோரும் பாலர் வகுப்பு மாணவர்கள் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்துக் கொள்கின்றது. இரண்டும் முற்றிலும் மாறுபட்ட தொழில்கள். வேறு பட்ட தொழிற்துறைகளை சேர்ந்தவை. தமிழ் நாட்டில் அந்தத் தொழில்களை செய்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே மாதிரித் தான் வட கொரியாவிலும் இருப்பார்கள். உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்க காமெடி தான் பண்றீங்க, அதுக்காக இப்படி எல்லாம் அபத்தமாக பேசுவீங்களா?

புளுகு 8: 
//வட கொரியாவில் என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாதாம்! அப்படி தெரிந்து கொள்ள முயன்றவர்கள் சிறைகளில் இருக்கிறார்களாம்.// 
ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான உல்லாசப் பிரயாணிகள் வட கொரியா சென்று வருகிறார்கள். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் தான். ஏனென்றால், சுற்றுலாத் துறை வேண்டுமென்றே அதிக பணம் அறவிடுகின்றது. விசா, ஹோட்டல் தங்கும் செலவு, உள்நாட்டு சுற்றுலா எல்லாவற்றுக்கும் அதிக பணம் வாங்குகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு.

அதைத் தவிர, அங்கு சுதந்திர வர்த்தக வலையம் தசாப்த காலமாக இயங்குகின்றது. அதாவது, அந்நிய முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை அமைத்து வட கொரிய தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்யலாம். பெரும்பாலும் தென் கொரிய முதலாளிகள் தான் அங்கே முதலிட்டுள்ளனர். இந்த விபரங்கள் தெரியா விட்டால் தேடிப் பார்த்து அறிந்து கொள்ளவும்.

புளுகு 9: 
//அரசுக்கு எதிராக துரோகம் இழைத்தால், அதிபர் மாமா, அத்தை என்றெல்லாம் பார்க்க மாட்டார். ராக்கட் லாஞ்சர் மூலம் உடனே கொன்று விடுவார்கள்!// 
உண்மையில், இந்த நிகழ்ச்சியை தயாரித்தவர் ஒரு நகைச்சுவை மன்னன் தான். ராக்கெட் லாஞ்சர் அடித்து கொன்று விடுவார்கள் என்று என்ன அழகாக கற்பனை செய்திருக்கிறார்! இன்றைய அதிபர் கிம் ஜோங் உண்ணிற்கு அடுத்த படியாக தலைமை மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அவரது மாமன் கைது செய்யப் பட்டார். அவரை, சிறையில் நாய்களை ஏவி விட்டு கொன்றதாக மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள்.

சீனாவில் ஒரு இணைய ஆர்வலர் எழுதிய நம்பகத் தன்மை இல்லாத தகவலை, மேற்கத்திய ஊடகங்கள் அப்படியே நம்பி விட்டன என்பது பின்னர் தெரிய வந்தது. மேலும், துரோகியாக்கப் பட்ட மாமன் சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற விரும்பியதாகவும், அதனாலேயே கைது செய்யப் பட்டதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்போதும் சிறையில் இருக்கலாம், சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், மரண தண்டனையும் நிறைவேற்றப் பட்டிருக்கலாம். ஆனால், "ராக்கெட் லாஞ்சர் அடித்தார்கள்", "நாயை விட்டு கடிக்க செய்தனர்" போன்றவை ஆதாரமற்ற வதந்திகள்.

புளுகு 10: 
//கிம் இல் சுங் தொடங்கிய கொரிய தொழிலாளர் கட்சியில் "மார்க்சியம், லெனினிசம், ட்ராஸ்கிசம் என்று எல்லாக் கொள்கைகளும்" கொண்டுள்ளதாம்??? // 
அது வேறொன்றுமில்லை. திரும்பவும் பழக்கதோஷம். அம்மா தேசத்தில், அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கியது மாதிரி என்று, அந்த புதிய தலைமுறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் நினைத்து விட்டார். எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாயிசம், பெரியாரிசம், தமிழிசம், ரவுடியிசம் என்று எல்லாக் கொள்கையும் கொண்டுள்ளதைப் போன்றது இதுவும் என்று நினைத்து விட்டார். பாவம், அவரது அறிவுக்கு எட்டிய வரையில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்.

கொரிய தொழிலாளர் கட்சியை கிம் இல் சுங் தொடங்கவில்லை. அது பல தோழர்களின் தலைமையின் கீழ் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்தது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், கிம் இல் சுங் இராணுவப் பிரிவின் தலைமையில் இருந்தார். வட கொரியா ஸ்தாபிக்கப் பட்டதும், கொரிய தொழிலாளர் கட்சி ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றது. அதில் இன்று வரையில் உட்கட்சி ஜனநாயகத் தேர்தல்கள் நடப்பதுண்டு. இருப்பினும், கிம் இல் சுங் அதிகாரப் போட்டியில் வெற்றி பெற்றதும், தனக்கு விசுவாசமானவர்களை நியமித்துக் கொண்டதும் வரலாறு.

ஆரம்ப காலங்களில் கொரிய தொழிலாளர் கட்சியின் சித்தாந்தம் மார்க்சிய லெனினிசமாக இருந்தது. ஆனால், எழுபதுகளில் கிம் இல் சுங் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றியதும், அவரது ஜூச்சே தத்துவம் முன்னுக்கு கொண்டு வரப் பட்டது. மார்க்சிய லெனினிசம் பின்னுக்கு தள்ளப் பட்டு கைவிடப் பட்டது. ஜூச்சே தத்துவம் மார்க்சியத்தை தழுவி எழுதப் பட்டிருந்தது. அதே நேரம், கொரிய தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. கிம் இல் சுங்கை பொறுத்தவரையில், கொரிய ஒன்றிணைப்பு முதன்மையானது. அதற்காக தன்னை ஒரு தேசியவாதியாகவும் காட்டிக் கொள்ளத் தயங்காதவர்.

புளுகு 11:
//கொரியர்கள் அனைவரும் விசுவாசத்திற்காக உயிரைத் துறப்பார்கள் என்பது தானாம் கட்சியின் கொள்கை.// 
ஏன் ஐயா இந்த கொலைவெறி? அம்மா தேசத்தில், அல்லது அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கலாம். ஆனால், வட கொரியாவில் இருக்காதா? அவர்களது நாட்டையும் அமெரிக்காவோ, ஜப்பானோ ஆக்கிரமிக்க நினைத்தால், அதை எதிர்த்துப் போராடுவது தவறு என்கிறீர்களா? அடிமையாக அடங்கிப் போகச் சொல்கிறீர்களா? அதை எதற்கு "கட்சியின் கொள்கை", "அதிபர் மீதான விசுவாசம்" என்று திரிபு படுத்தி கொச்சைப் படுத்துகிறீர்கள்? அதனால் தான், புதிய தலைமுறை ஒளிபரப்பிய "கிம் தேசம்" ஒரு அரசியல் பிரச்சார நிகழ்ச்சி என்று குற்றஞ் சாட்ட வேண்டியுள்ளது.

புளுகு 12:
//கட்சிக் கொள்கையை ஆராய்ந்தால் "தலைவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விடலாம்" என்று பொருள் வருமாம்???// 
கட்சிக் கொள்கை என்பது ஜூச்சே சித்தாந்தம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வார்த்தை கூட நிகழ்ச்சியில் உச்சரிக்கப் படவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் தனது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான். தமிழர்களை யாரும் எப்படியும் ஏமாற்றலாம் என்று அவரே முடிவு கட்டி விட்டார் போலிருக்கிறது.

புளுகு 13:
//கட்சித் தலைவர்கள் தமது பிள்ளைகளையே நியமிக்க வேண்டுமாம். அதனால் கட்சியில் தந்தைகளும் மகன்களும் நிறைந்திருந்தார்களாம் ??? இன்று வரை கட்சியில் உறவினர்கள் மட்டுமே இருக்கிறார்களாம்!!!// 
இது உங்களுக்கே ஓவராகப் படவில்லையா? பிள்ளைகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எந்த நாட்டிலும் சட்டம் இல்லை. அதே நேரம், எல்லாப் பிள்ளைகளுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதுமில்லை. வட கொரியா தலைமையிலும் அப்படித் தான். ஒரு அதிபருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால், அதில் ஒன்று மட்டுமே அரசியலுக்கு வருகிறதென்றால், மற்ற மூன்று பிள்ளைகளும் வேறு வேலை பார்க்கின்றன என்று தானே அர்த்தம்? எல்லோருக்கும் அரசியலில் ஆர்வம் ஏற்படுவதில்லை. கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் என்றாலும் அப்படித் தான். ஆனால், உலகில் எல்லாப் பெற்றோரும் தமது பிள்ளைகளை தம்மைப் போன்று வளர்க்கப் பார்ப்பார்கள். நமது சமுதாயத்தில் படித்த பெற்றோரின் பிள்ளைகள் தான் பெருமளவில் பல்கலைக்கழகம் செல்கின்றன.

அது சரி, அம்மா தேசத்தில் தந்தைகளும், மகன்களும் அரசியலில் இருப்பதில்லையா? திமுக தலைவர் கருணாநிதி தந்தை, அவரது பிள்ளை ஸ்டாலின் தான் கட்சியின் அடுத்த தலைவர். காங்கிரஸ், அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சி பற்றி சொல்லவே தேவையில்லை. நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல் என்று வட கொரியாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வாரிசு அரசியல் மலிந்து போயுள்ளது.

நாங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும், நமது தமிழ் ஊடகங்கள் அவற்றை புறக்கணித்து விட்டு வழமை போல பிரச்சாரங்களை தொடர்ந்து கொண்டிருக்கும். அது மட்டும் நிச்சயம். சண் டிவியின் மர்ம தேசம், புதியதலைமுறை டிவியின் கிம் தேசம் மாதிரி, இன்னும் பல காமெடிப் படங்களை தயாரித்துக் கொண்டிருப்பார்கள். இந்தப் பொய்களை நம்பி ஏமாறுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அது போதும்.

வட கொரியாவுக்கு சுற்றுலா சென்று வந்த அமெரிக்கப் பயணி ஒருவர், தனது அனுபவக்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கர்கள் நினைப்பதற்கு மாறாக வட கொரியர்களும் உலகில் உள்ள பிற மக்களைப் போன்ற சாதாராணமான மனிதர்கள் தான் என்பதை உணர்த்தியுள்ளார். (பார்க்க: My trip to North Korea: 13 misconceptions corrected )

"வடகொரியா மக்கள் சிரிக்கவே மாட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலருண்டு. அவர்களுக்காக வட கொரியர்கள் மத்தியில் பிரபலமான இரண்டு நகைச்சுவைத் துணுக்குகள் :
  • வட கொரியர்களும் விளையாட்டுப் பிரியர்கள் தான். கனடாவில் ஐஸ் ஹாக்கி பிரபலம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது தான் அந்த வயது வந்தோருக்கான ஜோக்: "கனடியர்கள் எதற்காக பின்புறமாக உடலுறவு கொள்கிறார்கள் தெரியுமா?" "தொலைக்காட்சியில் ஐஸ் ஹாக்கி பார்ப்பதை தவற விடக் கூடாது என்பதற்காக!"

  • "ஒரு தடவை எல்லையில் வட கொரிய இராணுவ வீரனும், அமெரிக்க இராணுவ வீரனும் சந்தித்துக் கொண்டார்கள். நட்பின் அடையாளமாக, அமெரிக்க இராணுவ வீரன் தன்னிடமிருந்த அமெரிக்க சிகரட்டை கொடுத்து பரிமாறினான். வட கொரிய இராணுவ வீரனும் அதை தயங்காமல் வாங்கிப் புகைத்தான்.
  • அப்போது அமெரிக்க வீரன் கேட்டான்: "உங்களுக்குத் தான் அமெரிக்கர்களை கண்டால் பிடிக்காதே. எதற்காக அமெரிக்க சிகரட் புகைக்கிறாய்?" அதற்கு பதிலளித்த வட கொரிய வீரன் சொன்னான்: "நான் அதைப் புகைக்கவில்லை, எரிக்கிறேன்!"

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, March 10, 2017

சர்வசன வாக்குரிமை : முதலாளிகள் போட்ட பிச்சை அல்ல!


ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை, எம‌க்கு முத‌லாளிக‌ள் போட்ட‌ பிச்சை அல்ல‌. அத‌ற்காக‌ ஐரோப்பாவில் சோஷ‌லிச‌க் க‌ட்சிக‌ள் நீண்ட‌ கால‌ போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ வேண்டியிருந்த‌து. இந்த‌ உண்மை இன்றைய‌ இளைய‌ த‌லைமுறைக்கு தெரியாது.

 அந்த‌க் கால‌த்தில், ஐரோப்பாவில் இருந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் யாவும் முத‌லாளிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ இருந்த‌ன‌. அத‌னால் அவை வெளிப்ப‌டையாக‌வே முத‌லாளித்துவ‌ க‌ட்சிக‌ள் என‌ அழைக்க‌ப் ப‌ட்ட‌ன‌. அத‌ற்கு மாறாக‌, ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சிக‌ள் ம‌ட்டுமே பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ளை பிர‌திநிதித்துவப் ப‌டுத்தின‌. பிற்கால‌த்தில் அதில் இருந்து பிரிந்த‌து தான் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ள்.

மேற்க‌த்திய‌ நாடுக‌ளில், 20 ம் நூற்றாண்டின் தொட‌க்க‌ம் வ‌ரையில், ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌ பேச்சுக்கே இட‌மிருக்க‌வில்லை. செல்வ‌ந்த‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே தேர்த‌லில் ஓட்டுப் போடும் உரிமை இருந்த‌து. இட‌துசாரிக் க‌ட்சிக‌ளின் நீண்ட‌ கால‌ போராட்ட‌த்திற்குப் பிற‌கு தான் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை ந‌டைமுறைக்கு வ‌ந்த‌து.

இங்கேயுள்ள‌ ப‌ட‌ம், 1907 ம் ஆண்டு ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் எடுக்க‌ப் ப‌ட்ட‌து. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமைக்காக‌ ந‌ட‌ந்த‌ மாபெரும் ஆர்ப்பாட்ட‌ ஊர்வ‌ல‌ம். SDAP (ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க‌ தொழிலாள‌ர் க‌ட்சி) க‌ட்சியால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

ப‌தாகைக‌ளில் காணப்ப‌டும் வாச‌க‌ங்க‌ள்: "நாங்க‌ள் ஆண்க‌ளுக்கும், பெண்க‌ளுக்குமான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ பொது வாக்குரிமை கோருகின்றோம்." "வ‌ர்க்க‌ வாக்குரிமை ஒழிக‌"

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)



உருளைக்கிழ‌ங்கு க‌ல‌வ‌ர‌ம்

இருப‌தாம் நூற்றாண்டின் தொட‌க்க‌த்தில் ஐரோப்பா முழுவ‌தும் உழைக்கும் ம‌க்க‌ளின் எழுச்சி ந‌ட‌ப்ப‌து ஒரு ச‌ர்வ‌ சாதார‌ண‌மான‌ விட‌ய‌ம். ப‌ல‌ இட‌ங்க‌ளில் உண‌வுப் பொருள் விலையேற்ற‌ம் க‌ல‌வ‌ர‌ங்க‌ளுக்கு கார‌ண‌மாக‌ இருந்த‌து.

பிற‌ ஐரோப்பிய‌ர்க‌ளைப் போன்று, ட‌ச்சுக் கார‌ருக்கும் உருளைக்கிழ‌ங்கு பிர‌தான‌மான‌ உண‌வு. 1917 ம் ஆண்டு, ஜூலை மாத‌ம‌ளவில், நெத‌ர்லாந்தில் உருளைக்கிழ‌ங்கிற்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. அத‌ன் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருந்த‌து. அதே நேர‌ம் வெளிநாடுக‌ளுக்கான‌ உருளைக் கிழ‌ங்கு ஏற்றும‌தியும் குறைந்த‌ பாடில்லை. இத‌னால் வ‌றிய‌ உழைக்கும் ம‌க்க‌ள் க‌டுமையாக‌ப் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் ஏழை ம‌க்க‌ள் கிள‌ர்ந்தெழுந்து அர‌சுக்கு எதிராக‌ க‌ல‌க‌ம் செய்த‌ன‌ர். த‌ன்னெழுச்சியான‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌ன‌. ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. இட‌துசாரிக் க‌ட்சிக‌ள் கால‌வ‌ரைய‌ற்ற‌ பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌ன‌. ஆயிர‌க் க‌ண‌க்கான‌ தொழிலாள‌ர்க‌ள் வேலைநிறுத்த‌ம் செய்த‌ன‌ர்.

அர‌சாங்க‌ம் க‌ல‌வ‌ர‌த்தை அட‌க்குவ‌த‌ற்காக‌ இராணுவ‌த்தை அனுப்பிய‌து. 3500 ப‌டையின‌ர் ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ர‌ ம‌த்தியில் கூடார‌ங்க‌ளை அடித்து த‌ங்கினார்க‌ள். (ப‌ட‌த்தில் பார்க்க‌வும்) க‌ல‌வ‌ர‌ம் அட‌க்க‌ப் ப‌ட்டு, ஜூலை 6 நிலைமை வ‌ழ‌மைக்கு திரும்பிய‌து. 10 பேர் ப‌லியானார்க‌ள். 113 பேர் காய‌ம‌டைந்த‌ன‌ர்.

(ஆதார‌ம்: Geschiedenis van Amsterdam 1900 - 2000)


பெப்ரவரி வேலைநிறுத்தம்


1941 ம் ஆண்டு, நெத‌ர்லாந்தை ஆக்கிர‌மித்த‌ ஜேர்மன் நாஸிப் ப‌டையினர், யூத‌ர்க‌ளை வெளியேற்றும் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஆர‌ம்பித்த‌ன‌ர். அத‌ற்கு எதிர்ப்பு தெரிவிப்ப‌த‌ற்காக‌, நெத‌ர்லாந்து க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி பெப்ரவரி 25 அன்று பொது வேலைநிறுத்த‌திற்கு அழைப்பு விடுத்த‌து. 

ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரிலும் அதை அண்டிய‌ ப‌குதிக‌ளிலும், அன்று யாரும் வேலைக்கு போக‌வில்லை. க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு அந்த‌ளவு செல்வாக்கு இருந்த‌து. மூன்று நாட்க‌ளாக‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்த‌து. 2ம் உலகப் போர் காலத்தில், அன்று நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ ஐரோப்பிய நாடுக‌ளில் ந‌ட‌ந்த‌ முத‌லாவ‌து ம‌க்க‌ள் போராட்ட‌ம் அது தான். 

த‌ற்கால‌த்தில், ஒவ்வொரு வ‌ருட‌மும், அர‌சு அனுச‌ர‌ணையில் பெப்ர‌வ‌ரி வேலைநிறுத்த‌ம் நினைவுகூர‌ப் ப‌டுகின்ற‌து. இருப்பினும், ஊட‌க‌ங்க‌ள் வேண்டுமென்றே க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி ப‌ற்றி எதுவும் குறிப்பிடாம‌ல் இருட்ட‌டிப்பு செய்து வ‌ருகின்ற‌ன‌.

