Thursday, March 31, 2016

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்


முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இவர்கள் எல்லோருக்கும் எஜமான் பிரிட்டன். எஜமான விசுவாசம் கொண்ட அடிமைகளிடம் இருந்து தமிழ் மக்கள் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது.

ஈழப்போரை தொடக்கி வைத்ததில் மட்டுமல்ல, முடித்து வைத்ததிலும் பிரிட்டனின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 1977 ம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்று சொல்லி தமிழர்கள் மீது போர்ப் பிரகடனம் செய்த நாளில் இருந்தே, பிரிட்டனின் ஒத்துழைப்பு கிடைத்து வந்தது. அன்று ஜே.ஆரின் அறிவுறுத்தலுக்கு அமைய, "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்குவதற்கு, அன்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் தாட்சரின் அரசு உதவியது. கிழக்கிலங்கையில் அமைக்கப் பட்ட விசேட அதிரடிப் படைக்கு, பிரிட்டிஷ் கூலிப் படையான SAS பயிற்சி வழங்கியது. (பார்க்க: "மார்க்சிய விடுதலைப் புலிகளை" ஒடுக்க உதவிய மார்கரெட் தாட்சர்!)

இறுதிப் போரிலும், பிரிட்டனின் இராணுவ ஆலோசகர்கள் நேரடியாக களத்தில் நின்றனர். வன்னியில் புலிகளையும், அவர்களோடு சேர்த்து ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் அழிப்பதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். இது பற்றிய தகவல்கள் யாவும் இன்று வரையும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. VICE எனும் ஆவணப் படங்களை தயாரிக்கும் நிறுவனம் எடுத்த பெரு முயற்சியின் பயனாக அது வெளிவந்துள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், பிரிட்டிஷ் ஆவணக் காப்பகத்தில் இருந்த இரகசிய ஆவணங்களை பார்வையிட்டுள்ளது. (Exclusive: Secret Documents Reveal How Britain Funded Possible War Crimes in Sri Lankahttp://www.vice.com/en_uk/read/sri-lanka-british-police-training-phil-miller)

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில், பிரிட்டிஷ் அரசு நேரடியாகவே பங்கெடுத்திருந்தது என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. இன்னமும் எல்லா இரகசிய ஆவணங்களும் வெளிவரவில்லை. இதுவரை பார்வைக்கு வந்த ஆவணங்களில் இருந்தே பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அழித்தொழிப்பு போரை நடத்துவது எப்படி என்பது குறித்து, பிரிட்டிஷ் ஆலோசகர்கள் சிறிலங்கா படையினருக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். வட அயர்லாந்தில், IRA இயக்கத்தை அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபட்ட அதிகாரிகள், தமது அனுபவங்களில் இருந்து கற்ற பாடங்களை இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

இறுதிப் போர் நடந்த காலங்களில், பொலிஸ், இராணுவம் ஆகிய பாதுகாப்புப் படைகள் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேயின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. ஆகவே, பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் கோத்தபாயவுடன் கலந்தாலோசிக்காமல் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கி இருக்க முடியுமா? பிரிட்டன் ஒரு பக்கம் போர்க்குற்றங்களில் பங்கெடுத்துக் கொண்டே, ஐ.நா. சபையில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இரட்டை வேடம் போட்டது. அப்பாவித் தமிழர்களும் பிரிட்டனின் மாய்மாலங்களை நம்பி ஏமாந்தார்கள்.

இறுதிப் போரில் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு பிரிட்டன் எத்தகைய ஆலோசனைகளை வழங்கியது? அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப் பட்டன? யாழ் குடாநாட்டில் நடந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகள் பற்றி, ஏற்கனவே பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் இயங்கிய புலி உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் விடாது தீர்த்துக் கட்டப் பட்டனர். புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்களும் கொலை செய்யப் பட்டனர்.

ஒரு ஊரில் ஒருவர் புலிகளை ஆதரிக்கிறார் என்று சந்தேகம் வந்தால் போதும். அரச புலனாய்வுத்துறையினர், தக்க தருணம் பார்த்திருந்து சுட்டுக் கொன்றனர். அவர் புலிகளுக்கு பெருமளவு உதவி செய்தாரா,  கொஞ்சமாக உதவினாரா என்ற கணக்கே இல்லை. சிலநேரம் நண்பன் என்பதற்காக ஒரு தடவை சந்தித்து பேசி இருக்கலாம். இதனால், ஒரு கட்டத்தில் யாழ் குடாநாட்டு மக்கள் உயிர் தப்புவதற்காக புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார்கள்.

அது எப்படி சாத்தியமாகிற்று? யாழ்ப்பாண மக்களைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். சந்திக்கு சந்தி இருக்கும் சோதனைச் சாவடிகளில், சோதனை என்ற பெயரில் சில இளைஞர்கள் தடுத்து வைக்கப் படுவார்கள். அவர்கள் அப்பாவிகளாகவும் இருக்கலாம் என்பது படையினருக்கு நன்றாகத் தெரியும். தடுத்து வைக்கும் நபரை கொஞ்ச நேரம் வைத்து அடித்து உதைத்து விட்டு விட்டு விடுவார்கள். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நடக்கும்.

சிறிது காலத்தின் பின்னர், குறிப்பிட்ட இளைஞருடன் படையினர் நட்புடன் பழகுவார்கள். அவரை நண்பனாக்கிக் கொள்வார்கள். புலனாய்வுத்துறை தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். இப்படித் தான் ஒற்றர்கள் உருவாக்கப் பட்டனர். படையினரால் ஒற்றர்களாக மாற்றப் பட்ட தமிழ் இளைஞர்கள், ஊருக்குள் நடமாடும் புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கொடுத்து வந்தனர். இது ஒவ்வொரு ஊரிலும் நடந்தது. அப்போது இந்த ஆலோசனைகளை வழங்கியவர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

பிரிட்டிஷ் இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிய வருவதாவது: "புலிகளை அழிக்க வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களின் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்." ஆமாம், பிரிட்டிஷ் ஆலோசனை மிகச் சரியாக நிறைவேற்றப் பட்டது. வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்னரே, யாழ் குடாநாட்டில் ஒரு புலி இல்லாமல் ஒழித்துக் கட்டப் பட்டனர். கிழக்கு மாகாணத்தில், TMVP என்ற பெயரில் இயங்கிய முன்னாள் புலிப் போராளிகள் அரச படைகளுக்கு உதவினார்கள். பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்ட TMVP உறுப்பினர்கள், புலிகளையும், ஆதரவாளர்களையும் இனங் கண்டு அழிப்பதற்கு உதவினார்கள். அதுவும் பிரிட்டனின் ஆலோசனை தான்.

இதே நேரம், கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பிற பகுதிகளிலும், புலிகளுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரி இயக்கம் ஒன்று இரகசியமாக இயங்கி வந்தது. அரசினாலும், ஊடகங்களினாலும் "சிங்களப் புலிகள்" என்று நாமகரணம் சூட்டப் பட்ட அவர்கள், கொழும்பில் சில குண்டுவெடிப்புகளை நடத்தி உள்ளனர். அரசு அவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை உருவாக்கியது. இந்த விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை மட்டுமல்லாது, அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்களின் நடமாட்டங்களையும் கண்காணித்தார்கள். பொது மக்களின் விழிப்புக் குழுக்கள் வழங்கிய தகவல்களை அடுத்து பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமான விடயம் என்னவெனில், சிங்கள மக்களின் விழிப்புக் குழுக்கள் சிங்களப் புலிகளை பிடிப்பதற்கு மட்டும் உதவவில்லை. அரசை விமர்சித்து வந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளையும் கண்காணித்து வந்தன. ராஜபக்சே ஆட்சிக் காலத்தில், தென்னிலங்கையில் எத்தனை சிங்கள ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டனர், பயமுறுத்தப் பட்டனர் என்பதை நான் இங்கே விபரிக்கத் தேவையில்லை.

அன்று நடந்த நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு பிரிட்டிஷ் அரசும் பொறுப்பு என்பது ஆச்சரியத்திற்குரியது. சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புக் குழுக்களை அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறியது யார்? வேறு யார், பிரிட்டிஷ் இராணுவ ஆலோசகர்கள் தான்.

எதற்காக பிரிட்டன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களில் பங்கெடுக்க வேண்டும்? இந்து சமுத்திரத்தின் மத்தியில், இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்து நடக்கும் இடத்தில் உள்ளது. ஆகவே, அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இலங்கையில் எழுந்த தமிழர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது, ஏகாதிபத்திய நலன் சார்ந்த விடயம்.

நாங்கள் ஈழப்போரை புலிகளின் நீதியான அறப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியத்தின் கண்களுக்கு அது பயங்கரவாதமாகத் தெரியும். நாங்கள் அதனை ஒட்டு மொத்த ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டமாக கருதினால், ஏகாதிபத்தியம் அதனை தனக்கு எதிரான புரட்சி என்று கணித்து வைத்திருக்கும். 

நடந்து முடிந்த இனப்படுகொலையில் இருந்து, தமிழர்கள் இன்னுமா பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை? தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் என்பதில் இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? தமிழ் மக்களின் எதிரி சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல. அதனை பின்னால் நின்று இயக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியமும் தமிழர்களின் எதிரி தான்.

மேலதிக தகவல்களுக்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்

Wednesday, March 30, 2016

சர்வதேச புலி அழிப்பாளர்களும் இருபது உலக நாடுகளும்


சோவியத் யூனியனுக்கும் புலிகளின் தமிழீழத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியன் உருவான நேரம், இருபது உலக நாடுகள் சேர்ந்து அதனை அழிக்கப் பார்த்தன. ஆனால், அந்த அழித்தொழிப்பு போரில் தப்பிப் பிழைத்த சோவியத் யூனியன் எழுபதாண்டுகள் நிலைத்து நின்றது. முப்பதாண்டுகளாக இருந்த புலிகளின் de facto தமிழீழத்தை, இறுதிப் போரில் இருபது உலக நாடுகள் சேர்ந்து அழித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கம்யூனிசத்திற்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் இடையிலான ஒற்றுமை என்ன? 
சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் கம்யூனிசம் தோற்று விட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழர்கள், புலிகளின் தமிழீழத்தின் வீழ்ச்சியின் பின்னர் தமிழ் தேசியவாதம் தோற்று விட்டதாக இன்னமும் பேசத் துணியவில்லை.

சோவியத் யூனியன், தமிழீழம் இரண்டினதும் அழிவுக்கு காரணமாக இருந்த சர்வதேச சக்தியின் பெயர் என்ன? 
ஏகாதிபத்தியம்

2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் திகதி. 9/11 என்று அழைக்கப் பட்ட நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க அரசு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" ஒன்றை அறிவித்தது. அது ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து, தாலிபான், அல்கைதா இயக்கங்களை அழிப்பதற்கான போர் என்று அறிவிக்கப் பட்டது. உலகில் எல்லோரும் அப்படித் தான் நம்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. அதே நேரம், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்றொரு பட்டியலை தயாரித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரும் அதில் இருந்தது.

பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தமது பெயரை எடுப்பதற்கு, புலிகள் இயக்கம் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருந்தது. கோடிக்கணக்கான டாலர் பணம் செலவிடப் பட்டது. அமெரிக்காவின் பிரபலமான வழக்கறிஞர்கள் அமர்த்தப் பட்டு வழக்காடினார்கள். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நிதியத்திற்கு மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கினார்கள். ஆனால், அமெரிக்க அரசு பட்டியலில் இருந்து பெயரை எடுக்க மறுத்து விட்டது. 

உலகில் வேறெந்த இயக்கமாவது இந்தளவு பணத்தை தண்ணீராக செலவழித்திருக்குமா என்பது சந்தேகமே. உங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் தெரியாவிட்டால், அதன் கடந்த கால வரலாற்றில் இருந்து அதைக் கற்றுக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து படிப்பினை பெற விரும்பாத, அமெரிக்கா சார்பான தமிழ் வலதுசாரிகள், புலிகளையும், ஈழத் தமிழரையும் முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்றார்கள். இருந்த போதிலும், தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைப்பது போல, தமக்கு "எதுவும் தெரியாது" என்று எங்களை நம்பச் சொல்கிறார்கள்.

புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி, 2009 ம் ஆண்டுக்குப் பின்னர் "புலி அழிப்பாளர்கள்" என்றதொரு அணியும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அணியில் ராஜபக்சே சகோதரர்கள் முதல் நாடு கடந்த தமிழீழக்காரர்கள் வரை ஒன்று சேர்ந்திருந்தார்கள். "சிங்கள இனப்படுகொலையாளிகளுடன் புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளை ஒப்பிடலாமா?" என்று கேட்கும் அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவே அதைப் பற்றிய விரிவான அறிக்கை சமர்ப்பித்து விட்டது.

மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கு விரோதமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதே இந்தக் கூட்டமைப்பின் ஒரேயொரு இலட்சியமாக இருந்தது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் பதுக்கப் பட்ட பில்லியன் டாலர்களை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் நெற்றிகளில் நாமம் போட்டார்கள். போர் முடிவதற்கும், அமெரிக்காவில் புலிகளின் பிரதானமான நிதி வழங்குனர் கைது செய்யப் படவும் நேரம் சரியாகவிருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தை வணிகர் ராஜா ராஜட்னம், அவரது நிறுவனமான Galleon Group hedge fund பெயரில் நடந்த முறைகேடுகளுக்காக கைது செய்யப் பட்டு, பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். அமெரிக்க குடியுரிமை பெற்ற ராஜா ராஜரட்ணம் கொழும்பில் பிறந்தவர். யாழ்ப்பாண மேட்டுக்குடியை சேர்ந்தவர். ஹெட்ஜ் பண்ட்ஸ் முதலீட்டு நிறுவனங்கள், 2007 ம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக இருந்துள்ளன. அதன் விளைவாக, ஹெட்ஜ் பண்ட்ஸ் முகாமையாளர்கள் பலர் கைது செய்யப் பட்டனர்.

ராஜா ராஜரட்னமும் பங்குச்சந்தை சூதாட்டம் காரணமாக FBI புலனாய்வின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவர் தான். பிற்காலத்தில், அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெரிய வந்தததால் தண்டனைக்காலம் நீடிக்கப் பட்டது. அமெரிக்காவில் இயங்கிய புலிகளின் முகவர் அமைப்பான TRO வுக்கு, மில்லியன் டாலர் நிதி வழங்கியதும் நிரூபிக்கப் பட்டிருந்தது. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே CIA க்கு வேலை செய்த கேபி, ராஜா ராஜரட்ணம் தொடர்பான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப் படுகின்றது. (Convicted Galleon Group Trader Raj Rajaratnam Now Faces Tamil Terror Finance Lawsuithttp://www.ibtimes.com/convicted-galleon-group-trader-raj-rajaratnam-now-faces-tamil-terror-finance-lawsuit-1698732

மேற்குறிப்பிட்ட தகவலை, பல தமிழர்கள் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுவார்கள். அதற்குக் காரணம், இந்தத் தகவல் ஏற்கனவே அமெரிக்க ஊடகங்களில் வெளியான போதிலும், தமிழ் ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதை மட்டுமா மறைத்தார்கள்? 

2006 ம் ஆண்டு, நியூ யோர்க் நகரில், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கச் சென்ற சிலரை, ஆயுதத் தரகர்கள் போன்று நடித்த FBI அதிகாரிகள் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கனடாவிலும், அமெரிக்காவிலும், இருநாட்டு புலனாய்வுத் துறைகளின் கூட்டு நடவடிக்கையின் விளைவாக பன்னிரண்டு புலி ஆதரவு தமிழர்கள் கைது செய்யப் பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய கிபீர் விமானங்களை தாக்குவதற்கு வேண்டிய ஏவுகணை வாங்க முயன்றதாக FBI அறிவித்தது. ஈழப் போர் நடந்த காலத்தில், இஸ்ரேலிய கிபீர் விமானங்கள் புலிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வந்தன.

புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் அல்ல. இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர், இந்தோனேசியாவில் ஹாஜி சுபாண்டி (Hadji Subandi) என்ற இந்தோனேசிய - முஸ்லிம் வணிகர் கைது செய்யப் பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டு FBI இனால் விசாரிக்கப் பட்டார். சிங்கப்பூரில் பால்ராஜ் நாயுடு (Balraj Naidu) சிங்கப்பூர் - தெலுங்கு வணிகர் கைது செய்யப் பட்டு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.

இந்தோனேசியா முதல் அமெரிக்கா வரையில் நடந்த, ஆயுதத் தரகர்கள் கைது சம்பவங்கள் எதை எடுத்துக் காட்டுகின்றன? அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் போட்ட இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப் பட்டனர். உதாரணத்திற்கு, FBI வெளியிட்ட இந்தத் தகவல் அறிக்கையை பாருங்கள்: Singapore Man Sentenced to More Than Four Years in Prison for Conspiracy to Provide Material Support to a Foreign Terrorist Organization; https://www.fbi.gov/baltimore/press-releases/2010/ba121610.htm 

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. மேற்குறிப்பிட்ட தகவல் எதுவும், புலிகளின் வெளிநாட்டு முகவர்களுக்கு அல்லது ஆதரவாளர்களுக்கு தெரியாதா? தெரியும்!

"இருபது உலக நாடுகள் சேர்ந்து நடத்திய அழித்தொழிப்பு போர்", உலக வரலாற்றில் இது தானா முதல் தடவையாக ஈழத்தில் மட்டும் நடந்துள்ளது? 
இல்லவே இல்லை! 
  • 1917 - 1922 : சோவியத் யூனியன் என்ற உழைக்கும் மக்களுக்கான சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உட்பட இருபது உலக நாடுகள் பங்குபற்றின. மேற்கத்திய ஆக்கிரமிப்புப் படைகளினால் இலட்சக் கணக்கான ரஷ்ய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.

  • 1950 – 1953 : கொரிய மக்களின் சோஷலிச தாயகத்தை அழித்தொழிக்கும் போரில், அமெரிக்கா தலைமையின் கீழ் இருபது உலக நாடுகள் பங்குபற்றின. ஐ.நா. கொடியின் கீழ் இந்தியாவும் தனது படைகளை அனுப்பி இருந்தது. அந்தப் போரிலும், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ஆக்கிரமிப்புப் படைகளினால், இலட்சக் கணக்கான கொரிய மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.


நம்பினால் நம்புங்கள். பனிப்போர் காலத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்று, உலகம் இரண்டாகப் பிரிந்த பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கை" பெருமளவு குறைந்தது. பனிப்போர் காலத்தில் நடந்த எந்தப் போரிலும், இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 

இந்த நிலைமை எப்போது மாறியது? மிகச் சரியாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதாவது "கம்யூனிசத்தின் தோல்விக்குப்" பிறகு உருவான மாற்றங்கள் இவை. தொண்ணூறுகளுக்குப் பிறகு தான், உலகில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ அரசியல் உருவானது. 
மறுக்க முடியுமா?

பனிப்போரின் முடிவில் தோன்றிய அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்குப் பின்னர் தான், "இருபது உலக நாடுகளின் கூட்டு இராணுவ நடவடிக்கைகள்" மீண்டும் உலகை பயமுறுத்தத் தொடங்கின. 
  • 1990 – 1991: குவைத் பிரச்சினையில் நடந்த வளைகுடா யுத்தம். ஈராக்கிற்கு எதிராக இருபதுக்கும் பேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து போர் தொடுத்தன. ரஷ்யாவும், சீனாவும் கூட அந்தப் போரை ஆதரித்தன.
  • 1999 : யூகோஸ்லேவியா நாட்டை துண்டாடி, காலனிய அடிமைப் படுத்துவதற்காக நடந்த, நேட்டோ தலைமையிலான கூட்டு இராணுவ நடவடிக்கை. ரஷ்யா, சீனா, கைகளை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தன. 
  • 2001 - 2014 : அமெரிக்கா தலைமையின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தன. அந்தப் போர் இன்னும் முடியவில்லை. பத்து வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான ஆப்கானிய மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். 
  • 2003 : ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவில் நடந்தது. ஒரு சில வருடங்களுக்குள், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் இலட்சக் கணக்கான ஈராக் மக்களை இனப்படுகொலை செய்தனர்.


இந்த உதாரணங்கள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

புலிகளை ஆதரிப்பதாக நடித்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்த வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளே! ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரியா விட்டால், அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பேசலாம். தமிழீழம் கேட்கலாம். ஆனால், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல், "இருபது நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்தார்கள்" என்று சொல்வதால் யாருக்கு இலாபம்? அது மீண்டும் அப்பாவி தமிழ் மக்களை ஏகாதிபத்திய நுகத் தடியின் கீழ் இன்னலுற வைக்கும் என்பதை நீங்கள் உணரவில்லையா? வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், அதை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்.

புலிகளின் அழிவுக்கு நீங்கள் அடிக்கடி காரணம் காட்டும் "இருபது உலக நாடுகளின் கூட்டணிக்கு" ஒரு பொதுவான பெயர் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது தான் மூலதன ஏகாதிபத்தியம்! அமெரிக்கா உலகம் முழுவதையும் தனது அதிகாரத்தின் கீழ் ஆள நினைக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் கூட முதலாளித்துவ நாடுகள் என்பதால் மூலதன ஏகாதிபத்தியத்தின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். 

இந்த உண்மையை மட்டும் மறந்து விடாதீர்கள். இன்றைக்கும் உலகில் சோவியத் யூனியனும், கம்யூனிசமும் நிலைத்து நின்றிருந்தால், இருபது உலக நாடுகள் சேர்ந்து புலிகளை அழித்திருக்கவே முடியாது! பனிப்போர் கால இரு துருவ அரசியல் சதுரங்கத்தை பயன்படுத்தி, புலிகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். பாமர மக்களுக்கு தெரிந்த இந்த உண்மை கூட, மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு தெரியவில்லை.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, March 23, 2016

ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா


உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது. ஆயினும் அந்த "நியாயம்" அப்போதே சந்தேகிக்கப் பட்டது. 

அமெரிக்கா அணுகுண்டு போடுவதற்கு முன்னரே, ஜப்பான் சரணடையத் தயாராக இருந்தது. உண்மையில், அப்போது வளர்ந்து வரும் உலக வல்லரசாக கருதப்பட்ட, சோவியத் யூனியனை மிரட்டும் நோக்கில் ஜப்பானில் அணுகுண்டு போடப் பட்டது. ஏனெனில், சோவியத் செம்படைகள் ஜப்பானை பிடிப்பதற்கு தயாராக இருந்தன. அதற்கு முதல் அமெரிக்கா முந்திக் கொண்டது.

1945 ம் ஆண்டு, ஹிரோஷிமா, நாகசாகி மீது, எந்தத் தேவையுமில்லாமல் அணுகுண்டு போடப் பட்டது. இதனை அமெரிக்க மரைன் உளவுத்துறை அதிகாரி அட்மிரல் Ellis Zacharias, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி Dwight D. Eisenhower ஆகியோர் தமது நினைவுக்குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

"அணுகுண்டு போட்டிருக்காமலே 15 செப்டம்பர் 1945 அன்று ஜப்பான் சரணடைந்து இருக்கும்" என்று எல்லிஸ் சகாரியாஸ் எழுதி உள்ளார். "ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல் முற்றுமுழுதாக தேவையற்ற விடயம். ஏனெனில் நாங்கள் ஏற்கனவே ஜப்பானை வென்று விட்டோம்." என்று ஐசன்ஹோவர் எழுதினார்.

"100 வருட கால உலக சரித்திரம் 1870-1970" (100 jaar Wereldgeschiedenis 1870-1970) என்ற நூலில் பேராசிரியர் A. Stam பின்வருமாறு எழுதி இருக்கிறார்:"ஜூலை 1945 ஜப்பான் அரசு சரணடைவதற்கு தயாராக இருந்தது. ஏற்கனவே ஜப்பானிய ரகசியத் தகவல்களை உளவறிந்த அமெரிக்கர்கள் அதைத் தெரிந்து கொண்டனர். இருப்பினும், அணு குண்டு போடுவதற்கு தீர்மானிக்கப் பட்டது. அதன் மூலம், சோவியத் யூனியன் உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுடன் போட்டியிட முடியாத நிலை உருவாகும்." 

பிப்ரவரி மாதம் நடந்த யால்ட்டா உச்சி மகாநாட்டில், ஐரோப்பாவில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக முரண்பாடுகள் தோன்றின. ஸ்டாலின் ஒரு பக்கம், ரூஸ்வெல்ட், சர்ச்சில் ஆகியோர் மறுபக்கம் முரண்பட்டனர். ஸ்டாலின் யால்ட்டா ஒப்பந்தத்தை தனக்கு விரும்பியவாறு மொழிபெயர்க்கப் பார்க்கிறார் என்று ரூஸ்வெல்ட் குற்றம் சுமத்தினார். ரூஸ்வெல்ட்டை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக வந்த ட்ரூமன் அணுகுண்டு போடும் முடிவை எடுத்தார். அமெரிக்காவிடம் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை ஸ்டாலினுக்கு காட்ட வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஆகவே, ஜப்பான் சரணடைய தயாராக இருந்த போதிலும், 5 - 9 ஆகஸ்ட் 1945, ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப் பட்டன. அதன் விளைவாக, ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக, 250.000 ஜப்பானியர்கள் கொல்லப் பட்டனர். அடுத்து வந்த வருடங்களில், மேலும் இலட்சக் கணக்கானோர் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட புற்றுநோயால் இறந்தனர். அமெரிக்கா, இங்கிலாந்தின் மேலாதிக்க வெறிக்காக, ஸ்டாலினை தமக்கு கீழே அடிபணிய வைப்பதற்காக அந்த உயிர்கள் பலி கொடுக்கப் பட்டன.

அணுகுண்டு வீச்சாளர் ட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னரே தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜூன் 1941 ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்தது. அப்போது The New York Times பத்திரிகை பேட்டியில் பின்வருமாறு கூறினார்: 
"ஜெர்மனி வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்லப் போகிறது என்று தெரிந்தால், நாங்கள் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். இந்த வகையில் அவர்கள் முடிந்த அளவு மக்களை கொன்று குவிக்கட்டும் என்று விட்டு விடுவோம்."

இலங்கையில் முப்பதாண்டு காலமாக நடந்த ஈழப்போரிலும், அமெரிக்கா இதே மாதிரியான அணுகுமுறையை தான் கடைப்பிடித்தது. சிறிலங்கா இராணுவம் வெல்லப் போகிறது என்று தெரிந்தால் புலிகளுக்கு உதவினார்கள். புலிகள் வெல்லப் போகிறார்கள் என்று தெரிந்தால், சிறிலங்கா இராணுவத்திற்கு உதவினார்கள்.

அந்த வகையில் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான தமிழர்களும், சிங்களவர்களும் செத்து மடியட்டும் என்று வேடிக்கை பார்த்தார்கள். அப்படியான அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக நீதியாக நடந்து கொள்ளும் என்று நம்பும் அப்பாவிகள் இன்றைக்கும் உள்ளனர். 

Tuesday, March 22, 2016

இலங்கை ஒரு வாழைப்பழக் குடியரசாகிறது


ஒரு காலத்தில், லத்தீன் அமெரிக்க நாடுகள் "வாழைப்பழக் குடியரசுகள்" என்று அழைக்கப் பட்டன. அமெரிக்க வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனங்கள், அந்த நாடுகளில் வாழைமர பெருந் தோட்டங்கள் அமைத்திருந்தன. அவை தேசத்திற்குள் இன்னொரு தேசமாக இயங்கின. தொழிலாளர்களை சுரண்டுவது மட்டுமல்லாது, ஊழல்களில் ஈடுபட்டு வந்தன.

உள்நாட்டுப் போர்கள், சர்வாதிகார ஆட்சி, பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, இப்படியான பொதுத் தன்மைகளை கொண்டிருக்கும். பன்னாட்டு நிறுவனங்களின் சார்பாக, அமெரிக்க அரசு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும்.

அதே மாதிரி, இலங்கையும் வாழைப்பழக் குடியரசு என்று அழைக்கப் படும் பெருமையை பெற்றுவிட்டது. ஈழப்போர் முடிந்த கையோடு மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள், இலங்கையில் கால்பதித்து வருகின்றன. அவர்கள் வர்த்தகம் செய்வதற்கு இவ்வளவு காலமும் தடையாக இருந்த புலிகளின் அழிவைக் கொண்டாடுகின்றன. (இது ஒன்றும் இரகசியம் அல்ல. பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அஞ்சிய காலம் ஒன்றிருந்தது.)

தமிழ்ப் பிரதேசங்களில் நடக்கும் நில அபகரிப்புகள் பற்றி மட்டுமே தெரிந்த நமக்கு, இலங்கை முழுவதும் நடக்கும் நில அபகரிப்புகள் தெரிவதில்லை. நமது தமிழ் ஊடகங்களும் அதைப் பற்றிச் சொல்வதில்லை. இன்று இராணுவம் அபகரிக்கும் தமிழரின் நிலங்கள் கூட, நாளைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப் படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வலதுசாரி அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மக்கள் மத்தியில் அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த மறுத்து வருகின்றன.

ஈழப்போர் முடிந்த அடுத்த வருடமே, உலகின் பிரபலமான வாழைப்பழ ஏற்றுமதி நிறுவனமான Dole இலங்கையில் காலூன்றியது. ஏக்கர் கணக்கில் நிலங்களை அபகரித்து வாழைமர பெருந் தோட்டங்களை அமைத்தது. தடைசெய்யப் பட்ட பூச்சி கொல்லி மருந்துக்களை பாவித்து சர்ச்சைக்குள் மாட்டியது. ஒரு தடவை, விலங்குகள் சரணாலயத்தில் நிலம் ஆக்கிரமித்த குற்றச்சாட்டில், அந்த நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு வென்றதால், டோல் நிறுவனம் மன்னிப்புக் கோரியது.

ஆயினும், மைத்திரியின் நல்லாட்சிக் காலத்தில், மீண்டும் நில அபகரிப்பு தொடங்கியுள்ளது. பல நிலங்களை அரசே தாரை வார்த்து வருகின்றது. ஏற்கனவே, டோல் நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அரசை கைக்குள் போட்டுக் கொண்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வரலாற்றை இன்று அனைவரும் மறந்து விட்டார்கள்.

ஏகாதிபத்தியம், இலங்கையில் இனப்பிரச்சினைகளை தூண்டி விட்டு, அந்த நெருப்பில் குளிர் காய்கின்றது. எதற்காக? டோல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையை மறுகாலனிப் படுத்துவதற்கு வழி சமைப்பதே அதன் நோக்கம். ஈழப்போரில் மிகப்பெரிய அழிவை சந்தித்த மக்கள், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்கத் துணிய மாட்டார்கள். தமிழர்களான நாங்கள்,   இந்த உண்மையை  கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, காலம் முழுவதும் தமிழீழக் கனவு காண்போம். ஆமென்!

மேலதிக தகவல்களுக்கு:
US multinational Dole scraps Sri Lanka banana plans
http://www.bbc.com/news/world-asia-15845457
Doling Out State Land To MNCs!
http://www.thesundayleader.lk/2015/07/12/doling-out-state-land-to-mncs/

Saturday, March 19, 2016

"தமிழ்நாட்டை ஹிட்லர் ஆள வேண்டும்!" - நாம் நாஜித் தமிழர் கட்சி

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - நான்கு] 

தெருவில் போகும் நாயைப் பார்த்துத் தான் இன்னொரு நாய் குரைக்கும். அதே நாய் மனிதர்களைக் கண்டு விட்டு பேசாமல் போகும். வெள்ளையின எஜமானர்களை பக்திப் பரவசத்துடன் வழிபடும் "நாம் போக்கிரித் தமிழர்" கட்சி ஆதரவாளர்கள், தம்மைப் போன்ற சகோதர இனமான கருப்பர்களிடம்  தான் வீரத்தைக் காட்டுகிறார்கள். 

"இதோ பாருங்கள்! வெள்ளையர்கள் தமிழ்ப் பாடல் பாடுகின்றார்கள்!" என்று ஒரு வீடியோவை இனையத்தில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்கள். (https://www.youtube.com/watch?v=sNHlOW5t5JI) "என்ன அதிசயம்! ஒரு ஜெர்மன் பெண் சரளமாகத் தமிழ் பேசுகின்றாள்...பாருங்கள்!" என்று இன்னொரு வீடியோவை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். (https://www.youtube.com/watch?v=UXbtqSB2MqE)

ஆனால்... ஆனால்... அதே தமிழ் இன உணர்வாளர்கள்(?), தமிழக தொலைக்காட்சியில் நடக்கும் சுப்பர் சிங்கர் போட்டியில், மலையாளிகளும், தெலுங்கர்களும் தமிழ்ப் பாடல் பாடி பரிசு பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்!" என்று அறச்(?) சீற்றம் கொள்கின்றனர்.

வெள்ளையன் தமிழ்ப் பாடல் பாடினால், "தமிழன்டா" என்று சொல்லிச் சொல்லி பெருமைப் படுகிறார்கள். ஆனால், ஒரு கன்னடன், தெலுங்கன், மலையாளி தமிழ்ப் பாடல் பாடினால் மட்டும் அது தமிழர்க்கு சிறுமையோ? இன்னொரு இனத்தவன் எமது தமிழ் மொழியை சரளமாகப் பேசி, பாடலும் பாடினால், அதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டுமல்லவா? இந்த இடத்தில் தான், நாயைப் பார்த்து குரைக்கும் நாய்களுடன், நாம் போக்கிரித் தமிழர்களை ஒப்பிட வேண்டியுள்ளது.

கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகளை பேசும் மக்களும், தமிழர்களைப் போன்று கருப்பர்கள் தானே? அதனால் தான், வெள்ளையின எஜமான்கள் தமிழ்ப்பாட்டு பாடினால் பெருமைப் படுபவர்கள், கருப்பின சகோதரர்கள் தமிழ்ப் பாட்டு பாடினால் சிறுமைப் படுகிறார்கள்.

சீமானும் அவரது தம்பிகளும், 'தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவதால், "யார் தமிழன்?" என்ற கேள்வி எழுகின்றது. தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்கள் தானே என்று யாராவது அப்பாவித்தனமாக கேட்டால் தொலைந்தீர்கள்? கன்னட ஜெயலலிதா, தெலுங்கு கருணாநிதி, மலையாள எம்ஜிஆர் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டார்கள் என்று வகுப்பெடுக்க வந்து விடுவார்கள். அப்படியா? சீமான் கூட ஒரு மலையாளி என்று சொல்கிறார்களே?

இன்றைய காலத்தில் யார் அசல் தமிழன்? ஒவ்வொருவருக்கும் மரபணு சோதனை செய்து பார்த்து சான்றிதழ் கொடுப்பார்களா? இது முப்பதுகளில் ஜெர்மனியில் ஹிட்லர் செய்த "தூய ஆரிய இன சோதனைகளை" நினைவுபடுத்துகின்றது.

முப்பதுகளில், ஹிட்லரும் சீமான் மாதிரித் தான் பேசி வந்தான். "வந்தேறுகுடிகளான யூதர்கள், இத்தாலியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், போலிஷ்காரர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றுக் கொள்வதுடன், தூய ஜெர்மன் ஆரியர்களை ஆள்கிறார்கள் ... ஜெர்மனியை ஒரு ஆரியன் (தூய ஜெர்மனியன்) ஆள வேண்டும்..." என்று கூறினான். ஹிட்லர் எழுதிய மெய்ன் கம்ப் நூலில் நீங்கள் அதை வாசிக்கலாம்.

சீமான் போன்ற அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் வரலாறு தெரியாமல் உளறுவது மாத்திரம் அல்லாமல், தாம் நினைப்பதை வரலாறாக காட்ட முனைகின்றனர். ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், மொழி வேறுபாடு பெரிதாக கருதப் படவில்லை.

ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏதோ ஒரு காரணத்திற்காக குடியேறி வாழ நேர்ந்தவர்கள் அந்தந்த பிரதேச மொழியை தாய்மொழியாக்கிக் கொண்டார்கள். வட இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மொகலாயர்களுக்கு எதிராக, கர்நாடகாவில் விஜய நகரம் என்ற இந்து சாம்ராஜ்யம் உருவானது. அந்தக் காலத்தில் தமிழ்நாடு விஜயநகர அரசாட்சிக்கு உட்பட்டிருந்தது.

தெலுங்கும், கன்னடமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோன்றும் நெருங்கிய மொழிகள். விஜய நகர ஆட்சிக் காலத்தில் தான் இரண்டாகப் பிரிந்தது. தமிழ்நாடு முழுவதும் விஜய நகர அரசின் நிர்வாகப் பொறுப்புக்களில் அமர்த்தப் பட்டவர்கள் அனைவரும் தெலுங்கர்கள் தான். 19 ம் நூற்றாண்டளவில் அவர்கள் தமிழர்களாக காட்டிக் கொண்டாலும், நிலவுடைமையாளர்களாக தொடர்ந்தும் இருந்தனர்.

