Saturday, July 24, 2021

இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு

 - ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.

- இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள்... இவ்வாறு பலவகையான தொழிற் பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.

- 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாத போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

- இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 -1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.

- எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

- இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல்: 
  • 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது. 
  • 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
  • 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 
  • 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன. 
  • 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது. 
  • 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன. 
  • 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

- 1977 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.

- ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ- லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.

- 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.

- அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.

- நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.

- 1980 ம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

- அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

- ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப் பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

- 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடைசெய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப் பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.

- வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்று விட்டது.

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002 ம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

- தென்னிலங்கையில் 1987 -1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

- ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்க போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.

- மறு புறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

- தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்க பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.

Thursday, July 22, 2021

1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை

//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டி, இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக விட்டுக்கொடுக்காத புனிதப் போராட்டத்தை நடத்தி, தங்களிடையே வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து, அதன் மூலம் இன்று சிதைந்துள்ள தேசிய ஐக்கியத்தை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும்.// - தோழர் சண்முகதாசன்


1977 இனக்கலவரத்தில், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பங்கிருந்தது. இனவாதப் பேச்சுகள் மூலம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் கடைகள் தாக்க வைத்திருக்கிறார்கள். "திருப்பி அடித்தல்" என்பது சாதாரண அப்பாவி மக்களை அடிப்பதென்று பொருள் அல்ல. எதிரி யார், நண்பன் யார் என்ற புரிதல் இல்லாத படியால் தான் தமிழ்த்தேசிய போராட்டம் பின்னடைவுக்கு உள்ளானது.


தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தொழிலாளி பத்திரிகையில் இருந்து ஒரு பகுதி:
//ஒரு நாட்டில் இனக்கலவரங்களை மூட்டுவோர் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள இனவெறி சக்திகளாகும். இவ் இனவெறி சக்திகளுக்கு அரசியல் ரீதியில் இனவெறி ஊட்டி வளர்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள் ஆவர். இத்தகையவர்களால் உருவாக்கப்படும் இனக்கலவரம் எந்தவொரு நாட்டிலும் கற்பனை செய்யப்படாத கொடூரத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். 

ஒரு இனக்கலவரத்தை தடுப்பதற்குரிய ஒரே வழி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதும் வழங்குவதுமேயாகும். ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கி இன அடக்குமுறையை செய்வதிலும் முதலாளித்துவ சமூக அமைப்பு எப்போதும் முன் நின்று வருவதைக் காண முடியும். 

எனவே இனங்களின் மத்தியில் உள்ள பிணக்குகளையும், ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தை அடக்கும் நிலையை இல்லாமல் செய்வதற்குரிய ஒரே மார்க்கம் இனங்களின் மத்தியில் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தத்தம் இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளை நிராகரித்து உழைக்கும் வர்க்கம் என்ற ரீதியில் ஐக்கியப் பட்டு தமது வர்க்க எதிராளிகளுக்கு எதிராக போரிடுவதே ஆகும்.//



Wednesday, July 21, 2021

ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்

 2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.


நான் முன்பு பல தடவைகள் இதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய போதெல்லாம், பலர் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம், ஐரோப்பாவில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் தாமாகவே அப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள். அதாவது, இரண்டு அமெரிக்க கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய ஆழ்கடலில் தரித்து நிற்பதாகவும், மேலிடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில், இறுதியுத்தம் நடந்த புது மாத்தளன் பகுதியை காட்டுவார்கள். அங்கு இரண்டு பேர் வானொலிப் பெட்டிக்கு அருகில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் சொல்வார்: "இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்!" (அமெரிக்கா இந்தியா என்று மாற்றப் பட்டுள்ளது.) ஆகவே, அமெரிக்க (அல்லது இந்திய) கப்பல் வரும் என்று நம்பித் தான் புதுமாத்தலன் கடற்கரை வரை சென்றிருக்கிறார்கள்? அதாவது, புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்? அதைத் தானே இந்தப் படத்தில் சொல்ல வருகிறீர்கள்?

படத்தில் அந்த வசனத்தை பேசுகிறவர் சோமிதரன் என்ற ஈழத்தமிழர். அதுவும் சாதாரணமான ஈழத்தமிழர் அல்ல. ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்திலும் ஓர் ஊடகவியலாளராக செயற்பட்டவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் செய்தி சேகரித்தவர். மேலும், ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்களை எடுத்தவர். அதைவிட இன்று வரை புலிகளை விமர்சிக்க மறுத்து வருபவர். புலிகள் விட்ட தவறுகளை நேரில் கண்ட போதிலும் அவற்றைப் பற்றி பேச மறுப்பவர். சுருக்கமாக: தன்னை ஒரு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்வதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதவர்.

அப்பேற்பட்ட பெருமைக்குரிய ஒருவரை, அதிலும் ஒரு புலி ஆதரவாளரை, ஜகமே தந்திரம் என்ற புலி எதிர்ப்புப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதிலே ஹைலைட் என்னவென்றால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் காரணம் என்று, அவர்களது தவறை சுட்டிக் காட்டும் வகையில் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்!

புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் மிகவும் சிறிது. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறுபக்கம் நந்திக் கடல். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறுகிய நிலப்பரப்பை அரசு பாதுகாப்பு வலையமாக அறிவித்து இருந்தது. அங்கு சென்ற மக்களை கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தமை அரசின் போர்க்குற்றம். அந்த நேரம் தான் அங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்ற செய்தி பல உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எதிரொலித்தது.

அப்போது இது குறித்து சர்வதேச கண்டனங்கள் எழுந்திருந்த போதிலும், அதையெல்லாம் அரசு அலட்சியப் படுத்தியது. அரசு தானாகவே ஒரு பிரதேசத்தை பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து விட்டு, அந்த இடத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால், பாதுகாப்பு வலையத்தில் புலிகள் மக்களோடு பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்துவதாக அரசு தனது போர்க்குற்றத்தை நியாயப் படுத்தியது.

உண்மையில் புதுமாத்தலன் பகுதியில் தான் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த படியால், இராணுவம் முன்னேறுவதை தடுப்பதற்காக மிக உயரமான மண் அணை அமைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றுவதற்காக கடுமையான சண்டை நடந்தது.

ஜகமே தந்திரம் படத்தில் புதுமாத்தளன் என்று ஓரிடத்தையும், அங்கு இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களையும் காட்டுவார்கள். அங்கு நடந்த விமானக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட அழிவுகளையும், மக்களில் சிலர் கொல்லப் படுவதையும் காட்சியாக அமைத்திருக்கிறார்கள். கமெரா என்னவோ பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சுற்றிப் படமெடுத்தாலும், தூரத்தில் புலிச் சீருடையில் சிலர் நிற்பதாக காட்டுவார்கள். இது எத்தனை பெரிய தவறு என்பது படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா?

அன்று யுத்தம் நடந்த காலத்தில் புது மாத்தளன் பாதுகாப்பு வலையத்திற்குள் அடங்கியது. அரசிடம் பாதுகாப்புத் தேடி வந்த மக்களை, அரச படையினர் குண்டு போட்டு கொன்றமை ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம். நாங்கள் இன்றைக்கும் அந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜகமே தந்திரம் படத்தை எடுத்தவர்கள், அரசு சொன்ன காரணத்தை நியாயப்படுத்துவது போன்று காட்சி அமைத்திருக்கிறார்கள்!

பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்குள் புலிகள் பதுங்கி இருந்தார்கள் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. அதைத் தானே இந்தப் படமும் காட்டுகிறது? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எதுவென்றாலும் நேரடியாக பேச வேண்டும். மொத்தத்தில் ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசு சார்பாக எடுக்கப் பட்ட ஒரு தமிழ்ப் படம்.

Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.

Tuesday, July 13, 2021

கியூபாவில் என்ன நடக்கிறது?

 


கியூபாவில் நடக்கும் குழப்பம் தொடர்பாக சில குறிப்புகள்: 
- 10-11 ஜூலை, வார இறுதி நாட்களில் கியூபாவின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அங்கு நிலவும் உணவு, எரிபொருள், மருத்துவ வசதிப் பற்றாக்குறைக்கு அரசை குற்றம் சாட்டினார்கள்.

- அதே நேரம் கியூப புரட்சிக்கு அல்லது அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. அவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்து கண்டனம் தெரிவித்தார்கள்.

- கியூபாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே இருந்த பொருளாதாரத் தடை கடுமையாக்கப் பட்டது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்திலும் அதுவே தொடர்கிறது.

- கடந்த 29 வருடங்களாக கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. "ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக" பொருளாதாரத் தடை விதித்ததாக அமெரிக்கா நியாயப்படுத்தி வந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடையை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப் பட்டது. அதற்கு ஆதரவாக 184 உலக நாடுகள் வாக்களித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை.

- இதே நேரம் ஹைத்தியின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான மொய்ஸ் ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இந்த அரசியல் படுகொலையை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்க இராணுவம் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.

- கியூபாவுக்கும் ஹைத்திக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். கியூபாவுக்கு மிக அருகில் உள்ள கரீபியன் தீவான ஹைத்தியில் அமெரிக்க படைகள் வந்திறங்கினால், அது எதிர்காலத்தில் கியூபா மீது படையெடுப்பதற்கான தயார்படுத்தலாக இருக்கலாம்.

Saturday, July 10, 2021

இலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்

 


இலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: "இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழுதியிருக்கவில்லை..." என்று சில ஈழத்தமிழ் "சீமானிஸ்டுகள்" என்னுடன் கிளப் ஹவுசில் வாதிட்டனர். 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் "பல்கலைக்கழக பட்டதாரிகளும்" தாம் படித்த பாடநூல் எதிலும் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன். 

 இந்தக் குழுவினர் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பதற்கான காரணங்கள்: 
  • 1) தமிழகத்து சீமானால் பரப்பப்பட்ட திராவிட எதிர்ப்பு அரசியலின் தாக்கம். சீமானை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்கள் கூட சீமானிச கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். 
  •  2) இவர்கள் தமது மனதில் உள்ள சாதிவெறியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். "ஈழத்தில் சாதிப்பிரச்சினை இல்லை" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பவர்கள். 
  •  3) சாதிவெறிக்கும், பெரியார் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஒரு சமூகநீதி இயக்கமாக பார்க்கிறார்கள். ஈழத்திலும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். தமது மேலாதிக்க கட்டுமானத்தை திராவிடக் கருத்தியல் தகர்த்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.