Wednesday, March 08, 2017

8 மார்ச், சர்வதேச மகளிர் தினம் - ஒரு வரலாற்றுக் குறிப்பு


பெண் விடுதலையும் சமூக விடுதலையின் ஓர் அங்கம் தான். அதனால் சர்வதேச மகளிர் தினமும், சோஷலிச தொழிலாளர் இயக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. மேதினம் மாதிரி, அதுவும் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக உருவானது. தொழிற்சாலைகளில் பரிதாபகரமான சூழலுக்குள் வேலை செய்த பெண்களின் குருதியாலும், வியர்வையாலும் உருவானது.

1910 ம் ஆண்டு, டென்மார்க், கோபென்ஹெகன் நகரில் இரண்டாவது சோஷலிசப் பெண்களின் மகாநாடு நடந்தது. பதினேழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் காலகட்டம் முதலாம் உலகப்போரை எதிர்நோக்கி இருந்தது. அதே நேரம் எந்தவொரு நாட்டிலும் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் படவில்லை. அதனால், போர்வெறிக்கு எதிராகவும், பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப் பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

அந்த மகாநாட்டில், ஜெர்மன் சோஷலிஸ்ட் கிளாரா ஜெட்சின் ஒரு யோசனையை முன்மொழிந்தார். பெண் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசமயப் படுத்தவும், கட்சி சார்பற்ற பெண்களை கவர்வதற்கும் ஒரு சர்வதேச தினம் அவசியம் என்பதை வலியுறுத்தினார். சுருக்கமாக, சர்வதேச மகளிர் தினம், வருடந்தோறும் பெண் விடுதலைப் போராட்டத்தை குறிக்கும் வகையில் கொண்டு வரப் பட்டது.

அன்றிலிருந்து பல உலக நாடுகளை சேர்ந்த பெண்கள், தங்கள் கலகக் குரலைக் கேட்க வைப்பதற்காக தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 1911 ம் ஆண்டிலிருந்து, ஐந்து நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. 


அப்போது அந்தத் தினம் மார்ச் 19 ஆக இருந்தது. அந்தத் தினத்தை நிச்சயிப்பதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1908 ம் நியூ யார்க் புடவைத் தொழிற்சாலைகளில் வேலை செய்த பெண் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தது. அதே நேரம், 1871 ம் ஆண்டு பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை நினைவுகூரவும் அந்தத் தினம் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு, மார்ச் 8 (பழைய ரஷ்யக் கலண்டரில் பெப்ரவரி 23) அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினம், சென் பீட்டர்பெர்க் நகர புடவைத் தொழிற்சாலையை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதில் பங்கெடுக்குமாறு நகரின் பிற தொழிலகங்களுக்கும் பிரதிநிதிகள் அனுப்பப் பட்டனர்.



சென் பீட்டர்பெர்க் நகரின் பெரும்பாலான தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் நடந்தது. அதே நேரம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ரஷ்ய பாராளுமன்றம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும், பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.

தொழிலாளர் போராட்டத்தை அடக்குவதற்காக அனுப்பப் பட்ட அரச படையினர், போராட்டக் காரர் பக்கம் சேர்ந்து கொண்டனர். அவர்களது கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டனர். போராட்டத்தின் விளைவாக தெருக்களில் வாகனப் போக்குவரத்து தடைப் பட்டது. ஆங்காங்கே பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. இருப்பினும் அன்றைய நாளின் முடிவில் நகரம் வழமைக்குத் திரும்பியது.

பெண்களின் உரிமைப் போராட்டம் நடந்த ஒரு சில நாட்களின் பின்னர், ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி நடந்தது. சரியாக ஒரு வாரத்திற்குப் பின்னர், மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் இரண்டு தடவை புரட்சிகள் நடந்துள்ளன. பெப்ரவரி புரட்சியிலும் தொழிலாளர்கள் பங்கெடுத்திருந்த போதிலும், பாராளுமன்ற ஜனநாயகவாதிகளே அதற்குப் பிறகு இடைக்கால அரசு அமைத்தனர். அதனால், மீண்டும் அக்டோபரில் போல்ஷெவிக்குகளின் (கம்யூனிஸ்டுகள்) புரட்சி நடந்தது. 

1921 ம் ஆண்டு, சர்வதேச அமைப்பான கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெண் பிரதிநிதிகள் சோவியத் யூனியனில் ஒன்றுகூடினார்கள். 1917 பெப்ரவரி புரட்சியின் பொழுது நடந்த பெண்களின் போராட்டத்தை நினைவுகூர்வதர்காக மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக தீர்மானிக்கப் பட்டது. சோவியத் சோஷலிஸ்ட் குடியரசில் விடுதலை பெற்ற பெண்களின் முன்மாதிரியை பின்பற்றும் முகமாக அது பல்வேறு உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ள பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பெண்கள் தமது உரிமைகளுக்காக போராடும் தினமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகின்றனர். 

"இது என்னுடைய வேலை அல்ல" பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சோவியத் கால சுவரொட்டி

Tuesday, March 07, 2017

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் ஜே.ஆரின். குழந்தைகள்

இலங்கையில், வடக்கு- கிழக்கு மாகாணங்களில், வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் நடக்கிறது. வழமையாக தமிழரின் தேசியம் சம்பந்தமான போராட்டங்களில் காணப்படும் ஒருநிலைப் பட்ட ஆதரவு இதில் இல்லை.

இதற்கு முன்னர் நடந்த கானாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டம், கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம், இவற்றுடன் ஒப்பிடும் பொழுது, வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் அதிகளவு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம், எப்போதும் பொருளாதாரப் பிரச்சினை என்று வந்து விட்டால், ஈழத் தமிழர்கள் இரண்டு பட்டு சிந்திப்பார்கள்.

தமிழர்களில் பெருமளவில் போராட்டத்தை ஆதரிப்பவர்கள் இருந்தாலும், கணிசமான அளவினர் எதிர்ப்பவர்களாக உள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அவர்களில் சிலர் நக்கல், நையாண்டி மூலம் தனியார்துறைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர். "எதற்காக வேலை கேட்டு அரசிடம் கெஞ்சுகிறீர்கள்? தனியார் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளமும் கொடுப்பார்கள்..." என்று நியாயம் பேசுகின்றனர்.