இலங்கையில் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் விக்கிரமராஜசிங்கன் தெலுங்கு பூர்வீகத்தை கொண்டவன். ஆனால், அவனது குடும்பத்தினர் தமிழ் பேசினார்கள். பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். அன்றைய காலத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இனக் கலப்புக்குக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே.

சீமான் கோஷ்டியினர் இது போன்ற வரலாறுகளை ஆதாரமாக காட்டி, இன்றைக்கும் தமிழ்நாட்டை தெலுங்கர்கள் தான் ஆள்கிறார்கள் என்று வாதிடுவது சிறுபிள்ளைத் தனமானது. நாங்கள் இப்போது 18 ம் நூற்றாண்டில் வாழவில்லை. இது 21 ம் நூற்றாண்டு. இடையில் வந்த நூறாண்டு கால ஆங்கிலேய காலனிய ஆட்சி, தமிழ்நாட்டில் எந்தவிதமான மாற்றத்தையும் உண்டாக்கவில்லையா?

19 ம் நூற்றாண்டின் இறுதியில் கூட, தென்னிந்தியாவில் மொழி வேறுபாடு எழவில்லை. அதற்குக் காரணம், இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால், நிர்வாகப் பொறுப்புகளில் பிராமணர்கள் இருந்தார்கள்.

ஆங்கிலேய பிரபு மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழி பொதுக் கல்வியை சரியாக பயனபடுத்தி முன்னேறியவர்கள் பிராமணர்கள் என்றால் மிகையாகாது. அதே நேரம், பிராமணர் அல்லாத பிற சாதியினர் மத்தியில் இருந்தும் படித்தவர்கள் உருவானார்கள். அவர்கள் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராக உருவாக்கிய அமைப்பு தான் திராவிடர் இயக்கம்.

ஆரம்ப கால திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் தமிழர்,தெலுங்கர், மலையாளிகள் போன்ற மூவினத்து அறிவுஜீவிகளின் பங்களிப்பு இருந்துள்ளது. "பிற மாநிலத்தவர்கள் தமிழர்களை ஆள்கிறார்கள்..." என்று கொந்தளிப்பவர்கள் அந்தக் காலத்து நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். காலங் காலமாக பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்கலாம் என்றிருந்த நிலைமையை, மெக்காலே கொண்டு வந்த ஆங்கில வழிக் கல்வி மாற்றி அமைத்தது.

ஆங்கிலேயர் காலத்தில், அனைவரும் சாதி, மொழி வேறுபாடின்றி கல்வி கற்க முடிந்தது. அதனால், கற்றவர்கள் எல்லோரும் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்திருந்தார்கள். உண்மையில், அவர்களது சொந்த மொழியை விட ஆங்கில மொழி அறிவு அதிகமாக இருந்தது.

இலங்கையிலும் அது தான் நிலைமை. சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்த படியால், அவர்களுக்கு இடையில் திருமண பந்தங்களும் ஏற்பட்டிருந்தன. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், மொழி அடிப்படையிலான இனப்பிரச்சினை பிற்காலத்தில் தான் தோன்றியது.

தமிழ்நாட்டில் சென்னை மாநகரத்தில் தான் சனத்தொகை அடர்த்தி அதிகம். "இங்கே தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது" என்று சென்னை வாசிகளை கேட்டால் சொல்வார்கள். அதற்கு காரணம் "ஆக்கிரமிப்பாளர்களான பிற மாநில வந்தேறுகுடிகள்" என்று சீமான் பாணியில் பதில் சொல்லித் தப்ப முடியாது.

வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் அது தவறாகும். உலகில் பல நாடுகளின் தலைநகரங்களில் பூர்வீக மக்களின் சனத்தொகை குறைந்து வருகின்றது. நாகரிக வளர்ச்சி காரணமாக ஏற்படும் நகரமயமாக்கலின் தவிர்க்க முடியாது விளைவு அது.

லண்டன் மாநகரில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை குறைந்து, வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பான்மையானோர் காலனிய காலத்தில் சென்று குடியேறினார்கள். அப்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கென்யா, ஜமைக்கா எல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்களாக இருந்தன.

ஆகவே, சென்னையில் பூர்வீக தமிழர்களை விட, வந்தேறுகுடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி என்ற கேள்விக்கான பதிலை காலனிய காலத்தில் தான் தேட வேண்டும். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் சென்னை என்ற நகரமே இருக்கவில்லை. அது ஒரு சாதாரணமான மீன்பிடிக் கிராமமாக இருந்தது.

பிற்காலத்தில் தென்னிந்தியாவில் நிரந்தரமாக கால் பதித்த ஆங்கிலேயர்கள் அதைத் தமது இந்திய காலனியின் தலைநகரம் ஆக்கிக் கொண்டனர். (தெற்கில் சென்னை, வடக்கில் கல்கத்தா) சென்னையில் தளம் அமைத்திருந்து தான் தென்னிந்தியாவின் பிற பகுதிகளை கைப்பற்றினார்கள்.

ஆங்கிலேய காலனிய கால இந்தியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, மெட்ராஸ் (சென்னை) மாகாணம் என்ற நிர்வாகப் பிரிவு இருந்தது. அது இன்றைய தமிழ்நாடு மாநிலத்தையும், ஆந்திரா மாநிலத்தையும் உள்ளடக்கி இருந்தது. கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் அதற்குள் அடங்கின. அந்த மாகாணத்தின் தலைநகரம் மெட்ராஸ்/ சென்னை.

ஆகையினால், தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்கள் சென்னையில் சென்று குடியேறியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும் அது ஆந்திராவை அண்மித்த பகுதி என்பதால், தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இப்போதும் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதி மாவட்டத்தில் நிறைய தெலுங்கு பேசும் கிராமங்கள் உள்ளன.

ஒரு காலத்தில் மீன்பிடிக் கிராமமாக இருந்த மெட்ராஸ் பட்டணத்தை, இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாக மாற்றியதற்கு தமிழர்கள் மட்டும் உரிமை கோர முடியாது. ஆங்கிலேய காலனிகளில் இருந்து அங்கு வந்து குடியேறிய, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் அனைத்து உழைக்கும் மக்களும் பெருமைப் பட வேண்டிய விடயம்.

மெட்ராஸ் தமிழர்களின் பிரதேசத்தில் அமைந்திருந்த படியால், அங்கு குடியேறிய பிறமொழிக் காரர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழை பேசி வந்தனர். பிறகாலத்தில் அவர்கள் தமிழராக மாறி விட்டனர். இதற்காக தமிழர்கள் பெருமைப் பட வேண்டும். ஆனால், நாம் போலித் தமிழர் கட்சியினருக்கு மட்டும் இது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

இன்று ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக, அந்நாட்டு மொழியை எழுதப் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அங்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் அரசியலிலும் பிரகாசிக்கின்றனர்.

நோர்வீஜிய குடியுரிமை பெற்ற, அந்நிய வந்தேறுகுடி தமிழ்ப் பெண் ஒருவர், துணை மேயராக தெரிவு செய்யப் பட்டதை, நாம் தமிழர் பேர்வழிகள் பெருமையுடன் கொண்டாடினார்கள். அதே நேரம், தமிழர்களைப் போன்று சம காலத்தில் இந்திய குடியுரிமை பெற்ற தெலுங்கர்களும், மலையாளிகளும், அரசியல் தலைமைக்கு வந்தால் வெறுக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்திற்குப் பெயர் தமிழ் தேசியமாம்!

தகுதி, திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த துறையிலும் பிரகாசிக்கலாம். அதைத் தடுப்பதற்கு இவர்கள் யார்? ஒருவர் பிறப்பால் எந்த இனம் என்று பார்த்து, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இனவாதம் ஆகாதா? இவர்கள் குறிப்பிடும் அரசியல் தலைவர்கள் தம்மை தமிழர்கள் என்று தான் காட்டிக் கொள்கிறார்கள். சரளமாக தமிழ் பேசுகிறார்கள். பொதுவாக தமிழர்கள் வைத்திருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டுகிறார்கள். அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இதிலே இன்னொரு வேடிக்கையும் நடக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அந்தந்த மொழிக் காரர்கள் ஆட்சி செய்வதாக ஒரு பட்டியலை கொண்டு வந்து காட்டுகிறார்கள். அதில் உள்ள முதல் அமைச்சர்களின் பெயர்கள், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் அமைந்துள்ளன. அதை மட்டும் வைத்துக் கொண்டு, அதாவது பெயர்களை மட்டும் வைத்து, அவர்கள் அந்தந்த இனத்தவர்கள் என்று தீர்மானிக்க முடியுமா?

வந்தேறுகுடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சீமான் ஒரு பூர்வீகத் தமிழன் என்பதற்கான ஆதாரம் என்ன? சைமன், செபஸ்டியான் போன்ற பெயர்கள், மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் புழங்கும் பெயர்கள் ஆகும். சர்மா, ஐயர் போன்ற பெயர்களைக் கொண்டு பிராமணர்கள் அடையாளம் காணப் படுவதைப் போன்று, கேரளாவில் கிறிஸ்தவர்கள் தமது அடையாளமாக குடும்பப் பெயர்களை வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் செபஸ்டியான் என்ற குடும்பப் பெயர் கேரள கிறிஸ்தவர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது.

இலங்கையை ஆண்ட சிங்களப் பேரினவாத பிரதமர்களான பண்டாரநாயக்க, ஜெயவர்த்தனே போன்றோருக்கும் சீமானுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தாலும், பெரும்பான்மை இனத்தின் மத அடையாளங்களை வலிந்து சூட்டிக் கொண்டவர்கள். தமது பூர்வீகத்தை மறைப்பதற்காக தீவிரமான இனவாதிகளாக காட்டிக் கொண்டவர்கள்.

பிறக்கும் போது பெற்றோர் வைத்த கிறிஸ்தவப் பெயர்களை வாழ்நாள் முழுவதும் மறைத்து வந்தனர். எதற்காக, நாய் வேஷம் போட்டால் குரைக்கத் தானே வேண்டும்? தேர்தல் வெற்றிகளுக்காக இனவாத அரசியல் பேசினால், சொந்த இனத்தையும் மறைக்க வேண்டி இருக்கும்.

உலகம் முழுவதும், இனவாதத் தலைவர்கள் மத்தியில் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கிறது. ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது. பண்டாரநாயக்கவும், ஜெயவர்த்தனேயும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள். ஆனால், மூன்றாவது தலைமுறையாக இலங்கையில் வாழ்வதால், சிங்களவர்களாக மாறி விட்டனர்.

தமது சொந்த இன அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் பலர் இனவாதம் பேசுகின்றார்கள். தமிழகத்தின் வந்தேறுகுடி சீமானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. திருடனே, “திருடன் ஓடுறான்… பிடி… பிடி…” என்று கத்திக் கொண்டே ஓடுவானாம். அது போன்றது தான் சீமானின் வந்தேறுகுடி கோஷமும்.


பெரும்பாலான ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு, சீமான் இன்னொரு பந்தயக் குதிரை. கருணாநிதி, வைகோ வரிசையில் தற்போது சீமான், இந்தியாவில் தமது அரசியல் வர்க்க நலன்களை பிரதிதித்துவப் படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சீமான் என்ற பந்தயக் குதிரை செய்யும் குரங்குச் சேஷ்டைகள் காரணமாக, பலரது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றார். சீமான் மீது பந்தயப் பணம் கட்டியவர்களுக்கு, இந்தக் குதிரையும் தோற்றுவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதனால், "ஈழத் தமிழர்களின் கடமைகள் என்ன? அவர்கள் எதைப் பற்றி பேச வேண்டும்? எதைப் பற்றி பேசக் கூடாது?" என்று அதிகாரத் தொனியில் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாக, "சீமான் சரிப் பட்டு வர மாட்டான்.... இப்போதைக்கு மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப வேண்டும்..." என்பது அந்த "அறிவு"ஜீவிகளின் எண்ணம்.

ஒரு காலத்தில், ஜெர்மனியில் ஹிட்லர் சொன்னதைக் கேட்டும் எல்லோரும் சிரித்தார்கள். பல ஜெர்மனியர்கள் அவரை ஒரு கோமாளியாக சித்தரித்து, கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆகவே, இது போன்ற கோமாளிகளிடம் தான் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் சீமானின் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறப் போவதில்லை. அந்த நிலைமை ஒரு காலத்தில் ஹிட்லரின் நாஸிக் கட்சிக்கும் இருந்தது. ஆனால், ஹிட்லர்களும், சீமான்களும், வருங்காலத்தில் பெரும் முதலாளிகளால் பயன்படுத்தப் படக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.

இந்தியாவின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீவிரமடையும் நேரத்தில், வட இந்திய பார்ப்பனிய பேரினவாதக் கைக்கூலியாக, தமிழ்நாட்டில் சீமான் செயற்படலாம். அந்த நேரத்தில், சீமான் ஈழத்தமிழ் தேசியவாதிகளின் நலன்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பார். இது ஈழத் தமிழரின் பந்தயக் குதிரை அல்ல, பார்ப்பனியர்களின் வேட்டை நாய் என்பது அப்போது தெரியும். 

(முற்றும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்
3. பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

Friday, March 18, 2016

அகரமுதல்வனின் கதையும் தமிழினியை புணரும் மேட்டுக்குடித் திமிரும்

விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான தமிழினியை மோசமாக சித்தரிக்கும் ஆபாசக் கதையை ஒரு புலி ஆதரவாளர் எழுதி இருக்கிறார். "சாகாள்" என்ற தலைப்பின் கீழ் அகரமுதல்வன் என்பவர் எழுதிய கதையை பலரும் விமர்சித்து விட்டார்கள். அந்தக் கதை எழுதியவரின் இனவெறி, பிரதேசவாதம், வர்க்க வெறுப்பு பற்றி இன்னமும் யாரும் விமர்சிக்கவில்லை.

புலி எதிர்ப்பாளர்கள் வன்மையான கண்டனங்களையும், புலி ஆதரவாளர்கள் மென்மையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளனர். அகரமுதல்வன் என்ற "புலி ஆதரவாளரே" ஒரு "புலி எதிர்ப்பு இலக்கியம்" எழுதும் அளவிற்கு, அவருக்கு நேர்ந்த மனப்பிறழ்வு என்ன? ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத் தமிழர்களை வெறுக்கும், மேட்டுக்குடி வர்க்கத் திமிரைத் தவிர இதற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்? 

அகரமுதல்வனின் ஆபாசக் கதை தொடர்பாக பலர் கவனிக்கத் தவறுகின்ற விடயங்கள் இவை:


  • புலிப் போராளிகளை புனிதர்கள் என்று கொண்டாடும் அதே தமிழ்ச் சமூகம் தான், போர் முடிந்த பின்னர் முன்னாள் போராளிகளை கைகழுவி விட்டது. ஒரு சிலருக்கு, அதாவது தமிழ் மேட்டுக்குடியினருக்கு புலிகள் எப்போதும் கருவிகள் தான். தேவை முடிந்த பின்னர் வீசி எறிந்து விட்டார்கள்.

  • புலிகள் இருந்த காலத்தில் அகரமுதல்வன் இப்படி ஒரு கதை எழுதத் துணிந்திருக்க மாட்டார். எழுதி இருந்தால், புலிகளின், அல்லது புலி ஆதரவாளர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளாகி இருப்பார். அந்தக் காலங்களிலும் எத்தனையோ பெண் போராளிகள், சிறிலங்கா படையினரால் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டனர்.

  • தமிழினி எழுதிய நூல் (ஒரு கூர்வாளின் நிழலில்), புலிகள் அமைப்பின் மீதும் பாரபட்சமற்ற விமர்சனம் வைத்துள்ளது. அதனை பல புலி ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்பதால், தனிப்பட்ட முறையில் தமிழினிக்கு எதிராக பேசி வந்தனர். அதன் தொடர்ச்சியாகவே அகரமுதல்வன் இந்த அவதூறுக் கதையை எழுதி இருக்கிறார். இந்தக் கதை மூலம், புலி ஆதரவாளர்கள் மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொள்வது அவரது நோக்கம்.

  • அகரமுதல்வன், ஒரு சிங்கள இராணுவவீரனின் இனவெறிக் கண்ணோட்டத்தில் அந்தக் கதையை எழுதி இருக்கிறார். இதன் மூலம் இனவெறி என்பது மொழி வேற்றுமை கடந்த உணர்வு என்பதை நிரூபித்துள்ளார். பெண் போராளிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் சிங்களப் படையினருக்கும், அகரமுதல்வனுக்கும் இருப்பதும் ஒரே (இன) வெறி உணர்வு தான். அது பெண்களை பாலியல் பண்டங்களாக மட்டும் பார்க்கின்றது. 

  • அகரமுதல்வனின் கதை முழுவதும், கேட்பதற்கு நாதியற்ற ஏழைப் பெண் போராளிகளை, சிங்களப் படையினருடன் சேர்ந்து புணரும் வக்கிரமான எழுத்துக்களை கொண்டுள்ளது. அதற்குக் காரணம்? அகரமுதல்வனின் அடிமனதில் உள்ள வர்க்கத் துவேஷம்

  • புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இராணுவக் காவலில் வைக்கப் பட்டுள்ளார். அகரமுதல்வன் மதிவதனியை மையமாக கொண்டு சாகாள் என்ற கதையை எழுதி இருக்க முடியுமா? இந்நேரம் புலி ஆதரவாளர்கள் வீடு தேடி வந்து அடித்திருப்பார்கள்.

  • அகரமுதல்வன் தமிழினிக்கு பதிலாக மதிவதனியை மையமாக வைத்து இந்தக் கதையை எழுதத் துணிந்திருக்க மாட்டார். அதற்குக் காரணம், மதிவதனியின் ஊர்க்காரர்கள் தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். புலிகளுக்கு தாராளமாக நிதி வழங்கும் அளவிற்கு வசதியானவர்கள் பலர். மதிவதனி பற்றி கதை எழுதி இருந்தால், அகரமுதல்வன் மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் பயமுறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பார்.

  • தமிழினி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக வன்னியில் வாழ்ந்த வறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். தமிழினி புலிகள் இயக்கத்தில் இருந்த காலங்களிலும், யுத்தம் முடிந்த பின்னரும் தனது உழைக்கும் வர்க்க அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்தவர். குரலற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தவர். இதற்கு அவரது கூற்றுக்களே சாட்சியமாக உள்ளன. இறப்பதற்கு முன்னர் தனது முகநூலில் அத்தகைய கருத்துக்களை எழுதியுள்ளார். 

  • இன வாதிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், "தமிழர்கள் ஓர் இனம் என்ற அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றனர்" என்று தான் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், உண்மையான ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ் இனத்திற்குள் உள்ள ஏழை பாட்டாளி வர்க்கத்தினர் தான் என்ற உண்மையை மறைப்பார்கள். 

  • யுத்தம் முடிந்த பின்னர், வன்னியில் எஞ்சிய அத்தனை மக்களும் சிறிலங்கா இராணுவத்தால் முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அப்போது பலர், இராணுவத்திற்கு இலஞ்சம் கொடுத்து விட்டு, முகாமை விட்டு தப்பியோடினார்கள். அவர்கள் எல்லோரும் வசதி படைத்தவர்கள். சில புலி இயக்க தலைவர்கள், உறுப்பினர்களும் அதில் அடங்குவார்கள்.

  • பண வசதி இல்லாத ஏழைக் குடும்பங்களை சேர்ந்த போராளிகள் தான், சிறிலங்காப் படையினரின் சித்திரவதைகளையும், வன்புணர்வுகளையும் அனுபவித்தனர். அவர்களை சுட்டுக் கொன்றாலும் கேட்க ஆளிருக்கவில்லை. அப்படியான இழப்பதற்கு எதுவுமற்ற மக்களைத் தான் அகரமுதல்வன் தனது கதையில் குரூரமாக சித்திரவதை செய்து இரசிக்கிறார். ஏனென்றால் அவர்களுக்காக வாதாட யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியம்.

ஈழப்போரானது எத்தனையோ தடவைகள் வர்க்க வேற்றுமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளது. உண்மையில், இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண், ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தால், சமூகம் அதை மூடி மறைக்கும். அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி யாரோ ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள். சிங்கள அரசு அதிகாரிகளிடம் சோரம் போன தமிழ் மேட்டுக்குடிப் பெண்களும் உண்டு. அவர்களைப் பற்றிய கதைகளை எழுதும் தைரியம், அகரமுதல்வன் போன்ற மேட்டுக்குடி அடிவருடிகளுக்கு கிடையாது.


Tuesday, March 15, 2016

தமிழ்ச்செல்வன் கொலையின் பின்னணியில் அமெரிக்கா? - இரகசிய CIA ஆவணம்


விடுதலைப் புலிகளின் அழிவில், தமிழ் இனப்படுகொலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி, தமிழ் தேசிய ஊடகங்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும், வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான, அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று, புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். 2 நவம்பர் 2007 அன்று, கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு, துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் இறந்துள்ளார். 

தமிழ்ச்செல்வன் மீதான விமானத் தாக்குதலானது, அப்போதே பல கேள்விகளை எழுப்பி இருந்தது. அமெரிக்க இராணுவம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய, பங்கர் துளைக்கும் குண்டுகள், சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார்?

2014 ம் ஆண்டு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட CIA இன் இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே, தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது. முப்பதாண்டு கால ஈழப்போர் வரலாற்றில், புலிகள் இயக்கத்தின் மேல் மட்டத் தலைவர்களில் ஒருவர் கொல்லப் பட்டமை அதுவே முதல் தடவை ஆகும்.

தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல், தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக CIA அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் இயக்கத்திற்குள், ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும், நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக, அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது. 

தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர், காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன், அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். தமிழ்ச்செல்வன், நடேசனுக்கு இடையிலான தகராறுக்கு, சாதிய முரண்பாடும் ஒரு காரணம்.

"உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (HVT) - படுகொலைத் திட்டம்" (“High Value Target” Assassination Program) என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம், SECRET (இரகசியம்) NOFORN (வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல) என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது. கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை இலக்கு வைத்துக் கொல்வதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் அறிக்கை அது. 

புலிகள் மட்டுமல்ல, அல்கைதா, தாலிபான், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமியவாத இயக்கங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதே போன்று கொலம்பிய FARC, பெருவின் ஒளிரும் பாதை, வட அயர்லாந்து IRA, போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் ஆராய்கின்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பார்வையில், இவை எல்லாம் ஒரே மாதிரியான கிளர்ச்சிக் குழுக்கள் என்ற உண்மையையும், மேற்படி அறிக்கை கோடிட்டுக் காட்டுகின்றது.

கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தின் நோக்கம் என்ன? அதற்கான விடையும் அறிக்கையில் உள்ளது. தலைவர்களை சிறைப்பிடிப்பதிலும் பார்க்க, கொலை செய்து விடுவது சிறந்தது என்று CIA கருதுகின்றது. முள்ளிவாய்க்காலில் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் அனைவரும், சிறிலங்கா இராணுவத்தால் தீர்த்துக் கட்டப் பட்டனர். இது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவின் நேரடி உத்தரவின் பேரில் நடந்தது. இருப்பினும், அதுவே அமெரிக்காவின் நோக்கமும் என்று தெரிய வருகின்றது. பிரபாகரன் உட்பட புலிகளின் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவம், CIA அறிக்கையில் குறிப்பிட்டு எழுதப் பட்டுள்ளது.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது CIA முன்வைக்கும் வாதம். ANC தலைவர் நெல்சன் மண்டேலா சிறை சென்று மீண்டதை அதற்கு உதாரணமாக காட்டுகின்றது. இஸ்ரேலிய வான்படைத் தாக்குதல்களில் ஹமாஸ் தலைவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள், HVT தாக்குதல்களால் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க முடியும் என்பதை நிரூபித்தது. தலைமையை குறிவைத்து தாக்குவதன் மூலம், இயக்க உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க முடியும். அதிக பட்ச உளவியல் தாக்கத்தை உண்டு பண்ணலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், ஹமாஸ், தாலிபான் விடயத்தில் HVT தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை உண்டாக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றது. குறிப்பாக, ஹமாஸ் ஒரு கட்டுகோப்பான இயக்கம் என்பதாலும், மக்களை கவரும் சமூக நலத் திட்டங்களாலும், தன்னை மீளக் கட்டியமைக்க முடிந்தது. தாலிபான், அல்கைதா தலைவர்கள் நவீன தொலைத்தொடர்பு கருவிகளை பாவிப்பதை நிறுத்திக் கொண்டார்கள். மேல் மட்ட தலைவர்களை தவிர யாரையும் சந்திக்காமல் பங்கருக்குள் முடங்கிக் கொண்டனர். மறுபக்கம், இந்தக் காரணத்தால், இயக்கத்தின் கீழ்மட்ட போராளிகளுக்கும், தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.

விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை, 2014 ம் ஆண்டே வெளியிட்டு இருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் எதுவும் அதைப் பற்றிப் பேசாதது ஆச்சரியத்திற்குரியது. குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள், இணையத் தளங்கள் எதுவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்பதல்ல. புலிகளுக்கு ஆதரவான ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஏற்கனவே இந்தத் தகவலை பிரசுரித்தது. 

இருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இந்தத் தகவல் போய்ச் சேரவில்லை. என்ன காரணம்? அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ்தேசியவாதிகள், ஏகாதிபத்திய நலன்களுக்காக சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுத்து வருபவர்கள். அவர்கள் இது போன்ற பல தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்வார்கள்.

தமிழ்ச்செல்வனின் கொலைக்குப் பின்னர் பங்கருக்குள் இருப்பது தனக்கு பாதுகாப்பானதல்ல என்று தலைவர் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இறுதி யுத்தத்தில், பிரபாகரனின் பங்கர் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை சிறிலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. அதே நேரத்தில், புலிகள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கூட்டிக் கொண்டு புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நகர்ந்தனர். அது முல்லைத்தீவு கடற்கரையோரம் இருந்த, எந்தவித பாதுகாப்புமற்ற வெட்ட வெளிப் பிரதேசம்.

முள்ளிவாய்க்கால் செல்லுமாறு யார் அறிவுரை கூறினார்கள்? வேறு யார்? சந்தேகத்திற்கிடமின்றி மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த வலதுசாரி அமெரிக்க அடிவருடிகள் தான். அதற்கு அவர்கள் கூறிய காரணம்? "அமெரிக்க மரைன் படைகளின் கப்பல் ஒன்று முலைத்தீவு கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது... அது புலிகளின் தலைவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று விடும்..." இப்படிப் பொய் சொல்லி நம்ப வைத்தார்கள். 

கடைசியில், அமெரிக்கக் கப்பலும் வரவில்லை, அமெரிக்கா காப்பாற்றவும் இல்லை. புலிகளின் தலைவர்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், சிறிலங்கா படையினரால் இனப் படுகொலை செய்யப் பட்டனர். CIA அப்போதே அந்த முடிவை வரவேற்று அறிக்கை எழுதியுள்ளது. அதனால் தான், இந்தத் தகவலை தமிழ் மக்களுக்கு தெரிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.



CIA அறிக்கை முழுவதையும் வாசிப்பதற்கு:



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Sunday, March 13, 2016

பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சீமானின் "வந்தேறுகுடி" கொள்கை

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - மூன்று] 


போலித் தமிழ் தேசியவாதிகள்: பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதற்காக, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றி இரட்டைவேடம் போடுவோர். இவர்களது செயற்பாடுகளும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும்.

சீமான் மற்றும் நாம் தமிழரின் அரசியல் அபிலாஷைகள், இந்துத்துவா - பார்ப்பனீய பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பதாக அமைந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. மும்பை சென்று, இந்து- பாசிஸ சிவசேனா இயக்கத்திற்கு ஆதரவாக பேசினார். தமிழகத்தில் பார்ப்பனர்கள் ஆதரித்த ஜெயலலிதாவை அவரும் ஆதரித்தார்.  இலங்கையில் ஒரு தமிழ்க் கட்சியின் தலைவர் இப்படிப் நடந்து கொண்டால், அவருக்கு எப்போதோ துரோகிப் பட்டம் சூட்டி இருப்பார்கள்.

சீமான் இந்துத்துவா வாதிகளின் மதவெறிக் கொள்கையை ஏற்று, "இஸ்லாமியர்கள் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்" என்று சொன்னார். "தமிழ் பேசும் பார்ப்பனர்கள் அனைவரும் தமிழர்களே" என்று கூறி, வட இந்திய வந்தேறுகுடி பார்ப்பனர்களை தமிழர்களாக அங்கீகரித்தார். சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், இந்துத்துவா பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும்?  (பார்க்க: சீமானின் பார்ப்பன பாசம்! https://www.facebook.com/tamizachi.Author/videos/926925790739311/ )

"தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும். தெலுங்கு நாட்டை தெலுங்கன் ஆள வேண்டும். கேரளாவை மலையாளி ஆள வேண்டும். கர்நாடகாவை கன்னடன் ஆள வேண்டும்." இதுவே தமது கொள்கை என்று சொல்லிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர், தமிழ்நாட்டிற்குள் வாழும் தெலுங்கு, மலையாள, கன்னட சிறுபான்மையின மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, அவர்களை வந்தேறுகுடிகள் என்று தூற்றவும் செய்கின்றனர்.

சீமானின் வந்தேறுகுடி கொள்கைக்கு முரணான விடயமாக, மலேசியாவின் வந்தேறுகுடி சீனர்கள் சிங்கப்பூர் தீவை பிரித்து எடுத்தார்கள். அதற்கு காரணமாக இருந்த லீகுவான் யூ மரணமடைந்த நேரம், சீமான் அஞ்சலி செலுத்தினார். இந்த இரட்டை வேடத்தை சுட்டிக் காட்டினால், நாம் தமிழர் விசுவாசிகள் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ உளறிக் கொட்டுகிறார்கள்.

சிங்கப்பூரின் வரலாறு எதுவாக இருந்தாலும், சீமானின் கொள்கையின் அடிபப்டையில்,  சீனர்கள் மலேசியாவின் வந்தேறுகுடிகள் தான். மலேசியா மட்டுமல்லாது, மியான்மர் முதல் இந்தோனேசியா வரை வாழும் சீனர்கள், உள்ளூர் மக்களால் வந்தேறுகுடிகளாக கருதப் படுகின்றனர். பல நாடுகளில் நடந்த இனக் கலவரங்களால் சீனர்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர்.

சீன வந்தேறுகுடி லீகுவான்யூவை ஆதரிப்பதற்கு நாம் போலித் தமிழர் சொல்லும் காரணங்கள் இவை தாம். ஒன்று, அவர் தமிழை ஆட்சி மொழியாக்கினார். நாம் போலித் தமிழர் பன்னாடைகளின் மனத்தைக் குளிர வைக்கும் வகையில், ராஜபக்சே சிங்களவர்களும் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார். அதற்காக நாம் போலித் தமிழர்கள் ராஜபக்சேவை கொண்டாடுவார்களா? (அதற்கு முன்னரே சிங்கப்பூர் மாதிரி சிறிலங்காவிலும் தமிழ் ஆட்சிமொழியாகி விட்டது.)

லீகுவான்யூ ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பரிந்து பேசினார். அதனால், அவர் நல்லவர் என்று நாம் போலித் தமிழர் கட்சியினர் சொல்லித் திரிகின்றனர். சொந்த நாட்டு மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, சர்வாதிகார ஆட்சி நடத்திய லீகுவான்யூ, தமிழர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் நல்லவராகி விட்டாராம். சிங்கப்பூரில் மலே தேசியவாதிகளையும், சீனக் கம்யூனிஸ்டுகளையும் சிறையில் அடைத்து வருத்திய லீகுவான்யூ, நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராம்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய லீகுவான் யூ, அயலில் இருக்கும் அச்சே மக்களுக்கு ஆதரவாக பேசாத காரணம் என்ன? இந்தோனேசியாவின் அச்சே மாநிலம், சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கிறது. மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட அச்சே மக்கள், நீண்ட காலமாக தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர். அச்சே மாநிலத்தில், இந்தோனேசிய படையினர் நடத்திய இனப்படுகொலையை கண்டித்து, லீகுவான்யூ ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? 

ஒரு ஆட்சியாளர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு இவர் வைத்திருக்கும் அளவுகோல் "தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது" என்பது தான். ஒருவேளை ராஜபக்சே தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலும், இவர்கள் ராஜபக்சே நல்லவர் என்று சொல்லித் திரிவார்கள். ஏன் ராஜபக்சே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பேசவில்லையா? அதனால் சிறிலங்காவின் சர்வாதிகாரி நாம் போலித் தமிழர் பார்வையில் நல்லவராகி விட்டாரா?

ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலம் முழுவதும்,சிங்கப்பூரில் லீகுவான்யூ புலிகளை தடை செய்திருந்தார். புலிகளின் முகவர்களாக செயற்பட்டவர்களை, அல்லது ஆதரவாக இருந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தார். இந்தோனேசியாவில் இருந்து புலிகளுக்கு சென்று கொண்டிருந்த ஆயுதக்கப்பலை காட்டிக் கொடுத்தார். 

சிங்கப்பூரில் சில ஆர்வலர்கள், வன்னியில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப் பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி தெரிவிக்க கூட்டம் கூடினார்கள். அது தடைசெய்யப் பட்டது. அதை ஒழுங்கு படுத்திய சிங்கை வாசிகளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்தார்கள். இவ்வளவும் செய்த லீகுவான்யூ, எல்லாம் முடிந்த பின்னர் தமிழர்களுக்கு ஆதரவானவராக நீலிக் கண்ணீர் வடித்தார். அதைக் கண்டு போலித் தமிழ் தேசியவாதிகள் பொருமுகிறார்கள்.

ஈழப்போர் முடிந்து ஐந்தாறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இனி அதைப் பற்றி பேசி அரசியல் நடத்த முடியாது என்ற நிலைக்கு சீமானும், நாம் தமிழரும் வந்து விட்டனர். சிறிது காலம் "முப்பாட்டன் முருகன்" என்று கூறி, இந்துத்துவா அடிப்படைவாதிகளை குஷிப் படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள்.

நூறாண்டு காலமாக திராவிட எதிர்ப்பு அரசியல் செய்து வரும் பிராமணர்களின் மனத்தைக் குளிர வைத்தார்கள். சோழர்கள் காலத்தில், வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய சமஸ்கிருத பிராமணர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களை தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என்று பிரித்துப் பேச ஆரம்பித்தார்கள்.

சீமானும், நாம் போலித் தமிழரும், "தமிழ்நாட்டை பிற மாநில வந்தேறுகுடிகள் நாசமாக்கி விட்டதாகவும், தமிழன் ஆண்டால் எல்லாம் சரிவரும்" என்றும் கொக்கரித்துக் கொண்டு திரிகின்றார்கள். தெலுங்கு, கன்னட, மலையாள பூர்வீகத்தை கொண்ட தமிழர்களை குறி வைத்துத் தாக்குகிறார்கள். அதே நேரம், மராட்டிய பூர்வீகத்தை கொண்ட மார்வாடிகள், சம்ஸ்கிருத பூர்வீகத்தை கொண்ட பிராமணர்கள் பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை "உண்மையான தமிழ் இன உணர்வு" என்று பிதற்றித் திரிகின்றனர்.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
1. தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி
2. நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

Saturday, March 12, 2016

நாம் தமிழர் + நாம் சிங்களர் : ஒரே இனவாத மரத்தின் இரண்டு கிளைகள்

(தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி - தொடர்)
[பகுதி - இரண்டு] 



சீமான் தமிழ் தேசியம் பேசுவதாக பலர் பிழையாக நினைத்துக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழ் தேசியவாதிகளும் சீமான் வைத்த பொறிக்குள் வசமாக மாட்டிக் கொண்டு, மீள வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். உண்மையில் சீமான் பேசுவது, "தமிழ் நாட்டுக்கேற்றவாறு மாற்றியமைக்கப் பட்ட சிங்கள பேரினவாதக் கருத்தியல்" ஆகும். இதனை நாம் தமிழர் கட்சி ஆர்வலர்களுடனான உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர் இருந்தே சிங்கள தேசியவாதம் என்ற போர்வைக்குப் பின்னால் அபாயகரமான சிங்களப் பேரினவாதம் வளர்ந்து வந்தது. ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவும், இலங்கையும் ஒரே நாடாக இருந்தது. அதனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிக் கொண்டிருந்தார்கள்.

பொருளாதார வளர்ச்சி காரணமாக, தமிழ் நாட்டில் சென்னை மாநகரம் மாதிரி, இலங்கையில் கொழும்பு மாநகரம், பல்லினக் குடியேறிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. கொழும்பு துறைமுகத்திலும், நகர சுத்திகரிப்பு பணிகளிலும் பெரும்பாலும் தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். அதனால், சிங்கள இனவாதிகளின் ஆரம்ப கால அரசியல் பிரச்சாரங்களும் "வந்தேறுகுடிகளுக்கு" எதிராக அமைந்திருந்ததில் வியப்பில்லை.

இன்று சீமானும், நாம் தமிழரும் பேசுவது போலத் தான், அன்று சிங்கள இனவாதிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். "தெலுங்கு, தமிழ், மலையாள வந்தேறுகுடிகள் தான் இலங்கையை ஆள்கிறார்கள். சிங்கள நாட்டை சிங்களவன் ஆள வேண்டும்." என்று நாம் தமிழர் பாணியில், நாம் சிங்களவர் கோஷம் போட்டனர். உண்மையில், அன்றைய ஆங்கிலேய நிர்வாகத்தில் பெருமளவு தமிழர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்கள், சிங்களப் பிரதேசங்களில் கூட அரசாங்க ஊழியர்களாக வேலை பார்த்தனர்.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் கொண்டால், அன்றைய இலங்கையில் தமிழரின் விகிதாசாரம் சனத்தொகையில் 40% இருந்திருக்கும். தமிழ் தேசிய தலைவர்கள் மத்தியில், தமிழர்கள் சிறுபான்மை இனம் என்ற உணர்வு இருக்கவில்லை. பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில், ஜி.ஜி. பொன்னம்பலம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக "ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை" வைத்ததும் அதனால் தான். 

இலங்கையில் தமிழரின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில், சிங்கள இனவாதிகள் தந்திரமாக மலையக தோட்டத் தொழிலார்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். சாதி வேற்றுமை காரணமாக, யாழ் வேளாள மேட்டுக்குடியினரும் அதற்கு ஒத்துழைத்தனர். 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், இலங்கையில் இன உணர்வை விட, சாதிய உணர்வு முக்கியமாகக் கருதப் பட்டது. 1911 ம் ஆண்டு, ஆங்கிலேய காலனிய ஆட்சியின் கீழ் படித்த இலங்கையருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒரு தமிழரான சேர் பொன் இராமநாதனும், ஒரு சிங்களவரான சேர் மார்குஸ் பெர்னாண்டோவும் ஒரே தொகுதியில் போட்டியிட்டனர். பெரும்பான்மை சிங்கள வாக்காளர்கள், இராமநாதனுக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வைத்தார்கள். என்ன காரணம்? மார்குஸ் பெர்னாண்டோ பிற்படுத்தப் பட்ட கரவா (தமிழில்: கரையார்) சாதியை சேர்ந்தவர். இராமநாதன் உயர்த்தப் பட்ட வெள்ளாள (சிங்களத்தில்: கொவிகம) சாதியை சேர்ந்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சிங்கள இனவாதிகளுக்கும் "யார் சிங்களவர்கள்? யார் தமிழர்கள்?" என்று தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இன்று சீமானுக்கும், நாம் (போலித்) தமிழருக்கும் ஏற்பட்டிருக்கும் அதே குழப்பம் தான். ஏனென்றால், ஆங்கிலேய காலனிய காலத்தில், இந்தியாவில் இருந்து வந்த பல்லினக் குடியேறிகள், இலங்கையில் வாழ்ந்த சிங்களவர்களுடனும், தமிழர்களுடனும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆயிரக் கணக்கான தெலுங்கர்கள், மலையாளிகள், மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்கள், வடக்கே பருத்தித்துறை முதல், தெற்கே அம்பாந்தோட்டை வரை குடியேறி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் பேசப்பட்ட மொழி எதுவாகினும், அதை தமது தாய் மொழியாக்கிக் கொண்டனர். குறிப்பாக உயர் சாதியினர் இனக்கலப்பு செய்வதற்கு, சிங்களவர்களோ, தமிழர்களோ எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஏராளமான தென்னிந்திய செட்டியார்கள், முதலியார்கள், இரண்டு இனங்களிலும் சரி வரக் கலந்துள்ளனர். அதே மாதிரி, மலையாளிகளும் இன்று சிங்களவர்களாக, அல்லது தமிழர்களாக தம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். எழுபதுகள் வரையில், யாழ்ப்பாணத்தின் வந்தேறுகுடிகளான மலையாள வர்த்தகர்கள், யாழ் குடாநாட்டில் இருந்து கேரளாவுக்கு புகையிலை ஏற்றுமதி செய்து வந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பமும் கேரளாவில் இருந்து வந்து குடியேறிய மலையாள வம்சாவளியினர் தான்.

ஏராளமான தமிழ் பேசும் செட்டியார்களும், முதலியார்களும், சிங்கள இனத்திற்குள் கலந்து விட்ட நிலையில், "யார் சிங்களவர் அல்லாதவர்" என்று வரையறுக்க வேண்டிய தேவை, சிங்கள இனவாதிகளுக்கு ஏற்பட்டது. தமிழ் பேசிய உயர்சாதியினரை சிங்கள சமூகத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட சிங்கள இனவாதிகள், தமிழ் பேசிய தாழ்ந்த சாதியினரை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தனர்.  

கொழும்பு மாநகரில் வாழ்ந்த தீண்டாமை சாதியினரான பறையர்களும், சக்கிலியர்களும் வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசி வந்தனர். இவர்களில் கணிசமான தொகையினர் தெலுங்கர்களாக இருந்த போதிலும் தமிழ் பேசினார்கள். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் என்பதால், சிங்களப் பெரும்பான்மை இனம் அவர்களை தம்முடன் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தது.

உண்மையிலேயே சிங்களவர்கள் மத்தியில் பறையர் சாதி இருக்கிறது. சிங்களத்தில் அதை பெறவா என்று சொல்வார்கள். சிங்கள மொழியில் "பெற" என்பது பறை மேளத்தைத் குறிக்கும்.  சிங்கள பெறவா சாதியினரில் பெரும்பான்மையானோர் முன்னொருகாலத்தில் தமிழராக இருந்திருக்கலாம். குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி வந்த பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச ஒரு தமிழர். தமிழ்நாட்டில் இருந்து வந்தேறிய தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ! 

சிங்கள இனவாதிகளின் கூச்சலான "பறத் தெமளோ", "சக்கிலித் தெமளோ" என்பன மேற்குறிப்பிட்ட சாதிய மனோபாவத்தில் இருந்து வந்த சொற்கள் தான். இன முரண்பாடுகள் கூர்மையடைந்த பின்னர், சாதிப் பாகுபாடு காட்டாமல் அனைத்துத் தமிழர்களுக்கும்  "பறத் தெமளோ" பட்டம் சூட்டப் பட்டது. 

அது மட்டுமல்ல, யாராவது ஒரு சிங்களவர் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால், அவரும் "பறத் தெமளோ" என்று தூற்றப் படுகின்றார். ஆகையினால், அது ஒரு சாதியை குறிப்பதாக கருத முடியாது. அது ஒரு வசைச் சொல்லாக தாராளமாக பாவிக்கப் படுகின்றது. எதற்காக இவ்வளவு வியாக்கியானம்? 

நாம் சிங்களர் பாவிக்கும் வசைச் சொல்லான "பறத் தெமளோ"போன்று, நாம் தமிழர் ஒரு வசைச் சொல் வைத்திருக்கிறார்கள். "வடுகர்" என்பது அந்தச் சொல்.  சிறுபான்மைத் தெலுங்கர்களுக்கு எதிரான வசைச் சொல்லான வடுகர் என்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழர்களுக்கு எதிராகவும் பாவிக்கப் படுகின்றது. 

சிங்கள இனவாதிகள் "பறத் தெமளோ" என்று திட்டினால், தமிழ் இனவாதிகள் "வடுக தெலுங்கர்கள்" என்று திட்டுகிறார்கள். என்ன வித்தியாசம்?  இதற்கு முன்னர் சீமானை விமர்சித்து நான் எழுதிய விமர்சனக் கட்டுரைக்கு நாம் தமிழர் ஆர்வலர் ஒருவர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார். "தமிழர்களிடையே நுழைந்துள்ள வடுக கூட்டம் பல வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றது." (கவனிக்கவும்: இனவாத வசைச் சொல்லான "வடுக கூட்டம்")

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மாதிரி, தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறுபான்மை இனம் ஆகும். கணிசமான அளவு நகர சுத்தி தொழிலாளர்கள் தெலுங்கர்கள் தான். அதாவது தாழ்த்தப் பட்ட சாதியினர். நாம் தமிழர் இனவாதிகளின் வடுகர் எதிர்ப்பு பிரச்சாரம், தெலுங்கு பேசும் தாழ்த்தப் பட்ட சாதி மக்களையும் குறி வைத்து நடக்கிறது. சிங்கள இனவாதிகளின் "பறத் தெமளோ" வும், தமிழ் இனவாதிகளின் "வடுக தெலுங்கர்களும்"  சாதிய மேலாதிக்க கருத்து அடிப்படையில் இருந்து வருகின்றது. 

நாம் சிங்களர் இயக்கம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக செய்து வந்த இனவாத பிரச்சார பாணியை பின்பற்றித் தான், நாம் தமிழர் இயக்கம் நடந்து கொள்கின்றது. நாம் சிங்களர் இயக்கத்தினர், "சிங்கள நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தமிழர்கள் ஆள்கிறார்கள்" என்று சொன்னார்கள். நாம் தமிழர் இயக்கத்தினர், "தமிழ் நாட்டை சிறுபான்மையான வந்தேறுகுடி தெலுங்கர்கள் ஆள்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 


(தொடரும்) 
 
இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள் :
தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி

Friday, March 11, 2016

தமிழரின் சுயநிர்ணயத்திற்கு எதிரான "நாம் போலித் தமிழர்" கட்சி


பகுதி - 1

 "சிங்கள சீமான்" ராஜபக்சேயும், 
"தமிழ் ராஜபக்சே" சீமானும்


சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொண்டு வந்து கொடுத்தார்களா? புலிகளுக்காக எங்காவது வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா? 

தமது வாழ்க்கையில் இது போன்ற எதையுமே செய்யாதிராத போலிப் புலி ஆதரவாளர்கள் தான் இந்த நாம் தமிழர் கட்சியினர். ஆனால், அவ்வாறான அர்ப்பணிப்புகளை செய்தவர்களுக்கு எதிராகவே அவர்களது அரசியல் அமைந்துள்ளது. நாம் (போலித்) தமிழர் கட்சியினர், உண்மையிலேயே புலிகளுக்காக பாடுபட்டவர்களையும், ஈழப்போராட்டத்தில் பங்களித்தவர்களையும் அவமதிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈழப்போர் நடந்த முப்பதாண்டு காலத்தில், சீமானும், நாம் தமிழர் ஆதரவாளர்களும், ஈழத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 2009 ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தில், திடீரென முளைத்த நாம் (போலித்) தமிழர்கள், புலிகளின் அழிவை மூலதனமாக்கி அரசியல் செய்தனர். உண்மையாகவே புலிகளுக்கு உதவியவர்கள் மீது அவதூறு செய்வதும், வசை பாடுவதும், அவர்களது அன்றாட அரசியலாக உள்ளது. பார்ப்பன அடிவருடிக் கும்பலான சீமானும், நாம் (போலித்) தமிழர் கட்சியும், ஈழப் போராட்டத்திற்கு செய்த துரோகமும், ஏற்படுத்திய பின்னடைவுகளும் மிக மிக அதிகமாகும்.

இனிமேல் ஒரு ஈழப் போராட்டம் வர விடாமல் தடுப்பதும், தமிழ்நாட்டில் பொதுவாக உள்ள தமிழ் தேசிய உணர்வை இனவாதமாக குறுக்கி சிதைப்பதும், நாம் (போலித்) தமிழர் கட்சியின் குறிக்கோளாக உள்ளது. இந்த நுண்ணரசியலை, சீமானின் பேச்சுக்களில் இருந்தும், அவரது ஆதரவாளர்களின் அடாவடித்தனங்களில் இருந்தும் புரிந்து கொள்ளலாம்.

நாம் (போலித்) தமிழர் கட்சிக்கென நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாது. அது காலத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாறுபடும். சீமானின் வாயில் இருந்து என்ன வந்தாலும் அது கொள்கை தான். சீமான் யாரையாவது "ங்கோத்தா" என்று திட்டினாலும், "லூசாடா நீ" என்று ஏசினாலும், அதை நியாயப் படுத்தி வாதிட ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 

சீமான் தனது முப்பாட்டன் முருகன் என்று வேல் தூக்கி ஆடினாலும் அதுவே ஒரு கொள்கையாகி விடும். உலகில் உள்ள தீவிர வலதுசாரி பாசிசக் கட்சிகளுக்கே உரிய பொதுவான குணாம்சம் அது. தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. 

சிங்கள இனவாதத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் முப்பாட்டனும் முருகன் தான்! துட்டகைமுனு கதிர்காமக் கந்தனை வழிபட்டு விட்டு, எல்லாளனுடன் போருக்கு சென்றதாக மகாவம்சம் கூறுகின்றது. அதையே "நவீன துட்டகைமுனு" ராஜபக்சேவும் பின்பற்றுள்ளார். 

"ஈழத்தில் சிங்களவர்கள் எனது இனத்தை அழிக்கிறார்கள்..." என்று அனைத்து சிங்களவர்களையும் தமிழர்களின் எதிரிகளாக காட்டி அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலாப் பயணிகளை தாக்கினார்கள். சிங்கள மாணவர்களை படிக்க விடாமல் விரட்டினார்கள்.

இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக, இலங்கையை ஆளும் சிங்கள பேரினவாத அரசு சீமானுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை பற்றி எதுவும் தெரியாதவர்கள் மட்டும் தான், நாம் (போலித்) தமிழர் கட்சியினரின் செயல்களை நியாயப் படுத்துவார்கள்.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்கியதில், சிங்கள இனவாதிகள் காட்டிய வெறித்தனம் மறுக்க முடியாத உண்மை. உலகில் எந்தவொரு இனவாதியும், தான் இனவாதி தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு மாறாக எதிரி இனத்தவர்கள் தான் இனவாதிகள் என்று சொல்லிக் கொள்வார்கள். சிங்கள இனவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சே கூட, "இனவாதம் பேசாதீர்கள்" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை கண்டித்து வந்தார். ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் ஒரு தடவை கூட, சிங்கள இனவாதக் கட்சிகளை கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

ஒரு ஜனாதிபதிக்கே சிங்களவர்களும் இனவாதம் பேசுவார்கள் என்ற புரிந்துணர்வு இல்லை. இந்த இலட்சணத்தில் சாதாரண சிங்களவர்கள், தாங்கள் இனவாதம் பேசுவதாக ஒத்துக் கொள்வார்களா? அதெல்லாம் "இனப் பற்று" என்று தான் விளக்கம் சொல்வார்கள். அவ்வாறு தான் நாம் தமிழர் ஆதரவாளர்களும் நடந்து கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்? சிறிலங்காவில் "ராஜபக்சே ஒரு சிங்கள சீமான்". தமிழ்நாட்டில் "சீமான் ஒரு தமிழ் ராஜபக்சே" என்பது மட்டும் தான் வித்தியாசம்.

மொழி ஒரு தடையாக இருப்பதால், மற்ற இனத்தவர்களின் எண்ணம் பற்றி எதுவும் தெரிவதில்லை. தமிழர்களைப் பற்றி பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஈழத் தமிழர்கள், இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, சிறுபான்மையினரான சிங்கள இனத்தை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில், இந்தியர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சாதாரணமான சிங்கள மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அந்த எண்ணம் பெருமளவு மாறி விட்டது. இருப்பினும், "தமிழர்கள் சிங்கள இனத்தை அழிக்கக் கிளம்பியுள்ளனர்..." என்ற கருத்து மட்டும் மாறவில்லை.

ஈழப்போர் காலத்தில், எல்லைப்புற சிங்கள கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்களை கொன்ற புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள், அவர்களது தப்பெண்ணத்தை சரியென வாதிட வைத்தன. சிங்கள பொதுமக்கள் கொல்லப் படும் ஒவ்வொரு தாக்குதலும், தென்னிலங்கையில் சிங்கள இனவாத சக்திகளின் தமிழர் விரோத பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. அதே மாதிரி, தமிழ்நாட்டில் சிங்கள சுற்றுலாப்பயணிகள் தாக்கப்பட்ட சம்பவங்களும் சிங்கள இனவாதிகளுக்கு நன்மையாக முடிந்துள்ளது.

நாம் போலித் தமிழர் கட்சி சித்தரிப்பது போல, "சிங்களவர்கள் எல்லோரும் கெட்டவர்களா"? சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழர்கள் எல்லோரையும் கெட்டவர்களாக சித்தரித்துக் காட்டுகின்றன. அதையே தான் தமிழ் இனவாதக் கட்சியான நாம் தமிழரும் செய்கின்றது. இனவாதிகள் பேசும் மொழிகள் மட்டுமே வேறு வேறு. கொள்கை, குறிக்கோள் ஒன்று தான். தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ, மக்கள் எல்லோரும் இனவாதிகள் அல்லர். இனவாதிகள் தம்மைப் போலவே, தம்மின மக்கள் அனைவரும் சிந்திப்பதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். நாம் தமிழர் மட்டுமல்ல, நாம் சிங்களவரும் அப்படித் தான் கருதிக் கொள்கிறார்கள்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம்:
"சீமானும், அவரது தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும், ஈழப் போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? குறைந்த பட்சம், அவர்களால் வழிபடப் படும் புலிகள் இயக்கத்திற்கு செய்த உதவிகள் எத்தனை? புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்திக் கொடுத்தார்களா? புலிகளுக்காக வெடி குண்டு வைத்தார்களா? வன்னி சென்று புலிகளின் பாசறையில் பயிற்சி பெற்றார்களா? அது போன்ற குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறை சென்றவர்களா?"

ஈழப்போரின் இறுதிக் காலத்தில், ஜேவிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர், அதாவது இடதுசாரி சிங்களவர்கள், புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு புலிகள் வன்னியில் வைத்து இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். குறிப்பாக வெடி குண்டு வைப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், தென்னிலங்கையில் தலைமறைவாக இயங்கினார்கள். இறுதிப் போர் நடந்த காலத்தில், கொழும்பு நகரில் நடந்த குண்டுவெடிப்புகள் அவர்களினால் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

இருப்பினும், புலனாய்வுத்துறை எப்படியோ துப்புத் துலக்கி சூத்திரதாரிகளை பிடித்து விட்டது. அரசு அவர்களுக்கு "சிங்களப் புலிகள்" என்று பட்டம் சூட்டியது. புலிகளுக்காக குண்டு வைத்த சிங்களவர்கள் மட்டுமல்லாது, அவர்களுடன் சேர்ந்து திரிந்த நண்பர்கள் கூட கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, கைது செய்யப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அயலவர்களின் ஏளனப் பேச்சுகள், பழிச் சொற்களை தாங்க முடியாமல், குடியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களப் புலிகளின்" குடும்பங்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப் பட்டனர். இந்த நிலைமை சீமானுக்கோ, அல்லது நாம் தமிழர் ஆதரவாளர்களுக்கோ ஏற்பட்டிருக்கிறதா?  

ஈழப்போரின் இறுதியில் சிறிலங்கா இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கான ஆவணங்களை வெளியிட்டவர்கள் யார்? சீமானா? அல்லது யாராவதொரு நாம் தமிழர் ஆதரவாளரா? இல்லவே இல்லை. புலிகளுக்கு ஆதரவான சிங்கள ஊடகவியலாளர்கள் தான், சனல் 4 தொலைக்காட்சிக்கு அந்த வீடியோவை அனுப்பினார்கள். 

"இலங்கையின் கொலைக்களம்" என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் பேட்டி கொடுக்கும் சிங்களவரான பாசனா யார் தெரியுமா? இலங்கையில் சிங்களப் புலி குற்றம் சாட்டப் பட்டு தேடப் படுபவர்களில் முதன்மையானவர். அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு, சில தமிழ் புலி ஆதரவாளர்கள் உதவி செய்துள்ளனர். 

இதை விட, எண்பதுகளில் சட்டர்டே ரிவியூ பத்திரிகையில் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதி வந்த காமினி நவரட்ன என்ற சிங்களவர். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணம் சென்று, யாழ் பொறுப்பாளர் கிட்டுவை சந்தித்து பேசி, கைதிகள் பரிமாற்றத்திற்கு உதவிய விஜய குமாரணதுங்க என்ற சிங்களவர். இறுதி வரையில் புலிகளையும், தமிழீழத்தையும் ஆதரித்து பேசி வந்த விக்கிரமபாகு கருணாரட்ன என்ற சிங்களவர். இப்படிப் பல சிங்களவர்கள் ஈழப் போராட்டத்திற்கு தம்மாலியன்ற பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளனர்.

புலிகளுக்கு ஆதரவான சிங்களவர்கள் செய்த தியாகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது, "செந்தமிழன்" சீமான், அல்லது நாம் "தமிழர்" கட்சியினர், ஈழப் போராட்டத்திற்கு செய்திருக்கிறார்களா? சொன்னால் வெட்கக் கேடு. ஒன்றுமேயில்லை. 

ஈழப் போராட்டத்தில் ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போடாதவர்கள், சிங்களத் தோழர்கள் செய்த பங்களிப்பை அவமதிக்கும் வகையில், சிங்கள இன வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? சிங்கள, ஹிந்திய ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள் தான், சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் என்பதில் எந்த விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

(தொடரும்)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!
நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!
தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Sunday, March 06, 2016

"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!


"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!" என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை" கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?

முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
 //எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்" தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம். கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.

//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?// 

இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை. 

விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.

மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.

எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை" மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

ம‌ஞ்ச‌ள் க‌ண்னாடி அணிந்தால் காண்ப‌தெல்லாம் ம‌ஞ்ச‌ளாக‌ தெரியும். இன‌வாத‌ க‌ண்ணாடி அணிந்த‌வ‌ர்க‌ள் நிலையும் அது தான். இந்தியாவில் அர‌சு இய‌ந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.

ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக  நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"

மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?

இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:

//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//

ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்? மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள். 

//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//

தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்ற வெற்றுக் கூச்சல்?

//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//

அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்" இலட்சணம்!

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது. 

முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."


திராவிட‌க்க‌ட்சிக‌ள் கால‌த்தில் தான் மொழிவாரி மாநில‌ம் உருவான‌து. அப்போது திமுக‌ முன்வைத்த‌ நியாயம் பார்ப்ப‌னீய‌த்திற்கு எதிரான‌ தார்மீக‌ கோப‌ம்தான். அப்போது வ‌ட‌ இந்திய‌ர்க‌ளை குறை கூறினார்க‌ள். வ‌ட‌க்கு வாழ்கிற‌து தெற்கு தேய்கிற‌து. த‌னித் த‌மிழ் நாடு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு என்றார்க‌ள்.ம‌த்திய‌ அர‌சு த‌மிழ் நாடு மாநில‌ ச‌ட்ட‌ ச‌பைக்கு கூடுத‌ல் அதிகார‌ம் கொடுத்து, த‌மிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்த‌து.

த‌மிழ‌ர்க‌ள் ஆளும் த‌மிழ் நாட்டில் எல்லாம் சிற‌ப்பாக‌ இல்லை. உண்மையில் இது ஒரு வ‌கையில் த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌லின் வ‌ங்குறோத்துத‌ன‌ம். அந்த‌ உண்மையை ம‌றைக்கும் சீமானும், அவ‌ர‌து துதிபாடிக‌ளும் இப்போது புதிய‌தொரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப‌ணு சோத‌னை ந‌ட‌த்தி எவ‌ன் அச‌ல் த‌மிழ‌ன், எவ‌ன் போலித் த‌மிழ‌ன் என்று ஆராய்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சியின்(?) முடிவு: "த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள், ஆள்ப‌வ‌ர்க‌ள் போலித் த‌மிழ‌ர்க‌ள். அச‌ல் த‌மிழ‌ர்க‌ள் ஆட்சி செய்தால் எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லை. த‌மிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக‌ ஓடும்..." என்று குடுகுடுப்பைக் கார‌ன் மாதிரி ஜோஸ்ய‌ம் சொல்கிறார்க‌ள். ஐம்ப‌துக‌ளில் திமுக‌ அர‌ங்கேற்றிய‌ அதே நாட‌க‌ம் தான்.

ஆனால், ஒரு வித்தியாச‌ம் உள்ள‌து. திமுக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தினால் ம‌த்திய‌ அர‌சின் அதிகார‌ம், ஹிந்தி பேரின‌வாத‌ மேலாதிக்க‌ம் க‌ணிச‌மான‌ அள‌வில் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. நாம் த‌மிழ‌ர் முன்வைக்கும் கோரிக்கைக‌ள் அதிகார‌ப் ப‌ர‌வலாக்க‌ல் ப‌ற்றிய‌து அல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில், திமுக‌ த‌மிழ் தேசிய‌ இய‌க்க‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ப‌ங்க‌ளிப்புக்கு எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ வ‌கையில் சீமானின் கோரிக்கைக‌ள் அமைந்துள்ள‌ன‌.