Saturday, August 26, 2023

இராணுவ முகாமை அகற்றாதே! யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  Aug 15, 2023

யாழ் குடாநாட்டில், பிரபாகரன் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள, பருத்தித்துறையை சேர்ந்த கற்கோவளம் எனும் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். (15-8-2023) அந்த பகுதியில் திருட்டுகள், போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நேரத்தில் தமக்கு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், இராணுவம் இருந்தால் பாதுகாப்பு என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். உண்மையில் லஞ்சம், ஊழலில் ஊறிய, கையாலாகாத காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் பிரதிபலிப்பு.

இது இப்படி இருக்கையில், இவ்வளவு காலமும் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்றே அரசியல் செய்து வந்த elite தமிழ்த்தேசியவாதிகளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. "ஆட்டு மந்தைகள்... போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்... விலை மாதர்கள் (ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுமிகளும் இருந்தனர்.)" என்றெல்லாம் ஏசத் தொடங்கி விட்டனர். அடித்தட்டு தமிழ் மக்கள் மீது, மேட்டுக்குடி தமிழ்த்தேசிய போலிகள் கொண்டிருக்கும் வன்மம் நன்றாக வெளிப்பட்டது.

அது சரி, சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அச்சுவேலி பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்த நேரம் இவர்கள் எங்கே போனார்கள்? அந்த நேரம் அழகான ஆதிக்க சாதிப் பெண்கள் சட்டை போடாத சிங்கள இராணுவ வீரர்களுடன் உரசிக் கொண்டு தேரிழுத்தார்கள். பருத்தித்துறை ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த பெண்களை நாக்கூசாமல் "விலை மாதர்" தூற்றிய வாய்கள், அந்நேரம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அச்சச்சோ... மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டோம்! அந்தளவு வர்க்க பாசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னாலையில் மாட்டு வண்டில் சவாரியில் நடந்த கைகலப்பு காரணமாக, ஆதிக்க சாதியினர் அழைப்பின் பேரில் வந்த சிங்கள இராணுவம் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. நம்ம தமிழ் உணர்வாளர்களை இப்போது கேட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நடிப்பார்கள்.

அது போகட்டும். 1987 முதல் 1990 வரை, தொடர்ச்சியாக 3 வருடங்கள் விடுதலைப் புலிகளும், சிங்களப் படையினரும் இணைபிரியாத நண்பர்களாக நட்பு பாராட்டியதை எப்படி பார்க்கிறீங்க? ஆங்... அது மேட்டுக்குடி நலன் சார்ந்த "சாணக்கியம்" இல்லே? அந்த நேரம் நம்ம elite- தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் செவ்வாய்க் கிரக சுற்றுலா சென்றிருந்தனர். பாவம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

இது தான் மேட்டுக்குடி கனவான்களின் எலைட்- தமிழ்த்தேசியம். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றைய நேரங்களில் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்று தமக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள். 
Déjà vu.

முதலாம் உலகப் போர் காலம் முதல் தேசியவாதிகள் செய்து வரும் பிரச்சாரம். தேசியவாதம் என்ற சொல்லுக்கு முன்னுக்கு தமிழ் என்ற அடைமொழியை போட்டு விட்டால் கொள்கை மாறி விடுமா? 
c'est la même chose
 

No comments: