Wednesday, April 29, 2020

பெல்ஜியம், பிரான்ஸில் நடந்த Lockdown கலவரங்கள்

பெல்ஜியத்தில் நடந்த லோக்டவுன் கலவரம் 

11 ஏப்ரல் 2020
பெல்ஜியத் தலைநகர் புருசல்சில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் Anderlecht பகுதியில் கலவரம் வெடித்தது. இளைஞர்கள் ஒன்று திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசியதும் நிலைமை மோசமடைந்தது. பொலிஸ் கார்கள் கற்களால் தாக்கி சேதமாக்கப் பட்டன. சில இடங்களில் தீவைக்கப் பட்டது.

அங்கு நடந்த கலவரத்திற்கு காரணம், முதல்நாள் நடந்த கொலை. பொலிஸ்காரர்கள் ஒரு 19 வயது இளைஞனை கைது செய்வதற்காக விரட்டி உள்ளனர். வெருண்டு ஓடிக்கொண்டிருந்த இளைஞனை எதிரில் வந்த பொலிஸ் கார் மோதியதால் அந்த ஸ்தலத்திலேயே மரணம் சம்பவித்துள்ளது. அந்த மரணத்திற்கு பழிவாங்கக் கிளம்பிய இளைஞர்கள் கும்பல் தான் பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

பொதுவாகவே புருசெல்ஸ் நகரில் Anderlecht பகுதி எப்போதும் பதற்றமாக இருக்கும். அங்கு பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையின மக்கள் பெல்ஜிய பேரினவாத அரசு தம்மீது ஒடுக்குமுறை பிரயோகிப்பதாக குறைப்படுவதுண்டு. அந்த உணர்வுகள் ஒரு கட்டத்தில் கொதிநிலைக்கு வந்ததும் வன்முறைகள் வெடிப்பதுண்டு.

******

பிரான்சில் lockdown கலவரம்

20 April 2020
பாரிஸ் புறநகர்ப் பகுதியான Villeneuve-la-Garenne எனும் இடத்தில் இன்று அதிகாலை வரை கலவரம் நடந்துள்ளது. நேற்றிரவு அங்கு வாழும் அரபு சிறுபான்மையின இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கப் பார்த்தது. அங்கு சில வாகனங்களும் எரிக்கப் பட்டுள்ளன. பிரான்சின் பல பகுதிகளிலும் lockdown காலத்தில் பல இனவாத அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விளைவாகவே நேற்று இந்தக் கலவரம் நடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நேற்றிவு நடந்த கலவரத்திற்கு காரணம் ஒரு விபத்து. அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸ் கார் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளான். அவனது நண்பர்கள் இதனை காவல்துறையின் இனவெறித் தாக்குதல் எனக் கண்டித்துள்ளனர். Villeneuve-la-Garenne பிரதேச மேயர், முன்பு National Front என அழைக்கப்பட்ட இனவாதக் கட்சியின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தப் பகுதியில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

*****


26 April 2020
பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிமொஜ் (Limoges) நகருக்கு அருகில் உள்ள போபிறேய் (Beaubreuil) எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் நடக்கிறது. போலிஸை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. கண்காணிப்பு கமெராக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. நகர சபை கட்டிடமும் எரிக்கப் பட்டது.

புதன்கிழமை லொக்டவுன் நேரத்தில் விபத்து ஒன்று தான் கலவரத்திற்கு காரணம் என தெரிய வருகின்றது. ஆப்பிரிக்க அல்லது அரேபிய சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கூட்டரில் சென்ற நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பொலிஸ் விரட்டியதால் விபத்து நடந்துள்ளது.

******

"உலகம் எரிகிறது. வங்கிகள் எப்போது எரியப் போகின்றன?" - சுவிட்சர்லாந்தில் ஒரு ரயிலில் வரையப்பட்ட வாசகம்.

***** 

Tuesday, April 28, 2020

இத்தாலியில் கொரோனா மரணங்களுக்கு காரணமான முதலாளிகள்

இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அங்கு என்ன தவறு நடந்தது என்பது பற்றி ஆராய்கிறார்கள். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.


- வடக்கு இத்தாலியில் உள்ள லொம்பார்டியா (Lombardia) மாகாணம் தான் வைரஸ் தொற்றினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரைவாசி மரணங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.

- குறிப்பாக மருத்துவ மனைகளில் பெருமளவு மரணங்கள் சம்பவித்துள்ளமை அதிர்ச்சியளிக்கிறது. ஜனவரி மாதம் நோயாளிகள் அனுமதிக்கப் பட்ட நேரம், அதனை சுவாசப்பை அழற்சி என்று நினைத்து மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

- பெப்ரவரி 21 அன்று தான் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. அப்போதும் இது சாதாரண சளிக்காய்ச்சல் போன்று பரவாது என்று WHO கூட அறிவித்திருந்தது. அதாவது மிகக் குறைவாக எடைபோட்டுள்ளனர்.

- தற்செயலாக இத்தாலி தான் கொரோனா வைரஸ் தொற்றுதலுக்குள்ளான முதலாவது ஐரோப்பிய நாடாக இருந்தது. அதனால் அது குறித்து எதுவும் தெரியாத படியால் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. இதே நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியில் இருந்து பாடம் படித்துக் கொண்டதுடன் தமது நாடுகளை பாதுகாத்துக் கொண்டன.

- இத்தாலி எந்தக் காலத்திலும் இது போன்ற பெருந்தொற்றுக்கு தயாராக இருக்கவில்லை. அங்கு மருத்துவமனைகளில் 100000 பேருக்கு 9 ICU கட்டில்கள் இருந்தன. அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் நிரம்பி வழிந்த படியால் பெருமளவு நோயாளிகள் வீடுகளில் வைத்து பராமரிக்கப் பட்டனர். அதுவே அவர்களது சாவுக்கும் காரணமாகி விட்டது.

- மிலானை தலைநகராகக் கொண்ட லொம்பார்டியா மாகாணம் இத்தாலியின் தொழிற்துறை மையப் பகுதி எனலாம். அங்கு தான் பெருமளவு தொழிற்சாலைகள் உள்ளன. தேசத்தின் மொத்த வருமானத்தில் இருபது சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்துறை நகரங்களை மூடி விடுவதற்கு அரசும், முதலாளிகளும் தயாராக இருக்கவில்லை. இந்தளவு பாரதூரமான வைரஸ் தொற்று ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

- இத்தாலி தொழிலதிபர்களின் சங்கமான Confindustria தொழிற்சாலைகளை மூடுவதற்கு முன்வரவில்லை. தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று, முதலாளிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உற்பத்தி நிறுத்தப் பட்டால் இலாப வருமானம் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் தொழிற்சாலைகளை தொடர்ந்தும் இயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

- தேசத்தின் பொருளாதாரமும் பாதிக்கப் படக் கூடாது, அதே நேரம் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படக் கூடாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருந்தது. 7 மார்ச் lockdown அறிவிக்கப் பட்ட பின்னரும் சில தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமை தொடர்ந்தால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்த பின்னர் தான் அவை மூடப்பட்டன.

- லொம்பார்டியா மாகாணத்தில் தான் அறுபது வயதைக் கடந்த வயோதிபர்கள் அதிகமாக இருந்தனர். அதனால் அவர்களே வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப் பட்டனர். மேலும் மருத்துவமனை சீர்கேடுகள் குறித்து நிறைய முறைப்பாடுகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு, முகக்கவசம் அணிவதற்கு பல மருத்துவமனைகளில் தடைவிதிக்கப் பட்டிருந்தது! ஏனென்றால் முகக்கவசம் தேவையற்ற பயத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. (அதாவது முகக் கவசம் அணிந்தவருக்கு தான் நோய் இருக்கிறதென்று நினைத்து மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டது.)

- தற்போது நடக்கும் விசாரணை லொம்பார்டியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நடந்த குற்றங்களை பற்றி மட்டுமே ஆராய்கிறது. மே மாதம் நாடு முழுவதும் lockdown எடுக்கப் பட்ட பின்னர் மேலதிக விசாரணைகள் நடக்கும். அப்போது இன்னும் பல உண்மைகள் தெரிய வரும்.

Sunday, April 26, 2020

Fake News: வைரஸ் இழப்புகளுக்கு சீனாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்கா

எச்சரிக்கை! FAKE NEWS!! 
"வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் வூஹான் சோதனைக்கூடம்" என்பது ஒரு பொய்ச் செய்தி. 
தீவிர வலதுசாரி விஷமிகள் பரப்பும் வதந்தி.


பிரான்ஸ், பாரிஸில் வசிக்கும் குமாரதாசன் (Kumarathasan Karthigesu) என்பவர் "வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் சீனாவின் யுஹான் பரிசோதனைக்கூடம்" என்ற தலைப்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய பொய்ச் செய்தியை இதுவரை 152 பேர் பகிர்ந்துள்ளனர். இதை எழுதியவர் ஒரு பிரபல ஈழத்து "ஊடகவியலாளர்"(?) என்று சொல்கிறார்கள். அப்படியான ஒருவரே இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் எழுதியுள்ளார். ஒருவேளை அவரும் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தால், தனது வழமையான அரசியல் பிரச்சாரத்திற்கு சாதகமாக இந்த வதந்தியை பயன்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விஷமிகள் விரிக்கும் சூழ்ச்சி வலைக்குள் நாமும் விழுந்து விடக் கூடாது.

இந்த விஷமத்தனமான வதந்தியின் ஆதி மூலம் அமெரிக்கா. வேறு யார்? குறிப்பாக ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கமான தீவிர வலதுசாரிகள். யார் இந்த டிரம்ப்? கிருமிநாசினி குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என்று கூறிய "அறிவாளி". இன்று வரையில் உலகிலேயே அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில் மட்டுமே நடந்துள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஜனாதிபதி டிரம்ப் விமானநிலையங்களை மூடாமல் lock down கொண்டு வர மறுத்து வந்தார். Lockdown போட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்பதற்காக தனது சொந்த மக்களை பலி கொடுக்கவும் தயங்காத அரசுத் தலைவர்.

இதுவரை நாற்பதாயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பரவுதலுக்கு பொறுப்பேற்க மறுக்கும் டிரம்ப் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் கூட இவரது குற்றச்சாட்டுக்கு தப்பவில்லை. கொரோனா மரணங்களுக்கு காரணம் அமெரிக்க அரசின் நிர்வாக குறைபாடுகள் என்பதை மறைப்பதற்காக வேண்டுமென்றே பல பொய்யான செய்திகள் புனைந்து பரப்பப் படுகின்றன. டிரம்புக்கு ஆதரவான தீவிர வலதுசாரி இணையத் தளங்களிலும், Fox news தொலைக்காட்சியிலும் இந்த பொய்ச் செய்திகள் பரப்பப் படுகின்றன.

கொரோனா வைரசானது சீனாவில் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப் பட்டது, அல்லது அங்கிருந்து தப்பியது, வேண்டுமென்றே பரப்பப் பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமெரிக்க நுண்ணுயிரியல் விஞ்ஞானிகளே இது உண்மையல்ல என்று மறுத்துள்ளனர். இது விஞ்ஞானபூர்வமான தகவல் அல்ல என்றும் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப் படும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.

ஒரு வதந்தியை மட்டும் "ஆதாரமாக" வைத்துக் கொண்டு குமாரதாசன் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுள்ளார். உலகம் முழுவதும் வைரஸ் பரவியதற்கு சீனாவே பொறுப்பு என்றும், அதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் "தங்களது இழப்புகளுக்குரிய 'பில்' லை சீனாவிடம் கொடுக்கத் தயாராகின்றன" என்று சிறுபிள்ளை கூட நம்ப முடியாத விடயங்களை எல்லாம் கற்பனை செய்து எழுதுகிறார். அதே மாதிரி, எபோலாவை பரப்பியதற்கு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவிடம் 'பில்' கொடுக்கலாமா என்பதையும் கேட்டுச் சொன்னால் நல்லது. (எபோலா வைரஸ் அமெரிக்காவில் தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது.)

ஒரு பேச்சுக்கு இது சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும், பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் யுத்தத்திற்காக வட கொரியா, வியட்நாம், சீனா, கியூபா, போன்ற பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 'பில்' அனுப்பி நஷ்டஈடு கோரக் காத்திருக்கின்றன. இவையெல்லாம் அமெரிக்கா திட்டமிட்டு செய்த இனப்படுகொலைகளுக்குள் அடங்கும். இது விடயத்திலும் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று பின்னராக நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டல்லவா ஊடகவியலாளரே?

அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை, தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் தமிழில் மொழிபெயர்த்து எழுதி பரப்பியுள்ளனர். இதுவும் அவர்களது தீவிர வலதுசாரி அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான். இந்த விஷமிகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இது ஒரு பொய்ச் செய்தி என்பதை நிரூபிப்பதற்கான நிறைய ஆதாரங்கள் இந்த இணைப்பில் உள்ளன:
Scientists Haven’t Found Proof The Coronavirus Escaped From A Lab In Wuhan. Trump Supporters Are Spreading The Rumor Anyway. 
https://www.buzzfeednews.com/article/ryanhatesthis/coronavirus-rumors-escape-lab-china-fox-news-trump?fbclid=IwAR3xsqG7pWS5y6e78l6CllDAPkzHttHUqqKMK3996RKqanyEZl297BDseQc

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

நெதர்லாந்து தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி. அதிலும் மேற்படி வூஹான் ஆய்வுகூடம் பற்றிய பொய் செய்தியை பரப்பியது டிரம்ப் சார்பான தீவிர வலதுசாரி இணையத் தளங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 

Wednesday, April 22, 2020

நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில், "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல்:



1)நெதெர்லாந்து நாட்டில் சமயப் பின்னணி அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?

சமயம் என்பதை விட சமய நிறுவனம் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நெதர்லாந்தும் ஒரு காலத்தில் "மத அடிப்படைவாத" நாடாக இருந்தது தான். அதன் அர்த்தம் மக்கள் ஏதாவதொரு மத நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஒரு புறம் கத்தோலிக்க- கிறிஸ்தவ நிறுவனமும், மறுபுறம் புரட்டஸ்தாந்து- கிறிஸ்தவ நிறுவனமும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் சமூக நீக்கம் செய்யப் பட்டனர். அவ்வாறு சமூக நீக்கம் செய்யப் பட்டவருடன் சொந்தக்காரர்களும் தொடர்பு வைக்க முடியாது. மேலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து சமூகங்களுக்கு இடையிலான தொடர்பாடலும் மிகக் குறைவாக இருந்தது. அதாவது ஒரு கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்துகாரரும் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது.

உண்மையில் இதுபோன்ற அதீத கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் இன்றைய மதச்சார்பற்ற அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களில் சனத்தொகை பெருகியதும் மதக் கட்டுப்பாடுகளில் இருந்து விட்டு விலகக் காரணமாக அமைந்திருந்தது. அதே நேரம் முன்பு மத நிறுவனங்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் அரசு பொறுப்பெடுத்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் ஏழைகள், வேலையற்றவர்கள், தேவாலயத்தின் கதவைத் தட்டி உதவி கேட்டு வந்தனர். தற்போது நலன்புரி அரசுத் திட்டங்கள் அனைத்து நலிவடைந்த பிரிவனருக்கும் உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து கொண்டு சென்றது. தற்காலத்தில் ஆன்மிகம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது தேடல் சம்பந்தப் பட்ட விடயமாகி விட்டது.

2) தாங்கள் ஒரு இடதுசாரி முனைப்புடையவரா அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்ன?

இதற்கும் நெதர்லாந்து வரலாற்றில் இருந்து உதாரணம் காட்டலாம் என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த Domela Nieuwenhuis நெதர்லாந்து சோஷலிச இயக்கத்தின் தந்தையாக போற்றப் படுகிறார். அவர் ஒரு காலத்தில் பாதிரியாராக கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து வந்தார்! ஜெர்மன் - பிரான்ஸ் போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட பின்னர் சமாதானத்தை விரும்புவோராகவும், சமத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார். மன்னர், மத நிறுவனம், முதலாளித்துவம், மதுபானக் கடை போன்றவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இது போன்ற எழுச்சிக் கருத்துக்கள் எல்லாம் "இடதுசாரித்தனம்" என்றால் நானும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன? எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறவர் இடதுசாரியாகத் தான் இருக்க முடியும். தென் அமெரிக்காவில் ஒரு காலத்தில் மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து "விடுதலை இறையியல்" போதித்த கத்தோலிக்க பாதிரியார்கள் அங்குள்ள ஏழை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கூட நிறைய இடதுசாரிக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஏழைகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வாக பரலோக ராஜ்ஜியத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார். நான் பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது தற்போதுள்ள அரசு, பொருளாதார அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

3) தாங்கள் ஒரு சிறந்த பன்மொழி அறிவு திறன் கொண்டவர் என்பதை நான் நினைக்கின்றேன் இவ்வாறு தங்களை வளம்படுத்த காரணம் ஏதும் உண்டா?

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை பன்முகக் கலாச்சார சமுதாயத்தில் கழித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் இருந்தே உலகின் பிற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிய வேண்டும் என்ற பேரவா இருந்தது. "ஒரே இடத்தில் இருந்து குப்பை கொட்டுவது" ஒத்துவரவில்லை. "நாடோடியாக அலைவது" பிடித்த விடயமாக இருந்தது. அதற்கு பல மொழிகளையும் கற்பது அவசியம் எனக் கண்டுகொண்டேன். "ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்பது ஒரு முன்முடிவு. அது உண்மையல்ல. நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அந்நிய மொழியும் ஒரு புதிய உலகத்திற்கான திறவுகோல். குறைந்தது பத்து சொற்களை அறிந்து கொண்டாலே பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். எமது அறிவும் விசாலமடையும். ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்வது சிறந்தது என்றொரு சீனப் பழமொழி உள்ளது.

4) தங்கள் பார்வையில் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் பற்று எவ்வாறு உள்ளது?

தமிழர் மட்டுமல்லாது, ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் குறிப்பிட்ட சில காலம் தாயக பிரிவுத் துயரில் சிக்கியிருக்கும். அண்மையில் நெதர்லாந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை வாசித்தேன். நியூசிலாந்தில் குடியேறிய டச்சுக் காரர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து சமூகத்துடன் கலப்பதில்லை. ஒரு தனியான பிரதேசத்தில் மூடப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள். பலர் டச்சு மொழி மட்டுமே பேசுகிறார்கள். டச்சு மரபு வழி உணவை உண்கிறார்கள். அவர்களுக்கென தனியாக ஒரு டச்சு மொழி பத்திரிகையும் வெளிவருகிறது. ஆகவே இது உலகம் முழுவதும் உள்ள தோற்றப்பாடு தான்.

புலம்பெயர் தமிழர்களின் தமிழ்ப்பற்று இன்று ஓர் அடையாள அரசியலாக மாறிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது, சுற்றி வர வேறொரு மொழி பேசும், வேற்றின கலாச்சாரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தங்களது தனித்துவத்தை தக்க வைப்பதற்கான போராட்டம். இரண்டாவது தலைமுறையினர் இதில் ஆர்வமில்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும், அன்றாடம் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் அவர்களையும் அடையாளம் தேட வைக்கிறது. இதற்குள் ஐரோப்பிய அரசுக்களின் பிரித்தாளும் அரசியல் இருப்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

5) அண்மைக்காலமாக எமது தாயகத்தில் திடீர் என்று சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது இதற்கான கரணம் என்ன என்பதை எம்மோடு பகிர முடியுமா?

இருபத்தியோராம் நூற்றாண்டில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. உண்மையில் இது மதங்களுக்கு இடையிலான முரண்பாடு அல்ல. ஒரு சிலர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அதற்குப் பல அப்பாவிகள் பலியாகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சரியாகச் சொன்னால், அரசு ஆதரவு இருக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அரசு மறைமுகமாக மதத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் எல்லா மதங்களிலும் இது நடக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். மக்கள் மதரீதியாக பிளவுபட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம். உண்மையில் அரசு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பிரஜைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இவையெல்லாம் அரசின் கடமைகள் என அரசமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. அதைவிட அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது தனிக் கதை. அது பற்றி மக்கள் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களது கவனத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி விட வேண்டும். அதற்கு சமய முரண்பாடுகள் உதவுகின்றன. சமய முரண்பாடுகள் மட்டுமல்ல, இனக்கலவரம், யுத்தம் போன்றன கூட ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாக்க உதவுகின்றன.

Saturday, April 18, 2020

மக்டொனால்ட்ஸ் உடைத்து ஏழைகளுக்கு உணவளித்த தொழிலாளர்கள்


பிரான்ஸில் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்!

- கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் பல வாரங்கள் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையை நிர்வாகம் எதிர்த்த போதிலும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரெட்ரான்ட் திறந்துள்ளனர்.

- கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுன் காரணமாக ஏழைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். மார்செய் நகரிலும் அது தான் நிலைமை. மார்செய் வடக்கில் உள்ள Saint-Barthélemy வட்டாரத்தில் ஒரு மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையில் அவர்களும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் தானே? தமது உற்றார் உறவினர்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

- மார்செய் நகரில் பெரும்பாலும் வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதிகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிரான்ஸ் முழுவதும் வேலையற்றவர் எண்ணிக்கை 8.5%. ஆனால் இந்தப் பகுதிகளில் 25 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்ல மார்செய் நகரில் 39 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- கடந்த காலத்தில் நடந்த வேலையிழப்புகள், சம்பளக் குறைப்புகள் இத்துடன் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட ஊரடங்கு தனிமைப்படுத்தலும் சேர்ந்து கொள்ளவே நிலைமை இன்னும் மோசமடைந்தது. அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் நலன் பேணும் Maison Blanche அமைப்பின் சார்பில் பேசிய போது, தம்மிடம் சாப்பிட எதுவுமில்லை என்று பல குடும்பங்கள் தம்மிடம் முறையிடுவதாக தெரிவித்தார். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்களுக்கு வெங்காய சூப் மட்டும் கொடுத்ததாக கூறினார்.

- அங்கு "கலக்டிவ்" என பொதுவுடைமை கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய அமைப்புகளில் நிர்வாகி என்று யாரும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் கூட அவர்களிடம் உதவி கேட்குமாறு சொல்லும் அளவிற்கு இந்த கலக்டிவ் சிறப்பாக செயற்படுகின்றது.

- இருப்பினும் உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால் Syndicat des quartiers populaires de Marseille (மார்செய் பொதுச் சங்கம்) போன்ற கலக்டிவ் அமைப்புகள் மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட்டை உடைத்து திறப்பது என்று முடிவெடுத்தன. Forc e Ouvrière (தொழிலாளர் சக்தி) அமைப்பின் பிரதிநிதி Kamel Guémari இவ்வாறு கூறினார்: "அவசர காலத்தில் எமது பிரதேசத்தில் வாழும் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள்?"

- மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கையகப் படுத்திய தொழிலாளர்கள் அங்கு ஏற்கனவே வைத்திருந்த உணவுப் பொருட்களுடன், கடைகள், தனிநபர்கள் தானமாகக் கொடுத்த உணவு பொருட்களையும் சேர்த்து உணவு தயாரித்து பெட்டிகளில் அடைத்து தயாராக வைத்திருந்தார்கள். அவற்றை தொண்டர்கள் எடுத்துச் சென்று வீடு வீடாக விநியோகித்தனர். இந்த செயற்பாடுகள் யாவும் சுகாதார முறைகளுக்கு அமையவே நடந்துள்ளன. எல்லோரும் கிளவுஸ், முகக்கவசம் அணிந்தே வேலை செய்தார்கள்.

- இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் மக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகம் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது குறித்து La Marseillaise பத்திரிகையுடனான பேட்டியில் விளக்கம் கொடுத்தார்: "ஏற்கனவே நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை." அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்குமா?

- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு உழைக்கும் வர்க்கமான வெளிநாட்டு குடியேறிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க காலனிகளை சேர்ந்தவர்கள் மார்செய் நகர சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர். "இஸ்லாமியர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதில்லை" என்ற பலரது தப்பெண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் சுக்குநூறாகி விட்டது. பிரான்சில், ஐரோப்பாவில் இதுவரை காலமும் இருந்து வந்த "இஸ்லாமியர் பிரச்சினை" உண்மையில் இனப்பிரச்சினையாகவும், அதன் அடிப்படையாக வர்க்கப் பிரச்சினையாகவும் உள்ளது. பல்லின உழைக்கும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். அதைத் தான் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கைப்பற்றிய தோழர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு எமது தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். 


Friday, April 17, 2020

எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்ப்பது நல்லது!


எச்சரிக்கை: (தமிழ்) இனவாதிகள் இந்தப் பதிவை வாசிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது!


ஊரடங்கு, தனிமைப் படுத்தலுக்கு பின்னால் உள்ள வர்க்க முரண்பாடு:
  • அலுவலக ஊழியர்களான மத்தியதர வர்க்கம் வீடுகளில் முடங்கிக் கிடந்து ஆடிப் பாடிக் களிக்கிறது. 
  • அத்தியாவசிய வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.

மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளால், எதிர்காலத்தில் ஒரு வர்க்கப் போர் வெடித்தாலும் ஆச்சரியம் எதுவுமில்லை. நிச்சயமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் ஒரு காலத்தில் வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்து கிளர்ந்தெழுவார்கள்.

பிரான்சில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதால் மே மாத நடுப்பகுதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. பாரிஸ் நகரில் வெளிநாட்டு குடியேறிகளின் சனத்தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. அங்கு தான் தமிழர்களும் பெருமளவில் வசிக்கிறார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை.

ஸ்பெயினில் இருந்து வரும் தகவல்களும் அதே மாதிரித் தான் உள்ளன. மாட்ரிட், பார்சலோனா போன்ற பெரிய நகரங்களில் வெளிநாட்டு குடியேறிகள் நெருக்கமாக வசிக்கும் பிரதேசங்களில் தான் கொரோனா தொற்று மரணங்கள் அதிகமாக சம்பவித்துள்ளன.

பிரித்தானியாவில் லண்டன், நெதர்லாந்தில் ரொட்டர்டாம், அமெரிக்காவில் நியூயோர்க் என்று சிறுபான்மை இனத்தவர் நெருக்கமாக வாழும் நகரங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் மேற்கத்திய நாடுகளில் சிறுபான்மையின மக்கள் தான் அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளனர்.

மேற்கத்திய நாடுகளில் இனமும், வர்க்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இங்கே பூர்வீக ஐரோப்பிய வெள்ளையர் செய்ய விரும்பாத "ஊத்தை" வேலைகளை தான் தமிழர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டு குடியேறிகள் செய்கின்றனர். அதாவது துப்பரவுப் பணிகள், வயோதிபர் மடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். இந்த இடங்களில் தான் கொரோனா தொற்று நோய் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்நாடுகளில் செய்யும் தொழிலில் மட்டுமல்லாது குடியிருக்கும் வீடுகளிலும் வர்க்க முரண்பாடு தெளிவாகத் தெரியும். ஐரோப்பிய வெள்ளையர்கள் பெரும்பாலும் நகருக்கு வெளியே வீட்டுத் தோட்டத்துடன் கூடிய பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள். அதற்கு மாறாக நகரங்களில் வெளிநாட்டவர்கள் வசதி குறைந்த நெருக்கமான வீடுகளில் வசிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, புதிதாக வந்த வெளிநாட்டவர்கள் வாடகை செலவை ஈடுகட்டுவதற்காக பல நண்பர்களாக ஒன்று சேர்ந்து ஒரு வீட்டில் வசிப்பார்கள். பாரிஸ் நகரில் இது சர்வ சாதாரணம். சிலநேரம் குடும்பங்கள் கூட பிள்ளைகளுடன் ஒரு சிறிய வீட்டில் குடித்தனம் நடத்துவார்கள். இப்படியான இடங்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மற்றவர்கள் எவ்வாறு தனிமைப் படுத்திக் கொள்ளலாம்? அது நடைமுறைச் சாத்தியமா?

இதுவரை நிறைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்த காரணமும் இது தான். அதாவது அவர்களும் இங்கே அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் இங்கு நிலவும் வர்க்க ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் தான். தயவுசெய்து அது ஒடுக்குமுறையா என்று கேட்காதீர்கள். மேலே பல உதாரணங்களை அடுக்கி இருக்கிறேன்.

இங்குள்ள நிலைமை இப்படி இருக்கையில், சில இனவாதப் பைத்தியங்கள் இதையும் இனவாதக் கண்ணாடி அணிந்து பார்க்க முனைகின்றனர். இலங்கையில் இருக்கும் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை), கொரோனாவுக்கு பலியான ஈழத்தமிழர்களின் படங்களைப் போட்டு, "ஐயகோ, ஒரு தேசம் அழிகிறதே!" என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். அவர் கண்களுக்கு "தமிழர் எல்லாம் ஒரே இனம், ஒரே தேசம்!"

இது ஒரு வர்க்கப் பிரச்சினை. இங்கே ஈழத் தமிழர்களும் உழைக்கும் வர்க்கத்தினர் தான். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் என்பதால் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். தயவுசெய்து இனவாதப் பைத்தியங்கள் சற்று ஒதுங்கி ஓய்வெடுங்கள். உங்களை நீங்களே அரசியலில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டாலே போதும். தமிழ் உழைக்கும் மக்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.


Wednesday, April 15, 2020

கியூப மருத்துவர்கள்- மனித நேயமே எமது தாயகம்


- கியூபாவில் ஒவ்வோர் ஆண்டும் வ‌ர‌வுசெல‌வு திட்ட‌த்தில் 27 வீத‌ம் மருத்துவ‌த்திற்கு அல்ல‌து ச‌மூக‌ உத‌விக்கு ஒதுக்க‌ப் ப‌டுகிற‌து. அங்கு பிர‌ஜைக‌ளுக்கான‌ ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌ச‌ம்.


- மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் கூட‌ புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு குடும்ப‌ம் அதிக‌ செல‌வு செய்ய‌ வேண்டி உள்ள‌து. கியூபாவில் ம‌ருத்துவ‌ம் முற்றிலும் இல‌வ‌ச‌ம்.

- பொருளாதார‌ ரீதியாக‌ ஏழை நாடாக‌ வ‌கைப் ப‌டுத்த‌ ப‌டும் கியூபாவின் ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ள் ஐரோப்பிய‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் அள‌விற்கு த‌ர‌மான‌ சேவையை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌.

- வ‌ருமுன் காப்ப‌து கியூபாவின் ம‌ருத்துவ‌ திட்ட‌மாக‌ உள்ள‌து. ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளும், வ‌ட்டார‌ க‌மிட்டிக‌ளும் நோய் தொற்றுத‌ல் தொட‌ர்பான‌ கார‌ணிக‌ள், த‌டுப்ப‌த‌ற்கான‌ வ‌ழிக‌ள் குறித்து தொட‌ர்ச்சியாக‌ அறிவுரைக‌ள் வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கும்.

- ஒவ்வொரு வ‌ட்டார‌த்திலும் Medico de la familia என்ற‌ அமைப்பைக் கொண்டிருக்கும். அதாவ‌து ஒவ்வொரு ஊரிலும் குறைந்த‌து ஒரு ம‌ருத்துவ‌ர், ஒரு தாதிய‌ர் இருப்பார்கள்.

- வ‌ட்டார‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ம‌‌து கிளினிக்கிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வைத்திய‌ம் பார்ப்ப‌துட‌ன் ம‌ட்டும் நின்று விடுவ‌தில்லை. வ‌ருட‌த்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வீடு வீடாக‌ சென்று ம‌ருத்துவ‌ ப‌ரிசோத‌னை செய்வார்க‌ள். ஒரு வீட்டில் 65 வ‌ய‌திற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இருந்தால் வ‌ருட‌த்திற்கு 2 த‌ட‌வைக‌ள் வ‌ருவார்க‌ள்.

- மேற்கொண்டு சிகிச்சை தேவைப்ப‌டுவோர் ம‌ட்டும் கிளினிக் அல்ல‌து வைத்திய‌சால‌க்கு அனுப்ப‌ப் ப‌டுவ‌ர். இந்த‌ ந‌டைமுறை கார‌ண‌மாக‌ ப‌ல‌ நோய்க‌ள் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌த்தில் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்டு குண‌ப் ப‌டுத்த‌ப் ப‌டுகின்ற‌து. இத‌னால் அர‌சுக்கு செல‌வும் மிச்ச‌ம்.

- கியூபாவில் ம‌ருத்துவ‌க்க‌ல்வி உட்ப‌ட‌ க‌ல்வி முற்றிலும் இல‌வ‌ச‌ம். அத‌னால் ம‌ருத்துவ‌க் க‌ல்லூரிக‌ளில் சேரும் மாண‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் அதிக‌ம். ம‌ருத்துவ‌ராக‌ வேலை செய்யும் அனைவ‌ருக்கும் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும். ஆனால் மேல‌திக‌ போன‌ஸ் எதுவும் கொடுக்க‌ப் ப‌ட‌ மாட்டாது.

- ஏற்க‌ன‌வே கியூப‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளில் ப‌ணி புரிந்து வ‌ந்தாலும், கொரோனா தொற்று ப‌ர‌வ‌லின் பின்ன‌ர் முத‌ல் த‌ட‌வையாக‌ ஒரு ஐரோப்பிய‌ நாடான‌ இத்தாலிக்கு அனுப்ப‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

- உல‌க‌ம் முழுவ‌தும் 60 நாடுக‌ளில் 60.000 கியூப‌ ம‌ருத்துவ ப‌ணியாள‌ர்க‌ள் வேலை செய்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் அங்கு வேலை செய்வ‌து ம‌ட்டும‌ல்லாது, ஆலோச‌னை வ‌ழ‌ங்குத‌ல், க‌ற்பித்த‌ல் போன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளிலும் ஈடுப‌டுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள‌து ச‌ம்ப‌ள‌ங்க‌ள் அந்த‌ந்த‌ நாடுக‌ளின் அர‌சுக்க‌ளால் வ‌ழ‌ங்க‌ப் ப‌டும்.

- நில‌ ந‌டுக்க‌ம், வெள்ள‌ம் போன்ற‌ இய‌ற்கை அழிவுக‌ளால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இட‌ங்க‌ளுக்கு கியூப‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் உட‌னேயே அனுப்ப‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். அத‌ற்கான‌ செல‌வுக‌ளை கியூப‌ அர‌சே பொறுப்பு எடுக்கிற‌து. கியூப‌ர்க‌ளின் விரைவான‌ உத‌வி குறித்து புக‌ழார‌ம் சூட்டும் ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌ங்க‌ள் செல‌வு ப‌ற்றிக் குறிப்பிட‌ ம‌ற‌ந்து விடுகின்ற‌ன‌. அதாவ‌து வேண்டுமென்றே ம‌றைக்கிறார்க‌ள்.

- கியூபாவில் வெளிநாட்டு மாண‌வ‌ர்க‌ளுக்கு ம‌ருத்துவ‌க் க‌ல்வி அளிப்ப‌த‌ற்கு ELAM (ல‌த்தீன் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌க் க‌ல்லூரி) செய‌ற்ப‌டுகின்ற‌து. க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் ம‌ட்டும் 84 நாடுக‌ளை சேர்ந்த‌ 500 மாண‌வர்க‌ள் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ட்ட‌ம் பெற்று வெளியேறினார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கான‌ ப‌டிப்புச் செல‌வு முழுவ‌தையும் கியூப அர‌சு பொறுப்பு எடுத்த‌து.

- 1999 ம் ஆண்டு இந்த‌க் க‌ல்லூரி தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து 115 நாடுக‌ளை சேர்ந்த‌ 30000 ம‌ருத்துவ‌ர்க‌ள் அங்கே ப‌டித்துள்ள‌ன‌ர். அவ‌ர்க‌ளில் 170 பேர் அமெரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ள். அமெரிக்காவில் ம‌ருத்துவ‌க் க‌ல்விக்கு பெருந்தொகைப் ப‌ண‌ம் செல‌விட‌ வேண்டும் என்ப‌தை நான் இங்கே சொல்ல‌த் தேவையில்லை. அந்நாட்டில் க‌ல்விக் க‌ட‌ன் வாங்கி க‌ட‌னாளி ஆன‌வ‌ர்க‌ள் ப‌ல‌ருண்டு. அத‌னால் வ‌ச‌திய‌ற்ற‌ அமெரிக்க‌ மாண‌வ‌ர்க‌ள் அருகில் உள்ள‌ கியூபாவுக்கு சென்று ப‌டிக்க‌ விரும்புவ‌தில் என்ன‌ ஆச்ச‌ரியம் இருக்கிற‌து?


Sunday, April 12, 2020

கொரோனாவுக்கு பலியாகும் புலம்பெயர்ந்த உழைக்கும் வர்க்க தமிழர்கள்


இன்று நமக்குத் தேவை பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதம், குறுந் தமிழ்த்தேசிய இனவாதம் அல்ல!

லண்டன், பாரிஸ் நகரங்களில் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத் தமிழர்கள் பலர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். அன்றாடம் வரும் மரண அறிவித்தல்களை பார்த்தாலே தெரியும். பலர் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நகரங்களில் தொழில் செய்யும் உழைக்கும் வர்க்கத் தமிழர்கள், இன்றைய நெருக்கடி காலத்தில் அத்தியாவசிய சேவைகள் எனக் கருதப் படும் வேலைகளை செய்வதால் அவர்களால் வீட்டில் நிற்க முடியாது. கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டிய நிலைமை. அந்த வேலைகளை வீட்டில் இருந்து கொண்டு செய்ய முடியாது. உதாரணத்திற்கு மருத்துவமனை சுத்திகரிப்பு வேலையை கம்பியூட்டரில் On line மூலம் செய்ய முடியாது.

பெரும்பாலான தமிழ் உழைக்கும் வர்க்கத்தினர் இலகுவில் கொரோனா தொற்றக் கூடிய மருத்துவ மனைகள், வயோதிபர் மடங்கள், (தமிழ்க்)கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், வெதுப்பகங்கள், உணவு பதனிடும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் சாதாரண தொழிலாளர்களாக (பாட்டாளி வர்க்கமாக) வேலை செய்கின்றனர். இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள் தான் அத்தியாவசிய மக்கள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அவர்கள் யாரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. அது இங்கே பெரும்பாலும் வெள்ளையின ஐரோப்பியருக்கென ஒதுக்கப் பட்டுள்ள மத்தியதர வர்க்க தொழில்களில் தான் சாத்தியம். அப்படியான தொழில்களை செய்வோர் தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்க முடிகிறது.

இந்த வர்க்க முரண்பாடு சமூக வலைத்தலங்களில் பேசப் படுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றை பயன்படுத்துவோர் பெரும்பாலும் மத்தியதர வர்க்க தொழில் செய்வோர் என்பதால் தான். அவர்களுக்கு எங்களது உழைக்கும் வர்க்கத்தின் நெருக்கடி நிலைமை புரியாது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசதியான நடுத்தர வர்க்கத்தினர் தான் பிரதானமான சமூக வலைத்தள பயனாளிகள். அவர்கள் தமது வீடுகளில் படுத்துக் கிடந்து சோம்பல் முறித்த படியே அர்த்தமில்லாத கதைகளை பேசி அரட்டை அடிக்கின்றனர். இந்த நேரத்தில் அரசியல் பேசுவதை தவிர்ப்பது மட்டுமல்லாது, மக்களுக்கான அரசியல் பேசுவோரைக் கண்டால் ஏளனம் செய்கின்றனர். கேலி, கிண்டல் செய்து திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். சிலர் வெளிப்படையாக இந்த பெருக்கடியை பயன்படுத்தி இராணுவ ஆட்சி கொண்டு வர விரும்பும் பாசிச அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

இதற்கு முன்னர் தீவிரமாக தமிழ்த் தேசிய அரசியல் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த (அ)யோக்கிய சிகாமணிகள் இப்போது புற்றுக்குள் சுருண்டு படுத்து விட்டனர். அவர்களுக்கு இனவாதத்தை விட்டால் உலகில் வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது என்பதால் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது காலம் மலையேறி விட்டது. அது மீண்டும் திரும்பி வராது.

தமிழ் உழைக்கும் வர்க்க மக்களே! குறுகிய தமிழ் இன நலன் பேணும் இனவாத அரசியல் ஒரு போதும் உங்களுக்கான விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. அதற்கு பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அவசியம். இன்று உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் பன்னாட்டு உழைக்கும் வர்க்க மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு, நீங்களும் முன்னரங்க போர்க்களத்தில் நிற்கிறீர்கள். இன்று உலகம் உங்களை தான் நாயகர்கள் என்று போற்றுகிறது. அந்த அந்தஸ்தை இழந்து விடாதீர்கள்.

நாளைக்கு நிலமை சீரானதும் "தமிழின ஒற்றுமை... இனமானம்... இன நலன்...." என்றெல்லாம் பேசிக் கொண்டு சிலர் வருவார்கள். அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். ஏனென்றால் நாளை வரப் போகும் பொருளாதார நெருக்கடியில் உங்கள் வேலை பறிபோகலாம். அதற்கு காரணமான முதலாளிகள் மீது உங்களுக்கு தார்மீகக் கோபம் எழலாம். அதை மடைமாற்றுவதற்கு இனத்தின் பெயரால் ஒன்று சேர சொல்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

கொரோனா வைரஸ் சில மாதங்களில் ஒழிக்கப் படலாம். ஆனால் முதலாளித்துவ வைரஸ் இன்னும் பல வருடங்களுக்கு தொடர்ந்திருக்கும். தமிழ் உழைக்கும் மக்களும் பங்கெடுக்கும் ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மூலமே முதலாளித்துவ வைரசை ஒழித்துக் கட்ட முடியும்.


Thursday, April 09, 2020

பட்டினியால் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் இத்தாலியர்கள்


இலங்கை, இந்தியாவில் வாழும் மக்களே! இன்று இத்தாலியில் எழுந்துள்ள சமூகப் பிரச்சினை நாளை உங்களுக்கும் வராது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை. நாளை கொரோனா தொற்று இல்லாமல் போனாலும், பொருளாதாரப் பிரச்சினை உங்களை விட்டு போகப் போவதில்லை. இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது. ஆனால், அங்கு கடந்த ஒரு மாத காலமாக நிலவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீடுகளில் இருந்த மக்களின் சேமிப்பில் இருந்த பணம் கரைந்து விட்டது. வேலையில்லாத காரணத்தால் வருமானமும் இல்லை.  வறுமை அதிகரிக்கிறது. 

குறிப்பாக தெற்கு இத்தாலியில் வாழும் பல குடும்பங்களிடம் அத்திவாசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்கு கூட  கையில் பணம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். சிலர் தமது கஷ்டங்களை கூறும் வீடியோ பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பெட்டிக் கடைகளில் பொருளை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்கின்றனர். பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகள் சூறையாடப் பட்டுள்ளன. ஒரு சமூகப் புரட்சிக்கான அறைகூவல்கள் கேட்கின்றன.

குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தெற்கு இத்தாலியில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சுற்றுலாத்துறையை நம்பியிருந்த சிறு வணிகர்களின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. உள்ளூர் தொழிலதிபர்கள் அனைத்தையும் இழந்து இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பற்றிய அச்சம் அகன்று, நிலைமை வழமைக்கு திரும்பினாலும் அவர்களால் முன்னரைப் போன்று செயற்பட முடியாது. இதனால் சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் நிலவுகிறது.

இத்தாலி மக்களிடம் உணவு வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால், கடைகளில் சென்று பொருட்களை வாங்கி விட்டு காசில்லை என்று கையை விரிக்கிறார்கள். சிறிய பெட்டிக் கடைகளில் இலவசமாகக் கொடுக்குமாறு கேட்கிறார்கள். கடைக்காரர்களும் எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். இதனால் அவர்களும் கடைகளை மூடி விட்டுச் செல்கின்றனர்.

பெரிய நிறுவனங்கள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. தள்ளுவண்டிகளில் பொருட்களை நிரப்பிக் கொண்டு, காசாளரிடம் பணம் கொடுக்காமல் ஓடி விடுகிறார்கள். கும்பலாக நுழைந்து சூறையாடுகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள். இதனால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னால் பொலிஸ் காவல் போட்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடி காலத்தில் அரசு இயங்குகிறது என்று காட்டுவதற்காக நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக் குழுவொன்று சூப்பர் மார்க்கெட்டுகளை சூறையாடுமாறு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தளத்தில் ஒரு புரட்சிக்கான அறைகூவல்களும் கேட்கின்றன. காவல்துறையினர் இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை கிரிமினல்மயப் படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பட்டினி கிடக்கும் மக்கள் சூப்பர் மார்க்கெட் சூறையாடும் செயற்பாடுகளில் தன்னெழுச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கிகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வாங்க பணமில்லை என்று கதறும் மக்களின் குரல்கள் கேட்கின்றன. அவர்களை அமைதிப் படுத்தும் பொலிசாரிடம் வீட்டுக்கு வந்து நிலைமையை நேரில் பார்க்குமாறு கூறுகின்றனர். சில இடங்களில் போலீஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது சாப்பிடக் கொடுக்கிறார்கள். பல இடங்களில் பொலிசாரும் மக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும், இன்று வரையில் கைகலப்புகள், வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை. இத்தாலியில் நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒரு மக்கள் எழுச்சிக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.

அனைத்து மக்களுக்கும் உணவிடும் அளவிற்கு அரசிடமும் பணம் இருப்பதாக தெரியவில்லை. இத்தாலி அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை எதிர்பார்க்கிறது. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கு நிதியுதவி வழங்குவதை தடுத்து வருகின்றன. இது சுகாதார நெருக்கடி என்றும், பொருளாதார நெருக்கடி அல்ல என்றும் சாட்டுக் கூறி வருகின்றன.

Lockdown எனப்படும் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்த பலருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. குறிப்பாக பதியாமல் களவாக வேலை செய்தவர்கள் தான் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு முன்னர், தெற்கு இத்தாலியில் நிறையப் பேர் பதிவில்லாமல் (சட்டவிரோதமாக) வேலை செய்து வந்தனர். அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளும் அரசுக்கு வரி கட்டாமல் ஏய்ப்பதற்காக அந்த நடைமுறையை பின்பற்றினார்கள். அதை விட சாதாரணமாக குறைந்த வருமானம் எடுத்து வந்தவர்களிடம் சேமிப்புப் இருக்கவில்லை. அப்படியானவர்கள் தற்போது கையில் பணம் இல்லாமல் உணவுக்கு வழியின்றி கஷ்டப் படுகிறார்கள். அரசு தலையிட்டு அவர்களுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளை வழங்கா விட்டால், விரைவில் இத்தாலியில் ஒரு மக்கள் எழுச்சியை எதிர்பார்க்கலாம். 



Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


Friday, April 03, 2020

முதலாளித்துவ வைரஸ் - உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த "முதலாளித்துவ உலகமயமாக்கல்" வேண்டுமென்றே மூடி மறைக்கப் படுகின்றது. உலகமயமாக்கலின் ஆபத்தை மக்கள் அறியாமல் தடுப்பதற்காக, முதலாளித்துவ கைக்கூலிகளால் வேண்டுமென்றே சீனாவுக்கு அல்லது சீனர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. "இது சீனாவின் சதி... திட்டமிட்டு கொரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கப் பட்டன. இதன் மூலம் முதலாளித்துவ உலகமயமாக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றனர். 

பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூ யோர்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட நகரங்கள். 

உலகில் முதன்முதலாக கொரொனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம் அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர் வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் காவிச் சென்றனர் என்பது தெரியாது. 

அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஒரு இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. 




Thursday, April 02, 2020

COVID-19 பக்க விளைவுகள் : மீண்டும் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்

COVID-19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டம் கொண்டுவரப் பட்டாலும், எல்லா முதலாளிகளும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. பல நாடுகளில் தொழிலாளர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடும் தொழிலகங்களில் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்ற போதிலும் முதலாளிகள் அதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

இதனால் தன்னெழுச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் மெர்செடெஸ் பென்ஸ் தொழிலக ஊழியர்கள் முதலாளியின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து வேலைநிறுத்தம் செய்தனர். தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பெர்கமா நகரில் அமெரிக்காவின் F- 35 போர் விமானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடப்படவில்லை. இது தொடர்பான விபரங்களை கீழே தருகிறேன்.

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் அங்குள்ள F-35 விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பெர்கமா (Bergama) எனும் இடத்தில் தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

மேற்படி தொழிற்சாலை இரண்டு நாட்கள் மட்டும் பூட்டப் பட்டிருந்தாலும், அமெரிக்க தூதுவராலயமும், இத்தாலி முதலாளிகள் சங்கமும் (Confindustria) கொடுத்த அழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்ட தொழிலாளர்கள், சமூக வலைத்தளைங்களில் தமது எதிர்ப்புணர்வை காட்டி வருகின்றனர். முதலாளிகள் சங்கத்தின் சின்னத்தின் கீழ் "உங்களது உடல் ஆரோக்கியத்தை விட எங்களது இலாபம் முக்கியம்" என்ற வாசகம் பொறித்த படம் பரவலாக பகிரப் பட்டது.

இத்தாலியை ஆளும் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்தது. நோய்த் தொற்று அதிகரித்த பின்னர் தான் மக்களை தனிமைப்படுத்தும் முடிவு எடுத்தது. தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு அரசு சம்மதித்தது.

ஒருவேளை F-35 விமானமும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குள் அடங்குகிறது போலும்! மருத்துவ தேவைகளுக்கு ஒரு டாலர் கூட கொடுக்காத அமெரிக்க அரசு, போர் விமான உற்பத்திக்கு மட்டும் பில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளது. இத்தாலி நிறுவனமான Leonardo, அமெரிக்க நிறுவனமான Lockheed Martin இணைந்து இத்தாலியில் F-35 விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது இத்தாலியின் ஆயுத விற்பனைக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிற்துறை ஆகும்.

தற்போது அமெரிக்காவிலும் வர்க்கப் போராட்டம் சூடுபிடித்துள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள இறைச்சி அடைக்கும் JBS நிறுவனத்தில் வேலை செய்த பத்து தொழிலாளர்கள் COVID-19 தொற்றினால் பாதிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து அங்கு வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்தனர். 

அவர்கள் சுய தனிமைப் படுத்தல் காரணமாக வீடுகளில் இருந்தால் சம்பளம் வழங்கப் பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தில் சுகயீன கொடுப்பனவு திட்டம் என்றைக்குமே இருக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. COVID-19 பொசிட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முன்வந்தது.

அந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி அங்கே சாத்தியமாகாது. அத்துடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் எதுவும் வழங்கப் படவில்லை.

JBS தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கம் இறைச்சி பதனிடும் தொழிற்துறையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுகயீன கொடுப்பனவும், இலவச குழந்தை பராமரிப்பு வசதியும் வழங்கப் படுகின்றது.

Wednesday, April 01, 2020

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியது எப்படி?


சீனாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் சிலர் தமது மனம்போன போக்கில் புனைந்த கட்டுக்கதைகளும், வதந்திகளும் சமூகவலைத்தளைங்களில் பரவுகின்றன. இந்த வீடியோவில், இத்தாலியில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் நடந்தது என்ன? எந்த இடத்தில் தவறு செய்தார்கள்? என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன். நாம் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

இனவாத முட்டாள்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்று நோய் "சீனர்களால் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றது" என்று பலரும் வெகுளித்தனமாக நினைப்பது போன்று தான், இத்தாலியரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்த முட்டாள்தனம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி முழுவதும் இலட்சக் கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. இன்று வரை பத்தாயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் இது குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என நினைத்து அலட்சியப் படுத்தினார்கள். அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தால் விழிப்படைந்து இழப்புகளை குறைத்திருக்கலாம்.

ஜனவரி மாத தொடக்கத்தில் சீனர்களை மட்டும் தனிமைப் படுத்தினால் போதும் நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்று தான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். அரச மட்டத்திலும் இந்த மூட நம்பிக்கை காணப்பட்டது. ஐரோப்பாவில் முதல் தடவையாக இத்தாலி தான் சீனாவுடனான விமான சேவைகளை முற்றாகத் துண்டித்தது. வழமையாக வந்து கொண்டிருந்த சீன சுற்றுலாப் பயணிகளையும் விரட்டியடித்து விட்டனர். சீனர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப் படுத்தினார்கள். பொது மக்கள் சீன ரெஸ்டாரன்ட் செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.

பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் தான் தொற்று நோய்க் காவிகள் என்ற இனவாத மனப்பான்மை உள்ளது. அது இந்த கொரோனா நெருக்கடியில் சீனர்களுக்கு எதிரான இனவாதமாக மாறியது.

இந்த குறுகிய இனவாத மனப்பான்மை தான் இத்தாலியர்கள் விட்ட மாபெரும் தவறு. வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பிரதேசத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் சென்றிருக்க மாட்டார். முதன்முதலாக தொற்றுதலுக்குள்ளான ஒரு சாதாரண தொழிலாளியான 38 வயது இளைஞன், வாழ்க்கையில் ஒரு நாளும் சீனாவுக்கு சென்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்தி இருந்தார். அதனால் அந்த இளைஞனும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். அத்துடன் உதைபந்தாட்டப் போட்டி ஒன்றையும் பார்வையிட சென்றிருக்கிறான். அப்போதே கொரோனா வைரஸ் பலருக்கு தொற்றி விட்டது.

பெப்ரவரி கடைசியில் விழித்தெழுந்த அரசு இயந்திரம் பலரை பரிசோதித்துப் பார்த்ததில் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. உடனே தொற்று காணப்பட்ட பிரதேசத்தை வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தினார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. ஏற்கனவே பிற பிரதேசங்களுக்கும் வைரஸ் தொற்றி விட்டிருந்தது. இந்த அச்சம் காரணமாக மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இறுதியில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வராத நிலையில், சீனா தனது மருத்துவக் குழுவொன்றை பெருமளவு உபகரணங்களுடன் அனுப்பி வைத்தது. இந்த உதவிகள் யாவும் இத்தாலி தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. அதே நேரம் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்ட ஐரோப்பிய நாடுகள் இத்தாலியரின் கண்டனத்திற்கு ஆளாகின. ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றி விட்டு சீனக் கொடியை பறக்க விடுமளவிற்கு வெறுப்புக் காணப்படுகின்றது. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் அறியலாம் என்பது ஓர் உலகப் பழமொழி.