Wednesday, July 31, 2019

சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள்!

ஒரு காலத்தில் அதிக சம்பளத்துடனான வேலை வாய்ப்புகள் காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் புலம்பெயர்ந்து சென்று சோவியத் யூனியனில் குடியேறி இருந்தனர்! இன்று இதைச் சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் முப்பதுகளில் இருந்த உலகம் வேறு. அமெரிக்காவின் பங்குச் சந்தை நெருக்கடி காரணமாக, முதலாளித்துவப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் சோவியத் சோஷலிச பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அமெரிக்கப் பத்திரிகைகள் கூட அதைக் குறிப்பிடத் தவறவில்லை. உள்நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்துக் கொண்டிருக்கையில், சோவியத் யூனியனில் நாளுக்கொரு தொழிற்சாலை திறக்கப் படுவதாக தெரிவித்துக் கொண்டிருந்தன. இனிமேல் உலகம் முழுவதும் சோவியத்தின் சோஷலிச பொருளாதார மாதிரியை பின்பற்றுவது தான் ஒரே வழி என்பது பொதுவான வெகுஜன கருத்தாக இருந்தது.

இருபதுகளின் பிற்பகுதியில் ஸ்டாலின் கொண்டு வந்த ஐந்தாண்டுத் திட்டம் காரணமாக சோவியத் யூனியனின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. இது அன்று உலகம் முழுவதும் தெரிந்த உண்மை. சோவியத் பொருளாதாரம் எந்தளவுக்கு வளர்ந்தது என்றால், ஒரு கட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கூட இல்லாத பற்றாக்குறை நிலவியது. சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, ஜெர்மனியில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தருவிக்கப் பட்டிருந்தனர். ஏற்கனவே ஏராளமான ஜெர்மன் பொறியியலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டத்தினை, சோவியத் யூனியனின் தொழிற்புரட்சி என்று அழைக்கலாம். நாடு முழுவதும் விவசாயத்தை இயந்திரமயமாக்குவது அடிப்படையாக இருந்தது. கூட்டுத்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் இது இலகுவாக சாத்தியமானது. இருப்பினும் ஒரு பிரச்சினை இருந்தது. போதுமான அளவு டிராக்டர்கள், இயந்திரங்கள் இருக்கவில்லை. அவற்றைப் புதிதாக உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது. அதற்காக புதிய தொழிற்சாலைகளை கட்ட வேண்டும். அதற்குத் தேவையான தொழிநுட்ப நிபுணர்கள், தொழிற்தேர்ச்சி தொழிலாளர்கள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை நிலவியது.

அன்றைய சோவியத் யூனியனில் பொறியியலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவியது. புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்தில், பொறியியலாளர் போன்ற அதிக சம்பளம் கிடைக்கும் மத்தியதர வர்க்க வேலைகள் உயர்வாகக் கருதப் படவில்லை. சோவியத் யூனியன் தொழிலாளர்களின் நாடு என்பதால், உடல் உழைப்பாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப் பட்டது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பொறியியலாளர் குறைவான சம்பளம் பெறுவதும், தொழிலாளி கூடுதலான சம்பளம் பெறுவதும் சாதாரணமான விடயம்.

அது மட்டுமல்ல, பொறியியலாளர், மருத்துவர் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளை செய்பவர்கள் குட்டி முதலாளித்துவ மனப்பான்மை கொண்டவர்களாக கருதப் பட்டனர். அதாவது, அவர்கள் உடல் உழைப்பாளிகளை விட அதிகம் சம்பாதிப்பதால் பாட்டாளி வர்க்கத்தை அவமதிப்பார்கள் என்பதும் பொதுப் புத்தியில் உறைந்திருந்தது. இது ஜார் மன்னன் காலத்தில் இருந்த வர்க்க ஏற்றத்தாழ்வாக இருந்தாலும், புரட்சி நடந்து பதின்மூன்று வருடங்களே நிறைவடைந்த நிலையில் வர்க்க முரண்பாடுகள் முற்றாக மறைந்திருக்கவில்லை.

இதனால் ஒரு தொழிற்சாலையில் பெரும் சேதம் விளைவிக்கும் விபத்து நடந்தால் முதலில் குற்றம் சாட்டப் படுபவர் ஒரு பொறியியலாளராக அல்லது முகாமையாளராக இருப்பார். அவர் வேண்டுமென்றே நாசகார வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் படவும் இடமுண்டு. இது போன்ற காரணங்களினாலும் பலர் பொறியியலாளர் வேலை செய்ய முன்வராமல் இருந்திருக்கலாம். எது எப்படி இருப்பினும், உள்நாட்டில் இல்லாத மனித வளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய சோவியத் யூனியனில் ஏற்பட்டிருந்தது. 

ஏராளமான இலங்கையர்கள், இந்தியர்கள், வளைகுடா அரபு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது போன்று தான், அன்றைய காலத்தில் அமெரிக்கர்கள் சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்றனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோவியத் யூனியன் பொன் விளையும் பூமியாகத் தெரிந்தது. 

அன்றைய காலகட்டத்தில் முழு ஐரோப்பாவிலும் சோவியத் யூனியன் மட்டுமே பணக்கார நாடு என்று சொல்லும் தரத்தில் இருந்தது. பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்ட முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப் பட்டிருந்தன.  ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், நோர்வே, பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகளில் இருந்து பொறியியலாளர்கள் வேலை தேடி சோவியத் யூனியனுக்கு சென்றனர்.

இருப்பினும், அமெரிக்க தொழில்நுட்ப அறிவுக்கு சோவியத் யூனியனில் அதிக மதிப்பு இருந்தது. ஆகையினால், சோவியத் யூனியன் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  அமெரிக்கர்களின் சோவியத் நோக்கிய புலம்பெயர்வு, மூன்று வகையாக நடந்தது. ஒன்று, தாமாகவே வேலை தேடிச் சென்றவர்கள். இரண்டு, வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தக் கூலிகளாக அனுப்பப் பட்டவர்கள். மூன்று, அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் உருவான தொழிற்துறை கட்டுமானங்களில் பணியாற்ற அனுப்பப் பட்டவர்கள். 

அன்றைய அமெரிக்காவில் நிலவிய கொடூரமான இனவெறிக் கொள்கை காரணமாக, ஏராளமான கறுப்பின மக்களும் சோவியத் யூனியனில் குடியேற விரும்பினார்கள். அங்கு அவர்கள் சம உரிமை பெற்ற மனிதர்களாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப் பட்டனர். அந்த வாழ்க்கையை அமெரிக்காவில் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. மேலும் சர்வதேச மட்டத்தில், "இனப்பாகுபாடு பாராட்டும் முதலாளித்துவ அமெரிக்காவை விட, சகல இனத்தவரையும் சமமாக நடத்தும் சோஷலிச சோவியத் நாடு சிறந்தது" என்று சோவியத் அரசு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.

கறுப்பர், வெள்ளையர் பாகுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் சோவியத் யூனியனில் வேலை வாய்ப்புக் கிடைத்தது. அமெரிக்காவில்  தொழிற் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், பொறியியலாளர்களுக்கு சோவியத் யூனியனில் நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதிக சம்பளமும் கிடைத்தது. சம்பளத்தில் ஒரு பகுதி அமெரிக்க வங்கிக் கணக்கில் வைப்பிலப் படும். அதை விட, மாதம் 200-300 ரூபிள்கள் கையில் கிடைக்கும். 

புலம்பெயர்ந்த அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், சராசரி சோவியத் சம்பளத்தை விட இரண்டு அல்லது மூன்று  மடங்கு அதிகம். இது வெளிநாட்டு தொழில் முகவருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது.  மேலும், சோவியத் நாட்டில் உணவுப் பொருட்கள் மிகவும் மலிவு. மருத்துவ வசதி இலவசம். பிள்ளைகளுக்கான கல்வியும் இலவசம். இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்தால் யார் தான் மறுக்கப் போகிறார்கள்? ஒப்பந்தப் படி, ஓர் அமெரிக்க வேலையாள் வருடத்தில் ஒன்பது மாதங்கள் வேலை செய்ய வேண்டும். மூன்று மாதங்கள் அமெரிக்கா சென்று வரலாம். 

சோவியத் யூனியனுக்கு புலம்பெயர்ந்து சென்ற அமெரிக்கர்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில்  சென்றவர்கள் தான் பெரும்பான்மை. குறிப்பிட்ட அளவினர் கம்யூனிச சித்தாந்தம் மீதான ஈடுபாடு காரணமாக சென்றனர். இவ்விரண்டு பிரிவினரும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்யாமல் தாமுண்டு வேலையுண்டு என இருந்து விட்டனர். அதே நேரம்,மலிவு விலையில் மது கிடைக்கிறது என்ற ஆசையில் சென்று, குடித்து விட்டு தகாராறுகளில் ஈடுபட்டவர்களும் உண்டு. அப்படியானவர்கள் எந்த மன்னிப்பும் இன்றி திருப்பி அனுப்பப் பட்டனர்.

அன்றைய உலகப் பொருளாதார நிலைமையில், மிகப் பெரிய அமெரிக்க முதலாளித்துவ நிறுவனங்கள் கூட சோவியத் யூனியனில் முதலிடுவதற்கு தாமாக விரும்பி முன்வந்தன. இது இரண்டு தரப்பிற்கும் ஆதாயம் கிடைக்கும் விடயம். சோவியத் அரசுக்கு அந்நிய தொழில்நுட்ப அறிவு ஆதாயமாகக் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்தை பொறுத்தவரையில் நிலையான  பொருளாதாரத்தை கொண்ட நாட்டில் முதலிட்டு இலாபம் சம்பாதிக்க முடிகிறது. 

இந்த முதலீடுகள் அனைத்தும் Joint Venture பாணியிலான கூட்டு முயற்சியாக அமைந்திருந்தன. அதாவது, புதிதாக உருவாக்கப்படும் தொழிலகம் ஒன்றில் சோவியத் அரசும், வெளிநாட்டு நிறுவனமும் சரிசமமான பங்குகளில் முதலீடு செய்யும். தொழிலகத்தில் உற்பத்தி அதிகரிக்கும் நேரம் விற்பனையால் கிடைக்கும் இலாபப் பணம் சரிசமமாக பங்கிடப்படும். ஒப்பந்த காலம் வரையில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் தனது பங்குகளுக்கான இலாபத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒப்பந்தம் முடிந்த பின்னர் தொழிலகம் முழுவதும் சோவியத் அரசுடமையாகி விடும்.

1929 ம் ஆண்டு சோவிய‌த் அர‌சுக்கும் அமெரிக்க‌ Ford நிறுவ‌ன‌த்திற்கும் இடையில் ஓர் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப் ப‌ட்ட‌து. இத‌ன் விளைவாக‌, நிஸ்னி நொவ்கொரொத் (Nizhny Novgorod) ந‌க‌ரில் ஒரு பிர‌மாண்ட‌மான‌ கார் த‌யாரிக்கும் தொழிற்சாலை க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து. இத‌ற்காக‌ ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ அமெரிக்க‌ பொறியிய‌லாள‌ர்க‌ள், தொழில்நுட்ப‌ நிபுண‌ர்க‌ள் சோவிய‌த் யூனிய‌னில் த‌ங்கி இருந்து வேலை செய்த‌ன‌ர். இதற்காக புதியதொரு நகரம் நிர்மாணிக்கப் பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்வோர் தங்குவதற்கான வீடுகள் மட்டுமல்லாது, மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றனவும் புதிதாக கட்டப் பட்டன.

ஒப்ப‌ந்த‌ப் ப‌டி, சோவிய‌த் அர‌சு முத‌லாவ‌து வ‌ருட‌ம் குறிப்பிட்ட‌ள‌வு போர்ட் கார்க‌ளை வாங்குவ‌தாக‌ தீர்மானிக்க‌ப் ப‌ட்ட‌து. இரண்டாவது வ‌ருட‌ம் அமெரிக்காவில் இருந்து த‌ருவிக்க‌ப் ப‌ட்ட‌ வாக‌ன‌ உதிரிப் பாக‌ங்க‌ள் சோவியத் யூனியனில் பொருத்த‌ப் ப‌டும். மூன்றாவது வருடம் சோவியத் உதிரிப் பாகங்களை கொண்டு அமெரிக்கக் கார் தயாரிக்கப் படும். நான்காவது வருடம் கார் முழுவ‌தும் சோவியத் தயாரிப்பாகவே இருக்கும்.

ஒப்பந்தப் படி, ப‌த்தாண்டுக‌ளுக்குள் போர்ட் நிறுவ‌ன‌ம் த‌ன‌து பேட்ட‌ன்ட் உரிமையையும், தொழில்நுட்ப‌ அறிவையும் சோவிய‌த் அர‌சிட‌ம் கொடுத்து விட‌ வேண்டும். திட்ட‌மிட்ட‌ ப‌டி ப‌த்தாண்டுக‌ளுக்குள் தொழிற்சாலை முழுவ‌தும் சோவிய‌த் வ‌ச‌மாகிய‌து. அன்று அமெரிக்க‌ர்க‌ள் க‌ட்டிய‌ கார் தொழிற்சாலை GAZ என்ற‌ பெய‌ரில் இப்போதும் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இடையில் முகாமைத்துவத்தில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும், நிறுவனத்தின் பெயர் மாற்றப் பட்டிருந்தாலும், அது அமெரிக்கர்கள் கட்டிய தொழிற்சாலை என்ற வரலாற்று உண்மையை மறைக்க முடியாது.

ஸ்டாலின்கிராட் நகரில் டிராக்டர்கள் உற்பத்தி செய்வதற்காக கட்டப் பட்ட தொழிற்சாலை கூட அமெரிக்க தொழில்நுட்ப உதவியால் உருவானது தான். இன்று அது Volgograd Tractor Plant என்று அழைக்கப் படுகின்றது. அமெரிக்காவில் தொழிற்துறை வளாகம் கட்டுவதில் சிறந்து விளங்கிய, பிரபலமான Albert Kahn Associates Inc நிறுவனம் தான் அந்த டிராக்டர் தொழிற்சாலையை கட்டிக் கொடுத்தது. இதற்காக ஆயிரக் கணக்கான அமெரிக்க பொறியியலாளர்கள் தருவிக்கப் பட்டனர். முப்பதுகளில் உற்பத்தியை தொடங்கிய காலத்திலேயே மில்லியன் கணக்கான டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு, சோவியத் நாடு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டன. இரண்டாம் உலகப்போரில் பெருமளவில் பாதிக்கப் பட்ட கட்டிடங்களில் டிராக்டர் தொழிற்சாலையும் ஒன்று. யுத்தம் முடிந்த பின்னர் மீளக் கட்டியெழுப்ப பட்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சோவியத் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அமெரிக்கர்கள் ஆற்றிய பங்களிப்பு மறைக்கப் பட்ட காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய காலத்தில் உருவான பனிப்போர், அமெரிக்காவையும், சோவியத் யூனியனையும் எதிரிகளாக்கி விட்டது. அதற்குப் பின்னர் எதிரி நாட்டுப் பிரஜைகள் தனது நாட்டில் இருப்பதை சோவியத் அரசு வெளிப்படுத்த விரும்பவில்லை. மறுபக்கத்தில், அமெரிக்க அரசு தனது நாட்டுப் பிரஜைகள் சோவியத் யூனியனின் இருந்தனர் என்ற தகவல்கள் முழுவதையும் இருட்டடிப்பு செய்தது. போரினால் பாதிக்கப் பட்ட அமெரிக்கப் பிரஜைகள் தாயகம் திரும்புவதற்கு உதவி கோரி தூதுவராலயத்திற்கு அனுப்பிய கடிதங்கள் கூட உதாசீனம் செய்யப் பட்டன.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர்ந்த குடியேறிகளின் நிலைமை மிக மோசமாகி விட்டது. நாடு முழுவதும் நிலவிய போர்ச் சூழல் காரணமாக எல்லோர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. தேசப் பாதுகாப்பை காரணமாகக் காட்டி நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டவரும் தப்பவில்லை. ஒரு சில அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டதும், ஏனையோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே போர் முடிந்த பின்னரும் சோவியத் யூனியனில் தங்கி இருந்தனர்.


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான பல ஆதாரங்கள் அமெரிக்க ஊடகவியலாளர் H.R. Knickkerbocker எழுதிய De Roode Handel dreigt எனும் நூலில் இருந்து எடுத்திருக்கிறேன். நெதர்லாந்தில், டச்சு மொழிபெயர்ப்பின் இரண்டாம் பதிப்பாக A.W. Sijthoff's uitgeversmij n.v. பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. தற்செயலாக ஒரு பழைய புத்தகக் கடையில் இந்த நூலை வாங்கினேன்.)

Tuesday, July 30, 2019

புலம்பெயர்ந்த கியூப நாட்டவருடன் ஒரு கருத்தாடல்

நெதர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் கியூப நாட்டவர் ஒருவர், ஒரே தொழிலகத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில்,  தனது நாட்டு நிலைமைகள் பற்றி நிறைய சுவையான கதைகளை கூறினார். எந்த வித அரசியல் சார்புமற்ற உள்நாட்டவரின் வாயால் கேள்விப்படும் தகவல்கள் உண்மைத்தன்மை வாய்ந்தவை. அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கருத்தாடலில், கியூபாவில் வாழும் சாதாரண மக்களின் பிரச்சினைகளான, தனி நபர் வருமானம், பொருளாதார பிரச்சினைகள், சுயதொழில் செய்வது, வீடு வாங்குவது, வெளிநாட்டுக்கு குடிபெயர்வது, போன்ற விடயங்களே அதிகம் அலசப் பட்டுள்ளன.

எனது நண்பர் பற்றி சுருக்கமாக: அவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் ஆங்கில ஆசிரியராக பட்டம் பெற்றிருந்தார். ஒரு மத்தியதர வர்க்க தொழிலான ஆசிரியர் வேலை செய்தாலும் சம்பளம் குறைவு என்பதால், பிற்காலத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி உள்ளார். அந்த நேரம் கியூபாவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்த ஒரு பிரித்தானிய பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களின் பின்னர் பிரிட்டிஷ் மனைவியின் பணியிட மாற்றம் காரணமாக நெதர்லாந்தில் குடியேறி வசிக்கின்றார். அவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 


கியூபாவில் சராசரி தனி நபர் வருமானம் பற்றி...

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவு தான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம் தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப் படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல், போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாக கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதலிடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிக பட்சம்சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்கு சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிக பட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவளித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபப் பொருளாதாரம் பற்றி...

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம், அரச கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிக பட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப் பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப் பட்டது தான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்து விட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப் படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப் பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.

அண்மைக் காலத்தில் ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்து விட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டை திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில் தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப் பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவளிக்கிறார்கள்.

கியூபாவில் தற்போது இணையப் பாவனை உள்ளது. அங்கேயும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிரான பதிவுகள் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆமாம், அரசுக்கு எதிராக பேசுவோருக்கும் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எல்லை மீறிப் போக விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

சில நேரம், பொலிஸ் அப்படியான நபர்களை ஏதாவதொரு குற்றச்சாட்டில் பிடித்துச் சென்று ஒரு சில மணி நேரங்கள் தடுத்து வைக்கிறார்கள். பின்னர் எந்தக் குற்றமும் பதியாமல் விட்டு விடுகிறார்கள். பொலிஸ் பதிவு கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். முக்கியமாக அரசுக்கு எதிரான கருத்துக்களை வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கப் படுகின்றனர். ஆனால் உள்நாட்டில் வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

கியூபாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதை "வெள்ளை அட்டை" என்று அழைக்கிறார்கள். அதில் அவர் எந்தக் குற்றமும் செய்திருக்கவில்லை என்றும், அரசுக்கு எதிரான பிரச்சாரமும் செய்திருக்கவில்லை என்றும் உறுதிப் படுத்திருக்க வேண்டும்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தாமாக கியூபாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறச் செல்வோர் திரும்பி வர அனுமதிப்பதில்லை. "எங்காவது போய்த் தொலையுங்கள்...." என்பது மாதிரி நடந்து கொள்வார்கள். தற்போது நிலைமை மாறி விட்டது. விடுமுறைக்கு தாயகம் சென்று வர அனுமதிக்கிறார்கள். அதுவும் அதிக பட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே தங்கி இருக்கலாம்.



கியூபாவில் மதச் சுதந்திரம் எப்படி உள்ளது?

கியூபாவில் பெரும்பான்மை மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். அதைவிட கணிசமான அளவினர் ஆப்பிரிக்க "வூடு" மதத்தை பின்பற்றுகின்றனர். ஆப்பிரிக்க மதத்திற்கென ஆலயம் எதுவுமில்லை. அம்மதப் பூசாரிகள் கோழி வெட்டிப் பலியிடுவது, குறி சொல்வது, சாமியாடுவது, சூனியம் வைப்பது என்பன போன்ற சிறுதெய்வ வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர்.

பெரிய நகரங்களில் குறிப்பிட்ட அளவு யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கென சினகொக் (யூத ஆலயம்) உண்டு. மிகக் குறைந்தளவு மத்திய கிழக்கை சேர்ந்த முஸ்லிம்களும் உள்ளனர். புத்த மதத்தை பின்பற்றும் சீனக் குடியேறிகளும் அங்கே உண்டு. இவர்கள் பெரும்பாலும் நூறு வருடங்களுக்கு முன்பே, கியூபா பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில் வந்து குடியேறியவர்கள். இன்று முழுமையான கியூபப் பிரஜைகள்.

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னர் எந்தவொரு வழிபாட்டு ஸ்தலமும் மூடப் படவில்லை. தினசரி மதகுருக்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கவில்லை. அதை விட கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற விசேடமான மதப் பண்டிகைகளும் வழமை போலவே பொது இடங்களில் கொண்டாடப் பட்டு வந்தன. ஒரு தடவை கரும்புச் செய்கையில் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்லி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கான அரச செலவினம் நிறுத்தப் பட்டது. அது தற்காலிகமானது என்று சொன்னாலும், அதற்குப் பிறகு அப்படியே கைவிட்டு விட்டார்கள்.

தொண்ணூறுகளுக்கு பிறகு, குறிப்பாக போப்பாண்டவர் ஜோன் போலின் விஜயத்திற்குப் பிறகு, பொது இடங்களில் மதப் பண்டிகை கொண்டாடுவதற்கு அனுமதிக்கப் பட்டது. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் மக்கள் தமது வீடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அது அவர்களது தனிப்பட்ட விடயம் என்பதால் அரசு தலையிடுவதில்லை.

ஒவ்வொரு கியூப பிரஜைக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது மாதிரி, எந்த மதத்தையும் சேராமல் நாத்திகனாக இருக்கவும் உரிமை உள்ளது. அதாவது, ஒரு மதத்தை நம்புவோருக்கு உள்ள சுதந்திரம், அதை நம்பாதவர்களுக்கும் உள்ளது. அந்த வகையில் அரசு நாத்திக இயக்கத்தை பின்னால் நின்று ஊக்குவித்தது. அவர்கள் மத நம்பிக்கையாளர்கள் தேவாலயம் செல்லும் வழியில் மறித்து நாத்திகப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது நடத்தைக்கு வெட்கப்பட வேண்டும் என்று பரிகசித்தனர்.

கியூபாவில் மத நம்பிக்கையாளர் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசு பிரயோகித்த மறைமுகமான அழுத்தம் முக்கிய காரணம். ஒருவர் உயர் கல்வி கற்பதற்கு, உயர் பதவி வகிப்பதற்கு, சுருக்கமாக அவரது சுயமுன்னேற்றத்திற்கு தடையாக மதம் இருந்தது. தீவிர மத நம்பிக்கை கொண்ட ஒருவர் பல்கலைக்கழகம் செல்ல முடியாது, ஒரு நல்ல வேலை செய்ய முடியாது. சாதாரண அடிமட்ட தொழில்களை மட்டும் செய்யலாம்.

கியூபாவில் பொதுவாக "கத்தோலிக்கர்" என்று சொன்னால், அது தீவிர மதப்பற்று கொண்டவரை மட்டுமே குறிக்கும். மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பெயரளவில் மட்டுமே கத்தோலிக்கராக இருப்பவர்கள் ஏராளம். அவர்களை யாரும் கத்தோலிக்கர் என்று சொல்வதில்லை. அவர்களும் தம்மை அப்படி அழைத்துக் கொள்வதில்லை.

அரசின் மறைமுக அழுத்தம் காரணமாக, தீவிர மதப்பற்றாளர் ஒருவருக்கு எங்கேயும் வேலை கிடைக்கவில்லை என்றால், அவர் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் சேர்ந்து அங்குள்ள வேலைகளை செய்யலாம். அவருக்கான செலவுகள் அனைத்தையும் தேவாலயம் பொறுப்பெடுக்கும். கியூபாவில் புரட்சிக்குப் பின்னரும் கத்தோலிக்க தேவாலயங்கள் இயங்குவதற்கும், குறிப்பிட்டளவு சொத்துக்கள் வைத்திருப்பதற்கும் அனுமதிக்கப் பட்டது. அந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தேவாலயமே வைத்துக் கொள்ளலாம். தம்மிடம் வேலை செய்வோருக்கு சம்பளம் கொடுப்பதும் தேவாலய குருமாரின் பொறுப்பு தான். அரசு எந்த உதவியும் செய்யாது.

தற்போது மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. கடந்த இருபது வருடங்களில் தேவாலயம் செல்வோரின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளது. நாத்திகர்களின் தொந்தரவு இல்லாமல் போனதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் தீவிர மதப் பற்றாளர்களை தற்போதும் உயர் பதவிகளுக்கு வர அனுமதிப்பதில்லை. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சாதாரணமான உறுப்பினராக சேர்வதற்கே ஒருவர் நாத்திகவாதியாக இருக்க வேண்டியது கட்டாயம்.


கியூபாவில் வீடு வாங்குவது, விற்பது பற்றி...

- கிராமங்களில் மட்டுமல்ல, நகரங்களில் கூட, பெரும்பாலான மக்கள் தமது பெற்றோரிடம் இருந்து வாரிசு உரிமையாகக் கிடைத்த வீடுகளில் இப்போதும் வசிக்கிறார்கள். அவை அவர்களது சொந்த வீடுகள். சில வருடங்களுக்கு முன்பு வரை அதை விற்பதற்கு தடை இருந்தது.

- சனத்தொகை வளர்ச்சிக்கேற்ற புதிதாக கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை பெருகுவதில்லை என்றொரு குறை இருக்கிறது தான். குறிப்பாக வேறொரு நகரத்திற்கு இடம்பெயர்வோர் பெரிதாகப் பாதிக்கப் படுகின்றனர். இதனால் வீடு மாற்றிக் கொள்ளும் முறையை பலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கான ஒப்பந்தங்கள் சட்டப்படி செய்து கொள்வதற்கு அரசு அனுமதிக்கிறது.

- வீடுகளை மாற்றிக் கொள்ளும் திட்டத்தை சிலர் இலாப நோக்கோடு பயன்படுத்தி வந்தனர். உதாரணத்திற்கு கிராமத்தில் வசிக்கும் ஒருவரும், நகரத்தில் வசிக்கும் இன்னொருவரும் வீடு மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நிச்சயமாக, நகரத்தில் இருக்கும் வீட்டின் பெறுமதி பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆகவே, நகரத்து வீட்டிற்கான மேலதிக பெறுமதியை, கிராமத்து வீட்டுக்காரர் பணமாக கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் இதிலொரு சிக்கல் உள்ளது. அரசு சட்டப் படி, ஒரு வீட்டுக்கு பதிலாக இன்னொரு வீடு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கக் கூடாது. அதனால் மேலதிக பெறுமதிக்கான பணத்தை ஆவணத்தில் எழுதாமல் இரகசியமாக கையில் கொடுப்பார்கள்.

- இந்த பண்டமாற்று முறையை பயன்படுத்தி, நகரத்தில் உள்ள வீட்டை நல்ல விலைக்கு விற்று விட்டு வெளிநாட்டில் குடியேறியவர்களும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் பின்னர், தற்போது வீடு வாங்கவோ, விற்கவோ எந்தத் தடையும் இல்லை. 


கியூபாவின் சர்வதேச தொடர்புகள் பற்றி...

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அங்கிருந்து பெருமளவு உதவி கிடைத்துக் கொண்டிருந்தது. அப்போதிருந்த நிலைமை சிறப்பாக இருந்தபடியால் அது ஒரு பொற்காலம் எனலாம். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைத்தன. பிற்காலத்தில் வெனிசுவேலாவுடன் நெருங்கிய உறவு ஏற்பட்டவுடன் அங்கிருந்து மலிவு விலையில் எண்ணை பெற்றுக் கொண்டனர். "கியூபர்கள் ஒட்டுண்ணிகள் மாதிரி முன்பு ரஷ்யாவை சுரண்டினார்கள் இப்போது வெனிசுவேலாவை சுரண்டுகிறார்கள்" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார் எனது நண்பர்.

கியூபாவின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களான சுருட்டு, ரம் மதுபானம் என்பன உலகப் புகழ் பெற்றவை. இவற்றால் வருடந்தோறும் பில்லியன் டாலர் கணக்கான அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் அரச கட்டுப்பாட்டில் தான் உள்ளன. இதை விட மருத்துவர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் போன்ற பல் துறை சார்ந்த நிபுணர்களும் ஏற்றுமதி செய்யப் படுகின்றனர். வெனிசுவேலா, பிரேசில், கயானா, என்று பல உலக நாடுகளில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் மருத்துவர்களுக்கு கியூபாவில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமான சம்பளம் கிடைத்தாலும், அதில் பெரும்பகுதி அரசாங்கத்திற்கு செல்கிறது. இந்த நிபந்தனை வேலைக்கு செல்ல முன்னரே ஒப்பந்தத்தில் எழுதப் படுகின்றது. சிலர் அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்கின்றனர். வேறு சிலர் அதை அநியாயம் என்று எதிர்க்கின்றனர். அதிகம் சம்பாதிக்க விரும்புவோர் ஒப்பந்த காலம் முடிந்தவுடன் தாயகம் திரும்பாமல் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் சென்று குடியேறி விடுகின்றனர். ஆனால், அப்படிச் சென்றவர்கள் வாழ்நாளில் கியூபாவுக்கு திரும்பிச் செல்ல முடியாது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கியூபாவிலேயே தங்கி விடுவதால், அவர்களை மறுபடி பார்க்கவும் முடியாது. 


பொதுவாக அரசு தொடர்பாக சராசரி மக்களின் கருத்து என்ன?

மூன்று தொலைக்காட்சி அலைவரிசைகள் உட்பட, வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள் எல்லாம் அரச ஊடகங்களாகவே உள்ளன. தினசரி தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் செய்தி அறிக்கைகளை பார்த்தால், யுத்தங்கள், கலவரங்கள், பேரழிவுகளால் கியூபாவைத் தவிர ஏனைய உலக நாடுகள் எல்லாம் அழிவை நோக்கி செல்வதாக எண்ணத் தோன்றும். உலகில் கியூபா மட்டுமே அமைதியான, பாதுகாப்பான நாடு போன்ற தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். கியூப அரசு தனது குடி மக்களை பிள்ளைகள் போன்று கவனித்துக் கொள்வதாகவும், அதற்காக மக்கள் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் உணரத் தோன்றும்.

Thursday, July 11, 2019

"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்!" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்


"கடுமையான இஸ்லாமிய மதப்பற்று காரணமாக தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை. ISIS போன்ற தீவிரவாத இயக்கங்களில் மத நம்பிக்கை இல்லாதிருந்தவர்களும் நிறையப் பேர் சேர்ந்திருந்தனர். குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இந்தப் பிரச்சினையின் வேர் கடந்த கால ஐரோப்பிய காலனிய வரலாற்றில் உள்ளது. தவிர்க்கவியலாமல், நாம் எல்லோரும் அதற்குப் பலியானவர்கள் தான். ஐரோப்பிய காலனிய காலத்தில் இருந்து நீடிக்கும் பிரச்சினைகள் தீர்க்கப் படா விட்டால், மீண்டும் ஐ.எஸ். போன்ற இயக்கம் உருவாவதை தடுக்க முடியாது." இவ்வாறு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த முன்னாள் ISIS போராளி ஒருவர் பெல்ஜிய நாட்டு பத்திரிகை ஒன்றுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் சிரியாவில் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு தப்பியோடி தாயகம் வந்து சேர்ந்திருந்தார். மொரோக்கோ அரசு கைது செய்து பதினான்கு மாதங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்து விட்டு விடுதலை செய்துள்ளது. அதற்குப் பிறகு முன்னாள் தீவிரவாதிகளுக்கான புனர்வாழ்வு மையத்தில் சமூக சேவகராக செயற்பட்டு வருகிறார். 2017 ம் ஆண்டு, De Morgen பத்திரிகையில் பிரசுரமான பேட்டியை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்து தருகிறேன்.

கேள்வி: சிரியாவுக்கு சென்று IS இல் சேர்வதற்கு என்ன காரணம்?

பதில்: அயலவர் மூலம் ஐ.எஸ். இற்கு ஆள் சேர்க்கும் ஒருவரின் தொடர்பு கிடைத்தது.

அதில் சேர்வதற்கு முன்னர் மதத்தை பற்றுடன் பின்பற்றி வந்தாயா?

இல்லை. நான் முன்பு ஒரு கலாச்சார முஸ்லிம். பண்டிகை நாளன்று மட்டுமே பள்ளிவாசலுக்கு சென்று வந்தேன். சில நேரம் ரமலான் நோன்பு பிடித்திருப்பேன். நிச்சயமாக நான் மதத்தை தீவிரமாக பின்பற்றவில்லை. பொதுவாக ஒருவர் இஸ்லாமிய மதநெறிகளில் பற்றுக் கொண்டு தீவிரவாதியாவதில்லை. நானும் அதில் ஈடுபாடு காட்டவில்லை. எனது பிரதானமான நோக்கம் பணமாக இருந்தது. குடும்பத்தில் எனக்கான அங்கீகாரத்தை தேடினேன். நிச்சயமாக IS கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. பல வகையான நாடுகளில் இருந்து வந்த பெருமளவு இளைஞர்கள், ஐ.எஸ். இல் மதச் சார்பற்ற காரணங்களுக்காக சேர்ந்துள்ளனர். கடும் மதப்பற்று காரணமாக முஸ்லிம் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை.

என்ன காரணத்தால் அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்கள்?

IS இன் இயங்குதளம் என்னவென்று அப்போதே புரிந்து கொண்டேன். மேற்குலகு மீதான ஆத்திரம். இருப்பினும், மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக என்னை மாற்றிக் கொண்டேன். தினசரி தொழுகைகளிலும், அனைத்து வகை சடங்குகளிலும் கலந்து கொண்டேன். நான் சிரியா போகும் விடயத்தை வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும், தங்கைக்கும் சொல்லவில்லை. மொரோக்கோவின் இன்னொரு நகரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வேலை கிடைத்திருப்பதாக கூறினேன்.

அப்போது எனக்கு 28 வயது. பிரயாண முகவர் எமக்கான விசா, மொபைல் தொலைபேசி, கொஞ்சப் பணம் எல்லாம் கொடுத்திருந்தார். துனிசியா வழியாக பிரயாணம் செய்தோம். துருக்கி- சிரியா எல்லையை அடையும் வரையில் எல்லாம் நல்ல படியாக நடந்தது. எல்லையை அடைந்ததும் பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அங்கு ஓர் ஐ.எஸ். போராளியும், கட்டார் எல்லைக் காவலரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கண்டேன். துருக்கி படையினரும் ஐ.எஸ். இயக்கத்துடன் நல்ல நட்புறவில் இருந்தனர். அந்த நேரத்தில் ஐ.எஸ். இற்கு எதிரான போர் நடந்து கொண்டிருந்தது. மற்றொரு பக்கத்தில் ஐ.எஸ். உடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்தார்கள்.

நான் ராக்கா நகருக்கு வந்து சேர்ந்தேன். ஒரு பெரிய வீட்டில் பிற மொரோக்கோ நாட்டுக்காரருடன் சேர்ந்து தங்கி இருந்தேன். வாரத்திற்கு ஒரு தடவை ஊருக்கு தொலைபேசி எடுத்துக் கதைத்தேன். இரண்டு மாதங்களுக்கு நான் இத்தாலியில் இருப்பதாக பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு உண்மையை சொல்லி விட்டேன். அதற்குக் காரணம், ஒரு துனிசிய போராளியின் தலையை வெட்டிய சம்பவத்தை கண்ட பின்னர் மனம் மாறி விட்டேன். IS கட்டுப்பாட்டை மீறி பொருட்களின் விலையை நிர்ணயித்த கடைக்காரர் ஒருவரின் கையை வெட்டுமாறு அந்தப் போராளிக்கு உத்தரவிட்டனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே தலையை துண்டித்து விட்டார்கள். நான் சிரியாவில் நிற்கும் உண்மையை அம்மாவுக்கு சொன்ன பிறகு, அவர் கடும் நோய் வாய்ப்பட்டு விட்டார். அதற்காக இன்று வரையில் தங்கை என்னை மன்னிக்கவில்லை.


உங்களுக்கு அங்கே என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா? ராக்காவில் என்ன செய்தாய்?

இரண்டு மாதங்கள் முகாமில் தங்கியிருந்து இராணுவப் பயிற்சி பெற்றேன். அதற்குப் பிறகு கலாச்சாரக் கண்காணிப்புப் பொலிஸ் வேலையில் விட்டார்கள். அந்த வாழ்க்கை பரவாயில்லை. இரு மாதங்களுக்குப் பின்னர் எனக்கு முன்னால் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்றில் தற்கொலைப் படையில் "விரும்பிச்" சேர்வது, அல்லது மரண தண்டனைக்கு உள்ளாவது. அதைக் கேள்விப்பட்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டேன். என்னிடம் இருந்த சம்பளப் பணத்தை வைத்து ஒரு மனிதக் கடத்தல்காரரை பிடித்தேன். அவர் என்னையும், வேறு சில சிரியாக்காரர்களையும் எல்லை கடந்து கூட்டிச் சென்றார். நான் 15 செப்டம்பர் 2015 தப்பியோடும் வரையில், அங்கிருந்த 1.500 மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த போராளிகளில் 250 பேர் போரில் கொல்லப் பட்டு விட்டனர். முப்பது பேர் தற்கொலைப் படையில் சென்று செத்துள்ளனர்.

நான் அல்ஜீரியா ஊடாக மொரோக்கோ வந்து சேர்ந்த நேரம் பொலிஸ் கைது செய்தது. பதினான்கு மாதங்கள் சிறையில் இருந்தேன். கொலைக்குற்றம் செய்திருந்தால் நீண்ட காலம் சிறைத்தண்டனை விதித்திருப்பார்கள். நான் அங்கு யாரையும் கொலை செய்யவில்லை. ஆனால், சவுக்கால் அடித்திருக்கிறேன்.


சிரியாவுக்கு போவதற்கும் பணம் தான் காரணம் என்றால், எவ்வளவு சம்பாதித்திருப்பாய்?

ராக்காவில் ஒரு ஐ.எஸ். போராளிக்கு 2.500 யூரோக்கள் சம்பளம் கொடுத்தார்கள். திருமணம் முடித்திருந்தால் மேலதிக கொடுப்பனவு உண்டு. அந்த சம்பளத்தை மொரோக்கோவில் எந்தக் காலத்திலும் சம்பாதிக்க முடியாது.


இளைஞர்கள் இஸ்லாமிய தேசம் என்று சொல்லப்படும் அமைப்பில் இணைவதற்கு பணம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. உன்னை உந்தித் தள்ளியது எது?

IS ஒரு மூடப்பட்ட மதக் குழு (sect) போன்று இயங்கியது. ஆரம்பத்தில் அதனை ஆயுதமேந்திப் போராடும் விடுதலை இயக்கம் என்று காட்டினார்கள். ஆனால், உண்மையில் அது ஒழுங்கமைக்கப் பட்ட கொடூரமான பயங்கரவாத இயக்கம் என்பது பின்னர் தெளிவாகத் தெரிந்தது.

சிரியாவில் உள்ள IS இயக்கப் போராளிகள், ஆதரவாளர்களின் கோபாவேசமும், வன்முறையும் வரலாற்றில் இருந்து பிறக்கின்றது. ஒரு பயங்கரவாதக் குழு, ஒரு சில தேர்ந்தெடுத்த குரான் வசனங்களை பிழையாக பாவிப்பதன் காரணமாக பலர் அதில் சேர்வதாக நினைப்பது தவறு. மத்திய கிழக்கில் மேற்குலகின் தலையீடு தான் பலர் IS சார்பு நிலை எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

வரலாற்றை இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதியாக பார்க்கப் பட வேண்டும். அதன் மூலம் IS பல்லாயிரம் இளைஞர்களின் மனங்களை கவர்கிறது. ஏற்கனவே சரித்திரத்தில் நடந்த சம்பவங்களை தேர்ந்தெடுத்து அதை ஓர் இனத்தின் ஒட்டுமொத்த அவலமாக சித்தரிக்கிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட "நாங்கள், அவர்கள்" எனும் பிரச்சாரம். அதாவது, தீவிரமான அடையாள அரசியல். ஆனால், அடிப்படையில் வரலாறு ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. உதாரணத்திற்கு, பிரான்சும், ஸ்பெயினும் மொரோக்கோவில் செய்த அட்டூழியங்களை எடுத்துப் பாருங்கள். ஸ்பானிஷ் சர்வாதிகாரி Primo de Rivera, பிரெஞ்சு ஜெனரல் Hubert Lyautey ஆகியோரின் பொறுப்பில் நடந்த இரசாயன தாக்குதல்கள் பற்றிய விபரங்களும் சரித்திர பாடநூல்களில் எழுதப் பட வேண்டும் அல்லவா?

உலகில் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற வரலாற்றுக் கதைகள்  IS இயக்கத்திற்கு மிக முக்கியமானது. ஒரு குழுவாக சேர்ந்து இயங்கும் மனப்பான்மை, இதனுடன் ஐ.எஸ்.க்கு எதிராக போரிடும் அரசுகள், இராணுவங்களின் நடவடிக்கைகளும் மிகுதிக் காரணங்கள். அதாவது, ஒடுக்கப்பட்டோர் என்ற உணர்வு தான் எதிரிக்கு எதிராக போரிடுவதற்கு முக்கியமான தேவை. IS பார்வையில் மேற்கத்திய நாட்டவருக்கும், அந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. ஒன்றில் நீ எங்களுடன் இருக்கிறாய், அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறாய். ஐ.எஸ். உடன் சேர்ந்து போரிடாதவர்கள் துரோகிகளாக கருதப் படுகின்றனர்.

இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுப்பவரிடம் யுத்தத்தில் பாதிக்கப் பட்ட  அப்பாவி மக்களின் அவலங்களைக் காட்டும் வீடியோக்கள் இருக்கும். பொஸ்னியாவில் இரத்தக் காயங்களுடன் கிடக்கும் உடல்கள், ஈராக்கில் வன்புணர்ச்சிகுள்ளான சிறுவர்கள், அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதை செய்யப் பட்ட ஆண்கள், காசா மீதான குண்டுவீச்சுகள்... இவை என்னிலும் மன உளைச்சலை உண்டாக்கின. முஸ்லிம்கள் மீதான கொலை, சித்திரவதை, அழிவைக் காட்டும் படங்கள் எனது கண்களில் நிறைந்திருந்தன. அது என்னை ஆத்திரப்பட வைத்தது.

அது ஓர் உளவியல் சித்திரவதையாக இருந்தது. அத்துடன் உணர்வை தட்டி எழுப்பும் வகையில்; "அவர்கள் எங்களுக்கு என்ன கொடுமைகள் செய்கிறார்கள் என்று பார்த்தாயா? அதற்கு எதிராக நீ என்ன செய்யப் போகிறாய்? சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா?" என்று கேட்டார்கள். அத்துடன் சொந்த நாட்டில் நிலவும் பின்தங்கிய சமூக- பொருளாதாரம் காரணமாக எதிர்காலம் சூனியமாக இருந்த நிலைமை, நல்ல குடும்பத்தில் வளர்ந்து, உயர்கல்வி கற்றிருந்த என்னையும் ஐ.எஸ். இல் சேர உந்தித் தள்ளியது. IS என்பது ஒரு பனிமலையின் வெளித்தெரியும் சிகரம் மட்டும் தான்.


மேற்குலகமும் மொரோக்கோ அரசும் ஐ.எஸ். இற்கு எதிரான போரில் சரியான பாதையில் செல்கின்றனவா?

குர்ஆனில் ஒரு வசனத்தை எடுத்துக் காட்டி அப்பாவிகளை கொல்லக் கூடாது என்று விளக்கம் அளிப்பதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. சில இளைஞர்களுக்கு மதத்தில் எந்த ஆர்வமும் கிடையாது. ஆனால், சமூகத்தில் தமக்கு ஓர் அந்தஸ்தை தேடுகிறார்கள். அவ்வளவு தான். அதை விட, தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மொரோக்கோ அரசு சரியான பாதையில் செல்வதாக நான் நினைக்கிறேன்.


இப்போது என்ன செய்கிறாய்?

முன்னாள் ஜிகாதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக இமாம், சமூகவியலாளர், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து செயற்பட்டு வருகிறோம். நாங்கள் மாதத்திற்கு ஒரு தடவை இரகசியமான இடத்தில் சந்திப்பதுடன், பெற்றோருக்கும், இளைஞர்களுக்குமான வேலைத் திட்டங்களையும் ஒழுங்கு படுத்துகிறோம். "இஸ்லாத்திற்கு ஆதரவு, ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு" எனும் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றோம். இளைஞர்களை சுயமாக சிந்திக்க வைக்கிறோம். சொர்க்கத்தில் எழுபது கன்னிகளின் கதை சாத்தியமானதா என்று யோசித்து அறிந்தால் அதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்?

ஆனால், சிரியா, ஈராக்கில் போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், IS போன்ற இயக்கங்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது சொந்த நலன்களை பாதுகாக்கும் ஆட்சி அதிகாரம் நீண்ட காலம் நிலைக்காது என்பதை உணர வேண்டும். ஒரு புதியதொரு சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்டு வரப் பட வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு மறுசீரமைக்கப் பட வேண்டும். 


(டச்சு மொழியில் உள்ள பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Ex-jihadi getuigt: "Veel jongeren hebben niet-religieuze motieven om zich bij IS aan te sluiten")