தற்காலத்தில் 15% வேலைவாய்ப்புகள் அரசுத் துறையிலும் 85% வேலைவாய்ப்புகள் தனியார் துறையிலும் இருப்பதாக, ஒரு தனியார்துறை ஆதரவாளர் "அறிவுபூர்வமாக" எடுத்துரைத்தார். அதற்கு அவர் எந்தப் புள்ளிவிபர ஆதாரத்தையும் காட்டவில்லை. இலங்கையில் இன்றும் கூட ரயில், தபால், மின்சாரம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் அரசினால் நடத்தப் படுகின்றன. சரி, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.

எல்லா நாடுகளிலும் பொது (அரசு) நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்தந்த நாட்டைப் பொறுத்து விகிதாசாரம் கூடலாம், குறையலாம். வேலையில்லாப் பட்டதாரிகளில் ஒரு பிரிவினர் தமக்கு அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை. வேலையில்லாவிட்டால் வறுமையில் வாட வேண்டும் என்று நிலைமை இருக்கும் நாட்டில், கட்டாயமாக தனியார் துறையில் வேலை கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும்.

ஒருவருக்கு தான் எங்கே வேலை செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யும் உரிமை உள்ளது. அதற்கான சுதந்திரமும் உள்ளது. அரசாங்க வேலை வேண்டும் என்பதும் தனி மனித உரிமை தான். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் மனத் திருப்தி அவருக்கு கிடைக்கலாம். அதற்கு மாறாக, தனியார் துறையில் வேலை செய்வதன் மூலம் அவர் சுரண்டலுக்கு துணை போகின்றார். உலகில் எங்காவது மக்களை கொள்ளையடிக்காத, உழைப்பாளிகளை சுரண்டாத தனியார் நிறுவனம் இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தனியார் துறையில் வேலை தேடுமாறு "ஆலோசனை" கூறிய நியாயவான்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது, அதிக சம்பளம். அரசுத் துறையை விட தனியார் துறையில் பட்டதாரிகளுக்கு இரண்டு, மூன்று மடங்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று ஆசை காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லாமல் மறைக்கும் உண்மை ஒன்றுண்டு. அதே தனியார் துறையில் அடிமட்ட ஊழியர்களின் சம்பளம் இரண்டு, மூன்று மடங்கு குறைவு. அதாவது, அடிமட்ட தொழிலாளர்களிடம் இருந்து திருடப் படும் உழைப்பின் ஒரு பகுதி தான் அந்த "அதிக சம்பளம்". இந்தப் பகல் கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக வெட்கப் பட வேண்டும்.

அரசுத் துறையிலா, தனியார் துறையிலா வேலை வாய்ப்பு அதிகம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசிடம் கோரிக்கை வைக்கும் வேலையிலாப் பட்டதாரிகளின் போராட்டம் நியாயமானதா? அரசமைப்பு சட்டப் படி, வேலை செய்வது ஒரு குடிமகனின் உரிமை என்றால், வேலை வாய்ப்பை உருவாக்குவது அரசின் கடமையாகின்றது. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காத படியால், அது குறித்து கட்டாயப் படுத்த முடியாது என்றும் அரசு தப்பிக் கொள்கின்றது. எது எப்படி இருப்பினும் அரசு தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளமை முக்கியமானது.

தனியார்துறைக்கு ஆதரவாகப் பேசும் இளம் தலைமுறையினர், எழுபதுகள், எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள். அதன் அர்த்தம், இலங்கையில் ஒரு காலத்தில் அரசுத் துரை நிறுவனங்களே அதிகமாக இருந்த காலகட்டம் பற்றி அவர்களுக்குத் தெரியாது. 1977 ம் ஆண்டுக்குப் பிறகு தான், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே கொண்டு வந்த நவ தாராளவாத அரசியலின் விளைவாக தனியார்மயம் ஊக்குவிக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான் பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரித்தது.

வேலையில்லாப் பட்டதாரிகளை நையாண்டி செய்யும் தனியார் மய தாசர்களை "ஜே.ஆரின். குழந்தைகள்" என்று அழைப்பதில் எந்தப் பிழையும் இல்லை. இலங்கையில் தனியார் மயத்தை புகுத்திய ஜே. ஆர். தான், தமிழர்களுக்கு எதிரான ஈழப்போரைத் திணித்தவர். பல இலட்சம் தமிழர்களின் உயிர்களைக் காவு கொள்ளக் காரணமாக இருந்தார். ஈழப்போருக்கும், தனியார்மயமாக்கலுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. Naomi Klein எழுதிய Shock Doctrine நூலை வாசித்தால் அந்த உண்மை புரியும். அமெரிக்க பொருளியல் அறிஞர் Milton Friedman முன்மொழிந்த சந்தைப் பொருளாதார தத்துவம், முதல் தடவையாக சிலியில் நடந்த சதிப்புரட்சியின் பின்னர் பரீட்சித்துப் பார்க்கப் பட்டது.

தனியார்மயத்தின் வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்தின் பின்னால் உள்ள நியாயத் தன்மையை இப்போது பார்ப்போம். மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் கூட, வேலை வாய்ப்பு உருவாக்குவதை அரசு தான் பொறுப்பு எடுக்கிறது. நான் கடந்த இருபது வருட காலமாக மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதால், அதை கவனித்து வருகிறேன்.

ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும், வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றிய விடயம் முக்கியமாகப் பேசப் படும். இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இந்த விடயத்தில் ஒன்று தான். தற்போது மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்து வரும் வலதுசாரி இனவாதக் கட்சிகள் கூட, அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறி விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது பழி போடுவது அவர்களது இனவாத அரசியல் சார்ந்தது. மேலும் அவர்களால் தமது உறுதிமொழியை காப்பாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேற்கத்திய நாடுகளிலும் வேலையில்லாத பட்டதாரிகள் தமது பிரச்சினைக்கு அரசை தான் பொறுப்பேற்க வைப்பார்கள். அது சரியானதும் கூட. ஏனென்றால், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை ஒரு கடமையாகக் கருதுவதில்லை. அதாவது நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை அல்ல. அவர்கள் தமக்கு தேவையான அளவில் எடுத்துக் கொண்டு, ஏனையோரை நிராகரிப்பார்கள். ஆகவே, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் கொள்கை வகுப்பது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த விடயம். அதை அரசு தான் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும்.

Saturday, March 04, 2017

கழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை? - ஒரு பொருளியல் குறிப்பு



தயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். "பணம் என்றால் என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி இயங்குகின்றது?" இவை போன்ற அடிப்படை அறிவு இல்லாமல், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களுக்கு தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அவமானப் படாதீர்கள். 

கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட தமிழ் அறிவுஜீவிகள் பலர், தற்போது அடிக்கடி பிதற்றுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இலங்கையிலும், அதிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பொதுவுடமைக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு சகிக்க முடியாத அறிவுஜீவிகள், மிகவும் அபத்தமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் முதலாளித்துவ பத்திரிகையான வீரகேசரியில், ஓர்   அபத்தமான கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை ஒன்று பிரசுரமானது. (27.02.2017)  "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற தலைப்பிலான கட்டுரையில், "முதலாளித்துவத்தின் குறைபாடுகளை" பொதுவுடைமை என்று திரித்து எழுதி பித்தலாட்டம் நடந்துள்ளது. (கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)

அதாவது, கட்டுரையில் முதலாளித்துவம் என்பதற்கு பதிலாக, பொதுவுடைமை என்று மாற்றி எழுதியுள்ளார். அதற்குக் காரணம், அவருக்கு பொதுவுடைமை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஒரு அறிவுஜீவி தனது அறியாமையை வெளிப்படுத்தி எழுதியுள்ள கட்டுரையின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வீரகேசரி பத்திரிகை ஞாயிறு வாரமஞ்சரியில் பிரசுரித்து விட்டது. நான் அந்தக் கட்டுரையில் இருந்த அபத்தமான தகவல்களை சுட்டிக் காட்டி எழுதிய விமர்சனக் கட்டுரையை வீரகேசரிக்கு அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. (எனது மறுப்புக் கட்டுரை:பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு)

இலங்கையில் பத்தாம் வகுப்பில் இருந்து வணிகவியல் படிக்க முடியும். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்பதை, பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் இலட்சக் கணக்கில் இருப்பார்கள். சாதாரணமான வணிகவியல் மாணவனுக்கே இலகுவாக புரியக்  கூடிய அபத்தமான கருத்துக்களை, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் "பெரும் மதிப்புக்குரிய" வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது எப்படி?

எவ்வாறு ஒரு எழுத்தாளர் முதலாளித்துவத்தை பொதுவுடைமை என்று திரித்து தனது வாசகர்களை ஏமாற்ற முடிந்தது? அதற்குக் காரணம் பின்னால் உள்ள வர்க்க விரோத சிந்தனை. அதாவது, கம்யூனிசம் பற்றி நீங்கள் எத்தகைய அவதூறுகளையும் பரப்பலாம். அதற்கு வெகுஜன ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படும். அதைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. குறிப்பாக, படித்த மத்திய தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிய சிந்தனை கொண்டோர் அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர்.

இந்தக் கட்டுரையாளர் தான் "கிழக்கு ஜெர்மனியில் ஏழாண்டுகள் கல்வி கற்றதாகவும், அங்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் கற்று, பரீட்சை எழுதி, சித்தி பெற்றதாகவும்" குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்வினைக்கு பதில் அளிக்க முடியாமல் சமாளித்து  "மார்க்ஸ் எழுதியதை ஜெர்மன் மொழியில் படிக்குமாறு(?)" பதில் கூறினார். 

விவிலிய நூலை கிரேக்க மொழியில் படிக்குமாறு சொன்னதைப் போன்று அவரது பதில் அமைந்திருந்தது. ஏற்கனவே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கடைகளில் விற்பனையாகின்றன. மொழிபெயர்ப்பு எந்தப் பிழையுமில்லாமல் சரியான பொருள் தருகின்றதா என்பது தான் முக்கியம். அவற்றை ஆங்கிலத்தில் அல்லது ஜெர்மன் மொழியில் படிக்குமாறு சொல்வதெல்லாம் அறிவுஜீவிகளின் தலைக்கனம்.

கட்டுரையில் இருந்து: //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.... அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்!

அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.

சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).

சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

உண்மையில் இவருக்கு பொருளாதாரம் பற்றிய அரிச்சுவடி தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது. //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.// இதைச் சொல்லி விட்டு அமெரிக்க டாலர், ஸ்டேர்லிங் பவுன்ஸ் என்று தாவுகிறார். நாணயம் என்பது பரிவர்த்தனைக்கான ஊடகம். அது மட்டுமே பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. முதலில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும், சோஷலிச பொருளாதாரத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று பார்த்து விட்டு பணப் புழக்கத்திற்கு வருவோம்.

முதலாளித்துவ பொருளாதாரம் என்பது இயற்கையாக உருவாவது. அதனால் தான் சுதந்திர சந்தை பற்றிய கதையாடல்களும் வருகின்றன. அதாவது, சந்தையில் குறிப்பிட்ட பொருளுக்கு கேள்வி இருக்குமானால் அதை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொட்டுவார்கள். இதனால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு.

சந்தையில் தாராளமாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள நன்மை. கேள்வி குறைந்து பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரம் மிதமிஞ்சிய நுகர்வுப் பொருட்களை யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் அழிக்க வேண்டி இருக்கும். இது முதலாளித்துவத்தின் தீய விளைவு.

அதற்கு மாறாக, சோஷலிச பொருளாதாரம் இயற்கையாக உருவாவதில்லை. அது எப்போதும் திட்டமிடப் பட்டதாக உள்ளது. அதனால் தான் சோஷலிச நாடுகளில், ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் பற்றிய கதையாடல்களும் நடந்து கொண்டிருந்தன. அதாவது, ஒட்டு மொத்த சமூகத்திலும் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு எந்தளவு தேவை இருக்கிறது என்பதற்கு அமைய, அந்தப் பொருள் அளவாக உற்பத்தி செய்யப்படும். 

அதற்கு முதலில் ஒரு நாட்டின் சனத்தொகை எவ்வளவு என்பன போன்ற புள்ளிவிபரங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதிலும் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் தேவைகள் பூர்த்தி செய்யப் படுவது ஒரு நன்மை. ஆகையினால், கிடைக்கும் நுகர்வுப் பொருட்களை யாரும் வீணாக்க மாட்டார்கள். ஆனால் அதில் தீமையும் உள்ளது. ஒரு சில நேரம், எதிர்பார்ப்புகள் பிழைத்துப் போவதால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனால் தான் முன்னாள் சோஷலிச நாடுகளில் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது.

மேற்படி பொருளாதார அடிப்படை பற்றி எதுவும் பேசாமால், எடுத்த எடுப்பில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுன் என்று பேசுவது பாமரத்தனமானது. ஆம், அது பாமரத் தனமானது தான். சாதாரணமான மக்களுக்கு எப்போதும் டாலர்,பவுன் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். கடினச் செலாவணி (hard currency) எனப்படும் டாலர், பவுன், யூரோக்களை சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று உழைப்பவர் ஏராளம். அது சாதாரண மக்களின் மனநிலை. ஒரு மெத்தப் படித்த அறிவுஜீவி தனது "அனுபவக் குறிப்புகள்" என்று எழுதலாமா?

ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம் என்று சொல்வார்கள். இது பற்றி லெனின் எழுதிய நூலில் புள்ளிவிபரங்களுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் நவீன காலத்து சர்வதேச வர்த்தகம் தொடங்கியது. அப்போது பிரித்தானியா உலகில் அரைவாசியை காலனிப் படுத்தியதால், அதன் நாணயமான ஸ்டேர்லிங் பவுன்ஸ் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசானது. அதனால், சர்வதேச பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் அதிகரித்தது. அதன் நிமித்தம், அமெரிக்க டாலர்களின் பாவனையும் கூடியது.

எதற்காக அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன? அதற்குப் பின்னால் உள்ள பொருளாதார காரணம் என்ன? அதற்கு முதலில் நாங்கள் பணம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பண்டமாற்று மூலமே வர்த்தகம் நடந்த காலத்தில் பணம் கொண்டுவரப் பட்டது. ஆனால், நாம் கண்ணால் காணும் பணம் ஒரு உலோகத் துண்டு அல்லது கடதாசி தான். பாவனையாளர்களான நாங்கள் தான் அதற்கு மதிப்பை கூட்டுகிறோம்.

ஆரம்பத்தில் தங்கம் அல்லது வெள்ளித் துண்டு தான் நாணயமாக பயன்படுத்தப் பட்டது. தங்கத்தின் பெறுமதியும், நாணயத்தின் பெறுமதியும் ஒன்றாக இருந்தது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்கப் பயந்த மக்கள், அவற்றை பாதுகாப்பாக நகை அடைவுக் கடைக்காரரிடம் கொடுத்தார்கள். அடைவுக் கடைக்காரர் தான் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை எழுதிக் கொடுத்தார். பின்னர் அதுவே மக்கள் மத்தியில் பரிமாற்றிக் கொள்ள பட்டது. அதாவது, பற்றுச் சீட்டில் எழுதி உள்ள அளவு தங்கம் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில், அது நாணயத் தாள் போன்று பயன்படுத்தப் பட்டது.

முதலாம் உலகப்போர் வரைக்கும், ஒரு நாட்டில் பணத்தாள்களை புழக்கத்திற்கு விடும் மத்திய வங்கி அதற்கு அளவான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டியிருந்தது. டாலர், பவுன்ஸ் போன்ற அந்நிய செலாவணியும் தங்கத்திற்குப் பதிலாக வைத்திருந்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகள் உட்பட, இப்போதும் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளில் பின்பற்றப் படும் நடைமுறை அது தான். தங்கத்திற்கும், பணத்திற்கும் இடையிலான உறவு நூற்றுக்கு நூறு வீதம் சரிசமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முதலாம் உலகப் போர் தொடங்க முன்னரே (குறிப்பாக 1914 இலிருந்து) மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில், மத்திய வங்கி குறைந்த பட்சம் நாற்பது சதவீத தங்கம் வைத்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்குக் காரணம், தங்கத்தின் பெறுமதிக்கும், நாணயத்தின் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பு எப்போதோ துண்டிக்கப் பட்டு விட்டது.

தற்காலத்தில், நாணயத்தின் பெறுமதி தனியாக தீர்மானிக்கப் படுகின்றது. சாதாரணமாக பங்குச் சந்தை நிலவரத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்த உண்மை தெளிவாகப் புரியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, டாலர் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதே மாதிரி, பிற்காலத்தில் யூரோ நாணயமும் கொண்டு வரப் பட்டது. சுருக்கமாக, முன்பு தங்கம் வகித்த பாத்திரத்தை, தற்போது டாலர், யூரோ நாணயங்கள் நிரப்புகின்றன. அதனால் தங்கத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.

ஆகவே, ஆசி கந்தராஜா கட்டுரையில் எழுதியது எத்தனை அபத்தமானது என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்கும். அவர் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஏதோதோ உளறுகிறார்: //சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது.//

பணம் மட்டும் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. மேலும் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி! இன்றைக்கும் நீங்கள் ஒரு சாதாரண ஐரோப்பியக் குடிமகனிடம் கேட்டாலும் அதைச் சொல்வான். அதை "கார்ல் மார்க்ஸ் சொன்ன பொருளாதார தத்துவம்" என்று திரிப்பது எத்தனை அபத்தமானது? 

உண்மையில் அவருக்கு கார்ல் மார்க்ஸ் சொன்னது எதுவும் தெரியாது. அதே நேரம் பொருளாதாரமும் தெரியாது. பணம் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கக் கூடாது என்பதற்காக தான், மேற்குலக நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்தார்கள். அது தற்போது இந்தியா, இலங்கை போன்ற பழமைவாத கலாச்சாரம் கொண்ட நாடுகளிலும் வந்து விட்டது.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும்.// இது ஒரு மிகப் பெரிய பொய். இவர் முதலாளித்துவ நாடுகளின் பணம் பற்றிய கோட்பாட்டை, அதுவும் அரைவேக்காட்டுத்தனமாக, சோஷலிச நாடுகளுடையதாக திரிக்கிறார். தன்னை மாதிரியே, தனது கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் பொருளாதார அடிப்படை எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் மடமையை என்னவென்பது?

முதலாளித்துவ நாடுகளில் பணம் எத்தகைய பங்கு வகிக்கின்றதோ, அதே பங்கை சோஷலிச நாடுகளிலும் வகிக்கும். ஏனென்றால், பணம் என்பது ஒரு பரிவர்த்தனை ஊடகம் மட்டுமே. பணத்தை இல்லாதொழிப்பது தான் கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால இலட்சியம். அதனால், சோஷலிச நாடுகளில் சில இடங்களில் பண்டமாற்று ஊக்குவிக்கப் பட்டது. பிற சோஷலிச நாடுகளுடனும் பண்டமாற்று மூலம் வர்த்தகம் நடந்தது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் பாவனைக்கும், விற்பனைக்கும் விடப்படும் பொருட்களுக்கும், பணப் புழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆயினும், அங்கே கூட, "பொருளின் பெறுமதிக்கு ஏற்ப பணம் புழக்கத்திற்கு" விடப் படுவதில்லை. அது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் பிஷர் (Irving Fisher) எழுதிய பணம் பற்றிய கோட்பாடு தான் இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளால் பின்பற்றப் படுகின்றன. அது என்ன கோட்பாடு?

வங்கிகள் பணத்தை உருவாக்கி சமூகத்தில் புழக்கத்திற்கு விடுகின்றன. இதை "பண உற்பத்தி" (M) என்று குறித்துக் கொள்வோம். அந்தப் பணம் கடனாகவோ, ஏற்றுமதியாகவோ பரிமாற்றம் செய்யப் படுகின்றது. அதை "பரிமாற்றம்" (V) என்று குறித்துக் கொள்வோம். பரிமாற்றம் விரைவாக நடந்து கொண்டிருந்தால், புதிய பணமும் உருவாகிக் கொண்டிருக்கும். ஒருவேளை கடன் வாங்க யாருமில்லை, அல்லது எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டார்கள் என்றால், புதிய பணம் உருவாகாது.

சமூகத்தில் பணம் பெருகும் பொழுது, இன்னொரு பக்கத்தில் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கும். அதை "விற்பனைப் பொருட்கள்" (P) என்று குறித்துக் கொள்வோம். பொருட்களின் பாவனையும், விற்பனையும் விரைவாக கூடிக் கொண்டிருக்கும். அதை "விற்பனை" (T) என்று குறித்துக் கொள்வோம்.

ஒரு பக்கத்தில், M கூடும் பொழுது V கூடுகிறது (M x V). மறுபக்கத்தில், P கூடும் பொழுது T கூடுகின்றது (P x T). இவ்விரண்டும் சமமாக இருந்தால் தான் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட முடியும்.

அதாவது, MV = PT.

ஒரு நாட்டில் பணவீக்கம் எப்படி ஏற்படுகின்றது? புதிதாக அச்சடிக்கப் படும் பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வாங்குவதற்கு தேவையான பொருட்கள் குறைவாகவும் இருந்தால் பணவீக்கம் என்கிறோம். ஆனால், பொதுவாக ஒரு நாட்டில் பணவீக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பணக்கார முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கவே செய்யும். அதற்குக் காரணம் கடன்களும், பரிவர்த்தனைகளும் அதிகமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் புதிய பணத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்படி பொருளாதார தத்துவத்திற்கு அமையத் தான், அமெரிக்க டாலர்களும், பிரிட்டிஷ் பவுன்களும் உலகம் முழுக்க சுற்றுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிற உலக நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறன. அதன் அர்த்தம், அதே ஒரு மில்லியன் டாலர்கள் அமெரிக்க நாட்டுக்குள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன. அதாவது, வழமைக்கு மாறாக இரண்டு மடங்கு டாலர்கள் அச்சிடப் பட்டுள்ளன.

இந்த இடத்தில் ஆசி கந்தராஜா ஒரு நகைப்புக்குரிய, அரைவேக்காட்டுத்தனமான காரணத்தை கூறுகின்றார்: //இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.//😄😄😄

கந்தராஜாவின் கூற்றில் உள்ள அபத்தம் என்னவென்று அதை வாசிக்கும் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவு தான் பணத் தாள்களை அச்சிட வேண்டும் என்பது நியதி என்றால், வெளியில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் டாலர்களுக்கு அளவான தங்கத்திற்கு எங்கே போவார்கள்? அருகில் உள்ள கனடா, மெக்சிகோ மீது படை எடுத்து அங்கிருக்கும் தங்கத்தை எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும்! அமெரிக்கா ஒரு "ஜனநாயக" நாடு, அப்படி நடக்காது என்று வைத்துக் கொண்டால், ஏற்கனவே அமெரிக்காவினுள் டாலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது அங்கு பணச் சுருக்கம் (deflation) நிலவ வேண்டும்.

அப்படியானால், அமெரிக்காவின் பொருளாதார பலத்தின் சூக்குமம் என்ன? கடன், கடன், கடன் மட்டுமே! நாட்டில் எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகரிக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு பணத் தாள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒருவர் வங்கியில் பத்தாயிரம் டாலர்கள் கடனாக கேட்கிறார். வங்கி தன்னிடம் இருந்த பத்தாயிரம் டாலரை எடுத்துக் கொடுத்து விட்டு, நடப்புக் கணக்கில் எழுதி வைக்கின்றது. நடப்புக் கணக்கு என்பது ஒரு நிரந்தரமில்லாத தற்காலிகமான கணக்கு. ஏன் அதில் குறித்துக் கொள்கிறது? கடனாக கொடுக்கப் பட்ட பத்தாயிரம் டாலருக்கு ஈடாக புதிதாக பத்தாயிரம் டாலர்கள் உருவாக்கப் படுகின்றன. அதாவது, கடனில் இருந்து புதிய பணம் பிறக்கிறது.

ஒரு நாட்டில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலத்தில் கடனில் உருவாகும் புதிய பணத்தால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. ஆனால், ஒரு காலத்தில் எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டால், அல்லது கட்டாமல் ஓடி விட்டால், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உண்டாகும். 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்ததும் அது தான். புதிது புதிதாக வீடுகளை கட்டி, கடனுக்கு விற்று வந்தார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கூட வீடு வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கடனாளிகள் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை உருவானது. அதன் விளைவு? நிதி நெருக்கடி. மிகப் பெரிய அமெரிக்க வங்கிகள் கூட திவாலாகின.

ஆகவே, கந்தராஜா சொல்வது மாதிரி, வெளிநாடுகளில் உள்ள டாலர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தால் அங்கே ஏற்படப் போவது "சடுதியான பணவீக்கம்" அல்ல. மாறாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடையும். ஒரு தேசமே திவாலாகி விடும். பொதுவுடமையை விமர்சிப்பதற்கு முன்னர், முதலாளித்துவம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்.

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஆதாரமாக Arnold Heertje எழுதிய Economie நூலில் சில பகுதிகளை எடுத்திருக்கிறேன். அவர் ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். ஒரு முதலாளித்துவ நாடான நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக பேராசிரியராக கடமையாற்றி உள்ளார். அவருக்கு எனது நன்றிகள்.)

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: